Wednesday, July 27, 2016

துருக்கியில் முறியடிக்கப் பட்ட இராணுவத்தின் சதிப்புரட்சி ஒத்திகை


துருக்கியில் நடந்த இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்துள்ளது. சதிப்புரட்சி பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வலம் வந்த போதிலும் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாவாவதற்கு ஒரு நாள் எடுத்தது. இருப்பினும், இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், சதிப்புரட்சியை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. துருக்கி அரசு கூட ஊகங்களின் அடிப்படையில் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தது.

15 ஜூலை, துருக்கி நேரம் இரவு ஒன்பதரை மணியளவில், இஸ்தான்புல், அங்காரா போன்ற முக்கிய நகரங்களில் பெரும‌ள‌வு இராணுவ‌த்தின‌ர் குவிக்க‌ப் பட்டனர். இலட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களின் மீதும், போர் விமானங்கள் வட்டமிட்டன. யாரும் பயந்த படி குண்டு போடவில்லை. ஆனால், ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. தலைநகர் அங்காராவில், பாராளுமன்றம், அமைச்சுக்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள் யாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தன. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து சதிப்புரட்சியை பிரகடனம் செய்த இராணுவத்தினர், தாம் ச‌ர்வ‌தேச‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுப்ப‌தாக‌ தெரிவித்த‌ன‌ர்.

இஸ்தான்புல் ச‌ர்வதேச‌ விமான‌ நிலைய‌ம் மூட‌ப் பட்டிருந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான‌ சேவைக‌ள் அனைத்தும் இர‌த்து செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. விமான‌ நிலைய‌த்தில் யுத்த‌ தாங்கிக‌ள் நிறுத்த‌ப் பட்டிருந்தன. இஸ்தான்புல் நநகரில் காவ‌ல்துறையின‌ர் எதிர்ப்புக் காட்டி உள்ள‌ன‌ர். இராணுவத்தினருக்கும், பொலிசாருக்கும் இடையில் நடந்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். சில மணி நேரத்தின் பின்னர், அதாவது சதிப்புரட்சி தோல்வியுற்றதும், இராணுவத்தினர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.

அன்றைய சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர்கள். பலருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தாம் ஒரு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் படுவதாக நம்பினார்கள். இதுவும் ஓர் ஒத்திகை என்று நினைத்தார்கள். அதனால் தான், சதிப்புரட்சி தோல்வியடைந்த நேரம் மக்களைத் தாக்காமல் சரணடைந்தார்கள். சதிப்புரட்சியாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படலாம்.

தலைநகரில் சதிப்புரட்சி நடந்த நேரம், ஜ‌னாதிப‌தி எர்டோக‌ன் தென் துருக்கியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமான மார்மாரிஸ் நகரில் இருந்தார். ஆளும்கட்சியான, அவ‌ர‌து AK க‌ட்சிக்கு எதிராக‌வே ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்துள்ள‌து. இராணுவ‌த்தின‌ர், அங்காரா ந‌க‌ரில் AK க‌ட்சி த‌லைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்கள் போராட்டங்களை சகித்துக் கொள்ளாத ஜனாதிபதி எர்டோகன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்றதும், மக்களை வீதிக்கு வந்து போராடுமாறு அறைகூவல் விடுத்தார்.

தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஸ்கைப் மூலம் உரையாடிய ஜனாதிபதியின் பேச்சை நேரடி ஒளிபரப்புச் செய்தது. எர்டோகனின் அறைகூவலை செவி மடுத்த அவரது கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியாளர்களுக்கு எதிராக சவால் விட்டனர். யுத்த தாங்கிகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். "இராணுவ சதிப்புரட்சி மக்கள் சக்தி மூலம் முறியடிக்கப் பட்டதாகவும், இராணுவத்தினர் மக்களைக் கொல்லவில்லை..." என்று ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதில் ஒரு பகுதி உண்மை தான் உள்ளது.

உண்மையில் சதிப்புரட்சியின் போது இரத்தக் களறி ஏற்பட்டது. இராணுவம் மக்களை நோக்கி சுட்டது. அதில் பல பொது மக்கள் மரணமடைந்தனர். இதைத் தவிர, பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சமரில், இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப் பட்டனர். சதிப்புரட்சியின் விளைவாக, மொத்தம் 260 பேர் மரணமடைந்ததாக ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் துருக்கி இராணுவம்! ஆமாம், தொண்ணூறு சதவீத படையினர் சதிப்புரட்சியில் பங்குபற்றவில்லை. அன்று இரவே, "இராணுவ‌த்தில் ஒரு பிரிவின‌ர் ம‌ட்டுமே ச‌திப்புர‌ட்சியில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌" பிர‌த‌ம‌ர் யில்ட்ரிம் (Yildrim) தெரிவித்திருந்தார். அது உண்மை தான். படையினரே சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை தெருவில் பிடித்து வைத்து அடித்து உதைக்கும் காட்சிகளை அடுத்த நாள் காணக் கூடியதாக இருந்தது.

இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். துருக்கியில் 1960 - 1980 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மூன்று தடவைகள் இராணுவ சதிப்புரட்சிகள் நடந்துள்ளன. பல வருட காலம் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துள்ளது. நவீன துருக்கியின் சிற்பியாக கருதப் படும், "தேசப் பிதா" கெமால் அட்டா துர்க் காலத்தில் இருந்து, துருக்கியில் இராணுவம் ஒரு பலமான ஸ்தாபனம். ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் இராணுவத்துடன் சமரசமாகப் போகவே விரும்பும்.

துருக்கியில் மேலைத்தேய கலாச்சாரத்தை புகுத்தி, அதை ஒரு சராசரி ஐரோப்பிய நாடாக்கிய பெருமை அட்டா துர்க்கையே சேரும். துருக்கி அரசு மதச்சார்பின்மையை கறாராக பின்பற்ற வேண்டும் என்பது அவர் உத்தரவு. அதை இன்றைக்கும் நடைமுறைப் படுத்தி வரும் அரச இயந்திரம் இராணுவம் தான். இஸ்லாமியவாத எர்டோகன், பல தடவைகள் மத நம்பிக்கை சார்ந்த சட்டங்களை கொண்டு வர முயன்றார். அப்போதெல்லாம் இராணுவம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், இந்த தடவை எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதிப்புரட்சியை இராணுவம் ஆதரிக்கவில்லை.

ஆகவே, தற்போது நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சதிப்புரட்சிக்கு மக்கள் மட்டுமல்ல, துருக்கி இராணுவம் கூட ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அப்படியானால் சதிப்புரட்சியை நடத்தியவர்கள் யார்? நிச்சயமாக இராணுவத்தில் ஒரு சிறு பிரிவினர் தான். ஆனால், அவர்களது நோக்கம் என்ன? பின்னணியில் வேறு யார் இருந்துள்ளனர்? இவை இன்னும் மர்மமாகவே உள்ளன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், அதில் ஈடுபட்ட எட்டு இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தப்பியோடி கிரீசில் தரையிறங்கி உள்ளனர். (இஸ்தான்புல் நகரில் இருந்து கிரேக்க நாட்டு எல்லை சில மைல் தூரம் தான்.) அவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கிரேக்க அரசு அவர்களை கைது செய்து விட்டு, ஹெலிகாப்டரை துருக்கிக்கு திருப்பி அனுப்பி விட்டது. ஆனால், அரசியல் தஞ்சம் கோரிய படையினர் திருப்பி அனுப்பப் படுவார்களா என்பது தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மாதிரித் தான், கிரீஸ், துருக்கிக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளும் உள்ளன.

துருக்கியில் இது வ‌ரையில் ஜெனர‌ல்க‌ள் உட்பட‌ இர‌ண்டாயிர‌த்திற்கும் அதிக‌மான‌ ப‌டையின‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். குறிப்பாக இரண்டாம் படைப்பிரிவு தளபதி ஆதம் ஹுடுத்தி (Adem Huduti), மூன்றாம் படைப்பிரிவு தளபதி எர்டல் எஸ்துர்க் (Erdal Öztürk) ஆகிய தளபதிகளும் கைது செய்யப் பட்ட பெரிய தலைகள் ஆவார்கள். மூன்றாம் படைப்பிரிவு இஸ்தான்புல் மாநகர காவலுக்கும், இரண்டாம் படைப்பிரிவு சிரியா எல்லைக் காவலுக்கும் பொறுப்பான இராணுவப் பிரிவுகள் ஆகும். மேலும், 2745 நீதிப‌திக‌ளும், 140 ச‌ட்ட‌மா அதிப‌ர்க‌ளும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். இன்னும் ப‌ல‌ர் தேட‌ப் படுகின்ற‌ன‌ர்.

எர்டோகன் அரசு எதற்காக நீதிபதிகளை கைது செய்ய வேண்டும்? அரசு, அரசாங்கம் என்பவற்றிக்கு எதிரான வித்தியாசங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், அது விரும்பும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தடையாக அரசு இருக்கலாம். நீதிபதிகள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசுப் பிரதிநிதிகள். அப்படியானவர்களை அப்புறப் படுத்தினால், தான் விரும்பும் இஸ்லாமிய மதச் சார்பான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது எர்டோகனின் நோக்கம்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியா எல்லைக்கு அருகில் உள்ள இன்சிரில்க் (Incirlic) விமானப் படைத் தளத்தை சேர்ந்தவர்களே இராணுவ சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என்று ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அங்கிருந்து தான் சதிப்புரட்சிக்கு திட்டம் தீட்டப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இதனால், இன்சிரில்க் முகாம்மு சுற்றிவளைக்கப் பட்டது. முகாமுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டது. அங்கிருந்த துருக்கிப் படையினர் விசாரணை செய்யப் பட்டனர். பலர் கைது செய்து காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

இன்சிரில்க் படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் மொத்தம் 2,200 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 1,500 பேர் இன்சிரில்க் முகாமில் உள்ளனர். சிரியாவில் ISIS பிரதேசம் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள் இன்சிரில்க் படைத் தளத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குய்லன் (Gülen) என்ற அரசியல் தலைவர் தான், தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு காரணம் என்று எடோகன் குற்றம் சாட்டுகின்றார். அவர் ஒரு "பயங்கரவாதி" என்றும், துருக்கிக்கு நாடு கடத்துமாறும் அமெரிக்க அரசை கோரியுள்ளார். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. எர்டோகனும், குய்லனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்! தற்போது ஜென்மப் பகைவர்கள்!

தற்போது ஆளும்கட்சியான AK கட்சி, முதன்முதலாக 2002 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தமைக்கு குய்லன் முக்கிய காரணம். அவரது மேற்பார்வையின் கீழிருந்த குய்லன் இயக்கம் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது. ஆட்சியைப் பிடித்த பின்னர், எர்டோகனுக்கும், குய்லனுக்கும் இடையில் விரிசல் தோன்றியது. 

எர்டோகன் தீவிர இஸ்லாமியவாதியாக இருந்தது மட்டுமல்லாது, தனது சர்வாதிகார தலைமையின் கீழ் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தார். அதற்கு மாறாக, குய்லன் மிதவாத இஸ்லாமியவாதியாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து வந்தார். இது மட்டுமே, AK கட்சியின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு. அதைத் தவிர வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக இருந்த துருக்கி, தொண்ணூறுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி கண்டது. அப்போது தோன்றி வளர்ந்த தேசிய முதலாளிகளின் செல்வாக்கும் அதிகரித்தது. அவர்கள் தான் இஸ்லாமியவாத AK கட்சியின் நிதிப் புரவலர்கள். தேசிய முதலாளித்துவமும், இஸ்லாமியவாதமும் கையோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே பிளவுகள் தோன்றின. அவற்றில் குய்லன் ஆதரவுக் குழுவினர் முக்கியமானவர்கள். இது ஒரு கோஷ்டி மோதல். குய்லன் இயக்கம் என்பது, ஒரு சமூக அரசியல் அமைப்பாக, ஏராளமான உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

துருக்கியர்கள் ஒரே மொழி பேசினாலும், அவர்கள் ஒரு பிளவு பட்ட சமுதாயம் தான். கொள்கை முரண்பாடு காரணமாக சிலநேரம் உறவினர்களும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நேரில் கண்டால் கடித்து இரத்தம் குடிக்குமளவிற்கு வெறுப்பார்கள். அந்தப் பிரிவினை ஒரு புதினமல்ல. காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால், இஸ்லாமியவாதிகள் (துருக்கி இடதுசாரிகள் அவர்களை "இஸ்லாமிய - பாசிஸ்டுகள்" என்றும் அழைக்கிறார்கள்) தமக்குள் பிளவு பட்டு அடிபடுவது ஒரு புதிய அரசியல் தோற்றப் பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு குய்லன் தான் காரணம் என்று எர்டோகன் சொல்வது உண்மையானால், இது ஆளும் வர்க்கத்திற்குள் தோன்றிய முரண்பாட்டின் விளைவு என்பது தெளிவாகின்றது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர், நீதித்துறையினரில் பெரும்பான்மையானோர் குய்லன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

குய்லன் இயக்கம் ஒரு சாதாரணமான சமூக அமைப்பு அல்ல. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிலையங்கள் பல குய்லன் இயக்க ஆதரவாளர்களினால் நடத்தப் படுகின்றன. உண்மையில் இன்னும் சில சமூக அமைப்புகள் அவ்வாறு இயங்குகின்றன. ஆனால், எர்டோகனின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக இருப்பது குய்லன் இயக்கம் மட்டும் தான். பிரபல இஸ்லாமிய அறிவுஜீவியான பெதுல்லா குய்லன், அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.

துருக்கி அமைச்ச‌ர் சொய்லு, "இராணுவ‌ ச‌திப்புர‌ட்சியில் அமெரிக்காவுக்கு ப‌ங்கிருக்கிற‌து" என்று தெரிவித்தார். இவ்வாறு துருக்கி அர‌சு ப‌கிர‌ங்க‌மாக‌ அமெரிக்காவை குற்ற‌ம் சாட்டிக் கொண்டிருந்தால், "இர‌ண்டு நாடுக‌ளுக்கும் இடையிலான‌ இராஜ‌த‌ந்திர‌ உற‌வில் விரிச‌ல் ஏற்ப‌டும்." என்று அமெரிக்க‌ அமைச்ச‌ர் கெரி எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க - துருக்கி உறவில் விரிசல் ஏற்படுமானால், அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். தற்போது நடந்துள்ள நடந்துள்ள இராணுவ சதிப்புரட்சி ஓர் ஒத்திகை மட்டுமே. ஆட்டம் இனித் தான் ஆரம்பமாகவுள்ளது. 

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், மக்கள் சக்தி வெற்றி பெற்று விட்டதாக பலர் நினைக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அப்படிக் கருதவில்லை. "சதிப்புரட்சி அபாயம் இன்னும் நீங்கவில்லை" என்று பிதமர் யில்ட்ரிம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

வழமையாக இஸ்லாமியவாத AK கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்படும், MHP (துருக்கி தேசியவாதிகள்), HDP (குர்திய உரிமைப் போராளிகள்) போன்ற எதிர்க்கட்சிகளும் சதிப்புரட்சியை கண்டித்துள்ளன. ஆனால், அமெரிக்க தூதுவராலயம் சதிப்புரட்சியை வரவேற்று அறிக்கை விட்டதாக சொல்லப் படுகின்றது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் "எர்டோகன் ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்கு" மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

துருக்கியில் நடந்த சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்கு என்ன? எர்டோகன் தன்னை ஒரு நவீன சுல்த்தானாக காட்டிக் கொள்வதும், ஓட்டோமான் சாம்ராஜ்யப் பெருமை பேசுவதும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றும் உள்நோக்கம் கொண்டது. எர்டோகனின் இஸ்லாமியவாத அரசியல் கொள்கை அமெரிக்காவை எரிச்சலூட்டி வருகின்றது. 

ஐ.எஸ்., அல்கைதா போன்ற தீவிரவாதிகளை விட, எர்டோகன் போன்ற ஜனநாயகவாதிகள் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எர்டோகனின் எதிரி குய்லன். இன்சிரில்க் இராணுவ தளத்துடன் தொடர்பு பட்டவர்களின் கைது. சிரியா எல்லைக் காவல் படைத் தளபதி கைது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வருகின்றது.

Monday, July 25, 2016

கபாலி சொல்லாத "மண்ணின் மைந்தர்களின்" கதை


ரஜனிகாந்த் நடித்துள்ள க‌பாலி திரைப்ப‌ட‌ம் ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ விட‌ய‌த்தில் இது பாராட்ட‌த் த‌க்க‌ ப‌டைப்பு. ப‌ட‌ம் முழுவ‌தும் காட்பாதர் திரைப் ப‌ட‌த்தை நினைவுப‌டுத்தினாலும், இது ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் நடைமுறைப் பிர‌ச்சினையை கூறும் த‌னித்துவ‌ம் கொண்ட‌து.

அர‌சிய‌ல் பேசும் ப‌ட‌மாக‌ இருந்தாலும், அது ம‌லேசிய‌ அர‌சின் விளையாட்டு விதிக‌ளுக்கு அமைய‌வே எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ட‌த்தின் தொட‌க்க‌த்தில் ஒரு த‌மிழ் சிறை அதிகாரி சொல்வார்: "வெளியே போய் ப‌ழைய‌ப‌டி ஆர‌ம்பிக்காதிங்க‌... த‌மிழ‌ர்க‌ளுக்கு இங்கே கெட்ட‌ பெய‌ர் இருக்கிற‌து." இது தான் எம‌க்கு ம‌லேசிய‌ அரசு சொல்ல‌ விரும்பும் "அறிவுரை"!

கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் உல‌க‌ம் முழுவ‌தும், குறிப்பாக‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ (அல்லது அடைந்து வ‌ரும்) நாடுக‌ளில் உள்ள‌ பிர‌ச்சினை. ல‌ண்ட‌ன், பாரிஸ், டொர‌ன்டோ ஆகிய‌ மேற்க‌த்திய‌ ந‌க‌ர‌ங்க‌ளில், ஈழ‌த் த‌மிழ் இளைஞ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌க் குழுக்க‌ள் த‌ம‌க்குள் மோதிக் கொள்ளும். ஹாலிவூட் திரைப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌க்கும்.

ஒரு த‌ட‌வை ல‌ண்ட‌ன் போயிருந்த‌ நேர‌ம், "ல‌ண்ட‌னில் உள்ள‌ த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்? " என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்தேன். "த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்க‌ள்.... அத‌னால் எம‌க்கு ந‌ல்ல‌து செய்கிறார்க‌ள்." என்றார்க‌ள். அப்ப‌டி என்ன‌ ந‌ன்மை செய்து விட்டார்க‌ள்? க‌ட‌ன் அட்டை மோச‌டி போன்ற‌வ‌ற்றில் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டாலும், அவர்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளும் பெரும‌ள‌வு பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கோஷ்டி மோத‌ல்க‌ளில் ப‌லியாகுப‌வ‌ர்க‌ளும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் தான்.

க‌பாலி ப‌ட‌ம் சொல்லாத‌ க‌தையும் இது தான். கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் த‌மிழ‌ர்களுக்கு ந‌ன்மை உண்டாக்குவ‌தாக‌ நினைத்துக் கொள்வோர் ப‌ல‌ருண்டு. இன்னொரு ப‌க்க‌மாக‌ பார்த்தால், இதுவும் "சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ ஒடுக்கு முறையின் இன்னொரு வ‌டிவ‌ம்" என்றும் சொல்ல‌லாம். மேற்க‌த்திய‌ நாடுக‌ள் போன்று, ம‌லேசிய‌ அர‌சும் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ நட‌வடிக்கை எடுப்ப‌தில்லை. கார‌ண‌ம்? த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள்ளே மோதிக் கொண்டு சாக‌ட்டும் என்ற‌ அல‌ட்சிய‌ ம‌ன‌ப்பான்மை!

வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில், சிறுபான்மையின‌த்த‌வ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள், அந்த‌ ச‌முக‌த்தின‌ர் பொருளாதார‌ ரீதியாக‌ "முன்னேறுவ‌தை" குறிக்கோளாக‌ கொண்டுள்ள‌ன‌. ஆனால், இது அர‌சு அனும‌திக்கும் "சுத‌ந்திர‌த்திற்குள்" சாத்திய‌மாகும். ஏனென்றால், கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ளில் சேர்ப‌வ‌ர்க‌ள் ஒரு பேரின‌வாத‌ அர‌சை தட்டிக் கேட்ப‌தில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை கேள்வி எதுவுமின்றி ஏற்றுக் கொள்வார்க‌ள்.

தமிழன் முன்னேறாமல் இருப்பதற்கு தமிழன் தான் காரணம் என்று, ரஜனி ஒரு "நண்டுக் கதை" சொல்கிறார்.அதாவது, ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு இழுத்து விழுத்துமாம். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்று புலம்பும் தமிழ் தேசியவாதிகளின் அரதப் பழசான பிரச்சாரம் இது. அன்றைய கருணாநிதி முதல் இன்றைய சீமான் வரையில் "நண்டு அரசியல்" தான் பேசிவருகிறார்கள். தமிழ் மக்களை சினிமா போதைக்கு அடிமைகளாக்கி, பணத்தை சுரண்டி வாழும் "கார்ப்பரேட் நடிகன்" ரஜனிகாந்த், இதைச் சொல்வது தான் வேடிக்கை. பெரிய பெரிய பண முதலைகள், தமிழர்களை பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி சொல்லும் அந்த "நண்டுகள்" எவை? படத்தில் கபாலிக்கு எதிரான கேங்க்ஸ்டர்கள். குறிப்பாக, "கபாலியை காட்டிக் கொடுத்தவர்கள், எதிரியான சீன கேங்க்ஸ்டருடன் ஒத்துழைப்பவர்கள்". மலேசிய அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் அமைச்சர்களை படத்தில் மிகவும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். மலேசிய அரசு கடைப்பிடிக்கும் "பூமி புத்திரர்கள் கொள்கை" வெளிப்படையானதொரு பேரினவாதக் கொள்கை. இவ்வளவு யுத்த அழிவைக் கண்ட இலங்கையில் கூட, அந்தளவு மோசமான இனப்பாகுபாட்டுக் கொள்கை கிடையாது.

அது என்ன "பூமி புத்திரர்கள் கொள்கை"? அந்த சம்ஸ்கிருத சொல்லை தமிழில் மொழிபெயர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்று அர்த்தம் வரும். அதாவது, மலே மொழி பேசும் இனத்தவர்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம், சீனர்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள்! இது வெளிப்படையான இனவாதக் கொள்கை என்று பலரால் கண்டிக்கப் பட்டாலும், மலேசிய அரசு இன்றைக்கும் அதை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மலே இனத்தில் பிறந்தவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் வீட்டு மனை போன்ற பல துறைகளில் அரசு மானியம் கொடுக்கும். பிற இனங்களில் உள்ள ஏழைகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மலேசிய அரசின் இன ஒதுக்கல் கொள்கையால் பெரியளவில் பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் தான். பொருளாதார வல்லரசான சீனாவின் தொடர்பு காரணமாக, தனியார் முதலீடுகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் சீன சமூகத்தினருக்கு தனியார் துறை ஆதரவு கிடைக்கிறது.

மலேசியாவில் தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்கள் மத்தியில் வேலையற்றோரும், ஏழைகளும் அதிகம். கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவுவதற்கு அதுவும் ஒரு காரணம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அது ஏற்ற வழி. மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் அப்படி என்று நினைப்பதும் தவறு. பெரும்பாலான மலே,சீன மக்கள், தமிழர்கள் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களில் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பவர்களும் ஏராளம் பேருள்ளனர். இவர்களில் சிலர் தமது மத்தியதர வர்க்க மனப்பான்மை காரணமாக மலேசிய பேரினவாத அரசுக்கு வக்காலத்து வாங்குவதுமுண்டு. மலேசிய அரசும் வேண்டுமென்றே வர்க்கப் பிரிவினையை உருவாக்கி வளர்த்து வருகின்றது. இல்லாவிட்டால் பூமி புத்திரர்களின் நாட்டு அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு இடம் கிடைத்தது எப்படி? தமிழ் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட மலேசிய பேரினவாத அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் தான். இதையெல்லாம் கபாலி பேச மாட்டார். படத்தை தணிக்கை செய்து விடுவார்கள் என்று பயம்.

இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் பிரித்தாளும் சூழ்ச்சி. மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியத் தமிழ்க் கூலிகளை தருவித்தனர். அதே நேரம், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு, யாழ்ப்பாணத் தமிழ் கங்காணிகளை (கண்காணிப்பாளர்) பதவியில் அமர்த்தினார்கள். பெருந்தோட்டப் பக்கம் வெள்ளைக்கார முதலாளி வரா விட்டாலும், தமிழ்க் கங்காணிகள் தமிழ்க் கூலிகளை வருத்தி வேலை வாங்கினார்கள். ஒரு காலத்தில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பகை முரண்பாடு ஏற்படவும் அதுவே காரணமாக இருந்தது.

தமிழ் கூலித் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கையில், தமிழ் மேற்பார்வையாளர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று, வசதியான வீடு கட்டி வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர்களை "மலேசியா பென்சனியர்" என்று அழைத்தார்கள். எழுபதுகளில், மலேசியா பென்சனியர் என்றால் பணக்காரன் என்றும் இன்னொரு அர்த்தம் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிப் பாகுபாட்டையும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராகவும், அவர்களை மேற்பார்வை செய்தவர்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். மலேசியாவில் மட்டுமல்ல, இலங்கையின் மலைநாட்டில் இருந்த பெருந் தோட்டங்களிலும் அதே நிலைமை காணப் பட்டது. அதாவது, இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழ் மேற்பார்வையாளர்கள். இந்தவிரு சமூகங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம்.

கபாலி படத்தில் நண்டுக் கதை சொல்லும் ரஜனி, அதை வெறுமனே "தமிழர் எதிர் தமிழர்" என்று விளக்கம் கொடுப்பது எதற்காக? வேறொன்றுமில்லை. அப்போது தான், தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேற்றுமைகளை மறைக்க முடியும். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள தமிழ்த் தேசியவாதிகளும், கபாலியின் நண்டுக் கதை சொல்லித் தான் வர்க்க முரண்பாடு வெளித்தெரிய விடாமல் பூசி மெழுகி வருகின்றனர்.

Sunday, July 24, 2016

சிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்!




யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! 

இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். 

தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது. இதைப் பார்க்கும் பொழுது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தான் ஞாபகம் வரும். 

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது: 
"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!".

பிற்குறிப்பு
அச்சுவேலி கிராமத்தில் வாழும் ஒருவர் முகநூலில் தெரிவித்த தகவலை அடிப்படையாகக் வைத்து எழுதி இருக்கிறேன். சாதாரண மக்களும் தகவல் தெரிவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தான் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கையில் உள்ள தமிழ் வணிக ஊடகங்களும், பெரும்பாலான தமிழ் இணையத் தளங்களும், ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவர்கள் ஒன்றில் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது அங்கு நடந்த சம்பவத்திற்கு சாதிப் பிரச்சினை தான் காரணம் என்பதை மட்டும் தணிக்கை செய்து விட்டு வெளியிடுவார்கள்.  

இதனுடன்  தொடர்புடைய  முன்னைய  பதிவுகள்:

Saturday, July 23, 2016

வலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்!


22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த கொலை வெறி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய இளைஞன் Ali Sonboly ஈரானிய வம்சாவளியை சேர்ந்த ஜேர்மனிய இளைஞன் என்ற தகவல் வந்ததும், இதுவும் வழமையான "ஐ.எஸ். சுடன் தொடர்புடைய முஸ்லிம் பயங்கரவாத" தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி விட்டார்கள்.

சில புலம்பெயர்ந்த தமிழர்களும் "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பாவில் இஸ்லாமியர் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் துடைத்தழித்து விடுவார்கள்" என்று சாமியாடினார்கள். உள்மனதில் இருந்த தமது அவாவை செய்தி போன்று சொன்னவர்கள், ஒரு காலத்தில் தமிழர்களும் அப்படியான நிலைமையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றார்கள்.

மியூனிச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. நிருபர், இது தீவிர வலதுசாரிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று ஊகித்திருந்தார். வேறு பலரும் அவ்வாறான ஊகத்தை தெரிவித்தனர். அதற்குக் காரணம் என்ன? தாக்குதல் நடந்த திகதியை பாருங்கள்:22-07-2016. அன்று என்ன விசேஷம்? மிகச் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் நோர்வேயில் ஒஸ்லோ நகரில் 77 இளைஞர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

நோர்வே ஒஸ்லோ நக‌ருக்கு அருகில் ஒரு வ‌ல‌துசாரி - பாஸிச‌ பய‌ங்க‌ர‌வாதிக‌ளால் ப‌டுகொலை செய்ய‌ப் பட்ட‌ 77 இளைஞ‌ர்க‌ளும், தொழிற்கட்சியின் இளைஞ‌ர் அணியை சேர்ந்த‌வர்கள். அன்டெர்ஸ் பிறேவிக் என்ற தீவிர வலதுசாரி, அவர்கள் "இட‌துசாரிக‌ள்" என்ற‌ வெறுப்புண‌ர்வின் கார‌ண‌மாக‌ சுட்டுக் கொன்றான். அந்தப் பாஸிச பயங்கரவாதியினால் கொல்லப் பட்ட "இட‌துசாரி" இளைஞர்க‌ளில் ஒர் ஈழ‌த் த‌மிழ்ப் பெண்ணும் அட‌ங்குவார்.

ஒஸ்லோவில் நடந்த கொலைவெறித் தாக்குதலின் ஐந்தாண்டு நினைவுநாளில் மியூனிச் தாக்குதலும் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மியூனிச் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் நோர்வீஜிய வலதுசாரி பயங்கரவாதி அன்டெர்ஸ் பிறேவிக்கின் படத்தை தனது வாட்ஸ் அப் புரபைலாக வைத்திருந்தான். இந்தத் தகவலை, கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய பொலிசார், பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாட்ஸ் அப் புரபைலில் பிறேவிக் படம் இருந்ததை நண்பர்களும் உறுதிப் படுத்தி உள்ளனர். ( http://www.bbc.com/news/world-europe-36874497)

கொலையாளி ஒரு பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து, மியூனிச் நகரில் ஒரு குறிப்பிட்ட மக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு பலரை வரவழைத்து இருக்கிறான். இன்று அங்கு இலவசமாக உணவு கிடைக்கும் என்று அழைப்பு விடுத்திருக்கிறான். ஒலிம்பியா வணிக வளாகத்தில் இருந்த மக்டொனால்ட்ஸ் உணவத்திலும் சில பருவ வயதினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி அங்கிருந்து தப்பியோட எத்தனித்து இருக்கலாம். அவனது வீட்டில் "தற்கொலைப் பிரகடனம்" எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

மியூனிச் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ன் ஒரு ஈரானிய‌ - ஜேர்மனிய‌ இளைஞ‌ன் என்று தெரிய‌ வ‌ந்த‌தும், இவ‌னும் "இஸ்லாமிய‌ - தீவிர‌வாதி" தான்  வாதாடிய த‌ற்குறிக‌ளுக்கு  ஒன்றைச் சொல்லிக் கொள்ள‌ விரும்புகிறேன்: "அவ‌ன் இஸ்லாமிய‌ருக்கு விரோத‌மான‌ தீவிர‌ வ‌ல‌துசாரி!"

நான் பல‌ வ‌ருட‌ கால‌ம் ப‌ல‌ ஈரானிய‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌கி இருக்கிறேன். புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈரானிய‌ர்க‌ளின் ம‌ன‌நிலை என‌க்கு ந‌ன்றாக‌ப் புரியும்.
"வெள்ளைய‌னுக்கு குண்டி க‌ழுவுவ‌தை பெருமையாக‌ க‌ருதுவ‌தில்", ஈரானிய‌ர்களும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. குடியுரிமை பெற்ற‌வுட‌ன் ஐரோப்பிய‌ர்க‌ள் த‌ம்மை "கௌர‌வ‌ப் பிர‌ஜைக‌ளாக‌" ம‌திப்புக் கொடுக்கிறார்க‌ள் என்று ப‌ந்தா காட்டும் த‌மிழ‌ர்களை க‌ண்டிருக்கிறேன். ஆனால் ஈரானிய‌ர்க‌ள் அத‌ற்கும் மேலே!

குடியுரிமை பெற்ற‌வுட‌ன் த‌ன‌து பெய‌ரை ஐரோப்பிய‌ பாணிக்கு மாற்றிக் கொண்ட‌ ஈரானிய‌ர்க‌ளை என‌க்குத் தெரியும்.  ஏற்க‌ன‌வே, ந‌டை, உடை, பாவ‌னை, க‌லாச்சார‌ம் எல்லாம் ஐரோப்பிய‌ பாணிக்கு மாற்றி இருப்பார்க‌ள். பிற‌ ஐரோப்பிய‌ இன‌த்த‌வ‌ருக்கும் த‌ங்க‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லையென்று பாவ‌னை செய்வார்க‌ள். "ஈரானிய‌ர்க‌ள் இன‌த்தால் ஆரிய‌ர்க‌ள், அத‌னால் ஐரோப்பிய‌ர்க‌ள்." என்று பெருமையாக‌ சொல்லிக் கொள்வார்க‌ள்.

ஒரு ஹாஸ்ட‌லில் என்னோடு த‌ங்கியிருந்த‌ ஈரானிய‌ ந‌ண்ப‌ரின் ரூமுக்கு போன‌ பின்ன‌ர் தான், அவ‌ர் (பெந்த‌கொஸ்தே) கிறிஸ்த‌வ‌ராக‌ மாறி இருந்த‌ விட‌ய‌ம் தெரிய‌ வ‌ந்த‌து. முஸ்லிம்க‌ளைப் ப‌ற்றி மிக‌வும் மோச‌மாக‌ப் பேசிக் கொண்டிருந்தார்.

இவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, இஸ்லாத்தையும், முஸ்லிம்க‌ளையும் ப‌ற்றி கேவ‌ல‌மாக‌ப் பேசும் ப‌ல‌ ஈரானிய‌ர்க‌ளை என‌க்குத் தெரியும். இத‌னால் ச‌க‌ ஈரானிய‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டை  போடுவ‌தையும் க‌ண்டிருக்கிறேன்.

மியூனிச் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ இளைஞ‌ன் த‌ன்னை ஒரு "அச‌ல் ஜேர்ம‌னிய‌ன்" என்று சொன்ன‌தாக‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌ர். அது ம‌ட்டும‌ல்ல‌, துருக்கிய‌ரையும் மோச‌மாக‌ திட்டிக் கொண்டிருந்தானாம். அதாவ‌து, "முஸ்லிம்க‌ளை வெறுக்கும் இன‌வாத‌ ஜேர்ம‌னிய‌ன்" போன்று காட்டிக் கொண்டான். ஏன் ஒரு குடியேறி இன‌வாத‌ ஐரோப்பிய‌ர்க‌ள் மாதிரி சிந்திக்க‌ மாட்டானா? ந‌ம்ப‌ முடிய‌வில்லையா?

நம்பா விட்டால் ந‌ம‌து த‌மிழ‌ர்க‌ள் சிலர், அதாவது "க‌றுப்பு - ஐரோப்பிய‌ர்க‌ள்" என்ன‌ பேசுகிறார்க‌ள் என்று காது கொடுத்துக் கேளுங்க‌ள்.  பொதுவாக‌, அவர்க‌ள‌து "இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ற்றிய‌ க‌தையாட‌ல்க‌ள்" ஐரோப்பிய‌ இன‌வாதிக‌ளின் சிந்த‌னையை அடிப்ப‌டையாகக் கொண்டிருக்கும். அதை அவ‌ர்க‌ள் மிக‌ச் சாதார‌ண‌மாக‌ எடுத்துக் கொள்கிறார்க‌ள். 

அண்மைக் காலமாக ஐரோப்பாவில் நடந்து வரும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உடனுக்குடன் "இஸ்லாமிய பயங்கரவாத" சாயம் பூசுவது வழமையான விடயம். சிலநேரம், பொலிஸ் அல்லது அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக் கொண்டு வதந்திகளை கிளப்பி விடுகின்றன. ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து விட்டு, எங்கோ இருக்கும் ஐ.எஸ். அதற்கு உரிமை கோருவது உச்ச பட்ச காமெடி. 

இந்த தடவை அது போன்ற காமெடிக் காட்சிகள் எதுவும் அரங்கேறவில்லை. சம்பவம் நடந்தவுடனே, "இதோ பார்த்தீர்களா? (இஸ்லாமிய) அகதிகளை உள்ளே விட்டதன் விளைவைப் பார்த்தீர்களா?" என்று வலதுசாரிகள் பிரச்சாரம் செய்யக் கிளம்பி விட்டார்கள். இது போன்ற அரசியல் அழுத்தம் எதற்கும் அடி பணியாமல், ஜெர்மன் பொலிஸ் பொறுப்புடன் நடந்து கொண்டது.

இந்த இடத்தில், சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நீஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவமும், எவ்வாறு ஊடகங்களினால் திரித்துக் கூறப் பட்டது என்பதை இரை மீட்டுப் பார்ப்பது நல்லது:

பிரான்ஸ், நீஸ் நகரில் 80 பேரைக் கொன்ற தாக்குதலில், லாரி ஓட்டிச் சென்ற "பயங்கரவாதி", பொருளாதாரக் கஷ்டம், பண நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட நபர்.

சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை. பெயரில் முஸ்லிமான அந்த நபர் மத நம்பிக்கையற்றவர். ஒரு நாளும் மசூதிக்கு சென்றதே கிடையாது. வீட்டில் கூட தொழுதிராதவர்.

அவரை நன்கு அறிந்த அயலாரும், நண்பர்களும் இந்தத் தகவலை தெரிவித்தனர். சமீப காலமாக பண நெருக்கடிக்கு ஆளானது மட்டுமல்லாது, மண முறிவு காரணமாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். (பார்க்க: http://www.leparisien.fr/faits-divers/attentat-a-nice-les-papiers-d-identite-d-un-franco-tunisien-retrouve-dans-le-camion-15-07-2016-5969385.php )

வழமை போல ஊடகங்கள் இதற்கு கண்,காது,மூக்கு வைத்து, உலகத் தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கு தீவிரவாதத் தாக்குதலாக்கி விட்டன. மர்ம நபர் ஓட்டி வந்த லாரியில் "பயங்கர ஆயுதங்கள்" கண்டுபிடிக்கப் பட்டதாக ஊடகங்களில் சொல்லப் பட்டது. ஆனால், லாரிக்குள் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி மட்டும் இருந்ததாக, நெதர்லாந்து தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டது.

மேலும் 80 பேர் கொல்லப் பட்டதற்கு லாரி மோதியது மட்டுமே காரணம் என்று சொல்லப் படுவதும் சந்தேகத்திற்குரியது. அந்த நேரத்தில் பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப் பட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வான வேடிக்கையை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை, அந்த இடத்தில் இருந்த டச்சு சுற்றுலாப்பயணி ஒருவர், டச்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.

Tuesday, July 19, 2016

இனவாதப் பொறிக்குள் விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் கலாச்சார நிகழ்வு சம்பந்தமாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் நடந்துள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு வருடமும் பெருமளவு சிங்கள மாணவர்களும் படிக்க வருகிறார்கள். வழமையாக நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், என்று "தமிழ் கலாச்சார" முறையில் வரவேற்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம், "சிங்கள கலாச்சாரமான" கண்டிய நடனத்தையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிங்கள மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள். (பரத நாட்டியம் மட்டுமல்ல, கண்டிய நடனமும் இந்திய கலாச்சாரத் தாக்கத்தால் உருவானவை.)

பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு சாதகமான பதில் கூறாத நிலையில், அனுமதி பெறப் படாமலே, சிங்கள மாணவர்களின் கண்டிய நடனக் காரர்களும் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். இதை தமிழ் மாணவர்கள் எதிர்த்த படியால், அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து கைகலப்பில் முடிந்துள்ளது. சில மணிநேரங்களுக்குள் நிலைமை விபரீதமாகவே, பல்கலைக்கழகம் மூடப் பட்டு, பாதுகாப்புப் படையினரால் சிங்கள மாணவர்கள் வெளியேற்றப் பட்டனர்.

இது தான் அங்கு நடந்த சம்பவம். இருந்த போதிலும், வெறும் வாய் மென்று கொண்டிடிருந்த இனவாதிகளுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. சிங்களவர், தமிழர் இரண்டு தரப்பிலும் "தமது உறவுகளுக்கு" வக்காலத்து வாங்கும் வேலையில் இரு தரப்பு இனவாதிகளும் இறங்கினார்கள். உலகம் முழுவதும், உயர்கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருந்து தான் அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பிப்பது வழமை.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான், நியூ டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. அயல்நாடான இலங்கையில் அது போன்ற போராட்டம் வெடிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கும். அதைத் தடுப்பதற்கு ஒரே வழி, மாணவர்களை அரசியல் நீன்க்கம் செய்யப் பட்ட இனவெறி கொண்ட விலங்குகளாக வளர்க்க வேண்டும்.

உண்மையில் "படித்த முட்டாள்களை" உருவாக்குவது தான் அரசின் நோக்கமும். அதற்கு ஒத்துழைப்பதற்கு சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் தயாராக இருக்கிறார்கள். அது சரி, இந்த விடயத்தில், தமிழ் மாணவர்கள் பக்கம் நியாயம் பேசும் தமிழ் அறிவுஜீவிகள், வேண்டுமென்றே சம்பவம் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

அங்கு என்ன நடந்தது என்று ஆராயப் போனால், தமிழ் மாணவர்களிலும் பிழை இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால், சம்பவத்தை பற்றிப் பேசாமல் மகாவம்ச கால புராணக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களின் மோதலுக்கும், மகாவம்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் சொல்வதை திருப்பிச் சொல்ல பழக வேண்டும்.

இதே நேரத்தில், சிங்களப் பகுதிகளில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாராவது விசாரித்தார்களா? அதெல்லாம் அவர்களுக்கு "தேவையில்லாத விடயம்." சம்பவம் தொடர்பாக சில சிங்கள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதியதை, இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்கையும் எதிரொலித்துள்ளார்.

அதாவது, "தமிழர்கள் மோசமான இனவெறியர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டார்கள்" என்று சிங்களவர்கள் சொல்கிறார்கள். காலங்காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய விம்பம் இப்படித் தான் இருக்கிறது. தமிழர்களும் அப்படித் தான் சிங்களவர்கள் பற்றி நினைத்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

கடந்த பல தசாப்த காலமாக இலங்கையில் இது தான் நடந்து வருகின்றது. இரண்டு இனத்தவரும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள். தமிழர்கள் பார்வையில், "சிங்களவர்கள் எல்லோரும் இனவெறியர்கள்". சிங்களவர்கள் பார்வையில், "தமிழர்கள் எல்லோரும் இனவெறியர்கள்". இன்று வரையும் சிங்கள- தமிழ் பொதுப்புத்தியில் உறைந்து விட்ட விடயம் இது. தற்போது இது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப் படுகின்றது.

"என்னுடைய இனம் மட்டுமே ஒடுக்கப் படுகின்றது... எதிரி இனத்தவர்கள் இனவாதிகள்..." என்று தான், சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு இனத்தவர்களும் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதற்கும் மகாவம்சத்தில் விடை இருக்கிறது என்று சில அறிவுஜீவிகள் சொல்லிக் கொண்டு வருவார்கள்.

வெளிநாட்டில் (அதாவ‌து ஐரோப்பாவில்) இன‌ம், மர‌பு, ம‌த‌ம், க‌லாச்சார‌ம், எதையும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் அனுமதிப்ப‌தில்லை. அது மாண‌வர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ம். இலங்கை இன்ன‌மும் ப‌ழைய‌ நில‌ப்பிர‌புத்துவ க‌லாச்சார‌த்தில் இருந்து விடுப‌ட‌வில்லை. ப‌ல்லின‌ மாண‌வ‌ர்க‌ள் படிக்கும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் குறிப்பிட்ட‌ ஒரு இன‌த்தின் க‌லாச்சார‌த்திற்கு ம‌ட்டும் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து பிர‌ச்சினைக‌ளை ஏற்ப‌டுத்தும். 

இதே நிலைமையில் தான் சிங்க‌ள‌ப் ப‌குதிக‌ளில் படிக்கும் த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர். அவர்கள் அங்கு த‌மது க‌லாச்சார‌த்தை சேர்த்துக் கொள்ள‌க் கேட்டால் அதை "உரிமை" என்று நியாய‌ப் படுத்துவீர்க‌ள். யாழ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளும் த‌ம‌து உரிமையை தானே கேட்டார்க‌ள்? என‌க்கு வ‌ந்தால் இர‌த்த‌ம், அவ‌னுக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னியா?

"அவர்கள் தமது மரபை பேணுகிறார்கள், ஆகையினால் நாங்களும் எமது மரபை பேணுகின்றோம்." என்பது தான் இனவாதிகளால் முன்வைக்கப் படும் வாதம். "அவன் ஒரு முட்டாளாக இருக்கிறான். ஆகவே, நானும் ஒரு முட்டாளாக இருக்கிறேன்." என்று சொல்கிறார்கள். அதாவது, மற்றவன் கிணற்றில் குதித்தால் தானும் குதிக்கும் தற்கொலை மனோபாவம். முதலில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் அங்கே கல்வி கற்பதற்காக செல்கிறார்கள் என்பதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்.

மாணவர்கள் தமது இனத்தின் மரபு, கலாச்சாரங்களை முன்னேற்றுவதற்காக பல்கலைக்கழகம் செல்லவில்லை. மரபு,கலாச்சாரம் என்பன மாணவர்களை பிரித்து விடுமானால், பல்கலைக் கழக நிர்வாகம் அதை தடை செய்ய வேண்டும். அங்கு எழும் பிரச்சனைகளை சமாதான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டும். "நாங்கள்". "அவர்கள்" என்று இன அடிப்படையில் சிந்திப்பவன் ஒரு மாணவனாக இருக்க முடியாது.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் மாணவர்கள் என்ற உணர்வு வர வேண்டும். இன உணர்வு கொண்டவர்கள் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லை. மாண‌வ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து சிங்க‌ள‌-த‌மிழ் இன‌வாத‌த்திற்கு எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ வேண்டும். ப‌ழ‌மைவாதிகள், ம‌ர‌புவாதிக‌ளை அடித்து விர‌ட்ட‌ வேண்டும்.

பல்கலைக்கழகம் ஓர் அறிவாலயம். தனியார் தவிர, அரசால் நடத்தப் படும் பல்கலைக்கழகங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவானவை. தற்போது சிலர் விதண்டாவாதம் செய்வது போல, "சிங்கள, தமிழ், முஸ்லிம் பல்கலைக்கழகம் எதுவும் கிடையாது." அது ஒரு சிலரின் கற்பனை. எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்த மாணவனாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் மாணவர்கள். பல்கலைக்கழகம் ஒரு பொதுவான இடம்.

ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று, இலங்கையிலும் உண்மையான மதச் சார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் மதப் பிரார்த்தனைகள், மத அடையாளங்கள் தடை செய்யப் பட வேண்டும். "இனப் பெருமை, கலாச்சாரம், மரபு" பற்றிப் பேசுவோர் வெளியேற்றப் பட வேண்டும்.

எதற்காக இலங்கை அரசை ஒரு பேரினவாத அரசு என்று சொல்கிறோம்? ஏனென்றால், அதனது கொள்கைக்காக. மக்களை இன அடிப்படையில் பிரித்தாள்வது தான் அரசின் நோக்கம். எதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வைத்த பொறிக்குள் விழ வேண்டும்? பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் "புத்திசாலிகள்" என்று எமது சமூகத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூகத்தில் அவர்கள் தான் முட்டாள்கள் என்பதை, சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, July 16, 2016

மாற்று சமூக வலைத்தளங்கள்; இணையத் தணிக்கையை முறியடிப்போம்


கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த "Tharmalingam Kalaiyarasan" என்ற பெயரிலான எனது முகநூல் கணக்கு, தற்போது நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

இது மட்டுமே பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்: //We've reviewed your account and determined that it hasn't followed the Facebook Statement of Rights and Responsibilities. The violation of these terms has resulted in the permanent loss of your account. One of our main priorities is the comfort and safety of the people who use Facebook, and we don't allow credible threats to harm others, support for violent organizations or exceedingly graphic content on Facebook. To learn more about Facebook's policies, please review the Facebook Community Standards://

காஷ்மீர் பிரச்சினை பற்றிய பதிவொன்றின் பின்னரே, இந்திய அரசின் அழுத்தம் காரணமாக முடக்கப் பட்டுள்ளது எனத் தெரிகின்றது. (பார்க்க:முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு) ஏனெனில், அதே பதிவுகளை இட்ட வேறு சிலரின் முகநூல் கணக்குகளும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப் பட்டுள்ளன. இதனால் பலர் முகநூலில் வேறு பெயரில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனது புதிய முகநூல் கணக்கு :Kalai Marx (https://www.facebook.com/kalaimarx)
இந்த விபரத்தை உங்களது நட்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி.

அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் கருத்துச் சுதந்திர மறுப்பில் ஈடுபடுவதும், அடக்குமுறை அரசுக்களுடன் ஒத்துழைப்பதும் இதுவே முதல் தடவை அல்ல. இவ்வளவு காலமும் வணிக ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலைவை செய்து வந்த அரசுகள், இணையத்தில் கிடைக்கும் சுதந்திரம் குறித்து கவலையடைந்துள்ளன. ஒரு சாமானியனும் தனது கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பது ஆபத்தான விடயமாக கருதுகின்றன. ஜனநாயகத்தின் பெயல் இயங்கும் அரசுகள், உண்மையில் ஜனநாயக மறுப்பாளர்கள் என்பது நிரூபணமாகின்றது.

ஆகவே, முகநூல் தணிக்கையில் இருந்து தப்புவதற்கு நாம் வேறு வழிகளை நாட வேண்டியுள்ளது. அதாவது "மாற்று முகநூல்" ஒன்றின் தேவை எழுந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரையில் தற்போதைக்கு இரண்டு தெரிவுகளை அறிமுகப் படுத்த முடியும். நீங்களும் அதில் இணைந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்களையும் அதில் சேருமாறு ஊக்குவிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

“Minds.com” என்ற மாற்று சமுக வலைத்தளம் Bill Ottman மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டது. அவர் அமெரிக்காவைச் சார்ந்த “சுதந்திர மென்பொருள்”, “சுதந்திர இணையம்” ஆகியவற்றில்  நம்பிக்கை கொண்ட ஒருவர். (https://en.wikipedia.org/wiki/Minds).

அதில் வெளியிடப் படும் எமது தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. அரசுக்களோ, அல்லது வணிக நிறுவனங்களோ அவற்றை பார்வையிட முடியாது. இதற்கு மாறாக, பேஸ்புக் நிறுவனம், எமது தகவல்களை அரசுகளும், வணிக நிறுவனங்களும் பார்வையிட தாராளமாக அனுமதித்து வருகின்றது. அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கிறது. அந்த அவலத்தில் இருந்து பாவனையாளர்களை மீட்பதே, மைன்ட்ஸ் உருவாக்கியவர்களின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:

பேஸ்புக் மாதிரி ரஷ்ய மொழி பேசும் மக்களிடையே பிரபலமான சமூக வலைத்தளம். ரஷ்யாவை தளமாக கொண்டு இயங்குவதால், இது "ரஷ்ய பேஸ்புக்" என்றும் அழைக்கப் படுகின்றது. ஆங்கிலம் மற்றும் பிற உலக மொழிகளிலும் பாவிக்க முடிகின்றது. தமிழ் மட்டும் இல்லை. தமிழ் பேசும் பாவனையாளர்கள் மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்று சமூகவலைத்தளங்களிலும் ஏற்கனவே எனது கணக்குகள் உள்ளன. ஆகவே நீங்களும் என்னோடு நண்பர்களாக இணைந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். 

Minds இல் எனது கணக்கு:https://www.minds.com/Kalaiyarasan 

VK இல் எனது கணக்கு:https://vk.com/kalaiyarasan

எனது பழைய முகநூல் கணக்கு முடக்கப் பட்டதை விமர்சித்து சில நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நண்பர்களின் ஆதரவுப் பதிவுகள்:

Nandha Kumaran: நெதர்லாந்தை சேர்ந்த தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேஸ்புக் இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் குறிப்பாக பேஸ்புக்கின் கைவரிசையாக பார்க்க வேண்டியுள்ளது. சாதி, மதவெறி ஊட்டும் பிரச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பேஸ்புக், சமூக நலன் சார்ந்த பதிவுகளை முடக்குவதன் பொருள், அதன் வர்க்க பாசத்தை காட்டுவதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ? (July 13)

Chinthan Ep: செய்தி: தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தைப் பொருத்தவரையில், நாம்தான் அவர்களது "விற்பனைப் பொருள்". அதிகமான பயனர்கள் அவர்களுக்குத் தேவை. அதனால்தான் யாராவது ஒருவரின் கருத்து பிடிக்காமல் ஏராளமானோர் எதிர்த்து பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்தால், உடனடியாக அந்த நபரின் அக்கௌன்டை முடக்குகிறது. ஏனெனில் பேஸ்புக்கிற்கு எண்ணிக்கைதானே முக்கியம். காசா? கருத்துசுதந்திரமா? என்றால், காசுதான் என்பார்கள் கார்ப்பரேட்டுகள்.
பின்குறிப்பு: தேசப்பற்றாளர்களே(?!?) காஷ்மீர் குறித்து என்ன சொன்னாலும் இப்படி டென்ஷன் ஆனா எப்படி? (July 13)

Joshua Isaac Azad: Facebook has permanently disabled the accounts of Marxist writer Kalaiyarasan and brother Ilyas Muhammed for their stand against Indian state terrorism on Kashmiris. Let's stand against Facebook censorship. Their new accounts Kalai Marx; Ilyas. 
‪#‎StandWithKashmir‬ ‪#‎KashmirUprising‬ ‪#‎MartyrBurhanWani‬

Facebook has disabled the accounts of comrades Tharmalingam Kalaiyarasan, Subha D and blocked brother Ilyas Muhammed Raffiudeen for their stand against war crimes committed by the Indian state on Kashmiris. They've been exposing the Brahmindia's lies about Kashmir in the Tamil space. Recently they shared my post on martyr Burhan Wani for which I was blocked earlier, now they are. ‪#‎StandWithKashmir‬ ‪#‎TamilsWithKashmiris‬
Martyr ‪#‎BurhanWani‬
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:
முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு

Tuesday, July 12, 2016

முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு



காஷ்மீர் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோஷ்வா ஐசக் ஆசாத் (Joshua Isaac Azadhttps://www.facebook.com/joshuaisaac.tamizhmaravan) எனும் தமிழ்நாட்டில் வாழும் தலித்- கிறிஸ்தவ அரசியல் ஆர்வலர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில மணிநேரங்களுக்குள் அந்தப் பதிவு நீக்கப் பட்டது. மீண்டும் அதைப் பதிவு செய்த போதிலும், பேஸ்புக் திரும்பவும் நீக்கி விட்டது. அதே பதிவை நானும் எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன். அதுவும் சில மணி நேரங்களுக்குள் நீக்கப் பட்டது.

சமூக வலைத்தளங்களில் உள்ள கருத்துச் சுதந்திரம் ஒரு கண்துடைப்பு நாடகம். யார் எதைப் பேசினால், தமது அதிகாரத்திற்கு ஆபத்தில்லை என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் விடுதலைப் புலிகளை புகழ்ந்து, அல்லது தமிழீழ விடுதலையை ஆதரித்து எப்படியும் எழுதலாம். அதே மாதிரி, முஸ்லிம்கள் காஷ்மீர் போராளிகளை புகழ்ந்து, காஷ்மீர் விடுதலையை ஆதரித்து எழுதலாம். அதிகார வர்க்கம் அவற்றைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதையெல்லாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்த விதிமுறைகளுக்கு மாறாக, சிங்களவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிப்பதும், தமிழர்கள் காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதும், ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான விடயம். அப்படியான சமூக மாற்றம், அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்து விடும். ஆகையினால், தமது ஆட்சிக்குட்பட்ட மக்களை, இனம், மதம் என்ற குறுகிய மனப்பான்மைக்குள் வைத்திருப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.

******

பேஸ்புக் தணிக்கை செய்த  புர்ஹான் வானி பற்றிய பதிவு இது: 
(சிலநேரம் இதை புளொக்கரும் தடை செய்தால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.)



"புர்ஹான் வானி" காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரன்

இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.

2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.

இந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ 'ஆசாதி' என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.

தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக 'நம்மால்' கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இத்தனை கொந்தளிப்பு? வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது? அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக? அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான்.

கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். பேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கிறது.

சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர்.

புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் 'காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்'. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் 'பாகிஸ்தான் தீவிரவாதிகள்' என்று நம்பிக் கொண்டிருப்போம்.

இணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடனமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

ஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

******

மேலே உள்ள பதிவு நீக்கப் பட்டது தொடர்பாக, தோழர் ஜோஷ்வா ஐசக் ஆசாத் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்:

நாம் தோழர்கள்.

நான் கடந்த அஞ்சு வருசமா தலித்துகளின் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், சேரிகளின் மீதான தாக்குதல்கள், தலித்துகளின் மீதான போலீஸ் அடக்குமுறைகள் என மையநீரோட்ட ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்திகளை புகைப்படங்கள், காணொளி ஆதரங்களோட பதிவு செஞ்சுன்னு வரேன். அப்பப்ப சாதி மதவெறி கூட்டம் கும்பலா வந்து வெத்து சவுண்ட் கொடுத்துட்டு போய்டுவாங்க. அந்த பதிவெல்லாம் அவர்களுக்கு சாதாரணமா இருந்துச்சு. இவன் ஒரு விடுதலைச் சிறுத்தை, ஒரு தலித் கிறிஸ்தவன், மத்தவங்கள போல இல்லாம இங்லீஸ்ல எழுதுறான் அவ்வளவு தான் வித்யாசம். அவங்க சிஸ்டத்துக்குள்ள நாம எந்த மாதிரியான எதிர்ப்ப காட்டணும், எதையெல்லாம் பேசணும், எப்ப பேசணும்னு கைடு போட்டு வெச்சிருக்கானோ அதன்படியே என் பதிவுகள் இருந்தது. என் மூலமா அந்த சிஸ்டத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லனு ப்ரீயா உட்டுட்டாங்க.

