Tuesday, August 30, 2016

மலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழுவினரின் துரோகமும்


வ‌ர‌லாற்றில் ப‌திய‌ப் ப‌டாத‌ ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை! இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.

தமிழர்கள் மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள். 

மலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக சுல்த்தான்கள், மலே தேசியவாதிகள், இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். 

இந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர். 

காட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.

சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது? 

இந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.

த‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை "த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்!

முள்ளிவாய்க்கால் இன‌ப்ப‌டுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யும் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் வ‌ழ‌மையாக‌ ஓர் உண்மையை ம‌றைப்பார்க‌ள். வ‌ன்னியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினர், மலையகத் தமிழர்கள் அல்ல‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ள்.

ச‌யாம் - ப‌ர்மா ம‌ரண‌ ர‌யில்பாதை அமைக்கும் பணியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையானோர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் அல்ல‌து இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க ம‌க்க‌ள். ம‌லேசிய‌த் த‌மிழ‌ரில் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும், ஆதிக்க சாதியின‌ரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜ‌ப்பானிய‌ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த‌ன‌ர். அதனால் இனப்படுகொலைக்குள் அகப்படாமல் தப்பி விட்டனர். இவர்கள் மட்டுமா தப்பினார்கள்? மலேசிய சிங்களவர்களும் தான் தப்பிப் பிழைத்தனர். அந்தச் சிங்களவர்களும் வசதியான ஆதிக்க சாதியினர் தான். சாதியும், வர்க்கமும் சரியாக அமைந்து விட்டதால் இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து விட்டனர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர்! (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britainhttp://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.

சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

அந்தக் காலகட்டத்தில், ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர். பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல்லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே?

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர்? இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா? இனம் இனத்தோடு தானே சேரும்? நேதாஜியும், கொத்தலாவலையும், ஜப்பானியர்களும் ஒன்று சேர்வதற்கு அடிப்படைக் காரணம் பாஸிசம் அல்லாமல் வேறென்ன?

பாஸிஸ‌ம் என்ப‌து இருப‌தாம் நூற்றாண்டில் உல‌க‌ம் முழுவ‌தும் பர‌விய‌ அர‌சிய‌ல் கோட்பாடு. வ‌ர்க்க‌, சாதிய‌ முர‌ண்பாடுக‌ளை புற‌க்க‌ணித்து இன‌த்தின் அல்ல‌து தேசிய‌த்தின் பெய‌ரில் ஒன்று சேர‌க் கோருகின்ற‌து. ஜ‌ப்பானிய‌ பாஸிஸ்டுக‌ளுட‌ன் ஒத்துழைத்த‌, நேதாஜி எவ்வாறு தூய்மையான‌வ‌ராக‌ இருக்க‌ முடியும்? நேதாஜி ஏற்க‌ன‌வே ஹிட்ல‌ருட‌ன் கைகோர்த்த‌வ‌ர் தானே?

ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை "ஒட்டுக் குழுக்க‌ள்" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.

ம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான். இன்றைக்கும் மேல்தட்டு வ‌ர்க்க‌த்தின‌ர், சாதிமான்க‌ள் நேதாஜியை நாய‌க‌னாக‌ ஏற்றுக் கொள்கின்ற‌ன‌ர். அதே நேர‌ம், இன‌வ‌ழிப்பில் ப‌லியான‌ அடித்த‌ட்டு, தலித் த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்பு அவ‌ர்க‌ளை உலுக்கி இருக்க‌வில்லை.

இன‌ உண‌ர்வை விட‌ சாதிய‌ - வ‌ர்க்க‌ உண‌ர்வுக‌ள் உறுதியான‌வை. கால‌ங்க‌ட‌ந்தும் நிலைத்து நிற்கும்.

Monday, August 29, 2016

காலனிய இலங்கையில் விற்கப் பட்ட தமிழ்/சிங்கள அடிமைகள் : ஒரு வரலாறு

கிழக்கிந்திய கம்பெனி (VOC) ஆவணத்தில் இருந்து :  
"இலங்கைத் தீவை காலனிப் படுத்தி, நிலங்களை அபகரித்த ஐரோப்பியர்கள், அங்கு இந்திய, இந்தோனேசிய அடிமைகளை கொண்டு வந்து குடியேற்றி வேலை வாங்கினார்கள்."
"டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் கூலிப் படையாக சேர்ந்திருந்த வீரர்கள் கூட, இலங்கையில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக இருந்தனர். அவர்கள் போர்த்துகீசிய காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக முறையை பின்பற்றினார்கள்."


"1660 ம் ஆண்டளவில், தென்னிந்தியாவில் பெரும் பஞ்சம் நிலவியது. அங்கிருந்த அடிமைச் சந்தையில் பிள்ளைகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது. பள்ளிக்காட்டில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனி அலுவலகம் ஊடாக வாங்கப்பட்ட 5000 அடிமைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப் பட்டனர்."

"அப்போது தான் இறக்குமதியான பட்டுப் புழுக்களை கொண்டு புடவைத் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டன. அதில் வேலை செய்வதற்கு தென்னிந்திய கைவினைஞர்கள் தேவைப் பட்டனர். ஏனையோர் நெல் வயல்களில் வேலை செய்யப் பணிக்கப் பட்டனர்."

Radermacher என்ற கிழக்கிந்தியக் கம்பெனி (VOC) அலுவலகர் எழுதிய குறிப்பொன்றில் இருந்து:
 "1753 ம் ஆண்டு கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏற்றுவதற்கு 161 அடிமைகள் வாங்கப் பட்டனர். ஒவ்வொரு கப்பல் பணியாளருக்கும் எட்டு அடிமைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தது.

(தென்னிந்தியாவில் இருந்த) ஐரோப்பிய பிரஜைகளும், "சுதந்திரமான" கிறிஸ்தவ சுதேசிகளும் அடிமைகளை கொண்டு வந்து விற்றனர். அங்கிருந்த கிறிஸ்தவ மதபோதகர்களும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்."

அமெரிக்க கண்டங்களுக்கு பிடித்துச் செல்லப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் பற்றி அறியாதவர் யாரும் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரையிலான, "அட்லான்டிக் அடிமை வாணிபம்" பற்றி ஏராளமான நூல்கள் எழுதப் பட்டுள்ளன. நிறையத் திரைப்படங்கள், ஆவணப் படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால், ஆசிய அடிமை வாணிபம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எந்த வரலாற்று ஆசிரியரும் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது?

சில முக்கியமான காரணங்களை ஊகிக்க முடிகின்றது:
1. கிழக்கிந்தியக் கம்பெனி தனது "வணிக இரகசியங்கள்" எதையும் வெளியே விடாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தது. இப்போதும் இன்னும் வெளிவராத பல இரகசியங்கள் டென் ஹாக் (தி ஹேக்) ஆவணக் காப்பகத்தில் மறைந்திருக்கின்றன. அங்கு ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் கூட, ஆசிய அடிமை வாணிபம் பற்றி அக்கறை காட்டவில்லை.
2. அமெரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அடிக்கடி கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் கொள்ளையடிக்கப் பட்ட செல்வம் முழுவதும் ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
3. ஆசிய அடிமை வாணிபம் ஆசிய காலனிகளுக்கு இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. அதாவது, மடகஸ்கார் - இந்தியா - இலங்கை - இந்தோனேசியா, இந்த நாடுகளுக்கு இடையில் தான் அடிமைகள் பரிமாறப் பட்டனர்.

அடிமை வியாபாரம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடக்கவில்லை. இந்தியாவில் வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில், மன்னர்களுக்கிடையில் நடந்த போர்களில் பிடிபட்ட போர்க் கைதிகள் ஐரோப்பியரால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். மடகஸ்காரில் உள்நாட்டு மன்னர்கள் விற்ற அடிமைகளை, அரேபிய வணிகர்களும், ஐரோப்பிய வணிகர்களும் வாங்கினார்கள். அந்நாட்டு குடிமக்கள் பல்வேறு காரணங்களால் அடிமைகளானவர்கள். உதாரணத்திற்கு, கடன் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள், அல்லது குற்றங்களுக்காக தண்டிக்கப் பட்டவர்கள்.

பருவ வயதில் இருந்த சிறுவர், சிறுமிகள், குறைந்த விலையில் வாங்கப் பட்டனர். அவர்களை இலங்கை, இந்தோனேசியாவில் அதிக விலைக்கு விற்றனர். கேரளாவில் கொச்சி நகரிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் அடிமைகளை விற்கும் சந்தைகள் இருந்துள்ளன. பெருமளவு இந்திய அடிமைகளை விநியோகம் செய்யும் இடமாக கொச்சி துறைமுகம் இருந்துள்ளது.

முன்பின் அறிந்திராத இடங்களில் குடியேற்றப் பட்ட அடிமைகள், பரிச்சயமற்ற வேற்று மொழி பேசும் மக்களுக்கு இடையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆசிய காலனிகளில், அடிமை முறை இருந்திருக்கலாம் என்று ஏற்றுக் கொள்பவர்களும், அவர்கள் வீட்டு வேலையாட்களாக மட்டுமே இருந்தனர் என நினைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு பகுதி உண்மை மட்டுமே.

வீட்டுப் பணியாட்களாக மட்டுமல்லாது, உற்பத்தித் துறையிலும் அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். வாசனைத் திரவியங்களுக்கான தோட்டங்கள், நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்களில் அடிமை உழைப்பாளிகள் வேலை செய்தனர். அது மட்டுமல்லாது, கப்பல்கள் கட்டுதல், திருத்துதல் போன்ற தொழில்களிலும் ஈடுபடுத்தப் பட்டனர். துறைமுகங்களில் கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்தவர்களும் அடிமைகள் தான்.

