Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts
Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts

Friday, December 23, 2016

தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஆறாம் பாகம்)

 "ஈழத் தமிழர்கள் அஹிம்சா வழியில் போராடி, அடிக்கு மேல் அடி வாங்கியதால் தான் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள்..." இவ்வாறு இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அன்றைய நிலவரம் அப்படி இருக்கவில்லை. அஹிம்சா வழிப் போராட்டம் எனும் பாராளுமன்றப் பாதையை மட்டுமே நம்பியிருந்த தமிழ்த் தேசியவாதிகள், 1982 ம் ஆண்டு வரையும் பலமான சக்தியாக இருந்தனர். விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் போராட்டத்தை நம்பிய இயக்கங்கள், முதலில் அஹிம்சா வழி தமிழ்த் தேசியவாதிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டி இருந்தது.

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், மீண்டும் பாராளுமன்ற அரசியல் பாதையை நம்பியிருக்க வைக்கப் பட்டுள்ளனர். அன்றிருந்த தலைமுறையினர் பாராளுமன்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது மாத்திரமே தமது அரசியல் கடமை என்றிருந்தார்கள். இன்றைய தலைமுறையினரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பசிக்கு தீனி போடுவது போல, ஊடகங்களும் அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பின்னர் அதுவே திண்ணைப் பேச்சாக விவாதிக்கப் படும்.

நான் இருபது வருட புலம்பெயர் வாழ்வுக்குப் பின்னர் ஊருக்கு திரும்பிச் சென்ற பொழுது, அங்கிருந்த மக்களின் அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதை நேரில் கண்டேன். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான உதயன் பத்திரிகை, யாழ் குடாநாட்டில் பிரதானமான கருத்துருவாக்கியாக இருக்கின்றது. அது உண்மையை எழுதுகிறதா, பொய் எழுதுகிறதா என்று ஆராயாமல், அப்படியே நம்பும் அளவிற்கு மக்கள் உள்ளனர்.

இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் பொழுது, எண்பதுகளில் வாழ்ந்த தலைமுறையினர் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டு சிந்தித்தனர் என்று கூறலாம். அன்றைக்கும் ஈழநாடு, சுதந்திரன் ஆகிய இரண்டு தினசரிப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் கருத்துருவாக்கிகளாக செயற்பட்டன. இரண்டுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தாலும் சிறியளவு வித்தியாசமும் இருந்தது.

ஈழநாடு யாழ் மையவாத பூர்ஷுவா வர்க்கத்தின் மனநிலையை பிரதிபலித்தது. அன்றைய நிலையில் எந்த இயக்கத்தையும், கட்சியையும் ஆதரிக்காமல் "நடுநிலையாக" நடந்து கொண்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்த போது, அது வெளிப்படையாகவே இந்திய ஆதரவு நிலை எடுத்தது. 1987 ம் ஆண்டு, புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டதும், ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.

புலிகள் நடத்தி வந்த நிதர்சனம் தொலைக்காட்சி நிலையம், ஈழமுரசு பத்திரிகை காரியாலயமும், இந்தியப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. அதற்குப் பதிலாக, புலிகள் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கு குண்டு வைத்து தகர்த்தார்கள். அந்த சமபவத்திற்குப் பின்னர் புலம்பெயர்ந்த ஈழநாடு, பாரிஸ் நகரில் இருந்து வெளியானது. அப்போது அது புலி ஆதரவு நிலை எடுத்திருந்தது.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னார். ஒரு (இங்கே ஈழத்திற்கான) விடுதலைப் போராட்டமும் அப்படித் தான். மனித உரிமைகள், தார்மீக ஆதரவு எல்லாவற்றையும் சரி பார்த்து போராட்டம் நடப்பதில்லை. ஒரு காலத்தில் பெரும்பான்மை ஈழத் தமிழரின் ஆதரவைப் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை புலிகள் சுட்டுக் கொல்ல முடிந்தது. அதற்குக் காரணம் அன்றைய மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மனமாற்றம் தான்.

2016 ல் தீர்வு பெற்றுத் தருவதாக சொன்ன சம்பந்தனையும், கூட்டமைப்பையும் விமர்சிக்கும் பலர் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். ஒரு சாதாரணமான பூர்ஷுவா (முதலாளித்துவ) வர்க்க அரசியல் கட்சியிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் அள்ளி வீசுவதும், வென்ற பின்னர் அதை மறந்து விடுவதும் பூர்ஷுவா கட்சிகளுக்கு வாடிக்கையான விடயங்கள். உலகம் முழுவதும் அப்படித் தான் பாராளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகின்றது.

1977 ம் ஆண்டு, கூட்டணி தேர்தலில் வென்றால் தமிழீழம் வாங்கித் தருவதாக ஏமாற்றியது. அதை விட பெரிய துரோகத்தையா இன்றைய கூட்டமைப்பு செய்துள்ளது? ஆனால், அன்று கூட்டணி சொன்னதை உண்மையென்று நம்பி வாக்களித்த மக்கள், அதுவும் வழமையான தேர்தல் வாக்குறுதி என்று அறிந்து கொண்டதும் கொந்தளித்தார்கள்.

ஒரு தடவை, எங்கள் ஊரில் நடந்த கூட்டணிக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்குமுக்காடினார்கள். அது 1982 ம் ஆண்டு என நினைக்கிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரட்ணம் பேசிக் கொண்டிருந்தார். "தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கதை என்னாச்சு?" என்று பலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த நவரட்ணம் "தம்பி மாருக்கு நிலைமை விளங்குவதில்லை.... இது கத்தி முனையில் நடப்பது போன்றது..." என்று சொல்லிச் சமாளித்தார்.

தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது சுகபோக வாழ்க்கைக்கு தேர்தல் அரசியல் அவசியமாக இருந்தது. அதனால் காலத்திற்கு காலம் புதுப்புது வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்தனர். இந்த உண்மைகள் சாதாரணமான பாமர மக்களுக்கும் தெரிய வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

1982 ம் ஆண்டு நடந்த மாவட்ட சபைத் தேர்தல் தான், ஈழப்போர் தொடங்க முன்னர் இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் ஆகும். தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கூட்டணி, மாவட்ட சபைகளை ஒரு சிறந்த தீர்வாக காட்டிக் கொண்டிருந்தது. அனைத்து ஆயுதக் குழுக்களும் அதை பகிஷ்கரித்திருந்தன. வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கா விட்டால், சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று புலிகள் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தனர்.

எமது ஊரில் மாவட்ட சபைக்கு போட்டியிட்ட கூட்டணி உறுப்பினர்கள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயமுற்றார். அவர்களை சுட்டவர்கள் புலிகள். யாழ்ப்பாணத்தில் காவல் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். புளொட் இயக்கம் அந்தத் தாக்குதலை நடத்தியது என நினைக்கிறேன். அதன் எதிர்விளைவாக, சிங்களப் பொலிசார் வெறியாட்டம் போட்டனர். யாழ் நகரில் இருந்த கடைகள் எரிக்கப் பட்டன. அப்போது தான் யாழ் பொது நூலகமும் எரிக்கப் பட்டது.

அந்தக் காலங்களில், கூட்டணிக் கட்சி இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் ஆவணப் படுத்தி வந்தது. அன்று யாழ் நகரில் நடந்த கலவரக் காட்சிகளை புகைப்படங்களாகவும், உணர்ச்சியை தூண்டும் வசனங்களாகவும் கொண்ட நூலாக வெளியிட்டது. அதன் பெயர் நினைவில்லை. அந்த நூல் வெளிவந்த உடனேயே கடைகளில் விற்றுத் தீர்ந்தது. பாடசாலையில் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அதை வாசித்தார்கள்.

சிங்களவர்களின் கொடுமைகளை கண்டு தமிழர்கள் கொதித்தெழ வைப்பது தான் இது போன்ற பிரசுரங்களை வெளியிடுவோரின் நோக்கமும். அன்று அது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்க உதவியது. பிற்காலத்தில் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு போராளிகளை சேர்க்க உதவியது. தமிழ் மக்களின் இன அடிப்படையிலான உணர்வுகளை தூண்டி விட்டால் போதும், தமிழீழம் கிடைத்து விடும் என்று கூட்டணி நம்பியது. அதையே பிற்காலத்தில் புலிகளும் நம்பினார்கள். இன்றைக்கு புலி ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும் அதே பாணியிலான அரசியலைத் தான் பின்பற்றுகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். எண்பதுகளில் பாராளுமன்றப் பாதையை முற்றிலும் நிராகரித்த புதிய தலைமுறை ஒன்று உருவாகி இருந்தது. அது ஒரு புரட்சிகரமான சமூக மாற்றம். பத்து வருடங்களுக்குப் பின்னர், ஆயுதப் போராட்டத்தையும்(பாராளுமன்ற)அரசியல் போராட்டத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கப் பழகிய சமூகமாக மாறி இருந்தது. இந்த மாற்றத்தை புலிகள் கூட காலந் தாழ்த்தி தான் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் அவசர அவசரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் பலனை அனுபவிப்பதற்குள் இறுதிப் போர் வந்து எல்லாம் முடிந்து போனது.

தமிழ்த்தேசிய சித்தாந்தவாதிகள் பரப்புரை செய்வது போன்று "அஹிம்சைப் போராட்டத்தில் பொறுமையிழந்த" தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை. இது புறக் காரணிகளை கவனத்தில் எடுக்காத ஒரு குறுகிய மனப்பான்மை. தமிழ்த்தேசியவாதிகள், உள்முரண்பாடுகள் காரணமாக, "அஹிம்சாவாதிகள், ஆயுதப் போராளிகள்" என்று இரண்டாகப் பிரிந்து உட்பகை கொண்டு மோதியதை மூடி மறைப்பது ஏன்? அது மட்டுமல்ல, தலைமுறை இடைவெளியும் முக்கிய பங்காற்றியது. அன்றைய இளைய தலைமுறையினர் பாராளுமன்ற பாதையை புறக்கணித்து ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தமைக்கு சர்வதேச நிலவரமும் காரணமாக இருந்தது. இன்றும் கூட, தமிழ்க் குறுந்தேசிய வாதிகள் இது போன்ற விடயங்களை கவனத்தில் எடுப்பதில்லை. இயங்கியல் போக்கை மறுத்து, வெறும் சித்தாந்தப் பற்று மட்டுமே விடுதலையை பெற்றுத் தரும் என்பது ஒரு மாயை.

கியூபாவில் பிடல்காஸ்ட்ரோ குழுவினர் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். அதே பாணியை பின்பற்றி நிகராகுவாவும் விடுதலை அடைந்தது. இந்தியாவில் நக்சலைட்டுகளின் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் தாக்குதல்கள் பற்றி, இந்திய வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. அதே நேரம், தென்னிலங்கையில் தோல்வியுற்ற ஜேவிபி கிளர்ச்சி பற்றி, "சேகுவேராவாதிகளின் போராட்டம்" என்ற தலைப்பில் தமிழ் மக்களால் ஆய்வு செய்யப் பட்டது. இவை எல்லாம் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்தவில்லை என்று சொல்ல முடியுமா?

இந்த இடத்தில் மீண்டும் ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதுவும் ஒரு ஈழத் தேசியவாத இயக்கம் தான். ஆனால், மார்க்சிய லெனினிச கோட்பாடுகளை கற்றறிந்த படியால், ஈழப் போராட்டத்தில் புதிய ஒளியை பாய்ச்சி இருந்தனர். அறுபதுகளில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டம் தான் தமிழர்களின் முதலாவது ஆயுதப் போராட்டம் என்று கூறி வந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுதும், பொதுக் கூட்டங்களிலும், அவர்கள் அந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தனர். இன்று இவ்வாறான கடந்த கால வரலாற்றை மறந்து விட்ட அரசியலற்ற தலைமுறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, December 22, 2016

ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (ஐந்தாம் பாகம்)

மேட்டுக்குடி சிந்தனை கொண்ட மத்திய தர வர்க்கத்தினர், வலதுசாரி அரசியல் கொள்கையை ஆதரிப்பது அதிசயமல்ல. இடதுசாரிகளை தமது எதிராளிகளாக கருதி வெறுப்பதும் அவர்களது அடிப்படை வர்க்கக் குணாம்சம். அதற்காக, "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அளவுக்கதிகமானது. வலதுசாரிகளுக்குப் பிடிக்காதது எல்லாம், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பிடிக்கக் கூடாது என நினைப்பது அபத்தமானது.

அந்தக் காலகட்டத்தில் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக இருந்தார். விடுதலைப் புலிகள், மற்றும் புளொட் ஆகியவற்றின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எயர் லங்காவுக்கு சொந்தமான அவ்ரோ விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், பத்திரிகைகளில் செய்திகளை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்,அதிலிருந்து விலகி ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தார். மாணவர்கள் அவரை "துரோகி" என்று சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று எமது அரசியல் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே தீர்மானித்தது. அவர்கள் யாரையெல்லாம் துரோகி என்றார்களோ, நாங்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகினோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அஹிம்சா வழியில் போராடும் மிதவாதக் கட்சியாகக் காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல. வலதுசாரி கூட்டணித் தலைவர்கள் இனவாதமும் பேசினார்கள், தீவிரவாதத்தையும் ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி இயங்கிய காலம் ஒன்றிருந்தது. இரண்டு தரப்பிலும் அது தொடர்பான புரிந்துணர்வு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டது. புலிகள் தனியாக இயங்கினாலும், அரசியல் கொள்கைகள் யாவும் கூட்டணியிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டவையாக இருந்தன.

ஆயுதப் போராட்ட அரசியல் தனது கையை விட்டுப் போவதை கூட்டணி விரும்பவில்லை. தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலிகள் பிரிந்து சென்று விட்ட படியால், கூட்டணியினர் இன்னொரு ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர். இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, சில இளைஞர்களை திரட்டி தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது சம்பந்தமான திட்டங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து வள்ளுவன் என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். எதிர்பாராத விதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வள்ளுவன் கைது செய்யப் பட்டார். அதனால், கூட்டணி ஆயுதக் குழு அமைக்கும் யோசனையும் கைவிடப் பட்டது.

வள்ளுவன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற படியால், எனக்கு இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அந்தளவுக்கு ஈழப் போராட்டத்திற்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது ஒரே வகுப்பில் கூடப் படித்த மாணவன் ஒருவனின் அண்ணா தான் ஒபரோய் தேவன். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவனான ஒபரோய் தேவன், தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற சிறிய இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1982 ம் ஆண்டளவில் புலிகளால் காரணமின்றி சுட்டுக் கொல்லப் பட்டார். புலிகள் அதனை தவறுதலாக நடந்த விபத்து என்றார்கள்.

யாழ் இந்து விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவன், எனக்கு சீனியரான திலீபன். (உண்ணாவிரதமிருந்த திலீபன் அல்ல.) வன்னியில் கண்டாவளையை சேர்ந்தவர். அந்தக் காலத்தில், ஓரளவு வசதியான, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ் இந்துக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.

திலீபன் படிக்கும் காலத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்தவர். எங்களை மாதிரி சாதாரண பத்திரிகைச் செய்திகளை வாசித்து விட்டு கூட விவாதிப்பதில்லை. அந்தளவுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவர். அவர் பின்னர் கேடில்ஸ் என்ற பெயரில் புலிகளின் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக வந்திருந்தார்.

சாவகச்சேரி பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் கட்டுமானத்தில் கேடில்சின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அரசியல் ஆர்வமற்ற அப்பாவியான திலீபன், மிகக் குறுகிய காலத்திற்குள் எவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட கேடில்ஸ் ஆக மாறினான் என்பது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இவரும் வேறு சில மூத்த புலி உறுப்பினர்களும், கைதடியில் தவறுதலாக நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப் பட்டனர்.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொதுக் கூட்டங்கள் நடத்தின. அதற்கென பயிற்றுவிக்கப் பட்டவர்கள், கிராமம் கிராமமாக சென்று வந்தனர். பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து சமாளிப்பதற்கு அசாத்தியமான திறமை வேண்டும். சாதாரணமான பாமர மக்களிடம் இருந்தும் பலதரப் பட்ட கேள்விகள் எழும்.

ஒரு தடவை, சரசாலை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஈரோஸ் இயக்கத்திற்காக சின்ன பாலா கூட்டம் நடத்த வந்திருந்தார். அங்கு இருந்தவர்களும் சாதாரணமான ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் தான். அப்போது யாழ்நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான். அனுபவம் மிக்க போராளியான சினபாலாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமிருந்த காலத்தில் இயங்காமல் நின்று விட்ட, தமிழ் இளைஞர் பேரவை பற்றிய பல தகவல்களையும் அப்போது தான் அறிந்து கொண்டேன்.

ஈரோஸ், ஈபிஆர்எல்ப், புளொட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள், தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. (அப்போது புலிகளும் மார்க்சிச-லெனினிசம் பேசினார்கள்.) அவை எல்லாம் வழமையான தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தான். 

எது எப்படி இருப்பினும், இடதுசாரி- தேசியவாத இயக்கங்கள் நடத்தும் பொதுக்   கூட்டங்களில் தான் அதிகமான அரசியல் விவாதங்கள் நடக்கும். அன்றைய காலங்களில் தமிழ் உழைக்கும் வர்க்த்தினர் எழுப்பிய அரசியல் கேள்விகள் சில: 
- இந்தியா படை அனுப்பி தமிழீழம் வாங்கித் தருமா?
- சிறிலங்கா அரசு அமெரிக்க சார்புடையது என்பதால் சோவியத் யூனியன் தமிழருக்கு உதவுமா? 
- இலங்கையில் ஏற்கனவே இருக்கும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்? 
- ஜேவிபி உடன் தந்திரோபாய கூட்டு வைக்க முடியுமா?
- எங்களது போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பார்களா? 

மேற்படி கேள்விகளுக்கு ஒவ்வொரு இயக்கமும் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தன. சாதாரண பாமர மக்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்புணர்வு எந்தளவு முற்போக்காக இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இங்கே அவற்றைக் குறிப்பிட்டேன். பிற்காலத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை பரப்பி வந்தன. அந்தக் கருத்தியல் ஆக்கிரமிப்பின் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது.

எந்த இனமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தெரிந்தால், அந்த உயிர் இழப்புகளுக்காக பரிதாபப் பட்ட சிங்களவர்களை கண்டிருக்கிறேன். அரசும், ஊடகங்களும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால் தான் இந்த உணர்வு வெளித் தெரிவதில்லை. அதே மாதிரி, சிங்களக் கிராமங்களிலும் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களுக்காக இரக்கப் பட்ட தமிழர்களையும் கண்டிருக்கிறேன். "அவர்களும் எம்மைப் போன்ற மக்கள் தானே?" என்பது சாதாரணமான தமிழ் உழைக்கும் மக்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம்: "என்னது? ஜேவிபியுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து போராடுவதா? ஐயையோ! அது ஹராம் ஆச்சே? அபச்சாரம்! அபச்சாரம்!!" என்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளலாம். அது தமிழ் மேட்டுக்குடியினரின், வலதுசாரி  அரசியல் கண்ணோட்டம். அதற்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. 

பிற்காலத்தில் ஜேவிபி ஒரு வலதுசாரிக் கட்சியாகி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் இனவாதம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. அது பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கிகள், "ஜேவிபி ஒரு இனவாதக் கட்சி" என்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரிந்த விடயம். 

ஆனால், ஜேவிபி யும் அதே பாணியிலான அரசியலை முன்னெடுத்தது என்பது பலருக்குத் தெரியாத விடயம். அதாவது, "புலிகள் ஒரு இனவாத இயக்கம்" என்று தென்னிலங்கையில் ஜேவிபி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இது போன்ற வழமையான தேர்தல் அரசியலுக்கும், அதற்குமப்பால் உள்ள மக்கள் அரசியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு. வட, கிழக்கு மாகாணங்களில் புலிகள் உட்பட பல ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால், அரச படைகள் நிலைகுலைந்து போயிருந்தன. அதே காலட்டத்தில், தென்னிலங்கையில் ஜேவிபி யும் ஆயுதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதனால், நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படையினர் எல்லோரும் துப்பாக்கிகள் வைத்திருக்குமளவிக்கு பலமாக இருக்கவில்லை. அரசு வடக்கில் தோன்றிய கிளர்ச்சியை நசுக்குவதற்காக படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை புதிதாக படையில் சேர்த்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெருமளவு ஜேவிபி உறுப்பினர்களும் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவு ஜேவிபி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை, அன்று பல ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இருந்தன. இது தொடர்பாக ஏதோ ஒரு இயக்கம், புளொட் என்று நினைக்கிறேன், பகிரங்கமாக துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது. அன்று தமிழ் மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதற்காக அவர்கள் கூறிய காரணம் யதார்த்தமானது.

பெரும்பான்மை சிங்கள இனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசை எதிர்த்துப் போரிட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் தமிழீழம் காணலாம் என்பது ஒரு கடினமான விடயம். அதை சாத்தியமாக்குவதற்கு சிறந்த தந்திரோபாயம் அவசியம். வடக்கில் ஈழ விடுதலை இயக்கங்களும், தெற்கில் ஜேவிபியும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்தால், சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது.

அன்றிருந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இது தான். புலிகளுக்கும், ஜேவிபிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், தமிழீழம் வேண்டுமென்றால் இது போன்ற தந்திரோபாய கூட்டு அவசியமல்லவா? தென்னிலங்கையில் ஜேவிபியின் போராட்டம் வெற்றி பெற்று அரசு கவிழுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் தமிழீழம் பிரகடனம் செய்வது சாத்தியமாகும் அல்லவா? 

இந்த நட்புறவை பேணுவதற்காக, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. சாதாரண தமிழ் மக்கள் ஜேவிபியையும், புலிகளையும் அரச இயந்திரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரே மாதிரியான கெரில்லா இயக்கங்களாகவே கருதினார்கள். அரச ஒத்தோடிகளான தமிழ் வலதுசாரிகள், ஜேவிபி வெறுப்புப் பிரச்சாரம் மூலம் ஈழக் கோரிக்கையை தோற்கடித்தனர் என்பதே உண்மை! எந்த சந்தர்ப்பத்திலும், தமிழ் வலதுசாரிகள் சிறிலங்கா  அரசைக் கவிழ்க்க நினைக்கவில்லை. அதுவும் மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஈழப் போர் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக காய் நகரத்தி விடுதலைப் புலிகளை தனது வலைக்குள் விழ வைத்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுடன் மோத வைத்தது. இதன் மூலம், "இந்தியா வந்து ஈழம் பெற்றுத் தரும்" என்று காத்திருந்த தமிழ் வலதுசாரிகள் தலையில் மண்ணள்ளிப் போட்டது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4.  ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?

Wednesday, September 28, 2016

டெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன?


ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் இருந்தது என்று சொன்னால் இன்று பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அது தான் உண்மை. ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து விடுதலை இயக்கங்கள் இயங்கின. அவற்றில் புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் பெரிய அளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுமே கொள்கை அளவில் வலதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொண்டன. நடைமுறையில் இராணுவவாதத்தை பின்பற்றி வந்தன.

1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு பின்னர், ஐந்து இயக்கங்களுக்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சியும், நிதியும், ஆயுதங்களும் வழங்கியது. இருப்பினும், டெலோவுக்கு அதிக கவனிப்பு கிடைத்து வந்தது. டெலோ எந்தளவுக்கு இந்திய ஆதரவைப் பெற்றிருந்தது என்பது, அவர்கள் நடத்திய பிரமிக்கத் தக்க தாக்குதல்களில் இருந்து வெளித் தெரிந்தது. இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நடந்த மிகப் பெரிய கெரில்லாத் தாக்குதல்கள் அவை.

1984 ம் ஆண்டு, நவம்பர் மாதம், டெலோ போராளிகளின் அதிரடி நடவடிக்கையாக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தாக்கப் பட்ட படியால், அதை மேலும் பலப்படுத்தி பெருமளவு இராணுவப் - பொலிசாரை குவித்து வைத்திருந்தனர். டெலோவின் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான பொலிசார் கொல்லப் பட்டனர். பொலிஸ் நிலைய கட்டிடம் தகர்க்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து உதவிக்கு வந்த படையினரின் வாகனம் கைதடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டது. அதிலும் சில படையினர் கொல்லப் பட்டனர்.

மேற்படி தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகள் டெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. டெலோ போராளிகள் தம்முடன் வீடியோ படப்பிடிப்பாளர்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தாக்குதல் அதுவாகும். பிற்காலத்தில் புலிகள் அந்தப் பாணியை பின்பற்றி, எல்லாத் தாக்குதல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

தாக்குதல் சம்பவங்களை காட்டும் வீடியோக்களை, புலிகள் தமது பிரச்சாரத்திற்கு திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான், அன்று டெலோவும் நடந்து கொண்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் வீடியோவை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று காட்டினார்கள். இந்தப் பிரச்சார நடவடிக்கையால் ஏராளமான இளைஞர்களை அணிதிரட்ட முடிந்தது. பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களும், கொள்கை, கோட்பாடுகளை விட, இராணுவ சாகசங்களுக்கு மயங்குபவர்கள் தான். ஆன படியால், அன்று டெலோவுக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1985, ஜனவரி, முருகண்டியில் டெலோ வைத்த நிலக்கண்ணி வெடியில், கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் வண்டி சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த எழுபதுக்கும் பேற்பட்ட படையினரும், பொது மக்களும் கொல்லப் பட்டனர். ஆயிரம் கிலோ எடையுடைய ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்ட படியால், பல ரயில் பெட்டிகள் தகர்க்கப் பட்டன.

அன்று டெலோ நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாகிய மாதிரி, ஏனைய இயக்கங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அந்தளவு வெடி மருந்துகளை பயன்படுத்தும் ஆயுத பலம், அன்று வேறெந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை. அதன் அர்த்தம், இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து டெலோவை வளர்த்து விட்டிருந்தது. உண்மையில், அன்றைய சூழலில் டெலோ எல்லாவற்றிலும் பலமான இயக்கமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

டெலோவின் வளர்ச்சி எந்தளவு துரித கதியில் நடந்ததோ, அந்தளவு வேகத்தில் அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. ஒரு இயக்கம் திடீரென வீக்கமடைவது நல்லதல்ல என்று அப்போதே பொது மக்கள் பேசிக் கொண்டனர். ஆயுத பலமும், போராளிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்த படியால் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கியது. யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல சமயங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு டெலோவின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.

தலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஒரு நல்ல மனிதர் என்று பிற இயக்கங்களாலும் மதிக்கப் பட்டு வந்தார். ஆனால் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்த யுத்த பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஒவ்வொரு தளபதியும் தமக்கென தனியான பிரதேசத்தையும், விசுவாசமான போராளிகளையும் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.

தாஸ், பொபி ஆகிய இரண்டு தளபதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடைந்து மோதல் நிலைக்கு வந்தது. "பொபி குறூப்", "தாஸ் குறூப்" என்று அழைக்கப் படுமளவிற்கு முரண்பாடுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. கல்வியங்க்காடும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் பொபி குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது. அதே மாதிரி, நெல்லியடியும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாஸ் குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது.

இதற்குள் பிரதேசவாதமும் மறைந்திருந்தது. பொபி குறூப் யாழ் நகரை அண்டிய வலிகாமம் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. தாஸ் குறூப் வட மராட்சிப் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. இருப்பினும் கல்வியங்காடு டெலோவின் தலைமையகமாக கருதப் பட்டது. அங்கு தான் டெலோவின் மிகப்பெரிய முகாம் இருந்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, குறிப்பாக திருகோணமலையை சேர்ந்த போராளிகளும் அதிகளவில் தங்கியிருந்தனர். அத்துடன் தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அங்கு தானிருந்தார்.

யாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்த படியால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தன. எல்லா இடங்களிலும் ஆயுதமேந்திய போராளிகள் காணப் பட்ட சூழலில், வழமையான கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டத் தயங்குவார்கள். ஆகையினால், இது இயக்கங்கள் நடத்திய கொள்ளை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

ஏற்கனவே தனியாரின் வாகனங்களை அடாவடித்தனமாக பறித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இயக்கங்களும் அதைச் செய்துள்ளன. ஆயுத முனையில் வாகனங்களை பறித்துச் சென்று விட்டு, அவர்களது நோக்கம் நிறைவேறியதும் திருப்பிக் கொடுப்பது வழமையாக இருந்தது. ஆனால், டெலோ வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். வாகனம் எங்கே என்று உரிமையாளருக்கும் தெரிவிப்பதில்லை. இது உண்மையில் ஒரு வழிப்பறிக் கொள்ளை.

இதைத் தவிர வசதி படைத்தவர்களின் வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் எப்போதும் முகமூடி அணிந்திருந்த படியால், அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் பொழுது, வீட்டிலிருந்தவர் அடையாளம் கண்டு விட்டதால், அவரை சுட்டுக் கொன்று விட்டனர். ஊர் முழுவதும் ரோந்து சுற்றும் இயக்கப் போராளிகளுக்கு தெரியாமல், எந்தத் திருடனும் வர முடியாது என்பது பொது மக்களின் அபிப்பிராயம். அத்துடன் கொள்ளையரின் கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.

இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று, நல்லூர் கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஆகிய மிகப்பெரிய பணக்கார கோயில்களில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அந்தளவு துணிச்சல் இயக்கங்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். அத்துடன் கோயில்களுக்கு அருகாமையில் இயக்கங்களின் சோதனைச் சாவடிகளும் இருந்தன. அவற்றை மீறி எந்தத் திருடனும் வர மாட்டான்.

துர்க்கையம்மன் கோயில் கொள்ளை டெலோவாலும், நல்லூர்க் கோயில் கொள்ளை புலிகளாலும் நடத்தப் பட்டதாக பொது மக்கள் நினைத்தற்கான காரணமும் அது தான். (தெல்லிப்பளை கோயில் கொள்ளையும் புலிகளால் நடத்தப் பட்டதாக பின்னர் ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.)

பிற்காலத்தில், புலிகளின் திடீர் தாக்குதலில் டெலோ இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்னர், டெலோ கொள்ளையடித்து வைத்திருந்த பொருட்களை புலிகள் காட்சிக்கு வைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் முதல் கோயில் நகைகள் வரையில் அதற்குள் இருந்தன. ஒரு சந்தை போடுமளவிற்கு போதுமான பொருட்கள் அங்கிருந்தன. புலிகள் தமது வாகனங்களில் சாரி சாரியாக அவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.

அதற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மை தான். அன்று டெலோ மட்டுமல்லாது, வேறு இயக்கங்களும் கொள்ளைகளில் சம்பந்தப் பட்டதாக பொது மக்கள் நம்பினார்கள். இருப்பினும், டெலோ அழிக்கப் பட்ட பின்னர், எல்லாப் பழியும் அவர்கள் மேல் விழுந்த படியால், வேறு யாரும் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

டெலோவின் அடாவடித்தனங்களால் பொது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். உண்மையில், அதுவும் புலிகளின் டெலோ அழிப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. நான் நேரில் கண்ட, அல்லது கேள்விப்பட்ட சில உதாரணங்களை குறிப்பிடலாம்.  

யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில் கடைக்கு முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் கடத்திக் கொண்டு போக முயற்சித்தனர். உரிமையாளர் வந்து கூச்சல் போட்டதும், தாங்கள் "டெலோ" என்று சொன்னார்கள். உரிமையாளர் அதற்கும் மசியாமல் "டெலோ என்றால் திருடர்களா?" என்று சத்தம் போட்டார். உடனே ஒருவன் கிரனேட் எடுத்து கிளிப்பை கழற்றி மிரட்டினான். இருப்பினும், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் பின்வாங்கிச் சென்றனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதியில் ஒரு பிரபலமான வீடியோ கசெட் வாடகைக்கு விடும் கடை இருந்தது. அவர்களிடம் ஏராளமான படக் காசெட்டுகள் இருந்தன. அந்த வீடியோக் கடையில் ஆபாசப் படங்களும் வாடகைக்கு விடுவதாக ஒரு குற்றச்சாட்டு, யாராலோ டெலோ முகாமில் இருந்தவர்களிடம் அறிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து வீடியோக் கடையில் இருந்த அத்தனை காசெட்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.

ஆபாசப் படக் காசெட்டுக்காக ஒரு கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் அபகரித்து சென்றார்கள். இது மாதிரியான "கலாச்சாரப் பாதுகாப்பு நடவடிக்கை" பல இடங்களிலும் நடந்துள்ளது. பிற்காலத்தில், டெலோ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர், அங்கு பல ஆபாசப் படக் காசெட்டுகளை கண்டெடுத்ததாக கூறினார்கள்.

தமிழ்க் கலாச்சாரக் காவலர்களான டெலோ இயக்கத்தினர், கல்வியங்காட்டில் ஆபாசப் படம் தயாரித்ததாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர். டெலோவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளியான, ஒரு அழகான தமிழ்ப் பெண்ணை வைத்து அந்தப் படம் எடுக்கப் பட்டதாக உள்ளிருந்து கசிந்த தகவல்கள் தெரிவித்தன. அது உண்மையானால் கலாச்சார காவலர்களின் இரட்டை வேடத்தை அது காட்டுகின்றது.

டெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத யுத்தப் பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். இருபாலையில், டெலோ உறுப்பினர்களால் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டார். அந்தச் சம்பவத்தை ஒரு பதினான்கு வயது சிறுமி பார்த்து விட்டாள். வன்புணர்ச்சிக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான அந்தச் சிறுமியை பிடித்துச் சென்றனர். அந்த அப்பாவிச் சிறுமி கல்வியங்காடு முகாமில் சில நாட்கள் வைத்திருந்து சித்திரவதை செய்யப் பட்டாள். பின்னர் அரச உளவாளி என்று குற்றம் சுமத்தி தெருவில் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டாள்.

அரச உளவாளி என்ற பொய்க் குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட அப்பாவி சிறுமியின் குடும்பமும் வறுமையில் வாடியது. அந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். ஒரேயொரு அண்ணன் ஏற்கனவே இராணுவத்தால் பிடிக்கப் பட்டு பூசா முகாமில் அடைக்கப் பட்டிருந்தான். இரண்டு துயரச் சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த படியால், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. உண்மை தெரியாத பொது மக்கள், தெருவில் சுட்டுக் கொல்லப் படுபவர்கள் எல்லாம் உளவாளிகள் தான் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.

டெலோ இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது எந்தளவு பெரிய இயக்கமாக வளர்ந்திருந்தாலும், போராளிகளின் எண்ணிக்கையும், ஆயுத பலமும் அதிகமாக இருந்தாலும், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டால் அழிவு ஆரம்பமாகி விடும். 

டெலோ, பொது மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்லாது, இயக்கத்தில் இருந்த போராளிகளின் தார்மீகப் பலத்தையும் இழந்திருந்தது. ஏற்கனவே பலர் இயக்கத்தின் அகங்காரத்தை தமதாக்கிக் கொண்டிருந்தனர். தம்மை மிஞ்ச ஆளில்லை என்பது போல நடந்து கொண்டனர். அதனால் அடிமட்டப் போராளிகள் சோர்வடைந்து போராட்டத்தில் நம்பிக்கையிழந்து காணப் பட்டனர்.

புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்திற்கு முன்னரே, இந்திய அரசு டெலோவை கைவிட்டு விட்டது. நீண்ட காலமாக, தனது செல்லப் பிள்ளை போன்று முன்னுரிமை கொடுத்து வந்த இந்தியா டெலோவை கைவிடுவதற்கான காரணம் மிகவும் இலகு. எந்த சக்தியும் தனது கையை மீறிப் போய் விடக் கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக வருவதற்கு, இந்தியாவின் ஆசீர்வாதமும் மறைமுகமாக இருந்தது.   

(தொடரும்)

Saturday, September 24, 2016

ஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்


ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான். 

ஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.

அப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.

அந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

புளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான "வங்கம் தந்த பாடம்" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

புளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

மார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.

அது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

இந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று "தீப்பொறி அமைப்பு" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.

அப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.

புளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.

மேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.

அந்தக் காலத்தில், "மாத்தையா குறூப்" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.

இருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். "வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.

முள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.

ஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.

ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், "Lebensraum" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.

மகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.

Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal

Saturday, September 03, 2016

ஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் தான்



மன்னிக்கவும், இதைச் சொன்னவர் "சர்வதேச சமூகத்தை சண்டைக்கு இழுக்கும் இடதுசாரி ஈழப் புரட்சியாளர்" அல்ல. இறுதிப் போரில் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தைரியமற்ற தமிழ்த் தேசியவாதி:

 //தமிழினம் அழிக்கப்பட்டபோது தடுக்க
 திராணியற்றிருந்த பான் கீ மூன் - இன்று தன்னிலை மறந்து வந்து கைகூப்புகின்றார்... 
நாங்கள் கடவுள்கள் அல்லவே 
 உங்களை மன்னிக்க...//

பிற்குறிப்பு: இப்படிச் சொன்னதற்காக தமிழர்கள் எல்லோரும் "இடதுசாரி புரட்சியாளர்கள்" என்று தவறாக நினைத்து விடாதீர்கள், பான் கீ மூன் அவர்களே! மீண்டும் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. விடம், அதாவது உங்கள் காலில் வந்து விழுவோம். மீண்டும் ஜெனீவாவை நோக்கி ஊர்வலம் நடத்துவோம்.

ஏகாதிப‌த்திய‌த்தின் சுய‌ரூப‌ம் இப்போது தானா தெரிந்த‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளே? ஈழப் போர் கூட ப‌ரிசோத‌னைக் க‌ள‌மாக‌, ஆயுத நிறுவனங்களின் இலாபத்திற்காக நடந்தது. க‌ட‌ன் கொடுக்கும் உல‌க‌ வங்கிகளுக்கும் சம்பந்தம் உண்டு. இது தெரியாம‌ல் இன்றைக்கும் "ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டு த‌மிழீழ‌ம் வாங்கித் த‌ரும்" என்று காத்திருக்கும் முட்டாள்க‌ளைப் ப‌ற்றி, என்ன‌த்த‌ சொல்ல‌? ஈழப்போர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் மட்டுமல்ல, அது ஒரு வர்க்கப் போராட்டமும் தான்.

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் காணாமல் போனோரின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. எதிர்க் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது அரசியல் ஆதாயங்களுக்காக சம்பந்தர், சுமந்திரனை திட்டுவதுண்டு. ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு (இந்த இடத்தில் பான் கீ மூன்) எதிராக முணுமுணுக்கவும் மாட்டார்கள்.

அது ஒரு புறமிருக்கட்டும். அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, காணாமல் போனவரின் தாய் ஒருவர் அங்கு நின்ற சிங்களப் பொலிசாருடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. (பார்க்க: https://www.youtube.com/watch?v=kJeblNa2Pz4) அவர் அந்தப் போலிஸ்காரரிடம் கூறுகின்றார்:"காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!"

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் "இடதுசாரி" என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

ஈழப் போர் நடந்த காலம் முழுவதும், ஏழைகளே அதிகளவில் பாதிக்கப் பட்டனர். வசதிபடைத்தோரும், பணக்காரர்களும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.  காணி, பூமி வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அல்லது அடகு வைத்து விட்டு சென்றார்கள். வெளிநாடு செல்ல முடியாதவர்கள், கொழும்பு நகரில்  அல்லது தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள்.

ஈழத்தில் எஞ்சியிருந்த, நிலமற்ற, சொத்துக்கள் ஏதுமற்ற ஏழைகள் தான் போராடச் சென்றனர். ஏனென்றால், ஏழைகள் தான் போரினால் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் இழந்து நின்றனர். "இதற்கு மேல் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர்  தான் போராட முன்வருவார்கள்." என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன பொன்மொழி ஈழப்போரிலும் நிரூபிக்கப் பட்டது. 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்! சிங்கள அரசும், சிங்கள இராணுவமும், எந்தளவு கொடூரமான இனவெறியர்களாக இருந்தாலும், காசைக் காட்டி மயக்க முடிந்தது. அதனால் பல பணக்காரத் தமிழர்கள், பண பலத்தால் தப்பியிருக்கிறார்கள். இறுதிப் போரில் தப்பிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கூட, காசு வாங்கிக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளே, விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டாலும், சில நாட்களில் பெருந்தொகைப் பணம் கொடுத்து வெளியே வந்தார்கள். சிறிலங்கா இராணுவம், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க வசதியில்லாத ஏழைகளின் பிள்ளைகள், இன்று வரைக்கும் சிறை வைக்கப் பட்டுள்ளனர். கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்போராக உள்ளனர். பலர் கொல்லப் பட்டு விட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப் பட்டுள்ளனர்.

"அப்படி அல்ல, ஈழத் தமிழ் சமூகத்தில் அனைத்து வர்க்கத்தினரும் வெளிநாடுகளுக்கு போனார்கள். பணமில்லாதவர்கள் கடன் வாங்கிச் சென்றனர்." என்று சிலர் வாதாடலாம். அது விதண்டாவாதம். ஏனெனில், கடன் வாங்க முடியாத தமிழர்களும் ஈழத்தில் வாழ்கின்றனர். பெருந்தொகைப் பணம் கடனாக எடுப்பதென்றால் நகைகள் அல்லது காணி அடகு வைக்க வேண்டும். அது கூட இல்லாத ஏழைகள் ஏராளம்.

மேலும், ஈழப் பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் இருந்து சம அளவில் புலம்பெயரவில்லை. பணக்காரர்கள், வசதிபடைத்தோர் பெருமளவில் வாழும் யாழ் மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். அதிலும் குறிப்பாக யாழ் நகரத்தை அண்டிய பிரதேசம், வலிகாமம் போன்ற இடங்களில் தான் செல்வந்தர்கள் செறிவாக வாழ்ந்து வந்தனர். மேலும் தீவுப் பிரதேசங்களை சேர்ந்தோர், போர் தொடங்குவதற்கு முன்னர் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து வந்தனர். இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் ஈழத் தமிழரில் கணிசமான அளவினர், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து சென்றவர்களே.

இந்தியா மாதிரி ஈழத்திலும் வர்க்கமும், சாதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளன. சரியான புள்ளிவிபரம் எடுக்கப் படுமாக இருந்தால், மேட்டுக்குடி அல்லது உயர் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை உயர்த்தப் பட்ட சாதிகளில் இருந்து வந்திருப்பார்கள். அதற்கு மாறாக, ஏழைகளும், வசதியற்றவர்களும் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பார்கள். இது குறித்து ஆய்வு செய்த பரம்சோதி தங்கேஸ், மல்லாகம் கிராமத்தில் இருந்த இடம்பெயர்ந்தோர் அகதிமுகாம்களை உதாரணமாகக் காட்டுகின்றார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை, பலாலி முகாம்களை விஸ்தரிக்கும் நோக்கில், சிறிலங்கா இராணுவம் சுற்றியிருந்த கிராமங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தது. வசாவிளான், மயிலிட்டி போன்ற பல ஆக்கிரமிக்கப் பட்ட கிராமங்கள், போர் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் தான் விடுவிக்கப் பட்டன. அந்தப் பிரதேச மக்கள் தொண்ணூறுகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்து சென்ற உயர்த்தப் பட்ட சாதியினர் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர். அவர்களிடம் அந்தளவு வசதி இருந்திருக்கிறது. ஆனால், தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தினர் தசாப்த காலமாக அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களிடம் எந்த வசதியும் இல்லாத படியால், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் உயிர்பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இந்தத் தகவல் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

*****


வீடியோ: "காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!" 
UN Secretary General, Ban Ki-Moon Visit to Jaffna

Friday, February 21, 2014

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்


ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட,  "  கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"   என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்களின் வீடுகளில் நடக்கும், கடவுள் கொள்கை பற்றிய விவாதங்களை, நானே சிறுவனாக இருந்த காலங்களில் நேரடியாக கண்டிருக்கிறேன். 

 "வறுமையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மார்க்சியம் தெரியாது. எந்தவொரு இடதுசாரிக் கருத்தும் அவர்களைக் கவரவில்லை...." என்று பொய்யுரைக்கும் பலரை, அன்றாடம் சமூக வலைத் தளங்களில் சந்திக்கிறேன். அது அவர்களது மத்தியதர வர்க்க மனோபாவமே அன்றி, யதார்த்தத்தை உரைக்கும் கருத்து அல்ல. வசதி படைத்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மட்டும் தான் உலக ஞானம் இருப்பதாக நினைப்பது தவறு. எங்களது நெருங்கிய உறவினர்களுக்கு இடையே, ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இருந்தது. அதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே, மக்களின் வர்க்க வேறுபாடுகள் குறித்தும், அந்த வர்க்கங்களின் அரசியல் சமூகப் பார்வை குறித்தும் அறியும் வாய்ப்புக் கிட்டியது. 

என்னுடன் நன்கு பழகிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, சோஷலிசம் பற்றிய அறிவிருந்தது. சோவியத் யூனியன், கியூபா போன்ற நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களை பற்றிக் கேள்விப் பட்டிருந்தார்கள். அதே போன்று, கடவுள் மறுப்புக் கொள்கையான நாஸ்திகக் கருத்துக்களும் அவர்களை சென்றடைந்தன. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 

1. திராவிடக் கட்சிகள் செல்வாக்கு  செலுத்திய தமிழ் சினிமா. (பராசக்தி  போன்ற படங்களில் வந்த வசனங்களும், பல தத்துவப் பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.)
2. அன்று உலகில் பெருமளவு சோஷலிச நாடுகள் இருந்தன. அந்த நாடுகளில் அரச மதத்திற்கு பதிலாக நாஸ்திகம் கோலோச்சியது என்ற தகவல்.
3. தமிழர்கள் மத்தியில் களப் பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு. ஏழை உழைப்பாளிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் அவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.
4. அறுபதுகள், எழுபதுகளில் கூட, தாழ்த்தப் பட்ட சாதியினர் சைவக் கோயில்களுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர். சாதி ஒழிப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, " உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் இந்த அக்கிரமங்களை ஏன்  பொறுத்துக் கொண்டிருக்கிறார்?"  என்று, ஏழைத் தலித் மக்களை கேள்வி கேட்க  வைத்தது.
5. டாக்டர் கோவூர் நடத்திய நாஸ்திக பிரச்சாரம். குறிப்பாக, உழைக்கும் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்ட, ஜனரஞ்சகப் பத்திரிகையான "மித்திரன்", அது பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. 

இவை யாவும், நான் வாழ்ந்த சூழலில், எனது கண்ணுக்கு தென்பட்ட காரணிகள். அன்று நடந்த நாட்டு நடப்புகளால், சுயமாகத் சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் உருவாகி இருந்தனர். மேற்குறிப்பிட்ட தகவல்களில் ஏதாவதொன்று விவாதப் பொருளாகும் நேரம், நாஸ்திகக் கருத்துக்களும் முன் வைக்கப் படும். அந்த  நிலைமை, ஈழப் போராட்டம் தொடங்கிய எண்பதுகளிலும் காணப் பட்டது. 

கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் நடந்த, தமிழர் விரோதக் கலவரங்கள், இன்னொரு பரிமாணத்தில் இருந்தும் பார்க்கப் பட்டது. கலவரங்களின் போது, சிங்களக் காடையரினால் பல சைவக் கோயில்கள் எரிக்கப் பட்டன. அவற்றைக் கேள்விப் பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், தமக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி இது: " சிங்களக் காடையர்கள் கோயில்களை எரித்த நேரம், அங்கிருந்த சாமிகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஏன் அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை? தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்ற சாமிகள், தமிழ் மக்களை காப்பாற்றுமா?"

சிங்கள ஊடகங்கள் வெளிப்படையாகவே தமிழர்களின் சைவ மத நம்பிக்கைகளை கேலி செய்து வந்தன. அதே போன்று, தமிழ் தேசியத்தை முன்னெடுத்த தமிழ் ஊடகங்களும், சிங்களப் பௌத்தர்கள் வழிபடும் புத்தனை கேலி செய்யும் கேலிச் சித்திரங்களை  பிரசுரித்தன. ஊடக முதலாளிகள், மதவாதம் அல்லது இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவற்றை பிரசுரித்து வந்தனர். ஆனால், "  மதம், கடவுள் என்பன, ஒருநாளும் எதிர்க்கவே முடியாத புனிதமான கோட்பாடுகள் அல்ல."   என்ற உண்மையை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும், அவர்களின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. அன்று, சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் சிலர் நேரடியாகவே கேட்டனர்: " அவர்கள் (சிங்களவர்கள்) எங்களது கடவுளரை கேலி செய்கிறார்கள். நாங்கள் அவர்களது கடவுளை கேலி செய்கிறோம். இதிலிருந்து ஒரு உண்மை தெரிய வருகின்றது. கடவுள் என்ற ஒன்று இல்லை..."

ஒரு தடவை, எங்கள் ஊரில் ஒரு விடுதலை இயக்கம் கூட்டம் நடத்தியது. அதில் பேசிய பேச்சாளர் பின்வருமாறு கூறினார்: " சிங்கள- பௌத்தர்களின் மதம் அஹிம்சையை போதிக்கிறது. அவர்களின் கடவுளின் கையில் ஆயுதம் கிடையாது. ஆனால், சிங்கள பௌத்தர்கள் எம் மீது வன்முறை பிரயோகிக்கிறார்கள். எங்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நாங்கள் அஹிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்..."  அன்று அது, கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைப்பதற்காக செய்யப் பட்ட பிரச்சாரம் தான். அதே நேரத்தில், " கடவுள், மதம் என்பன புனிதமானவை... கேள்விக்குட்படுத்த முடியாதவை..." என்று மக்கள் நம்பிய மாயையையும் கட்டுடைத்தது. 

1984 ம் ஆண்டு, ஒரு போர் நிறுத்தத்தை தொடர்ந்து, யாழ் குடா நாடு முழுவதும் போராளி இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் முகாமுக்குள் முடங்கிக் கிடந்தது. அதனால் பல தடவைகள் விமானங்களில் வந்து குண்டு போட்டார்கள். முகாம்களில் இருந்து ஷெல் அடித்தார்கள். என்றாவது ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப் படுமானால், மக்களை கோயில்களில் (அல்லது தேவாலயங்களில்) சென்று தங்குமாறு, அரச வானொலி அடிக்கடி அறிவித்தது. 

பெரும்பான்மை தமிழ் மக்களும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்பதால், கோயிலுக்குள் தமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், விமானக் குண்டுவீச்சுக்கு கோயில்களும், தேவாலயங்களும் தப்பவில்லை. யாழ் நகரில் பிரபலமான பெருமாள் கோயிலின் கோபுரம் குண்டு வீச்சால் சேதமடைந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஷெல் வீச்சால் சேதமடைந்தது. இப்படி நிறைய வழிபாட்டு ஸ்தலங்கள், ஒன்றில் விமானக் குண்டுவீச்சினால், அல்லது ஷெல் தாக்குதலில் சேதமுற்றன. அந்த சேதங்கள் எல்லாம் ஒரு பெரிய பட்டியலில் தொகுக்கப் பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா படையினர், வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியதால், பொது மக்களும் பலியானார்கள். நவாலி தேவாலயம் விமானக் குண்டு வீச்சினால் தாக்கப் பட்டு, அங்கு தஞ்சம் புகுந்திருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள், உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப் பட்டன. அதன் விளைவாக ஏற்பட்ட, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் காரணமாக, பெருமளவு மக்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும் உண்மை தான். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்னொரு எதிர்பாராத விளைவையும் உண்டாக்கியது. நாஸ்திகக் கருத்துக்களின் உண்மைத் தன்மையை, ஈழத் தமிழ் மக்கள் போர் அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர். 

"  சிங்களப் படையினர் இதுவரையில் எத்தனை சைவக் கோயில்களை  உடைத்து விட்டார்கள்? எத்தனை தடவைகள், கோயில்கள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் கொன்றிருக்கிறார்கள்? அப்போது இந்த சாமிகள் எல்லாம் எங்கே போயின? அதுகளும் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனவா? கடவுள் இருப்பது உண்மை என்றால், எதற்காக குண்டு போட்ட சிங்களவனை தண்டிக்கவில்லை?"   இப்படிப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன. இது போன்ற நாஸ்திகக் கேள்விகளை கேட்டவர்கள் எல்லோரும் படித்தவர்களும் அல்ல. சாதாரண பாமர மக்கள் மனதில் எழுந்த கேள்விகள் அவை. 

ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், கடவுள் நம்பிக்கை மிக்க ஆஸ்திகர்களுக்கு கஷ்டமான காலங்கள். அவர்களால் அந்த "நாஸ்திக கேள்விகளை" எதிர்கொள்ள முடியவில்லை. "  கடவுள் போராளிகள் மூலம் தண்டனை கொடுக்கிறார்."   "  சிங்களப் படையினருக்கு பலத்த இழப்புகள் உண்டாகின்றன..."    "  சிங்கள அரசை வெளிநாடுகள் தட்டிக் கேட்கின்றன..." என்று பதில் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அந்தப் பதில்கள் எல்லா தருணத்திற்கும் பொருந்தாது என்பதை, விரைவில் புரிந்து கொண்டனர். ஏனென்றால், போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும், கடவுளையும், மதத்தையும் மதித்து நடக்கவில்லை. மனித உரிமை நிறுவனங்களைப் பொறுத்த வரையில், அவை எல்லாம் மனித உரிமை மீறல்களுக்குள் அடங்கும். ஆனால், சாதாரண கடவுள் நம்பிக்கையாளர்களை பொறுத்த வரையில், அது அவர்களது நம்பிக்கையை தளர வைத்தது. 

சைவ மத வழிபாட்டு ஸ்தலங்கள் தமிழர்களுக்கு உரியவை என்பதால், சிங்களப் படையினருக்கு அவற்றை அழிப்பதில் மனச் சஞ்சலம் எதுவும் உண்டாகவில்லை.  பெரும்பாலும் பௌத்தர்களான சிங்களப் படையினர், சைவக் கோயில்களில் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. தங்களது கொடுஞ்செயலால் கோபமுறும் கடவுள் தங்களை தண்டித்து விடும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. மறு பக்கத்திலும், தமிழர் தரப்பிலும் அதே நிலைமை தான் காணப்பட்டது. பௌத்தர்கள் நம்பிய புத்தனுக்கோ, அல்லது இஸ்லாமியர் நம்பிய அல்லாவுக்கோ, புலிகள் அஞ்சியதாகத் தெரியவில்லை.   

ஈழப்போர் தொடங்கிய, 1984 ம் ஆண்டு, யாழ் நகரில் இருந்த ஒரேயொரு புத்த கோயிலை, புலிகள் கிரனேட் வீசி உடைத்தார்கள். கண்டியில் பௌத்தர்களின் மிகப் புனிதமான கோயிலான தலதா மாளிகைக்கு குண்டு வைத்தார்கள். காத்தான்குடியில் இஸ்லாமியர் தொழுத பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட்டார்கள். அறந்தலாவையில் புத்த பிக்குகளை கொலை செய்தார்கள். அதனால், புலிகளை எந்தக் கடவுளும் தண்டிக்கவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தார்கள். ஈழத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புலிகளுக்கான ஆதரவு குறையவில்லை.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அறந்தலாவை புத்த பிக்குகளின் கொலைச் சம்பவத்திற்கு காரணமான கருணா அம்மான், இன்று ஸ்ரீலங்கா அரசினால் அமைச்சர் பதவி கொடுத்து கௌரவிக்கப் பட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசு, ஒரு சிங்கள- பௌத்த பேரினவாத அரசாக இருந்த போதிலும், எல்லாக் காலங்களிலும் பௌத்த மதத்தை மதித்து நடக்கவில்லை. ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலங்களில், அரச படையினர், நூற்றுக் கணக்கான புத்த பிக்குகளை சுட்டுக் கொன்றார்கள். அரச படையினர் கைது செய்த மக்களை சித்திரவதை செய்யவும், கொன்று புதைக்கவும், புத்த கோயில்களை பயன்படுத்தினார்கள். 

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், கடவுள் இல்லையெனும் நாஸ்திகவாதம், ஏராளமான தமிழ் மக்கள் மனதில் தானாகவே தோன்றியது. ஆனால், புலிகள் உட்பட, எந்தவொரு ஈழ விடுதலை இயக்கமும், ஈழத் தமிழர்கள் மத்தியில் நாஸ்திகவாதக் கருத்துக்களை வளர்த்தெடுக்கவில்லை. அதற்குக் காரணம் கடவுளோ, மதமோ அல்லது ஆன்மீகமோ அல்ல. இன்றைக்கும் மத நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அரசியல் ஆதிக்கம் காரணம். அந்தப் பிரிவினர், சமூகத்தில் கடவுள், மதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வந்தாலும், பொருளாதார பலம் மிக்கவர்களாக உள்ளனர். புலிகள் எந்தக் காலத்திலும், அந்த அரசியல்- பொருளாதார சக்தியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, December 05, 2013

கம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா?


தமிழ் தேசியத்தின் பேரில், முதலாளியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆதரிக்கும் வலதுசாரிகளின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கான பதில்கள்:
__________________________________________________________________________________________

கேள்வி: இப்போது எங்கே இருக்கிறான், உண்மையான கம்யூனிஸ்டு? ரஷ்யாவிலா, சீனாவிலா, கியூபாவிலா?


  • எதற்காக அவ்வளவு தூரம் போகிறார்கள்? அவர்களின் சுற்றாடலில் உழைக்கும் வர்க்க மக்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், ஏழைகள், அடித்தட்டு மக்கள் யாருமே இல்லையா? குறைந்த பட்சம், அவர்களது குடும்பத்தில் யாருமே பகிர்ந்துண்டு வாழ மாட்டார்களா?



