Friday, March 16, 2012

கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்


பணப்புழக்கம் இல்லாத, எந்த சந்தர்ப்பத்திலும் பணத் தாள்களை பயன்படுத்தாத, சமுதாயம் ஒன்றை காட்ட முடியுமா? கிரேக்கத்தில் அப்படியான சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிரேக்க மக்கள், தீமையின் அவதாரமான பணத்தை, தமது வாழ்க்கையில் வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். கிரேக்க நாடு, யூரோ நாணயத்தை பயன்பாட்டில் கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, நிதி நெருக்கடி காரணமாக, மக்களிடம் யூரோவின் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. கையில் காசில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தற்பொழுது ஒரு மாற்றுப் பொருளாதார சமூகத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த சமூகத்தை, கிராமிய, அல்லது நகர மட்டத்தில், நீங்களும் உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஏழைகள் நிறைந்த, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியம் காணப்படுகின்றது. அதற்கு முதல், கிரேக்க மக்கள், பணமின்றி எப்படி வாழ்கின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.

கிரேக்க நாட்டுப்புறங்களில், மாற்று நாணய வலையமைப்பு (Alternative Currency Network ) என்றொரு கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் உறுப்பினராக சேரும் ஒருவர், தனக்குத் தெரிந்த பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் வீட்டில் சவர்க்காரம் செய்யும் கைத்தொழிலை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உற்பத்தி செய்த சவர்க்காரத்திற்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஒரு சவர்க்காரத்தின் விலை 1 கரெட்டி (kaereti). வலையமைப்பை சேர்ந்த நபர்கள், வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர் எத்தனை கரெட்டிக்கு சவர்க்காரம் விற்கின்ராரோ, அந்த அளவுக்கு, விரும்பிய பொருட்களை பண்டமாற்றாக பெற்றுக் கொள்ளலாம். அது தேன், பழம், காய்கறி, இறைச்சி, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் எவ்வளவு கரெட்டிக்கு விற்றார், எவ்வளவு கரெட்டிக்கு பொருட்களை வாங்கினார், என்பன போன்ற விபரங்கள் கணனியில் குறித்து வைக்கப் படும். அமைப்பில் உள்ள உறுப்பினர்களின், அத்தனை கணக்கு வழக்குகளும், மத்திய கணணி ஒன்றில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணப் பரிமாற்றத்தில், யூரோ நாணயங்கள் பாவனையில் இல்லாததால், யாரும் ஊழல் செய்து பணம் சேர்க்க முடியாது.

இந்த சமூக வலையமைப்பில் உள்ள உறுப்பினர்களே, தமக்கு எந்தப் பொருள் தேவை என்பதையும், விலையையும் தீர்மானிக்கின்றனர். ஓரிடத்தில் பண்டமாற்று நடைபெற்றால், அதிலே சம்பந்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், பொருளின் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நாணயப் பரிமாற்றத்தில் நிச்சயிக்கப் பட்ட தொகையை, ஒருவர் மற்றவரது கணக்கில் குறித்துக் கொள்வார்கள். "சமூக நாணயம்" என்றழைக்கப் படும் கரெட்டி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யூரோ, டாலர் அல்லது வேறு நாணயத்தை பயன்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. கரெட்டி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? "நான் ஒருவருக்கு, பிரதிபலன் எதிர்பாராமல், சிறு உதவி செய்கிறேன்." என்று அர்த்தம்.

கிரேக்கத்தில் இன்று பல்கிப் பெருகி வரும், மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். விவசாய விளை பொருட்கள், மீன், வைன், மரத் தளபாடங்கள், சவர்க்காரம், ஒலிவ் எண்ணை, கைவினைப் பொருட்கள், சாக்லேட், ஆடை வகைகள், செருப்பு, நகைகள்... இன்னும் பல. உங்களுக்கு என்னென்ன பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப் படுகின்றதோ, அத்தனையும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வாங்குவதற்கு, நீங்கள் ஒரு யூரோ நாணயம் கூட கையில் வைத்திருக்கத் தேவையில்லை. அதிலே பெரிய சிக்கல் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண வர்த்தக நிலையத்தில் நடப்பதைப் போல, ஒவ்வொரு பண்டமும் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், பரிமாற்றம் துரித கதியில் நடக்கின்றது. அதற்கு காரணம், டிஜிட்டல் மயப் படுத்தப் பட்ட நாணயப் பரிமாற்றம். கணனியில் பாவிக்கப்படும் மென்பொருள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்துத் தந்து விடுகின்றது.

உங்களுக்குத் தேவையான உணவை அல்லது உடையை வாங்குவதற்கு, நீங்களும் ஏதாவது ஒரு பண்டத்தை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணணி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்.... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும்? சுருக்கமாக, இது ஒரு தன்னிறைவு கண்ட சமுதாயம்.

கரெட்டி எனும் உள்ளூர் நாணயம், ஆகஸ்ட் 2011 முதல் புழக்கத்தில் வந்துள்ளது. கிரேட்டா என்ற தீவில் மட்டும், 300 க்கும் அதிகமானோர் அந்த நாணயத்தை பயன்படுத்துகின்றனர். கிரேக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால், தினசரி புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நாளொன்றுக்கு ஒரு பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக, அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பதால், ஊழலுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு உறுப்பினரும், தினசரி நடக்கும் பணமாற்றத்தை பார்வையிடலாம். விலை, விற்ற அல்லது வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் சரி பார்க்கலாம். ஒரு காரெட்டி நாணயத்தின் மதிப்பு ஒரு யூரோ. ஆனால், யூரோ நாணயம் பயன்படுத்துவது இந்த வலையமைப்பில் தடை செய்யப் பட்டுள்ளது.

மாற்று நாணயத்தை ஆதரிக்கும், கிரேட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல்- பொருளாதார விரிவுரையாளர் George Stathakis கூறுகின்றார். "சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாற்றுப் பொருளாதாரம் அமைக்கப் பட்டுள்ளது. மந்த நிலையில் இருந்த பொருளாதார செயற்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. நம்பிக்கை, எளிமை, வெளிப்படையான தன்மை, இவை தான் (கரெட்டி) நாணய பரிமாற்றத்தின் அடிப்படை. இன்று கிரேக்கம் முழுவதும் 26 வலையமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த வருட இறுதிக்குள், நாடு முழுவதும் நூறு அமைப்புகள் இயங்கத் தொடங்கியிருக்கும்."

உதாரணத்திற்கு, அவர் வாழ்க்கையில் நடந்த பரிமாற்றம் ஒன்றைப் பற்றிக் கூறினார். "ஓய்வு நேரத்தில், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒலிவ் மரத்தில் இருந்து, ஒலிவ் எண்ணை தயாரிக்கிறேன். அதனை ஒரு வியாபாரிக்கு விற்றால், போத்தல் ஒன்று 1 .80 யூரோவிற்கு விற்க வேண்டும். ஆனால், கடையில் அதன் விலை 5 யூரோக்கள்! மாற்று நாணய வலையமைப்பு உறுப்பினர் ஒருவர், ஒலிவ் எண்ணைக்கு பதிலாக, வாகனக் காப்புறுதி செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு, ஒரு போத்தல் ஒலிவ் எண்ணை 2 .5 கரெட்டிக்கு (1 கரெட்டி = 1 யூரோ) விற்க ஏற்பாடாகியுள்ளது. எமது பரிமாற்றத்தில் இடைத்தரகர் யாரும் நுழையாததால், இருவருக்கும் இலாபம்."

பொருளாதார நெருக்கடியால், முதியோர் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். மின்சாரம், எரிவாயுக் கட்டணங்களை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். இன்று, மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அவற்றைக் கட்ட உதவுகின்றனர். முதியோரை பராமரிக்கின்றனர். வேலைக்கு போகும் தம்பதியினரின், குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்கின்றது. வீட்டில் ஏதாவது உடைந்து விட்டால், யாராவது வந்து திருத்திக் கொடுக்கிறார்கள். எங்கேயாவது போக வேண்டுமானால், தெருவில் கண்டாலும், வாகனம் வைத்திருப்பவர்கள் ஏற்றிச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போலப் பழகுகின்றனர். அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு மலர்ந்துள்ளது. தங்களுடைய வாழ்க்கையில், "முதல் தடவையாக சுதந்திரத்தை அனுபவிப்பதாக," அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மாற்று நாணய வலையமைப்பானது உள்ளூர் மட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தேசத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும் வல்லமை அதற்குக் கிடையாது. வங்கிகளும், அரச கட்டமைப்புகளும், நிதி நிறுவனங்களும் மட்டுமே பாரிய மாற்றங்களை உண்டாக்கலாம். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, பெரிய அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாம். அது வரையில், மாற்று நாணய பொருளாதாரம், யூரோ நாணய பொருளாதாரத்திற்கு சமாந்தரமாகவே சென்று கொண்டிருக்கும். வெகுஜன ஊடகங்கள், உலக மக்களுக்கு பிரயோசனமான, இது போன்ற செய்திகளை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன. "வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் வன்முறையாளர்களாகவே", அவர்கள் கிரேக்க மக்களைக் காட்டி வருகின்றனர். கிரேக்க மக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் தெரியும், அதே நேரம், புதியதோர் உலகத்தை படைக்கவும் தெரியும்.

பணப் புழக்கம் இல்லாத சமுதாயங்கள் பல, வரலாற்றில் ஏற்கனவே இருந்துள்ளன. சோவியத் யூனியனிலும், மாவோவின் சீனாவிலும், சில இடங்களில் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றுமேயில்லாத வெறும் கட்டாந்தரையில் இருந்து, நவீன நகரங்கள் உருவாகின. இந்த கம்யூனிச சமுதாயங்கள், இன்றைக்கும் இயங்கிக் உள்ளன. அவை எதுவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப் படவில்லை. (பணம் இருந்தால் தானே பிரச்சினை?) தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு மகிழும் மேதைகள், நவீன இஸ்ரேல் எவ்வாறு உருவானது என்ற இரகசியத்தை கூற மாட்டார்கள். (அவர்களுக்கே தெரியுமா என்பது கேள்விக்குறி) முதன்முதலாக, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே கம்யூனிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தினார்கள். பொதுவுடைமை உற்பத்தி முறை பின்பற்றிய விவசாயக் கிராமங்கள் சில, தொழிற்துறை வளர்ச்சி கண்டன.




**********************************
இதனோடு தொடர்பான முன்னைய பதிவு:
பணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்! உதாரணத்திற்கு ஒருவர்!!

******************************************************************************** இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Saturday, March 10, 2012

பணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்! உதாரணத்திற்கு ஒருவர்!!

"நம்மால் பணம் இல்லாமல் வாழ முடியுமா?" இப்படியான "புத்திசாலித்தனமான" கேள்விகளை, உங்களது "அரசியல் ஆர்வமற்ற" நண்பர்கள் கேட்டிருப்பார்கள். முதலாளித்துவ அரசியலால் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள், பணம் என்பதும் ஒரு போதைவஸ்து என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். "உலகில் பல தீமைகளுக்கு காரணமான காசு, ஒரு பிசாசின் கருவி", என்று கருதுவோரும் இருக்கின்றனர். உலகின் அனைத்து மதங்களும் பணத்தை வெறுக்கின்றன.

ஆதி கால பொதுவுடைமை சமுதாயத்தில், பணப்புழக்கம் இருக்கவில்லை. மக்கள் பண்டமாற்று மூலம் வாழப் பழகி இருந்தனர். "மனிதகுல நாகரீகத்தின் உச்சமான கம்யூனிச சமுதாயத்தில், பணம் பாவனையில் இருக்காது." என்று பூவுலக சொர்க்கத்திற்காக கனவு கண்ட அறிஞர்களும் கூறியுள்ளனர். இன்றைய "நாகரீகமடைத்த" (அப்படி நாங்கள் கருதிக் கொண்டிருக்கும்) காலத்தில், பணம் இல்லாமல் வாழ முடியுமா? முடியும்! என்று பலர் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். யாரையும் சுரண்டி வாழாமல், உழைத்து உண்பது, அவசியமான பொருட்களை பண்டமாற்று செய்து பெற்றுக் கொள்வது, என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வாழ்க்கை வாழும் ஜெர்மன் மூதாட்டி ஒருவர் பற்றிய ஆவணப்படம் இது.

எந்த தருணத்திலும், பணத்தை பயன்படுத்தாமல், உங்களால் ஒரு வாரம் வாழ முடியுமா? இந்த மூதாட்டி 16 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! ஆரம்பத்தில் அவரது பிள்ளைகளும், நண்பர்களும், அந்த மூதாட்டியின் நலன் குறித்து கவலையடைந்தனர். ஆனால், போகப் போக அவரது வாழ்க்கை முறைக்கு மதிப்புக் கொடுத்து ஏற்றுக் கொண்டனர். ஹைடெமாரி ஷ்வெர்மர் (Heidemarie Schwermer ) , ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். (இன்று போலந்து, ரஷ்ய பகுதியான) பிரஷியாவை சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போரில், ரஷ்யப் படைகளால் விரட்டப் பட்டு, எல்லாவற்றையும் இழந்த அகதிகளாக ஜெர்மனி வந்து சேர்ந்தார்கள். ஜெர்மனியில் வணிகம் செய்து பொருளீட்டி, மீண்டும் வசதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

16 வருடங்களுக்கு முன்னர், ஹைடெமாரி தனது வீடு, சொத்துக்கள் எல்லாவற்றையும், கேட்பவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார். அன்றில் இருந்து இன்று வரை, பணத்தை பயன்படுத்தாமல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஒரு பண்டமாற்று கடை நடத்தி வந்தார். அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களிடம் இருந்த தேவையற்ற பொருட்களை கொண்டு வருவார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தேடும் பொருள் மற்றவரிடம் இருந்தால், கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். பண்டமாற்றுக் கடை, அந்த ஊர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அதன் வெற்றியைக் கண்டு பிரமித்த ஹைடெமாரி, வாழ்க்கை முழுவதும் பணமில்லாமல் வாழ முடிவு செய்தார்.

பணமில்லாமல் வாழ்வது எப்படி? முன்னர் ஒரு காலத்தில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஹைடெமாரி, தனது ஓய்வூதியப் பணத்தையும் வேண்டாமென்று கூறி விட்டார். கடைகளை கூட்டித் துப்பரவாக்குவது, தோட்ட வேலை, மற்றும் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றார். அவரது உழைப்பைப் பெற்றுக் கொண்டவர்கள், பணத்திற்குப் பதிலாக உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். உணவு மட்டுமல்ல, தங்குமிடம், உடைகள் போன்றவற்றை கூட வேலைக்கு கூலியாக பெற்றுக் கொள்கின்றார். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியப் படுவதில்லை. குறிப்பாக வேறு இடங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தால், பணம் கொண்டு செல்வது தவிர்க்க முடியாததாகின்றது. வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வாழும் நண்பர்கள், பயணச்சீட்டு அனுப்பி வரச் சொல்கின்றனர். அங்கு சென்று "பணமில்லாத வாழ்க்கை" பற்றி விரிவுரையாற்றுவதன் மூலம், அந்த செலவை ஈடுகட்டுகின்றார்.

இத்தாலியில் ஒரு பாடசாலையில் விரிவுரையாற்றும் காட்சி, ஆவணப் படத்தின் தொடக்கத்தில் வருகின்றது. "பணமில்லாமல் வாழ்வதாக கூறிக் கொள்ளும் இந்த மாது, மற்றவர் உழைப்பில் வாழ்வதாக..." மாணவர்கள் தவறாக நினைக்கின்றனர். உலகம் தன்னை எவ்வாறு பார்க்கின்றது என்பதை ஹைடமாரி பின்வருமாறு விளக்குகிறார்: "சிலரைப் பொறுத்த வரையில் நான் பிரச்சினையை உருவாக்குகிறேன். சிலருக்கு நான் பிரச்சினைக்கான தீர்வாகத் தெரிகிறேன்." தன்னைப் பார்த்து பரிகசிக்கும் கூட்டம் குறித்தும் விசனமுற்றிருக்கிறார். ஹைடமாரியின் வினோதமான வாழ்க்கை பற்றி கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், அவரை நேர்கண்டு ஒளிபரப்புகின்றன. ஒரு தடவை இத்தாலியின் RAI தொலைக்காட்சி, வீடியோவை "எடிட்" செய்து, பிழையான சித்திரத்தைக் காட்டியது. அதன் பிறகு, வர்த்தக நோக்கம் கொண்ட ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்று முடிவு செய்தார். ஹைடமாரி, "பணமில்லாமல் வாழ்வது எப்படி?" என்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நூல் விற்பனையில் கிடைக்கும் "ராயல்ட்டி" தொகையை, தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

இன்று , அமெரிக்காவிலும், பல்வேறு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், பணமில்லாமல் வாழுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலாளித்துவத்தின் மிகப் பெரிய குறைபாடான நிதி நெருக்கடிக்கு தீர்வாக, அதைக் கருதுகின்றனர். இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், தேவையில்லையென வீசப்படும் பொருட்கள், இவற்றை பயன்படுத்தியே சந்தோஷமான வாழ்க்கை வாழலாம். நெதர்லாந்தில், பணமில்லாமல் வாழ விரும்புவோர் அமைப்பு ரீதியான தொடர்பாடலைக் கொண்டுள்ளனர். அந்த வலையமைப்பில் யாரும் சேரலாம். முதலில், உங்களுக்கு என்னென்ன வேலை தெரியும் என்பதை தெரிவிக்க வேண்டும். தேவைப் படுவோர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் அவருக்கு செய்து கொடுக்கும் வேலைநேரத்தை கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதேயளவு நேரத்திற்கு, அல்லது அதை விட அதிகமாக, அவர் உங்களுக்கு தேவையான வேலைகளை வந்து செய்து கொடுப்பார். சேவைகளை தவிர, பொருட்களையும் பண்டமாற்று செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், எல்லோரும் பயனடையலாம். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணப்புழக்கம் இருக்காது என்பது குறிப்பிடத் தக்கது.

பணமில்லாமல் வாழும் வயோதிப மாது பற்றிய ஆவணப் படத்தின் DVD யை, ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பார்க்கவும்.
அதற்கான இணைப்பு:LIVING WITHOUT MONEY

Living Without Money - trailer from Without Money on Vimeo.


******************************************************************************** இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Monday, March 05, 2012

முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

முற்குறிப்பு: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நெதர்லாந்து நாட்டில் தீவிரமான சோஷலிச அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சியர்கள் போன்று, அவர்களும் கம்யூனிச சமுதாயம் அமைப்பதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தம்மை அராஜகவாதிகள் (அரசு எதிர்ப்பாளர்கள்) என்று அழைத்துக் கொள்வதையே பெரிதும் விரும்பினார்கள். ஹெர்மன் ஸ்ஹியூர்மன் (Herman Schuurman) என்ற சோஷலிசப் புரட்சியாளர் எழுதி வெளியிட்ட (1924), "வேலை செய்வது குற்றம்" என்ற துண்டுப்பிரசுரம் அண்மையில் சில இடதுசாரி ஆர்வலர்களால் மறுபதிப்புச் செய்யப் பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது. நமது அன்புக்குரிய தோழர்கள், இத்தகைய வெளிவராத ஐரோப்பிய புரட்சிகர சிந்தனைகளை, தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
_______________________________________________________________


வேலை செய்வது குற்றம்
நமது மொழியில் வழமையாக பாவிக்கும் சொற்கள், சொற்பதங்கள் சில ஒழிக்கப் பட வேண்டும். ஏனென்றால், அந்தச் சொற்களின் உள்ளடக்கம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை அடிப்படியாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, வினைச் சொல்லான "வேலை செய்தல்", மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சொற்கள்": வேலை ஆள், வேலை நேரம், வேலைக்கான ஊதியம், வேலை நிறுத்தம், வேலையில்லாதவர், வேலை செய்யாதவர்.

வேலை செய்வது என்பது, இதுவரை மனித குலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து, அவமானம் ஆகும். முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பு, வேலை செய்தலை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் எனப்படும் இந்த அமைப்பு, வேலை செய்வதன் மேல் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனிதர்களின் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. மறு பக்கத்தில், வேலை செய்யாத மனிதர்களின் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும். "ஏனென்றால்", (உற்பத்தி சாதனங்களின்) உரிமையாளர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள்: "வேலை செய்யாதவர்கள், சாப்பிட மாட்டார்கள்." மேலும், இலாபத்தை கணக்கிடுவதும், பாதுகாப்பதும் கூட "வேலை" என்று தான் அவர்கள் கூறுகின்றார்கள்.

வேலையில்லாதவர்கள், வேலையே செய்யாதவர்கள் என்று இரண்டு வகை உண்டு. அகராதியில் அவற்றிற்கு என்ன அர்த்தம் எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். "வேலை செய்யாதவர்": வேலை இருந்தும் செய்ய மறுப்பவர். "வேலையில்லாதவர்": அவரது முயற்சிக்கு அப்பாற்பட்ட விதத்தில் வேலை செய்யும் வாய்ப்பற்றவர். வேலை செய்யாதவர்கள், சுரண்டல் காரர்கள், உழைப்பாளிகளின் உழைப்பில் வாழ்பவர்கள். வேலையில்லாதவர்கள் எனப்படுவோர் உழைக்கும் மக்கள், வேலை செய்யும் அனுமதி மறுக்கப் பட்டவர்கள், ஏனென்றால், அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்கள், உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை தீர்மானித்துள்ளனர். தொழில் செய்யும் இடங்களையும் நிறுவியுள்ளனர். உழைப்பாளிகள் பட்டினி கிடந்தது சாகாமல், உயிர் பிழைப்பதற்கு போதுமான அளவு கூலியைப் பெறுகின்றனர். அது அவர்களது பிள்ளைகளின் போஷாக்கை நிவர்த்தி செய்யக் கூட போதுமானதல்ல. பாடசாலை செல்லும் பிள்ளைகள், அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி படிக்கிறார்கள். தொழிலாளர்களை எவ்வாறு வேலை வாங்குவது என்று படிப்பதற்காக, முதலாளிகள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்.

வேலை செய்வது ஒரு சாபம். அது மனிதர்களை ஆன்மாவற்றவர்களாக, ஆத்மா அற்றவர்களாக்குகின்றது. வேலை செய்வதற்காக, ஒருவர் தனது அடையாளத்தையே இழக்கிறார். தவழுவது, சுத்துமாத்துகள் செய்வது, காட்டிக் கொடுப்பது, ஏமாற்றுவது, நேர்மையற்ற செயல் எல்லாவற்றையும் வேலைக்காக செய்கின்றீர்கள். உழைப்பாளிகளின் உழைப்பு, வேலை செய்யாத பணக்காரர்களுக்கு இலகுவான வாழ்க்கையை வழங்குகின்றது. உழைப்பாளிகளுக்கு அது ஒரு அவலத்தின் சுமை, பிறப்பிலிருந்து தொடரும் கெட்ட தலைவிதி. அது உழைப்பாளிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையை தடுக்கின்றது.

வேலை செய்வது (மனித) வாழ்வுக்கு விரோதமானது. "நல்ல வேலையாள்" எனப்படுபவன், வாழ்விழந்த, களையிழந்த முகத்தைக் கொண்ட சுமை தூக்கும் விலங்கினம். எப்போது மனிதன் வாழ்வைப் புரிந்து கொள்கிறானோ, அன்றில் இருந்து வேலை செய்ய மாட்டான். நாளைக்கே ஒருவர், தான் வேலை செய்யும் முதலாளியை விட்டு விலத்திச் சென்று, வேலை இன்றி தெருவில் நிற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. யாராவது அவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டாலும், அது ஒரு துரதிர்ஷ்டமாகும். பல சந்தர்ப்பங்களில், வேலையின்றி இருப்பவர்கள், வேலை செய்யும் தோழர்களின் செலவில் தங்கியிருக்கின்றனர். நேர்மையான குடிமக்கள் கூறுவதைப் போல, ஒரு முதலாளியினால் சுரண்டப் படுவதை தவிர்த்து, (அவனிடமே) திருடவும், கொள்ளையிடவும் தெரிந்தால் நல்லது. அதைச் செய்யுங்கள். ஆனால், அதனால் ஒரு மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள்.

வேலை செய்வது ஒரு சமூக நோய். (இன்றுள்ள) சமூகம் எமது வாழ்க்கைக்கு விரோதமானது, அதனை அழிப்பதன் மூலம் மட்டுமே, அதாவது புரட்சிகளை நடத்துவதன் மூலமே, வேலை மறைந்து விடும். அப்போது மட்டுமே (நிஜமான) வாழ்க்கை உதயமாகும். முழுமையான, செழுமையான வாழ்வு கிடைக்கும். அங்கே அழைத்து வரப்படும் ஒவ்வொருவரும், தமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வார்கள். அந்த மக்கள் இயக்கத்தில், ஒவ்வொருவரும் உற்பத்தியாளர் தான். அவர்கள் விசேடமாக, அவசியமான, அழகான, தரமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அப்பொழுது, தொழிலாளிகள் என்ற வகை மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் மனிதனாக மட்டுமே இருப்பார்கள். மனிதனது வாழ்வாதாரங்களுக்காக, சொந்த தேவைகளுக்காக, சோர்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவிதமான உறவுகளுக்குமான காரண காரியங்களுக்காகவும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அப்போது அங்கே வாழ்க்கை இருக்கும், அற்புதமான வாழ்க்கை, தூய்மையானதும் உலகத்தரமானதாகவும் இருக்கும்.

உற்பத்தி செய்யும் வலுவானது, மனிதர்களின் வாழ்வில் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த உழைப்பானது, நேரம், இடம், சம்பளம், பசி போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் பட்ட வேலையாக இராது. ஒட்டுண்ணிகளால் அந்த உழைப்பு சுரண்டப் படாது. உற்பத்தி செய்வது, வாழ்வின் மகிழ்ச்சியான அனுபவம், வேலை செய்வது வாழ்வின் வேதனையான அனுபவம். தற்கால மாசடைந்த சமூக உறவுகளில், அத்தகைய வாழ்வை உருவாக்க முடியாது. நமது காலத்தில் எல்லா வகையான தொழில்களும் குற்றமாகும். எமக்கு வேலை வேண்டுமென்பதற்காக முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறோம். இலாபம் சம்பாதிப்பதிலும், சுரண்டுவதிலும் கூட்டுச் சேர்கின்றோம். ஏமாற்றுவதில், பொய்யுரைப்பதில், நஞ்சூட்டுவதில், மனித குலத்தை படுகொலை செய்வதில், யுத்தத்திற்கு தயார்படுத்துவதில், எல்லாவற்றிலும் (முதலாளிகளுடன்) கூட நின்று உதவுகின்றோம்.

இவற்றை எல்லாம் நாங்கள் புரிந்து கொண்டால், எமது வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கிடைக்கும். நாம் எமது உற்பத்தி திறனை உணர்ந்து கொண்டால், இந்த வில்லத்தனமான, கிரிமினல் சமுதாயத்தை தகர்க்க முனைவோம். ஆனால், பசியால் சாகும் நிலை வராமல் தடுப்பதற்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்திக்குமேயானால்,இந்த வேலையின் ஊடாக, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். நாங்கள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்காக வேலை செய்யவில்லை என்றால், மனிதநேயத்தின் வீழ்ச்சியை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும். அதனால், நாம் ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனத்தையும் வேண்டுமென்றே நாசப் படுத்துவோம். ஒவ்வொரு முதலாளியும் எமது செயலால் எதையாவது இழக்க வேண்டும். எழுச்சியுற்ற இளைஞர்களாகிய நாம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள், விளைபொருட்களை பாவனைக்கு உதவாதவையாக ஆக்க வேண்டும். எந்த நிமிடமும், இயந்திரங்களின் பாகங்கள் கழன்று போகும், கத்திகளும் கத்திரிக் கோள்களும் உடைந்து விடும், மிகவும் அத்தியாவசியமான கருவிகள் மறைந்து விடும். இந்த செய்முறை விளக்கங்களை, வழிவகைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தினால் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் முதலாளித்துவத்தை அழித்து விட வேண்டும். நாங்கள், அடிமைகள் போன்று வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள், சுதந்திரமான மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றோம். உழைப்பாளிகளின் உழைப்பினால் தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் வேலையாட்களாக வாழ விரும்பவில்லை, வேலை செய்வதை நாசமாக்குவோம்.

********************************************
Herman Schuurman (1897 – 1991), "வேலை செய்வது குற்றம்" (Werken is Misdaad) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியவர். "Mokergroep" என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். (Moker என்ற சொல், நெதர்லாந்து பாட்டாளிகளின் மொழியில் முஷ்டியைக் குறிக்கும்.) புரட்சியில் ஈடுபாடு கொண்ட இளம் பாட்டாளிகளை அந்த அமைப்பு கவர்ந்திருந்தது. 1923 முதல் 1928 வரையில், அந்த அமைப்பு நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள, De Dolle Hond என்ற பதிப்பகம், 1999 ம் ஆண்டு, அந்த துண்டுப் பிரசுரத்தை மறுபதிப்புச் செய்தது.

பதிப்பகத்தின் முகவரி:

De Dolle Hond,
p/a Koffieshop Bollox,
1ste Schinkelstraat 14 – 16
1075 Amsterdam


டச்சு மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம்: Werken is misdaad

******************************************************************************** இந்தப் பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்