Saturday, January 28, 2012

மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை

மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியை சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சில நேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப் போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு, "எம்மிடம் அதிக வரி அறவிடுங்கள்." என்று கெஞ்சுகின்றனர். முதன் முறையாக அமெரிக்க பணக்காரர்கள், தாங்கள் வரி கட்டுவதில்லை என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை காலமும் "இடதுசாரிகளின் வெறுப்புப் பிரச்சாரமாக" கருதப்பட்ட விடயம், இவ்வாறு மக்கள் அரங்கில் நிரூபிக்கப் பட்டதாக நினைவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நியூ யோர்க் நகரில் முளைத்து, வெகு விரைவில் அமெரிக்க நகரங்கள் எங்கினும் கிளை விட்ட "Occupy " எனும் இயக்கம் தான் காரணம். "ஆக்கிரமித்தல்" எனும் பொருள் படும் Occupy இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது?

உலகிற்கே ஜனநாயகத்தை போதித்த நாடு என்று, அமெரிக்கா பீற்றிக் கொண்டாலும், அங்கே ஜனநாயகத்திற்கும் எல்லை வகுக்கப் பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அத்துடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது. Occupy இயக்கம் அதற்கு மாறாக, மக்களே நேரடியாக பங்கேற்கும் ஜனநாயகத்தை கோரி நிற்கின்றது. இதுவரை காலமும், பலவீனமாகவிருந்த இடதுசாரி சக்திகளுக்கு, மக்களை அணிதிரட்டுவது ஒரு சவாலாக இருந்தது. மேற்கத்திய அரசுகளும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை அறிவிக்காமலே நடைமுறைப் படுத்தி வந்தது. வாழ்க்கை வசதிகள் உயர்ந்திருந்த காலத்தில், மக்களுக்கும் சோஷலிசத்தின் பால் ஈடுபாடு ஏற்படவில்லை. உண்மையிலேயே அரசு மக்களுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததா, அல்லது இடதுசாரி சக்திகளை அமுக்குவதற்கான தந்திரமா என்பது வேறு விடயம். என்ன இருந்தாலும், இன்றுள்ள மக்கள் பெருமளவு இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப் படுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.

தொண்ணூறுகளின் மத்தியில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்டன. வளர்ச்சி அடைந்து வந்த தூர கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரமே அதிகளவு பாதிக்கப் பட்டது. அதற்கு மாறாக, 2008 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மேலைத்தேய நாடுகளை கடுமையாக பாதித்தது. உலகில் எந்த மூலையில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச மூலதனமானது தனது தாயகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டது. இம்முறை, வங்கிகள் இந்த நெருக்கடியை தோற்றுவித்தன. வங்கிகளை காப்பாற்றுவதற்காக, அரசு மக்களின் வரிப் பணத்தை எடுத்து செலவிட்டது. இதனால், வேலையிழப்புகள் ஏற்பாட்டது மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கப் பட்ட சலுகைகளும் குறைக்கப் பட்டன. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்திருந்தால், கடவுள் மேல் பழியைப் போட்டு விட்டு அரசு தப்பியிருக்கும். மக்களின் மத நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்களும் பொருளாதார நலன்கள் குறித்து சிந்திக்கப் பழகி விட்டனர். அதனால், நெருக்கடிக்கு காரணமான அரசையும், முதலாளித்துவத்தையும் நேரடியாகவே விமர்சிக்கின்றனர். மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், நகரங்களை ஆக்கிரமிக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவை பெருக்க காரணமாக அமைந்தது.

"பசித்த மனிதன், கோபமாக இருப்பான்." என்ற பழமொழிகேற்ப, மக்கள் உணவுக்காக வீதிக்கு வந்தும் போராட தயாராக இருப்பார்கள். அதனால் தான், அரசு உணவுப் பொருட்களுக்கு மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலக நாடுகளில், மத உணர்வு, இன உணர்வு என்பன, மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்தாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்திய தர வர்க்கமும், தன்னை சிறந்த மத/இன உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இது போன்ற கருத்துக்கள் அடக்கப் பட்டன. தேசியவாதத்தின் பெயரால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையும், அதைத் தொடர்ந்து கோடிக் கணக்கான மக்களை காவு கொண்ட யுத்தமும், மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால், இன உணர்வு என்றால் தள்ளிச் செல்லும் மேலைத்தேய மக்களிடம், அது போன்ற கருத்துக்கள் எடுபடப் போவதில்லை.

இருப்பினும், Occupy இயக்கத்தின் மீதான அரச அடக்குமுறையானது, எதிர்காலத்தில் இரண்டு வகையான அரசியல் சக்திகளை பலப்படுத்தும். "மக்களுக்கு உணவு மட்டும் முக்கியமில்லை. மதம், இன உணர்வு என்பனவும் முக்கியம்." என்று கூறி வரும் தீவிர வலதுசாரி பாஸிச சக்திகளை, சில நேரம் அரசே ஊக்குவிக்கலாம். அதற்கு எதிராக, தீவிர இடதுசாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், Occupy இயக்கத்தை தோற்றுவித்த இடதுசாரிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் இறங்கி சீரழியலாம். ஏனெனில், "மக்கள் போராடுவார்கள், மக்கள் தீர்மானிப்பார்கள்." என்று அரசியல் மயப் படுத்தப் படாத மக்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். முதலாளித்துவ அரசும், ஊடகங்களும் இருக்கும் வரையில் மக்களை சிந்திக்க விட மாட்டார்கள்.


Occupy இயக்கத்தை ஒடுக்கியதில் ஊடகங்களின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆரம்பத்தில், மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப் பட்டன. நாட்கள், வாரங்களாகியும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால், மக்களின் ஆதரவும் பெருகியதால், வேறு வழியின்றி ஊடகங்கள் கவனத்தை திருப்பியிருந்தன. அப்போதும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, பொலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்கியதை அறிவிக்கவில்லை. பங்குச் சந்தை தரகர்களும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும், "மனித உரிமைகளை மதிப்பதாக" பாசாங்கு செய்வதற்காக எதிர்ப்பாளர்களை பொறுத்துக் கொண்டார்கள். நாள் செல்லச் செல்ல அவர்களது பொறுமையும் எல்லை கடந்து விட்டது. அடக்குமுறை பிரயோகித்து போராட்டத்தை முறியடிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர். கவனிக்கவும், இதே முதலாளிகள் தான், தங்களிடம் அதிக வரி அறவிடுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். முதலாளிகள் மனம் திருந்தவில்லை. நேரத்திற்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

அமெரிக்காவில், எதிர்காலத்தில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய அரசு சாரா அமைப்பிற்கு, பெரும் தனவந்தர்கள் புரவலர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அதே போன்று, இலாப நோக்கை குறிக்கோளாக கொண்டு நடத்தப் படும் ஊடகங்களும், Occupy இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதும் சாமானியரின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள், இம்முறையும் எதிர்மறையான செய்திகளை பரப்பின. இந்தச் செய்திகள், Occupy ஆதரவாளர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தன. நகர மத்தியில், Occupy போராட்டம் நடைபெற்ற இடங்களில், கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. போராட்டக் காரர்கள் தங்குவதற்காக, நண்பர்களுடன் அரசியல் விவாதங்கள் நடத்தும் நோக்குடன் அமைக்கப் பட்ட கூடாரங்கள்.

கறையான் புற்றெடுக்க பாம்பு நுழைந்தது போல, பல சமூக விரோதிகளும் கூடாரங்களுக்குள் தங்குவதாக செய்தி பரப்பப் பட்டது. அந்த இடத்தில், குடிகாரர்களும், திருடர்களும் நடமாடுவதாகவும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப் பட்டது. இதனால் தமது பாதுகாப்பு கருதி பல பெண்கள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கினார்கள். இதை விட, வீடற்றவர்கள், உல்லாசப்பிரயாணிகள் போன்ற போராட்டத்திற்கு சம்பந்தமற்ற நபர்களும், இலவசமாக கிடைக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். நகரின் மத்தியில் இலவசமாக தங்குமிடமும், இலவச உணவும் கிடைக்கிறது. எல்லாம் Occupy இயக்கத்தின் புண்ணியத்தால் கிடைக்கின்றன. சுருங்கக் கூறின், "Occupy ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும்" ஊடகங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன.

எகிப்தில், லிபியாவில், சிரியாவில் Occupy ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம், ஊடகங்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பவில்லை. அதற்கும் முதல், பெல்கிரேட் (செர்பியா), கியெவ் (உக்ரைன்), திபிலிசி (ஜோர்ஜியா) போன்ற நகரங்களிலும் இதே மாதிரி கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு, "சோரோஸ் பவுண்டேஷன்" போன்ற அமெரிக்க கோடீஸ்வரர்களின் அமைப்புகள் நிதி வழங்கின. அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம், "நீதிக்கான மக்கள் எழுச்சி", "ஜனநாயகப் புரட்சி" என்று வர்ணித்தார்கள். இந்த நகரங்களில் நடந்த போராட்டங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி விட்டிருந்ததாக, எப்போதாவது கேள்விப் பட்டிருப்போமா? ஊடகங்களில் அவ்வாறான செய்தி வந்திருக்குமா? "எமது அரசியல் நண்பர்கள் செய்வதெல்லாம் புரட்சி, எமது அரசியல் எதிரிகள் செய்வதெல்லாம் சமூக விரோதச் செயல்." என்பது தான் மேற்கத்திய ஊடகங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது.

இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

Tuesday, January 24, 2012

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன?

"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை.

புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள்.

ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம்.

1988 -1989 காலத்திய, ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர்.

நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார். இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார். இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள்.

குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா?

(இன்னும் வரும்)



மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group

இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

Sunday, January 22, 2012

லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்


மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு, உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை, பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.
அரசியல் செயற்பாட்டாளரும் தொழில்சங்கவாதியுமான பி.எ.காதர் அவர்களுடனான திறந்த அரசியல் உரையாடலும் இம்முறை எழுத்தாளர்களான கலையரசன், றஷ்மி ஆகியோரின் இரு நூல்கள் பற்றிய அறிமுகமும் கருத்துரையும் நடைபெற உள்ளது.

காலம்-29-01-2012 – 11.30am -06pm

இடம்:
South Ruislip Methodist Church Hall,
Queens Walk, Ruislip HA4 0NL


கலையரசன், சுசீந்திரன் (ஜெர்மன்), நிர்மலா இராஜசிங்கம், சிவகுமார்(சரிநிகர்), சந்தூஸ் பரராஜசிங்கம், வேலு, றஷ்மி, பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும். உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்.
தயவு செய்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.


தொடர்புகளுக்கு- email – eathuvarai@gmail.com

tel – 078 17 262980,075 33 087523,074 35 703902


மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.

நன்றி

இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: