Sunday, December 17, 2023

மியான்மரில் உயிர்த்தெழுந்த மக்கள் விடுதலைப் படை

 


மியான்மரில் உயிர்த்தெழுந்த கம்யூனிச விடுதலை இயக்கம். மியான்மரில் 2021 ம் நடந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து, அங்கு பல இயக்கங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னாள் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) உருவாக்கிய மக்கள் விடுதலைப் படையும்(PLA) ஒன்று. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

நிச்சயமாக இது எண்பதுகளில் இயங்கிய பழைய PLA அல்ல. எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய மூத்த கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில், இளைய தலைமுறையினரால் உருவாக்கப் பட்ட புதிய மக்கள் விடுதலைப் படை இது. அவர்களுடன் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 2 வருடங்களுக்கு முன்னர், 32 இளைஞர்களால் உருவாக்கப் பட்ட மக்கள் விடுதலைப் படையில் இன்று 1000 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் உள்ளனர். புதிய PLA, பெரும்பான்மையின பர்மியர்களைத் தவிர, பிற மொழிச் சிறுபான்மையினங்களை சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

உண்மையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த தலைவர்களே புதிய கம்யூனிச இராணுவத்தை வழிநடத்துகின்றனர். மியான்மரில் கம்யூனிச மீள் உயிர்ப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். (எண்பதுகளில் நடந்த போராட்டத்தின் போது கட்சியின் தலைவர்களாக பெரும்பாலும் பர்மியர்களே இருந்தனர்.) விதிவிலக்காக காரென் சிறுபான்மையினத்தவரின் பிரதேசத்தில் மட்டும் முரண்பாடு நிலவுகிறது. ஏனெனில் அங்கு வலதுசாரிய காரென் தேசியவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது.

கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், பிற விடுதலை அமைப்புகளுடனான நட்புறவு. குறிப்பாக இராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் தற்போது நிழல் அரசொன்றை நடத்துகின்றனர். அவர்கள் மூலம் PLA க்கு நிதி உதவி கிடைக்கிறது. இதை விட மறைமுகமான சீன உதவியும் இருக்க வாய்ப்புண்டு. அதை உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், வடக்கில் நீண்ட காலமாக கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்கும் சிறுபான்மையின தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சீன உதவி கிடைப்பது இரகசியம் அல்ல.

புதிய மக்கள் விடுதலைப் படை ஏற்கனவே பல இடங்களை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு உடனடியாக தமது கம்யூனிச கொள்கைகளை பரப்புரை செய்யவில்லை. "கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவார்கள்" என்று மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஏற்கனவே மியான்மர் இராணுவ அரசு மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்துள்ளமையும் ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன்னர் மியான்மர் இராணுவம் ஒரு மிகப் பலமான கம்யூனிச விடுதலைப் படையை எதிர்த்து போரிட்டமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

Saturday, December 02, 2023

தயவுசெய்து ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசாதீர்கள்!

 

தோழர் வே. பாலகுமாரின் எழுத்துக்களை தொகுத்து நூலாக வெளியிட்டமை நல்ல விடயம். ஆனால், சுமார் 15 வருடங்களாக ஈழப் புரட்சி அமைப்பு (EROS) என்ற மார்க்சிய லெனினிஸ இயக்கத்தின் தலைவராக இருந்த ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "சிறப்பு உறுப்பினர்" என தரம் தாழ்த்தி அவமானப் படுத்தி இருக்கத் தேவையில்லை. இது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரத்தை சிறுமைப்படுத்தியதாகவே கருத இடமுண்டு. அநேகமாக விற்பனையை நோக்கமாக கொண்டு அவ்வாறு தலைப்பிட்டிருக்கலாம்.

வே. பாலகுமார் கடைசி வரையில் ஒரு புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்களும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது மட்டுமல்ல இறுதி வரை புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை சந்தித்து பேசிய பாலகுமார் குழுவினர், பொது மக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக போர் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு 300 திரைப்பட கேசட் கொடுத்து தனது முடிவு என்னவென தெரிவித்தார். "தற்கொலைப் பாதையை நோக்கி செல்கிறார்கள்" என்று நம்பிக்கைக்குரிய சிலரிடம் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாலகுமார் குடும்பத்தினர் நந்திக் கடலில் புலிகளிடம் பிடிபட்டு திருப்பி அனுப்ப பட்டனர். கடைசியில் போர் முடிந்து புலிகளின் தலைவர்களும் சரணடைந்த நேரத்தில் தான் பாலகுமாரும், மகனும் இராணுவத்தில் அகப்பட்டனர். அதனால் இராணுவம் பாலகுமாரையும் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதி இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எந்த தகவலும் தெரியாத படியால் இராணுவம் கொன்றிருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது.

பிற்குறிப்பு: 
ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசும் அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவும்.