Showing posts with label தோழர். Show all posts
Showing posts with label தோழர். Show all posts

Thursday, January 26, 2017

#தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை


#தோழர் என்ற வார்த்தையை பிரபலமாக்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் சைலேந்திரபாபுவுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

 "முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது." சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. அதன் பின்னணி என்ன? 'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!

#தோழர் என்று அழைப்பது தமிழர் பாரம்பரியம். சங்க காலம் தொட்டு தமிழ் மக்களிடையே வழங்கி வரும் அருமையான சொல். தமிழர் மரபை ஒட்டி தோழமை, தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார்.

#தோழ‌ர் என்று சொன்னால் அர‌ச‌ ஒத்தோடிக‌ளுக்கு கோப‌ம் வ‌ருகின்ற‌து. அதிகார‌ வ‌ர்க்க‌த்திற்கு சேவை செய்யும் த‌ம‌து அடிவ‌ருடித் த‌ன‌த்தை ம‌றைப்ப‌த‌ற்கு த‌மிழ‌ர்க‌ளை போர்வையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிறார்க‌ள்.

#தோழர் என்ற சொல் யார் யாருக்குப் பிடிக்காது?

1. பழமைவாதிகள் அல்லது சாதியவாதிகள்.
2. மத அடிப்படைவாதிகள் (இந்து/முஸ்லிம்/கிறிஸ்தவம்)
3. அரச அதிகார வர்க்கம், அதன் அடிவருடிகள்.
4. முதலாளிகள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர்.

சில கயவர்கள் தோழர் என்ற சொல்லை, ஒரு வசைச் சொல்லாக, கீழ்த்தரமான மனப்பான்மையுடன் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக சாதிவெறியர்கள், தமது ஆணவத்தை மறைப்பதற்காக தோழர் என்று சொல்லி கிண்டல் அடிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அது புரிந்து கொள்ளப் படுகின்றது.

ஐ.எஸ்., அல்கைதா போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு தோழர் என்று சொன்னால் பிடிக்காது. அதே மாதிரி, தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிவெறியர்கள், பழமைவாதிகளும் தோழர் ஒரு தீண்டத்தகாத சொல் என்று கருதுகிறார்கள். தமிழ்மக்கள் இப்படியான கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.

ப‌ழ‌மைவாதிக‌ள், சாதிய‌வாதிக‌ளை அச்சுறுத்தும் #தோழ‌ர் என்ற‌ வார்த்தை.

#தோழ‌ர் என்ப‌த‌ற்குப் ப‌திலாக‌ அண்ணா, த‌ம்பி, அக்கா, த‌ங்கை என்று உற‌வுமுறைச் சொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துமாறு சில‌ர் எதிர்ப் பிர‌ச்சார‌ம் செய்கிறார்க‌ள்.

த‌மிழ‌ர்க‌ளே! ப‌ழ‌மைவாதிக‌ளின் பொறிக்குள் அக‌ப்ப‌ட்டுக் கொள்ளாதீர்க‌ள்.

நில‌ப்பிர‌புத்துவ‌ கால‌த்தை சேர்ந்த‌, அந்த‌ உற‌வு முறைச் சொற்க‌ள் ஏற்ற‌த்தாழ்வை வ‌லியுறுத்துகின்ற‌ன‌. ச‌ம‌த்துவ‌த்தை ம‌றுக்கின்ற‌ன‌. இது உண்மையில் ம‌ன்ன‌ராட்சி கால‌ பார‌ம்ப‌ரிய‌ம்.

அதாவ‌து, க‌ட‌வுளின் பூலோக‌ பிர‌திநிதியான‌ ம‌ன்ன‌ரையும், அத‌ற்க‌டுத்த‌ ப‌டி நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளையும் ப‌ல‌வித‌ ம‌ரியாதைச் சொற்க‌ளால் அழைக்க‌ வேண்டும். சாதார‌ண‌ குடி ம‌க்க‌ள் த‌ம‌க்குள் உற‌வு முறைச் சொற்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் ச‌மூக‌ப் ப‌டி நிலையை காப்பாற்றி வ‌ந்த‌ன‌ர்.

மேலை நாடுக‌ளில் அந்த‌ப் ப‌ழ‌க்க‌ம் இல்லை. பொதுவாக‌ எல்லோரையும் பெய‌ர் சொல்லி அழைக்கிறார்க‌ள். அத‌ன் மூல‌ம் நட்பு நெருக்க‌மாவ‌தாக‌ உண‌ர்கிறார்க‌ள்.

ஆனால், ச‌வூதி அரேபியா போன்ற‌ க‌டும்போக்கு இஸ்லாமிய‌ நாடுக‌ளில் நிலைமை வேறு. முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும் தோழ‌ர் என்று சொன்னால் பிடிக்காது. அத‌ற்குப் ப‌திலாக‌ ச‌கோத‌ர‌ன், ச‌கோத‌ரி என்று சொல்ல‌ வேண்டும்.

ஆகவே, 21ம் நூற்றாண்டில் வாழும், நாக‌ரிக‌ம‌டைந்த‌ த‌மிழ‌ர்க‌ளான‌ நாங்க‌ள், #தோழ‌ர் என்று அழைத்துக் கொள்வ‌த‌ன் மூல‌ம், ந‌ம‌க்குள் ச‌ம‌த்துவ‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

"புலிகள் #தோழர் என்று சொல்லாத படியால், நாங்களும் சொல்ல மாட்டோம்" என்று ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் விதண்டாவாதம் செய்கின்றனர். அது ஓர் அர்த்தமற்ற, நகைப்புக்குரிய வாதம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னை ஓர் அரசியல் இயக்கமாக அல்லாமல், இராணுவமாக கருதி வந்தது. இறுதிக் காலங்களில் தம்மை ஒரு மரபு வழி இராணுவமாக காட்டுவதில் பெருமைப் பட்டனர். அவர்களது போராளிகளும், ஆதரவாளர்களும் இராணுவ தாக்குதல்கள் பற்றிய தகவல்களை நாள் கணக்காக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசியல் பற்றிப் பேசியவர்கள் மிகச் சொற்பம். விரல் விட்டு எண்ணி விடலாம்.

பிரிட்டிஷ் காலனிய இராணுவம் தான் பிற்காலத்தில் சிறிலங்கா இராணுவமானது. அந்த மரபை புலிகளும் பின்பற்றினார்கள். கமாண்டர், ஜெனரல், லெப்டினன்ட் கேர்னல், மேஜர் போன்ற இராணுவ அடுக்கு நிலையை கறாராக பேணி வந்தனர். அதன் அர்த்தம், மேலிருந்து வரும் உத்தரவுகளுக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் கட்டுப்பட வேண்டும். கேள்வி கேட்க முடியாது.

தோழர் என்ற சொற்பிரயோகம், சிலநேரம் இராணுவக் கட்டமைப்பை குலைத்து விடும். அதாவது, எல்லோரும் சமம் என்ற எண்ணம் உருவாகி விடும். கீழ்நிலைப் போராளிகள், மேல்நிலை தளபதிகளை தோழர் என்று அழைப்பார்கள். அது சமத்துவ உணர்வை உண்டாக்கி விடும். அது விரும்பத் தக்கதல்ல என்பதால் தான், புலிகள் தோழர் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஆனால், இன்றைய ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் ஓர் இராணுவ கட்டமைப்புக்குள் வாழவில்லை. அவர்கள் புலிகளை ஆதரிப்பது அரசியல் கொள்கை சம்பந்தமான விடயம். புலிகள் செய்தது மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. புலிகளின் முகாம்களுக்குள் இயக்கப் பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

விடுதலைப் புலி உறுப்பினர்கள், தமிழக திரையிசைப் பாடல்கள் கேட்பதும், தமிழக சினிமாப் படம் பார்ப்பதும் தடை செய்யப் பட்டிருந்தன. இன்றைக்கு புலிகளை ஆதரிப்பவர்களும் அப்படியா நடந்து கொள்கிறார்கள்? புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, முன்னாள் போராளிகள் கூட சினிமாப்படம் பார்க்கிறார்கள், சினிமாப் பாடல்கள் கேட்கிறார்கள். இதெல்லாம் புலிகளின் கொள்கைக்கு முரணான விடயம் இல்லையா?

#தோழர் என்ற அரசியல் கலைச் சொல் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்:

- பிரெஞ்சுப் புரட்சி கொண்டு வந்த சமுதாய மாற்றங்களில் ஒன்று. புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் தோழர் என்று அழைத்துக் கொண்டனர். "ஐயா", "அம்மா" என்றழைக்கும் நிலப்பிரபுத்துவ கால சொற்களுக்கு மாற்றீடாக பயன்பட்டது.

- மூலச் சொல் லத்தீனாக இருக்கலாம். "ஒரே அறையில் தங்கியிருப்பவர்" எனும் பொருள் கொண்ட அடிப்படை சொல்லில் இருந்து வந்திருக்கலாம்.

- காமராட் (camarade) என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் காம்ரேட் (comrade) வந்தது. (அதாவது, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்.)

- ஜெர்மன் மொழி பேசும் மக்கள் மத்தியில் "காமராட்"(Kamerad) என்று அழைத்துக் கொள்ளும் கலாச்சாரம் இருந்து வந்தது. பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஒருவரையொருவர் காமராட் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம், இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களைக் கேட்டால் தெரியும்.

- துருக்கிய மொழிகளில் "யொல்டாஷ்" என்பார்கள். சேர்ந்து பயணிப்பவர் என்று அர்த்தம்.

- ரஷ்ய மொழியில் "தவாரிஷி". அதன் மூலச் சொல் ஏதாவதொரு துருக்கி மொழியாக இருக்கலாம். அதாவது, "சேர்ந்து பயணிப்பவர்" என்ற அர்த்தம் கொண்டது.

- தமிழில் "தோழர்", அரபியில் "ராபீக்". இது போன்று பல உலக மொழிகளில், நண்பர், தோழர் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்களாக பாவனையில் உள்ளன.

பிற்குறிப்பு: உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், பழமைவாதிகள், மத அடிப்படைவாதிகள் போன்ற பிற்போக்குவாதிகள், தோழர் என்று அழைப்பதை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக சகோதரர்/சகோதரி என்று சொல்லிக் கொள்வார்கள்.

Tuesday, September 27, 2016

தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்!


புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.

"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது(?)" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்! நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.

1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.

சுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.

ஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, "பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.

ப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் "தோழ‌ர்க‌ள்" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.

தந்தையை "ஐயா" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா? ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.

தாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.

ஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

புலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.

விடுதலைப் புலிகள் "தோழர்" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன்! அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.

இந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

அதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.

அநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் "தேசியவாதம்". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
"தோழர் பிரபாகரன்!" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை