Friday, October 26, 2012

மலாலா மீதான தாக்குதல், தாலிபானின் வீழ்ச்சிக்கு வித்திடுமா?

பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய  முயன்ற தாலிபானின் வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன. அவற்றை நமக்கு காண்பித்த சர்வதேச ஊடகங்கள், "தாலிபானுக்கு எதிரான மக்கள் எழுச்சி" நடந்ததைப் போன்று அறிவித்துக் கொண்டிருந்தன. ஆனால், பாகிஸ்தானில் உண்மையான நிலவரத்தை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுவதில்லை. ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத பாகிஸ்தானின் மறுபக்கத்தை, நாம் இங்கு ஆராய்வோம்.

பாகிஸ்தானுக்கும், நவீன இஸ்ரேலுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் மதத்தின் பெயரால் உருவான தேசங்கள். இஸ்ரேல், தன்னை ஒரு உலக யூதர்களின் தாயகமாக காட்டுவதைப் போன்று, பாகிஸ்தான் குறிப்பாக தெற்காசிய முஸ்லிம்களின் தாயகமாக காட்டிக் கொண்டது. பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டாலும், உண்மையில் அது ஒரு மேற்கத்திய சார்புடைய, தாராளவாத கொள்கை கொண்ட  நாடாகவே இருந்தது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய, ஸியா உல் ஹக் காலத்தில் எல்லாமே தலைகீழாக மாறின. சியா, பாகிஸ்தானை ஷரியா சட்டத்தினால் ஆளப்படும், ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாத நாடாக்க விரும்பினார். அதற்காக ஆர்வமுடைய மாணவர்களை தெரிவு செய்து, இஸ்லாமியக் கல்வி கற்க சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார். 

முல்லா, மௌலவி போன்ற இஸ்லாமிய மதகுரு ஆவதற்கான, இடைநிலை, உயர்தர கற்கைகளை சவூதி அரேபியா இலவசமாகவே வழங்கியது. சவூதி அரசு, வாஹபிசம் என்ற இஸ்லாமியப் பிரிவை பின்பற்றி வருகின்றது. தமது பிரிவினரே, இஸ்லாமிய மதத்தை தூய்மையாக கடைப்பிடிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானிய மாணவர்களின் மூளைகளையும்  அதற்கேற்ப தயார்படுத்தினார்கள். பாரம்பரிய பாகிஸ்தானிய இஸ்லாம் (சூபிசம்), தாராளவாதக் கொள்கை கொண்டது. அத்தகைய சமூகத்தில், கடும்போக்கு சவூதி இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட்டது மட்டுமல்ல, மக்களின் பேராதரவுடன் நடைமுறைப் படுத்தப் பட்டது. பாகிஸ்தானிய மக்கள் அத்தனை இலகுவாக மாறி இருக்க  மாட்டார்கள். அதற்கான சமூக அரசியல் தளம் அங்கே இருந்திருக்க வேண்டும்.

இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக் கொள்வதைப் போன்று, பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை எவ்வாறு கட்டியாள்வது என்பது தான் ஆட்சியாளர்களின் பிரச்சினை. பாகிஸ்தானில் ஐந்து மொழிகளைப் பேசும், நாகரிக வளர்ச்சி அடைந்த இனங்களும், அதைத் தவிர பத்துக்கும் குறையாத தனித்துவமான மொழிகளைப் பேசும் பழங்குடி இனங்களும் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இஸ்லாம் என்ற மதம் மட்டும் தான் ஒன்றிணைக்கின்றது. அப்படி இருந்தாலும், கிறிஸ்தவ, இந்து மதங்களைப் பின்பற்றுவோரும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இந்த சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோர் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆவர். அது மட்டுமல்ல, அவர்கள் பாகிஸ்தானின் பூர்வீக மக்களுமாவார். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில், இந்தியாவில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் இன்றைக்கு ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். ஆனால், இன்று கிறிஸ்தவ, இந்து மதங்களை பின்பற்றும் தலித் மக்களின் மூதாதையர் ஆயிரமாயிரம் வருடங்களாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர்கள்.

மதவாதிகள் முதலில், பலவீனமான சமூகங்களை குறிவைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மதத்தால் மட்டும் வேறுபட்டவர்கள் அல்ல. சாதியமைப்பிலும் தாழ்ந்தவர்கள். அதனால், அவர்களை தாக்கினால் கேட்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை. ஸியா அரசு கொண்டு வந்த, மத நிந்தனைச் சட்டம் அவர்களை ஊக்குவித்தது. அண்மையில் ஒரு மூளை வளர்ச்சி குறைந்த கிறிஸ்தவ சிறுமி, "குரான் நூலை எரித்ததாக" குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த இளம்பெண் குற்றமற்றவர் என்று நிரூபணமானது. அந்த கிராமத்து பள்ளிவாசலின் முல்லா, எரிந்த குரான் தாள்களை, அந்த சிறுமியின் பையில் ஒளித்து வைத்திருக்கிறார். அந்த உண்மையை கூறியவர், பள்ளி வாசலில் தொழுகையை அறிவிக்கும் மூசேன். இருப்பினும், அந்த கிறிஸ்தவ சிறுமி, மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. குற்றமிழைத்த முல்லாவின் ஈனச் செயலுக்குப் பின்னால், அந்த ஊரில் வாழும் கிறிஸ்தவர்களை விரட்டும் சதித் திட்டம் மறைந்திருக்கலாம்.

பாகிஸ்தான் கிராமங்களில் பாதிக்கப்படும், எல்லா கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், சர்வதேச கவனம் கிடைப்பதில்லை. ஒரு தடவை, விவசாய கூலிப் பெண்களுக்கு இடையில் நடந்த சண்டை ஒன்று, நீதிமன்றம் வரை சென்றது. அதில் குற்றஞ் சாட்டப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தப் பெண் செய்த குற்றம், வாய்த் தர்க்கத்தின் போது, மற்றவரின் (இஸ்லாமிய) மதம் பற்றி தரக் குறைவாக பேசியது. அங்கு நடந்த சச்சரவுக்கான காரணம் எதுவாக இருப்பினும், மத நிந்தனையானது நீதிபதியினால் கடுமையான குற்றமாக கருதப் பட்டது. உண்மையில் அன்று அங்கே நடந்தது என்ன? வயல் வேலையின் நடுவில், கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த கிறிஸ்தவப் பெண்ணிடம், நீர் வாங்கிப் பருக சில பெண்கள் மறுத்துள்ளனர். அதற்குக் காரணம், அந்த கிறிஸ்தவப் பெண் ஒரு தீண்டத்தகாத சாதியை சேர்ந்தவர். இந்தியாவில், இலங்கையில் இருப்பதைப் போல, பாகிஸ்தானிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது கூட தீட்டு என்று கருதப் படுகின்றது. இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம், மத முரண்பாடாக வளர்ந்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீதிபதி உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால், ஒரு சிறிய குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளார். இது தெற்காசிய நாடுகளுக்குரிய பொதுவான குணம். இன்றைக்கு யாரும் சாதி ஆதிக்க அரசியலை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். மதப் பிரச்சினை, இனப்பிரச்சினைகளுக்கு பின்னால் முகத்தை புதைத்துக் கொள்வார்கள்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு, அங்கே தாலிபான் என்ற அமைப்பை உருவாக்கியமை எல்லோருக்கும் தெரியும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றது. அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆப்கானிய ஆயுதக்குழுக்களுக்கு கொடுத்து யுத்தம் செய்ய விட்டு, ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடந்த முப்பதாண்டுகளாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இவர்கள் ஆயுதங்களுக்கு செலவிட்ட பணத்தை, நாட்டை அபிவிருத்தி செய்வதில் செலவிட்டிருந்தால், பாகிஸ்தானிலும் தாலிபான் உருவாவதை தடுத்திருக்கலாம். பாகிஸ்தான் அரசு, அயல்நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தை உருவாக்கி விட்டது. அவர்களின் அசுர வளர்ச்சியைக் கண்டு பிரமித்த பாகிஸ்தானிய இளைஞர்கள், தாங்களும் ஒரு தாலிபான் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு Tehrik-e-Taliban of Pakistan (TTP) என்று பெயரிட்டார்கள்.  2007 இலிருந்து, 2009 வரையில், ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள மேல் மாகாணத்தின் பல பகுதிகள் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் புலிகளை அழிக்கும் நோக்குடன், ஸ்ரீலங்கா அரசு இராணுவ நடவடிக்கை எடுத்திருந்தமை அனைவருக்கும் தெரியும். அதே வருடம், அதே காலத்தில், பாகிஸ்தான் இராணுவம் தாலிபான் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது போர் தொடுத்திருந்தது. ஸ்ரீலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரித்த சர்வதேச நாடுகள், பாகிஸ்தான் அரசையும் ஆதரித்தன. போரின் முடிவும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. முற்றுகைக்குள் சிக்கிய தாலிபான்கள், இலட்சக் கணக்கான பொது மக்களை வெளியேற விடாது தம்மோடு வைத்திருந்தனர். பாகிஸ்தான் இராணுவம் கண்மூடித் தனமாக எறிகணைகளை வீசி, ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தது. அந்த வருடம் நடந்த போரின் இறுதியில், தாலிபான் பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தானிய அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. இருப்பினும், தாலிபான் முற்றாக அழிக்கப் படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் தொடர்ந்தன. சமீபத்தில் நடந்த, மலாலா மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தாலிபான் இன்னமும் அங்கே இயங்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

பாகிஸ்தானில் மீண்டும் தாலிபான் தலையெடுப்பதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் அரசின், மக்கள் நலனை புறக்கணிக்கும் ஊழல் மய  அரசியல் ஒரு முக்கிய காரணம். 2010, 2011 ல் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணப் பொருட்களை வழங்குவதில், வழக்கம் போல அரசு அசமந்தப் போக்கை காட்டியது. இத்தனைக்கும், சர்வதேச நாடுகளின் உதவிகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. வெள்ள நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெறவில்லை. அந்த தருணத்தில், தாலிபான் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. பாகிஸ்தானிய அரசினால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மனங்களை தாலிபான் வென்றது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிப்பார்கள்?

பாகிஸ்தானில் அபிவிருத்தியால் பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்கள், மிகவும் வறுமை நிலையிலும், எழுத்தறிவின்றியும் வாழ்கின்றனர். அத்தகைய சமூகத்தில், தாலிபான் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்ததில் வியப்பில்லை. அந்தப் பகுதியில், அரச பாடசாலைகளின் செலவினத்திற்காக, அரசு செலவிடும் தொகை மிகவும் சொற்பம். அந்த இடங்களில், சவூதி நிதியில் தாலிபான் கட்டிய குரான் பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே கல்வி இலவசம். அத்துடன், பிள்ளைகளுக்கு உணவும், ஆடைகளும் தருகிறார்கள். பணம் செலவழித்து பட்டணத்திற்கு அனுப்பி, தனியார் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கும் வசதியற்ற ஏழைப் பெற்றோர், தாலிபான் நடத்தும் மதராசாக்களால் ஈர்க்கப் படுவதில் வியப்பில்லை. ஆனால், அந்தப் பாடசாலைகளில், குரான் படிப்பு, கணிதம், அரபு மொழி மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள். சமூகத்தில் படித்து முன்னேற வேண்டுமானால் அரசுப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். அதனை தடுக்கும் நோக்குடன், தாலிபான் அரசுப் பாடசாலைகளை குண்டு வைத்து தகர்த்தது. மேலும், மேற்கத்திய கல்வியமைப்பு, பெண் கல்வி ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையாகவும் அது நடந்தது. தாலிபான்களின் கல்வி மறுப்பை எதிர்த்து போராடி பிரபலமானவர் தான், தாலிபானால் சுடப்பட்ட சிறுமி மலாலா.

தாலிபான் உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களை நம்பியிருக்கும் மக்கள் மனதிலும், மதவெறி, சகிப்புத் தன்மை இன்மை,போன்றன விதைக்கப் படுகின்றன. அவர்களுக்கு எதிராக பேசும் நிராயுதபாணிகளான மக்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை தான். அதை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு, மலாலா துப்பாக்கிச்சூடு விடயத்தில், தாலிபானின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்த்தது எல்லாம் வெறும் காட்சிப் படிமங்கள் மட்டுமே. நிஜத்தில், இன்றைக்கும் மக்கள் தாலிபானை விமர்சிக்க அஞ்சுகின்றார்கள். நேர்மையான அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள விரும்பும் இம்ரான் கான் போன்ற பிரபலங்கள் கூட தாலிபானை எதிர்த்து பேசுவதில்லை. அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான, இம்ரான்கானின் அமைதிவழியிலான ஊர்வலம் ஒன்றை தாலிபான் தடை செய்தது. அப்படி இருந்தும், மலாலா மீதான துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாத செயலாக கண்டித்த இம்ரான்கான், தாலிபானை நேரடியாக கண்டிக்க தயங்குகின்றார். அதற்கு என்ன காரணம்? 

இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் யாராவது புலிகளை விமர்சித்துப் பேசினால் என்ன விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்? அந்த நிலைமை தான் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது. தாலிபானின் செயற்பாடுகளுடன் எல்லோரும் உடன்படுவதில்லை. அவற்றை விமர்சனத்துடன் அணுகும் மக்களும் இருக்கின்றனர். ஆனால், அதை எல்லாம் வெளியில் பேசத் தயங்குவார்கள். அப்படிப் பேசினால், அரச ஆதரவாளர் முத்திரை குத்தப்பட்டு விடும் என்ற அச்சம் மட்டும் காரணம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய இராணுவம் பிரயோகிக்கும் வன்முறை, தாலிபான் வன்முறையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால், எந்தக் குறை இருந்தாலும், மக்கள் தாலிபானை ஆதரிக்க வேண்டிய நிலை. இதே போன்ற நிலைமையில் தான், பெரும்பாலான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை, இங்கே நான் குறிப்பிட வேண்டியதில்லை. 

பாகிஸ்தானில் இன்னமும் தொடரும், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்களின் (ட்ரோன்) தாக்குதல்களால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஓரிரு தடவைகள், விமானக் குண்டு வீச்சில் சில பாகிஸ்தானிய படையினரும் கொல்லப்பட்டனர். அப்படி இருந்த போதிலும், பாகிஸ்தானிய அரசினால், அமெரிக்க விமானக் குண்டுவீச்சை தடுக்க முடியவில்லை. அத்தகைய கையாலாகாத அரசின் பக்கம் இனங் காட்டிக் கொள்வதற்கு யார் விரும்புவார்கள்? மலாலா விவகாரத்தில், பாகிஸ்தானிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேல் தாலிபானின் கதை முடிந்து விடும் என்றும் நினைப்பது வெறும் கனவு. அப்படி ஒன்று நடக்க வேண்டுமென்று, பாகிஸ்தானிய, அமெரிக்க அரசுகள் மனப்பூர்வமாக விரும்பினால், முதலில் ட்ரோன் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.


பாகிஸ்தான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்
2.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
3.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி
4.காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை


Monday, October 08, 2012

சாவேசின் சாதனைகள் : மறைக்கப்பட்ட உண்மைகள்


வெனிசுவேலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?



1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுவேலாவில், எண்ணை  விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Timeshttp://www.ft.com/)

2.  வெனிசுவேலாவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)  

3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)

4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுவேலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)

5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள்  நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த  Carter Centrum   ஐ  சேர்ந்த  Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)

6. வெனிசுவேலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக  நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)

7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான   Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது.  அவர்களின் கணிப்பின் படி, வெனிசுவேலாவில்  83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %. 

8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர்  Henrique Capriles பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுவேலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த  Henrique Capriles அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார். 
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)  

இந்த தேர்தலில் ஊகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  Henrique Capriles 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

வெனிசுவேலா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை
2.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
3.அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா
4.வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)
5."சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்" - 5 வது சர்வதேசியம்

Thursday, October 04, 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்

"The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
கேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்?

பதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.

2008  டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.
தற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா? அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா? முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா? சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள்  அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.  அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.

இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. ஐ.நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: "சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. ஐ.நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.

கேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா?

பதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.

கேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இஸ்ரேல் அதனை ஒரு "தாக்குதல்" என்று அழைத்துக் கொள்கின்றது.  உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள்.  அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன்? ஏனென்றால், இஸ்ரேல், தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது.

2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட  மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.  
கேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா?

பதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா  படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார்.  அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக்  கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா?
பதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது.   அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000  யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர்.  இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், "அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்"  என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை  அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.  இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.  
கேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்?
பதில்: பாலஸ்தீனர்களிடம் இருந்து.
அரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப்  பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது  தளர்நிலையில்  இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.  எப்படி? தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும்,  2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும். 

(நன்றி: Trouw, 2-10-2012)

(தமிழ் மொழிபெயர்ப்பு: கலையரசன்)

(மூலப்பிரதி:  'Israël heeft geen enkel recht om aan te vallen',   http://www.trouw.nl/tr/nl/4496/Buitenland/article/detail/3325343/2012/10/02/Israel-heeft-geen-enkel-recht-om-aan-te-vallen.dhtml, )