Tuesday, April 25, 2017

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்


சிங்கள இனவாதிகளின் பிதாமகனாக கருதப்படும் அநகாரிக தர்மபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் :

 1. இங்கேயுள்ள படத்தில், விவேகானந்தருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பவர் தான் அநகாரிக தர்மபால. 1893 ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த சர்வதேச மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப் பட்ட படம் அது.

2. அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் "Don David Hewavitharana". அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள மேட்டுக்குடிப் பிரஜை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று, விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்றவர். (சுருக்கமாக: ஒரு சிங்கள ஆறுமுக நாவலர்.)

3. 1886 ம் ஆண்டு, மேலைத்தேய நாட்டவரின் ஆன்மீக சபையான "Buddhist Theosophical Society" இல் இணைந்து கொண்டார். அந்த சபையானது, பௌத்த மதத்தை தழுவிக் கொண்ட ஆங்கிலேயரான Henry Steel Olcott இனால் உருவாக்கப் பட்டது. அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேர்னல் ஆவார். இன்றைக்கும், அநகாரிக தர்மபாலாவுக்கு அடுத்த படியாக, கேர்னல் ஒல்கொட் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நாயகனாக போற்றப் படுகின்றார்.

4. பௌத்த சமயத்தை தழுவிய அநகாரிக தர்மபாலாவும், ஒல்கொட்டும், இலங்கை முழுவதும் பௌத்த மதத்தை மீள் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் தான் மகாவம்சம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. துட்டகைமுனு சிங்களவர்களின் நாயகன் ஆனான்.

5. இலங்கையில் பௌத்த மத புத்துயிர்ப்பில் ரஷ்யப் பெண்மணியான Blavatsky யின் பங்களிப்பும் அளப்பெரியது. Blavatsky யின் தொடர்பினால் தான் அநகாரிக தர்மபாலா பாளி மொழி பயின்றார். Blavatsky யின் ஆரிய இனப்பெருமை பேசும் கருத்துக்கள் ஹிட்லரையும் ஈர்த்தன. Theosophical Society இப்போதும் சென்னை, அடையாறில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

6. இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும் பௌத்த மதத்தை ஒடுக்கி, ஏறக்குறைய அழித்து விட்டார்கள். நாட்டில் எந்தப் பாகத்திலும் பௌத்த மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அநகாரிக தர்மபாலா பெருமுயற்சி எடுத்து, பௌத்த மதப் பாடசாலைகளை உருவாக்கினார். விகாரைகள் புதுப்பிக்கப் பட்டன.

7. அநகாரிக தர்மபால முன்மொழிந்த தத்துவங்கள், பிற்காலத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தோன்றுவதற்கு பெரிதும் உதவியது. அதனால், இன்றைக்கும் சிங்கள தேசியவாதிகள்/மதவாதிகள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

8. மறுபக்கத்தில், தமிழ் தேசியவாதிகள்/இனவாதிகள் அநகாரிக தர்மபாலாவை வெறும் இனவாத குருவாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், அதே நபர்கள் ஆறுமுக நாவலரை மரியாதையுடன் நினைவுகூரும் முரண்நகையையும் அவதானிக்கலாம்.

9. பௌத்தமும், சிங்களமும் வளர்த்த, அநகாரிக தர்மபாலா "ஒரு சிங்கள ஆறுமுகநாவலர்". சைவமும், தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர், "ஒரு தமிழ் அநகாரிக தர்மபாலா". ஆனால், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

10. தெற்கில் பௌத்த மதத்தையும், வடக்கில் சைவ மதத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கம் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால், இன்றைய சிங்கள-தமிழ் இன முரண்பாட்டின் விதைகள் அப்போதே தூவப் பட்டிருக்கலாம். "மக்களை பிரித்தாள்வதன்" மூலமே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நின்றது என்பது வரலாறு.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Monday, April 24, 2017

பிரித்தானியா தோற்கடித்த மலேசிய கம்யூனிசப் புரட்சி - சில குறிப்புகள்


மலேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங் (Chin Peng), கடந்த 16 செப்டம்பர் 2013 அன்று, தாய்லாந்தில், பாங்காக் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இவர் ஆசிய நாடொன்றில் நடந்த மிக நீண்ட விடுதலைப் போரை நடத்தியவர். ஜப்பான், பிரிட்டன், அவுஸ்திரேலியா, மலேயா போன்ற பன்னாட்டுப் படைகளை எதிர்த்துப் போராடி இருக்கிறார்.

ஒரு காலத்தில் தேசிய நாயகன் விருது கொடுத்து கௌரவித்த பிரிட்டிஷ் அரசு, பின்னர் "மிகத் தீவிரமான பயங்கரவாதி" பட்டம் சூட்டி வேட்டையாடியது. ஏனென்றால் இவர் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்டுகள் எந்தவொரு அரசு அதிகாரத்திற்கும் அடிபணிவதில்லை.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த மலேயாவில், 1924 ம் ஆண்டு, Ong Boon Hua எனுமிடத்தில் சின் பெங் பிறந்தார். அவர் மலேயாவில் சிறுபான்மையினரான சீன இனத்தை சேர்ந்தவர். சீனாவில் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்த காலத்தில், கம்யூனிச கொள்கை மலேயாவிலும் பரவியது. ஆரம்பத்தில், சீன வம்சாவளியினரே மலேயா கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். கட்சியில் சீனர்களே பெரும்பான்மையாக இருந்தாலும், மலேயர்களும், தமிழர்களும் கணிசமான அளவில் சேர்ந்திருந்தனர்.

சின் பெங் தனது 15 ஆவது வயதில் மலேயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சில வருடங்களிலேயே கட்சியின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. மலேயாவை ஆக்கிரமித்த ஜப்பானிய படைகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சி கெரில்லாப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது. இன்றைக்கு மலேசியாவை ஆளும் வர்க்கம், அன்று ஜப்பானியர்களுடன் ஒத்துழைத்தனர்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக, இரண்டாம் உலகப்போர் முடிவில் சின் பெங் பிரிட்டிஷ் அரசினால் கௌரவிக்கப் பட்டார். ஆனால், மிக விரைவிலேயே மீண்டும் மலேயாவை ஆள வந்த ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளுடன் முரண்பாடுகள் தோன்றின. கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடங்கியது. ஜப்பானியருக்கு எதிராக போராடிய சின் பெங் இற்கு, தேசிய வீரர் விருது கொடுத்து கௌரவித்த பிரிட்டன், தற்போது அவரை பயங்கரவாதி என்றது.

ஈழப்போரின் இறுதியில், பல நாடுகள் சேர்ந்து ஒடுக்கியதால் தான், புலிகள் தோற்கடிக்கப் பட்டார்கள் என்று, (புலி ஆதரவு) தமிழ் தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு மலேசிய வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. மலேசிய கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போரில், பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, இந்தியா (கூர்க்கா படையினர்) ஆகிய நாடுகளை சேர்ந்த பன்னாட்டுப் படைகள் பங்குபற்றின. "மலேயா அவசரகால சட்டம்" என்ற பெயரில், 1948 - 1960 வரையில் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட நீண்ட போர் நடந்தது.

மலேயா போரில் பன்னாட்டுப் படைகள் புரிந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக இன்று வரையில் யாரும் தண்டிக்கப் படவில்லை. 1957 ம் ஆண்டு, மலேசியா சுதந்திர நாடான பின்னரும், கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் போர் தொடர்ந்தது. புதிய மலேசிய இராணுவத்திற்கு, பிரிட்டன் தேவையான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. பிரிட்டன் வழங்கிய "அருமையான யோசனையான" தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்ட பின்னரே, கம்யூனிஸ்ட் போராட்டத்தை ஒடுக்க முடிந்தது.(பார்க்க: தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு )

மக்கள் எனும் கடலில் இருந்து, போராளிகள் எனும் மீன்கள் பிரித்தெடுக்கப் பட்டனர். இதனால், அடர்ந்த காடுகளுக்குள் இருந்த கம்யூனிஸ்டுகளின் முகாம்களை, இராணுவம் சுற்றிவளைக்க முடிந்தது. போராட்டம் முடிவுக்கு வந்ததை உணர்ந்த சின் பெங்கும், எஞ்சிய போராளிகளும், தாய்லாந்திற்கு தப்பி ஓடினார்கள். தாய்லாந்து அரசுடனான சமாதான ஒப்பந்தம் மூலம், அந்த நாட்டிலேயே தங்கி விட்டார்கள். தாய்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த சின் பெங், போர் முடிந்த பின்னரும் மலேசியாவுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. மலேசிய அரசு இன்றைக்கும் அவரை, "முதலாவது எதிரியாக" கருதுகின்றது.

மலேசியாவில் இருந்து பிரிந்த சிங்கப்பூரிலும் சின் பெங் வரவேற்கப் படவில்லை. சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான் யூவின் PAP கட்சி, ஒரு காலத்தில் தன்னை ஒரு "இடதுசாரிக் கட்சி" போன்று காண்பித்துக் கொண்டது. ஆங்கிலேய காலனியாதிக்க காலத்தில், சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைத்திருந்தது. 

ஆனால், சிங்கப்பூர் பிரிந்த பின்னர், லீகுவான்யூ தனது சுயரூபத்தை காட்டினார். PAP கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள், மற்றும் சந்தேகப்பட்ட சிங்கப்பூர் கம்யூனிஸ்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தார். இத்தனைக்கும் லீகுவான்யூ, சின் பெங் மாதிரி சீன சிறுபான்மையினத்தை சேர்ந்தவர். இன்றைக்கும் சிங்கப்பூரின் அரசியல் அதிகாரம், அந்த நாட்டில் பெரும்பான்மை இனமான சீனர்கள் கைகளில் இருக்கின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Sunday, April 23, 2017

நோர்வேயில் ஏழைத் தமிழர்களும் தமிழ் முதலாளிகளின் சுரண்டலும்


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவாரஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள்.

வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர்.

ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். (Tamil workers abused by Tamil petty businessmen;https://youtu.be/awq-Jn1k0Zw)எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள்.

உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும். அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள்.

ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது.

அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்?

அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.


Saturday, April 22, 2017

நோர்வீஜிய பேரினவாத வெறியும் சாமி இனவழிப்பும் - ஓர் ஆவணம்

தேசியவாதம் என்ற கொள்கை, முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இன்று நமது தமிழ் தேசியவாதிகள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொழி அடிப்படையிலான தேசிய அரசுக்களை, அடிக்கடி உதாரணமாகக் காட்டுவார்கள். ஆனால், உண்மையில் அவற்றை தேசியவாத அரசுகள் என்று அழைப்பதை விட, பேரினவாத அரசுகள் என்று அழைப்பதே பொருத்தமானது.

ஒரு காலத்தில், ஐரோப்பிய தேசியவாதிகள், சிங்களவர்களை விட படு மோசமான பேரினவாதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஏதாவதொரு சிறுபான்மை மொழி பேசும் இனம் ஒடுக்கப் பட்டது, இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டது. இன்று, சிறந்த மனிதநேய வாதிகள் என்று காட்டிக் கொள்ளும், ஸ்கன்டிநேவிய நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல.

நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளும், எவ்வாறு "சாமி" என்ற மொழிச் சிறுபான்மையின மக்களை ஒடுக்கினார்கள் என்பதை விபரிக்கும் ஒரு ஆவணப் படத்தை பார்க்க கிடைத்தது.

எழுபதுகளில், இலங்கையின் சிறுபான்மை தமிழ் இனத்தின் ஈழப்போராட்டம் தொடங்கி விட்டது. அதே கால கட்டத்தில், "நாகரீகமடைந்த" வட ஐரோப்பாவில், ஒரு கொடுமையான இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. ஐரோப்பியக் கண்டத்தின், வட முனைப் பகுதியில் வாழ்ந்த சாமி இன மக்கள், பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.

சாமிகள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த, பனிப்பிரதேசத்திற்கு உரிய பூர்வீக மக்கள் ஆவர். சாமி மொழி பேசும் மக்கள், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். சர்வதேச எல்லைகள், அவர்களின் வாழ்விடங்களை ஊடறுத்துச் செல்கின்றன.

நோர்வே, சுவீடன், பின்லாந்தை சேர்ந்த பேரினவாத ஆட்சியாளர்கள், சாமி இன குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து, பிரித்தெடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்களது கிராமங்களில் இருந்து, குறைந்தது ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விடுதிப் பாடசாலையில் தங்க வைக்கப் பட்டார்கள்.

அங்கே மழலைகளின் மூளைக்குள், ஆக்கிரமிப்பாளர்களின் மொழி, கலாச்சாரம் என்பன திணிக்கப் பட்டன. தாய் மொழியில் பேசுவது தடுக்கப் பட்டது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களைத் தவிர வேறெந்த பெரியவர்களையும் பிள்ளைகள் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை.

நோர்வே நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த சாமி இன பிள்ளைகள், நோர்வீஜியர்களின் மொழி, பண்பாடு, நடை, உடை, பாவனைகளை பின்பற்ற வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர். அது போன்று, சுவீடனில் வாழ்ந்த சாமிகள், சுவீடிஷ் மொழியையும், பின்லாந்தில் வாழ்ந்த சாமிகள் பின்னிஷ் மொழியையும் பேச வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பின்னிஷ் மொழிக்கும், சாமி மொழிக்கும் இடையில் மட்டுமே சில ஒற்றுமைகள் உள்ளன. (தமிழும், மலையாளமும் போல நினைத்துக் கொள்ளுங்கள்.) ஆனால், சாமி மொழிக்கும், நோர்வீஜிய, சுவீடிஷ் மொழிகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. (தமிழும், சீன மொழியும் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்.) எந்த வித சம்பந்தமும் இல்லாத, அந்நிய மொழியை பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்த குழந்தைகள், கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டனர். கூடவே பெற்றோரை, உறவினரை பிரிந்து வாழும் வேதனை வேறு.

ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை இலகுவில் கிரகிக்க முடியாத குழந்தைகள், முட்டாள்கள் என்று சிறுமைப் படுத்தப் பட்டனர். சாமி இன மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. சாமி மக்கள் ஐரோப்பிய மனித இனங்கள் எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்கள் என்று, அறிஞர்கள் "ஆராய்ச்சிகள்" செய்து "கண்டுபிடித்தனர்." ஹிட்லர் பாணியிலான இனவெறி ஆராய்ச்சிக் குறிப்புகள், இன்றைக்கும் சுவீடனில் உள்ள ஊப்சலா பல்கலைக்கழகத்தில் உள்ளன.

நோர்வேயிலும், இன ஒதுக்கல் கொள்கை உச்சத்தில் இருந்ததாக, எழுபதுகளில் சாமி மக்களிடையே பணியாற்றியவெளிநாட்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அந்தக் காலங்களில், பெரும்பாலான சாமி இன மக்கள், தமது மொழியைக் கூட, எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருந்தனர்.

பொது இடங்களில், நோர்வீஜியர்கள் சாமி மக்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தி வந்தனர். கடைகளில் வரிசையில் நிற்கும் பொழுது, சாமி ஒருவர் முன்னுக்கு நின்றாலும், பின்னால் நிற்கும் நோர்வீஜியர் முதலில் செல்ல முடிந்தது. ஒரு பேரூந்து வண்டியில், முதலில் நோர்வீஜியர்கள் ஏறிய பின்னர் தான், சாமி இன மக்கள் ஏற முடியும். நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும், தற்போது சாமி இன மக்களுக்கு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: "சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

Friday, April 21, 2017

தமிழ்த் தேசியவாதிகளுக்கு, லெனின் தேசியம் பற்றி என்ன சொன்னார்?


"தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் உண்மையான நோக்கம், "லெனின் கூட ஒரு தேசியவாதி" என்று குறுக்குவது தான். லெனின் ஒரு சர்வதேசியவாதி என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தேசியவாதம் என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம். அதற்கு மாறாக, சர்வதேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம்.

பொதுவாக தேசியவாதிகளின் உலகம் தேசியங்களால் மட்டுமே ஆனது. இந்தப் பூமியில் எல்லோருக்கும் தனித் தனி தேசங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. "ஒவ்வொரு மொழி பேசும் இனத்திற்கும் தனித்தனியாக தேசங்கள் உள்ளன. தமிழருக்கு மட்டும் தான் இன்னும் ஒரு நாடு இல்லை. அதுவும் வந்து விட்டால், உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது." இது தான் அவர்களது உலகப் பார்வை.

இதிலிருந்து தான் அவர்களது கருத்துக்களும், கேள்விகளும் பிறக்கின்றன. உலகில் உள்ள எல்லா தேசியவாதியும் தான் சார்ந்த இனத்திற்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக நினைத்துக் கொள்வான். தங்களது பிரச்சினை, உலகில் வேறெந்த மக்கள் குழுக்களுடனும் ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானது என்று கருதுவார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு தேசியவாதியும், தங்களது இனம், மொழி, இருப்பிடம் அழிக்கப் படுகின்றது என்று சொல்வார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் வாழும் தேசியவாதிகளும் அப்படித் தான் சொல்லிக் கொள்வார்கள். "தெற்காசிய, ஆப்பிரிக்க மக்கள் லண்டன் நகர் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள்... இஸ்லாம் வேகமாகப் பரவுகின்றது... ஆங்கிலம் அழிகிறது..." இவ்வாறு ஆங்கிலேய தேசியவாதிகள் முறையிடுவதைக் கேட்கலாம்.

தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்? லெனின் ஒரு தேசியவாதி அல்ல, மாறாக சர்வதேசியவாதி. பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அவரது குறிக்கோள். அதாவது, "பாட்டாளி வர்க்கத்திற்கு தேசம் கிடையாது" என்ற மார்க்ஸின் கூற்றை ஏற்றுக் கொண்ட ஒருவர் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதை நாங்கள் லெனின் என்ற தனி மனிதனின் கருத்துக்களாக பார்ப்பதை விட, போல்ஷெவிக் (கம்யூனிஸ்ட்) கட்சியின் கொள்கையாக பார்ப்பது தான் சிறந்தது. ஒரு சிலர், போலந்து, நோர்வே தொடர்பாக லெனின் எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டிப் பேசலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஐரோப்பாவில், அவை இரண்டும் சர்வதேச பிரச்சினையாக கருதப் பட்டவை.

உதாரணத்திற்கு போலந்து தேசத்தை அங்கீகரிப்பது தொடர்பான கருத்து முரண்பாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச மகாநாடுகளில் எதிரொலித்தன. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பெரியதொரு ராஜ்ஜியமாக இருந்த போலந்து, பிற்காலத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களின் விஸ்தரிப்பால் மூன்று துண்டுகளாகப் பிளவு பட்டிருந்தது.

சுருக்கமாக, இன்றைக்கு இஸ்ரேல்/பாலஸ்தீனம் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக இருப்பது மாதிரித் தான், அன்றைக்கு போலந்து இருந்தது. அன்று ஐரோப்பாவில் கூடிய சர்வதேச மகாநாடுகளில், போலந்தை விடுதலை செய்யுமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டு வந்தது. ரஷ்யாவின் போர்வெறியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த ரஷ்யக் கம்யூனிஸ்டுகள், தமது வர்க்க எதிரிகளான ரஷ்யப் பேரினவாதிகளின் நிலைப்பாட்டுக்கு மாறாக போலந்து விடுதலையை ஆதரித்து வந்தனர்.

ஆகவே, போலந்து தொடர்பாக லெனின் தெரிவித்த கருத்துக்களை, தேசியம் தொடர்பான லெனினின் பொதுவான நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அன்று போல்ஷெவிக் கட்சிக்குள், தேசியம் தொடர்பான கொள்கை வகுக்கும் வேலை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது. எதற்காக ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார்கள்? அந்தக் காலகட்டத்தில், வியன்னாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஸ்டாலின், அந்நகரில் வாழ்ந்த பல்லின மக்களுடன் தொடர்பேற்படுத்தி தேசிய இனப் பிரச்சினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.

அன்று ஆஸ்திரியாவில் மன்னராட்சி இருந்தது. அதன் கீழ் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்து வந்தன. அந்த நேரத்தில், ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும், ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி மாத்திரம், தேசிய இனங்களின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பல்லின மக்கள் குடியேறி இருந்தனர். போஸ்னியா, குரோவாசியா போன்ற பெரும்பாலான யூகோஸ்லேவிய பகுதிகள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தன. அந்தப் பிரதேசத்தில் தேசியவாத இயக்கங்கள் எழுச்சி பெற்றிருந்தன. அன்று அது சர்வதேச (ஐரோப்பிய)பிரச்சினையாக விவாதிக்கப் பட்டது.

போல்ஷெவிக் கட்சியில், தேசியம் தொடர்பாக இரண்டு வகையான நிலைப்பாடு இருந்தது. அது அன்றைய காலகட்டத்து அரசியல் - வரலாற்று - பொருளாதார நிலைமைகள் காரணமாக உருவானது. எதையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதே சிறந்தது.

தேசியத்தை குறிக்க ரஷ்ய மொழியில் இரண்டு சொற்கள் உள்ளன.
1.நரோட்னிநொஸ்க் 
2.நாட்சீ

நரோட்னிநொஸ்க் என்ற சொல், சார் மன்னன் காலத்தில் புவி இயல், மானிடவியல் அறிஞர்களால் பாவிக்கப் பட்டது. ரஷ்ய மொழியில் நரோட்னி என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே, இதை தமிழில் "மக்கள் குழுமம், இனக்குழு" என்று மொழிபெயர்க்கலாம்.

போல்ஷேவிக்குகளை பொறுத்தவரையில், நரோட்னிநொஸ்க் சைபீரியாவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களுக்கு பொருத்தமான சொல். ஆனால், போலந்து, ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளில் வாழ்ந்த மக்களை வேறுபடுத்திப் பார்த்தனர். அவர்களது அரசியல் மேற்கத்திய மயப் பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே தேசியவாத கட்சிகள் உருவாகி இயங்கத் தொடங்கி இருந்தன.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடலாகாது. தமிழில் தேசியம் என்ற கருத்தியல் மட்டுமல்ல, அதைக் குறிக்கும் எந்தச் சொல்லும் பாவனையில் இருக்கவில்லை. அது ஒரு சமஸ்கிருதச் சொல். 19 ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த தமிழருக்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. 

உண்மையில், தேசியவாதம் என்ற அரசியல் சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி ஆகும்! (தமிழ்த் தேசியவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ள சங்கடப் படுவார்கள்.) ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் தான், முதன்முதலாக தேசியவாத சிந்தனைகள் தோன்றின. பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருளாக வந்தது தான் தேசியம். பிரெஞ்சு மொழியில் nationalité என்று சொல்வார்கள். 

நெப்போலியன் நடத்திய போர்களின் விளைவாக ஐரோப்பா முழுவதும் தேசியவாதக் கருத்துக்கள் பரவின. அது பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டது. ரஷ்யா, உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் தேசியம் பற்றிய கருத்தியல் பரவியது. 

தேசியம் என்பது, ஐரோப்பிய வரலாற்று கால கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து உருவானது. ஆகையினால், லெனின் மற்றும் போல்ஷெவிக் கட்சியினர், "நாஷியோநாலிட்டே" என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்த "நாட்சீ" என்ற சொல்லை தெரிவு செய்தனர். ஜெர்மன், டச்சு போன்ற பிற ஐரோப்பிய மொழிகளிலும் "நாட்சீ" என்றே அழைக்கப் படுகின்றது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், அதற்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் இனங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் மானிடவியல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கிருந்து வெளியான அறிவியல் நூல்களும் ரஷ்யாவில் விரும்பிப் படிக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் இருந்த உலகப் பார்வை அந்தளவு விசாலமானதாக இருக்கவில்லை. நாகரிகம் தொடர்பாக ஒரு பக்கச் சார்பான கருத்துக்கள் நிலவின.

நாங்கள் இன்றைக்கு தமிழர், சிங்களவர், தெலுங்கர் என்றால் தனியான (தேசிய) இனங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இந்தியாவும், இலங்கையும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், அன்று யாரிடமும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. காலனிய மக்களை ஆய்வு செய்ய சென்ற, ஆங்கிலேய மானிடவியல் அறிஞர்கள் பார்வையில், இந்தியா அல்லது இலங்கையில் வாழ்ந்த அனைத்து மக்களும் இனக்குழுக்களாக தெரிந்தனர். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் "அவர்கள் அனைவரையும்  (ஐரோப்பிய) நாகரிகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய பழங்குடி இனமாக" கருதினார்கள். அவர்களை நாகரிக மயப் படுத்துவது, "வெள்ளையர்களின் கடமை" (White men's Burden) என்று சொல்லிக் கொண்டனர்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் புவியியல், மானிடவியல் துறைகளில் படித்தவர்களுக்கும், மொத்தம் எத்தனை மொழி பேசும் இனங்கள் உள்ளன என்ற விபரம் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. சார் மன்னனின் தீவிரமான ரஷ்ய மயமாக்கல் கொள்கை காரணமாக, பல சைபீரிய பூர்வகுடி மக்கள் ரஷ்யர்களாக மாறி இருந்தனர். புள்ளிவிபரக் கணக்கு எடுத்தால், அவர்கள் தங்களை ரஷ்யர்கள் என்றே சொல்லிக் கொண்டனர். இதிலிருந்து தேசியம் தொடர்பாக ஒரு வளர்ச்சி அடைந்த கருத்தியல் உருவானது.

தேசியம் என்பது குறிப்பிட்ட மொழி சார்ந்தது அல்ல. தேசியம் தொடர்பாக கருத்துரைத்த மானிடவியல் அறிஞர்கள், ஐரிஷ் மக்களை உதாரணமாகக் காட்டினார்கள். நீண்ட காலமாக ஆங்கிலேய காலனியாக இருந்த படியால், ஐரிஷ் மக்கள் தமது மொழியை முற்றாக மறந்து விட்டனர். அவர்கள் (இன்றைக்கும் கூட) ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பேசி வந்தனர். இருப்பினும், அந்த மக்கள் மத்தியில் தாம் தனித்துவமான கலாச்சாரம் கொண்டவர்கள் என்ற உணர்வு இருந்தது. அதுவே ஐரிஷ் தேசியம் உருவாகக் காரணமாக இருந்தது.

தேசியம் என்பது ஒரே இனத்தைக் குறிப்பதில்லை. உண்மையில், தேசிய இனம் ஆயிரமாயிரம் வருடங்களாக மாறாத தன்மை கொண்டது என்ற கோட்பாடு ஒரு ஜெர்மன் கவிஞரின் சிந்தனையில் எழுந்தது. யோஹான் ஹெர்டர் (Johann Gottfried Herder, 1744 – 1803) கூறிய வரைவிலக்கணப் படி, "Volk" (உச்சரிப்பு: Folk) என்பது மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் வெளிப்படும் பொதுவான மக்கள் குழுமத்தின் ஆன்மாவைக் குறிக்கும். இன்றைக்கு அதைத் தான் இனவாதிகள் பின்பற்றி வருகின்றனர். (நாஸிகளும் Volk என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர்.) ஆகவே, தேசிய இனம் வேறு, இனம் வேறு. இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

1913 ம் ஆண்டு, ஸ்டாலின் எழுதிய தேசியக் கோட்பாடு ரஷ்ய போல்ஷெவிக் கட்சியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆரம்பத்தில் அது விவாதத்திற்கு விடுவதற்காக எழுதப் பட்டிருந்தாலும்,பிற்காலத்தில் அதுவே கட்சியின் சித்தாந்த நூலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ரஷ்யாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளும், தேசிய கொள்கை வகுப்பாளர்களும், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்டாலின் எழுதிய நூலை படிக்கத் தொடங்கினார்கள்.

அந்த நூலில் ஸ்டாலின், "தேசியம் என்பது ஓர் இனத்தை (race) அல்லது இனக்குழுவை (tribe) குறிப்பதல்ல" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார். அதற்கு மாறாக, வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த, பல்வேறு இனங்களையும், இனக்குழுக்களையும் ஒன்று சேர்த்து உருவான சமூகம் தான் தேசியம். பொதுவான மொழி, பொதுவான கலாச்சாரம், பிரதேசத்தை கொண்ட மக்கள் சமூகத்தின் உறுப்பினர்கள், பொது மனப்பான்மை ஒன்றை பகிர்ந்து கொள்கின்றனர். அது அவர்களது கலாச்சாரத்தில் எதிரொலிக்கும்.

இருப்பினும், அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பல்வேறு இனங்களை கொண்டது ஒரு தேசியம். அதற்கு ஸ்டாலின் பிரெஞ்சு தேசியத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். ரோமர்கள், கோலியர்கள், பிரித்தானியர்கள் (இன்றைய பிரிட்டன் அல்ல), டோயட்டானியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் கலவை அது. அதே மாதிரித் தான் இத்தாலிய தேசியத்தில் ரோமர்கள், எத்ருஸ்கன், கிரேக்கர்கள், அரேபியர்கள் என்று பல்வேறு இனங்கள் ஒன்று கலந்துள்ளன.

லெனினின் கண்ணோட்டத்தின் படி, தேசியம் என்பது முதலாளித்துவ அபிவிருத்திக் காலத்திற்கு உரியது. அதாவது, ஒரு தேசிய இனம் முதலாளித்துவ பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைந்திருக்கும். அது வர்க்க முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும். சுருக்கமாக, 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேசியங்களின் மாதிரியை பின்பற்றும்.

"லெனின் என்ன சொன்னார்?" என்று கேட்கும் தமிழ்த் தேசியவாதிகள், அதற்கு முதலில் லெனினின் தர்க்கீக வாதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: 
1. தமிழர் என்பது பல்வேறு இனங்கள் கலந்து உருவான தேசிய இனம். 
2. தமிழ்த் தேசிய இனத்தில் வர்க்க முரண்பாடுகள் இருக்கும்.


Tuesday, April 18, 2017

தனி நாடு கண்டால் தேசியவாதம் காணாமல் போய்விடும்


க‌ன‌டாவில் கியூபெக் மாநில‌ம் பிரிவ‌த‌ற்காக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ வாக்கெடுப்பு ப‌ற்றி சிலாகித்துப் பேசும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ல‌ரைக் க‌ண்டிருப்போம். ஆனால், அவ‌ர்க‌ளில் யாராவ‌து க‌ன‌டிய‌ பூர்வ‌ குடி ம‌க்க‌ளுக்கான‌ த‌னிநாடு ப‌ற்றிப் பேசுகிறார்க‌ளா?

கியூபெக் பிரிவினைக் கோரிக்கை, கால‌னிய‌ கால‌த்திய‌ ஏகாதிப‌த்திய‌ முர‌ண்பாடுக‌ளின் விளைவு என்ற‌ உண்மையை ப‌ல‌ர் உண‌ர்வ‌தில்லை. க‌ன‌டாவை கால‌னிப் ப‌டுத்திய‌ ஆங்கிலேய‌, பிரெஞ்சு ஏகாதிப‌த்திய‌ங்க‌ள், த‌ம‌க்குள் ச‌ண்டையிட்டுக் கொண்ட‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. இது எஜ‌மான‌ர்க‌ளுக்கு இடையிலான‌ ஆதிக்க‌ப் போட்டி. அதை தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ப் போராட்ட‌மாக‌ நினைத்துக் குழ‌ப்பிக் கொள்வ‌து அறிவிலித் த‌ன‌ம்.

இதிலே இன்னொரு வேடிக்கையை‌யும் குறிப்பிட‌ வேண்டும். கியூபெக் மாநில‌த்தில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் வாக்குரிமையுட‌ன் வாழ்கிறார்க‌ள். அவ‌ர்களில் பெரும்பான்மையானோர் த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள். இருப்பினும் கியூபெக் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளித்த‌ன‌ர். "குடியேறிக‌ளின் எதிர்ப்பு வாக்குக‌ளால் தோற்ற‌தாக‌" கியூபெக் தேசிய‌வாதிக‌ளும் அறிவித்திருந்த‌ன‌ர்.

