Thursday, November 02, 2023

பாசிஸ்டுகளால் பாழாகும் யாழ் பல்கலைக்கழகம்! பிற்போக்கு பழமைவாதிகளின் கழகம்!!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருள்லிங்கத்தின் கருத்தரங்கம், மாணவர் போர்வையில் இருந்த பாஸிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் நடக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு தமிழ் அரசியல் ஆர்வலரின் கருத்து சுதந்திரத்தை தடுத்த பாஸிஸ்டுகளின் செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.

அதற்கு சொல்லப்படும் ஒரேயொரு காரணம் இவர் முன்பு புலிகளை எதிர்த்து பேசியுள்ளார் என்பது தான். அதாவது புலிகளை பாஸிஸ்டுகள் என்று சொல்லி விட்டாராம். இன்று புலி விசுவாசிகளாக காட்டிக் கொள்பவர்கள் தமது செயல்கள் மூலம் தாமே பாஸிஸ்டுகள் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

இது யாழ்ப்பாண "அறிவுஜீவி"(?)களின் பழமைவாத பிற்போக்குத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றுள்ள யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு கருத்தரங்கில் படு பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதை எல்லாம் கைதட்டி இரசித்த மாணவர்கள் முற்போக்கான கருத்துக்களுக்கு செவி கொடுக்க மறுத்து தடைசெய்துள்ளமை மாணவர் சமுதாயத்திற்கே இழுக்கு. இவர்கள் தான் நாளைக்கு நிர்வாகிகளாக, அதிகாரிகளாக பதவிகளில் அமரப் போகிறவர்கள். பழமைவாத பிற்போக்குவாதிகள் அதிகாரத்தில் இருந்தால் தமிழினம் எப்படி முன்னேறும்? நிச்சயமாக அது நாகரிகத்தில் பின்தங்கிய இனமாகத் தான் இருக்கும்.

வெளிப்படையாக இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்துவோருக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறியுள்ள யாழ் பல்கலைக்கழகம், இனவாதிகளுக்கு எதிராக போராடி மக்களை ஒன்றுபடுத்தும் முற்போக்காளர்களை பேச விடாமல் தடுத்தமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு பாசிச அடக்குமுறை தான்.

இத்தாலியில் முசோலினி தலைமையிலான பாஸிஸ்டுகளும், ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஸிகளும் செய்த அதே வேலையை தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் போர்வையில் உள்ள பாஸிஸ்டுகளும் செய்துள்ளனர். குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஸிஸ்டுகளுக்கு, தமிழினத்திற்கு தலைமை தாங்க எந்த தகுதியும் கிடையாது.