Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts

Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். 



நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ:

Friday, November 20, 2020

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்!

 

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது! சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளுக்கும் சைவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! 

அதற்கான விளக்கத்தை சுருக்கமாக ஆதாரங்களுடன் தருகிறேன்:

1.
 புலிகளின் மாவீரர் வாரம் என்பது போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதுடன், அவர்களது தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும் உள்ளடக்கியது. அதே மாதிரி ஷியா முஸ்லீம்கள் மாவீரர் மாதம் என்று நினைவுகூர்வார்கள். அது சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர்(10 அக்டோபர் 680) ஈராக்கில் நடந்த போரில் மரணமடைந்த ஹுசைன் தலைமையை பின்பற்றிய போராளிகளை நினைவுகூரும் சடங்கு ஆகும். ஷியாக்களை பொறுத்த வரையில் அது ஒரு விடுதலைப் போர். அந்த மாவீரர் மாதம் ஷியாக்களின் தலைவர் ஹுசைனின் பிறந்தநாளை உள்ளடக்கியது. மாவீரர் மாதத்தின் இறுதி நாள் அஷுரா என்று அழைக்கப் படுகிறது. அஷுரா அன்று, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஷியா முஸ்லீம்களும், ஹுசைனின் விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்வார்கள். (இந்த விடயத்தில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் வித்தியாசம் உள்ளது. சன்னி முஸ்லிம்களை பொறுத்தவரையில், இது மோசேஸ் தனது மக்களை இஸ்ரேல் என்ற வாக்களிக்கப் பட்ட பூமிக்கு அழைத்துச் சென்ற நாள்.)


2.
 புலிகளைப் பொறுத்தவரையில் மாவீரர் வாரத்தின் இறுதியில் வரும் நவம்பர் 27 ஒரு விசேட தினம். அதே மாதிரி ஷியாக்களுக்கு முஹரம் மாதத்தின் பத்தாவது நாளான அஷூரா ஒரு விசேட தினம். முஹரம் மாதம் அனைத்து இஸ்லாமியருக்கும் புனிதமானது. முஹரம் என்ற சொல் ஹராம் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்த படியால், அந்த புனித மாதத்தில் பல விடயங்கள் தடுக்கப் பட்டுள்ளன. புலி ஆதரவாளர்களும் இன்று வரை அதே சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

3.
இந்து/சைவ மத சம்பிரதாயத்திற்கு முரணாக புலிகள் தமது இறந்த போராளிகளை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள். அந்த இடம் "மாவீரர் துயிலும் இல்லம்" என அழைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் மாவீரர் துயிலும் இல்லம் புலிக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள் உணர்வு பொங்க நினைவுகூர்வார்கள். இந்த வழக்கம் ஈரான் அல்லது லெபனானில் இருந்து வந்திருக்க வேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் ஈராக்குடன் போர் நடந்தது. அப்போது போரில் கொல்லப் பட்ட வீரர்கள் தனியாக ஓரிடத்தில் புதைக்கப் பட்டனர். அது பார்சி மொழியில் "மாவீரர் துயிலும் இல்லம்" என்றே அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் அந்த நடைமுறையை பின்பற்றியது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் லெபனானுக்கு சென்று பார்க்கலாம். முன்பு புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் என்னென்ன சடங்குகள் நடந்தனவோ அதெல்லாம் ஹிஸ்புல்லாவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பதை நேரில் காணலாம். மாவீரர்களின் உருவப் படங்கள் கட் அவுட்களாக பொது இடங்களில் வைக்கும் வழக்கமும் பொதுவானது.

4.
புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் அதன் முக்கிய உறுப்பினர்கள் லெபனானில் பயிற்சி பெற்றனர். ஆகவே புலிகளுக்கு லெபனான் பற்றியோ, ஷியா முஸ்லிம்களின் சடங்கு பற்றியோ எதுவும் தெரியாது என்று வாதிட முடியாது. இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப் படவும் தேவையில்லை. உலகில் ஒருவர் இன்னொருவரை பார்த்து பின்பற்றுவது வழமையானது. 

5.
மாவீரர்களை புனிதர்களாக வழிபடும் நடைமுறை கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே பாரம்பரியத்தை பின்பற்றும் சகோதர மதங்கள்.) இன்றைக்கும் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் புனித பிரான்சிஸ், புனித மார்ட்டின், புனித நிக்கொலாஸ் ஆகிய தினங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக, ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக தம்முயுரை அர்ப்பணித்த புனிதர்கள். கிறிஸ்தவ மத வரலாற்றில் இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாவீரர்கள் இருந்துள்ளனர். அவர்களது நினைவாக, நவம்பர் 1 அன்று, "அனைத்து புனிதர்களின் தினம்" நினைவுகூரப் படுகிறது.

Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

Monday, June 29, 2020

ஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை

அது ஒரு "புலி ஆதரவுக் குடும்பம்." ஆனால், புலிகளை "நிபந்தனையுடன்" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் முன்பு வன்னியில் வாழ்ந்த காலத்தில், குடும்பத் தலைவியின் தந்தை யாரோ ஒருவரை சாதிப்பெயர் சொல்லி ஏசிய குற்றத்திற்காக புலிகள் அவருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுத்திருந்தனர். அது மட்டுமே அவர்களுக்கு புலிகள் மீதிருந்த விமர்சனம்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், நான் ஐரோப்பா வந்த புதிதில் அந்தத் தமிழ்க் குடும்பத்துடன் பழக்கம் உண்டானது. என்னுடன் நல்ல நட்பாக இருந்தனர். காலப்போக்கில் சாதியம் குறித்தும் என்னுடன் குறித்தும் வெளிப்படையாக உரையாடினார்கள். அப்போது தான் வன்னியில் புலிகள் வழங்கிய தண்டனை பற்றி விவரித்தார்கள். பச்சை மிளகாய் சாப்பிடக் கொடுத்த தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான தண்டனை. ஆனால், அவர்களது ஆதிக்க சாதி மனநிலையானது, அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. "இது மிகவும் கொடுமையான தண்டனை, மனித உரிமை மீறல், புலிகளின் சர்வாதிகாரப் போக்கு..." என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஒருவேளை, பல வருட காலம் நிலக்கீழ் சிறைக்குள்  அடைத்து வைத்திருந்தால், அவர்கள் இப்போது தீவிர புலி எதிர்ப்பாளர்களாக காட்சியளித்திருப்பார்கள்.

நான் புலிகளின் தண்டனையை நியாயப்படுத்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்களால் சாதி சொல்லி ஏசுவதை ஒரு குற்றமாக கருத முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தண்டனையானது அவர்களது எண்ணத்திலும், நடத்தையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. அவர்கள் புலிகளின் செயலை மட்டுமே குறை கூறினார்களே தவிர, மனதளவில் சாதிவெறி குறையாதவர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் தம்மை சாதியால் உயர்த்தப்பட்டவர்களாக நம்பினார்கள். அதற்கு காரணம் கேட்ட பொழுது, "நல்ல சாதி" எனப்படுபவர்கள் சுத்தமானவர்கள் என்றும், "கெட்ட சாதி" எனப்படுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும், "முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை" என்றும் வாதாடினார்கள். "நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதே நோக்கம்" என்று தீண்டாமைக்கு ஒரு  "விஞ்ஞான விளக்கம்" கொடுத்து நியாயப் படுத்தினார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த உலகறிவு இல்லாதவர்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது வழமையானது. நாம் தான் அனுசரித்து போக வேண்டும்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் யார் எந்த சாதி என்று தெரியாத நிலைமை. எடுத்த உடனே நேரடியாக கேட்பது அநாகரிகமாக கருதப்பட்டது. ஆனால், தமிழர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டிய நிர்ப்பந்தம். தாம் (சாதி)"தெரியாதவர்களின்" வீடுகளுக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் தரும் தேநீரை குடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிப்பார்கள். சிலநேரம் கூடவே "தங்களது ஆள்" ஒருவரும் வந்திருந்தால் அவரை குடிக்க சொல்லிக் கொடுப்பார்களாம். இந்த விடயங்களை அவர்களாகவே என்னிடம் கூறினார்கள்.

சாதி பார்த்த காரணத்தால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இந்தக் குடும்பத்தினர் போன்றவர்கள் தான். மிகச் சரியாக சொன்னால், சாதி அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும் வர்க்க ரீதியாக தாழ்ந்திருந்த சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள். புலிகளும் இவர்களைத் தான் பிடித்து தண்டித்தார்கள். இப்படியான தண்டனைகள் பலரது மனதில் சாதிய வன்மத்தை அதிகரித்ததே தவிரக் குறைக்கவில்லை. சாதிப்பிரச்சினையை தனிநபர் சார்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தது தான் புலிகள் விட்ட தவறு.

அறிவூட்டல், பரஸ்பர நட்புறவு, கூட்டு உழைப்பு, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிப்பிரச்சினையை பெருமளவு ஒழிக்கலாம். ஒடுக்கும் சாதியை சேர்ந்த சாதிய உணர்வாளர்கள் பலர், ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்களுடனான பரஸ்பர தொடர்பாடல்களுக்கு பின்னர் மனம் திருந்தி இருக்கிறார்கள். இதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அறியாமையில் இருந்து விடுபட்டவர்கள், ஏனையோரையும் திருத்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த,  சாதிவெறி பிடித்த நிலவுடைமையாளர்கள், அல்லது பணக்காரர்களை புலிகள் என்றைக்குமே தண்டித்ததில்லை. அதிகம் பேசுவானேன். ஐரோப்பாவில் புலிகளின் பெயரில் தீவிரமாக இயங்கிய செயற்பாட்டாளர்கள் கூட அந்தரங்கத்தில் சாதி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படியானவர்கள் குறித்தும் புலிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் புலிகள் கேட்ட போதெல்லாம் பணம் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

ஆதிக்க சாதியை சேர்ந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தான் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். புலிகளைப் பொறுத்த வரையில் அது குறித்து எந்த விதமான புரிதலும் இருக்கவில்லை. அதனால் தான் சாதியம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் சாதியம் என்ற மரத்தை அகற்றுவதென்றால் அதை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். ஆனால் புலிகள் கிளைகளை வெட்டி விட்டு சாதியம் ஒழிந்து விட்டது என்றனர்.

நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கும், சாமானியர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாம் இங்கே நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை தான் எதிர்க்க வேண்டும். அது தான் மிகவும் ஆபத்தானது.

சாதிப் பிரச்சினையை மறுப்பதற்காக, "புலிகள் சாதி பார்க்கவில்லை" என்பதற்கு பலர் காட்டும் "ஆதாரங்கள்" யாவும் சிறுபிள்ளைத்தனமானவை. அவை பெரும்பாலும் சாமானியர்களின் சாதிவெறி தொடர்பானவை. புலிகள் தாம் சிங்கள பேரினவாத அரசை மட்டுமே எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். அதன் அர்த்தம் சாதாரண சிங்களவர்கள், இனவாதம் பேசினாலும் கூட, அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி சாதாரண வெள்ளாளர்கள் சாதியவாதம் பேசினாலும் அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் ஒருநாளும் சாதாரண மக்களுடன் சண்டைக்கு போகக் கூடாது. சாமானியர்கள் இனவெறி/சாதிவெறி கருத்துக்களை தெரிவித்தால், அதை புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் புலிகளிடம் அத்தகைய புரிதல் இருந்துள்ளதா என்பது கேள்விக்குறி. இதனை "புலிகள் சாதி  பார்க்கவில்லை" வக்காலத்து வாங்குவோரே, தாம் அறியாமல் புலிகளின் புரிதலின்மையை  வெளிப்படுத்தி  விடுகின்றனர். உதாரணத்திற்கு, முன்பு புலிகளின் நிர்வாகத்தில் சாதிப்பெயர் சொல்லி திட்டிய காரணத்திற்காக ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள், பச்சை மட்டையால் அடித்தார்கள், பச்சை மிளகாய் உண்ணக் கொடுத்தார்கள் என்று பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
இத்தகைய தண்டனைகளால் சாதியத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் அறியாமையால் செய்த தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வித் தகைமைக்கும், அறிவுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாத சமுதாயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட சாதி சொல்லித் திட்டுவதை கண்டிருக்கிறோம். அவர்கள் யாரும் அறிவுக்காக படிக்கவில்லை. உத்தியோகம் பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தவர்கள். அப்படியானவர்களை மீள் படிப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக பட்ச தண்டனையாக இருக்க வேண்டும். தமது பெற்றோரையும் திருத்தக் கூடிய வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சமதர்ம கல்வி புகட்டுவதும் ஒரு தீர்வாகலாம்.

இதற்கு நாம் Black Lives Matter போராட்டத்தில் இருந்து பாடம் கற்கலாம். அமெரிக்காவில் உள்ள நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவெறியை தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் வெள்ளையின மக்களும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். அத்தகைய நிலைமை அறுபதுகளில் யாழ் குடாநாட்டில் இருந்தது. அப்போது நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி சக்திகளுக்கு வெள்ளாளர்களும் ஆதரவாக நின்றனர். போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தனர். இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் Black Lives Matter போராட்டம் சாமானிய வெள்ளையர்களின் நிறவெறிக் கருத்துக்களுக்காக அவர்களை பகைக்கவில்லை. நாங்கள் எப்போதும் சாதாரண மக்களை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். சாதாரண வெள்ளையர்கள் காட்டும் நிறவெறியை அவர்களது பிள்ளைகளே எதிர்த்துப் போராடுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளால் அறிவு  புகட்டப் பட்டு Black Lives Matter போராட்டத்தில் இணைந்து கொண்ட வெள்ளையினப் பெற்றோர் பலருண்டு. அதே மாதிரி யாழ் வெள்ளாள குடும்பங்களில் நிலவும் சாதிவெறிக் கருத்துக்களை இளைய தலைமுறையினர் கேள்விக்குட்படுத்தி திருத்த வேண்டும். எமது அரசியல் போராட்டம் எப்போதும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சாதிவெறியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நிலப்பிரபுத்துவ கால எச்சங்களான குடிமை சாதித் தொழில் புலிகளின் காலத்திலும் இருந்ததாகவும், அதைப் புலிகள் ஒழித்து விட்டதாகவும் சிலர் வாதாடுகிறார்கள். அவர்கள் குடிமைத் தொழில் எனக் கருதுவது மரண வீடு போன்றவற்றில் செய்யப்படும் சடங்குகளை தான். அதைப் புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மை தான். எனினும் குடிமைத் தொழில் முறை பற்றிய புலிகளின் அறிவு போதாமை காரணமாக "சாதியில் குறைந்ததாக" சொல்லப்படும் தொழில்களை தான் தடுத்தார்கள். "சாதியில் உயர்ந்தவர்கள்" செய்து வந்த குடிமைத் தொழில் அப்படியே இருந்து வந்தன. அவற்றை "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால், அதைச் சுற்றி பல்வேறு குடிமைச் சாதியினர் தொழில் செய்வதைக் காணலாம். கோயிலில் பூசை செய்யும் ஐயர் முதல் மடைப்பள்ளி சமையல்காரர்கள் வரை சாதி அடிப்படையிலானதொழில்களை செய்து வந்தனர். தமிழர் கலாச்சாரம் என்பது, இந்துக் கலாச்சாரமாக இருப்பதால் இன்றைக்கும் அவை தொடர்கின்றன. உண்மையில் புலிகள் அதை ஒழிக்க முனைந்திருந்தால் அங்கு ஒரு பெரும் சமூகப் புரட்சியே நடந்திருக்கும். ஆதிக்க சாதியில் உள்ள பிற்போக்காளர்கள் புலிகளை எதிர்த்து கலகம் செய்திருப்பார்கள். "புலிகள் தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்..." என்று போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அன்று புலிகள் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை எதிர்க்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

உண்மையில் புலிகள் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடியதாக பெருமை பேசிய புலிகளால், உள்ளூரில் இருந்த வெள்ளாள சாதிவெறி அமைப்பை எதிர்க்க முடியவில்லை. அதற்கான துணிச்சலும் அவர்களிடம் இருக்கவில்லை. காரணம் மிக எளிது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலிகளுக்கு நிதியுதவி செய்து வந்த ஆதிக்க சாதி சமூகத்தை எதிர்த்தால் தமது இருப்பு கேள்விக்குரியதாகி விடும் என நினைத்தார்கள். அதற்கான சாத்தியம் இருக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது.

Tuesday, September 27, 2016

தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்!


புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.

"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது(?)" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்! நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.

1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.

சுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.

ஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, "பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.

ப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் "தோழ‌ர்க‌ள்" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.

தந்தையை "ஐயா" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா? ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.

தாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.

ஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

புலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.

விடுதலைப் புலிகள் "தோழர்" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன்! அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.

இந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

அதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.

அநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் "தேசியவாதம்". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
"தோழர் பிரபாகரன்!" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை

Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal

Saturday, August 20, 2016

திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்



"புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பி இருந்தார். அதில் கலந்து கொண்ட மணியரசனோ, தியாகுவோ சரியான பதிலை வழங்காமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள். (முள்ளிவாயிக்கால் : முன்னும்,பின்னும் 06.06.16 | கேள்வி நேரம் | நியூஸ் 7 தமிழ்)

ஆரம்ப காலத்தில் புலிகள் சோஷலிசத் தமிழீழம் கேட்ட கதைகளை பற்றி தியாகு பேசினார். அதே நேரம், புலிகளின் தலைமையில் இருந்தவர்கள் கூட்டம் கூடி, சோஷலிசம் தற்போது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டதாக மணியரசன் கூறினார். (உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.)

நேரடியாக கேள்விக்கு வருவோம். "புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" புலிகள் எண்பதுகளில் சோஷலிசம் பேசினாலும், நடைமுறையில் உள்நாட்டு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வந்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், "de facto தமிழீழம் (தமிழீழ நடைமுறை அரசு)" என்ற பெயரில் பொருளாதார உற்பத்தி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

புலிகளின் வர்த்தக நிறுவனமான "மக்கள் கடை", எல்லாக் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டது. அதிலே குறைந்த விலையில் பொருட்கள் விற்கப் பட்ட படியால், தனியார் வியாபாரிகள் பலர் நஷ்டப் பட்டு கடையை மூடி விட்டார்கள். சில வருடங்களின் பின்னர், மக்கள் கடைகளிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.

அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு முற்றாக நின்று போனது. அதனால் விவசாயிகளும், மீனவர்களும், உள்ளூர் சந்தையில் விற்றது போக, எஞ்சியவற்றை புலிகளின் கொள்வனவு நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் புலிகளின் கொள்வனவு நிலையங்கள் தமிழீழம் முழுவதும் விற்பனை செய்தன.

அதைத் தவிர, சில கடத்தல்காரர்கள் தடை செய்யப் பட்ட பொருட்களை தென்னிலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்றார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய படியால் மண்ணெண்ணெய் பெருமளவு விற்பனையானது. மோட்டார் சைக்கிள்கள் கூட மண்ணெண்னையில் தான் ஓடின.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "சிங்களவனிடம் மண்ணெண்ணெய் வாங்கி, தமிழனிடம் பத்து மடங்கு விலைக்கு விற்று" பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. மகேஸ்வரன் என்ற கடத்தல்காரன் கோடீஸ்வரனாக வந்த கதை அனைவருக்கும் தெரிந்த படியால், அவருக்கு "மண்ணெண்ணெய் மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. அவர் பிற்காலத்தில், புலிகளின் ஆதரவுடன், பேரினவாத யு.என்.பி. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

2002 ம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், "புலிகள் தாராள பொருளாதாரவாத, திறந்த சந்தைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக" அறிவித்திருந்தார்.

பிரச்சினை என்னவென்றால், புலிகள் மேற்குலக நாடுகளை திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே அப்படி அறிவித்திருந்தனர். நடைமுறையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் தமது இருப்பிற்கே ஆபத்தானது என்பதை உணர்ந்திருந்தனர்.

தலைவர் பிரபாகரன் அறிவித்த போதிலும், எந்தவொரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது சிறிலங்கா நிறுவனமோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவில்லை. கொக்கோகோலா(அல்லது பெப்சி கோலா?) நிறுவனம் மட்டுமே, "வரி" என்ற பெயரில் பெருந்தொகை பணம் கொடுத்து வியாபாரம் செய்ய முன்வந்தது. (சாதாரண தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்து கொக்கோ கோலா குடித்திருப்பார்கள் என்று இங்கே சொல்லத் தேவையில்லை.)

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ் குடாநாட்டில் புலிகளின் சமாந்தரமான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைத்து வணிக நிறுவனங்களும் புலிகள் கேட்ட வரியைக் கொடுத்து வந்தன. அன்றைய சந்திரிகா அரசும், சிங்கள இராணுவமும் அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதில், அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்து வந்தது. அது எந்தளவு உறுதியானது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தருணம் ஒன்று வந்தது. அரசு சுகாதாரத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், தாதியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. யாழ் போதனா மருத்துவமனைக்கு சென்ற புலிகள், அனைவரும் ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு வேலைக்கு திரும்பா விட்டால், அவர்களுக்குப் பதிலாக தமது இயக்கத்தில் உள்ள மருத்துவர்கள், தாதியரை வேலைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

புலிகளின் இந்த முடிவால் சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. எத்தனை வருடம் எதிரிகளாக போரிட்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு பகையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதைத் தான் வர்க்க ஒற்றுமை என்று சொல்வார்கள்.

*****

கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், (தமிழர்களாகிய) நாங்கள் ஏன் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும்?

இந்தக் கேள்வியை அமெரிக்க நலன்களை ஆதரிக்கும் வலதுசாரி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

பனிப்போரின் முடிவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால், சர்வதேச மூலதனத்தினை எதிர்த்து நிற்க முடியாமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருந்தது. இன்றும் கூட, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள், தமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகின்றன.

கியூபாவும், வியட்நாமும், பொருளாதார ஒதுக்குதலில் இருந்து மீள்வதற்கு முயற்சித்தன. அதனால், குறிப்பிட்ட அளவு உள்நாட்டு சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பெயர் Joint Venture முறை. அதாவது, ஒரு நிறுவனத்தில் அரசு 51% முதலீட்டை செய்யும். மிகுதி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு. இன்றைக்கும் அந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழான கலப்புப் பொருளாதாரம் நிலவுகின்றது.

2009 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு முன்னர் நடந்தவற்றை முற்றாக மறந்து விட்டுப் பேசுகின்றார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான "அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல்", 9/11 தாக்குதலுக்குப் பிறகு மிகவும் மோசமான கட்டத்தை வந்தடைந்தது.

நாங்கள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டுப் பேசுகின்றோம். நோர்வேயும், மேற்குலக நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டது. அன்டன் பாலசிங்கமும் அதனை ஒத்துக் கொண்டார்.

நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியதை எடுத்துக் காட்டினார்கள். இந்தோனேசியாவில் தனிநாடு கோரிய, அச்சே விடுதலை இயக்கம் சுனாமிக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. அவற்றை உதாரணமாகக் காட்டி, புலிகளும் அந்த வழிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். உண்மையில் அது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பதை, 2009 ஆண்டு நடந்த துயர நிகழ்வுகள் நிரூபித்தன.

ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்து விட்டார். சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தருணத்தில், "புலிகள் மீண்டும் போருக்கு சென்றால், இலங்கை அரசுடன் சேர்ந்து ஒடுக்கப் படுவார்கள்." என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே மிரட்டினார். இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மறைமுகமாக எச்சரித்தார்.

அப்போதும் கூட, பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், போரில் வீர மரணத்தை தழுவிக் கொள்ள தயாராக இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சரித்திரமாகி விட்டன.

****** 


போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத அமெரிக்கப் படையினர், தென்னிலங்கையில் வெள்ள அழிவுகளால் பாதிக்கப் பட்ட வீடுகளை புனரமைக்க வந்தனர். 

2009 யுத்தம் நடந்த நேரம், இந்த அமெரிக்கப் படையினர் எங்கே போயிருந்தார்கள்? குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா? அவர்களின் கண்களுக்கு தமிழர்கள் மனிதர்களாகவே தெரியவில்லையா? 

எங்கே நமது "தமிழ் தேசியவாதிகள்"? ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை? "தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே? அமெரிக்க டாலர்கள் வாயை அடைக்கப் பண்ணி விட்டனவா? 

அமெரிக்கர்கள் வெளிப்படையாக பாரபட்சம் காட்டினாலும், "அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி வழங்கும்" என்று, உங்களை நீங்களே ஏமாற்றுக் கொள்வதுடன் தமிழ்மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள். சூடு சொரணை இல்லாத அடிமைகளுக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?

Wednesday, March 30, 2016

சர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்


சோவியத் யூனியனுக்கும் புலிகளின் தமிழீழத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியன் உருவான நேரம், இருபது உலக நாடுகள் சேர்ந்து அதனை அழிக்கப் பார்த்தன. ஆனால், அந்த அழித்தொழிப்பு போரில் தப்பிப் பிழைத்த சோவியத் யூனியன் எழுபதாண்டுகள் நிலைத்து நின்றது. முப்பதாண்டுகளாக இருந்த புலிகளின் de facto தமிழீழத்தை, இறுதிப் போரில் இருபது உலக நாடுகள் சேர்ந்து அழித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிசத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசம் தோற்று விட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழர்கள், புலிகளின் தமிழீழத்தின் வீழ்ச்சியின் பின்னர் தமிழ் தேசியவாதம் தோற்று விட்டதாக இன்னமும் பேசத் துணியவில்லை.

சோவியத் யூனியன், தமிழீழம் இரண்டினதும் அழிவுக்கு காரணமாக இருந்த சர்வதேச சக்தியின் பெயர் என்ன? 
ஏகாதிபத்தியம்

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி. 9/11 என்று அழைக்கப் பட்ட நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான், அல்கைதா இயக்கங்களை அழிப்பதற்கான போர் என்று அறிவிக்கப் பட்டது. உலகில் எல்லோரும் அப்படித் தான் நம்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அதே நேரம், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்றொரு பட்டியலை தயாரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரும் அதில் இருந்தது.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமது பெயரை எடுப்பதற்கு, புலிகள் இயக்கம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தது. கோடிக்கணக்கான டாலர் பணம் செலவிடப் பட்டது. அமெரிக்காவின் பிரபலமான வழக்கறிஞர்கள் அமர்த்தப் பட்டு வழக்காடினார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கினார்கள். ஆனால், அமெரிக்க அரசு பட்டியலில் இருந்து பெயரை எடுக்க மறுத்து விட்டது. 

உலகில் வேறெந்த இயக்கமாவது இந்தளவு பணத்தை தண்ணீராக செலவழித்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் தெரியாவிட்டால், அதன் கடந்த கால வரலாற்றில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து படிப்பினை பெற விரும்பாத, அமெரிக்கா சார்பான தமிழ் வலதுசாரிகள், புலிகளையும், ஈழத் தமிழரையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றார்கள். இருந்த போதிலும், தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பது போல, தமக்கு "எதுவும் தெரியாது" என்று எங்களை நம்பச் சொல்கிறார்கள்.

புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் "புலி அழிப்பாளர்கள்" என்றதொரு அணியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணியில் ராஜபக்சே சகோதரர்கள் முதல் நாடு கடந்த தமிழீழக்காரர்கள் வரை ஒன்று சேர்ந்திருந்தார்கள். "சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளை ஒப்பிடலாமா?" என்று கேட்கும் அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவே அதைப் பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதே இந்தக் கூட்டமைப்பின் ஒரேயொரு இலட்சியமாக இருந்தது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் பதுக்கப் பட்ட பில்லியன் டாலர்களை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் நெற்றிகளில் நாமம் போட்டார்கள். போர் முடிவதற்கும், அமெரிக்காவில் புலிகளின் பிரதானமான நிதி வழங்குனர் கைது செய்யப் படவும் நேரம் சரியாகவிருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வணிகர் ராஜா ராஜட்னம், அவரது நிறுவனமான Galleon Group hedge fund பெயரில் நடந்த முறைகேடுகளுக்காக கைது செய்யப் பட்டு, பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜா ராஜரட்ணம் கொழும்பில் பிறந்தவர். யாழ்ப்பாண மேட்டுக்குடியை சேர்ந்தவர். ஹெட்ஜ் பண்ட்ஸ் முதலீட்டு நிறுவனங்கள், 2007 ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்துள்ளன. அதன் விளைவாக, ஹெட்ஜ் பண்ட்ஸ் முகாமையாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

ராஜா ராஜரட்னமும் பங்குச்சந்தை சூதாட்டம் காரணமாக FBI புலனாய்வின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான். பிற்காலத்தில், அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெரிய வந்தததால் தண்டனைக்காலம் நீடிக்கப் பட்டது. அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO வுக்கு, மில்லியன் டாலர் நிதி வழங்கியதும் நிரூபிக்கப் பட்டிருந்தது. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே CIA க்கு வேலை செய்த கேபி, ராஜா ராஜரட்ணம் தொடர்பான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப் படுகின்றது. (Convicted Galleon Group Trader Raj Rajaratnam Now Faces Tamil Terror Finance Lawsuithttp://www.ibtimes.com/convicted-galleon-group-trader-raj-rajaratnam-now-faces-tamil-terror-finance-lawsuit-1698732

மேற்குறிப்பிட்ட தகவலை, பல தமிழர்கள் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுவார்கள். அதற்குக் காரணம், இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் வெளியான போதிலும், தமிழ் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதை மட்டுமா மறைத்தார்கள்? 

2006 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கச் சென்ற சிலரை, ஆயுதத் தரகர்கள் போன்று நடித்த FBI அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கனடாவிலும், அமெரிக்காவிலும், இருநாட்டு புலனாய்வுத் துறைகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக பன்னிரண்டு புலி ஆதரவு தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய கிபீர் விமானங்களை தாக்குவதற்கு வேண்டிய ஏவுகணை வாங்க முயன்றதாக FBI அறிவித்தது. ஈழப் போர் நடந்த காலத்தில், இஸ்ரேலிய கிபீர் விமானங்கள் புலிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தன.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்தோனேசியாவில் ஹாஜி சுபாண்டி (Hadji Subandi) என்ற இந்தோனேசிய - முஸ்லிம் வணிகர் கைது செய்யப் பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு FBI இனால் விசாரிக்கப் பட்டார். சிங்கப்பூரில் பால்ராஜ் நாயுடு (Balraj Naidu) சிங்கப்பூர் - தெலுங்கு வணிகர் கைது செய்யப் பட்டு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

இந்தோனேசியா முதல் அமெரிக்கா வரையில் நடந்த, ஆயுதத் தரகர்கள் கைது சம்பவங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன? அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் போட்ட இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப் பட்டனர். உதாரணத்திற்கு, FBI வெளியிட்ட இந்தத் தகவல் அறிக்கையை பாருங்கள்: Singapore Man Sentenced to More Than Four Years in Prison for Conspiracy to Provide Material Support to a Foreign Terrorist Organization; https://www.fbi.gov/baltimore/press-releases/2010/ba121610.htm 

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மேற்குறிப்பிட்ட தகவல் எதுவும், புலிகளின் வெளிநாட்டு முகவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு தெரியாதா? தெரியும்!

"இருபது உலக நாடுகள் சேர்ந்து நடத்திய அழித்தொழிப்பு போர்", உலக வரலாற்றில் இது தானா முதல் தடவையாக ஈழத்தில் மட்டும் நடந்துள்ளது? 
இல்லவே இல்லை! 
  • 1917 - 1922 : சோவியத் யூனியன் என்ற உழைக்கும் மக்களுக்கான சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட இருபது உலக நாடுகள் பங்குபற்றின. மேற்கத்திய ஆக்கிரமிப்புப் படைகளினால் இலட்சக் கணக்கான ரஷ்ய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

  • 1950 – 1953 : கொரிய மக்களின் சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், அமெரிக்கா தலைமையின் கீழ் இருபது உலக நாடுகள் பங்குபற்றின. ஐ.நா. கொடியின் கீழ் இந்தியாவும் தனது படைகளை அனுப்பி இருந்தது. அந்தப் போரிலும், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படைகளினால், இலட்சக் கணக்கான கொரிய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.


நம்பினால் நம்புங்கள். பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று, உலகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை" பெருமளவு குறைந்தது. பனிப்போர் காலத்தில் நடந்த எந்தப் போரிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலைமை எப்போது மாறியது? மிகச் சரியாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதாவது "கம்யூனிசத்தின் தோல்விக்குப்" பிறகு உருவான மாற்றங்கள் இவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தான், உலகில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் உருவானது. 
மறுக்க முடியுமா?

பனிப்போரின் முடிவில் தோன்றிய அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்குப் பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" மீண்டும் உலகை பயமுறுத்தத் தொடங்கின. 
  • 1990 – 1991: குவைத் பிரச்சினையில் நடந்த வளைகுடா யுத்தம். ஈராக்கிற்கு எதிராக இருபதுக்கும் பேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து போர் தொடுத்தன. ரஷ்யாவும், சீனாவும் கூட அந்தப் போரை ஆதரித்தன.
  • 1999 : யூகோஸ்லேவியா நாட்டை துண்டாடி, காலனிய அடிமைப் படுத்துவதற்காக நடந்த, நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவ நடவடிக்கை. ரஷ்யா, சீனா, கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன. 
  • 2001 - 2014 : அமெரிக்கா தலைமையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்தப் போர் இன்னும் முடியவில்லை. பத்து வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான ஆப்கானிய மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். 
  • 2003 : ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவில் நடந்தது. ஒரு சில வருடங்களுக்குள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் இலட்சக் கணக்கான ஈராக் மக்களை இனப்படுகொலை செய்தனர்.


இந்த உதாரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

புலிகளை ஆதரிப்பதாக நடித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளே! ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரியா விட்டால், அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசலாம். தமிழீழம் கேட்கலாம். ஆனால், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், "இருபது நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்" என்று சொல்வதால் யாருக்கு இலாபம்? அது மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை ஏகாதிபத்திய நுகத் தடியின் கீழ் இன்னலுற வைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

புலிகளின் அழிவுக்கு நீங்கள் அடிக்கடி காரணம் காட்டும் "இருபது உலக நாடுகளின் கூட்டணிக்கு" ஒரு பொதுவான பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தான் மூலதன ஏகாதிபத்தியம்! அமெரிக்கா உலகம் முழுவதையும் தனது அதிகாரத்தின் கீழ் ஆள நினைக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் கூட முதலாளித்துவ நாடுகள் என்பதால் மூலதன ஏகாதிபத்தியத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

இந்த உண்மையை மட்டும் மறந்து விடாதீர்கள். இன்றைக்கும் உலகில் சோவியத் யூனியனும், கம்யூனிசமும் நிலைத்து நின்றிருந்தால், இருபது உலக நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்திருக்கவே முடியாது! பனிப்போர் கால இரு துருவ அரசியல் சதுரங்கத்தை பயன்படுத்தி, புலிகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். பாமர மக்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட, மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு தெரியவில்லை.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, March 18, 2016

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். "சாகாள்" என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், வர்க்க வெறுப்பு பற்றி இன்னமும் யாரும் விமர்சிக்கவில்லை.

புலி எதிர்ப்பாளர்கள் வன்மையான கண்டனங்களையும், புலி ஆதரவாளர்கள் மென்மையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். அகரமுதல்வன் என்ற "புலி ஆதரவாளரே" ஒரு "புலி எதிர்ப்பு இலக்கியம்" எழுதும் அளவிற்கு, அவருக்கு நேர்ந்த மனப்பிறழ்வு என்ன? ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத் தமிழர்களை வெறுக்கும், மேட்டுக்குடி வர்க்கத் திமிரைத் தவிர இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? 

அகரமுதல்வனின் ஆபாசக் கதை தொடர்பாக பலர் கவனிக்கத் தவறுகின்ற விடயங்கள் இவை:


  • புலிப் போராளிகளை புனிதர்கள் என்று கொண்டாடும் அதே தமிழ்ச் சமூகம் தான், போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளை கைகழுவி விட்டது. ஒரு சிலருக்கு, அதாவது தமிழ் மேட்டுக்குடியினருக்கு புலிகள் எப்போதும் கருவிகள் தான். தேவை முடிந்த பின்னர் வீசி எறிந்து விட்டார்கள்.

  • புலிகள் இருந்த காலத்தில் அகரமுதல்வன் இப்படி ஒரு கதை எழுதத் துணிந்திருக்க மாட்டார். எழுதி இருந்தால், புலிகளின், அல்லது புலி ஆதரவாளர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி இருப்பார். அந்தக் காலங்களிலும் எத்தனையோ பெண் போராளிகள், சிறிலங்கா படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டனர்.

  • தமிழினி எழுதிய நூல் (ஒரு கூர்வாளின் நிழலில்), புலிகள் அமைப்பின் மீதும் பாரபட்சமற்ற விமர்சனம் வைத்துள்ளது. அதனை பல புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்பதால், தனிப்பட்ட முறையில் தமிழினிக்கு எதிராக பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே அகரமுதல்வன் இந்த அவதூறுக் கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதை மூலம், புலி ஆதரவாளர்கள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொள்வது அவரது நோக்கம்.

  • அகரமுதல்வன், ஒரு சிங்கள இராணுவவீரனின் இனவெறிக் கண்ணோட்டத்தில் அந்தக் கதையை எழுதி இருக்கிறார். இதன் மூலம் இனவெறி என்பது மொழி வேற்றுமை கடந்த உணர்வு என்பதை நிரூபித்துள்ளார். பெண் போராளிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் சிங்களப் படையினருக்கும், அகரமுதல்வனுக்கும் இருப்பதும் ஒரே (இன) வெறி உணர்வு தான். அது பெண்களை பாலியல் பண்டங்களாக மட்டும் பார்க்கின்றது. 

  • அகரமுதல்வனின் கதை முழுவதும், கேட்பதற்கு நாதியற்ற ஏழைப் பெண் போராளிகளை, சிங்களப் படையினருடன் சேர்ந்து புணரும் வக்கிரமான எழுத்துக்களை கொண்டுள்ளது. அதற்குக் காரணம்? அகரமுதல்வனின் அடிமனதில் உள்ள வர்க்கத் துவேஷம்

  • புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இராணுவக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். அகரமுதல்வன் மதிவதனியை மையமாக கொண்டு சாகாள் என்ற கதையை எழுதி இருக்க முடியுமா? இந்நேரம் புலி ஆதரவாளர்கள் வீடு தேடி வந்து அடித்திருப்பார்கள்.

  • அகரமுதல்வன் தமிழினிக்கு பதிலாக மதிவதனியை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்க மாட்டார். அதற்குக் காரணம், மதிவதனியின் ஊர்க்காரர்கள் தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். புலிகளுக்கு தாராளமாக நிதி வழங்கும் அளவிற்கு வசதியானவர்கள் பலர். மதிவதனி பற்றி கதை எழுதி இருந்தால், அகரமுதல்வன் மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பார்.

  • தமிழினி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வன்னியில் வாழ்ந்த வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். தமிழினி புலிகள் இயக்கத்தில் இருந்த காலங்களிலும், யுத்தம் முடிந்த பின்னரும் தனது உழைக்கும் வர்க்க அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்தவர். குரலற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். இதற்கு அவரது கூற்றுக்களே சாட்சியமாக உள்ளன. இறப்பதற்கு முன்னர் தனது முகநூலில் அத்தகைய கருத்துக்களை எழுதியுள்ளார். 

  • இன வாதிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், "தமிழர்கள் ஓர் இனம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனர்" என்று தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், உண்மையான ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ் இனத்திற்குள் உள்ள ஏழை பாட்டாளி வர்க்கத்தினர் தான் என்ற உண்மையை மறைப்பார்கள். 

  • யுத்தம் முடிந்த பின்னர், வன்னியில் எஞ்சிய அத்தனை மக்களும் சிறிலங்கா இராணுவத்தால் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அப்போது பலர், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து விட்டு, முகாமை விட்டு தப்பியோடினார்கள். அவர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள். சில புலி இயக்க தலைவர்கள், உறுப்பினர்களும் அதில் அடங்குவார்கள்.

  • பண வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களை சேர்ந்த போராளிகள் தான், சிறிலங்காப் படையினரின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையும் அனுபவித்தனர். அவர்களை சுட்டுக் கொன்றாலும் கேட்க ஆளிருக்கவில்லை. அப்படியான இழப்பதற்கு எதுவுமற்ற மக்களைத் தான் அகரமுதல்வன் தனது கதையில் குரூரமாக சித்திரவதை செய்து இரசிக்கிறார். ஏனென்றால் அவர்களுக்காக வாதாட யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியம்.

ஈழப்போரானது எத்தனையோ தடவைகள் வர்க்க வேற்றுமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. உண்மையில், இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தால், சமூகம் அதை மூடி மறைக்கும். அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி யாரோ ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். சிங்கள அரசு அதிகாரிகளிடம் சோரம் போன தமிழ் மேட்டுக்குடிப் பெண்களும் உண்டு. அவர்களைப் பற்றிய கதைகளை எழுதும் தைரியம், அகரமுதல்வன் போன்ற மேட்டுக்குடி அடிவருடிகளுக்கு கிடையாது.


Tuesday, March 15, 2016

தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்


விடுதலைப் புலிகளின் அழிவில், தமிழ் இனப்படுகொலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி, தமிழ் தேசிய ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான, அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று, புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். 2 நவம்பர் 2007 அன்று, கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு, துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் இறந்துள்ளார். 

தமிழ்ச்செல்வன் மீதான விமானத் தாக்குதலானது, அப்போதே பல கேள்விகளை எழுப்பி இருந்தது. அமெரிக்க இராணுவம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய, பங்கர் துளைக்கும் குண்டுகள், சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார்?

2014 ம் ஆண்டு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட CIA இன் இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே, தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது. முப்பதாண்டு கால ஈழப்போர் வரலாற்றில், புலிகள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்களில் ஒருவர் கொல்லப் பட்டமை அதுவே முதல் தடவை ஆகும்.

தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல், தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக CIA அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் இயக்கத்திற்குள், ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும், நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக, அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது. 

தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர், காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன், அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வன், நடேசனுக்கு இடையிலான தகராறுக்கு, சாதிய முரண்பாடும் ஒரு காரணம்.

"உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (HVT) - படுகொலைத் திட்டம்" (“High Value Target” Assassination Program) என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம், SECRET (இரகசியம்) NOFORN (வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல) என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்துக் கொல்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிக்கை அது. 

புலிகள் மட்டுமல்ல, அல்கைதா, தாலிபான், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே போன்று கொலம்பிய FARC, பெருவின் ஒளிரும் பாதை, வட அயர்லாந்து IRA, போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் ஆராய்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், இவை எல்லாம் ஒரே மாதிரியான கிளர்ச்சிக் குழுக்கள் என்ற உண்மையையும், மேற்படி அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தின் நோக்கம் என்ன? அதற்கான விடையும் அறிக்கையில் உள்ளது. தலைவர்களை சிறைப்பிடிப்பதிலும் பார்க்க, கொலை செய்து விடுவது சிறந்தது என்று CIA கருதுகின்றது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும், சிறிலங்கா இராணுவத்தால் தீர்த்துக் கட்டப் பட்டனர். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தது. இருப்பினும், அதுவே அமெரிக்காவின் நோக்கமும் என்று தெரிய வருகின்றது. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவம், CIA அறிக்கையில் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது CIA முன்வைக்கும் வாதம். ANC தலைவர் நெல்சன் மண்டேலா சிறை சென்று மீண்டதை அதற்கு உதாரணமாக காட்டுகின்றது. இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள், HVT தாக்குதல்களால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்தது. தலைமையை குறிவைத்து தாக்குவதன் மூலம், இயக்க உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க முடியும். அதிக பட்ச உளவியல் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், ஹமாஸ், தாலிபான் விடயத்தில் HVT தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்பதாலும், மக்களை கவரும் சமூக நலத் திட்டங்களாலும், தன்னை மீளக் கட்டியமைக்க முடிந்தது. தாலிபான், அல்கைதா தலைவர்கள் நவீன தொலைத்தொடர்பு கருவிகளை பாவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மேல் மட்ட தலைவர்களை தவிர யாரையும் சந்திக்காமல் பங்கருக்குள் முடங்கிக் கொண்டனர். மறுபக்கம், இந்தக் காரணத்தால், இயக்கத்தின் கீழ்மட்ட போராளிகளுக்கும், தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை, 2014 ம் ஆண்டே வெளியிட்டு இருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் எதுவும் அதைப் பற்றிப் பேசாதது ஆச்சரியத்திற்குரியது. குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள், இணையத் தளங்கள் எதுவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. புலிகளுக்கு ஆதரவான ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஏற்கனவே இந்தத் தகவலை பிரசுரித்தது. 

இருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேரவில்லை. என்ன காரணம்? அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ்தேசியவாதிகள், ஏகாதிபத்திய நலன்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து வருபவர்கள். அவர்கள் இது போன்ற பல தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள்.

தமிழ்ச்செல்வனின் கொலைக்குப் பின்னர் பங்கருக்குள் இருப்பது தனக்கு பாதுகாப்பானதல்ல என்று தலைவர் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இறுதி யுத்தத்தில், பிரபாகரனின் பங்கர் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. அதே நேரத்தில், புலிகள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டிக் கொண்டு புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நகர்ந்தனர். அது முல்லைத்தீவு கடற்கரையோரம் இருந்த, எந்தவித பாதுகாப்புமற்ற வெட்ட வெளிப் பிரதேசம்.

முள்ளிவாய்க்கால் செல்லுமாறு யார் அறிவுரை கூறினார்கள்? வேறு யார்? சந்தேகத்திற்கிடமின்றி மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி அமெரிக்க அடிவருடிகள் தான். அதற்கு அவர்கள் கூறிய காரணம்? "அமெரிக்க மரைன் படைகளின் கப்பல் ஒன்று முலைத்தீவு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது... அது புலிகளின் தலைவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்..." இப்படிப் பொய் சொல்லி நம்ப வைத்தார்கள். 

கடைசியில், அமெரிக்கக் கப்பலும் வரவில்லை, அமெரிக்கா காப்பாற்றவும் இல்லை. புலிகளின் தலைவர்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், சிறிலங்கா படையினரால் இனப் படுகொலை செய்யப் பட்டனர். CIA அப்போதே அந்த முடிவை வரவேற்று அறிக்கை எழுதியுள்ளது. அதனால் தான், இந்தத் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



CIA அறிக்கை முழுவதையும் வாசிப்பதற்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Wednesday, July 22, 2015

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சி.ஐ.ஏ. ஊடுருவியது எப்படி?


உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது.

அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

இறுதிப்போருக்கு முன்னரும், பின்னரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில், USAID பலவிதமான திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. "தமிழர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது" என்ற பெயரின் கீழ், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு, அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடந்துள்ளன. சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட "ஊடகவியலாளர்கள்" யாரென்பதை இனங்காண்பது மிகவும் எளிது. 

சி.ஐ.ஏ. இடம் பயிற்சி பெற்ற தமிழ் பேசும் "ஊடகவியலாளர்கள்", வெளியில் "தமிழ் தேசியம்" பேசினாலும், உள்ளுக்கு அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். வலதுசாரி சிந்தனையுடன் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள். கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, வட கொரியா போன்ற நாடுகளைப் பற்றி, எதிர்மறையான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். 

சுருக்கமாக: சி.ஐ.ஏ. கற்பித்த பாடங்களை, தமது சொந்தக் கருத்துக்கள் மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள். தமிழ் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் எங்கும், சி.ஐ.ஏ. ஆசிரியர்களிடம்  அரசியல் பயின்ற மாணவர்களை காணலாம்.

முன்பு பனிப்போர் நிலவிய காலத்தில், சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. யாழ்ப்பாணத்தில், அலன் தம்பதிகள் என்ற இரண்டு அமெரிக்கப் பிரஜைகள், ஈ.பி.ஆர்.எல்ப். இனால் கடத்திச் சென்று பயணம் வைக்கப் பட்டனர். அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்று குற்றஞ் சாட்டப் பட்டது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்க முடியாமல் போனது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், Tamil Refugee’s Rehabilitation Organisation (TRRO) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டதால், உடலைத் தூக்கி கழிவுத் தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

TRRO தலைவர் கந்தசாமி "கொலை", அன்று பல வதந்திகளுக்கு காரணமாகி இருந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இயங்கிய TRRO அமைப்புகளை புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அண்மைக் காலம் வரையில், வெளிநாடுகளில் பெரும்பாலான புலிகளின் செயற்பாடுகள் யாவும், TRRO என்ற பெயரின் கீழ் தான் நடந்து வந்தன. ஆகையினால், கந்தசாமி கொலையில் புலிகள் சம்பந்தப் பட்டிருந்ததாக கருதப் பட்டது. ஆனால், அது உண்மையல்ல.

உண்மையில், கந்தசாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் தான் கடத்தப் பட்டார். ஈரோஸ் இயக்கத்திற்கு, RAW அது குறித்த தகவல்களை வழங்கியது. அன்றைய பனிப்போர் காலத்தில், இந்தியா சோவியத் முகாமுக்குள் இருந்தது என்பதையும், அதனால் சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. (பார்க்க:The truth behind TRRO Kandiah Kandasamy's death; http://www.srilankaguardian.org/2012/03/truth-behind-trro-kandiah-kandasamys.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+srilankaguardian%2FIGKI+%28Sri+Lanka+Guardian%29)

எண்பதுகளில், ஈரோஸ் இயக்கத்தினர், சர்வோதயா இயக்கத்தின் யாழ் மாவட்டத் தலைவர் கதிரமலையை கடத்தி கொலை செய்திருந்தனர். சர்வோதயா அமைப்பு காந்திய வழியில் அமைக்கப் பட்ட தொண்டு நிறுவனமாகும். இலங்கையின் முதலாவதும், பெரியதுமான சர்வோதயா அமைப்பு, பௌத்த - மேட்டுக்குடியினரின் உள்நாட்டு தொண்டு நிறுவனம் (NGO) ஆகும். அதற்குள் நீண்ட காலமாகவே சி.ஐ.ஏ. ஊடுருவல் இருந்து வந்துள்ளது. அன்று கதிரமலையை ஈரோஸ் இயக்கத்தினர் கொலை செய்வதற்கும், அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகம் காரணமாக இருந்தது.

அன்று ஈரோஸ் கதிரமலையை கொன்றதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். "காந்திய பாணி தொண்டு நிறுவனம்" என்ற போர்வை அதன் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கு பெரிதும் உதவியது. தனிநபர் வாதம், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாலும், சர்வோதயா அடிப்படையில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் ஆகும். ஈழப்போருக்கும், சர்வோதயா அமைப்பிற்கும்,சி.ஐ.ஏ.க்கும் இடையிலான தொடர்பு இன்னும் அறுந்து விடவில்லை.

2009, இறுதிப்போரின் பின்னர், சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த புலிப் போராளிகள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டமை அனைவரும் அறிந்ததே. அங்கு முன்னாள் போராளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியும், மொபைல் தொலைபேசிகளை திருத்துவது போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப் பட்டன. அதன் மூலம், முன்னாள் போராளிகள், உலகமயமாக்கப் பட்ட முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் தொழிலாளர்களாக மாற்றப் பட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பற்றி, பலருக்குத் தெரியாத உண்மை ஒன்றுள்ளது. அந்த முகாம்களை யார் நடத்தினார்கள்? யார் நிதி வழங்கினார்கள்? பெரும்பாலான முகாம்கள், சர்வோதயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் நடந்தன. அவர்களுக்கு தேவையான நிதியை USAID வழங்கிக் கொண்டிருந்தது. 

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வுக்கு, சி.ஐ.ஏ. மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தது. (பார்க்க: USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA; http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html) இந்த உண்மை தெரியாத சில தமிழ் இன உணர்வாளர்கள், சிறிலங்கா படைகள் முன்னாள் புலிப் போராளிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று, அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!

சிலநேரம், "சி.ஐ.ஏ. யார்? அது ஈழத்தில் என்ன செய்கின்றது?" என்பன போன்ற விபரங்கள், அன்று புலிகளின் தலைவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். வலதுசாரி - "தமிழ் தேசிய" அறிவுஜீவிகளின் அறிவுரைகளை நம்பி, அமெரிக்கர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் உளவு பார்ப்பதற்கு, தாமே அனுமதித்து இருக்கலாம். பிரபா-ரணில் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னரே, வடக்கு, கிழக்கில் சி.ஐ.ஏ. ஊடுருவல்கள் அதிகரித்தன. அதற்கு அவர்கள் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்கி, புலிகளின் நன்மதிப்பை சம்பாதித்து இருந்தனர்.

Office of Transition Initiatives (OTI) என்ற பெயரில், USAID, மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தினால், திருகோணமலையில் ஒரு அபிவிருத்தித் திட்டம் தொடங்கப் பட்டது.இது ஏற்கனவே பல உலக நாடுகளில் இயங்கி வருகின்றது. அது நிகரகுவாவில் இருந்த சான்டிஸ்டா கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில், கொன்றாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளது. 

வெனிசுவேலாவில் சாவேஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக நடந்த சதிப்புரட்சியிலும் OTI சம்பந்தப் பட்டிருந்தது. அண்மையில், கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியமைத்துக் கொடுக்கும் டிவிட்டர் வலைத்தளத்தை உருவாக்கி அம்பலப் பட்டது. (பார்க்க: US secretly created 'Cuban Twitter' to stir unrest; http://bigstory.ap.org/article/us-secretly-created-cuban-twitter-stir-unrest)

2003 ம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் அக்கரைப்பற்று அலுவலகத்தில், USAID பிரதிநிதிகள், அன்றைய பொறுப்பாளர் கௌசல்யனை சந்தித்துப் பேசி உள்ளனர். அதைத் தவிர, கிளிநொச்சி, திருகோணமலையிலும், USAID, புலிகள் சந்திப்பு நடந்துள்ளது. (பார்க்க: USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARA; https://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html

USAID நிறுவனமானது, தனது Office of Transition Initiatives திட்டத்திற்கு புலிகளின் ஒப்புதல் வாங்கிக் கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், தமக்கு சார்பான NGO நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். அதை அவர்கள் USAID இடம் நேரடியாகவே கேட்டுமுள்ளனர்.

USAID, யாழ்ப்பாணத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு, வன்னி ஊடாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு புலிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தது. (அன்றைய நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை தவிர்க்க வேண்டுமானால், விமானம் மூலம் போக்குவரத்து செய்வது செலவு பிடிக்கும் விடயமாக இருந்தது.) USAID, ஒரு சி.ஐ.ஏ. நிறுவனம் என்ற உண்மையை அறிந்திராத புலிகளும் அதற்கு அனுமதி கொடுக்க சம்மதித்தனர்.

அது மட்டுமல்ல, புலிகள் அமெரிக்க நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் சம்மதித்திருந்தனர். இது அன்று பல தொண்டு நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், அன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக சென்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப் பட்டு, தனி நபர்களுக்கும், பொருட்களுக்கும், அளவுக்கு அதிகமான வரி அறவிடப் பட்டு வந்தது. USAID புலிகளுடனான ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் எந்தத் தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும், அமெரிக்க அரசு புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை.

மேலதிக விபரங்களுக்கு: 
USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARAhttps://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html
USAID opens new office in Trincomalee;
 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10724
USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA;
 http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!
யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!
கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!
யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்

Sunday, July 19, 2015

"புலிகள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?" - ஒரு விவாதம்


புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள் (http://kalaiy.blogspot.nl/2015/07/blog-post_16.html) என்ற கட்டுரைக்கு இவ்வாறு ஒரு இடதுசாரி நண்பர் எதிர்வினையாற்றி உள்ளார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" 

பிரபாகரனோ, புலிகளோ தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. தங்கள் உறுப்பினர்களை தோழர் என்று கூட அழைக்காதவர்கள். அதற்காக, புலிகள் இயக்கத்தினுள் இடதுசாரியம் இருக்கவில்லை என்று கூற முடியாது.

முதலில் இடது, வலது பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்காக, அது பற்றி கட்டுரையாளர் என்ன நினைக்கிறார் என்பது குறித்த சிறு விளக்கம்:
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.

"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்த ஐரோப்பாக் கண்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியும், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்களும் நடந்து முடிந்திருந்தன.

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால், "நெப்போலியன் ஒரு வலதுசாரி பாசிஸ்ட்" தான். ஆனால், அந்தப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட லிபரல் அரசுகளும், முதலாளித்துவ பொருளாதாரமும், இன்று பலரும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பீற்றிக் கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தன. (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

புலிகள் இயக்கத்தில் காணப்பட்ட இடதுசாரியம் பற்றி எழுதினால், அதனை எந்தவொரு "புலி ஆதரவு வலதுசாரியும்" எதிர்ப்பதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோம் என்று மௌனமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், "புலி எதிர்ப்பு இடசாரிகள்" அதை மறுத்துப் பேசுவதற்கு என்ன காரணம்?

ஒரு தடவை, வட கொரிய எதிர்ப்பாளர் ஒருவரை, புலி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தேன். தன்னை ஒரு புலி ஆதரவாளர் மாதிரி காட்டிக் கொள்ளும் வலதுசாரியான அவருக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

புலி எதிர்ப்பாளர்கள், ஈழத்தின் யதார்த்தத்தை, மக்களின் மனப்போக்குகளை புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே தவறை தான் அந்த வட கொரிய எதிர்ப்பாளரும் செய்திருந்தார்.

வட கொரிய மன்னராட்சியை தூற்றுவதாலும், மனித உரிமை மீறல்களை கண்டிப்பதாலும், அங்குள்ள மக்களை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை. இன்றோ, நாளையோ, வட கொரிய மக்களின் எழுச்சி நடக்கும் என்று, அமெரிக்காவும் இலவு காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்து போனது.

ஒரு தடவை, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தமிழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தமிழர் என்பதால் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் பற்றியும் நிறையவே அறிந்து வைத்திருந்தார். ஒரு கம்யூனிஸ்டான அவர், தமிழ் தேசியப் புலிகளை (அல்லது வலதுசாரி பாசிசப் புலிகளை) தீவிரமாக ஆதரித்து வந்தார். "புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்த" தகவல் கூட அறிந்து வைத்திருந்தார். புலிகளின் மனித உரிமை மீறல்கள், குற்றங்களை அவர் இவ்வாறு நியாயப் படுத்தினார்: 
  • "சீனப் புரட்சியின் போது கொலைகள் நடக்கவில்லையா? மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி பிற இயக்கங்களை தடை செய்து அழிக்கவில்லையா?" 
  • "அவர்கள் சோஷலிசத்தின் பெயரால் செய்ததை, புலிகள் தேசியவாதத்தின் பெயரால் செய்தார்கள்." 
  • "இது ஒரு புரட்சிகர காலகட்டம். எல்லா நாடுகளிலும் போராட்டம் நடக்கும் பொழுது, கொலைகள், மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் நடக்கவே செய்யும். இவை இல்லாமல் போராட்டம் நடப்பதில்லை."


பலர் இங்கே நினைவுகூர விரும்பாத உண்மை ஒன்றுள்ளது. புலிகள் வலதுசாரிகளையும் கொன்றார்கள். அது மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளையும் கொன்றார்கள்! புலிகளால் கொல்லப் பட்ட அமிர்தலிங்கம் போன்றோர் யார்? இடதுசாரிகளா? இல்லை, வலதுசாரி தமிழ் தேசியவாதிகள். புலிகள் அவர்களை தான் முதலில் அழித்தொழித்தார்கள். அதற்குப் பிறகு புலிகள் சொல்வது மட்டுமே தமிழ் தேசியம் என்று ஏற்றுக் கொள்ளும் புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை உருவாக்கினார்கள்.

ஒரு நாட்டில் நடக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், மார்க்சிய பார்வையில் முற்போக்கானது. அது ஒரு ஜனநாயகப் புரட்சி என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. வலதுசாரிகளுக்கு இப்படி ஒரு மார்க்சியக் கோட்பாடு இருப்பது தெரியவே தெரியாது. இடதுசாரிகள் பலர் அதைக் கடந்து செல்லப் பார்க்கின்றனர். லெனின் அப்படியானவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள "தீவிர இடதுசாரிகள்" என்று அழைக்கிறார். லெனின் எழுதிய "இடதுசாரிக் கம்யூனிசம் - ஓர் இளம்பருவக் கோளாறு" என்ற நூல், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது.

இறுதிப்போர் காலத்தில், மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில், புலிகளுக்கு மக்களின் தார்மீக ஆதரவு இருந்து வந்தது என்ற உண்மையை மறுக்க முடியாது. அறிவுஜீவிகள் இதற்கு "Populist Strategy" என்று விளக்கம் கொடுக்கலாம். தீவிர வலதுசாரி சக்திகள் கூட, எப்போதும் இடதுசாரிய தந்திரோபாயத்தை வைத்து தான் மக்களை அணிதிரட்டுகின்றன.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியின் இறுதிக் காலத்தில், அந்த நாடு ஏகாதிபத்திய நெருக்குதலுக்குள் சிக்கித் தவித்தது. அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய இடதுசாரிகள் சதாம் ஆட்சியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஐரோப்பாவில் இருந்த ஈராக்கிய இடதுசாரிகள் அந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள்.

சதாம் ஆட்சியை எதிர்ப்பதற்கு ஈராக்கிய இடதுசாரிகள் கூறிய காரணம்:"வலதுசாரி பாசிஸ்டான சதாம் ஹுசைன் ஈராக்கில் இருந்த இடதுசாரிகளை கொன்று குவித்தார். அவருக்கு இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" அதையே இன்று எனக்கு ஒரு நண்பர் கூறுகிறார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!"

அந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களைப் பொறுத்தவரையில் அது நியாயம் தான். ஆனால், அரசியலில் ஆர்வமற்ற பெரும்பான்மை மக்களுக்கு, வலதுசாரி, இடதுசாரி அரசியல் ஒன்றும் புரியப் போவதில்லை. தமிழ் தேசியவாதிகள் தமிழீழம் அமைத்து தருகிறோம் என்றால் அதை நம்புவார்கள். இஸ்லாமியவாதிகள் கிலிபாத் அரசு அமைக்கிறோம் என்றால் அதையும் நம்புவார்கள். மக்கள் எப்போதும் அப்படித் தான்.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில், ஒரு தடவை, கொழும்பில் தங்கியிருந்த என்னைப் பார்ப்பதற்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மா வந்திருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, விமானக் குண்டுவீச்சுகளுக்கு தப்பி, மிகுந்த சிரமங்களுடன் வந்திருந்தார். சொல்லொணா துன்பங்களை அனுபவித்த போதிலும், மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திற்கே திரும்பிச் சென்றார். "இனிமேல் எந்தக் காலத்திலும் இராணுவம் அங்கே வராது. பெடியள் விட மாட்டாங்கள்..." என்று, புலிகளின் இராணுவ பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

சாதாரண மக்கள் அப்படித் தான். அவர்கள் புலிகளை பாசிஸ்டுகள் என்று ஒதுக்கவில்லை. சிங்கள இனவாத இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதற்கு, புலிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை, இன்றைய சிங்கள பேரினவாத அரசு பாதுகாத்து வருகின்றது என்ற உண்மை மக்களுக்கு புரியாது. தீவிரமாக அரசியல் பேசும், வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கே இன்னும் தெரியாத விடயம் அது. மக்களுக்கு தெரியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

"2009 மே மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று, இன்றைக்கு கட்டப்பொம்மன் வசனம் பேசும் வலதுசாரி "டமில் தேசியவாதிகள்", புலிகள் பலமாக இருந்த காலங்களில் வாய்களை மூடிக் கொண்டிருந்தார்கள். சொந்தக் கருத்து எதுவுமின்றி, கிளிப்பிள்ளை மாதிரி, புலிகள் சொன்னதை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். "புலிகள் சொன்னதெல்லாம் வேதம். செய்வதெல்லாம் சரியாகும்." என்று பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

"உலகில் சிறந்த கல்விமான்களை கொண்ட, யூதர்களுக்கு நிகரான ஈழத் தமிழ் சமூகம்" என்று பெருமையடித்துக் கொண்டிருந்த, உயர் கல்வி கற்ற தமிழ் மேட்டுக்குடி வர்க்கம், பத்தாம் வகுப்பு கல்வியைக் கூட முடித்திராத புலிப் போராளிகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தது. ஈழத்தில் இப்படி ஒரு சமூகப் புரட்சி நடக்கும் என்று, அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில் அவர்கள் மீண்டும் தமது மேதாவிலாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி சமூக மாற்றத்தை பல "இடதுசாரிகள்" கவனிக்கத் தவறி விடுகின்றனர். வாழ்க்கையில் கிடைக்கும் உயர்தரமான வசதி வாய்ப்புகள் என்ற மாயை, இடதுசாரிகளையும் வலதுசாரிகளாக மாற்றும் சக்தி படைத்தது. எங்களுக்கு பிரபாகரனோ அல்லது புலிகளின் தலைமையோ முக்கியமல்ல. அவர்கள வலதுசாரி பாசிஸ்டுகளாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு பின்னால் சென்ற மக்கள் தான் எமக்கு முக்கியம். இறுதிப்போரில் தனது இயக்கம் செய்த தவறுகளை விமர்சிக்கும், சாதாரணமான முன்னாள் புலிப் போராளி, இன்றைக்கும் தனது தலைவனின் வழிகாட்டல் சரியானது என்று நம்புகிறான். அப்படியானவர்களை எவ்வாறு வென்றெடுப்பது?

"மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்." - மாவோ




இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: