Tuesday, August 31, 2010

செல்வந்த ஈராக் ஏழை நாடானது எப்படி?


(ஈராக் வரலாறு, இறுதிப் பகுதி)

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வரும் வரையில் ஈராக் பத்துக்கும் குறையாத ஆட்சிக் கவிழ்ப்புகளை கண்டு விட்டது. 1958 புரட்சியின் பின் அரசமைத்த பிரிகேடியர் காசிமுக்கு பல எதிர்ப்புகள் வந்தன. பொதுவுடமைவாதிகள், தாராளவாதிகள், தேசியவாதிகள் என்று பல பிரிவுகள் தமக்குள் சண்டையிட்டன. 1959 ம் ஆண்டு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் தேசியவாதிகள் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வட ஈராக்கில் இனக்கலவரம் தோன்றியது. அதனை சாட்டாக வைத்து கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். காசிமின் அரசு ஒடுக்குமுறை இயந்திரமாகியது. இதேவேளை நாட்டில் இன்னொரு புதிய அரசியல் சக்தி தோன்றியது. "பாத்" (Ba'th - மீள் உயிர்ப்பு ) எனப் பெயர் கொண்ட அரசியல் இயக்கம் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது. பாரிஸில் கல்வி கற்ற சிரியா நாட்டு மாணவர்களால், "அரபு தேசியம், சோஷலிசம், மதச்சார்பின்மை" போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்த இயக்கம் உருவானது.

சிரியாவில் பாத் கொள்கைகள் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அங்குள்ள கல்லூரிகளில் பயின்று கொண்டிருந்த ஈராக் மாணவர்களும் கவரப்பட்டனர். அவர்கள் ஈராக்கிலும் வேர் விட்டனர். ஈராக் தொழிலாளரை நிறுவனமயப் படுத்தினர். வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தி காசிமின் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாத் உறுப்பினர்களின் தாக்குதல் குழுவொன்று காசிமை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. தாக்குதல் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தப்பிவிட்டார். அவர் தான் சதாம் ஹுசைன். இந்த சம்பவம் சதாமை ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது. கட்சியின் மத்திய குழுவில் இருந்த உறவினர் ஒருவரின் உதவியால் சதாம் கட்சியின் மேல்மட்டத்திற்கு வர முடிந்தது. 1963 ம் ஆண்டு, இராணுவத்திற்குள் ஊடுருவியிருந்த பாத் கட்சி ஆதரவாளர்கள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது பாத் கட்சி நாட்டின் பிரதான கட்சியாகியது. ஆனால் இராணுவ போக்கிலான ஆட்சியாளருக்கும், கட்சிக்கும் இடையில் ஒத்துப் போகவில்லை. 1968 ம் ஆண்டு, மீண்டும் ஒரு சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை பாத் கட்சி முழுமையான அதிகாரத்தை பெற்றுக் கொண்டது.

பாத் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. தேசத்தின் தலைமை "புரட்சிகர கட்டளைப் பணியகம்" என்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் வந்தது. கட்சியின் பெயர் "அரபு பாத் சோஷலிசக் கட்சி" பெயர் மாற்றப் பட்டது. செயலதிபர் அஹ்மத் ஹசன் அல் பாகிர் ஜனாதிபதியாகவும், இராணுவத் தலைமை அதிகாரியாகவும் பதவியேற்றார். சதாம் ஹுசைன் RCC உப தலைவரானார். அன்றிலிருந்து ஈராக் நிலையான ஆட்சியைக் கண்டது. ஆனால் உள்வீட்டு கணக்குத் தீர்த்தல்கள் தொடர்ந்தன. பாத் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தூக்கிலிடப்பட்டார். சில வருடங்களுக்குப் பின்னர், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்கள் "தேசிய முற்போக்கு முன்னணி" என்ற பெயரில் அரசாங்கத்தில் சேர்ந்தனர். அரபு தேசியத்தை முதன்மையாகக் கொண்ட பாத் கட்சி, அரபு பேரினவாதக் கூறுகளை கொண்டிருந்தது. அது பிற சிறுபான்மை இனங்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக பார்த்தது. வடக்கே உரிமைகளை கோரி எழுச்சி பெற்ற குர்த்தியர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது. குர்தியர்கள் ஆயுதப் போராடத்தை கையிலெடுத்தனர். மலை சார்ந்த பகுதிகளை மறைவிடமாக கொண்ட குர்திய கெரிலாக்களை ஈராக் அரச படைகளால் அடக்க முடியவில்லை. பின்னர் அதுவே சதாம் அரசின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

பாக்தாத்தின் வடக்கே திக்ரித் என்ற சதாமின் பிறப்பிடத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் பாத் கட்சியினுள் பெருகியது. பல முக்கிய அரசுப் பொறுப்புகள் யாவும் திக்ரித்காரருக்கு சென்றன. இருந்தாலும் பிற சமூகங்களை சேர்ந்த விசுவாசிகளுக்கும் பதவிகள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 250 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இருந்தாலும் அவர்களிடம் அதிகாரம் இருக்கவில்லை. அனைத்து முடிவுகளும் RCC மட்டத்திலேயே எடுக்கப்பட்டன.

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்த பின்பு உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருந்தமை ஈராக்கிற்கு சாதகமாகப் போய் விட்டது. எண்ணெய் விற்று வந்த வருமானம், புதிய தொழிற்துறையில் முதலிடப்பட்டது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதன் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயத்தை கவனிக்க ஆளில்லாமல் போனதால், எகிப்தில் இருந்து விவசாயிகளை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக ஈராக் டினாரின் பெறுமதி டாலரை விட அதிகமாக உயர்ந்தது. குவைத் யுத்தம் வரையில், ஈராக் உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது. இன்றைய நிலையுடம் ஒப்பிடும் பொழுது அதை பலரால் நம்பமுடியாது. ஈரானுடனான போர் கூட பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம், குவைத், சவூதி அரேபியா, மேற்குலக நாடுகளில் இருந்து வந்து குவிந்த பணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பாதுகாப்பு வழங்கின. ஈரானுடனான போரை பயன்படுத்தி ஈராக் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றும், டச்சு வர்த்தகர் ஒருவரும் இரசாயன ஆயுதங்களை விற்றார்கள். அப்போதெல்லாம் யாரும் ஆட்சேபிக்கவில்லை. நீண்ட கால போரியல் அனுபவத்தைக் கொண்ட இராணுவம், நவீன ஆயுததளபாடங்கள் என்பன ஈராக்கை பிராந்திய வல்லரசாக்கியது. பிற்காலத்தில் அதுவே செருக்குடன் குவைத் மீது படையெடுக்க தூண்டியது.

ஈராக் என்ற தேசம் உருவான காலத்தில் இருந்து, குவைத் ஈராக்குக்கு சொந்தமான பிரதேசம் என்று பாக்தாத் ஆட்சியாளர்கள் உரிமை கோரி வந்தார்கள். அந்த உரிமை கோரலை அடிப்படையாக கொண்டு, சதாம் உத்தரவின் பேரில் ஈராக் இராணுவம் குவைத் மீது படையெடுத்தது. வளைகுடாவில் ஒரு துறைமுகத்திற்கான தேவையும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையும் பிற காரணங்கள். குவைத் படையெடுப்பு குறித்து அமெரிக்க நண்பனுக்கு ஈராக் அறிவித்திருந்தது. அமெரிக்கா சம்மதிக்கா விட்டாலும், வாஷிங்க்டனில் இருந்து கிடைத்த சமிக்ஞை ஒன்றை தவறாக புரிந்து கொண்ட ஈராக் படையெடுப்பில் இறங்கியது. ஆனால் ஈராக்கை பொறியில் மாட்டி விடும் திட்டம் அது என்பது பின்னர் தெரிய வந்தது. குவைத்தை சேர்த்துக் கொண்டால் தனது வல்லரசு அந்தஸ்து உயரும் என்று ஈராக் கருதியது. அமெரிக்கா மனதில் வேறொரு திட்டம் இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து குவைத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஈராக்கை ஆக்கிரமிக்க வைத்து, போருக்குள் இழுத்து விட்டு, அமெரிக்க இராணுவ உதவியைக் காட்டி, விடுதலையான குவைத்தை தனது செல்வாக்குக்கு உட்படுத்தியது.

சதாம் அன்று குவைத் யுத்தத்தை வரப்போகும் போர்களின் தாய் என்று வர்ணித்தார். அது எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் சொல்லப்பட்ட கூற்று என்பது பின்னர் நிரூபணமானது. குவைத் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் உடைந்தது. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த மக்கள், ஓரிரு வருடங்களில் உணவுக்கே வழியற்ற ஏழைகளானார்கள். பத்து வருடங்கள் கழித்து, மிகவும் பலவீனமடைந்த ஈராக் மீது இன்னொரு போர் திணிக்கப்பட்டது. இம்முறை சதாம் ஹுசைன் அரசைக் கவிழ்க்கும் நோக்குடன் பன்னாட்டுப் படைகள் நுழைந்தன. சதாமும், பிற முக்கியஸ்தர்களும் தூக்கிலிடப்பட்டனர். நாடு நீண்டதொரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
2.பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்
1.ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2003 ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டது. அதனால் கடைசி பந்தியை மட்டும் மாற்றி இத்துடன் முடிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க ஆக்கிரப்பின் பின்னரான ஈராக் தொடர்பான பல பதிவுகள் ஏற்கனவே கலையகத்தில் வந்துள்ளன.)


ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்
ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு
எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது

Sunday, August 29, 2010

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

- ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.
- 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.
- ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. (பார்க்க:
Mumbai terror suspect David Headley was ‘rogue US secret agent’)

அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:
- 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.
- 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.
- 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.
- 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.
- 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.

மேலதிக விபரங்களுக்கு...

Gladio Terrorism
European Parliament resolution on Gladio

Thursday, August 26, 2010

பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்

பகுதி : இரண்டு)
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஜேர்மனிய தேசிய அரசுக்கும், ஒஸ்மாமானியர்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்தது. அதன் நிமித்தம் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் வந்தது. அதே காலத்தில் தான், ஜேர்மனிய பெற்றோலிய நிபுணர்கள் ஈராக்கில் செய்த ஆராய்ச்சியின் பயனாக நிலத்தடி எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பானது பிற்கால ஈராக்கின் அரசியல்-பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் எதிர்பாராத விதமாக, முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியுற்றது. போரில் ஜெர்மனியை ஆதரித்ததால் துருக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒஸ்மானிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து, அந்நியரின் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. போரில் வெற்றி வாகை சூடிய பிரிட்டனும், பிரான்சும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ஒஸ்மானிய ஆதிக்கத்தில் இருந்த அரபு பிரதேசங்கள் யாவும், ஒன்றில் ஆங்கிலேயரினால் அல்லது பிரெஞ்சுக்காரரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அப்படித்தான் ஈராக் ஆங்கிலேயர் காலனியாகியது.

துருக்கியர் காலத்தில் ஈராக் ஒரே தேசமாக கருதப்படவில்லை. அப்போது அங்கே மூன்று மாகாணங்கள் இருந்தன. (தேசம் என்ற சொல் ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை குறிக்கும்.) ஈராக்கின் தென் பகுதி, குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப் படலாயிற்று. மத்திய ஈராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வட ஈராக் மொசுல் மாகாணம். ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்.) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய் விட்டார்கள். குர்தியரின் தனி நாட்டுக் கோரிக்கை குப்பைக் கூடைக்குள் போனது.

1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு, புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார-கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும், லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும் தான். ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 ல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ, பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப் படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.

எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் முடிசூட்டிக் கொண்ட இளவரசர் காசியின் காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றின. ஈராக் இராணுவம் அரசியலில் தலையிட ஆரம்பித்தது. இரண்டாவது உலகப்போர் காலத்தில் இராணுவ அதிகாரிகள் பிரிட்டனுடனான உறவை துண்டித்து விட்டு, ஜெர்மனியுடன் உறவை ஏற்படுத்தினார்கள். ஏதோ அவர்கள் விருப்பம், என்று பிரிட்டன் விட்டுக் கொடுக்கவில்லை. ஈராக் மீது படையெடுத்தார்கள். பாக்தாத் கடற்கரையில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், ஒரு மாதத்திற்குள்ளேயே பாக்தாத்தை கைப்பற்றி விட்டன. (2003 ம் ஆண்டு சரித்திரம் திரும்பியது. பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்தன.) பாக்தாத்தில் பிரிட்டிஷ் சார்பு பொம்மை அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஒன்று போடப்பட்டது. அதன் பிரகாரம் ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்துறை துரித கதியில் வளர்ந்தது. நிலங்கள் தொடர்பான புதிய சட்டம் ஒன்று நிலவுடமையாளருக்கு சாதகமாக அமைந்தது. சிறிய விவசாயிகளின் நிலங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்கள் தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நகரங்கள் பெருகின. கல்வி கற்ற மத்திய தர வர்க்கம் ஒன்று உருவானது. இந்த வர்க்கம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பொழுது, தமது நாடு நிலப்பிரபுக்களால் ஆளப்படுவதை புரிந்து கொண்டனர். அவர்களது மனக்குமுறலை பிரதிபலிக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது.
மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, நகர்ப்புற தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க விடுதலை குறித்து பேசியதால், பெருமளவு ஷியா முஸ்லிம்களும், குர்து இன மக்களும் கவரப்பட்டனர். இதற்கிடையே அரச குடும்பம் அரசியல் செல்வாக்கு இழந்திருந்தாலும், அவர்களது உல்லாச வாழ்வு பறிபோகவில்லை. ஈராக் அரசு நிலவுடமையாளர்களினதும், பிரிட்டிஷாரினதும் நலன்களை மட்டுமே கவனித்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தன. இராணுவத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவியது.

எகிப்தில் நாசர் தொடங்கி வைத்த அரபு தேசிய அலை ஈராக் கரையை அடைந்தது. 14 ஜூலை 1958 ம் ஆண்டு, பிரிகேடியர் காசிம் தலைமையில் "சுதந்திர அதிகாரிகள்" ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். ஈராக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் 1958 ம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் புரட்சி தான் ஜனநாயகத்திற்கான முதற்படியாகும். அதுவரை காலமும் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்களான பிரிட்டிஷ்காரர்கள், ஈராக்கில் பிற்போக்கு மன்னராட்சியை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் தமது நலன்களைப் பேணும் அரசாங்கத்தை அமைக்கவே விரும்பினார்கள். 1958 ஈராக் புரட்சி ஈராக் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவை மேற்கத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தன.

ஈராக்கில் எண்ணெய் அகழும் தொழிலில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கொள்ளை லாபமீட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு சிறு தொகையை மட்டும் ராயல்ட்டியாக ஈராக் அரசுக்கு வழங்கி வந்தன. அது கூட மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. ஈராக் அரச குடும்பமும், அதிகாரிகளும் எண்ணெய் விற்ற ராயல்ட்டி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தார்கள். புரட்சிக்குப் பின்னர் வந்த அரசாங்கம் ராயல்ட்டி தொகையை அதிகரித்தது. எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உடன்பாட்டுக்கு வரமுடியாமல் போனதால், எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறின. இதனால் ஈராக் அரசு எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது. தகுதியற்ற உள்நாட்டு முகாமைத்துவம் காரணமாக பல பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. பல வருடங்களுக்குப் பின்னர், 1968 ம் ஆண்டு, சோவியத் யூனியன் நிபுணர்களின் வருகைக்கு பின்னரே பெற்றோலிய உற்பத்தி அதிகரித்தது. அதன் பிறகு தான் ஈராக் உலகில் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டது.

1958 புரட்சி ஈராக் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. பெறும் நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. (சதாம் ஹுசைன் காலத்திற்குப் பின்னர் தான் விவசாயத் துறையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தலையெடுத்தன.) பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. பெண்களுக்கு சமவுரிமை கிடைத்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஈராக்கில் மொத்த பணியாட்களில் இருபது வீதமானோர் பெண்கள். இத்தகைய சமூக நலன் சார்ந்த பொருளாதார திட்டங்கள் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை அமுலில் இருந்தன. இடையில் எத்தனையோ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் சமுதாய முன்னேற்றம் தடைப்படவில்லை.

(தொடரும்)

முதலாவது பகுதி:

1. (ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

Wednesday, August 25, 2010

அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள்

மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

செனிப்பின் கதை இன்னொரு வகையானது. செனிப் கருவுற்றவுடன் அவளைக் காதலித்தவன் கைவிட்டு விட்டான். கல்யாணமாகாமலே குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குடும்பத்திற்கு வேண்டப்படாதவள். பெற்றார் அவளைக் குடிமுழுகி விட்டார்கள். வாழ வழியின்றி நிர்க்கதியாக தவித்த நேரம், ஒரு நண்பி விபச்சாரத் தொழிலை அறிமுகப் படுத்தினாள். செனிப்பை பொறுத்தவரை, மொரோக்கோவில் பாலியல் தொழில் செய்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. "நீங்கள் கருதுவது போல அல்லாது, மொரோக்கோ சமூகம் திறந்த மனப்பான்மை கொண்டது. பகிரங்கமாக விளம்பரம் செய்யாத வரையில் இங்கே எல்லாமே சாத்தியம்." என்று கூறினாள். செனிப்புக்கு புதிய காதலன் ஒருவன் மூலம் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. புதிய காதலன் ஒரு வாடிக்கையாளனாக அறிமுகமானான். அன்பொழுகப் பேசினான். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தான். ஆனால் மொரோக்கோவில் விபச்சாரிகளை காதலிக்கும் ஆண்கள் பலர் ஒன்றில் இலவச பாலுறவுக்காக, அல்லது பணத்திற்காக சுரண்ட நினைக்கின்றனர்.

மொரோக்கோவின் சமூகவியல் அறிஞர் Soumaya Naamane Guesous, பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். அவரது நூலான "அனைத்து வெட்கங்களும் போய் விட்டன. மொரோக்கோவில் பெண்களின் பாலுறவு"(Au-dela de toute pudeur, la sexualite feminine au Maroc), இதுவரை பதினேழு பதிப்புகள் வந்து விட்டன. சுமயா கூறுகிறார்: "மறந்து விடாதீர்கள். மொரோக்கோ கடுமையான இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட நாடாக பேரெடுத்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் பல விடயங்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. அடித்தட்டு ஏழை மக்கள் மத்தியில், இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. இறைவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, அல்லது அவள் ஒருத்தி தானே குடும்பத்தை பார்க்கிறாள் என்றோ பரிதாபப் படுவார்கள்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள், பணக்கார வீட்டு இளைஞர்களின் பாலியல் வெறிக்கு இரையாகின்றனர். அடங்கிப் போக வேண்டிய நிலையில், ஒரு தடவை கர்ப்பமானால் வாழ்க்கையே முடிந்து விடும். அதன் பிறகு, பாலியல் தொழில் செய்து பிழைப்பதை தவிர அந்த அபலைப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை.

முன்பெல்லாம் ஒரு விபச்சாரியை அடையாளம் கண்டுபிடிப்பது இலகு. கவர்ச்சியான தோற்றத்துடன் நகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் காத்திருப்பார்கள். மொரோக்கோவில் அட்லஸ் மலைப் பிரதேசக் கிராமங்கள் சில திறந்த வெளி விபச்சார விடுதிகளாக அறியப்பட்டன. இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், உலகமயமாக்கலும் மரபுவழி விபச்சாரத்திற்கு முடிவு கட்டின. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு பெருகுவதால் அரசாங்கம் வெளிப்படையான பாலியல் தொழிலை அடக்கி விட்டது. அந்த இடத்தில் மேற்குலக மோகமும், உலகமயமாக்கலும் புதிய வகை விபச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நவீன விபச்சாரிகளை, மரபு வழி விபச்சாரிகளைப் போல இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஆச்சாரமான குடும்பப் பெண் போல தோற்றமளிப்பார்கள். பாரிலும், டிஸ்கோதேக்கிலும் சந்திக்கும் பெண்ணுடன் சில நிமிட உரையாடலுக்கு பின்னர் தான், அவள் ஒரு விபச்சாரி என்று தெரிய வரும். செல்லிடத் தொலைபேசி, இணையங்களின் பாவனை, பாலியல் சந்தையை பலரறியா வண்ணம் பரப்பி வருகின்றது. தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக, பாலியல் தொழில் முன்னரை விட பல்கிப் பெருகியுள்ளது.

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல் தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில் ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின் கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத் தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக இருக்கிறார்கள்.

காசாபிளாங்கா நகரில் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்கு போய்ப் பார்த்தால் தெரியும். பணக்கார ஆண்கள் தமது "நண்பிகளுக்கு" நகைகளை பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. டிஸ்கோ நடன விடுதிகள் லாபம் சம்பாதிக்கின்றன. கூட்டிச் செல்லும் டாக்சி ஓட்டுனருக்கு, வழியில் மறிக்கும் போலீஸ்காரருக்கு, அடுக்குமாடி கட்டிட காவலாளிக்கு, ஹோட்டல் வரவேற்ப்பாளருக்கு என்று பலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதைவிட கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள், நகைக் கடைகள் என்பன பக்க விளைவாக லாபம் சம்பாதிக்கின்றன.

இத்தகைய நாகரீக போக்கு வசதியற்ற அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள், தாம் விபச்சாரம் செய்வதாக கூறுவதில்லை. ஆனால் தமது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காக பல ஆண்களுடன் உறவு கொள்கின்றனர். மனேஜர் மட்டத்தில் தொழில் புரியும் படித்த பெண் ஒருவர், பணத்திற்காக உடல் உறவு கொள்வதை ஏற்றுக் கொண்டார். அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் மேல்தட்டு தோற்றப் பொலிவை பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. தனக்கென வாழ்க்கைத்துணையை வைத்திருக்கும் பெண்கள் கூட, மேலதிக பணத் தேவைக்காக வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். மாதாந்த ஊதியத்தை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் அதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.

எண்ணைவள வளைகுடா நாடுகளைச் சேர்ந்த, பணக்கார அரேபிய ஆண்களின் காம வேட்கையை பூர்த்தி செய்யும் இடமாக மொரோக்கோ மாறியுள்ளது. முன்பு லெபனான் அந்தப் பெருமையை பெற்றிருந்தது. தங்களது நாட்டில் தமது பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கும் இந்த வளைகுடா அரேபியர்கள், சுதந்திரமாக திரியும் லெபனான், மொரோக்கோ அழகிகளை வேட்டையாடுகிறார்கள். 1975 ல் இருந்து தீராத உள்நாட்டு யுத்தத்திற்குள் லெபனான் விழுந்து விட்டதால், அவர்கள் தற்போது மொரோக்கொவை குறிவைத்துள்ளனர். இந்த திமிர் பிடித்த பணக்கார வளைகுடா அரேபியர்கள், மொரோக்கோவில் பலரது வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு முறை இரவு விடுதி ஒன்றினுள் புகுந்த சவூதி பணக்காரன், அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்பினான். அதற்காக எல்லா நுளைவுச்சீட்டுகளையும் வாங்கினான். நல்ல வேளையாக அங்கிருந்த மொரோக்கோ பணக்காரன் ஒருவன் நுளைவுச்சீட்டுகளுக்கு இரு மடங்கு விலை கொடுத்து சவூதிக்காரனை விரட்டி விட்டான். பாலியல் தொழிலில் ஈடுபடும் மொரோக்கோ பெண்கள் கூட வளைகுடா வாடிக்கையாளர்களை விரும்புவதில்லை. "ஐரோப்பியர்களும், ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ ஆண்களும் கண்ணியமாக நடத்துவார்கள். பணக்கார வளைகுடா ஆண்கள் எங்களை விலங்குகளாக கருதுகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கலாம். ஆனால் எங்களை பொம்மை போலத் தான் நடத்துவார்கள்."

(நன்றி : NRC Handelsblad, 24 aug. 2010)

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை.)

Monday, August 23, 2010

ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பகுதி : ஒன்று)
ஐரோப்பியர்கள் நாகரீகமடைவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, ஈராக்கியர்கள் நாகரீகமடைந்த மக்களாக வாழ்ந்துள்ளனர். அதனை நிரூபிக்கின்றன ஈராக்கின் புராதன நகரங்கள். இன்று ஈராக் என அறியப்படும் நாடு, கிரேக்கர்களால் "மெசொப்பொத்தாமியா" (இரு நதிகளுக்கு இடைப்பட்ட தேசம்) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. எனினும் அந்தப் பகுதிக்கு கிரேக்கர்கள் வருவதற்கு முன்னமே, அதாவது இற்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்பு, "சுமேரியர்கள்" என்ற பண்டைய நாகரிக சிறப்பு மிக்க மக்கள் அங்கே அரசமைத்திருந்தனர். அந்த சுமேரியரின் நாட்டின் தலைநகரம் "ஊர்" என அழைக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது தொலைவில் "உருக்" என்ற நகரம் இருந்தது. இதனை பைபிள், "எரேக்" என்று குறிப்பிடுகின்றது. அதிலிருந்து தான் ஈராக் என்ற தற்கால பெயர் வந்திருக்க வேண்டும்.

சுமேரியத் தலைநகர் ஊரில் இருந்து தான் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசி ஆப்பிரஹாம் வந்தார். தமது மொழிக்கென எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த சுமேரியர்கள், களி மண் தட்டுகளில் இலக்கியங்களை எழுதி வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் படி, விவிலிய நூலில் ஆதியாகமம் பகுதியில் வரும் பல கதைகள் இந்த சுமேரிய மண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. (ஆனால் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன.) சுமேரிய நாகரீகம் ஈராக்கின் தென் பகுதியில் வளர்ந்து வந்தது. அதே காலகட்டத்தில் வட ஈராக்கில் போர்க்குணம் மிக்க ஒரு புதிய இனம் தோன்றியது. (பைபிளில் வரும்) நோவாவின் மகன் "செம்" மின் வழித்தோன்றல்களே அவர்கள். செம்மில் இருந்து தான் யூத, அரேபிய இனங்களைக் குறிக்கும் செமிட்டியர் என்ற பெயர் வந்தது.

செமிட்டிய இனத்தை சேர்ந்த "சார்கோன்" என்ற மன்னன் தோள் வலிமையால் பிற சிற்றசர்களை வென்று, சுமேரியாவையும் அடிபணிய வைத்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டினான். அதன் தலைநகரம் "அக்காட்". அந்த வெற்றிக்குப் பின்னர் தான் சுமேரியக் கதைகள் பைபிளினால் சுவீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஊகிக்கக்கக் கூடிய ஆதாரங்கள் நிறைய உள்ளன. நோவாவின் கதையில் வரும், ஊழிக்கால கடல் கொந்தளிப்பு கருங்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூகோள வரைபடத்தை பார்த்தால், செம் மன்னனின் ராஜ்ஜியம் கருங்கடலில் இருந்து சிறிது தூரத்திலேயே அமைந்திருந்தது புலப்படும். மேலும் சார்கோன் மன்னனின் பிறப்பு பற்றிய கதை, யூதர்களின் மேசியா மோசஸின் கதையை ஒத்துள்ளது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், சார்கோன் மன்னனின் பிறப்பு வருடாவருடம் கொண்டாடப்பட்டது. செம் மன்னனின் வம்சாவழியினராக தம்மை காட்டிக் கொண்ட யூதர்கள், பண்டைய ஈராக் மண்ணுக்குரிய கதைகளை பைபிளில் எழுதி வைத்தார்கள். பின்னர் அவற்றை தமது பரம்பரைக் கதைகள் என்று உரிமை கோரினார்கள்.

கி.மு. 1500 ஆண்டளவில் "பாபிலோன்" என்ற புதிய அரசு தோன்றியது. இவர்களின் காலத்திலும் நாகரீகம் தழைத்தது. பாபிலோனியர்களால் போற்றப்பட்ட மன்னன் ஹமுராய், மக்கள் நலச் சட்டங்களை இயற்றி, அவற்றின் வாசகங்களை நாடெங்கிலும் தூண்களில் பொறித்து வைத்தான். இதுவே நவீன சட்டங்களின் தோற்றமாக கருதப்படுகின்றது. பபிலோனியர் காலத்தைக் கணிக்கும் கலண்டரும் பாவித்து வந்தார்கள். அவர்களின் நாட்காட்டியில் 12 மாதங்களும், ஒரு மாதத்திற்கு 30 நாட்களும், ஒரு நாளுக்கு 24 மணித்தியாலங்களும் இருந்தன. பபிலோனிய சக்கரவர்த்தி நெபுகாநேசர் காலத்தில் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரை விரிவுபடுத்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, பபிலோனிய தலைநகருக்கு நாடுகடத்தப் பட்டதாக யூத வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தின் கீழ் வாழும் சிறுபான்மை இனத்தவர்களைப் போல, யூதர்களும் பபிலோனிய தலைநகருக்கு இடம்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.

ஈராக்கிற்கு அரேபியர்கள் (முஸ்லிம்கள்) வருவதற்கு முன்னர், அதாவது கி.மு. 331 முதல் கி.பி. 636 வரை, ஈராக் முழுவதும் பாரசீகப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. இடையில் சில காலம் அலெக்சாண்டரின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்து குடியேறிய கிரேக்கர்களும் அங்கே வாழ்ந்தனர். அரேபியரின் படையெடுப்பு இஸ்லாமை கொண்டு வரும் வரை, சாரதூசர் என்ற தத்துவஞானியின் மதம் உத்தியோகபூர்வ மதமாக இருந்தது. "மாஸ்டா" என்ற கடவுளை வழிபாடும் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாக விளங்கியது. (சாரத்தூசரின் ஓரிறைக் கோட்பாடு யூத/கிறிஸ்தவஇஸ்லாமிய மதங்களுக்கு முந்தியது.) பாரசீக சாம்ராஜ்யத்தினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும், உள்நாட்டுக் குழப்பங்களும், அரேபியரின் படையெடுப்புக்கு சாதகமாக அமைந்து விட்டன.

பாரசீகப் படைகள் இஸ்லாமியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, ஈராக்கும் இஸ்லாமியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. அரேபிய தீபகற்பத்தை சேர்ந்தவர்கள் ஈராக்கின் பல பகுதிகளிலும் சென்று குடியேறினார்கள். உள்ளூர் மக்களையும் இஸ்லாமிய மதத்தை தழுவச் செய்தனர். அவ்வாறு மதம் மாறியவர்கள் ஆளுபவர்களின் மொழியாகிய அரபு பேசக் கற்றுக் கொண்டார்கள். பாக்தாத் நகர் விரிவு படுத்தப்பட்டு, பேரரசின் அரசியல்-கலாச்சார மையமாகியது. சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகப் போக்குவரத்தினாலும் பாக்தாத் பலனடைந்தது. மேலும் கீழைத்தேய நூல்கள் பல பாக்தாத் அரசவையில் மொழிபெயர்க்கப் பட்டன. அந்த நூல்களில் சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் லத்தீனிலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

இஸ்லாமியர்கள் தமது மதத்தை நிறுவனப் படுத்திய பொழுது, அதன் தலைமையை "உம்மா" (பாராளுமன்றம்?) என்ற பிரதிநிதிகளின் குழு பொறுப்பேற்றது. உம்மாவின் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்?) நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். உம்மாவின் உறுப்பினர்கள் தமக்குள் கூடி "கலீபா" என்ற பிரதிநிதியை (பிரதம மந்திரி?) தெரிந்தெடுப்பார்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அரசுகளின் கலீபாக்கள் அனைவரும் அவ்வாறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். முகமது நபியின் மருமகன் அலி யை சில பிரதிநிதிகள் உம்மாவின் தலைவராக தெரிவு செய்தனர். ஆனால் இன்னொரு பிரிவு அதனை எதிர்த்தது. கி.பி. 661 ம் ஆண்டு, ஈராக் நகரான கூபா வில் வைத்து அலி படுகொலை செய்யப்பட்டார். இதன் விளைவாக அலியின் ஆதரவாளர்களும், எதிராளிகளும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். அந்த சகோதர யுத்தம் இஸ்லாமிய மதத்தில் பிளவுக்கு வழி வகுத்தது. அன்றிலிருந்து அலியை பின்பற்றியோர் ஷியா (ஷியா அத் அலி - அலியின் கட்சி) முஸ்லிம்கள் என அழைக்கப்பட்டனர். ஏனையோர் சுன்னி முஸ்லிகள் என்று அழைக்கப்படலாயினர்.
ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான பகை இன்று வரை தொடர்கின்றது. இரண்டு பக்கமும் உள்ள மதவெறியர்கள் அந்தத் தணல் அணையாமல் பாதுக்கின்றனர். முதலாவது இஸ்லாமிய சகோதர யுத்தத்திற்கு பின்னர், ஷியா முஸ்லிம்கள் தமக்கென தனியான மதச் சம்பிரதாயங்களை பின்பற்றி தனிச் சமூகமானார்கள். இன்றைய ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், கிராமப்புற விவசாய சமூகமாக வாழ்ந்து வருவதால் அரசியலில் ஒதுக்கப்பட்டனர். சுன்னி முஸ்லிம்கள் பெரு நகரங்களில் வாழ்ந்து வருவதால், நீண்ட காலமாக அரசு நிர்வாகத்தில் கோலோச்சினார்கள்.
16 ம் நூற்றாண்டில், அரேபிய அரச வம்சங்கள் இஸ்லாமியப் பேரரசை கட்டியாள தடுமாறிக் கொண்டிருந்தன. மேற்கில் துருக்கி ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவாகியது. இஸ்லாமிய மதத்தை தழுவியதால், பல்வேறு துருக்கி இனங்கள் ஒன்று சேர்ந்தன. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த துருக்கி இனங்கள், ஈராக்கில் நிலவிய உன்னதமான இஸ்லாமிய நாகரீகத்தை கண்டு வியந்தனர். (நமது நாட்டு மக்கள் ஐரோப்பியரின் நாகரிக வளர்ச்சியை கண்டு வியப்பதற்கு ஒப்பானது.) ஒன்றிணைந்த துருக்கி இனங்களின் அரசியல்-இராணுவ தலைமை ஒஸ்மானியர்கள் (ஆங்கிலத்தில் : ஓட்டோமான்) என்ற அரச வம்சத்தின் கைகளில் இருந்தது. விரைவிலேயே முழு அரபு பிரதேசங்களும் ஒஸ்மானியரின் ஆட்சியின் கீழ் வந்தன. முதலாம் உலகப்போரில் எதிரணியில் நின்ற ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், ஈராக் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியமாக இன்றைக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மையினம் ஈராக்கில் வாழ்கின்றது.

(தொடரும்)

Saturday, August 21, 2010

நெதர்லாந்தை உலுக்கிய அரசியல் படுகொலை

பிம் போர்தைன் (Pim Fortuijn) என்ற வலதுசாரி அரசியல் தலைவர் 6-5-2002 சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது, ஐரோப்பா எங்கும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. இது வரை காலமும் தென் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இடம்பெற்று வந்த அரசியல் படுகொலைகள் அமைதியான, அரசியல் சகிப்புத்தனமை மிக்க நெதர்லாந்திலும் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்று ஐரோப்பா எங்கும் அரசியல் கட்சிகள் வளர்ந்து வரும் நிலையில் அப்படியான தலைவர் கொல்லப்பட்டதும் அதிர்ச்சிக்கு காரணம்.

நெதர்லாந்தில் நீண்ட காலமாகவே நவ நாசிச, அல்லது தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகள் காலூன்ற முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக "தாழ்நில மாதிரி" (Polder Model ) என்று அழைக்கப்பட்ட அரசியல் கொள்கை நடைமுறையில் இருந்தது. இந்த கொள்கையின் படி, முதலாளிகளும் சமரசவாத தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது முதலாளிகள் வாழ்க்கைச் செலவுக்கேற்ற (மேலதிகமாக சேமிக்கக் கூடிய) ஊதியம் வழங்குவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தங்கள் எதிலும் இறங்கக் கூடாது. இது போன்ற உடன்படிக்கைகள் தான் மேற்கத்திய நாடுகளில் தொழிலாளர்கள் வளமாக வாழ்வது போன்ற தோற்றத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.

ஆனாலும் எவ்வளவு காலத்துக்கு தான் முதலாளிகள் பொறுத்துக் கொள்வார்கள்? எண்பதுகளின் இறுதியில் தோன்றிய பொருளாதார வளர்ச்சியின்மை, தொழிலாளரின் நலன்களை பாதிக்கும் சீர்திருத்தங்களுக்கு நிர்ப்பந்தித்தது. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் முடிவுக்கு வந்த பின்னர், "கம்யூனிசம் இறந்து விட்டது." என்று அறிவித்தாகி விட்டது. ஆகவே இனி "கம்யூனிச அபாயம்" வரவே வராது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டன மேற்கு ஐரோப்பிய அரசுகள். முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை ஏற்று மெல்ல மெல்ல பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். விளைவு: லட்சக்கணக்கான மக்களின் வேலையிழப்பு, வருமான இழப்பு, வறுமை. பணக்கார நாடுகளில் வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு நெதர்லாந்தும் விதிவிலக்கல்ல.

சமூகப் பொருளாதார பிரச்சினைகளை தீவிர வலதுசாரிக் கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. வேலையில்லாத பிரச்சினை அதிகரிப்பதற்கு காரணம், "அகதிகளும், வெளிநாட்டவர்களும் எமது வேலைகளை பறிப்பது தான்." என்று பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில் "அழுக்கான, கடினமான வேலைகள்" என்று இந்நாட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட தொழில்களைத் தான், வெளிநாட்டவர்கள் செய்கிறார்கள். வெளிநாட்டு தொழிலாளருக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, அதிக உழைப்பை சுரண்டலாம் என்ற காரணத்தால் தான் முதலாளிகள் அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். வெளிநாட்டு உழைப்பாளிகளோ நாணய மதிப்பு உயர்வு காரணமாக, தாம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வருகின்றனர். அதனால் தாம் சுரண்டப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. இத்தகைய உண்மைகளை தீவிர வலதுசாரி சக்திகள், தம் மக்களுக்கு கூறுவதில்லை. வெளிநாட்டவர்களை வெளியேற்றினால், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

இரண்டாம்தரப் பிரஜைகளாக தாம் நடத்தப்படுவதாக உணர்ந்த, இரண்டாம் தலைமுறை அரபு, கறுப்பின இளைஞர்கள், தைரியமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது செல்வம் சமமாக பகிர்ந்தளிக்கப்படாத, இரண்டு பட்ட சமூகத்தை காட்டுகின்றது. அதாவது வேலைவாய்ப்புகள், வருமானம் இரண்டு சமூகங்களுக்கும் சமமாக கிடைப்பதில்லை. ஆனால் இந்த உண்மையும் மறைக்கப்பட்டு, வெளிநாட்டு குடியேறிகள் அனைவரும் குற்றப்பரம்பரை போல காட்டுகின்றனர். வெளிநாட்டு கிரிமினல்களிடம் இருந்து உள்நாட்டு (வெள்ளையின) மக்களை பாதுகாப்பது என்ற கொள்கை அடிப்படையில் ஒரு வலதுசாரிக் கட்சி தோன்றியது. "வாழ்வதற்கேற்ற நெதர்லாந்து" என்ற கட்சியின் தலைவராக பிம் போர்தைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிம் தலைவரான உடனே பல அதிரடி அறிவிப்புகளால் பிரபலமானார்.
"சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமன் என்ற ஷரத்தை அகற்ற வேண்டும்."
"புதிதாக அகதிகள் வருவதை முற்று முழுதாக தடுக்க வேண்டும்."
"இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம்" போன்ற சில உரைகள் உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இந்த உரைகள் நாஜிகளின் உரைகள் போன்றிருப்பதாக கண்டனம் எழவே, கட்சி பிம்மை வெளியேற்றியது. பிம் வெளியேற்றப்பட்டதும் நெதர்லாந்தின் பிரதான வர்த்தக நிறுவனங்கள் தாம் கட்சிக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருமாறு கேட்டன. இந்தச் செயல் முதலாளிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுக்கு சான்று.

பிரபலத்தை தேடிக் கொண்ட பிம் போர்தைன் தனது பெயரிலேயே புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் சார்பாக அத்தேர்தலில் நின்றவர்கள் அரசியல் முன்னனுபவம் அற்றவர்கள், அல்லது வணிகர்கள். இது வரை காலமும் இனவாதக் கதைகளை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பேசிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், பிம்மை தம்மில் ஒருவராக கண்டனர். பெரும்பான்மை மக்கள் தமது கருத்துக்கு உடன்பாடான அரசியல்வாதியாக பிம்மை கருதியதால், ஊடகங்கள் அவரை "நவநாஜி" என்று விமர்சிக்க தயங்கின. அதற்கு மாறாக செய்தி ஊடகங்கள் அவருக்கு "வெகுஜன அரசியல்வாதி" என்று பெயர் சூட்டின. முன்னொரு காலத்தில் ஹிட்லர் கூட அவ்வாறு தான் அழைக்கப்பட்டார்.

தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் பிரபலமடைவதற்கு தொடர்பு ஊடகங்களும் ஒரு காரணம்.
வலதுசாரிகளின் ஒவ்வொரு சொல்லையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விளம்பரப்படுத்தும் ஊடகங்கள், இடதுசாரி அரசியல்வாதிகளின் பேச்சுகளை கண்டுகொள்வதில்லை. அதிகம் பேசப்படுவதால் தீவிர வலதுசாரிகளுக்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது. எதிர்பாராத விதமாக, பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், வானொலி நிலையம் அருகில் வைத்து பிம் போர்தைன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டவன் ஒரு தீவிர இடதுசாரி வாலிபன் என்று கூறுகிறார்கள். ஆனால் கொலைக்கான காரணமோ, அல்லது அவனுக்குப் பின்னால் ஒரு இயக்கம் இருந்ததாகவோ இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இதற்கிடையே கொலை சம்பந்தமான விசாரணையை மேற்கொண்ட வழக்கறிஞர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் கொலையில் நெதர்லாந்து புலனாய்வுத் துறை சம்பந்தப் பட்டிருந்ததா என்ற கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்விகளை ஒரு கலைஞர் திரைக்கதையாக வடிவமைத்து ஒரு சினிமாப் படம் தயாரித்தார். சில வருடங்களுக்குப் பின்னர், தேயோ வான் கொக் என்ற அந்த சினிமாக் கலைஞர் பட்டப் பகலில் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு இஸ்லாமிய தீவிரவாதி கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கிலும், வக்கீலும், சில புலனாய்வு ஊடகங்களும் மேற்கொண்ட விசாரணைகள் மேற்கொண்டு நகர முடியாது தடைகள் வந்த வண்ணம் உள்ளன.
****************************************
சினிமாக் கலைஞர் தேயோ வான் கொக் எடுத்த, பிம் கொலை மர்மத்தை துப்பறியும் திரைப்படம் (May 6th.). படம் தயாரித்த சில மாதங்களின் பின்னர் அந்த சினிமாக் கலைஞரும் அதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Friday, August 20, 2010

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்

ஆம்ஸ்டர்டாம் நகரில் வெளிநாட்டுப் பிள்ளைகள் கல்வி கற்கும் இடைநிலை தொழில்நுட்பக் கல்லூரி. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் அங்கே அலுவலகப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் வேலைக்கு வரும் போது வாசலில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு பாடசாலைக்கு போலிஸ் பாதுகாப்பளிப்பதை அப்போது தான் பார்க்கிறேன். கல்லூரியின் பெண் நிர்வாகிக்கு தொலைபேசி மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், அந்த ஏற்பாடு என்று பின்னர் அறிந்து கொண்டேன். மிரட்டல்களுக்கு காரணம் இரண்டு மாணவிகளின் தற்காலிக இடைநிறுத்தம். அந்த மாணவிகள் செய்த குற்றம், பாடசாலைக்கு முகத்தை மூடும் பர்தா அணிந்து வந்தது தான். விடுமுறைக்கு மொரோக்கோ சென்ற இஸ்லாமிய மதப்பற்றுள்ள மாணவிகள், பாடசாலை தொடங்கிய போது "விசித்திரமான கருப்பு ஆடை" அணிந்து வந்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம்வாசிகள் பலருக்கு கூட எமது கல்லூரியின் பெயர் தெரியாது. ஆனால் பர்தா விவகாரம் நாடு முழுவதும் பேச வைத்தது. "பொது இடங்களில், பாடசாலையில் பர்தா அணிய அனுமதிக்கலாமா?" என்று ஊடகங்கள் அனல் பறக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தன. எமது அலுவலகத்தின் உள்ளேயும் அது குறித்த பேச்சு அடிபட்டது. மதிய உணவு இடைவேளையின் பொழுது, பர்தா அணிவதன் சாதக,பாதகங்கள் குறித்து விவாதித்தார்கள். எனது சக - ஊழியர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்கள். லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பினப் பெண்மணி, "பர்தா மாணவிகள்" ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளாக பயிற்சி எடுப்பதை குறிப்பிட்டு விமர்சித்தார். "இவர்கள் நாளை ஒரு ஆரம்ப பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தால், குழந்தைகள் பேயைக் கண்டவர்களாக அலறித் துடித்து ஓடுவார்கள்" என்றார். எமது குழுவில் இருந்த மொரோக்கோ, துருக்கியை சேர்ந்த முஸ்லிம் ஊழியர்களும், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மூளைக் கோளாறு என்றனர். இதற்கிடையில் சர்ச்சையை தோற்றுவித்த மாணவிகள் சில நாட்களில் தோற்றுப்போன நீதிமன்ற வழக்கின் பின்னர், வழமையான உடையில் பாடசாலைக்கு வந்தார்கள்.

2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, நெதர்லாந்திலும் இஸ்லாம் ஒரு முக்கிய பிரச்சினை. கடைசியாக நடந்த தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி ஒன்று (PVV ), முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியேற அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றது. இருபது வருடங்களுக்கு முன்னர் இது போன்ற கருத்துகளை கூறுபவர்கள் இனவெறியர்களாக முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் இன்று அவை சாதாரண கருத்துச் சுதந்திரமாக பார்க்கப்படுகின்றது. PVV என்ற இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியின் வெற்றிக்கு ஊடகங்களும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்தக் கட்சியின் தலைவர் வில்டர்ஸ் பெரும்பான்மை (வெள்ளையின) நெதர்லாந்துக்காரரின் மனக்குமுறலை பிரதிபலிப்பதாக போற்றப்படுகின்றார்.

உண்மையில் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய நாட்டு தொழிலாளரின் வருகையோடு தொடங்குகின்றது. ஐம்பதுகளில், அறுபதுகளில் லட்சக்கணக்கான முஸ்லிம் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளுக்காக தருவிக்கப்பட்டனர். இன்று வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்களின் நிலையுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் ஐரோப்பாவில், காலப்போக்கில் தொழிலாளர்களின் குடும்பங்களை கூட்டி வர அனுமதிக்கப்பட்டது. அவர்கள் வரும் பொழுது தங்களுடன் மதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். இதனால் ஐரோப்பியரிடம் இருந்து அந்நியப்பட்ட மக்கள் குழுவொன்று இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் கலாச்சாரக் காவலர்களைப் போலவே, முஸ்லிம்களும் தமது பெண்களை கலாச்சாரக் காவிகளாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஐரோப்பியர்கள் அதனை வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். "முஸ்லிம் குடும்பங்களில் ஆண்கள் பெண்களை அடக்கி வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் முக்காடு." முஸ்லிம் பெண்கள் அணியும் தலையை மூடும் முக்காடு பற்றிய சராசரி ஐரோப்பியரின் புரிதல் அது.

ஐரோப்பாவில் இப்போதெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து அதிகம் பேசுகிறார்கள். இந்த "நவீன பெண்ணிய" சிந்தனை, பல வெள்ளையின ஆண்களையும் ஆட்கொண்டுள்ளது. ஐரோப்பிய பெண்கள் எப்போதோ சம உரிமை பெற்று விட்டதாகவும், தாம் இப்போது முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக போராடுவதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் கணவன்மார் தமது மனைவிகளை அடித்து வதைப்பதாக தொலைக்காட்சியில் தனியான நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். அதே நேரம், வெள்ளையின குடும்பங்களுக்குள்ளும் கணவன் மனைவியை அடிக்கும் பிரச்சினை இருப்பது குறித்து பேசப்படுவதில்லை. அதே போலத் தான், சமபாலுறவுக்காரரின் உரிமைகள் பற்றிய கதையாடல். முஸ்லிம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தாக்கப்பட்டால் அது செய்தி. அதற்காக வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இன்றைக்கும் ஓரினச்சேர்க்கையாளரை வெறுக்கும் வெள்ளையர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குகிறார்கள். கிறிஸ்தவ பாடசாலைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அவமதிக்கப்படுகினறனர். மேலும் இது போன்ற பிரச்சினைகள், இங்கு வாழும் இந்து, பௌத்த மதங்களை பின்பற்றும் சமூகங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் அதைப் பற்றி எந்த ஊடகத்திற்கும் அக்கறை இல்லை.

அதி உன்னத நாகரிக வளர்ச்சியடைந்த நெதர்லாந்தில் SGP என்றொரு கிறிஸ்தவ கட்சி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கட்சியில் பெண்கள் உறுப்பினராக சேர முடியாது என்ற விதி இருந்தது. தற்போது அதனை தளர்த்திய போதிலும், தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க தடை உள்ளது. "ஏனெனில் பெண்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள். கணவனுக்கு பணிவிடை செய்வதும், பிள்ளை பராமரிப்பதும் ஒரு நல்ல கிறிஸ்தவ பெண்மணியின் கடமை." இவ்வாறு தான் SGP தலைமை பிற்போக்காக சிந்திக்கிறது. இந்த நாட்டில் முஸ்லிம் பெண்கள், துப்பரவுப் பணியாளர்களாக குறைந்த ஊதியம் பெறும் தொழில் செய்கிறார்கள். அவர்களது ஊதிய உயர்வுக்காக பெண்ணியவாதிகள் போராட மாட்டார்கள். கணவனால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் பெண்கள் அடைக்கலம் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். அரசு அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. ஆனால் பெண்ணியம் பேசும் இஸ்லாமிய எதிர்ப்பு வலதுசாரி அரசியல்வாதிகள், முஸ்லிம் பெண்களின் முக்காடுகளையும், பர்தாக்களையும் கழற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.

Wednesday, August 18, 2010

அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்


இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா - பகுதி 2

பிரபல ஹாலிவூட் இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalipto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.

இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப் பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத் தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப் போல நரபலி கொடுப்பது ஒரு "தேசிய விளையாட்டுப் போட்டியாக" இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. "பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்." அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், "கெட்சகோடல்" தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா) ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப் படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.

ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், "இன்கா ராஜ்ஜியம்" என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.

"தவாந்தின்சுஜூ" (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், "ஐய்லு" எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட "கம்யூன்" சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.

நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.

அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.

இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.

ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், "பொட்டோசி" என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.

தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.

ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.

"தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”
கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். "வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..." என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”

ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். "எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்." என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, "இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்." என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.

காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, "துபாக் அமாரு புரட்சி அமைப்பு", பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.
(தொடரும்)
***********************************

லத்தீன் அமெரிக்க தொடரின் முதலாவது பகுதி:
இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா

Monday, August 16, 2010

வார்சோ ஒப்பந்த அகதிகள்


போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை
Part 2
போலந்து நாட்டினருக்கு அகதித் தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஹிட்லர் போலந்தை ஜெர்மனியுடன் இணைத்த பொழுது, போலிஷ் அரசு பிரிட்டனில் அகதியாக தஞ்சம் கோரியது. கம்யூனிஸ்ட்கள் மொஸ்கோவில் தஞ்சம் கோரினார்கள். நாஸிகளின் இன அழிப்புக்கு தப்பிய யூதர்கள் அகதியாக அமெரிக்கா வரை சென்றார்கள். நாஸிப் படைகளை தோற்கடித்த சோவியத் செம்படையுடன் கம்யூனிஸ்ட்கள் திரும்பி வந்து சோஷலிச ஆட்சி அமைத்தார்கள். சோஷலிச போலந்தில் அதிருப்தியடைந்த ஒரு கூட்டம் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக ஓடினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள், தொழிற்சங்கங்களின் இடையறாத போராட்டம் காரணமாக, கம்யூனிஸ்ட்கள் விட்டுக் கொடுத்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன் முதலாக போலந்தில் தான் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. மேற்குலகில் அடைக்கலம் கோரிய போலிஷ் புத்திஜீவிகள் நாடு திரும்பினார்கள். சுபம்.
கதை அத்துடன் முடியவில்லை. அதுவரை அகதிகளை அனுப்பிக் கொண்டிருந்த போலந்து, 20 ம் நூற்றாண்டின் இறுதியில், அகதிகளை பொறுப்பேற்க வேண்டிய கடமைக்குள்ளானது. சோஷலிசத்தின் வீழ்ச்சியில் இரும்புத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கிழிந்த திரையூடாக வேற்றின அகதிகள் வருகை தந்தார்கள். ரஷ்யர்கள், தெற்காசிய, ஆப்பிரிக்க அகதிகளின் புகலிடமாக போலந்து மாறியது.

போருக்குப் பின்னர், கம்யூனிஸ்ட்கள் எழுத்தறிவற்ற மக்களின் தேசத்தை பொறுப்பேற்றார்கள். அனைத்து பிரஜைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அளித்தார்கள். இதனால் புதிதாக தோன்றிய நடுத்தர வர்க்கம் ஒன்று, மேலதிக உரிமைகளைக் கோரியது. தொன்னூறுகளில் நான் சந்திந்த போலந்து மாணவி ஒருவர் பின்வருமாறு கூறினார். "கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஜனாதிபதியை ...... மகன் என்றெல்லாம் திட்ட முடியாது. பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். இப்போது தாராளமாக திட்டலாம். யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்." நடுத்தர வர்க்கம் போராடிப் பெற்ற பேச்சு சுதந்திரம் அது. இன்று அதே போலந்தில் பாதுகாப்புப் படையினர் அகதிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பவர்களை விரட்டுகிறார்கள். பொதுவாகவே அகதிகள் எதிர்ப்புப் குரல் கொடுக்க தைரியமற்றவர்கள். அவர்கள் சார்பாக சிறிய இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த போலிஷ்காரரே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் இங்கே எழுதப் போகும் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. அதிலிருந்து யாருக்கான கருத்துச் சுதந்திரம் குறித்து உலகம் அக்கறை கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப காலங்களில், அதாவது போலந்து முதலாளித்துவ - ஜனநாயக நாடாக மாறிய தொன்னூறுகளில், ஆட்கடத்தல்காரர்களே அகதிகளை போலந்து கூட்டி வந்தார்கள். ஏற்கனவே விசா வழங்கும் நடைமுறையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கியிருந்தன. போலந்துக்கு வருவது அவ்வளவு கஷ்டமல்ல. போலந்து விசா கிடைக்காவிட்டாலும், அருகில் இருக்கும் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு விசா எடுத்து விட்டு, பின்னர் எல்லை கடக்கலாம். போலந்தின் மேற்கு புற எல்லையில் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கடந்து விட்டால் மேற்கைரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரலாம். மெல்ல மெல்ல போலந்திற்குள் வரும் அகதிகளின் நடமாட்டம் குறித்து எல்லைக்காவல் படை விழிப்புற்றது. இதனால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல அகதிகள் எல்லை கடக்கும் பொழுது சிக்கிக் கொண்டார்கள். ஐ.நா.அகதிகள் உயர் ஸ்தானிகராலய நெறிப்படுத்தலின் கீழ், போலந்து அரசு அகதிகளைப் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்படி இருந்தும் பலர் அங்கே தங்கவில்லை. சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் எல்லை கடந்து ஓடினார்கள்.

போலந்தில் பதிந்த அகதிகள் சரிவர பராமரிக்கப்படாதது, அவர்கள் ஓடுவதற்கு ஒரு காரணம். ஒரு ஐரோப்பிய நாட்டில் நுழைந்தால், அங்கே தான் முதலில் அகதித் தஞ்சம் கோர வேண்டும் என்ற சட்டம் அப்போதே வந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரியவர்களிடம், போலந்தில் தஞ்சம் கோராதமைக்கு, அல்லது அங்கே நிரந்தரமாக தங்காமைக்கு காரணம் கேட்கப்பட்டது. அபோதெல்லாம் போலந்து அரசின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷயம் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய தலையிடியாக இருந்தது. ஏனெனில் போலந்து ஊடாக வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜெர்மனி ஒரு வழி கண்டுபிடித்தது.

போலந்தில் அகதிகளைப் பராமரிக்கும் அரச திணைக்களம் ஒன்றை உருவாக்க ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது. போலந்திற்கு வரும் அகதிகளைப் பதிவது மட்டுமல்ல, உணவு, உறைவிடம் வழங்குவதும் அந்தத் திணைக்களத்தின் பொறுப்பு. விசாரணை நடத்தி தகுதியான அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வதிவிட அனுமதி வழங்க வேண்டும். இதிலே குறிப்பிட வேண்டியது என்னவெனில், எத்தனையோ வருடங்களாக UNHCR எடுத்துக் கூறியும் கேட்காத போலந்து அரசு, ஜெர்மனி சொன்னதும் கேட்டது. அதற்குக் காரணம் அகதிகளை போலந்தில் வைத்து பராமரிக்கும் செலவை ஜெர்மனி பொறுபேற்றுக் கொண்டது. உண்மையில் அதற்காக நிதி ஒதுக்குவதன் மூலம், பல மில்லியன் யூரோக்களை ஜெர்மனி மிச்சம் பிடிக்கின்றது. போலந்தில் இருக்கும் அத்தனை அகதிகளும் ஜெர்மனி வந்தால்? இதைவிட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

போலந்தில் பதியப்பட்ட அகதிகளில் பெரும்பான்மையோனோர் செச்னியர்கள் (ரஷ்யா). அதை விட அல்ஜீரியா, பங்களாதேஷ், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், தஞ்சம் கோருகின்றனர். வருடந்தோறும் சில நூறு இலங்கை (தமிழ்) அகதிகள் தஞ்சம் கோரியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் போலந்து முழுவதும் நூறு தமிழ் அகதிகள் இருந்தாலே அதிகம். வார்சோ நகரில் எப்படியும் நாற்பது, ஐம்பது பேர் ஆவது வசிக்கலாம். வார்சோ நகரில் வசிக்கும் தமிழர்களில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்து தங்கி விட்டவர்களும் உண்டு. சிலர் ஆட்கடத்தல் வேளைகளில் ஈடுபட்டவர்கள். சிலர் உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு போலந்துவாசியானவர்கள்.

போலந்தில் அகதியாக பதிவதற்கென்று ஒரேயொரு நிலையம் மட்டுமே உள்ளது. உக்ரைன் நாட்டு எல்லைக்கருகில், Debak எனுமிடத்தில் மட்டுமே புதிய அகதிகளை பதிவார்கள். போலந்தில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அனேகமாக எங்கோ தொலைதூர நாட்டுப்புறத்தில், காட்டுக்கு மத்தியில் அந்த முகாம் இருக்கும். சுற்றிவர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளியார் யாரும் செல்ல முடியாது. மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, சிறிதளவு பணம் செலவுக்கு கொடுப்பார்கள். போக்குவரத்துக்கு, தொலைபேசுவதற்கு அதெல்லாம் போதாது. முகாமில் வசதிக் குறைபாடுகள் இருப்பதால், பலர் வெளியே வாழ்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நகரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வீடுகளில் வசிக்க முடியும். அப்படி வசிப்பவர்களுக்கு 750 ஸ்லொட்டி (200 யூரோ) வழங்கப்படும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் அதற்குள் தான் சமாளிக்க வேண்டும். அவர்கள் மாதமொரு தடவை உதவிப்பணம் எடுப்பதற்காக ஒரு காரியாலயம் செல்ல வேண்டும்.

வார்சோ புறநகர்ப் பகுதி ஒன்றில் (விமான நிலையம் அருகில்) அகதிகள் உதவிப்பணம் பெரும் காரியாலயம் அமைந்துள்ளது. விசா காட் புதிப்பிக்க வேண்டுமானாலும் அங்கே செல்ல வேண்டும். வார்சோ மத்தியில் இருந்து மெட்ரோ எடுத்து சென்று, அதன் பிறகு 45 நிமிடம் பஸ்ஸில் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்படியும் சுமார் ஒரு கி.மி. பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அகதிகளுக்கான அரசுக் காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி மரங்கள் மறைத்திருக்கின்றன. உள்ளே நுழைய முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஸ்கேன் மெஷின் ஊடாக செல்ல வேண்டும். அதே அலுவலகத்திற்கு மேலே ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. அனேகமாக நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளை அங்கே அடைத்து வைத்திருக்கலாம். தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட சிலரை, அங்கே விசா புதுக்க வரும் போதே தடுத்து வைத்து விடுவதாக அறிந்தேன். அலுவலகப் பணியாளர்கள், ஆங்கில, ரஷ்ய மொழிகளை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். சுவரில் அகதிகளை திருப்பியனுப்புவதை பொறுபேற்கும் IOM, மற்றும் UNHCR பிரசுரங்கள் சில காணப்பட்டன. அகதிகள் என்றால் நோய்க்காவிகள் என்று கருதினார்களோ என்னவோ, UNHCR பிரசுரம் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது.

போலந்தில் அகதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், விதிவிட அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப் படுகின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக தஞ்ச வழக்கு நடந்து கொண்டிருந்தால், "Okrana " என்ற வதிவிட அனுமதி வழங்குகிறார்கள். அதன் கால எல்லை ஒரு வருடம், சில நேரம் இரண்டு வருடங்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதனை நிரந்தர வதிவிட அனுமதியாக வழங்குவது குறைவாகவே உள்ளது. Okrana அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யலாம். வார்சோ நகரில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் பலதரப் பட்ட வேலைகளை செய்கிறார்கள். உதவிப்பணம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படுவதால், வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம். பல வருடங்களாக போலந்தில் வாழும் தமிழர்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றில் ரெஸ்டாரன்ட், அல்லது கடை வைத்துள்ளனர். இவர்ளை விட பலர் தற்போது கல்லூரிகளில் படிப்பதற்கென்று வருகிறார்கள். அவர்களில் சிலர், போலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர்.

முதலாவது பகுதியை வாசிக்க:
போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

Sunday, August 15, 2010

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவிற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது. பாடசாலை பாடங்களில் ஓரிரு தடவைகள் போலந்து பற்றிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்றுப் பாடத்தில் வரும் வார்சோ ஒப்பந்த நாடுகள், விஞ்ஞானப் பாடத்தில் வரும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த மேரி கியூரி, இதற்கப்பால் போலந்து பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது. எண்பதுகளில் தெரிவான பாப்பரசர் ஜான் பால் கத்தோலிக்கர்கள் மத்தியில் போலந்து குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை. அதற்கு காரணம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல, போலந்து பற்றிய செய்திகளும் மேற்குலகில் பட்டு எதிரொலித்தே எமக்கு கிடைக்கின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புபவர்களும் போலந்தை தவிர்த்தார்கள். அதற்குக் காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை என்பது தான். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கூற்றில் நியாயம் இருந்தது. வேலையில்லாப் பிரச்சினையால் போலந்து உழைப்பாளிகள் மேற்குலகிற்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பியக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள பெரிய நாடுகளில் போலந்தும் ஒன்று. அதன் இன்றைய எல்லைகள் இரண்டாம் உலகப்போரின் பின்னர் நிர்ணயிக்கப்பட்டன. போலந்தின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டு அன்றைய சோவியத் யூனியன் வசமாகியது. இன்று அது பெலாரஸ் குடியரசின் பகுதி. அந்த நாட்டில் பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) என்ற மக்கள் பேசும் மொழி, போலிஷ் மொழி போன்றிருக்கும். போலந்தில் பேசப்படும் போல்ஸ்கி மொழி, ரஷ்ய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. போலந்துக் காரருக்கு ரஷ்யருடன் உள்ள ஜென்மப் பகை காரணமாக இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழி கற்பதை வெறுக்கிறார்கள். போலந்து சோஷலிச முகாமில் இருந்த காலங்களிலும் பெரும்பான்மை மக்கள் ரஷ்ய மொழி கற்கவில்லை. சரித்திர ரீதியாக போலந்து கத்தோலிக்க நாடு என்பதால், நீண்ட காலமாக மேற்கைரோப்பாவுடன் தொடர்புளை பேணி வந்தனர். சோஷலிச ஆட்சியிலும் கத்தோலிக்க தேவாலயத்தின் அதிகாரங்கள் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டாலும், செல்வாக்கு குறையாமல் இருந்தது.

சோஷலிச போலந்தை வீழ்த்துவதற்கு பாப்பரசர் ஜோன் போலும், கத்தோலிக்க மத நிறுவனமும் உதவினார்கள். "கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்த" போலந்து மீண்டும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று கணக்குப் போட்டார்கள். அது தப்புக்கணக்கு என்று பின்னர் தெளிவானது. முதலாளித்துவம் நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதிய மதத்திற்குள் மக்களை தள்ளி விட்டது. எங்கெங்கு காணிலும் பாரிய விளம்பரத் தட்டிகளின் ஆதிக்கம். வார்சோ நகரின் மத்திய பகுதியில் உயரமான கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. ஜன்னல்களை திறக்கத் தடையாக இருக்குமென்பதால் மேற்கைரோப்பிய நகரங்களில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வங்கிகள், சூப்பர் மார்க்கட்கள் என்று பெரிய வணிகக் கழகங்கள் யாவும் மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுடையவை. எங்காவது ஒன்றிரண்டு போலந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் சோஷலிச முகாம் நாடாக இருந்த போலந்து ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்று விட்டது. கம்யூனிச காலகட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் யாவரும் அதனை நோக்கமாக கொண்டே செயற்பட்டனர். மேற்குலக சார்பு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, போலந்தின் பொருளாதாரம் வளர்முக நிலையடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததன் பலன்களை அறுவடை செய்வதாகவே தெரிந்தது. நடுத்தர வர்க்க படித்த இளைஞர்கள் மேற்கு-ஐரோப்பிய தரத்திற்கு நிகராக சம்பளம் பெறுகின்றனர். கோடை காலத்தில் தென் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்றனர். வசதிபடைத்த குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு என்று சகல வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கென பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

வார்சோ நகரம் விரைவாக மாறி வருகின்றது. அது சராசரி ஐரோப்பிய நகரம் போல தோற்றமளிக்கின்றது. புதிதாக எழும்பும் கட்டிடங்கள், செப்பனிடப்படும் வீதிகள், இவற்றில் கட்டுமானப் பணிகள் செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். போலந்து தொழிலாளர்கள், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதால், உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனால் வெளிநாட்டுத் தொழிலாளரை தருவிக்க வேண்டிய நிலை. போலந்தில் ஒரு தகமையற்ற தொழிலாளியின் சராசரி சம்பளம் 300 - 500 யூரோக்கள். வார்சோ நகரில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுப்பதென்றாலும் அவ்வளவு பணம் தேவை! இதனால் இரண்டுக்கு மேற்பட்டோர் வாடகைப் பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். போலந்து நாட்டினரைப் பொறுத்த வரை பலர் சொந்த வீடுகளில் வாழ்வதால், அவர்களுக்கு அந்த செலவில்லை.

போலந்து மக்கள் சொந்த வீட்டில் வாழ்வது, கம்யூனிச அரசு கொடுத்த சீதனம். கம்யூனிஸ்ட்கள் அனைத்து பிரஜைகளுக்கும் கட்டிக் கொடுத்த (பரம்பரையாக கிடைத்த வீடுகள் வேறு) வீடுகளை இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். போலிஷ் மக்கள் சொந்த வீடிருப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடிகின்றது. போலந்தில் வாழ்க்கைச் செலவு ஐரோப்பியத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கட்களில் பிராண்ட் பொருட்கள் யாவும் மேற்கில் விற்கும் அதே விலைக்கு விற்கப்படுகின்றன. ஆங்காங்கே உள்ளூர் தயாரிப்புகள் சீண்டுவாரின்றி கிடக்கின்றன. குறைவாக சம்பாதிக்கும் அடித்தட்டு மக்களுக்கென்றே சில சூப்பர் மார்கட்கள் இருக்கின்றன. போலந்து முதலாளிகளால் நிறுவப்பட்ட சூப்பர் மார்க்கட்களில், முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

வார்சோ நகரில் பிரமாண்டமான ஸ்டேடியம் ஒன்று கட்டப்படுகின்றது. அடுத்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்காக அதனைத் தயார் செய்கின்றனர். இதற்கென சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. ஸ்டேடியம் கட்டப்படும் இடத்திற்கருகில் ஒரு சந்தை இயங்கி வந்தது. அங்கே கடை விரித்தவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு குடியேறிகள். ஒரு சில போலிஷ்காரரை தவிர, வியட்நாமிய, நைஜீரிய, இலங்கைத்தமிழ் சிறு வியாபாரிகள் தமது சிறு தொகை வருமானத்தை அங்கே தான் தேடிக் கொள்கின்றனர். பல வியாபாரிகள் நியாயமாக வாங்கிய சரக்குகளை விற்றாலும், போலிப் பாவனைப் பொருட்களை விற்பவர்களுக்கும் அது தான் புகலிடம்.

குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்போர் போலியான பிராண்ட் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வார்சோ காவல்துறைக்கு இந்த விடயம் தெரியும் என்ற போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் நிலைமையை தலைகீழாக மாற்றியது. போலிகளை சோதனையிட போலிஸ் வருவதும், பொருட்களைத் தூக்கிக் கொண்டு வியாபாரிகள் ஓடுவதும் அவ்வப்போது நடந்து வந்தது. ஒரு நாள் அப்படியான நடவடிக்கையின் போது, நைஜீரிய வியாபாரி போலிசை எதிர்த்து நின்று வாதாடியுள்ளார். திடீரென ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கி முழங்கியதில், ஸ்தலத்திலேயே பலியானார். வார்சோவில் ஒரு இனக்கலவரம் உருவாக சிறு பொறி போதுமானதாக இருந்தது. ஆத்திரமடைந்த நைஜீரிய வியாபாரிகள் போலிஸ் வாகனங்களைத் தாக்கி தீயிட்டனர். கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போலிஸ் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களால் அனுப்பபட்ட விசாரணைக்குழு வந்து பார்த்து விட்டு போலிஸ் மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும் போலந்து போலிசின் நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சந்தை கலைக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு விமான நிலையம் செல்லும் வழியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டது. "அமைதியான" போலந்தில் இடம்பெற்ற கலவரம் குறித்து எந்தவொரு சர்வதேச ஊடகமும் அக்கறை கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிக்காட்டிய தமிழ் நண்பர், செய்தியை வெளியிடாத ஊடக மௌனம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினார். தமிழ் ஊடகங்களில் கலையகம் மட்டுமே இணையத்தில் அந்த செய்தியை (பார்க்க :போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை) வெளியிட்டதை சுட்டிக் காட்டினேன். வியப்புடன் என்னை நோக்கினார். கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன, போலந்தில் அகதிகளின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

(போலந்தில் ஒரு அகதி அனுபவிக்கும் இன்னல்களும், சலுகைகளும். அடுத்த பதிவில் தொடரும்)

Saturday, August 14, 2010

ஆப்கான் வீடுகளைத் தகர்ப்பது போலிஷ் படைக்கு விளையாட்டு

அப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள போலந்து நாட்டு படைகளுக்கு பொழுதுபோகா விட்டால் பொது மக்களின் குடிசைகளை குண்டு வைத்து தகர்ப்பார்கள். ஜெனீவா ஒப்பந்தப் பிரகாரம் போர்க்குற்றமாக கருதப்படக்கூடிய இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட போலிஷ் படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று போலந்து இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இன்னொரு கவலை. வீடு தகர்க்க பாவிக்கப்பட்ட ஷெல் Rosomak துருப்புக்காவி வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. ஒரு ஷெல்லின் விலை 150 - 300 யூரோ. ஆப்கான் பொது மக்களின் சொத்து அழிந்ததைப் பற்றி இராணுவத் தலைமையகத்துக்கு கவலை இல்லை. பயிற்சியின் போது, அல்லது விசேட தருணங்களில் பாவிக்க வேண்டிய விலை உயர்ந்த குண்டுகளை இப்படி வீணாக்குகிறார்களே என்று அழுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் போலிஷ் இராணுவம் வீடு தகர்க்கும் வீடியோ ஒன்று போலந்து நாட்டு தினசரிக்கு (Rzeczpospolita) கிடைத்தது. அதைத் தொடர்ந்தே இந்த விபரீத விளையாட்டு பற்றிய விபரங்கள் வெளிவருகின்றன. Rzeczpospolita பத்திரிகைக்கு பேட்டியளித்த இராணுவ வீரர் ஒருவர், தாம் சும்மா விளையாடுக்காக வீடுகளைத் தகர்ப்பதாக தெரிவித்தார்.

வீடியோ & பத்திரிகைச் செய்தி (போலந்து)

Wednesday, August 11, 2010

காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்

காஷ்மீர்:
இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்


சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும்
துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம்
என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே
நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல முகங்களாக வெளிப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு, பாகிஸ்தான், போராளிக்குழுக்கள் இவற்றின் இடையே சமாதான பேச்சுவார்த்தை என்பது முன்வைக்கப்படும் அதே வேளையில், காஷ்மீர்
பகுதியில், 6 லட்சத்திற்கும் மேலான ராணுவ, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ராணுவப் படையினருக்கும் போராளிக் குழுக்களின் இடையிலான மோதல் என்ற பெயரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000
என்பதாகவும், மோதலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000க்கும் மேலாகவும் காணப்படுவது இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான
வெளிப்பாடாகும்.

மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு
சான்றாகும்.

சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டீஸ்சிங் புறா என்ற பகுதியில் 35 சீக்கியர்கள் எல்லைப்புற காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதற்கு பொறுப்பாளியாக போராளிக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன.
இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996ம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி
அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும். அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது 2008ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை அறக்கட்டளைக்கு அரசு நிலங்களை தாரை வார்த்து மதவெறி மோதலுக்கு (இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக) வழிவகை
செய்து அரசு செயல்பட்டதும், 2009ம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்ட விதமும்,தற்போது 3 இளஞ்சிறுவர்கள் துணை ராணுவப் படையினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எழுந்த மனக் கொந்தளிப்பை ஆற்றும் வகையில் செயல்படாமல், துணை ராணுவப் படையினரை ஆதரித்து நிற்கும் மத்திய, மாநில அரசின் நிலையும் காஷ்மீர் மக்களை, மேலும் அன்னியப்படுத்துவதாகவே அமைகிறது.

இவற்றிற்கிடையில் ராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச் சட்டம் 1990களில் ஜக்மோகன் கவர்னராக பணியாற்றியபோது பிறப்பிக்கப்பட்டது. மாறிமாறி வரும் மத்திய, மாநில அரசுகள்
இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபோதும்,எவரும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இது குறித்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எத்தகைய ராணுவ அட்டூழியங்களுக்கு துணை நின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும்
அறிவர்.

இப்பதட்டமான நிலையில் மேலும் ராணுவமயமாக்கல் என்பது நிலைமையை மோசமடையவே செய்யும். ராணுவத்தை திரும்பப் பெறுவதன் மூலமே, ராணுவமயமாக்கலை
கைவிடுவதன் மூலமே, ராணுவப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலமே பதட்ட நிலையை சீரடைய செளிணிய இயலும்.

இந்திய ராணுவத்தினரின் படுகொலையையும், படுகொலைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து நிற்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையை, போராடும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான விருப்பார்வங்களை ஒடுக்கும்,
கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே கருத இயலும். இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான இணைந்த குரலை எழுப்ப முன்வருவது அனைத்து ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் உடனடி கடமையாகும்.

இச்சூழலில் காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை இந்தியாவின் அனைத்து மக்கள் தரப்பினரையும் சென்றடைவது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு
எதிரான ஒரு வலுவான குரலை எழுப்பச் சாதகமான நிலையை உருவாக்கும். இந்த முயற்சியின் சிறு அங்கமாக தீர்ப்பாயத்தின் அறிக்கையை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழில் வெளிக்கொணருகிறது.
-------------------------------------------------------------------------------

புதைக்கப்பட்ட சாட்சியங்கள்:

இந்திய நிர்வாகத்தின் கீழ் அடங்கிய காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகளும், நீதி நிலைமைகளும் குறித்த சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!


நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52
கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.
இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச
மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர்
உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்

1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட
புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் - இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில்
இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.

பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக,ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம்.
மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்று கல்வியறிவாளர்கள்
குறிப்பிடுகின்றனர். திரளாக சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதும் இன்றி கொலைகளை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்ட
வர்களை கொலை செய்வதையும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படியெனில், இந்திய
ராணுவமும், துணை ராணுவப் படையினரும் இணைந்து “ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான” பரந்த வெளிகளை உருவாக்க, கூட்டாக புதைப்பது என்பதன் ஒரு பகுதியே
பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா ஆகிய இடங்களில் காணப்படும் புதைகுழிகள் ஆகும்.

மரணத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து (routine) ராணுவத்தாலும், உள்ளூர் காவல்துறையினரை உள்ளடக்கி, துணை ராண்வப் படையினராலும் கையாளப்பட்டது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரால் அவ்வுடல்கள் “ரகசிய புதைகுழிகளுக்கு” கொண்டு வரப்பட்டன. இப்புதைகுழிகள், உள்ளூரில் சவக்குழியை தோண்டுபவர்களோடு, அவற்றை பாதுகாப்பவர்களாலும் தோண்டப்பட்டு, அவற்றில் சாத்தியப்படும் போதெல்லாம், இஸ்லாமிய மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, சடலங்கள் தனியாகவும், குறிப்பாக ஒட்டுமொத்தமாக அல்லாமல் புதைக்கப்பட்டன.

இப்புதைகுழிகளில், சில விதிவிலக்குகளைத் தவிர,பெரும்பாலும் ஆண்களின் சடலங்கள் காணப்பட்டன. சாதாரண குடிமகனுக்கு எதிரான வன்முறை என்பது விரிவடைந்து
பெண்கள் மீதும் வன்முறை ஏவிவிடப்படுகின்றன. இவ்வாறு காணாமல் போவது, மரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிதறிப்போன குடும்பங்களை கவனிக்கும் கடமையை
மேற்கொள்ளும்படியும், நீதியை பெறுவதற்கான பணிகளில் ஈடுபடும்படியும் பெண்கள் உந்தப்படுகின்றனர். இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக
நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத
அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடடுருவும்
போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின்
வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று
சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர்.

கணிசமான நிகழ்வுகளில், சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில்
காஷ்மீர் நெடுகிலும் நடந்த “மோதல் கொலைகள்” யாவும் “போலி மோதல் கொலைகளே” என்று உண்மையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில் சடலங்கள் புதைக்கப்
பட்டதற்கு பின்னர், அவற்றை அடையாளம் காண்பதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. அவை (1) சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காண்பது (2) புகைப்படங்களை பயன்படுத்தி அடையாளம் காண்பது என்பன.

காஷ்மீரத்தின் எண்ணற்ற மாவட்டங்களில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய 50க்கும் மேற்பட்டதான மோதல் படுகொலைகள் என்று குறிப்பிட்டவை குறித்தும், இவ்வறிக்கை
ஆளிணிவு செளிணிதது. இவ்வாறு கொலை செளிணியப்பட்டவர்களில் 39பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 4 பேர் இந்து மதத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 7 பேர் எத்தகையினர் என தீர்மானிக்கப்பட இயலவில்லை. இந்த நிகழ்வுகளில் 49 பேர்கள்
பாதுகாப்பு படையினரால் “அயல்நாட்டு தீவிரவாத கலகக்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஒரு சடலம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. தொடர்ந்த
ஆளிணிவுகளின் அடிப்படையில் இவர்களுள் 47 பேர் போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் ஒருவர் உள்ளூர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது.

சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களில் மட்டுமே, பகுதியளவில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. எங்களது
ஆய்வுகளும், துவக்கநிலை சாட்சியங்களும் அங்கு நிலவும் கடுமையான நிலைமையை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து 10 மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் 1989ம் ஆண்டில் இருந்து காணாமல் போக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் 8000க்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என மதிப்பிடுவது நியாயமானதாகவே இருக்கும். இது முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் காணப்படும் சடலங்களின் எண்ணிக்கையுடன் இணையாக உள்ளது.

குற்றச்சாட்டுகள்

தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் என்ற பின்னணியில் இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரத்தில் கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்த கையாண்ட வழிமுறைகளும், திட்டங்களும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரத்தில், இந்திய ஆட்சி முறையானது மரணத்தையும், கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாட்டிற்கான தந்திரங்களாக கையாண்டு வருகிறது.
கட்டுப்பாடானது கண்காணிப்பினாலும், தண்டனையாலும்,அச்சத்தாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. “சட்டத்திற்கு புறம்பான” வழிகளிலும், சட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களாலும் மரணங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.
ஆள்வதற்கான இந்த தந்திரங்கள் கொல்வதற்கும், சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமல்லாது கொலை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் நடத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அரசின் ராணுவத்தாலும், துணை
ராணுவப் படையினராலும் தொடர்ச்சியாகவும் விரிந்த அளவிலும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இந்த அறிக்கையில் முன்வைத்துள்ள
சாட்சியங்களை பரிசீலிக்கவும், ஒப்பீட்டு பார்க்கவும், பொருத்தமானதா என பரிசீலனை செய்யவும், நம்பத்தகுந்த சுயேச்சையான சர்வதேச அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இது
மட்டுமன்றி, இவ்வமைப்புகள் இந்திய அரசை இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கோர வேண்டும் என முன்வைக்கிறது.

ஜம்மு-காஷ்மீரத்தில் இந்திய நிர்வாகம் மானுடத்திற்கு எதிராக கொடுமைகள் இழைத்துள்ளது என்ற கருத்தை சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பரிசீலிக்கவில்லை. ஐக்கிய
நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் இந்திய அரசால் காஷ்மீரம் ராணுவமயப்படுத்தப்படுவதன் மோசமான விளைவுகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ ஆற்றலற்ற வகையில் உள்ன என நாங்கஷீமீ குறிப்பிட விரும்புகிறோம். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும்
சாட்சியங்கள் குற்றவாளிகளை தண்டித்து பிற நீதித்துறை சமூகபோக்கின் ஊடே நீதியை பெறவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும்
மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக
நிகழ்த்தப்பட்டு உள்ளன. நிகழ்ந்து வரும் சச்சரவுகளில் (conflict) எந்தவித தண்டனையும் இன்றி, 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினர் தொடர்ந்து செயல்படுவதுடன் தொடர்ந்து காஷ்மீரத்தில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அரசே கூட சட்டம், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்தி வருகிறது.

xxxxxxxx

இந்திய அரசே!

* ராணுவ மயமாக்கலை உடனே கைவிடு

* காஷ்மீரத்தில் உள்ள 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினரை வாபஸ் வாங்கு!

* ராணுவப் படையினருக்கான தனிச்சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் வாங்கு!

* அப்பாவி மக்களை மோதல் படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வகை செய்!

* காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்து!
///////////////////////////////////////////////////////////////////////////////

வெளியீடு:
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட் அருகில், சேலம் - 1