Friday, May 29, 2020

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்" - ஒரு புலி நீக்க அரசியல்!

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்", அநேகமாக புலி நீக்க அரசியல் செய்யும் நோக்கில் பரப்பப் பட வாய்ப்புண்டு. இந்தக் கதைகள் மூலம், புலிகளின் அரசியல் தலைமையை கேலி செய்து, புலிப் போராளிகளின் அர்ப்பணிப்பு, தியாகத்தை கொச்சைப் படுத்துவதே சீமானின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு ஈழத்து சைக்கிள் கட்சியும் ஒத்துழைக்கிறது. தமிழ் சமூகத்தில் புலி நீக்கம் செய்த பின்னர், தமது தனித்துவமான மேட்டுக்குடி அரசியலை திணிக்கும் உள்நோக்கம் மறைந்திருக்கிறது.

முன்பு புலிகளின் முகாமில் தங்கியிருந்த காலத்தில் அங்கிருந்த வாழ்க்கை முறை பற்றி பல முன்னாள் போராளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். தினந்தோறும் ஒரே மாதிரியான "அடிப்படை உணவு" மட்டுமே கிடைத்து வந்ததாக கூறினார்கள். சோறுடன், பருப்பு, கத்தரிக்காய், மற்றும் கௌப்பி எனப்படும் அவரைக்காய் உணவு எப்போதும் கிடைக்கும். அன்று வன்னியில் பெருமளவு விவசாய நிலங்களில் கௌப்பி பயிரிடப் பட்டு வந்தது. அது ஒன்றே சத்தான உணவாக கருதப் பட்டது. 

அதை விட வாரத்திற்கு ஒரு தடவை இறைச்சி பெரும்பாலும் மாட்டிறைச்சி கொடுத்து வந்தனர். சில நேரம் புட்டு, இடியப்பம் ஆகியன சமைத்துப் பரிமாறுவார்கள். ஆனால், இட்லி, தோசை, வடை போன்ற, சீமான் விவரித்த உணவு வகைகள் மிக அரிதாகத் தான் கிடைக்கும். ஆமைக்கறியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  

இதற்கு இன்னொரு பக்கம் உள்ளது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், குறிப்பாக 2002 ம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டு பிரமுகர்கள் வன்னிக்கு சென்று வந்தனர். ஊடகவியலாளர்கள், NGO பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் இப்படிப் பலர் சென்று வந்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து கொடுத்து உபசரிப்பது புலிகளின் வழக்கமாக இருந்தது. இதனை சீமான் கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்கிறார். என்னவோ தனக்கு மட்டுமே ராஜமரியாதை கிடைத்தது மாதிரிப் புளுகுகிறார். அவ்வளவு தான். 

அந்தக் காலகட்டத்தில் தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்கள-தமிழ் ஊடகவியலார்களை விசாரித்தால் புலிகளின் விருந்தோம்பல் பற்றி கதை கதையாக சொல்வார்கள்.  தங்களுக்கு கிடைத்த விருந்து சாப்பாடு அங்கிருந்த மக்களுக்கு அல்லது போராளிகளுக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று சில ஊடகவியலாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். 

அந்தக் காலத்தில், அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, அடிப்படை உணவாகக் கருதப்படும் அரிசி, பருப்பு போன்றன கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. போஷாக்கின்மை காரணமாக குழந்தைகளும், சிறுவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

சீமான் தனது புளுகுக் கதைகள் மூலம் சொல்ல விரும்புவது இது தான்:

  • - புலிகள் எப்போதும் சாப்பிடுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அதனால் போரிடுவதில் கவனம் செலுத்தவில்லை.  
  • - வெளிநாடுகளில் இருந்து வந்த பிரமுகர்களை நன்றாக கவனித்த புலிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை புறக்கணித்தார்கள்.
  • - புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இயக்கத்தின் தலைமை உட்பட, ஒரு பிரிவினர் வசதியாக வாழ்ந்து வந்தனர். பொருளாதாரத் தடை, உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இந்தப் பிரிவினர் அறுசுவை உணவு உண்டு களித்து சொகுசாக வாழ்ந்தனர். 

இது தான் புலி நீக்க அரசியல் எனப்படும். இதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை காட்டலாம். நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் பெரும்பான்மையான ஈழத் தமிழர்களின் ஆதரவு கிடைத்து வந்தது. அப்போது வெறும் பத்துப் பேருடன் இயங்கிய புலிகள் போன்ற இயக்கங்கள், கூட்டணி பற்றியும், அதன் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் கேலி, கிண்டல் செய்து பேசி வந்தனர். தமது வெளியீடுகளில் நையாண்டி செய்தனர். அதே நேரத்தில், தாம் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்டிக்காக்கும் தமிழ்த்தேசியக் கொள்கையை பின்பற்றுவதாக கூறி வந்தனர். நிகழ்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அமைப்பை தாமும் ஏற்றுக் கொள்வதாக காட்டிக் கொண்டு, தக்க தருணம் வந்தவுடன் அதைக் கைகழுவி விடுவது ஒரு அரசியல் தந்திரோபாயம். அரசறிவியலில் "மாக்கியவல்லித்தனம்" என்பார்கள். 

அது சரி, சீமான் தான் வேறு நாட்டிலிருந்து சென்று ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்த படியால் தவறாக கருதிக் கொள்கிறார் என்று ஒரு காரணம் கூறலாம். ஏன் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் ஒரு சாரார் சீமானுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்? அதை விட, காலங்காலமாக ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சைக்கிள் கட்சி எனப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அங்கிருந்த உண்மை நிலவரம் தெரியாதா? 

உண்மையைச் சொன்னால், இவர்கள் யாருமே களத்தில் நின்று போராடியவர்கள் அல்ல! இவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று வசதியாக வாழ்பவர்கள். அல்லது உள்நாட்டிலேயே மருத்துவர், ஆசிரியர் என்று மத்தியதர வர்க்க தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். இவர்களது அரசியலும், சீமானின் அரசியலும் ஒன்று தான். ஒருபுறம் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டே, மறுபுறம் அவர்களை கொச்சைப் படுத்தி வருகின்றனர். இத்தகைய புலி நீக்க அரசியல் மூலம், சமூகத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர். 

சீமானுக்கு முட்டுக் கொடுக்கும் ஈழத்தமிழர் குழுவில் உள்ள முன்னாள் போராளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே இருந்தாலும், அவர்கள் தமது தற்போதைய வசதியான வாழ்க்கை காரணமாக கடந்த காலத்தை மறந்து விட்டவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு, முன்னொரு காலத்தில் ஏழைகளாக கஷ்டப் பட்டவர்கள், நிறையப் பணம் கைக்கு வந்ததும் திமிராக நடந்து கொள்வார்கள். ஏழைகளை மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சமூக அமைப்பு அப்படித் தான் இருக்கிறது.

Friday, May 22, 2020

கிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல! இரண்டையும் ஒப்பிட முடியாது!!


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதி ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் உரையின் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் பகைமை கொள்ளாமல் நட்புணர்வுடன் நடந்து கொள்வதே சிறுபான்மைத் தமிழருக்கும் பயன்தரத்தக்கது என்று கூறி இருக்கிறார்.(வீடியோ லிங்க் கீழே உள்ளது.)

இது பல தமிழீழவாதிகளின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது. கவனிக்கவும்: நான் இங்கே அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று குறிப்பிடவில்லை. காரணம், எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் தமிழீழம் கோருவதில்லை. ஈழப்போருக்கு முன்னரும் பின்னரும் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்த்தேசியவாதிகளும் இருந்து வருகின்றனர். ஆகவே இது இன்றைக்கும் தமிழீழம் சாத்தியம் என்று தீவிரமாக நம்பும் அரசியல் பிரிவினருக்கானது. அவர்களது பிடிவாதக் குணம், தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளாது. "கிழக்கு தீமோர் தனிநாடு காணலாம், நாங்கள் தமிழீழம் கோரினால் தவறா?" என்று துள்ளிக் குதிக்கின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே தமிழீழவாதிகளும், நாடுகடந்த தமிழீழ அரசும் தான் முன்பு ஒரு காலத்தில் கிழக்கு தீமோர் சுதந்திர நாடானதை பற்றி சொல்லிப் புளுகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இதில் எதுவும் தமிழீழத்திற்கு பொருந்தாது: 
  • 1. காலனிய நீக்கம் 
  • 2. கம்யூனிச எதிர்ப்பு 
  • 3. பன்மொழிக் கலாச்சாரம்

இவற்றை தனித்தனியாக பார்ப்போம்:

1. கிழக்கு தீமோர் ஏற்கனவே சுமார் ஒரு வருட காலம் (1975-1976) தனியான சுதந்திர நாடாக இருந்தது. அதற்குக் காரணம் அது ஒரு போர்த்துகேய காலனி. 1974 ம் ஆண்டு போர்த்துக்கலில் ஒரு கம்யூனிச புரட்சி நடந்ததன் விளைவாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த போர்த்துக்கேய காலனிகள் சுதந்திரம் பெற்றன. கிழக்கு தீமோரும் அவற்றில் ஒன்று. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐ.நா. சபை காலனிய நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தது. அதுவரை காலமும் ஐரோப்பிய காலனிகளாக இருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த நாடுகளின் பட்டியலில் கிழக்கு தீமோர் இருந்தது. ஆனால் தமிழீழம் இருக்கவில்லை.

2. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன:

ஒன்று: காலனிய காலகட்டத்திற்கு பின்னர், அந்தப் பிரதேசத்தில் இருந்த தீவுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என ஜகார்த்தா உரிமை கோரியது. காளிமந்தான் தீவின் வட பகுதி மலேசியாவாக உள்ளது. அது கூட தனக்கே சொந்தம் என்று இந்தோனேசியா உரிமை கோருகின்றது. ஆனால் அங்கு படையெடுப்பை நடத்தினால் மலேசியாவுடன் போர் மூளும் என்பதால் பேசாமல் இருக்கிறது.

இரண்டு: கிழக்கு தீமோரில் நிறைய எண்ணை வளம் உள்ளது. அவற்றை இந்தோனேசியா தானே கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம். பிற்காலத்தில் அதே காரணத்திற்காக தான் சர்வதேச சமூகம் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை ஆதரித்தது என்பது வேடிக்கையானது. இன்று கிழக்கு தீமோர் எண்ணை வளத்தை அவுஸ்திரேலியா மேற்பார்வை செய்து வருகின்றது.

மூன்று: கிழக்கு தீமோர் போர்த்துகேய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும் அங்கு அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஆயுதமேந்திய Fretilin (The Revolutionary Front for an Independent East Timor) இயக்கம் அரசைக் கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்தது. அதிலென்ன பிரச்சினை? Fretilin கிழக்கு தீமோரை ஒரு சோஷலிச நாடாக மாற்ற விரும்பியது. அது மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றியது. இதைக் காரணமாகக் காட்டி, அதாவது கம்யூனிச அபாயத்தை தடுப்பதாக சொல்லித் தான் இந்தோனேசியா படையெடுத்து ஆக்கிரமித்தது. அதற்கு அமெரிக்கா ஆசீர்வாதம் வழங்கியது. எங்கெல்லாம் கம்யூனிசம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்வது தானே அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை?

3. கிழக்கு தீமோர் தனியொரு மொழியை பேசும் மக்களின் தேசியம் அல்ல. அது ஒரு பன்மொழித் தேசியம். அங்கே பதினைந்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பது போர்த்துக்கேய காலனிய வரலாறு மட்டும் தான். நாங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அல்லது பொது மொழியாக பேசுவது மாதிரி, கிழக்கு தீமோர் பிரஜைகள் போர்த்துக்கேய மொழியை பொது மொழியாக கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், மேற்கு தீமோர் இன்றைக்கும் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக தொடர்கின்றது. அங்கேயும் கிழக்கு தீமோரில் உள்ள அதே மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறக் காரணமாக இருந்ததாக இங்கு குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று தமிழீழத்திற்கு பொருந்துகிறதா? அது சரி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். என்ன தான் தமிழீழம், தமிழ்த் தேசியம் பேசினாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பது தான் அவர்களது பிரதானமான அரசியல் கொள்கை ஆகும்.

அதே தான் முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதியான, நோபல் பரிசு பெற்ற ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் கொள்கையும். அவர் முன்னொரு காலத்தில் மார்க்சிய Fretilin இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர். வெளிப்படையாகவே மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால் தான் நோபல் பரிசையும் வென்றார். ஆகவே, ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும் என்பதைப் போல, நாடுகடந்த தமிழீழ அரசும், ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=pk1yJxfJECg&fbclid=IwAR2DA1hfxh-yUHzvTOKJeiomYTNFulLLFgf1pswwwIgCDhl_dYjxDVZ3J_M

Thursday, May 21, 2020

முள்ளிவாய்க்காலில் மறைந்த தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்!


தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்! 
பதினோராவது ஆண்டு நினைவஞ்சலி!

2009, மே 17 முள்ளிவாய்க்கால் அருகில் சரணடைந்த ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமார் இராணுவத்தால் கொல்லப் பட்டாரா? அல்லது இன்னமும் உயிரோடு இருக்கிறாரா? எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் நேரம், ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமாருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது.

பல்வேறு பட்ட இடங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், போரின் முடிவில் பாலகுமார் தனது மகன் சூரியதீபனுடன் இராணுவத்திடம் சரணடைந்த சில நாட்களில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு ஒரு காரணம், போரின் கடைசி நாளான மே 17 அன்று சரணடைந்த அத்தனை பேரும் புலிகள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்றே இலங்கை இராணுவம் கருதியது. துரதிர்ஷ்டவசமாக தோழர் பாலகுமாரும் அந்தப் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டமை ஒரு வருத்தத்திற்குரிய விடயம்.

1987 ம் ஆண்டு, நான் தோழர் பாலகுமாரை கடைசித் தடவையாக சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்த சந்திப்பு முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான முல்லைத்தீவில் நடந்தது என்பது மனத்தைக் கனமாக்கும் நினைவு. அப்போது இந்திய - இலங்கை ஒப்பந்தம் முடிந்து வடக்கில் இந்திய இராணும் நிலைகொண்டிருந்தது. ஒப்பந்த நிபந்தனைகளின் படி, முதலாவதாக ஈரோஸ் தான் தன்னிடம் இருந்த ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது. (அந்தக் காலகட்டத்தில் புலிகள், ஈரோஸ் மட்டும் தான் களத்தில் ஆயுதங்களோடு இருந்த இயக்கங்கள்.) அப்போது, "இந்தியா கொடுத்த ஆயுதங்களை இந்தியாவிடமே திருப்பிக் கொடுக்கிறோம்" என்று நகைச்சுவையாக குறிப்பிடுவதுண்டு.

ஈரோஸ் இயக்கம் இராணுவ பிரிவை விட அரசியல் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படியால், அதன் பல்வேறு வெகுஜன அமைப்புகள் வடக்கில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. "ஈரோஸ் இராணுவம்" என்றழைக்கப் பட்ட இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் மட்டுமே இரகசியமாக இயங்கி வந்தனர். அவர்களும் ஆயுத ஒப்படைப்புக்குப் பின்னர் தத்தமது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். அவ்வாறு முல்லைத்தீவில் பெற்றோரின் வீடுகளில் தங்கியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர்.

சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் முன்னாள் போராளிகளை கைது செய்ய வேண்டிய காரணம் என்னவென்று இந்திய இராணுவ தரப்பால் தெரிவிக்கப் படவில்லை. அந்த நேரம் சமாதானம் நிலவினாலும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் சில உரசல்கள் இருந்தன. அநேகமாக புலிகளை எச்சரிக்கும் வகையில் தான் அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்கப் பட்டது.

அன்று அந்த முன்னாள் ஈரோஸ் போராளிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தோழர் பாலகுமார் முல்லைத்தீவுக்கு வந்திருந்தார். தற்செயலாக அன்றைய தினம் நானும் தனிப்பட்ட காரணங்களுக்காக வன்னியில் இருந்த படியால், பேச்சுவார்த்தைக் குழுவில் என்னையும் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு தான் தோழர் பாலகுமாருடன் முல்லைத்தீவில் ஒரு நாள் முழுவதும் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் என்னை ஒரு நிகழ்வில் சந்தித்த தோழர் பாலகுமார், அப்போதும் நினைவில் வைத்திருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையிலேயே அது எனக்கு ஆச்சரியம் தான். தோழரின் நினைவாற்றல் பற்றிப் பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். என்னுடன் கதைத்த சந்தர்ப்பம் பற்றி மட்டுமல்லாது, ஒரு காலத்தில் அவரது செயலாளராக இருந்த எனது மைத்துனர் பற்றிய நினைவுகளையும் இரை மீட்டார்.

தோழர் பாலகுமார், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற எந்த தலைக்கனமும் இல்லாத, சக தோழராக நட்புடன் பழகக் கூடிய எளிமையான மனிதர். எல்லா பிரச்சினைக்கும், பொதுவுடமைக் கண்ணோட்டத்தில் தர்க்க ரீதியாக பதிலளிப்பார். நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டு, அவரையும் விமர்சிப்போம். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைக் கூறுவார். அது எமக்கு நியாயமாகத் தோன்றும். சில நேரம் இன்று நான் எழுதும் கட்டுரைகளிலும் தோழர் பாலகுமாரின் தர்க்கவாதம் பிரதிபலிக்கலாம். எனது சிந்தனையை மாற்றிய மிகப்பெரிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

அன்று முல்லைத்தீவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தோழரின் வீட்டில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அரசியல், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பல கதைகள் பேசிய நினைவுகள் இன்னமும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அப்படியான ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த துயர் தரத் தக்கது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் கொழும்புக்கு சென்று தங்கி விட்டேன். சில வருடங்களில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து விட்டேன். இருபதாண்டு காலப் போர் எங்களை பிரித்து வைத்தது. திரும்பவும் அவரை ஒரு போர்க்கால நிழற் படத்தில் மட்டுமே பார்ப்பேன் என நினைத்திருக்கவில்லை.

போரின் இறுதிக் காலத்தில் தோழர் பாலகுமார் மனமுடைந்து போயிருந்ததாக அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது எப்படி முடியப் போகிறது என்பதை அனுமானித்திருந்தார். எழுபதுகளில் அவர் நம்பிக்கையோடு தொடங்கிய ஈழப் புரட்சி இன்னும் வரவில்லை என்பது ஒரு சிலருக்கு ஏளனமாக இருக்கலாம். இது வரலாற்று இயங்கியலை மறுக்கும் பார்வை. ஈழப்புரட்சியின் வரலாற்றில் தோழர் பாலகுமாரின் பங்களிப்பு குறுகிய காலம் தான். ஆனால் அவர் விதைத்த கருத்துக்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றன. அவரால் வளர்க்கப் பட்ட தோழர்கள் இன்று பல்வேறு அரசியல் பாதைகளில் திசை மாறி சென்று விட்டார்கள். இருப்பினும் பாலகுமார் இப்போதும் எல்லோராலும் மதிக்கப்படும் மாமனிதர் தான்.

ஈழவர் தேசிய இனத்தின் ஈழப்புரட்சிக்கான பாதை அமைத்து வழிகாட்டிய தோழர் பாலகுமாருக்கு எனது செவ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலையரசன்
21-05-2020

Tuesday, May 19, 2020

பிரித்தானியாவில் நடந்த "கேப்டன் ஸ்விங் புரட்சி"!


மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சிப்பவர்கள் பலருண்டு. "கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டு நூற்றைம்பது ஆண்டுகள் ஆகியும் ஐரோப்பாவில் புரட்சி நடக்கவில்லை தானே?" என்று ஒரு சிலர் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு கேள்வி கேட்பார்கள். இது அவர்களது அறியாமை காரணமாக உருவான தப்பெண்ணம்.


 இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் 1830 ம் ஆண்டு ஆங்கிலேய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டனர். இது கேப்டன் ஸ்விங் புரட்சி (Captain Swing Riots) என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் பெயர் வரக் காரணம் உள்ளது. தென் இங்கிலாந்தில் முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கைக் கடிதங்கள் யாவும் கேப்டன் ஸ்விங் என்ற பெயரால் ஒப்பமிடப் பட்டிருந்தன. அது புரட்சியாளர்கள் உருவாக்கிய ஒரு கற்பனைப் பாத்திரம். சொத்துடமை வர்க்கத்தினரின் இயந்திரங்கள், வீடுகளை எரிக்கப் போவதாக அந்தக் கடிதங்களில் குறிப்பிடப் பட்டிருந்தன. அதே மாதிரி பல இடங்களில் எரித்து சேதப் படுத்தப் பட்டன.

கேப்டன் ஸ்விங் புரட்சியானது பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சியின் எதிர்விளைவு எனலாம். தொழிற்புரட்சிக் காலத்தில் முதலாளிகள் புதிய இயந்திரங்களை உருவாக்கி தொழிற்துறைகளில் ஈடுபடுத்தி வந்தனர். அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். குறிப்பாக வயல்களில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலிகள் செய்து வந்த அதே வேலையை ஒரு இயந்திரம் செய்தது. இதனால் நாட்டுப்புறங்களில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வேலையிழந்தவர்கள் மட்டுமல்லாது, வேலை செய்தவர்கள் கூட வறுமையில் வாடினார்கள். காரணம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலி மிகவும் குறைவு.

இதனால் வெகுண்டெழுந்த உழைக்கும் மக்கள் நவீன கண்டுபிடிப்புகளான விவசாய இயந்திரங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அது மட்டுமல்ல பண்ணையார்கள், நிலவுடமையாளர்களின் வீடுகளும், சொத்துக்களும் எரிக்கப் பட்டன. அந்த நேரத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், என்று அயலில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகள் நடந்து விட்டிருந்தன. பிரித்தானியாவிலும் அதே பாணியில் புரட்சி நடக்கப் போகிறது என்று ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டனில் பாராளுமன்றம் இருந்தாலும், தேர்தல்கள் நடப்பதில்லை. அது மக்களுக்கு கடமைப்படாத ஒரு சர்வாதிகார அரசு. அப்போது ஆட்சியில் இருந்த டொரி கட்சியினர் (தற்கால கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னோடி) வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சார்பாக நடந்து கொண்டனர். அவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கிளர்ச்சியை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஆயிரக் கணக்கான புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். குறைந்தது இருபது பேருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அன்றைய புரட்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஏழைகள், அன்று சிறைக் காலனியாக இருந்த அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப் பட்டனர்.

இருப்பினும் கேப்டன் ஸ்விங் புரட்சி சில வெற்றிகளையும் பெற்றுத் தந்தது. விவசாய கூலித் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இயந்திரங்களின் பாவனை தடுக்கப் பட்டது. மேலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தடைச்சட்டம் நீக்கப் பட்டது. போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை. அன்று பிரிட்டிஷ் கூலித் தொழிலாளர்கள் போராடி வாங்கித் தந்த உரிமைகளை தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோம். இங்கிலாந்தில் நடந்த கேப்டன் ஸ்விங் புரட்சி குறித்து கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Monday, May 18, 2020

முள்ளிவாய்க்கால் டயரிக் குறிப்புகள்

2009 ம் ஆண்டு, இறுதியுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம், புலம்பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உதவியவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்த இடதுசாரிகள் தான். இப்போதும் இடதுசாரிகள் மட்டுமே இலங்கை இனப்படுகொலை பற்றி பேசுகிறார்கள். இதுவரை காலமும், இடதுசாரி ஊடகங்களில் மட்டுமே விரிவான தகவல்கள் வந்துள்ளன. 

இருப்பினும், நன்றியுணர்வில்லாத போலித் தமிழ்த்தேசியவாதிகள், எப்போது பார்த்தாலும் இடதுசாரிகளை திட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களை கால் தூசுக்கும் மதிக்காத வலதுசாரிகளுக்கு செம்பு தூக்குவார்கள்.  புலம்பெயர் நாடுகளில் உள்ள வலதுசாரிகள் அப்போதும் இப்போதும் தமிழரைக்  கண்டுகொள்வதில்லை. 

ஒரு தடவை, பிரித்தானியாவின் பிரபல வலதுசாரி பத்திரிகையான Sun, லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞர் பேர்கர் சாப்பிட்ட படத்தை போட்டு அவமானப் படுத்தியது. அதே பிரித்தானியாவில் வெளிவரும் அத்தனை வலதுசாரி ஊடகங்களும், இறுதிப்போரில் இலங்கை அரசை வெளிப்படையாக ஆதரித்து வந்தன. 

டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒரு நெடுஞ்சாலையை மறித்து போராடினார்கள். இதனால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்து செய்தி வெளியிட்ட, அந்நாட்டு வலதுசாரி ஊடகங்கள் "தமிழர்களின் அடாவடித்தனம்" என்று எதிர்மறையாக குறிப்பிட்டன. 

நெதர்லாந்தில், டென் ஹாக் நகரில் உள்ள  பாராளுமன்ற முன்றலில் ஒரு சிலர் கூடாரம் அடித்து உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்த நாளே அங்கு வந்த பொலிஸ், "இங்கிருந்து மரியாதையாக கலைந்து செல்லாவிட்டால், கைது செய்து அடைத்து வைப்போம். பிற்காலத்தில், உங்களது தொழில், படிப்பு பாதிக்கப்படும்..." என்று மிரட்டியது. பிறகென்ன? தமது எதிர்காலத்தை பாழாக்க விரும்பாத இளைஞர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

நெதர்லாந்திலும் வலதுசாரி ஊடகங்கள் எதுவும் இறுதிப்போரை கவனத்தில் எடுக்கவில்லை. அதிக பட்சம், பத்திரிகைகளில் ஒரு சிறு பெட்டிச்செய்தி. தொலைக்காட்சியில் பத்து செக்கன்ட் செய்தி. இவ்வளவு தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம். ஒரு தடவை, தமிழர்கள் ஒரு பிரபல டச்சு தொலைக்காட்சியான RTL 4 நிறுவனத்தின் அலுவலகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைக் கூட அன்றைய தினம் செய்தி அறிக்கையின் முடிவில் பத்து செக்கன்ட் மட்டுமே காண்பித்தார்கள்.

- Kalaiyarasan 
18-05-2020

Friday, May 15, 2020

மியான்மர் காரென் தேசிய இன விடுதலைப் போராட்டம்

தமிழீழம் சாத்தியமில்லை என்று சொன்னால் பலர் இப்போது சண்டைக்கு வருவார்கள். அவர்கள் உலக நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். உலகில் பிற நாடுகளிலும் தனிநாட்டுக்கான விடுதலைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து சமஷ்டி உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றன. அவற்றில் ஒன்று மியான்மரில் காரென் தனிநாடு கோரும் காரென் தேசிய விடுதலை இராணுவம்.

அவுஸ்திரேலிய எழுத்தாளர் Phil Thornton எழுதிய Restless Souls என்ற நூல் பற்றிய அறிமுகம். இப்படியான நூல்கள் மிகவும் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. நானும் இதை ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தான் வாங்கினேன். இந்த நூலில் மியான்மரில் தனிநாடு கோரிப் போராடும் காரென் இன மக்களின் போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை வாசித்து அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த எழுத்தாளர் தாய்லாந்தில் உள்ள மியான்மர் எல்லோயோர நகரமான Mae Sot எனும் இடத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து, அங்கு வாழ்ந்த காரென் அகதிகள், போராளிகளுடன் பழகிய அனுபவக் கதைகளை இதில் பகிர்ந்து கொள்கிறார்.

எந்தப் போரும் புனிதமானவை அல்ல. பர்மிய இராணுவம் காரென் பிரதேசத்தில் நடத்திய வெறியாட்டம் இந்த நூலில் விபரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகள் தமக்கு நடந்த கொடுமைகளை விபரிக்கிறார்கள். வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவது, கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, இவற்றில் பர்மிய இராணுவமும் சளைத்தது அல்ல. சில இடங்களில் மனித மாமிசம் உண்ட கதைகளும் வதந்திகளாக உலாவுகின்றன. மியான்மர் இராணுவம் எத்தகைய கொடூரச் செயலுக்கும் தயங்குவதில்லை.

மியான்மரில் நடக்கும் போர் அவலங்களில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த காரென் அகதிகளை தாய்லாந்து அரசும் பாராமுகமாக நடத்துகிறது. தாய்லாந்து மக்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப் படுகின்றனர். இருப்பினும், தாய்லாந்துக்குள் அமைந்துள்ள காரென் அகதி முகாம்களையும், KNLA இயக்க அலுவலகங்களையும் தாய்லாந்து அரசு பொறுத்துக் கொள்கிறது. அதாவது, மியான்மருடன் வர்த்தக தொடர்புகளை புதுப்பிக்கும் வரை அழுத்தம் கொடுப்பதற்கு காரென் மக்களை பயன்படுத்திக் கொள்கிறது.

தாய்லாந்து பணக்காரர்கள் மியான்மர் அகதிகளை மலிவுவிலைக் கூலிகளாக நடத்துகின்றனர். சில இடங்களில் கூலியே கொடுப்பதில்லை. தாய்லாந்து தொழில் வழங்குனர் வாக்குறுதி அளித்த கூலியை குறைத்துக் கொடுப்பதும், சிலநேரம் கூலியே கொடுக்காமல் ஏமாற்றுவதும் சர்வசாதாரணம். வேலை செய்த கூலியை கேட்ட பலர் ஆள் வைத்து கொல்லப் பட்டுள்ளனர். தாய்லாந்தில் மியான்மர் அகதிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

மியான்மர் நாட்டில் பர்மிய மொழி பேசுவோர் எழுபது சதவீத பெரும்பான்மையை கொண்டுள்ளனர். அவர்களைத் தவிர பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் தமக்குரிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனமும் தனக்கென தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்துள்ளது. இந்த நூல் காரென் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி மட்டுமே அதிக கவனம் குவிக்கிறது.

காரென் இனத்தவரின் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றிருந்தது. அதற்குக் காரணம் காரென் இனத்தவரில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பர்மா ஜப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில், காரென் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து பர்மாவை விடுதலை செய்ய போராடியது. அப்போது யுத்தம் முடிந்த பின்னர் காரென் தேசத்திற்கு சுதந்திரம் தருவதாக பிரிட்டிஷார் வாக்குறுதி அளித்தனர். ஆனால் போர் முடிந்த பின்னர் ஏமாற்றி விட்டனர். பர்மிய ஆட்சியாளர்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் வெளியேறி விட்டனர்.

அன்று பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை மறக்க வைப்பதற்காக, பிற்காலத்தில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் காரென் விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கின. பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த கூலிப் படையினர் காரென் தேசிய விடுதலை இராணுவத்திற்கு (KNLA) பயிற்சி வழங்கினார்கள். இந்த நூலை எழுதிய எழுத்தாளர் காரென் தளபதிகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு கூலிப்படையினரையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

காரென் பிரதேசத்தில் உள்ள கூலிப்படையினரில் ஒரு சிலர் வியட்நாம் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ சாகசம் செய்வதற்காக வந்தவர்கள். வேறு சிலர் கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்கள். மேலும் காரென் மக்கள் மேற்குலக சார்பானவர்களாக வைத்திருப்பதற்கு இது போன்ற தொடர்புகள் உதவுகின்றன. ஏராளமான மேற்கத்திய NGO க்கள் காரென் அகதிகளுக்கு உதவுவதற்கு வந்து முகாமிட்டுள்ளன. அவற்றில் சில KNLA க்கு ஆயுதங்கள் கடத்தி வருவதும் இரகசியம் அல்ல.

பல தசாப்த காலமாக KNLA கட்டுப்பாட்டில் இருந்த காரென் பிரதேசத்தை பர்மிய இராணுவம் கைப்பற்ற முடியவில்லை. அரச படைகள் அடுத்தடுத்து எடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின. இறுதியில் காரென் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே வெற்றி பெற முடிந்தது.

காரென் இனத்தவரில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்தாலும், கணிசமான அளவினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பான்மை பர்மியர்களும் பௌத்தர்கள் என்பதால், மியான்மர் அரசு காரென் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. ஒரு சில பௌத்த காரென் இனத்தவர் காட்டிக் கொடுத்த படியால் தான் மியான்மர் இராணுவம் படையெடுத்து, KNLA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது.

காரென் பிரதேசம் முழுவதையும் மியான்மர் இராணுவம் கைப்பற்றிய பின்னர், DKBA என்ற துணைப்படையை உருவாக்கியது. காரென் ஜனநாயக பௌத்த இராணுவம் என்ற அந்த துணைப்படையினர் இன்று வரையில் மியான்மர் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர். KNLA க்கும், DKBA க்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிலநேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் KNLA இலும், இன்னொருவர் DKBA இலும் இருப்பார்கள். யுத்தம் நடக்கும் போது சகோதரர்கள் எதிரெதிர் அணியில் நின்று சுட வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்துள்ளன.

இந்த நூல் எழுதப் பட்ட 2004 ம் ஆண்டளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. (இந்த நூல் 2006 ம் ஆண்டு தாய்லாந்தில் வெளியிடப் பட்டுள்ளது.) அது பற்றிய விபரங்களும் வருகின்றன. அந்த நேரம் மியான்மர் ஜனநாயக வழிக்கு திரும்பும் அறிகுறிகள் தெரிந்த படியால், மேற்கத்திய நாடுகளும், NGO க்களும் மியான்மர் அரசை திருப்திப்படுத்துவதற்காக காரென் விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டன.

NGO காரர்களின் இரட்டை வேடம் குறித்து காரென் மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து உள்ளூர் மனித உரிமைகள் நிறுவன ஆர்வலர் ஒருவர் நூலாசிரியருக்கு பின்வருமாறு கூறுகிறார்: "அவர்களுக்கு தேவையானதெல்லாம் எங்களது அவலக் கதைகள் தான். அவற்றை அறிக்கைகளாக எழுதி தமக்கென ஒதுக்கிய நிதியை செலவிடுகிறார்கள். ஆடம்பர ஹோட்டல்களில், உணவுவிடுதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் எமக்கு உதவ வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் போகப் போக இவர்களது சுயரூபம் தெரிந்து விட்டது." அதே போன்று வருடமொருமுறை தலைகாட்டும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்க்கள சாகசக் காட்சிகளை நேரில் காண முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஒரு சிலர் போலி மோதல் காட்சிகளை, போலி மரணங்களை படமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்கா குறிப்பிட்ட அளவு காரென் அகதிகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. தாய்லாந்தில் உள்ள காரென் அகதிகள் UNHCR மூலம் அமெரிக்க தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தனர். பெரும்பாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போன்ற அறிவுஜீவிகளை அமெரிக்கா அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துக் கொண்டது. இது குறித்து காரென் அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். காரென் பிரதேசத்தில் மருத்துவராக வேலை செய்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று ரெஸ்டாரன்ட்களில் கோப்பை கழுவி பிழைக்கிறார்கள். அவர்களது தாயகத்தில் காரென் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

நூலின் இறுதிப் பகுதியில் ஐ.நா.வில் வேலை செய்யும் இராஜதந்திரி உண்மையை போட்டுடைக்கிறார். எக்காரணம் கொண்டும் மியான்மர் பல துண்டுகளாக உடைவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. மியான்மர் ஒரே நாடாக இருந்தால் தொடர்புகளை பேணுவது இலகு என நினைக்கிறார்கள். காரென் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப் பட்டுள்ளனர். அன்று பிரித்தனியா, இன்று அமெரிக்கா. இரண்டு தடவையும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் காரென் மக்களின் முதுகில் குத்தியுள்ளன. காரென் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து தமிழ் மக்களும் பாடம் படிக்க வேண்டும்.

Thursday, May 14, 2020

புலிப் போராளிகள் ஏழ்மையில் வாழ்ந்த ஓலைக் கொட்டில் வீடுகள்

(படத்திற்கு நன்றி: யோ. புரட்சி)
ஈழப்போர் முடிந்த பின்னர் கவனிக்காமல் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் அவல நிலை குறித்து பலரும் பலரும் கவலை தெரிவித்து விட்டனர். இது குறித்து வட இலங்கையில் வாழும் சமூக சேவை ஆர்வலரான யோ.புரட்சி தனது பேஸ்புக் சுவரில் பகிர்ந்த தகவல்:
//ஒரு பிள்ளை பெண் மாவீரர், ஆண்பிள்ளை கரும்புலி மாவீரர். தனித்து வாழும் விதவைத் தாயார். நீர் வார்த்த குடும்பம் கிணறுமின்றிய நிலை.//

(இது தொடர்பாக அவர் சில படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறி அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

 ******

உங்களில் பலர் அறிந்திராத புலிப் போராளிகள் பிறந்து வளர்ந்த வீடுகள் இப்படித் தான் இருக்கும். எந்த வசதியுமற்ற ஓலைக் குடிசைகள். அதாவது, தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் இன்னொரு இனமான ஏழைகள் வாழும் வீடுகள். அவர்களது அவலம் எப்போதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ் இன உணர்வு அரசியல் பேசும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

இவர்களது தியாகத்தை காட்டி வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள், தாம் "உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டதாக" பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். "உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்..." என்று அடித்த கொள்ளையை நியாயப் படுத்தும் குட்டி பூர்ஷுவா கும்பல் ஒன்று இப்போதும் உண்டு. முதலாளித்துவத்தை ஆராதிக்கும் அந்த வெட்கங் கெட்ட பிழைப்புவாத கும்பல் இலங்கையிலும் உண்டு. தமது பூர்ஷுவா வர்க்க நலனை தமிழ்த் தேசியம் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

"உழைத்து முன்னேறலாம் என்றால் எதற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு உழைக்கும் ஏழைகள் இன்னமும் இது போன்ற குடிசைகளில் வாழ்கிறார்கள்?" என்று கேட்டால் பதில் வராது. அது "கர்ம வினைப் பயன்... கடவுள் அப்படி சிலரை படைத்து விட்டார்..." என்று மதத்தை இழுத்து போதனை செய்வார்கள்.

முதலாளித்துவ சுரண்டல் பற்றிய பேச்செடுத்தால், "கம்யூனிசம் பேசாதே!" என்று வாயடைக்க வைப்பார்கள். இவர்கள் பிரச்சாரம் செய்வது மாதிரி கம்யூனிசம் இன்னும் காலாவதியாகவில்லை. அது இன்னமும் ஈழத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது. உழைத்து உருக்குலைந்த ஏழைத் தமிழ் மக்கள் மனத்தில் இருக்கிறது. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்.

இந்த ஏழைகள் ஈழப் போருக்கு முன்னர் எப்படி வாழ்ந்தனரோ இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். அவர்கள் உழைத்தும் முன்னேற முடியாத காரணத்தால் தான் புலிப் போராளிகளாக மாறி மாவீரர்கள் ஆனார்கள். தமிழீழம் என்ற சமநீதி கொண்ட இன்னொரு உலகம் சாத்தியமே என்று கனவு கண்டார்கள்.

அவர்கள் கண்ட தமிழீழக் கனவு இன்னொரு தேசியம் அல்ல, சோஷலிசம். பாவம், தமிழ் தேசிய அடையாளத்தின் பின்னால் தம்மை மறைத்துக் கொள்ளும் தமிழ் பூர்ஷுவாக்கள் எப்போதும் போன்று முதலாளிகளுக்கே அடிவருடப் போகிறார்கள் என்ற உண்மை அந்த அப்பாவிப் போராளிகளுக்கு தெரியாது. "சுதந்திரத்" தமிழீழத்திலும் மீண்டும் தாம் ஏழைகளாக ஒடுக்கப் படுவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம், புலித் தேசியம் பேசும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, ஏழைகள் எனும் இன்னோர் இனம் தமக்குள் ஒடுக்கப் படுவது தெரியாது. தெரிந்தாலும் எந்த உணர்வும் இன்றி உதாசீனப் படுத்துவார்கள். "தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் பாட்டாளி வர்க்கமா? அப்படி எதுவும் கிடையவே கிடையாது..." என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.

"இந்த ஏழைகள் தான் எமக்காக போராடினார்கள்." என்றால், "ஓ அவர்கள் தமிழர்கள்." என்று இன முத்திரை குத்தி மறைக்கப் பார்ப்பார்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற 99% போராளிகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராட சென்றதற்கு காரணம் வர்க்க உணர்வு என்ற உண்மையை மறைப்பார்கள். அதற்கு இன உணர்வு என்ற சாயம் பூசி மகிழ்வார்கள். இன முரண்பாடுகள் அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் என்பதை புரியும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் அறிவும் போதாது.

"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். 

மடிப்பு குலையாத சட்டையுடன் உத்தியோகம் பார்க்கும் குட்டி பூர்ஷுவா தமிழ்த் தேசியர்கள், தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டு, மீண்டும் இன விடுதலையின் பெயரால் அப்பாவி ஏழைகளை பலி கொடுக்கலாமா என்று பார்க்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்பினால் கோமாளித்தனமாக இருக்கும்.

"குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன். குனியக் குனியக் குட்டுகிறவனும் மடையன்." என்றொரு பழமொழி உள்ளது. இந்த ஏழைத் தமிழர்கள் எப்போதுமே பூர்ஷுவா வர்க்க நலன் காக்கும் வேள்விக்கு பலி கொடுப்பதற்காக வளர்க்கப் படும் ஆடுகளாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் ஆறறிவுள்ள உழைக்கும் வர்க்க மனிதர்கள். அடுத்த கட்ட ஆயுதப் போராட்டம் இன விடுதலைக்கானது அல்ல. அது வர்க்க விடுதலைக்கானது.


- கலையரசன்
 14.05.2020

Tuesday, May 05, 2020

மொசாம்பிக்கில் திடீரென முளைத்த ஐ.எஸ். இயக்கம்! அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா?


மொசாம்பிக் வட பகுதியில் உள்ள Cabo Delagado மாகாணத்தில் ஐ.எஸ். ஜிகாதிக் குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படுகொலை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்திருந்த போதிலும், இப்போது தான் வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக, மொசாம்பிக்கின் வட பகுதியில் "மத்திய ஆப்பிரிக்க இஸ்லாமிய தேசம்" (Islamic State Central Africa Province (ISCAP)) என்ற பெயரிலான ஒரு ஜிகாதி இயக்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. மார்ச் மாதம் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது நடந்த சண்டையில் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு விழுத்தியதாக வீடியோ வெளியிட்டனர்.

அந்தப் பிரதேசங்களை ஜிகாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், அங்கிருந்த வங்கிக் கிளைகளை கொள்ளையடித்து, அரச கட்டிடங்களுக்கு தீவைத்தனர். மதுபானக் கடைகளை மூடி, அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் பின்பற்றப் பட வேண்டும் என உத்தரவிட்டனர். ஐ.எஸ். சின்னம் பொறித்த கருப்பு- வெள்ளை கொடிகளை பறக்க விட்டனர். அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்த போதிலும், மக்கள் மத்தியில் ஜிகாதி தீவிரவாதிகளுக்கான ஆதரவு மிக மிகக் குறைவு. அதனால் தான் தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர்.

மொசாம்பிக்கில் எவ்வாறு இந்த ஐ.எஸ். ஜிகாதிக் குழு திடீரென முளைத்தது? குறுகிய காலத்தில் அரச படைகளை எதிர்த்துப் போரிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது எப்படி? அதுவும் உள்நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமானது எப்படி?

மொசாம்பிக்கில் திடீர் ஜிகாதிகள் உருவாகக் காரணம் என்ன? இவர்களை திரை மறைவில் இருந்து இயக்கும் உலக நாடுகள் எவை? இஸ்ரேல்? அமெரிக்கா? ஏனெனில் இந்த யுத்தத்திற்கு பின்னால் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மறைந்துள்ளது. அண்மையில் தான் Cabo Delagado மாகாணத்தில் நிறைய எரிவாயு வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐ.எஸ். இயக்கம் சிரியாவில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டாலும், அது இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியாவில் ஐ.எஸ். இயங்கி வருகின்றது. ஆப்பிரிக்காவில் அண்மையில் பல நாடுகளிலும் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியிருந்தது. மேற்கத்திய நாடுகள் அதைப் பற்றி எந்தக் கவலையுமற்று காணப் படுகின்றன.