Friday, March 28, 2008

வெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு


மேற்கு ஐரோப்பாவில் இருந்து ரஷ்யாவிற்கு ரயில் வண்டியில் செல்லும் பயணிகளுக்கு அது ஒரு புதிய அனுபவம் . போலந்து எல்லையை கடந்து, வெள்ளை ரஷ்ய சுங்க அதிகாரிகள் எமது கடவுச்சீட்டில் விசா முத்திரை இட்ட பின்பு, அந்த தொழில்நுட்ப அதிசயம் நடந்தது. ஜெர்மனியில் இருந்து மொஸ்கோ நோக்கி சென்ற எமது ரயில் வண்டி எல்லையை விட்டு சிறிது தூரம் வந்து ரயில்துறையின் தொழிலகம் ஒன்றினுள் நுழைந்தது. பயணிகள் அப்படியே இருக்க கூடியதாக, வண்டி மேலே தூக்கப் பட்டு அதன் சில்லுகள் அனைத்தும் கழற்றி, வேறு சில்லுகள் பூட்டப் பட்டன. ஓரிரு மனித்தியாலமே எடுத்த வேலை அது. புதிய சில்லுகளுடன் ரயில் வண்டி தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்தது. முன்னால் சோவியத் யூனியன் நாடுகள் முழுவதும், அகலமான ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் இருந்து வரும், ஒடுக்கமான ரயில் பாதையில் ஓடிய ரயில்கள், இந்த சில்லு மாற்றத்தின் பின்னர் சோவியத் பாதைகளில் ஓடலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு, அன்னிய நாட்டு படையெடுப்புகளை தாமதப் படுத்தும் நோக்கோடு தான் இவ்வாறு ரயில் பாதைகள் மாற்றப்பட்டதாக பின்னர் அறிந்தேன்.

நான் போன நேரம் குளிர்காலம் தொடங்கி விட்டிருந்தது. ரயில் போகும் பாதை எங்கும், பனிபடர்ந்த வீடுகள், மரங்கள், நிலங்கள், வெள்ளை வெளேர் என்று காட்சியளித்தன. போலந்திற்கும், ரஷ்யவிற்கும் இடையில் அமைந்திருக்கும் வெள்ளை ரஷ்ய குடியரசு, பெருமளவு நிலங்களை காடுகள் ஆக்கிரமித்திருந்தன. அந்தக் காடுகள் அந்த நாட்டின் இயற்கை காப்பரண்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் போது, வெள்ளை ரஷ்யா நாஸி படைகளால் வருடக் கணக்காக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அப்போது செம்படையின் தலைமையின் கீழ் இயங்கிய கெரில்லா குழுக்கள், காடுகளில் மறைந்திருந்து, நாஸி ஜேர்மனிய படைகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். அவ்வாறு வீரம்செறிந்த வரலாற்றை கொண்ட வெள்ளை ரஷ்யா, இன்றைக்கும் ரஷ்யாவின் முன்னரங்க பாதுகாப்பு அரணாகவே உள்ளது. இன்று முன்னால் சோவியத் குடியரசுகள் பல, சுதந்திரமாக தமது போக்கில் நடக்கும் போது, வெள்ளை ரஷ்யாவும், ரஷ்யாவும், நெருக்கமான இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றன. ஜனாதிபதி லூகஷேங்கோ, இந்த ஒப்பந்தத்தால் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் தலைவர்களில் ஒருவரகினார். தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கு தடை விதித்து, அதன் உறுப்பினர்களை சிறையில் போட்டுள்ளதால், லுகஷேங்கோ "ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி" என்றும் வர்ணிக்கப் படுகிறார். வெள்ளை ரஷ்யாவில் லுகஷேங்கோவின் சர்வாதிகாரம் இருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் நீங்கள் யாரோடு கதைக்கிறீர்கள் என்பதை பொறுத்து, கருத்துகள் மாறுபடுகின்றன. என்னை வரவேற்ற நண்பர்கள் குடும்பமும், தம் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவே கூறினார்.


மின்ஸ்க், வெள்ளை ரஷ்யாவின் தலை நகரம், நாட்டின் மத்தியில் அமைந்துள்ளது. மில்லியன் மக்கள் தொகையை கொண்ட மிகப் பெரிய நகரமும் அது தான். மின்ஸ்க் நகரம் ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற நண்பர்கள், தொடர்ந்து சுரங்க ரயில் மூலம், நான் தங்கவிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். சுரங்க ரயில் நிலையத்தை பார்த்த நான் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் நின்றேன். அது போன்ற அழகான ரயில் நிலையத்தை "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நகரமொன்றில் காணவே முடியாது. அதனை ரயில் நிலையம் என்று சொல்ல முடியாது. அது ஒரு அழகிய சுவரோவியங்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர மாளிகை. மின்ஸ்க் நகரத்தின் முக்கிய சுரங்க ரயில் நிலையங்கள் அனைத்தும் இவ்வாறு கலை நயத்துடன் கட்டப் பட்ட மாளிகைகள் தான். அன்றாடம் போக்குவரத்து செய்யும் சாதரண மக்களை மன்னர்களாக கருதி முன்னால் சோவியத் யூனியன் கட்டிக் கொடுத்திருக்கிறது. இது மட்டுமல்ல மின்ஸ்க் நகரம் தலைமை தபால் அலுவலகமும் மக்களுக்காக கட்டப்பட்ட மாளிகை தான்.

நகர எல்லையில், அடுக்குமாடி குடியிருப்புகள் தொடங்கும் புற நகர் பகுதியில் அமைந்திருந்தது, "இன்டூரிஸ்ட்" ஹோட்டல். வழக்கமான ஹோடேலுக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் இருந்தாலும், மேற்கத்திய பாணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் அறை வாடகை, மேற்கத்திய விலையுடன் ஒப்பிடும் போது, அதிகமில்லை. அங்கேயே ஒரு உணவு விடுதியும் உள்ளதால், வசதியாக போய் விட்டது. இல்லாவிட்டால் தினசரி உணவுக்காக வெளியே போக வேண்டியிருந்திருக்கும். தினசரி மாலை வேளைகளில் அந்த ஹோடேலில், இன்னிசை நிகழ்ச்சியும், நடனமும் நடைபெறும். அங்கு வரும் இளைஞர், யுவதிகளுடன் தொடர்பு கொள்ள தடையாக இருப்பது, மொழிப் பிரச்சினை. "pa ruski?"(ரஸ்யன் மொழி தெரியுமா?) எனக்கு தெரிந்ததெல்லாம் : "ya nie poni mayoo!"( எனக்கு தெரியாது) அமாம், வெள்ளை ரஷ்ய மக்கள் பெரும்பாலும் ரஷ்ய மொழி மட்டுமே பேசுவார்கள். இந்த மொழிப் பிரச்சினை, நான் அந்த நாட்டில் பயணம் செய்த எல்லா இடத்திலும் இருந்தது.
அடுத்த நாள் புறநகர் பகுதியில் இருக்கும் நண்பர்களின் குடும்பத்தின் வீட்டிற்கு விருந்தினராக அழைத்திருந்தனர். அவர்கள் வசித்து வந்தது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. திரும்பும் இடம் எங்கும் ஒரே மாதிரி காட்சியளித்த அந்த காங்க்ரீட் கட்டிடங்களை பற்றி மேற்கு ஐரோப்பாவில் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதாக கேலி பண்ணுவார்கள். அனால் அன்றைய சோவியத் சோஷலிச பொருளாதார திட்டத்தின் படி, சேரிக் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கூட, அனைத்து வசதிகளுடன் கூடி வீடுகளை, குறுகிய காலத்தில் கட்டிக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப் பட்ட வீட்டுத் திட்டங்கள் அவை. அன்றைய சோவியத் அரசாங்கம், அழகை விட அவசியத்தை கருத்தில் எடுத்து செயற்பட்டது. அதே நேரம், மேற்கு ஐரோப்பாவில் அழகை காட்டி அதிக வாடகை அறவிடுகின்றன, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.

நான் சென்ற நண்பர்களின் வீடு மிக சிறியது . அந்த பத்து மாடி கட்டிட வீடுகள் அனைத்துக்கும் பாரம்தூக்கி, வெப்பமூட்டும் சாதனங்கள் ஆகிய அனைத்து நவீன வசதிகளையும் கொண்டது. ஒரு வரவேற்பறை, சமையலறை, குளியலறை, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட மாடி வீட்டில்; ஒரு தொழிற்சாலையில் பொறியியலாளராக கடமையாற்றும் வயதான அப்பா, வீட்டை பராமரிக்கும் அம்மா, விற்பனைப்பணிப்பெண்களாக வேலை செய்யும் இரண்டு மகள் மார், என்று ஒரு சிறிய குடும்பம், அந்த சிறிய வீட்டில் வசதியாக வாழ்ந்து வருகின்றது. சோஷலிசம் இருந்த காலத்தில், அந்த குடும்பத்தலைவர் பெற்ற சம்பளம் அதிகம் (குறைந்தது 800 டாலர்கள்), வீட்டு வாடகை மிக மிக குறைவு. தற்போது முதலாளித்துவ சீர்திருத்தம் வந்த பின்பு, எடுக்கும் சம்பளமும் வாடகையும் ஒரே அளவாகி விட்டது. அதாவது மாத வருமானம் 60 டாலராக குறைய, வாடகை 50 டாலராக உயர்ந்து விட்டது. பெண்பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டு கம்பெனி ஒன்றின் விற்பனை நிலையத்தில் எடுக்கும் சம்பளம் அதிகம் என்பதால் அவர்களின் வாழ்க்கை வளமாக உள்ளது. கோடை காலத்தில் விடுமுறையை கழிக்க மின்ஸ்க் வாசிகள், கிராமப்புறத்தில் "டாஷா" எனப்படும் இன்னொரு வீடு வைத்திருக்கின்றனர். அமைதியான சூழலில் பொழுதை கழிப்பதுடன், தோட்டம் செய்து, அதில் விளையும் காய்கனிகளை சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் திருப்தி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம். ரஷ்ய மக்கள் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் இல்லை. நான் போன போது விதம் விதமான உணவுகளை ஆக்கி வைத்திருந்தனர். ரஷ்யர்கள் யாரையும் இலகுவில் நண்பர்ளாக்கி கொள்வார்கள் என்பதை ரயில் பயணத்தின் போதே பார்த்தேன். பயணத்தின் போது மட்டுமே சந்தித்த நபர்களுடன் சேர்ந்து உணவுண்ண , மது அருந்த அழைப்பார்கள்.

மின்ஸ்க் நகர தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த நேரம் போலிஸ் மட்டும் இருந்திட்டு வந்து பாஸ்போர்ட் வாங்கி பார்த்து விட்டு தந்தனர். வித்தியாசமான தோல் நிறத்தில் ஒன்று போவது அவர்களின் கண்களில் பட்டிருக்கலாம். இருந்தாலும் பொது மக்கள் யாரும் அதிசயமாக வேற்று கிரகத்து பிராணி போல உற்று பார்க்கவில்லை. மின்ஸ்க் நகரத்தின் அரசாங்க கட்டிடங்கள் யாவும் பிரமாண்டமாக, ரோமானிய கட்டிடக் கலையின் சாயல் தெரிந்தது. மக்கள் பொழுதை உல்லாசமாக கழிக்க வரும் "கோர்க்கி பூங்கா" நகர மத்தியில், பெரும் விஸ்தீரணத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் நடுவில், உலகப்புகழ் பெற்ற கவிஞர் கோர்கியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் பாராளுமன்றம், மற்றும் அமைச்சு அலுவலகங்கள் உள்ளன. வீதிகள் அனைத்தும் மிக அகலமானவை. ஆனால் வாகன நெரிசல் இல்லை. அங்கே நகரின் முக்கிய இடங்களை தவிர பிற இடங்களில் வாகனம் நிறுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. நிறுத்துமிட வரி கூட அறவிடப்படுவதில்லை. நிச்சயமாக மேற்கு ஐரோப்பிய நகர காரோட்டிகள், இந்த வசதிகளைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். பொது போக்குவரத்து பற்றி குறிப்பிட நிறைய உண்டு. அதி வேகம் கொண்ட சுரங்க ரயில்கள் சரியான நேரத்திற்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கும். பிரயாண சீட்டு நம்ப முடியாத அளவிற்கு மலிவு. பத்து சதம் (டாலர்) மட்டுமே! வீதிகளில் ஓடும் பேருந்து வண்டிகள், நவீனமாக இல்லது விட்டாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
மின்ஸ்க் நகரத்தில் "போல்ஷோய்" தியேட்டர், அந்நகர மக்களின் வாழ்வோடு பின்னிப் பினைந்தது. ரஷ்ய மக்களுக்கு நடன நாடகங்கள் என்றால் உயிர். நாட்டிய நடகங்களுக்காக கட்டப்பட்ட பிரமாண்டமான கலைக்கூடம் தன் போல்ஷோய் தியேட்டர். அங்கே நடக்கும் "ஸ்பர்டகஸ்" நாட்டிய நாடகம் மிகப் பிரபலமானது. மின்ஸ்க் நகரில் நிறைய அருங்காட்சியகங்கள் இருந்தாலும், "மாபெரும் தேசாபிமான போர்" என்று அழைக்கப்படும் , இரண்டாம் உலகப் போர் பற்றியது பார்க்க தவிர்க்க முடியாதது. போரின் போது இறந்த வெள்ளை ரஷ்ய மக்களின் தொகை மாற்ற நாடுகளை விட அதிகம். அதனை மறக்காமல் அடுத்த சந்ததிக்கும் சொல்லும் விதத்தில் அந்த அருங்காட்சியகம் உள்ளது. நாஸி ஜேர்மனிய படைகள் படையெடுத்த காலத்தில் இருந்து தொடங்குகிறது. நாஸி படைகளின் கொடூரங்கள், அவர்களை எதிர்த்த விடுதலைப் போராளிகளின் தாக்குதல் முறைகள், பாவித்த ஆயுதங்கள், ஆகியன நேரே பார்ப்பது போல காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. எதிரிப்படைகள் மீது போர்விமானம் கொண்டு போய் மோதிய, தற்கொலை விமானமோட்டியும் அங்கே நினைவு கூறப் பட்டுள்ளார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது, வெள்ளை ரஷ்ய மக்கள் ஜேர்மனிய படைகளிடம் அனுபவித்த இன்னல்கள், பின்னர் அவர்கள் தாமாகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து செம்படைக்கு பின்னால் அணிதிரள வைத்தது. இதனால் சோவியத் யூனியனில் நம்பிக்கைக்குரிய, விசுவாசமான குடியரசாக வெள்ளை ரஷ்யா திகழ்ந்தது. அதற்கு வெகுமதியாக ஐக்கிய நாடுகள் சபையில், வெள்ளை ரஷ்யா தனியான குடியரசாக பதிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
சோவியத் யூனியன் மீதான விசுவாசம் இன்று வரை நீடிக்கிறது. சோஷலிச பொருளாதார கட்டுமானங்களான "கொள்கோஸ்" எனப்படும் கூட்டுறவு பண்ணைகள் இன்றும் வெள்ளை ரஷ்யா முழுவதும் உள்ளன. இன்றைய ஜனாதிபதி லுகஷேங்கோ கூட முன்பு கூட்டுறவு பண்ணை நிர்வாகியாக இருந்தவர் தான். அவருக்கு கிடைக்கும் வாக்குகள், அல்லது மக்கள் ஆதரவு பெரும்பாலும் கிராமம் சார்ந்தது. அது மட்டுமல்ல, கடந்த தசாப்தங்களாக முன்னால் சோவியத் குடியரசுகள் அனைத்தும், பொருளாதார பின்னடைவு காரணமாக வயதானவர்களின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த அல்லது தவறிய காலகட்டத்தில், வெள்ளை ரஷ்ய மாதம் தவறாமல் அதை கொடுத்து வந்தது. என்னதான் தற்போது சம்பளம், ஓய்வூதிய தொகை என்பன முன்னை விட பல மடங்கு குறைந்திருந்தாலும், அது எல்லோருக்கும் மாதம் தவறாமல் கிடைத்து வருகின்றது. அனைத்து தொழிலகங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஒரு காலத்தில் சிறந்த சோவியத் உழவு இயந்திரங்கள் யாவும் வெள்ளை ரஷ்ய தொழிற்சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது கணணி மென்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கின்றது.
"அதோ பார், சர்வாதிகாரம்" என்று வசை பாடுபவர்கள் யாரும், இது போன்ற நன்மைகளை கண்டு கொள்வதில்லை. அங்கே சோவியத் கால நினைவு சின்னங்கள் , லெனின் சிலைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. தேசியக்கொடி கூட பழைய சோவியத் கொடியை நினைவு படுத்துகின்றது. சோவியத் கால உளவுத்துறையான கே.ஜி.பி. இன்றும் இயங்கி வருகின்றது. சோஷலிச பொருளாதாரம் பெருமளவு மாற்றாமல், அப்படியே இருக்க விட்டு, ஒரு சில முதலாளித்துவ சீர்திருத்தங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளன. மேற்குலகத்தை பொறுத்த வரை, இந்த சீர்திருத்தங்கள் போதாது. லுகஷேங்கோவை விரட்டி விட்டு, தமது ஆளைப் போட்டு னைத்தையும் தனியார்மயமாக்க ஆசைப்படுகின்றனர். ரஷ்யாவிற்கும், வெள்ளை ரஷ்யாவிற்கும், இடையிலான நெருங்கிய உறவு, இந்த ஆசை நிறைவேறுவதை தடுக்கின்றது. கடந்த பதினேழு ஆண்டுகளாக இழவு காத்த கிளிகளாக காத்திருந்த மேற்குலக நாடுகள், தமது எண்ணம் நிறைவேறாததால், "சர்வாதிகாரம், அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள்..." என்று கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூட்டுகின்றன.


_________________________________________________________

கலையகம்

Wednesday, March 19, 2008

துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள். துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள். துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன லக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.

2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.

இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம். மிக அரிதாக அண்மையில் நடந்த வேலை நிறுத்தம் ஒன்று, போலிஸ் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கைது செய்யப் பட்ட பலர் நாடு கடத்தப் பட்டிருக்கலாம்.

கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.

பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.

துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.


Travel Blogs - Blog Catalog Blog Directory

AddThis Feed Button
_______________________________________________________________
குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை
_______________________________________________________________

கலையகம்

Friday, March 14, 2008

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகத்தய கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், "காணாமல் போவதற்குசர்வதேச கமிட்டி" என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் (Mustafa Kemal Atatürk) என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி, சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழியை பலவந்தமாக திணித்தது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறினார்கள்.

அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப் பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.

துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (PKK) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி, சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, கள நிலவரம் எதிர்பாராத அளவு மோசமடைந்தது.





துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், மீண்டும் தமது தாயகப் பூமிக்கு திரும்ப முடியாமல் வாழ்கின்றனர். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.


2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த "கலதசரை"(Galatasaray)விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்து பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்திரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் (Diyarbakir) நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.


துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீட்டிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி "காணாமல் போனவர்கள்" சில மாதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதை குழிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக் கூடியதாகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் 'ஹசன்', ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக் கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட, துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதற்கு எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் "வாழ்க குர்திஸ்தான்" என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் "குர்திஸ்தான்" என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர், மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசை கச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, "சர்வதேச கீதம்" பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் "ஹசன்கேய்ப்" (Hasenkeyf) என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும்
, இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.


கலையகம்

Wednesday, March 12, 2008

மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.

மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை நகர்த்தியது. இன்று உல்லாச பிரயாணிகளை கவர்ந்திளுக்கும் மொரோக்கோ, fes என்ற நகருக்கு அடுத்தாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மரகேஷ் உல்லாச பிரயாணிகளின் சொர்க்கபுரியக்கி வருகின்றது. இதனால் வருடம் தோறும் வந்திறங்கும் உல்லாச பிரயனிகளுக்காக இன்றைக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப் பட்டு வருகின்றன. மரகேஷ் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, அரச மாளிகை, பள்ளி வாசல்கள், குடியிருப்புகள், அதை சுற்றி கட்டப்பட்ட பாதுகாப்பு மதில் என்பன; பழைய நகரம் எப்படியிருந்திருக்கும் என்று நாம் இப்போதும் நேரே பார்க்கலாம். பழைய நகரத்தின் மதில் சுவருக்கு வெளியே புதிய நகரம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாவனை பொருட்கள் வாங்க கூடிய கடைகள் , அதை மொய்க்கும் இளைஞர் பட்டாளம் என்று இந்த புதிய நகரம் ஒரு சராசரி நவீன நகரமாக காட்சி தருகின்றது. வசதி படைத்தவர்கள் புதியநகரதிலும், வறிய மக்கள் பழைய நகரதிலுமாக மரகேஷ் இரண்டாக பிரிந்துள்ளது.

மொரோக்கோ பல முரண்பாடுகளின் தாயகம். மரகேஷ் நகரில் இருந்து கிழக்கு நோக்கி நூறு கி.மி. சென்றால் பனி படர்ந்த மலைதொடர்கள், மேற்கு நோக்கி நூறு கி.மி. பயணித்தல் அழகிய கடற்கரைகள். தெற்கு நோக்கி இன்னும் சில நூறு கி.மி. பயணம் செய்தல் சஹாரா பாலைவனம். இப்படி நில அமைப்பு மட்டும் மாறவில்லை. மரகேஷ் மொரோக்கோ நாட்டின் மத்தியில் இருப்பதால், அதில் இருந்து மேற்கு, கிழக்கு என்று இரண்டு பிரதேசமாக பிரித்து பார்த்தல் இன,மொழி, பொருளாதார வேற்றுமைகளை கவனிக்கலாம். அட்லாண்டிக் கடலோரம் உள்ள மேற்கு பிரதேசம் அதிவேகமாக நகரமயமாக்க பட்டுள்ளது. தலைநகர் ராபர்ட், வர்த்தக மையம் காசபிலங்கா போன்ற மக்கள் பெருக்கம் கூடிய நவீன நகரங்கள் யாவும் மேற்கு மொரோக்கோவில் உள்ளன. எதிர்பார்த்து போலே பணக்காரர்களும், வசதி படைதோருமான மத்தியதர வர்க்கம் நகரமயமகியுள்ள மேற்குபுறம் தான் காணலாம். இவர்களில் பெரும்பான்மையானோர் அரபு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். படித்தவர்கள் பிரென்ச் காலனி கால பாதிப்பினால், இன்றும் தமக்குள் பிரென்ச் மொழியில் பேசிக்கொள்வது சர்வ சாதாரணம்.

இனி மரகேஷின் கிழக்கு பிரதேசத்தை பார்ப்போம். பெரும்பாலான வறிய மக்கள் அட்லஸ் மலை தொடரை சேர்ந்த கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெர்பர்கள் என்று அழைக்க படுகின்றனர். அவர்களில் பெரும்பன்மயனோருக்கு இன்றும் அரபு மொழி தெரியாது. (ஆனால் அரபு மொழி ஆதிக்கம் காரணமாக, அவர்களது மொழி அடக்கப் பட்டு வந்தது) அரபியர்கள் அவர்களை பெர்பர்கள்(காட்டுமிராண்டி என பொருள்படும் கிரேக்க சொல்) என்று அழைத்தாலும், அவர்கள் தங்களை தமஷிக் என்றும், தங்கள் மொழியை அமஜிக் என்றும் அழைக்கின்றனர். அந்த மொழிக்கென்று வேறுபட்ட எழுது வடிவமும் உண்டு. அந்த மொழியும் தரப்படுத்த படாமல், பிரதேச வேறுபாடுகளை கொண்ட பேச்சு மொழியாக மட்டுமே இன்றுள்ளது. மொரோக்கோ அரசாங்கம் பெர்பர் மக்களை புறக்கணிப்பதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். பலர் வேலை தேடி நகரங்களுக்கு சென்று அங்கேயே குடியேறி அரபியரக மாறி விடுகின்றனர். இதனால் மொரோக்கோவில் தூய அரபியர்கள் மிக குறைந்த வீதத்திலும், அரபியரக மாறிய பெர்பர்கள் குறைந்தது ஐன்பது வீதமகிலும் காணப்டுகின்றனர். மொத்த சனத்தொகையில் பெர்பர்கள் நாற்பது வீதமகிலும் இருக்கலாம்.

பெர்பர்களின் கிராமங்களை அடுத்து "ஹரடீம்" என்ற இன மக்களின் குடியிருப்புக்கள் கானபடுகின்றன. இவர்கள் பெர்பர் மொழி பேசினாலும், கருப்பு நிற தோல் வேற்றினதவர்களாக வித்தியாசம் காட்டுகின்றது. இவர்களும் அரசாங்கத்தால் புறக்கணிக்க பட்டு பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். இந்த கருபினதவரின் முன்னோர்கள் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. ஹரடீம் மக்களின் கர்ணபரம்பரை கதைகளில் ஒன்று, அவர்கள் தான் மொரோக்கோவின் பூர்வீக குடிகள் என்றும், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறிய வெள்ளை நிற பெர்பர்கள், தம்மை அடிமைப் படுத்தி விட்டனர் என்றும் கூறுகின்றனர். பிரெஞ்சு காலனி காலம் வரை ஹரடீம் மக்கள், பெர்பர்களுக்கு சேவை செய்யும் சாதி அடிமைகளாக இருந்தனர். பின்னர் மாற்றமடைந்த நவீன மொரோக்கோவில், படித்து விட்டு உத்தியோகம் பார்த்தும், வர்த்தகம் செய்தும், அல்லது வெளிநாடு போய் உழைத்தோ தமது குடும்பங்களை முன்னேற்றினர். ஹரடீம் மக்கள் மூர் சக்கரவர்த்தியினால் பிற ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இராணுவதிற்காக சேர்க்கப்பட்ட வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சரித்திரம் கூறுகின்றது. நீண்ட காலமாக இந்த கறுப்பின படை சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான சிறப்பு படையணியாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இன மக்கள் அனைவரையும் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே ஒன்று சேர்கின்றது. இதை விட கணிசமான அளவு யூதர்களும் மொரோக்கோவில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் கூட பல்வேறு வர்த்தக துறைகளில் ஈடுபட்டும், பெரிய பதவிகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர். காலங்காலமாக அரபு மக்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தாலும், இஸ்ரேலின் தோற்றம் மொரோக்கோ யூதர்களையும் புலம்பெயர வைத்தது.

இஸ்லாம் கூட இரு வேறு போக்குகளை கொண்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியபடும் "லிபரல் இஸ்லாம்" மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குகின்றது. இதனால் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தோர் ஐரோப்பிய பாணி உடை உடுத்துவதையும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவத்தையும் காணலாம். நகரங்களில் முக்காடு போட்ட பெண்களை பார்ப்பது அரிது. இதற்கு மாறாக கிராமங்களில் வாழும் பெண்கள் மத நம்பிக்கை காரணமாகவோ, சம்பிரதாயம் காரணமாகவோ கலாச்சார ரீதியாக வித்தியாச படுகின்றனர். கிராமங்களில் மத அடிப்படை வாத சக்திகள் மக்களை வென்றெடுக்க பார்கின்றன. இந்த சக்திகள் அரசாங்கத்தால் தடை செய்ய பட்டு, கடுமையாக அடக்கப் பட்டாலும் இவர்களின் செல்வாக்கு கிராம மக்கள் மத்தியில் பெருகி வருகின்றது. இதற்கு அவர்களின் வறுமை, பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணிகள். இதனை என்னோடு கதைத்த சில மத்தியதர வர்க்க மொரோகொகாரர்கள் ஏற்று கொள்கின்றனர்.

மொரோக்கோவில் இப்போதும் மன்னர் தலைமையில் சர்வாதிகாரம் கோலோச்சுகின்றது. மக்கள் தமக்கு முன்னால் நடக்கும் போலிஸ் அத்துமீறல்களை, அதிகாரிகளின் ஊழல்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். "நாம் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து மக்களுக்கும், மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கி தன்னிறைவு காண்போம்." இந்த வாசகங்களை மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கூறி வருகின்றன. ஆனால் அவர்கள் கூறும் தன்னிறைவு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எங்கும் எதற்கும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியமாகும் என்ற நிலைமையால், வறிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மொரோக்கோ பற்றிய கலாச்சார, அரசியல் குறிப்புகளை இத்துடன் நிறுத்தி கொண்டு, நான் சென்று வந்த இடங்களை அறிமுகப் படுத்துகிறேன்.

மரகேஷில் இருந்து அட்லஸ் மலைபிரதேசங்களுக்கு போய் வரும் சுற்றுலக்களே அதிகம். உவாஸர்ஸட் என்ற பண்டைய பெர்பர் நகரம் unesco கலாச்சார பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களிமண்ணும், வைகோலும் கலந்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட அழகிய நகரம் அது. சிறுவர்களின் மாயஜால கதைகளில் வரும் நகரங்களை போலே காட்சியளிக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கை, மனித அழிவுகளுக்கு உட்படாமல் கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றன அந்த செந்நிற கட்டிடங்கள். உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் உவஸர்ஸட் ஒன்றென்றால் அது மிகையாகாது. அந்த நகரின் அருகில் மிகப்பெரிய சினிமா studio ஒன்று உள்ளது. உவசர்சட் வாசிகள் அநேகர் அந்த ஸ்டூடியோவில் தான் வேலை செய்கின்றனர். Ben Hur போன்ற காவியம் படைத்த ஹோலிவூட் திரைப்படங்கள் பல அங்கே தான் தயாரிக்கப் பட்டன. தற்போதும் அமெரிக்கா, ஐரோப்பிய சினிமா தயாரிப்பாளர்களை கவர்ந்திளுகிறது. மலை, பாலைவனம், எகிப்தில் இருப்பது போன்ற செட் போன்ற இன்னோரன்ன விஷயங்களால், அது உலகில் தனித்தன்மை வாய்ந்த ஸ்டூடியோ என்று சொல்லலாம்.

உவசர்சட் நகரம் ஒருகாலத்தில் சஹாரா வாணிபம் காரணமாக செல்வ செழிப்புடன் இருந்தது. இப்போது உள்ளது போல நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. சஹாரா பாலைவனத்திற்கு மறுபக்கம் இருக்கும் நாடோடி மக்கள் அல்லது வணிகர்கள், உற்பத்தி பொருட்களையும், தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களையும் ஒட்டகங்கள் மீதேற்றி ஊர்வலமாக மொரோக்கோ நோக்கி போய் விற்று விட்டு, வேறு பாவனை பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பி வருவார்கள். இந்த வர்த்தக போக்குவரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவும், இடையிலே இருக்கும் நகரங்களில் தங்கி செல்லவுமென, குறுநில மன்னர்களுக்கு கப்பம் செலுத்துவது வழமை. உவசர்சட் பிரதேசத்தை ஆண்ட மன்னன் மட்டுமல்ல, முழு நகரமும், அவ்வாறு இந்த வர்த்தக போக்குவரத்தால் லாபமடைந்தனர். இன்று அதெல்லாம் பழைய கதை.

அட்லஸ் மலை பிரதேச சுற்றுலவிற்குள், அழகிய நீர் வீழ்ச்சியோன்றிற்கு கூட்டி போகின்றனர். ஆபத்தான மலை உச்சிக்கு, ஒடுக்கமான பாதையூடாக போய் வருவது ஒரு த்ரிலான அனுபவம். அதே சுற்றுலவிற்குள் பெர்பர் குடியிருபொன்றை கூட்டிப்போய் காட்டுகின்றனர். அவர்களது வீடு மட்டுமல்ல சில கைப்பணி பொருட்களை செய்யும் இடங்களையும் பார்க்கலாம். இப்படியான சுற்றுலாக்களில் சிலர் வர்த்தக ரீதியாக, உள்ளூரில் உற்பத்தி செய்த எண்ணை, வாசனை திரவியங்கள், கம்பளம் போன்ற பொருட்களை வாங்க சொல்லி எதிர்பார்ப்பதும் நடக்கின்றது. மேலும் உல்லாச பிரயாணிகள் என்றால் அதிக விலை கேட்பார்கள். இப்படி வெளிநாட்டு பயணிகளை ஏமாற்றுவதில் நகரங்களில், டாக்ஸி ஓட்டுனர்களை யாரும் மிஞ்ச முடியாது. இரண்டு கி.மி. போகும் தூரத்திகும் மூன்று மடங்கு விலை கேட்பார்கள். மீட்டர் போட்டால் உள்ள விலை தெரிந்து விடும் என்று போட மறுப்பார்கள். இந்த டாக்ஸி காரர்கள் தங்களை ஏற்றுவதை விட, வெளிநாட்டு பயணிகளை ஏற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக மரகேஷ் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

எனது விடுமுறை முடிவதற்கு சிறிது நாட்களே இருந்த போது, எசயூரா என்ற கடற்கரை பட்டணம் போய் வந்தேன். மொரோக்கோ மக்கள் கூட தமது விதிமுறையை கழிக்க எசயூரா போவது வழக்கம். கருங்கட் பாறைகளை கொண்ட கடற்கரை, அதனருகே கைவிடப் பட்ட போர்த்துகீசிய கோட்டை, கடலுக்குள் போக காத்திருக்கும் மீன்பிடி வள்ளங்கள், வெப்பமான நாட்களிலும் வீசும் தென்றல் காற்று என்று மனோரம்மியமான இடமானதல், வெளிநாட்டு பயணிகளை மட்டுமல்ல, உள்நாட்டு பயணிகளையும் கவர்வதில் வியப்பில்லை.

மரகேஷில் இருந்து கடுகதி ரயில் சேவை காசபிலங்க நகரை இணைகின்றது. காசபிலங்காவிற்கு வர்த்தக நோக்கத்தோடு வருபவர்கள் தான் அதிகம். இருப்பினும் ஹசன் மசூதி மூர்களின் கட்டிடகலையின் நவீன வடிவத்திற்கு சான்று. பிரமாண்டமாக கடற்கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மசூதியை பார்க்க வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் வருகின்றனர். உலகிலேயே (அல்லது வட-ஆப்பிரிக்காவில்) மிகப் பெரிய பள்ளி வாசல் என்று, அரசாங்கத்தால் விளம்பரம் செய்ய படுகின்றது. காலம்சென்ற முன்னால் மன்னன் ஹசன் பெயரில் கட்டப் பட்டுள்ள இந்த பள்ளி வாசல் மில்லியன் டாலர் பணத்தை விரயமாக்கியிருக்கிறது. இதற்கு அனைத்து மொரோக்கோ மக்களிடமும், ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி, பணம் வசூலிக்கப் பட்டது. வர்த்தக நிலையங்கள் நிதியுதவி செய்து பெற்றுக்கொண்ட மசூதியின் படத்தை வைதிருக்கா விட்டால், அவர்களது லைசென்ஸ் மறுக்கப்பட்டது. மன்னர் குடும்பம், என்னதான் இந்த மசூதியினால் பேர் எடுக்க விரும்பினாலும், சாதரண மொரோக்கோ மக்கள் இது தேவையா என்று கேட்கின்றனர். மொத்த சனத்தொகையில் அரைவாசி மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு நாட்டில், இப்படி கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து மசூதி கட்டவில்லை என்று யார் அழுதார்கள்? உலகமெங்கும் ஆளும் வர்க்கம் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். மக்களிடம் சுரண்டி சேர்க்கும் பணத்தில், தங்களுக்கு மாளிகைகளும், இறைவனுக்கு ஆலயங்களும் (கடவுளுக்கே லஞ்சம்?) கட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு தொழில் புரியும் மொரோக்கோ நண்பர் கூறிய வாசகங்கள், அந்நாட்டு அரசியல், பொருளாதார நிலைமையை ஒரு வரியில் சொல்ல போதும். "எமது நாட்டிலும் ஜன நாயக முறையில் தேர்தல்கள் நடக்கும். நான்கு வருடத்திற்கு ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். ஆயியம் கட்சியில் இருப்போர் முடிந்த அளவுக்கு திருடிக் கொண்டு செல்வார்கள். பிறகு அடுத்த தேர்தலில் அடுத்த கட்சி தங்கள் பங்குக்கு திருடுவார்கள். இன்றைக்கும் எமது நாட்டில் ஒரே ஒருவர் மட்டும் நிரந்தரமாக திருடிக் கொண்டே இருக்கிறார். அது தான் மன்னர்! "

வெளிநாடுகளில் இருந்து மொரோக்கோ போகும் உல்லாச பிரயாணிகள், இவை எதை பற்றியும் கவலைப்படாமல் தமது பொழுதை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். எது எப்படியிருந்தாலும் மொரோக்கோ மேற்குலக நட்பு நாடல்லவா? அதனால் அலம் இருண்ட மறுபக்கத்தை கண்டு கொள்வதில்லை. ஒரு விவசாய நாடான மொரோகோ, அதனை அபிவிருத்தி செய்யாமல், உல்லாச பிரயான ஹோட்டல்கள் கட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றது. இதனால் உள்ளூர் தொழில்கள் நலிந்து போக, வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். உலகமயமாதலின் எதிர்வினை என்றும் அழைக்கப்படும் இந்த காட்சியை மொரோகோவிலும் பார்க்கலாம்.

Travel Blogs - Blog Catalog Blog Directory

_____________________________________________

கலையகம்

Wednesday, March 05, 2008

சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்

உலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்புதன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது? ஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது. தொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிஸ்ட்கள் , கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, லிபரல் கட்சி எல்லாமே கூட்டரசாங்கம் அமைத்து கொண்டு, முதலில் அகதிகள் வருவதை முடிந்தளவு தடை செய்தார்கள். பின்னர் வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் நாட்டில் இருந்து துணையை தேடிக் கொள்வதை கண்மூடித்தனமான சட்டங்கள் போட்டு குறைத்தார்கள். தற்போது முஸ்லிம்களுக்கெதிரான "லிபரல்களின் ஜிஹாத்" நடக்கிறது. அதற்கு தலைமை தாங்குவது தான் முன்பிருந்த லிபரல் கட்சியில், வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு இடமில்லாததால் பிரிந்து சென்று, தனிக்கட்சி (PVV) கண்ட "கெர்ட் வில்டர்ஸ் ". அந்தகட்சியின் ஸ்தாபகர், சித்தாந்தம், நிர்வாகம் எல்லாமே வில்டர்ஸ் மட்டுமே. ஒரு முறை குர் ஆனின் அரைவாசி பக்கங்களை கிழித்தெறிய வேண்டுமென்றார். மறுமுறை அதனை ஹிட்லரின் "மைன் கம்ப்" ஐ போன்ற பாசிச நூலாக தடை செய்ய வேண்டுமென்றார். அரசியல் நிர்ணய சட்டம் மாற்றப்பட்டு, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியேற்றம் தடை செய்ய பட வேண்டுமென்றார். இது போன்ற பைதியகாரதனமான பேச்சுகளால் உள்நாட்டு முஸ்லிம்களின் வெறுப்பையும், மிதவாத ஒல்லாந்து காரரின் எரிச்சலையும் ஒரு பக்கம் சம்பாதித்து இருந்தாலும், மறு பக்கம் வில்டர்சிற்கு பல சாதாரண (வெள்ளை டச்சு)மக்களின் ஆதரவும் பெருகியது.

முன்பொரு தடவை "தேயோ வந்கோக்" என்ற பத்தி எழுத்தாளரும் , சினிமா கலைஞருமான, ஆனால் தீவிர வலதுசாரி கருத்தியல்களை கொண்டவரும், இஸ்லாமிற்கு எதிரான படம் எடுத்து, அதன் காரணமாக முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக கருதப்பட்டு, ஒரு மொரோக்கோ குடியேறி யின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். அன்றிலிருந்து ஒல்லாந்து பொதுமக்களில் பலர் வெளிப்படையாகவே இனவாதம் கதைக்க தொடங்கி விட்டனர். அதனை தேசியவாதம் என்று சிலர் சொன்னாலும், பேரினவாதம் என்று சிலர் சொன்னாலும் , சம்பந்தப் பட்டவர்கள் அப்படி கதைப்பது தமது பிறப்புரிமை என்று சட்டம் பேசுகின்றனர். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், அப்படியனவர்களை விமர்சிக்கும் போது, அதனை இனவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர். (கவனிக்கவும்: இனவாதம் என்ற சொல்லை ஒவ்வொரு இனமும் தனக்கெதிராக மற்றவர்கள் கதைக்கும் போது பயன்படுத்துகின்றனர்.) வருங்காலத்தில் வெள்ளையின ஒல்லந்துகாரருகும், முஸ்லீம் அல்லது கறுப்பின சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூள இருப்பதாக ஆருடம் கூறுகின்றனர். இரண்டாவது தலைமுறை மொரோக்கோ இளைஞர்கள் அல்கைதவுடன் சேர்ந்து பயங்கரவாத திட்டங்கள் தீட்டியதாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடும். அதே நேரம் வெள்ளையின தீவிர வலதுசாரி இளைஞர்கள் இரகசியமாக ஆயுத பயிற்சி எடுப்பது பற்றி சொல்வதில்லை. தேயோ வந்கோக் கொலையின் போது பல மசூதிகள், இஸ்லாமிய பாடசாலைகள் தீக்கிரையாகின. சூத்திரதாரிகள் கைது செய்யபட்டு சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். ஏனெனில் அவர்கள் பதினெட்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளாம். எந்த குற்றமும் நிரூபிக்க படாமல், (சில சம்பவங்கள் உளவுபிரிவின் ஆட்காட்டிகளின் தூண்டுதலால் நடந்தவை) வருடக்கணக்கில் சிறையில் போடப்பட்ட "அல்கைதா உறுப்பினர்கள்" கூட பருவமடையாத பிள்ளைகள் தான்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, வில்டர்ஸ் போன்றவர்கள் முதல் தேர்தலிலேலேயே கணிசமான வாக்குகள் எடுத்து வியப்புகுரியதல்ல. தேயோ வந்கொகுடனும், வில்டர்சுடனும் சேர்ந்து வேலை செய்தவர் அயன் ஹிசி அலி என்ற சோமாலிய புத்திஜீவி. யார் இந்த ஹிர்சி அலி? சோமாலிய மத்தியதர வர்க்க பெண். அந்த நாட்டில் உள்நாட்டு போர் மூண்ட போது, தம்மை பாதுகாத்து கொள்ள கென்யாவிற்கு தப்பியோடிய குடும்பத்தை சேர்ந்தவர். நெதர்லாந்து வந்து, நேரே சோமாலியாவில் இருந்து வந்ததாக அரசியல் தஞ்சம் கோரினார். டச்சு அதிகாரிகள் விரும்பி கேட்குமளவிற்கு, தன்னை இஸ்லாமிய மதகுருக்கள் துன்புறுத்தியதாக கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்கலைக் கழக கல்வி பெற்று, ஒல்லாந்து அரசியலில் புகுந்தார். ஊடகங்களின் ஆர்வத்தை தூண்டி பேர் எடுக்கும் விதத்தில், இஸ்லாமிய மதத்தை காட்டுமிராண்டிகளின் மதமாக சித்தரித்தார். "இறை தூதர் முகமது ஒரு பயங்கரவாதி." என்று அவர் கூறிய கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களினதும் கண்டனங்களை பெற்றுத்தந்தது. அத்தகைய ஒருவரின் "புகழ்" தேசங் கடந்து அமெரிக்கா வரை பரவியதில் வியப்பில்லை. ஹிர்சி அலி அரசியல் தஞ்சம் கோரிய போது கூறிய பொய்கள் பின்னர் அம்பலமாகி, அவமானத்தால் டட்ச் பாரளுமன்ற பதவியை விட்டு விலகி , அமெரிக்காவில் புஷ் நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார். அதற்கு முன்னர் "லிபரல் ஜிஹாத்" தலைவர் வில்டர்சிற்கு, இஸ்லாமிய மதத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று சொல்லிகொடுத்தார்.

இப்போது வில்டர்ஸ் "குர்ஆன்" பற்றி ஒரு படம் தயாரித்திருக்கிறார். அதில் காட்டுமிரண்டிதனமான சட்டங்கள், இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தூக்கிலிடப் பட்டமை, கல்லெறிந்து கொல்தல், கை வெட்டுதல்...இவ்வாறு இஸ்லாமிய விரோத கருத்துக்களை கொண்ட "பித்னா" என்ற படம் வெளிவர முன்னரே சர்ச்சைகள் தலை தூக்கி விட்டன. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நெதர்லாந்திற்கு எதிராக கண்டன பேரணிகள் நடந்தன. தாலிபான் அங்கே முகாமிட்டுள்ள ஒல்லாந்து படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். ஒல்லாந்து பொருட்களை பகிஷ்கரிக்குமாறு பல இஸ்லாமிய நாடுகளில் அழைப்பு விடப் பட்டுள்ளது. இதனால் கலவரமடைந்த வர்த்தக சமூகம் கூட வில்டர்ஸ் எதுவுமே செய்யாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் பால்கநேண்டே "நெதர்லாந்து ஒரு சர்வதேச நெருக்கடியை எதிர்நோக்குகிறது. எமது பிரசைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போக அஞ்சுகின்றனர். ஆகவே வில்டர்ஸ் தனது முயற்சியை கைவிட வேண்டும். " என்று கூறியுள்ளார். அதற்கு வில்டர்ஸ் "பிரதமர் ஒரு கோழை. நான் இஸ்லாமிய வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்." என்று பதில் கூறியுள்ளார்.

மேற்கத்தைய வரலாற்றில் என்றுமில்லாத படி, ஒல்லாந்தின் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் வில்டர்சின் படத்தை ஒளி பரப்ப மறுத்து விட்டன. சினிமா தியேட்டர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. இதனால் வில்டர்ஸ் தனது படத்தை இன்டெர்நெட்டில் மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றின் வலயத்த்தளத்தில் பதிவு செய்திருந்தார். அமெரிக்கா அரச நிர்ணய சட்டத்தின் படி, கருத்து சுதந்திரத்திற்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுவதால், பல நவநாஜி அமைப்புகளின் இணையத்தளங்கள் கூட அமெரிக்காவில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. வில்டர்ஸ் இந்த சட்டத்தை பயன்படுத்த நினைத்தார். அந்தோ பரிதாபம், ஒல்லாந்து அரசின் நெருக்குதல் காரணமாக "நெட்வொர்க் சொலுஷன்ஸ்" என்ற இன்டர்நெட் நிறுவனம், வில்தேர்சின் வலயத்தளத்தை தடை செய்து விட்டது. "பித்தன" படம் வெறுப்பை விதைத்து இனவெறியை தூண்டுவதாக அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது. கடைசியில் வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியிடும் இணையத்தளமொன்று அனுமதி வழங்கியது. படத்தை பார்த்தவர்கள், அதில் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இந்த விவரணப் படத்தை தயாரித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில் அது, தீவிர வலதுசாரி மொழியில், வன்முறையில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த போவதாக பயம் காட்டுகின்றது. படம் நெடுகிலும், முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இருப்பதால், இது வில்டர்ஸ் அரசியலில் பிரபலமாக கையாண்ட தந்திரம் எனலாம்.

வில்டர்சின் செயல் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது, அதனால் படத்தை தடை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொல்கின்றது. ஆபத்தை தவிர்பதற்காக படத்தை தடை செய்யுமாறு பலர் கோரி வருகின்றனர். உண்மையில் வில்டர்ஸ் மாதிரி வெறுப்பை விதைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளை பிடித்து சிறையில் போட்டால் எல்லாம் சரி வரும். இஸ்லாமிய மதத்தை நவீனப் படுத்த வேண்டும் என்று வில்டர்ஸ் போன்றவர்கள் விரும்பினால் அதற்கு இது ஏற்ற வழியல்ல. இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யலாம். இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது பகை வளர்க்கவே உதவும். வில்டர்ஸ் போன்றவர்கள் தன் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றவே பாடுபடுகின்றனரே தவிர, வேறு எந்த பொதுநல நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

இந்த ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, மத அடிப்படைவாதம் பேசுவோரும் தீவிரவாதிகள் தான். சாதாரண மக்கள் மனதில் இருக்கும் மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்லவர்கள் இந்த காரியவாத பைத்தியங்கள். அவர்களின் நோக்கமும் மதத்தை பாதுகாப்பதல்ல, மாறாக அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பது தான். இப்படியானவர்கள் இஸ்லாமில் மட்டமல்ல. அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்து மத வெறியர்கள், சிறிலங்காவில் புத்த மத வெறியர்கள், இஸ்ரேலில் யூத மத வெறியர்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வெறியர்கள்.... இப்படி எல்லா மதங்களிலும் இருக்கும் தீவிரவாதிகள் ஒரே மொழியை தான் பேசுகின்றனர். அது மதவெறி என்ற பொதுமொழி. குர் ஆனில் மனிதாபிமான விரோத கருத்துக்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்யும் வில்டர்ஸ் போன்றவர்கள், பைபிளை வாசித்து பார்க்கவில்லையா? அதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா? குர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா? இயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது. அவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது? பைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன. எல்லாமே கடவுளின் பெயரால் நடந்த பயங்கரவாதம். இதையே குர் ஆனில் எழுதி இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற "மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் " கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன்? இவர்கள் தம்மை கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக காட்டிக் கொள்ளா விட்டாலும், கிறிஸ்தவ மதம் உலகிலேயே சிறந்தது, அதி உன்னதமான நாகரீங்கம் கொண்டது, என்று ஒரு பக்க சார்பான கதைகளை கூறி வருகின்றனர்.

கிறிஸ்துவுக்கு பின் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவை, வத்திகானை தலைநகராக கொண்டு கத்தோலிக்க மதம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தை ஐரோப்பிய சரித்திர நூல்கள் "இருண்ட காலம்" என்று வர்ணிக்கின்றன. மதத்திற்கு எதிரான இயக்கம் ஐரோப்பாவில் தான் முதன் முதல் உருவானது. கத்தோலிக்க தேவாலயங்கள் மக்களை சுரண்டி சொத்து சேர்கின்றன என்று சொல்லி லூதர் தலைமையில் எதிர்பியக்கம் ஆரம்பித்தது. அது பின்னர் புரட்டஸ்தாந்து மதமாக மாறியது. பிரெஞ்சு புரட்சி தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி மதகுருக்களை சிரச் சேதம் செய்தது. அப்போதிருந்து உருவான மதச்சார்பற்ற இயக்கம் இன்று அரச சித்தந்தமாகி, இன்று ஐம்பது வீதத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மத நம்பிக்கயற்றவர்களாக வாழ்கின்றனர். அதற்கு இந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றமும் முக்கிய காரணம். இந்த வாழ்கை நெறியை தான் வில்டர்ஸ் போன்றவர்கள் "மேன்மைமிகு கலாச்சாரம்" என்று சொல்கின்றனர்.

இதே போன்ற சமூக வளர்ச்சி இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லையா? அதை தடுப்பது யார்? அது அந்நாடுகளின் பொருளாதார பின்னடைவு (உதாரணம் : எகிப்து) அல்லது மக்களை மந்தைகளாக மேய்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள் (வளைகுடா நாடுகள்) தான் காரணம். மதம் என்பது வறிய மக்களின் ஊன்றுகோல். தமது கஷ்டங்களுக்கு முடிவு வராத என்று ஏங்கும் மக்கள் வேறு வழி தெரியாமல் மதத்தை நம்புகின்றனர். வறிய நாடுகளின் பின்தங்கிய நிலை காலனித்துவ காலத்தின் பாதிப்புகளில் ஒன்று. அதோடு பணக்கார நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அபிவிருத்திக்காக அவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை. இந்த பொருளாதார பின்னணியை பற்றி கதைக்காத மதவாதிகள், தமது மதம் ஆட்சியில் இருந்த காலத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடியதாக கதையளக்கின்றனர். இஸ்லாமிய கலீபாக்கள் ஆடம்பர அரண்மனைகளில் உயர்தர வாழ்கை தரத்தை கொண்டிருந்த காலத்தில் அடித்தட்டு மக்கள் கஷ்டபட்டு உழைத்து வாழ வேண்டியிருந்தது. உழைப்பிற்கும் உல்லாசதிற்கும் இடையிலான தொடர்பு மதம் என்ற சீமேந்தால் பூசி மெழுகப் பட்டது. மற்றும்படி அன்றைய காலத்தில் பொது மக்கள் வசதியாக வாழ்ந்ததற்கான தரவுகள் இல்லை. ஷரியா தண்டனை சட்டம் கூட வர்க்க நீதியின் பாற்பட்டது. ஒருவேளை உணவுக்காக திருடுபவனின் கையை வெட்டுமாறு கூறும் சட்டம், தினசரி மக்களை கொள்ளையடித்து வாழும் ஷேக்குகளையோ அல்லது சுல்தான் களையோ எதுவுமே செய்வதில்லை. ஷரியா சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்படும் சவூதி அரேபியாவில் இன்றைக்கும் இது கண்கூடாக பார்க்கக்கூடிய யதார்த்தம். இந்த வர்க்க பாரபட்சம் வில்டர்ஸ் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை.

பிற்போக்கு தனமாக சிந்திக்காமல் ஐரோப்பாவில் இருப்பது போலே, மதத்தை தனி நபருடைய தனிப்பட்ட விஷயமாக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடு பட்ட எத்தனையோ அமைப்புகள் இஸ்லாமிய நாடுகளில் இருந்திருக்கின்றன. அப்படிபட்ட மதச் சார்பற்றவர்களின் கை ஓங்கி ஆட்சி நிலைத்திருந்தால், இன்று மதவாதிகள் பெட்டிப் பாம்பாக அடங்கி போய் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், அடக்கி அழித்ததில் மேற்கத்திய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால், அன்று இந்த ஜனநாயக வாதிகள், இஸ்லாமியவாதிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி ஊக்குவித்தனர். மதச் சார்பற்ற சக்திகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் தான் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள் தோன்றின. இப்போது வெளிக் கிளம்பிய பூதத்தை சீசாவுக்குள் திரும்ப வைத்து பூட்டி விடலாம் என்று நினைகின்றனர். காலம் கடந்து வந்த ஞானம் இது.


  • Fitna the Movie: Geert Wilders' film about the Quran (English)

  • Travel Blogs - Blog Catalog Blog Directory


    __________________________________________________________

    கலையகம்

    சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை

    “வெள்ளையர்கள் எமது நாட்டுக்கு வந்த போது, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. எம்மிடம் நிலம் இருந்தது. எம்மை கண் மூடி
    தியானம் செய்ய சொன்னார்கள். கண் விழித்து பார்த்த போது,அவர்கள் கைகளில் நிலங்களும், எமது கைகளில் பைபிளும் இருந்தது.” - ஒரு தென் ஆப்பிரிக்க கவிஞர்.

    மேற்கத்திய ஊடகங்கள் ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி முகாபே பற்றி ஒரு போதும் நல்லதாக சொல்வதில்லை. அவர்கள் பார்வையில் முகாபே ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன், பைத்தியக்காரன், அவன் தொலைந்தால் தான் அன் நாடு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். இந்த “பத்திரிகாதர்மம்”, ஜிம்பப்வேயில் காலங்காலமாக, கறுப்பர்களின் நிலங்களை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடிய வெள்ளையின “விவசாயிகளை” ( அவர்கள் விவசாயிகளா அல்லது நில உடமையாளர்களா?) முகாபே விரட்டியதால் வந்த இனப்பாசம். உலகம் முழுக்க மேலைத்தேய ஊடகங்களின் பிரச்சாரம் எடுபட்ட போதும், ஆபிரிக்க கண்டத்தில் மட்டும் நிலைமை வேறு விதமாக உள்ளது. முகாபெக்கு உள் நாட்டிலயே, அவரை வெறுக்கும் மக்கள் இருக்கின்றனர் தான். இருந்தாலும், ஜிம்பாப்வேக்கு வெளியே பிற ஆபிரிக்க நாடுகளில் நல்ல செல்வாக்கு உள்ளது. பெரும்பான்மை ஆபிரிக்கர்கள் முகாபெயை தமது ஆதர்ச நாயகனாக பார்க்கின்றனர். இன்னும் சொன்னால், மேற்கத்தைய நாடுகளின் சட்டாம்பிள்ளைதனத்தை எதிர்க்க திராணியற்ற தமது நாட்டு தலைவர்களை விட முகாபே மீது நிறைய மதிப்பு வைத்துள்ளனர். அந்தக் கண்டத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு எந்த ஆப்பிரிக்க நாட்டு தலைவரும் முகபெக்கு எதிராக கதைக்க துணிவற்று உள்ளனர். அதற்கு காரணம், தம் நாட்டு மக்களே அதை விரும்பபோவதில்லை என்பதுடன் , எதிர்ப்பவர்கள் யாவரும் ஐரோப்பிய எஜமானர்களின் வேலைக்காரர்களாக கருதப்படுவதும் தான்.

    சிம்பாவே அதிபருக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை அறிவிக்க ஆளும் ZANU-PF கட்சி மறுத்து வருகின்றது. ஜனநாயகம் என்பது தமக்கு எதிராக ஒரு நேரம் திரும்பும் என்று கண்ட தற்போதைய அதிபர் முகபேயும், அவரதும்கட்சியும் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்றன. இதே நேரம் தேர்தலில், கணிசமான வாக்குகளை பெற்ற எம்.டி.சி. என்ற எதிர்கட்சி, தேர்தலில் வென்றதாக அறிவித்ததும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததும் அண்மைக்கால செய்திகள். நீண்ட காலம் ஜனாதிபதி பதவியில் உள்ள ZANU-PF தலைவர் முகபெக்கும், எதிர்கட்சி எம்.டி.சி. தலைவர் ஷங்கரைக்கும் இடையில் நடந்த போட்டியில், இருவரும் கிட்டதட்ட சம அளவு வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அதனால் இரண்டாவது தேர்தல் அவசியமென்றும் கருதப் படுகின்றது. முன்னால் கொலனியவாதியான பிரிட்டனுக்கும், பிற மேற்கத்திய நாடுகளுக்கும், அது அவசியமில்லை. ஆட்சியதிகாரத்தை எதிர்கட்சி தலைவர் ஷங்கரையிடம் கொடுத்து விட்டு, முகபே பதவி விலக வேண்டும். அவர்களைப் பொறுத்த வரை, தமது சொல் கேட்டு நடக்கும் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவசரம். ஷங்கரையும் ஆளும் கட்சி அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்து தரும் என்று எதிர்பார்க்கின்றது. அப்படி நடக்கா விட்டால்? அவர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. சர்வகட்சி ஜனநாயகம் ஜிம்பாப்வேயில் இருந்தாலும், ZANU-PF கட்சி தமது விடுதலைப் போராட்டம் அதற்கனது அல்ல என்று கூறியுள்ளது. அந்தக் கட்சி நூற்றாண்டு காலம் நீடித்த வெள்ளையின ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    அதிகாரத்துக்கு வந்த பத்தாண்டுகளுக்கு மார்க்சிய அடிப்படையில் ஆட்சி நடத்தியது. பின்னர் உலகில் சோஷலிச நாடுகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு உதவியையும், நண்பர்களையும் குறைத்ததால், தவிர்க்க இயலாமல் மேற்கத்திய ஐ.எம்.எப்., உலக வங்கி போன்றவற்றிடம் அபிவிருத்தி நிதி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்களை விட, போட்ட நிபந்தனைகள் அதிகம். அதனால் எமக்கு கடன் உதவியே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முகபெக்கும், குறிப்பாக பிரிட்டனுக்கும் இடையேயான முறுகல் நிலை முற்றி, காலனிய காயங்களை மீண்டும் கிளறி விட்டது.

    இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே பிரிட்டிஷார் நிரந்தரமாக குடியேறி இருக்க நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், ஜிம்பப்வேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள்(வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய ஜனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார்.

    இன்று மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் வரலாறு முக்கியமில்லை என்று கூறுவார்கள். அப்படி சொல்வது யார்? கடந்தகாலத்தில் தமது முன்னோர் செய்த கொடுமைகள், தவறுகள், தீய வழிமுறைகள் என்பன இன்றைய தலைமுறையினருக்கு தெரியக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள். ஏனெனில் அவர்களின் நல்வாழ்வும், அதிலே தானே தங்கியுள்ளது? ஜிம்பாப்வே பிரச்சினையையும் இந்த அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின ஜனாதிபதியும், ZANU-PF தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும்; வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பின்பும், அந்த நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது. தென் ஆப்ரிக்கவிலும் இது தான் நிலைமை. இதனால் சந்தேகத்திற்கு இடமின்றி, பெரிய கோடிஸ்வரர் எவரும் வெள்ளை இனத்தவராகவே இருப்பார். இதைக்கேட்ட உடனே, யாராவது ஒரு அறிவாளி, சோம்பேறி கறுப்பர்களுக்கு சுறுசுறுப்பான வெள்ளையர்கள் மீதுபொறாமை என்று சொல்லலாம். அது திருடர்களுக்கு நியாயம் கற்பிப்பது போலாகி விடாதா?

    முன்னால் ZANU-PF போராளிகளும், அந்த கட்சியின் இளைஞர் பிரிவும் சேர்ந்து, வெள்ளையின விவசாயிகளை வன்முறையினால் வெளியேற்றி, அவர்களிடம் நிலங்களை கைப்பற்றி, கறுப்பின விவசாயிகளுக்கு வழங்கிய போது, பிரிட்டனுக்கும், மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும், அதன் நியாயத்தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவரை கண்ணியமான நடுநிலை ஊடகங்களாக காட்சி தந்தவை; அநியாயம், அக்கிரமம், வெள்ளையர் மீது கறுப்பர்கள் நிறவெறியாட்டம் என்றெல்லாம் வர்ணித்தன. பிரிட்டிஷ் அரசாங்கமோ வெள்ளையின ஜிம்பாப்வே “அகதிகளுக்கு” நிலமும் வீடும் கொடுத்து வரவேற்றது. அதே நேரம், ஜிம்பாப்வே எதிர்கட்சி ஆதரவாளர்களான கறுப்பினத்தவர் பலருக்கு, அகதி அந்தஸ்து கூட வழங்கவில்லை. அரச மட்டத்தில், பத்திரிகை துறையில் காணப்படும், பகிரங்கமான நிறுவனமயப் படுத்தப்பட்ட நிறவாதம், “தனி மனித உரிமை” என்ற பெயரில் நியாயப் படுத்தப் படுகிறது. ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்து போன்று, அமெரிக்கா ஜிம்பாப்வே மீது படையெடுக்க வேண்டும் என்று பிரிட்டன் நிர்பந்தித்து வருகின்றது. உலக வல்லரசான அமெரிக்காவிற்கு அங்கே எந்த பொருளாதார நலன்களும் இல்லாததால் அக்கறையின்றி உள்ளது.

    இதனால் வேறு வழிகளில் முகாபெயை பதவி இறக்கும் நோக்கில், பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையின் கதவுகள் மூடப்பட்டன. நாணய பெறுமதி இறக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றில், சர்வதேச சந்தையை கட்டுபடுத்தும் அன்னிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இதனால் அயல் நாட்டில் இருந்து கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில், பாவனைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. (ஏற்றுமதி பற்றி கூறத் தேவையில்லை). முக்கிய ஏற்றுமதியான புகையிலை தோட்டங்கள் யாவும் வெள்ளையின விவசாயிகள் கைகளில் இருந்தன. அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்பு சர்வதேச சந்தை சிம்பாப்வே புகையிலை வாங்குவதை நிறுத்தியது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தனியார்மயம் இருந்ததால், சர்வதேச நிர்ப்பந்தத்திற்கு கட்டுபட்டு, செயற்கையான உணவுத்தட்டுபாடை ஏற்படுத்தினர். உலகின் பிற நாட்டு மக்களை போல, பாவனையாளர் கலாச்சரத்திற்கு பழக்கப்பட்ட ஜிம்பாப்வே மக்கள், பட்டினி கிடக்கும் நிலைக்கு வந்தனர். முகாபே நிர்வாகம், மேற்குலக நாடுகளை பகைத்து கொண்டதற்கு, பெரிய விலை கொடுத்து, கடைசியில் அதிகாரத்தை பறிகொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. சீனா மட்டும் தான் தற்போது ஜிம்பாப்வேயின் பொருளாதார நண்பன். அனைத்து பொருட்களும் சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றது. இருப்பினும் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடில்லை என்பதால், சர்வதேச நெருக்குவாரத்திற்கு கட்டுபட்டே நடக்க வேண்டியுள்ளது.

    காலனிய காலகட்டத்தில் இருந்து தேசத்தை முழுமையாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்று, ஜிம்பாப்வே அனுபவரீதியாக உணர்ந்து வருகின்றது. முகாப்வே நிர்வாகம் அரசியல் அதிகாரம் தமது கையில் இருந்தால் போதும், எல்லாம் சரிவரும், என்று நினைத்து நடந்ததன் பலன்களை அனுபவித்து வருகின்றது. பல கட்சி ஜனநாயகத்திற்கு இடம்கொடுத்தமை, கருத்து சுதந்திரத்திற்கு அனுமதித்தமை, லிபரல் பொருளாதாரத்தை தன்பாட்டிலே விட்டமை போன்ற காரணிகள் தற்போது மேற்குலக (முகாபேயின் மொழியில் : காலனியவாதிகள்) சக்திகள், தமக்கு சார்பாக பயன்படுத்த வாய்ப்பளித்தது போலாகி விட்டது.

    இன்றுள்ள நிலை, முகாபே எந்த வித நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஹராரேயில் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் ஊர்வலம் நடந்துள்ளது. எதிர்புரட்சியாளர்களை வன்முறை கொண்டு அடக்க தயாராக இருப்பதாக சூளுரைத்துள்ளனர். அப்படி வன்முறை வெடித்தால், மேற்குலக நலன்களுக்கான உள்நாட்டு முகவராக செயற்படும் எதிர்கட்சி எம்.டி.சி.யும், அதன் தலைவர் ஷங்கரையும், தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களை இழக்க வேண்டி ஏற்படும். ஜிம்பாப்வே இதற்கு முன்னரும் இதுபோன்ற காட்சியை கண்டுள்ளது. எண்பதுகளில், ZANU-PF அதிகாரத்திற்கு வந்து ஒரு சில வருடங்களே இருந்த நிலையில், அன்றிருந்த இன்னொரு விடுதலை இயக்கம் , அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இன்றுள்ள எதிர்க்கட்சியான எம்.டி.சி. வன்முறையை எதிகொள்ள கூடிய நிலையில் இல்லை.

    முகாபே ஒரு புரட்சிக்காரன் அல்ல. சுயநலம் உள்ள அரசியல்வாதி தான். இருப்பினும், தனது ஆதரவுத்தளம் புரட்சிக்காக தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய, முன்னால் விடுதலைப்போரளிகளிடம் உள்ளது என்பது நன்றாக தெரியும். வெள்ளையின விவசாயிகளின் நிலங்களை பறித்தமை, கடந்த காலத்தில் பூர்த்தி செய்ய படாத, இதே முகாபெயினால் உறுதிமொழி வழங்கப்பட்ட, புரட்சியின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றது. ஜிம்பாப்வே இன்றும் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது என்றால், அது புரட்சி இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றே காரணம் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள், பழியை முகாபே மீது போடுகின்றன. உள்ளூர் முகாமைத்துவ குறைபாடுகள், பிழையான பொருளாதார திட்டங்கள், போன்றன தான் பிரச்சினைக்கு காரணிகள் என்கின்றன. அதன் அர்த்தம் என்ன? கறுப்பர்களுக்கு நிர்வகிக்க தெரியாது, வெள்ளையரிடம் விட்டு விடுங்கள், சிறப்பாக நடத்தி காட்டுவார்கள் என்ற காலனிய மனப்பான்மையா?

    முன்னால் காலனிய நாடுகள் பேசுவது போல, ஜிம்பாப்வே எப்படி தேர்தல் நடத்த வேண்டும்? ஜனநாயகம் என்றால் என்ன? என்றெல்லாம் நாமும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அந்த பொறுப்பை அந்நாட்டு மக்களிடமே விட்டு விடுவோம். அவர்கள் எதையும் தாமாகவே கற்றுக் கொள்ளட்டும். ஆனால் அதே நேரம் கறுப்பர்களின் கடமை ஒன்று உள்ளது. முன்பு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய போது, அதனை ஐரோப்பியர்கள் தமக்கு “கறுப்பர்களை நாகரீகப்படுத்த வேண்டிய கடமை” இருப்பதாக தமது செயல்களை நியாயப்படுத்தினர். நூற்றாண்டுகளுக்கு முன்பு அபகரித்த நிலங்களை, இப்போதாவது உரியவர்களிடம் ஒப்படைக்கும் நாணயம் வெள்ளையருக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமை கறுப்பருக்கு உண்டு.

    ______________________________________________

    கலையகம்