வீட்டு வேலை செய்த அடிமைகள், சமையலறையில் அல்லது களஞ்சிய அறையில் படுத்துறங்கினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வேலை செய்த அடிமைகளுக்கு தனியான இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. சுமாத்திரா தீவில் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்ட அடிமைகள் முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். ஐநூறுக்கும் அதிகமான ஆண், பெண் அடிமைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்ட முகாம்களுக்குள் வாழ்ந்தனர்.

இன்றைக்கும் பலர் அறியாத உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் ஆசியாவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது! உதாரணத்திற்கு, 1700 ம் ஆண்டளவில், VOC நிர்வகித்த ஆசியக் காலனிகளில் 68000 அடிமைகள் இருந்தனர். அதே VOC நிர்வகித்த அமெரிக்க காலனிகளில் 23500 அடிமைகள் இருந்தனர். 1775 ம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தோட்டங்கள் உருவாகின. அதற்குப் பிறகு தான் அங்கு அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதிலே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. அமெரிக்காவில் நடந்ததைப் போன்று, ஆசியாவில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் அடிமைகளை குவிக்கவில்லை. அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியை நோக்கிச் செல்லவில்லை. ஒரு நாட்டில் இருந்த அடிமைகளை இன்னொரு நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள். அதே மாதிரி, அங்கிருந்த அடிமைகளை மற்ற நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள்.

இதைக் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், இந்தோனேசிய அடிமைகள் இலங்கைக்கு கொண்டு வரப் பட்டனர். அதே மாதிரி, இலங்கை அடிமைகள் இந்தோனேசியா கொண்டு செல்லப் பட்டனர். தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இவ்வாறு அடிமைகள் பரிமாறப் பட்டனர். இதனால் அந்நாடுகளில் குடிசனப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

இன்றைய இந்தோனேசியர்களில், சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலந்திருக்கலாம். அதே மாதிரி, இன்றைய இலங்கையில் உள்ள சிங்களவர், தமிழர்களில், இந்தோனேசியர்கள் கலந்திருக்கலாம். இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும், "ஆயிரமாயிரம் ஆண்டு கால தூய்மை பேணும் வேறு பட்ட இனங்கள்" என்பது ஒரு கற்பனை. இனவாதிகள் மட்டுமே அப்படியான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இந்தோனேசியர்கள், இந்தியத் தமிழர்கள், மலையாளிகள், ஆப்பிரிக்கர்கள், போன்ற பல்வேறு இனத்தவர்களையும் சேர்த்துக் கொண்ட கலப்பினம் தான், இன்றுள்ள சிங்களவரும், தமிழரும்! இதை நம்ப மறுப்பவர்கள் தாராளமாக மரபணு சோதனை செய்து பார்க்கலாம்.

(இலங்கையில் வெளியாகும் "புதுவிதி" வார இதழில் பிரசுரிக்கப் பட்டது.)



Saturday, August 27, 2016

பிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவாத முதலாளித்துவம்




பிரான்சில் முஸ்லிம் பெண்களை துப்பாக்கி முனையில் "விடுதலை" செய்யும் பொலிஸ். கடற்கரையில் படுத்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடைகளை கழற்றுமாறு பொலிஸ் துப்பாக்கி முனையில் பயமுறுத்தியது.

பிரான்ஸ் நாட்டில் கான் (Cannes) ந‌க‌ர‌த்தில், முஸ்லிம் பெண்க‌ள் முழு உட‌லையும் ம‌றைக்கும் நீச்ச‌ல் உடையுட‌ன் க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌த‌ற்கு விதித்திருந்தது. பூர்கினி என்று அழைக்கப் ப‌டும் உடலை மூடும் ஆடை அணிந்து நீச்ச‌ல் குள‌ங்க‌ள், க‌டற்க‌ரைக்கு செல்ல‌க் கூடாது என்று கான் ந‌க‌ர‌ மேய‌ர் ச‌ட்ட‌ம் போட்டிருந்தார். இந்த‌ த‌டையுத்த‌ர‌வுக்கு ஐரோப்பிய‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்து வ‌ர‌வேற்றிருந்தனர்.

பூர்கினி எனும் இஸ்லாமிய‌ நீச்ச‌ல் உடைக்கு எதிரான‌ த‌டையுத்த‌ர‌வு, அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்திற்கு முர‌ணான‌து என்று பிரான்ஸ் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ள‌து. ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ள் போட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம், இந்த‌ த‌டையுத்த‌ர‌வு இன‌வாத‌ உள்நோக்க‌ம் கொண்ட‌து என்றும், ம‌த‌ச்சுத‌ந்திர‌த்தை மீறுகிற‌து என்றும் தீர்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து. அந்த‌ தீர்ப்பை அடுத்து பூர்கினி த‌டை போட்ட‌ ந‌க‌ர‌சபைக‌ள் உடனடியாக த‌டையை வில‌க்கிக் கொள்ள‌ வேண்டும்.

ஐரோப்பிய‌ க‌லாச்சார மேலாதிக்க‌த்தை திணிக்கும் இன‌வாதிக‌ளின் பூர்கினி த‌டையுத்த‌ர‌வுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ த‌மிழ‌ர்க‌ளும் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ந‌கைப்புக்குரிய‌து. யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ள், குள‌ங்க‌ள், கேணிக‌ள், குள‌ங்க‌ளில் குளிக்க‌ வ‌ரும் (இந்து) த‌மிழ்ப் பெண்க‌ள் யாரும் பிகினி அணிந்திருந்த‌தை நான் காண‌வில்லை. ப‌ல‌ர் உடுத்த‌ உடையோடு குளித்து விட்டு செல்கிறார்க‌ள். சில‌ர் குறுக்குக் க‌ட்டி இருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஒரு நிலைமையை க‌ற்ப‌னை செய்து பார்ப்போம். இனிமேல் பொது இட‌ங்க‌ளில் குளிக்கும் பெண்க‌ள் பிகினி அணிந்திருக்க‌ வேண்டும் என்று சிறில‌ங்கா அர‌சு ச‌ட்ட‌ம் போடுகின்ற‌து. (ஏற்க‌ன‌வே பிரான்ஸ் நாட்டில் போட்ட‌ அதே ச‌ட்ட‌ம் தான்.)

த‌ற்போது சிறில‌ங்கா அர‌சு கொண்டு வ‌ந்த‌ பிகினி ச‌ட்ட‌ம், த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ஒடுக்குமுறை என்று த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் போர்க்கொடி உய‌ர்த்தி இருப்பார்க‌ள். த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் "த‌மிழ‌ரின் பூர்கினி உரிமைக்காக"‌, ஐ.நா. வ‌ரை நீதி கோரி ந‌டைப் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்தி இருக்கும். இத்த‌னைக்கும் இந்த‌ "பூர்கினி ஆத‌ர‌வாளர்க‌ள்" யாரும் முஸ்லிம்க‌ள் அல்ல‌. மாறாக‌ த‌மிழ்க் க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை என்ப‌து பொது இட‌ம். அங்கு என்ன‌ உடை அணிய‌ வேண்டும் என்று யாரும் யாருக்கும் உத்த‌ர‌வு போட‌ முடியாது. சில‌ர் பிகினி அணிந்து அரை நிர்வாண‌மாக‌ இருப்பார்க‌ள். சில‌ர் உட‌லை மூடிய‌ ஆடையுட‌ன் வ‌ந்திருப்பார்க‌ள்.

அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். ஆனால் எல்லோரும் க‌ட‌ற்க‌ரையில் குளிப்ப‌த‌ற்கு அல்ல‌து ஓய்வெடுக்கும் நோக்கில் வ‌ந்திருப்பார்க‌ள். ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பெண்க‌ள் பிகினி அணிய‌ல‌மா? என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள்? லெப‌னான், எகிப்து, துனீசியா, மொரோக்கோ போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ளில், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உள்நாட்டு முஸ்லிம் பெண்க‌ளும் பிகினி அணிந்து வ‌ருவ‌தைக் காண‌லாம்.

அங்கெல்லாம் க‌ட‌ற்க‌ரையில் இந்த‌ உடுப்பு தான் அணிய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுப்பாடு எதுவும் கிடையாது. யூத‌ இஸ்ரேலிலும் அப்ப‌டி ஒரு நிலைமை இல்லை. சில‌ க‌டும்போக்கு யூத‌ ம‌த‌ப் பிரிவுக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ளும், உட‌லை மூடும் உடை அணிந்து தான் குளிப்பார்க‌ள். இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் கூட‌ ஐரோப்பிய‌ப் பெண்க‌ள், உட‌லை மூடும் உடை அணிந்து க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌து வ‌ழ‌மையாக‌ இருந்த‌து.

பூர்கினி என்றால் என்ன? பலர் தவறாக நினைப்பது மாதிரி, அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நீச்சல்குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். "அங்கெல்லாம் எல்லோரும் நிர்வாணமாக இருப்பார்கள்..." என்று அருவருப்பாக கருதுவார்கள். அவர்கள் பூர்கினி அணிந்தும் குளிக்கப் போக மாட்டார்கள்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் தொலதிபர் Aheda Zanetti என்பவர் தான் பூர்கினி என்ற உடையை வடிவமைத்தார். அது பேஷன் சம்பந்தப் பட்ட விடயம். பேஷன் என்றால் அது ஐரோப்பியர்கள் மட்டும் தான் வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா? எங்களில் பெரும்பான்மையானோர் மேற்கத்திய பாணியில் உடுத்துவதை மட்டுமே பேஷன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அஹேடா ஜானெத்தி லெபனானை பூர்வீகமாக கொண்டவர். கடந்த நாற்பது வருட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப் பெண்கள் கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுது போக்குவதற்கு வசதியாக பூர்கினி என்ற உடையை வடிவமைத்ததாக அவர் கூறுகின்றார். "இது பெண்களை விடுதலை செய்கின்றது" என்கிறார். அவர் இதற்கு முன்னர் இஸ்லாமிய மரபு சார்ந்த விளையாட்டு உடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சந்தைப் படுத்தப் பட்ட பூர்கினி என்ற நீச்சல் உடை, பின்னர் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், உலகம் முழுவதும் 700.000 உடைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு உடையின் விலை $80 அல்லது $200 டாலர்கள்.

இந்த பூர்கினி உடை வாங்கி அணிபவர்கள் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் அல்ல. இந்து, யூத மதங்களை பின்பற்றும் பெண்களும் வாங்கி அணிகின்றனர். அவர்களும் கலாச்சார நோக்கில் தான் பூர்கினி அணிகிறார்கள். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு குணமான ஐரோப்பிய இனப் பெண்களும் பூர்கினி வாங்குகின்றனர். இந்த விபரங்களை தெரிவித்த Aheda Zanetti, அதனது வாடிக்கையாளர்களில் நாற்பது சதவீதம் இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என்று சொல்கிறார்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பூர்கினி உடை குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, முதலாளித்துவ மேலாதிக்க நலன்களுக்கான போட்டி காரணமாக  இருக்கலாமா? இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா? இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா? இது தான் இங்கேயுள்ள பிரச்சினை.

அதாவது, உலக கலாச்சார தளத்திலும், மேற்கத்திய முதலாளித்துவம் மட்டும் தான் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு போட்டியாக வரும் ஹலால் முதலாளித்துவம், பூர்கினி முதலாளித்துவம், சேலை முதலாளித்துவம், எதுவாக இருந்தாலும் அடக்கி ஒடுக்கவே நினைக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். "இஸ்லாமிய மதப் பிரச்சினை...பாதுகாப்பு பிரச்சினை..." இப்படிப் பல.

எல்லாப் பிரச்சினைகளும் வந்து ஓர் இடத்தில் குவிகின்றன. உலக சந்தையை கைப்பற்றல், நுகர்வோர்களை கட்டுப்படுத்தல்...சுருக்கமாக மூலதன திரட்சி மேற்குலகை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களை ஏமாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறது..."இஸ்லாமிய தீவிரவாதப் பூதம்"!

Thursday, August 25, 2016

அரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு


ஈழத்தில் தமிழ் தேசியம் பேசும் இன்றைய இளைஞர்களின், அரசியல் அறிவிலித்தனத்திற்கு இது ஓர் உதாரணம். "செந்தூர் தமிழ்" என்பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முகநூல் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அவர், அநேகமாக கட்சியின் முழுநேரப் பணியாளராக இருக்கலாம். TNA தகவல்களை உடனுக்குடன் முகநூலில் பதிவு செய்து வருகின்றார்.

முகநூலில் நானிட்ட பின்வரும் பதிவுக்கு எதிர்வினையாற்றியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத்தனம் தெரிய வந்தது. விவாதத்தை தொடக்கி வைத்த முகநூல் பதிவு: 
//த‌மிழ் நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌த்திலும் ஆர‌ம்ப‌ கால‌ சாதி ஒழிப்புப் போராளிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளே!//

அதற்கு செந்தூரின் எதிர்வினை: //உழுத்து போன தத்துவங்களெல்லாம் இனி இங்க சரிவராது.//

ஆனால், அதே நபர் அதே நேரத்தில் பின்வரும் தகவலை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்: //இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.//


சிலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரிவதில்லை. அந்தளவுக்கு அறியாமை மேலோங்கிக் காணப் படுகின்றது. இலங்கை அன்றும் இன்றும் வறிய நாடாகத் தான் கணிக்கப் படுகின்றது. வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், காலங்காலமாக வறுமையில் அல்லலுறுகின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில் வறுமை பல மடங்கு அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இதை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தான் வந்து சொல்ல வேண்டுமா?

தமிழ் மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்வதற்கு வழி சொன்ன கம்யூனிசத் தத்துவம் "உழுத்துப் போனது" என்றால், வேறெந்த தத்துவம் அவர்களுக்கு உதவியுள்ளது? இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன? இந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கும் எல்லாத் தத்துவங்களும் தோற்றுப் போய் விட்டன. அதைத் தான் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரின் வாக்குமூலம் நிரூபிக்கின்றது.

அதெல்லாம் போகட்டும். வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் திட்டங்கள் எவை? நானறிந்த வரையில் தமிழர்களின் வறுமை பற்றி மட்டுமல்ல, குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தவொரு தமிழ் தேசியவாதியும் பேசுவதில்லை. அந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பார்கள். நாமாக கேட்டாலும் பதில் வராது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்னமும் அகலாத வறுமை பற்றிய கேள்வி எழுந்தது, அதற்கு செந்தூர் கூறிய பதில் இது:

//தமிழன் பட்டினியால் இறக்க வேண்டிய அவசியம் இல்லை நயினாதீவுக்கும் சன்னதிக்கும் போனா ஒவ்வொருநாளும் சாப்பாடு கிடைக்கும்// இதை அவர் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கலாம். உண்மையில், வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

வறுமை என்றால் என்னவென்பதற்கு அவரது வரைவிலக்கணம் இது: //எமது மிகக்குறைந்த அளவுகோல் உணவு பட்டினி அற்று இருத்தல் தான். தமிழ்த்தேசியவாதம் முழுமையாக வலிமைபெற்றிருந்த வன்னி மண்ணில் புலிகளின் காலத்தில் யாராவது பட்டினியால் இறந்தார்களா இவ்வளவு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இதுவே நேரடிச் சான்று சாட்சி.//

புலிகளின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், போர் நடந்து கொண்டிருந்தது. இறுதிப்போர் வரையில், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் WFP, மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு NGO க்கள், நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தன. குறிப்பிட்ட சிலருக்கு, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களின் பணம் கிடைத்து வந்தது. அதனால் தான் அங்கு யாரும் பட்டினியால் சாகவில்லை. அப்படி இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடியதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன.

வறுமை என்பது பட்டினி அற்ற நிலைமை அல்ல. இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15% வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். யுத்தம் நடந்த காலத்தில், வட மாகாணத்தில் புள்ளிவிபரம் எடுக்கப் படவில்லை. இருப்பினும் அங்கேயும் சனத்தொகையில் 15% ஏழைகளாக இருக்கலாம். இலங்கையில் பல தசாப்த காலமாகவே சமுர்த்தி என்ற பெயரில் அரச கொடுப்பனவு வழங்கப் பட்டு வருகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைவரும் அந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் நடத்தும் லங்காஸ்ரீ (தமிழ்வின்) இணையத் தளத்தில் வந்த தகவல் இது: 
//வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். வறுமைக்கு உட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.// (http://www.tamilwin.com/show-RUmuyBQVSWhw1F.html)

இதற்கு மேலே நான் மேலும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உள்ள தமிழ் தேசியம் "உழுத்துப் போகாத" சித்தாந்தம் ஏதாவது, இன்று வரையில் தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து விட்டனவா? அதற்கு பதில் தெரியாமல் முழித்த TNA ஆர்வலர் செந்தூர், எங்கேயோ தேடிப் பிடித்து வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றை கொண்டு வந்து காட்டினார்.


சித்தாந்த‌ம் ப‌ற்றிய வ‌ட‌ மாகாண‌ முத‌லமைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌னின் பித்த‌லாட்ட‌ம் இது. விக்கினேஸ்வரனின் கூற்றில் இருந்து:
//சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளை தான், சித்தாந்தம் என்கின்றார்கள்.//

சித்தாந்த‌ம் என்றால் முடிந்த‌ முடிவான‌ பூர‌ண‌மான‌ கொள்கை. (பார்க்க: சித்தாந்தம் - விக்சனரி) அது ஆன்மீக‌த்திலும், அர‌சிய‌லிலும் வேறு வேறு அர்த்த‌ம் த‌ரும் என்ப‌து உண்மைய‌ல்ல‌. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். (சித்தாந்தம் பற்றி ஆங்கில அகராதி தரும் விளக்கம்: doctrine - A principle or body of principles presented for acceptance or belief, as by a religious, political, scientific, or philosophic group; dogma.)

ஆன்மீக‌ம் என்ப‌து க‌ட‌வுளின் பெய‌ரால் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல். அதே மாதிரி, அரசியல் என்பதும் கடவுள் இல்லாத ஆன்மீகம் தான். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆன்மீக‌மும், அர‌சிய‌லும் ஒன்றில் இருந்து ம‌ற்றொன்றை பிரிக்க‌ முடியாம‌ல் இருந்த‌து. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் தான், ஆன்மீக‌த்தில் இருந்து அர‌சிய‌ல் த‌னியாக‌ப் பிரிந்த‌து. இன்றைக்கு பல நாடுகளில் உள்ள "மதச்சார்பற்ற கொள்கை" யின் மூலம் அது தான்.

//ஒரு காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்திற்கு பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது.// (விக்கினேஸ்வரன்)

"ஒரு காலத்தில்" அல்ல, இப்போதும் எப்போதும் ஆதரவு இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2008 ம் ஆண்டில் இடம்பெற்ற நிதிநெருக்கடிக்கு பின்னர், மார்க்சியத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கூடி வருகின்றது. ஏனென்றால், உலகம் முழுவதும் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த உண்மை முதலமைச்சருக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.

மேலும், முத‌லாளித்துவ‌ம் என்ப‌து ஒரு சித்தாந்தம் அல்ல, அது பொருளாதார‌ம்! அது அவர்  நினைப்பது மாதிரி "மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்து" அல்ல. வரலாற்றுப் போக்கில் இயல்பாக தோன்றிய பொருளாதார அமைப்பு வடிவம்.

முதலாளித்துவத்தை பாமரத்தனமாக "சித்தாந்த‌ம்" என்று நினைத்துக் கொண்டிருப்பது முத‌ல‌மைச்ச‌ரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.

முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது லிப‌ர‌லிச‌ம் என்ப‌து சித்தாந்த‌ம். அந்த‌ வார்த்தை அவ‌ர் வாயில் இருந்து வ‌ர‌ ம‌றுக்கிற‌து.

//இப்போது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதை தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபாவும் சீனாவைப் போல் மார்க்சியத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.// (விக்கினேஸ்வரன்)

அது என்ன "யதார்த்தம்"? வெளிப்படையாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? என்ன தயக்கம்? அமெரிக்கா தலைமையிலான நியோ - லிபரலிச சித்தாந்தவாதிகள் சொல்லிக் கொடுத்த பாடம் அது. உலக மக்களை அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்களாக வைத்திருப்பது அதன் நோக்கம். நடைமுறையில் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கக் கூடாது. அப்போது தான் தீவிரமான முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இந்த மறைமுகமான சுரண்டலுக்கு, தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்.

பிடல் காஸ்ட்ரோ போய் பல வருடங்களாகியும் கியூபா மார்க்சியத்தில் இருந்து விடுபடவில்லை. இப்போதும் அங்கே சோஷலிச கட்டுமானம் உள்ளது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இன்றைக்கும் மார்க்சிய - லெனினிசம் படித்திருக்க வேண்டும். சீனாவிலும் மார்க்சியத்தை யாரும் மறந்து விடவில்லை. பல்கலைக் கழகங்களில் மார்க்சிய- லெனினிசம் கற்பிக்கப் பட வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது.

நான் முன்னர் கூறிய படி, அரசியல் மட்டுமல்ல, மதம், விஞ்ஞானம் போன்றன கூட சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றன. உலகில் எந்த நாட்டு அரசும் சித்தாந்தம் இல்லாமல் இயங்கவில்லை. சீனா சந்தை - சோஷலிசம் என்ற புதிய‌தொரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை பின்பற்றி வருகின்றது. அது பெரும்பாலும் முதலாளித்துவம் போன்றிருக்கும். ஆனால், "சந்தை - சோஷலிசம்" என்ற பெயரில் அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே, விக்கினேஸ்வரன் சொல்வது மாதிரி, கியூபாவும் சீனா மாதிரி மாறுமாக இருந்தால், அதுவும் "சந்தை - சோஷலிசம்" சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தப் படும்.

//ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது.// (விக்கினேஸ்வரன்)

எதற்காக ஐயா, "யதார்த்தம்" என்று   குழப்புகின்றீர்கள்? நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? அது தான் "யதார்த்தம்", "நடைமுறையில் இருக்கும் உண்மை நிலை" என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே?

இன்றைய‌ கால‌த்தில், இல‌ங்கை உட்ப‌ட‌ பெரும்பாலான‌ உல‌க‌ நாடுக‌ள் ந‌வ‌ தாராள‌வாத‌(லிப‌ர‌லிச‌ம்) சித்தாந்த‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌ன‌. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி கூட, நவ தாராளவாத கொள்கைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தி வருகின்றன. இதை அறிந்து கொள்ள அதிகம் சிரமப் பட வேண்டாம். அன்றாட தினசரித் தாளை புரட்டிப் பாருங்கள்.

இல‌ங்கையில், 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெய‌வ‌ர்த்த‌ன‌ அறிமுகப் ப‌டுத்திய‌ நியோ லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை தான் விக்கினேஸ்வ‌ர‌ன் "ய‌தார்த்த‌ம்" என்று குறிப்பிடுகின்றார். 

முதலைமைச்சர் விக்கினேஸ்வரன்,  சிறுபிள்ளைத்தனமாக சுற்றி வ‌ளைத்து பேசாம‌ல், நேர‌டியாக‌ முதலாளித்துவத்தை அல்லது லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை ஏற்றுக் கொள்வ‌தாக‌ சொல்ல‌லாமே? அதெப்ப‌டி முடியும்? இல‌ங்கை அர‌சும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் ஒரே சித்தாந்த‌த்தை தான் பின்ப‌ற்றுகிறார்க‌ள் என்ப‌து எல்லோருக்கும் தெரிந்து விடாதா? ம‌ண்டையில் இருக்கும் கொண்டையை ம‌றைக்க‌ ப‌டாத‌ பாடுப‌டுகிறார்க‌ள். கட்சியின் பெயரை "தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் பொருத்தமான பெயர்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Tuesday, August 23, 2016

தமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்


கலாச்சாரக் காவலர்கள்:
நாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே?

நான் அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் "தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி" என்கிறார்கள்.

அப்படியா? ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே? அரசியல் கொள்கையும் ஒன்றுதானே? மறுக்க முடியுமா?

ஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் "நாற்சியோனல்" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.

"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்" என்று சொல்கிறார் சீமான். "முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்." என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்?

உருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

உருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

தேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், "அவன் தமிழனா, இவன் தமிழனா?" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.

மேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.

இந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.


மேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? "மலையாள மாவோயிஸ்டுகள்" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க. 

சீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மாவோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம். 

திடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. 

நக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி? 

அமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா? அதிலும் "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்..." என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா?

Saturday, August 20, 2016

திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்



"புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பி இருந்தார். அதில் கலந்து கொண்ட மணியரசனோ, தியாகுவோ சரியான பதிலை வழங்காமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள். (முள்ளிவாயிக்கால் : முன்னும்,பின்னும் 06.06.16 | கேள்வி நேரம் | நியூஸ் 7 தமிழ்)

ஆரம்ப காலத்தில் புலிகள் சோஷலிசத் தமிழீழம் கேட்ட கதைகளை பற்றி தியாகு பேசினார். அதே நேரம், புலிகளின் தலைமையில் இருந்தவர்கள் கூட்டம் கூடி, சோஷலிசம் தற்போது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டதாக மணியரசன் கூறினார். (உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.)

நேரடியாக கேள்விக்கு வருவோம். "புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா?" புலிகள் எண்பதுகளில் சோஷலிசம் பேசினாலும், நடைமுறையில் உள்நாட்டு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வந்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், "de facto தமிழீழம் (தமிழீழ நடைமுறை அரசு)" என்ற பெயரில் பொருளாதார உற்பத்தி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

புலிகளின் வர்த்தக நிறுவனமான "மக்கள் கடை", எல்லாக் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டது. அதிலே குறைந்த விலையில் பொருட்கள் விற்கப் பட்ட படியால், தனியார் வியாபாரிகள் பலர் நஷ்டப் பட்டு கடையை மூடி விட்டார்கள். சில வருடங்களின் பின்னர், மக்கள் கடைகளிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.

அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு முற்றாக நின்று போனது. அதனால் விவசாயிகளும், மீனவர்களும், உள்ளூர் சந்தையில் விற்றது போக, எஞ்சியவற்றை புலிகளின் கொள்வனவு நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் புலிகளின் கொள்வனவு நிலையங்கள் தமிழீழம் முழுவதும் விற்பனை செய்தன.

அதைத் தவிர, சில கடத்தல்காரர்கள் தடை செய்யப் பட்ட பொருட்களை தென்னிலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்றார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய படியால் மண்ணெண்ணெய் பெருமளவு விற்பனையானது. மோட்டார் சைக்கிள்கள் கூட மண்ணெண்னையில் தான் ஓடின.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "சிங்களவனிடம் மண்ணெண்ணெய் வாங்கி, தமிழனிடம் பத்து மடங்கு விலைக்கு விற்று" பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. மகேஸ்வரன் என்ற கடத்தல்காரன் கோடீஸ்வரனாக வந்த கதை அனைவருக்கும் தெரிந்த படியால், அவருக்கு "மண்ணெண்ணெய் மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. அவர் பிற்காலத்தில், புலிகளின் ஆதரவுடன், பேரினவாத யு.என்.பி. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

2002 ம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், "புலிகள் தாராள பொருளாதாரவாத, திறந்த சந்தைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக" அறிவித்திருந்தார்.

பிரச்சினை என்னவென்றால், புலிகள் மேற்குலக நாடுகளை திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே அப்படி அறிவித்திருந்தனர். நடைமுறையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் தமது இருப்பிற்கே ஆபத்தானது என்பதை உணர்ந்திருந்தனர்.

தலைவர் பிரபாகரன் அறிவித்த போதிலும், எந்தவொரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது சிறிலங்கா நிறுவனமோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவில்லை. கொக்கோகோலா(அல்லது பெப்சி கோலா?) நிறுவனம் மட்டுமே, "வரி" என்ற பெயரில் பெருந்தொகை பணம் கொடுத்து வியாபாரம் செய்ய முன்வந்தது. (சாதாரண தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்து கொக்கோ கோலா குடித்திருப்பார்கள் என்று இங்கே சொல்லத் தேவையில்லை.)

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ் குடாநாட்டில் புலிகளின் சமாந்தரமான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைத்து வணிக நிறுவனங்களும் புலிகள் கேட்ட வரியைக் கொடுத்து வந்தன. அன்றைய சந்திரிகா அரசும், சிங்கள இராணுவமும் அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதில், அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்து வந்தது. அது எந்தளவு உறுதியானது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தருணம் ஒன்று வந்தது. அரசு சுகாதாரத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், தாதியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. யாழ் போதனா மருத்துவமனைக்கு சென்ற புலிகள், அனைவரும் ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு வேலைக்கு திரும்பா விட்டால், அவர்களுக்குப் பதிலாக தமது இயக்கத்தில் உள்ள மருத்துவர்கள், தாதியரை வேலைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

புலிகளின் இந்த முடிவால் சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. எத்தனை வருடம் எதிரிகளாக போரிட்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு பகையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதைத் தான் வர்க்க ஒற்றுமை என்று சொல்வார்கள்.

*****

கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், (தமிழர்களாகிய) நாங்கள் ஏன் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும்?

இந்தக் கேள்வியை அமெரிக்க நலன்களை ஆதரிக்கும் வலதுசாரி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

பனிப்போரின் முடிவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால், சர்வதேச மூலதனத்தினை எதிர்த்து நிற்க முடியாமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருந்தது. இன்றும் கூட, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள், தமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகின்றன.

கியூபாவும், வியட்நாமும், பொருளாதார ஒதுக்குதலில் இருந்து மீள்வதற்கு முயற்சித்தன. அதனால், குறிப்பிட்ட அளவு உள்நாட்டு சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பெயர் Joint Venture முறை. அதாவது, ஒரு நிறுவனத்தில் அரசு 51% முதலீட்டை செய்யும். மிகுதி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு. இன்றைக்கும் அந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழான கலப்புப் பொருளாதாரம் நிலவுகின்றது.

2009 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு முன்னர் நடந்தவற்றை முற்றாக மறந்து விட்டுப் பேசுகின்றார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான "அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல்", 9/11 தாக்குதலுக்குப் பிறகு மிகவும் மோசமான கட்டத்தை வந்தடைந்தது.

நாங்கள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டுப் பேசுகின்றோம். நோர்வேயும், மேற்குலக நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டது. அன்டன் பாலசிங்கமும் அதனை ஒத்துக் கொண்டார்.

நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியதை எடுத்துக் காட்டினார்கள். இந்தோனேசியாவில் தனிநாடு கோரிய, அச்சே விடுதலை இயக்கம் சுனாமிக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. அவற்றை உதாரணமாகக் காட்டி, புலிகளும் அந்த வழிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். உண்மையில் அது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பதை, 2009 ஆண்டு நடந்த துயர நிகழ்வுகள் நிரூபித்தன.

ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்து விட்டார். சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தருணத்தில், "புலிகள் மீண்டும் போருக்கு சென்றால், இலங்கை அரசுடன் சேர்ந்து ஒடுக்கப் படுவார்கள்." என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே மிரட்டினார். இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மறைமுகமாக எச்சரித்தார்.

அப்போதும் கூட, பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், போரில் வீர மரணத்தை தழுவிக் கொள்ள தயாராக இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சரித்திரமாகி விட்டன.

****** 


போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத அமெரிக்கப் படையினர், தென்னிலங்கையில் வெள்ள அழிவுகளால் பாதிக்கப் பட்ட வீடுகளை புனரமைக்க வந்தனர். 

2009 யுத்தம் நடந்த நேரம், இந்த அமெரிக்கப் படையினர் எங்கே போயிருந்தார்கள்? குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா? அவர்களின் கண்களுக்கு தமிழர்கள் மனிதர்களாகவே தெரியவில்லையா? 

எங்கே நமது "தமிழ் தேசியவாதிகள்"? ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை? "தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே? அமெரிக்க டாலர்கள் வாயை அடைக்கப் பண்ணி விட்டனவா? 

அமெரிக்கர்கள் வெளிப்படையாக பாரபட்சம் காட்டினாலும், "அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி வழங்கும்" என்று, உங்களை நீங்களே ஏமாற்றுக் கொள்வதுடன் தமிழ்மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள். சூடு சொரணை இல்லாத அடிமைகளுக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?

Thursday, August 18, 2016

அமெரிக்கா காலில் அடிபணிந்த "தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு"!

வ‌ர‌லாறு திரும்புகிற‌து. அன்று வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இன்று விக்கினேஸ்வ‌ர‌ன். அன்று EPRLF. இன்று TNA. அன்று இந்திய‌ இராணுவ‌ம், இன்று அமெரிக்க‌ இராணுவ‌ம். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், அன்றைய‌ வ‌ட‌க்கு - கிழ‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இந்திய‌ விமான‌ப் ப‌டை விமாத்தில் வ‌ந்திற‌ங்கினார். இன்று அதே ப‌லாலி விமான‌ நிலைய‌த்தில், இன்றைய‌ வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌ன், அமெரிக்க‌ விமான‌ப் ப‌டை விமான‌த்தில் வ‌ந்திற‌ங்கி உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடம் மாறுகின்றதா? என்று ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் சந்தேகம் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே தடத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சேர். பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எப்போதும், பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்ததாக, வலதுசாரிய தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறன. அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும்
விதிவிலக்கல்ல.

விடுதலைப் புலிகளும், மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்களும் தோன்றிய ஆரம்ப காலத்தில், அவை தீவிர இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஆட்பலம், ஆயுதபலம் குன்றியிருந்த படியால், பொதுத் தேர்தல்களை நடக்க விடாமல் குழப்புவதன் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட நினைத்தன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுட்டுக் கொன்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது. இது போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் எல்லோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தனர். இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோரும் அவர்களில் சிலர்.

புலிகளைத் தவிர மற்றைய இயக்கங்கள் யாவும் இராணுவப் பிரிவு, அரசியல் பிரிவு என்ற கட்டமைப்பை கொண்டிருந்தன. புலிகள் அரசியலை புறக்கணித்து, இராணுவவாத கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் வரையில் புலிகளுக்கு அரசியலில் ஈடுபடும் அக்கறை எதுவும் இருக்கவில்லை. அன்று இந்தியா மாகாண சபையை ஒரு தீர்வாக திணித்ததும், புலிகளால் மறுக்க முடியவில்லை. மாகாண சபைக்கு தமக்கு சார்பான அறிவுஜீவிகளின் பெயர்களை சிபாரிசு செய்தனர். இருப்பினும், இரண்டொரு மாதங்களில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட படியால், அரசியலில் ஈடுபடும் யோசனையையும் அத்துடன் கைவிட்டு விட்டனர்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பொதுத் தேர்தல் வந்தது. இம்முறை புலிகள் தமக்கு ஆதரவான ஈரோஸ் கட்சியை ஆதரித்தனர். எதிர்பார்த்த படியே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட ஈரோஸ் அதிக ஆசனங்களை கைப்பற்றியது. ஆயினும், ஈரோஸ் இயக்கத்திற்கென தனியான அரசியல் கொள்கைகள் இருந்தன.

பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் "பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்" என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் பிரிவினை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க மறுத்து பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்தனர். அதனால் அந்த இடங்கள் காலியாகக் கிடந்தன.

காலப்போக்கில் ஈரோஸ் தலைவர் பாலகுமார் உட்பட பெருமளவு உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து விட்ட படியால், அரசியல் அபிலாஷைகளும் கைவிடப் பட்டன. சங்கர் ராஜி தலைமையில் ஒரு குழு தொடர்ந்தும் அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. ஆனால், அதற்கு போதிய அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

ஈழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களில், தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு கிடைத்து வந்தது. சமூகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் மிகக் குறைந்த சதவீதமாக இருந்தாலும், போர் நடக்கும் போது சிங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் கருதினார்கள். அதற்காக விரும்பியோ விரும்பாமலோ புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளும் அதை இழக்க விரும்பவில்லை. அதனால் தொடர்ந்தும் யுத்தத்தில் கவனம் செலுத்தி வந்தனர்.

மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்ததும், போர்நிறுத்தம் வருடக் கணக்காக நீடித்ததும், புலிகள் திரும்பவும் அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், புலிகள் ஒரு அரசியல் கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என்ற பெயரில் மாத்தையா தலைமையில் சிறிது காலம் இயங்கியது. ஆனால், மீண்டும் போர் வெடித்த படியால் அந்தக் கட்சியும் செயலிழந்து போனது. சிறிலங்கா அரசும், போர்நிறுத்த கண்காணிப்பாளர்களும் அந்தக் கட்சியை மீண்டும் புதுப்பிக்கலாம் என ஆலோசனை கூறினார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களுக்காக அதை விரும்பாத புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தர், ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச் சந்திரன், டெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில் புலிகளுக்கு ஆதரவாக மனம் மாறிய, முன்னாள் புலி எதிர்பாளர்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதில் பத்மினி, கஜேந்திரன் போன்ற சிலர் புலிகளால் நியமிக்கப் பட்டிருந்தனர். அதாவது, முன்னாள் புலி எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் கடிவாளம் புலிகள் நியமித்த முகவர்களின் கைகளில் இருந்தது.

2009 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் காலமாற்றத்தினால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னாள் புலி எதிர்பாளர்கள் கட்சியின் அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டனர். புலிகளின் முகவர்கள் ஓரங் கட்டப் பட்டனர். அவர்கள் பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தனிக் கட்சி ஆரம்பித்தனர். இருப்பினும் தமிழ் பூர்ஷுவா வர்க்கமும், தமிழ் முதலாளிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதினார்கள். அதனால் அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தனர்.

பாராளுமன்ற அரசியல் களத்தில் நின்று பிடிப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் TNA க்கு இருந்தன. அதாவது பண பலம், அடியாட்கள் படை, வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்பு, வணிக ஊடகங்களின் ஆதரவு இருந்தால் போதும். TNA மட்டுமல்ல, சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளான SLFP, UNP என்பனவும் அதே அடிப்படையில் இயங்கும் கட்சிகள் தாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்றவற்றை ஒப்பிடலாம்.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அமெரிக்காவின் காலில் அடிபணிந்ததில் எந்த அதிசயமும் இல்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். இந்திய பிராந்திய வல்லரசையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஆதரிப்பதை அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்ட கட்சியிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

முள்ளிவாய்க்கால் பேர‌வ‌ல‌த்தின் போது பாராமுக‌மாக‌ இருந்த‌ அமெரிக்கா, இப்போது தான் நிவார‌ணப் பொருட்க‌ளுட‌ன் வ‌ந்திற‌ங்கியுள்ள‌து. யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளுக்கான‌ அமெரிக்க‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ச‌ம்ப‌ந்த‌ரும், விக்கினேஸ்வ‌ர‌னும் பெற்றுக் கொண்ட‌ன‌ர். "இறுதி யுத்த‌த்தில் எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுக் கொண்டிருந்த நேரம்‌ இந்த‌ அமெரிக்கா எங்கே போன‌து?" இப்ப‌டிக் கேட்ப‌த‌ற்கு ஒரு த‌மிழ் தேசிய‌வாதிக்கும் தைரிய‌மில்லை. அடிமைக‌ளிட‌ம் த‌ன்மான‌ உண‌ர்வை எதிர்பார்க்க‌ முடியுமா?

தமிழினப் படுகொலையில் பங்காளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து கூழைக் கும்பிடு போடும் "தமிழ்த் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு"! இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்" என்று அன்றைய அமெரிக்க தூதுவர் சூளுரைத்தார்.  (http://tamilnation.co/intframe/us/060110ugly.htm)      இனப்படுகொலைக்கும் பச்சைக்கொடி காட்டினார்.

புலிகளின் ஆயுதக் கப்பல்களையும், புலிகளின் மறைவிடங்களையும் அமெரிக்க செய்மதிகள் தான் காட்டிக் கொடுத்தன. முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்ட புலிகளையும், மக்களையும், காப்பாற்றுவதற்கு, அமெரிக்க மரைன் படைக் கப்பல் அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய துரோகத்தை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. எதிர்காலத்தில், இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைக்கப் படும் பொழுது தமிழ் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அப்போது, "தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு", தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு ஒதுக்கப் படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Wednesday, August 17, 2016

அவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக்கும் வன்கொடுமைகள்


அகதிகள் தமது தாயகத்தில்  நடக்கும் வன்கொடுமைகளுக்கு அஞ்சி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆனால், புகலிடம் கொடுக்கும் நாடுகளே வன்கொடுமையில் ஈடுபட்டால் அகதிகள் யாரிடம் முறையிட முடியும்? 

கடந்த பத்தாண்டு காலத்திற்குள், ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் சென்றுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்லாது, ஈரானியர், ஈராக்கியர், ஆப்கானியர், ஆப்பிரிக்கர் என்று பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் அவுஸ்திரேலிய அரசு நாட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அகதிகளை தொலைதூர தீவுகளில் உள்ள தடுப்புமுகாம்களில் தங்க வைக்கின்றது.

நவுரு, மானுஸ் ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் உள்ளன. நவுரு தீவு ஒரு தனியான தேசம். மானுஸ் தீவு பாப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமானது. சில தினங்களுக்கு முன்னர், மானுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று, பாப்புவா நியூகினியாவில் வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்மையில் அது மனித உரிமை மீறல் தான் என்பதை ஏற்றுக் கொண்டு தடுப்பு முகாமை மூடி விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பாபுவா நியூகினியா அரசும், அவுஸ்திரேலிய அரசும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன. ஆனால், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும், அவர்கள் பாபுவா நியூகினியாவில் தொடர்ந்தும் தங்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அகதிகளை பராமரிக்கும் செலவுகளை பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.

ஆனால், நவுரு தீவில் நிலைமை பல மடங்கு மோசமானது. அவுஸ்திரேலிய நிதியுதவியில் பெரிதும் தங்கியிருக்கும் நவுரு அரசு, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதில்லை. வெளியாரை அனுமதிக்காத படியால், முகாம்களுக்குள் என்ன நடக்கின்றது என்ற தகவல் வெளியுலகை அடைவதில்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஒருவர், இரகசியமாக சென்று முகாமில் வாழும் அகதிகளை சந்தித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் உலகை உலுக்கின.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழும் அகதிகள், ஒரு போர் நடக்கும் நாட்டிற்குள் சிக்கிக் கொண்ட மக்களைப் போன்று, கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே சிலர் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அல்லது அது குறித்து யோசித்துள்ளனர். தான் சந்தித்த ஒன்பது வயது சிறுவன் கூட தற்கொலை செய்ய எண்ணியதாக, சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வலர் தெரிவித்தார். அந்தளவுக்கு, அனேகமாக எல்லா அகதிகளும், ஆண், பெண், சிறுவர் வேறுபாடின்றி மன உளைச்சலால் வருந்துகின்றனர். 

நவுரு தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு. அதனால் நோய் வாய்ப்பட்டவர்கள் கடுமையாக சுகவீனமடைவது மாத்திரமல்ல, யாராலும் பராமரிக்கப் படாமல் கைவிடப் படுகின்றனர். கழிவறைகள் குறைவாகவும், நிலங்கள் அசுத்தமாகவும் காணப்படுகின்றன. சவர்க்காரம் கிடைப்பதில்லை. 

மேலும் பாலியல் அத்துமீறல்களும் தாராளமாக நடக்கின்றன.  குறிப்பாக பெண்கள் முகாமுக்கு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். நவுரு ஆண்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அகதிகள் வேட்டையாடப் படும் மிருகங்கள் போன்று மனிதாபிமற்ற முறையில் நடத்தப் படுகின்றனர்.

உண்மையில், முகாம்களில் நடக்கும் கொடுமைகள் யாவும், அவுஸ்திரேலிய, நவுரு அரசுக்களின் மறைமுக அங்கீகாரத்துடன் நடக்கின்றன. அதனால் யாரிடமும் முறையிட முடியாத நிலையில், அகதிகள் பலர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் தமக்குத் தாமே கத்தியால் கீறி காயமேற்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் வாயை கம்பியால் தைத்துக் கொள்கிறார்கள்.

நவுரு தீவில் உள்ள தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. முகாம் கட்டப்பட்டதில் இருந்து, பராமரிப்பது வரையில் அவுஸ்திரேலிய நிதியில் தான் எல்லாம் நடக்கிறது. 

காவலாளிகள் போன்றவர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அவுஸ்திரேலிய அரசின் நிதியில் தான் இயங்குகின்றன. இதை விட, அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்கின்றனர். நவுரு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். ஆகவே, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


மேலதிக தகவல்களுக்கு:
Life in Nauru detention: a dark, wretched Truman Show without the cameras
'This is critical': 103 Nauru and Manus staff speak out – their letter in full
Documenten gelekt over misstanden Australisch opvangcentrum

Sunday, August 14, 2016

இலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்க கூட்டமைப்பு!

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு அடிபணிகிறார்கள். தீவிர புலி விசுவாசிகளும், சிங்களப் பேரினவாதிகளும் ஒன்று சேர்கிறார்கள். ஒன்றிணைந்த இந்து - பௌத்த இலங்கைக்காக, இந்துத்துவா கொள்கையை பின்பற்ற உறுதி பூணுகின்றனர். அவர்களது  முதலாவது எதிரிகள் முஸ்லிம்கள். இரண்டாவது எதிரிகள் இடதுசாரிகள். மூன்றாவது எதிரிகள் தாழ்த்தப் பட்ட சாதியினர். 

இது ஒரு காலத்திலும் நடக்கவே முடியாத விடயம் அல்ல. இன்று எம் கண்முன்னால் அது தான் நடக்கிறது. (இன/மத) அடிப்படைவாத சித்தாந்தமும், வலதுசாரிய சார்புத்தன்மையும், அவர்களை ஒன்று சேர்க்க போதுமானது. கடந்த பத்து வருட காலமாக, இந்திய இந்த்துவா சக்திகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எல்லாம் மிக இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்று அவர்களின் திட்டத்தை அம்பலப் படுத்தி விட்டது.

சில நேரம் எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் இரகசியங்களை வெளிப்படுத்துவதுண்டு. துருக்கியில் ஒரு தடவை சாலையில் வாகன விபத்தொன்று நடந்தது. அந்தக் காரில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் கொல்லப் பட்டு விட்டனர். அவர்கள் யாரென்ற விபரம் வெளியான நேரம், அந்தத் தகவல் துருக்கியை மட்டுமல்ல ஐரோப்பா முழுவதையும் உலுக்கியது. மாபியா குழுத் தலைவர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், இவர்களுடன் ஓர் அழகு ராணியும் அந்த விபத்தில் சிக்கி இறந்தனர். அரசியல்வாதிகளுக்கும், மாபியாக் குழுக்களும் இடையிலான இரகசிய உறவை அது பகிரங்கப் படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் வேலாயுதம் முரளிதரன் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்தத் திடீர் மரணம் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியது. காலமான முரளிதரன், "இந்து - பௌத்த ஒற்றுமையை கட்டியெழுப்ப பாடுபட்டவர்" என்று புகழும் அஞ்சலிச் சுவரொட்டிகள் கொழும்பு நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. 

இலங்கையில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மற்றும் ஒரு தமிழ் அமைச்சரும் அரசு தரப்பில் கலந்து கொண்டனர். அதை விட பொது பல சேனா தலைவர் ஞானசார தேரோவும் மரணச் சடங்கிற்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த சக்தி எது? இந்துத்துவா சித்தாந்தம்.

பொதுபல சேனா பற்றி நான் இங்கே அதிக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடும் நோக்கில் உருவாக்கப் பட்ட பாஸிச, பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் தான் பொது பல சேனா. சிங்கள - பௌத்த பேரினவாத சித்தாந்தம் இலங்கையின் ஆட்சியாளர்களினால் நடைமுறைப் படுத்தப் பட்டாலும், இவ்வளவு காலமும் அது நிறுவன மயப் படுத்தப் படாமல் இருந்தது.

அதாவது, இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் சுயநலத்திற்காக பௌத்த மதத்தை பயன்படுத்தி வந்தன. அதற்காக சக்திவாய்ந்த பெரிய மடாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆன்மீகத் தலைவர்களும் இவர்களை ஆட்டிப் படைத்தார்கள். ஆனால், இலங்கையில் உருவான, அல்கைதா பாணியிலான பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் பொதுபல சேனா தான். நடைமுறை அரசியலில் தாக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த ஆன்மீக மதகுருக்களுக்கு போட்டியாக மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப் பட்டது.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அரசுக்கும், புலிகளுக்கும் நடுவில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே, இலங்கையின் இனப்பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்தது. "வெளியுலகில் தமிழர்களின் பிரச்சினை தெரிந்த அளவிற்கு, சிங்களவர்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை." என்று சில நோர்வீஜிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நோர்வே புலிகளுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. அவர்களது அத்துமீறல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஏராளமான பணம் கொடுத்ததுடன் ஆயுதங்கள் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், போருக்குத் திரும்புவதில் புலிகள் பிடிவாதமாக இருந்த படியால், நோர்வேயின் "தீர்வுத் திட்டம்" கைவிடப் பட்டது.

போர் முடிந்து சில வருடங்களின் பின்னர், நோர்வே வேறொரு அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இம்முறை அது அரசுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. ஒரு பக்கம் முன்னாள் அனுசரணையாளர்கள் ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோன்மையை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் ராஜபக்சே உருவாக்கிய பொதுபல சேனாவை ஒரு NGO போன்று அங்கீகரித்து நிதியுதவி செய்தனர்.

2011 ம் ஆண்டு, ஒஸ்லோ நகரில் ஓர் இரகசியமான மகாநாடு நடந்தது. பொதுபல சேனாவின் முக்கிய தலைவர்கள் வந்திருந்தனர். நோர்வேயில் இயங்கும் புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். நோர்வீஜிய அரச பிரதிநிதிகள் அங்கும் அனுசரணையாளராக இருந்தனர். மகாநாட்டில் விவாதிக்கப் பட்ட விடயங்களை வைத்து அதை யாரும் தவறாக கணிப்பிட முடியாது. அதாவது, இலங்கையில் இன நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றை பற்றி கலந்துரையாடப் பட்டதாக சொல்லப் பட்டது.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவராக செயற்படும் நோர்வேக்கும், இலங்கையின் பௌத்த பாஸிச இயக்கமான பொது பல சேனாவுக்கும் இடையிலான உறவு என்ன? அவர்களது எதிர்கால திட்டங்கள் எவை? அதற்கு விடை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். இலங்கையின் சிங்கள ஊடகங்கள் சில, நோர்வேக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப் படுத்தின. நோர்வீஜிய அரசு அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. (பார்க்க: Statement regarding the alleged connection between Bodu Bala Sena and Norway; http://www.norway.lk/News_and_events/News/Statement-regarding-the-alleged-connection-between-Bodu-Bala-Sena-and-Norway/#.V7Ajx_mLSUk)

இந்தியாவின் இந்துத்துவா சக்திகள், நோர்வே மாதிரி ஒளிந்து மறைந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு வருகினர். இந்தியாவில் தீய வழியில் பிரபலமான இரண்டு இந்து மத அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன. ராஷ்ட்ரிய சுயம் சேவாசங் (RSS) பெரும்பாலும் இந்தியாவிற்குள் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) இலங்கையிலும் கிளை பரப்பியுள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் VHP அமைப்பாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு சென்று சில ஈழத் தமிழ் இந்து ஆதரவாளர்களை வென்றெடுத்தனர். அவர்கள் புலிகளையும் சந்தித்துப் பேசி, இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புலிகள் அந்த வேண்டுகோளை உதாசீனப் படுத்தி விட்டனர். அநேகமாக, தமக்கு பக்கபலமாக இருந்த கத்தோலிக்க திருச்சபையை பகைக்க விரும்பாமை காரணமாக இருந்திருக்கலாம்.

இந்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் ஈழத்தமிழ் இந்துக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது எப்படி? அது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஈழப்போர் தொடங்கிய காலத்தில், "நாம் இந்துக்கள் என்பதால் இந்தியா படையனுப்பி தமிழீழம் பிரித்துத் தரும்" என்று அப்பாவித்தனமாக நம்பியோர் பலருண்டு. பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அப்படி நம்பினார்கள். போர் முடிந்த பின்னர், ஈழப் போராட்டத்தை இந்து மயமாக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு இந்து அடிப்படைவாதி. அவர் இந்தியா சென்று RSS, VHP ஆகிய மதவாத அமைப்புகளை சந்தித்துப் பேசினார். ஈழப்போரில் இந்துக்கள் எந்தளவு பாதிக்கப் பட்டுள்ளனர். எத்தனை இந்துக் கோயில்கள் அழிக்கப் பட்டன என்றெல்லாம் எடுத்துரைத்ததாக அவரே சொல்லி இருக்கிறார். இருப்பினும், ஈழத்தில் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதற்கு சிவாஜிலிங்கமும் ஒத்துழைத்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஈழத் தமிழ் இந்துக்களை இந்துத்துவா நலன்களுக்கு சாதகமாக வென்றெடுப்பதற்கு இலகுவாக, முஸ்லிம்களுடனான இனப்பிரச்சினை உள்ளது. இன்றைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் இந்துத் தமிழர்கள் பலருண்டு. சமூகவலைத் தளங்களில் அவர்களது கருத்துக்களை காணலாம். 

அண்மையில் காத்தான்குடியில் புலிகள் முஸ்லிம்களை படுகொலை செய்த சம்பவம் பற்றி ஒருவர் முகநூலில் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காத்தான்குடிப் படுகொலைகள் பற்றி நான்கு வரிகள் எழுதி, அதற்கு ஏற்கனவே புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள் என்று முடித்துக் கொள்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகளை பட்டியலிட்டு விலாவாரியாக எழுதி இருந்தார்.

அதாவது, "சிங்களவர்கள் மாதிரி, முஸ்லிம்களும் தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு எதிர்வினையாக நடத்தப் பட்டது தான் காத்தான்குடிப் படுகொலை." என்பது அவர் முன்வைக்கும் நியாயம். இந்தக் கட்டுரை முகநூலில் நூற்றுக் கணக்கில் பகிரப் பட்டு, நூற்றுக் கணக்கில் லைக் செய்யப் பட்டது. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் இனவாதிகளும் இதே பாணியில் தான் வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு மக்களை பிரித்து விடுவதன் மூலம் தான் தமது மேலாதிக்கத்தை திணிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இலங்கையில் மூவின மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தம்மின மக்களின் இழப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரி இனத்தின் இழப்புகளை உதாசீனப் படுத்துவார்கள். இது உலகம் முழுவதும் உள்ள இனவாதிகளின் வழமையான அரசியல் தான். எல்லா சமூகங்களிலும் உள்ள இனவாதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனால், அவர்களால் பேரழிவைத் தரும் நாசங்களை ஏற்படுத்த முடியும். 

இந்துத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ் இனவாதிகள், எவ்வாறு இந்துத்துவாவாதிகளின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தான் இங்கே எடுத்துக் காட்டினேன். இந்தியாவிலும் இந்துத்துவா வாதிகளின் எதிரி முஸ்லிம்கள். இலங்கையில் பொது பல சேனாவின் எதிரியும் முஸ்லிம்கள். ஈழத்தில் தமிழினவாதிகளின் எதிரியும் முஸ்லிம்கள். ஆகவே "பொது எதிரிக்கு" எதிராக ஒன்றிணைவது நடைமுறைச் சாத்தியம் இல்லாததா?

யுத்தம் முடிந்த பின்னர், வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் புதிதாக புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கட்டப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ முகாம்களில் இருந்த பௌத்த மத படையினர் வழிபடுவதற்கு சிறிய அளவில் கட்டப் பட்டன. போர் முடிந்த பின்னர் நகர மத்தியில் பெரியளவில் கட்டப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் அதற்கு எதிரான தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களது கண்டனங்களில் "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் பௌத்த மத சின்னங்கள்" பற்றி சிலாகிக்கின்றனர்.

மலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அங்கு மிக நீண்ட காலமாகவே இந்திய அரசின் தலையீடு அதிகமாக இருந்து வந்துள்ளது. ரம்பொட எனுமிடத்தில் மலையுச்சியில் ஐந்து மீட்டர் உயரமான, பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும், அதனருகில் கோயிலும் கட்டப் பட்டுள்ளது. இலங்கையில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவதற்கு அதுவே அடிகோலியது எனலாம். அனுமார் சிலை கட்டப் பட்டதில் இருந்து இந்த்துவா நடவடிக்கைகளும் அதிகரித்து வந்துள்ளன. அதற்கு சிறிலங்கா அரசும் அனுமதிக்கின்றது. அனுமார் சிலை கட்டுவோர், அதை ஆதரிப்போர், புத்தர் சிலைகளை எதிர்க்கும் தார்மீகப் பலத்தை இழந்து விடுகின்றனர்.

இலங்கை அரசின் மத அரசியல் இவ்வாறு தான் இயங்கி வருகின்றது. அரசு இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று அறிவித்து விட்டு, பௌத்த மடாலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கும். அதே நேரம், இந்து ஆலயங்களுக்கும் நிதி வழங்கும். அதற்காக இந்து அறநிலைத் துறை என்றொரு தனியான அமைச்சு இயங்குகின்றது.

புலிகளால் துரோகியாக சபிக்கப் பட்ட டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்ட காலம் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இடிந்த கோயில்களை புனரமைப்பதற்கும் டக்லஸ் நிதி வழங்கிய வேடிக்கையும் நடந்துள்ளது. (சில சமயம் புலிகள் தலையிட்டு தடுத்த சம்பவங்களும் உண்டு.)

விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்த்துவா பாஸிச அமைப்புகள், "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் புத்தர் சிலைகளை" எதிர்க்க முன்வருவார்களா? அப்படி யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள். இந்தியாவில் புத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கும் போக்கு உள்ளது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறும் புராணக் கதையும் பிரபலமாக உள்ளது. வட இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் மகர் சாதியினர் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். இன்று இந்துத்துவாவாதிகள் அம்பேத்காரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலயம், அம்பேத்காரின் நூறாண்டு நினைவு தினத்தை விமரிசையாக கொண்டாடியது. அதற்கு ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆதிக்க சாதியினர், இதன் மூலம் தமிழகத்து தலித் அரசியல் யாழ்ப்பாணத்திற்கு வந்து விடும் என்று அஞ்சினார்கள். 

தமிழ் நாட்டில் தலித்திய இயக்கங்கள் அம்பேத்காரை போற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய அரசு அம்பேத்காருக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்று சிந்தித்தார்களா? ஆதிக்க சாதி பார்ப்பனர்களினால் நிர்வகிக்கப் படும் இந்திய அரசு தலித்தியத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பது அறியாமை.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போக்கை தீர்மானிப்பதில் மேலாண்மை பெற்றுள்ள தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு பொதுவான தன்மையைக் காணலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை எழும் போதெல்லாம் திடீரென "நடுநிலைவாதி" வேஷம் போடத் தொடங்கி விடுவார்கள். தீக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலையை புதைத்து வைத்துக் கொள்வார்கள். தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு சிங்களத்தின் சதி என்று ஒப்பாரி வைப்பார்கள். 


இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ஈழத்தில் இந்துத்துவா மத அடிப்படைவாதிகள் வளர்வதற்கு சாதகமான சமூகக் காலநிலையும் அது தான். "வர்க்கப் பிரச்சினை பற்றி பேசக் கூடாது. சாதிப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடாது. இடதுசாரியம் தீங்கானது. தலித்தியம் நஞ்சானது....."

இப்படியே அது கூடாது, இது கூடாது என்று, எந்தவொரு முற்போக்கான அரசியல் சிந்தனையும் ஈழத் தமிழரை நெருங்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்பி வருகின்றனர். அதே நேரம், இந்து மத அடிப்படைவாதம், தமிழ் இனவாதம் போன்ற பிற்போக்கான அரசியல் கோலோச்சுவதற்கு எந்தத் தடையும் விதிக்க மாட்டார்கள்.


இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை இரண்டு மொழி பேசும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் புரிந்து கொள்ளப் படுகின்றது. அங்கு மதப் பிரச்சினை இல்லையென்று பொதுவாக நம்பப் படுகின்றது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால் மதம் ஒரு பிரச்சினை அல்ல என்ற முடிவுக்கு வருவதும் தவறானது. சிங்கள - தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, மொழிப்பிரச்சினை கடந்த நூறாண்டுக்குள் உருவான புதிய தோற்றப் பாடு. அதற்கு முன்னர், சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் சகோதர பாசத்துடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழ் தேசியத்தின் பிதாமகர்களில் ஒருவராக மதிக்கப் படும் சேர் பொன் இராமநாதன் ஒரு சாதிவெறியராக இருந்தார். அது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்புணர்வும் கொண்டிருந்தார். 1915 ம் ஆண்டு, சிங்கள பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு கலவரத்திற்கு காரணமான சிங்கள அரசியல் தலைவர்களை சிறையிலடைத்தது. அவர்களில் சிலர் பிற்கால வரலாற்றில் தமிழருக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுக்கவிருந்தனர்.

தமிழ்த் தேசியத் தலைவர் சேர் பொன் இராமநாதன் என்ன செய்தார்? "பிசாசின் வழக்கறிஞர்" போன்று நடந்து கொண்டார். பிரிட்டனுக்கு சென்று வழக்காடி தனது வாதத் திறமையால் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார். தாயகம் திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் காவிச் சென்று நன்றி தெரிவித்தனர். சேர் பொன் இராமநாதனுக்கு சிங்களவர் வைத்த சிலை இன்றைக்கும் காலி முகத் திடலில் உள்ளது.

இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் கொள்கைப் படி, சேர். பொன் இராமநாதனுக்கு துரோகி முத்திரை குத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்றும் கூட "துரோகி" இராமநாதனை போற்றிப் புகழும் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள், எந்தவொரு தருணத்திலும் அவரது இனத்துரோகம் பற்றிப் பேசுவதில்லை. அதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு "இனத் துரோகத்திற்குள் அடங்காது!" இந்த விடயத்தில் சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன ஆச்சரியம்?

ஆகவே, இலங்கையில் தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும், எந்தக் காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்று யாரும் வாதாட முன்வர வேண்டாம். "இனிமேல் சிங்களவரும், தமிழரும் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்வதெல்லாம் பசப்பு வார்த்தைகள். சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள - தமிழ் வலதுசாரிகளும், கொள்கை வேறுபாடின்றி ஒன்று சேரக் கூடியவர்கள். அதுவே இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு உரமாக அமைய முடியும்.

இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்டு நச்சரிக்காதீர்கள். RSS, VHP  ஆகிய மதவாத அமைப்புகள், ஏற்கனவே சில ஈழத் தமிழ் கைக்கூலிகளுக்கு நிதி கொடுத்து சமூக வலைத் தளங்களில் இயங்க வைத்துள்ளன. முகநூலில் பல்வேறு போலிப் பெயர்களில் வந்து தாக்குதல் நடத்தும் கருத்துக் கந்தசாமிகள் பலருண்டு. இவர்கள் சிலநேரம் "புலிகளின் தீவிர விசுவாசிகள்" போன்று நடிப்பதால் யாரும் சந்தேகப் படுவதில்லை. ஆனால், அவர்களது குறிக்கோள் எப்போதும் இனவாதம், மதவாதத்தை தூண்டி விடுவதாக இருக்கும். உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொந்தளிப்பார்கள்.

இந்து மத அடிப்படைவாதம் பேசும் ஈழத் தமிழரின் முகநூல் பக்கங்கள் தனியாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அதற்கும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முகநூல் பக்கத்திற்கும் தொடர்பிருப்பதை காணலாம். இவர்கள் தமக்குள் ஒரே மாதிரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மையில் கொழும்பு நகரில் பௌத்த - இந்து ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான மகாநாடு ஒன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அறிஞர்கள், "இலங்கையில் எவ்வாறு பௌத்தர்களும், இந்துக்களும் ஆயிரமாயிரம் வருடங்களாக சகோதரர்களாக வாழ்ந்தார்கள்" என்று போதித்தார்கள்.

இலங்கையில் புத்தர் சிலைகள் கட்டுவதற்கும் இந்துக்கள் உதவியுள்ளனராம். ஆகவே, இனிமேல் யாராவது "இந்து பூமியில் அத்துமீறும்" புத்தர் சிலைகளை கண்டால், அதை மத நல்லிணக்க அடையாளமாக கருத வேண்டும் என்று போதிக்கிறார்கள். புத்தர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வழமை போல கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

ஜெர்மனியில் நாஸி கட்சியினர் வளர்ந்து வந்த பொழுது, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜெர்மன் மக்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: "நமது எதிரி வேறு யாருமல்ல. அவன் எமக்குள்ளே இருக்கிறான்." தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் சிங்களவர்களோ, முஸ்லிம்களோ அல்ல. உலகம் முழுவதும் மக்களின் உண்மையான எதிரிகள் பாசிஸ்டுகள் தான். ஒரே மொழி பேசினாலும், ஒரே மதத்தை பின்பற்றினாலும், பாசிஸ்டுகள் எப்போதும் மக்கள் விரோதிகள் தான்.


மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள ஆதாரங்களை பார்க்கவும்: