Thursday, November 26, 2020

மாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்!

 

கம்யூனிசம் என்பது கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல. உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் இருந்த, ஆதிகால கம்யூனிச சமுதாயங்கள் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவை சிலநேரம் ஏதாவதொரு மதம் சார்ந்தும் இருந்திருக்கலாம்.

 பொதுவாக உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் எதோ ஒரு கட்டத்தில் வர்க்கப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கு மாறாக, வர்க்க பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை போதித்த ஒரு மதம் வரலாற்றில் இருந்துள்ளது. ஈரானில் தோன்றிய மாஸ்டாயிசம் என்ற கம்யூனிச மதம் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். ஆதி கால கிறிஸ்தவர்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் வாழ்ந்தனர். இருப்பினும் கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதும், அது அரச மதமாகியது. அதனால் கிறிஸ்தவம் போதித்த சமத்துவ கொள்கைகள் கைவிடப் பட்டு, கிறிஸ்தவ மதமும் ஒரு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாக மாறியது. 

பண்டைய ஈரானில் நிலவிய சொராஸ்டிரிய மதத்தின் பல தத்துவங்கள் இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஈரானிய சாம்ராஜ்யத்தின் அரச மதமாகவும் சொராஸ்டர் மதம் இருந்து வந்தது.


ஈரானில் இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்புகள் நடக்கும் வரையில், அங்கு சசானிய அரச வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களும் சொராஸ்திரிய மதத்தை தான் பின்பற்றி வந்தனர். கி.பி. 473 முதல் 531 வரை ஈரானை ஆண்ட சசானிய பரம்பரையை சேர்ந்த காவாத் மன்னனின் காலத்தில் ஒரு புதிய கம்யூனிச மதம் தோன்றியது. அதை தோற்றுவித்த மாஸ்டாக் என்ற மதகுருவின் பெயரால் அது மாஸ்டாகிசம் என்று அழைக்கப் பட்டது. 


உண்மையில் மாஸ்டாக் கூட ஒரு சொராஸ்திரி மதகுரு தான். அவரது போதனைகள் வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. "ஆதி கால கம்யூனிசம்" என்று சொல்லத்தக்க பொதுவுடைமைக் கோட்பாடுகளை மதக் கருத்துக்களாக போதித்து வந்தார். அவரது போதனைகளால் பெருமளவு மக்கள் கவரப் பட்டனர். 


மாஸ்டாக் போதனைகளின் படி, கடவுள் இந்தப் பூமியை அனைத்து மனிதர்களுக்கும் படைத்துள்ளார். பூமியில் உள்ள செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். இருப்பினும் வலிமை படைத்த தீயவர்கள், வலிமை குறைந்த நல்லவர்களை அடக்கி ஒடுக்கி அனைத்து செல்வங்களையும் தாமே அனுபவிக்கத் தொடங்கினார்கள். இதனை மாஸ்டாக் இருமைவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். 

இத்தகைய இருமைக் கோட்பாடு (Dualism) இன்றும் பல மதங்களில் உள்ளது. உதாரணத்திற்கு கிறிஸ்தவ மதத்தில் அது ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டம் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போராட்டம், அதாவது ஜிகாத் என்று இன்னொரு விதமாக விரிவான விளக்கம் கொடுக்கிறது. 


இருமைக் கோட்பாடு, ஏற்கனவே ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு மாஸ்டாக் சோஷலிச விளக்கம் கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உலகில் தீமைகள் நடப்பதற்கான ஐந்து காரணிகள் என்று மாஸ்டாக் குறிப்பிடுவதும் சோஷலிச கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அவர்கள் அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும், அல்லது வெளிச்சத்திற்கும் இருட்டுக்கும் இடையிலான போராட்டம் என்பார்கள். 


மாஸ்டாக் முக்கியமாக ஒரு வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை போதித்தார். அனைவருக்கும் சமமான உரிமைகள், மற்றும் சமமான நீதி வழங்கப் பட வேண்டும் என்றார். மேலும் சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவாக்கப் பட வேண்டும், தனியுடைமை ஒழிக்கப் பட வேண்டும் என்பது பிரதானமான போதனையாக இருந்தது. கடவுள் வளங்களை அனைவருக்கும் சமமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கைத் தவிர மேலதிகமாக எடுத்துக் கொள்ள ஆசைப் படக் கூடாது. இருப்பினும் பலமுள்ளவர்கள், பலவீனமானவர்களிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுத்து தமக்கென சொந்தமாக்கி உள்ளனர். பணக்காரர்கள் தமது பங்கிற்கு மேற்பட்ட செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


இந்த இடத்தில் பெண்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போதனையை காண முடிகிறது. மாஸ்டாக்கிய மதத்தில் சுதந்திரமான காதல் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டிருந்தன. அத்துடன் பலதார மண முறை கடுமையாக எதிர்க்கப் பட்டது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் பலதார மணம் சர்வசாதாரணமான விடயமாக இருந்தது. ஈரானும் அதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டாக் அதையும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதாவது செல்வந்தர்கள் மட்டுமே பல பெண்களை மணம் முடிக்கிறார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்களும் சொத்துக்களாக கருதப் பட்டனர். ஒரு வர்க்க ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தில் பணக்காரர்கள் பெண்களையும் தமக்குள் பகிர்ந்து கொள்வதால், ஏழைகள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை போதித்தது. இஸ்லாம் நான்கு மனைவியர் மட்டுமே என்று சட்டம் போட்டு கட்டுப் படுத்தியது. ஆனால் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பலதார மணத்தை வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டன. 


சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஐந்து பிசாசுகள் காரணம் என்பது ஒரு மாஸ்டாக் போதனை. பொறாமை, கெட்ட எண்ணம், பழிவாங்கும் உணர்வு, தேவை, பேராசை ஆகிய ஐந்து பிசாசுகள் மனிதனை தீய வழியில் கொண்டு செல்கின்றன. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சமூகப் புரட்சி (சோஷலிசப் புரட்சி) அவசியம். அந்த வகையில் கார்ல் மார்க்ஸ் போன்ற சோஷலிச அறிஞர்கள் உலகில் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாஸ்டாக் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அன்று பல இலட்சக் கணக்கான ஈரானியர்கள் மாஸ்டாக்கின் சமத்துவ கொள்கைகளால் கவரப் பட்டு புதிய மதத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தமது சொத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு கம்யூனிச சமுதாயமாக வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மன்னன் காவாத் புதிய மதத்தை தழுவிக் கொள்ளும் அளவிற்கு பெரும்பான்மை மக்கள் மாஸ்டாகிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


இருப்பினும் அந்நாட்டில் பிற மதங்களை, குறிப்பாக அரச மதமான சொராஸ்திரிய மதத்தை பின்பற்றுவோரும் வாழ்ந்தனர். குறிப்பாக மேட்டுக்குடியினர் தனியுடைமையை ஏற்றுக் கொண்ட சொராஸ்திரிய மதத்திற்கு விசுவாசமாக இருந்தனர். இந்த சொத்துடைமை வர்க்கத்தினர், சொராஸ்திரிய மதகுருக்களுடன் சேர்ந்து புதிய கம்யூனிச மதத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களுடன் முடிக்குரிய இளவரசன் கொஸ்ரோவ் அனுஷீர்வனும் சேர்ந்து கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனையில் நடக்கவிருக்கும் விருந்துக்கு வருமாறு மாஸ்டாக் மதகுருக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அது தமக்கு வைக்கப் பட்ட பொறி என்பதை அறியாமல் சென்ற மாஸ்டாக் மதகுருக்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர்.
 

அந்த சம்பவத்திற்கு பின்னர், நாடு முழுவதும் மாஸ்டாக் மத நம்பிக்கையாளர்கள் வேட்டையாடப் பட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். பலர் உயிரோடு புதைக்கப் பட்டனர். முன்பு மாஸ்டாக்கிய மதத்தை தழுவியிருந்த மன்னன் காவாத், அன்று நடந்த சதிப்புரட்சி காரணமாக வெளியேற்றப் பட்டான். மூன்று வருடங்களுக்கு பின்னர் திரும்பி வந்த மன்னன் மாஸ்டாக் மதத்தை கைவிட்டு விட்டு, மறுபடியும் சொராஸ்திரிய மதத்தை பின்பற்றினான். அத்துடன் அவனே மாஸ்டாக் இனப்படுகொலையை முன்னின்று நடத்தினான். 


மாஸ்டாக் மதம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டு விட்டன. அதனால் இன்று வரை மாஸ்டாக் மதம் பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாது. உண்மையில் மாஸ்டாக் மதத்தின் எதிரிகள் எதிர்மறையாக எழுதி வைத்த தகவல்களில் இருந்தே, அது சம்பந்தமான விபரங்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு, மாஸ்டாக்கிய அழித்தொழிப்புக்கு பிறகு அந்நாட்டில் மீண்டும் தனியுடைமை வைத்திருக்கும் உரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. 


இருப்பினும் மாஸ்டாகிய மதம் முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஈரான் இஸ்லாமியமயமாகிய பின்னரும் அவர்கள் பல்வேறு பெயர்களில் சிறு குழுக்களாக மாஸ்டாக் மதத்தை பின்பற்றினார்கள். மசாக்கியே, கொராமியே, கொராம் டினியே, சொர்க் ஜமேகான், செபித் ஜமேகன் என்று பல பெயர்களில் அழைக்கப் பட்டனர். காலப்போக்கில் அவர்களும் இஸ்லாமியராக மாறி விட்டாலும், சமத்துவ கொள்கைகளை கைவிடவில்லை. ஷியா- இஸ்லாத்தில் சில பிரிவுகள் சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. அத்துடன், இன்றைக்கும் ஈரானில் ஏராளமான தீவிர மார்க்சிய- லெனினிசவாதிகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு வகையில் மாஸ்டாக் கம்யூனிசத்தின் பாரம்பரியமாகவும் கருதலாம். 


இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரேபியர்கள் மத்தியில் சோஷலிச அல்லது கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுவோரை "மாஸ்டாக் பெர்சியர்கள்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது குறித்து எல்லோருக்கும் தெரியாது என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்ககளில் அவ்வாறு குறிப்பிடப் படுவதுண்டு. 

 

- கலையரசன்

25-11-2020

 

இதே கட்டுரை யூடியூப் காணொளியாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Tuesday, November 24, 2020

கம்யூனிச சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த புரட்சிக் கதை!

முன்னொரு காலத்தில் வைகையாறு பெருக்கெடுத்து ஓடியதால் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அதுவரை காலமும் குடிமக்களின் துன்பங்களை கண்டுகொள்ளாத கொடுங்கோலனான மன்னன் அரிமர்த்தனபாண்டியன் தனது அரண்மனைக்கே ஆபத்து என்றவுடன் அதை முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரழிவாக கருதினான்.  ஏற்கெனவே வெள்ளம் பல கிராமங்ளை அழித்து பல இலட்சம் மக்கள் பலியானார்கள்.

வெள்ளம் மன்னரின் மாளிகைக்கு வருமுன் தடுப்பதற்காக, அரிமர்த்தன பாண்டியன் வைகை நதிக்கரைகளில் மண் அணை கட்ட உத்தரவிட்டான். அதற்காக பாண்டிய நாட்டின் அத்தனை குடி மக்களையும் கட்டாய வேலை வாங்கினான். நோயாளிகள், முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோருக்கும் கரையை செப்பனிட்டு மண் அணை கட்டுவதற்காக ஆளுக்கொரு பகுதி ஒதுக்கப் பட்டது. 


வறுமை காரணமாக பிட்டு விற்று பிழைத்து வந்த வந்தியம்மை என்ற மூதாட்டிக்கும் வைகை நதிக்கரையில் மண் அணை கட்டும் வேலை கொடுக்கப் பட்டது. எழுபது வயதை தாண்டிய போதிலும், நோயுற்ற நிலையிலும், தளராமல் பிட்டு செய்து விற்று அந்தக் காசில் வாழ்ந்து வந்தாள். மன்னனின் காவலர்கள் அவளது முதுமையை மதிக்காமல், நோயாளி என்றும் பாராமல், இரக்கமில்லாமல் கடின வேலை வாங்கினார்கள். 

அந்த ஊரில் சிவபெருமான் என்ற ஒரு கம்யூனிச புரட்சியாளர் இருந்தார். அவர் வந்தியம்மை பாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு நட்புடன் பழகி வந்தார். தனது அன்புக்குரிய பாட்டியும் கட்டாய வேலை வாங்கப் படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சிவபெருமான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னனின் பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். 


மண் அணை கட்டும் இடத்திற்கு வந்த புரட்சிக்காரன் சிவபெருமான், வந்தியம்மை பாட்டியை வேலை செய்ய வேண்டாம் என்றும், அவரை ஓய்வெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது அணை கட்டும் வேலையை தான் செய்து தருவதாக கூறினார். வந்தியம்மை அதைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள். 

ஏற்கனவே உற்றார், உறவினர்களால் கைவிடப் பட்டிருந்த வந்தியம்மை பாட்டி, சிவபெருமானின் பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவள். அறுபது வயதைக் கடந்த முதியவர்களை வீட்டில் வைத்திருந்து ஓய்வூதியம் கொடுத்து பராமரிக்க வேண்டிய மன்னராட்சி, அவர்களை சாகும் வரை வேலை வாங்கும் கொடுமையை வெறுத்தாள். அத்துடன் மன்னரின் அரண்மனைக்கு ஆபத்து வந்தவுடன் அனைத்து மக்களையும் ஊதியம் கொடுக்காமல் அடிமை வேலை வாங்கும் கொடுமை ஒழிய வேண்டும் என விரும்பினாள். பாண்டிய நாட்டில் ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியை உண்டாக்கி, மன்னராட்சியை கவிழ்க்க நினைத்த சிவபெருமானின் திட்டத்திற்கு உடன்பட்டாள்.


கூலித் தொழிலாளியாக மண் அணை கட்டுமிடத்திற்கு சென்ற சிவபெருமான், அங்கு வேலை செய்யாது பிற தொழிலாளர்களுடன் பேச்சுக் கொடுத்து, கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக போராட வருமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். அத்துடன், காவலர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, கொஞ்ச நேரம் வேலை செய்வதாக போக்கு காட்டி விட்டு, பின்னர் ஒரு மர நிழலில் படுத்துறங்குவது போன்று பாசாங்கு செய்தான். பிற தொழிலாளர்களும் சிவபெருமான் செய்தது போன்ற அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதாவது வேலையை குறைத்துக் கொள்வது, சோம்பேறித்தனமாக இருப்பது என்பது அதிகார வர்க்கத்தினரால் ஒரு நாசகார செயலாக கருதப் படும்.

அடிக்கடி காவலர்கள் அங்கு வந்து  எச்சரித்து விட்டு சென்றனர். எல்லோரும் தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் கடுமையாக செய்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி இவன் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்திருக்கிறான் என்று எரிச்சலுற்றனர். அங்கு நடக்கும் "நாசகார செயல்கள்" பற்றிய விடயத்தை மன்னனிடம் அறிவித்தனர். 


அரசனின் ஆணையை மதிக்காத, வேலை செய்யாமல் படுத்திருக்கும் சோம்பேறிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்று பாண்டிய மன்னன் கருவிக் கொண்டான். வீரர்களுடன் அந்த இடத்திற்கு வந்த மன்னன் படுத்திருந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்து எழுப்பினான். வேலை செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக காவலர்கள் சிவபெருமானை கசையால் அடித்து துன்புறுத்தினார்கள். 


பாண்டிய மன்னனின் அடக்குமுறைக்கு அஞ்சாத புரட்சியாளர் சிவபெருமான், அங்கிருந்த தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு அறைகூவல் விடுத்தான். முதியவர்கள், நோயாளிகள் என்றும் பாராது, அனைவரையும் கட்டாய வேலை வாங்கும் பாண்டிய மன்னனின் கொடுமைக்கு எதிராக, பாட்டாளி மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று உரையாற்றினான். சிவபெருமானின் எழுச்சி உரை கேட்டு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தனர். மன்னனின் ஏவல் படையான காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தெடுத்தனர். மன்னனனையும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கும் அடி விழுந்தது. அங்கு ஒரு மக்கள் புரட்சியை எதிர்பார்த்திராத பாண்டிய மன்னன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டை விட்டே ஓடினான். 


பாண்டிய நாட்டு பாட்டாளி மக்கள் மதுரை நகரத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆவணி மாதம் நடைபெற்ற மதுரைப் புரட்சி பற்றிய கதை, உழைக்கும் மக்கள் மத்தியில் செவி வழிக் கதையாக கடத்தப் பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக, பிற்காலத்தில் வந்த மதவாதிகள் அதை ஒரு மதம் சம்பந்தப் பட்ட புராணக் கதையாக மாற்றி விட்டனர். அன்றைய புரட்சியாளரின் உண்மையான பெயரை மறைத்து, கடவுளான சிவபெருமானே கூலியாளாக வந்ததாக கதையை திரித்து எழுதினார்கள். அத்துடன் மதுரை வரலாற்றில் முதல் தடவையாக மன்னராட்சி கவிழ்க்கப் பட்ட சம்பவத்தை மறைப்பதற்காக, இறுதியில் பாண்டிய மன்னனே மனம் திருந்தி சிவபெருமானின் திருவிளையாடலை கண்டுகொண்டதாக பொய்யான தகவல்களும் சேர்க்கப் பட்டன.

Saturday, November 21, 2020

பாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு

இன்று தமிழர்களால் "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும், பாரிஸ் வடக்கை சேர்ந்த லா ஷாப்பல் பகுதி முன்னொரு காலத்தில் "பாரிஸ் மெதீனா" என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அது அல்ஜீரிய- அரேபியர்களின் கோட்டையாக கருதப் பட்டது. அந்தப் பகுதிகளில் பெருமளவு அல்ஜீரிய குடியேறிகள் வசித்தனர். 

அடித்தட்டு மக்களின் வாழிடமான பாரிஸ் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களுக்கும் குறைவில்லை. பிரெஞ்சுப் பொலிஸ் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை. ஐரோப்பியர்கள் அங்கு செல்ல அஞ்சினார்கள். குறிப்பாக rue de la Charbonniere, rue de la Chartres, rue Myrha ஆகிய தெருக்களும், Berbes மெட்ரோ ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளும் மிகவும் ஆபத்தானவை. 

ஐம்பதுகளில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த அல்ஜீரியர்களும் பெருமளவில் ஆதரித்தனர். அதனால் அல்ஜீரிய விடுதலை இயக்கங்கள் அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. அவர்களது கைகளில் ஆயுதங்களும் இருந்தன. உண்மையில் அன்று இதையெல்லாம் பிரெஞ்சு அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு சக்தி, அதாவது சோவியத் யூனியன் உதவி இல்லாமல் அல்ஜீரிய விடுதலைப் போர் நடக்க சாத்தியம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டது. 

1957 ம் ஆண்டளவில், லா சாப்பல் பகுதியை அண்டிய பிரதேசம், அல்ஜீரியா ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பட்டப் பகலில் கூட சில அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதைக் காணலாம். அடிக்கடி போட்டிக் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் நடக்கும். "அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும்" என்று பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்ளாமல் விடும். 

இந்த ஆயுத மோதல்களுக்கு காரணமானவர்கள், அல்ஜீரிய விடுதலைக்கு போராடிய தேசியவாத இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள். குறிப்பாக FLN, MTLD, PPA ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இறுதியில் FLN மட்டும் "அல்ஜீரியர்களின் ஏக பிரதிநிதியாக" வெற்றி வாகை சூடிக் கொண்டது. ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. 

சுருக்கமாக, தமிழர்களுக்கு LTTE மாதிரி, அல்ஜீரியர்களுக்கு FLN இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய LTTE, PLOTE ஆகிய தேசியவாத இயக்க இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் சுடு பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த புலி - புளொட் மோதல் மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்களிலும் இடம்பெற்றது. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் தானே? அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா? அரபு அண்ணன் எப்படியோ, தமிழ் தம்பியும் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் என்ன? 

அத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட லா சாப்பல் அல்லது பாரிஸ் மெதினா, இன்று குட்டி யாழ்ப்பாணமாக காட்சியளிக்கிறது. இப்போதும் அது குழு மோதல்களுக்கு பெயர் போன இடம். அதற்குக் காரணம் ஒரு சில தமிழ் ஆயுதபாணிக் குழுக்கள். அதாவது Gang என்று சொல்லப் படும் கிரிமினல் குழுக்கள், போட்டிக் குழு உறுப்பினர்களை தெருவில் கண்டால் துப்பாக்கியால் சுடுபட்டுக் கொள்வார்கள். சில நேரம் இந்த சண்டைக்குள் அகப்படும் தமிழ்ப் பொது மக்களும் காயமடைவதுண்டு. 

என்ன நடந்தாலும், பொலிஸ் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்காது. இப்போதும் அங்கே ஒரு கொலை நடந்தால் கூட, பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புலிகள் இயக்க முக்கியஸ்தர், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். (போர் முடிந்த பின்னரான நிதி அபகரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.) ஆனால், இன்று வரையில் பொலிஸ் அது குறித்த விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. 

பிரெஞ்சுப் போலிஸை பொருத்தவரையில் பாரிஸ் நகரில் சுடுபட்டு சாவது அல்ஜீரியர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான். பிரான்சில் அரேபியரும், தமிழரும் "விரும்பத் தகாத வெளிநாட்டு குடியேறிகள்" தான். எது எப்படி இருப்பினும், முன்பிருந்த அல்ஜீரிய- அரேபியரின் வன்முறை மரபு, இன்று ஈழத் தமிழர்களால் சற்றும் குறையேதும் இல்லாது பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. 

அல்ஜீரிய- தமிழர் சகோதரத்துவம் நீடூழி வாழ்க!

Friday, November 20, 2020

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்!

 

புலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது! சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளுக்கும் சைவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! 

அதற்கான விளக்கத்தை சுருக்கமாக ஆதாரங்களுடன் தருகிறேன்:

1.
 புலிகளின் மாவீரர் வாரம் என்பது போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதுடன், அவர்களது தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும் உள்ளடக்கியது. அதே மாதிரி ஷியா முஸ்லீம்கள் மாவீரர் மாதம் என்று நினைவுகூர்வார்கள். அது சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர்(10 அக்டோபர் 680) ஈராக்கில் நடந்த போரில் மரணமடைந்த ஹுசைன் தலைமையை பின்பற்றிய போராளிகளை நினைவுகூரும் சடங்கு ஆகும். ஷியாக்களை பொறுத்த வரையில் அது ஒரு விடுதலைப் போர். அந்த மாவீரர் மாதம் ஷியாக்களின் தலைவர் ஹுசைனின் பிறந்தநாளை உள்ளடக்கியது. மாவீரர் மாதத்தின் இறுதி நாள் அஷுரா என்று அழைக்கப் படுகிறது. அஷுரா அன்று, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஷியா முஸ்லீம்களும், ஹுசைனின் விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்வார்கள். (இந்த விடயத்தில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் வித்தியாசம் உள்ளது. சன்னி முஸ்லிம்களை பொறுத்தவரையில், இது மோசேஸ் தனது மக்களை இஸ்ரேல் என்ற வாக்களிக்கப் பட்ட பூமிக்கு அழைத்துச் சென்ற நாள்.)


2.
 புலிகளைப் பொறுத்தவரையில் மாவீரர் வாரத்தின் இறுதியில் வரும் நவம்பர் 27 ஒரு விசேட தினம். அதே மாதிரி ஷியாக்களுக்கு முஹரம் மாதத்தின் பத்தாவது நாளான அஷூரா ஒரு விசேட தினம். முஹரம் மாதம் அனைத்து இஸ்லாமியருக்கும் புனிதமானது. முஹரம் என்ற சொல் ஹராம் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்த படியால், அந்த புனித மாதத்தில் பல விடயங்கள் தடுக்கப் பட்டுள்ளன. புலி ஆதரவாளர்களும் இன்று வரை அதே சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

3.
இந்து/சைவ மத சம்பிரதாயத்திற்கு முரணாக புலிகள் தமது இறந்த போராளிகளை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள். அந்த இடம் "மாவீரர் துயிலும் இல்லம்" என அழைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் மாவீரர் துயிலும் இல்லம் புலிக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள் உணர்வு பொங்க நினைவுகூர்வார்கள். இந்த வழக்கம் ஈரான் அல்லது லெபனானில் இருந்து வந்திருக்க வேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் ஈராக்குடன் போர் நடந்தது. அப்போது போரில் கொல்லப் பட்ட வீரர்கள் தனியாக ஓரிடத்தில் புதைக்கப் பட்டனர். அது பார்சி மொழியில் "மாவீரர் துயிலும் இல்லம்" என்றே அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் அந்த நடைமுறையை பின்பற்றியது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் லெபனானுக்கு சென்று பார்க்கலாம். முன்பு புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் என்னென்ன சடங்குகள் நடந்தனவோ அதெல்லாம் ஹிஸ்புல்லாவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பதை நேரில் காணலாம். மாவீரர்களின் உருவப் படங்கள் கட் அவுட்களாக பொது இடங்களில் வைக்கும் வழக்கமும் பொதுவானது.

4.
புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் அதன் முக்கிய உறுப்பினர்கள் லெபனானில் பயிற்சி பெற்றனர். ஆகவே புலிகளுக்கு லெபனான் பற்றியோ, ஷியா முஸ்லிம்களின் சடங்கு பற்றியோ எதுவும் தெரியாது என்று வாதிட முடியாது. இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப் படவும் தேவையில்லை. உலகில் ஒருவர் இன்னொருவரை பார்த்து பின்பற்றுவது வழமையானது. 

5.
மாவீரர்களை புனிதர்களாக வழிபடும் நடைமுறை கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே பாரம்பரியத்தை பின்பற்றும் சகோதர மதங்கள்.) இன்றைக்கும் கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் புனித பிரான்சிஸ், புனித மார்ட்டின், புனித நிக்கொலாஸ் ஆகிய தினங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக, ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக தம்முயுரை அர்ப்பணித்த புனிதர்கள். கிறிஸ்தவ மத வரலாற்றில் இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாவீரர்கள் இருந்துள்ளனர். அவர்களது நினைவாக, நவம்பர் 1 அன்று, "அனைத்து புனிதர்களின் தினம்" நினைவுகூரப் படுகிறது.

Saturday, November 14, 2020

தீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை!

 

3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக  அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக்களும் அரச வம்சத்தின் பெயரால் அசுரர்கள் என அழைக்கப் படலாயினர். உண்மையில் அவர்கள் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருக்கும் மொங்கோலொயிட் இன மக்கள். சில நேரம் அவர்கள் ஆதிக்க சமூகமாக இருந்திருக்கலாம். அவர்களது ஆட்சியின் கீழ்  கறுப்பின- திராவிட மக்கள் பழங்குடி இனத்தவராக இருந்திருக்கலாம். அனேகமாக நரகாசுரன் அந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். 

இந்த அசுர அரச பரம்பரையில் குறிப்பிடத் தக்க மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:

ஹதகாசுரன், சம்பராசுரன், ரத்னாசுரன், கதகாசுரன். கி.மு. 14ம் நூற்றாண்டு அளவில் நடந்த போரில் கதகாசுரனை கொன்று  நரகாசுரன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனது பெயரால் நரக அரச பரம்பரை உருவான போதிலும், அது பிற்காலத்தில் தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. 

யார் இந்த தேவர்கள்?

தோற்றத்தில் ஐரோப்பியர் போன்றிருக்கும் இந்தோ- ஆரிய இன மக்கள். எல்லா ஆரியரும் வெள்ளை தோல் கொண்டவர்கள் அல்ல. உள்நாட்டு இந்திய பூர்வ குடிகளுடன் ஒன்று கலந்த கலப்பினமாகவும் இருந்தனர். அதனால் தான் ஆரியமயப் பட்ட கருமை நிற கிருஷ்ணன் ஒரு மன்னனாக வர முடிந்தது. 

அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிறம், இனம், மொழி ஓர் அடையாளமாக இருக்கவில்லை. ஆட்சியாளர்களிடமும் அப்படி ஓர் உணர்வு இருக்கவில்லை. 

ஆகவே கிருஷ்ணன்- நரகாசுரன் போர் இன/மொழி அடிப்படையில் நடந்த போர் அல்ல. இருப்பினும், அந்தக் காலத்து மக்கள், தம்மை நாகரீக அடிப்படையில் வேறு படுத்தி பார்த்தார்கள். தேவர்கள் என்றால் நாகரிகத்தில் சிறந்தவர்கள். அசுரர்கள் என்றால் நாகரிகமடையாத காட்டுவாசிகள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருந்தது. அந்த வகையில், கிழக்கிந்திய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய நரகாசுரன், தேவர்களின் எதிரியாக மட்டுமல்லாமல் தீமையின் வடிவமாகவும் கருதப்பட்டான். 

அநேகமாக இந்த நரகாசுரன் ஒடுக்கப் பட்ட  பழங்குடி இனத்தை சேர்ந்த புரட்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவனால் தான் அசுரர்கள் என பெயர் சூட்டிக் கொண்ட 'டனவா' அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. அந்த வம்சத்தில் கடைசியாக வந்த கதகாசுரனை போரில் கொன்ற நரகன், மன்னனாக முடி சூட்டிக் கொண்டதும் தனது பெயரை நரகாசுரன் என்று மாற்றிக் கொண்டான். இருப்பினும் அவன் உருவாக்கிய அரச பரம்பரை நரகர் வம்சம் என்றே அழைக்கப் படலாயிற்று. 

கிருஷ்ணன் - நரகாசுரன் போருக்கு காரணமாக நாகரிக முரண்பாடு மட்டுமல்லாது, மத முரண்பாடும் இருந்திருக்கலாம். கிருஷ்ணனும், அவனது நாட்டு மக்களும் விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள். அதற்கு மாறாக நரகாசுரனும் அவனது நாட்டவரும் தாந்திரிக சைவர்கள். அவர்கள் சிவனை வழிபட்டாலும், மந்திரம், மாயம், சூனியம் போன்ற நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இதுவும் தேவர்கள் கண்களுக்கு காட்டுமிராண்டித்தனமாக தெரிந்திருக்கலாம். 

அன்று நடந்த போரில் நரகாசுரன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டான். அதற்குப் பிறகு அவனது நாடு தேவர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. நரக வம்சத்தில் வந்தவர்கள் கிருஷ்ணனின் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர்.  இருப்பினும் நரகாசுரன் மரணத்துடன் இந்திய பழங்குடியின மக்களின் கடைசி ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து விட்டது. அதற்குப் பிறகு தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு  சவாலான நாடு எதுவும் இருக்கவில்லை. பிற்காலத்தில் தேவர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக் கொண்டனர். அது தான் மகாபாரதப் போர். 

இந்திய பூர்வ குடியின மக்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வந்த, பழங்குடியின மன்னன் நரகாசுரன் தோற்கடிக்கப் பட்ட நாள், இப்றைக்கும் தீபாவளி என்ற பெயரில் ஒரு வெற்றித் திருநாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.

Thursday, November 12, 2020

கமலா ஹாரிஸ் ஓர் "அமெரிக்க கதிர்காமர்"!

 

- அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 வருடங்களுக்கு பிறகு தான் கமலா ஹாரிஸ் என்ற ஒரு பெண் துணை ஜனாதிபதியாக வர முடிந்துள்ளது. இது அமெரிக்கர்கள் எந்தளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. 

- உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 2 தடவைகள் போட்டியிட்டு வென்று பிரதமர் பதவி வகித்தார். இலங்கை வாக்காளர்கள் நினைத்திருந்தால் அவர் பெண் என்பதற்காக நிராகரித்திருக்க முடியும். இந்த விடயத்தில் இலங்கையர்கள் அமெரிக்கர்களை விட முற்போக்காக இருந்துள்ளனர். 

- (குறைந்த பட்சம் ஒரு பொதுத் தேர்தலில் ஆவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் ஒரு பெண் பிரதமராக வர முடிந்தது. இந்தோனேசியா, துருக்கி ஆகிய முஸ்லிம் நாடுகளில் கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வர முடிந்தது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. வெட்கக் கேடு!

- ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் மட்டுமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன்  போட்டியிட்டாலும்  பேரினவாதத்திற்கு அடிவருடாமல் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர முடியாது. அது தான் யதார்த்தம். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, உலகின் எந்த நாட்டை எடுத்தாலும் அது தான் நிலைமை. 

- கமலா தன்னை ஒரு கறுப்பின சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டே அந்த மக்களுக்கு செய்த துரோகத்தை வெளியுலகம் அறியாது. அவர் ஒரு சட்ட வல்லுனராக இருந்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். Black Lives Matter இயக்கத்தை ஆதரிக்காமல் அதை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, "எதிராளியான" டிரம்ப் அரசின் பக்கம் நின்று, ஒரு விடுதலைக்கான போராட்டத்தை "அர்த்தமற்ற வன்முறை" என்று கண்டித்து வந்தார். 

- இலங்கையில் கதிர்காமர் மாதிரி அமெரிக்காவில் கமலாவும்   பேரினவாதத்திற்கு ஒத்தூதிய படியால் தான் இன்று துணை ஜனாதிபதியாக வந்துள்ளார். ஆகவே, அவர் இனிமேலும் சிறுபான்மையினருக்கு எதிரான தனது துரோக அரசியலை முன்னெடுப்பார். ஏற்கனவே ஒபாமா ஆட்சிக் காலத்தில் கூட கறுப்பின சிறுபான்மையின மக்களுக்கு எதிரான  ஒடுக்குமுறை குறையவில்லை.

- கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக் காலம் ஆரம்பித்ததும் தானே சிறந்த பேரினவாதி என்பதை நிரூபிப்பார். அப்போதும் நமது தமிழர்கள் சிலர் துரோகிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள்.