Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

Saturday, June 02, 2012

பௌத்த சங்கம் பாதுகாக்கும் சிங்கள வேளாள சாதியம்

[ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்] 
(பகுதி - இரண்டு)
கண்டிய ராஜ்யத்தை ராஜசிங்க பரம்பரையினர் ஆண்ட காலம் முழுவதும், மன்னரை கொலை செய்வதற்காக, ஏராளமான சூழ்ச்சிகள், சதியாலோசனைகள் நடந்துள்ளன. முடி தரித்த தலைக்கு நிம்மதி இல்லை என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றவாறு, எல்லையில் அன்னியப் படைகளையும், அரச மாளிகைக்குள் சதிகாரர்களையும் சமாளிப்பதற்கே, கண்டி அரசனுக்கு நேரம் போதாமல் இருந்திருக்கும். கண்டி அரசவையில் நடந்த சூழ்ச்சிகளை வைத்து, ஒரு விறுவிறுப்பான சரித்திர மர்ம நாவல் எழுதலாம். ராஜசிங்க வம்சத்தின் ஒவ்வொரு அரசனையும், கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததும், கொலை முயற்சியில் இருந்து பாதுகாத்ததும், மன்னனுக்கு நெருக்கமான அதிகார்களும், புத்த மதகுருக்களும் தான். மன்னன் கீர்த்திஸ்ரீ, மல்வத்த விகாரை சதி முயற்சியில் இருந்து உயிர் தப்பினான். ஆனால், அந்தச் சம்பவமானது நிலப்பிரபுக்களின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது, என எடுத்துக் காட்டியது. சுமார் 200 அல்லது 300 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை ஆண்ட கடைசி மன்னன் ஆங்கிலேயரால் சிறைப் பிடிக்கப் பட்டாலும், நிலப்பிரபுக்களின் வர்க்கம் ஆங்கிலேயருடன் சில உடன்படிக்கைகளை செய்து கொண்டது.

இலங்கையை ஒல்லாந்தர்கள் (டச்சுக் காரர்கள்) ஆண்ட காலத்திலும், கண்டி ராஜ்யத்தை கைப்பற்ற முடியவில்லை. கண்டி நாட்டு படையினரின், கெரில்லா போர் முறையும், நவீன ஆயுதம் ஒன்றின் பாவனையும், டச்சு காலனிய படைகளை நெருங்க விடாமல் தடுத்தன. அன்றைய காலத்தில், டச்சுக் காரராலேயே நவீன ஆயுதமாக கருதப்பட்ட ஒரு வகை துப்பாக்கி, இன்றைக்கும் நெதர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. கண்டிய படைகள், காலி, மாத்தறை ஆகிய இடங்களை கைப்பற்றியதுடன், கொழும்பு நகரையும் முற்றுகையிட்டிருந்தன. இந்தியாவில் இருந்து உதவிக்கு மேலதிக துருப்புகள் வந்திரா விட்டால், இலங்கையில் ஐரோப்பிய காலனியாதிக்கம் 18 ம் நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும். (Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck http://databases.tanap.net/ead/html/1.10.106/pdf/1.10.106.pdf) இத்தனை பலம் பொருந்திய கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு காரணம், ஆளும் வர்க்கத்தினுள் நிலவிய ஒற்றுமையின்மை, போட்டி, பொறாமைகள், எதேச்சாதிகாரம் என்பன ஆகும்.

குறிப்பாக, கடைசி கண்டிய மன்னனான விக்கிரம ராஜசிங்கன் காலத்தில், "துரோகிகளை களை எடுக்கும் நடவடிக்கை" அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது. அரசவையில் இருந்த மந்திரி பிரதானிகள் (அதிகார்கள்), மன்னனின் உத்தரவின் பேரில் கொல்லப் பட்டனர். சில அதிகார்கள் ஒன்று சேர்ந்து, அரசனை கொலை செய்ய திட்டமிட்டமை அம்பலமானதும், அதிலே சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்யும் படலம் தொடங்கியது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். எஹலப்பொல என்ற அதிகார், ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்து எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தான். ஆங்கிலேயர்கள், அவ்வாறு தான் கண்டி ராஜ்யத்தை கைப்பற்றினார்கள். 1815 ம் ஆண்டு, எஹலப்பொலவும், எஞ்சியிருந்த அதிகார்களும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி, சில வருடங்களின் பின்னர் கண்டி ராஜ்யத்தை ஒரு சுதந்திர நாடாக, அதிகார்கள் கையில் திருப்பி ஒப்படைப்பதாக எழுதப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ஆங்கிலேயர்கள், இலங்கை முழுவதையும் ஒரே நாடாக ஆண்டார்கள்.

கண்டி ராஜ்யத்தின் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்ற ஆங்கிலேயர்கள், அங்கு நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை மறு சீரமைத்தனர். புத்த மடாலயங்கள், நிலங்களின் மீதான அதிகாரத்தைக் கொண்டிருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், ஒரு ஆணைக்குழுவை அமைத்தார்கள். நிலங்களை அளவை செய்வதும், கணக்கிடுவதும், அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாக இருந்தது. சொத்துக் கணக்கெடுப்பு என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆங்கிலேயர்கள் பறித்துக் கொண்டனர். அப்படி இருந்தும், புத்த மடாலயங்கள் பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப் பட்டது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, சொத்துக்களின் எண்ணிக்கை, வரவு, செலவுக் கணக்குகளை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தம், இன்றும் கூட பெருமளவு மாற்றத்திற்கு உட்படவில்லை. நிலப்பிரபுக்களான மடாதிபதிகள், தமக்கு சொந்தமான நிலங்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார்கள். பல பெரிய மடாலயங்களின் தலைமை மதகுருக்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், பல இலட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்தன. இதிலே வேடிக்கை என்னவென்றால், பெருந்தோட்ட உரிமையாளர்களான சில மடாதிபதிகள், இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளரை வைத்து வேலை வாங்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்திய உழைப்பாளிகளின் தேவை முடிந்ததும், இனவாதம் பேசி திருப்பி அனுப்பினார்கள். 

சிங்கள-பௌத்த பொருளாதார கட்டமைப்பில், சாதி அமைப்பின் படி நிலை வளர்ச்சி பிறிதாக நோக்கப் பட வேண்டும். கண்டி ராஜ்யத்தில் ஆதிக்க சாதியாகவிருந்த ராதலர்கள், ஆங்கிலேய நிர்வாகிகளுடன் ஒத்துழைத்தனர். இருப்பினும், இலங்கை முழுவதும் புதிதாக உருவாகிக் கொண்டிருந்த "வெள்ளாளர்கள்" என்ற புதிய சாதியினருக்கு இடம் கொடுத்து ஒதுங்க நேர்ந்தது. இன்று ராதலர்கள், தம்மை வெள்ளாளரின் உட்பிரிவாக அழைத்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில், வெள்ளாளர்கள் என்பது ஒரு சாதியாக இருக்கவில்லை. நிலவுடமையாளர்களின் நிலங்களை மேற்பார்வை செய்யும் வேலை பார்த்து வந்தனர். ஒரு விகாராதிபதி (நிலப்பிரபுவான புத்த மதகுரு), பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, "பங்கு" என்ற பெயரில் சிறு சிறு துண்டுகளாக பிரித்திருப்பார்.

அந்த பங்குகளை நிர்வகிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் சிலர் இருந்தனர். அவர்கள் இரண்டு வகையாக அந்த நிலங்களை பராமரித்தனர். ஒன்று, அவர்கள் தாமே அந்த வயல்களுக்கு சொந்தக்காரர்கள் போல் உழுது பயிரிட்டு, அறுவடையில் ஒரு பகுதியை நிலப்பிரபுவுக்கு கொடுப்பார்கள். இரண்டு, வயல்களை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு மேற்பார்வை பார்ப்பார்கள். பிற்காலத்தில், நிலப்பிரபுக்களின் அதிகாரம் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் பிடுங்கப் பட்டதும், நிலங்களை மேற்பார்வை செய்தவர்கள் "வேளாளர்கள்" (சிங்களத்தில் : கொவிகம) என்ற சாதியாக மாறி விட்டனர். 

நிலப்பிரபுவான மடாதிபதியின் நிலங்களை மேற்பார்வை செய்யும் சாதிகளை சேர்ந்தோர், அந்த ஊர் விகாரைகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு பணிவிடை செய்யும் அந்தக் கடமையை "நில காரிய" என்று அழைப்பார்கள். நில காரியம் செய்வோர் பெரும்பாலும், உயர்சாதியினர் அல்லது இடைநிலைச் சாதியினர் ஆவர். அதைத் தவிர, வயல்களில் வேலை செய்யும் கூலி உழைப்பாளிகளும், குடிமைத் தொழில் செய்யும் பிற பணியாட்களும் தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் முதலாளித்துவ பொருளாதார முறை பரவியதால், கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வது அதிகரித்தது. அதனால், அடிமை முறையும் தகர்ந்தது. 

மத்திய கால நிலப்பிரபுத்துவ அமைப்பு, இன்றைக்கு ஏறத்தாள அழிந்து விட்டது. ஆயினும், இன்றைக்கும் இந்தியாவில் சில எச்ச சொச்சங்களை காண முடிவதைப் போல, அண்மையில் இலங்கையிலும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மகியங்கன எனும் இடத்தில் உள்ள ஊர் ஒன்றில், இன்னமும் மத்திய கால அடிமை உழைப்பு முறை நிலவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கிருக்கும் பௌத்த மடாலயத்திற்கு சொந்தமான விகாராதிபதி, இன்றைக்கும் நிலப்பிரபு போன்றே நடந்து கொள்கிறார். அந்த ஊர் மக்கள், விகாராதிபதிக்கு சொந்தமான வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.

கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். காட்டை அழித்து, அதனை கிராமமாக்கி, தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தாமே பயிரிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். அந்த தன்னிறைவு கண்ட சமுதாயத்தில், பௌத்த மடாதிபதிகள் நுழைந்த பின்னர் தான் பிரச்சினை ஆரம்பமாகியது. அந்த நிலம் முழுவதும் தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிய மடாதிபதிகள், மக்களை கொத்தடிமைகளாக்கி உழைப்பை சுரண்டி வந்தனர். அங்கே, அரச இயந்திரத்தின் அங்கமாக செயற்படும் பொலிஸ் நிலையம் ஒன்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகளும், மடாதிபதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்கின்றனர். கடந்த கால ஜேவிபி கிளர்ச்சியை காரணமாக வைத்து, பலரை கொன்று அரச பயங்கரவாத்தினால் அடக்கி வைத்தனர். மகியங்கனையில் அல்லலுறும் அடிமைகள் பற்றிய ஆவணப் படத்தை இங்குள்ள இணைப்பில் பார்க்கலாம். (21st century slaves)

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பெரும் செல்வாக்கு மிக்க, மல்வத்த, அஸ்கிரிய பௌத்த சங்கங்கள், அரசியலில் இருந்து தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தன. ஆனால், நடைமுறை வேறாக இருந்தது. பல மடாதிபதிகள், நேரடியாக அரசியலில் ஈடுபடா விட்டாலும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, விகாரைக்கு சொந்தமான நிலங்களின் மீதான உரிமை, அவற்றால் கிடைக்கும் வருமானம், இவற்றை நிச்சயப் படுத்திக் கொள்வது. இரண்டாவதாக, நிலப்பிரபுக்களாகவும், முதலாளிகளாகவும் இருந்த மடாதிபதிகளின் ஆதரவு, அரசியல்வாதிகளுக்கு தேவைப் பட்டது. மூன்றாவதாக, இலங்கையில் இன்றைக்கும் மாற்ற முடியாத, வெள்ளாள ஆதிக்க சாதி அரசியல். இலங்கையில் உள்ள பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருவாக வருபவர், வெள்ளாளர் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகும். கரவா, சலாகம போன்ற இடைநிலைச் சாதியினர், தமக்கென தனியான பௌத்த சங்கங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில், அதிக வருமானம் ஈட்டும் பௌத்த மடாலயங்களில், ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை), தலதா மாளிகை ஆகியன பிரபலமானவை. இந்த இடங்களுக்கு வந்து குவியும், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளால் அதிக வருவாய் கிடைக்கின்றது என்று ஒரு காரணத்தைக் கூறலாம். ஆனால், மகியங்கன, திஸ்ஸ மகரகம, தம்புள்ள போன்ற இடங்களில் அமைந்துள்ள ரஜ மஹா விகாரைகளும் பெருமளவு பணத்தை கணக்கில் காட்டுகின்றன. பௌத்த சமயத்துடன் தொடர்புடைய இடங்களை விளம்பரப் படுத்தி, அதிகளவு யாத்ரீகர்களை வரவழைக்கும் வியாபார நோக்கம், சில நேரம் இன முரண்பாடுகளையும் உருவாக்கி விடுகின்றது. உதாரணத்திற்கு, இந்தியாவில் இருந்து சங்கமித்தை வந்திறங்கிய புனிதஸ்தலம் என்று கூறி, மாதகலில் (யாழ்ப்பாணம்) புதிதாக பௌத்த விகாரை ஒன்று கட்டப் பட்டது. இன்று, பெருமளவு தென்னிலங்கை யாத்ரீகர்கள் வருகை தருவதால், மாதகல் மடாலயமும் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காக, ஒரு பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ், அரசுடனும், இராணுவத்துடனும் ஒத்துழைத்திருப்பார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல், மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்கும் தைரியம், இலங்கையை ஆண்ட தலைவர்களுக்கு இருக்கவில்லை. பௌத்த மத பாசிச சக்திகளின் பலத்தை, பண்டாரநாயக்க கொலைக்குப் பிறகு தான் எல்லோரும் புரிந்து கொண்டார்கள். சிங்கள-பௌத்த சமூகக் கட்டமைப்பின் வேர்கள், எங்கெங்கெல்லாம் பரவி இருக்கின்றன என்பதை, இன்று வரைக்கும் யாரும் ஆராயவில்லை.

(முற்றும்)

இந்தத் தொடரின் முதலாவது பதிவை வாசிப்பதற்கு:
ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள், இணையத் தளங்கள்:
1.Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck
2.The Kandyan Kingdom
3.21st century slaves
4.The Expedient Utopian: Bandaranaike and Ceylon
5.நோத் முதல் கோபல்லவா வரை 6."Monastic Landlordism" in Ceylon, Journal of Asian Studies, Volume 28, Issue 4(August 1969)
------------------------------------

இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்:
1.இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்
2.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள் 3.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்