Wednesday, January 29, 2014

"லிபிய முள்ளிவாய்க்காலில்" குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்



சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.

இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான Sirte சுற்றிவளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். ஈழத்தின் இறுதிப் போர் ஒரு கடற்கரைப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்ததைப் போன்று, லிபியாவின் இறுதிப் போரும் (Battle of Sirte), ஒரு கடற்கரையோரப் பிரதேசமான சிர்ட்டில் நடந்தது.

ஈழத்தில் சரணடையவிருந்த பிரபாகரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், லிபியாவில் சரணடையவிருந்த கடாபி கொல்லப் பட்டார். ஈழத்தில் பெண் போராளிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. அதே மாதிரி, லிபியாவிலும் நடந்துள்ளது. 


கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர்.கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், "லிபிய முள்ளிவாய்க்கால்" பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.

கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப் பட்ட நானூறு பெண்கள், சிறப்பு இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். உலகில் வேறெந்த நாட்டின் தலைவரும், பெண் மெய்ப்பாதுகாவலர்களை வைத்திருக்கவில்லை. அரபு ஆண்கள், பெண்களை சுடத் தயங்குவார்கள் என்பதாலேயே, கடாபி அவர்களை தெரிவு செய்ததாக சொல்லப் படுகின்றது. அத்துடன், கடாபி தன்னை ஒரு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் நோக்கமும் இருந்தது. மேலும், கடாபியின் அழகிய மெய்ப்பாதுகாவலர்கள், உலகம் முழுவதும் ஊடகங்களின் விசேட கவனத்தைப் பெற்றனர்.

லிபியப் போர் முடிந்த பின்னர், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு என்ன நடந்தது? அது பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை. ஆனால், லிபியாவின் புதிய ஆட்சியாளர்களும், கடாபியை வெறுக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டன. பாலியல் வக்கிரம் கொண்ட வதந்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டன. 

கடாபி தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, வன்புணர்ச்சி செய்ததாக கதைகளை கட்டி விட்டனர். அநேகமாக, அந்தத் தகவல்கள் எல்லாம், கடாபிக்கு எதிராக போரிட்ட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்தே வந்தன. பொதுவாகவே, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகள், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களை எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள்?

லிபிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கடாபியின் லிபரல் கலாச்சாரத்தை வெறுத்து வந்தனர். கடாபி தனது மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல கதைகள், அவர்கள் மத்தியில் உலாவின. கடாபி ஆட்சி நடக்கும் பொழுதே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண் மெய்பாதுகாவலர்களை, "கடாபியின் விபச்சாரிகள்" என்ற பெயரில் அவமானப் படுத்தி வந்தனர்.

தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும்  "கடாபியின் விபச்சாரிகள்"  பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் "பெண் உரிமை." 


உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள்,புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.

லிபியாவில், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு நடந்த கொடுமை ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் ஆகும். ஆனால், மேற்குலக நாடுகள், லிபிய போர்க்குற்றங்களை விசாரித்து, போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. "ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி",  "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" போன்ற உணர்ச்சிவசமான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், லிபிய போர்க்குற்றங்களில் இருந்து, உலக மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன.

லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.


லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

1.லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்
4."காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!" - ஒரு BBC ஆபாசப் படம்!!

Tuesday, January 28, 2014

"காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!" - ஒரு BBC ஆபாசப் படம்!!


ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், இன்றைக்கும் உலகம் முழுவதும், அதிகளவில் விற்பனையாகும் பண்டங்களாக உள்ளன. சமூகத்தில் மதிப்புக்குரியதாக கருதப்படும், அல்லது அப்படி காட்டிக் கொள்ளும், "கௌரவமான" ஊடகங்கள் கூட அதற்கு விதி விலக்கல்ல.

"ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி", "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" என்று, மஞ்சள் பத்திரிகைகளுக்கு நிகராக, பாலியல் கதைகளை வெளியிடும் அளவிற்கு, நமது "மதிப்புக்குரிய" தமிழ் ஊடகங்களும் தரம் தாழ்ந்து போய் விட்டன. "கடாபி என்ற காமக் கொடூரனின் கன்னி வேட்டை" பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளை, ஆவணப் படமாக எடுத்து வெளியிடவுள்ள, BBC தொலைக்காட்சியே இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்றால், நமது தமிழ் ஊடகங்களை நோவதில் பயனில்லை.

பிரெஞ்சு எழுத்தாளரான Annick Cojean எழுதிய நூல் ஒன்றை (Gaddafi's Harem) அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆவணப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த நூல், கடந்த வருடமே வெளியான போதிலும், அது பலரை சென்றடையவில்லை. தற்போது. "பெரும் மதிப்புக்குரிய" பிரிட்டிஷ் தொலைக்காட்சியான BBC, "சர்வதேச ஜொள்ளுப் பிரியர்கள் பார்த்து மகிழும் வண்ணம்," அதனை ஒரு ஆவணப் படமாக எடுத்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) அதனை ஒரு ஆவணப்படம் என்பதை  விட, ஒரு ஆபாசப்படம் என்பதே பொருந்தும்.

Gaddafi's Harem நூலை எழுதிய Annick Cojean, தனக்கு கிடைத்த தகவல்களை "உறுதிப் படுத்துவதற்காக" பிரான்சில் வாழும் ஒருவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் யார் என்றால், கடாபியின் ஆட்சியை கவிழ்க்க போரிட்ட கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர். (இந்த தகவலை சம்பந்தப் பட்ட எழுத்தாளரே, ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார்.)

Annick Cojean, அதை விட இன்னொரு ஆதாரத்தையும் காட்டுகிறார். ஏற்கனவே, கடாபியினால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான, மேலைத்தேய பெண் பத்திரிகையாளர்களையும் தனக்குத் தெரியும் என்கிறார். லிபியாவில், கடாபியின் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த பெண்களுக்குத் தான், தமக்கு நேர்ந்த கொடுமைகளை கூறும் தைரியம் இல்லை. சுதந்திரமான மேற்கு நாடுகளிலும் நிலைமை அப்படியா? எதற்காக, மேலைத்தேய நாடுகளை சேர்ந்த பெண்கள், இதுவரை காலமும், தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல், மௌனமாக இருந்தார்கள்?

பொதுவாக, பிற அரபு நாடுகளில் காண முடியாத பெண்களுக்கான சுதந்திரம், கடாபி ஆட்சி செய்த லிபியாவில் தாராளமாக இருந்தது. மேற்குலக பெண்களுக்கு நிகராக, லிபியப் பெண்களும் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். கடாபியின் புரட்சிக்குப் பின்னர், பெண்கள் உயர்கல்வி கற்று, உயர் பதவி வகிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். பல்கலைக்கழகங்களில் ஆண் மாணவர்களை விட, பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதையெல்லாம், கடாபிக்கு முந்திய மன்னராட்சிக் காலத்தில், நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பெண்களை வீட்டுக்கு வெளியே போக விடாத, பழமைவாத கலாச்சாரத்தில் ஊறிய அரபு நாடுகளின் மத்தியில், பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொண்டதன் மூலம், கடாபி ஒரு பெரிய கலாச்சாரப் புரட்சியை உண்டாக்கி இருந்தார். கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்கள் சர்வதேசப் புகழ் பெற்றனர். நிச்சயமாக, இஸ்லாமிய மதவாதிகள், பழைமைவாதிகள் அதையெல்லாம் விரும்பப் போவதில்லை.

தற்போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், பழமைவாதிகளும் ஆட்சி செய்யும் லிபியாவில், பெண்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் படுகின்றன. கடாபியின் காலத்தில் பெண்கள் அனுபவித்த சுதந்திரத்தை, உரிமைகளை, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பப் பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல, "கிளுகிளுப்பூட்டும், கடாபியின் செக்ஸ் கதைகளை" உலக மக்களுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம், கடாபியின் புரட்சியை ஆதரிக்கும் மக்களுக்கு வாய்ப் பூட்டு போடப் படுகின்றது.

ஒரு திறமையான வியாபாரி, காலம், நேரம் பார்த்து விற்பனை செய்யத் தெரிந்து வைத்திருப்பான். இன்று லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. லிபியாவின் தெற்குப் பகுதியில், கடாபிக்கு விசுவாசமான படைகள் இன்னமும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர், சகாராப் பாலைவனத்தை அண்டிய சபா நகரத்தில் உள்ள விமானத் தளத்தை தாக்கி அழித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். லிபிய அரசு, கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றது. லிபியாவின் பிற பகுதிகளிலும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. நூற்றுக் கணக்கான ஆயுதக் குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. 

லிபியா ஒரு தோல்வியுற்ற தேசம் அல்லது செயலாற்ற அரசாங்கத்தை கொண்டிருப்பதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளே குறைப் படுகின்றனர். வெளியுலகில், அதைப் பற்றி எல்லாம் யார் கதைக்கிறார்கள்? அதைப் பற்றி யாருக்கு கவலை? ஆனால், கடாபியின் ஆபாசப் படம் வெளியாகிறது என்றவுடன், காய்ந்து போய்க் கிடந்த ஜொள்ளு மன்னர்கள், அந்த தகவலை தமக்குள் கிளுகிளுப்பாக பகிர்ந்து கொள்கின்றனர்.

என்ன இருந்தாலும், ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், எந்தக் காலத்திலும் அமோகமாக விற்பனையாகும். அதன் மூலம், மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பிரயோசமான தகவல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். பாலியல் வேட்கை நிரம்பிய மக்களை காலம் முழுவதும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும்.


லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 
1.லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

Sunday, January 26, 2014

போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் "இனியொரு சதிக் கும்பல்"


"இனியொரு" (http://inioru.com/) என்ற பெயரில் இணையத் தளம் நடத்தும், "அசோக்- சபா நாவலன் கும்பல்", 2009 ம் ஆண்டிலிருந்தே, என் மீது "INSD உறுப்பினர்" முத்திரை குத்துவதற்கு படாத பாடுபடுகின்றது. எதற்காக? யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல்? அதற்கான காரணம் மிகத் தெளிவானது.

International Network of Sri Lankan Diaspora (INSD) என்பது, ஜெர்மனியை தளமாகக் கொண்ட புலம்பெயர் இலங்கையரின் அமைப்பு. 2009 ம் ஆண்டு, இலங்கை அரசும், அரசுக்கு ஆதரவான சிங்கள ஊடகங்களும், INSD உறுப்பினர்களை "தேசத் துரோகிகள்!" என்று பிரகடனம் செய்தன. இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு, அரச புலனாய்வுத் துறையினால் அல்லது சிங்கள இன வெறியர்களினால், கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.

அதற்குக் காரணம், அந்த நேரத்தில் தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய, Channel 4 ஆவணப் படம் வெளியானது. (பார்க்க: Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) இறுதிப் போர் முடிந்த பின்னர், நிர்வாணமான புலிக் கைதிகளை, ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோவை அநேகமானோர் பார்த்திருப்பார்கள்.

அந்த போர்க்குற்ற ஆவண வீடியோவை, சனல் 4 இடம் ஒப்படைத்தவர்கள், தொடர்புகளுக்கு ஜெர்மனியில் உள்ள  INSD அலுவலக முகவரியை எழுதி அனுப்பினார்கள். உண்மையில், அந்த வீடியோவை சனல் 4 க்கு அனுப்பியது, JDS என்ற புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களின் அமைப்பு. அவர்கள் இப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். JDS ஊடகவியலாளர்கள் சிலர், INSD உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். (JDS இணையத் தளம்: Journalists for Democracy in Sri Lanka

2009 ஆகஸ்ட் மாதம், இலங்கையின் போர்க்குற்றங்களை காட்டும், சனல் 4 ஆவணப் படம் வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அமைச்சர் மகிந்த சமரசிங்க, "INSD என்ற புலம்பெயர்ந்த இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்களே, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வீடியோவை, சனல் 4 க்கு கொடுத்து வெளியிட்டதாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும், "INSD, ஒரு ஏகாதிபத்திய சதியில் இயங்கும், புலி ஆதரவு NGO" என்றும் பழி சுமத்தினார்.

ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில், அரச ஆதரவுப் பத்திரிகைகள், INSD உறுப்பினர்களை "தேசத் துரோகிகள்" என்று தூற்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. INSD மீதான அரசின் பிரச்சாரம் காரணமாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் "INSD தேசத் துரோகிகளுடன்" தொடர்பு கொள்ள விடாது தடுக்கப் பட்டனர். INSD உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த போதிலும், இலங்கையில் இருந்த அவர்களது உறவினர்கள் பயமுறுத்தப் பட்டனர். இதனால், பல குடும்ப உறுப்பினர்கள், INSD உறவினருடனான தொடர்புகளை முற்றாகத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  

"அசோக்- சபா நாவலன் கும்பல்", சிறிலங்காவில் சிங்கள இனவெறியர்கள் செய்த அதே வேலையை, புலம்பெயர்ந்த நாடுகளில் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதே வருடம் (2009), நவம்பர் மாதம், வினவு தளத்தில், போலிப் பெயரில் ஒருவர், என் மீதான அவதூறு ஒன்றை 'கொமன்ட்' பகுதியில் எழுதினார். அதில்,  " நான் ஒரு INSD உறுப்பினர்" என்று பழி சுமத்தினார். (பார்க்கவும்: "இனியொரு சதி செய்வோம்") அதை "நிரூபிப்பதற்காக", ஜெர்மனியில் வாழும் INSD இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட வலைப்பூவில் (Blog), எனது "கலையகம்" வலைப்பூவுக்கு கொடுத்திருந்த இணைப்பை சுட்டிக் காட்டினார்கள். (அதன் முகவரி இது: Sri Lankan Diaspora Blog

ஒரே வருடத்தில், ஒரே காலத்தில், இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் INSD உறுப்பினர்களை, அரசுக்கு எதிரான தேசத் துரோகிகளாக சித்தரிக்கும், விஷமத்தனமான அவதூறுப் பிரச்சாரம் நடந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்க முடியுமா? 

அந்த நண்பரின் வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு, "நான் மட்டுமே INSD யில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு உறுப்பினராக"  நினைக்கத் தோன்றும். ஏனென்றால், வேறு யாருடைய பெயரும் அதில் இல்லை. நட்பு அடிப்படையில், எத்தைனையோ பேர் என்னுடைய வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அது போலத் தான், INSD ஆதரவாளரான அந்த இளைஞரும், தனது சொந்த வலைப்பூவை பயன்படுத்தி இருக்கிறார். (INSD கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னரே, நான் அவருக்கு அறிமுகமானேன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.) மேலும், அசோக்- சபா நாவலன் கும்பல் குறிப்பிடும் Blog, INSD அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல. (INSD யின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இது: International Network of Sri Lankan Diaspora)

INSD நடத்திய மகாநாடுகளில், பல விதமான அரசியல்- சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கையில் இருந்து அழைக்கப் பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நானும் ஒரு தடவை, INSD கருத்தரங்கில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், கூட்டங்களில் கலந்து கொண்ட எல்லோரும் INSD அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகி விட முடியாது. அந்த அமைப்பினால் சேர்த்துக் கொள்ளப் பட்ட உறுப்பினர்களது பட்டியலும், வெறும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தான். ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும், INSD ஆதரவாளர் ஒருவர், தனது இணையத் தளத்தில் எனது வலைப்பூவுக்கு 'லிங்க்' கொடுத்தார் என்பதற்காக, என்னையும் அதனுடன் தொடர்பு படுத்துவது அபத்தமானது.

இப்போது மீண்டும், பேஸ்புக்கில், அதே "ஆதாரத்தை" கொண்டு வந்து காட்டி, அதே குற்றச்சாட்டை (INSD உறுப்பினர்) என் மேல் சுமத்துகிறார்கள். அசோக், சபா நாவலன் மாபியா கும்பல், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்தும் சொல்லி வருகின்றது என்பது தெரியாததல்ல. அவர்கள், எங்கிருந்து தமது தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை என்னால் தர முடியும். 

மேலே உள்ளது, " புலி ஆதரவு NGO வான,  INSD ஒரு தேசத் துரோகிகளின் அமைப்பு"  என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரச ஆதரவு பத்திரிகையின் முன் பக்கம். சிங்களம் தெரிந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். (சிங்களம் தெரியாதவர்கள், நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுங்கள்.)

அசோக்- சபா நாவலன் கும்பல் என்னைப் பற்றியும், INSD பற்றியும் கூறிய அத்தனை அவதூறுகளும், இது போன்ற சிங்கள இனவாத ஊடகங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப் பெற்றவை தான். பெரும்பான்மையான தமிழ் மக்கள், சிங்கள பத்திரிகைகளை வாசிப்பதில்லை. அது இந்த சதிக் கும்பலுக்கு சாதகமானது. அப்பாவி வாசகர்களை  ஏமாற்றி, அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுப்பதன் மூலம், போர்க் குற்றவாளிகளை தப்ப வைப்பது தான், அசோக்- சபா நாவலன் கும்பலின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:
1.Sri Lankan origin German linked by government to Channel-4 execution video reveals crucial facts
2.இனியொரு சதி செய்வோம்

Friday, January 24, 2014

“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஆறாம் பாகம்)


“சோவியத் யூனியனில், ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில்,  உண்மையான கம்யூனிஸ்டுகள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். தனக்கு போட்டியாக இருந்தவர்களை கொன்று குவித்து விட்டு, ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றினார். அதனால் தான் ஸ்டாலினை ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி என்று அழைக்கிறோம்.” இவ்வாறு பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேற்கத்திய நாடுகள், முதலாளியத்தை ஆதரிப்போர் மட்டுமல்ல, ட்ராஸ்கியவாதிகள், ஜனநாயகவாதிகள் கூட, ஸ்டாலின் மேல் மேற்படி விமர்சனத்தை வைக்கின்றனர்.

 “ஸ்டாலினின் பயங்கரவாத ஆட்சி" என்று வர்ணிக்கப் படும், 1937 - 1938 காலப் பகுதியில் நடந்த களையெடுப்புகளின் போது, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில், அரைவாசிக்கும் அதிகமானோர் காணாமல்போனார்கள். செம்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த, நூற்றுக் கணக்கான இராணுவ ஜெனரல்கள் சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டனர். இவ்வாறு, ஸ்டாலின் தனது  அரசாங்கம், கட்சி, மற்றும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களை அழிக்கும் அளவிற்கு, அங்கே அப்படி என்ன நடந்தது?

அன்று நடந்த களையெடுப்புகள், கொலைகள் எல்லாவற்றுக்கும், "ஸ்டாலினின் அதிகார வெறி" மட்டும் தான் காரணம் என்று, ஒரே பதிலை எப்போதும் சொல்லித் தப்பி விட முடியாது. சில சரித்திர ஆசிரியர்கள் இன்னொரு காரணத்தை கூறுகின்றனர். 1934 ம் ஆண்டு, லெனின்கிராட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான கிரோவ், இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அரசியல் படுகொலையின் விளைவாக, "இன்னமும் எதிரிகள், சதிகாரர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்" என்ற காரணத்தை காட்டி, நாடு முழுவதும் பலர் கைது செய்யப் பட்டனர் என்று கூறுகின்றனர்.

 "கிரோவ் மிகப் பிரபலமான தலைவராக இருந்த படியால், ஸ்டாலினே ஆள் வைத்து கொலை செய்து விட்டு, அந்தப் பழியை மக்கள் விரோதிகள் தலையில் போட்டு விட்டு, தனது சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக, பல இலட்சம் பேரை கைது செய்து, கொலை செய்ததாக," மேலைத்தேய சரித்திர ஆசிரியர்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

அந்த சரித்திர ஆசிரியர்களின் ஊகம், இன்று பல மேற்கத்திய பாடநூல்களிலும் எழுதப் பட்டுள்ளன. கிரோவ், ஸ்டாலின் அனுப்பிய கொலைகாரர்களால் கொல்லப் பட்டதாக , கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் நம்பினார்கள்.   அது வெறும் வதந்தி மட்டுமே. அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.  மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

கிரோவ் கொலை செய்யப் பட்டது, 1934 ம் ஆண்டு. மாபெரும் களையெடுப்புகள் நடந்த காலம், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்கள். இடையிலே இரண்டு வருடங்கள் உள்ளனவே? அந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்காத காரணம் என்ன? மேலும், கிரோவ் கொலையை தொடர்ந்து, லெனின்கிராட் பகுதியில், சந்தேகத்தின் பேரில் பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். நாட்டின் பிற பாகங்களில், எந்தக் கைதும் இடம்பெறவில்லை.

முதலாவதாக, இடையில் இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த மர்மம் என்ன? இரண்டாவதாக, எதற்காக சர்வதேச COMINTERN அமைப்பை சேர்ந்த, ஆயிரக் கணக்கான வெளிநாட்டுக் கம்யூனிஸ்டுகள் கொல்லப் பட்டனர்? அவர்கள் எக் காலத்திலும், உள்நாட்டில் ஸ்டாலினின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக வரும் வாய்ப்பில்லை.

மூன்றாவதாக, எதற்காக அரசு நிறுவனங்களில் பெரிய பதவி வகித்தவர்கள், நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் மட்டும், கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்? பொதுவாகவே அரசியலில் நாட்டமில்லாத சாதாரண உழைக்கும் மக்கள் யாரும் "ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு" பலியாகவில்லை. (அடித்தட்டு மக்களிலும் சிலர் கைது செய்யப் பட்டனர். ஒன்றில் அவர்கள் ஓரளவு அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசை விமர்சித்து இருப்பார்கள்.)

அன்றைய சோவியத் நாட்டில், ஒரு நகைச்சுவை துணுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. 
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நடுநிசியில் ஒரு வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
- “யார் அது?” வீட்டுக் காரர் கதவைத் திறக்காமலே வந்தவர்களை வினவுகின்றார். 
- “கதவைத் திற, நாங்கள் NKVD” பதில் வருகின்றது. 
- “மன்னிக்கவும், நீங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மேல் மாடியில் குடியிருக்கிறார்!” என்று வீட்டுக்காரர் பதிலளிக்கிறார்

அதாவது, அன்று நடந்த கைதுகளும், கொலைகளும், மேல் மட்டத்தில், ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட தகராறுகள், முரண்பாடுகளின் விளைவு, என்று தான் பெரும்பான்மையான சோவியத் மக்கள் நம்பினார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியானவர்களின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அது தெரிய வரும். பெரும்பான்மையான கைதிகள், நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர், வசதியாக வாழும் வாய்ப்புக் கிடைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள்.

ஒரு சோஷலிச நாட்டில், "மேட்டுக்குடி வர்க்கம் இருப்பது எப்படி சாத்தியமாகிற்று?" என்று கேட்கலாம். உலகில் எந்த நாட்டில், ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தாலும், அது ஒரே நாளில் சோஷலிச நாடாக மாறி விடாது. படிப் படியாக தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு, பெரிய முதலாளிகளை விரட்டி விட்டு, அவர்களது நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கலாம். ஆனால், நிறுவனங்களை நடத்துவதற்கு முகாமையாளர்கள் தேவை. ஒரு அரச நிறுவனமாக இருந்தாலும், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்பு தேவை. சிலநேரம், வெளிநாட்டு நிபுணர்களின் சேவையையும், பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும்.  அமெரிக்காவில் இருந்து கூட,  சில தொழில்துறை வல்லுனர்கள்,  அதிக சம்பளத்திற்கு அமர்த்தப் பட்டிருந்தனர். 

அதே போன்று தான், ஒரு அரசாங்கம் நடத்துவதற்கும் அரச அறிவியல், அமைப்பியல் தெரிந்த அறிவுஜீவிகள் தேவை. அப்படியானவர்கள் எல்லோரும், மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை நாங்கள் தவிர்க்க முடியாது. ஏனென்றால், காலங்காலமாக மேட்டுக்குடி, அல்லது நடுத்தர வர்க்க மக்கள் தான், உயர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தனர். ஒரு சிறிய தொழிலகத்தை நிர்வகிப்பது முதல், அரசாங்கத்தை நடத்துவது வரையில், தேவையான அறிவு அவர்களிடம் தான் உள்ளது. முரண்நகையாக, “பாட்டாளிவர்க்க கட்சியான” கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், அவர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். 

1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சி வென்றிருந்தாலும், ஒரு கம்யூனிச மாமேதையான லெனின் ஆட்சி நடத்தி இருந்தாலும், ஒரு தசாப்த காலமாக முதலாளித்துவத்திற்கு சுதந்திரம் கொடுக்கும், புதிய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருந்தது. கிராமப் புறங்களில் பணக்கார விவசாயிகளும், நகர்ப்புறங்களில் பணக்கார முதலாளிகளும், லெனினின் ஆட்சிக் காலத்தில் புதிதாக உருவாகி இருந்தனர். அதை விட, நிர்வாகத் திறமை வாய்ந்த அறிவுஜீவிகள் சமுதாயமும் புதிதாக உருவாகி இருந்தது. அந்த நிலைமை ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்திருந்தது. 

கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், அல்லது சோவியத் அரசில் பதவி வகித்தவர்கள், புதிய மேட்டுக்குடியாக மாறி இருந்தனர். அவர்களது கல்வித் தகுதிகேற்றவாறு கிடைத்த வருமானம், வசதியான வாழ்க்கைத் தரத்திற்கேற்ப உயர்வாக இருந்தது. அவர்களின் குடும்பங்கள், பல அரசு சலுகைகளை அனுபவித்து வந்தன. அவர்களது நுகர்வுக்கேன்றே உருவான  விசேட ஆடம்பரக் கடைகள், ஒவ்வொரு நகரத்திலும் தோன்றின. சாதாரண மக்களுக்கான கடைகளில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மேல்தட்டு மக்கள் பிரிவுக்கான ஆடம்பர கடைகளில் அனைத்தும் கிடைத்தன. இந்த நிலைமை, ஸ்டாலின் ஆரம்ப கால ஆட்சிக் காலத்திலும், அதாவது 1937 வரையில் தொடர்ந்தது.

1937 க்குப் பின்னர் என்ன நடந்தது? அது வரை காலமும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் குடும்பங்கள் சிதைக்கப் பட்டன. அரசாங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில், அல்லது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்த குடும்பத் தலைவன், NKVD யினால் கைது செய்யப் பட்டிருப்பார். அதற்கு முன்னர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர், அன்று முதல் “மக்களின் விரோதி” என்று குற்றஞ் சாட்டப் படுவார். அதன் விளைவு என்ன?

ஒரு மக்கள் விரோதியின் மனைவியின் வேலை பறிக்கப் படும். சில நேரம், கணவனுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மனைவியையும் கைது செய்வார்கள். அந்த நேரத்தில், பிள்ளைகள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்படும். மத்தியதர வர்க்க குடும்பம் என்பதால், வசதியான வீட்டில் வாழ்ந்திருப்பார்கள். தற்போது நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும். அந்தக் குடும்பம் சேர்ந்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள், தளபாடங்கள் எல்லாவற்றையும் அரசு பறிமுதல் செய்யும். இல்லாவிட்டால், அயலவர்கள் திருடிக் கொண்டு செல்லப் பார்ப்பார்கள். பெரும்பாலான தருணங்களில், நடுத்தெருவில் விடப்பட்ட பிள்ளைகள், குடும்பத்தின் உடைமைகளை விற்று சாப்பிட வேண்டி இருக்கும்.

திருமணமான தம்பதிகளில், கணவனோ அல்லது மனைவியோ தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டால், விவாகரத்து செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டார்கள். அது சிலநேரம் அவர்கள் மீதான சந்தேகத்தை வர விடாமல் தடுக்கும். கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள் வழமை போல பாடசாலைக்கு சென்று வர முடிந்தது. ஆனால், பாடசாலையில் சில ஆசிரியர்களும், சில மாணவர்களும், “மக்கள் விரோதிகளின் பிள்ளைகள்” என்று, அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். எல்லா ஆசிரியர்களும், எல்லா மாணவர்களும் அப்படி அல்ல.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள், தமது பெற்றோருடனான தொடர்பை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.  பாடசாலைகளில் அதைப் பற்றி எதுவும் கதைக்காமல், பாடங்களில் கவனத்தை செலுத்தினார்கள். சில பிள்ளைகள், தாமாகவே முன் வந்து,  தமது பெற்றோரை மக்கள் விரோதி என்று பிரகடனம் செய்தனர். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக, பிள்ளைகள் தாமாகவே பெற்றோரின் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். ("மக்கள் விரோதியின் பிள்ளை" என்ற பட்டம், அன்றைய சமூகத்தில் ஒரு பெரிய அவமானச் சின்னமாக கருதப் பட்டது.)  பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறிய பிள்ளைகள் என்றால், அவர்களது இரு பெற்றோரும் கைது செய்யப் பட்டிருந்தால், அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப் பட்டனர்.

நமது நாடுகளில், நமது சமுதாயத்தில், "வசதியான வாழ்க்கை வாழும் குடும்பங்கள், ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து பிச்சையெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதை," ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வருவோம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால், அதற்காகவே அவர்கள் ஸ்டாலினை கடுமையாக வெறுப்பார்கள். இல்லாத அவதூறுகளை எல்லாம் கண்டுபிடித்துக்  கூறுவார்கள்.  

நமது சமூகத்தில், ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை கூறும் பலர், வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ரஷ்யாவில், பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. தமது சொந்த எதிர்காலத்தை எண்ணி கலவரம் அடைகிறார்கள்.  தங்கள் நாட்டிலும், “ஸ்டாலினிச ஆட்சி” ஏற்பட்டால், தாங்கள் அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வர வேண்டி இருக்கும் என்பதை, தெரிந்து கொண்டு பதறுகிறார்கள்.

மக்கள் விரோதிகள் என்று குற்றம் சுமத்தப் பட்ட அனைவரும், ஸ்டாலினால், அல்லது NKVD யினால் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, மனம் போன போக்கில் கைது செய்யப் பட்டனரா? அப்படி நினைப்பது சிறுபிள்ளைத் தனம். அன்று நடந்த ஒவ்வொரு கைது நடவடிக்கையையும், சோவியத் மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். “நெருப்பில்லாமல் புகையாது” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். “சும்மா காரணம் இல்லாமல் கைது செய்வார்களா? அவர்கள் ஏதாவது சதியில் ஈடுபட்டிருப்பார்கள், அந்நிய கைக்கூலியாக இருப்பார்கள், அந்நிய நாட்டிற்காக உளவு பார்த்திருப்பார்கள்….” என்று பொது மக்கள் பல காரணங்களை தாமே கண்டுபிடித்து கூறிக் கொண்டனர். பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து, தமக்குள்ளே விவாதித்தார்கள். 

சுருக்கமாக, அன்றிருந்த சோவியத் பொது மக்களில் யாருமே, "ஸ்டாலினால் கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள்" என்று நினைக்கவில்லை. ஈழப் போராட்டம் நடந்த காலத்திலும் அது போன்ற சூழ்நிலை காணப் பட்டது. புலிகள் யாரையாவது பிடித்துச் சென்றால், அல்லது பகிரங்க மரண தண்டனை வழங்கினால், தமிழ்ப் பொது மக்கள் அதனை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கும், ஈழத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசிய ஊடகங்கள் கூறும் எல்லா தகவல்களையும், அப்படியே நம்புகிறார்கள். அவர்களைப் போன்று தான், ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த சோவியத் மக்களும், ஊடகங்கள் சொல்பவற்றை உண்மை என்று நம்பினார்கள். 

“புலிகள் யாரையாவது சும்மா பிடித்து சுடுவார்களா? ஏதாவது காரணம் இருக்கும். அவன் ஏதாவது  பிழை விட்டிருப்பான். இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்திருப்பான் அல்லது அரச ஒட்டுக் குழுவை சேர்ந்தவனாக இருப்பான்,” என்று ஈழத் தமிழ் மக்கள் தமக்குள்ளே பேசிக் கொள்வார்கள். விடுதலைப் புலிகளோ, ஸ்டாலினோ, தமது அதிகாரத்தை இழக்காமல், தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டமைக்கு காரணம், பெரும்பான்மை மக்களின் ஆதரவு தான். மக்களின் ஆதரவை எப்படிப் பெறுவது என்பது ஒரு தனியான அரசியல் கலை. அரசியல் தத்துவ அறிஞர்கள் அது பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.

ஸ்டாலின் காலத்தில், அரச புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் இலட்சக் கணக்கில் இருந்தார்கள். கொள்கைப் பிடிப்பு காரணமாக, மேலதிக வருமானத்திற்காக, பதவி உயர்வுக்காக, அல்லது வேறு ஏதாவது சலுகைக்காக, அயலவர்களை  வேவு  பார்த்தார்கள். பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள், தமது ஆசிரியர்களின், சக மாணவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை  கண்காணித்தார்கள். 

தொழிலகங்களில், அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், தமது முகாமையாளர்களை, சக தொழிலாளர்களை கண்காணித்தார்கள். அவர்களது அரசியல் கருத்துக்கள், நடத்தைகள் தவறாக இருந்தால், NKVD க்கு தகவல் கொடுத்தார்கள். அவ்வாறு தான், பலர் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடக்கும் பொழுதும், உளவு பார்த்தவர்கள் சமூகமளித்து, தாம் கண்டதை, கேட்டதை, குற்றம் சாட்டப் பட்டவரின் முகத்திற்கு நேரே சொன்னார்கள்.


வெளியுலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள், மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அன்றைய சோவியத் யூனியனில் “ஸ்டாலினிச கொடுங்கோன்மை மக்களை வருத்தியதாக” தெரியும். ஆனால், உண்மை நிலவரம் வேறு. பெரும்பான்மையான சோவியத் பொது மக்கள், அதனை “ஸ்டாலினிச பொற்காலம்” என்று அழைப்பார்கள். ஏனென்றால், அந்தக் காலங்களில் நாடு முழுவதும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 

நிறுவனங்களுக்கு, தொழிலகங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகள், முகாமையாளர்கள், தங்களின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பயந்து நடுங்கினார்கள்.  அரசு அதிகாரிகள், தமக்கு கீழ்ப்படிவான சாதாரண ஊழியர்களுக்கு பயந்தார்கள். பணக்கார எஜமானர்கள், தம் வீட்டுப் பணிப்பெண்களுக்கு பயந்து நடந்தார்கள். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.வீடுகளில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நண்பர்களாக நடந்த வேண்டியிருந்தது. 

மேல் தட்டில் இருந்தவர்கள், கீழ்த் தட்டில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டால் கூட, அடுத்த நாள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும். இன்று, "சுதந்திரமான", மேற்கத்திய நாடொன்றில் வாழும் மக்கள் கூட, அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில், அதிகார வர்க்கம் தான் மக்களுக்கு அடிபணிந்து நடந்தது. இன்று, அனைத்து வகை அதிகாரத்தையும் எதிர்த்துப் போரிட விரும்புபவர்கள், ஸ்டாலினிச பொற்காலத்தை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம். 

தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், தங்களது நிர்வாகிகளை பிடித்துக் கொடுத்தார்கள். அலுவலக ஊழியர்கள், தங்களது முகாமையாளர்களை பற்றி தகவல் கொடுத்தார்கள். பாடசாலை மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள், அதிபர்களை காட்டிக் கொடுத்தார்கள். சோவியத் யூனியன் முழுவதும், ஏராளமான அரசு அதிகாரிகள், நிர்வாகிகள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டு, சிறையில் போட்டு வருத்தப் பட்டார்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டார்கள். அவர்களை பற்றிய தகவல்களை NKVD புலனாய்வுத் துறைக்கு கொடுத்தது யார்? அவர்களுக்கு கீழே வேலை செய்த சாதாரண தொழிலாளர்கள். அன்றைய ஸ்டாலின் அரசு, மக்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாட்டை ஊக்குவித்தது.

சோவியத் யூனியனில் அன்று நடந்தது, “இரண்டாவது புரட்சி” என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பாட்டாளி வர்க்க மக்கள், அரசியல்-இராணுவ-பொருளாதார அதிகாரத்தை, மேட்டுக்குடியினரிடம் இருந்து பறித்தெடுத்தனர். ஸ்டாலின் அதற்காக தெரிந்தெடுத்த நடைமுறை தான், இன்றைக்கும் மேட்டுக்குடியினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக, லெனின் காலத்தில் உருவான, “சேக்கா” என்ற புலனாய்வுப் பிரிவு கலைக்கப் பட்டது. NKVD என்ற புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது.

NKVD தலைமை அதிகாரியாக, ஸ்டாலினால் நியமிக்கப் பட்ட ஏசுவா, ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர். ஒரு பாட்டாளி வர்க்க பின்னணியை கொண்ட அதிகாரி தான், மேட்டுக்குடியினரை ஈவிரக்கமின்றி கைது செய்து, மரண தண்டனையை நிறைவேற்றுவான் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டிருக்கலாம். சோவியத் அதிபராக இருந்த ஸ்டாலின் கூட, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Thursday, January 23, 2014

ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஐந்தாம் பாகம்)


உலக வரலாற்றில் பல புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால், அந்தப் புரட்சிகள் கொண்டு வந்த கொள்கைகள், எத்தனை வருடங்கள் நிலைத்து நின்றன என்பதும் முக்கியமானது. புரட்சி நடந்த பல நாடுகளில், கொள்கைக்காக நடந்த களையெடுப்புகள், சகோதர யுத்தங்களில், பல இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டிஷ் காலனியாகவிருந்த அமெரிக்கா பிரிவதற்காக நடந்த போரினை, “அமெரிக்கப் புரட்சி" என்று சரித்திர நூல்களில் எழுதுகின்றனர். உண்மையில் அப்போது நடந்ததை, விடுதலைப் போராட்டம் என்று சொல்லலாம். ஆனால், அது ஒரு “புரட்சி" அல்ல.

19 ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போர் தான், அந்த நாட்டில் நடந்த உண்மையான புரட்சி ஆகும். தென் அமெரிக்க மாநிலங்கள், நிலப்பிரபுத்துவ பழைமைவாதத்தில் ஊறியிருந்தன. அதற்கு மாறாக, வட அமெரிக்க மாநிலங்கள் முதலாளித்துவ முற்போக்குக் கொள்கையை கொண்டிருந்தன. போரின் இறுதியில், முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ சக்திகளை தோற்கடித்து, அமெரிக்கா முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில், பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். எதிர்த் தரப்பினரை சிறையில் அடைப்பதை விட, சுட்டுக் கொல்வதே சிறந்ததாக நம்பப் பட்ட காலமது. அந்தப் போரில் பல அப்பாவிகளும் பலியாகி இருப்பார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

ஒருவேளை, இன்றைக்கும் உலகின் பல பகுதிகளில், நிலப்பிரபுத்துவ சக்திகளின் ஆட்சி நடக்கின்றது என்று நினைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால், அமெரிக்க உள்நாட்டுப் போரை நடத்திய “ஆப்பிரகாம் லிங்கன் ஒரு கொடுங்கோலன், பல இலட்சம் மக்களை கொன்ற இனப் படுகொலையாளி….” என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருப்பார்கள். நல்லவேளை, இன்று எந்த நாடும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இல்லை. அதனால், ஆப்பிரகாம் லிங்கனும், ஸ்டாலினைப் போன்று தூற்றப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டார்.

சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சி செய்த காலம் முழுவதும் சர்வாதிகாரம் இருந்ததாக நம்புவது தவறு. குறிப்பாக 1937 ம் ஆண்டு வரையில், ஸ்டாலினை விமர்சிப்பது குற்றமாக கருதப் படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே, ஸ்டாலினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட பலர் இருந்தார்கள். பொது மக்களைப் பொறுத்த வரையில், அங்கே சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஒருவர் அரச எதிர்ப்பாளர் என்று குற்றஞ்சாட்டப் பட்டு, நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டாலும், குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சிகள் இல்லாத பொழுது விடுதலை செய்யப் பட்டார்கள்.

எந்தளவு உயர்வாக மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இருந்தாலும், போர் நடக்கும் காலத்தில் சட்டங்களை மாற்றிக் கொள்ளும். அரசு இயந்திரம் கடுமையாக நடந்து கொள்ளும். புலனாய்வுத் துறையின் அதிகாரங்கள் அதிகரிக்கப் படும். சிறைகளை நிரப்புவதும், நீதிக்கு புறம்பான படுகொலைகளும் அதிகரிக்கும். எதிரியை இலகுவாக அடையாளம் காண முடியாததால், பல அப்பாவிகளும் பாதிக்கப் படுவார்கள். அமெரிக்காவின் CIA, FBI போன்ற புலனாய்வுத் துறையினரை எந்த சட்டமும் கட்டுப் படுத்தாது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம், பிடித்து சிறையில் அடைக்கலாம். ஜனநாயகத் தன்மை அதிகமாக உள்ள, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை.

சோவியத் யூனியன் உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. அதற்குள் நூற்றுக் கணக்கான மொழிகளைப் பேசும், பல கோடி மக்கள் வாழ்ந்தனர். அமெரிக்காவை ஆள்வதை விட, சோவியத் யூனியனை ஆள்வது பல மடங்கு கஷ்டமான காரியம். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் இயங்கிய புலனாய்வுத் துறையின் பெயர் NKVD. (பிற்காலத்தில் அது KGP என்று பெயர் மாற்றப் பட்டது.) NKVD தான், ஸ்டாலின் காலத்தில் நடந்த பெரும்பான்மையான கொலைகள், கைதுகள், நாடுகடத்தல்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தது.

ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில், 1930 ம் ஆண்டுக்குப் பின்னரும், சோவியத் அரசுக்கு எதிரான குழுக்கள் இயங்கி வருவதாக, NKVD அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனில், எதிர்ப் புரட்சிக் குழுக்கள் இயங்கியதாக NKVD தெரிவித்த தகவல்களில் உண்மை இருக்கலாம். NKVD என்ற நிறுவனத்திற்கு கிடைத்து வரும் அரசு மானியத்தை அதிகரிப்பதற்காக, அதன் அதிகாரிகள் சில பொய்களை, அல்லது மிகைப் படுத்திய தகவல்களை எழுதி இருக்கலாம். இரண்டுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதே நேரம், NKVD சொல்வதை எல்லாம் நம்பும் அளவிற்கும், ஸ்டாலின் ஒரு முட்டாளும் அல்ல.

சோவியத் யூனியனில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான NKVD, எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், NKVD குள்ளேயே பலர் தீர்த்துக் கட்டப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. காசகஸ்தானில் NKVD உயர் அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டாலினின் ஒன்று விட்ட சகோதரர் ஒருவரும், தேசத் துரோகி என்று குற்றஞ் சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

மிகைல் தூகாசெவ்ஸ்கி, சோவியத் நாட்டின் வீர நாயகனாக போற்றப் பட்டவர். புரட்சிக்கு அளப்பெரிய பங்காற்றிய அவரது வீரப் பிரதாபங்களை கூறும் கதை ஆரம்ப பாடசாலை மாணவர்களின்  பாடப் புத்தகங்களில் இடம்பெற்றது. ஆனால், தூகாவ்செவ்ஸ்கி கூட, NKVD அலுவலகத்தில் சித்திரவதை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

அன்று நடந்த அரசியல் படுகொலைகளுக்கான பழி முழுவதையும் ஸ்டாலின் மேல் போடுவது மிகவும் எளிது. ஆனால், காரணத்தை புரிந்து கொள்வது கடினம். உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் சோவியத் மக்களின் வீர புருஷனாக மதிக்கப் பட்ட தூகாவ்செவ்ஸ்கி, மக்களின் எதிரி என்று குற்றஞ் சாட்டப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியான நேரம், சோவியத் மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “தூகாவ்செவ்ஸ்கி ஒரு துரோகி, ஜெர்மன் கைக்கூலி” என்ற குற்றம் சுமத்தப் பட்டு விசாரிக்கப் பட்டார். அதையெல்லாம், அன்று வாழ்ந்த சோவியத் குடிமக்களும் நம்பினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

பாடசாலைகளில் படித்த மாணவர்கள், தூகாசெவ்ஸ்கியின் படமும், கதையும் இருந்த புத்தகங்களின் பக்கங்களை கிழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையா, விசாரணை நீதியாக நடந்திருக்குமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதையெல்லாம் நம்பும் அளவிற்கு, பெரும்பான்மையான மக்கள் இருந்திருக்கிறார்கள். எந்தப் பயமுறுத்தல்களுக்கும் அஞ்சி, மக்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அன்று நடந்த சம்பவங்களை எல்லாம், “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” என்ற ஒரே சொல்லில் பதில் கூறி விளக்க முடியாது.

“ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று வர்ணிக்கப் படும் ஆட்சி நடந்த காலத்தில், பல இலட்சம் பேர் சிறையில் அடைக்கப் பட்டனர், அவர்களில் இலட்சக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். கைது செய்யப் பட்ட அனைவரும், “மக்களின் எதிரிகள்” என்று குற்றஞ் சாட்டப் பட்டனர். அன்று, உண்மையாகவே ஸ்டாலினின் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற நோக்குடன் சதி செய்த பலர் இருக்கலாம். அதே நேரம், பல அப்பாவிகளும் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர் என்பதை மறுக்க முடியாது.

சோவியத் அரசின் உயர் மட்டத்திலும், பலர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களில் பலர் ஸ்டாலினுடன் பல வருட காலம் நெருங்கிப் பழகியவர்கள். ஒரே இலட்சியத்திற்காக, ஒன்று சேர்ந்து போராடியவர்கள். உதாரணத்திற்கு, ட்ராஸ்கி, காமனேவ், சினொவியெவ், புகாரின், பியாத்னிஸ்கி போன்றவர்கள், ஸ்டாலினுக்கு நிகரான ஆளுமை கொண்ட போல்ஷெவிக் தலைவர்கள். இவர்களில் ட்ராஸ்கி மட்டுமே கொல்லப் படாமல் தப்பி, மெக்சிகோவிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்தார். மற்றவர்கள் எல்லோரும், NKVD யினால் கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்.

1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், தேசத் துரோக குற்றச்சாட்டில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். குறைந்தது 681,692 பேர் கொல்லப் பட்டதாக, NKVD புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. அதற்கு முன்னர் நடந்த, கூலாக் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கூட அந்தளவு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை. 1929 - 1932 ஆகிய காலத்தில், நாடு முழுவதும் கைது செய்யப் பட்டவர்களில் 6% மானோர் (35,689 பேர்) மட்டுமே கொல்லப் பட்டனர். (V.popov, “Gosudarstvennyi terror v sovetskoi Rossi”; A.Aplebaum, Gulag: “A History of the Soviet camps”)

இங்கே எழும் பல கேள்விகள், சந்தேகங்களுக்கு ஒவ்வொன்றாகத் தான் விடை காண முடியும். படித்த பாமரர்கள் கூட, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதனின் சர்வாதிகார ஆட்சி நடந்ததாக கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகன் போல, ஸ்டாலின் இலட்சக் கணக்கான மக்களை சுட்டுக் கொன்றதாக நினைக்கிறார்கள். முதலில் நாங்கள், அது போன்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும். எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, சோவியத் நாட்டிலும் அரசாங்கம் பல பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. அரசியலைமைப்பு சட்டம் இருந்தது. நீதிமன்றங்கள் இயங்கின.

அன்றிருந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றப் பட்டன. உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்கு பிந்திய சில வருடங்கள், மரண தண்டனை அமுலில் இருந்தது. அது பின்னர் இரத்துச் செய்யப் பட்டது. “மாபெரும் களையெடுப்புகள்” நடந்த காலகட்டத்தில், மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப் பட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்ட NKVD, மக்கள் விரோதிகள் என்று கைது செய்த பலரை சித்திரவதை செய்து கொன்றுள்ளது. அதே நேரம், மக்களின் எதிரிகளாக குற்றஞ்சாட்டப் பட்ட ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டனர். போதுமான ஆதாரங்கள் இன்றி பலர் விடுதலை செய்யப் பட்டனர்.

கைது செய்யப் பட்ட அத்தனை பேரும் மக்கள் விரோதிகள், தேசத் துரோகிகள் என்று நம்பும் அளவிற்கு, ஸ்டாலின் முட்டாளாக இருக்கவில்லை. பல தடவைகள், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஸ்டாலினே நேரடியாகக் கேட்டிருக்கிறார். அதே நேரம், சதியில் ஈடுபட்ட, அல்லது உடந்தையாக இருந்த பலரை சுட்டுக் கொல்லுமாறு, ஸ்டாலினே உத்தரவு போட்டுள்ளார். ( ரஷ்ய ஆவணக் காப்பகத்தில், பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், இன்று பல நூல்களாக வெளியாகி உள்ளன.)


இன்றைக்கும் பலரின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வருவோம்:

1. ஸ்டாலின், அன்றிருந்த சோவியத் மக்கள் அனைவராலும் வெறுக்கப் பட்ட சர்வாதிகாரியா?

பதில்: பெரும்பான்மையான சோவியத் மக்கள், ஸ்டாலினின் நடவடிக்கைகள் எல்லாம் சரியானவை என்று ஏற்றுக் கொண்டனர் அல்லது அப்படி நம்பினார்கள். மேலே குறிப்பிட்ட தூகாசெவ்ஸ்கியின் உதாரணத்திலேயே அதைப் பார்க்கலாம். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி, ஸ்டாலினால் ஆட்சி நடத்தி இருக்க முடியாது. அன்றிருந்த சோவியத் மக்களின் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாட்டை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

2. ஸ்டாலின் பல இலட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்தாரா?

பதில்: அன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர். அதே நேரம், பல ஆயிரம் கைதிகள், பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். (ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலேயே, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பின்னர் விடுவிக்கப் பட்டனர்.)

தனிப்பட்ட முறையில் பார்த்தால், ஒவ்வொரு கைதிக்கும் பின்னால் ஒரு சோகக் கதை இருக்கும். தண்டனை விதிக்கப் பட்ட அப்பாவிகள், குற்றம் எதுவும் செய்யாதவர்கள் என்பதை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பிறரின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகளாக தெரிந்தார்கள். (அவர்களது துன்பங்கள், துயரமான அனுபவங்கள் மட்டுமே, மேற்கத்திய நாடுகளில் அனுதாபத்துடன் நோக்கப் பட்டன.)

நாங்கள், எந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், அல்லது கொடுக்க விரும்புகிறோம் என்பதும் முக்கியமானது. ஸ்டாலினை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தான், அதைக் கூறுகின்றனர். மனிதர்கள் எல்லோருக்கும் அரசியல் உண்டு. இல்லை என்று சொல்பவர்கள் கூட, ஏதாவது ஒரு அரசியல் கோட்பாட்டுக்கு, மௌனமான ஆதரவை வழங்கலாம்.

ஸ்டாலின் கொன்ற அப்பாவிகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகளை, சதி காரர்களை, மக்கள் விரோதிகளை கண்டு கொள்வதில்லை. அப்படி யாருமே இருக்கவில்லை என்பது போல பாவனை செய்கின்றனர். மறு பக்கத்தில், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டதை சரியென்று வாதிடுபவர்கள், பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களை கண்டுகொள்ளாமல் விடும் பொழுது, அவர்களது அரசியல் சார்புத் தன்மை கேள்விக்குள்ளாகின்றது.

ஸ்டாலின் காலத்தில் இருந்த அரசியல் நிலைமையை, ஈழப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்திற்காக போராடிய பிற இயக்க உறுப்பினர்களை மட்டும் கொலை செய்யவில்லை. ஒரே இயக்கத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்த மாத்தையாவை கைது செய்த நேரம், அல்லது  கருணா பிரிந்த நேரம், அவர்களின் விசுவாசிகளான சக தோழர்களையும் கொலை செய்தனர். அந்த நேரத்தில், இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் கூட பாதிக்கப் பட்டனர். அதே போன்று, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றச் சாட்டில், பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அப்படியான தருணத்தில், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தது?

நிச்சயமாக, புலிகளால் பாதிக்கப் பட்டவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் புலிகளை எதிர்த்துப் பேசுவார்கள். சிலர் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நோக்கோடு அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டார்கள். தமிழ் மக்கள் எல்லோரும், புலிகள் தொடர்பாக ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனரா? இல்லை. பெரும்பான்மையான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள். அவர்கள் புலிகள் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பினார்கள். ஒட்டுக் குழுக்கள், துரோகிகள் என்று புலிகள் சுட்டிக் காட்டியவர்களை, மக்களும் ஒதுக்கி வைத்தார்கள்.

மறு பக்கத்தில், புலிகளை குறை கூறிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றிருந்தது. அவர்களுக்கு புலி எதிர்ப்பாளர் முத்திரை குத்தப் பட்டது. புலி எதிர்ப்பாளர்கள், ஒரு காலத்தில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களாக இருந்திருந்தாலும், யாருக்கும் அதைப் பற்றிய கவலை இருக்கவில்லை. “இன்று புலிகள் மட்டும் தானே இலங்கை அரச படைகளை எதிர்த்து போரிடுகிறார்கள்? அப்படியானவர்களை விமர்சிப்பது சரியா?” என்று நியாயம் கூறினார்கள். இதே மாதிரியான நிலைமை தான் ஸ்டாலின் காலத்திலும் இருந்தது.

புலிகளை ஆதரித்த, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை, உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால், ஸ்டாலினை ஆதரித்த சோவியத் மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம். முன்னர் ஒரு காலத்தில், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.

புலிகளால் பாதிக்கப் பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும், காலப் போக்கில் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள். சிலர் தமது சுயநலம் கருதி மாறியிருக்கலாம். ஆனால், எல்லோரும் திடீர் பாசம் காரணமாக புலிகளை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. அவர்களின் வார்த்தைகளில் கூறினால், “இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. அதற்கெதிராக போராடுவோர் யாராக இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.”

ஒரு காலத்தில், ஸ்டாலினால் “மக்கள் விரோதி” என்று குற்றஞ்சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் பிள்ளைகள், சில வருடங்களுக்கு பின்னர் ஸ்டாலினின் தலைமையின் கீழ் செம்படையில் இணைந்து, நாஜிப் படைகளுக்கு எதிராக போராடினார்கள். சில நேரம், ஸ்டாலினால் கொல்லப்பட்ட அவர்களது பெற்றோர், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்கலாம். அதற்காக, ஸ்டாலின் மேல் வன்மத்தை வளர்த்து, சந்தர்ப்பம் பார்த்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளவில்லை. சிலர் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி அல்ல. எப்போதும் சாதாரண மக்கள், தமது நலன் சார்ந்த கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பதில்லை.

ஒரு காலத்தில், “ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியான” குடும்பங்களை சேர்ந்த, சோவியத் மக்களில் பெரும்பான்மையானோர், பிற்காலத்தில் ஸ்டாலினை ஆதரித்தனர். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், புலிகளை ஆதரிப்பதற்கு ஈழத் தமிழ் மக்கள் கூறிய அதே காரணத்தை தான், சோவியத் மக்களும் கூறுவார்கள். 

“புலிகள் செய்த கொலைகள், மனித உரிமை மீறல்களை விட, தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும் பல மடங்கு அதிகமானவை. அதே போன்று, ஸ்டாலின் புரிந்த கொலைகளை விட, மேலைத்தேய நாடுகளினதும், ஜெர்மன் நாஜிகளினதும் ஆக்கிரமிப்புப் படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும்  பல மடங்கு அதிகமானவை.” 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், உலக நாடுகள் முழுவதிலும், சோவியத் யூனியன் மட்டும் தான், பெருமளவு உயிரிழப்புகளையும், பேரழிவுகளையும் சந்தித்திருந்தது. நாஜிப் படைகள் புரிந்த அழிவுகளும், அட்டூழியங்களும், ஒட்டு மொத்த சோவியத் மக்களையும், ஸ்டாலினின் பின்னால் அணிதிரள வைத்தன.

சோவியத் யூனியன், தமிழீழம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைப் போராளி என்று சொல்வார்கள். அதே போன்று, ஒருவரின் சர்வாதிகாரி, இன்னொருவரின் நாயகன் ஆவார். ஸ்டாலின் செய்த படுகொலைகள் பற்றிய மிகைப் படுத்தப் பட்ட தகவல்கள், நாஜிகளினால் பரப்புரை செய்யப் பட்டன. பனிப்போர் காலத்தில், மேற்கத்திய நாடுகள் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டன.

"இருபதாம் நூற்றாண்டில் அதிகளவு மக்களை படுகொலை செய்தவராக," ஸ்டாலின் சரித்திரப் பாடப் புத்தகங்களில் குறிப்பிடப் படுகின்றார். பலருக்கு அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாது. அது தொடர்பான புள்ளிவிபரம் எதுவும் கிடையாது. பத்து இலட்சம், இருபது இலட்சம், ஒரு கோடி…. என்று பலரும் தமது கற்பனைக்கு எட்டியவாறு, கணக்கிட்டு  சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலினால் படுகொலை செய்யப் பட்டதாக கூறப்படும் மக்களின் எண்ணிக்கை, அன்றிருந்த சோவியத் யூனியனின் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்.  ஸ்டாலின் மீதான பல அவதூறுகள், ஜெர்மன் நாஜிகளின் பரப்புரைகளில் இருந்தே கிடைக்கப் பெற்றன. அவை பின்னர் வரலாறாகப் பதிவு செய்யப் பட்டன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்


 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Tuesday, January 21, 2014

புலிகள் ஒரு "ஸ்டாலினிச" இயக்கம்! - ட்ராஸ்கிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!!


"இலங்கையில் உங்களுக்குப் பிடித்த சிங்கள இடதுசாரி யார்?" என்று நமது தமிழ் தேசியவாதிகளிடம் கேட்டால், எல்லோரும் ஒரே குரலில் "விக்கிரமபாகு கருணாரத்னா" என்று பதில் சொல்வார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகளை, அனுதாபத்துடன் ஆதரிக்கும் ஒரேயொரு சிங்கள இடதுசாரி அவர் மட்டுமல்ல. (வேறு சிலரும் உள்ளனர். ஆனால், அவர்கள் புலிகளை ஆதரிக்காத படியால், யாருக்கும் பிடிக்காது.) தென்னிலங்கை இடதுசாரிகளில் விக்கிரமபாகு கருணாரத்னவும், அவரது கட்சியும் விதி விலக்குகள். அவர் மட்டுமே, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளார். அவரது கட்சி, "தமிழீழம், ஸ்ரீலங்கா என்ற இரண்டு தேசியங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. (நிச்சயமாக, அந்த இரண்டு தேசியங்களும் சோஷலிசத்தை இறுதி இலக்காக கொண்டிருக்கும் என்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.)

விக்கிரமபாகு கருணாரத்ன தலைமை தாங்கும், நவ சமசமாஜக் கட்சி (NSSP) ஒரு ட்ராஸ்கிச சோஷலிசக் கட்சி ஆகும். இன்று அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும், வாசுதேவ நாணயக்காராவின் லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) இருந்து எப்போதோ பிரிந்து வந்து விட்டது. ஆனால், இரண்டுமே நான்காம் அகில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ட்ராஸ்கிச கட்சிகள் தான். ட்ராஸ்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இன்னும் தெளிவாக சொன்னால், "ஸ்டாலினிஸ்டுகள் அல்ல".

காலனிய கால இலங்கையில் தோன்றிய, ஆரம்ப கால சோஷலிச இயக்கம், "ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரிவினை" க்குப் பிறகு, ட்ராஸ்கியை பின்பற்றியது. ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் குறிக்கோள், ட்ராஸ்கிசவாத கட்சிகளுக்கும் பொருந்தும். அதாவது, கத்தியின்றி, இரத்தமின்றி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சோஷலிசத்தை கொண்டு வருவதே அவர்களது குறிக்கோள். அதனால் தான், வாசுதேவ நாணயக்காராவின் LSSP, மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி அரசை ஆதரிக்கின்றது. அதாவது, ஒரு மத்திய இடது சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம், ஒரு முதலாளிய அரசை வழிக்குக் கொண்டு வர முடியுமாம். (இலங்கை சுதந்திரக் கட்சி, அடிப்படையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியலை கொண்டுள்ளது.)

விக்கிரமபாகு கருணாரத்னவின் NSSP, நடப்பில் உள்ள மகிந்த அரசுடன் முரண்படுகின்றது. அது ஒரு மிகச் சரியான நிலைப்பாடு தான். ஆனால், சர்வதேச மட்டத்தில், அதைப் போன்ற ட்ராஸ்கிசவாத கட்சிகள், ஒரு ஆயுதப் புரட்சியை நம்பி இருக்கவில்லை. அதன் அர்த்தம், தேர்தல் ஜனநாயக அரசியலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது. அடித்தட்டில் இருக்கும் மக்கள் புரட்சி செய்வார்கள், அப்போது அவர்களை வழிகாட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

விக்கிரமபாகுவின் NSSP கட்சிக்கும், சர்வதேச ட்ராஸ்கிச கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ட்ராஸ்கிஸ்டுகள், ஒரே நாட்டில் சோஷலிசத்தை கட்டுவதனை, ஒரு "ஸ்டாலினிச கோட்பாடு" என்று நிராகரிப்பவர்கள். அதற்குப் பதிலாக, "நிரந்தரப் புரட்சி" என்று சர்வதேச மட்டத்தில் சிந்திப்பவர்கள். அதாவது, ஒரு சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் "உலகப் புரட்சி" ஏற்பட்டால் மட்டுமே, தமிழீழம், ஸ்ரீலங்கா ஆகிய சோஷலிச நாடுகளும் உருவாகும் என்று நம்புவோர் தான் NSSP யினர்.

NSSP க்கு, நான்காம் அகிலம் போன்ற சர்வதேச ட்ராஸ்கிசவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு. குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில் இயங்கும் தீவிர ட்ராஸ்கிச Grenzeloos கட்சியுடன், நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தில் கூட்டப்படும் சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொள்கின்றனர். உலகெங்கும் உள்ள ட்ராஸ்கிச கட்சிகளின் பிரதிநிதிகள், அந்தக் கருந்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ட்ராஸ்கிச இயக்கத்திற்குள் நிறைய பிரிவுகள் உள்ளன. NSSP போன்று, Grenzeloos கட்சியும் அரசை ஆதரிப்பதில்லை. எந்தப் பெரும்பான்மை கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருகின்றது. NSSP யின் நிலைப்பாடும் அது தான். அந்த விடயத்தில் அவர்களின் நேர்மையை பாராட்டலாம்.

Grenzeloos என்பது, நெதர்லாந்தில் இயங்கும் ஒரு சிறிய மார்க்சிய-ட்ராஸ்கிச கட்சி ஆகும். நெதர்லாந்து ஆளும் கட்சிகளில் ஒன்றான, அடிப்படையில் சமூக ஜனநாயக கட்சியான PvdA (தொழிற்கட்சி, பிரிட்டிஷ் Labour Party போன்றது), பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, வலதுசாரி பாதையில் செல்லத் தொடங்கியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பேசிய மார்க்சியம், சோஷலிசம் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு, முதலாளித்துவ ஆதரவு கட்சியாகி விட்டது. கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுடன் முரண்பட்ட இடதுசாரி மார்க்சிய நம்பிக்கையாளர்கள், Grenzeloos (கிரென்செலோஸ்: எல்லையற்றது) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

அவர்கள் தற்போது, PvdA யுடன் எந்த தொடர்புமற்று, தனியான கட்சியாக இயங்கி வருகின்றனர். அவர்கள் மார்க்சிஸ்டுகள் என்றாலும், ட்ராஸ்கிசத்தை கட்சிக் கொள்கையாக பின்பற்றி வருகின்றனர். தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பாளர்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில், ட்ராஸ்கிஸம் இலகுவில் எடுபடும்.

ட்ராஸ்கிசவாதிகள், "வன்முறைப் புரட்சி மூலம், முதலாளித்துவ அரசை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசை நிறுவ விரும்பும் ஸ்டாலினிசத்தை" நிராகரிக்கின்றனர். அதனால், இரத்தம் சிந்திப் போராட விரும்பாத நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, முதலாளிகளும் ட்ராஸ்கிசத்தை ஆதரிப்பார்கள். ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகளால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான (உயிர்)ஆபத்தும் ஏற்படாது.

நெதர்லாந்தில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களுடனும் எனக்குப் பழக்கம் உண்டு. Grenzeloos கட்சி உறுப்பினர்களை, பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, பல்வேறு சமூக நிகழ்வுகளில், அரசியல் ஆர்ப்பாட்டங்களில், அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு சமூக ஆர்வலர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்போதெல்லாம், எமது உரையாடலில், தவிர்க்கவியலாது இலங்கை நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறும். அநேகமாக, ஐரோப்பாவில் அரசியல் ஆர்வமுள்ள பலர், இலங்கைப் பிரச்சினை பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். ஈழப்போர், ஈழத்தில் மனிதப் பேரவலம், போரிடும் தரப்பினர், அவர்களது இராணுவ- அரசியல் நிலைப்பாடுகள், இவை குறித்தெல்லாம் ஆர்வத்தோடு தேடிப் படித்திருப்பார்கள்.

ஈழப் போராட்டம், மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து Grenzeloos உறுப்பினர்களின் கொண்டிருந்த கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. "புலிகள் ஒரு (தமிழ்) தேசியவாத இயக்கம், ஒரு தேசியவாத அரசு அமைப்பதே அவர்களது குறிக்கோள்." என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை மறுத்துரைத்த Grenzeloos கட்சி உறுப்பினர்கள், "விடுதலைப் புலிகள் ஒரு ஸ்டாலினிச இயக்கம். தமிழீழத்தில் ஸ்டாலினிச ஆட்சியை கொண்டுவருவதே அவர்களது குறிக்கோள்" என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல, கியூபா, வியட்நாமில் ஸ்டாலினிச ஆட்சி நடப்பதாகவும், புலிகளும் அந்தப் பாதையில் செல்வதாகவும் வாதிட்டனர்.

இன்று, ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகளுடன் தொடர்புடைய தமிழர்கள் சிலர், தம்மை "தீவிரமான புலி ஆதரவாளர்களாக" காட்டி வருகின்றனர். உண்மையில் அது ஒரு இரட்டை வேடம். Grenzeloos மட்டுமல்ல, ஐரோப்பிய ட்ராஸ்கிசவாத கட்சிகள் பலவும் புலிகளை ஒரு ஸ்டாலினிச இயக்கமாகவே கருதுகின்றன. விடுதலைப் புலிகள் ஒரு "ஸ்டாலினிச இயக்கம்" என்பதற்கு, ட்ராஸ்கிசவாதிகள் கூறும் காரணம் முக்கியமானது. முதலில் ஸ்டாலினிசம் என்றால் என்ன? அதற்கு வரைவிலக்கணம் என்ன?

"ஸ்டாலினிசம்" என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிசவாதிகள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை, நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். "வன்முறைப் போராட்டத்தில் நாட்டம், கடும்போக்குத் தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை மறுப்பது, மாற்றுக் கருத்தாளரை அழித்தொழிப்பது, எதேச்சாதிகாரம்..." இது போன்ற பல அம்சங்களை, அவர்கள் ஸ்டாலினிசம் என்று கருதுகின்றனர். 

ட்ராஸ்கிஸ்டுகளை பொறுத்தவரையில், "ஸ்டாலினின் கொள்கைகளை பின்பற்றித் தான், கியூபாவில் காஸ்ட்ரோயிஸ்டுகளும், வியட்நாமில் வியட்- காங் இயக்கமும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." அதாவது, "அவர்கள் கம்யூனிஸ்டுகளோ, இடதுசாரிகளோ அல்ல, ஸ்டாலினிஸ்டுகள்." ஏனென்றால், ஆயுத வன்முறை மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். "விடுதலைப் புலிகளும், அவ்வாறு ஆயுத வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கம் தான். அதனால் தான், புலிகளும் ஸ்டாலினிஸ்டுகள் ஆவர்." என்பது ட்ராஸ்கிச கட்சிகளின் அரசியல் புரிதல் ஆகும். 

மேற்கு ஐரோப்பாவில் இயங்கும், எந்தவொரு ட்ராஸ்கிச அமைப்பும், முதலில் தன்னை முதலில் "ஸ்டாலினிஸ்ட் இல்லை" என்று நிரூபிப்பதில் குறியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐரோப்பிய அரசுகள் "ஸ்டாலினிசம் என்பது சர்வாதிகாரம், அல்லது எதேச்சாதிகாரத்தின் மறுபெயர்" என்று பிரச்சாரம் செய்து, தமது மக்களை நம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான், ஆயுத பலம் மூலம் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் தேசியவாத இயக்கங்களும், ட்ராஸ்கிசவாதிகளின் கண்களுக்கு "ஸ்டாலினிஸ்டுகளாக" தெரிகின்றன.

ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகள், புலிகளை "ஸ்டாலினிஸ்டுகள்" என்று கூறி நிராகரிப்பதற்கு, இன்னொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஸ்டாலினிச" (கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட்) கட்சிகள், அமைப்புகள் தான், புலிகளையும், அவர்களது ஈழப் போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர். புலிகளின் போராட்டத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசிய விடுதலைப் போராட்டம் என்று கூறி வருகின்றனர். அது ஒரு வகையில் "ஸ்டாலினின் கோட்பாடு". (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளை செய்தவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர்.) அத்தகைய கொள்கை வேறுபாடும், ட்ராஸ்கிச கட்சிகள் தேசியவாதிகளான புலிகளை நிராகரிக்க காரணமாக உள்ளது.


Friday, January 17, 2014

சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்

(ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (நான்காம் பாகம்)


உலகம் முழுவதும், எல்லா நாடுகளிலும் அரசு இயந்திரங்கள் சிறைச்சாலைகளை நடத்தி வருகின்றன. குற்றம் செய்பவர்கள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவிப்பதாக, சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். முதலாளித்துவ நாடுகள், அல்லது முதலாளித்துவப் பொருளாதாரம் நிலவும் நாடுகளில், ஒவ்வொரு துறையிலும் வர்க்க வேறுபாடு பிரதானமாக இருக்கும். உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த, ஜனநாயக நாடாக கருதப் படும் அமெரிக்காவில் கூட, வறுமையான பின்னணியை கொண்டவர்களும், சிறுபான்மை இனங்களும் தான் பெரும்பாலும் சிறைச்சாலைகளை நிரப்புகின்றனர்.

அதை விட, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், பல ஆயிரம் பயங்கரவாத சந்தேக நபர்கள், உலகெங்கும் உள்ள இரகசியமான சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஒரு காலத்தில், அமெரிக்க மண்ணிலேயே தடுப்பு முகாம்கள் இருந்துள்ளன. செவ்விந்திய பழங்குடியினர் 19 ம் நூற்றாண்டு வரையில், தடுப்பு முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த காலத்தில், அமெரிக்காவில் வாழ்ந்த ஜப்பானிய குடியேறிகள், அனைவரும் குடும்பத்தோடு பிடித்துச் செல்லப் பட்டு, தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர்.

சிறைச்சாலைகள் வைத்திருப்பதற்கு, அரசாங்கங்கள் பலவித காரணங்களை கூறுகின்றன. குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து பிரித்து வைத்து நல்வழிப் படுத்துவதற்காக, அவர்களுக்கு தண்டனை வழங்கப் படுவாதாக, பொதுவாக சொல்லப் படுகின்றது. நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் காரணம் என்று சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள படித்தவர்களும், பணக்காரர்களும் செய்யும் குற்றங்களுக்காக, அவர்கள் பெரும்பாலும் எந்தத் தண்டனையும் அனுபவிப்பதில்லை. சமூகம் அவற்றை கண்டு கொள்வதுமில்லை. பல சந்தர்ப்பங்களில், மேட்டுக்குடியினரும், முதலாளிகளும் குற்றம் புரிவதற்கு சட்டமே இடமளிக்கிறது. பல விடயங்கள், சட்டப் படி குற்றமாக கருதப் படுவதில்லை.

சோவியத் யூனியனில், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், மேற்குறிப்பிட்ட சமூக நிலைமை தலைகீழாக மாறியது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர், “அனேகமாக ஒரு பெரிய குற்றவாளியாக இருப்பார்” என்று சந்தேகிக்கும் நிலைமை தோன்றியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அப்படியான சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்து விட்டது. அதன் விளைவு? நிலவுடமையாளர்கள், முதலாளிகள், பணக்காரர்கள் என்று இனங்காணப்பட்ட பலர், மக்களால் பிடித்துக் கொடுக்கப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கும், கடூழிய தண்டனை வழங்குவதற்கும் தடுப்பு முகாம்கள் உருவாக்கப் பட்டன.

"Gulag" என்ற ரஷ்யச் சொல்லை, கம்யூனிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் கேள்விப் பட்டிருப்பார்கள். சைபீரியாவில் பல இடங்களில் இருந்த சிறைத் தடுப்பு முகாம்களை குறிக்கும் சொல் அது. ஆனால், அன்றிருந்த எல்லா சிறை முகாம்களும் குலாக் என்று பெயரிடப் படவில்லை. எல்லா நாடுகளிலும் இருப்பது போல வழமையான சிறைச்சாலைகளும் இருந்தன. அதைத் தவிர, பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறுபட்ட பிரிவினரை அடைத்து வைத்த தடுப்பு முகாம்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். குலாக் அவற்றில் ஒன்று. ஆனால், இறுதியில் குலாக் என்ற பெயர் சரித்திரத்தில் நிலைத்து விட்டது.

ரஷ்யாவின் வட மேற்குப் பிரதேசத்தில் உள்ள, வடக்கே உள்ள வெள்ளைக் கடலை, தெற்கே உள்ள பால்ட்டிக் கடலுடன் இணைப்பதற்காக, ஒரு செயற்கையான ஒரு கால்வாய் தோண்டப் பட்டது. அதற்காக கைதிகள் கட்டாய வேலை செய்ய வேண்டி இருந்தது. கால்வாய் செல்லும் வழியெங்கும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின. பல ஆயிரக் கணக்கான கைதிகள், அந்த முகாம்களில் தங்க வைக்கப் பட்டு வேலை வாங்கப் பட்டனர். பல இடங்களில், கனரக இயந்திரங்கள் அரிதாக பயன்படுத்தப் பட்டதால், மனித உழைப்பு அதிகமாக உறிஞ்சப் பட்டது. உடலை உருக்கும் கடுங் குளிர், அளவுக்கு மிஞ்சிய வேலை காரணமாக, கால்வாய் அமைக்கும் பணியில் பலர் மரணமடைந்துள்ளனர்.

எல்லா சிறை முகாம்களும், ஒரே மாதிரி இருக்கவில்லை. சில முகாம்களில் இருந்த கைதிகள் நன்றாக நடத்தப் பட்டனர். அவர்கள் வேலை செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். வேறு சில முகாம்களில், கைதிகள் மோசமாக நடத்தப் பட்டனர். அவர்களுக்கு சிறை ஒரு நரகமாக இருந்தது. பல குறைபாடுகள் சிறை முகாம் நிர்வாகத்தில் தங்கி இருந்தது. சில முகாம்களில், கைதிகள் மனிதத் தன்மையுடன் நடத்தப் பட்டனர். ஆனால், சில முகாம்களை நிர்வகித்தவர்கள் மனிதப் பேரவலத்திற்கு காரணகர்த்தாக்களாக இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கருதுவது, யதார்த்தத்திற்கு முரணான வாதம்.    

சிறைப் பிடிக்கப் பட்ட கைதிகள், வேலை செய்வதன் மூலம், உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வார்கள். அவர்களை கருத்தியல் ரீதியாக வென்றெடுப்பதும், மறுவார்ப்பு செய்வதுமே தடுப்பு முகாம்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், எல்லா சிறைச்சாலை அதிகாரிகளும் அதனை பின்பற்றவில்லை. சில காவலர்கள், தங்களிடம் ஒப்படைக்கப் பட்ட கைதிகளை, இரக்கமின்றி கொடூரமாக நடத்தினார்கள். கடைசியில், அவ்வாறு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களின் செயல்கள் மட்டுமே, சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டமை ஒரு வரலாற்று முரண்நகை. மோசமாக நிர்வகிக்கப் பட்ட முகாம்களில் நடந்த கொடுமைகளை நினைவில் வைத்திருப்பவர்கள், நன்றாக நிர்வகிக்கப் பட்ட முகாம்களில் நடந்த மாற்றங்களை மறந்து விட்டார்கள். உதாரணத்திற்கு, சிலருக்கு நேர்ந்த அனுபவங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சிமினோவ் என்ற ரஷ்ய எழுத்தாளர், ஒரு பாட்டாளி வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் வறுமை காரணமாக கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர். சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர், சுயமாகப் படித்து முன்னேறினார். புதிய சோவியத் அரசு அவரை ஒரு சிறந்த ஊடகவியலாளராக, கவிஞராக மாற்றியது. வெள்ளைக் கடல் கால்வாய் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பற்றி கவிதைகள் எழுத விரும்பினார். அதற்காக சில வாரங்கள், தடுப்பு முகாம் ஒன்றில் தங்கினார். வயதில் குறைந்த இளைஞரான சிமினோவை, தொழிலாளர்கள் யாரும் கணக்கெடுக்கவில்லை.

“குலாக்” கடூழிய சிறை முகாமில் தனது அனுபவத்தை எழுதிய சிமினோவின் குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: “முன்னாள் பூர்ஷுவாக்கள், “கூலாக்” பணக்கார விவசாயிகள், முகாமில் சாதாரண தொழிலாளர்களாக வேலை செய்வதன் மூலம், எவ்வாறு புதிய மனிதர்களாக மாறினார்கள்” என்பதை விபரமாக எழுதி உள்ளார். திறமைசாலிகளுக்கு “சிறந்த உழைப்பாளி விருது” வழங்கப் பட்ட பொழுது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தண்டனைக் காலம் முடிந்து, முகாமை விட்டு வெளியேறிய அனைவருக்கும் போனஸ்களும், பதக்கங்களும் வழங்கப் பட்டன.

முகாமிலிருந்த தொழிலாளர்களிடம் இருந்து கேட்டறிந்த பல கதைகளை சிமினோவ் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பொறியியலாளரின் கதை, அவர் தேடி வந்த புதிய மனிதனுக்கு உதாரணமாக திகழ்ந்தது. போல்ஷெவிக் புரட்சிக்கு முந்திய, இடைக்கால அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்த பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப் பட்டு, அந்த முகாமில் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 58 ம் இலக்க சட்டத்தின் படி, பத்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. வெள்ளைக் கடல் கால்வாய்த் திட்டத்திலும், அவர் ஒரு பொறியியலாளராக பணியாற்றினார். அவரது நன்னடத்தை காரணமாக, தண்டனைக் காலம் மூன்று வருடங்களாக குறைக்கப் பட்டது. விடுதலை செய்யப் பட்ட பின்னர், மொஸ்கோ - வோல்கா கால்வாய்த் திட்டத்தில் தலைமைப் பொறியியலாளராக வேலை செய்தார்.

பாவெல் விட்டன்பூர்க் ஒரு விஞ்ஞானி, திறமையான புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் மீது, "சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளுடன் சேர்ந்து, இரகசியமாக கிளர்ச்சி உண்டாக்க திட்டமிட்ட குற்றச்சாட்டு" சுமத்தப் பட்டது. விசாரணையில் அவராகவே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர், மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அது சிறைத் தண்டனையாக மாற்றப் பட்டது. ரஷ்யாவிற்கு வடக்கே, ஆர்க்டிக் சமுத்திரத்தில் உள்ள வைகாஷ் தீவில் இருக்கும் குளாக் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

வைகாஷ் தீவில், தங்கமும் வேறு சில விலை மதிப்பற்ற கனிம வளங்களும் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பதற்கும், அகழ்ந்து எடுப்பதற்குமாக ஒரு குலாக் முகாம் அமைக்கப் பட்டது. சிறைக் கைதிகளில் அரைவாசிப் பேர், பொறியியலாளர்கள். அந்த முகாமிற்கு பாவெல் வந்த பின்னர், தங்கம் கண்டுபிடிக்கப் பட்டது. வைகாஷ் தீவின் புவியியல் தன்மைகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டது. ஒரு சிறைக் கைதியாக இருந்த போதிலும், பாவெலுக்கு ஒரு தனியான வீடும், அலுவலகமும் ஒதுக்கிக் கொடுக்கப் பட்டது. கோடை காலத்தில், குடும்ப உறுப்பினர்கள் வந்து பார்ப்பதற்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டது. வைகாஷ் தீவில் கிடைத்த சலுகைகளை கண்டு வியந்த பாவெலின் மனைவி, சில காலம் அங்கேயே தங்கி இருந்தார். ஒரு மருத்துவரான அவர், முகாம் கைதிகளுக்கு வைத்தியம் பார்த்தார்.

பாவெலின் மனைவி ஜீனா, லெனின்கிராட்டில் விட்டு விட்டு வந்த மகள்மாருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து: “உங்களது அப்பாவின் புகைப்படம் ஒன்றை அனுப்புகிறேன். இங்கே வந்த பின்னர் எந்தளவு கொழுத்து இருக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். நேற்று முகாமில் இருந்து வெளியேறிச் செல்பவர்களின் (கைதிகளின்) பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொண்டோம். உழைப்பாளிகளின் நாயகர்களை பாராட்டும் உரைகளை வெகுவாக இரசித்தோம். இங்கு வந்த ஒவ்வொருவரும் தகைமை பெற்ற, விழிப்புணர்வு கொண்ட உழைப்பாளிகளாக திரும்பிச் செல்வதை கண்டோம்….” (ஆதாரம்: The Whisperers, Private life in Stalin's Russia)


முடியாட்சியை ஆதரிக்கும் பழமைவாதியாக கைது செய்யப்பட்ட பாவெல், தடுப்பு முகாமில் வாழ்ந்த காலத்தில், தானாகவே மார்க்சிய தத்துவத்தில் நாட்டம் கொண்டார். மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றார்.  அவரைப் போன்ற பலரை, குலாக் முகாம் வாழ்வு மாற்றியமைத்தது. அதாவது, மறுவார்ப்புச் செய்தது. பழைமைவாதிகளாக, முதலாளித்துவவாதிகளாக குலாக் முகாம்களுக்கு சென்ற பலர், விடுதலையாகும் பொழுது கம்யூனிஸ்டுகளாக வெளியேறினார்கள். நிச்சயமாக, எல்லோரும் அரசியலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. கடைசி வரையும், தங்களது பழைய கொள்கையை மாற்றிக் கொள்ளாத குலாக் கைதிகளும் இருந்தனர்.

உண்மையில், “Gulag” என்ற சொல்லைக் கேட்டாலே பயந்து நடுங்கும் அளவிற்கு, அது ஒன்றும் வதை முகாம் அல்ல. அதனை "தடுப்பு முகாம், சிறை முகாம்" என்று அழைப்பது கூட சரியானதா என்று தெரியவில்லை. அதற்குப் பொருத்தமான சொல், ஆங்கிலத்திலோ, அல்லது பிற மொழிகளிலோ இல்லாத படியால் தான், இன்றைக்கும் குலாக் என்ற சொல்லை பாவிக்கிறார்கள். ஆனால், அந்தச் சொல்லை எதிர்மறையான அர்த்தத்தில் பாவிப்பது, ஒரு சிலரது அரசியல் நலன் சார்ந்தது.

ரஷ்யா முழுவதிலும் இருந்து, ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் குலாக் முகாம்களில் சிறை வைக்கப் பட்டிருந்தனர். குலாக் முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்டவர்கள், தமது திறமையை பரீட்சித்துப் பார்க்க வாய்ப்பளிக்கப் பட்டது. பலர், தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேறினார்கள். எத்தனையோ பேர், குலாக் முகாம் கல்லூரிகளில் படித்து, பட்டம் பெற்று, கணக்காளர்களாக, பொறியியலாளர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். அவரவர் தகுதிகேற்றவாறு ஊதியமும், சலுகைகளும் பெற்றிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கைதியாக கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு, இவை எல்லாம் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்க முடியாத வாய்ப்புகள்.

மிகைல் ஒரு பழமைவாத குடும்பப் பின்னணி கொண்டவர். திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தையும் இருந்தது. மிகைல் கட்டடவியல் கல்லூரியில் படிக்கும் காலத்தில், பிற மாணவர்களுடன் இணைந்து சோவியத் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்திருந்தார். அரச எதிர்ப்புக் கலகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு தடவை கைது செய்யப் பட்டவர். அவரது மனைவியின் வேலையும் பறிக்கப் பட்டது. கணவன் கைது செய்யப் பட்ட பின்னர், அவரது மனைவியும், மகளும் மொஸ்கோவிற்கு இடம்பெயர்ந்து சென்று வசித்தனர்.

ஒரு திறமையான கட்டிடக் கலைஞர் என்பதால், சைபீரிய தடுப்பு முகாமில் மிகைலுக்கு ஒரு வேலை கிடைத்தது. வடக்கே, ஆர்க்டிக் சமுத்திர கரையோரம் அமைந்துள்ள, ஆர்கான்கெல்ஸ்க் பிராந்தியத்தில், அது வரை காலமும் எந்த நகரமும் உருவாகி இருக்கவில்லை. புதிதாக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் இமாலயப் பணி, மிகைலிடம் ஒப்படைக்கப் பட்டது. புதிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், பாலங்கள் என்பன, மிகைல் போட்டுக் கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில், குலாக் கைதிகளாக இருந்த தொழிலாளர்களைக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டது.

மிகைலின் மனைவி, மொஸ்கோ நகரில் சுதந்திரப் பிரஜையாக வாழ்ந்து வந்த போதிலும், வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்ட முடியாமல் கஷ்டப் பட்டார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்த போதிலும், கிடைத்த சம்பளம் உணவுக்கே போதுமானதாக இருக்கவில்லை. அதே நேரம், சைபீரியாவில் கைதியாக அடைபட்டிருந்த மிகைலின் சம்பாத்தியம், அதை விட  அதிகமாக இருந்தது. அவர் அனுப்பிய பணத்தில் தான், அந்தக் குடும்பம் இறைச்சி வாங்கிச் சாப்பிட முடிந்தது. குடும்ப கஷ்டம் காரணமாக, மிகைலின் மனைவி மகளை கூட்டிச் சென்று, "சிறையிலிருந்த" தந்தையின் பராமரிப்பில் விட்டு விட்டு வந்தார். அந்தளவுக்கு, சைபீரிய தடுப்பு முகாம்களில், தாராளமான வசதி வாய்ப்புகள் இருந்துள்ளன.  (ஆதாரம்: The Whisperers, Private life in Stalin's Russia)

இதையெல்லாம் சொன்னால், இன்றைக்கு  யாரும் நம்ப மாட்டார்கள். “ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன். பல இலட்சம் மக்களை வதை முகாம்களில் போட்டு வருத்தினான். உலக வரலாற்றில் அதிகளவு மக்களை படுகொலை செய்த இனப் படுகொலையாளி….” என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் அறிவுஜீவிகள் இதையெல்லாம் கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் வாழும் உலகம் வேறு. பொய்யும், புரட்டும் நிறைந்த கற்பனா லோகத்தில் சஞ்சரிக்கின்றனர். மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியான கட்டுக் கதைகளை, கேள்வி எதுவும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள்.

குலாக் முகாம்கள் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில், பல வசதிக் குறைபாடுகளைக் கொண்டிருந்தது உண்மை தான். ஸ்டாலின் காலத்திற்கு முன்பு, ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள சைபீரியாவில், மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருந்தது. பல ஆயிரம் மைல்களுக்கு, நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களைக் கூட காண முடியாது. ஆனால், இயற்கை வளம் நிறைந்த பிரதேசம். அவற்றை பயன்படுத்தவும், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், சாதாரண தொழிலாளர்கள் முன்வரவில்லை என்பதும் உண்மை தான். குடும்பத்தைப் பிரிந்து, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று, குளிர்காலத்தில் -40°C உறை பனிக்குள் வாழ்வது என்பது கடினமானது தான்.

ஆரம்பத்தில், சைபீரிய குலாக் முகாம்களில் குடியேற்றப் பட்ட சிறைக் கைதிகள், காடுகளில் இருந்த மரங்களை தறித்து, சிறு வீடுகளை கட்டிக் கொண்டனர். அவற்றில் குடியிருந்த படியே, சுரங்கம் தோண்டினார்கள், தொழிற்சாலைகளை கட்டினார்கள், வீதிகளை செப்பனிட்டார்கள், புதிய நகரங்களை நிர்மாணித்தார்கள். சிறைக் கைதிகள் கட்டாயத்தின் பேரில் வேலை செய்தாலும், அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப் பட்டது.


சைபீரிய குலாக் முகாம்களில், தண்டனைக் காலம் முடிந்து வீடு திரும்பியவர்கள், கையில் பெருந்தொகைப் பணத்துடன் சென்றார்கள். பிற்காலத்தில், சைபீரியாவில் சுரங்கத் தொழில் செய்து, நல்ல காசு சம்பாதிக்கலாம் என்ற உண்மையை அறிந்து கொண்ட, சாதாரண உழைப்பாளிகள் பலர் புலம்பெயர்ந்து சென்றனர். அன்றைய காலத்தில், ஒரு சைபீரிய சுரங்கத் தொழிலாளியின் மாதாந்த வருமானம், மொஸ்கோ நகரில் மருத்துவராக வேலை செய்த ஒருவரது சம்பளத்தை விட அதிகமாக இருந்தது.

இன்று இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பலர் நான் எழுதியதை வாசித்து விட்டு, ஏளனமாக சிரிக்கலாம். அப்படி சிரிப்பவர்களின் அறியாமையை எண்ணி பரிதாபப் படத் தான் முடியும். நான் சொல்வதை நம்பாதவர்கள், சைபீரியாவுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் மக்களிடம் தகவல்களை கேட்டு அறியலாம். அங்கு போவதற்கு முன்னர் கொஞ்சம் ரஷ்ய மொழி படித்து வைத்துக் கொள்வது நல்லது.

ஆர்கான்கெல்ஸ்க் (Arkhangelsk), நொரில்ஸ்க் (Norilsk) போன்ற சைபீரிய நகரங்களுக்கு ஒரு தடவை விஜயம் செய்து பாருங்கள். நியூ யார்க், பெய்ஜிங் மாதிரி, பல இலட்சம் மக்கட்தொகை கொண்ட, மிகப் பெரிய நவீன நகரங்களாக எம்மை எல்லாம் பிரமிக்க வைக்கும். அந்த இடங்கள், ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்தில் வெறும் காடுகளாக இருந்தன. முதன்முதலாக குலாக் சிறைக் கைதிகள் தான் அங்கே குடியேறினார்கள். அந்தப் பகுதியில் ஏற்பட்ட தொழிற்துறை வளர்ச்சி, அதன் விளைவான நவீன நகரங்களின் நிர்மாணத்திற்கு, அவர்களது உழைப்பு பயன்படுத்தப் பட்டது.

அன்று குலாக் கைதிகளாக இருந்தவர்கள், சோவியத் அரசின் எதிரிகளாக இருந்திருக்கலாம். கம்யூனிச கொள்கைக்கு விரோதிகளாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அவர்களது பிள்ளைகள் சோவியத் அரசுக்கு விசுவாசமாக உள்ளனர். கம்யூனிச கொள்கையை சிறந்ததாக நம்புகின்றனர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அப்படி நடந்து கொள்ளுமாறு, அவர்கள் கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால், சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் பிறந்த, மூன்றாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகளும், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லையே?

ரஷ்யா, முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றிய பிறகு, நடந்த பொதுத் தேர்தல்களில் எல்லாம், அந்த தொகுதிகளில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு தான் அதிகப் படியான வாக்குகள் கிடைக்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது?  இன்றைக்கும், சைபீரியாவில் உள்ள மாநில சபைகளில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மையான பிரதிநிதிகள், கம்யூனிஸ்ட் அல்லது தீவிர இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் தான். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of the Russian Federation) இன்றைக்கும் ஸ்டாலின் புகழ் பாடும் கட்சி என்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அந்தப் பிரதேசங்களில், இன்றைக்கு வாழும் இளைய தலைமுறையினர், தமது தந்தை மார், பாட்டன் மாரை வருத்திய, படுகொலை செய்த, ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதற்காக  ஆதரிக்க வேண்டும்? நியாயப் படி பார்த்தால், ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் மிகத் தீவிரமாக வெறுக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லவா? ஆனால், யதார்த்தம் நாங்கள் நினைப்பதற்கு மாறாக அல்லவா இருக்கிறது? உண்மையில், நாங்கள் தான், மேற்கத்திய பரப்புரையாளர்களினால் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளோம்.

(தொடரும்)

பிற்குறிப்பு: 
குலாக் முகாம்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்தப் பதிவையும் வாசிக்கவும்: குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?

 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Thursday, January 09, 2014

யாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் கும்பலும்


யாழ்ப்பாணத்தில் "ஆவா குரூப்" என்ற பெயரில் இயங்கிய பாதாள உலகக் கோஷ்டியை பொலிசார் பிடித்து விட்டதாக, ஒரு செய்தி வெளியாகியது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய வாட்கள், கிரேனேட், மோட்டார் சைக்கிள்களை, பொலிஸ் பார்வைக்கு வைத்திருந்த படங்களும் வெளியாகின. இதற்கு முன்னர், தென்னிலங்கையில் மட்டுமே இது போன்ற கிரிமினல் கும்பல்கள் பிடிபட்டது பற்றிய செய்திகள் வரும். இப்போது தான், முதன் முதலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் கோஷ்டி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தக் கிரிமினல் கும்பலுக்கும், நடப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொலிசாரே அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் இயந்திரமான யாழ் பொலிஸ் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளும், அது ஒரு கிரிமினல் கும்பல் தான் என்ற ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். "கிரனேட் வைத்திருந்த படியால், அந்தக் குழுவை இலங்கை இராணுவம் தான் உருவாக்கியது." என்று சிவாஜிலிங்கம் ஒரு கருத்தைக் கூறினார். ஆனால், தீவிரமான தமிழ்தேசியவாதிகள் கூட, அவரது கருத்தை பொருட்படுத்தவில்லை. இந்த தகவலை வெளியிட்ட பிரபல சிங்கள தேசிய பத்திரிகையும், பிரபல தமிழ் தேசிய பத்திரிகையும், ஒரே மாதிரித் தான் எழுதி இருந்தன. அப்படியானால், எங்கேயோ இவ்விரண்டு அரசியல் சக்திகளுக்கும் இடையில், "ஆவா குரூப்" அல்லது அது போன்ற கிரிமினல் குழுக்கள் தொடர்பாக, பொதுவான கொள்கை உடன்பாடு ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தசாப்த காலமாக, யாழ் குடாநாட்டில் கிரிமினல் குழுக்கள் இயங்கும் தகவல், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்கனவே தெரியும். உண்மை என்னவெனில், இவ்வளவு காலமும் அது பற்றிய செய்திகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தக் கிரிமினல் குழுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். (பெரும்பாலானோர் பயத்தில் முறைப்பாடே செய்வதில்லை.) அப்போதெல்லாம், ஸ்ரீலங்கா பொலிஸ் அந்த முறைப்பாடுகளை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு வந்தது. பட்டப் பகலில், பலர் பார்த்திற்கும் போதே, பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் நிலையம் பக்கத்தில் இருந்தாலும், காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

ஊழலுக்கு பேர் போன ஸ்ரீலங்கா பொலிஸ் தான் அப்படி என்றால், ஜனநாயகத் தூண்களான தமிழ் பத்திரிகையாளர்களும் அவற்றை கண்டுகொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தமது பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் மக்களுக்கு அவற்றை தெரிவிப்பதில்லை. யாழ் குடாநாட்டில், கிரிமினல் கும்பல்கள் அட்டகாசம் செய்வதை, அறிந்தும் அறியாதது போல இருக்க வேண்டிய காரணம் என்ன? ஏனென்றால், அந்தக் கிரிமினல் கும்பல்களுக்கு பின்னணியில், கண்ணுக்குப் புலப்படாத அதிகார பலம் இருந்த காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆவா குரூப் தனது எஜமானர்கள் உத்தரவிட்ட பணியை நிறைவேற்றுவதுடன் மட்டும் நின்று கொள்ளாமல், தன்னிச்சையாக களவு, கொள்ளைகளில் ஈடுபட்டதாலேயே, இன்று பிடிபட்டு கம்பி எண்ணுகின்றனர். கிராமப்புற பண்ணையார்கள் முதல், நகர்ப்புற முதலாளிகள் வரை, தாம் சொன்ன வேலையை செய்வதற்கு மட்டும் தான் அடியாட்களை வைத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்திற்குள் அடங்கும் கிரிமினல் குற்றங்கள், காவல் துறையினாலும் "மன்னிக்கப் படும்".

அதனால் தான், முன்பு ஆவா குரூப்பின் அட்டகாசங்களை வேடிக்கை பார்த்த பொலிஸ் படை, தற்போது ஓடிப் போய் கைது செய்துள்ளது. அநேகமாக, அவர்களை பயன்படுத்திய எஜமான், தேவை முடிந்ததும் கை விட்டிருக்கலாம். அடி தடியை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள், சுயாதீனமாக சமூக விரோத செயல்களை செய்வதன் மூலம், தம்மை ஒரு "யாழ் பாதாளக் குழு" வாக தக்க வைத்துக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களை வளர்த்து விட்டவர்களே, பிடித்துக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

யாழ் பாதாள உலகக் கும்பல்களின் தோற்றத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், இருபதாண்டுகள் பின்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இலங்கையில் தாராள பொருளாதாரக் கொள்கை வந்த பின்னர், அரசு நிறுவனங்களின் ஏக போகம் மறைந்து, தனியார் தொழில் துறைக்கு கதவு திறந்து விடப் பட்டது. குறிப்பாக, அரசு நிறுவனமான இலங்கை போக்குவரத்து சபைக்கு போட்டியாக, தனியார் போக்குவரத்து சேவை ஊக்குவிக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் முதல் வைத்திருந்தவர்கள், ஒரு மினி வேன் வாங்கி சேவையில் ஈடுபடுத்தி சம்பாதித்தனர்.

தனியார் போக்குவரத்து சேவையின் துரித வளர்ச்சியினால், அதில் முதலிட விரும்புவோரின் ஆர்வமும் அதிகரித்தது. ஆனால், எல்லோரிடமும் முதலிட தேவையான பணம் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "லீஸ் கம்பனிகள்" இலங்கையில் தோன்றின. வங்கியில் கடன் எடுக்க வேண்டுமானால், பத்துக்கும் குறையாத கட்டுப்பாடுகளை கடந்து செல்ல வேண்டும்.

வங்கி கேட்கும் பத்திரங்கள், உறுதிமொழிகளை கொடுப்பதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கும். எல்லாம் இருந்தாலும், கடன் கிடைப்பது நிச்சயமில்லை. ஆனால், லீஸ் கம்பனிகளை பொறுத்த வரையில், அதெல்லாம் தேவை இல்லை. கையில் காசில்லா விட்டாலும், அவர்களிடம் இருப்பதை அடமானம் வைத்துக் கொண்டு, கடன் கொடுத்து வந்தன. வாகனங்கள் மட்டுமல்லாது, விரும்பிய விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்குவதற்கு, லீஸ் கம்பனிகள் கடன் கொடுத்தன. ஆரம்பத்தில், லீஸ் கம்பனிகளின் சுய ரூபத்தை, அப்பாவி மக்கள் அறிந்திருக்கவில்லை.

அநேகமாக, கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பிரிவினரும் லீஸ் கம்பனி விதித்த வலைக்குள் சிக்கினார்கள். ஒரு மினி வேன் வாங்கி சேவையில் விட்டால், குடும்பத்தின் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பி, அதிலே முதலிட்டார்கள். அந்தோ பரிதாபம்! பலரால், வாங்கிய கடனை குறித்த தவணைக்குள் கட்ட முடியவில்லை. இரண்டு, மூன்று மாதம் தவணைப் பணம் கட்டாமல் பாக்கி வைத்தால், அதற்குப் பிறகு தலையில் துண்டைப் போட வேண்டியது தான்.

லீஸ் கம்பனிகளின் அகராதியில் கருணை என்ற சொல்லுக்கே இடமில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் வந்து சேரா விட்டால், அடியாட்களை அனுப்பி, வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் ஆவா குரூப், அது போன்றதொரு அடியாட் படையாக செயற்பட்டிருக்க வேண்டும். (அந்தளவு தூரம் யாராவது விசாரிப்பார்களா என்பது சந்தேகமே.)

ஒவ்வொரு மாவட்டத்திலும், லீஸ் கம்பனிக்கு கிளைகள் இருப்பது போல, அடியாட் படைகளும் இருக்கின்றன. சிங்களம் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், சிங்கள அடியாட்கள் இருப்பார்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில், தமிழ் அடியாட்கள். லீஸ் கம்பனிகளின் உரிமையாளர்கள், அநேகமாக சிங்கள தரகு முதலாளிகள் தான். அவர்களுக்கு அரசாங்க மட்டத்தில் செல்வாக்கும் இருக்கும். அதனால், லீஸ் கம்பனிகள் அடியாட்களை அனுப்பி, வாகனங்களை பறித்துக் கொண்டு சென்று விட்டால், அதைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்ய முடியாது. முறைப்பாடு செய்தாலும், எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தெரியும்.

லீஸ் கம்பனிகளின் கொடுமைகளைப் பற்றி, இலங்கை அரசாங்கத்திடம் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திடமும் முறைப்பாடு செய்ய முடியாது. முதலாளித்துவ பயங்கரவாதம் அரசாளும் நாடுகளில் எல்லாம், லீஸ் கம்பனிகளால் பாதிக்கப் பட்ட மக்கள் இருக்கிறார்கள். "சுதந்திரமான, ஜனநாயக" மேற்கத்திய நாடுகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இலங்கையில் உள்ள லீஸ் கம்பனிகள் பல, உள்ளூர் முதலாளிகளால் நடத்தப் படுவதாக தெரிகின்றது. ஆனால், அவற்றில் எத்தனை நிறுவனங்களில், அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது வெளியே தெரிவதில்லை. அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதால், லீஸ் கம்பனிகளின் சொத்து விபரங்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.

1995 ம் ஆண்டு, ஸ்ரீலங்கா அரச படைகள், யாழ் குடாநாட்டை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின்னர் தான், அங்கே லீஸ் (Lease) கம்பனிகள் ஊடுருவின. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்தில் அவற்றின் செயல்பாடு எதுவும் இருக்கவில்லை. (சிங்கள மூலதனம் மட்டுமல்ல, மேற்கத்திய மூலதனம் கூட புலிகளின் தமிழீழத்தில் ஊடுருவவில்லை.)

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள், லீஸ் கம்பனிகளுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுத்து வந்தன. சிங்களப் பிரதேசங்களில், லீஸ் கம்பனி பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட சிங்கள கடனாளிகள் சிலர், தம்மிடமிருந்த வாகனங்களை புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்று விட்டார்கள். அன்று தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இலங்கையில் வேறெங்கும், குறைந்த விலைக்கு வாகனம் வாங்க முடியாது.

இதனால், தென்னிலங்கை லீஸ் கம்பனிகள், புலிகள் அமைப்புடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. உரிய பத்திரங்களை சமர்ப்பித்து, திருட்டுத் தனமாக கொண்டு வரப் பட்ட வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு, புலிகள் அனுமதித்தனர். அவற்றை அடியாட்களை வைத்து பறிக்க முடியாது. கண்ணியமான முறையில், உரிமையாளர் விபரம் சரி பார்க்கப் பட்ட பின்னரே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வாகனங்களை திரும்பப் பெற முடிந்தது. ஆனால், அது எல்லா சந்தர்ப்பத்திலும் சாத்தியப் படவில்லை. புலிகளும், ஸ்ரீலங்கா சட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை.

லீஸ் கம்பனிகளின் பிரதானமான வருமானம், கடன் வாங்குவோரின் இயலாமையில் தங்கி உள்ளது. லீஸ் கம்பனிகள் கொடுக்கும் கடனுக்கு, வங்கியை விட அதிக வட்டி வசூலிக்கிறார்கள். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதாலேயே, பலரால் கடனை அடைக்க முடிவதில்லை. மேலும், வாகனத்தின் பதிவுப் புத்தகத்தை கம்பனியில் அடமானம் வைப்பதால், கடன் கட்டி முடிக்கும் வரையில், லீஸ் கம்பனியே உண்மையான உரிமையாளராக கருதப் படுவார். இதனால், லீஸ் கம்பனிகள் சட்டப்படி கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அப்படி இருந்தும், தவணைப் பணம் கட்டாதவரின் வாகனத்தை பறித்து, இன்னொருவருக்கு ஏலத்தில் விற்று விடுகின்றன. அப்படியான நிலைமை வந்தாலும், கடன் வாங்கியவர் கடன் தொகை முழுவதையும் கட்டி முடிக்க வேண்டும்.

நிச்சயமாக, லீஸ் கம்பனிகளின் அடாவடித் தனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வது எதிர்பார்க்கத் தக்கதே. பலர் தமது சக்திக்கேற்ப எதிர்த்துப் போராடுகின்றனர். சில இடங்களில் பறிக்க வந்தவர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். சிலர் வாகனங்களை பகுதி பகுதியாக கழற்றி ஒளித்து வைக்கிறார்கள். அப்படியான கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு, ஆவா குரூப் போன்ற கிரிமினல் கும்பல்கள் பயன்படுகின்றன. தற்போது ஆவா குரூப் முழுவதையும் பிடித்து விட்டதாக கொக்கரிக்கும் பொலிஸ், அவர்களோடு தொடர்புடைய 23 வயது இளம் பெண் ஒருவரை வலைவீசித் தேடி வருவதாக அறிவித்துள்ளனர். ஆவா குரூப் பிடிபட்டவுடன், அவர்கள் இவரை காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

அநேகமாக, அவர்கள் அந்தப் பெண்ணை பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால், எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, அந்தப் பெண் லீஸ் கம்பனி ஒன்றில் வேலை செய்பவர். அவரது வேலை, கம்பனிக்கும் கிரிமினல் குழுவுக்கும் இடையில் தொடர்பாளராக செயற்படுவது. எந்த இடத்தில், எந்த வாகனத்தை பறிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை, அவர் வழங்கி வந்துள்ளார். வாகனத்தை பறித்துக் கொண்டு வந்து கொடுக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு, குறிப்பிட்ட தொகை பணம் கமிஷனாக கொடுக்கப் படும்.

ஆவா குரூப்பிடம் இருந்து கிரனேட்கள் அகப்பட்டது ஒரு பெரிய விஷயம் அல்ல. தேவைப் பட்டால், தரகு முதலாளியக் கும்பல் அவர்களிடம் நவீன ஆயுதங்களும் கொடுத்து விட்டிருக்கும். ஏனென்றால், யாழ் குடாநாட்டில் இன்னும் சில இடங்களில், மக்களின் போர்க் குணாம்சம் வலுவாக உள்ளது. குறிப்பாக, தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்த, பாட்டாளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில், சாதாரண கிரிமினல்கள் ரவுடித்தனம் காட்ட முடியாது. ஆவா குரூப்பாக இருந்தாலும், ஆவன்னா குரூப்பாக இருந்தாலும், ஊர் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு பிடித்துக் கட்டிப் போட்டு விடுவார்கள். அப்படியான கிளர்ச்சிகரமான பகுதிகளை சமாளிப்பதற்கு, ஆயுத பலத்துடனான அடியாட் படையை அனுப்ப வேண்டிய தேவை, தரகு முதலாளிகளுக்கு உள்ளது.

முப்பதாண்டு கால யுத்தத்தால் பாதிக்கப் பட்ட யாழ்ப்பாணத்தில், இது போன்ற கிரிமினல் குழுக்கள் இயங்குவது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். "முதலாளித்துவம் எப்போதும் போர்களை விரும்புகிறது" என்பது ஒரு நவீன கால உலக யதார்த்தம். போர் நடக்கும் காலத்தில், ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கலாம் என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல. போரில் அனைத்தையும் இழந்து, மீளாத் துயருக்குள் சிக்கி வாடும் மக்களை கடன் என்ற பொறிக்குள் தள்ளி விடுவதும் இலகு. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவே, அந்த நாட்டு மக்களிடம் உள்ள கடனில் தான் உயிர் வாழ்கின்றது. 

ஒரு மனிதரிடம் இருக்கும் கடன், முதலாளிகளின் கைகளில் பணமாக புரள்கின்றது. ஒரு பக்கத்தில் மக்களின் கடன் பெருகிக் கொண்டிருக்கையில்,மறு பக்கத்தில் அது மூலதனமாக திரட்சி அடைகின்றது. பொருளாதார தத்துவங்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக் கடினமானது. ஆனால், அவர்கள் தான் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். "கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று பாடிய கம்பர், அதனை "இலங்கை மக்கள்" என்று திருத்தி எழுதி இருக்க வேண்டும்.