Thursday, February 15, 2024

யாழ்ப்பாணத்தில் தீண்டாமை மதில் சுவர்!

"பிரபாகரன் மண்" என அழைக்கப்படும் தமிழீழத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்!!

*****

யாழ் குடாநாட்டில் வட மேற்கு முனையில் உள்ள கீரிமலையை  அண்டிய நிலப் பகுதிகள், போர் முடிந்த பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப் பட்டன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட  பகுதி ஒன்றில் உருவான "நல்லிணக்கபுரம்" என்ற பெயரிலான புதிய கிராமத்தை சுற்றி, ஆதிக்க சாதியினர் 15 அடி உயரத்தில் தீண்டாமை மதில் சுவர் கட்டி எழுப்பி உள்ளனர். காரணம்: அங்கு வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் சாதியை சேர்ந்த மக்கள். 

மயிலிட்டி போன்ற காரையோர பிரதேசங்களில் இருந்து போர் காரணமாக 30 வருடங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தலித் மக்கள், அந்த புதிய கிராமத்தில் மைத்திரிபால ஆட்சிக் காலத்தில் மீள் குடியேற்றம் செய்யப் பட்டனர். அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு சைவக் கோயில் இருந்துள்ளது. ஆனால் அங்கு இந்த ம‌க்களை வழிபட அனுமதிப்பதில்லை. அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாடை கூட படக் கூடாது என்பதற்காக கோவிலுக்கும், கிராமத்திற்கும் நடுவில் 15 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டியுள்ளனர். 

நல்லிணக்கபுரத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தலித் மக்களில் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். ஆகவே அவர்கள் கட்டிய கிறிஸ்தவ தேவாலயத்தில் சைவ சமயத்தவர்கள் ஒற்றுமையாக வழிபட்டு வருகின்றனர். இது சிவ சேனை போன்ற இந்துத்துவா சங்கிகளின் கண்களை உறுத்தியது.  கீரிமலையை அண்டிய பகுதி என்பதால், "இந்துக்களின் புனித பூமிக்குள் கிறிஸ்தவ மதவாதிகளை அனுமதிக்காதீர்கள்" என்று போஸ்டர் அடித்து ஒட்டி பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு பிரதேச சபையிலும் செல்வாக்கு இருப்பதால் அவர்களிடம் முறையிட்டு, "சட்டவிரோதமாகக் கட்டிய" தேவாலயம் உடைக்கப்பட வேண்டும் என அச்சுறுத்தி  வருகின்றனர். இதற்குள் சைவமும் சாதியமும் கைகோர்த்து செயற்படுகின்றன. 

இதை விட தலித் சமூகத்தில் இறந்தவர்களை அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்யும் அனுமதியும் மறுக்கப் பட்டு வருகின்றது. குடியிருப்புக்கு மிக அருகில், 50 மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்தை ஆதிக்க சாதி பிணங்களை எரிக்க பயன்படுத்துவதால், தலித் மக்கள் உள்நுழைய அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் பிணத்தை காவிக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து உள்ளூராட்சி சபையில் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இதற்குள் சாதிப் பிரச்சினை இருப்பதாக அவர்களே வெளிப்படையாக சொல்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் உள்ளூராட்சி சபையில் உள்ளனர். அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொண்டாலும், இந்த விஷயம் குறித்து எந்தவொரு தமிழ் ஊடகமும் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. 


யாழ் தீண்டாமை மதில் சுவர் தொடர்பாக அங்கு வாழும் மக்கள் வழங்கிய வாக்குமூலம்:

https://youtu.be/3BQJ8eg0sIc?si=5rDfYm80AWmk0nfh

Sunday, January 28, 2024

புதுக்குடியிருப்பில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு!



பிரபாகரன் குடியிருந்த புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு! 
தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் பாராமுகம்!
****************
தலித் மக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! 
தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!
****************

வன்னியில், புதுக் குடியிருப்பு பகுதியில், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் மந்துவில் என்ற கிராமம் வெள்ளாள பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்பு காரணமாக "சிவ நகர்" என்று பெயர் மாற்றப் படும் அபாயம் காணப் படுகிறது. நிலத்தை அபகரித்து 
சிவன் கோயில் கட்டி, அதை விஸ்தரித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்துக்கள் வாழாத ஓர் இடத்தில் (மந்துவில் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்), திடீரென சிவன் கோயில் கட்ட வேண்டிய தேவை என்ன? இது இந்து ஆலயத்தின் பெயரால் நடக்கும் நில ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறென்ன? அதாவது, அங்கிருந்த மணற் கேணி என்ற மிகப்பெரிய குளத்தினை மணல் இட்டு நிரப்பி, அதை ஒரு குட்டையாக மாற்றி வருகின்றனர். இதனால் நீர்ப் பாசனத்திற்காக குளத்தை நம்பியிருந்த சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் வறட்சி வந்தால் தரிசாக மாறும் அபாயம் காணப்படுகிறது. அதை நம்பி வாழ்ந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயம் செய்து தன்னிறைவு அடைய விடாமல் தடுத்து, அவ‌ர்களை தமது கூலி அடிமைகளாக வைத்திருப்பது தான் வெள்ளாள பேரினவாதிகளின் நோக்கமாக உள்ளது. இலங்கையில் சுதந்திரம் அடைந்த காலம் வரையில், வடக்கில் வெள்ளாளர் வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாக பள்ளர் இருந்தனர். அதை மீண்டும் கொண்டு வரும் நோக்கம் வெள்ளாள பேரினவாதிகள் மனதில் இருக்கலாம். 
இது சாதி ஒடுக்குமுறையின் பெயரால் நடக்கும் ஒரு வர்க்கப் பிரச்சனை. காலங்காலமாக நடந்து வருகிறது.

சிங்களப் பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்புக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புத்த விகாரை கட்டினால் இவர்கள் சிவன் கோயில் கட்டுகிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி இரண்டுமே நில அபகரிப்பு தான். 

வெள்ளாள பேரினவாதிகள் நில அபகரிப்பு செய்யும் மந்துவில் கிராமத்தில் இருந்து, சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருந்தூர் மலையில், சிங்களப் பேரினவாதிகள் விகாரை கட்டிய நேரம், தீவிர தமிழ்த்தேசியக் கட்சியான TNPF பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. "எமது தாயக நிலம் பறிபோகிறது" என்று கோஷம் இட்டனர். அந்த செய்திகளை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால் அதே அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மந்துவில் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை! 

ஏனிந்த பாரபட்சம்? ஏனென்றால் இங்கே ஆதிக்க சாதி அபிமானம் மேலோங்கி உள்ளது. சிங்களவர் செய்யும் அதே ஆக்கிரமிப்பு தான் வெள்ளாளர் செய்கின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்த ஊடகமும் அதைக் கண்டு கொள்ள மாட்டாது. 

வட இலங்கையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் சாதியால் உயர்த்தப்பட்ட வெள்ளாளர்கள் தான். அதனால் அவர்களது மனதிலும் சாதிவெறி இருக்கும். தேர்தலில் ஓட்டு பிச்சை கேட்டு தலித் மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டுவார்கள். ஓட்டு போட்ட பின்னர் மறந்து விடுவார்கள். மந்துவில் கிராம மக்கள் நில ஆக்கிரமிப்பு குறித்து அரசியல் தலைவர்களிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணம் என்ன? இத்தனைக்கும் தமிழரசு கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அந்த தொகுதியில் இருந்து தான் தெரிவானார். 

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மந்துவில் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கவனிக்கவும்: தமிழ்த் தேசியவாதிகள் குற்றம் சாட்டும் அதே சிங்கள அரசின் அதிகாரிகளாக இருப்பவர்கள் தமிழர்கள்! ஆனால் சாதியால் வெள்ளாளர்கள். அதனால் அவர்களும் தமது சாதியின் பக்கமே நிற்பார்கள். இலங்கையில் சிங்களப் பேரினவாதமும், தமிழ்- வெள்ளாள பேரினவாதமும் அடிப்படையில் ஒன்று தான். 

Source: 

Sunday, December 17, 2023

மியான்மரில் உயிர்த்தெழுந்த மக்கள் விடுதலைப் படை

 


மியான்மரில் உயிர்த்தெழுந்த கம்யூனிச விடுதலை இயக்கம். மியான்மரில் 2021 ம் நடந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து, அங்கு பல இயக்கங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னாள் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) உருவாக்கிய மக்கள் விடுதலைப் படையும்(PLA) ஒன்று. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

நிச்சயமாக இது எண்பதுகளில் இயங்கிய பழைய PLA அல்ல. எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய மூத்த கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில், இளைய தலைமுறையினரால் உருவாக்கப் பட்ட புதிய மக்கள் விடுதலைப் படை இது. அவர்களுடன் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 2 வருடங்களுக்கு முன்னர், 32 இளைஞர்களால் உருவாக்கப் பட்ட மக்கள் விடுதலைப் படையில் இன்று 1000 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் உள்ளனர். புதிய PLA, பெரும்பான்மையின பர்மியர்களைத் தவிர, பிற மொழிச் சிறுபான்மையினங்களை சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

உண்மையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த தலைவர்களே புதிய கம்யூனிச இராணுவத்தை வழிநடத்துகின்றனர். மியான்மரில் கம்யூனிச மீள் உயிர்ப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். (எண்பதுகளில் நடந்த போராட்டத்தின் போது கட்சியின் தலைவர்களாக பெரும்பாலும் பர்மியர்களே இருந்தனர்.) விதிவிலக்காக காரென் சிறுபான்மையினத்தவரின் பிரதேசத்தில் மட்டும் முரண்பாடு நிலவுகிறது. ஏனெனில் அங்கு வலதுசாரிய காரென் தேசியவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது.

கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், பிற விடுதலை அமைப்புகளுடனான நட்புறவு. குறிப்பாக இராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் தற்போது நிழல் அரசொன்றை நடத்துகின்றனர். அவர்கள் மூலம் PLA க்கு நிதி உதவி கிடைக்கிறது. இதை விட மறைமுகமான சீன உதவியும் இருக்க வாய்ப்புண்டு. அதை உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், வடக்கில் நீண்ட காலமாக கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்கும் சிறுபான்மையின தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சீன உதவி கிடைப்பது இரகசியம் அல்ல.

புதிய மக்கள் விடுதலைப் படை ஏற்கனவே பல இடங்களை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு உடனடியாக தமது கம்யூனிச கொள்கைகளை பரப்புரை செய்யவில்லை. "கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவார்கள்" என்று மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஏற்கனவே மியான்மர் இராணுவ அரசு மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்துள்ளமையும் ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன்னர் மியான்மர் இராணுவம் ஒரு மிகப் பலமான கம்யூனிச விடுதலைப் படையை எதிர்த்து போரிட்டமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

Saturday, December 02, 2023

தயவுசெய்து ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசாதீர்கள்!

 

தோழர் வே. பாலகுமாரின் எழுத்துக்களை தொகுத்து நூலாக வெளியிட்டமை நல்ல விடயம். ஆனால், சுமார் 15 வருடங்களாக ஈழப் புரட்சி அமைப்பு (EROS) என்ற மார்க்சிய லெனினிஸ இயக்கத்தின் தலைவராக இருந்த ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "சிறப்பு உறுப்பினர்" என தரம் தாழ்த்தி அவமானப் படுத்தி இருக்கத் தேவையில்லை. இது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரத்தை சிறுமைப்படுத்தியதாகவே கருத இடமுண்டு. அநேகமாக விற்பனையை நோக்கமாக கொண்டு அவ்வாறு தலைப்பிட்டிருக்கலாம்.

வே. பாலகுமார் கடைசி வரையில் ஒரு புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்களும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது மட்டுமல்ல இறுதி வரை புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை சந்தித்து பேசிய பாலகுமார் குழுவினர், பொது மக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக போர் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு 300 திரைப்பட கேசட் கொடுத்து தனது முடிவு என்னவென தெரிவித்தார். "தற்கொலைப் பாதையை நோக்கி செல்கிறார்கள்" என்று நம்பிக்கைக்குரிய சிலரிடம் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாலகுமார் குடும்பத்தினர் நந்திக் கடலில் புலிகளிடம் பிடிபட்டு திருப்பி அனுப்ப பட்டனர். கடைசியில் போர் முடிந்து புலிகளின் தலைவர்களும் சரணடைந்த நேரத்தில் தான் பாலகுமாரும், மகனும் இராணுவத்தில் அகப்பட்டனர். அதனால் இராணுவம் பாலகுமாரையும் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதி இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எந்த தகவலும் தெரியாத படியால் இராணுவம் கொன்றிருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது.

பிற்குறிப்பு: 
ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசும் அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவும்.