Tuesday, May 31, 2016

மலம் அள்ளும் தொழிலாளர்கள் : ஐரோப்பா முதல் இந்தியா வரை

மலவாளிகள் அகற்றும் தொழிலாளர்கள், அல்க்மார், நெதர்லாந்து, 1954

இந்தியாவில், இன்றைக்கும் பல நகரங்களில் கையால் மலம் அள்ளும் நடைமுறை இருப்பது அனைவருக்கும் தெரியும். வசதியான வீடுகளில் வசிப்போர், மல வாளிகளை வீதியோரங்களில் வைப்பதும், அவற்றை குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சுத்திகரிப்பு தொழிலாளிகள் எடுத்துச் செல்வதும் இன்றும் நடந்து வருகின்றது. ஆனால், இந்தப் பழக்கம் காலனிய காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம். செய்யும் தொழிலை வைத்து சாதி பிரிப்பதும், ஐரோப்பியர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம். ஒரு அறிவியல் சஞ்சிகையை வாசித்த பொழுது அந்த தகவல் கிடைத்தது. (Quest, Juni 2013)

ஒரு காலத்தில் ஐரோப்பிய நகரங்களில் அது போன்ற நடைமுறை இருந்துள்ளது. 19 ம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பிய நகரங்களில் தண்ணீரால் சுத்திகரிக்கப் படும் நவீன மலசல கூடங்கள் (Water Closet) கண்டுபிடிக்கப் படவில்லை. 1875 ம் ஆண்டு வரையில், ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் தமது மலக் கழிவுகளை, வீடுகளுக்கு வெளியே அமைந்திருந்த குழிகளுக்குள் போட்டார்கள், அல்லது சன நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வீசினார்கள்.

நெருக்கமான குடியிருப்புகளை கொண்ட பெரிய நகரங்களில் அது சாத்தியமில்லை. ஆகவே, ஒவ்வொரு வீட்டினரும் தமது மலக் கழிவுகளை வாளியில் போட்டு, வீதியோரமாக வைப்பார்கள். தினசரி வரும் மலம் அள்ளும் தொழிலாளர்கள், அந்த வாளிகளை எடுத்துச் செல்வார்கள். அனேகமாக, அந்தத் தொழிலாளர்கள் மலம் அள்ளும் சாதியாகவே கருதப் பட்டிருக்க வாய்ப்புண்டு..

ஐரோப்பியர்கள் காலங் காலமாகவே மலம் கழித்த பின்னர், கடதாசியால் துடைத்து வந்தார்களா? சில நூறு வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாவில் மன்னர் முதல் குடியானவன் வரையில் தண்ணீரால் தான் கழுவி வந்தார்கள். ஐரோப்பிய மன்னர்கள் மலம் கழிக்கும் பெட்டி ஒன்றை தம்முடன் கூடவே வைத்திருந்தனர்.

மன்னர் அரசவையில் அமர்ந்திருக்கும் பொழுது சிம்மாசனத்தின் கீழே மலம் கழிக்கும் பெட்டி இருக்கும். அதுவும் மன்னர் போகும் இடமெல்லாம் கூடவே போகும். அதை பராமரிப்பதற்கு ஓர் ஆள் இருப்பார். மன்னர் தனது கடமையை முடித்த பின்னர், பெட்டிக்கு உள்ளே இருக்கும் மலச் சட்டியை அப்புறப் படுத்துவதுடன், தண்ணீர் ஊற்றி மன்னரின் குண்டியை கழுவி விடுவதுடன், ஈரத் துணியால் துடைத்து விடுவது அவரது வேலை.

மன்னரை எல்லோரும் தொட முடியாது. ஆகையினால், பிரபுக்கள் குலத்தை சேர்ந்த ஒருவர் தான் மன்னருக்கு குண்டி கழுவும் வேலைக்கு அமர்த்தப் படுவார்கள். அந்தக் காலங்களில், இந்த "கௌரவமான குண்டி கழுவும் வேலைக்கு" ஏராளமானோர் வரிசையில் நின்றார்கள்!

மலம் அள்ளும் தொழில் செய்வோர் ஐரோப்பிய நகரங்களிலும் இருந்தனர். தொழிற்புரட்சி காரணமாக, ஐரோப்பிய நகரங்களில் சனத்தொகை பெருகியது. மாடி வீடுகள் நெருக்கமாக கட்டப் பட்டன. குடிசனப் பெருக்கம் காரணமாக, தெருக்கள், நீர்நிலைகளிலும் மலம் தேங்கி நாற்றமெடுத்தது.

அந்தக் காலங்களில் தற்போதுள்ள மாதிரி WC (Water Closet) என்ற நவீன கழிவறைகள் இருக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இருந்து மனிதக் கழிவுகள் நிரம்பிய வாளிகளை அகற்ற வேண்டியிருந்தது. அந்த வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள்.

நெதர்லாந்து நாட்டில், அல்க்மார் நகரில், வீடுகளில் இருந்து மல வாளிகளை வண்டியில் எடுத்துச் செல்லும் படம் ஒன்று, சரித்திரம் தொடர்பான சஞ்சிகையில் பிரசுரமானது (Historie, nr.4 - 2015). 1954 ம் ஆண்டில் கூட எல்லா இடங்களிலும் நவீன கழிவறைகள் வந்திருக்கவில்லை என்ற உண்மை அந்த ஆவணப் படத்தில் இருந்து தெரிய வருகின்றது.

இன்றைய நவீன யுகத்தில், 21 ம் நூற்றாண்டிலும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை. பெரிய நகரங்களில் கூட, வாளி வாளியாக மலம் நிரப்பிச் செல்லும் தொழிலாளர்களை இந்தியாவில் மட்டுமே கண்டிருக்கிறேன். 21 ஆம் நூற்றாண்டிலும் மலம் அள்ளுவதற்கு மனிதர்கள் இருப்பது, பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்தவில்லை. இந்தியாவில் பலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் எல்லா சமூகக் குறைபாடுகளுக்கும், அரசியல்வாதிகள் தலையில் பழி சுமத்தி விடுவது எளிதானது. இந்திய அரசியல்வாதிகள் ஊழலில் மலிந்தவர்கள் தான். ஆனால், பாகிஸ்தான் முதல் இந்தோனேசியா வரையில் பல ஆசிய நாடுகளில், என்ன வாழ்கிறதாம்? அங்கேயும் ஊழல் மய அரசியல்வாதிகளுக்கு குறைவில்லை. 

அயலில் உள்ள இலங்கையை பற்றி இங்கே கூறத் தேவையில்லை. ஆனால், அங்கே கூட மலம் அள்ளும் தொழிலாளர் யாரும் இல்லை. நகரம் முதல் கிராமம் வரையில் கட்டப்பட்டுள்ள எந்த மலசல கூடமும், மனிதர்களால் கழிவு அகற்றப்படும் வகையில் அமைக்கப் படவில்லை. Water Closet அல்லது அது மாதிரியான கழிவறைகள் எல்லா இடங்களிலும் வந்து விட்டன. 

இன்று வளர்ச்சி அடைந்துள்ள மேற்கத்திய நாடுகளில், 18 ஆம் நூற்றாண்டு வரையில், பெரிய நகரங்களில் வீதியோரங்களில் மலம் கழிப்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. 1775 ஆம் ஆண்டு தான், நவீன மலசலகூடமான Water Closet கண்டுபிடிக்கப் பட்டது. 

இன்றைய இந்திய அரசியல் கட்சிகள், "கோயில்கள் கட்டுவதை விட மலசல கூடங்கள் கட்டுவது முக்கியமானது" என்று தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், மலசலகூடம் கட்டுவதற்கு அரசு ஒதுக்கும் நிதி, அதிகாரிகளின் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது.

இந்தியாவில் இன்னமும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம், சாதிய கட்டுமானமானது மனிதர்களை மட்டுமல்லாது, அவர்களது உணர்ச்சிகளை கூட பிரித்து வைத்திருக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையை செய்வது "யாரோ எவரோ....அவர்கள் எமது நண்பர்களோ, உறவினர்களோ அல்ல..." என்ற, அலட்சிய மனோபாவம் ஒரு முக்கிய காரணம். 

கையால் மலம் அள்ளும் சக மனிதனை, ஒரு இந்துவாகவோ, அல்லது ஒரு தமிழனாகவோ எண்ணி, சகோதர உணர்வுடன் பார்க்க விரும்பாத சமூகத்தில், இன, மத ஒற்றுமை பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?

Thursday, May 19, 2016

எத்தியோப்பியா பஞ்சத்தில் இலாபம் சம்பாதிக்கும் மேற்கத்திய ரோஜாப்பூ கம்பனி


மேற்குலகில் கொண்டாடப்படும் "வாலண்டைன்ஸ் டே", "மதர்ஸ் டே" போன்ற தினங்களில் ரோஜாப்பூக்கள் அதிகமாக விற்பனையாகின்றன. அவை ஆப்பிரிக்காவில் ஒரு வறிய நாடான எத்தியோப்பியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகின்றன. எத்தியோப்பியாவில் சில இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிப்பதற்கு நீரின்றி பட்டினியால் வாடுகிறார்கள். அதே இடத்தில் உள்ள ரோஜாப்பூ தோட்டங்கள், வருடத்திற்கு இரண்டாயிரம் நீச்சல் குளம் அளவு தண்ணீரை உறுஞ்சுகின்றன.

ஷேர் (Sher) எனும் பன்னாட்டு நிறுவனம், நெதர்லாந்து, ஜெர்மனியில் ரோஜாப்பூக்களை சந்தைப் படுத்தி வருகின்றது. ஷேர் நிறுவனத்தின் டச்சு உரிமையாளர், வருடம் இருநூறு மில்லியன் யூரோக்கள் இலாபமாக சம்பாதிக்கிறார். அதே நேரம், ஷேர் நிறுவனத்தின் ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளி மாதமொன்றுக்கு முப்பத்திநான்கு யூரோக்களுக்கு மேலே சம்பாதிப்பதில்லை. அது மட்டுமல்லாது, அங்கு பயன்படுத்தப் படும் கிருமி நாசினி நச்சுப் பதார்த்தங்களால் நோயாளி ஆகி, காலப்போக்கில் வேலை செய்ய முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்ட செம்ப்லா (Zembla) நிகழ்ச்சியில், ரோஜாப்பூக்களுக்கு பின்னால் உள்ள சுரண்டல் பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பினார்கள். செம்ப்லா ஊடகவியலாளர்கள், எத்தியோப்பியா சென்று ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை கண்டு பேசியுள்ளனர். அயலில் வாழும் கிராம மக்களையும் பேட்டி கண்டு, சுற்றுச் சூழல் பாதிப்பை நேரடியாக கண்டறிந்தனர். அந்த ஆவணப் படத்தில் சொல்லப் பட்ட தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

எத்தியோப்பிய அரசு, குறைந்த பட்ச சம்பளம் எதுவென வரையறுக்கவில்லை. உண்மையில் எத்தியோப்பிய செலவினத்தை ஈடுகட்டுவதற்கு, ஒருவர் குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து யூரோக்கள் சம்பாதிக்க வேண்டும். ஆனால், ஒரு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனமான ஷேர் கொடுக்கும் சம்பளம் நாளொன்றுக்கு ஒரு யூரோ கூட இல்லை. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் பெரும்பான்மையான தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள். அவர்கள் வாடைகைக்கு வீடு எடுத்து தங்க வேண்டும். அந்த இடத்தில் வீட்டு வாடகை உயர்ந்து வருவதால், இரண்டு, மூன்று பேர் ஒரு வீட்டை பங்கிட்டுக் கொள்கின்றனர். அப்படி இருந்தும், சம்பளத்தில் அரைவாசி வாடகைக்கு சென்று விடுகின்றது. அதே நேரம், அந்த இடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகமாக உள்ளன.

ரோஜாக்களில் கிருமி நாசினி நஞ்சு கலந்திருக்கும் என்பதால், அவற்றை வகைப்படுத்தி பொலித்தீன் பைகளில் அடுக்கும் வேலை செய்யும் தொழிலாளர்கள், முழங்கை அளவிற்கு கையுறை அணிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கையுறை சிறியது. இதனால் ரோஜாவின் முள் குத்தியதால் தோலில் நஞ்சேறி நோய் வாய்ப் பட்டவர்களும் உண்டு. ரோஜாச் செடிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பவர்களும், பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்கவில்லை. அது உடலில் பட்டால் புண்ணாகும் அளவிற்கு கடுமையான நஞ்சு என்பதால், பெருமளவு தண்ணீர் கலந்து தான் அடிக்கிறார்கள்.

எத்தியோப்பியாவில் வேறெங்கும் இல்லாத புதுமையான நோய்கள் எல்லாம், அந்தப் பிரதேசத்தில் காணப்படுவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். பல கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளதால், குறைப்பிரசவங்கள் நேர்கின்றன. ரோஜாத் தோட்டங்களில் பயன்படுத்தும் கிருமிநாசினிகளால் ஏற்பட்ட தீய விளைவு இதுவென சந்தேகப் பட்டாலும் தன்னிடம் ஆதாரம் இல்லை என்று அந்த மருத்துவர் தெரிவித்தார். நெதர்லாந்தில் விற்கப்படும் ரோஜாக்களில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை சோதனை செய்து பார்த்ததில், அந்த மருத்துவரின் கூற்றில் உண்மை இருப்பது நிரூபணமானது.

ஷேர் நிறுவனம், தோட்டங்களுக்கு அருகில் மருத்துவமனை ஒன்று கட்டியுள்ளது. அங்கு தொழிலாளர்களுக்கு "இலவச" மருத்துவம் வழங்கப் படுகின்றது. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலையும் கட்டிக் கொடுத்துள்ளது. அங்கே கல்வி "இலவசம்" அதாவது, ஷேர் நிறுவனம் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டும் மில்லியன் கணக்கான யூரோக்களில், மிகச் சிறிய தொகையை தொழிலாளர் நலனுக்காக செலவிடுகின்றது. உண்மையில், தொழிலாளர்களின் பணத்தில் தான் "இலவச" மருத்துவம், கல்விக்கு செலவு செய்யப் படுகின்றது. முதலாளிகள் இதனை "நல்ல மனது வைத்து தானமாகக் கொடுத்ததாக" காட்டிக் கொள்கிறார்கள்.

இத்தகைய நிறுவனங்கள், 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்துள்ளன. அப்போது அதனை "சமூக- முதலாளித்துவம்" (Social- Capitalism) என்று அழைத்தார்கள். ஐரோப்பிய மக்கள் அது எந்தளவு பெரிய மோசடி என்ற விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், சமூக நலத் திட்டங்களை அரசு பொறுப்பேற்றது. மக்களிடம் அறவிடப் படும் வரிப்பணத்தில் இருந்து செலவிடப் பட்டது. ஆனால், 21 ம் நூற்றாண்டில், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இன்னமும் அந்த மோசடியான சமூக முதலாளித்துவம் உள்ளது.

ரோஜாத் தோட்டங்கள் பெருமளவு தண்ணீரை உறுஞ்சுகின்றன. அதனால், சிவாய் எனும் பெரியதொரு ஏரிக்கு அருகில் தான் தோட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அருகில் ஒரு ஆறும் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. ஆற்றுத் தண்ணீர் ஏறக்குறைய வற்றி விட்டது. கிராம மக்கள் தமது கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். 

ஷேர் நிறுவனத்தின் ரோஜாத் தோட்டங்களினால் தான், ஏரியிலும், ஆற்றிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்ற உண்மையை ஊர் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இது குறித்து ஷேர் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர். எத்தியோப்பிய அரசுக்கும், ஷேர் நிறுவனத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் அரசு அதிகாரிகளே முதலாளிகளின் அடியாட்களாக வந்து மிரட்டுகிறார்கள்.

கண் முன்னே அநியாயம் நடப்பது தெரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் எத்தியோப்பிய மக்கள் உள்ளனர். தற்போது பஞ்சமும், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவும் பிரதேசங்களில், ஒரு குடும்பத்திற்கு நாளொன்றுக்கு இருபது லீட்டர் தண்ணீர் கொடுக்கிறார்கள். நிவாரணப் பணிகளில் மேற்கத்திய தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தமது நாட்டு நிறுவனங்கள் தான் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி உள்ளன என்ற உண்மை மேற்கத்திய தொண்டர்களுக்கும் தெரியும்.

மேற்கத்திய நாடுகளிலேயே பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்புச் செய்கின்றன. எத்தியோப்பியா போன்ற வறிய நாடுகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஷேர் நிறுவனத்தின் வருடாந்த கணக்கு அறிக்கையை எடுத்துப் பார்த்த பொழுது, 2014, 2015 ஆகிய இரண்டு வருடங்களில் ஒரு சதம் கூட வரியாக கட்டி இருக்கவில்லை என்பது தெரிய வந்தது. அதற்கு முன்னர் கட்டிய வரியின் அளவும் மிகவும் குறைவு.

இத்தனைக்கும், ஷேர் நிறுவனத்திற்கு "நியாயமான வணிகம்" (Fair Trade) முத்திரை கிடைத்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில், தொழிலாளர்களுக்கு நியாயமான தொகையை ஊதியமாக கொடுத்து, ஒழுங்காக வரி கட்டும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் சான்றிதழ் அது. அதற்காக ஒவ்வொரு வருடமும் பரிசோதிக்கப் படுகின்றது. ஆகையினால், எந்தவொரு தகுதியும் இல்லாத ஷேர் நிறுவனத்திற்கு அந்த சான்றிதழ் கிடைத்தது எப்படி? இது தொடர்பாக, Fair Trade தலைமை நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இன்னமும் நடவடிக்கை எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:

Monday, May 16, 2016

மீண்டும் ஒரு பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி சாத்தியமா?


மாபெரும் பாட்டாளிவ‌ர்க்க‌ க‌லாச்சார‌ப் புர‌ட்சி பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஐம்ப‌தாண்டு நிறைவு தினம் (16-5-2016) இந்த வருடம் வந்துள்ளது. மாவோவின் வ‌ழிகாட்ட‌லின் கீழ் கிள‌ர்ந்தெழுந்த‌ மாண‌வ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் நாட்டின் அர‌சிய‌ல் த‌லை‌மையை அடியோடு மாற்றினார்க‌ள். ம‌க்க‌ள் அதிகார‌ம் நிலைநாட்ட‌ப் ப‌ட்ட‌து.

முதலாளிய ஊடகங்களில் சீனக் கலாச்சாரப் புரட்சி பற்றி எதிர்மறையான கதைகளே பிரச்சாரம் செய்யப் பட்டு வந்தன. "ஹிஸ்டீரியா நோய் கண்டவர்கள் போன்று வெறி கொண்டலைந்த இளைஞர்கள்... பைத்தியக்காரத் தனம்... படுகொலைகள்...சித்திரவதைகள்..." இப்படியாகப் போகும். ஒரு சில "நடுநிலை" ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் "விளக்கமாக" எழுதும். "ஆசிரியர்களை தண்டித்த மாணவர்கள்... நிர்வாகிகளை தண்டித்த ஊழியர்கள்..." அதாவது, "கட்டுப்படுத்த முடியாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க விடப் பட்ட பக்குவப் படாத மக்கள் திரள்" தான், அப்போது நடந்த அட்டூழியங்களுக்கு மூலகாரணம் என்று எழுதுவார்கள்.

கலாச்சாரப் புரட்சி என்றால் என்ன? 
அது தோன்றுவதற்கு காரணமான அரசிய, சமூகக் காரணிகள் எவை?

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியமைத்தாலும், பலதரப் பட்ட சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களும் சேர்ந்திருப்பார்கள். பாட்டாளிவர்க்கப் புரட்சி என்று சொல்லப் பட்டாலும், அதில் பங்கெடுக்கும் அனைவரும் பாட்டாளிகள் அல்ல. பெருமளவு மத்தியதர வர்க்கத்தினர் இருப்பார்கள். 

பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்திருந்தாலும், மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்கள். ஏதோவொரு சந்தர்ப்பம் சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பலம் பெற்று வருகின்றனர் என்று தெரிந்து கொண்டு வந்து சேர்ந்திருப்பார்கள். தமது சுயநலத்திற்காக, பதவிகளுக்காக, புகழுக்காக சேர்ந்து கொள்பவர்களும் உண்டு. இது உலகம் முழுவதும் உள்ள கட்சிகள், விடுதலை அமைப்புகளில் நடப்பது தான். கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

தொழிற்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், புரட்சிக்குப் பின்னரும் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும். முன்பிருந்த அதே நிர்வாகிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால், எல்லோரும் எதிர்ப்புரட்சியாளராக மாறுவதில்லை. பெரும்பாலானோர் ஊரோடு ஒத்துப் போகிறவர்கள் தான். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், "இலட்சக் கணக்கானவர்களை வகைதொகையின்றி கொன்று குவிப்பார்கள்" என்பது மேற்குலகினால் பரப்பப் படும் பிரச்சாரம் மட்டுமே. உண்மை நிலைமை அதற்கு நேரெதிரானது. எல்லா உள்நாட்டு யுத்தங்களிலும் நடப்பவை, சோஷலிசப் புரட்சிக் காலங்களிலும் நடக்கும். எதிர்த்துப் போரிடுவோரை தவிர, காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் போன்றவர்களும் இருப்பார்கள். இப்படியானவர்களே யுத்தத்தில் கொல்லப் படுவார்கள். சிலநேரம், தனிநபர் பகைமை காரணமாக தவறுகளும் நடக்கலாம்.

இருப்பினும், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் சில விடயங்களில் வித்தியாசப் படும். நிலப்பிரபுக்கள்,பண்ணையார்கள், நிலவுடமையாளர்கள், பெரும் முதலாளிகள், கந்துவட்டிக் காரர்கள் போன்றோர் சுட்டுக் கொல்லப் படுவார்கள். இது போன்ற நடவடிக்கைகள் அங்கு நடப்பது வர்க்கப் போர் என்பதை அறிவித்துக் கொண்டிருக்கும். ஆனால், வர்க்கப் போராட்டம் என்பது வேறு. 

கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், எல்லாம் ஒரே நாளில் மாறி விடுவதில்லை. பெரும்பாலான மாற்றங்கள், அரசுக் கட்டமைப்பினால் மேலே இருந்து கொண்டு வரப்படும். அப்போதும் வர்க்கப் போராட்டம் நடப்பதில்லை. அதை ஓர் அரசு செய்ய முடியாது. மக்களின் ஆதரவு அவசியம். அதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் பங்கெடுக்க வைக்க வேண்டும். அதை நடைமுறைப் படுத்துவது எப்படி?

உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் முப்பதுகளிலும், சீனாவில் அறுபதுகளிலும் வர்க்கப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் காலத்தில் நடந்த வர்க்கப் போராட்டம் தனித்தன்மை கொண்டது. மேற்குலகில் அதனை "ஸ்டாலினின் பயங்கர ஆட்சி" என்று முத்திரை குத்தினார்கள். இன்றளவும் அவ்வாறே சொல்லப் படுகின்றது. 

அப்போது நடந்த வர்க்கப் போராட்டத்தில் சோவியத் மக்கள் பங்கெடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பங்களிப்பு மிகவும் அமைதியாக நடந்தது. மக்கள் இரகசியமாக உளவுத்துறைக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் பலர் களையெடுக்கப் பட்டனர். இறுதியில் உளவுத்துறை தலைமை அதிகாரி கூட தப்பவில்லை. நாட்டிலேயே அதிகளவு அதிகாரங்களை வைத்திருக்கும் கட்சி மத்திய குழு வரையில் களையெடுப்பு நடந்தது.

"பணக்கார வாழ்க்கை, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, மேட்டுக்குடி குடும்பப் பின்னணி, முதலாளித்துவ நலன்களை நியாயப் படுத்துவது, வலதுசாரித் தன்மையுடன் அரசியல் பேசுவது..." இவ்வாறு பல காரணங்கள், ஒருவரை குற்றவாளியாக இனங்காட்ட போதுமானதாக இருந்தன. இதனால் யாருமே "வித்தியாசமாக" அல்லது ஆடம்பரமாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. வீட்டில் வெளிநாட்டு வாசனைத் திரவியம் வைத்திருந்தாலே, "பூர்ஷுவா கலாச்சாரத்தை பின்பற்றுவதாக" காட்டிக் கொடுக்கப் படலாம் என்று அஞ்சிய காலமது.

சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்திருந்த காலங்களில், அயல்நாடான சீனாவுடன் நல்லுறவு பேணப் பட்டது. ஸ்டாலினின் கொள்கைகளும், மாவோவின் கொள்கைகளும் பெருமளவு ஒத்துப் போனதால், எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால், சோவியத் யூனியனில் குருஷேவ் பதவிக்கு வந்ததும் பிரச்சினை எழுந்தது. 

குருஷேவ் ஸ்டாலினை கண்டித்து பேசியதை மாவோ ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒரு காலத்தில், சகோதரர்களாக இருந்தவர்கள் பகையாளிகள் ஆனார்கள். சோவியத் - சீன எல்லையில் இராணுவக் குவிப்புகளும், சில இடங்களில் ஆயுத மோதல்களும் இடம்பெற்றன.

அப்போது சீனா ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகிக்கவில்லை. சீனாவின் உறுப்புரிமை தாய்வானுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. மேற்குலக நாடுகள் தாய்வானை ஆதரித்து வந்தன. கம்யூனிச சீனாவை அங்கீகரிக்க மறுத்தன. இதனால் அன்றைய சீனா, உலகில் எல்லா நாடுகளாலும் ஒதுக்கப் பட்ட நிலையில் இருந்தது. மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியில் தான், கலாச்சாரப் புரட்சி நடந்தது. அப்போது மிகவும் முதுமையுற்றிருந்த மாவோ, தனது 72 வது வயதில், 16 மே 1966 ம் ஆண்டு, "பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியை" அறிவித்தார்.

ஸ்டாலின் மாதிரி, மாவோவும் தனது கட்சிக்குள்ளேயே கலாச்சாரப் புரட்சியை (வர்க்கப் போராட்டத்தை) நடத்தினார். பிரதமர் லியூ சொக்கி (Liu Shaoqi) மாவோவின் நன்மதிப்பை இழந்தார். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய பொழுது, கலகக் கார மாணவர்களை அடக்குவதற்காக, லியூ சொக்கி பாதுகாப்புப் படையினரை அனுப்பினார். மாவோ தலையிட்டு தடுத்து விட்டார்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தை பின்பற்றி, சீனா முழுவதும் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், தொழிலகத்திலும் செம் காவலர்கள் உருவானார்கள். அவர்கள் கட்சி சார்பற்ற துடிப்பான இளைஞர்களாக இருந்த படியால், கட்சியின் தலைமையை கூட துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். 

1967 ம் ஆண்டு, செம்காவலர்கள் பிரதமர் லியூ சொக்கியையே கைது செய்யுமளவிற்கு பலமாக இருந்தனர். பிரதமர் லியூ சொக்கி இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் நிறுத்தப் பட்டு, மணித்தியாலக் கணக்காக தலை குனிந்து நின்றார். அவர் மீது நூற்றுக் கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. பதவி அகற்றப் பட்டு, சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட லியூ சொக்கி, 1969 ம் ஆண்டு காலமானார்.

கலாச்சாரப் புரட்சி தொடங்கி இரண்டு வருடங்களுக்குள், சீனா முழுவதும் இருந்த நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எச்ச சொச்சங்கள் அழிக்கப் பட்டு விட்டன. ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களால் அகற்றப் பட்டனர். மேயர் முதல் ஆளுநர் வரை, எத்தகைய உயர்பதவி வகித்தவரும் மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு தப்பவில்லை. சுருக்கமாக, கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்கனவே இருந்த பழைய தலைவர்கள், ஏறக்குறைய எல்லோரும் பதவி இறக்கப் பட்டு, அந்த இடங்களுக்கு புதியவர்கள் வந்தனர்.

31 ஜனவரி 1967 ம் ஆண்டு, ஹைலோன்ஜியாங் மாகாணத்தின் ஆட்சி அதிகாரம், கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பறிபோனது. கட்சி சாராத மாணவர்கள், மக்களை அங்கத்தவர்களாக கொண்ட புரட்சிகர கமிட்டி ஆட்சிப் பொறுப்பேற்றது. பதவி இறக்கப் பட்ட கட்சித் தலைவர்கள், தொலைதூர நாட்டுப்புறங்களில் இருந்த கடின வேலை வாங்கும் முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். சீனாவில் இருந்த இருபத்தொன்பது மாகாணங்களில் ஒன்றின் ஆட்சி நிர்வாகம் மக்களால் பொறுப்பெடுக்கப் பட்ட நிகழ்வு, வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்திருக்கவில்லை.

கட்சி சாராத மக்களைக் கொண்ட புரட்சிகர கமிட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், மக்கள் விடுதலைப் படை சட்டம், ஒழுங்கு சீர்குலைய விடாமல் பார்த்துக் கொண்டது. ஏற்கனவே பதவியிறக்கப் பட்ட சீனப் பிரதமரின் இடத்தை லின் பியாவோ (Lin Biao) கைப்பற்றினார். சீன இராணுவம் அவரது பொறுப்பின் கீழ் இருந்த படியால், படையினரை புரட்சிகர செம்காவலர்களுக்கு உதவியாக அனுப்பி இருந்தார். படையினரின் பிரசன்னம் இருந்த போதிலும், அரசியல் முடிவுகள் அனைத்தையும் செம் காவலர்கள் எடுத்தனர்.

கலாச்சாரப் புரட்சியின் எதிர்மறையான விளைவுகள் எவை?

இரண்டு வருடங்களுக்குள் சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தை மாற்றியமைத்த செம் காவலர்கள் சாதாரண அடித்தட்டு மக்களின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். இருப்பினும், சில இடங்களில் தனி நபர் விரோதங்கள் காரணமாக சிலர் வர்க்க எதிரிகளாக்கப் பட்டதை மறுப்பதற்கில்லை. இதனை கலாச்சாரப் புரட்சியின் எதிர்மறையான விளைவாகப் பார்ப்பதை விட, மக்களிடம் நேரடியாக அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பதால் ஏற்படும் எதிர்மறையான விளைவாகவே கருத வேண்டும்.

செம் காவலர்களின் புரட்சிகர கமிட்டிகள் அமைக்கப் பட்டதும், மாவோ ஒரு கட்டத்தில் கலாச்சாரப் புரட்சியை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவாக, செம் காவலர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தமக்குள் மோதிக் கொண்டனர். இறுதியில் இராணுவத்தை அனுப்பி அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது சில செம் காவலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் கூட, புதிய ஆட்சியாளர்களினால் அகற்றப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டனர்.

மாவோவிற்குப் பின்னர் சீனாவின் அதிபரான டெங் சியாபெங், ஒரு காலத்தில் திரிபுவாதியாக இனங் காணப் பட்டு, பதவியிறக்கப் பட்டிருந்தார். பின்னர் அவர் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்வதாக (பொய்) வாக்குறுதி அளித்ததன் பேரில் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டார். கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் டெங் சியபெங் பக்கம் இருந்தனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மாவோவின் மனைவியான ஜாங் கிங் பக்கம் இருந்தனர். மாவோவின் மனைவி கலாச்சாரப் புரட்சியை தொடரப் போவதாக சூளுரைத்திருந்தார்.

மாவோவின் மூன்றாவது மனைவியான ஜாங் கிங், ஒரு நடிகையாக தனது வாழ்வை தொடங்கியவர். அதனால், அவரது நேரடி பணிப்பின் பேரில் புரட்சிகர நாட்டிய நாடகங்கள் அரங்கேறின. "நான் மாவோவின் நாய். கடிக்க சொன்னால் கடிப்பேன்..." என்று ஜாங் கிங் கூறியிருந்தார். மாவோ தனது மரணப் படுக்கையில் இருக்கையில் ஜாங் கிங் "தீவிர இடதுசாரி" என்று கண்டித்ததாக சொல்லப் படுகின்றது.

1976 ம் ஆண்டு மாவோவின் மரணத்தின் பின்னர், ஜாங் கிங் நால்வர் குழு என்ற பெயரில் கலாச்சாரப் புரட்சியை தொடரப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், பிரதமர் ஹுவா குவாபெங், டெங் சியாபெங்குடன் சேர்ந்து சதிப்புரட்சி செய்தார். ஜாங் கிங் தலைமையிலான "தீவிர இடதுசாரிகளான" நால்வர் குழுவை கைது செய்தார். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. மாவோவின் மாணவி மட்டும் மரண தண்டனையில் இருந்து தப்பினார். 1991 ம் ஆண்டு, நீண்ட சிறைவாசம் அனுபவித்து வந்த ஜாங் கிங் புற்றுநோயால் காலமானார். அதே நேரம், டெங் சியாபெங் தலைமையில், சீனா முதலாளித்துவ பாதையில் சென்று கொண்டிருந்தது.

க‌லாச்சார‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஐம்ப‌தாண்டுக‌ள் க‌ட‌ந்து விட்டாலும், சீனாவில் இன்ன‌மும் மாவோயிஸ்டுக‌ள் ப‌ல‌மான‌ ச‌க்தியாக‌ திர‌ண்டுள்ள‌ன‌ர். அர‌ச‌ க‌ண்காணிப்புக‌ள், அட‌க்குமுறைக‌ளுக்கு ம‌த்தியில் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இய‌ங்குகின்ற‌ன‌ர். மீண்டும் ஒரு க‌லாச்சார‌ப் புர‌ட்சி வ‌ருமானால், அத‌ற்கு த‌யாராக‌ இருப்ப‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர்.  ( Maoists still a force 50 years after the Cultural Revolution)

இது ஒரு வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம். அநியாய‌மான‌ வழிக‌ளில் செல்வ‌ம் சேர்த்துள்ள‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு இன்னொரு க‌லாச்சார‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம் என்று ந‌ம்புகிறார்க‌ள். இந்தத் தகவல், உலகில் பல நாடுகளிலும் செல்வத்தில் மிதக்கும் பணக்கார்களுக்கு உவப்பான செய்தியாக இருக்கப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் கலாச்சாரப் புரட்சி பற்றிய எதிர்மறையான, பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பார்கள். நமது தமிழ் மக்களும் அப்படியான விஷமிகள் குறித்து விழிப்பாக இருக்க  வேண்டும். 




இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, May 14, 2016

எல்லோரும் முதலாளிகள் ஆகலாம் என்பது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல்


"எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்பது ஒரு பித்தலாட்டம். மிகப் பெரிய பொய். அது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல். சிலநேரம், தொழிலாளர்களை விட, சிறு "முதலாளிகள்" தான் அதிகமாக சுரண்டப் படுகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

"முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர் என்று சொல்லுங்கள்! ஏனென்றால் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்!" இவ்வாறு பிதற்றிக் கொண்டு திரியும், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் தற்குறிகளுக்கு இந்த ஆவணப்படம் சரியான பதிலடி கொடுக்கிறது. 

நெதர்லாந்து நாட்டில், எல்லோரையும் தொழில் முனைவோர் ஆகுமாறு அரசு ஊக்குவித்து வருகின்றது. ஆனால், நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் அவர்களை தொழிலாளர்களை விட மிகவும் மோசமாக சுரண்டி வருகின்றன. இதனால் பல "சுதந்திரமான" "தொழில் முனைவோர்", தம்மை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரிப் போராடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது! 

தபால் துறையை தனியார்மயமாக்கியதால் ஏற்படும் அவலங்களை பற்றிய ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. "Baas in eigen bus" (சொந்த வாகனம் வைத்திருக்கும் முதலாளி) என்ற தலைப்பிலான ஆவணப் படம், எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கூட பெரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர் என்பதை விளக்குகின்றது.

தொண்ணூறுகள் வரையில் அரச நிறுவனமாக இருந்த PTT Post (தந்தி, தொலைபேசி, தொலைத்தொடர்பு நிறுவனம்) அவ்வளவு காலமும் ஊழியர்களுக்கு முழுநேர வேலை கொடுத்து வந்தது. தனியார்மயமாக்கிய பின்னர், பெருந்தொகை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர் அல்லது பகுதி நேர வேலையில் வைத்திருந்தனர். மின்னஞ்சல் வந்த பின்னர் கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளமையை அதற்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது.

தற்போது, தபால் தொழில்துறையை PostNL என்ற தனியார் நிறுவனம் நடத்துகின்றது. (அதன் பெயரில் "மன்னருக்குரிய" என்ற அடைமொழியும் இருப்பதால், அரச குடும்பத்தின் பங்குகளும் இருக்க வேண்டும்.) இன்றைய நவீன யுகத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டாலும், மறுபக்கத்தில் பார்சல்கள் அனுப்பவது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இன்றைக்கு நிறையப் பேர் இணையக் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.

அதனால் PostNL நிறுவனத்திற்கு நிறைய பார்சல் விநியோகஸ்தர்கள் தேவைப் பட்டனர். அதற்காக யாரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, "தனியார் தொழில்முனைவோர்களுடன்" ஒப்பந்தம் செய்து கொள்கின்றது.

யார் இந்த "தனியார் தொழில் முனைவோர்"? ஒரு தனி நபர் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொள்கிறார். அவர் குறிப்பிட்ட சேவையை செய்து கொடுப்பதற்கு பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இது தான் "சுதந்திரமான", தனியார்", "தொழில்முனைவோர்" என்பதன் அர்த்தம்.

ஆனால், PostNL நிறுவனத்தை பொறுத்த வரையில், அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. சாதாரண தொழிலாளர்கள் போன்று PostNL க்கு மட்டுமே வேலை செய்ய முடியும். இது சட்டப்படி தவறாகும். விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த கமிஷன் காரணமாக, அவர்கள் PostNL க்கு மட்டும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஒரு பக்கம் அனுப்பப் படும் பார்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், மறு பக்கம் கமிஷன் தொகை குறைக்கப் பட்டுள்ளது.

PostNL க்கு வேலை செய்யும் தனியார் தொழில் முனைவோர் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும். அதாவது பார்சல்கள் எடுத்துச் செல்வதற்கான சிறிய வேன் இருந்தால் தான் ஒப்பந்தம் செய்வார்கள். பெரும்பாலான தொழில் முனைவோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அவர்கள் குறைந்தது இருபதாயிரம் யூரோ பெறுமதியான வாகனத்தை, லீசிங் கடனில் வாங்குகிறார்கள். 

அதனால், வருமானத்தில் ஒரு தொகை கடனுக்கான மாதாந்த தவணைப்பணம் கட்டுவதற்கு செலவாகின்றது. நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்தாலும், கையில் சிறு தொகையே மிஞ்சுவதால் தமது ஓய்வூதிய கட்டுப்பணத்தை கூட செலுத்த முடியாமல் கஷ்டப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது, பார்சல் விநியோகஸ்தர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப் படுகின்றனர். "லைசன்ஸ் இருக்கிறதா? சீருடை அணிந்துள்ளனரா? பேட்ஜ் குத்தி இருக்கிறதா? வாகனத்தின் கதவு மூடப் பட்டுள்ளதா?" என்றெல்லாம் கண்காணிக்கிறார்கள். பத்து தடவைக்கு மேல் குற்றம் கண்டுபிடிக்கப் பட்டால் ஒப்பந்தம் இரத்து செய்யப் படும். ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். ஆகவே, "தனியார் தொழில் முனைவோர்", உண்மையில் பதிவு செய்யப் படாத தொழிலாளர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகும்.

கடந்த வருடம் (2015ல்) கொடுமைகளை தாங்க முடியாத தொழில் முனைவோர் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். அதற்குப் பிறகு தான் PostNL இறங்கி வந்தது. 12% தொழில் முனைவோரை, நிரந்தர தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

ஆயினும், தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என்று, பார்சல் விநியோகஸ்தர்கள் குறைப் படுகின்றனர். அது மட்டுமல்லாது, வேலை நிறுத்தத்தை ஒழுங்கு படுத்தியவர்களின் ஒப்பந்தமும் முறித்துக் கொள்ளப் பட்டது. "விரும்பத் தகாத நடவடிக்கை காரணமாக" ஒப்பந்தத்தை முறிப்பதாக, PostNL அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"சேவை வழங்குனர்" தன்னுடன் ஒப்பந்தம் செய்யும் "தொழில் முனைவோருடனான" உறவை எந்நேரமும் துண்டித்துக் கொள்ளலாம் என்பது ஒரு பாதகமான அம்சம். இதனால் சாதாரண தொழிலாளிக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. ஒப்பந்தம் இழந்தவர்கள், PostNL நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், நீதிபதி அவர்களை தொழிலாளர்களாக கருதாமல், "முதலாளி அல்லது தொழில் முனைவோர்" என்று குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


ஆவணப் படத்தை பார்வையிடுவதற்கு:

Wednesday, May 11, 2016

சீனக் கலாச்சாரப் புரட்சி: அரசு அதிகாரிகளை அடக்கிய மக்கள் அதிகாரம்!

கலாச்சாரப் புரட்சி
பற்றிய அறிவிப்பு 

சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில், விவசாயிகள், தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இலகுவாக்கப் பட்டன, அல்லது இல்லாதொழிக்கப் பட்டன.

அதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க முன்னர், இரண்டு, அல்லது மூன்று வருடங்கள் ஒரு தொழிற்சாலையில் (அல்லது வயலில்) வேலை செய்திருக்க வேண்டும். அவரது சக தொழிலாளிகளால் முன்மொழியப் பட வேண்டும் என்று மாற்றியமைக்கப் பட்டது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், தொழிலகங்களில் இருந்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புரட்சிகர கமிட்டியின் தலைமைத்துவத்தை கொண்டு வந்தார்கள். தொழிற்சாலைகளில் இருந்த ஒரே நிர்வாகி முறை ஒழிக்கப் பட்டு, அந்த இடத்தில் புரட்சிகர தொழிலாளர்கள், கட்சி உறுப்பினர்களின் கூட்டுத் தலைமைத்துவம் கொண்டு வரப் பட்டது.

நாட்டுப்புறங்களுக்கு செல்ல
தயாராகும் மாணவர்கள் 
சீனப் புரட்சியின் பின்னர், நகர்ப்புற மாணவர்கள் நாட்டுப்புறங்களுக்கு சென்று, நடைமுறை சோஷலிச கல்வி கற்க வேண்டுமென பணிக்கப் பட்டது. கிராமங்களில் சாதாரண விவசாயிகளின் குடிசைகளில் தங்கியிருந்து, அவர்கள் தரும் உணவை சாப்பிட்டு, பகலில் வயல்களில் வேலை செய்ய வேண்டும்.

நாடுமுழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் தவிர்ந்த அனைவருக்கும் இந்த விதி கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

வசதியான மத்தியதர வர்க்க குடும்பங்களில் பிறந்த இளைஞர்கள், வசதியற்ற குடிசைகளில் செங்கல் அடுக்கப் பட்ட படுக்கையில் பாய் விரித்துப் படுத்தனர். உழவர்கள் காய்ச்சும் கஞ்சியோ, கூழோ வாங்கிச் சாப்பிட்டனர். வாரத்தில் ஒரு நாள் தான் இறைச்சி கிடைத்தது.

எல்லா இளைஞர்களும் அதை மனம் கோணாமல் வாங்கிச் சாப்பிட்டனர் என்று சொல்ல முடியாது. வாய்க்கு ருசியாக உண்ண வேண்டுமென்ற ஆசையில், அருகில் இருந்த சிறிய நகரங்களுக்கு சென்று, கையில் இருந்த பணத்தை கொடுத்து உணவுவிடுதியில் சாப்பிட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் அகப்பட்டால் "மேட்டுக்குடி கலாச்சாரத்தை பின்பற்றியதற்காக" அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்டனர்.

அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள், மக்களை நசுக்கினார்கள் என்று தான் கேள்விப் படுகிறோம். அதற்கு மாறாக, மக்கள் ஆட்சியாளர்களை நசுக்கியது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அதற்குப் பெயர் "மக்கள் அதிகாரம்". சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்த பத்தாண்டுகளாக அது தான் நடந்தது.

சீனா முழுவதும் சிறிய, பெரிய நகரங்கள் எங்கும், செம்காவலர்கள் உருவானார்கள். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில்லாத மாணவர்களும், மக்கள் திரளும் அதில் அங்கம் வகித்தனர். தமது ஊரில் இருந்த அதிகார வர்க்கத்தை குறி வைத்து தாக்கினார்கள். மிகவும் பலம் வாய்ந்த ஆளுநர்கள், மேயர்கள், கட்சித் தலைவர்கள் யாரும் தப்பவில்லை.

இங்கேயுள்ள படங்களில், கவர்னர், மேயர், மற்றும் கட்சித் தலைவர்கள், மக்கள் முன்னிலையில் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்த குற்றங்கள் கழுத்தில் எழுதிக் கட்டப் பட்டுள்ளன. பெருந்திரளான மக்களின் முன்னிலையில், ஒரு கதிரையில் ஏறி நின்ற படி, மணிக் கணக்காக தலை குனிந்திருக்க வேண்டும். குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்ட பின்னர், தெருத்தெருவாக ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டனர்.
பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட,
 தமது மேலதிகாரிகளை 
குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். 
தலையில் உள்ள கடதாசித் தொப்பியில் 
குற்றச்சாட்டுகள் எழுதப் பட்டுள்ளன.

பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட, தமது மேலதிகாரிகளை குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். தலைமை நிர்வாகிகள் பெரிய வீடுகளில் வசித்துக் கொண்டு, வேலைக்கு ரஷ்ய கார்களை ஓட்டி வந்தனர். அவை பூர்ஷுவா (முதலாளிய) கலாச்சாரம் என்று ஊழியர்கள் குற்றஞ் சாட்டினார்கள். அதற்குப் பிறகு சிறிய வீடுகளுக்கு மாறிய நிர்வாகிகள், பொதுப் போக்குவரத்து வண்டிகளை பயன்படுத்தினார்கள்.  

மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளில் வாழும் மக்கள் இது போன்ற காட்சிகளை நினைத்துப் பார்க்க முடியுமா? தமது ஊரில் உள்ள அதிகாரம் படைத்த மேயர், கவர்னர்களை அவர்களால் கிட்ட நெருங்கக் கூட முடியாது.

"பல கட்சி ஜனநாயகம்" நிலவும் நாடொன்றில், குறைந்த பட்சம் ஆளும்கட்சி உறுப்பினரை இவ்வாறு நிறுத்த முடியுமா? அவர்கள் குற்றம் இழைத்தால், நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்வார்கள். பணபலம், அதிகார பலம் உள்ளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியும்.

இது தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாட்டாளிவர்க்க ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசம். பலர் தவறாக நினைப்பது போன்று, சோஷலிச நாடுகளில் "ஒரு கட்சி" ஆட்சியில் இருப்பதில்லை. மாறாக ஒரு வர்க்கம், அதாவது பாட்டாளி வர்க்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கும். ஒருவர் கட்சி உறுப்பினராவதற்கும், கட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கும், பாட்டாளி வர்க்க சமூகப் பின்னணி அவசியமானது.


மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருந்த, கட்சியின் பிராந்திய தலைமைச் செயலாளர் Wang Yilun, பல்கலைக்கழக மாணவர்களினால் திரிபுவாதியாகவும்,  எதிர்ப்புரட்சியாளராகவும் குற்றம் சாட்டப் பட்டார். 

அரசு நிறுவனங்களுக்குள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே கூட வர்க்கப் போராட்டம் நடக்கலாம், நடந்துள்ளது. இதைத் தான் "ஸ்டாலினின் சர்வாதிகாரம்", "மாவோவின் சர்வாதிகாரம்" என்று மேற்குலகில் பிரச்சாரம் செய்தனர்.
மாவோ சிந்தனைகளை
படித்து விவாதிக்கும் மக்கள் திரள்
 

19 மே 1966 ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியிடம் இருந்து "மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி" பற்றிய அறிவித்தல் வெளியானது. பெய்ஜிங் பாடசாலைகளில் தொடங்கிய "செம் காவலர்கள்" இயக்கம், நாடு முழுவதும் இருந்த கல்வி நிலையங்களில் பரவியது. 

உண்மையில் அது மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இயக்கம். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணிக்கும் தொடர்பு இருக்கவில்லை. அதனால் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப் படாதவர்களாக இருந்தனர்.

ஆரம்பத்தில் பிரதமர் லியூ சொக்கி செம் காவலர் இயக்கத்தை அடக்க விரும்பினார். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருந்தன. ஆனால், மாவோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

5 ஆகஸ்ட் 1966 அன்று, "தலைமையகத்தை தாக்குங்கள்" என்று மாவோ அறிவித்தார். மாவோ செம்காவலர் பாணியில் கையில் செந்நிறப் படி அணிந்து, தானே கைப்பட எழுதிய சுவரொட்டியுடன் மக்கள் முன்னால் தோன்றினார். (கம்யூனிஸ்ட்) கட்சியின் தலைமைப் பீடம் "பூர்ஷுவா தலைமையகம்" என்று அதில் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.

செம் காவலர் இயக்கத்திற்கு மாவோவின் ஆதரவு கிடைத்து வந்ததால், அவர்கள் துணிச்சலுடன் ஆளும் கட்சி தலைவர்களைக் கூட தாக்கத் தொடங்கினார்கள். திரிபுவாதிகள் என்று இனங்காணப்பட்ட பலர் மக்கள் முன்னால் நிறுத்தப் பட்டனர். பிரதமர் லியூ சொக்கி கூட குற்றம் சாட்டப் பட்டார். பலர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டார்.

மியூசியமாக மாறிய 
ஒரு  நிலப்பிரபுவின் வீடு.
 பாவித்த ஆடம்பரப் பொருட்கள்
மக்களின் பார்வைக்காக 

வைக்கப் பட்டிருக்கின்றன. 

அதிகார வர்க்கத்தில் இருந்த கட்சித் தலைவர்களைத் தவிர, செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், வியாபாரிகளும் "துர் நடத்தை" கொண்டவர்களாக குற்றம் சாட்டப் பட்டு, மக்கள் முன்னால் அவமானப் படுத்தப் பட்டனர்.

கிராமங்களில் ஆடம்பரமாக வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் வீடுகள், அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கைப்பற்றப் பட்டன. அவை மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியமாக மாற்றப் பட்டன.

இவற்றைத் தவிர, ஒவ்வொரு ஊரிலும், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொது வெளியில், மாவோவின் சிந்தனைகளை படிப்பதும், அதை நடைமுறைப்படுத்துவதும் பற்றி விவாதிக்கப் பட்டது. அனேகமாக, இந்தக் காட்சிகள் மட்டுமே மேற்கத்திய ஊடகங்களினால் மிகைப் படுத்தி தெரிவிக்கப் பட்டன.




படங்கள், தகவல்களுக்கு நன்றி: 
Red- Color News Soldier, Li Shenzheng
Rode Morgen, 1 mei 2016



Sunday, May 08, 2016

அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?

"புர‌ட்சி செய்யாதே! பூப் ப‌றித்து பூஜை செய்!" - இது க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ஸ் போதிக்கும் ஜ‌ன‌நாய‌க‌ பாட‌ம். முத‌லில், இந்தியாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லில் ஒரு "இந்திய‌ சாவேஸ்" தேர்ந்தெடுக்க‌ப் ப‌டும் நிலைமை வ‌ர‌ட்டும். அப்போது தெரியும் இந்தப் போலி ஜ‌ன‌நாய‌க‌ம் என்ன‌ பாடுப‌ட‌ப் போகிற‌தென்று.

தி இந்து பத்திரிகையில், புரட்சிகர அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? என்ற அந்தக் கட்டுரையில், அரசியல் மயப்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான புத்திமதிகள் கூறுகின்றார்.

"ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்..." இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக "பெரியவர்களினால்" சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "அந்த இளைஞர்களைப் பாருங்கள்... எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்..." என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் "சமர்த்துப் பிள்ளைகள்"! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் "பரீட்சித்துப்" பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், "கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது" என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த உண்மையை சமஸ் தனது கட்டுரையில் பிரதிபலிக்கிறார்: 
//சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.//

குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, தமிழ் இளைஞர்கள் அரசியல் நீக்கப் பட்ட சமூகமாக இருந்தனர். மத்தியதர வர்க்கத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தை போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றினார்கள். "எனக்கு அரசியல் தெரியாது... அதில் நாட்டமும் இல்லை." என்று சொல்வதே நாகரிகம் என்று கருதப் பட்டது. அரசியல் நீக்கம் செய்யப் பட்ட இளைஞர் சமுதாயத்தில், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசும் இளைஞர்களும் இருப்பார்கள் என்பதை சமஸ் போன்றவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த கெட்ட கனவு பலித்து விட்டது. அரசியல்மயப் பட்ட இளைஞர்களுக்கு, ஜனநாயக விழுமியங்களை கற்றுக் கொடுப்பதால், எதிர்காலத்தில் புரட்சியை தவிர்க்கலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

சமஸ்: //நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது?//

முதலில் புரட்சி என்பதை "ஆயுதக் கிளர்ச்சி" என்று புரிந்து கொள்வதே அபத்தமானது. "முதலாளிய வர்க்கம் அமைதியான வழியில் அதிகாரத்தை மாற்றித் தந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அப்படி நடக்குமா என்பதே கேள்விக்குறி." இது 150 வருடங்களுக்கு முன்னர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய வாசகம்.

சமஸ் கூறுவது போல, "ஜனநாயக யுகத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை" தவிர்க்க முடியாதா? இந்திய முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இந்திய முதலாளிகளும், அமைதியான முறையில் நாட்டின் அரசியல் - பொருளாதார அதிகாரம் முழுவதையும், கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஏதாவதொரு கரீபியன் தீவுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே? யார் வேண்டாம் என்றார்கள். அப்படி நடக்குமா என்பது தான் கேள்வி. அந்த இடத்தில் தான் புரட்சியின் தேவை எழுகின்றது. 

அது சரி, கடந்த நூற்றாண்டில் உலகில் எந்த நாட்டிலும் அமைதி வழிப் புரட்சி நடக்கவில்லையா? 1974 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் நடந்த சோஷலிசப் புரட்சியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. 1918 ம் ஆண்டு, ஹங்கேரி சோவியத் அரசு ஜனநாயக வழியில் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தப் புரட்சி ஆயுதக் கிளர்ச்சியாக நடக்கவில்லை.

சிலி நாட்டில் ஜனநாயக தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் தான் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இறுதியில் சிலியின் அமைதியான ஜனநாயகப் புரட்சி நசுக்கப் பட்டது ஏன்? சமஸ் பெருமையுடன் குறிப்பிடும் அதே ஜனநாயக தேர்தலில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, சதிப்புரட்சியாளர்களினால் ஆயுதமுனையில் நசுக்கப் பட்டது. 

சிலியில் நடந்த சதிப்புரட்சிக்கும், அதைத் தொடர்ந்த இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா உதவியது எல்லோருக்கும் தெரியும். சமஸ் பயமுறுத்தும் புரட்சிகர கம்யூனிச/சோஷலிச சக்திகளின் ஆட்சிக் காலத்தில் சிலியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. ஆனால், சமஸ் போற்றும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக் காலத்தில் இருபதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் (இனப்)படுகொலை செய்யப் பட்டனர்.

சமஸ்: //இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.//

லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த மேற்குலகம் ஆதரித்த "புரட்சிப் படைகள்", அஹிம்சைப் போராட்டமா நடத்தின? லிபிய ஜிகாதியக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதை மேற்கத்திய நாடுகள் பெருமையோடு சொல்லிக் கொண்டன. சிரியாவிலும் சுதந்திர சிரிய இராணுவம் என்ற புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தன. சமஸ் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்: "மேற்குலக எதிரி நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது நல்லது. மேற்குலக நட்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது கூடாது."

சமஸ்: //ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.... பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது.//

மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நோக்கங்களுக்காக நடந்தவை. அவற்றை, ஒரே தட்டில் வைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அபத்தமானது. "ரஜனிகாந்த், விஜயகாந்த் அண்ணன் தம்பி" என்பது போன்ற பாமரத்தனமான கூற்று. 

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சிக்கு எதிராகத் தான் நடந்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த நெப்போலியன் போர்களினால் மன்னர்களின் அதிகாரம் கணிசமான அளவு குறைந்து போனது. வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியுற்றாலும், அவன் கொண்டு சென்று பரப்பிய "லிபரலிசம், தேசியம், முதலாளித்துவம்" போன்ற புதிய அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி விட்டன. 

பல ஐரோப்பிய நாடுகளில், பூர்ஷுவா வர்க்கம் (அல்லது முதலாளித்துவவாதிகள்) அதிகாரத்திற்கு வந்தது. லிபரல்வாதிகள் என்று அழைத்துக் கொண்ட பூர்ஷுவா வர்க்கம், அரச பரம்பரையுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் அந்த அமைப்பை "பாராளுமன்ற சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி" (Constitutional Monarchy)  என்று அறிவித்துக் கொண்டனர்.

அந்தக் கால ரஷ்யா இரண்டு புரட்சிகளை கண்டிருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த புரட்சியில், சார் மன்னனின் அதிகாரம் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. அது லிபரல்வாதிகளின் புரட்சி. அதற்குப் பிறகு தான் ரஷ்யாவில் பல கட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்ற அமைப்பு வந்தது. முதலாளித்துவமும் கணிசமான அளவு வளர்ச்சியைக் கண்டிருந்தது. உண்மையில் போல்ஷெவிக்குகள் நடத்திய புரட்சி, லிபரல் அரசுக்கு எதிராகவே நடந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு போல்ஷெவிக் புரட்சியாளர்களினால் கவிழ்க்கப் பட்ட லிபரல் அரசு தான், இன்றைக்கு இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் உள்ளது. அதைத் தான் சமஸ் "ஜனநாயக அரசு" என்று சொல்கிறார். அனேகமாக, முதலாம் உலகப்போர் வரையில், உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல்கள் நடக்கவில்லை. அதனால் ஜனநாயக நாடுகளும் இருக்கவில்லை. ஏனென்றால், அன்று அனைத்து குடி மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப் படவில்லை. பெருமளவு சொத்து வைத்திருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

1949 ம் ஆண்டு நடந்த சீனப் புரட்சி காலனித்துவத்திற்கு எதிரானது. அப்போது சீனாவில் மன்னராட்சி இருக்கவில்லை. சீனப் புரட்சி நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே, சீனா பிரிட்டனின் அரைக் காலனியாக மாறிவிட்டது. சீன சக்கரவர்த்தி பொம்மையாக வைக்கப் பட்டிருந்தார்.

சன்யாட்சன் தலைமையில் லிபரல்களான சீன தேசியவாதிகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா ஜப்பானின் காலனி நாடாகி விட்டிருந்தது. மாவோவின் கம்யூனிசப் படைகள், ஒரு புறம் ஜப்பானிய காலனியாதிக்கப் படைகளையும், மறுபுறம் சீனத் தேசியவாத படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

சமஸ்: //2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!//

பனிப்போர் காலத்தில் உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்தது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்கு கட்டுப்பட்டது. 2001-க்குப் பிறகு, அது மென்மேலும் உறுதியாக்கப் பட்டது. 

2001-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது, ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் எதிரானது என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பெரிய நாடுகள் கூட எதிரிகளாக்கப் பட்டன. லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தமும், 2001 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடந்தது.

ஆகவே, ஒரு சிறிய ஆயுதக் குழு அரசை எதிர்க்கிறதா இல்லையா என்பதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக, ஒரு சிறிய இயக்கம் அல்ல, ஒரு பெரிய அரசு இருந்தாலும் அகற்றப் பட்டு விடும் என்பது தான் யதார்த்தம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் கூட அவ்வாறு தான் "சமநிலைப்" படுத்தப் பட்டனர்.

சமஸ்: //பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.//

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? "ஜனநாயகம்" என்றால் என்ன?

முதலில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இது தான் ஜனநாயகம் என்ற வரையறை இருக்கிறதா? பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஜனநாயக  அமைப்பில் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. அதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். வாக்குரிமை பெற்ற மக்கள் தமக்குப் பிடித்த ஒருவரை தெரிவு செய்வார்கள். ஆயினும், அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 

இன்றைக்கு நாம் காணும் முதலாளித்துவ - ஜனநாயகத்திற்கும், கிரேக்க ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் உருவான நவீன ஜனநாயகம் இது. இதற்குப் பெயர் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்".  பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் அழைக்கலாம். ஆனால் அது மட்டும் தான் ஜனநாயகம் அல்ல. 

பாராளுமன்றத் தொகுதிகளுக்கு, ஐந்து வருடங்களுக்கொரு தடவை நடக்கும் தேர்தலில், மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டுப் போடலாம். அதிலும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, எப்போதும் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன, அல்லது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும், இந்தியா இன்னமும் ஒரு வறிய நாடாகவே இருப்பது எதைக் காட்டுகின்றது? எந்தக் கட்சியிடமும் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான திட்டம் கிடையாது. அப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருந்திருந்தால் இந்தியா இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் தரத்திற்கு நிகராக வந்திருக்குமே? இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பது சாதாரண பாமர மக்களுக்கும் தெரியும்.

பல கட்சி ஜனநாயகம் நிலவும் நாடுகளில், கட்சிகள் பணத்தை அள்ளியெறிந்து தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. பணபலம் இல்லாத கட்சி, குறைந்தது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அது மட்டுமல்ல, மக்களை இனம், மதம், சாதி அடிப்படையில் பிரித்து அரசியல் செய்வதால் தான், பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் நின்று பிடிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கட்சி மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்டிருக்கிறது? அப்படியே முயற்சித்தாலும் அது நடக்கிற காரியமா?

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று சமஸ் எங்கே படித்தார்? அந்த நாடுகளில் அரசு அதிகார நிறுவனங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாடசாலைகள், தொழிற்சாலைகள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் நடந்தன. வேட்பாளராக நிற்பவர் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமான பணம் செலவளித்து பரப்புரை செய்வதில்லை. அவர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்களை பற்றி மட்டுமே தெரிவிப்பார்கள். 

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் அனைத்து ஜனங்களும் சமமாக நடத்தப் படுகின்றனரா? பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்கின்றதா? உயர் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கிடைக்கின்றதா?

"ஜனங்களுக்குள்" ஏனிந்த பிரிவினை? இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் ஒடுக்கப் பட்ட நேரம், ஒரு "ஜனநாயக" அரசு அவர்களை ஜனங்களாக கருதவில்லையா? அதே மாதிரி, இந்தியாவில் உள்ள "ஜனநாயக" அரசு, காஷ்மீர், அசாம் மக்களை ஒடுக்கிய நேரம், அவர்கள் "ஜனங்கள்" என்ற பிரிவுக்குள் அடங்கவில்லையா?

ஒரு முதலாளித்துவ நாட்டில், சிறுபான்மை மேட்டுக்குடியினர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். மத்தியதர வர்க்க மக்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். அதன் அர்த்தம் அந்த நாடுகளில் வர்க்கப் பாகுபாடு உள்ளது என்பது தானே?

சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாற்றப் பட்டது. அதாவது ஏழைகள், அடித்தட்டு ம‌க்க‌ள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர். காலங்காலமாக ஆண்டு அனுபவித்து வந்த நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர் சமூகத்தில் கீழ் நிலைக்கு வந்தனர். அதாவது, "தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப் பட்டான். உயர்த்தப் பட்டவன் தாழ்த்தப் பட்டான்." இதைத் தான் "ஜனங்களை காலில் போட்டு நசுக்கினார்கள்" என்று சமஸ் குறைப் படுகின்றார்.

அரசியல் பழகுவோம்....

Friday, May 06, 2016

புலிகளால் வன்னியில் "புனிதர்கள்" ஆக்கப் பட்ட "இனவாத" ஜேவிபி கட்சிமாறிகள்


தென் இலங்கையில் ஜேவிபி இன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (1989) நடந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு, வட இலங்கையில் புலிகளின் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (2009) நடந்துள்ளன. சிறிலங்கா அரசு, ஜேவிபியையும், புலிகளையும், ஒரே மாதிரியான எதிரிகளாக கருதி அழித்தொழித்தது. ஒன்று வர்க்க எதிரிகள், மற்றது இன எதிரிகள். அது மட்டுமே வித்தியாசம்.

"அடக்குபவனையும்,அடக்கப்படுபவனையும் ஒரே தட்டில் போட முடியுமா?" என்று புலிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், அடக்கப்பட்ட ஜேவிபி யை ஒரே தட்டில் போடும் முரண்நகையை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. (பார்க்க: சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்) அது மட்டுமல்லாது, ஜேவிபி தலைமையை விமர்சித்து அதிருப்தியுற்று வெளியேறிய பிரிவினரை பற்றியும், "இனவாதம் பேசியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று விஷமத்தனமாக விதண்டாவாதம் செய்கின்றனர்.

இன்றைய ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) ஆனது, 1989 தென்னிலங்கையில் நடந்த "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப்" பின்னர், முற்றிலும் புதிதாக மறுசீரமைக்கப் பட்ட புதிய கட்சி ஆகும். அதனை புலிகளில் இருந்து பிரிந்து சென்று இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கும் TMVP (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) உடன் ஒப்பிடலாம், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடலாம்.

பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் விழுந்து வலதுசாரிப் பாதையில் சென்ற புதிய ஜேவிபி, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பேசியதும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முண்டு கொடுத்ததும் தெரிந்ததே. வலதுசாரிப் பாதையில் சீரழிந்த கட்சி வேறெதைச் செய்யும்?

வலதுசாரி பாராளுமன்ற கட்சியான ஜேவிபி, புலிகளுக்கு இனவாத முத்திரை குத்தி புலிகளை அழிக்கும் மகிந்தவின் போருக்கு ஆதரவு தெரிவித்து வந்தமை உண்மை தான். தேர்தல் காலத்தில் சில தலைவர்களின் இனவாத மேடைப் பேச்சுகளுக்கு அப்பால், ஜேவிபி ஒரு தமிழருக்கும் தீங்கு இழைக்கவில்லை. அன்றும், இன்றும் ஜேவிபியில் நிறைய தமிழர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 

தனிப்பட்ட வாழ்க்கையில் இனவாதிகளாக இருப்பவர்கள், ஒரு இடதுசாரி கட்சியில் உறுப்பினராவது நடக்க முடியாத நிகழ்வல்ல. ஜெர்மனியில் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெளிநாட்டு குடியேறிகளுக்கு ஆதரவானதாக கருதப் பட்டது. ஆனால், அந்தக் கட்சியில் கூட இனவாதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதனை ஜெர்மனியில் எடுத்த ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

ஜேவிபி யை இயங்கியல் ரீதியாக பார்க்காமல், அல்லது பகுப்பாய்வு செய்யாமல், சில தமிழ் இன அரசியல் ஆர்வலர்கள் அதற்கு ஒரேயடியாக இனவாத முத்திரை குத்தும் வேலையை செய்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்டது. 

சிறிலங்கா அரசிடம் இருக்கும் அதே வர்க்க வெறுப்புணர்வு தான், ஜேவிபியை எதிர்க்கும் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மனதிலும் உள்ளது. புதிய ஜேவிபி கட்சியை வலதுசாரிப் பாதையில் செல்ல வைத்து இனவாதம் பேச வைத்தது சிறிலங்கா அரசுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி. 

மக்களை இன அடிப்படையில் பிரித்தாள்வது தான் ஒரு பேரினவாத அரசின் நோக்கமாக உள்ளது. சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அதனால் தான், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சியையும் இனவாதிகளாக காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள். சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் தான் அந்தப் பிரச்சாரமும் நடக்கிறது.


//இனவாதம் பேசிய ஜேவிபி, கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?// என்று சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான தமிழர் ஒருவர் கேட்கிறார்.

இலங்கையில் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் ஆயுதப் போராட்டங்கள் நடந்த காலத்தில் ஜேவிபிக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்று அரசு அஞ்சியிருந்தது. அதனால் இரண்டு இயக்கங்களையும் முடிந்த அளவிற்கு பிரித்து வைப்பதற்கு முயற்சித்தது.

இந்திய இராணுவம் இருந்த காலத்தில், எந்தக் காரணமும் இல்லாமல், பிரேமதாச புலிகளுக்கு உதவவில்லை! சோழியன் குடுமி சும்மா ஆடாது. சந்தர்ப்பம் பார்த்து புலிகளை நண்பர்களாக்கிக் கொண்டதால், ஜேவிபியை இலகுவாக அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அரசால் இரண்டு பகைவர்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடிந்திருக்காது.

இறுதிக் காலங்களில் புலிகள் தமது தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார்கள். ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இளைஞர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு, வன்னியில் ஆயுதப்பயிற்சி கொடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

ஆனால் அது மிகவும் காலதமாதமாக வந்த பட்டறிவாக இருந்தது. அப்போது காலம் மாறிவிட்டிருந்தது. தென்னிலங்கையில் புலிகளுக்கு ஆதரவாக பேசினாலே தேசத்துரோகி முத்திரை குத்தப் பட்ட காலத்தில், அந்த சிறிய குழுவால் எதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அதற்குள் அரசு விழித்துக் கொண்டு, அவர்களை இனங்கண்டு அடக்கி விட்டது. "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தி, அவர்களது உறவினர்கள், நண்பர்களைக் கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது. இந்தத் தகவல்கள் எல்லாம் அந்தக் காலங்களில் தென்னிலங்கை ஊடகங்களில் வந்திருந்தன.

புலிகளால் "புனிதர்கள் ஆக்கப் பட்ட, இனவாதம் பேசிய ஜேவிபி காரர்கள்" பலர், யுத்தம் முடிந்த பின்னரும் சிறையில் வாடினார்கள். ஊர் மக்களால் ஒதுக்கப் பட்ட அவர்களது உறவினர்கள் வறுமையில் வாடினார்கள். முக்கியமான ஒரு சிலரை, புலிகளே தமது செலவில் வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். போர்க்குற்றங்களை ஆவணப் படுத்தியதில், அவர்களது பங்களிப்பும் கணிசமான அளவு இருந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த "இலங்கையின் கொலைக் களங்கள்" ஆவணப் படத்திலும் அவர்கள் வழங்கிய போர்க்குற்ற ஆவணங்கள் காட்டப் பட்டன. அந்த ஆவணப் படத்தில் பேட்டி வழங்கும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், சிங்களப் புலியாக குற்றம் சாட்டப் பட்டதால் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றி அகதியாக வாழ்ந்து வருகிறார்.

நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்தில் அந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2007 -2008 காலப் பகுதியில் தென்னிலங்கை முழுவதும் 25 சிங்கள அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். மூன்று பத்திரிகையாளர்கள் புலனாய்வுத் துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர். அவர்கள் தம்மால் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை பின்னர் அறிவித்திருந்தது.

கைது செய்து தடுத்து வைக்கப் பட்டவர்கள், "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தப் பட்டனர். அவர்கள் "புரட்சிகர விடுதலை முன்னணி" என்ற இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், கிளிநொச்சி, முல்லைத்தீவில், புலிகளால் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கபில் அம்மான் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தென்னிலங்கையில் நடந்த தாக்குதலில் அவர்களது பங்கிருந்ததாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கொல தெரிவித்திருந்தார்.

ஜேவிபி யில் இருந்து முன்னிலை சோஷலிசக் கட்சியினர் பிரிந்தது மட்டுமே பலருக்குத் தெரிந்த விடயம். ஆனால், அவ்வப்போது சிறிய குழுக்களும் பிரிந்து சென்றுள்ளன. ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழு, "ஹிரு" என்ற பெயரில் சஞ்சிகை வெளியிட்டு வந்தது. அது புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது. புலனாய்வுத் துறையால் கடத்தப் பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் ஹிரு குழுவை சேர்ந்தவர்கள்.

ஜேவிபி இல் இருந்து பிரிந்த இன்னொரு குழுவினர் தான் "புரட்சிகர விடுதலை முன்னணி" (மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி இன் பெயரை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) என்ற பெயரில் இயங்கி உள்ளனர். அவர்கள் தென்னிலங்கையில் ஒரு ஆயுதப் புரட்சிக்கு தயார் படுத்தி வந்ததாகவும், அதற்கு புலிகள் உதவியதாகவும் அரசு குற்றஞ் சாட்டுகின்றது.

"புரட்சிகர விடுதலை முன்னணி" உறுப்பினர்கள் எல்லோரும் ஆயுதமேந்திய போராளிகள் என்று அரசு குற்றஞ் சாட்டுவதில் உண்மையில்லை. ஏனெனில், தொழிற்சங்க ஆர்வலர்களும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். குறிப்பாக ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். தொழிற்சங்க பத்திரிகையான அக்குன ஆசிரியரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் "சிங்களப் புலிகள்" முத்திரை குத்தல், வழமையான பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உட்பட்டது. சிறுபான்மை இனமான தமிழர்களையும், சிங்கள அடித்தட்டு மக்களையும் ஒன்று சேர விடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டது. அப்போது கைது செய்யப் பட்டவர்கள், பெரும்பாலும் ஊடகவியலாளர்கள் அல்லது தொழிற்சங்கவாதிகள். 

ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர்களும், இடதுசாரி தொழிற்சங்கவாதிகளும், புலிகளுடன் ஒன்று சேர்ந்து இயங்குவது, அரசின் கெட்ட கனவாக இருக்கும். தமிழ் இன உணர்வாளர்கள் என்று காட்டிக் கொள்ளும் சிலர், "ஜேவிபி மட்டுமல்லாது, அதிலிருந்து பிரிந்த சிங்களவர்கள் கூட இனவாதிகள்" என்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்வதும், சிறிலங்கா பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, May 02, 2016

சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்


இலங்கையில் நடந்த மேதினப் பேரணிகளின் படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது, அதற்குள் முன்னிலை சோஷலிசக் கட்சியின் மேதினப் படங்களும் இருந்தன. அதைக் கண்டு கொதித்துப் போன, "தமிழ் இன உணர்வாளர்"(?) ஒருவர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்:

//இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?//

ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

"ஒருகாலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள்" என்பது குற்றம், குறை கண்டுபிடிப்பவர்களின் தொழில். அது ஆரோக்கியமான அரசியல் அல்ல. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், கூட்டணி, கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் குறிப்பிட்ட சில காலங்கள் சிங்கள அரசை ஆதரித்து வந்துள்ளன.

இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்த காலத்தில், புலிகள் பிரேமதாச அரசுடன் ஒத்துழைத்து, தென்னிலங்கையில் புகலிடம் பெற்றனர். சிங்கள இராணுவத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர்.

புலிகளின் சரி, பிழைகளுக்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே மாதிரியான கோணத்தில் இருந்து தான் முன்னிலை சோஷலிசக் கட்சியை நாங்கள் பார்க்கவேண்டும். புலிகள் அல்ல, அவர்களை ஆதரித்த மக்கள் தான் முக்கியம். அதே மாதிரி மு.சோ.கட்சிக்கு பின்னால் உள்ள மக்கள் தான் முக்கியம். 

மு.சோ.க., ஜேவிபி இல் இருந்து பிரிந்த கட்சி என்ற உண்மையை மறைத்துக் கொண்டு பேசுவது ஒரு திரிபுபடுத்தல். அவர்கள் ஜேவிபி இல் இருந்த காலத்தில், அது வலதுசாரிக் கட்சியாக தான் இருந்தது. அதிருப்தியடைந்து, விமர்சனங்களை வைத்து பிரிந்து சென்றவர்களின் இது புதிய கட்சி என்பதால் இப்போதும் இடதுசாரிகளாக இருக்கிறார்கள்.

ஒரு வலதுசாரிக் கட்சியானது, மகிந்த அரசை மட்டுமல்ல, ஒபாமா அரசையும் ஆதரிக்கும். ஜேவிபி வலதுசாரிப் பாதையில் சென்று மகிந்த அரசை ஆதரித்த நேரம், அதை எதிர்த்து பிரிந்து சென்றவர்கள் தான், பின்னர் முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினார்கள். அது குறித்த சுயவிமர்சனங்களையும் வைத்துள்ளனர்.

போர் முடிந்த சில வருடங்களிலேயே, கூட்டமைப்பு சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதும், தற்போது மைத்திரி அரசை ஆதரிக்கும் போதும் கண்டுகொள்ளாதவர்கள், மு.சோ.கட்சியை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்கள்.

"இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகை வாசிப்பது, சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமைவாகவே நடக்கிறது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் எந்தக் காலத்திலும் சேர விடாமல் தடுத்து, அவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்கும் உள்நோக்கம் கொண்டது.

இதுவும் அதே "தமிழ் இன உணர்வாளரின்" கேள்வி தான்: 
//இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?//

ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சி மீது, இது போன்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துவோர், உண்மையிலேயே தமிழர் நலனில் இருந்து தான் பேசுகின்றார்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. 

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது கடந்த எழுபது வருட கால வரலாற்றில், இனவாதம் பேசி ஆட்சி நடத்தியதுடன், தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள், இனப்படுகொலைகள் நடத்தி வந்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன், மனோகணேசன் ஆகியோர் மைத்திரி அரசில் மந்திரிகளாக இருக்கிறார்கள்.

அல்லும் பகலும் தமிழர்களின் நலன்களுக்காகவே சிந்திக்கும் தமிழ் இன உணர்வாளர்கள், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் மர்மம் என்னவோ? "இனக்கலவரம், இனப்படுகொலை நடத்திய யு.என்.பி கட்சி புனிதமாகி விட்டதா?" என்று விஜயகலா, மனோ கணேசனிடம் கேட்காத காரணம் என்னவோ?

தமிழ் பேசும் மேட்டுக்குடியினரின் ஆதரவைப் பெற்ற UNP போன்ற வலதுசாரிக் கட்சிகள், எத்தனை தமிழர்களை கொன்று குவித்திருந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஜேவிபி தேர்தலில் இனவாதம் பேசி பிரச்சாரம் செய்தது என்று துள்ளிக் குதிக்கிறார்கள். இது அவர்களது மனதில் உள்ள வர்க்க துவேஷத்தை எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாது சாதிவெறியும் இன்னொரு காரணம்.

தென்னிலங்கையில் உள்ள UNP, SLFP போன்ற வலதுசாரி அரசியல் கட்சிகள், கொவிகம (வெள்ளாளர்) ஆதிக்க சாதியினரால் தலைமை தாங்கப் படுகின்றன. அது மட்டுமல்லாது சிங்கள மேட்டுக்குடியினர், சிங்கள முதலாளிகளின் நிபந்தனையற்ற ஆதரவையும் கொண்டுள்ளன. அதனால் தமிழ் வலதுசாரிகள் அந்தக் கட்சிகளுடன் கூட்டு வைப்பதற்கு பின் நிற்பதில்லை.

இதற்கு மாறாக, ஜேவிபி, மு.சோ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில், இடைத்தர, தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்ளனர். மேலும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பெரும்பாலும் சிங்கள சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் ஆவார்கள். எந்தவொரு சிங்களப் பெரு முதலாளியும் அந்தக்  கட்சிகளை  ஆதரிப்பதில்லை. 

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிவெறியர்களும், வர்க்கத் துவேஷிகளும், ஜேவிபி, மு.சோ.க. ஆகிய அடித்தட்டு மக்களின் கட்சிகளுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் புரிந்து கொள்ளத் தக்கது. அதே "நியாயவான்கள்", UNP போன்ற மேட்டுக்குடி சிங்களவர்களின் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும் கண்கூடு. அவர்கள் தமது ஆதரவை என்றைக்குமே மறைக்கவில்லை.

இனம் இனத்தோடு தான் சேரும். தமிழ் வெள்ளாளர்கள், சிங்கள கொவிகமவுடன் தான் கூட்டுச் சேர்வார்கள். தமிழ் மேட்டுக்குடி வர்க்கம் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தோடு தான் ஒன்று சேரும். அது தான் வர்க்க அரசியல்.