Sunday, October 22, 2017

தனி நாடே மாயம்! தேசியம், தாயகம், வாக்கெடுப்பு எல்லாம் மாயம்!!

ஈராக்கில், அரேபிய‌ருக்கும், குர்திய‌ருக்கும் இடையில் சமீபத்தில் புதிய‌ போர் மூண்டுள்ள‌து. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.

தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.

அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.

குர்திஸ் ப‌டையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் ந‌க‌ரையும், அதை அண்டிய‌ பிர‌தேச‌ங்களையும் ஈராக்கிய‌ ப‌டைக‌ள் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌.

ஈராக் அர‌சின் ஆத‌ர‌வு பெற்ற‌ ஷியா துணைப் ப‌டையின‌ர், ஒரே ஒரு நாள் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில், கிர்குக் ப‌குதியை கைப்ப‌ற்றியுள்ள‌மை ப‌ல‌ரை விய‌ப்பில் ஆழ்த்தியுள்ள‌து.

ஈராக் எண்ணையில் க‌ணிச‌மான‌ அள‌வு ப‌ங்கு கிர்குக் ப‌குதியில் இருந்து கிடைக்கிற‌து. அத‌னாலேயே அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌தேச‌மாக‌ உள்ள‌து. அத‌னால் எல்லோரும் அத‌ற்கு உரிமை கோருகிறார்க‌ள்.

கிர்குக் ஒரு கால‌த்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் ம‌க்க‌ள்) இன‌த்த‌வ‌ர் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ சிறிய‌ ந‌க‌ர‌ம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌க் கால‌த்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள்‌ இருந்த‌து. இந்த‌க் கார‌ண‌ங்க‌ளினால், துருக்கியும் கிர்குக் த‌ன‌க்கு சொந்த‌ம் என்று உரிமை கோருகின்ற‌து.

குர்திய‌ர்க‌ள் அத‌னை த‌ம‌து குர்திஸ்தான் தாய‌க‌ப் ப‌குதி என்று உரிமை கோருகின்ற‌ன‌ர். குர்திஸ் தேசிய‌வாத‌ இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து, வ‌ருங்கால‌ குர்திஸ்தானின் த‌லைந‌க‌ராக‌ கிர்குக் இருக்கும் என்று அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து.

இது இல‌ங்கையில் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திருகோண‌ம‌லையை வ‌ருங்கால‌ த‌மிழீழ‌த் த‌லைந‌க‌ர‌மாக‌ உரிமை கோரிய‌து போன்ற‌து. கிர்குக், திருகோண‌ம‌லை இர‌ண்டும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே த‌லைந‌க‌ர‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌.

எண்ணை உற்ப‌த்தி கார‌ண‌மாக‌ கிர்குக் ந‌க‌ர‌ம் பெரிதாக‌ வ‌ள‌ர்ந்த‌து. வ‌ட‌க்கில் இருந்து குர்திய‌ரும், தெற்கில் இருந்து அரேபிய‌ரும் வேலை தேடி வ‌ந்து குடியேறினார்க‌ள். 1957 க‌ண‌க்கெடுப்பின் ப‌டி, கிர்குக் ந‌க‌ர‌ ச‌ன‌த்தொகையில் 38% துருக்மேன், 33% குர்திய‌ர், எஞ்சியோர் அரேபிய‌ர்க‌ள். (இதில் க‌ணிச‌மான‌ அள‌வு கிறிஸ்த‌வ‌ அஸிரிய‌ர்க‌ள்.)

ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில் கிர்குக் அரேபிய‌ம‌யமாக்க‌ப் ப‌ட்ட‌து. பெரும‌ள‌வு குர்திய‌ர்க‌ள் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதே நேர‌ம் அரேபிய‌ர்க‌ள் பெரும‌ள‌வில் குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ணிச‌மான‌ அள‌வு குர்திய‌ர்க‌ள், அர‌பு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபிய‌ராகி விட்ட‌ன‌ர். ச‌தாம் ஆட்சி முடிவுக்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முன்பு வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ குர்திய‌ர்க‌ள் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

இன்றைய‌ கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை 2014 ம் ஆண்டு தொட‌ங்கிய‌து. அது வ‌ரையும் கிர்குக் ஈராக் அர‌சின் நேர‌டி ஆட்சியின் கீழ் இருந்த‌து. ஆனால், மேற்கில் இருந்து வ‌ந்த‌ ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை ச‌மாளிக்க‌ முடியாம‌ல், ஈராக்கிய‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி குர்திய‌ ப‌டைக‌ள் கிர்குக்கை கைப்ப‌ற்றின‌. அப்போது பிர‌தான‌மான‌ எதிரி ஐ.எஸ். என்ப‌தால், ஈராக்கிய‌ அர‌சும் விட்டுக் கொடுத்த‌து.

ஐ.எஸ். தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை எழுந்த‌து. குர்திஸ்தான் அர‌சு கிர்குக் எண்ணையை திருடி விற்கிற‌து என்று ஈராக் அர‌சு குற்ற‌ம் சாட்டிய‌து. அதே நேரம், "எம‌து த‌லைந‌க‌ரான‌ கிர்குக்கை விட்டுக் கொடுக்க‌ மாட்டோம்..." என்ற‌ தேசிய‌வாத‌ கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான‌ பொது வாக்கெடுப்பும் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

"த‌னிநாடு காண்ப‌து என்பது ஒரு ந‌டைமுறைச் சாத்திய‌ம‌ற்ற‌ க‌ற்ப‌னாவாத‌ம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக‌ பொதுவாக்கெடுப்பின் பின்ன‌ர், பெரும்பான்மை குர்திய‌ர்க‌ள் இப்போது தான் ய‌தார்த்த‌ம் என்ன‌வென‌ உண‌ர்கிறார்க‌ள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, ட‌ச்சு செய்தி நிறுவ‌ன‌ம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)

கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் க‌ட்டுப்பாட்டின் கீழ் இருந்த‌ கிர்குக் மாகாண‌த்தின் எஞ்சிய ப‌குதிக‌ளையும் ஈராக்கிய‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி விட்ட‌து. குர்திஸ் ப‌டைக‌ள் பின்வாங்கி ஒரு அவ‌மான‌க‌ர‌மான‌ தோல்வியை ச‌ந்தித்த‌தின் பின்ன‌ணியில் ஈரான் இருக்க‌லாம் என‌ ச‌ந்தேகிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அதாவ‌து, ஈரானின் ம‌றைமுக‌ நெருக்குவார‌ம் கார‌ண‌மாக‌த் தான் குர்திஷ் ப‌டைய‌ணிக‌ள் பின்வாங்கியுள்ள‌ன‌. குர்திஸ்தானில் வ‌ட‌ ப‌குதி KDP இய‌க்க‌த்தின் க‌ட்டுப்பாட்டிலும், தென் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டிலும் உள்ள‌து. கிர்குக் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் அட‌ங்குகிற‌து.

PUK இத‌ற்கு முன்ன‌ரும் சுத‌ந்திர‌ குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு ம‌ன‌துட‌ன் ஆத‌ரிக்க‌வில்லை. ஏனெனில் அதன‌து போட்டி இய‌க்க‌மான‌ KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்த‌து. இது அங்கு இரு தேசிய‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல் விளையாட்டு.

பொது வாக்கெடுப்புக்கு வ‌ரையும், KDP இன் பிர‌ச்சார‌ம் முழுவ‌தும் "ஹ‌லாப்ஜா இன‌ப்ப‌டுகொலை" ப‌ற்றியே இருந்த‌து. இந்த‌ உண‌ர்ச்சிக‌ர‌ அர‌சிய‌லுக்கு பின்னால் இர‌ண்டு க‌ட்சிக‌ளினதும் போட்டி அரசிய‌ல் ம‌றைந்து விட்ட‌து, அல்ல‌து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து, ஹ‌லாப்ஜா என்ற‌ கிராம‌ம், ஈரான் எல்லைக்க‌ருகில், PUK க‌ட்டுப்பாட்டு பிர‌தேச‌த்தில் உள்ள‌து.

த‌ன‌து பிர‌தேச‌த்திற்குள் KDP பின்க‌த‌வால் நுழைய‌ப் பார்க்கிற‌து என‌ நினைத்து‌ PUK எச்ச‌ரிக்கையான‌து. ஆனால், சுத‌ந்திர‌ குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய‌ அர‌சிய‌லில் இருந்து ஓர‌ங்க‌ட்ட‌ப் ப‌ட‌லாம். இந்த‌ப் ப‌ய‌த்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆத‌ரித்த‌து.

இந்த இட‌த்தில் இன்னொரு உண்மையை ம‌ற‌ந்து விட‌க் கூடாது. PUK நீண்ட‌ கால‌மாக, ஆர‌ம்ப‌த்தில் இருந்தே ஈரானின் ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ந்த‌து. த‌ற்போது கிர்குக் பிர‌தேச‌த்தில் இருந்து பின்வாங்கிய‌தும் PUK ப‌டைய‌ணிக‌ள் தான். அத‌ற்கு ஈரானின் அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

"பார்த்தீர்க‌ளா, த‌மிழ‌ருக்குள் ஒற்றுமை இல்லாத‌து தான் எல்லாப் பிர‌ச்சினைக்கும் கார‌ணம்" என்று சொல்வ‌து மாதிரி கிள‌ம்பி வ‌ராதீர்க‌ள். புலிக‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் க‌ருணா குழுவை அக‌ற்றிய‌ மாதிரி, "PUK துரோகிக‌ள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வ‌ர‌ முடியாது. குர்திஸ்தானில், வ‌ட‌க்கு, தெற்கு பிராந்திய‌ மொழிக‌ளுக்கு இடையிலான‌ க‌லாச்சார‌ வித்தியாச‌ம் மிக‌வும் அதிக‌ம்.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இருந்து குர்திஸ் ம‌க்க‌ள் ஒரு ப‌டிப்பினையை பெற்றுள்ள‌ன‌ர். த‌னி நாடு கிடைக்கும் என்ப‌தெல்லாம் ப‌க‌ற் க‌ன‌வு. குர்திஸ் தேசிய‌வாதிக‌ள் சொல்வ‌து போல‌ எதுவும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

பூகோள‌ அர‌சிய‌ல் எம‌க்கு சாத‌க‌மாக‌ அமைய‌ப் போவ‌தில்லை. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது, எந்த‌வொரு அய‌ல்நாடும், குர்திஸ்தான் என்ற‌ த‌னிநாடு உருவாக‌ ச‌ம்ம‌திக்க‌ப் போவ‌தில்லை. மொத்த‌த்தில் எல்லாம் ஒரு மாயை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Wednesday, October 18, 2017

பொல்பொட், க்மெர் ரூஜ் பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும் ஐ.நா. நீதிமன்றம்


கம்போடியாவில், க்மெர் ரூஜ் ஆண்ட நான்கு வருட காலங்களில், இனப்படுகொலை நடந்துள்ளதா என்பதை ஆராயும் ஐ.நா. நீதிமன்றம் கடந்த பத்தாண்டுகளாக நடைபெறுகின்றது. இரண்டு கட்டமாக நடந்த விசாரணைகள் யாவும் முடிவடைந்துள்ள நிலையில், 2018 ம் ஆண்டு தீர்ப்புக் கூறுவதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள க்மெர் ரூஜ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் குழுவில் இருவர் டச்சுக் காரர்கள். அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றை, நெதர்லாந்து தொலைக்காட்சி தயாரித்துள்ளது. 17-10-2017 அன்று, NPO2 சேனலில் காண்பிக்கப் பட்ட "Defending Brother No. 2" என்ற பெயரிலான ஆவணப் படத்தில் கூறப் பட விடயங்களை இங்கே சுருக்கமாக தருகிறேன்.

இது ஒரு ஐ.நா.வின் சிறப்பு நீதிமன்றம். நீதிபதிகள் குழுவில், கம்போடியர்களும், வெளிநாட்டவர்களும் இடம்பெறுகின்றனர். நீதிமன்றம் கம்போடிய மண்ணில் அமைக்கப் பட்டது. அரச தரப்பு வக்கீல்கள், எதிர்த் தரப்பு வக்கீல்கள் இரண்டு பக்கத்திலும், கம்போடியர்களும், வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள். அதை கலப்பு நீதிமன்றம் என்றும் கூறலாம். நீதிமன்றத்தின் பெருமளவு செலவுகளை ஐ.நா. பொறுப்பேற்றுள்ளது. அதே நேரம், கம்போடிய அரசுடன் பல விட்டுக் கொடுப்புகளை செய்த பின்னர் தான் நீதிமன்றம் அமைக்கப் பட்டது. அந்த "விட்டுக்கொடுப்புகள்" முக்கியமானவை. நீதியான தீர்ப்புக்கு அது தடையாக உள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

க்மெர் ரூஜ் தலைவராக இருந்த பொல்பொட் நீதிமன்றத்திற்கு வராமலே காலமானார். அவருக்கு அடுத்த படியாக இருந்த தலைவர்கள் தான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப் பட்டனர். அவர்களில் முக்கியமானவர், பொல்பொட்டின் வலதுகரம் என்று அழைக்கப் பட்ட, க்மெர் ரூஜ் இயக்க தத்துவாசிரியர் நுவோன்சே (Nuon Chea). தொடக்கத்தில் மிஷீல் பெஸ்ட்மன் (Michiel Pestman), விக்டர் கொப்பே (Victor Koppe) என்ற இரு டச்சு வழக்கறிஞர்கள் நுவோன்ஷேயிற்கு ஆதரவாக வாதாடிய குழுவில் இடம்பெற்றனர். 

வழக்கின் இடையில், சில காரணங்களுக்காக மிஷீல் பெஸ்ட்மன் வெளியேறி விட, விக்டர் கொப்பே இறுதி வரையில் வழக்காடி வந்துள்ளார். முதலாமவர் அப்போதே ஐ.நா. நீதிமன்றத்தில் நம்பிக்கையிழந்து வெளியேறி இருந்தார். இரண்டாமவர் பத்து வருடங்களுக்கு பிறகும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளார். இதுவரை காலமும் குடும்பத்தோடு கம்போடியாவில் தங்கியிருந்தவர், தற்போது நெதர்லாந்துக்கு திரும்பி வந்துள்ளார்.

கம்போடியாவுக்கான "ஐ.நா. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப் போவதில்லை... உண்மை வெளிவரப் போவதில்லை..." என்று, இறுதி வரை வாதாடிய வழக்கறிஞர் விக்டர் சொல்லக் காரணம் என்ன? சுருக்கமாக: இது ஒரு "அரசியல் மன்றம்", நீதி மன்றம் அல்ல. வழமையான, போரில் வென்றவர்கள் தோற்றவர்களைத் தண்டிக்கும் வேலையைத் தான், இந்த ஐ.நா. நீதிமன்றமும் செய்கின்றது.

அப்படி நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. கம்போடியாவில் க்மெர் ரூஜ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், ஜெனரல் லொன் நொல் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போதிருந்த படையினர், பல்லாயிரக் கணக்கான கம்போடிய மக்களை படுகொலை செய்தனர். அதனாலேயே, பெரும்பான்மையான கம்போடிய மக்கள் க்மெர் ரூஜை ஆதரித்தனர். இது வரலாறு.

ஆனால், லொன் நொல் காலம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் மறுத்து விட்டது. ஏனெனில், அன்றைய ஆட்சியாளர்கள் அமெரிக்க சார்பானவர்கள். அன்றைய லொன் நொல் அரசு, மக்கள் ஆதரவை இழந்த, அமெரிக்காவால் தாங்கிப் பிடிக்கப் பட்ட ஒரு பொம்மை அரசாக இருந்தது. அன்று கம்போடியா முழுவதும் அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின. அதில் அகப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர். 

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிகமாக, கம்போடியா என்ற சிறிய நாட்டினுள் போடப் பட்டன. அப்படியானால், எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பார்கள்? இதை எல்லாம் விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் முன்வரவில்லை. க்மெர் ரூஜ் என்ன குற்றம் செய்தார்கள் என்பது மட்டுமே அதன் அக்கறை.

அது தான் போகட்டும். க்மெர் ரூஜ் தொடர்பாக, குறிப்பாக பொல்பொட்டின் வலதுகரமாக இருந்த நுவோன்சே தொடர்பான விசாரணைகளாவது பாரபட்சமற்ற வழியில் நடந்தனவா? அதுவும் இல்லை. பல தடவைகள் எதிர்த் தரப்பு வக்கீல் பேசவே இடம்கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் சில சாட்சியங்களை ஒப்படைக்கவும், சாட்சிகளை விசாரிக்கவும் அனுமதி மறுக்கப் பட்டது. சிலநேரம், "வழக்கிற்கு சம்பந்தமில்லாத கதைகள்" என்று கூறி, நீதிபதி வக்கீலின் வாயை மூட வைத்தார். இவை எல்லாம் வீடியோப் பதிவுகளாக உள்ளன.

க்மெர் ரூஜ் ஆட்சியில் இருந்த காலத்தில், நுவோன்சேயின் மெய்ப்பாதுகாவலராக இருந்த ஒருவர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கிறார். ஆகவே, நுவோன்சே குற்றம் புரிந்திருந்தால், அதை நேரில் கண்ட சாட்சி அவர் அல்லவா? ஒரு அமைச்சரின் வாக்குமூலம் நம்பத் தகுந்ததாக இருக்குமே? ஆனால், அவரைக் கூப்பிட்டு விசாரிப்பதற்கு, ஐ.நா. நீதிமன்றம் மறுத்து விட்டது! 

இன்றைய கம்போடிய அரசின் பிரதமர் ஹூன்சென் உட்பட, பிரதானமான அமைச்சர்கள் முன்பு க்மெர் ரூஜ் போராளிகளாக இருந்தவர்கள். இது ஒன்றும் இரகசியம் அல்ல. எல்லோருக்கும் தெரிந்த உண்மை. க்மெர் ரூஜ் இனப்படுகொலை புரிந்தது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டால், இன்றைய ஆட்சியாளர்களும் குற்றவாளிகளாக கருதப் பட்டு,  தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தானே? ஆனால், அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

மேலும், க்மெர் ரூஜ் சார்பாக வாதாடும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மட்டுமே தாம் விரும்பியதை சொல்லும் சுதந்திரத்தை பெற்றுள்ளனர். அந்தச் சுதந்திரம் உள்நாட்டு வழக்கறிஞர்களுக்கு கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். நீதிமன்றத்தில் மட்டுமல்லாது, ஊடகங்களின் கமெராக்களுக்கு முன்னால் கூட எல்லாவற்றையும் பேச முடியாது தவிக்கின்றனர். அந்தளவுக்கு, இன்றைய கம்போடிய அரசின் அழுத்தம் காணப்படுகின்றது.

உண்மையில், கம்போடிய அரசு இதை ஒரு கண்காட்சி நீதிமன்றமாக நடத்துகின்றது. கம்போடியா முழுவதிலும் இருந்து பாடசாலை மாணவர்களும், பௌத்த பிக்குகளும் அரச செலவில் பேருந்து வண்டிகளில் அழைத்து வரப் படுகின்றனர். "இதோ பாருங்கள்! வெளிநாட்டு வக்கீல்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியவாறு பேசுகிறார்கள்... ஆகையினால் இது ஒரு சுதந்திரமான நீதிமன்றம்..." என்று உலகத்திற்கு காட்டுவது மட்டுமே அங்கே நடக்கிறது.

வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கும் மேல் மட்ட அழுத்தம் இல்லாமல் இல்லை. டச்சு வக்கீல் விக்டரின் ஏழு வயது மகள், ப்னோம் பென் நகரில் மேட்டுக்குடிப் பிள்ளைகள் கல்வி கற்கும் சர்வதேச (ஆங்கிலப்) பாடசாலையில் படிக்கிறாள். ஒரே வகுப்பில், பிரதமர் ஹூன் சென்னின் பேத்தியும் படிக்கிறாள். "உங்கள் அப்பாவை சுட வேண்டும்..." என்று, ஒரு தடவை அந்த சிறுமி சொல்லி இருக்கிறாள். வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், விக்டரின் மாணவி விவாகரத்து கோரி பிள்ளையுடன் பிரிந்து சென்று விட்டார். இது அவர்களது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்றாலும், கம்போடியாவின் ஆபத்தான அரசியல் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம்.

முன்னாள் இராணுவ வீரர்கள் வகை தொகையின்றி கொல்லப் பட்டனர் என்பது, நுவோன்சே மீது சுமத்தப் பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் ஒன்று. 1975 ம் ஆண்டு, க்மெர் ரூஜ் ஆட்சியைப் பிடித்ததும், முன்னாள் இராணுவ வீரர்கள் எல்லோரும் சரணடைந்து விட்டனர். அவர்களை தாம் கொல்லவில்லை என்றும், கம்யூனிச சித்தாந்தக் கல்வி புகட்டும் சிறப்புப் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டதாகவும் நுவோன்சே வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த நடைமுறை ஏற்கனவே சீனப் புரட்சிக்குப் பின்னரும் பின்பற்றப் பட்டது.

"சரணடைந்த இராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்." என்பது அரச தரப்பு வக்கீல்களின் வாதம். துல்போச்ரே (Tuol Po Chrey) படுகொலைகள் என்று சொல்லப் பட்ட சம்பவம் நடந்தது பற்றிய சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணான கதைகளை சொன்னார்கள். அந்த ஊரில் உள்ள, முன்பு நிலப்பிரபு ஒருவருக்கு சொந்தமான மாளிகையில், மூவாயிரம் இராணுவ வீரர்கள் அளவில், இருபது டிரக் வண்டிகளில் கொண்டு வரப் பட்டதாக முன்னாள் க்மெர் ரூஜ் போராளி என்று ஒருவர் சாட்சியம் கூறினார். க்மெர் ரூஜ் கைது செய்து வைத்திருந்த இராணுவ வீரர்கள், துல்போச்ரே வயல்களில் சுட்டுக் கொன்றதை தாம் நேரில் கண்டதாக, அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் வீடியோ கமெராவுக்கு முன்னால் சொன்னார்கள்.

இங்கே முக்கியமான விடயம் என்னவெனில், துல்போச்ரே படுகொலைகளுக்கும் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நுவோன்சேயிற்கும் சம்பந்தம் இருப்பதாக நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நீதிமன்றத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு, நீதிபதி அனுமதியளிக்க மறுத்தார். "சாட்சிகள் பொய் சொல்வதாக நிரூபிக்க முயலக் கூடாது..." என்று நீதிபதியே கூறினார். 

இருப்பினும், எதிர்த்தரப்பு வக்கீல்கள் தமது தரப்பு சாட்சியாக சமர்ப்பித்த ஒருவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இவரது சாட்சியத்தை, ஏற்கனவே ஒரு பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மறைவிடம் ஒன்றில் வைத்து வீடியோவில் பதிவு செய்திருந்தார். அவர், தான் அப்போது சொன்னதை எல்லாம், பின்னர் இல்லையென்று மறுத்தார்.

அது மிகவும் முக்கியமான சாட்சியம். இன்று வரையில் எந்த ஊடகமும் சொல்லாமல் மறைத்த வரலாற்றுச் சம்பவம் அது. படுகொலைகள் நடந்த துல்போச்ரே கிராமம், வட மேற்குப் பிராந்திய கமாண்டரின் பொறுப்பில் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசம். அந்தக் கமாண்டரின் பெயர் ரோஸ் நிம் (Ruos Nhim). அவர் பொல்பொட் தலைமைக்கு எதிரான கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கினார். ஆகவே, அங்கு நடந்த படுகொலைகளுக்கும் அவர்களே பொறுப்பு.

க்மெர் ரூஜுக்கு எதிராக கிளர்ச்சி செய்தாலும், ரோஸ் நிம் குழுவினரும் க்மெர் ரூஜ் இயக்கத்தவர் தான். ரோஸ் நிம், பொல்பொட், நுவோன்சே ஆகியோர் சேர்ந்து போராடித் தான் கம்போடிய அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிற்காலத்தில், பொதுவுடைமை சமுதாயம் உருவாக்கும் பொழுது சில நடைமுறை பிரச்சினைகள் எழுந்தன. தலைமைக்குள் கருத்து முரண்பாடு தோன்றியது. கட்சிக்குள் ஒரு பிரிவு, தொழிலாளர்கள் தலைமை தாங்க வேண்டும் என்றும், மறு பிரிவு அறிவுஜீவிகள் தலை தாங்க வேண்டும் என்றும் வாதாடியது.

ஆரம்பத்தில் வாக்குவாதமாக இருந்த முரண்பாடு, ஒருவரையொருவர் கொன்று பழிதீர்க்கும் படலமாக மாறியது. ரோஸ் நிம் குழுவினர், பொல்பொட், நுவோன்சே ஆகியோரை கொலை செய்வதற்கும் சதி செய்தனர். இதனால், யாரையும் நம்ப முடியாது என்ற நிலைமை தோன்றியது. இந்தப் பரஸ்பர சந்தேகம் காரணமாகவும், களையெடுப்பு என்ற பெயரில் பல உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம். இறுதியில், ரோஸ் நிம் கைது செய்யப் பட்டார். அவரும், அவரோடு இருந்த வேறு சிலரும் சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டனர்.

இந்த விபரங்களை ரோஸ் நிம்மின் மகனே தான், பிரிட்டிஷ் ஊடகவியலாளரின் கமெராவுக்கு முன்னால் கூறினார். அன்றைய காலகட்டத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும், அதனால் தனது தந்தைக்கு கிடைத்த தண்டனையும் எதிர்பார்க்கத் தக்கதே என்றார்.  அவரை நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லக் கூப்பிட்ட நேரம், அங்கு வைத்து தான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்தார். 

இதிலிருந்தே, கம்போடிய அரசு சாட்சிகளை மிரட்டி இருக்கிறது என்பது தெளிவாகின்றது. பல சாட்சிகள் இவ்வாறு தான் நடந்து கொண்டன. அரச தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்த சாட்சிகள் பெரும்பாலும் கம்போடிய அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தான். அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்குரியது. அவர்கள் குறுக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக உளறினார்கள். உதாரணத்திற்கு, முன்பு தனது தந்தையின் கொலையை நேரில் கண்டதாக சொன்ன ஒருவர், பின்னர் அதை மற்றவர்கள் சொல்லிக் கேள்விப் பட்டதாக கூறினார்.

தலைநகர் ப்னோம் பென் நகரில், க்மெர் ரூஜ் வைத்திருந்த சித்திரவதைக் கூடம் மியூசியமாக மாற்றப் பட்டுள்ளது. அங்கு இருபதாயிரம் பேரளவில் கொண்டு வரப் பட்டதாகவும், புகைப்படம் எடுக்கப் பட்டு, விசாரணைகள் பதிவு செய்யப் பட்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால், உண்மையில் மியூசியத்தில் வெறும் ஐயாயிரம் பேரின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. வெறும் நாலாயிரம் விசாரணைக் கைதிகளின் பதிவுகள் மட்டுமே உள்ளன. எஞ்சியோருக்கு என்ன நடந்தது? யாரிடமும் பதிலில்லை. மேலும் அந்த மியூசியம் கூட, இன்றைய கம்போடிய அரசு அமைத்தது தான். அதாவது, "இன்று அரசாங்கத்தில் இருக்கும் முன்னாள் க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், தாம் செய்த குற்றங்களை தாமே காட்சிக்கு வைத்திருக்கின்றனர்! "நம்ப முடிகிறதா?

அதன் அர்த்தம், க்மெர் ரூஜ் யாரையும் கொலை, சித்திரவதை செய்யவில்லை என்பதல்ல. உலகில் ஆயுதப்போராட்டம் நடத்தும் அனைத்து இயக்கங்களும் கொலைகள், சித்திரவதைகள் செய்த வன்முறையாளர்கள் தான். அவர்கள் யாரும் காந்திய வாதிகள் அல்ல. இதை நாங்கள் இப்படிப் பார்க்க வேண்டும். ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் பலருண்டு. உதாரணத்திற்கு, மாத்தையா குழு, கருணா குழு, ஈபிடிபி, இப்படிப் பல உதாரணங்களை காட்டலாம். அன்று கொல்லப் பட்டவர்களுக்கும் உறவினர்கள் உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் சாட்சிகளாக நிறுத்தி, வாக்குமூலம் பெற்றால் என்ன சொல்லி இருப்பார்கள்? புலிகளைத் தானே குற்றம் சுமத்துவார்கள்?

ஒவ்வொருவருக்கும் தமது குடும்ப உறுப்பினரின் இழப்பு பெரியது தான். அது மறுக்க முடியாத உண்மை. க்மெர் ரூஜால் கொல்லப் பட்டவர்களின் உறவினர்கள் க்மெர் ரூஜ் தான் கொன்றது என்ற உண்மையை மட்டுமே சொல்வார்கள். அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை. ஆனால், இனப்படுகொலை, போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு உணர்வுபூர்வ அரசியல் நடத்துவது மாதிரி நீதிமன்றம் நடந்து கொள்கிறது. அதற்கு உண்மை என்னவென்று ஆராய விருப்பமில்லை. காரணம்: அரசியல் தலையீடு. என்றைக்கு நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கிறதோ, அன்றைக்குத் தான் உண்மையான நீதி கிடைக்கும்.

ஆவணப் படத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:
https://www.vpro.nl/programmas/2doc/2017/Defending-Brother-No2.html

Sunday, October 08, 2017

க்மெர் ரூஜ் ஏன் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்?


"முதலில் அவர்கள் எனது தந்தையைக் கொன்றார்கள்" (First They Killed My Father) - க்மெர் ரூஜ் பற்றிய கம்போடிய திரைப்பட விமர்சனம்.

 கம்போடியாவில், க்மெர் ரூஜ் கால கொடுமைகளை கூறுவதற்காக, பிரச்சார நோக்கில் எடுக்கப் பட்ட ஹாலிவூட் திரைப்படங்களுக்கு மத்தியில் First They Killed My Father ஒரு மாறுபட்ட படைப்பு எனலாம். நிச்சயமாக, இந்தப் படமும் க்மெர் ரூஜை வில்லன்களாக தான் சித்தரிக்கிறது. இருப்பினும் மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக்கியுள்ளனர்.

எண்பதுகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பிரபலமாக்கப் பட்ட, The Killing Fields என்ற, ஹாலிவூட்டின் அரசியல் பிரச்சாரப் படத்துடன் ஒப்பிடும் பொழுது, இது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம். இதுவும் அடிப்படையில் ஒரு க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படமாக இருந்தாலும், அன்று நடந்த சம்பவங்களை உள்ளதை உள்ளபடியே காட்டியிருக்கும் நேர்மையை பாராட்டலாம்.

இரண்டு திரைப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக சொல்வதென்றால், The Killing Fields படத்தில் "க்மெர் ரூஜ் எனப்படுவோர் மனநோய் பிடித்த கொலைகாரர்கள்" என்பதைப் போல காட்டி இருப்பார்கள். ஏன் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எதுவும் கேட்கப் படாது. அதற்கான பதிலும் கிடைக்காது. க்மெர் ரூஜ் என்றால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். அது தான் நோக்கம்.

First They Killed My Father திரைப்படத்தின் தொடக்கத்தில், தலைநகர் ப்னோம்பென்னில் வாழும் மத்தியதர வர்க்க குடும்பத்தைக் காட்டுகிறார்கள். ஒரு தகப்பன், தாய், மூன்று பிள்ளைகள். மூத்த பெண் பிள்ளைக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம். அவள் எழுதிய சுயசரிதையை தான் படமாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். கம்போடியாப் போரில் க்மெர் ரூஜ் வென்றதும், ப்னோம்பென் வாசிகளை வெளியேற்றுவதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.

அவர்கள் முதலில் எனது தந்தையைக் கொன்றார்கள் என்ற தலைப்பின் படி, க்மெர் ரூஜ் அந்த சிறுமியின் தந்தையை கொன்ற பின்னர், குடும்பம் சிதறுகின்றது. பிள்ளைகள் தப்பியோடி வேறு இடங்களில் உள்ள க்மெர் ரூஜ் முகாம்களில் சரணடைகிறார்கள். வியட்நாம் படையெடுப்பின் பின்னர் ஒன்று சேருகிறார்கள். இதற்கிடையில், அவர்களது தாயையும் க்மெர் ரூஜ் கொன்று விட்டிருப்பார்கள். இது தான் கதைச் சுருக்கம்.

ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? இதைப் போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் படத்தில் உள்ளன. ஆனால், பார்ப்பவரின் வர்க்கத் தன்மைக்கு ஏற்றவாறு, அதை சரியாகவோ, தவறாகவோ புரிந்து கொள்ளலாம். அந்தத் தந்தையை வசதியாக வாழும் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மட்டும் படத்தில் காட்டவில்லை. முந்திய அடக்குமுறை அரசில் பணியாற்றிய, இராணுவ சீருடை அணிந்த அதிகாரியாகவும் காட்டுகிறார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்ற பிறகு, அவரது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம்.

எழுபதுகளில் வியட்நாம் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம். கம்யூனிசத்தை தடுப்பது என்ற பெயரில் அமெரிக்கா கம்போடியாவிலும் இராணுவ நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அன்றிருந்த அமெரிக்க சார்பு கம்போடிய அரசு, அமெரிக்க இராணுவ உதவியுடன் சொந்த மக்களை அடக்கியொடுக்கி ஆண்டு வந்தது. அரச கொலைப் படையினரால் கொல்லப் பட்ட மக்கள் ஒரு புறம். அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சுகளால் கொல்லப் பட்ட மக்கள் மறுபுறம். அப்போதே குறைந்தது இரண்டு மில்லியன் கம்போடிய மக்கள் இனப் படுகொலை செய்யப் பட்டனர்.(இதற்காக அமெரிக்கர்கள் யாரையும் ஐ.நா. நீதிமன்றம் விசாரிக்கவில்லை.)

இத்தகைய மனிதப் பேரவலங்களுக்கு மத்தியில் தான், கம்போடிய விடுதலைக்காக போராடிய க்மெர் ரூஜ் இயக்கம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தலைநகரைக் கைப்பற்றியது. அமெரிக்க சார்பு அடக்குமுறை அரசு கவிழ்ந்தது. இருந்தாலும் அதை இறுதி வெற்றியாக கருத முடியாது. எந்நேரமும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச வரலாம். கம்யூனிசத்தை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டுமென்ற வெறியுடன் இலட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, தற்போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள் என்றவுடன் சும்மா இருக்குமா?

மில்லியன் கணக்கான சனத்தொகை கொண்ட தலைநகர் ப்னோம்பென்னை விட்டு மக்களை வெளியேறுமாறு, க்மெர் ரூஜ் ஒலி பெருக்கிகளில் அறிவித்தார்கள். இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெறுகின்றது. நெடுஞ் சாலைகளில், ஆயுதமேந்திய க்மெர் ரூஜ் படையணிகள் தலைநகரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அதே சாலையின் மறு புறத்தில், சாரி சாரியாக பொது மக்கள் கிராமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர், ஈழத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதே காட்சிகளைக் காணக் கூடியதாக இருந்தது. சிறிலங்கா இராணுவம், யாழ் குடாநாட்டை பிடிப்பதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. இராணுவம் வருவதற்கு முன்னர், யாழ்நகரில் இருந்து காங்கேசன்துறை வரையிலான அத்தனை ஊர்களிலும் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதியே இதைச் செய்வதாக புலிகள் கூறினார்கள்.

போகும் வழியில், க்மெர் ரூஜ் சோதனைச் சாவடிகளில், மக்கள் கொண்டு சென்ற ஆடம்பரப் பாவனைப் பொருட்கள் பறிக்கப் படுகின்றன. வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களுக்கு இவையெல்லாம் "பெரிய இழப்புகள்" தான். ஆயினும், தனது உயிர்ப் பாதுகாப்பு கருதி, சிறுமியின் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு நகர்கிறார்கள். க்மெர் ரூஜ் மக்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். கிராமங்களில் அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. தாமாகவே குடிசை வீடுகளை கட்டிக் கொள்ள வேண்டும்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. எமது தாயகத்தில், நகரத்தில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உடுப்பதற்கும், கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் உடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு நாள், நகர மாந்தர்கள் எல்லோரும் கிராமப்புற உடைகளில் காட்சியளித்தால் எப்படி இருக்கும்? அந்த மாற்றம் தான் அப்போதைய கம்போடியாவில் நடந்தது. தலைநகரை விட்டுக் கிளம்பும் பொழுது, ஆடம்பரமாக உடையணிந்திருந்த நகர வாசிகள், க்மெர் ரூஜ் கிராமங்களில் சாதாரணமான ஏழை விவசாயிகளின் உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. மத்திய தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் இது மிகப் பெரிய கொடுமை அல்லவா?

இதற்கு முன்னர் வந்த க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படங்களில், க்மெர் ரூஜ் தமது "தடுப்பு முகாம்களில்  குடும்பங்களைப் பிரித்து வைத்திருந்ததாக" காட்டி இருந்தனர். அதாவது, "ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்டு வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப் பட்டதாக" சொல்லி இருந்தனர். அது வெறும் பிரச்சாரம். உண்மையில் அப்படி நடக்கவில்லை. இந்தப் படத்திலும், ஒவ்வொரு குடும்பமும் தனித் தனியான வீடுகளில் வசிப்பதாக காட்டுகிறார்கள். அவை மரத்தாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட குடிசை வீடுகள் தான்.

க்மெர் ரூஜ் கிராமங்களில் பொருத்தப் பட்டுள்ள ஒலி பெருக்கிகளில்  மக்களுக்கான இயக்கத்தின் அறிவிப்புகள் மட்டுமல்லாது, அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன. முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது புதிய விடயம் அல்ல. ஊருக்கு ஊர் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில், புலிகளின் அறிவிப்புகளும், அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின. அப்போதெல்லாம் சினிமாப் பாடல்களை கேட்பதே அபூர்வம். 

கம்போடியாவில், க்மெர் ரூஜ் பொதுவாக மக்கள் மத்தியில் "இயக்கம்" என்றே அழைக்கப் பட்டது. "இயக்கம் அப்படிச் சொல்கிறது, இயக்கம் இப்படிச் சொல்கிறது" என்று தான் பேசிக் கொள்வார்கள். புலிகளின் de facto தமிழீழத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.

திரைப்படத்தில் வரும் குடும்பம், க்மெர் ரூஜ் சந்தேகப் பார்வை தம் மீது விழாமல் கவனமாக நடந்து கொள்கிறது. தமது கடந்த கால மத்தியதர வர்க்க அடையாளங்களை தாமாகவே மறைத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சிறுமியின் தந்தை யார் என்ற உண்மை ஒருநாள் தெரிய வருகின்றது. அவர்கள் இருக்கும் வீட்டிற்கு இரண்டு க்மெர் ரூஜ் போராளிகள் தந்தையை தேடி வருகிறார்கள். 

க்மெர் ரூஜ் யாரையாவது "தட்டி விட" நினைத்தால் எப்படி நடந்து கொள்ளும் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. யாரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்வதில்லை. அயலவருக்கு சந்தேகம் எழாதவாறு நடந்து கொள்வார்கள். அதன் படி, இந்தப் படத்தில் வரும் தந்தையையும் "உங்களோடு கதைக்க வேண்டும். வேறொரு இடத்தில் வேலைக்கு வரச் சொல்கிறார்கள்..." என்று கனிவாகப் பேசி அழைத்துச் செல்கிறார்கள். 

இருப்பினும் அவர்கள் தன்னை கொல்லத் தான் வந்திருக்கிறார்கள் என்பதை, அந்தத் தந்தை புரிந்து கொள்கிறார். குடும்ப உறுப்பினர்களுடன் பிரியாவிடை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆளரவம் இல்லாத ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்ற பின்னர், க்மெர் ரூஜ் அவரை சுட்டுக் கொல்கின்றனர். 

ஈழத்தில் புலிகள் இருந்த காலத்திலும் இப்படித் தான் கைது செய்வார்கள். புலிகள் யாரையாவது கொல்வதாக இருந்தால், அவருடைய வீட்டுக்கு சென்று, "உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்... நாளைக்கு விட்டு விடுகிறோம்..." என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள்.

க்மெர் ரூஜ் காலத்தில், சில இடங்களில் உணவுப் பற்றாக்குறை இருந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் சேர்ந்து வேலை செய்த படியால், காய்கறித் தோட்டங்களிலும், வயல்களிலும் விளைச்சல் அதிகமாக இருந்தது. அதை இந்தப் படத்திலும் காட்டுகிறார்கள். இருப்பினும் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு போதுமான அளவு பகிர்ந்து கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப் படுகின்றது. யாராவது பசியால் திருடினாலும் கடுமையாக தண்டிக்கப் பட்டனர். 

க்மெர் ரூஜ் மக்களை துன்புருத்திய காட்சிகள் படத்தில் வருகின்றன. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் நாடு முழுவதும் இது தான் நடந்தது என்று பொதுமைப் படுத்தவும் முடியாது. ஒவ்வொரு ஊரிலும் இருந்த பிரதேசப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவிதமாக நடந்து கொண்டார்கள். க்மெர்ரூஜ் தமது அடாவடித்தனம் காரணமாக, சில இடங்களில் மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தனர். அதேநேரம், வேறு இடங்களில் மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தனர். 

க்மெர் ரூஜ் அரசுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான எல்லைப் போர், திரைப் படத்தில் திருப்புமுனையாக வருகின்றது. மீண்டும் ஒரு போருக்கு ஆயத்தப் படுத்துவதற்காக, க்மெர் ரூஜ் சிறுவர்களையும் படையணியில் சேர்த்துக் கொள்கிறது. அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப் பட்டன. 

இதுவும் ஈழத்துடன் ஒப்பிடத் தக்கவாறு ஒரே மாதிரி நடந்துள்ளது. க்மெர் ரூஜ் மாதிரி, விடுதலைப் புலிகளும் சிறுவர்களை படையணிகளில் இணைத்தமை குறித்து கடுமையாக விமர்சிக்கப் பட்டனர். அதற்கு புலிகள் கூறிய பதில்களும், க்மெர் ரூஜ் கூறிய பதில்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. மேலும், இரண்டு இயக்கங்களும் அனாதைப் பிள்ளைகளை ஆயுதபாணிகள் ஆக்குவதில் அதிக அக்கறை காட்டியுள்ளன.

வியட்நாமிய படையெடுப்புக்கு பின்னர் தான், க்மெர் ரூஜ் பிடியில் இருந்த மக்களுக்கு விடுதலை கிடைத்தது என்று படத்தில் காட்டி இருக்கிறார்கள். இதுவும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம் தான். இராணுவ பலத்தில் மேலோங்கி இருந்த வியட்நாமிய படைகளை எதிர்த்துப் போரிட முடியாமல், க்மெர் ரூஜ் பின்வாங்கினார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த மக்கள், வியட்நாமிய படையினர் பக்கத்திற்கு செல்கின்றனர்.

"வியட்நாமிய படையினர் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்த கம்போடியர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியதாக இந்தப் படத்தில் காண்பிக்கிறார்கள். வன்னியில் இறுதிப்போரின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து சென்ற தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மனிதாபிமானத்துடன் நடத்தியதாக சொல்லப் படுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

கம்போடியாவில் எல்லோரும் க்மெர்ரூஜை ஆதரிக்கவில்லை. அதே நேரம், கணிசமான அளவு தீவிர க்மெர் ரூஜ் ஆதரவாளர்களும் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. இதையும் ஈழத்தின் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த அனைவரும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிர புலி ஆதரவாளர்களும் இருந்தனர். இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள் தான்.

இறுதியாக, திரைப் படத்தின் தலைப்புக்கு வருவோம். ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: 
  1. இந்தப் படத்தின் நாயகியான சிறுமியின் தந்தை, முன்பிருந்த அடக்குமுறை அரசின் கீழ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அரசுடன் ஒத்துழைத்த அனைவரும், க்மெர் ரூஜ் பார்வையில் துரோகிகள் தான். அவர்களைப் பொறுத்தவரையில், துரோகிகளை அழிப்பது தவறல்ல. அதையே தான் ஈழத்தில் விடுதலைப் புலிகளும் செய்தனர். சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்தவர்கள் தமிழர்களே ஆனாலும் துரோகிகளாக கருதப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டனர். 
  2. க்மெர் ரூஜ் நம்பிய அரசியல் சித்தாந்தப் படி, பணக்காரர்களும், நகரங்களில் வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்கத்தினரும்,  மக்கள் விரோதிகளாக கருதப் பட்டனர். அதாவது, உடல் வருத்தி உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களின் உழைப்பில், சொகுசாக வாழும் ஒட்டுண்ணிகளாக கருதப் பட்டனர்.

க்மெர் ரூஜ் போராளிகளில் பெரும்பான்மையானோர் சாதாரண கிராமப்புற, அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் தான். அவர்களது சமூகப் பின்னணி வேறு. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு மார்சியம் அல்லது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், வசதியாக, பணக்காரர்களாக வாழும் சமூகப் பிரிவினரை மனதிற்குள் வெறுத்திருப்பார்கள். க்மெர் ரூஜ் அந்த வர்க்க முரண்பாட்டை கூர்மைப் படுத்தி, அடித்தட்டு வர்க்க வாலிபர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து, அவர்களை வர்க்க எதிரிகளுக்கு எதிராக திருப்பி விட்டது. இந்தப் பின்னணியில் தான், அங்கு நடந்த சித்திரவதைகள், படுகொலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, October 01, 2017

அமெரிக்காவின் கதவைத் தட்டினால் தமிழீழம் கிடைக்கும், அல்லேலூயா!


"அமெரிக்காவை நம்பு தமிழினமே!"

"குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்" என்ற தலைப்பில், லண்டனில் வெளிவரும் ஒரு பேப்பர் ஊடகவியலாளர் அ. மாயூரன் முகநூலில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். (https://www.facebook.com/majura.amb/posts/1539005206138165?pnref=story) அதன் சாராம்சம் இது தான்:"அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்தால் தமிழீழம் சாத்தியமே!"

அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இவ்வாறு உள்ளது: 
//இனி தனக்கு விடுதலை சாத்தியமற்றது எனத் தெரிந்திருந்தும் தமது விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்கும் குர்தீஸ் மக்களைப்பார்த்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்கத்தவறினால் என்றோ விடுதலை அடையவேண்டிய ஈழத்தமிழினமான நாம் இனி நடை பிணங்களே அத்துடன் தனக்குத் துரோகமிளைத்த அமெரிக்காவின் கதவுகளைத் தொடர்ச்சியாகத் தட்டி தமது விடுதலைக்கனியை பறித்திருக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு 100 வீதம் பொருந்தும். எமக்கு விடுதலை வேண்டுமானால் துரோகியிடமாவது கூட்டுச்சேர்ந்து எமது விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டியதன் அவசியத்தை குர்தீஸ் மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இவர்களின் பாடங்களிலிருந்து வேற்றுமைகளைக் களைந்து எமக்கான விடுதலையை சாத்தியப்படுத்துவோம்.// (அ.மாயூரன்)

இது தமிழர்களையும் அமெரிக்க அடிமைகளாக்கும் அடிவருடி அரசியல். ஒரு பேச்சுக்கு, ஈராக்கில் குர்திஸ்தான் சுதந்திரம் அடைய அமெரிக்கா தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். அதே அமெரிக்கா துருக்கியில் குர்திஷ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை நின்றதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

துருக்கி- குர்திஷ் விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானை, சிரியாவை விட்டு விரட்டியடித்து, உலகெல்லாம் சுற்ற வைத்து காட்டிக் கொடுத்த அமெரிக்கா, எப்படி குர்து மக்களின் நண்பன் ஆகியது? ஈராக் பொது வாக்கெடுப்பு விடயத்தில் அமெரிக்க நலன்களா அல்லது குர்து மக்களின் விடுதலையா முக்கியமாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மைகள் தெரிய வரும்.

அ. மாயூரனின் கட்டுரையில் இருந்து:

//குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Locked )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. எனவே ஒரு தேசம் நான்கு துண்டாடப்பட்ட நாடுகளிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமின்மை என்பதாலேயே அரசியல் ஆய்வாளர்கள் அது சுதந்திர நாடாக விடுதலை அடைவது சாத்தியமில்லை என்றிருந்தனர்.// (அ.மாயூரன்)

யார் அந்த உலக வரைபடம் காணாத "அரசியல் ஆய்வாளர்கள்"? ஒரு சாதாரண பள்ளி மாணவன் உலக வரை படத்தை எடுத்துப் பார்த்தாலே, எத்தனை "நாலாபுறமும் மூடப் பட்ட தேசங்கள்" இருக்கின்றன என்பது தெரிந்து விடும். இவை எல்லாம் காலனிய காலத்தில் உருவாக்கப் பட்டு, காலனிய நீக்கம் என்ற பெயரில் சுதந்திரம் வழங்கப் பட்டவை. முன்னாள் காலனிய எஜமானும், அயல் நாடுகளும் அவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்த படியால் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன.

குர்திஸ் இன மக்களை "ஒரே தேசம்" என்று கருதினால், உலகில் நூற்றுக் கணக்கான தேசங்கள் துண்டாடப் பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் அனேகமாக எல்லா நாடுகளின் எல்லைக் கோடுகளும் ஏதோவொரு தேசிய இனத்தை பிரிப்பதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைக் கோடு பஷ்டூன் இன மக்களின் தேசத்தை இரண்டு துண்டுகளாக்கியது. இப்படி நிறைய உதாரணங்களை காட்டலாம்.

//இருந்தும் குர்தீஸ் மக்கள் தமது விடுதலை நோக்கி நகர்ந்தனர். முதலில் ஈராக்கிடமிருந்தாவது விடுதலை பெற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகள் செய்த போது தான்...// (அ.மாயூரன்)

இது ஒரு திரிபுபடுத்தல். குர்திய தேசியவாதம் ஒரு பிற்காலத்திய அரசியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டில் தான் குர்திஸ் தேசிய இன அடையாளம் உருவானது. அதற்கு முன்பு பல சிற்றரசுக்கள் இருந்துள்ளன. ஆனால், அன்று யாரிடமும் நாம் குர்தியர் என்ற உணர்வு இருக்கவில்லை. 

மேலும், இனம் அல்ல, மொழி தான் அடையாளத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, கிர்குக், பாக்தாத் ஆகிய நகரங்களில் அரபி மொழியை தாய்மொழியாக பேசும் குர்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இனத்தால், பிறப்பால் குர்தியர்கள். இருந்தாலும், இன்றைய தேசிய இன அரசியல் அவர்களை அரேபியர்கள் என்று சொல்கிறது!

துருக்கி குர்தியருக்கும், ஈராக் குர்தியருக்கும் இடையில் வெளித்தெரியக் கூடிய முரண்பாடுகள் உள்ளன. துருக்கியில் வாழும் குர்தியர்கள் லத்தீன் வரி வடிவத்தையும், ஈராக்கில் வாழும் குர்தியர் அரபி வரி வடிவத்தையும் உபயோகிக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,குர்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈராக்கி குர்திஸ்தானின் வட பகுதியில் குருமாஞ்சி கிளை மொழி பேசும் மக்களும், தெற்கில் சுராணி கிளைமொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அந்த மொழிப் பிரிவினை நவீன கால அரசியலிலும் தாக்கம் செலுத்தியது. பர்சானி தலைமை தாங்கிய KDP இயக்கம், குருமாஞ்சி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. தலபானி தலைமை தாங்கிய PUK இயக்கம், சுராணி மொழி பேசுவோரை பிரதிநிதித்துவப் படுத்தியது. 1994 - 1995 இரண்டு இயக்கங்களும் மோதிக் கொண்டன. அந்த சகோதர யுத்தத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள்.

ஈரான், ஈராக், துருக்கி ஆகிய மூன்று நாடுகளிலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற குர்திஸ் விடுதலை இயக்கங்கள், மூன்று மாறுபட்ட வரலாற்றுக் காலத்தில் தோன்றியுள்ளன. அவை எல்லாம் பொதுவாக குர்திஸ்தான் விடுதலை பற்றிப் பேசினாலும், ஒன்றுக்கொன்று அரசியல் கொள்கை முரண்பாடு கொண்டவை. இவர்கள் எப்படி ஒன்றாக விடுதலையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்?

//அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது குர்தீஸ் மக்கள் அமெரிக்காவிடம் தாம் ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தங்களுடன் துணை புரிவதாகவும் தமக்கு ஈராக்கிடமிருந்து விடுதலையை பெற்றுத் தருமாறும் கேட்டிருந்தனர்... அமெரிக்கா ஈராக் மீதான போரை முடித்ததன் பின்னர் குர்தீஸ் மக்களுக்கான விடுதலையை குடுக்க மறுத்தது.// (அ.மாயூரன்)

ஈராக்- குர்து மக்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமையை புறக்கணித்து விட்டு, அப்போது அங்கு நடந்த சம்பவங்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் குர்திஸ்தான் உள்நாட்டு அரசியல் பற்றித் தெரிய வேண்டும். அது தெரியாமல், "ஈழத் தமிழினம் ஈராக்கி குர்திஸ் இனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தமிழர்களை படுகுழியில் தள்ளிவிடக் கூடாது.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி நடத்திய காலத்திலேயே, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம் உருவாகி, அதற்கான தேர்தல்களும் நடத்தப் பட்டன. அப்போதே ஈராக்கிய இராணுவம் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. அதற்கு காரணம், குவைத் போருக்குப் பின்னர் எழுந்த நெருக்கடி நிலைமை. ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஈராக் மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. அது மட்டுமல்லாது, வடக்கிலும், தெற்கிலும் ஈராக்கிய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அந்த வான் பரப்பில் மேற்கத்திய போர் விமானங்கள் ரோந்து சுற்றின.

இராணுவ ரீதியாக பலவீனமடைந்து, மத்திய ஈராக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பெரும்பாடு பட்ட சதாம் ஹுசைன் அரசு, குர்திஸ்தான் பகுதிகளை விட்டுக் கொடுத்ததில் வியப்பில்லை. அப்போது குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர், சதாம் ஹுசைனுடன் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்து கொண்டார். "குர்திஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக" சதாம் அரசு பீற்றிக் கொண்டது.

வளைகுடா யுத்தம் நடந்த தொண்ணூறுகளில் தான், இன்றைய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்புக்கான அடித்தளம் போடப் பட்டது. அதாவது, ஈராக் எண்ணைக்காக சர்வதேச சமூகம் நடத்திய போரின் ஒரு பக்க விளைவு தான் அது. ஈராக்- குர்து மக்களைப் பொறுத்தவரையில், அது எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவு தான். அயல்நாடான துருக்கியில் வாழும் குர்து மக்களுக்கு கூட இன்று வரையில் அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. இதிலே ஈழத் தமிழினத்திற்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜோசியம் சொல்வது ஒரு சுத்துமாத்து!

ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடந்த நேரம், குர்திஸ்தான் விடுதலையை பெற்றுத் தருமாறு அமெரிக்காவை கேட்டது உண்மை தான். ஆனால், அதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மிகவும் தந்திரமாகப் பேசி போருக்கு சம்மதிக்க வைத்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலம் சில வருடம் நீடித்தது. அப்போதே நினைத்திருந்தால், பிரித்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அமெரிக்கர்கள் அப்படிச் செய்யவில்லை. குர்தியரிடம் நைச்சியமாகப் பேசி, புதிதாக உருவான ஈராக் அரசாங்கத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். "அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்த படியால் தான் இவ்வளவும் நடந்தது" என்பது ஒரு வெகுளித்தனமான பார்வை.

பாக்தாத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசு அதிகாரம் செலுத்திய நேரம் தட்டியும் திறக்காத கதவு இப்போது தான் திறந்து கொண்டதாம்! ஏற்கனவே, குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை எதிர்த்துள்ள அமெரிக்கா, தான் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும், "ஈழத் தமிழினமே அமெரிக்காவின் கதவுகளை தொடர்ந்தும் தட்டிக் கொண்டிரு, தமிழீழம் கிடைக்கும்!" என்று அறிவுரை சொல்வது அயோக்கியத்தனம். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று இயேசு சொன்னதாக, தமிழ்த்தேசிய- அல்லேலூயாகாரர் தினந்தோறும் பிரார்த்தனை செய்தாலும், அமெரிக்க ஆண்டவர் இறங்கி வரப்  போவதில்லை. 

இஸ்ரேல் மட்டும் தான் குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ள ஒரேயொரு நாடு ஆகும். அது தனி நாடாவதை ஆதரிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இஸ்ரேலுக்கு ஒரு புதிய கூட்டாளி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அது தான் இங்கே முக்கியம். ஏற்கனவே, குர்திஷ் படையினருக்கு இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஈரானுடன் பொது எல்லையைக் கொண்டிருப்பதால், அங்கிருந்து ஈரானை வேவு பார்ப்பது இலகு. அது தான் நடக்கப் போகிறது. எதிர்காலத்தில் ஈரானுடன் யுத்தம் வெடிக்குமாக இருந்தால், குர்திஸ்தானில் இருந்து ஊடுருவ முடியும்.

இஸ்ரேல் மட்டுமல்லாது, அமெரிக்காவும் குர்திஸ்தானை தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், ஈராக் அவர்களது கையை விட்டுப் போய் விட்டது. இன்று ஈராக் அரசை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது ஈரான் தான். அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சர்வதேச அரசியல் சூதாட்டத்தில் ஈராக்- குர்திஸ் மக்கள், வல்லரசுகளின் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர். பெஷ்மேர்கா என அழைக்கப் படும் குர்திஸ் இராணுவம், ஏகாதிபத்திய ஒட்டுக்குழுவாகி ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு: 
25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?