Tuesday, May 14, 2013

இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : நான்கு)



உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்

உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், ஏராளமான நவீன வைத்தியர்கள் இருந்தனர். மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது. 

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார்.  "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்,"    என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார். 
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள்  The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? சில ஆயிரம் சிலுவைப் படைவீரர்களை ஒரு சாம்ராஜ்யத்தால் எதிர்க்க முடியாமல் போனதெப்படி? ஐரோப்பாவில் இருந்து சிலுவைப்படைகள் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பாக்தாத் சக்கரவர்த்தி அந்நியப்படைகளினால் ஆட்டுவிக்கப் படும் பொம்மையாக மாறியிருந்தார். மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

செல்ஜுக் துருக்கியர்கள் நிலங்களை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, குறுநில மன்னர்களைப் போல (ஆனால் இறைமையுள்ள ஆட்சியாளர்களாக) ஆட்சி செய்தனர். ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


துருக்கி யுத்தத்தில் சிலுவைப் படைகளின் வெற்றி

அன்று கிரேக்க-துருக்கிப் பகுதிகளுக்கு இடையிலான யுத்தம், மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரச்சினையாக தோன்றும். ஆனால் நிலைமை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. (கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார். 

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும்,  வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம்  தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. 

கொள்ளைக்காரர்களும், யாத்ரீகர்களும் நிறைந்திருந்த காடையர் கூட்டத்தை, அன்று துருக்கிப் படைகள் இலகுவாக விரட்ட முடிந்தது. ஆனால் தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே, கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.


(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, May 07, 2013

பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்


பெர்லின் சுவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்றுண்டு. "கிழக்கு ஜெர்மனியில், கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து, சுதந்திர மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடிக் கொண்டிருந்த அகதிகளை தடுப்பதற்காக, பெர்லின் மதில் கட்டப் பட்டது. அதனால் அவமானத்தின் மதில் சுவர் என்று அழைக்கப் பட்டது...."

நாம் அன்றாடம் தகவல்களைப் பெற நம்பி இருக்கும் ஊடகங்கள் மட்டுமல்ல, பாட நூல்கள், வரலாற்று நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நம்பிக்கையாளர்களால் எழுதப் படுகின்றன. அதனால், எமக்கு எப்போதும் ஒரு பக்க தகவல்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் பாதி உண்மைகள் மட்டுமே. மீதி உண்மைகள் எங்கேயோ உறங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான், கம்யூனிச நாடுகளில் தஞ்சம் கோரிய மேலைநாட்டு அகதிகள். அப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு, அரசியல் பிரச்சார சாதனங்களால் நாங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளோம்.

Wo ist Lieutenant Adkins? (லெப்டினன்ட் அட்கின்ஸ்  எங்கே?) என்ற நூல் ஜெர்மனியில் வெளியாகி உள்ளது. The Atlantic Times என்ற ஜெர்மன் பத்திரிகை ஆசிரியர் Peter H. Koef  அந்த நூலை எழுதி இருக்கிறார். (நூல் ஜெர்மன் மொழியில் மட்டுமே கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக தெரியவில்லை. இந்த தளத்தில் ஆங்கில மொழியில் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது:Deserting the wrong way: Why soldiers went East)  இரண்டு வருடங்களாக, முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் உள்துறை அமைச்சின் ஆவணங்களை ஆராய்ந்து, அந்த நூலை எழுதியுள்ளார். சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத் துறையான Stasi, தனது நாட்டில் வசித்த மேலைத்தேய நாட்டவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருந்தது. அது பற்றிய மேலதிக விபரங்களை தேடிய பொழுது, சுமார் 200 அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைவீரர்களும், தஞ்சம் கோரியிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

1961 ம் ஆண்டு தான், பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதற்கு முன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விசா எடுத்து, கிழக்கு - மேற்கு பெர்லின் பகுதிகளுக்கு இடையில் சுலபமாக சென்று வர முடிந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்து, பெருமளவு மக்கள் மேற்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது உண்மை தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், மேற்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது குறித்து யாரும் பேசுவதில்லை. அந்த தகவல், சரித்திர நூல்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

அது மட்டுமல்ல, நேட்டோ படைகள் பல உளவாளிகளை, கிழக்கு ஜெர்மனிக்குள் அனுப்பி வைத்தன. அது குறித்தும் எல்லோரும் மௌனம் சாதிக்கின்றனர். அந்தக் காரணத்தை சொல்லித் தான், அதாவது "மேற்கத்திய ஊடுருவலாளர்களை, உளவாளிகளை வர விடாமல் தடுப்பதற்காக" பெர்லின் மதில் கட்டப் போவதாக, கிழக்கு ஜெர்மனி அன்று  அறிவித்தது. அவர்களின் பக்கத்தில், அதற்கு "பாசிச தடுப்புச் சுவர்" என்று பெயரிடப் பட்டது. மேற்கத்திய நேட்டோ படைகளில் இருந்து, கிழக்கு ஜெர்மனிக்குள் சென்றவர்கள் அனைவரும் உளவாளிகள் அல்லர். பல உண்மையான அரசியல் அகதிகளும் சென்றிருந்தனர். பெர்லின் மதில் கட்டப் படுவதற்கு முன்னர், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய, 200 மேற்கத்திய அரசியல் அகதிகள் பற்றித் தான், இந்த நூல் பேசுகின்றது.

12-1-1954 அன்று, William D. Adkins என்ற 23 வயதான அமெரிக்க இராணுவ வீரர், ஆஸ்திரியாவில் Amstetten நகரில் இருந்த சோவியத் படைமுகாமில் அகதித் தஞ்சம் கோரினார். தான் கம்யூனிசக் கொள்கைகளை நம்புவதாகவும், தனது ஜெர்மன் காதலியின் ஆலோசனையின் படி, சோவியத் யூனியன் சென்று வாழ விரும்புவதாக சொல்லி இருக்கிறார். சில நாட்கள் சோவியத் இராணுவ முகாமில் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருந்தார். அப்போது அவர் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "நான் ஒரு தேசத் துரோகி அல்ல. எனது தாய்நாடான அமெரிக்கா, தவறான தலைவர்களால் ஆளப் படுகின்றது. சோவியத் பகுதிகளில் வாழும் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். நான் சோவியத் படைகளில் சேரும் காலம் ஒன்று உருவாகும். அன்று அமெரிக்காவை விடுதலை செய்யும் போரில் பங்குபற்றுவேன்."

அட்கின்ஸ் தன்னை சோவியத் யூனியனுக்கு அனுப்புமாறு விரும்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது விருப்பத்திற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை Dresden நகருக்கு கூட்டிச் சென்று, அங்கே Jack Forster என்ற பெயரில் போலி அடையாள அட்டை ஒன்றை செய்து கொடுத்தார்கள். Stasi க்காக வேலை செய்ய ஒத்துக் கொண்டதால் மாதாமாதம் 500 மார்க் சம்பளம் கொடுக்கப் பட்டது. அது அன்றைய கிழக்கு ஜெர்மனியில் சராசரி சம்பளத்தை விட சற்று அதிகமாகும். Jack Forster, மேற்கு ஜெர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைவீரர்களை, இராணுவத்தை விட்டு தப்பியோடுமாறு ரேடியோ பிரச்சாரம் செய்வதற்கு உதவினார். Stasi யின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டதால், சம்பளம் உயர்த்தப் பட்டது. கார்ல்மார்க்ஸ் ஸ்டாட் (தற்போது: Chemnitz) நகர பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பெயர், John  Reed  என்று மாறி இருந்தது.

1963 ம் ஆண்டு, அட்கின்ஸ் மாயமாக மறைந்து போனார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல் எதுவும், Stasi ஆவணங்களில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார். கடைசியாக, மேற்கு பெர்லின் நகர் பகுதியில், Jörg Brandi என்ற நண்பருடன் சேர்ந்திருக்க காணப் பட்டார். அதற்குப் பிறகு எந்த சுவடும் இல்லாமல் மறைந்து விட்டார்.  Jörg Brandi என்பவர், மேற்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்தவர். (அவர் மேற்குலக உளவாளியாக இருக்கலாம்.) கிழக்கு பெர்லின் சென்றிருந்த சமயம் அட்கின்சை சந்தித்து இருக்கிறார். இருவருமாக திட்டம் தீட்டி, மேற்கு ஜெர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒருவருடன் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஒரு நாள், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, அவரது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு மேற்கு பெர்லினுக்கு பயணம் செய்திருக்கிறார். யாரும் அவரை சந்தேகப் படவில்லை.

ஒரு முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியரான Peter H. Koef , தனது நூலுக்கு  "லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்று தலைப்பிட்டதும் ஒரு காரணத்தோடு தான். ஏனெனில், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த அமெரிக்க அகதிகளுக்குள், அட்கின்ஸ் போன்ற கருங்காலிகளும் இருந்துள்ளனர். அந்த நூலில், பல அகதிகளின் கதைகள் சொல்லப் பட்டிருந்தாலும், அட்கின்ஸ் பற்றிய கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால், அவர் ஒரு அமெரிக்க உளவாளியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனை நூலாசிரியரே உறுதிப் படுத்துகின்றார். அட்கின்ஸ் யாருடைய காதலுக்காக சோவியத் யூனியன் செல்ல விரும்பினாரோ, அந்த ஜெர்மன் பெண்ணை பின்னர் கைவிட்டுள்ளார். அவருக்கு பிறந்த மகளையும் விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்கு ஓடியுள்ளார். இன்று ஜெர்மனி ஒன்றிணைந்த பின்னரும், பிரிந்த  தந்தையை  தேடும் மகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. "அட்கின்ஸ் ஒரு CIC  உளவாளி," என்று அவரை விவாகரத்து செய்த முன்னாள் மனைவி கூறுகின்றார்.

Counter Intelligence Corps (CIC) என்பது, ஐரோப்பாவில் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதற்காக, அமெரிக்க படைகளினால் பயன்படுத்தப் பட்ட இரகசிய அமைப்பாகும். அவர்களில் பலர், கிழக்கு ஜெர்மனிக்குள்ளேயும் செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரியிருந்த அமெரிக்கர்களை, தேடிக் கண்டுபிடித்து கண்காணிப்பது, முடிந்தால் கடத்திச் செல்வது, அல்லாவிட்டால் கொன்று விடுவது கூட, அவர்களுக்கு இடப்பட்ட பணியாகும். "தேசத் துரோகிகளை" கடத்துவதோ, கொலை செய்வதோ, மிக மிக அரிதாகவே நடந்தது. அதற்கு காரணம், இன்னொரு பக்கத்தால், Stasi உளவாளிகளும் மேற்கத்திய அகதிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  அட்கின்ஸ் ஒரு அமெரிக்க CIC  உளவாளி என்பதற்கான வேறு ஆதாரங்கள் உள்ளனவா? 

அட்கின்ஸ் சோவியத் இராணுவ முகாமில் தங்கியிருந்த காலத்தில், உறவினருக்கு எழுதிய கடிதம் போலியாக இருக்கலாம். தன்னை விசாரித்த அதிகாரிகள், அந்தக் கடிதத்தை உடைத்து வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே, "கம்யூனிசத்தை புகழ்ந்தும், சோவியத் படையில் சேர விரும்புவதாகவும்..." எழுதி இருக்கலாம். அனேகமாக, அந்த உத்தி பெரிதும் பயன்பட்டிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, மேற்கு பெர்லினுக்கு தப்பிச் சென்ற பின்னர், அமெரிக்க அரசு வேறு ஒரு பெயரில் அடையாள அட்டை, கடவுச் சீட்டு செய்து கொடுத்திருக்கலாம். அதனால் தான், இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு "மாயமாக மறைந்து போனார்". மேலும், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடிய அகதிகள் மீது, "தேசத் துரோக வழக்கு" போடப் பட்டுள்ளது. அவர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தால், நிச்சயமாக சிறையில் அடைக்கப் படுவார்கள். அட்கின்ஸ் மீது அப்படி எந்த தேசத் துரோக வழக்கும் வழக்கும் போடப்படவில்லை. அது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாகவோ, எதிரி நாட்டில் தஞ்சம் கோரியதாகவோ, எந்தத் தகவலும் அமெரிக்க ஆவணங்களில் காணக் கிடைக்கவில்லை.

மேற்கு ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய,  நூற்றுக் கணக்கான கறுப்பின படைவீரர்கள், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடி அரசியல் தஞ்சம் கோரி இருக்கிறார்கள். அந்தப் பிரிவினர், என்றென்றும் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அப்போது நடந்த கொரிய யுத்தத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில், யுத்தத்தை வெறுக்கும் படையினரும், அமெரிக்க  இராணுவத்தை விட்டு ஓடினார்கள். அறுபதுகளுக்குப் பிறகு, பல வருடங்கள் வீட்டைப் பிரிந்திருந்ததால், அல்லது "தேசத் துரோக வழக்கு" வாபஸ் பெறப் பட்டதால், பல அமெரிக்க அகதிகள் தாயகம் திரும்பிச் சென்றிருக்கின்றனர். ஆனால், இன்று வரையில், ஒரு கறுப்பின அமெரிக்கர் கூட அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று வாழ விரும்பவில்லை. அவர்கள் நிரந்தரமாகவே கிழக்கு ஜெர்மனியில் தங்கி விட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஐம்பதுகளில், அறுபதுகளில் இருந்த அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை, இனப் பாகுபாடு மிகவும் மோசமாக இருந்தது. கறுப்பின மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் பிரஜைகளாக இருந்தாலும், அமெரிக்கப் படையில் சேவை செய்தாலும், எந்த உரிமையுமற்று வாழ்ந்தனர். இந்த ஒடுக்குமுறை காரணமாக, கறுப்பின மக்களுக்கு இயல்பாகவே கம்யூனிசத்தின் பால் ஈர்ப்பு இருந்தது. சோவியத் யூனியன் பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் கம்யூனிசத்தை பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் இனப்பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது. அவர்களது நிலையில் இருந்து பார்த்தால், அதுவே போதுமானது.

பல கறுப்பின அகதிகள் மத்தியில், (கம்யூனிச) கொள்கை குறித்து அதிக அக்கறையில்லா விட்டாலும், வெள்ளையின மங்கையர் பால் கொண்ட ஈர்ப்பும் அவர்களை கிழக்கு ஜெர்மனிக்கு செல்லத் தூண்டியது. அதாவது, அன்றைய அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபன், வெள்ளையின காதலி வைத்திருப்பதே ஒரு பெரும் போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு போன்று, அந்த விடயம் அமெரிக்க சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கும். ஆனால், கிழக்கு ஜெர்மனியில் நிலைமை வேறு. அங்கே, ஜெர்மன் மகளிர், கறுப்பின அமெரிக்கர்களை பெரிதும் விரும்பினார்கள். சமூகத்திலும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள். அப்படியான ஒரு வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பனிப்போர் காலத்தில், முதலாளித்துவ நாடுகளும், சோஷலிச நாடுகளும் தமக்கு விருப்பமான அகதிகளை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான அகதிகள் ஒரு வகை. ஜெர்மனியில் நடந்தது போல, வேறு பல நாடுகளிலும் அகதிகள் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரிய கிழக்கு ஐரோப்பிய அகதிகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரிய மேற்கத்திய நாட்டு அகதிகள் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. கிரேக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் முறியடிக்கப் பட்டதும், பல்லாயிரம் கம்யூனிஸ்ட் போராளிகள், தமது குடும்பங்களுடன், அருகில் இருந்த சோஷலிச நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அது ஒரு பெரிய யுத்தம் என்ற படியால், சரித்திர நூல்களில் பதியப் பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில், இது போன்று நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.

"லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்ற  என்ற நூல், விசேடமாக முன்னாள் அமெரிக்கப் படையினரை பற்றி மட்டுமே ஆராய்கின்றது. நேட்டோ படைகளை விட்டோடி, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய அகதிகள், சிலநேரம் சந்தேகத்துடன் பார்க்கப் பட்டாலும், பொதுவாக அவர்களின் சேவை கிழக்கு ஜெர்மனிக்கு பெரிதும் தேவைப் பட்டது. அரசு ஒழுங்கு படுத்தும் பொதுக் கூட்டங்களில், ஊர்வலங்களில், மேற்குலக அகதிகள் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களை, மேற்கு நோக்கிய பிரச்சார ஊடகங்களில், முழுநேரச் செய்தியாளர்களாக ஈடுபடுத்த முடிந்தது. சராசரி ஜெர்மன் குடிமகனுக்கு கொடுப்பதை விட, அதிக ஊதியம் கொடுத்து சிறப்பாக கவனிக்கப் பட்டார்கள். அதனால், பல மேற்குலக அகதிகளுக்கு சோஷலிச ஜெர்மனி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. தாயகத்தை, உறவினர்களை பிரிந்திருக்கும் சோகம் மட்டுமே அவர்களை வாட்டியது.


மேலதிக தகவல்களுக்கு:

1. நூல் அறிமுகம் (ஆங்கில மொழிக் கட்டுரை) Deserting the wrong way: Why soldiers went East

2. ஜெர்மன் மொழி நூலை வாங்குவதற்குWo ist Lieutenant Adkins? Das Schicksal desertierter Nato-Soldaten in der DDR; http://www.amazon.de/Lieutenant-Adkins-Schicksal-desertierter-Nato-Soldaten/dp/3861537095

3. ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளில் இருந்து தப்பியோடி, கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய Victor Grossman, 1994 ம் ஆண்டு, அவர் மேலான வழக்கு வாபஸ் பெறப் பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். 
Crossing the River: A Memoir of the American Left, the Cold War, and Life in East Germany; அந்த நூலை வாங்குவதற்கு: 
http://www.amazon.com/Crossing-River-Memoir-American-Germany/dp/1558493719/ref=la_B001K8SVQG_1_1?ie=UTF8&qid=1367875620&sr=1-1


***********************


சோஷலிச நாடுகளில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள் பற்றிய வேறு பதிவுகள்:

1. சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!
2. வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்