Monday, February 27, 2012

ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, பொது நாணயமான யூரோவின் மதிப்பிறக்கம் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. யூரோ நாணயத்தின் வீழ்ச்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியாக கருதிக் கொள்கின்றனர். அது போன்ற செய்திகளும் வெளி வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற விம்பமே இது வரை காலமும் பரப்பப் பட்டு வந்துள்ளது. இதனால் எல்லோரும், ஐரோப்பாவின் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மட்டுமே கருதிக் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை ஒரு புறம் வைத்து விட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தோற்றம், அமைப்பு, இலக்கு என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் தான், அதன் பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரம் என்றுமே தனியாக இயங்கவில்லை. அதற்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்து வருகின்றது.

முதலாம் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் கடன்களை அறவிடுவதற்காக, BIS எனப்படும் தனியார் வர்த்தக வங்கி ஸ்தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க வங்கியாளர்கள் அதில் தலைமை வகித்தனர். இன்றைய IMF வங்கியின் முன்னோடி என்று கருதப்படும், BIS சுவிட்சர்லாந்து, பாசல் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. பிற்காலத்தில், ஹிட்லரின் நாஜி அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது. நாஜி ஜெர்மனியர்களும் வங்கியின் தலைமைப் பதவியில் நியமிக்கப் பட்டனர். Bank of England , பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. BIS தலைவராக ஒரு அமெரிக்கர் நியமிக்கப் பட்டார். நாஜி அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு, BIS நிதியுதவி வழங்கியது. அது மட்டுமல்லாது, தவறான வழியில் பெறப்பட்ட கறுப்புப் பணத்தை சலவை செய்யப் பயன்பட்டது. நாஜிகள் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த தங்கக் கட்டிகள் எல்லாம், BIS சிடம் ஒப்படைக்கப் பட்டன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் நாசிஸ அரசு மட்டுமே தோற்கடிக்கப் பட்டது. ஜெர்மனியின் பொருளாதார பலத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. வெகு விரைவிலேயே, மேற்கு ஜெர்மனியின் தொழிற்துறை இழந்த பெருமையை மீளப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரும் பொருளாதாரப் பலசாலியாக மேற்கு ஜெர்மனி (தொண்ணூறுகளுக்கு பிறகு, ஐக்கிய ஜெர்மனி) திகழ்ந்தது. உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவும் உதவியாகவிருந்துள்ளது. மார்ஷல் திட்டம் என்ற பெயரில் பெருமளவு பணம் பாய்ந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றது போல, போருக்கு காரணமான ஜெர்மனியை தண்டித்து இருக்கலாம். அதே நேரம், தனக்குப் போட்டியாக, ஐரோப்பிய பொருளாதார வல்லரசு உருவாவதை அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை. இருப்பினும், (மேற்கு) ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அன்றைய பனிப்போர் கால கட்டத்தில் இன்றியமையாததாக இருந்தது.

போருக்குப் பின்னர் ஞானம் வந்தது போன்று, முந்திய ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டன. ஜென்மப் பகைவர்களாக காணப்பட்ட, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டன. 1945 வரையில், ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிட்ட காலம் மாறியது. அதற்குப் பதிலாக, முன்னாள் காலனிய நாடுகளில் இனங்களுக்கு இடையிலான யுத்தங்களை தூண்டி விட்டார்கள். குறிப்பாக, ஜெர்மனி, பிரான்சுக்கு இடையிலான பகைமை உணர்வு குறிப்பிடத் தக்க உச்சத்தில் இருந்தது. இரண்டு நாடுகளும் நூறாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டன. ஒரு காலத்தில் ஜெர்மனியின் அல்சாஸ் மாநிலத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. ஹிட்லரின் அரசு, மீண்டும் அல்சாசை கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தது. போரின் முடிவில் அது திரும்பவும், பிரான்சுக்கு சொந்தமானது. நாஜிப் படைகள், பிரான்சை அடிபணிய வைத்தன. அதற்குப் பதிலடியாக, நேச நாடுகளின் அணியுடன் சேர்ந்த பிரெஞ்சுப் படைகள், ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தின. சாதாரண ஜெர்மானியர்களையும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைத்தன. இத்தனை வன்மம் கொண்ட எதிரிகளான, ஜெர்மனியும், பிரான்சும் ஒன்று சேர்ந்து செயற்படுவது அதிசயமல்லவா? ஐரோப்பிய ஒன்றியம் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை பிரான்சும், ஜெர்மனியும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதனால் தான், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல், "பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக, ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுப் படுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார். உலக சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் பொருளாதார பலம், ஐரோப்பிய வல்லரசுகளின் கண்களில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. வல்லரசுகளுக்கு இடையிலான பொருளாதார ஆதிக்கத்திற்கான போட்டியே, உலகப் போர்களுக்கு காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில், தனித் தனி நாடுகளாக போட்டியிட்ட ஐரோப்பிய நாடுகள், இன்று ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றன. தம்மை விட வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் என்ற கட்டமைப்பு உதவும்.

ஒரு காலத்தில், நாஜி ஜெர்மனிக்கு உறுதுணையாக இருந்த BIS என்ற வங்கியைப் போன்று, இன்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பொதுவான ஐரோப்பிய சட்டம், உறுப்பு நாடுகளின் சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது, உறுப்பு நாடு ஒன்றைச் சேர்ந்த சட்டப் பிரிவு, ஐரோப்பிய சட்டத்துடன் முரண்பட முடியாது. அத்தகைய தருணத்தில், ஐரோப்பிய சட்டமே செல்லுபடியாகும். இது முன்னர் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சட்டவாக்கத்தை நினைவு படுத்துகின்றது. அன்று, ஒவ்வொரு சோவியத் குடியரசும் தனக்கென தனியான சட்டங்களை கொண்டிருந்தன. ஆனால், பொதுவான சோவியத் சட்டம் அனைத்திற்கும் மேற்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமும், எதிர்காலத்தில் அமெரிக்க மாநிலங்கள் போன்று ஐரோப்பிய நாடுகளை மாற்றுவது தான். ஆனால், ஹிட்லரின் காலத்தில் இராணுவ பலத்தை பிரயோகித்து, அடாவடித் தனமாக நாடுகளை பிடித்து இணைத்தது போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை வரலாறு அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது பல எதிர்பார்ப்புகளுடனே உருவானது. ஆரம்பத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த நாடுகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப் பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளுக்கு தாராளமான நிதி உதவி வழங்கப் பட்டது. குறிப்பாக அபிவிருத்தி இன்றி வறுமையில் வாடிய, கிறீஸ், மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மாற்றம் குறிப்பிடத் தக்கது. அங்கெல்லாம் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி அடைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்தப் பகுதிகள் பணக்கார ஐரோப்பிய நாடுகளையே தங்கியிருந்தன. அதே போன்று, அயர்லாந்து பொருளாதாரமும் வரிச்சலுகை காரணமாக பிற நாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. இவை எல்லாம் போலியான பொருளாதார வளர்ச்சி என்பதை அன்று யாரும் உணரவில்லை. பணக்கார ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி தோன்றினால், தாமே முதலில் பாதிக்க்கப் படுவோம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. இன்னொரு பக்கத்தில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட "பொருளாதார அதிசயத்தை" கண்டு வியந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர போட்டி போட்டன. ஆனால், ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட பிற்பாடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் காலனியாக மாறி விட்டன. குறிப்பாக, ஜேர்மனிய பன்னாட்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளரின் உழைப்பை சுரண்டி அதிக இலாபம் அடைந்தன.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, பணக்கார ஐரோப்பிய நாடுகளிற்கு உள்ளேயும் உணரப் படுகின்றது. குறிப்பாக தீவிர வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், பொது நாணயமான யூரோவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசியவாதம் பேசும் இத்தகைய கட்சிகளின் நோக்கம் வேறு. உண்மையில், அவை ஜனநாயக ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. பாஸிச ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவில்லை. நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில் இருந்தே இவர்களின் நோக்கம் புலனாகும். வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் குறிக்கோளும் அதுவாக உள்ளது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்காக, அவர்களது "இலட்சியத்தை" பலி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Friday, February 24, 2012

உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளி

"லெபனானில், ஒரு 17 வயது பருவ மங்கை, குண்டுகள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இஸ்ரேலிய இராணுவ வாகனத் தொடர் மீது மோதினாள். அந்த தற்கொலைத் தாக்குதலில், பத்து இஸ்ரேலிய படையினர் காயமுற்றனர்."

1985 ம் ஆண்டு, ஈழப்போரின் கெடுபிடிக்குள் இருந்த யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அந்தச் செய்தியை முதன் முதலாக வாசித்தேன். அப்பொழுது ஈழப்போரில் ஈடுபட்ட எந்தவொரு விடுதலை இயக்கமும், புலிகள் உட்பட, தற்கொலைத் தாக்குதல் எதையும் நடத்தி இருக்கவில்லை. அன்று பாடசாலை மாணவர்களாக இருந்த நாம், தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்தியை, முதன் முதலாக லெபனானில் இருந்து தான் கேள்விப் பட்டிருந்தோம். ஓரளவு அரசியல் பிரக்ஞை கொண்ட நண்பர்கள் மத்தியில், அந்த செய்தி பெரிதும் அலசப் பட்டது. பத்திரிகையில், உலகச் செய்திகள் பகுதியில், இரண்டு பத்திகளுடன் வந்த செய்தியைத் தவிர, வேறெந்த விபரமும் எமக்குத் தெரியாது. எமது தமிழ் ஊடகங்களுக்கும் அது பற்றி அறியும் ஆர்வம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், நெல்லியடியில் புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. பெண் போராளிகள் பங்குபற்றிய தற்கொலைத் தாக்குதல்களுக்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இருப்பினும், புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி உலகம் அளவுக்கு அதிகமாகவே அறிந்து வைத்துள்ளது. (நவீன உலக வரலாற்றில், புலிகள் இயக்கம் மட்டுமே மிக அதிகளவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று, சி.ஐ.ஏ. அறிக்கை தெரிவிக்கின்றது.) லெபனானின் முதலாவது பெண் தற்கொலைக் குண்டுதாரி பற்றி கேள்விப் பட்டவர்கள் மிகக் குறைவு.

தொண்ணூறுகளின் இறுதியில், ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், பல லெபனானிய நண்பர்கள் மூலம், லெபனானில் நடைபெற்ற போர்கள் பற்றிய ஆழமான தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லோரும் அரசியல் அகதிகளாக தஞ்சம் கோரியவர்கள். அதனால், லெபனான் அரசியலை அக்கு வேறு, ஆணி வேறாக அலசினார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், என்பதுகளின் ஆரம்பத்தில், லெபனான் போர் பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப் படுவோம். அப்பொழுதெல்லாம், ஈழ விடுதலை இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை மிக அதிகளவில் மேற்கொண்டிருந்தன. இரண்டு எதிரிப் படைகளின் மோதல் என்ற கட்டத்திற்கு மாற சில வருடங்கள் எடுத்தன. அதனால், அன்று, லெபனான் போர் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, "நவீன உலக வரலாற்றில் நீண்ட காலம் இழுபடும் போர்," என்று நாம் அறிந்து வைத்திருந்தோம். "எமது தமிழீழ போராட்டமும், லெபனான் போர் போல பல வருடங்கள் இழுபடப் போகின்றது." என்று நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பொழுது பேசிக் கொள்வோம். சுமார் பத்துப் பதினைந்து வருடங்கள் நீடித்த லெபனான் போரின் சாதனையை, ஈழப்போர் முறியடிக்கப் போகின்றது என்ற விடயம், எமக்கு அன்று தெரியாது.

லெபனான் போரின் உச்சக் கட்டத்தில் தான், உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியான சானா மெஹைடிலி (Sana'a Mehaidli) யின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. லெபனானின் பலவீனமான அரசாங்கம் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பெரும் பிரயத்தனப் பட்ட காலம் அது. பல்வேறு வகையான ஆயுதக் குழுக்கள் லெபனானை தமக்குள் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்து, தென் லெபனானை ஆக்கிரமித்திருந்தது. கிறிஸ்தவ-பாஸிச பலாங்கிஸ்ட் இயக்கத்தை தவிர, மற்றைய ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தன. அவற்றை வெறும் ஆயுதக்குழுக்கள் என்று கருதுவதும் தவறு. அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால், வெகுஜன அரசியல் கட்சிகள் இருந்தன. இன்னொரு விதமாக சொன்னால், லெபனானின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென இராணுவப் பிரிவொன்றை வைத்திருந்தன. சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party)(SSNP), காலனிய காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றது. பிரெஞ்சு காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டது.

அந்தக் காலத்தில், சிரியாவும், லெபனானும், தற்போது துருக்கியின் பகுதியான அரபு மொழி பேசும் மாகாணமும், சிரியா என்ற ஒரே நாடாக இருந்தன. பிரான்ஸ் தான் அவற்றை பிரித்தது. அதன் விளைவாக உருவானது தான், சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party). பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களினால் உருவாக்கப் பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் படிப்பதற்காக உருவான கல்லூரி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் உற்பத்தி செய்தது. அன்று, ஐரோப்பாவில் இருந்து பரவிய புதிய சித்தாந்தங்களான தேசியவாதம் மார்க்ஸியம் என்பனவற்றால் கவரப் பட்டவர்களே அதிகமிருந்தனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே, இஸ்லாமியவாத இயக்கங்கள், மக்கள் ஆதரவைப் பெற்றன. சிரியா சமூக தேசியக் கட்சியில், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். அது ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால், பெண்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், பாத் (Baath) கட்சியும் உருவாகியிருந்தது. இரண்டுமே தேசியவாதக் கட்சிகள் தான். இருந்த போதிலும், சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன.

பாத் கட்சி,மொரோக்கோ விலிருந்து, ஈராக் வரையிலான அரபு மொழி பேசும் நாடுகளை கொண்ட தாயகம் ஒன்றை உரிமை கோருகின்றது. பாத் கட்சியின் சின்னத்திலும் அந்தப் பிரதேசத்தின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால், சிரியா சமூக தேசியக் கட்சி, "அகண்ட சிரியாவுக்கு" உரிமை கோருகின்றது. இன்றைய சிரியா, லெபனான் மட்டுமல்ல, ஈராக், ஜோர்டான், எகிப்தின் சினாய் பகுதி, இவற்றுடன் சைப்ரஸ் தீவையும் உள்ளடக்கியிருக்கும். அதாவது, பண்டைய கால சிரியா சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோருகின்றனர். கட்சியின் கொள்கை விளக்கத்தைப் பார்த்தால், அதனை தீவிர வலதுசாரிக் கட்சியாக உருவகப் படுத்தலாம். கட்சிக் கொள்கை பாசிசக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காலனிய காலகட்டத்தின் பின்னர், மார்க்ஸியம் கற்ற சில உறுப்பினர்களால், கட்சிக்குள் இடது, வலது என்ற பிரிவினை தோன்றியது. மிக அண்மையில் தான், அநேகமாக தொண்ணூறுகளில், இந்த முரண்பாடு தீர்க்கப் பட்டது.

சி.ச.தே.கட்சியின் சின்னம், "சூறாவளி". 1985 ம் ஆண்டு, தற்கொலைத் தாக்குதலில் வீர மரணமடைந்த 'சானா' வும், சூறாவளி என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண். வீடியோ கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினராகியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு, தானாகவே முன்வந்து ஒப்புக் கொடுத்துள்ளார். சி.ச.தே.கட்சி இதுவரையில் பத்துக்கும் குறையாத தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்னர், ஒவ்வொருவரும் வீடியோக் கமெராவுக்கு முன்னால் வாக்குமூலம் அளிக்க வேண்டும். "தாய் நாட்டிற்காக வீர மரணத்தை தழுவிக் கொள்வதாக," அவர்கள் கொடுக்கும் விளக்கவுரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் படும். பிற்காலத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய இஸ்லாமிய மதவாத இயக்கங்களும், அந்த நடைமுறையை பின்பற்றின. சி.ச.தே.கட்சி தான் அவற்றிக்கு எல்லாம் முன்னோடி என்பது குறிப்பிடத் தக்கது.

சானா, 9 ஏப்ரல் 1985 அன்று, தென் லெபனானில் இஸ்ரேலியப் படையணி மீது, குண்டுகள் பொருத்தப் பட்ட காரைக் கொண்டு சென்று மோதி வெடிக்கச் செய்தார். 1968 ம் ஆண்டு பிறந்த சானா, தியாக மரணத்தை தழுவிக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 17 மட்டுமே. அந்தத் தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப் பட்டனர். இஸ்ரேலிய அரசு எப்பொழுதும் தமது பக்க இழப்புகளை குறைத்துச் சொல்வது வழக்கம். அன்றைய தாக்குதலில், "ஒருவர் மட்டுமே இறந்ததாகவும், பன்னிரண்டு பேர் காயமுற்றதாகவும்" செய்தி வழங்கினார்கள். இனி வருங்காலங்களில், இது போன்ற பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று, அன்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய உலகின் முதலாவது பெண் என்ற பெருமையும், சானா மெஹ்டிலிக்கு போய்ச் சேர்ந்தது. எமது அறிவுக்கு எட்டிய வரையில், வரலாற்றில் இதற்கு முன்னர், பெண் தற்கொலைப் போராளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானின் கமிகாசே படையிலாகட்டும், மத்திய காலத்தில் வாழ்ந்த அஸாஸின் படையிலும், பெண்கள் இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே, சானா மெஹைடிலி, உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியாக, வரலாற்றில் பதியப் பட்டுள்ளார். இன்றைக்கும், "தென் லெபனானின் மண மகள்" என்ற பெயரில், லெபனான் மக்களால் நினைவுகூரப் படுகின்றார்.


மேலதிக விபரங்களுக்கு:
Sana'a Mehaidli
Female suicide bombers
Syrian Social Nationalist Party

Syrian Social Nationalist Party


Female suicidal terrorism in Lebanon(Sana'a Mehaidli)

Tuesday, February 21, 2012

பட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் !

"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி."
"உணவுப் பொருட்களின் விலையேற்றம்."
"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது."
மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா? படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.
- "சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி."
- "உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை."
-"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை."

அண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.

உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனித் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.

சிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும்? பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.

2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது! அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 மில்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.

Zembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , "ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், "பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை!" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா?

Zembla தயாரிப்பில் உருவான "HANDEL IN HONGER " (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
HANDEL IN HONGER


Get Microsoft Silverlight
Bekijk de video in andere formaten.

Sunday, February 19, 2012

எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.

கிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.

கடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. "முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்," என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

Eleftherotypia


கீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.

Thursday, February 16, 2012

"Bella Ciao": உலகப் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்

இத்தாலியில் முசோலினியின் பாஸிச சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய, கம்யூனிச கெரிலாக்களால் (Partizan) விரும்பிப் பாடப்பட்ட புரட்சிகர பாடல். இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.

முதன் முதலாக இந்தப் பாடல், எனக்கு துருக்கியில் தான் அறிமுகமானது. துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின், இளைஞர் அணியினர் ஒழுங்கு படுத்திய ஒன்றுகூடலில், இத்தாலிய புரட்சிப் பாடல் பாடப்பட்டது. இந்தப் புரட்சிப் பாடலின் அர்த்தத்தையும், சரித்திர முக்கியத்துவத்தையும், பதின்ம வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் எடுத்துக் கூறினார்கள். தமிழ் பேசும் புரட்சிகர இளைஞர்களுக்கு, தற்பொழுது இந்தப் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.


ஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்
போய் வருகிறேன், அழகானவளே....
ஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்
ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டேன்

ஒ போராளிகளே, என்னை அழைத்துச் செல்லுங்கள் ...

இந்தப் பாடலுக்கு ஒரு சரித்திரப் பின்னணி உண்டு. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், வட இத்தாலி பாசிசத்தின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. முசோலினியின் ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக, நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புப் படைகள் நிறுத்தி வைக்கப் பட்டன. கம்யூனிச கெரில்லாக்களின் தாக்குதலில், ஒரு ஜெர்மன் வீரன் கொல்லப் பட்டால், பழிக்குப் பழியாக, நூறு இத்தாலிய பொது மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

கொடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்ட விடுதலைப் போராளிகள், எந்த வித வெளிநாட்டு உதவியுமின்றி, வட இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள், இத்தாலி முழுவதையும் கைப்பற்றிய பின்னர், வட இத்தாலியில் செங்கொடி பறந்து கொண்டிருந்ததை கண்டார்கள். இத்தாலிய மக்களின் பாசிச எதிர்ப்பு போராட்டம், மற்றைய நாடுகளின் புரட்சியாளர்களுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. Bello Ciao பாடலின் பிரபலத்திற்கு காரணமும் அதுவே.



One morning, just risen from bed
Oh Bella ciao ... (Goodbye, my beautiful)
One morning, just risen from bed
I discovered the invaders

Oh partisan, carry me away
Oh Bella ciao ...
Oh partisan, carry me away
For I feel I'm dying

And if I die as a partisan
Oh Bella ciao ...
And if I die as a partisan
You must burry me!

Burry me way up in the mountains
Oh Bella ciao ...
Burry me way up in the mountains
Under the shadow of a beautiful flower

And the people passing by
Oh Bella ciao ...
And the people passing by
Will tell "What a beautiful flower!"

And that's the flower of the partisan
Oh Bella ciao ...
And that's the flower of the partisan
Who died for freedom (liberty)
Died for freedom
Died for freedom!

Wednesday, February 15, 2012

பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!

12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் "மக்கள் பிரதிநிதிகள்", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.

12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.









கிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது
2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது
3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

Saturday, February 11, 2012

இந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்

பெப்ரவரி மாத தொடக்கத்தில் (7.2.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷீத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன. "அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷீத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது." இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, "மக்கள் எழுச்சி" அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது.

இதனை "பதவி விலகிய" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். "கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது." - நஷீத். இதே நேரம், "மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்." என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன? உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன?

ஏற்கனவே, 3 நவம்பர் 1988, மாலைதீவுகளில் திடீர் சதிப்புரட்சி ஒன்று நடந்ததாகவும், அது உடனடியாக முறியடிக்கப் பட்டதாகவும், அறிவிக்கப் பட்டது. அதிகாலையில் கேள்விப்பட்ட அந்த அதிர்ச்சி செய்தியினால் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சதிப்புரட்சி பற்றி மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். "இலங்கை எல்லைகளைக் கடந்து, தென்னாசிய பிராந்தியத்திலும் தமிழர் வீரம் நிலைநாட்டப் பட்டதாக..." என்று சிலர் "தமிழினப் பெருமை" பேசினர். அதற்கு காரணம், PLOTE என்ற ஈழ விடுதலை இயக்கமொன்றின் உறுப்பினர்கள், சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தனர்.

PLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புதிய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.

மாலைதீவுகளில், சதிப்புரட்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சதியில் ஈடுபட்டவர்களால், தொலைத்தொடர்பு நிறுவனத்தை கைப்பற்ற முடியவில்லை. ஜனாதிபதி அப்துல் கயாமையும் பிடிக்க முடியவில்லை. அப்துல் கயாம், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உதவி கேட்டு தந்தி அனுப்பினார். மாலைத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட, காலஞ் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, 12 மணி நேரத்திற்குள், இந்திய இராணுவத்தை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இந்திய கடற்படையும் மாலைதீவுகளை நோக்கி விரைந்தது. இந்திய இராணுவம் வருவதை அறிந்து கொண்ட சதியாளர்கள், சிறு படகுகளில் தப்பித்து ஓடினார்கள். ஆனால், இந்தியக் கடற்படை சுற்றி வளைத்து, அனைவரையும் சிறைப் பிடித்தது. அடுத்து வந்த சில நாட்கள், இந்தியப் படை அடித்து உதைத்து சென்ற மாலைதீவு கைதிகளின் படங்கள், உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பால் மாலைதீவு எனும் நாட்டை பிடித்த வீரம் பற்றி பேசியவர்கள், ஜனாதிபதி காயூமை கோட்டை விட்டதாலேயே, சதிப்புரட்சி தோற்றதாக நம்பினார்கள். ஆனால், அன்று ஜனாதிபதியை சிறைப் பிடித்திருந்தாலும், இந்திய இராணுவம் வந்திறங்கியிருக்கும். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா, அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை "சர்வதேச சமூகம்" எதிர்த்திருக்கப் போவதில்லை.

அண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம், சிறிய நாடுகள் மீதான இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக அமெரிக்கா கருதி வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டுள்ள இந்தியாவும், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு ஆகிய அயல் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒரேயொரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. அயல் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், அடியாட்களை உருவாக்கவும், இந்திய நலன்களை பாதுகாக்கவும் Research and Analysis Wing (RAW) என்ற ஸ்தாபனம், உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது.

RAW அதிகாரிகளை விடப் பெரிய "சதிகாரர்கள்" தெற்காசியப் பிராந்தியத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1988 ல் நடந்த, மாலைத்தீவு சதிப்புரட்சி கூட RAW வின் திட்டமிடலில் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவுகளில் அப்துல் காயூமின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி, எந்தவொரு எதிர்க் கட்சியையும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புக்குரல் காட்டுவோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதனால், பல எதிர்ப்பாளர்கள் இலங்கையில் புகலிடம் கோரியிருந்தனர், என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், எந்தவொரு அரசியல் தொடர்புமற்ற, இலங்கையில் பண்ணை வைத்திருந்த மாலைதீவு வர்த்தகர், சதிப்புரட்சியின் சூத்திரதாரி என்பதை நம்ப முடியவில்லை. தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்த PLOTE தலைவர் உமா மகேஸ்வரன், "மாலைத்தீவு சதிப்புரட்சி, இந்தியாவின் ஆலோசனைப் படி நடந்ததை பகிரங்கப் படுத்தப் போவதாக" தெரிவித்திருந்தார். சில நாட்களின் பின்னர், அவரது மெய்ப்பாதுகாவலர்களால் கொலை செய்யப் பட்டார். (Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives, http://dbsjeyaraj.com/dbsj/archives/4135)

1988 சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், இந்தியாவுக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தான இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகள், இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தன. மாலைதீவு அரசு தனது பாதுகாப்புக்காக, நிரந்தரமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனது நலன்களுக்காக படுகொலைகளை செய்யத் தயங்காத இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சிகளையும் திட்டமிடும் என்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அதிரடியாக நடக்கும் சம்பவங்களால், இறுதியில் யாருக்கு அதிக நன்மை என்று பார்த்தால் புரிந்து விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் எடுக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு நன்மை என்றால், அமெரிக்காவுக்கும் நன்மை உண்டாகும் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதாவது தெற்காசியாவில் அமெரிக்கா செய்ய வேண்டிய வேலைகளை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. (Outsourcing Imperialism?) மாலைதீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், பூகோள அரசியலுக்குமான தொடர்பு என்ன?

முப்பதாண்டுகள் மாலைதீவுகளை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த, சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியில், நீண்ட காலமாக சிறை வைக்கப் பட்டிருந்தவர் தான், முஹமட் நஷீத். ஐந்து வருடங்களுக்கு முன்னர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக விடுதலையானவர். அதற்குப் பின்னர் நடந்த, முதலாவது ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், பலராலும் "தெற்காசியாவின் மண்டேலா" என்று அழைக்கப் பட்டார். பதவியேற்ற நஷீத், அரசியல் பழிவாங்கல்களை ஒதுக்கி விட்டு, புவி வெப்பமடைதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாட்டில், பெருமளவு நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு மீட்டர்களே உயரமானவை. புவி வெப்பமடைதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்தால், ஒரு காலத்தில் மாலைதீவுகள் காணாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவியது. இதனால், புவி வெப்பமடைதலுக்கு காரணமான, காபன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டம் மாலைதீவுகளுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப் பட்டது. இது தொடர்பாக கொபன்ஹெகனில் நடந்த மகாநாட்டில், நஷீத் தனது முத்திரையை பதித்திருந்தார்.

அடுத்து வரும் பத்தாண்டுகளில், மாலைதீவுகளில் காபனை (Carbon) வெளியேற்றும் எரிபொருள் பாவனை முற்றாக தடை செய்யப் படும் என அறிவித்தார். அதற்கு மாறாக, காற்றாலை, சூரிய ஒளி ஆகிய வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் மின் சக்தியை பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். (Carbon-neutral goal for Maldives, http://news.bbc.co.uk/2/hi/7944760.stm) ஏற்கனவே அதிபர் மாளிகைக்கான மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகின்றது. ஏழை ஆசிய நாடான மாலைதீவின் முன்னுதாரணம், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. புவி வெப்பமடைதல் பிரச்சாரத்தை, அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. கியாட்டோ, கோபன்ஹெகன், டர்பன் மகாநாடுகளில் அமெரிக்காவின் ஒத்துழையாமை இதனை உறுதி செய்கின்றது.காபன் வெளியேற்றத்தை தடுப்பதில், மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் செயலில் காட்டுவது, அமெரிக்காவுக்கு பிடிக்காத விடயம்.
Global warming is a matter of paranoia for Maldives. Maldives has criticised the decision of US president George Bush to reject the Kyoto pact on global warming. China calls the US decision "irresponsible", though it is one of the largest emitters of the global-warming carbon dioxide gas, and Zhu Rongji said in Male that China would work with Maldives on environmental issues.
"It will," said an official, "take China next to nothing to convert an honourable campaign against global warming into an anti-American campaign in Maldives.
(Dhivehi Observer, 07 May 2008)

புவி வெப்பமடைதலை விட, பூகோள அரசியல் மாலைதீவுகளின் சதிப்புரட்சியை தீர்மானித்திருக்கலாம். மாலைதீவுகள், அடிக்கடி செய்திகளில் அடிபடாத, பணக்கார உல்லாசப் பிரயாணிகளின் மனங்கவர்ந்த, அமைதியான சிறிய நாடு. ஆனால், இந்து சமுத்திரத்தில் அதனது அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து நடைபெறும் பாதையில் அமைந்துள்ளது. உலகின் பொருளாதாரத்தை, தனது இராணுவ பலத்தினால் அடக்கி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, மாலைதீவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்பு அமெரிக்காவின் விசுவாசியான இந்தியாவிடம் கொடுக்கப் பட்டுள்ளது.
The US is keen for India to hasten construction of the Far Eastern Naval Command in the Andaman Islands, and this was repeated by the chairman of the US joint chiefs, General Henry H. Shelton, who visited India recently.
Specific to the Marao base, the US sent navy chief Dennis Blair to Maldives a month after Rongji's visit to take stock of China's military diplomacy. While the US base in Diego Garcia can launch surprise offensives, the US wants to restrict Chinese presence in the Indian Ocean because of its strategic value.
According to one survey, some $260 billion worth of oil and gas will be shipped through the Indian Ocean by year 2004. The oil route stretching from the Strait of Malacca to the Strait of Hormuz will be at the mercy of any power that dominates the sealanes. A Chinese base in Marao islands puts it in a direct position to influence oil commerce. It is a prospect that daunts India, scares Southeast Asia, and alarms the US.(Dhivehi Observer, 07 May 2008)

தெற்காசிய நாடொன்றில், அது நேபாளம் ஆகட்டும், இலங்கை ஆகட்டும், இந்தியா தலையிட்டு எந்த முடிவை எடுக்கின்றதோ, அது அமெரிக்காவுக்கும் ஏற்புடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அமெரிக்காவின் ஒப்புதலுடன் தான், இந்தியா ஈழப்போரை முடித்து வைத்தது. இந்த உண்மையை, "அமெரிக்க தாசர்களும், இந்திய விசுவாசிகளும்" கவனத்தில் எடுப்பதில்லை. நெடுமாறன், வைகோ போன்ற "தமிழினத் தலைவர்கள்" கூட, "சீன அபாயம்" வர இருப்பதை சுட்டிக் காட்டித் தான் இந்திய அரசை தலையிடத் தூண்டினார்கள். அவர்களது "சீனத் தடுப்பு கொள்கை" யின் விளைவு, புலிகளின் அழிவுக்கும், தமிழ் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றதை, இங்கே நினைவு கூறத் தேவையில்லை. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளருவதை தடுப்பதற்காகத் தான், தாம் இறுதிப் போரில் நேரடியாக பங்களித்தாக, இந்திய அரசுத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

"சீனாவைத் தடுப்பதற்கான இந்தியாவின் தலையீடு", இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டது. இன்றைய மாலைத்தீவு சதிப்புரட்சியும், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காகவே நடத்தப் பட்டது. முன்னர், சர்வாதிகாரி அப்துல் காயூம் இந்தியாவின் கைப்பொம்மையாக ஆடிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது காலத்திலேயே ஒரு தீவை சீனாவுக்கு குத்தகைக்கு விட சம்மதிக்கப் பட்டது. எதேச்சாதிகார ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, தனது நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கவில்லை. 2004 ல் ஜனநாயக பொதுத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த நஷீத், மாலைத்தீவின் இறையாண்மையை பாதுகாப்பதில் குறியாக இருந்தார். இதனால், தவிர்க்கவியலாது, இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீனா போன்ற பிற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் என்று கருதினார். இன்று உலகில் அதிகளவு எண்ணையை நுகரும் நாடாக மாறி வரும் சீனா, எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அதனால், "முத்து மாலை திட்டம்" என்ற பெயரில், மாலைதீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரும் நோக்கம் சீனாவுக்கு இருந்தது.
27 July 2001: China has engineered a manner of a coup by coaxing Maldives' Abdul Gayoom government to let it establish a base in Marao. Marao is one of the largest of the 1192 coral islands grouped into atolls that comprise Maldives and lies 40 km south of Male, the capital. (Dhivehi Observer, 07 May 2008)

மேலும் மாலைதீவு அரசு திட்டமிட்டுள்ள "காபன் குறைப்பு பொருளாதாரத்திற்கு" சீனாவின் பங்களிப்பு அவசியமானது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவை. இத்தகைய காரணங்களால், சீனாவுக்கும், மாலைத்தீவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கலாம். ஆனால், அதுவே அமெரிக்கா, இந்தியாவின் கண்களில் முள்ளாக உறுத்தியது. தற்போது நடந்துள்ள சதிப்புரட்சி, "உள் நாட்டுப் பிரச்சினை" என்று கூறி இந்தியா ஒதுங்குவதற்கும், சதிகாரர்களின் பொம்மை ஜனாதிபதியான வாஹிட் ஹசன் மாலிக்கை அமெரிக்கா அங்கீகரிக்கவும், வேறென்ன காரணம் இருக்க முடியும்?

மாலைத்தீவுகளில் இருந்து சீனாவை விரட்டுவதைத் தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் சதிப்புரட்சி நடந்திருக்கலாம். ஆயிரக்கணக் கணக்கான தீவுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். எல்லாத் தீவுகளையும் கண்காணிப்பது, அரசினால் முடியாத காரியம். ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் அல்லது, போதைவஸ்துக் கடத்தல் கும்பல், ஒரு தொலைதூரத் தீவை தமது மறைவிடமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே, 1988 ல் நடந்த சதிப்புரட்சி அந்த அபாயம் இருப்பதை எச்சரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஈழப் பிரதேசத்தில் PLOTE இயங்குவதை புலிகள் தடை செய்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் PLOTE அமைப்பு கட்டுக் குலையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால், இலங்கைக்கு அண்மையில் உள்ள மாலைத்தீவுகளை தமது புதிய தளமாக பாவிக்க எண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதபாணி அமைப்புகளுக்கும் இந்த எண்ணம் தோன்றலாம். இந்திய அரசு, அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பியது. மாலைத்தீவு மக்கள் மிதவாத இஸ்லாமியர்கள். இருப்பினும், அங்கே சில தீவிரவாத, மத அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பலம் பெற்று வருகின்றன. 2007 ம் ஆண்டு, மாலே நகரில் குண்டொன்று வெடித்தது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. (Tranquillity of Maldives shattered by bomb blast, http://www.guardian.co.uk/world/2007/sep/30/terrorism.travel)

முரண்நகையாக, இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் சக்திகளை அடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், நஷீட்டிற்கு எதிரான சதிப்புரட்சியில் அவர்களின் பங்கு அதிகம். ஊழல், வறுமை, போதைவஸ்து, ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விபச்சாரம், போன்ற சமூகச் சீரழிவுகளை காரணமாகக் காட்டி, இஸ்லாமிய அரசியல் சக்திகள் ஆதரவு திரட்டி வந்துள்ளன. கடந்த வருடம், அரசு பல "இஸ்லாமிய விரோத" சுற்றுலா விடுதிகளை மூடியது. தலைநகர் மாலேயில், கடுமையான ஷரியா சட்டம் நடைமுறைப் படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போது எழுந்துள்ள குழப்பமான நிலைமையை பயன்படுத்தி, இஸ்லாமியவாதிகள் ஒவ்வொரு தீவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் இதற்கெதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.
“It’s potentially a tropical Afghanistan. The same forces that gave rise to the Taleban are there — the drugs, the corruption and the behavior of the political class,” a Colombo-based Western ambassador who is responsible for the Maldives told Reuters on condition of anonymity. (Arab News, 11.02.12)

அமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாத முஜாஹிதின்களை ஆதரித்தார்கள். கடந்த வருடம், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த அல்கைதா புரட்சியை ஆதரித்தார்கள். "வெறித்தனமான மதவாதிகள், தேசியவாதிகள்", அவர்களது நண்பர்களாக இருந்துள்ளதை, கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றை விட, உலக பொருளாதார ஆதிக்கம், உலக இராணுவ மேலாண்மை, ஆகியன தான் அவர்களுக்கு முக்கியமானவை. மாலைத்தீவு மக்களின் நலன்களும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமே, அவர்களது சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.

Friday, February 10, 2012

ஆவணப் படம் : "காஸாவின் கண்ணீர்" (Tears of Gaza)

ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்தது. இரண்டையும் இன்று உலகம் மறந்து விட்டது. பாலஸ்தீனர்கள் வாழும் திறந்தவெளிச் சிறையான காஸா பகுதியை, இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வே நாட்டு மருத்துவரும், சமூக ஆர்வலருமான Vibeke Lokkeberg காஸாவின் அவலத்தை, Tears of Gaza எனும் ஆவணப் படமாக பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நகர திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படம், தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. (குறிப்பு: நெஞ்சை உறைய வைக்கும் கோரமான காட்சிகள் இருப்பதால், இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.)

Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Wednesday, February 08, 2012

ஏனிந்த அணு உலை வெறி?

கூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு.... இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.

"கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்." இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.

அதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், "சிறப்பான நிர்வாகம் நடக்கும்" மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

செர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. "திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்...?" இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. "சமாதான இயக்கங்களின்" அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை.... செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், "உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா?" என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. "தூய்மையான மின்சாரம்" என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.

இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள்? எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை "அணு உலை மாபியாக்கள்" என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.

புதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு... மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், "அணு உலை வியாபாரம்" செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் "சர்வதேச சமூகம்", இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.

மேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்?

பிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், "கிரீன் பீஸ்" தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, "இலக்கற்ற வன்முறையாளர்கள்" என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், "அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்" குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. "தூய்மையான மின்சாரம்" குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. "உலகமயமாக்கல்" எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.



[ www.cinerebelde.org ]

Sunday, February 05, 2012

"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்" : தீபம் TV நேர்காணல்

"பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், லண்டனுக்கு படிக்கச் சென்றவர்கள் தான் மார்க்சியத்தை இலங்கையில் பரப்பினார்கள். அது போன்று, இன்றைய தமிழ் இளந்தலைமுறை, தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கற்றுக் கொண்ட புதிய இடதுசாரி சிந்தனைகளை ஈழத்தில் அறிமுகப் படுத்த முடியாதா?" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, "யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா?" நூல் அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா? என்று அலசப்பட்டது. இலங்கை அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கூடவே, ஜெர்மனியில் இருந்து வந்த அரசியல் ஆர்வலர் சுசீந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.


Part 1

Part 2

Part 3

Part 4

-----------------------------------------------------------------

29.01.2012 லண்டனில் இடம்பெற்ற நூல் அறிமுகத்தில் எனது உரை :


Wednesday, February 01, 2012

"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்" - பி.ஏ.காதர்

இலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.

பி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பின்" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8