கேள்வி: கம்யூனிசம் எமது ஈழப் போராட்டத்துக்கு பின்னடைவாகவே இருந்திருக்கிறது. புளொட், ஈபிஆர்எல்எப்., டெலோ எல்லாம், கம்யூனிச சித்தாந்தங்களை கொண்டவை. இவை எல்லாமே, தமிழ் சிறுபான்மை இனத்திற்கு எதிரான போராட்டத்தில், அரசுடன் இணைந்தே செயற் பட்டு இருக்கிறார்கள். ஈரோஸ் பாலகுமார் மட்டுமே ஒரு "உண்மையான கம்யூனிஸ்ட்"???


  • இது முற்றிலும் தவறான தகவல். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களாக காட்டிக் கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. புலிகள் கூட சோஷலிசத் தமிழீழம் கேட்பதாக சொல்லித் தான் மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "மார்க்சியப் புலிகளை" அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரிட்டன் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியது.

  • டெலோ கம்யூனிசம் பேசவில்லை. அது தீவிர தமிழ் தேசியம் பேசிய, இன்னொரு புலி இயக்கமாக இருந்தது. டெலோவுக்கும், புலிகளுக்கும் இடையில் கொள்கை முரண்பாடு எதுவும் இருக்கவில்லை. பிளாட், ஈபிஆர்எல்ப், ஈரோஸ் ஆகியன மார்க்சியத்தை தங்களது சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அடிப்படையில் அவை எல்லாம் தமிழ் தேசியவாத இயக்கங்கள் தான். அவர்களுக்கு தமிழ் தேசியம் முதன்மையானது, கம்யூனிசம் இரண்டாம் பட்சம் தான். மேலே குறிப்பிட்ட இயக்கங்கள், அரசுடன் சேர்ந்து கொண்டதற்கு காரணம், புலிகளுடன் ஏற்பட்ட மோதல். புலிகள் அவர்களை இயங்க விடாமல் தடை செய்த பின்னர் தான் அது நடந்தது. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் புலிகளும் அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள்.

  • ஈரோஸ் பாலகுமார், புலிகளுடன் சேர்ந்து விட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, அவரை உண்மையான கம்யூனிஸ்டு என்று போற்றுவது அபத்தமானது. புலிகளுடன் சேர்ந்த பின்னர், அவர் மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக தமிழ் தேசியம் பேசினார்.


கேள்வி : ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா போன்ற "கம்யூனிச நாடுகள்" தானே, ஈழப் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஸ்ரீலங்கா அரசுக்கு உதவி செய்தன?


  • ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. அவை கம்யூனிசத்தை கைவிட்டு, முதலாளித்துவ நாடுகளாகி இருபது வருடங்கள் கடந்து விட்டன. வியட்நாம், கியூபா கூட முதலாளித்துவ பொருளாதாரத்தை படிப்படியாக ஏற்றுக் கொண்ட நாடுகள் தான். பனிப்போரின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவ-கம்யூனிச கொள்கை முரண்பாடு காலாவதியாகி விட்டது. இன்று எல்லா நாடுகளும், தமது சொந்த நலன்களை மட்டுமே கவனித்துக் கொள்கின்றன. அதே நேரம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய முதலாளித்துவ நாடுகளும், போராட்டத்தை சிதைக்க, புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய நாடுகள் என்ற உண்மையை மூடி மறைக்கும் காரணம் என்ன?


கேள்வி: இனிமேலாவது ஒரு கம்யூனிச நாடோ அல்லது கட்சியோ மலர வாய்ப்பிருகின்றதா?


  •  இதனை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இனிமேலாவது தமிழீழமோ ஆல்லது தமிழீழத்திற்கான கட்சியோ மலர வாய்ப்பிருக்கின்றதா? பிரிட்டிஷ் காலனிய அரசு உருவாக்கிய ஸ்ரீலங்கா என்ற அதிகார அமைப்பை தகர்ப்பதற்கு, அல்லது நாட்டை பிரிப்பதற்கு பிரிட்டிஷ் (அல்லது அமெரிக்க) ஏகாதிபத்தியம் சம்மதிக்கப் போவதில்லை. புலிகளைப் போன்று, கடற்படை, வான்படை வைத்திருக்கும் சர்வ வல்லமை பொருந்திய இயக்கமாக இருந்தாலும், இறுதியில் ஏகாதிபத்தியம் அசுர பலத்தை பாவித்து ஒடுக்கவே செய்யும். (இறுதியில் அதுவே நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.) அதனால் தான், புலிகளின் போராட்டத்தை, சர்வதேச இடதுசாரிகள் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக புரிந்து கொண்டார்கள்.

  • புலிகள் ஒரு தேசியவாத இயக்கமாக, தீவிர வலதுசாரிகளாக இருக்கலாம். முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம். இருப்பினும், அதைக் கூட அழிக்க வேண்டுமென விரும்பியவர்கள், ஒரு கம்யூனிச நாட்டை பொறுத்துக் கொள்வார்களா? அதனால் தான், வெற்றி வாய்ப்பு அருகில் இருந்தும், நேபாளத்து மாவோயிஸ்டுகள் கடைசியில் ஏகாதிபத்தியத்துடன் சமரசமாக போகும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

  • பனிப்போர் காலத்தில், உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த காலத்தில், ஒரு புதிய கம்யூனிச நாடு உருவாவது இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த நிலைமை இன்று இல்லை. அதற்காக, சோஷலிசத்திற்கான உழைக்கும் வர்க்க மக்கள் தமது போராட்டத்தை கைவிடக் கோருவதும், ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டு விட்டு, இலங்கை பேரினவாத அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதும் ஒன்று தான். வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள்.



கேள்வி: அதிகாரத்தை நிராகரிக்கும் கம்யூனிசம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றும் பொழுதே முதல் கோணல் ஏற்படுகின்றது அல்லவா?


  • அது யாருடைய அதிகாரம் என்பது தான் இங்கே எழும் கேள்வி. ஒரு கட்சியின் அதிகாரமா? அல்லது மக்களின் அதிகாரமா? வெறுமனே ஒரு கட்சி, அது தமிழீழக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிசக் கட்சியாக இருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றினால், முன்பிருந்த அதே அரசு தான் தொடர்ந்தும் இருக்கும். பழைய அதிகாரிகளின் இடத்தில் புதிய அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். அது மட்டுமே வித்தியாசம்.

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோஷலிஸ்ட் கட்சிகளின் இரண்டாம் அகிலத்தில் ஒரு முக்கிய பிளவு தோன்றியது. "ஒரு  கட்சி, அரசு  அதிகாரத்தை கைப்பற்றினால் போதும், மாற்றங்களை கொண்டு வந்து விடலாம்" என்று நம்பியவர்கள், சோஷலிசக் கட்சி என்ற பெயரில் பாராளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றினார்கள். அவர்கள் சமூக-ஜனநாயகக் கட்சிகள் என்ற பெயரில் இப்போதும் பல நாடுகளில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்று வரையில், எந்த நாட்டையும், சோஷலிச நாடாக மாற்றிக் காட்டி சாதனை படைக்கவில்லை. அன்றைய கொள்கை வேறுபாடு காரணமாக மூன்றாம் அகிலம் உருவானது. அதில் பங்கு கொண்ட கட்சிகள் தம்மை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அழைத்துக் கொண்டன.

  • உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. மாறாக, மக்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது ஆகும். மக்களை அதற்காக தயார் படுத்துவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை ஆகும். மக்கள் தம்மைத் தாமே ஆளும் வகையில் ஒரு மக்கள் அரசு அமைப்பார்கள். ரஷ்யாவில் அது சோவியத் என்று அழைக்கப் பட்டது. ரஷ்யாவை தொடர்ந்து, ஜெர்மனி, ஹங்கேரி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் அரசுகள் ஸ்தாபிக்கப் பட்டன. அதற்குக் காரணம், அந்த நாடுகளில் நடந்த மக்கள் புரட்சி.

  • கம்யூனிஸ்ட் கட்சியானது மக்களுக்கான வழிகாட்டியாக முன்னணிப் பாத்திரம் மட்டுமே வகிக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மக்கள் மட்டும் தான். அதை நீங்கள் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்று அழைக்க விரும்பா விட்டால், வேறு பெயர் சூட்டிக் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும், மக்கள் மக்களை ஆள்வது தான் ஒரு கம்யூனிச நாடாகும்.

Thursday, July 25, 2013

வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை


1983 ஜூலை மாதம் நடந்த, தமிழருக்கு எதிரான இனக் கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழிவும் 83 கலவரத்தின் போது ஏற்பட்டன. தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒன்று கூட தப்பவில்லை. சிறிய பெட்டிக் கடை முதல், பெரும் வணிக வளாகம் வரையில், தமிழ் உரிமையாளர்களை கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக எரிக்கப் பட்டன.

தமிழ் பணக்காரர்கள் வீட்டில் வேலை செய்த, சிங்கள பணியாளர்கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள். தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிங்கள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளை எரிக்க துணை போனார்கள். இதனால் பல தமிழ் முதலாளிகள் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டனர். தலைநகர வர்த்தகத்தில் தமிழர்கள் கொண்டிருந்த நூறாண்டு கால பங்களிப்பு, ஒரு சில நாட்களில் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையின், மேற்கத்திய பாணி தேர்தல் ஜனநாயகம், தமிழின அழிப்புக்கு உறுதுணையாக அமைந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் கைகளில், தொகுதியை சேர்ந்தவர்களின், வாக்காளர் பட்டியல் காணப்பட்டது. அந்தப் பட்டியலின் படி, தமிழர்களின் வீடுகளை கண்டுபிடிப்பதும், அங்கு வாழ்ந்தவர்களை கொலை செய்வதும் இலகுவாக அமைந்திருந்தது. 

தொழில் வாய்ப்பற்ற, சிங்கள இனவெறியூட்டப் பட்ட, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த காடையர்களே தமிழர்களை தாக்கினார்கள். ஆளும்கட்சியை சேர்ந்த தொகுதி உறுப்பினர்கள், அவர்களை பின் நின்று இயக்கிக் கொண்டிருந்தனர். சிங்கள மத்திய தர வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் தமது வீடுகளில் அடைக்கலம் கோரி வந்த, நீண்ட கால தமிழ் நண்பர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். "படித்தவன் இனவாதியாக இருக்க மாட்டான்" என்ற நம்பிக்கை, அன்று பல தமிழர் மனங்களில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், 13 சிங்களப் படையினர் புலிகளின் திடீர்த் தாக்குதலில் கொல்லப் பட்ட சம்பவம், கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்திருந்தது. உண்மையில், ஆளும் ஐதேக தலைவர்கள், ஏற்கனவே தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டி இருந்தனர். அவர்களுக்கு தேவைப் பட்டது ஒரு தீப்பொறி மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்..." என்று ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அன்றைய தாக்குதலில் சுட்டவர்கள் புலிகள், பலியானவர்கள் அரச படையினர். ஆனால், தென்னிலங்கையில் அது "சிங்களவர்கள் மீதான தமிழர்களின் தாக்குதலாக" பிரச்சாரம் செய்யப் பட்டது. எல்லாவற்றையும் சிங்கள-தமிழ் இனவாத கண்ணாடி ஊடாக பார்க்கும் அரசியல், அடுத்து வந்த முப்பதாண்டு கால ஈழப்போர் கால கட்டத்திலும் தொடர்ந்திருந்தது. கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிக் கிரியைகள் நடந்த, பொரளை கனத்த மயானத்தில், நூற்றுக் கணக்கான சிங்கள இனவாதிகள் ஒன்று திரண்டிருந்தனர். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற வெறி எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தது. 

கனத்த மயானத்திற்கு அருகில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்த, நாரஹென்பிட்டிய தொடர்மாடி குடியிருப்புகளே முதலில் தாக்கப் பட்டன. அங்கு பெரும்பாலான குடியிருப்புகள், அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப் பட்டிருந்தன. முப்படைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அங்கே குடியிருந்தனர். அதனால், "பாதுகாப்பான பிரதேசமாக" கருதப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் தாக்கப் பட்டமை பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால், நாங்களும் அங்கிருந்த வீடொன்றில் தான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக, கலவரம் தொடங்குவதற்கு முன்னர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்று விட்டதால், ஒரு பேரழிவில் இருந்து மயிரிழையில் தப்பினோம். 

இதற்கு முந்திய தமிழ் ஆயுதபாணி இயக்கங்களில் தாக்குதல்களில், பொதுவாக ஒன்றிரண்டு பொலிஸ்காரர்கள் தான் கொல்லப் படுவது வழக்கம். பெருமளவு எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டமை அதுவே முதல் தடவை. தாக்குதல் நடந்த திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு போட்ட படையினர், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் காரணம் தெரியாமலே இறந்து போனார்.

யாழ் குடாநாட்டில், ஒரு சில நாட்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாக கருதப் பட்ட பொலிஸ் நிலையங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெறுமையாக இருப்பதை அறிந்த, அயலில் வாழ்ந்த தமிழர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்தனர். திடீரென, நேரக் கணிப்பு வெடிகுண்டு வெடித்ததால் சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். யாழ் குடாநாட்டில் இருந்த சிறிய பொலிஸ் நிலையங்களே விலக்கிக் கொள்ளப் பட்டன. பெரிய பொலிஸ் நிலையங்கள் பலப் படுத்தப் பட்டன. வேட்டைத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ்காரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப் பட்டன. பொலிஸ், இராணுவ வாகனங்கள் முக்கியமான தெருக்களில் மட்டுமே ரோந்து சுற்றின. 

இதனால், கிராமங்களில் படையினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு தமிழ்ப் போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். ஆர்வமுள்ளவர்களுடன் பேசி, பொதுக் கூட்டங்கள் நடத்தி, இளைஞர்களை சேர்த்தார்கள். ஈழப் போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களை சேர்த்து, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். 

83 கலவரத்திற்குப் பிறகு, இலங்கை அரச வானொலியை கேட்பதை, யாழ்ப்பாண தமிழர்கள் ஏறக்குறைய நிறுத்தி விட்டார்கள். பொய், புரட்டு, இருட்டடிப்பு காரணமாக அதன் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போனது. அதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தகவலுக்காக வெளிநாட்டு வானொலிகளை நம்பி இருந்தார்கள். இந்திய தூரதர்ஷன், பிரிட்டனின் பிபிசி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் வெரித்தாஸ் போன்ற வானொலிகளின் தமிழ்ப் பிரிவினர், மறைக்கப் பட்ட செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் அவை கேட்கப் பட்டன. அன்றாட அரசியல் உரையாடல்களும், அந்த வானொலிகள் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். 

83 ஜூலைக் கலவர சம்பவங்களை ஜூனியர் விகடன் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தது. அந்த இதழ் இலங்கைக்குள் வருவது தடை செய்யப் பட்டிருந்தது. போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதி எடுத்து விநியோகித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசியல் சஞ்சிகைகளையும், படகு மூலம் கடத்திக் கொண்டு வந்து விநியோகித்தார்கள். நிறையப் பேர் அவற்றை விரும்பி வாங்கி வாசித்தார்கள். 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 கலவரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ்ப்பாணம் சென்று வந்தார். அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் கிளைகள் இருந்தன. தமிழ் அமைப்பாளர்கள் அவற்றை நிர்வகித்து வந்தனர். 83 கலவரத்திற்கு பின்னர், யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்டது. ஈழ போராளிக் குழுக்கள் அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம் காரணமாக பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மெல்ல மெல்ல பிற அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பழம்பெரும் தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பகிரங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தேர்தல் அரசியல் மிதவாதமாகவும், ஆயுதபாணி அரசியல் தீவிரவாதமாகவும் மாறியது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திய குழுக்களை, அரச ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, அன்றைய காலத்தில் சிங்கள மக்கள் கூட, தமது அன்றாட அரசியல் உரையாடல்களில் "பயங்கரவாதிகள்" என்ற சொல்லை பாவிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர, TELO, PLOTE, EPRLF, EROS, TELA என்று ஒரு டசின் விடுதலை இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிங்கள மக்கள் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் "கொட்டியா" (புலிகள்) என்று அழைத்தனர். எந்த இயக்கம் தாக்குதல் நடத்தினாலும், அதனை புலிகளே செய்ததாக நினைத்துக் கொண்டனர். 

இதே மாதிரியான நிலைமை, தமிழ் நாட்டிலும் இருந்தது. அவர்களும் எல்லா இயக்கங்களையும் "விடுதலைப் புலிகள்" என்ற பொதுப் பெயர் கொண்டு அழைத்தனர். திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புலிகள் அமைப்பினால் நடத்தப் பட்டது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட ஜூலைக் கலவரம், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வலைகள் காரணமாக, விடுதலை இயக்கங்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்தது. இதன் விளைவாக, எல்லா இயக்கங்களும் பல்லாயிரம் போராளிகளையும், ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார்கள். 

தேசத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 ஜூலைக் கலவரத்திற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழினப் படுகொலையில் இருந்து தனது அரசையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான எதிரிகளாக இருந்த, தமிழ் ஆயுதபாணி இயக்கங்களை அடக்குவதற்காக, பெருந்தொகையான சிங்களப் படையினரை அனுப்பி வைத்தார். அந்த மாகாணங்களில், படையினரின் கண்மூடித்தனமான கொலைகள், வரைமுறையற்ற கைதுகள் தொடர்ந்தன. அதே நேரம், தென்னிலங்கையிலும் சில எதிரிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. 

ஜூலைக் கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று சில பெயர்கள் அரச ஊடகங்களில் அறிவிக்கப் பட்டன. அதனை பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழினப் படுகொலையுடன் எந்த வித சம்பந்தமுமற்ற சில கட்சிகளின் பெயர்கள் வாசிக்கப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தடை செய்யப் பட்டன. அந்தக் கட்சிகளே கலவரத்தை நடத்தியதாக, ஜே.ஆர். அறிவித்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தினார். 

ஒரு பக்கம், சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது மிலேச்சத் தனமான போர் முடுக்கி விடப் பட்டது. மறு பக்கம், அரச எதிரிகளான இடதுசாரிகள் அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். இதன் மூலம், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு கையால் ஈழப்போரை நடத்திக் கொண்டே, மறு கையால் தாராளவாத பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. தமிழ் தேசியவாதிகள், சிங்கள இடதுசாரிகள் மீது ஜே.ஆர். தொடங்கிய போரின் விளைவை, முப்பது வருடங்களுக்குப் பின்னர், தமிழ் - சிங்கள மக்கள் அறுவடை செய்கின்றனர். 

எந்த வித எதிர்ப்புமின்றி, இலங்கை மறு காலனியாதிக்கத்தை நோக்கி தள்ளப் பட்டது. தனியார்மயம் தாராளமாக நுழைவதற்கு தடையேதும் இருக்கவில்லை. ஈழப் போரானது, அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஒடுக்கி, அதி தீவிர போராட்ட சக்தியான புலிகளையும் அழித்து விட்டு ஓய்ந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த தமிழ் சமூகம், இன்றைக்கும் ஒரு பெரும் இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்கள் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜே.ஆரின். சூழ்ச்சிக்கு பலியானதை அறியாத தமிழ் வலதுசாரி தேசியவாதிகள், மேற்குலகில் இருந்து வரவிருக்கும் மீட்பருக்காக காத்திருக்கிறார்கள்.