எத‌ற்காக க‌ன‌டா வாழ்‌ த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் கியூபெக் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளிக்க‌ வேண்டும்? ஏனென்றால் தேசிய‌வாத‌ம் அடிப்ப‌டையில் ஒரு த‌ன்ன‌ல‌வாத‌ம். த‌ன‌து சொந்த‌ தேசிய‌ இன‌த்தின் ந‌ன்மைக‌ளுக்க‌ப்பால் வேறெதையும் சிந்திப்ப‌தில்லை. அத‌னால் தான், க‌ன‌டாவில், கியூபெக் தேசிய‌வாதிக‌ளுக்கும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ப‌ர‌ஸ்ப‌ர‌ புரிந்துண‌ர்வு இருக்க‌வில்லை. இருக்க‌வும் முடியாது.

கியூபெக் த‌னி நாடானால் த‌ன‌து நிலைமை என்னாகுமோ என்ற‌ அச்ச‌ம் அங்கிருக்கும் த‌மிழ‌ர் ம‌ன‌தில் எழுவ‌து இய‌ல்பு. ஏனைய‌ இன‌த்த‌வ‌ரின் ந‌ல‌ன்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ (கியூபெக்) தேசிய‌வாத‌த்தை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக் கொள்ளாத‌தில் த‌ப்பில்லை.

தேசிய‌வாத‌ம் பெரும்பாலும் அதிகார‌த்தில் இருக்கும் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு பெரிதும் உத‌வுகின்ற‌து. இந்த‌ உண்மையை ப‌ல‌ர் உணர்வ‌தில்லை. ஒரு ப‌க்க‌ம் கியூபெக் தேசிய‌வாதிக‌ளின் பிரிவினைக் கோரிக்கையை அங்கீக‌ரித்த‌ அதே க‌ன‌டிய‌ அர‌சு தான் ப‌ன்னாட்டுக் குடியேறிக‌ளை அங்கே குடிய‌ம‌ர்த்திய‌து.

தேசிய‌வாத‌ம் எப்போதும் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மை கொண்ட‌து. அத‌னால் ப‌ல்வேறு இன‌ங்க‌ளை ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க‌ முடியாது. ஒருநாளும் ந‌ட‌க்காது. அத‌னால் இறுதியில் ஆட்சியாள‌ருக்கே ஆதாய‌ம். இதைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் சொல்ல‌லாம்.

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.

தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌க்கும் நேர‌த்தில் அமோகமாக இருந்த ம‌க்க‌ள் ஆத‌ர‌வு, சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ரும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க‌ முடியாது. உதாரணத்திற்கு, இந்திய‌ சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் காட்டலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடிய காலத்தில் இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார்கள். அதே மாதிரி, தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய ANC க்கு முன்பிருந்த‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இப்போது இல்லை.அது அரசு அதிகாரத்திற்கு வந்த பின்ன‌ர், அதன் ஆத‌ர‌வாளர்க‌ள் ம‌த்தியில் இருந்தே வெறுப்பை ச‌ம்பாதித்த‌து.

இது இயற்கையான அரசியல் மாற்றம். ஈழத்தில் விடுதலைப் புலிக‌ளின் விட‌ய‌த்திலும் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌ வேண்டும். புலிக‌ள் வைத்திருந்த‌ "ந‌டைமுறை அர‌சு" உண்மையில் அவ‌ர்க‌ள‌து க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌ நிர்வாக‌ம் ஆகும். அப்போது அங்கே மும்முரமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் தொட‌ர்ந்த‌ ப‌டியால் அதைக் காட்டியே ந‌டைமுறை அர‌சின் குறைபாடுகளுக்கு நியாய‌ம் க‌ற்பித்தார்க‌ள். ஆக‌வே அத‌னை உண்மையான‌ த‌மிழீழ‌ம் என்று க‌ருத‌ முடியாது.

உல‌க‌ம் முழுவ‌தும் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ம் ஒரே நோக்க‌த்திற்காக‌ ந‌ட‌க்கின்ற‌ன‌. எத்தியோப்பியாவில் பேசப்படும் அதே மொழிகள் (அம்ஹாரி, திக்ரிஞ்ஞா) எரித்திரியாவிலும் பேசப் படுகின்றன. அவர்கள் ஒரே மொழி பேசினாலும் எத்தியோப்பியாவை பேரின‌வாத‌ அர‌சாக‌ க‌ருதினார்க‌ள். (விரும்பினால் அதை பிர‌தேச‌வாத‌ம் என்று அழைக்கலாம்.)காலனியாதிக்க காலத்தில் எரித்திரியா இத்தாலியின் காலனியாக இருந்தது. அதனால் அங்கு பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமே எரித்திரியர்களை ஒன்று சேர்த்தது.

ஈழ‌த்தில் புலிக‌ள் சிங்க‌ள‌ மொழி மேலாண்மையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தமிழரின் பெயரால் போராடினார்க‌ள். ஆனால் எத்தியோப்பியாவிலும், இல‌ங்கையிலும் ஒடுக்கும் அர‌சு ஒரே மாதிரி செய‌ற்ப‌ட்ட‌து. அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இர‌ண்டு நாடுக‌ளிலும் ஒரே மாதிரி இருந்த‌து. எரித்திரியா, ஈழ‌த்திற்கான‌ விடுத‌லைப் போராட்ட‌ங்களும் ஒரே மாதிரி ந‌ட‌ந்த‌து. சிலநேரம், யுத்த தந்திரங்களும், வியூகங்களும் ஒரே மாதிரி இருந்தன. உதாரணத்திற்கு, கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதல் மாதிரியான சம்பவம், ஏற்கனவே எரித்திரிய விடுதலைப் போரில் நடந்துள்ளது.

புலிகளால் ஒரு தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப் ப‌ட்டாலும் அத‌ன் இறுதி இல‌ட்சிய‌ம் ஒரு தேசிய‌ அர‌சு அமைப்ப‌து தான். அது எப்ப‌டி இருக்கும் என்ப‌து தான் கேள்வி. அடிப்படையில், தமிழ் அரசும் சிங்க‌ள‌ அர‌சு க‌ட்ட‌மைப்பை பின்ப‌ற்றிய‌தாக‌ இருக்கும். நிர்வாக அமைப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. அந்த‌ உண்மையை புலிக‌ளும் ம‌றுக்க‌வில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்பிருந்த ந‌டைமுறை அர‌சு அதை நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசு நியமித்த அரச அதிபர்கள், கிராம சேவகர்கள் அப்படியே இருந்தனர். அதே நேரம், சமாந்தரமாக புலிகளின் நிழல் அரசும் இயங்கியது. அதாவது, புலிகள் நியமித்த அரச அதிகார்கள், கிராம சேவகர்களும் இருந்தனர்.

ஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ள் என்று அழைக்க‌ப் ப‌டுவார்க‌ள். புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் அர‌ச‌ எதிர்ப்பாள‌ராக‌ க‌ருத‌ப் ப‌டுவார்க‌ள். ஏனென்றால், இறுதியில் புலிக‌ளின் நோக்க‌மும் த‌மிழீழ‌ "அர‌சு" அமைப்ப‌து தான் இல்லையா?

இப்போது க‌ண் முன்னால் காண‌க்கூடிய‌ ஆதார‌த்திற்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுத‌லை செய்வ‌த‌ற்காக‌ EPLF இய‌க்க‌ம் போராடிய‌து. EPLF என்ப‌து ந‌ம‌க்குப் புலிக‌ள் மாதிரி. அத‌ன் த‌லைவ‌ர் இசையாஸ் அபெவெர்கி ந‌ம‌க்கு பிர‌பாக‌ர‌ன் மாதிரி.

எரித்திரியா சுத‌ந்திர‌மான‌ த‌னி நாடான‌ பின்ன‌ர், முன்பு விடுத‌லை இய‌க்க‌மாக‌ இருந்த‌ EPLF ஆட்சி அமைத்த‌து. அத‌ன் த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த‌ பின்ன‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் எல்லைப் போர் ந‌ட‌ந்த‌து. எரித்திரிய‌ அர‌சு அதைக் கார‌ண‌மாக‌க் காட்டி, ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுத்து வ‌ருகின்ற‌து. தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்துவ‌தில்லை.

இப்போது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளுக்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், அதாவ‌து எரித்திரிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் பெருந்தொகை அக‌திக‌ள் ஐரோப்பா சென்று குடியேறி விட்ட‌ன‌ர்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் புலிக‌ளை ஆத‌ரிப்ப‌து மாதிரி, அன்று வ‌ந்த‌ எரித்திரிய‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். அதாவ‌து இன்றைய‌ நிலையில்‌ எரித்திரிய‌ அர‌ச‌ ஆத‌ர‌வாள‌ர்கள்.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் எரித்திரிய‌ அதிப‌ரின் வ‌ல‌துக‌ர‌மாக‌ ப‌த‌வியில் இருக்கும் ஒருவ‌ர் நெத‌ர்லாந்திற்கு வ‌ருகை த‌ந்திருந்தார். ந‌ம‌க்கு அன்ட‌ன் பால‌சிங்க‌ம் மாதிரி ஒருவ‌ர் என்று நினைத்துக் கொள்ளுங்க‌ள். அவ‌ர் அங்கு ஒரு ம‌காநாட்டில் பேசுவ‌த‌ற்கு ஏற்பாடாகி இருந்த‌து. ஆனால், க‌டைசி நேர‌த்தில் ம‌காநாடு ந‌ட‌த்த‌ அனும‌தி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ இட‌த்தில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து ஓய்ந்துள்ள‌து. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ம‌காநாட்டை ஒழுங்கு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள், நெத‌ர்லாந்தில் வாழும் இர‌ண்டாந்த‌லைமுறை எரித்திரிய‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள‌து பெற்றோர் இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ந்து குடியேறிய‌வ‌ர்க‌ள். த‌ம‌து பெற்றோர் மாதிரியே, இந்த‌ இளையோரும் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். ஐரோப்பாவில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையை சேர்ந்த‌ புலி ஆத‌ர‌வு த‌மிழ் இளையோருட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் இல‌குவாக‌ப் புரியும்.

அதே நேர‌ம், எரித்திரியா த‌னி நாடாக சுத‌ந்திர‌ம் அடைந்த பின்ன‌ர், பெரும‌ள‌வு அக‌திகள் ஐரோப்பா வ‌ந்துள்ள‌ன‌ர். அண்மைக் கால‌ அக‌திக‌ள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்க‌ள். இல்லாவிட்டால் அபெவெர்கி அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ம‌காநாடு ந‌ட‌க்க‌விருந்த‌ இட‌த்தில், அபெவெர்கி அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் (ந‌ம‌க்கு புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் மாதிரி) ஒன்று கூடி விட்ட‌ன‌ர். ம‌காநாட்டை ந‌ட‌த்த‌ விடுவ‌தில்லை என்று க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். நிலைமை எல்லை மீறிச் செல்வ‌தைக் க‌ண்ட‌ உள்ளூராட்சி ச‌பை ம‌காநாட்டை த‌டை செய்து விட்ட‌து.

அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எவ்வாறு புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எரித்திரிய‌ ம‌க்க‌ள் பிள‌வு ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ற‌ உண்மையை உண‌ர்த்திய‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ந்த‌ அக‌திக‌ள், த‌ம‌க்கு தாய‌க‌த்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்ற‌ன‌ர். அத‌ற்கு மாறாக‌ புல‌ம்பெய‌ர் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு அங்குள்ள‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது என்று வாதிடுகின்ற‌ன‌ர்.

Tuesday, April 04, 2017

மாட்டுத் திருடனை நையப்புடைத்து தண்டித்த யாழ்- தாலிபான் நீதி!



யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மாடு திருடச் சென்ற ஒருவனை, பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்தனர். (உதயன், 04-Apr-2017; http://onlineuthayan.com/news/25402) இந்தக் கும்பல் வன்முறைக்குப் பின்னர் குற்றுயிராகக் கிடந்தவனை, போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர். சட்டத்தைக் கையில் எடுத்த குழுவினரின் வன்முறைத் தாக்குதலை பாராட்டும் கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தன.

//அவர்களுக்கு ஒ௫ வ௫மானத்தை தந்து கொண்டு அவர்களோடையே வாழ்ந்து கொண்டு இ௫க்கும் ஒ௫ பசுமாட்டை திருடி ஏதோ ஒ௫ தேவைக்கு பயன்படுத்துவதனால். அந்த மாட்டை நம்பி இ௫க்கும் குடும்பங்களின் நிலை தான் என்ன?// என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

மாடு வளர்ப்பவர்களும் சிலநேரம் வசதியற்ற ஏழை மக்களாக இருப்பார்கள். அதே நேரம், திருடர்களும் ஏழைக் குடும்ப பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தத் திருடர்களால் பணக்காரனின் வீட்டில் களவெடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும். இதனால், பலவீனமான நிலையில் உள்ளவர்களிடம் தான் கைவரிசையை காட்டுவார்கள். மாடு களவு போவது மட்டுமே மிகப்பெரிய இழப்பு அல்ல. பிக்பாக்கட் திருட்டுக்களால் தமது சேமிப்புப் பணம் முழுவதையும் பறிகொடுத்த ஏழை உழைப்பாளிகள் பலருண்டு.

நாம் வாழும் உலகம் அப்படித் தான் இருக்கிறது. நாய் நாயைக் கடித்துண்ணும் காலம். முதலாளித்துவ பொருளாதாரமும், அது கொண்டு வந்த ஏற்றத்தாழ்வான சமுதாயமும், திருடர்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும். இதே அமைப்பு தொடர்ந்தால், அடுத்த நூற்றாண்டிலும் இதே மாதிரி திருட்டுச் சம்பவங்களுக்கு குறைவிருக்காது.

சிறிய திருட்டுக் குற்றத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கி விட்டால், "இப்படியான திருட்டு சம்பவங்கள் முற்றாக ஒழிக்கப் பட்டு விடும்" என்று சிலர் கனவு காண்கிறார்கள். அதைத் தானே, ஆப்கானிஸ்தானில் தாலிபானும், சிரியாவில் ஐ.எஸ்.ஸும் செய்தன? சவூதி அரேபியாவில் நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது. அவர்களால் திருட்டை முற்றாக ஒழித்து விட முடிந்ததா? மதவாதிகளும், இனவாதிகளும் ஒரு கற்பனை உலகில் வாழ்வதுடன், எம்மையும் அவ்வாறே நினைத்துக் கொள்ளுமாறு போதிக்கிறார்கள்.

தாலிபான் ஆட்சியின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் மாதிரி, யாழ்ப்பாணமும் கற்காலத்திற்கு திரும்பிக் கொண்டிருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. நாகரிகத்திற்கு முந்திய பண்டைய கால சமூகத்தில் நிலவிய தண்டனை வழங்கும் முறைகளில் இதுவும் ஒன்று. தாலிபான், ஐ.எஸ். ஆட்சியின் கீழ், திருட்டு போன்ற சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் பொதுமக்கள் கல்லெறிந்து தண்டனை வழங்கினார்கள். அப்போது அது சரியான தண்டனை தான் என்று நியாயம் கற்பித்தவர்களும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் மாடு களவெடுத்த பிரச்சினையில், ஒரு சிலர் "மாடு எங்கள் வீட்டில் சகோதரம் மாதிரி" என்று இந்துத்துவா நியாயம் பேசினார்கள். இன்னும் சிலர், ஒரு மாடு களவு போனால், அந்தக் குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று பொருளாதார நியாயம் பேசினார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு திருடனை கல்லெறிந்து கொன்றாலும் திருட்டை ஒழிக்க முடியாது. அப்படிப் பார்த்தால், திருட்டுக் குற்றத்திற்காக கையை வெட்டும் சவூதி அரேபியாவில் திருட்டுக்களே நடக்கக் கூடாது.

மாட்டுத் திருடனை பிடித்து அடிப்பதற்குப் பெயர் வீரம் அல்ல. அது வீட்டில் திருடும் சுண்டெலியை பிடித்து அடிப்பதற்கு சமமானது. தினந்தோறும் எமது உழைப்பும், பணமும் எமக்குத் தெரியாமலே களவு போகின்றது. எத்தனையோ வியாபாரிகள் பகற்கொள்ளை அடிப்பதும், அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும் அனைவருக்கும் தெரிந்த விடயங்கள்.

உங்களுக்கு வீரம் இருந்தால் அவர்களைப் பிடித்து அடித்து நொறுக்குங்கள் பார்ப்போம்? யாழ்ப்பாணத்தில் சாதாரணமான மணல் கொள்ளைக்காரனாக இருந்தவர்கள், பிற்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவிருக்கு பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாளிகை போன்ற வீடு கட்டி வாழ்கிறார்கள். உங்களால் முடிந்தால் அந்த வீட்டை அடித்து நொறுக்குங்கள் பார்ப்போம்?

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், வன்னியில் லைக்கா நிறுவனம் கட்டிக் கொடுத்த 150 வீடுகளுக்கு ரஜனி வருகை தரவிருந்த பிரச்சினை நடந்தது. அப்போது பலர், குறிப்பாக மாட்டுத் திருடனுக்கு அடிக்க வேண்டும் என்று வாதிட்டவர்கள், லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்காரனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார்கள்!

யார் இந்த அல்லிராஜா சுபாஸ்கரன்? டெலிபோர்ன் கார்ட் விற்பனையில், பாவனையாளர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் திருடிய கொள்ளைக்காரன். சந்தேகமிருந்தால், லைக்கா கார்ட் பாவித்தவர்களை கேட்டுப் பாருங்கள். விளம்பரத்தில் இருப்பதற்கு முரணாக பெருமளவு நிமிடங்கள் வெட்டப் படுவதைப் பற்றி குறைகூறுவார்கள். அதாவது டெலிபோன் கார்ட்டிற்கு பெறுமதியான சேவை தரப் படுவதில்லை. அதில் வெட்டப்படும் நிமிடங்கள் சட்டவிரோத கருப்புப் பணமாக மாறுகின்றது.

லைக்கா நிறுவனம் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான பணத்திற்கு வரி கட்டாமல் ஏய்ப்புச் செய்து இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப் படுகின்றன. இது சம்பந்தமான வழக்கு பிரான்ஸில் நடந்தது. பாரிஸ் லைக்கா அலுவலகத்தில் நடந்த பொலிஸ் சோதனையில், மூட்டை மூட்டையாக கருப்புப்பணம் சிக்கியது.

மாட்டுத் திருடனுக்கு அடித்ததன் மூலம் நீதி வழங்கியதாக பெருமைப்பட்ட நீதிமான்கள், கார்ட்டுத் திருடன் விடயத்தில் தலைகீழாக நடப்பது ஏன்? மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் வீடுகளை கட்டிக் கொடுத்ததற்காக, ஒரு திருடனை வள்ளல் என்று புகழ்வதற்கு வெட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கே யாருக்கும் வெட்கமில்லை. தங்கள் அறியாமையை இட்டு அக்கறையுமில்லை.

ஆங்கிலத்தில் Penny wise, pound foolish என்று சொல்வார்கள். சிறிய திருட்டுக்களை பற்றிக் கவலைப் படும் நாம் பெரிய திருட்டுக்களை கண்டுகொள்வதில்லை. உலகில் பெரிய திருடர்கள் இருக்கும் வரையில், மாடு களவெடுக்கும் சிறிய திருடர்களும் இருப்பார்கள் என்ற உண்மையை உணர மறுக்கிறோம்.

நீங்கள் திருட்டுக்கள் நடக்காத சமுதாயத்தில் வாழ விரும்பினால், அதற்கு ஒரு சமூகப் புரட்சி அவசியம். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரிய திருடர்களைப் பிடித்து மக்கள் நீதிமன்றில் நிறுத்தி, குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்.