இத்தன வருசத்துல நா போட்ட பதிவ ரிப்போர்ட் பண்ணி நீக்கியிருக்கும் முதல் பதிவு காஷ்மீரின் ஷாஹித் புர்ஹான் வானியோட பதிவு தான். பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே இதுக்கு முன்ன எந்த தொடர்பும் இல்லாத காக்கி டவுசர்கள் குவியத் தொடங்குனாங்க. ஒருத்தன் எடுத்ததும் 'போடா பாகிஸ்தானுக்கு'னு சொல்லிட்டான். அவன்கிட்ட டேய் நா கிறிஸ்டியண்டா. என்ன எதாச்சு அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பானு அனுப்பி வெச்சுடுங்கனு கோரிக்க வெச்சேன். சாய்ந்தரம் பதிவ தூக்கிட்டாங்க. தமிழ்நாட்டிலுருந்து விடுதலைச் சிறுத்தைகளில் இருக்கும் ஒரு தலித் கிறிஸ்தவன் காஷ்மீரின் புர்ஹான் வானிக்காக பேசுவான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்ங்க சிஸ்டத்தின் டிசைனும் அதை ஏற்கவில்லை. இவனை என்னவென்று திட்டலாம் என்று குழம்பியிருப்பார்கள். அப்போது தான் நான் ஒரு அச்சுறுத்தலாக மாறினேன்.

புர்ஹான் வானி பற்றி இஸ்லாமியர்கள் பேசுவது அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. முதலில் காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தில் அவர்களின் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்தாலும் அதுவே முக்கிய பாத்திரமில்லை. ஒடுக்குமுறை - ஆக்கிரமிப்பு - ஆதிக்க எதிர்ப்பு தான் அவர்களின் போராட்டத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய தோழனால் சொல்ல முடியாத நேர்மையான உண்மையான கருத்தை நாம் சொல்லலாம். அவர்களை ஆதரித்து பேச வேண்டும் என்றில்லை. முதலில் பேசத் தொடங்குவோம். அங்கு நடப்பதை தெரிந்துக் கொள்வோம். தலித்துகளுக்காக தலித்தல்லாதவர்கள் பேச வேண்டியது போன்று தான் இதுவும்.

வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் நடப்பதற்கே உரிமை மறுக்கப்படுபவர்கள் நாம். வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு பத்து அடிக்கும் துப்பாக்கி முனையில் வாழ்பவர்கள் அவர்கள். நம்மையும் அவர்களையும் இணைக்குக் ஒரே உறவு - நாமிருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்பதே.

இதைத் தான் புரட்சியாளன் சேகுவாரா அன்றே சொல்லிவிட்டார்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

Friday, July 08, 2016

இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான "நடைமுறை இஸ்லாமிய தேசம்" சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஒரு காலத்தில் ஐ.எஸ். இயக்கத்தை வளர்த்து விட்ட அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் அதைக் கைவிட்டு விட்டன. மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகள், துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகள் ஒன்று திரண்டு ஐ.எஸ். அழிப்புப் போரை ஆரம்பித்துள்ளன.

இறுதிப்போரின் முடிவில் முள்ளிவாய்க்கால் பாணியிலான படுகொலைகள் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தினுள் சுற்றி வளைக்கப் படலாம். கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் கொன்றொழிக்கப் படலாம். வரலாறு திரும்புகிறது. ஈழப்போரில் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் முடிவு இம்முறை சிரியாவில் ஏற்படவுள்ளது.

ஐ.எஸ். தற்போது நாலாபுறமும் எதிரிப் படைகளால் தாக்கப் பட்டு வருகின்றது. ஈராக்கிய படைகள் முன்பு ஐ.எஸ். வசமிருந்த பல இடங்களை விடுவித்துள்ளது. மொசுல் மட்டும் தான் எஞ்சியுள்ள பெரிய நகரம் ஆகும். சிரியாவில் "இஸ்லாமிய தேசத்தின் தலைநகரம்" என்று கருதப்படும் ராக்கா நகரம் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றது. வடக்கே YPG எனும் குர்திய விடுதலைப் படையினர் பல கிராமங்களை கைப்பற்றி விட்டனர். தற்போது அவர்கள் ராக்கா நகரில் இருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே, ரஷ்ய போர்விமானங்கள் ராக்கா நகர் மீது குண்டு வீசி வருகின்றன. சிரியா இராணுவம் தெற்குப் பக்கமாக படைநகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. சிரியா இராணுவம் முன்னேறி வந்து ராக்காவை கைப்பற்றி விட்டால், குர்தியரின் பிரதேசத்தையும் கைப்பற்ற நினைக்கலாம். ஏற்கனவே சிரிய அரசு தேசத்தை ஒன்றிணைப்பது பற்றிப் பேசி வருகின்றது. அதனால், சிரியா இராணுவம் வருவதற்கு முன்னர், YPG படைகள் கைப்பற்றி விடத் துடிக்கின்றன.

ஆசாத் அரசுக்கு எதிரான அரபு மொழி பேசும் சிறிய கிளர்ச்சிக் குழுக்கள், குர்தியர்களுடன் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. "சிரிய ஜனநாயகக் கூட்டணி" என்று அதற்குப் பெயரிட்டு, அமெரிக்காவும் உதவி வருகின்றது. அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஜனநாயகக் கூட்டணியினரை சந்தித்துப் பேசியுள்ளனர். சிரியா வான் பரப்பில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் அவர்களுக்கு ஆயுதப் பொதிகளை போட்டுள்ளன.

புலிகளுக்கு கிளிநொச்சி நகரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே மாதிரி ஐ.எஸ்.சிற்கு ராக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ராக்காவை இழந்தால் அது ஐ.எஸ். போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். "இனி எல்லாம் முடிந்து விட்டது" என்ற சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அதானால், என்ன விலை கொடுத்தாவது ராக்கா நகரை பாதுகாப்பதற்கு ஐ.எஸ். முயன்று வருகின்றது.

இதற்கிடையே, எதிர்காலத்தில் சிரியா மீது படையெடுப்பதற்கு, துருக்கியும், சவூதி அரேபியாவும் தயாராகி வருகின்றன. அதற்கு முன்னேற்பாடாக சவூதி அரேபியா, சிரியா எல்லைக்கு அருகில் உள்ள துருக்கியின் Incirlik இராணுவ தளத்திற்கு, நான்கு F-16 போர் விமானங்களை அனுப்பவுள்ளது. துருக்கி-சவூதி படையெடுப்புக்கு தடையாக ரஷ்யா உள்ளது. ஒரு தடவை சிரியாவுக்குள் சென்று விட்டால், ரஷ்யாவுடன் மோதல் நிலைமை தோன்றுவதை தவிர்க்க முடியாது.

ஒரு காலத்தில், துருக்கியும், சவூதி அரேபியாவும் தான், ISIS இயக்கத்திற்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி வளர்த்து விட்டன. அவை எதற்காக ஐ.எஸ். அழிப்புப் போரில் இறங்க வேண்டும்? "அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிலையான நலன்கள் மட்டுமே உள்ளன." எண்பதுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி உதவிய இந்தியா, 2009 ம் ஆண்டு புலிகளை அழிக்கும் போரில் இறங்கவில்லையா? அதே கதை தான் சிரியாவிலும் நடக்கிறது.

சர்வதேச அரசியல் சூழ்நிலை தமக்கு எதிராகத் திரும்பி இருப்பதும், முன்னாள் நண்பர்கள் பகைவர்களானதும் ஐ.எஸ். உணராமல் இல்லை. அதனால் தான் ஐ.எஸ். தற்போது துருக்கி, சவூதி அரேபியாவிலும் வெடி குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

துருக்கியில் அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது. அதே மாதிரி, சவூதி அரேபியாவில் மெதீனா, ஜெத்தாவில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.

துருக்கியில் பொருளாதார இலக்கான விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் நூறு பேரளவில் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி முஸ்லிம்கள். சவூதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தவரின் புனித ஸ்தலமான மெதீனாவில் குண்டு வைத்ததன் மூலம், ஐ.எஸ். உலக இஸ்லாமியரின் வெறுப்புக்கு ஆளானது.

ஐ.எஸ். இஸ்லாமிய புனித ஸ்தலங்களை தாக்குவது இதுவே முதல் தடவையல்ல. சிரியா, ஈராக்கில் இருந்த ஆயிரம் வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். அப்போது அதனை ஆதரித்து வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மெதீனா தாக்குதலின் பின்னர் தான் விழித்துக் கொண்டனர்.

"ஐ.எஸ். எதற்காக இஸ்லாமிய‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" இந்த‌க் கேள்வியே அறியாமை கார‌ண‌மாக‌ எழுகின்ற‌து. "புலிக‌ள் எத‌ற்காக த‌மிழ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" "ஜேவிபி எத‌ற்காக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" ஏனெனில் இது அர‌சிய‌ல் அதிகார‌த்திற்கான‌ போர்.

ISIS தொட‌ங்கிய‌ ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஒரே குறிக்கோளுட‌ன் போரிட்ட‌ ச‌க‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து அதிகார‌த்தை கைப்ப‌ற்றிய‌து. அப்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ள் ச‌கோத‌ர‌ யுத்த‌த்தில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அது ம‌ட்டும‌ல்லாது அவ‌ர்க‌ளது "de facto இஸ்லாமிய‌ தேச‌ம்" என்ற‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தினுள் வாழ்ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதை விட‌ "துரோகிக‌ள்" என்றும் ப‌ல‌ இஸ்லாமிய‌ர்க‌ள், சில‌ நேர‌ம் இய‌க்க‌ உறுப்பின‌ர்க‌ளும் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒரு கால‌த்தில், ஐ.எஸ். இய‌க்க‌ம் சிரியா, ஈராக்கில் ஷியா, குர்து முஸ்லிம்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌து. அது ப‌ற்றி நான் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம், சில‌ இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌வூதி- வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாளர்க‌ள், என்னை க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். "விடுத‌லைப் போராட்ட‌த்தின்" பெய‌ரால் நியாய‌ப் ப‌டுத்தி, ஐ.எஸ். ஸுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கினார்க‌ள்.

த‌ற்போது வ‌ள‌ர்த்த‌ க‌டா மார்பில் பாய்ந்த‌ மாதிரி, ஐ.எஸ். த‌ன‌து எஜ‌மானின் நாடான‌ ச‌வூதி அரேபியாவில் தாக்குத‌ல் ந‌ட‌த்தியுள்ள‌து. ஒரு கால‌த்தில் தார்மீக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கு திடீரென‌ ஞான‌ம் பிற‌ந்து "ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம்" என்கிறார்க‌ள். அந்த‌ உண்மை இப்போது தானா தெரிந்த‌து?

சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். பெரும‌ள‌வு இட‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து. தோல்விய‌டைந்து வ‌ரும் இய‌க்க‌த்தால் இனிப் பிர‌யோச‌ன‌ம் இல்லையென்று கொடையாளிக‌ள் கைவிட்டு விட்டார்க‌ள். புலிக‌ள் ராஜீவ் காந்திக்கு குண்டு வைத்த‌ மாதிரி, ஐ.எஸ். மெதீனாவில் குண்டு வைத்துள்ள‌து.

ப‌ல‌ வ‌ருட‌ கால‌மாக‌ புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ந்த‌ இந்திய‌ மேலாதிக்க‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள், ராஜீவ் கொலைக்கு பின்ன‌ர், "புலிக‌ள் ஒரு த‌மிழ‌ர் விரோத‌ இய‌க்க‌ம்" என்றார்க‌ள். அதே நிலைமை தான் இன்று ச‌வூதி அரேபியா - ஐ. எஸ். விட‌ய‌த்திலும் ஏற்ப‌ட்டுள்ள‌து. வ‌ல்ல‌ர‌சுக‌ள் ஆடும் ஆட்ட‌த்தில் அப்பாவி ம‌க்க‌ள் ப‌லியாகிறார்க‌ள்.

அது ச‌ரி. ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம் என்ப‌தை ஒத்துக் கொள்ளும் ச‌வூதி வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சுய‌ விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா? இப்போதாவ‌து ஷியாக்க‌ளையும், சோஷ‌லிச‌ குர்திய‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளாக‌ ஏற்றுக் கொள்கிறார்க‌ளா?

இஸ்லாமிய‌ ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலான‌ ப‌கை முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ப் ப‌ட்டு, ப‌ர‌ஸ்பர‌ புரிந்துண‌ர்வு ஏற்ப‌ட வேண்டும். ‌ இல்லாவிட்டால், எதிர்கால‌த்தில் இன்னொரு ஐ.எஸ். உருவாவ‌தை யாராலும் த‌டுக்க‌ முடியாது.

Thursday, July 07, 2016

9/11 மர்மம் : ஜோர்ஜ் புஷ் மறைக்க விரும்பிய பயங்கரவாதி யார்?


2001/09/11 நியூ யார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்ட தாக்குதலை நடத்தியது யார் என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு மலைக் குகைக்குள் பதுங்கியிருந்த, முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி ஒசாமா பின்லாடன் தான் தாக்குதல் நடத்தியதாக, அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை, 9/11 ஒரு உள்வீட்டு சதி என்று நம்புவோர் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கற்பனை என்று புறந்தள்ளி ஒதுக்குவோர் கூட ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. 9/11 தாக்குதலில் சவூதி அரேபிய அரசின் பங்கு என்ன? விமானக் கடத்தல்காரர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்ட நபர்களில் பெரும்பான்மையானோர் சவூதி அரேபிய பிரஜைகள். அமெரிக்க அரசும், அரச அடிவருடி ஊடகங்களும், சவூதி அரேபியாவின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வந்த காரணம் என்ன?

அமெரிக்க பாராளுமன்றத்தின் உண்மை அறியும் குழுவினர், 2004 ம் ஆண்டு தமது விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்தார்கள். ஆனால் அந்த அறிக்கையில் 28 பக்கங்கள் காணாமல் போயுள்ளன! அவற்றை மறைக்கச் சொல்லி உத்தரவிட்டது வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தான்! இன்று வரையில் இரகசியமாக வைத்திருப்பதற்கு, அந்த 28 பக்கங்களில் என்ன எழுதி இருந்தது?

9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் அமைப்பாக திரண்டுள்ளனர். அவர்கள் அந்த 28 பக்கங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ரிப்பளிக்கன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். பாராளுமன்ற விசாரணை அறிக்கையை எவ்வாறு ஜனாதிபதி தடை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பப் படுகின்றது.

பாராளுமன்ற தீர்மானத்தின் நோக்கம், அன்றைய தாக்குதலில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு என்ன என்பதை அம்பலப் படுத்துவது தான். மே மாதம், செனட் சபையில் டெமோக்கிராட்டிக் கட்சி உறுப்பினர் Chuck Schumer ஒரு பிரேரணையை முன்மொழிந்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவையும் உள்ளடக்க வேண்டும் என்பது அதன் சாராம்சம். ஆனால், அதை நடைமுறைப் படுத்த விடாமல், ஜனாதிபதி ஒபாமா தனது வீட்டோ உரிமையை பாவித்து தடுத்து விட்டார். ஏனென்றால், "சவூதி அரேபியா போன்ற நட்பு நாடுகளுடனான உறவைப் பாதித்து விடும்" என்பது தான் காரணம்.

2004 ம் ஆண்டு வெளியான 9/11 அறிக்கையில் நீக்கப் பட்ட 28 பக்கங்களில் சவூதி அரேபியா பற்றிய விபரங்கள் இருந்தன என்று சந்தேகிக்கப் படுகின்றது. இது தொடர்பாக புலனாய்வுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் வாயை திறக்கவில்லை. இது ஒரு பாராளுமன்ற விசாரணை அறிக்கை என்ற படியால், அந்த 28 பக்கங்களையும் வெளியிடுவது அல்லது மறைப்பது தொடர்பாக பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று 9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில் "28pages" என்ற பெயரில் அமைப்பு வடிவமாக திரண்ட உறவினர்கள், இன்னொரு இரகசிய அறிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். "File 17" என்று பெயரிடப் பட்ட அந்த அறிக்கையில், விமானக் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பதினெட்டு சவூதி பிரஜைகளின் பெயர்கள் உள்ளன. அவர்கள் எல்லோரும் சவூதி அரச மட்டத்தில் செல்வாக்கான நபர்கள். அந்த அறிக்கை கடந்த வருடம் வெளியிடப் பட்டாலும், "மேலதிக விசாரணைகளுக்காக" அது உடனடியாக மறைக்கப் பட்டது.

அந்த இரகசிய அறிக்கையில் இருந்த ஒருவர்: ஒமார் அல் பயூமி (Omar Al-Bayoumi), சவூதி அரசுடன் நெருங்கிய தொடர்பை பேணும், கலிபோர்னியாவில் வசிக்கும் அரேபியர். 2000 ம் ஆண்டு, ஜனவரி மாதம், அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, சான்டியேகோ நகருக்கு பயணம் செய்து, உணவு விடுதி ஒன்றில் Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார். 

Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இரண்டு பேரும், 9/11 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்தனர்! ஒமார் அல் பயூமி அந்த இரண்டு பயங்கரவாதிகளுக்கும் வாடகை வீடு ஒழுங்கு படுத்திக் கொடுத்துள்ளார். வீட்டின் வாடகை ஒப்பந்தமும் அவரது பெயரில் தான் இருந்தது. சான்டியேகோ நகரில் வாழும் முஸ்லிம் சமூகத்தில், ஒமார் அல் பயூமி புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாக பலருக்குத் தெரிந்திருந்தது. இந்த விபரம் எல்லாம் File 17 ல் எழுதப் பட்டுள்ளன.

இன்னொரு உதாரணம்: சாலே அல் ஹுசைன் (Saleh Al-Hussayen). அவர் சவூதி உள்துறை அமைச்சில் வேலை செய்த அரச அதிகாரி. தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள், அதாவது 10 செப்டம்பர் 2001 அன்று, விமானக் கடத்தல்காரர்கள் தங்கியிருந்த அதே ஹொட்டேலில் இருந்துள்ளார். 

ஒரு மத அறிஞருமான சாலே அல் ஹுசைன், FBI விசாரணையின் போது கடத்தல்காரர்களை தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால், அவர் பொய் சொல்வதாக விசாரணை அதிகாரிகள் நம்பினார்கள். அவர் திடீரென மயங்கி விழுந்த படியால், அல்லது அப்படி நடித்த படியால், விசாரணை இடைநிறுத்தப் பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சில நாட்களில் அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டார்.

இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவெனில், 9/11 தாக்குதலில் சவூதி அரசுக்கு மட்டுமல்லாது, அமெரிக்க அரசுக்கும் பங்கிருக்கிறதா? இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார ஆதாயங்கள் என்ன? ஜோர்ஜ் புஷ் குடும்பமும், சவூதி மன்னர் குடும்பமும், கார்லைல் ஆயுத நிறுவனத்தின் பங்குதாரர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர்களில் ஆயுத விற்பனை மூலம் பெருமளவு இலாபம் சேர்த்து விட்டனர். சிலநேரம், 9/11 தாக்குதலை நடத்தியதன் நோக்கமே அதுவாக இருக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு: