Monday, March 31, 2014

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்


மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.

நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.

கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
 Daylight Saving Time (DTS)

Saturday, March 29, 2014

நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு




உண்மையில், யூத வெறுப்பை விட, மார்க்சிய வெறுப்பு தான், ஹிட்லரும், நாஸி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், ஜெர்மனியின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.

முதலாம் உலகப்போரானது, ஜெர்மன் தேசியவாதிகளுக்கும், பிரெஞ்சு தேசியவாதிகளுக்கும் இடையிலான போராக நடந்தது. முதலாளிகளும், தேசிய வெறியர்களும், சாதாரண மக்களை படைவீரர்களாக போருக்கு தீனியாக்கினார்கள். முதலாம் உலகப்போரின் முடிவில், தேசியவாத மாயையில் இருந்து விடுபட்ட படையினர் கிளர்ந்தெழுந்தனர்.

மியூனிச், பெர்லின், ஹம்பூர்க் நகரங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடித்தது. அந்த நகரங்களில் உருவான சோவியத் குடியரசுகள், சில வாரங்கள் தாக்குப் பிடித்தன. அப்போது ஜெர்மனியில் ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், கம்யூனிசத்தை வெறுத்த "ஜனநாயக" அரசாங்கம், தொழிலாளர்களின் சோவியத் புரட்சியை கொடூரமாக நசுக்கியது.

பழமைவாதிகளின் மாநிலமான பவாரியாவில், ஹிட்லரின் நாஸிக் கட்சியும், அது போன்ற வேறு சில அமைப்புகளும் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சிய வெறுப்பு, அந்த அமைப்புகளின் அடிநாதமாக விளங்கியது: "முதலாம் உலப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் மார்க்சிஸ்டுகள். அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு, ஜெர்மன் மக்களின் முதுகில் குத்தினார்கள். பிரெஞ்சு படைகள் ஜெர்மன் மக்களை (இனப்) படுகொலை செய்த போது, கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர் அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை.... "

இந்த உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரம், ஜெர்மன் மக்கள் மனதில் கம்யூனிசத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைக்கும் நோக்கில் பரப்பப் பட்டது. ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில், பெருமளவு யூதர்கள் பங்குபற்றி இருந்தனர். நாஸிகள் அதைச் சுட்டிக் காட்டி, "கம்யூனிஸ்டுகளும் யூதர்களும் ஒன்று தான். உலக யூத சதிகாரர்களின் கொள்கை தான் கம்யூனிசம்." என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், யூதர்களின் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப் படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் படும் என்றும், நாஸிகள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

ஹிட்லரின் நாஸிக் கட்சி குண்டர்கள், அடிக்கடி மார்க்சிஸ்டுகளை தெருச் சண்டைக்கு அழைத்தார்கள். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் நுழைந்து குழப்பம் விளைவித்தார்கள். அங்கிருந்த பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் தாக்கினார்கள். நாஸிக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, "மார்க்சியர்களுக்கு எதிரான வீரப் போர்" போன்று, ஹிட்லர் தனது Mein Kampf (எனது போராட்டம்) நூலில் எழுதி இருக்கிறான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியில் எதிரொலித்தது. பல வங்கிகள் திவாலாகின. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வந்த காலத்தில், பெரும்பான்மை ஆளும் கட்சிகளின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் மாற்று வழி தேடினார்கள். அவர்கள் ஒன்றில் தீவிர இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர், அல்லது தீவிர வலதுசாரிகளான நாஸிக் கட்சியை ஆதரித்தனர்.

பெர்லின் நகரத் தெருக்களில், நாஸிக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது பலத்தைக் காட்டும் வகையில் சுற்றித் திரிந்தனர். இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொண்டாலும், அங்கே வாய்த் தர்க்கம் முற்றி, அடி தடியில் முடியும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

"சிவப்புகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவோம்..." என்று கோஷமிட்ட படி, நாஸிக் காடையர்கள் கத்தி, பொல்லுகளுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகளுக்கு, மண்டை உடைத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தார்கள்.

"மார்க்சியம் ஒழிக!" பதாகை ஏந்திய படி பேரணியில் நடந்து வரும் சீருடை அணிந்த நாஸிகள். (1926) ஹிட்லர் அணிவகுப்பை பார்வையிடுவதை காணலாம். (வட்டத்திற்குள்)  

"சிவப்பு முன்னணியை (Red Front) நொறுக்குவோம்." என்றொரு நாஸிப் பிரச்சார பாடல் தெருவெங்கும் ஒலித்தது. அன்றைய தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் "சிவப்பு முன்னணி" என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டார்கள். நாஸிக் காடையர்கள் இடதுசாரிகளுக்கு எதிரான கோஷம் எழுப்பிய படி, பெர்லின் தெருக்களில் சாரிசாரியாக வண்டிகளில் சென்றனர். 1926 ம் ஆண்டிலேயே, "மார்க்சியம் ஒழிக" என்ற பதாகை தாங்கிய நாஸிகளின் பேரணிகள் நடந்துள்ளன.

30-01-1933, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளால் வென்ற,  ஹிட்லரின் நாஸிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் நாஸிக் கட்சி உறுப்பினர்கள், அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வந்தனர். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதிலடி கொடுக்க எழும் நேரம், நாஸிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது சிலநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியே கைகலப்பில் முடிந்தது.

பெர்லின் நகரில், பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற தினங்களில் எல்லாம், நாஸிகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பாராளுமன்ற விவாதங்களில் நாட்டமற்ற, அல்லது கம்யூனிஸ்டுகளுடன் வாதாடி வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட நாஸிகள், இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அதுவே, பிற்காலத்தில் வரப் போகும்  நாசிஸ  சர்வாதிகாரத்திற்கு கட்டியம் கூறியது.

நாஸிகள் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 27-02-1933 அன்று, Reichstag (றைஷ்டாக்)  எனப்படும் ஜெர்மன் பாராளுமன்றம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது யாரென்று கடைசி வரை தெரிய வரவில்லை. இருப்பினும், நாஸி அரசாங்கம் நான்கு கம்யூனிஸ்டுகளை கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில், நாசிஸ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கவில்லை. ஓரளவு ஜனநாயகம் நிலவியது. அதனால் தான், குற்றஞ் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

நாஸி தலைவர்களில் ஒருவரான கேரிங், "ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஆரம்பமாகி விட்டது" என்று பயமுறுத்தினார். "கம்யூனிஸ்ட் புரட்சியை தடுப்பதற்காக" என்றொரு சாட்டைக் கூறி, நாஸி அரசாங்கம் நாடு முழுவதும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜெர்மனியில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், நாசிஸ பயங்கரவாதத்திற்கு முதன்முதலாக பலியானவர்கள் யூதர்கள் அல்ல, மாறாக ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

கைது செய்யப்பட்ட நான்கு கம்யூனிஸ்டுகளில், பின்னாளில் பல்கேரியா அதிபராக பதவியேற்ற டிமித்ரோவ்வும் ஒருவர். இறுதியில் டிமித்ரோவும் மற்றவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வன் தே லுப்பே என்ற புத்தி சுவாதீனமற்ற டச்சு கம்யூனிஸ்ட் நாஸிகளின் சூழ்ச்சிக்கு பலியானார். பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார்.

பெர்லின் நீதிமன்றத்தில் நடந்த டிமித்ரோவின் வழக்கு, இன்றைக்கும் சட்டத் துறையில் சிலாகித்துப் பேசப் படுகின்றது. புத்திசாலியான டிமித்ரோவ், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை திணறடித்தார். "கேரிங்கின் நாஸி கட்சியினர் தான் பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்தார்கள்." என்று டிமித்ரோவ் நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நேரம் அங்கிருந்த கேரிங், "இங்கு வந்து நெருப்பு வைத்து விட்டு, ஜெர்மன் மக்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள் ..." கூச்சலிட்டார்.

இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம் "ஜெர்மன் மக்கள்" (Deutsche Volk). நாஸிகளின் ஆட்சிக் காலம் முழுவதும், தங்களது கட்சியை யாராவது குறை கூறினால், அதனை "ஜெர்மன் மக்களுக்கு எதிரான அபாண்டம்" என்று கூறி, எதிராளியின் வாயை அடைக்கப் பண்ணினார்கள். இன்றைக்கும் தமிழர்களில் சிலர், நாஸிகளின் அதே  தந்திரோபாயத்தை பயன்படுத்துவதை காணலாம்.

நாஸிஸக் கொள்கை, ஒரு கடந்த கால வரலாறு அல்ல. ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தோற்றப்பாடும் அல்ல. நாஸிகளின் சித்தாந்தம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. நாஸிகள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். நாஸிஸம் எந்த நோக்கத்திற்காக தொடங்கியதோ, அதனை நிறைவேற்றுவதற்கு துடிக்கின்றனர்.

"சிவப்பைக் கண்டால் பதறும், மார்க்சியத்தை வெறுக்கும்," கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர், நாஸிக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னர், இணையமும், சமூக வலைத் தளங்களும் இருக்கவில்லை. இருந்திருந்தால், நாஸிகள் அங்கேயும் தமது மார்க்சிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி இருப்பார்கள்.


நாஸிகள் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்
2.நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்

Friday, March 28, 2014

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம்


இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகளும் நடந்துள்ளன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே பல தடவைகள் திருத்தப் பட்டு, தற்போது மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்ப்பாயமாக குறுகி விட்டது. ஏற்கனவே, 2012 ல் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டாலும், அது இலங்கைக்கான எச்சரிக்கையாக மட்டுமே அமைந்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில், இலங்கை அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத படியால், ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், இந்த வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமைந்திருந்தது. இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2012 ல், "இலங்கையில் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்" என்ற நிர்ப்பந்தம் கொடுத்து, இந்தியா ஒரு திருத்தத்தை செய்திருந்தது. அதன் பின்னரே, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், இந்தியா இம்முறை எதிர்த்து வாக்களித்துள்ளது. அதற்கு தன்னிலை விளக்கமும் கொடுத்துள்ளது. (ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் தீர்மானம் என்று கூறியது.)  மேலும், ஐ.நா.விசாரணைக் குழுவுக்கான நிதியாதாரம் பற்றி சந்தேகம் தெரிவித்த பாகிஸ்தான், திருத்தப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தது. அதற்கான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் நிலைப்பாடு, தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழகத்தில், திமுக வும், அனைத்து தமிழ் தேசியவாதக் கட்சிகளும், இயக்கங்களும் இந்தியாவின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன. இலங்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் இருந்தே, இந்தியா குறித்த பிரமை உடைந்து போனமை தெரிந்தது. "பாகிஸ்தானும், இந்தியாவும் நேரெதிர் கொள்கை கொண்ட பகையாளி நாடுகளாக இருந்த போதிலும், ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கொள்கையை கடைப்பிடிப்பதை ..." சுரேஷ் காரசாரமாக கண்டித்தார்.

தமிழ் தேசியவாத கண்ணோட்டம் கொண்ட தமிழர்கள் சிலர், "இது காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத கொள்கையின் விளைவு. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டால், எல்லாம் சரியாகி விடும்..." என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில், தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளும், ஊடகங்களும், இந்தியா பற்றி உருவாக்கி வைத்திருந்த தவறான கருதுகோள்கள், இன்று பலரை அதே பாதையில் சிந்திக்க வைக்கின்றது. ஆனால், உண்மை நிலையோ, (தமிழ்) தேசியவாதிகள் நம்புவதற்கு நேர்மாறாக உள்ளது.

இந்தியாவில், மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அதன் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் உண்டாகப் போவதில்லை. தேர்தல்கள் மூலம், மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாற்றலாம். ஆனால், அமைச்சு அலுவகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற முடியாது. அந்த அதிகாரிகள் யாரும், தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. எந்தக் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அமைச்சு அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆகவே, காங்கிரஸ் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, பாஜக தெரிவு செய்யப் பட்டால், இந்தியாவின் நிலைப்பாடு ஈழத் தமிழருக்கு சாதகமாக மாறி விடும் என்பது ஒரு கற்பனையான வாதம். ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை, இலங்கை சம்பந்தமான வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதி. அது எவ்வாறு இருக்கும், இனிமேல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டு விட்ட விடயங்கள்.

பாகிஸ்தானும், இந்தியாவும் பகையாளி நாடுகள் போன்று நடந்து கொள்கின்றன. அதுவும் ஒரு வகை அரசியல் தான். இந்திய- பாகிஸ்தான் மக்கள் மனதில் தேசிய வெறியை வளர்த்து விடுவதற்கே, அந்தப் பகை அரசியல் பெரிதும் உதவுகின்றது. அயல் நாடுகள் விடயத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று போட்டி போட வேண்டிய தேவையிருக்கவில்லை. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சிறிலங்கா அரசுக்கு பாகிஸ்தான் ஆயுத விநியோகம் செய்து வந்துள்ளது. இந்தியா, ஒரு தடவையாவது, அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை. அது மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஆயுத விநியோகமானது, இந்தியாவை அதன் "கடமையில்" இருந்து விடுவித்து விட்டதாக பார்க்கப் பட்டது. பாகிஸ்தானுக்கு பதிலாக இந்தியா ஆயுத விநியோகம் செய்திருந்தால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அது அஞ்சியது.

இறுதிக் கட்ட ஈழப்போரில், இந்திய இராணுவம் நேரடியாக களத்தில் நின்று போரிட்டிருக்கலாம் என்ற சந்தேகம், நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனை உறுதிப்படுத்தும்  சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் தங்கியிருந்து, பெண் போராளிகளைப் பற்றி, "எனது நாட்டில் ஒரு துளி நேரம்" (விடியல் பதிப்பகம்) என்ற ஆய்வு நூலை எழுதிய ந. மாலதி, அண்மையில் ஒரு தகவலைக் கூறினார்.

வன்னியில் முன்னேறிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தை தடுக்க முடியாத புலிகள், வேறு வழியின்றி ஒரு அணைக்கட்டை குண்டு வைத்து உடைத்தார்கள். இதனால் அயல் கிராமங்களை வெள்ளம் மூடியது. அதற்குள் சிக்கி, "ஐயாயிரம் சிறிலங்காப் படையினர் மரணமடைந்ததாக" புலிகள் தமது செய்தியில் தெரிவித்து இருந்தனர். அன்று வெள்ளத்திற்குள் மூழ்கி இறந்த இராணுவ வீரர்களின் சடலங்களை புலிகள் கண்டெடுத்திருந்தனர். அவற்றில் சில இந்திய இராணுவத்தினரின் சீருடைகளை அணிந்திருந்ததைக் கண்டனர்.

மாலதி இந்தத் தகவலை தெரிவித்து விட்டு, "வன்னியில் இந்திய இராணுவ வீரர்களும், சிறிலங்காப் படையுடன் சேர்ந்து போரிட்டிருக்கலாம் என்று புலிகள் மத்தியில் பேசப் பட்டதாக" கூறினார். இந்தியா தலையிட்டு போரை நிறுத்தும் என்று புலிகள் நம்பி இருந்த காரணத்தால், அன்று இந்தத் தகவலை யாரும் வெளி விடாமல் இருந்திருக்கலாம். இந்திய இராணுவப் பிரசன்னம் பற்றி, இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ஒரு பெண் கூறுகையில், "ஆழ் கடலில் நின்று கொண்டிருந்த இந்திய கடற்படைப் படகு, கரையிலிருந்த தங்களது இருப்பிடத்தை நோக்கி பீரங்கியால் சுட்டதாக..." தெரிவித்தார். இது போன்ற பல தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருக்கலாம். இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதரர்கள், "இந்தியா தான் இந்தப் போரை நடத்தியது." என்று நேரடியாகவே பல தடவைகள் கூறி விட்டார்கள். அப்படியானால், எதற்காக இந்தியா இந்தப் போரை நடத்த வேண்டும்?

ஒரு முறை, தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி, ஓய்வு பெற்ற RAW அதிகாரி ஹரிஹரன் உடனான நேர்காணலை ஒளிபரப்பியது. தந்தி டிவி நிர்வாகமும், பேட்டி எடுத்தவரும், நாம் தமிழர் போன்ற தமிழினவாதக் குழுக்களின் அரசியலை பிரதிபலிப்பவர்கள். அதாவது, "சீனாவும், இந்தியாவும் நிரந்தரப் பகையாளி நாடுகள். இலங்கையில் சீனா கால் பதிப்பது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து." என்று நம்புகிறவர்கள்.

நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்கள் கூட, "சீனாவைப் பற்றி இந்தியாவிடம் கோள் மூட்டி விட்டு, தமிழீழத்திற்கு ஆதரவாக இந்திய அரசை வளைக்கலாம்..." என்று நம்புவதுடன், அதையே தமது ஆதரவாளர்களுக்கும் கூறி வருகின்றனர். ஆகவே, அன்று ஹரிஹரனை பேட்டி கண்ட தந்தி டிவி தொகுப்பாளரின் கேள்விகளிலும், அதே போன்ற கருத்துக்கள் எதிரொலித்தன.

அந்தப் பேட்டியின் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு முன்னாள் RAW அதிகாரியான ஹரிஹரன், "சீனாவின் அச்சுறுத்தல்" பற்றி, எந்த வித அக்கறையுமின்றி பதிலளித்தார். ஒரு சில தமிழினவாதிகள் கூறி வருவது போன்று, "சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது" என்பதே ஹரிஹரனின் பதிலாக இருந்தது. ஆனால், அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த இன்னொரு தகவல் கூர்ந்து நோக்கத் தக்கது.

"இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்கு, அமெரிக்கா முயற்சி எடுத்திருந்தது. அதற்காகவே ஒரு அமெரிக்க போர்க் கப்பல், முல்லைத் தீவு கடலுக்கு அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்தது. இலங்கையானது, இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. அங்கு அமெரிக்க இராணுவத் தலையீடு ஏற்படுவதை, இந்தியா விரும்பவில்லை." இதனை ஹரிஹரன், தந்தி டிவி பேட்டியில் தெரிவித்தார். அதாவது, இலங்கைக் கடற்கரையில், அமெரிக்கக் மரைன் படையினர் வந்திறங்குவதற்கு முன்னர், புலிகளின் கதையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
(ஆதாரம்:https://www.youtube.com/watch?v=9ukg8c2pyZM&fbclid=IwAR1fqUq434PEz6trKEL-jzo7nAnCQUUOr104N7L2M_kwMEh95cTzW0zCZIM&app=desktop )

அன்று இந்தியா, சிறிலங்காப் படைகளுடன் ஒத்துழைத்து போரை முடிவுக்கு கொண்டு வந்திரா விட்டால், அமெரிக்கா தலையிட்டு, புலிகளின் தலைவர்களை தப்ப வைத்திருப்பார்கள். இந்தத் தகவலை,ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தரான எரிக் சூல்ஹைமும் உறுதிப் படுத்தி இருந்தார். புலிகளின் தலைமையை சரணடைய வைப்பதற்கு, கேபி மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலங்களிலும், போர் நிறுத்தம் செய்வதற்கும், ஒவ்வொரு தடவையும் இந்தியாவின் ஒப்புதல் தேவைப் பட்டது. பல தடவைகள், எரிக் சூல்ஹைம் டெல்லி சென்று, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றி கூற வேண்டி இருந்தது. ஆனால், அமெரிக்க கப்பல் விவகாரம், இந்தியாவை கலந்தாலோசிக்காமல் எடுக்கப் பட்ட முடிவாகவே தெரிகின்றது.

தந்தி தொலைக்காட்சி பேட்டியில், ஹரிஹரன் சொல்லாமல் விட்ட தகவல் இது. அன்று, அமெரிக்கப் படைகள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வந்திறங்கி இருந்தால், சிலநேரம் அங்கேயே முகாமிட்டு தங்கி விட்டிருப்பார்கள். அது நடந்திருக்குமா, இல்லையா என்பதை விட, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று, இந்திய அரசு நம்புகிறது.

மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியை வைத்துக் கொண்டே, ஜெனீவா தீர்மானங்களை ஆராய வேண்டியுள்ளது. இந்தியா அமெரிக்காவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கலாம். பொருளாதாரத்திலும் பல விட்டுக் கொடுப்புகளை செய்திருக்கலாம். ஆயினும், அமெரிக்காவிடம் இருந்தே இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று, இந்திய அரசு மட்டத்தில் நம்புகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம்: ரஷ்யா.

தொன்னூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்து, ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது. அப்போது, ரஷ்ய அரசும், மக்களும், அமெரிக்காவை நட்பு சக்தியாகப் பார்த்தார்கள். அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றினார்கள். பனிப்போர் முடிந்து விட்டது என்றும், அமெரிக்காவும், ரஷ்யாவும் நெருக்கமான நண்பர்கள் என்று பலர் நம்பினார்கள். ஆனால், ஒரு தசாப்தத்தின் பின்னர், அந்த நம்பிக்கை உடைந்து போனது. தற்போது, ரஷ்யாவும், மேற்குலகமும், மீண்டும் ஒரு பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. அதே வரலாறு இந்தியாவிலும் நடக்கின்றது.

உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா மேற்குலகுடன் விட்டுக் கொடாத தன்மையுடன் நடந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. "உக்ரைன் பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும், மொஸ்கோவுக்கு வாருங்கள்" என்று ரஷ்யா கூறுகின்றது. பிராந்திய வல்லரசான ரஷ்யா, உக்ரைன் தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு என்று கருதுகின்றது. மேற்குலகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அதே போன்று தான், இலங்கை தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு, என்று இந்தியா கருதுகின்றது. "இலங்கை பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும் டெல்லிக்கு வாருங்கள்." என்று கூறுகின்றது. ஜெனீவாவில், இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஒரு பலப் பரீட்சை நடக்கின்றது.

ஜெனீவாவில், இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளக் காரணம் என்ன? ஒவ்வொரு வருடமும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் உள்நோக்கம் என்ன? மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றி சிலாகித்துப் பேசப் பட்டாலும், அமெரிக்கா அவற்றை ஒரு சாட்டாகவே பயன்படுத்தி வருவது தெரிந்த விடயம்.

"அமெரிக்கா, ஈழத் தமிழர்கள் மேல் கொண்ட கரிசனை காரணமாக, சிறிலங்கா அரசை தண்டிக்க விரும்புகிறது..." என்று நம்பும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நினைப்பது போல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களும் நினைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே சிந்தித்து, செயல்பட்டு வருகின்றது. ஆகவே, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஈழத் தமிழருக்கு ஆதரவானது என்பது எந்தளவுக்கு உண்மை இல்லையோ, சிறிலங்கா அரசை தண்டிப்பதற்கானது என்பதும் உண்மையாக இருக்க முடியாது.

ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கையை அடி பணிய வைப்பது, அமெரிக்காவுக்கு இலகுவான காரியம். அதற்கு இந்த ஐ.நா.மன்றம், ஜெனீவா எதுவும் தேவையில்லை. அண்மையில், உக்ரைன் பிரச்சினையில் சில ரஷ்ய அரசியல்வாதிகள் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன. அதெல்லாம், ஐ.நா. வை கேட்காமலே நடைமுறைப் படுத்தப் பட்டன.

அமெரிக்கா நினைத்திருந்தால், போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தி, இலங்கையை ஆளும் ராஜபக்ச கும்பலை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்களை, வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்க முடியும். அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விடாமல் தடுத்திருக்க முடியும். அது எதையும் அமெரிக்கா செய்யவில்லை. "இனிமேல் ஒரு ஐ.நா. விசாரணைக் குழு நியமித்து, அது சொன்ன பிறகு தான், அமெரிக்கா இலங்கை மீது தடைகளை விதிக்கும்" என்பது நம்பத் தகுந்தது அல்ல.

ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படும். என்ன நோக்கத்திற்காக அந்த அழுத்தம் கொடுக்கப் படுகின்றது?  என்பது தான் கேள்வி. "தமிழீழம் கிடைக்கும், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்..." என்று கூறி தமிழ் மக்களை நம்ப வைக்கலாம். ஆனால், "ஒரு சிறுபான்மை இன மக்கள் நலன் சார்ந்து அமெரிக்கா செயற்படுகின்றது" என்று, இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் நம்புவோர் மிகக் குறைவு. ஆகவே, இந்திய அரசும் அதனை நம்பப் போவதில்லை. அப்படியானால் வேறொரு காரணம் இருக்க வேண்டும். என்ன அது?

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள டியேகோ கார்சியா தீவில், அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ளது. முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்த குட்டித் தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்டு, அந்த இடம் அமெரிக்க படையினரிடம் குத்தகைக்கு விடப் பட்டது. அந்த ஒப்பந்தக் காலம் 2016 ம் ஆண்டு முடிவடைகின்றது. ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

டியேகோ கார்சியா தீவின் பூர்வ குடிகள், பலவந்தமாக வெளியேற்றப் பட்டு, பிரிட்டனிலும், மொரிசியஸ் தீவிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான அனுமதி மறுக்கப் படுகின்றது. இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து வருகின்றது. தாயகம் திரும்ப விரும்பும் டியேகோ கார்சியா மக்கள், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் யாவும், அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நீர்த்துப் போகச் செய்யப் பட்டன. ஆயினும், டியேகோ கார்சியா மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். 2016 ம் ஆண்டிலிருந்து, புதிய ஒப்பந்தம் போடப் படுமானால், அது பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுக்கும்.

ஆயிரம் கடல் மைல் தொலைவில் இருந்தாலும், டியேகோ கார்சியா தனக்கு சொந்தமாக வேண்டும் என்று, மொரீசியஸ் உரிமை கோரி வருகின்றது. அதனால், 2016 ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் படுவதை, மொரிசியஸ் நாடும் எதிர்க்கும் என்பது திண்ணம். டியேகோ கார்சியா தீவை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மொரிசியஸ் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இலங்கையில் நடந்த பொதுநல வாய நாடுகளின் உச்சி மகாநாட்டினை மொரிசியஸ் பகிஷ்கரித்ததமைக்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மொரிசியஸ் நாட்டில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், அவர்கள் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களை ஆதரிப்பதும் உண்மை தான். ஆனால், பிரிட்டன் மீது அழுத்தம் கொடுப்பதற்கு சாதகமாக, மொரிசியஸ் அரசு தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. மொரிசியஸ் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டனும் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே, அமெரிக்கா இராணுவ தளம் அமைப்பதற்காக, மாலைதீவை அணுகியது. ஆனால், "ஒரு முஸ்லிம் நாடான" மாலைதீவு, அமெரிக்க இராணுவ தளத்தை வைத்திருப்பதால் உண்டாகும் சிக்கல்களை கவனத்தில் எடுத்து, மறுப்புக் கூறி விட்டது. ஆகவே, அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலங்கைத் தீவு மட்டுமே. ஏற்கனவே, டியேகோ கார்சியா தீவில் சுமார் ஆயிரம் அமெரிக்க படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்.

வெளியுலகத் தொடர்பற்ற டியேகோ கார்சியா தீவுக்கு, அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. அங்குள்ள  அமெரிக்க இராணுவ தளத்தில் வேலை செய்வதற்கென, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாட்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதிலே குறைந்தது அரை வாசிப் பேராவது இலங்கைப் பிரஜைகள் என்பது குறிப்பிடத் தக்கது. (இலங்கையரை தவிர, பிலிப்பைன்ஸ் நாட்டவரும் வேலை செய்கின்றனர். சில பிரிட்டிஷ் படையினரும் அங்கே உள்ளனர். அவர்களைத் தவிர வேறெந்த நாட்டினரும், டியேகோ கார்சியா தீவுக்கு செல்ல முடியாது.)

இலங்கையில் அமெரிக்க தளம் அமைப்பதால், அமெரிக்காவுக்கு வேறு பல ஆதாயங்களும் கிடைக்கலாம். இலங்கை, இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பது மட்டுமல்ல, சிறந்த பொருளாதாரக் கட்டுமான வசதி கொண்டது. விமான நிலையம், துறைமுக வசதிகளும் உள்ளன. மேலும், பெரும்பான்மையான இலங்கை மக்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட, அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அது இந்தியாவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. அதனால், அமெரிக்கா இந்தியாவை கண்காணிப்பது இலகுவாகி விடும். (முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் வொயிஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதை, இந்தியா கடுமையாக எதிர்த்தமை இங்கே நினைவுகூரத் தக்கது.)

நடைமுறை பூகோள அரசியல் களத்தில் ஆசியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தளம் அவசியமானது. சிறிலங்காவில் ராஜபக்ச அரசு, ஜெனீவா தீர்மானங்கள் குறித்து மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதில் இருந்தே, அது எந்தளவு தூரம் அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செல்கின்றது என்பது தெரிய வருகின்றது.

இந்தியாவின் நெருக்குவாரம் காரணமாக, இலங்கையில் அமெரிக்க தளம் அமைக்கும் திட்டம் பின்போடப் பட்டு வருகின்றது. ஆனால், இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் பட வேண்டும். அநேகமாக, அடுத்த வருடம் (2015), "இலங்கையில் அமெரிக்கத் தளம் அமைக்கப் படுமா, இல்லையா?" என்ற கேள்விக்கு விடை  கிடைத்து விடும்.


ஜெனீவா தொடர்பான முன்னைய பதிவுகள்: 
1.ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?
2.தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு
3.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

Tuesday, March 25, 2014

ஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப்போம்!


"ஏழை மக்களே! உங்களுக்குப் பசிக்கிறதா? உணவு வாங்குவதற்கு கையில் பணம் இல்லையா? வாருங்கள், சூப்பர் மார்க்கட் அங்காடிகளை சூறையாடுவோம். காசு கொடுக்க தேவையில்லை. விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். இது அநீதிக்கு எதிரான ஏழைகளின் எழுச்சி!" 
சேகுவரா மாதிரி தாடி வைத்த, கழுத்தில் பாலஸ்தீன சால்வை அணிந்த ஒருவர் ஒலிபெருக்கியில் கூற, கூடியிருந்த ஜனத்திரள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றாக சென்று, சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து, விரும்பியதை எடுத்து கூடைகளில் நிரப்பிக் கொண்டு வெளியே வருகின்றனர். "கொள்ளையடிக்கப் பட்ட" உணவுப் பொருட்களில் பெரும் பகுதி, ஏழைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்பு செய்யப் படுகின்றது.

இந்த சம்பவம், 2012 ம் ஆண்டு, தெற்கு ஸ்பெயினில் நடந்தது. சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டம், அந்த நாட்டில் பல தடவைகள் நடந்து விட்டன. பொருளாதார நெருக்கடியால், கடுமையாக பாதிக்கபப்ட்ட ஸ்பெயின் நாட்டில், நாற்பது சதவீதமானோருக்கு வேலை இல்லை. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஏழைகள் கிளர்ச்சி செய்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று, சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டத்தை அறிமுகப் படுத்தியவரின் பெயர்: ஹுவான் மனுவேல் சஞ்செஸ் (Juan Manuel Sanchez). அவர் கடந்த முப்பது வருடங்களாக Marinaleda என்ற சிறிய நகரம் ஒன்றின் மேயராக பதவி வகித்து வருகின்றார்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவர் நிர்வகிக்கும் மரினலேடா நகரத்தில், அனைத்தும் கம்யூனிச பொருளாதார அடிப்படை கொண்டவை. கடந்த சில வருடங்களாக, ஸ்பெயின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால், மரினலேடா பொருளாதாரம் உயர்ந்து வருகின்றது. அங்கே வேலையற்றோர் யாரும் இல்லை. அயல் கிராமங்களில் இருந்து பலர் வேலை தேடி வருகின்றனர். அங்கு வேலை செய்யும் ஒரு விவசாயக் கூலி, ஒரு நாளைக்கு $65 (3,928 இந்திய ரூபாய்கள், 8,496 இலங்கை ரூபாய்கள்) சம்பாதிக்க முடியும். இது ஸ்பெயினில் பிற பகுதிகளில் கிடைக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஸ்பெயினின் பிற பகுதிகளில் வாழும் மக்கள், வீட்டு வாடகை கட்ட முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். வாடகை பாக்கி வைத்த பலர், வசித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, தெருக்களில் வசிக்கிறார்கள். மரினலேடா நகரில் வாழும் எல்லோரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள். நகர சபை வீடு கட்ட கடன் வழங்குகின்றது. வீடு கட்டி முடிந்ததும், கடனை அடைப்பதற்காக மாதாந்த தவணைத் தொகை $ 20 மட்டுமே திருப்பிக் கட்ட வேண்டும். பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்குவதால், அது மரினலேடாவில் வாழும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதனால், பல பெற்றோரின் சுமை குறைகின்றது. ஸ்பெயினின் பிற பகுதிகளில், அதற்காகவே சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இரண்டு, மூன்று பிள்ளைகளை வைத்திருப்போரின் பாடு திண்டாட்டம் தான்.

மரினலேடா நகரில் நிர்வாகம் முழுவதும் ஜனநாயக முறைப் படி நடக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கு வசிக்கும் மக்களை கலந்தாலோசித்து, அவர்களின் சம்மதத்துடன் எடுக்கப் படுகின்றன. மேயர் ஹுவான் மனுவேல் சஞ்செஸ், மரினலேடா வாழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக உள்ளார். கடந்த முப்பது வருடங்களாக, மேயர் பதவிக்கு வேறு யாரும் வர முடியவில்லை. ஹுவான் மனுவேல் சஞ்செஸ், ஐக்கிய இடது முன்னணி கட்சியின் பிரதிநிதி. அங்கே ஸ்பெயினின் பிற கட்சிகளும் இயங்குகின்றன. ஐக்கிய இடது முன்னணி கட்சி, மாகாண அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால்,அது மரினலேடாவுக்கு பெரும் தொகை ஒதுக்குவதாக, எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ், தானுண்டு தன வேலையுண்டு என்று, மேயர் பதவியுடன் திருப்தியடைந்து விடவில்லை. அயலில் உள்ள கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழை மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். அதனால், ஆட்சியாளர்களின், முதலாளிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். ஏற்கனவே பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர். இப்போதும் பல வழக்குகள் அவர் மேல் போடப் பட்டுள்ளன. 

ஹுவான் மனுவேல் சஞ்செஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும், ஒரு சூப்பர் மார்க்கட்டில் சூறையாடி, பணம் கொடுக்காமல் வெளியே வந்த பொழுது, பொலிஸ் அவரைக் கைது செய்தது. அந்த தகவல், ஸ்பெயின் நாட்டு ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் யாரென்று தெரியாத ஸ்பானிஷ் மக்களுக்கும், அவரைப் பற்றி அறியத் தந்தன. என்ன ஆச்சரியம்! சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த ஹுவான் மனுவேல் சஞ்செஸ், பெரும்பான்மையான ஸ்பானிஷ் மக்களுக்கு ஒரு நாயகனாக தென்பட்டார். பலர் அவரை "நவீன ரொபின் ஹூட்" என்று அழைத்தார்கள். ஸ்பெயின் முழுவதும் "சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த வீர நாயகனின்" புகழ் பரவியது.

சூப்பர் மார்க்கட் சூறையாடுவதால் ஏழைகளின் உணவுத் தேவை தீர்ந்து விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணக்காரர் யாரும் தாமாகவே முன்வந்து, தங்களது செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதனால், ஏழைகளுக்கு முன்னிருக்கும் ஒரே தெரிவு அடித்துப் பறிப்பது தான். இந்தப் பொருளாதார பால பாடத்தை மக்களுக்கு உணர்த்துவதே, சூப்பர் மார்க்கட் சூறையாடலின் நோக்கம். சில நிறுவனங்கள், ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மீது கிரிமினல் வழக்குப் போட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதால், வழக்கு இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. 

இதே நேரம், யாருமே எதிர்பார்க்காத அதிசயம் ஒன்றும் நடந்துள்ளது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் கொள்ளையடித்த சூப்பர் மார்க்கட்டினை நடத்தும் இன்னொரு நிறுவனம், கொள்ளையடிக்கப் பட்ட பொருட்களின் செலவை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு உணவுப் பொருட்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. "உலகில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சில நேரம் அதற்கு கிளர்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்று ஹுவான் மனுவேல் சஞ்செஸ் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:


ஸ்பானிஷ் தொலைக்காட்சியில், ஏழைகள் சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த செய்தி:

Monday, March 24, 2014

நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்

ஜெர்மனியில் நாஸிகள் கால கட்டத்தில் நடந்த யூத இனப்படுகொலை பற்றி, உலகம் முழுவதும் ஏராளமானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். அதே நேரம், நாஸிகளால் படுகொலை செய்யப் பட்ட, ஜிப்சிகள், ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் பற்றி சிலர் அறிந்திருக்கிறார்கள். ஆனால், நாஸிகளால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

பிற ஐரோப்பிய காலனியாதிக்க வல்லரசுகள் போன்று, ஜெர்மனியும் ஆப்பிரிக்க கண்டத்தில் சில காலனிகளை வைத்திருந்தது. கமெரூன், நமீபியா, தான்சானியா போன்ற நாடுகள், முன்னொரு காலத்தில் ஜெர்மன் காலனிகளாக இருந்தன. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுப் போனது. அதனால், ஆப்பிரிக்க காலனிகளும் பறி போயின. போரில் வென்ற நாடான பிரிட்டன் அவற்றை எடுத்துக் கொண்டது. 

அதற்குப் பிறகு, ஜெர்மனி ஆப்பிரிக்க காலனிகளுக்கு உரிமை கோருவதை கைவிட்டு விட்டது. அதற்கு, ஹிட்லரின் பூகோள அரசியல் கொள்கையும் ஒரு முக்கிய காரணம். "ஜெர்மனி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக பிடித்து வைத்திருக்க வேண்டும்." என்பது ஹிட்லரின் அவா. இன்றைய ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாட்டு அரசியல்- பொருளாதார விடயங்களில், பெருமளவு தலையிட்டு வருவது வேறு கதை.

ஜெர்மனியின் தொழிற்துறை நகரமான ஹம்பூர்க்கில், சில நூறு ஆப்பிரிக்கர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்தனர். 1930 ம் ஆண்டு, ஜெர்மனியில் கறுப்பினத்தவருக்கு எதிராக வளர்ந்து வரும் இனவாதம் பற்றி உரையாடுவதற்காக, ஒரு சர்வதேச மகாநாடு கூட்டப் பட்டது. ஹம்பூர்க் நகரில், கம்யூனிச தொழிலாளர்களால் கூட்டப்பட்ட மகாநாட்டில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கரீபியன் நாடுகளில் இருந்து பேராளர்கள் வந்து கலந்து கொண்டனர்.

நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், ஜெர்மனி இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தது. வலதுசாரிகளான ஒரு பகுதி மக்கள் நாஸிக் கட்சியை ஆதரித்தார்கள். அதே நேரம், இடதுசாரிகளான இன்னொரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தமை எதிர்பார்க்கத் தக்கதே. அதனால், நாஸிகளின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டவுடன், ஆப்பிரிக்கர்களும் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டு, பின்னர் படுகொலை செய்யப் பட்டனர்.

நாஸிகள் ஜெர்மன் பொது மக்கள் மத்தியில், கறுப்பினத்தவருக்கு எதிரான நிறவெறியை புகுத்துவதற்கு இலகுவாக, முதலாம் உலகப்போரின் முடிவு அமைந்திருந்தது. அயல் நாடான பிரான்ஸ், வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றென்பதால், வெர்சேய் ஒப்பந்தப் பிரகாரம் ஜெர்மனியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. நெதர்லாந்து, பெல்ஜியம் எல்லையோரம் இருக்கும் ரைன் நதிப் பகுதி முழுவதும் பிரெஞ்சுப் படைகள் ஆக்கிரமித்தன.

ஜெர்மனியில் சனத்தொகை அடர்த்தி அதிகமான, தொழிற்துறை வளர்ச்சி கண்ட ரைன் மாநிலத்தில், எண்பதாயிரம் பிரெஞ்சுப் படையினர் குவிக்கப் பட்டனர். ஏற்கனவே, உணவுக்கு வழியின்றி, பஞ்சத்தில் அடிபட்டு நொந்து போயிருந்த ஜெர்மன் மக்களை, பிரெஞ்சுப் படையினர் மேலும் துன்புறுத்தினார்கள். வெற்றி பெற்ற மமதையில் மிதந்த பிரெஞ்சு இராணுவம், தோற்றுப் போன மக்களை தனது மேலாதிக்கத்தின் கீழ் பணிய வைத்தது.

அன்று ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த பிரெஞ்சுப் படையில் கடமையாற்றிய வீரர்கள், பிரெஞ்சுக் காலனிகளில் இருந்து வந்திருந்தனர். செனகல், மடகஸ்கார், மொரோக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வியட்நாம், கம்போடியா போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவ சீருடை அணிந்திருந்த பெரும்பான்மையான வீரர்கள், ஆப்பிரிக்க கறுப்பர்களாக இருந்தனர்.

அவர்களில் பலர் உள்ளூர் ஜெர்மன் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தனர். அதனால், குறைந்தது ஒரு ஆயிரம் கலப்பினப் பிள்ளைகள் பிறந்திருந்தன. நாஸிகளின் தூண்டுதலின் பேரில், கறுப்பின போர் வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களை, ஜெர்மன் சமூகம் ஒதுக்கி வைத்தது. அவர்களை பாலியல் தொழிலாளிகள் போன்று நடத்தியது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட, சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டனர். "ரைன்லாந்து வேசிகளின் மக்கள்" என்று, சமூகம் அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டியது.

ஜெர்மனியில் நாஸிகளின் சர்வாதிகாரம் ஏற்பட்டதும், கறுப்பின பிரெஞ்சுப் போர்வீரர்களின் பிள்ளைகள் பலர் இரவோடிரவாக காணாமல்போனார்கள். அவர்களில் பலர் மலடாக்கப் பட்டனர், அல்லது தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டு, பின்னர் யூதர்களோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்டனர். 

ஏற்கனவே, நாஸிகள் கறுப்பின பிரெஞ்சு வீரர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வந்தனர். பிரெஞ்சு யூதர்கள், ஜெர்மானியர்களை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதற்காக, கறுப்பின போர்வீரர்களை கொண்டு வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். ஜெர்மன் பாமர மக்கள், நாஸிகளின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பினார்கள். அதனால், கறுப்பின- ஜேர்மனிய சமூகம் அழிக்கப்பட்ட பொழுது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிற்காலத்தில் நாஸிகள் படையெடுத்து ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளிலும், பல கறுப்பர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் கொல்லப் பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நெதர்லாந்தில், அன்டன் கொம் என்ற சுரினாம் நாட்டவர் ஒருவர், பிரபலமான நாஸி எதிர்ப்பு போராளியாக இன்றைக்கும் கௌரவிக்கப் படுகின்றார். அவர் ஒரு கறுப்பின - கம்யூனிஸ்ட். தென் அமெரிக்காவில் டச்சுக் காலனியான சுரினாமில் பிறந்தவர்.

அன்டன் கொம், சுரினாமில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுகிறார், என்ற குற்றச் சாட்டில் நெதர்லாந்திற்கு நாடு கடத்தப் பட்டிருந்தார். அன்டன் கொம் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர். நெதர்லாந்து நாட்டை, நாஸிப் படைகள் ஆக்கிரமித்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த இரகசிய கெரில்லா இராணுவத்தில் இயங்கி வந்தார். ஆனால், யாரோ காட்டிக் கொடுத்ததால், நாஸிப் படைகளால் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

இனவெறியர்களான நாஸிகள், ஆப்பிரிக்க கறுப்பர்களை, மனித இனப் படி நிலையில், மிகவும் கீழானவர்களாக கணித்து வந்தனர். ஏற்கனவே, ஆப்பிரிக்கர்களை குரங்குகள் போன்று சித்தரிக்கும் படங்களையும் நாஸிப் பிரச்சார பிரசுரங்களில் வரைந்து வந்தனர். ஜெர்மனியர்கள், ஆப்பிரிக்கர்களுடன் திருமணம் செய்வதையும் எதிர்த்து வந்தனர். முன்னாள் ஜெர்மன் காலனிகளில் பணியாற்றிய ஜெர்மனியர்களுக்கு, ஆப்பிரிக்க வைப்பாட்டிகளும், பிள்ளைகளும் இருந்தன.

ஆப்பிரிக்க காலனிகள் பறி போன பிற்பாடு, ஜெர்மனியர்களுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு முற்றாக அறுந்து போனது. அதனால் அந்தக் கலப்பின பிள்ளைகள், பெரிதும் பாதிக்கப் பட்டனர். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில், அப்படி ஒரு வரலாறு இருந்த சுவடே தெரியாமல் மூடி மறைக்கப் பட்டது. இதிலே ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால், நாஸிகள் ஜெர்மனியின் வரலாற்றை எவ்வாறு மாற்றி எழுத வேண்டும் என்று நினைத்தார்களோ, அது இன்றளவும் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, March 21, 2014

எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்


பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

கடந்த வருடத்தில் இருந்து முகநூலில், யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து தனது தகவலை எல்லோருடைய கணக்கிலும் தெரியச் செய்ய முடியும். ஒரு தகவலை பிரசுரிப்பவர், அதற்காக குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்தால் போதும். இது பல வர்த்தக நிறுவனங்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் புதிய ஏற்பாடு, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தோன்றிய நோக்கத்தை சிதைக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலான போலி சமத்துவம் மறைந்து, அந்த இடத்தில் பணக்காரர், ஏழைகள் என்ற ஏற்றத் தாழ்வு உண்டாகின்றது.

நிச்சயமாக, பேஸ்புக் நிறுவனம் சமூக சேவைக்கான தொண்டு நிறுவனம் அல்ல. தொடக்கத்தில் இருந்தே இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பாவனையாளர்களான நாங்கள், பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும், தரவேற்றும் ஒவ்வொரு நிழற்படமும், பேஸ்புக் நிறுவனத்தின் சொத்துக்களாக மாறி விடுகின்றன. நாம் எமது கணக்கை இரத்து செய்து விட்டு சென்றாலும், அந்த தகவல்கள் யாவும் பேஸ்புக்கில் தொடர்ந்தும் சேமித்து வைத்திருக்கப் படும். அதாவது, எமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள், பேஸ்புக்கில் பகிரங்கமாக வைக்கப் படுவதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அது நமது விருப்பத்திற்கு மாறாக, ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றமடைகின்றது. ஒரு விற்பனைப் பண்டம் வைத்திருப்பவர், அதை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டி வருகிறது. அவர்கள் அனைவரும் பிரசுரித்த பல கோடிக் கணக்கான தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் கையகப் படுத்தி வைத்திருக்கிறது. பேஸ்புக் ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டால், அது தான் இன்று உலகில் சனத்தொகை கூடிய இரண்டாவது பெரிய நாடாக இருக்கும். ஒரு பில்லியன் பேஸ்புக் பிரஜைகள், இருபது நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் இணைப்புகள், ஒரு மில்லியன் தகவல்களை அனுப்புகிறார்கள். இரண்டு மில்லியன் நண்பர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். 

இந்தப் புள்ளி விபரமானது, பேஸ்புக் வலையமைப்பு எந்தளவு விரிவானது என்பதை மட்டும் காட்டவில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி என்னவென்று கணிப்பிடவும் உதவுகின்றது. இந்த நிமிடத்தில், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 140 பில்லியன் டாலர்கள். இது சில நேரம், மிகைப் படுத்தப் பட்ட தொகையாக இருக்கலாம். ஆனால், கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கெர்பெர்க், ஒரு நாளைக்கு 6 மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பதை தடுத்து நிறுத்தவில்லை.

பேஸ்புக் நிறுவனத்தின் இலாப விகிதம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், நியூ யார்க் நகரை சேர்ந்த, Laurel Ptak என்ற ஆய்வாளர், அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மையக் கரு: "பேஸ்புக் அதனது பாவனையாளர்களுக்கு கூலியாக பணம் கொடுக்க வேண்டும்." அறிக்கையின் தொடக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: "பேஸ்புக் பயன்படுத்துவது,  நட்பு அடிப்படையிலான செயல் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் இதனை கூலி கொடுக்கப் படாத இலவச உழைப்பு என்று சொல்கிறோம். "லைக்", "குறுஞ் செய்தி", "இணைப்பு" போன்ற ஒவ்வொன்றும் அவர்களுக்கு இலாபமாக மாறுகின்றது. நாங்கள் எமது தகவல்களை மற்றவர்களுடன் "பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் அதனை "தகவல் திருட்டு" என்று அழைக்கின்றோம்."

Laurel Ptak கூறுவதன் படி, நாம் பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும் எமது உழைப்பில் இருந்தே உருவாகின்றது. அதற்காக நாம் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, ஆக்கபூர்வமான ஒன்றை செய்கின்றோம். நிச்சயமாக, அதுவும் ஒரு உழைப்பு தான். ஆனால், விலை தீர்மானிக்கப் படாத உழைப்பு, உபரி மதிப்பாக சேமித்து வைக்கப் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால், எமக்குச் சேர வேண்டிய, எம்முடைய உழைப்பின் உபரி மதிப்பு, இன்னொருவரால் பணமாக மாற்றிக் கொள்ளப் படுகின்றது. இதைத் தான் திருட்டு என்று சொல்கிறோம். 

உதாரணத்திற்கு, பேஸ்புக் ஒரு புத்தகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் நபர்கள் சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் அது. பலரின் கூட்டு உழைப்பால் உருவான புத்தகம் விற்று வரும் ராயல்ட்டி தொகையை, ஒரு சிறிய குழுவினர் சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பகற் கொள்ளையை தடுக்க வேண்டுமானால், பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டும். நாங்கள் ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்ற உணர்வு, பாவனையாளர்கள் மத்தியில் உருவாக வேண்டும். பாவனையாளர்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைக்கும் இலாபத்தில் பங்கு கேட்க வேண்டும்.

பேஸ்புக் நிறுவனம் இதைக் கேட்டு விட்டு, நாளைக்கே எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக வலையமைப்பில் ஏகபோக உரிமை கொண்டாடும் அவர்கள், இதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பார்கள். ஆனால், உழைப்பவர்கள் ஊதியம் கேட்க முடியும் என்ற நியாயமான கோரிக்கை ஒரு இணையப் புரட்சிக்கு வித்திட முடியும். அதுவே பேஸ்புக் நிறுவனத்தின் பலவீனமும் ஆகும். ஏனெனில், பாவனையாளர்கள் இன்றி பேஸ்புக் இயங்க முடியாது. அதனால் தான் பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறோம். "உழைப்பு என்றால் என்ன? உபரி மதிப்பு எவ்வாறு உருவாகின்றது?" போன்ற அறிவைப் பெற வேண்டும்.

Laurel Ptak வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பேஸ்புக் நிறுவனம் பற்றியது தான். ஆனால், பாவனையாளர்களின் உழைப்பில் இருந்து பெறப் படும் உபரி மதிப்பை விற்றுக் காசாக்கும் வேறு சில இணைய நிறுவனங்களும் உள்ளன. கூகிள், டிவிட்டர், யாகூ போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவும் நேரம், அது இணையப் புரட்சியை மட்டுமல்லாது, சமூகப் புரட்சியையும் உருவாக்கும். ஏனெனில், இது போன்று மகளின் இலவச உழைப்பை திருடிச் சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் சமூகத்தில் உள்ளன. 

முதலில் நாங்கள் உழைப்பு, வேலை போன்ற சொற்களுக்கு அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம். அதற்குப் பிறகு, புதிய நண்பர்களை உருவாக்கி, எமது நட்பு வட்டத்தை விரிவு படுத்திக் கொள்வோம். 

 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை, இணையத்தில் செயற்படும் பெல்ஜியத்தை சேர்ந்த சமூக- அரசியல் ஆர்வலர்கள் அனுப்பிய தகவலை தழுவி எழுதப் பட்டது.)

மேலதிக தகவல்களுக்கு:
1.Wages for facebook
2.Wages for Facebook? Maybe it's not So Crazy

இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, March 18, 2014

பாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி


கம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், "உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் பிரான்ஸ்" என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. 18 மார்ச் 1871, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கிய கம்யூனிசப் புரட்சி வெடித்தது. பிரான்ஸ் நாடு பல புரட்சிகளைக் கண்டுள்ளது. 1789 ம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி,பிரெஞ்சு மொழியில் "பூர்ஷுவா" என்று அழைக்கப் படும், மத்திய தர வர்க்கத்தினரின் புரட்சி ஆகும். பிற்காலத்தில், அந்தப் புரட்சியை ஐரோப்பா முழுவதும் பரப்பும் பொறுப்பை ஏற்ற நெப்போலியன் காலத்தில், பிரெஞ்சு பேரினவாதமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.

பூர்ஷுவா வர்க்கம் ஆளும் உலக நாடுகள் எங்கும், முதலாவது பிரெஞ்சுப் புரட்சிக்கு, இன்றைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அது பற்றிய குறிப்புகள், மாணவர்களின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாரிஸ் கம்யூன் புரட்சி முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப் படுகின்றது. ஏனென்றால், 1871 ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி, உழைக்கும் வர்க்க மக்களின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி ஆகும்.  நமது நாடுகளிலும், முதலாளிகளின் கையில் உள்ள எந்த ஊடகமும், அதைப் பற்றி எதுவும் கூறுவதில்லை. தமிழ் பேசும் பூர்ஷுவாக்கள், அதைப் பற்றி அறிந்திருந்தாலும், தெரியாதது மாதிரி காட்டிக் கொள்வார்கள். அந்தளவுக்கு வர்க்க மனப்பான்மை, எமது சமூகத்தில் கோலோச்சுகின்றது.

1871 ம் ஆண்டு, மார்ச் மாதம் தோன்றிய பாரிஸ் கம்யூன், மே மாதம் பிரெஞ்சு இராணுவத்தினால் கொடூரமாக அழித்தொழிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்கு குறைவான காலமே நின்று பிடித்தாலும், உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை உண்டாக்கியது. உலகில் உழைக்கும் வர்க்க மக்களின் பொதுவுடைமைப் புரட்சி சாத்தியமே என்பதை நிரூபித்தது. பாரிஸ் உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை, பல்வேறு பட்ட புரட்சிகர சக்திகள் வழிநடத்தின. அனார்க்கிஸ்ட்கள், மார்க்சிஸ்டுகள், லிபரல்கள் போன்ற பல்வேறு வகையிலான சித்தாந்தங்களை பின்பற்றினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தனர்.

26 மார்ச், உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு, ஒரு கம்யூன் (பொதுவுடைமை) அரசாங்கம் உருவாக்கப் பட்டது. 28 மார்ச்  1871, "பாரிஸ் கம்யூன்" பிரகடனம் செய்யப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். உலக வரலாற்றில் முதல் தடவையாக, அடி மட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். ஒரு புதிய சமத்துவ சமுதாயம் உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. முந்திய சமூகத்தில், அமைச்சர், மருத்துவர், முகாமையாளர் என்று உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும், ஆலைத் தொழிலாளிக்கு சமமான சம்பளம் பெற்றனர். உயர்ந்த பட்ச சம்பளம், ஆறாயிரம் பிராங்குகள் என்று தீர்மானிக்கப் பட்டது.

அந்தக் காலத்தில், பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் விளைவாக தான் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அன்று பிருஷிய பேரரசு என்று அழைக்கப் பட்ட ஜெர்மனியப் படைகள், பாரிஸ் மாநகருக்கு வடக்கே இருந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன. பிரெஞ்சு இராணுவம் பாரிசின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. பிரெஞ்சு அரசாங்கம், வெர்சேய் நகரினை தற்காலிக தலைநகராக்கி, அங்கிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனிக்கு இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னர், பாரிஸ் நகரை சேர்ந்த, படையினரின் ஆயுதங்களை களைய முயற்சித்த காரணத்தினால் தான் புரட்சி வெடித்தது.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போல, பாரிஸ் நகரிலும், பெரும்பாலும் பாட்டாளி வர்க்க இளைஞர்கள் தான், இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஆயுதங்களை விட்டு வைப்பது, தனக்கு ஆபத்தானது என்று பிரெஞ்சு பூர்ஷுவா அரசு நினைத்தது. அவர்கள் பயந்தது மாதிரியே நடந்தது. பிரெஞ்சு பூர்ஷுவா வர்க்கத்தினால் தேசியவாத வெறியூட்டப் பட்டிருந்த இராணுவமாக இருந்தாலும், பாரிஸ் நகரை சேர்ந்த வீரர்கள் வர்க்க விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அதனால் தான், பாரிஸ் புரட்சி வெற்றி பெற்றது. பாரிஸ் கம்யூன் உருவானதும், தொழில் முறை இராணுவம் கலைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மக்கள் படை உருவானது. வயது வந்த அனைத்துக் குடி மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப் பட்டன.

பாரிஸ் கம்யூன், மதத்தையும், அரசையும் பிரித்தது. மதத்திற்கு வழங்கப் பட்ட உயர்ந்த அந்தஸ்து இரத்து செய்யப் பட்டது. மத நிறுவனங்களின் சொத்துக்கள் மக்கள் மயமாக்கப் பட்டன. கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்கள் அகற்றப் பட்டன. பாடசாலைகள், பணியிடங்களில் பிரார்த்தனை செய்யும் வழமை அகற்றப் பட்டது. அவற்றை விட, முந்திய அரசாங்கம் வைத்திருந்த, பிரெஞ்சு பேரினவாதத்தை பறை சாற்றும் சின்னங்கள் அகற்றப் பட்டன. பேரினவாதம், தேசியவாதம், இனவாதம் எதற்குமே அங்கே இடம் இருக்கவில்லை. பாரிஸ் கம்யூன் என்பது தேசிய அரசு அல்ல. அது ஒரு உலக மக்களின் அரசாங்கம். அதிலே சில வெளிநாட்டவர்களும் அங்கம் வகித்தனர். உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், உழைக்கும் மக்கள் என்ற பொதுத் தன்மை அவர்களை ஒன்றிணைத்தது.

நமது காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பகைமை உணர்வு மாதிரித் தான், அன்றிருந்த ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு வரையில், ஜெர்மனியும், பிரான்சும் ஜென்மப் பகையாளிகள். சதா சர்வ காலமும், கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவ்விரண்டு நாடுகளும், ஒரு காலத்தில் சமாதானமாக வாழும் என்று சொன்னால், அன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். "சிங்களவனும், தமிழனும் இனிமேல் எந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது" என்று, இன்றைக்கு சிலர் பேசுவதைப் போன்று தான், அன்றைக்குப் பலர் ஜெர்மானியர்கள், பிரான்சியர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய போரில் வெற்றி, தோல்வி காண முடியாமல், போர் நிறுத்தம் செய்து கொண்ட ஜெர்மனியும், பிரான்சும், பாரிஸ் கம்யூன் புரட்சியின் பின்னர் ஒன்று சேர்ந்தன. அப்போது ஜெர்மன்-பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு விழித்துக் கொண்டது. உலகில் தோன்றிய முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக கை கோர்த்துக் கொண்டனர். ஜெர்மன் உதவியுடன் படை நகர்வுகளை மேற்கொண்ட பிரெஞ்சு இராணுவம், மே மாதம் பாரிஸ் கம்யூனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கைப் பற்றியது.

பிரெஞ்சு இராணுவ நடவடிக்கை காரணமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் புரட்சியாளர்களை, ஜெர்மனி தடுத்து நிறுத்தியது. அவர்களை தப்ப விட வேண்டாம் என்று, வடக்கே நிலை கொண்டிருந்த ஜெர்மன் படைகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. அதனால், பாரிஸ் கம்யூனில் இருந்த யாரும் தப்பியோட முடியாதவாறு, நாலாபக்கமும் சுற்றி வளைக்கப் பட்டனர். அடுத்து அங்கே ஒரு இனப் படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள் என்று பேதம் பாராது, அனைவரும் தெருத் தெருவாக, வீடு வீடாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்றைய இனப் படுகொலையில், சுமார் முப்பதாயிரம் நிராயுதபாணிகளான பொது மக்கள், பிரெஞ்சு இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இன்று பாரிஸ் கம்யூனை நினைவுகூரும் இடங்கள் யாவும் அழிக்கப் பட்டு விட்டன. தற்போது எஞ்சியிருப்பது, பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடலையில் உள்ள, மதில் சுவர் ஒன்று மட்டுமே. அந்த மதில் சுவருக்கு முன்னாள் வைத்து, இறுதியாக பல நூறு புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்த இடத்தில், "பாரிஸ் கம்யூனில் இறந்தவர்களின் நினைவாக" என்று எழுதப் பட்டுள்ளது. அதனை இன்றைக்கும் யாரும் சென்று பார்வையிடலாம். 
 
பாரிஸ் கம்யூன் புரட்சியாளர்கள் படுகொலை செய்யப் பட்ட மதில் சுவர். 

பாரிஸ் கம்யூன் விட்ட நடைமுறைத் தவறுகளை விமர்சித்து, கார்ல் மார்க்ஸ் "பிரான்சின் உள்நாட்டுப் போர்" என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் தான், லெனின் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியை வழிநடத்தினார். சீனப் புரட்சிக்கும், பாரிஸ் கம்யூன் ஒரு உந்து சக்தியாக இருந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோர் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதிய கட்டுரைகள், இன்றைக்கும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் வாழும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது, அனார்க்கிஸ்ட்கள், சோஷலிஸ்டுகளும், பாரிஸ் கம்யூன் புரட்சியை இன்றைக்கும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பாரிஸ் கம்யூன் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. அது சம்பந்தமான நூல்கள், ஆவணங்கள் மறு வாசிப்புக்குட்படுத்தப் படுகின்றன.

உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் பூர்ஷுவா வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம். பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள், இலங்கை, இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கும் பொருந்தும். இலங்கையில் அல்லது ஈழத்தில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இன்று எதிரிகளாக அடித்துக் கொள்ளும், சிங்களத் தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதே போன்று, இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இந்திய-பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்கள், தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். இது நாங்கள் பாரிஸ் கம்யூனில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை ஆகும்.

பிரான்ஸ் பற்றிய முன்னைய பதிவுகள் : 
1 பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்
2 ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

Tuesday, March 11, 2014

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல்   தவிர்ப்பது நல்லது.)


சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா? 1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்! இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை, தனது தேசிய சின்னமாக்கிக் கொண்டால், அது உலகில் எத்தகைய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும்? சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த உக்ரைனில், பழைய நாஸி சின்னம், இன்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. உலகில் யாரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. 

ஒரு யூதப் பெண்ணை வீதியில் போட்டு அடிக்கும் உக்ரைன் இனவெறியர்கள் 

இன்றைய உக்ரைனிய ஆட்சியாளர்களை, மேற்கத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றன. 1941 ம் ஆண்டு,ஐயாயிரம் யூதர்களை இனப் படுகொலை செய்த, அதே உக்ரைன் தேசியவாத இயக்கம், இன்று ஆட்சி அமைத்துள்ளது. ஜனநாயக பண்பு நிறைந்த மேற்கத்திய கனவான்கள், அந்த அரசைத் தான், "சட்ட பூர்வமான உக்ரைனிய அரசு" என்று அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது ஒன்றும் புதுமை அல்ல. 2 ம் உலகப்போரின் முடிவில், உக்ரைன் மீண்டும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகியது. உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றனர். 

உக்ரைன் நாஸி தலைவருடன் கை குலுக்கும் ஜோர்ஜ் புஷ் 

OUN தலைவர்களில் ஒருவரான Yaroslav Stetsko, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்தித்து இருந்தார். அப்போது பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்குள் நுழைந்து, உளவுத் தகவல்கள் திரட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தார்கள். அந்தப் பழைய நட்பு, இப்போதும் தொடர்கின்றது. ஒரு பக்கம், யூதர்களை இனப் படுகொலை செய்தவர்களுடன் கை குலுக்கிக் கொண்டே, மறு பக்கம் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்கர்களுக்கு ஒரு முரண்பாடாகத் தெரியவில்லை. அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

வீதியில் ஒரு யூதப்  பெண்ணை ஓட ஓட அடிக்கும் ஒரு பாசிஸ்ட் சிறுவன்  
உக்ரைனில் யூத இனவழிப்பு, 1941 ம் ஆண்டு லிவிவ் (Lviv) நகரில் ஆரம்பமாகியது. லிவிவ் அல்லது லிவோவ் என்று அழைக்கப் படும் நகரம், மேற்கு உக்ரைனில் உள்ளது. போலந்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவானது. இன்றைக்கும் அதுவே உக்ரைனிய தேசியவாதத்தின் பிறப்பிடமாக கருதப் படுகின்றது. (உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழிக்கும், போலிஷ் மொழிக்கும் இடைப்பட்ட மொழி ஆகும்.) அண்மையில், உக்ரைனிய தலைநகர் கீவில் நடந்த, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களில் பெரும்பான்மையானோர், லிவிவ் நகரில் இருந்து சென்றவர்கள் தான். கடந்த எழுபதாண்டு காலமாக, லிவிவ் மாநிலம், உக்ரைனிய தேசியவாதத்தின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.

"ஒப்பெறேஷன் பார்பரோசா" என்ற பெயரில், ஜேர்மனிய நாஸிப் படைகள், சோவியத் உக்ரைன் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தின. ஜெர்மனியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சோவியத் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. 1941, ஜூலை மாதம், முதலாம் தேதி, உக்ரைனின் லிவிவ் மாநிலம் ஜெர்மனியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது. 

வீதிகளை கைகளால் சுத்தம் செய்யும் யூதர்கள். உக்ரைனிய இனவெறிக் கும்பல் சுற்றி வர நின்று வேடிக்கை பார்க்கின்றது. 

லிவிவ் நகரில், NKVD (கேஜிபி யின் முன்னோடி) பல சிறைச்சாலைகளை நிர்வகித்து வந்தது. ஜெர்மன் படைகள் வருவதற்கு முதல் நாள், சிறையில் இருந்த கைதிகள் அவசர அவசரமாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அநேகமாக, அந்தக் கைதிகளில் பல தேசியவாதிகள் இருந்திருக்கலாம். ஜெர்மன் ஆக்கிரமிப்பின் பின்னர், வெளியே தலை காட்டிய உக்ரைனிய தேசியவாதிகளின் முதலாவது நடவடிக்கை, யூதர்களுக்கு எதிரானது தான். சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்களை அப்புறப் படுத்தவும், துப்பரவு செய்யவும், யூதர்களை பிடித்து பலவந்தமாக வேலை வாங்கினார்கள்.

பாசிஸ்டுகள் உடைத்து வீழ்த்திய லெனின் சிலையை முத்தமிடுமாறு ஒரு யூதனை வற்புறுத்துகிறார்கள். 

ரஷ்ய சாம்ராஜ்யத்தில், சார் மன்னன் காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனமான யூதர்கள், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர். அதனால், தேசியவாதிகளினால், யூதர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று பொதுமைப் படுத்திப் பேசப் பட்டனர். அது உண்மையா, பொய்யா என்பதை விட, யூதர்கள் மீதான இனத் துவேஷத்தின் இன்னொரு வடிவமாக அது இருந்தது. அதனால், பாசிஸ்டுகளால் உடைக்கப் பட்ட லெனின் சிலைகளை முத்தமிடுமாறு, யூதர்களை துன்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

நடுத் தெருவில் ஆடை களைந்து அவமானப் படுத்தப் படும் யூதப் பெண் 

உக்ரைனில், யூத இனவழிப்பு ஒரு கேளிக்கை நிகழ்வு போன்று தொடங்கியது. பொது இடங்களில் ஒன்று கூடிய கும்பல்கள், பல்வேறு வழிகளில் யூதர்களை துன்புறுத்தின. தெருவில் யூதர்கள் ஓட ஓட கல்லால் அடித்து விரட்டினார்கள். தெருக்களில் முழங்காலால் நடந்து போகுமாறு கட்டளையிட்டார்கள். ஆண்கள், பெண்கள் பேதம் பாராது, பட்டப் பகலில், நடுத் தெருவில் உடைகளை களைந்து அம்மணமாக்கி அவமானப் படுத்தினார்கள். கேளிக்கை முடிந்த பின்னர் அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அன்றைய இனப் படுகொலையில் பலியான அப்பாவிகள் செய்த ஒரேயொரு குற்றம், யூதர்களாகப் பிறந்தது தான். 

கும்பல் வன்முறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு தாயும் மகளும் 

காலங்காலமாக தங்கள் அயலில் வாழ்ந்த யூதர்களை, உக்ரைனிய காடையர்கள் துன்புறுத்தி, சித்திரவதை செய்து கொன்றார்கள். இன்றைய உக்ரைனை ஆளும், அதே "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN), அன்று உக்ரைனிய மக்களுக்கு இனவெறியூட்டி, யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. அன்று இந்த சம்பவங்களை எல்லாம், ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். உக்ரைனில் அன்று நடந்த யூத இனப் படுகொலையில், குறைந்தது ஐயாயிரம் உக்ரைன் யூதர்கள், உக்ரைனிய இனவெறியர்களினால் கொல்லப் பட்டனர்.
தெருவில் முழங்காலால் நடந்து செல்ல வற்புறுத்தப் பட்ட யூதப் பெண் 


அன்று உக்ரைனில் நடந்த யூத இனப் படுகொலையை, இன்றைய உலகம் மறந்து விட்டது. அதனால் வரலாறு திரும்புகின்றது. உக்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, அங்கு வாழும் யூதர்கள் அச்சத்தில் உள்ளனர். கீவ் நகர யூத தலைமை மதகுரு, யூதர்களை லிவிவ் நகரை விட்டு, முடிந்தால் உக்ரைனை விட்டு வெளியேறுவது நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார். இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வந்திருக்காது.  இன்று வரைக்கும், உக்ரைன் ஆட்சியாளர்களை, "நாஸிகள்/பாசிஸ்டுகள்" என்று குறிப்பிட மறுக்கும் ஊடகங்களிடம் இருந்து, நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இன்றைய உக்ரைன் பிரச்சினையில், மேற்கத்திய ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் கேவலமானது. இப்படித் தானே, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நேரமும் நடந்து கொண்டிருந்திருப்பார்கள்?

ஒரு உக்ரைனிய வன்முறைக் கும்பல், அப்பாவி யூதர்களை தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலில் பங்கு பற்றிய ஒருவரின் அடையாள அட்டை வலது புறம் உள்ளது. அதில் "உக்ரைனிய துணைப் படை உறுப்பினர்" என்று ஜெர்மன், உக்ரைனிய மொழிகளில் எழுதப் பட்டிருப்பதை வாசிக்கலாம்

இன்றைக்கும், உக்ரைன் பேரினவாதிகளின் பாசிச அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையில், தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உக்ரைனில், யூதர்களையும், போலிஷ் மக்களையும் இனப்படுகொலை செய்த உக்ரைனிய பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது, தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதிகளை ஆதரிப்பதற்கு சமமானது. ஆனாலும், தமிழ் தீவிர வலதுசாரிகள், மிகவும் துணிச்சலுடன் உக்ரைனிய நாஸி இனப் படுகொலையாளர்களை ஆதரித்து வருகின்றனர். பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு சரியான தகவல்கள் போய்ச் சேராத படியால், "தங்களது பிரச்சாரங்களை மட்டுமே தமிழ் மக்கள் நம்புவார்கள்" என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

இன்றைக்கு பலர், "தாங்கள் உக்ரைன் அரசை ஆதரிக்கவில்லை(?)" என்று சொல்லிக் கொண்டே, பாஸிசத்தின் மீள் வருகையை புறக்கணித்து வருகின்றனர். ஹிட்லர் காலத்திலும் அது தான் நடந்தது. அன்று, மேற்கத்திய அரசாங்கங்களும், ஊடகங்களும் ஹிட்லர் மீது நம்பிக்கை வைத்து புகழ்ந்து கொண்டிருந்தன. சிவபெருமானை எண்ணி தவம் செய்து வரம் கேட்டுப் பெற்ற பஸ்மாசுரன், சிவன் தலை மீதே கை வைக்க முயன்ற போது தான், சிவபெருமானுக்கு தான் செய்த தவறென்ன என்று புரிந்ததாம். இன்று, உக்ரைன் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருபவர்களின், எதிர்காலமும் அது தான். பஸ்மாசுரனுக்கு பயந்து சிவபெருமான் தலை தெறிக்க ஓடியது போன்று, இவர்களும் நாஸிகளுக்கு பயந்து ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.





உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

1.மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி
2.கிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாணங்கள்
3.உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



Monday, March 10, 2014

லிபியாவில் ஒரு இசைப்பிரியா!


இவர் பெயர் ஹலா மிஸ்ராதி (Hala Misrati). கடாபி கால லிபியாவில், மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர், அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர். செய்தி அறிக்கைகள், அரசியல் விவாதங்கள் போன்றவற்றை சிறப்பாகத் தொகுத்து வழங்கியதன் மூலம், லிபியாவில் மட்டுமல்லாது, அயலில் உள்ள அரபு நாடுகளிலும் பிரபலம் அடைந்தார். குறிப்பாக, கடாபி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி நடந்த, கடைசி மூன்று வருடங்கள், இவரது புகழ் உச்சத்தில் இருந்தது.

ஹலா மிஸ்ராதி, முப்பதைத் தாண்டிய அழகான, புத்திக் கூர்மையுள்ள இளம் நங்கை. தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப் படுவதற்கு முன்னர், நாவல்கள், கவிதைகள் எழுதி இலக்கியத் துறையில் சிறந்து விளங்கினார். லிபியாவில் கடாபி ஆதரவாளர்களும், அயல்நாட்டு அரேபியர்களும், ஹலா மிஸ்ராதியின் திறமையால் கவரப் பட்டு, அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். ஆனால், பென்காசி நகரில் தளம் அமைத்திருந்த, நேட்டோ கைக்கூலிப் படியான, லிபியக் கிளர்ச்சியாயளர்கள் அவரை வெறுத்தனர்.

நேட்டோ கூலிப் படையினர் தலைநகர் திரிப்பொலியை நெருங்கி விட்ட சமயம், தொலைக்காட்சியில் தோன்றிய ஹலா மிஸ்ராதி, கிளர்ச்சியாளர்களை இன்னும் தீவிரமாக தாக்கிப் பேசினார். ஒரு தடவை, நேரடி ஒலிபரப்பு ஒன்றின் பொழுது, துப்பாக்கியை எடுத்துக் காட்டி பரபரப்பூட்டினார். "கிளர்ச்சியாளர்கள் திரிப்பொலியை பிடித்து, தான் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தையும் கைப்பற்ற துணிந்தால், தான் கடைசி வரை எதிர்த்துப் போராடப் போவதாக," அந்த ஒளிபரப்பில் சூளுரைத்தார். (கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்)

 

இறுதியில், திரிப்பொலி நகரமும் வீழ்ச்சி அடைந்தது. கடாபி அரசை ஆதரித்தவர்கள், உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு தப்பியோடிய ஹலா மிஸ்ராதி, திரிப்பொலி நகருக்கு வெளியே ஒரு சாலையில் வைத்து, நேட்டோ கைக்கூலிப் படையினரால் மடக்கிப் பிடிக்கப் பட்டார். வெற்றிக் களிப்பில் மிதந்த கிளர்ச்சியாளர்களுக்கு, ஹலா மிஸ்ராதி போரில் கிடைத்த பெறுமதி மிக்க பரிசாக தெரிந்தார். வெறி கொண்ட கும்பல் ஒன்று, அவரை மாறி மாறி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரை பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, கடுமையாக சித்திரவதை செய்தனர். நேட்டோ கூலிப்படையினர், ஹலா மிஸ்ராதியை கொன்று விட்டதாக அப்போது நம்பப் பட்டது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பின்னர், உயிரோடு விடுதலை செய்யப் பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இரண்டையும் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை.

ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தினர் பிடித்து வன்புணர்ச்சி செய்து கொன்ற இசைப் பிரியாவின் கதையை, இது நினைவு படுத்துகின்றது. இசைப்பிரியா புலிகளின் தொலைக்காட்சியில் பணியாற்றிய அழகான, புத்திக் கூர்மையுள்ள இளம் நங்கை. ஹலா மிஸ்ராதி போன்று, அவரும் தொலைக்காட்சி அரசியல் அறிக்கைகளை தொகுத்து வழங்கியதுடன் நில்லாது, நாடகம், சினிமா போன்ற கலைத் துறைகளிலும் ஆர்வம் காட்டினார். ஈழத்தில், இசைப்பிரியா பிரபாகரனையும், புலிகளையும் விசுவாசித்தார். தொலைக்காட்சி ஊடகத்தில், புலிகளின் கொள்கைகளை மிகவும் தீவிரமாக பரப்பி வந்தார். அதையே தான் ஹலா மிஸ்ராதியும் செய்து வந்தார். அவர் கடாபியையும், அவரது அரசையும் விசுவாசித்தார். தொலைக்காட்சி ஊடகத்தில், கடாபியின் கொள்கைகளை மிகவும் தீவிரமாக பரப்பி வந்தார்.

இசைப்பிரியா, ஹலா மிஸ்ராதி ஆகிய இரண்டு பெண்களினதும் வாழ்க்கை மட்டுமல்ல, முடிவும் ஒரே மாதிரி அமைந்துள்ளது ஆச்சரியத்திற்குரியது. கடாபியால் சீரழிக்கப் பட்ட பெண்கள் பற்றிய ஆவணப் படம் எடுத்த பிபிசி தொலைக்காட்சிக்கு, லிபியாவில் ஒரு பெண் ஊடகவியலாளர் வன்புணர்ச்சி செய்யப் பட்ட சம்பவம் பற்றி எதுவும் தெரியாதது வியப்புக்குரியது. பிபிசி ஒன்றும் நடுநிலை ஊடகம் அல்ல. அதுவும் ஒரு பக்கச் சார்பான கதைகளை மட்டுமே பரப்பும், ஒரு பிரச்சார ஊடகம் தான்.  

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போருக்கும், லிபியா போருக்கும் இடையிலான பெருமளவு ஒற்றுமைகளை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறேன். ஈழத்தில், பிரபாகரன், புலிகள், போராளிகள், ஆதரவாளர்களுக்கு நேர்ந்த அதே கதி தான், லிபியாவில் கடாபிக்கும், அவரது படையினர், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது. இலங்கையில், எவ்வாறு மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற சிங்களப் படைகள், மிகவும் பலமான சக்தியாக விளங்கியதோ, அதே மாதிரி, லிபியாவில் நேட்டோ படைகளின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் மிகவும் பலமாக இருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில், புலிகளும், அதன் ஆதரவாளர்களும் சுற்றிவளைக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். அதே மாதிரி, லிபியாவில் சியர்ட்டே பகுதியில் கடாபிக்கு விசுவாசமான படைகளும், ஆதரவாளர்களும் சுற்றிவளைக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். இரண்டு இடங்களும், கடற்கரையை அண்மித்தே அமைந்திருந்தன என்பது இன்னொரு ஒற்றுமை.

முரண்நகையாக, இன்று புலிகளை ஆதரிக்கும் பலர், கடாபியை வெறுக்கின்றனர். லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பு போர் நடந்த காலத்தில், அவர்கள் அதனை ஆதரித்தார்கள். இதன் மூலம், தாங்கள் ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பு போரையும் ஆதரிக்கின்றோம் என்பதை அவர்கள் உணரவில்லை. அந்தளவுக்கு, மேற்கத்திய எஜமானர்கள் மீதான விசுவாசம், அவர்களது கண்களை கட்டிப் போட்டுள்ளது.


லிபியா பற்றிய முன்னைய பதிவுகள்:

Saturday, March 08, 2014

உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாடான உக்ரைனில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இன்றைக்கும் பலர், அதன் ஆபத்தை உணராமல் இருக்கின்றனர். உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான தமிழர்கள், அல்லது தெற்காசிய நாட்டவர்கள் வாழ்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையினர் மாணவர்களாகவும், அகதிகளாகவும் உக்ரைனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு அவர்களின் நிலைமை என்னவென்று யாராவது நினைத்துப் பார்த்தார்களா?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று கருதப் படும், தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறன? இந்த ஆபத்தை மூடி மறைத்து, நாசிஸ பயங்கரவாதிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறன.

ஒரு தடவை, அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், இந்தியா முழுவதும் பரபரப்புச் செய்தியாக பேசப் பட்டது. ஆனால், கடந்த வருடம், உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப் பட்ட சம்பவம் பற்றி, எத்தனை பேருக்குத் தெரியும்? எந்த ஊடகம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது?

உக்ரைனில் இந்திய மாணவர்களை தாக்கியது யார் தெரியுமா? அந்த நாட்டில் ஒரு பலமான நவ நாஸி அரசியல் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் தான் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ரஷ்யாவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தான் மேற்குலகம் ஆதரிக்கிறது. மேற்குலகம் ஆதரிப்பதால், நாங்களும் ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி ஒன்றில் தான், அந்த சம்பவம் இடம்பெற்றது. கடந்த வருடம், உக்ரைனில் நடந்த உதைபந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இந்திய மாணவர்களே, நவ நாஸிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை அடித்தார்கள்? இந்திய மாணவர்களின் கறுப்புத் தோல் நிறமே போதுமானது. வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. அதை நிறவெறி, இனவெறி என்று கண்டிப்பதற்கு பலர் முன்வருவார்கள். ஆனால், அன்று இந்தியர்களுக்கு அடித்த அதே நிறவெறியர்கள் / இனவெறியர்கள் தான், இன்று உக்ரைனிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றார்கள்.

ஆயுதமேந்திய நவ நாஸிக் குண்டர்கள், உக்ரைனில் கீவ் நகரில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த காலங்களில், "அரசுக்கு எதிரான அமைதி வழிப் போராட்டம் நடக்கின்றது" என்று தமிழ் ஊடகங்கள் புளுகிக் கொண்டிருந்தன. அவர்கள் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சிக்கு வந்திருந்தாலும், மேற்குலகம் ஆதரிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் ஊடகங்களும் ஒரு நிறவெறி- பாசிஸ அரசை ஆதரிக்கின்றன. பாசிச வன்முறையாளர்களை, ஜனநாயகவாதிகள் போன்று சித்தரிக்கின்றன. இன்று வரையில், ஏதாவது ஒரு வெகுஜன தமிழ் ஊடகம், குறைந்த பட்சம் ஒரு இணையத் தளமாவது, "உக்ரைனிய ஆட்சியாளர்கள் நாஸிகள் / பாசிஸ்டுகள்" என்று கூறி இருக்கிறதா? (இடதுசாரி சார்பான ஊடகங்களை இங்கே குறிப்பிடவில்லை.)

தமிழ் ஊடகங்களில் வெளியாகும், அண்மைக் கால உக்ரைன் பிரச்சினை பற்றிய பற்றிய செய்திகள் எல்லாவற்றிலும், "நாஸிகள், பாசிஸ்டுகள்" என்ற சொற்கள் வர விடாமல் தணிக்கை செய்யப் பட்டிருக்கும். தாங்கள் எத்தகைய ஆபத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது, இந்த ஊடகங்களுக்கு தெரிவதில்லை. நாளைக்கு, உக்ரைனில் வாழும் இந்தியர்கள், ஈழத் தமிழர்கள், நவ நாஸி காடையர்களினால் அடித்து விரட்டப் படும் காலம் வரும் பொழுது மட்டுமே விழித்துக் கொள்ளும். ஆனால், அப்போது காலம் கடந்து விட்டிருக்கும்.

உக்ரைனில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியின் பொழுது, இந்திய மாணவர்களை நவ நாஸிகள் அடித்து உதைக்கும் காட்சிகள், இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அப்போதே பிபிசி அதனை வெளியிட்டிருந்தது. 

Ukraine football fans are racist 

உக்ரைன் பற்றிய முன்னைய பதிவுகள்: