Tuesday, September 29, 2015

"சோவியத் கால வாழ்க்கை மிகவும் சிறந்தது!" - பொது மக்களின் வாக்குமூலம்


ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடான மோல்டாவியா பற்றிய ஆவணப்படம் (Mistig land) ஒன்றை, நெதர்லாந்து தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மோல்டாவியா முன்னர் ஒரு காலத்தில் சோவியத் குடியரசாக இருந்தது. 

அந்தக் காலத்தில், மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து வந்தன. வசிப்பதற்கு வீடு, நிரந்தர வேலை, பயிரிட வீட்டுத் தோட்டம், பால் கறக்க பசுமாடு எல்லாம் இருந்தன. இப்போது ஒன்றுமில்லை. வேலையில்லாப் பிரச்சினையால் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள். அதனால் குடும்பங்கள் உடைகின்றன. பெற்றோரின் அரவணைப்புக் கிடைக்காத பிள்ளைகள் தற்கொலை செய்கின்றன.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் Grensland எனும் தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. சரளமாக ரஷ்ய மொழி பேசத் தெரிந்த, டச்சு ஊடகவியலாளர் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். ரஷ்யா உட்பட, முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு சென்று இந்த ஆவணப் படங்களை தயாரித்துள்ளார். அதன் முதலாவது பகுதி, மோல்டாவியா பற்றியது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேற்கத்திய நலனில் இருந்தே அந்த நாடுகளைப் பார்க்கின்றார். பல தடவைகள், தனது ஒரு பக்கச் சார்பான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். இருப்பினும், அவரால் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. "பெரும்பான்மையான மக்கள், சோவியத் கால வாழ்க்கை மிகச் சிறந்தது என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளனர்."

பொது இடங்களில் சந்திக்கும் சாதாரண மக்கள் பலரைப் பேட்டி எடுத்துள்ளார். அவர்களில் யாருமே சோவியத் கால வாழ்க்கை பற்றி குறை கூறவில்லை! முன்பு வாழ்க்கை நன்றாக இருந்தது, எமக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இப்போது எல்லாம் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றன என்று தான் கூறினார்கள். 

சோவியத் காலத்தில் பிறந்திராத இளையதலைமுறையினர், நிலைமையை இவ்வாறு புரிந்து கொள்கின்றனர்: "சோவியத் காலத்தில் மூன்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்கும் அளவிற்கு யாரிடமும் வசதி இருக்கவில்லை. ஆனால், தாராளமான ஓய்வு நேரம் கிடைத்தது. அதனால் மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், கூடிக் கதை பேசி பொழுது போக்கவும் முடிந்தது. தற்போது அப்படி அல்ல. யாருக்குமே ஆறுதலாக பேசுவதற்கு நேரமில்லை. எல்லோரும் ஏதோவொரு வேலையில் மும்முரமாக இருக்கின்றனர். கஷ்டங்களில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ்வதே பலருக்கு சவாலாக இருக்கிறது."

மோல்டாவியாவில் மூவின மக்கள் வாழ்கிறார்கள். மேற்கில் ருமேனிய மொழியினரும், கிழக்கில் ரஷ்ய மொழியினரும், தெற்கில் ஒரு மாகாணத்தில் கவ்காசியா (துருக்கி போன்றது) மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், மூவின மக்களையும் பேட்டி கண்டுள்ளனர். முன்னாள் சோவியத் யூனியனில் எல்லாம் சிறப்பாக இருந்தன என்பதில் மட்டும் அவர்களுக்கு இடையில் கருத்தொற்றுமை நிலவுகின்றது.


மோல்டாவியாவில் முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்தது. அதற்கு முன்னர், சோவியத் காலத்தில் பல்லின மக்களும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். மக்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை இருந்தது. இப்போது அவரவர் தன்னுடைய பிரச்சினையை மட்டுமே பார்க்கும் சுயநலவாதிகளாகி விட்டனர்.

இந்தக் கருத்துக்களை, தற்போது இரண்டு துருவங்களாக பிரிந்து வாழும், மூவின மக்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவிப்பது கவனிக்கத் தக்கது. தொண்ணூறுகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள், தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். நீண்டதொரு உள்நாட்டுப் போரின் பின்னர் தனியாகப் பிரிந்து சென்ற திரான்ஸ்நிஸ்திரியா (அல்லது திரான்ஸ்நியேஸ்திரியா) குடியரசை, இன்னமும் உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. 

தெற்கே வாழும் துருக்கி மொழி பேசும் கவ்காசிய மக்கள், தொண்ணூறுகளில் பிரிந்து செல்ல விரும்பினாலும், மோல்டாவியாவின் சுயாட்சிப் பிரதேசமாக இணைந்து கொண்டனர். இவ்வாறு இன்று ஒன்றுகொன்று பகைமை கொண்ட இனங்களாக பிரிந்து நிற்கும் மோல்டாவியா மக்கள், சோவியத் காலத்தில் ஒற்றுமையாக சகோதர உணர்வுடன் வாழ்ந்தார்கள் என்பதை இன்று நம்ப முடியாமல் இருக்கும். ஆனால், நாங்கள் நம்பத் தான் வேண்டும். சோவியத் கால சகோதரத்துவம் பற்றி, அந்த மக்களே தமது வாயால் சொல்லக் கேட்கலாம்.

சோவியத் யூனியன் உடைவுக்குப் பின்னர் பிறந்த இளைய தலைமுறையினருக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து சோவியத் வாழ்க்கை வசதிகள் பற்றி அறிந்து கொண்டாலும், இன்றைய மோசமான நிலைமையை சமாளிப்பதே அவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை காரணமாக, பெரும்பாலான இளைய தலைமுறையினர் வேலை தேடி புலம்பெயர்கின்றனர். அநேகமானோர், ரஷ்யாவிலும், இத்தாலியிலும் வேலை செய்து சம்பாதித்து வீட்டுக்கு காசு அனுப்புகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் பெற்றோர் பணம் அனுப்பி வசதி வாய்ப்புகளை பெருக்கினாலும் குடும்பங்களில் நிம்மதி இருப்பதில்லை. பல குடும்பங்களில், தாய், தந்தை இருவரும் வெளிநாடுகளில் இருப்பதால், பிள்ளைகள் தாத்தா, பாட்டிகளுடன் வளர்கின்றன. அவர்கள் எந்தளவு பாசமாக நடந்து கொண்டாலும், வீட்டில் தாராளமாக பாவனைப் பொருட்கள் குவிந்திருந்தாலும், பிள்ளைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு இல்லாதது பெரிய குறையாக உள்ளது. 

இந்தக் குறைபாட்டை வெளியில் இருப்பவர்கள் புரிந்து கொள்வதில்லை. "இந்தப் பிள்ளைக்கு வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கின்றன தானே?" என்று கேட்கிறார்கள். அதாவது, பணம் மட்டும் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவு பணம் இருந்தாலும், அது தாய், தந்தையின் அன்புக்கு ஈடாகுமா? அதனால், பருவ வயது பிள்ளைகள் மத்தியில் தற்கொலை மரணமும் அதிகரித்து வருகின்றது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட லெனின் சிலைகள், இன்றைக்கும் பல இடங்களில் நிலைத்து நிற்கின்றன. சோவியத் யூனியனை இழந்ததற்காக, அங்கு வாழும் மக்கள் இன்று வரை கவலைப் படுகிறார்கள். பெரும்பாலும் வயோதிபர் மத்தியில் அதற்கான ஏக்கம் அதிகமாக உள்ளது. அந்தக் காலங்களில் தாங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சப் படவில்லை என்று சொல்கின்றனர். வேலையும், வசதி வாய்ப்புகளும் இருந்தன. இன்றைக்கு வாழும் மக்கள் பண்பாடற்றவர்களாக நடந்து கொள்வதாக அவர்கள் குறைப் படுகின்றனர்.

ஆவணப் படத்தை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்:

Friday, September 25, 2015

முதலாளித்துவத்தை எதிர்க்கும் போப்பாண்டவரின் பொன்மொழிகள்




முதலாளித்துவ சாத்தானுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு போப்பாண்டவர் அறைகூவல்! உலக கத்தோலிக்கர்களின் தலைவர், போப்பாண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார். 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த பொழுது, 21 ம் நூற்றாண்டின் சோஷலிசத்தை பின்பற்றும் எக்குவடோர், பொலீவியா போன்ற நாடுகளுக்கே முதலில் சென்றிருந்தார். அது அந்த அரசுக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப் படுகின்றது.

பராகுவே நாட்டுக்கு சென்ற போப்பாண்டவர், தலைநகர் அசுன்சியோனில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவரது உரையில் முதலாளித்துவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. "தற்போதைய பொருளாதாரம் பிசாசின் சாணம்... பணத்தின் மீது பேராசை கொண்ட சர்வாதிகார அமைப்பு..., காலனியாதிக்கம் போன்று ஆண்களையும், பெண்களையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது..." என்று அவர் முதலாளித்துவத்தை கடுமையான சொற்களின் மூலம் தாக்கினார்.


கத்தோலிக்க போப்பாண்டவருக்கு, கம்யூனிச சின்னம் பொறித்த பரிசுப்பொருள் வழங்கப் பட்டது! சிலுவையுடன், அரிவாளும், சுட்டியலும் சேர்ந்த வித்தியாசமான பரிசுப் பொருள் ஒன்றை, பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொராலேஸ், போப் பிரான்ஸிஸிடம் கொடுத்தார்.

எண்பதுகளில் பொலிவியாவை ஆண்ட வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் Luis Espinal, அதே மாதிரியான சின்னம் ஒன்றை வைத்திருந்தார். ஸ்பெயினில் பிறந்த பாதிரியார் லூயிஸ், பொலிவிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார்.

எசுயிஸ்ட் கத்தோலிக்க பாதிரியாரான லூயிஸ், பொலிவியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளராகவும், இடதுசாரி பத்திரிகையாளராகவும் இருந்தார். 21 மார்ச் 1980, வீட்டுக்கு வரும் வழியில் அவரைக் கடத்திச் சென்ற வலதுசாரி துணைப் படையினர், பல மணிநேரம் சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக் கொன்றனர்.

இடதுசாரி பாதிரியார் லூயிஸின் பிரபலமான கூற்று ஒன்று, அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளப் போதுமானது.
 "மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."



"அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு கருப்பரும், போப்பாண்டவராக ஒரு லத்தீன் அமெரிக்கரும் வரும் காலத்தில், அமெரிக்கா எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தும்." என்று 1973 ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கூறிய தீர்க்கதரிசனம் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஆனால், போப்பாண்டவர், நேரடியாகவே தனது வீட்டுக்கு வந்து வாழ்த்துவார் என்று, பிடல் காஸ்ட்ரோ எதிர்பார்த்திருக்க மாட்டார். 

"நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!" - அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.

கியூபாப் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவுக்கு சென்ற போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது.

அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் "இடதுசாரி" என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக "லிபரல்" என்று தான் அழைப்பார்கள்.
Pope Francis: I Am Not a Liberal 
http://time.com/4044971/pope-francis-i-am-not-a-liberal/


"பல சக்தி வாய்ந்த மனிதர்கள் சமாதானத்தை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தால் வாழ்கிறார்கள். ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்று, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு எதிராக திருப்பி விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்." - போப்பாண்டவர் பிரான்சிஸ் 
http://theantimedia.org/10-things-pope-francis-said-that-may-signal-dark-sides-demise/%EF%BB%BF

Friday, September 18, 2015

செப்டம்பர் படுகொலைகள்: ஜோர்டானில் நசுக்கப் பட்ட பாலஸ்தீன- மார்க்சியப் புரட்சி


1970 செப்டம்பர், ஜோர்டானில் ஓர் இனப்படுகொலை நடந்தது! ஜோர்டான் மக்கட்தொகையில் அறுபது சதவீதமாக இருந்த பாலஸ்தீனர்களை குறி வைத்து அந்த இனவழிப்பு நடந்தது. CIA கைக்கூலியான மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான படையினர் நடத்திய இனவழிப்புப் போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். இன்னொரு CIA கைக்கூலியான சியா உல் ஹாக் தலைமையிலான பாகிஸ்தானிய படைகள், ஜோர்டானியப் படைகளுக்கு உறுதுணையாக நின்று, அந்த இனவழிப்பை நடத்தி முடித்தன.

செப்டம்பர் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்கள் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்". அவர்களை கொன்று குவித்தவர்களும் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்." ஏனிந்த வன்மம்? 1970 செப்டம்பர், அமெரிக்கா உதவியுடன் அந்த இனவழிப்புப் போர் நடந்திரா விட்டால், பாலஸ்தீன மார்க்சிய விடுதலை இயக்கங்கள், ஜோர்டானின் ஆட்சியை கைப்பற்றி அதனை ஒரு கம்யூனிச நாடாக மாற்றி இருந்திருப்பார்கள்!

மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கத்துடன், அதன் பக்க விளைவாக, அயலில் ஜோர்டான் என்ற புதிய தேசம் உருவானது. இஸ்ரேலில் இருந்து விரட்டப் பட்ட பாலஸ்தீனர்கள் ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர். மன்னர் ஹுசைனின் சொந்த இனக் குழுவான ஹாஷேமித் அரபுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஜோர்டானில், வெகு விரைவில் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
1967 போருக்குப் பின்னர், ஜோர்டான் வசமிருந்த மேற்குக் கரையும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதனால் மேலும் பெருந்தொகை பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

ஜோர்டானில் நிரந்தரமான பாலஸ்தீன அகதி முகாம்கள் உருவாகின. புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மத்தியில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஆதரவுத் தளங்களை ஏற்படுத்திக் கொண்டன. இஸ்ரேலுடனான நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததாலும், பெருந்தொகை பாலஸ்தீனர்களின் புகலிடமாக இருந்த படியாலும், ஜோர்டான் பாலஸ்தீன கெரில்லாக்களின் விருப்பத் தெரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து இஸ்ரேலுக்குள் கெரில்லாத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆயினும், ஜோர்டான் மன்னர் ஹுசைனுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இரகசிய உறவு இருந்து வந்தது. பாலஸ்தீன கெரில்லாக்கள் தனது நாட்டை தளமாகப் பயன்படுத்துவதை அவர் விரும்பவில்லை. அப்படியான தருணத்தில், 2 நவம்பர் 1968 நடந்த சம்பவம் ஒன்று, ஜோர்டான் அரசுடன் பகை முரண்பாட்டை உண்டாக்கியது. 

இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த பால்பூர் உடன்படிக்கையின் 51 வது ஆண்டு நிறைவையொட்டி, புதியதொரு பாலஸ்தீன இடதுசாரிக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. தலைநகர் அம்மானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த, ஜோர்டானிய பாதுகாப்புப் படையினர், கலவரத்திற்கு தலைமை தாங்கியவர்களை கைது செய்தது.

நீண்ட காலமாக, பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள், ஜோர்டானுக்குள் சுதந்திரமாக நடமாடித் திரிந்தன. தற்போது ஜோர்டானிய படைகள், வீதித் தடையரண்களை அமைத்து, கெரில்லாக்களின் வாகனங்களை சோதனை போடத் தொடங்கினார்கள். பாலஸ்தீன இயக்கங்கள், மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினார்கள். ஒரு தடவை, ஜோர்டானிய பொலிஸ் வாகனத்தை கண்ணி வெடி வைத்து தாக்கிய கெரில்லாக்கள், அதில் பயணம் செய்த பொலிஸ்காரர்களை உயிருடன் பிடித்து சுட்டுக் கொன்றனர். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற இராணுவ வீரர் ஒருவரும் கொலை செய்யப் பட்டார்.

இன்னொரு சம்பவத்தில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்ட தோழர்களை விடுவிக்குமாறு, ஆயுதங்களுடன் சென்ற கெரில்லாக்கள் மிரட்டினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில், போலீஸ்காரர்கள் காயமுற்று, ஒரு வழிப்போக்கர் கொல்லப் பட்டார். அதே நேரம், ஜோர்டானிய இராணுவமும் பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. அதில் சிக்கி பல அகதிகள் உயிரிழந்தனர்.

PLO எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல இயக்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இயங்கியது. அதில் ஒவ்வொரு இயக்கமும் தனக்கென தனியான தலைவரும், கொள்கையும் கொண்டிருந்து. அப்போது தான் PLO தலைவராக தெரிவான யாசிர் அரபாத், மன்னர் ஹுசைனுடன் சேர்ந்து பிரச்சினையை சமரசமாக தீர்த்து வைக்கப் பார்த்தார். ஆயினும், அரபாத்தின் இயக்கத்திற்குள்ளே கூட, ஜோர்டானில் ஒரு பாலஸ்தீன புரட்சி நடத்துவதற்கு ஆதரவு இருந்தது.

பிற்காலத்தில், தன் பக்க தவறுகளை மறைப்பதற்காக, புரட்சி நசுக்கப் பட்டதற்கு மார்க்சிஸ்டுகளே காரணம் என்று யாசிர் அரபாத் காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். கருத்து ஒற்றுமை இல்லாத இயக்கங்களை குற்றஞ் சாட்டினார். இருப்பினும், எதிரியை குறைவாக எடை போட்டது, அரபாத் பக்கத் தவறாக இருந்தது. அதாவது, ஜோர்டான் ஆட்சியை பாலஸ்தீன இயக்கங்கள் கைப்பற்ற நினைத்தால் அது இலகுவாக முடிந்திருக்கும் என்று நம்பினார். ஈராக்கும், சிரியாவும் ஆதரவளித்திருக்கும் என்று நம்பினார்.

உண்மையில், 1970 பெப்ரவரி வரையில், ஜோர்டானில் பாலஸ்தீன இயக்கங்களின் கை ஓங்கியிருந்தது. தலைநகர் அம்மானின் சில பகுதிகள் உட்பட, பெரும்பாலான ஜோர்டானின் பிரதேசங்கள் பாலஸ்தீன இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவர்கள் தேசத்திற்குள் இன்னொரு தேசத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 

காணுமிடமெங்கும் பாலஸ்தீன இயக்கங்களின் வீதித் தடையரண்கள், ஜோர்டானிய படைகளை எட்டத்தில் வைத்திருந்தன. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், பாலஸ்தீன இயக்கங்கள் சொன்னது தான் சட்டமாக இருந்தது. அவர்கள் தமது பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்களை நிறுவினார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எப்படி இருந்ததோ, அதே மாதிரித் தான் ஜோர்டானில் பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது.


பாலஸ்தீனர்கள் மத்தியில், தீவிர கம்யூனிச இயக்கமாக கருதப் பட்ட PFLP, ஜோர்டானிய புரட்சியில் ஏறக்குறைய தலைமைப் பாத்திரம் வகித்தது எனலாம். அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் ஆயுதப் போராட்டம் நடத்திய தீவிர கம்யூனிச இளைஞர்கள், PFLP முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களது ஆதரவுடன் PFLP, இதனை ஒரு சர்வதேச அரபுப் புரட்சியின் தொடக்கமாக கருதியது. 

PFLP, "அமெரிக்க- இஸ்ரேலிய கைக்கூலி ஹுசைனின், பிற்போக்கான மன்னராட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி" என்று பிரச்சாரம் செய்தது. ஜோர்டானிய தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவி, வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியது. மார்க்சிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், பரவலாக மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டன. பள்ளிவாசல்களை கைப்பற்றி, அங்கிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் கம்யூனிசப் பிரச்சாரம் செய்தார்கள்!

இதற்கிடையே, தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொண்ட யாசிர் அரபாத், ஜோர்டான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. AK-47, RPG, மோர்ட்டார் ஆகிய சிறு ஆயுதங்களைக் கொண்டு, பாலஸ்தீன கெரில்லாக்கள் துணிச்சலுடன், ஜோர்டானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், வட கொரியா சென்ற PFLP தலைவர் ஜோர்ஜ் ஹப்பாஷ், அங்கிருந்த ஜப்பானிய செம்படையுடன் இணைந்து, சர்வதேச மட்டத்தில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார்.

"சர்வதேச புரட்சிப் படையின்" துணிச்சலான நடவடிக்கை, அன்று உலகம் முழுவதும் பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேச வைத்தது. இரண்டு மேற்கத்திய நாடுகளின் பயணிகள் விமானங்கள் கடத்தப் பட்டன. ஓர் அமெரிக்க விமானமும், சுவிஸ் விமானமும், ஆகாயத்தில் பறக்கையில் கடத்திச் செல்லப் பட்டன. கடத்திச் செல்லப் பட்ட விமானங்கள், ஜோர்டானில் உள்ள Dawsons Field விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டன. அப்போது அது "புரட்சிகர விமான நிலையம்" என்று பெயர் மாற்றப் பட்டது!

ஆறு நாட்களின் பின்னர், இன்னொரு மேற்கத்திய விமானம் அங்கு கொண்டு வரப் பட்டது. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த விமானப் பயணிகள் அனைவரையும் விடுவித்து விட்டு, மூன்று விமானங்களையும் குண்டு வைத்துத் தகர்த்தனர்.


நிலைமை எல்லை மீறிச் செல்வதை கண்டு கொண்ட அமெரிக்கா, நேரடியாகவே ஜோர்டானிய உள்விவகாரங்களில் தலையிட்டது. இஸ்ரேலிய, அமெரிக்க விமானங்கள் ஜோர்டானிய வான்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாலஸ்தீன கெரில்லாக்களுக்கு உதவ வேண்டாம் என்று, ஈராக் அரசுக்கு அமெரிக்கா எச்சரித்தது.

அமெரிக்க, இஸ்ரேலிய உதவியை பெற்றுக் கொண்ட ஜோர்டானியப் படைகள், பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் முன்னேறின. அந்தக் காலப் பகுதியில், ஜோர்டானிய படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக நிலை கொண்டிருந்தன. பின்னாளில் பாகிஸ்தான் சர்வாதிகாரியாக வந்த சியா உல் ஹக், அன்று ஜோர்டானில் இருந்த பாகிஸ்தானிய படைகளுக்கு தலைமை தாங்கினார். 

ஜோர்டானிய - பாகிஸ்தானிய கூட்டுப் படைகள், பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது கண்மூடித் தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தின. ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப் பட்டனர். பல அகதி முகாம்கள் தரை மட்டமாக்கப் பட்டன. செப்டம்பர் மாதம் மட்டிலும், குறைந்தது இருபதாயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர்.

ஜோர்டானில் பாலஸ்தீனப் புரட்சி தோற்கடிக்கப் பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, 1971 ம் ஆண்டு வரையில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஜோர்டானுக்குள் இருந்தன. ஆனால், அவர்களை மெல்ல மெல்ல வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

இறுதியில், அனைத்து பாலஸ்தீன இயக்கங்களும், ஆயுதங்களுடன் லெபனானுக்கு தப்பியோடின. தெற்கு லெபனானில் தளம் அமைத்து, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தன. ஜோர்டானில் நடந்த செப்டம்பர் படுகொலைகளை நினைவுபடுத்தும் "கருப்பு செப்டம்பர்" என்ற பெயர், வேறொரு காரணத்தால் வரலாற்றில் நிலைத்து விட்டது.

1972 செப்டம்பர், (மேற்கு) ஜெர்மனி மியூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதற்கு வந்திருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், சில தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்து கொல்லப் பட்டனர். பாலஸ்தீன, ஐரோப்பிய தீவிரவாதிகளை கொண்ட அந்த தீவிரவாதிகளின் குழு, தம்மை "கருப்பு செப்டமபர் இயக்கம்" என்று அழைத்துக் கொண்டனர். மியூனிச் படுகொலைச் சம்பவம் உலகப் புகழ் பெற்று, கருப்பு செப்டம்பர் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

Sunday, September 13, 2015

தமிழ் அகதிகளை வெறுக்கும் நாஸிகளை போற்றும் தமிழ் வலதுசாரிகள்!


ஐரோப்பிய நாடுகளில், தமிழராகிய எம்மைப் போன்ற, வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக இனவெறியை கக்குவோர், "தீவிர வலதுசாரிகள்" அல்லது "நவ நாஸிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். 

வெள்ளையின மேலாண்மைக் கொள்கை கொண்ட நிறவெறியர்கள். தமிழர், முஸ்லிம், ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளுக்கு எதிராக இனத்துவேஷ கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஐரோப்பாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிரச்சினை அல்ல. தமிழர்களில் சிலரும் அதே கருத்துக்களை எதிரொலிக்கிறார்கள்!

பெரும்பாலும் ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட, இஸ்லாமியரை வெறுக்கும் தமிழர்கள், ஐரோப்பிய நாஸிகளின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், அவர்களுக்கு எந்தவிதமான வெட்கமும் கிடையாது. நவ நாஸிகளின் இனத்துவேஷ கருத்துக்களை, அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கூறி வருகின்றனர்.

சிலநேரம், தமது இனவாத சுயரூபத்தை மறைப்பதற்காக, ஈழத் தமிழர் மேல் கரிசனை கொண்டவர்கள் போன்றும் நடிப்பார்கள். ஆகையினால், தமிழ் மக்கள் இப்படியானவர்கள் குறித்து விழிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதுகிறேன். நாஸிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மீண்டும் ஒரு உலகப் போருக்கே இட்டுச் செல்லும்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயரும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இது தான் சந்தர்ப்பம் என்று, ஐரோப்பிய நவ நாஸிகள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். "சிரிய அகதிகள் மத்தியில், ஏராளமான ISIS போராளிகள் மறைந்திருப்பதாகவும், ஐரோப்பாவில் குழப்பங்களை உண்டாக்கப் போவதாகவும்" பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தொடர்பாக, பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட தகவல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள நாஸிகளால் (தமிழ் நாஸிகள் உட்பட) பகிர்ந்து கொள்ளப் பட்டது. (பார்க்க : Riot breaks out at overcrowded refugee camp in Germany after resident tore pages out of the Koran and threw them in the toilet: http://www.dailymail.co.uk/news/article-3204828/Riot-breaks-overcrowded-refugee-camp-Germany-resident-tore-pages-Koran.html)

ஜெர்மனியில் ஓர் அகதி முகாமில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான விளக்கத்தை பின்னர் எழுதுகிறேன். தற்போது, அந்தத் தகவலை வெளியிட்ட டெய்லி மெயிலின் யோக்கியதை என்னவென்று பார்ப்போம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், ஹிட்லரை ஆதரித்து வந்த பத்திரிகை அது! 

ஹிட்லரை சந்தித்துப் பேசிய டெய்லி மெயில் பத்திரிகை உரிமையாளர் Lord Rothermere

டெய்லி மெயில் ஸ்தாபகரான Lord Rothermere, ஹிட்லரை நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கும் ஹிட்லருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்தக் காலத்தில் பிரிட்டனில் இயங்கிய பாசிசக் கட்சியை ஆதரித்தார். அது கடந்த கால வரலாறு என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அண்மையில் கூட, டெய்லி மெயில் பத்திரிகை பிரெஞ்சு பாசிசக் கட்சியான Front National ஐ ஆதரித்தது! (பார்க்க: http://www.dailymail.co.uk/debate/article-2132611/French-elections-2012-Marine-Le-Pen-responsible-vote-France.html)

பிரிட்டனில் வந்து குவிந்த யூத அகதிகளுக்கு எதிராக,
இனவாதம் கக்கிய டெய்லி மெயில் பத்திரிகை 

ஜெர்மனியில் நாஸி ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்களில், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் யூதர்கள், ஐரோப்பிய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். பிரிட்டனிலும் யூத அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது இதே டெய்லி மெயில் பத்திரிகை, யூத அகதிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. அதே நேரம், நாஸி கட்சியையும், பிரிட்டிஷ் பாசிஸ்ட் கட்சியையும் பாராட்டி எழுதிக் கொண்டிருந்தது!  

தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள், அடிக்கடி மேற்கோள் காட்டும் பிரிட்டிஷ் டெய்லி மெயில் பத்திரிகை, முன்பு யூத அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்கியது. தற்போது அதே பத்திரிகை, முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்குவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இந்த உண்மை தெரியாமல், ஒரு வலதுசாரி இனவாதப் பத்திரிகையான டெய்லி மெயில் தகவலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அதில் வரும் செய்திகளை நம்ப முடியுமா? 

டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட, ஜெர்மன் அகதி முகாமில் நடந்த "கலவரத்தின்" பின்னணி என்னவென்று பார்ப்போம். ஜெர்மனியில் சூல் (Suhl) எனும் இடத்தில், அகதி முகாம் ஒன்றில் நடந்த அசம்பாவிதம் பற்றிய தகவலை, வலதுசாரிகள் தமது இனவெறிப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு நடந்த சம்பவம் இது தான். பெருந்தொகையான முஸ்லிம் அகதிகளை கொண்ட அகதி முகாம் ஒன்றில், ஓர் ஆப்கான் அகதி (அவரும் முஸ்லிம் தான்) பொது இடத்தில் குரானின் பக்கங்களை கிழித்து வீசியுள்ளார்.

அதன் விளைவாக, அங்கு திரண்ட இருபது பேர் கொண்ட அகதிகள் கும்பல், ஆப்கான் அகதியை விரட்டிச் சென்றது. அவனுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்த படியால், சீற்றமுற்ற கும்பல் முகாம் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளது. இந்தத் சம்பவத்தை பெரிது படுத்தியுள்ள வலதுசாரி ஊடகங்கள், ஐரோப்பிய வெள்ளை - இனவாதிகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளன.

உண்மையில் கலாச்சார அதிர்ச்சி காரணமாக, இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு. எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி முகாம்களில் வசித்து வந்த தமிழ் அகதிகளும், சிங்கள அகதிகளும், சிறு சச்சரவு காரணமாக கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டனர். சுவிட்சர்லாந்தில், பொது தொலைபேசி கூண்டுக்குள் ஆடு வெட்டிய தமிழர்கள் பற்றிய தகவல், சுவிஸ் ஊடகங்களில் பிரபலமாக அடிபட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ் அகதிகளே இரண்டாகப் பிரிந்து, புங்குடுதீவு- யாழ்ப்பாணம் கோஷ்டி மோதல் நடந்தது.

பத்து வருடங்களுக்கு முன்னர், எனக்குத் தெரிந்த தமிழ் அகதி ஒருவர், நெதர்லாந்தில் நடந்த, தமிழ் விளையாட்டுக் கழகங்களின் நாடளாவிய விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்தப் போட்டிகளை புலிகள் அல்லது புலி ஆதரவு அமைப்புகள் நடத்தினார்கள். பெருமளவு பார்வையாளர்களும் புலி ஆதரவாளர்கள் தான்.

அப்போது முகாமில் வசித்து வந்த குறிப்பிட்ட தமிழ் அகதி, விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரம், சிங்கக்கொடி போட்ட டி-சேர்ட் அணிந்து சென்றார். அதைக் கண்டு கிளர்ந்தெழுந்த புலி ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து, அந்த இளைஞனை அடித்து உதைத்து சட்டையைக் கிழித்துள்ளனர். இத்தனைக்கும் அடி வாங்கிய இளைஞன் ஒரு முன்னாள் புலிப் போராளி!

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு வருடத்திற்குப் பின்னர், அடி வாங்கிய அகதிக்கு நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்தது. ஆகவே, ஜெர்மனியில் நடந்த அசம்பாவிதத்திற்கு காரணமான ஆப்கான் அகதியும், தனது சுயநலத்திற்காகவே அதைச் செய்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ஜெர்மனியில் தனக்கு அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியாகி விட்டது என்று, அந்த ஆப்கான் அகதி உள்ளூர மகிழ்ந்திருப்பான்.

ஆகவே, அகதி முகாம்களில் நடக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மதச் சாயம் அல்லது இனச் சாயம் பூசுவது அபத்தமானது. ஒன்றில் அகதிகளின் சுயநலம் காரணமாக, அல்லது கலாச்சார அதிர்ச்சி காரணமாக நடக்கும் கலவரங்கள் தொடரப் போவதில்லை. அகதிகள் ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு கொஞ்சக் காலம் எடுக்கும்.

ஐரோப்பிய நவ நாஸிகளும், தமிழ் நாஸிகளும் ஒரு கார்ட்டூன் படத்தை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், துருக்கியில் இருந்து கிரீசுக்கு படகில் சென்ற அகதிகள், விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனவைரும் அறிந்ததே. ஒரு தடவை, அயிலான் என்ற மூன்று வயது குழந்தையும் பரிதாபகரமாக மரணமடைந்த படியால் அது உலகின் மனச்சாட்சியை உலுக்கி இருந்தது.

உண்மையில் ஐரோப்பாவை பிடித்தாட்டிய அகதிகளின் நெருக்கடியின் மத்தியில் அந்த மரணம் சம்பவித்த படியால் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள், அகதிகள் வருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈழத் தமிழ் அகதிகள் உட்பட, பொதுவாக எந்த நாட்டு அகதியும், ஐரோப்பா வருவதை   விரும்பாத, நவ நாஸிகளுக்கு அது உவப்பானதாக இருக்குமா? ஐரோப்பாவுக்குள் பெருந்தொகை அகதிகள் வருகிறார்களே என்ற காழ்ப்புணர்வின் காரணமாக, ஒரு கார்ட்டூன் வெளியிட்டார்கள்.


"நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் அயிலான். நாங்களும் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளே. ஆனால் உலகம் எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை." என்று மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவக் குழந்தைகள், ஆயிலானைப் பார்த்து சொல்வதைப் போன்று அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்கள்.

சிரியா மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில், கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களும் அல்ல. ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களும் அல்ல. இந்த உண்மையை புரிந்து கொள்ளாத தமிழ் நாஸிகள், அதே கார்ட்டூனில் சிறு மாற்றம் செய்து, கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பதிலாக "ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள்" என்று மாற்றி எழுதினார்கள்.

இங்கேயும் அதே லாஜிக் உதைக்கிறது. அந்தச் சம்பவத்தில் இறந்தது ஒரு "ஈழத் தமிழ் அயிலான்" என்றால், இவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? முதலில் அயிலான் என்ற அந்தக் குழந்தை போரில் மரணமடையவில்லை. சட்டவிரோதமாக விசா இல்லாமல், கள்ளத் தோணியில் கிரீஸ் சென்ற நேரம் தான் மரணம் சம்பவித்தது. இவ்வாறு ஏற்கனவே பல ஈழத் தமிழ்க் குழந்தைகளும் ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் நேரம் மரணமடைந்துள்ளன.

இந்த உண்மையை மறைத்து, திடீரென ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள் மீதும், சிரியா- ஈராக் போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகள் மீதும், பரிவு காட்டும் நாஸிகளின் "கழிவிரக்கம்" மெய்சிலிர்க்க வருகின்றது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக ஐரோப்பிய நவ நாஸிகள் அழுகிறார்கள். அதே மாதிரி, ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாட்டு நாஸிகள் அழுகிறார்கள். ஜெர்மன் மொழி பேசினாலும், தமிழ் மொழி பேசினாலும் நாஸிகள் நாஸிகள் தான். ஒரே கொள்கை கொண்டவர்கள் தான். 

Norwegian Defence League (http://norwegiandefenceleague.com/என்ற சிறியதொரு நவ நாஸி அமைப்பு, தமது பேஸ்புக் பக்கத்தில் அந்தக் கார்ட்டூனை வெளியிட்டு இருந்தது. இங்கிலாந்தில் பல வருட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இனவெறி அமைப்பான, English Defence League (EDL https://en.wikipedia.org/wiki/English_Defence_League) இன் சகோதர அமைப்பு. வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நவ நாஸி அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

EDL உறுப்பினர்கள், ஒஸ்லோ நகரில் 90 பேரை படுகொலை செய்த வெள்ளை நிறவெறி பயங்கரவாதி Breivik உடன் தொடர்பு வைத்திருந்தனர். ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாஸிகளின் ஆதரவும், அனுதாபமும் தேவையில்லை. அவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு, ஈழத் தமிழரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியை திசை திருப்பும் நோக்கில், அகதிகளை கேலி செய்யும் வகையில் சிலர் தொடர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில தமிழ் தீவிர வலதுசாரிகள், ஈழப் போரில் பலியான தமிழரின் பேரில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை அவர்கள் தெரிந்து கொண்டு செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?

இந்தத் தீவிர வலதுசாரிகள் யாரிடமும் அகதிகளாக ஐரோப்பாவுக்கு சென்ற அனுபவம் இல்லை என்பது, அவர்களுடனான உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் பொழுது கொல்லப் பட்ட குழந்தைகளை பற்றி கவலைப் படாமல், உள்நாட்டுப் போர்களில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது ஐரோப்பிய எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்கான நடவடிக்கையாகவே எனக்குத் தெரிகின்றது.


மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் ஈழப் போராகினும், சிரியாப் போராகினும், ஐரோப்பிய மேலாதிக்க வல்லரசுகளின் ஆயுத விற்பனையை பெருக்குவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு வழி திறந்து விடுவதற்காகவும் நடந்து வருகின்றன. போர்களின் விளைவாக உருவாகும் அகதிகள் ஐரோப்பாவை சென்றடையும் பொழுது, அவர்களை நிராகரித்து திருப்பி அனுப்புகின்றன.

இந்த உண்மையை மக்களுக்கு தெரிய விடாமல் தடுக்கும் நோக்கில் சிலர் இயங்கி வருகின்றனர். ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் இறந்த படியால் பிரபலம் அடைந்த அயிலான் என்ற குழந்தையை வைத்து இந்த "அகதி எதிர்ப்புப் பிரச்சாரம்" நடக்கிறது.

ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள், சிரியாப் போரில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதே நேரம், தீவிர தமிழ் வலதுசாரிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட தமிழ் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஈழக் குழந்தைகள், சிரியாக் குழந்தை அயிலானிடம், "நாங்களும் உன்னைப் போல போரில் கொல்லப் பட்டவர்கள்" என்று கூறுவது போன்று ஒரு கார்ட்டூன் தயாரித்து, தவறான தகவலை பரப்புகிறார்கள். உண்மையில், அயிலான் போரில் கொல்லப் படவில்லை! 

ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, விசா கிடைக்காமல், சட்டவிரோதமாக எல்லை கடக்கும் நேரத்தில் விபத்தில் கொல்லப் பட்டான். போரில் கொல்லப் படுவதற்கும், கடலில் நடந்த படகு விபத்தில் கொல்லப் படுவதற்கும் இடையிலான வித்தியாசம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

இவர்களது உண்மையான நோக்கம் என்ன? ஈழம், சிரியாவில் நடக்கும் போரில் சிக்கி, எத்தனை இலட்சம் பேர் மாண்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒருவர் கூட ஐரோப்பாவுக்கு அகதியாக செல்லக் கூடாது. ஐரோப்பிய எஜமான் அவர்களுக்கு காலால் இட்ட பணியை, தலையால் செய்து முடித்துள்ளனர்.

ஐரோப்பிய கைக்கூலிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும். அவர்கள் உண்மையிலேயே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளின் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லிக் கேட்கலாமே? ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், குறிப்பிட்ட அளவு தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே?

இன்றைக்கும் எத்தனை இலட்சம் ஈழத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டு முகாம்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அவர்களுக்கு எப்படி அகதி அந்தஸ்து, வதிவிட உரிமை, பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள். அதை விட்டு விட்டு, ஐரோப்பாவுக்கு தமிழ் அகதிகள் செல்வதை தடுக்கும் நோக்கில், அகதிகளுக்கு எதிரான பதிவுகளை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Friday, September 11, 2015

ஈழக் குழந்தைக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலித் தமிழ் உணர்வாளர்கள்


"சிரிய குழந்தைக்காக உலகமே அழுகிறது, ஈழக் குழந்தைக்காக யாரும் அழவில்லை..." என்று, இப்போது சிலர் பிரச்சாரம் செய்யக் கிளம்பி உள்ளனர். இவர்கள் உண்மையில் தமிழ் உணர்வாளர்களும் அல்ல, ஈழக் குழந்தை மீது கரிசனை கொண்டவர்களும் அல்ல.

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடத்தை மூடி மறைப்பது மட்டும் அவர்களது நோக்கம் அல்ல. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களை தனிமைப் படுத்தி, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள் நோக்கில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது. 

முதலில் நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் போன்ற, மூன்றாமுலகை சேர்ந்த, மத்திய கிழக்கு மக்களின் பிரச்சினை ஊடகங்களின் கவனத்தைப் பெறும் நேரத்தில் "மட்டும்" தான், இவர்கள் இது போன்ற வாதங்களை அடுக்குவார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பிரச்சினை என்றால் இவர்களும் சேர்ந்து அழுவார்கள். உதாரணத்திற்கு, கொசோவோவுக்காக உலகமே அழுத நேரம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அப்போது யாருக்கும் ஈழப்போரில் இறந்து கொண்டிருந்த குழந்தைகள் நினைவுக்கு வரவில்லை!

2000 ம் ஆண்டு, அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு சம்பவம் நடந்தது. எலியான் என்ற ஐந்து வயது கியூபா நாட்டுக் குழந்தை, தாயுடன் அகதியாக அமெரிக்காவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக, படகு கடலில் மூழ்கியதால், தாய் உட்பட பல அகதிகள் இறந்து விட்டனர். எப்படியோ குழந்தை எலியான் உயிர் தப்பிப் பிழைத்து மியாமிக் கரையை வந்து சேர்ந்து விட்டான். 

மியாமியில் வசிக்கும் தாய் மாமன், எலியானை பராமரித்து வந்தாலும், கியூபாவில் வசிக்கும் தந்தை, மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினர். அதனால் அமெரிக்க அரசு தலையிட்டு, குழந்தையை தாய் மாமனிடம் இருந்து பிரித்து, கியூபாவுக்கு அனுப்பி விட்டது. (Elián González affair; https://en.wikipedia.org/wiki/Eli%C3%A1n_Gonz%C3%A1lez_affair)

அமெரிக்கா - கியூபா முரண்பாடு காரணமாக, ஒரு குடும்பப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையாகி, அன்று "உலகமே ஒரு கியூபக் குழந்தைக்காக அழுது கொண்டிருந்தது". அப்போது நமது போலித் தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள்? "ஒரு கியூபக் குழந்தைக்காக" அவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அந்த நேரத்தில் ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பல ஈழக் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். அப்போது யாருக்கும் கியூபக் குழந்தையையும், ஈழக் குழந்தையையும் ஒப்பிடத் தோன்றவில்லையே? அது ஏன்?

ஈழக் குழந்தைகள் குறித்து அக்கறைப் படாமல், மேற்கத்திய நாடுகள் பாராமுகமாக இருந்தமையை காட்டுவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒரு தடவை, ஈழப் போர் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 2007 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலமான அல்கார்வே பகுதியில், மடலின் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை காணாமல் போனது. அன்று அது பிரதானமான செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பேசப் பட்டது. (Disappearance of Madeleine McCann; https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann)

ஈழப் போரில் இறந்து கொண்டிருந்த ஈழக் குழந்தைகளை பற்றி, ஒரு வார்த்தை பேசாத மேற்கத்திய ஊடகங்கள், காணாமல்போன ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுதன. உலகம் முழுவதையும் அழ வைத்தன. ஏனென்றால், அது ஒரு மேலைத்தேய பணக்கார நாட்டில் பிறந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை! 

அப்போது நமது "தமிழ் உணர்வாளர்" யாரும் பொங்கியெழுந்து, "பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுகிறீர்களே! ஈழக் குழந்தைக்காக அழுதீர்களா?" என்று கேட்கவில்லை! எப்படிக் கேட்பார்கள்? அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வெள்ளை எஜமானுக்கு கோபம் வராதா?


கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை கடலுக்குள் தள்ளி விட்ட மிருக காருண்யம் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய கவனமெடுத்து தகவல் தெரிவிக்கும். ஆனால், விலங்குகள் மீது காட்டும் அன்பு, பாசத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, மேற்கத்திய நாட்டவர்கள் போரில் கொல்லப் பட்ட ஈழக் குழந்தைகள் விடயத்தில் காட்டவில்லை.

துருக்கிக் கடற்கரையில், சிரிய அகதிக் குழந்தை இறந்து ஒதுங்கிய சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு சிங்கத்திற்காக அழுது வடித்தார்கள். (https://en.wikipedia.org/wiki/Cecil_(lion))

சிம்பாப்வே வன விலங்கு சரணாலயத்தில், ஒரு அமெரிக்க பல் வைத்தியர் சிசில் என்ற சிங்கத்தை சுட்டுக் கொன்ற சம்பவம், அமெரிக்கர்களை கிளர்ந்தெழ வைத்தது. "சிங்கத்தை கொன்ற படுபாவி! இரக்கமற்ற கொலைகாரன்!" என்றெல்லாம் அந்த வைத்தியரை திட்டித் தீர்த்தார்கள். நேரில் கண்டால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. 


இதே அமெரிக்கர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா வந்திருந்த நேரம் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. 

"தமிழர்களை கொன்ற படுபாவிகள்! இரக்கமற்ற கொலைகாரர்கள்!" என்று எந்தவொரு அமெரிக்கரும் முணுமுணுக்கக் கூட இல்லை! அது சரி, நமது "தமிழ் உணர்வாளர்கள்" அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? "அமெரிக்கர்களுடன் நாங்களும் சேர்ந்து, அந்த சிங்கத்திற்காக அழுவோம் வாருங்கள்!" என்று அமெரிக்காவுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து காட்டினார்கள்.


முதலில் "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" அடிப்படையிலேயே தவறானது. உலகில் யாரும் "சிரியக்  குழந்தைகளுக்காக," அல்லது "சிரியாவுக்காக" அழவில்லை! இப்போதும் கூட சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அகப்பட்டு குழந்தைகள் மரணிக்கின்றன. உலகில் யாருக்குமே அதைப் பற்றிக் கவலையில்லை! "சிரியாவில் இன்றைக்கு நடந்த குண்டுவீச்சில், இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டனர்...." என்று எந்த ஊடகமாவது அறிவித்திருக்கிறதா? மேற்கத்திய நாடுகளின் இதே கள்ள மௌனம் தான், ஈழக் குழந்தைகள் விடயத்திலும் பாராமுகமாக இருந்துள்ளது.

அப்படியானால், எதற்காக "அந்த சிரியக் குழந்தை" பற்றிய தகவல் முக்கியத்துவம் பெற்றது? முதலில், அது ஒரு "சிரியக்" குழந்தை என்பதற்காக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அது ஓர் அகதிக் குழந்தை என்பதற்காக எல்லோரும் அழுதார்கள். ஐரோப்பியரின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு பரபரப்பான தகவல்கள் தான். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், ஐரோப்பிய அரசியல் நிலவரம் பற்றி ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

தற்போது அகதிகளின் நெருக்கடி ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓர் ஐரோப்பிய நாட்டில் வசித்தால் அந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில், தினந்தோறும் அகதிகள் தான் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்கள், ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட, அகதிகள் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கில் ஐரோப்பாவுக்குள் வந்து குவியும் அகதிகள் பிரச்சினை, ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அய்லான் என்ற அகதிக் குழந்தை கடலில் மூழ்கி இறந்தது.

ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரு முனைப்பாக அகதிகள் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், "சிரியக் குழந்தையின்" மரணம் ஐரோப்பியரின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர்,  பெரும்பான்மையான ஐரோப்பியர்கள், பொதுவாக அனைத்து அகதிகளுக்கும் எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
"கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன். 

இந்த உண்மை தெரியாமல், "சிரியக் குழந்தைக்காக உலகமே அழுகிறது. ஈழக் குழந்தைக்காக எவன் அழுதான்?" என்று சிலர் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று உங்களது "தமிழினப் பற்றை" விளம்பரப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே சிரியக் குழந்தை, சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தால், "உலகம் அழுதிருக்குமா"? 

அய்லான் என்ற அந்தக் குழந்தை, சிரியாவில் கொபானி என்ற இடத்தில் பிறந்தது. அது பிறக்கும் பொழுதே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அய்லான் குர்டியின் குடும்பத்தினர், குர்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள குர்து சிறுபான்மை இனம், இலங்கையில் தமிழருடன் ஒப்பிடத் தக்கது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது அய்லான் பிறந்த நேரம், குர்து மக்களின் பிரதேசமான கொபானியை (சிரிய- முள்ளிவாய்க்கால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கைப்பற்றுவதற்காக ISIS படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அப்போது பெருந்தொகையான கொபானி வாசிகள் அகதிகளாக வெளியேறி துருக்கியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அங்கிருந்து ஐரோப்பா செல்வதற்காக கிளம்பிய பொழுது தான், கிரேக்க கடல் எல்லையில் அய்லானின் மரணம் நிகழ்ந்தது.

போலித் தமிழ் உணர்வாளர்களே! இப்போது சொல்லுங்கள். ஒரு "தமிழ் அய்லானும்" அவனது குடும்பமும், முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு அகதியாக செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, படகில் பயணம் செய்த பொழுது, அந்தத் தமிழ்க் குழந்தை கிரேக்க கடல் எல்லையில் மூழ்கி இறந்து விடுகின்றது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்து, அது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றால், "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" சரியாக இருந்திருக்கும். இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஈழப் போர்க் களத்தில் இறந்த குழந்தையை, ஐரோப்பிய கடலில் இறந்த அகதிக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றீர்கள். ஈழக் குழந்தைகளும், ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றன என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள்.

ஐரோப்பிய நாடுகள் எதுவும், அகதித் தஞ்சம் கோருவோருக்கு இலகுவான வழி வகைகளை செய்து கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கோரலாம் என்று சட்டம் எழுதி வைத்திருகிறார்கள். ஆனால், நடைமுறையில் எதுவுமே நடப்பதில்லை.

எந்தவொரு ஈழத் தமிழ் அகதியும், கொழுப்பு அல்லது புது டில்லியில் உள்ள ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில், அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து விட்டு, ஐரோப்பாவுக்கு செல்லவில்லை. அது சாத்தியமல்ல என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதிகம் பேசுவானேன். சம்பந்தப் பட்ட சிரிய குழந்தையின் குடும்பமும், கனடாவில் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கனடிய குடிவரவு அமைச்சு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் தான், சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்டு மரணம் சம்பவித்தது.

ஆகவே, இங்கே முக்கியமான பிரச்சினை ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத கோட்டை மதில்கள். வறிய நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா கொடுக்க மறுக்கும் பாகுபாடு. ஏன் எந்தவொரு "தமிழ் உணர்வாளரும்"(?) இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இருக்கும் ஒரே வழி, சட்டவிரோதமாக விசா இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைவது தான். அதைச் செய்ய முயன்ற பொழுது தான், சிரியக் குழந்தையான அய்லானும் அவனது குடும்பமும் கடலில் மூழ்கி இறந்துள்ளன. ஈழம், சிரியா எங்கிருந்து வந்தாலும்,   ஐரோப்பாவில் அவர்கள் அகதிகள் தான். 

ஆகவே, "தமிழ் உணர்வாளர்களே"! நீங்கள் உண்மையிலேயே ஈழக் குழந்தைகளில் கரிசனை கொண்டவர்கள் என்றால், "ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாராள மனதுடன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுங்கள். அது தான் உங்களது தமிழ் உணர்வு நேர்மையானது என்பதை எடுத்துக் காட்டும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைத்துக் கொண்டு, "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" செய்து கொண்டிருந்தால், அது உங்களுடைய "தமிழ் உணர்வு" போலியானது என்பதைத் தான் நிரூபிக்கும்.


Tuesday, September 08, 2015

சிரிய அகதிகள் பற்றி வலதுசாரி அறிவிலிகளுக்கு இலகுவான விளக்கம்

மேற்கு ஐரோப்பாவில் என்ன நடந்தாலும், அது உலகச் செய்தியாகி விடும். அந்த வகையில், தற்போது சிரியாவில் இருந்து பெருந்தொகையில் வந்து கொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் விவாதிக்கப் படும் பேசு பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அகதிகள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் தீவிர வலதுசாரிகளின் பதிவுகளையும் ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. வலதுசாரிகளான சில தமிழர்களும், ஐரோப்பிய நிறவெறியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விளக்கக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது. 


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு செல்லவில்லை?


அகதிகள் தாமாகவே ஒரு நாட்டிற்கு சென்று அடைக்கலம் கோருவதற்கும், குறிப்பிட்ட ஒரு நாடு தானாகவே முன்வந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கு, செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவாதிப்பது போன்று, சவூதி அரேபியா போன்ற செல்வந்த வளைகுடா நாடுகளும் முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது உலக நாடுகளின் அரசுக்கள், தமக்குள் தீர்மானத்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை அகதிகள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் தாம் விரும்பிய நாட்டிற்குத் தான் செல்வார்கள். 

சவூதி அரேபியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஓர் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்காமல், "சிரிய அகதிகள் ஏன் அந்த நாட்டிற்கு செல்லவில்லை?" என்று அகதிகளை நோக்கிக் கேட்பது முட்டாள்தனமானது. சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்கு செல்லாமல், முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் கோர வேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிக் கட்சிகள், நவ நாஸி குழுக்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை, சில தமிழ் வலதுசாரிகளும் வாந்தியெடுப்பது அருவருக்கத் தக்கது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எழுந்த அகதிகள் நெருக்கடி முஸ்லிம் நாடுகளைத் தான் முதலில் பாதித்திருந்தது. துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய மூன்று அயல்நாடுகளும், இன்றைக்கும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை வைத்திருக்கின்றன. அநேகமாக, துருக்கி அகதி முகாம்களில் தங்கி இருந்த அகதிகள் தான், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்றனர். 

அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளே அவ்வாறு சென்றனர். ஏனென்றால், சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வரையில், பயண முகவர்கள் அல்லது கடத்தல்காரர்களின் உதவி தேவைப் பட்டது. அதற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே அந்தளவு செலவளிக்கும் தகுதியை கொண்டிருந்தனர்.


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம்களின் புனித பூமியான சவூதி அரேபியாவுக்கு செல்லவில்லை?


ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின்
இனவாதப் பிரச்சாரம் 
அகதிகள் என்ன காரணத்திற்காக தாயகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகளால் தான், இது போன்ற மடத் தனமான கேள்விகளை கேட்க முடியும். முதலில் சிரிய உள்நாட்டுப் போர் பற்றி ஓரளவேனும் அறிந்து கொண்டு பேச வேண்டும். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர், போர் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த சிரியாவின் நிலைமை என்ன? பெண்கள் கூட மிகவும் சுதந்திரமாக திரிந்த, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றிய நாடாக இருந்தது. அனைத்து பிரஜைகளும் அரபு மொழி பேசினாலும், பல்வேறு பட்ட சமூகங்களாக பிரிந்திருந்தனர். பல்வேறுபட்ட மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை பின்பற்றினார்கள். சிரியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்பட்ட மதச்சார்பற்ற நாடாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர், கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் கடும்போக்கு வஹாபிஸ்டுகளின் கை ஓங்கியது. அவர்கள் சவூதி அரேபியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வஹாபிச- இஸ்லாம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள், பெண்கள் அடக்கப் பட்டனர். 

மேற்கத்திய பாணியில் நவ நாகரிக உடை உடுத்திப் பழகிய பெண்களை, முகத்தில் இருந்து கால் வரை மூடும் கருநிற அங்கி அணிய வைத்தார்கள். கல்வியில் சிறந்த, விமானிகளாக கூட பணியாற்றிய பெண்களை, பாடசாலைக்கு செல்ல விடாமல், வீட்டுக்குள் முடங்க வைத்தார்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள் ஆண்களையும் அடக்கி வைத்தார்கள். மதுபானம் தாராளமாக கிடைத்து வந்த நாட்டில், அதைத் தடை செய்தார்கள். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். சினிமா அல்லது காதல் பாட்டுக்கள் கேட்க முடியாது. தாடி வளர்க்க வேண்டும், இப்படிப் பல கட்டுப்பாடுகள். 

மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் ஒரு நாளேனும் பள்ளிவாசலுக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஐந்து வேளையும் தொழுகைக்கு வர வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர்.

இதிலே கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. சிரியாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அத்தகைய கட்டுப்பாடுகள். வேறுவிதமாக சொன்னால், அவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய தேசத்தில் வாழும் தகைமை கொண்டவர்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கி, இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஷியா இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அலாவித்துகள் ஒன்றில் படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.

அன்பான வலதுசாரிகளே! இப்போது சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை கண்டு அனுபவித்த பின்னரும், எந்த மடையனாவது சவூதி அரேபியாவுக்கு சென்று அகதித் தஞ்சம் கோருவானா? அடுப்பில் இருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்காதா? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்தில், சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற, சிலநேரம் அதைவிட மோசமான, அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறது என்பது இப்போது தெரிந்திருக்கும். 

அது மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த, சிரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தான் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். கிழக்குப் பகுதியில் யாரும் வசிப்பதில்லை. ஏனென்றால், அது வெறும் பாலைவனம். எப்படியாவது "முஸ்லிம்களின் புனித பூமியான" சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளுடன், அகதிகள் பாலைவன சுடுமணலில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்கள் முதலில் ஈராக்கிற்கு சென்று, அங்கிருந்து தான் சவூதி அரேபிய செல்ல முடியும். ஆனால், இந்த இடத்தில் அன்பிற்குரிய முட்டாள் வலதுசாரிகள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுவதும், ISIS என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள "இஸ்லாமிய தேசம்" ஆகும்.

யார் இந்த ISIS? சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற வஹாபிச சர்வாதிகார ஆட்சியை சிரியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் எளிது. அதன் தலைமையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர் சவூதி அரேபியர்கள்! குறிப்பிட்ட அளவு ஈராக்கியர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அந்த ஈராக்கியர்கள் ஏற்கனவே ஈராக்கில் சவூதி அரேபிய நிதியுதவி பெற்று அல்கைதா என்ற பெயரில் இயங்கியவர்கள். 

சவூதி அரேபியர்களையும், ஈராக்கியர்களையும் தலைவர்களாக கொண்ட ISIS இயக்கம், சிரியர்களை அகதிகளாக சவூதி அரேபியா செல்ல விட்டு விடுமா? "நீங்கள் எதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்? நாங்கள் உங்களுக்காக ஒரு குட்டி சவூதி அரேபியாவை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அகதிகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பிரச்சார சுவரொட்டிகள். குறிப்பாக, மருத்துவர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரை நோக்கி எழுதப் பட்டுள்ளது. 

"குட்டி சவூதி அரேபியாவில்" இருந்து வெளியேறும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ஆசாத் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிரிய அரசு அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது. 

ஈழப்போர் நடந்த காலங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செல்லும் தமிழர்கள், சிறிலங்கா அரசினால் எந்தளவு துன்புறுத்தப் பட்டார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அதே பிரச்சினை தான், சன்னி முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

முஸ்லிம் அகதிகள், "குட்டி சவூதி அரேபியாவான" இஸ்லாமிய தேசத்தில் இருந்து வெளியேற விரும்பினால், அதற்கு வசதியான வழி, லெபனானும், துருக்கியும் தான். குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டிற்கு செல்லாமல், ஆயிரம் கிலோமீட்டர் பாலைவனத்திற்குள் பயணம் செய்து, எந்த மடையனும் சவூதி அரேபியாவுக்கு போக மாட்டான். 

"துரதிர்ஷ்ட வசமாக", லெபனான், துருக்கி ஆகிய "முஸ்லிம்" நாடுகள், ஐரோப்பாக் கண்டத்திற்கு அருகாமையில் உள்ளன. அகதிகள் ஐரோப்பா செல்வது வலதுசாரிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முடியுமா? டியர் வலதுசாரீஸ்! துருக்கி இருக்குமிடத்தில் சவூதி அரேபியாவை வைக்கச் சொல்லி, கடவுளிடம் மனுக் கொடுத்துப் பாருங்கள்!

அது சரி, வலதுசாரிகளே! உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதச் சிறுபான்மையினரான, கிறிஸ்தவர்கள், அலாவித்துகள், டுரூசியர்கள், யூதர்கள், இவர்களும் முஸ்லிம் நாடுகளுக்குத் தான் அகதிகளாக செல்ல வேண்டுமா? 

என்னது? சிரியாவில் வேற்று மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? முதலில் ஓர் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். விவிலிய கதைகள் நடந்த நாடுகளில் சிரியாவும் ஒன்று. அங்கே இப்போதும் பண்டைய கால கிறிஸ்தவ மதப் பிரிவுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஏசு கிறிஸ்துவின் தாய்மொழி என கருதப்படும் அரமைக் மொழி பேசும் மக்களும் சிரியாவில் தான் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது மாதிரி, இஸ்லாமிய மதமும் பிரிந்துள்ளது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் மாதிரி இஸ்லாத்தில் சன்னி மார்க்கம் உள்ளது. அதிலிருந்து பிரிந்தது ஷியா மார்க்கம். 

கத்தோலிக்கத்தில் இருந்து புரடஸ்தாந்துகாரர்கள் பிரிந்து சென்றதும், பின்னர் அதிலிருந்து பெந்தெகொஸ்தே, யெகோவா என்றேல்லாம் பிரிவுகள் உண்டானதும் தெரிந்திருக்கும். அதே மாதிரி, ஷியாவில் இருந்து பிரிந்து, அலாவி, டுரூசி போன்ற பல பிரிவுகள் உண்டாகின. அந்தப் பிரிவுகள் எல்லாம் சிரியாவில் உள்ளன.

அமெரிக்காவில் சில பெந்தெகொஸ்தே - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், தம்மை தனியான மதமாக ஸ்தாபித்துக் கொண்டனர். குறிப்பாக, யெகோவா, மொர்மன் சபைகளை சொல்லலாம். அதே மாதிரி, சிரியாவில் அலாவிகள், டுரூசியர்கள் பெரும்பான்மை மதங்களினால் வேற்று மதத்தவராக நடத்தப் பட்டனர். 

குறிப்பாக அலாவி பிரிவினர், இந்தியாவில் இருப்பது மாதிரி தாழ்த்தப் பட்ட சாதியினரின் நிலையில் இருந்தனர். அவர்கள் பல நூறாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட்டனர். இன்றைய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவித்துக்கள் ஷியா மதப் பிரிவினராக உயர்த்தப் பட்டனர். ஈரானுடன் ஏற்பட்ட நெருக்கமான அரசியல் - இராஜதந்திர உறவுகள் அதற்கு உதவின.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கோலான் குன்றுப் பகுதியில் டுரூசியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்மை தனியான மதமாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென தனியான மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உள்ளதால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. கோலான் குன்றுகளில் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணிசமான அளவு டுரூசியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அவர்கள் இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்று, இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். 

ஸோ... வலதுசாரீஸ்... சிரிய டுரூசிய அகதிகளை, இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கலாமே? இஸ்லாத்துடன் எந்த சம்பந்தமுமில்லாத சிரிய கிறிஸ்தவர்கள், சிரிய டுரூசியர்கள் கூட முஸ்லிம் நாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு அகதிகளாக செல்ல வேண்டுமா? திஸ் இஸ் டூ மச். வாட்ஸ் த ப்ராப்ளம் வலதுசாரீஸ்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, September 07, 2015

முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான வலதுசாரி முட்டாள்களின் பிரச்சாரங்கள்


சிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா? எதற்காக "முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை?" என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை! அதிசயம்! அதிசயம்!! அதிசயம்!!! வலதுசாரிகளின் (போலி) "மனிதாபிமான உணர்ச்சி" மெய்சிலிர்க்க வைக்கிறது.

இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. "மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு" என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.

இத்தனை "பெருமைகளுக்குரிய" இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை? "ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்" என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே? அது எப்படி?

"இலங்கையில் இருந்து ஐரோப்பா செல்லும் அகதிகள் எல்லோரும் சிங்களவர்கள்...!" என்று நினைத்துக் கொள்வது எத்தனை அபத்தமானது? அது போன்றது தான், "சிரிய அகதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்" என்ற கதையாடல்களும். அரசியல் விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, வலதுசாரிகள் தமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய அபத்தக் கதையாடல்களுக்குப் பின்னால், ஐரோப்பிய அரசுகள் சாதுரியமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியும். அகதிகள் பிரச்சினை இன்றைக்கோ, நாளைக்கோ முடியப் போவதில்லை. உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கும் வரையில், அகதிகளும் ஐரோப்பாவுக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

ஆகையினால், போர் நடக்கும் "பிராந்தியத்தில்" அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டம் ஒன்றை கொண்டு வர விரும்புகிறார்கள். "சிரிய அகதிகளை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற விமர்சனங்களும் அதையொட்டியே பரப்பப் படுகின்றன. அதன் அர்த்தம், உதாரணத்திற்கு, ஈழப்போர் காரணமாக தமிழ் அகதிகள் வெளியேறினால், அயலில் உள்ள "இந்து நாடான" இந்தியா தான் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் "பிராந்தியத்தில்" அகதிகளைப் பொறுப்பேற்கும் திட்டம்.

எதிர்காலத்தில் அகதிகளை ஐரோப்பாவுக்கு வர விடாமல் தடுப்பதற்காக பல திட்டங்கள் தீட்டப் பட்டு வருகின்றன. உள்நாட்டுப் போர்களை தூண்டி விட்டு, ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கும் மேற்கு ஐரோப்பா, அதன் விளைவாக உருவாகும் அகதிகளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஈழம் முதல் சிரியா வரையில், அது தான் உலக யதார்த்தம். அப்பாவிப் பொது மக்கள், வலதுசாரிகளின் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களுக்கு பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கடந்த இருபது வருடங்களாக ஐரோப்பாவில் வாழ்கிறேன். இங்கே ஷரியா சட்டம் வேண்டுமென்று கோரும் முஸ்லிம் அகதி யாரையும் நான் காணவில்லை! வலதுசாரி முட்டாள்களின், இனவெறியை தூண்டும் வதந்திகளை நம்பாதீர்கள்.

சிரிய அகதிகளின் வருகைக்கு எதிராக, வலதுசாரிகள் செய்யும் இனவெறிப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: "முஸ்லிம் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டால், அவர்கள் அங்கேயும் ஷரியா சட்டம் கொண்டு வரச் சொல்லிக் கேட்பார்கள்...!" என்பது வலதுசாரிகளின் பொய்ப் பரப்புரைகளில் ஒன்று.

"தமிழ் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டல், அவர்கள் அங்கேயும் ஈழம் கேட்பார்கள்...!" என்று சொல்வதைப் போன்ற அபத்தம் இது. (உண்மையிலேயே ஐரோப்பிய வலதுசாரிகள் அப்படியும் கதைக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு தெரியாது.)

நான் குறைந்தது ஐந்து வருடங்களாவது, பல்வேறு ஊர்களில் இருந்த அகதி முகாம்களில் வசித்திருக்கிறேன். பெரும்பான்மையான அகதிகள், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, சூடான், போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அகதிகள் தான்.

அந்த முஸ்லிம் அகதிகள் எல்லோருடைய நோக்கமும், தனிப்பட்ட வாழ்க்கை வசதிகள் பற்றியதாகவே இருக்கின்றன. - எப்போது எங்களுக்கு வதிவிட அனுமதி கிடைக்கும்? - எங்கே வேலை செய்யலாம்? - என்ன வேலை செய்யலாம்? - எவ்வளவு சம்பாதிக்கலாம்? - இந்த நாட்டு மொழியை எப்படி கற்றுக் கொள்ளலாம்? - பிள்ளைகளை எங்கே படிக்க வைக்கலாம்? - பிள்ளைகளின் எதிர்காலம் நல்ல படியாக அமையுமா? இவை மட்டும் தான் அவர்களது கவலைகள்.

பெரும்பாலான "முஸ்லிம் அகதிகளுக்கு" தங்களது நாட்டில் என்ன பிரச்சினை நடக்கிறது என்று கூட சொல்லத் தெரியாது. அரசியல் புரியாது. அரசியலில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன ஒன்று தான். தங்களதும், ஊரில் உள்ள உறவினர்களினதும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த ஒரேயொரு "அரசியல்".

ஐரோப்பாவுக்கு வந்து அடைக்கலம் கோரிய முஸ்லிம் அகதிகளிடம் சென்று "ஷரியா சட்டம் வேண்டுமா?" என்று கேட்டால், செருப்பைக் கழற்றி அடிப்பார்கள். மனிதன் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப் படும் நேரத்தில்... "சரியா, பிழையா?" என்று கேட்டால் யாருக்குத் தான் எரிச்சல் வராது?

போங்கடா... நீங்களும் உங்கட ஷரியாவும்...!

Wednesday, September 02, 2015

சாதாரண மக்களை மன்னர்களாக சித்தரிக்கும் வட கொரிய ஓவியங்கள்


வெளியுலகில் அதிகம் அறியப் படாத "மர்ம தேசம்" வட கொரியாவின் ஓவியங்களை, அண்மையில் ஒரு கண்காட்சியில் பார்வையிடும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு நான் எடுத்த படங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.


வட நெதர்லாந்தில், அசென் எனும் நகரில் அமைந்துள்ள Drents Museum அந்தக் கண்காட்சியை நடத்தி இருந்தது. "The Kim Utopia"(http://www.drentsmuseum.nl/exhibitions/exhibition-detail/exhibition/the-kim-utopia-paintings-from-north-korea-102.html) என்ற தலைப்பின் கீழ், 2015, 3 ஏப்ரில் முதல் 30 ஆகஸ்ட் வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. வட கொரியாவின் புகழ் பெற்ற கலைக்கூடங்களில், திறமையான ஓவியர்களினால் அவை வரையப் பட்டன. 1960 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வரையப் பட்ட ஓவியங்களை, இரண்டு டச்சு வர்த்தகர்கள் சேகரித்திருந்தனர். 

வட கொரிய ஓவியங்களின் கண்காட்சி என்றவுடன், அங்கே "கிம் இல் சுங் மன்னர் பரம்பரையை வழிபடும்" ஓவியங்கள் மட்டுமே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவார்கள். சாதாரண மக்கள் தான் ஓவியங்களின் கருப்பொருள். 

உழைப்பு போற்றப் பட வேண்டியது. அதனால், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், விமானிகள், காவல் துறையினர், இராணுவ வீரர்கள், போன்ற பல தொழில்களை புரிவோர் காட்சிப் படுத்தப் பட்டிருந்தனர். தந்தை, தாய், பிள்ளைகள் என சாதாரண குடும்ப உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கை பதிவாகி இருந்தது. 

மேற்கத்திய நாடுகளில் ஓவியம் என்பது "அரசியலற்ற" கலைப் படைப்பாக கருதப் படுகின்றது. ஆனால், வட கொரிய சமூகத்தில் ஓவியங்களின் பங்களிப்பு முற்றிலும் வேறானது. ஆரம்ப காலங்களில், எழுத வாசிக்க தெரியாத மக்களுக்கும் ஒரு சேதியை தெரிவிக்கும் நோக்கத்தில் வரையப் பட்டன. 

பெரும்பாலும் மக்களுக்கு கல்வி புகட்டுவதாக ஓவியங்கள் அமைந்திருக்கும். அதனால், தேசத்தின் கடந்த கால வரலாறு, அயல் நாடான தென் கொரிய நிலவரம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றை போதிப்பதாக இருக்கும்.

கண்காட்சியில் நான் பார்வையிட்ட ஓவியங்களின் புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளேன். அவை பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரு இராணுவ அதிகாரி, தனக்கு முன்னர் கல்வி கற்பித்த ஆசிரியைக்கு புதிய மூக்குக்கண்ணாடி ஒன்றை பரிசளிக்கிறார். அந்த அதிகாரி, தனது முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிய ஆசிரியைக்கு நன்றிக் கடனாக இதைச் செய்துள்ளார். எமக்கு கல்வி கற்பித்த, ஆசிரியர்களை மதித்துப் போற்ற வேண்டும், என்ற சேதியை சொல்வதாக இந்த ஓவியம் வரையப் பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------



தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளருடன், தமது தொழில்நுட்ப அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தொழிலாளர்கள் பற்றிய ஓவியம். வட கொரியாவில், கிம் இல் சுங் அறிமுகப் படுத்திய சோஷலிசப் பொரளாதார உற்பத்தியில், எவ்வாறு தொழிலாளர்கள் பொறியியலாளருக்கு உதவுகின்றனர் என்பதைக் காட்டுகின்றது. ஒரு பெண் தொழிலாளி விவாதத்திற்கு தலைமை தாங்குவதை அவதானிக்கவும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


தொழில்நுட்ப ஆராய்ச்சியின் நடுவில், களைத்துப் போய் உறங்கி விட்ட, பொறியியல் படிக்கும் மகனை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை. "மகன்" என்று பெயரிடப் பட்ட இந்த ஓவியத்தை வரைந்தவர், வட கொரிய ஓவியர் Chang Ch'il-lyong
(2000 ம் ஆண்டு)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------


உப்பளம் ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பற்றிய வட கொரிய ஓவியம். அடடா... இதெல்லாம் "கம்யூனிச பிரச்சாரம்" ஆயிற்றே? நமது தமிழ் தொழிலாளர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

சோளம் மாவில் இருந்து நூடில்ஸ் தயாரிக்கும், தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் வட கொரிய பெண் தொழிலாளர்கள். தென் கொரியாவில் அரிசி பிரதானமான உணவாக உள்ளது. வட கொரியாவின் மலை சார்ந்த நிலம், அரிசி உற்பத்திக்கு ஏற்றது அல்ல. அதனால், அங்கு அரிசிக்கு பதிலாக, சோளம் மாவில் இருந்து உற்பத்தியான நூடில்ஸ் பிரதான உணவாகி உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில படங்கள்:

அலுவலக வரவேற்பறையில் பணியாற்றும் பெண் காவலர் 

பெண் காவலர்கள் 

நீண்ட காலம் சேவையாற்றிய ரயில் ஊழியருக்கு மக்கள் விழா எடுக்கிறார்கள்   

இராணுவத்திற்கான உணவு சமைப்பவர்கள் 

பாடசாலை ஒன்றுக்கு பால் விநியோகம் செய்யும் பெண் 

விவசாய விளைபொருட்களை விநியோகம் செய்வோர் 

வட கொரியாவுடன் ஒன்றிணைவுக்காக பட்டம் விடும் தென் கொரியச் சிறுவன் 

பனிக் காலத்தில் நிலத்தில் உணவு பயிரிட முடியாது. அதனால், உள்ளக பரிசோதனைச் சாலை ஒன்றில் உணவுப் பயிர் உற்பத்தி செய்கிறார்கள். 

கால் பந்து விளையாட்டு வீரர்கள் 


அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஜப்பானிய வீராங்கனையுடன் மோதிய வட கொரிய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார் 

மீனவர்கள் 

வயலும் கிராமமும் 


நல்லதொரு குடும்பம் 


தியாகிகளின் நினைவிடத்தில் ஒரு தந்தையும் மகளும் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் சோவியத் போர் விமானங்களை வரவேற்கும் பெண்கள் 

போர்க் காலத்திலும் கலை உணர்ச்சியை கைவிடாத இராணுவ வீராங்கனை 

ஓய்வு நேரத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரை பாடச் சொல்லும் இராணுவ வீரர்கள் 

கொரிய யுத்த களத்தில் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கும் தளபதி 

இராணுவ வீரர்கள் 

ஓய்வு நேரத்தில் படையினர் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் படையினருக்கு உணவு எடுத்துச் செல்லும் மக்கள் 


விமானிகள் 

பியாங்கியாங் நகரில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் 

துப்பாக்கி சுடும் பயிற்சி 


சுற்றுலாப் பயணிகளுக்கு தியாகிகளின் நினைவிடத்தை சுற்றிக் காட்டும் இராணுவ வீரர்கள் 

பனியில் நனையும் சிறுவர்கள் 

பரிசுப் பொருளுடன் உறங்கும் பாடசாலை மாணவி 



ஒரு விவசாயப் பெண்மணியும், ஓர் இராணுவ வீராங்கனையும் வயலில் சேர்ந்து வேலை செய்கின்றனர்.

கொரிய யுத்தம் முடிந்த பின்னர் கைவிடப் பட்ட அமெரிக்க தாங்கியில் விளையாடும் சிறுவர்கள் 

கடுமையான பனிப்  பொழிவின் பின்னர் ஸ்னோ வழிக்க செல்லும் தொழிலாளர்கள் 

தென் கொரியாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

உதைபந்தாட்ட மைதானத்தில் இரசிகர்கள் 

தென் கொரியாவில் வீரச் சாவடைந்த சுதந்திரப் போராட்ட வீரரின் கல்லறை 

பியாங்கியாங் நகரம் 

கட்டுமான பணிகளை பார்வையிடும் அதிபர் கிம் இல் சுங் 

கண்காட்சி நடந்த Drents Museum முன்புறம்