Monday, April 30, 2018

சிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு


May 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள். அவர்களுடன் சோஷலிஸ்டுகள், அனார்க்கிஸ்ட்கள் போன்ற பல இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து கொண்டன.

 1886 ம் ஆண்டு, மே 1 அன்று தடைசெய்யப் பட்ட பேரணியை நடத்தியதால், கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்ததுடன், துப்பாக்கிப் சூடும் நடத்தியது. அன்றிலிருந்து இன்று வரையில், எட்டு மணி நேர வேலை உரிமைக்காக மரித்த தியாகிகளின் நினைவாக, உலகம் முழுவதும் மேதினம் நினைவுக்கூரப் படுகின்றது.

1969 ம் ஆண்டு, மே 1, இலங்கை அரசு பௌத்த மதப் பண்டிகையை காரணமாகக் கூறி. மேதினத்தை தடை செய்தது. அந்தத் தடையால் துவண்டு விடாத கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள், யாழ் நகரில் ஒன்று கூடி மேதினப் பேரணியை நடத்த திட்டமிட்டன.

தடைசெய்யப் பட்ட பேரணி என்பதால், இரகசியமாக சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்வது போல ஒன்று கூடினார்கள். செங்கொடிகளை சிறிதாக மடித்து சட்டைக்குள் மறைத்துக் கொண்டு சென்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பேரணி ஆரம்பமானது. (தகவலுக்கு நன்றி: Valliammai வள்ளியம்மை சுப்பிரமணியம் Subramaniam)

அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் நடக்கலாம் என எதிர்பார்த்திருந்த படியால், யாழ் நகரில் பொலிஸ் கெடுபிடி அதிகரிக்கப் பட்டிருந்தது. மேதின ஊர்வலத்தை நகர விடாமல் பொலிஸ் தடுத்து தடியடிப் பிரயோகம் செய்து, பலரைக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

1886 ம் ஆண்டு சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர்களும், 1969 ம் ஆண்டு யாழ் நகரில் இலங்கைத் தொழிலாளர்களும், ஒரே குறிக்கோளுக்காக தான் போராடினார்கள். அதற்குப் பெயர், பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடு. அமெரிக்காவிலும், இலங்கையிலும், அவர்களை ஒடுக்கிய அதிகார வர்க்கமும் ஒன்று தான். அதற்குப் பெயர், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும் வர்க்க உணர்வுகள் மாறுவதில்லை.

*****

யாழ் நகரில் நடந்த மேதினப் பேரணியை ஒழுங்கு படுத்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் கே.சுப்பிரமணியத்தின் நினைவாக அவரது மனைவி வள்ளியம்மை சுப்பிரமணியம் முகநூலில் எழுதிய பதிவு:

மீண்டும் 1969 மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.

“அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. (அத்தோடு உலகின் பல நாடுகளும் தொழிலாளர் உரிமைக்காய் போராடிக்கொண்டிருந்தனர். )

மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 8மணித்தியால வேலையே வேண்டுமென வெண்கொடி ஏந்திய தொழிலாளர்மேல் , அதிகாரவர்கத்தின் ஆணவம் இரத்தம் சிந்தவைத்து , செங்கொடியாக்கியது . ஆனால் இன்றைய அமெரிக்காவில், புரட்டாசி மாத முதல் திங்களே தொழிலாளர் தினம்! நிற்க, பௌத்தவாத அரசியலமைப்புக் கொண்ட இலங்கையில் , 1969 ஆம் ஆண்டு ‘மே’ தினத்தன்றும் இதே போல ‘வெசாக் ‘தினத்தைக் காரணமாக்கி, அம்மேதினத்தைக் கொண்டாடுவதை ஜே ஆர் இன் யூ.என்.பி அரசு தடைசெய்தது. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யாழ்பாணத்தில் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. இக்கதையை நான் , பல தடவைகள் தோழர் மணியம் வாயிலிருந்தும் ,சக தோழர்கள் மூலமும் கேட்டிருக்கிறேன். மீண்டும் அதைப் பகிர நினைக்கிறேன்.

கூட்டத்திற்கும்,ஊர்வலத்திற்குமான வியூகத்தை - தலைமை ஏற்றிருந்த தோழர் கே ஏ சுப்பிரமணியம் வகுத்தார். யாழ் நகரில் , மூன்று திரையரங்குகளும் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன் தியேட்டர் சந்தியில் ( இன்றைய லிங்கம் கூல்பார்) இருந்து ஆரம்பிப்பதாகத் தீர்மானம். முதல் நாளிரவே கொடி பிடிப்பதற்கான கம்புகள் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டது. தேவையான கொடிகள் கைக்குட்டைகள் போல மடித்து சேர்ட், டவுசர்களினுள் மறைத்து வைத்துவிட்டு, தியேட்டரில் படம் முடிந்து வெளிவருவது போலவும் , படத்திற்காய் காத்திருப்போர் போலவும் ஊர்வலத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நண்பர்களுக்கும். புகைப்படம் எடுப்போருக்கும் நிச்சயம் ஊர்வலம் நடைபெறும் என்ற செய்தி சொல்லப்பட்டது. இதை பொலிசாரும் அறிந்து கொள்வர் என்பது அவர்கள் அறிந்ததே. ஆனால் மேலதிக தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டது. வழமைபோல அன்று, மூன்று சிறு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு , எனக்கு நம்பிக்கை சொல்லி அவர் கிளம்பி விட்டார். அரசு -மேதினத்திற்கு அனுமதி அளிக்காத்தால் , சந்திப்பு மட்டுமே நிகழும் என நினைத்தேன். அது யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது. .

குறித்த நேரத்தில் எழுச்சியுடன் ஆரம்பித்த அவ்வூர்வலம், எங்கு ஆரம்பித்தது என்பதைப் பொலீசார் கண்டறிவதற்கு முன்னரே , ஊர்வலம் பிரதான பஸ் நிலையத்தை அடைந்து விட்டது. அதனால் கிலேசமும்,கோபமும் அடைந்த போலீசார் மூர்கத்துடன் கண்ணீர்க்குண்டுகளை வீசித் தாக்கினர் பொலிசாரும் ஊர்வலத்தினரும் .தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். தோழர் மணியம் மிகவும் தடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு , பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர்.

66இல் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் உடல் நொருங்கி மாறிவந்த வேளையில் , மீண்டும் அவர் நொருக்கப்பட்டது ,என்னை நிறையவே பாதித்தது. தலைமைத் தோழர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். மற்றைய தோழர்களின் உணர்வும், அன்புமே அன்று ஆறுதலாக இருந்தது. ஒரு மாதங்கள் கடந்தும் காயங்கள் மாறாத நிலையில் , ஊர்திரும்பிய தோழர் சண் வீட்டில், தோழர் கன்சூர் அவர்களால் பராமரிக்கப்பட்டார். நித்திரையின்றித் தவித்தார்.

அந்நேரங்களின் நினைவுகள், இன்றும் எனக்கு வலிக்கிறது. அவர் வாழ்வு ஐம்பது வருடங்களாக சுருங்கியதற்கு இவையெல்லாம் காரணமோ? போராட்டங்களுக்கும், தாக்குத ல்களுக்கும் ஒளித்து, எந்த உடல் வலிகளும் அற்று அரசியல் பேசியோர் மத்தியில் , நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சேல் என்ற சொல்லுடன் -தோழர் இறுதிவரை வாழ்ந்தார்.

அக்காலத்தில் பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் -ஆயுதப்படை, பொலிஸ்டை, விமானப்டை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச உத்தியோகத்தர்கள் இவர்களிடமே இருந்தது. இவற்றை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்ற மாக்ஸ், லெனினஸ வகுப்புகளில் கூறி, பின் புதிய தோழர்களுடன் இணைந்து, இன்றுவரை தளராது, தயங்காது தொடர இத் தியாகங்களே காரணம். 74% இற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் உள்ள எம்நாட்டில் 70% க்கு மேற்பட்டோர் பௌத்தர்கள்.

அவர்களின் மத உணர்வையும், தொன்றுதொட்டு நடந்துவரும் எழுச்சியையும் சரியாக எப்படிப்ப கையாள்வது என்பது கூடத் தெரியாத, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ், மீண்டும் மக்களுருமைக்கான எழுச்சிக்கு தடைவிதிப்பது எவ்வகையில் நியாயம்? அவரை,இடது சாரிய கொள்கையுடையவர் என பெருமைபேசியோரும் உண்டு. சனாதிபதி தனது பதவிக் காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்தும் செய்யாமல் விட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக அவர்மீது விதிக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தும்...... 

ஹம் என்ன சொல்ல?

*****

Saturday, April 21, 2018

நிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்

நிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்டுள்ள இந்தக் கலவரத்தில், இது வரையில் ஐந்து பேர் கொல்லப் பட்டுள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் இதை ஓய்வூதிய குறைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று செய்தி தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையான பிரச்சினை அதுவல்ல. அது இரண்டு பகைமை கொண்ட வர்க்கங்களின் மோதல் என்ற விடயம், மேற்கத்திய ஊடகங்களால்  திட்டமிட்டு மறைக்கப் படுகின்றது.

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் நடந்த ஜனநாயகப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களின் வாக்குளை வென்று அரசமைத்த FSLN (சன்டினிஸ்டா) கட்சி, மக்கள் நலன் கருதி சில பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டில் தீவிர இடதுசாரிக் கட்சி பெரும்பான்மை வாக்காளர்களால் ஆதரிக்கப் படுவது அரிதானது. அந்தக் கட்சி மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்தத் துணிவது அதை விட அரிதானது. வெனிசுவேலா, பொலீவியா வரிசையில், நிக்கராகுவாவில் அந்த அதிசயம் நடந்துள்ளது.

ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டம் மூலம் அதிகாரத்திற்கு வந்த FSLN என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் சன்டினிஸ்டாக்கள் என்று அழைக்கப் பட்டனர். டானியல் ஒட்டேகா தலைமையிலான FSLN, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக, நிக்கராகுவாவில் பத்தாண்டுகள் சோஷலிச ஆட்சி நடத்தி வந்தது. அப்போது சோவியத் யூனியன், கியூபா ஆகிய பிற சோஷலிச நாடுகளின் உதவியும் கிடைத்திருந்தது.

தொண்ணூறுகளுக்கு பிறகு நடந்த சுதந்திரமான பொதுத் தேர்தலில், மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு அமெரிக்க ஆதரவு இருந்த போதிலும், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியவில்லை. ஒரு பக்கம் பணக்காரர்கள் பெருகுவதற்கும், மறுபக்கம் ஏழைகள் அதிகரிப்பதற்குமே ஜனநாயக தேர்தல் அமைப்பு உதவுகின்றது என்பதை மக்கள் உணர அதிக காலம் எடுக்கவில்லை.

நிகராகுவா ஏற்கனவே ஒரு வறிய நாடாக இருந்த போதிலும், சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு இருந்தது. அது மீண்டும் முதலாளித்துவ நாடான பின்னர், பொதுத் துறைக்கான அரச செலவினம் வெகுவாக குறைக்கப் பட்டது. வரிப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட வேண்டிய அரசு நிறுவனமான INSS என்ற "சமூகப் பாதுகாப்பு நிலையம்" (Institute of Social Security (INSS)), மக்களுக்கு செய்த சேவைகளை விட, அரசியல்வாதிகள் ஊழல் செய்ய உதவியதே அதிகம்.

இன்றைய முதலாளித்துவ கால அவலங்களுடன் ஒப்பிட்டால், கம்யூனிச கடந்த காலம் ஒரு பொற்காலம் என்று மக்கள் உணர்ந்து கொண்டனர். அதனால், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கம்யூனிச கட்சியான FSLN க்கு பெருமளவு வாக்குகள் போட்டு தெரிவு செய்தனர். முந்திய காலத்தில் "கம்யூனிச சர்வாதிகாரி" என்று சொல்லப்பட்ட டானியல் ஒட்டேகா, தற்போது பெரும்பான்மை வாக்குகள் பெற்று மக்கள் ஜனாதிபதியாக தெரிவானார்.

மீண்டும் சன்டினிஸ்டா ஆட்சி வந்தாலும், அவர்கள் சோஷலிச கடந்தகாலத்திற்கு திரும்பிச் செல்வார்கள் என்று அர்த்தம் அல்ல. FSLN தற்போது ஒரு சமூக ஜனநாயகக் கட்சி. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு கிடைக்கும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, தம்மால் முடிந்தளவு சமூக மாற்றங்களை கொண்டு வருவது தான் நோக்கம். முதலாளிகள் தமது வர்த்தகத்தை தொடரலாம். அரசு மக்களுக்கான கடமையை செய்யும்.

வட ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருப்பதைப் போன்ற சமூக பொருளாதாரத் திட்டத்தை தான், இன்று வெனிசுவேலாவும், நிகராகுவாவும் பின்பற்ற விரும்புகின்றன. ஆனால், ஒரு பிரச்சினை. மேற்கு ஐரோப்பாவில் சாத்தியமான திட்டம், இலங்கை, இந்தியா போன்ற மூன்றமுலக நாடுகளில் நடைமுறைச் சாத்தியமில்லை. அது ஏன் என்பதற்கு தற்போது நிகராகுவாவில் நடக்கும் அரச எதிர்ப்புக் கலவரம் ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையில், மேற்கு ஐரோப்பிய அரசுகள் மாதிரித் தான், நிகராகுவாவில் சன்டினிஸ்டா அரசும் நடந்து கொண்டது. அதாவது, பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் முதலாளிகளையும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, ஒரே மேசையில் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு முன்மொழிந்த திட்டம் இது தான். உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளும், தொழிலாளர்களும் தமது வருமானத்தில் குறிப்பிட்டளவு தொகையை சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு (INSS) செலுத்த வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்து வருவது தான். ஆனால், முதலாளிகளின் பங்களிப்பை ஐந்து சதவீதத்தால் (தற்போது 22.5%) அதிகரித்தது தான் அவர்களது சீற்றத்திற்கு காரணம். இதன் விளைவு தான் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம். இதே நேரம், தொழிலாளரின் பங்களிப்பும் சிறிதளவு (6.25% இலிருந்து 7%)கூடியுள்ளது.

வரி அதிகரிப்பின் மூலம், சமூகப் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் தலையிடுவதை தடுப்பதும் அரசின் குறிக்கோளாக இருந்தது. ஏனெனில், அரசு சேவைகளை தனியாரிடமும் கொடுத்ததால் தான், முந்திய அரசாங்கங்கள் ஊழல் செய்ய வசதியாக இருந்துள்ளது. மேலும், சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கான கொடுப்பனவு அதிகரித்தால், எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க முடியும் என்பதும் அரசின் திட்டம். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பாவில் நடப்பதைப் போன்று, மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவிட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இதெல்லாம் நல்ல திட்டம் தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால், முதலாளிகள் அப்படி நினைப்பதில்லை. அரசு மக்களின் வரிப் பணத்தில் ஊழல் செய்வது அவர்களுக்கு சாதகமான விடயம். அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடக் கூடாது. அப்போது தான் பொதுத் துறைகளின் சீர்கேடுகளை காரணமாகக் காட்டி, தனியார் நிறுவனங்கள் நுழைய முடியும். அரசு தனது கடமையை சரிவரச் செய்தால், அது முதலாளிகளின் நலன்களை பாதிக்காதா?

ஓய்வூதியம் குறைக்கப் பட்டது தான் கலவரத்திற்கு காரணம் என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிக்கராகுவாவில் ஓய்வூதியம் பெறும் வயது இப்போதும் அறுபது தான். அது கூட்டப் படவில்லை. (மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே அது 67 வயதாக தீர்மானிக்கப் பட்டு விட்டது.) ஓய்வூதியம் பெறுவோரும் குறிப்பிட்டளவு வரிப்பணம் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்க வேண்டும். மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதியம் பெறுவோரின் பணத்தில் இருந்து சமூகப் பாதுக்காப்பான வரிப்பணம் அறவிடுகிறார்கள். இதனால் முதியோரின் ஓய்வூதியத் தொகை குறைகின்றது. அப்படிப் பார்த்தால், மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதிய குறைப்பை காரணமாகக் காட்டி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்க வேண்டும்.

இன்று கலவரத்தில் ஈடுபடுவோர் இளைஞர்கள், மாணவர்கள். அவர்கள் ஓய்வூதியக் குறைப்பை முன்னிட்டு போராடுவதாக சொல்வது நகைப்புக்குரியது. கலவரம் முதலில் தலைநகரத்தில், மனாகுவா பல்கலைக்கழகத்தில் தான் ஆரம்பமானது. "கம்யூனிஸ்டுகள் ஒன்றுகூடும் இடமாக" கருதப்படும் கலாச்சார நிலையக் கட்டிடம் மாணவ கிளர்ச்சியாளர்களால் தீக்கிரையாக்கப் பட்டது. வீதித் தடையரண்கள் அமைத்து, பொலிசுக்கு எதிராக கற்களை வீசினார்கள். பொலிஸ் பதிலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரங்களை அடக்க முயன்றது. இதுவரையில் ஐந்து அல்லது பத்துப் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இதனால், அடுத்து வரும் நாட்களுக்கும் கலவரங்கள் தொடரும்.

வெனிசுவேலாவில் நடந்த வரலாறு நிக்கராகுவாவில் திரும்பியது. அதாவது, முதலாளிய ஆதரவாளர்களான மத்திய தர வர்க்கத்தினர் தான் அரசுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டனர். சன்டினிஸ்டா ஆதரவு மாணவர்கள், கலவரக் காரர்களுடன் மோதினார்கள். எல்லா இடங்களிலும் கலவரத்தில் ஈடுபடுவோர் முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவாளர்கள் தான். போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் பல இடங்களில் பதுக்கி வைக்கப் பட்டிருந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் சக்தி, முன்கூட்டியே கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருவது தெளிவாகும்.

முன்னொரு காலத்தில், நிகராகுவா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், ஒரு முதலாளித்துவ ஆதரவுப் பத்திரிகை சுதந்திரமாக வெளிவந்து கொண்டிருந்தது. அது எப்போதும் கம்யூனிச எதிர்ப்பு மனநிலையில் இருந்து சன்டினிஸ்டா அரசின் குறைகளை பற்றி எழுதிக் கொண்டிருந்தது. இருப்பினும், ஒரு பத்திரிகையால் கம்யூனிச அரசை அசைக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அப்போது மக்கள் அதிகாரம் இருந்தது. முதலாளிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை. முதலாளிகளால் மக்களை மூளைச்சலவை செய்ய முடியவில்லை.

இன்றைய நிலைமை வேறு. நிகராகுவா பொருளாதாரத்தில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் ஊடகங்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். கலவரங்களை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஐந்து தொலைக்காட்சி நிலையங்களின் ஒளிபரப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக, மேற்குலகு இதை சுட்டிக் காட்டி "கருத்துச் சுதந்திர மறுப்பு", "மனித உரிமை மீறல்" என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும். அவர்கள் முதலாளிகளின் கருத்துக்களை மக்களின் கருத்துக்களாகவும், முதலாளிகளின் உரிமைகளை மக்களின் உரிமைகளாகவும் திரிக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு இந்த வித்தியாசம் புரிவதில்லை.

Wednesday, April 11, 2018

பொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை

அரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 

இது நாங்கள் எந்தளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மலட்டு சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது. மார்க்சியம் அடைய விரும்பும் இலக்கான கம்யூனிச சமுதாயம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், பண்டைய அரசியல் அமைப்பை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

எமக்கு தெரிந்த ஆங்கிலச் சொல்லான "Politics" என்பது உண்மையில் ஒரு கிரேக்கச் சொல். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தில் நாகரீகமடைந்த சமுதாயமான கிரேக்கர்களின் நாடுகள் "Polis" என்று அழைக்கப் பட்டன. போலிஸ் என்றால், தமிழில் ஊர் அல்லது நகரம் என்று அர்த்தம் வரும்.

ஒரு கோயில் அதை சுற்றிய குடியிருப்புகள், அதை சுற்றிய வயல்கள், எல்லையோர காடுகள், மலைகள் என்பனவற்றை உள்ளடக்கியது தான் கிரேக்கர்களின் போலிஸ். ஒரு நகரமயமாக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவுகளை எடுக்கும் செயலுக்குப் பெயர் பொலிட்டிக்ஸ். அதாவது அரசியல் என்ற சொல்லை, நாம் "நகரியல்" என்று இன்னொரு பெயரில் அழைக்கலாம்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுஸ்தலத்தை, தமிழில் "தேவாலயம்" என்று மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது ஆங்கிலத்தில் "Church" என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ஆங்கில சொல்லான சர்ச், ஜெர்மன் சொல்லான Kirche என்பதில் இருந்து வந்தது. அதன் மூலம் "Kuriake" என்ற கிரேக்க சொல். அதன் அர்த்தம் ஆண்டவரின் இருப்பிடம். (தமிழில்: ஆலயம் அல்லது கோயில்) ஆனால், ஆதி கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை! அவர்கள் "Ekklesia" என்ற சொல்லை பாவித்தார்கள். இன்றைக்கும் கிரேக்க கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பாவிக்கிறார்கள்.

எக்லேசியா என்றால் சபை என்று அர்த்தம் வரும். அதாவது முன்னர் குறிப்பிட்ட போலிஸ் சமூக உறுப்பினர்கள், பொலிட்டிக்ஸ் செய்யுமிடத்தின் பெயர் தான் எக்லேசியா. "பொது மக்கள் கூடுமிடம்" என்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த சொல், ஆண்டவனின் சந்நிதானமாகி, இன்று அரசு என்ற கட்டமைப்பாகி உள்ளது.

அரசு என்ற ஸ்தாபனத்திடம் இருந்து அரசியலை மீட்டெடுப்பதே, இன்றுள்ள மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மேட்டுக்குடி அரசியலை, மக்கள் அரசியலாக்க வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் எந்த அர்த்தத்தில் அரசியலை பயன்படுத்தி வந்தார்கள் என்பதை இன்றுள்ள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிச நாடு ஒன்றை உருவாக்குவதற்கான கோட்பாடு, கார்ல் மார்க்ஸ், லெனினிடம் இருந்து தொடங்கியதாக, இன்றைக்கும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, 1516 ம் ஆண்டு, Sir Thomas More என்ற ஆங்கிலேயர், "Utopia" என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல், நவீன கம்யூனிச சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல மனிதநேயவாதிகள் அந்த நூலில் வர்ணிக்கப் பட்டதைப் போன்ற நாடொன்றை உருவாக்க வேண்டுமென கனவு கண்டனர்.

கிரேக்க மொழியில் "இல்லாத ஓர் இடம்" என்ற அர்த்தம் வரும் உத்தொபியா என்ற கனவு தேசமான ஒரு தீவு, எல்லோருக்கும் நீதி, சமத்துவம், செல்வச் செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருக்கும். அனைவருக்கும் தேவையான அளவு உணவு, உறையுள் கிடைக்கும். எவருக்கும் தனிப்பட்ட சலுகையோ, அல்லது அந்தஸ்தோ வழங்கப் பட மாட்டாது.

தனி உடைமை இருக்காது. ஆண்களும், பெண்களும் சமமாக வேலை செய்வார்கள். ஏதாவது தொழிலில் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமிராது. ஒவ்வொருவரும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு சுதந்திரம் இருக்கும். மக்கள் சமாதானமாக வாழ்வார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுவதற்கு யாரும் கிடையாது.

தாமஸ் மூர் வாழ்ந்த காலத்தில், இவ்வாறான சிந்தனை வெறும் கனவு மட்டுமே. அத்தோடு, அவர் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர் என்பதால், சில கிறிஸ்தவ நற்பண்புகளையும் குறிப்பிட்டிருந்தார். 19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்கள் சிலர், உத்தொப்பியா போன்றொதொரு நீதியான, சமத்துவமான சமுதாயத்தை, நிஜ உலகில் உருவாக்கும் சாத்தியம் பற்றி சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் அந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 


கம்யூனிசம் என்பது "கார்ல் மார்க்ஸ், லெனினுக்கு பிறகு உருவான கொள்கை" என்று சில "படித்தவர்கள்" கூட தவறாக நினைக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்றப் புரட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை சிந்தனை, ஒரு அரசியல் இயக்கமாக பரிணமித்திருந்தது.

இங்கிலாந்து மன்னராட்சிக்கு எதிராக, குரொம்வெல் தலைமையில் பாராளுமன்றம் புரட்சி செய்தது. அது இங்கிலாந்து குடியரசாவதற்கான பாராளுமன்றவாதிகளின் புரட்சி மட்டுமல்ல. கத்தோலிக்க மத மேலாதிக்கத்திற்கு எதிரான, புரட்டஸ்தாந்து அடிப்படைவாதிகளின் புரட்சியாகவும் இருந்தது.

அந்தப் புரட்சிகர காலகட்டத்தில், Diggers என்று அறியப்பட்ட அமைப்பினர், நிலங்களை பொதுவுடமையாக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர். அதனால் விவிலிய நூலில் உள்ள சமநீதிப் போதனைகளை மேற்கோள் காட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர்.

*******

//கேள்வி: கம்யூனிச முறையிலான சமுதாய அமைப்பு, குடும்பத்தின் மீது என்ன செல்வாக்குச் செலுத்தும்?

பதில்: ஆடவர், மகளிர் இருபாலினருக்கும் இடையிலான உறவு, அதிலே ஈடுபட்ட இரு நபர்கள் சம்பந்தப் பட்டதும், சமுதாயத்தின் தலையீடுக்கு அவசியமில்லாத, முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக ஆக்கும்.

அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம், அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. குழந்தைகளுக்கு சமுதாய முறையில் கல்வி போதிக்கிறது. தனியார் சொத்துடைமையால் நெறியாக்கம் செய்யப்பட்டு வந்த, மனைவி அவளது கணவனை சார்ந்திருப்பது, குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருப்பது எனும் அடிக்கல்களை தகர்த்தழிக்கிறது.

கம்யூனிசத்தின் கீழ் மனைவிகள் பொதுவாக்கிக் கொள்ளப் படுவதாக, ஒழுக்க நெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்பும் கூக்குரலுக்கு அளிக்கப்படும் பதிலாகும் இது. மனைவிகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் உறவு முற்றிலும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உரியது. அது இன்றும் விபச்சாரம் என்ற வடிவில் நிலவி வருகின்றது.

விபச்சாரம் தனியார் சொத்துடமையுடன் சம்பந்தப்பட்டது. கம்யூனிச முறையிலான அமைப்பு, மகளிரை பொதுவாக்கிக் கொள்வதை நிலைநாட்டுவதற்கு மாறாக, அதற்கு முடிவு கட்டுகிறது.//

- பி. எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Sunday, April 08, 2018

"டட்லி மசாலா வடை சுட்ட கதை" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்

பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் எடுத்துக் காட்டி, கம்யூனிசம் என்பது ஒரு பூச்சாண்டி என்று அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல.

அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் ஈடுபடுகின்றது.

ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், கம்யூனிசமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாக்கி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. LTTE என்ற புலிகள் கூட, ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள்.

அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம்.

ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர்.

அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது " சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஈழத்தமிழர்கள் "அரசியலற்ற விலங்குகள்" என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் இடதுசாரி, வலதுசாரி பிரிவினைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதும் வலதுசாரி அரசியல் தான். தொண்ணூறுகளில் உருவான, தோற்றவர்களுக்கு (இடதுசாரி) எதிரான வென்றவர்களின் (வலதுசாரி) மேலாதிக்க அரசியல்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் இடதுசாரி தலைவர்களை பற்றி கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். ஐம்பதுகளில் உருவான, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன, அன்றைய காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வாக்கோடு இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக தோன்றிய வலதுசாரிக் கட்சிகள்.

"சிங்களவர்களில் இடதுசாரிகள் உண்டு... தமிழர்களில் கிடையாது..." என்ற தவறான கருத்து, தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் காலத்தில் தான் உருவாக்கப் பட்டது. சிங்கள வலதுசாரிக் கட்சிகளும், சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய இதே மாதிரியான பிரச்சாரம் செய்து வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழர்களில் இடதுசாரிகள் இருக்கலாம். ஆனால், "சிங்களவர்கள் இடதுசாரி/வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்ட விலங்குகள்" என்பது அவர்களது வாதம்.

புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஒரு முக்கியமான உண்மையை வேண்டுமென்றே மறைப்பார்கள். எப்போது புலிகள் தமிழீழ அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்களோ, அப்போதே அங்கே இடதுசாரி, வலதுசாரி பிரிவினையும் தோன்றி விட்டது. அரசியல் பிரிவில் வெளிப்படையாக தெரிந்தது. போராளிகள் மத்தியில் மறைமுகமாக இருந்தது.

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் புலிகளை ஆதரித்து வந்த படியால், அவர்களது பிரசுரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விநியோகிக்கப் பட்டன. ஈழத்தில் புதிய தலைமுறையினர் மத்தியில், இடதுசாரி, பெரியாரிய கருத்துக்கள் பரவுவதற்கு, தவிர்க்க முடியாமல் புலிகளும் ஒரு காரணமாக இருந்தனர்.

எண்பதுகளில் புலிகளுக்கு ஆதரவான பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட தளிர் தொடர்ந்தும் இடதுசாரி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளியீடுகள் அடிக்கடி பிடல் காஸ்ட்ரோவையும், கியூப புரட்சியையும் மேற்கோள் காட்டி எழுதி வந்தன. யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர், போராளிகள், ஆதரவாளர்களின் மனோதிடத்தை உயர்த்துவதற்கு, லெனின்கிராட் முற்றுகை பற்றிய தகவல்கள் உதவின.

தமிழ் தேசியமும், இடதுசாரியமும் முரண்பாடான கொள்கைகள் அல்ல.

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன. இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: India Responsible for Dividing Sri Lanka, Training LTTE Terrorists - JR former SL President 1985) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

Friday, April 06, 2018

"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்


"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்

இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம். 
  • - "இவர் யார்?" 
  • - "சிங்கள - பௌத்த பேரினவாதி." 
  • - "இவர் இங்கே என்ன செய்கிறார்?" 
  • - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
  • - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
  • - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"

இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
"படம் பார், பாடம் படி!"

சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.

உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?

சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.

இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.

போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.

ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
  • "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
  • "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
  •  "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
  •  "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"


இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.

இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.

இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

புத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு? க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.

படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan

பிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.// 


Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

Monday, April 02, 2018

இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா!



ஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அல்பேனியா, ஒரு நாஸ்திக நாடானது எப்படி? அதற்குக் காரணம், அந்நாட்டின் கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷாவும், அவரது விட்டுகொடாத சோஷலிச  அரசியல் கோட்பாடுகளும் ஆகும்.

1912 ம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் வரலாற்றில் முதல் தடவையாக அல்பேனியா என்ற தேசம் உருவாகி இருந்தது. பண்டைய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாகவும், பிற்காலத்தில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாகவும் இருந்து வந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலத்தில் பரவிய கிறிஸ்தவ மதம், அல்பேனியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி இருந்தது.

மேற்கெல்லையில் இத்தாலி இருப்பதால் அங்கிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவமும், கிழக்கெல்லையில் கிரேக்கம் இருப்பதால் அங்கிருந்து ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவமும் தாக்கம் செலுத்தின. பதினாறாம் நூற்றாண்டில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட நேரம், பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

இந்த வரலாற்றுப் பின்புலம், இன்றைக்கும் அல்பேனிய சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றது. இன்றைய அல்பேனிய மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியராகவும், அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்களாகவும், குறைந்தளவில் ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். "பொதுவான" (வேறுபாடுகள் உண்டு) அல்பேனிய மொழி மட்டுமே, அவர்கள் அனைவரையும் ஒரே தேசிய இனமாக ஒன்றிணைத்தது.

என்ன தான் தேசிய இனப் பெருமிதம் பேசினாலும், இறுதியில் அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகள் தான். முதலாம் உலகப்போர் முடிவில், அல்பேனிய மொழி பேசும் மக்களில் அரைவாசிப் பேர், பிற நாடுகளில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். அவ்வாறு தான், கொசோவோ செர்பியாவுக்கு சொந்தமானது. இன்னொரு பிரதேசம் மாசிடோனியாவுக்கு கொடுக்கப் பட்டது. மொன்டிநீக்ரோ, கிரீஸ் ஆகியனவும் தமக்கென சிறிய துண்டுகளை பிடுங்கிக் கொண்டன.

அல்பேனியா என்ற தேசியம் தோன்றிய காலத்தில் தான் என்வர் ஹோஷாவும் பிறந்தார். அந்தக் காலத்தில் அல்பேனியாவில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள், எழுதப் படிக்க தெரியாத ஏழைகளாக இருந்தனர். ஓட்டோமான் சுல்த்தானின் ஆட்சிக் காலத்தில், அல்பேனிய இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒரு வசதியான மேட்டுக்குடி வர்க்கம் உருவாகி இருந்தது. அவர்கள் நிலவுடமையாளர்களாகவும், வணிகர்களாகவும், அரச ஊழியர்களாகவும் இருந்தனர். ஆகையினால், என்வர் ஹோஷாவும் ஒரு இஸ்லாமிய வணிகரின் மகனாகப் பிறந்ததில் ஆச்சரியம் இல்லை.

1930ம் ஆண்டு, என்வர் ஹோஷா உயர் கல்வி நிமித்தம் பிரான்ஸிற்கு சென்றார். பாரிஸ் நகரில் தங்கிப் படிக்கும் காலத்தில் அல்பேனிய தூதுவராலயத்தில் செயலாளராக வேலை செய்தார். அந்தக் காலத்தில் பிரெஞ்சு கலாச்சாரம், இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. பிரான்ஸின் புரட்சிகரமான கடந்தகாலமும் அவரைக் கவர்ந்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பின்னர், மார்க்ஸிய தத்துவங்களை கற்றுத் தெளிவதில் ஆர்வம் காட்டிய என்வர் ஹோஷா, ஒரு கட்டடத்தில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி விட்டு தாயகம் திரும்பினார்.

1939 ம் ஆண்டு, முசோலினியின் பாசிச இத்தாலி இராணுவம், அல்பேனியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அப்போது, இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கியது. அந்த நேரத்தில், தலைநகர் டிரானாவில் ஒரு புகையிலைக் கடை தொடங்கிய என்வர் ஹோஷா, அதை விடுதலை வீரர்கள், குறிப்பாக அல்பேனிய கம்யூனிஸ்டுகள் இரகசியமாக கூடி சந்திக்கும் இடமாக மாற்றினர்.

என்வர் ஹோஷாவுக்கு முன்னரே, அல்பேனியாவில் நிறைய மார்க்சியவாதிகள் இருந்தனர். குறிப்பாக மெஹ்மெட் ஷேகு என்ற அல்பேனிய கம்யூனிஸ்ட், ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் பங்கெடுத்திருந்தார். அத்தகைய கள அனுபவம் காரணமாக, அன்று அல்பேனியாவில் இரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையின் தளபதியாக பொறுப்பேற்றார். என்வர் ஹோஷா, மெஹ்மெட் ஷேகு ஆகியோரின் இராணுவ தந்திரோபாயம் காரணமாக, கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையணிகள் போரில் வெற்றி பெற்று முன்னேறின.

இரண்டாம் உலகப்போரில், ஒரு கட்டத்தில் பாசிச இத்தாலி பல முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலவீனமடைந்திருந்தது. அப்போது நாஸி ஜெர்மனி உதவிக்கு வந்தது. ஆகையினால், அல்பேனிய கெரில்லாக்கள் நாஸி ஜெர்மன் படையினரையும் எதிர்த்துப் போரிட வேண்டி இருந்தது. ஒரு மலைநாடான அல்பேனியாவில் எந்த வளமும் இல்லையென்பதால், அங்கு போரிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்த ஜெர்மன் படைகள் யூகோஸ்லேவியாவில் கவனத்தை குவித்தன. அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, கம்யூனிச கெரில்லாக்கள் அல்பேனியாவை தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், பெரும்பாலான கிழக்கைரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நேரத்தில், யூகோஸ்லேவியா, பல்கேரியா, அல்பேனியாவை இணைத்து "பால்கன் சோஷலிச குடியரசு" அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டன. அனேகமாக, மிகப் பெரிய நாடான யூகோஸ்லேவியாவின் உள்நோக்கம் குறித்து அதிருப்தி உண்டாகி இருக்கலாம்.

இதற்கிடையே, ஸ்டாலினுக்கும், டிட்டோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்து, யூகோஸ்லேவியா சோவியத் ஆதிக்கத்தில் இருந்த Cominform அமைப்பில் இருந்து வெளியேறியது. அந்தத் தருணத்தில் என்வர் ஹோஷா ஸ்டாலினை ஆதரித்தார். ஸ்டாலின் மரணமடையும் வரையில், சோவியத் யூனியனின் உதவி அல்பேனியாவுக்கு கிடைத்து வந்தது.

அந்தக் காலகட்டத்தில், "டிட்டோயிஸ்டுகள்" என்று குற்றம் சாட்டி பலர் கைது செய்யப் பட்டனர். கட்சியின் தலைமையில், ஹோஷாவின் வலதுகரமாக இருந்த கோசி ஹோசே கூட அந்தக் களையெடுப்புகளுக்கு தப்பவில்லை. யூகோஸ்லேவிய அதிபர் டிட்டோவிடம், அல்பேனியாவையும் சேர்த்து யூகோஸ்லேவிய சமஷ்டிக் குடியரசு அமைக்கும் நோக்கம் இருந்தது. அல்பேனியாவிலும் சிலர் அந்தத் திட்டத்தை ஆதரித்திருந்தனர்.

ஹோஷாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான நல்லுறவு, அல்பேனியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது. ஸ்டாலினைப் போன்று, ஹோஷாவும் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சோவியத் உதவியுடன் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. ஒரு காலத்தில் விவசாயம், மீன்பிடியை மட்டுமே நம்பியிருந்த அல்பேனியா, பதினைந்து வருடங்களில் தொழிற்துறை வளர்ச்சி கண்ட நாடாக மாறியது.

1957ம் ஆண்டு தான், அல்பேனிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பல்கலைக்கழகம் உருவானது. இலவசக் கல்வி, நாடு முழுவதுமான பொதுக் கல்வி காரணமாக, எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைக்கப் பட்டது. பதினைந்து வருடங்களில் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கை 85 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்தது.

அதே நேரம், பெண்களின் நிலைமையும் மேம்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முந்திய அல்பேனியாவில், பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு மனைவி கணவனின் உடைமையாக கருதப் பட்டாள். "ஒரு பெண் கழுதையை விட கடுமையாக வேலை செய்ய வேண்டும்" என்ற பழமொழியும் இருந்தது. கம்யூனிஸ்டுகள் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்கவும், வேலை செய்யவும் அனுமதித்தனர்.

ஸ்டாலின் இறந்த பின்னர், அல்பெனியாவுக்கும் சோவியத் யூனியனுக்குமான உறவு சீர்குலைந்தது. புதிதாக பதவியேற்ற குருஷேவ் வாயளவில் கம்யூனிசம் பேசினார். ஆனால், செயலளவில் ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதியாக நடந்து கொண்டார். ஸ்டாலின் காலத்தில் கம்யூனிச நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தோழமை என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. அதனால் தான், எந்த வளமும் இல்லாத பின்தங்கிய நாடாக கருதப் பட்ட அல்பேனியா தொழிற்துறை வளர்ச்சி காண முடிந்தது.

குருஷேவ், அல்பேனியாவை ஒரு சோவியத் காலனியாக நடத்த விரும்பினார். அல்பேனியா, மத்திய தரைக் கடலை அண்டிய வெப்ப மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால், அங்கு பழங்களும், காய்கறிகளும் பெருமளவில் உற்பத்தி செய்து, சோவியத் யூனியனுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்குப் பதிலாக சோவியத் யூனியனிடம் இருந்து எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யலாம் என குருஷேவ் ஆலோசனை கூறினார்.

குருஷேவின் காலனியவாத கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த என்வர் ஹோஷா, சோவியத் யூனியனுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொண்டார். அதற்குப் பதிலாக மாவோவின் சீனாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். சீன உதவியுடன் மிகப்பெரிய அணைக்கட்டுகள், புனல் மின்சார நிலையங்கள் கட்டப்பட்டாலும், ஸ்டாலின் காலத்து தொழிற்துறை வளர்ச்சியை எட்ட முடியவில்லை. எண்பதுகளில் சீனாவில் டென்சியோபிங் பதவிக்கு வந்த பின்னர் சீன உறவும் துண்டிக்கப் பட்டது.

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், உலகில் எந்தவொரு நட்பு நாடும் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்ட அல்பேனியாவில், மீண்டும் திருத்தல்வாதிகள், டிட்டோயிஸ்டுகள் தலையெடுக்கலாம் என ஹோஷா அஞ்சினார். அந்தக் காலத்தில் மாவோவை விட்டால் வேறு நண்பனும் இல்லை. ஸ்டாலின் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் பல்வேறு தளங்களிலும் தொடர வேண்டும் என்று மாவோவும், ஹோஷாவும் கருதினார்கள். மாவோவின் சீனாவில் அது கலாச்சாரப் புரட்சியாக வடிவமெடுத்தது. ஹோஷாவின் அல்பேனியாவில் நாஸ்திகப் புரட்சியாக வடிவமெடுத்தது.

1967 ம் ஆண்டு, அல்பேனியா உலகின் முதலாவது நாஸ்திக நாடாக பிரகடனம் செய்யப் பட்டது. அல்பேனிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொது இடங்களிலும் மதம் இல்லாதொழிக்கப் பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இழுத்து மூடப் பட்டன. சில குறிப்பிட்ட பழம்பெருமை வாய்ந்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் அருங்காட்சியமாக மாற்றப் பட்டன. எஞ்சியவை விளையாட்டுத் திடல்களாக அல்லது கால்நடை வளர்க்கும் இடங்களாக மாற்றப் பட்டன.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதகுருக்கள் யாராவது எதிர்ப்புக் காட்டும் பட்சத்தில், கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்கள் மதத்தை துறந்து சாதாரண மனிதர்களாக வாழ்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மதச்சார்பற்ற பெயர்கள் வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப் பட்டது. அவற்றில் பல மொழி சார்ந்த பெயர்களாகவும் இருந்தன.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில், பொது உணவுச் சாலைகளில் பரிமாறப் பட்ட உணவில் பன்றி இறைச்சி சேர்த்துக் கொள்ளப் பட்டது. அல்பேனியாவில் இன்றைக்கும் பல "இஸ்லாமியர்கள்" எந்தத் தயக்கமும் இன்றி பன்றி இறைச்சி சாப்பிடுவதைக் காணலாம். இன்று அல்பேனியா சோஷலிச நாடல்ல. ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாடு. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

எண்பதுகளின் என்வர் ஹோஷா இறந்த பின்னர் நாஸ்திக நாடு கொள்கையும் கைவிடப் பட்டது. மீண்டும் மத வழிபாட்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு சுதத்திரம் கிடைத்தது. தொண்ணூறுகளில், அது முதலாளித்துவ நாடான பின்னர், சவூதி அரேபிய நிதி உதவியுடன் பல புதிய மசூதிகள் கட்டப் பட்டன. இருந்த போதிலும், இளையோர் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. பெரும்பான்மையான அல்பேனியர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணம் தேடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

அல்பேனியாவை நீண்ட காலத்திற்கு ஒரு நாஸ்திக நாடாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு மக்களின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும். அதற்கான காரணிகள் எவை? துருக்கி- ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில், அல்பேனியர்களுக்கு மத அடையாளம் மட்டுமே இருந்தது. அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் "துருக்கியர்கள்" என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் "ரோமர்கள்" என்றும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் "கிரேக்கர்கள்" என்றும் அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய அல்பேனிய மொழி ஒரு அடையாளமாக இருக்கவில்லை.

19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய மொழித் தேசியவாதக் கோட்பாடுகள் அல்பேனியாவிலும் எதிரொலித்தன. அப்போது மொழி அடிப்படையில் அல்பேனியர் என்ற தேசிய இனம் (புதிதாக) உருவானது. இந்த தேசிய இன அடையாளம் வளர்ச்சி அடைந்த நேரம், மத அடையாளம் கைவிடப் பட்டது. மேலும் பெரும்பான்மை அல்பேனியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும் அவர்களே இருந்தனர்.

அல்பேனிய நிலப்பிரபுக்கள் மத நிறுவனங்களையும் தமக்கு சார்பாக வளைத்துப் போட்டிருந்தனர். அப்போதே அல்பேனிய மக்களின் மனதில் மத நிறுவனங்கள் குறித்த நல்லெண்ணம் இருக்கவில்லை. அதே நேரம், துருக்கி சாம்ராஜ்யவாதிகளும் அல்பேனிய நிலப்பிரபுக்களை ஆதரித்தனர். அத்தகைய பின்னணியில் தான் அல்பேனிய தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போதே அல்பேனிய மக்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருந்தது.