Showing posts with label மேட்டுக்குடி. Show all posts
Showing posts with label மேட்டுக்குடி. Show all posts

Friday, March 18, 2016

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். "சாகாள்" என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், வர்க்க வெறுப்பு பற்றி இன்னமும் யாரும் விமர்சிக்கவில்லை.

புலி எதிர்ப்பாளர்கள் வன்மையான கண்டனங்களையும், புலி ஆதரவாளர்கள் மென்மையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். அகரமுதல்வன் என்ற "புலி ஆதரவாளரே" ஒரு "புலி எதிர்ப்பு இலக்கியம்" எழுதும் அளவிற்கு, அவருக்கு நேர்ந்த மனப்பிறழ்வு என்ன? ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத் தமிழர்களை வெறுக்கும், மேட்டுக்குடி வர்க்கத் திமிரைத் தவிர இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? 

அகரமுதல்வனின் ஆபாசக் கதை தொடர்பாக பலர் கவனிக்கத் தவறுகின்ற விடயங்கள் இவை:


  • புலிப் போராளிகளை புனிதர்கள் என்று கொண்டாடும் அதே தமிழ்ச் சமூகம் தான், போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளை கைகழுவி விட்டது. ஒரு சிலருக்கு, அதாவது தமிழ் மேட்டுக்குடியினருக்கு புலிகள் எப்போதும் கருவிகள் தான். தேவை முடிந்த பின்னர் வீசி எறிந்து விட்டார்கள்.

  • புலிகள் இருந்த காலத்தில் அகரமுதல்வன் இப்படி ஒரு கதை எழுதத் துணிந்திருக்க மாட்டார். எழுதி இருந்தால், புலிகளின், அல்லது புலி ஆதரவாளர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி இருப்பார். அந்தக் காலங்களிலும் எத்தனையோ பெண் போராளிகள், சிறிலங்கா படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டனர்.

  • தமிழினி எழுதிய நூல் (ஒரு கூர்வாளின் நிழலில்), புலிகள் அமைப்பின் மீதும் பாரபட்சமற்ற விமர்சனம் வைத்துள்ளது. அதனை பல புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்பதால், தனிப்பட்ட முறையில் தமிழினிக்கு எதிராக பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே அகரமுதல்வன் இந்த அவதூறுக் கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதை மூலம், புலி ஆதரவாளர்கள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொள்வது அவரது நோக்கம்.

  • அகரமுதல்வன், ஒரு சிங்கள இராணுவவீரனின் இனவெறிக் கண்ணோட்டத்தில் அந்தக் கதையை எழுதி இருக்கிறார். இதன் மூலம் இனவெறி என்பது மொழி வேற்றுமை கடந்த உணர்வு என்பதை நிரூபித்துள்ளார். பெண் போராளிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் சிங்களப் படையினருக்கும், அகரமுதல்வனுக்கும் இருப்பதும் ஒரே (இன) வெறி உணர்வு தான். அது பெண்களை பாலியல் பண்டங்களாக மட்டும் பார்க்கின்றது. 

  • அகரமுதல்வனின் கதை முழுவதும், கேட்பதற்கு நாதியற்ற ஏழைப் பெண் போராளிகளை, சிங்களப் படையினருடன் சேர்ந்து புணரும் வக்கிரமான எழுத்துக்களை கொண்டுள்ளது. அதற்குக் காரணம்? அகரமுதல்வனின் அடிமனதில் உள்ள வர்க்கத் துவேஷம்

  • புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இராணுவக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். அகரமுதல்வன் மதிவதனியை மையமாக கொண்டு சாகாள் என்ற கதையை எழுதி இருக்க முடியுமா? இந்நேரம் புலி ஆதரவாளர்கள் வீடு தேடி வந்து அடித்திருப்பார்கள்.

  • அகரமுதல்வன் தமிழினிக்கு பதிலாக மதிவதனியை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்க மாட்டார். அதற்குக் காரணம், மதிவதனியின் ஊர்க்காரர்கள் தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். புலிகளுக்கு தாராளமாக நிதி வழங்கும் அளவிற்கு வசதியானவர்கள் பலர். மதிவதனி பற்றி கதை எழுதி இருந்தால், அகரமுதல்வன் மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பார்.

  • தமிழினி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வன்னியில் வாழ்ந்த வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். தமிழினி புலிகள் இயக்கத்தில் இருந்த காலங்களிலும், யுத்தம் முடிந்த பின்னரும் தனது உழைக்கும் வர்க்க அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்தவர். குரலற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். இதற்கு அவரது கூற்றுக்களே சாட்சியமாக உள்ளன. இறப்பதற்கு முன்னர் தனது முகநூலில் அத்தகைய கருத்துக்களை எழுதியுள்ளார். 

  • இன வாதிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், "தமிழர்கள் ஓர் இனம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனர்" என்று தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், உண்மையான ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ் இனத்திற்குள் உள்ள ஏழை பாட்டாளி வர்க்கத்தினர் தான் என்ற உண்மையை மறைப்பார்கள். 

  • யுத்தம் முடிந்த பின்னர், வன்னியில் எஞ்சிய அத்தனை மக்களும் சிறிலங்கா இராணுவத்தால் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அப்போது பலர், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து விட்டு, முகாமை விட்டு தப்பியோடினார்கள். அவர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள். சில புலி இயக்க தலைவர்கள், உறுப்பினர்களும் அதில் அடங்குவார்கள்.

  • பண வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களை சேர்ந்த போராளிகள் தான், சிறிலங்காப் படையினரின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையும் அனுபவித்தனர். அவர்களை சுட்டுக் கொன்றாலும் கேட்க ஆளிருக்கவில்லை. அப்படியான இழப்பதற்கு எதுவுமற்ற மக்களைத் தான் அகரமுதல்வன் தனது கதையில் குரூரமாக சித்திரவதை செய்து இரசிக்கிறார். ஏனென்றால் அவர்களுக்காக வாதாட யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியம்.

ஈழப்போரானது எத்தனையோ தடவைகள் வர்க்க வேற்றுமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. உண்மையில், இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தால், சமூகம் அதை மூடி மறைக்கும். அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி யாரோ ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். சிங்கள அரசு அதிகாரிகளிடம் சோரம் போன தமிழ் மேட்டுக்குடிப் பெண்களும் உண்டு. அவர்களைப் பற்றிய கதைகளை எழுதும் தைரியம், அகரமுதல்வன் போன்ற மேட்டுக்குடி அடிவருடிகளுக்கு கிடையாது.


Wednesday, July 30, 2014

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"


"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், பிபிசி தமிழோசை பல வருட காலமாகவே "சிறார் போராளிகள்" என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றது.

பல புலி ஆதரவாளர்கள் நினைத்துக் கொள்வதைப் போல, குழந்தைப் போராளிகள் அல்லது சிறார் போராளிகள் பற்றிய பிரச்சினையை முதலில் கையில் எடுத்துக் கொண்டது புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஏனெனில், ஆரம்ப கால புலி எதிர்ப்பாளர்கள் பலர், புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதபாணி இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அப்போது அவர்களும், 16 வயது சிறார் போராளிகளை சேர்த்துக் கொள்வதை தவறாகக் கருதாதவர்கள்.

உண்மையில், மேற்கத்திய மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. வும் தான், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றினார்கள். ஐ.நா. அதற்கென்று விசேட பிரிவை உருவாக்கியது. ராதிகா குமாரசாமி என்ற ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அறிவுஜீவியை அதற்குப் பொறுப்பாகப் போட்டது. தற்போதுள்ள நவநீதம் பிள்ளை, பிற்காலத்தில் ராதிகா குமாரசாமியின் இடத்திற்கு நியமிக்கப் பட்ட ஒருவர் தான்.

அமெரிக்க சி.ஐ.ஏ., தனது இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கைகளில், புலிகளின் சிறார் போராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தது. முரண்நகையாக, சி.ஐ.ஏ. அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய வளங்களில் பெரும்பகுதி புலிகளின் பிரச்சார சாதனங்களில் இருந்து பெறப் பட்டன.

உதாரணத்திற்கு, மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த சமாதிகளில், பிறந்த ஆண்டும், மரணமடைந்த ஆண்டும் பொறிக்கப் பட்டிருந்தன. சி.ஐ,ஏ, அதை சுட்டிக் காட்டி, மரணமடைந்த போராளிகளின் வயதைக் கணக்கிட்டு கூறி வந்தது. விழிப்புற்ற புலிகள் இயக்கம், அதற்குப் பின்னர் போராளிகளின் சமாதிகளில் பிறந்த வருடம் குறிப்பிடும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆயினும், ஐ.நா.வும், மனித உரிமை ஸ்தாபனங்களும், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கி, அதை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இறுதிப் போருக்கு முந்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகளிடம் இருந்து, சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்ற வாக்குறுதியை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தன. புலிகளும் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து நடப்பதைப் போன்று காட்டிக் கொண்டனர்.

தற்போதும் சிலர், புலிகளின் சிறார் போராளிகள் விடயத்தில் அதிக கவனம் குவிப்பதை, வெறுமனே புலி எதிர்ப்புவாதமாக குறுக்கிப் பார்க்க முடியாது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜனநாயகம். ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அமெரிக்க ஜனநாயகம் ஏற்றுமதி செய்யப் பட்டமை பலருக்குத் தெரிந்திருக்கும். அதே மாதிரியான ஒரு முயற்சி தான் இதுவும். சில புலி எதிர்ப்பாளர்களும், சில இடதுசாரிகளும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்ற பெயரில், மேற்கத்திய நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். துடிதுடிப்பான, இராணுவ சாகசம் செய்யும் ஆர்வம் கொண்ட கட்டிளம் காளைகளை மட்டுமே தெரிந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பெண்களையும், சிறுவர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அன்றிருந்த ஐந்து பெரிய இயக்கங்களில், புலிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதாக கருதப் பட்டது. 

PLOTE, TELO, EPRLF ஆகியன, ஒரு மரபு வழிப் படையணியை கட்டுவதற்கு தேவையான ஆள் பலம் வேண்டுமென்று கூறி, வருவோர் போவோர் எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளோ கமாண்டோ பாணி தாக்குதல்களை செய்யக் கூடிய கெரில்லாப் படையை வைத்திருப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். திடீர் கெரில்லா தாக்குதல்களில் கிடைத்த வெற்றிகள், புலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணமாக இருந்தன.

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், ஒரு பெரிய திருப்புமுனை உருவாகியது. வட மராட்சியில் நடந்த ஒப்பெறேஷன் லிபரேஷன் போர் நடவடிக்கை மூலம், சிறிலங்கா இராணுவம் பெரியதொரு பிரதேசத்தை கைப்பற்றி இருந்தது. அந்தப் போரில், புலிகள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பெருமளவு போராளிகள் மரணமடைந்ததாகவும் கருதப் பட்டது. இந்தத் தகவலை, அன்றைக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க தூதரக கேபிள் தெரிவித்ததை, விக்கிலீக்ஸ் பகிரங்கப் படுத்தி இருந்தது. இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றுவதற்கு முன்னர், இந்தியா தலையிட்டு ஒப்பந்தம் போட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தான், குழந்தைப் போராளிகள் என்ற தோற்றப்பாடு வெளித் தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம், வழமையான புலிப் போராளிகள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பல சிக்கல்களுக்கு மத்தியில், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள், தேடுதல்களுக்குள் அகப்படாமல் தப்புவதற்காக, புலிப் போராளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. அப்போது வழியில் படையினர் நிற்கின்றனரா என்று உளவு பார்ப்பதற்காக, சிறுவர்களை பிடித்து முன்னுக்கு அனுப்புவார்கள். இந்திய இராணுவமும், எக் காரணம் கொண்டும் சிறுவர்களை சந்தேகிக்கவில்லை. ஊர் மக்களிடையே இரகசியமாக பணம் சேர்ப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். அப்போது அந்த சிறுவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம், கிரனேட் மட்டுமே. 

இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில், உதவியாளர்களாக இருந்த சிறுவர்கள், போராளிகளாக மாற்றப் பட்டனர். புலிகள் தமது முந்திய கொள்கைக்கு முரணாக, சிறுவர்களை படையணியில் சேர்த்துக் கொள்வதற்கு சில சமூகக் காரணிகள் இருந்தன.

1985 - 1986 கால கட்டத்தில் நடந்த இயக்க மோதல்கள், புலிகள் பிற இயக்கங்களை தடை செய்தமை, ஆகிய காரணங்களினால் மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் குன்றி இருந்தது. பல வருடங்களாக, இந்தியா படையனுப்பி தம்மைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  1987 ல், எதிர்பாராவிதமாக இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த போர் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே, வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குமான புலம்பெயர்தல் அதிகரித்திருந்தது.

இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்னர், வட மாகாணத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகியது. புலிகள் வைத்திருந்த நடைமுறை (de facto) தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்ற நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோர், போராளியாகும் வயதில் இருந்த இளைஞர்கள். அதாவது 16 - 25 வயதிலான இளைஞர்கள் தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். 16 வயதுக்கு உட்பட்டோர் விசா எடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை பயன்படுத்தி, ஏராளமான இளைஞர்கள், 17 - 24 வயதானவர்கள் கூட, போலி கடவுச்சீட்டு தயாரித்து ஜெர்மனிக்கு சென்றனர். ஓரளவு வசதியானவர்கள் கூட, தம்மிடம் சொந்தமாக இருந்த நிலத்தை, நகைகளை அடைவு வைத்து விட்டு, அல்லது அவற்றை விற்று பணம் சேர்த்துக் கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் ஒரு வளர்ந்து வரும் நாடொன்றின் பொருளாதாரத்தை பாதிப்பது போன்று, போராளிகளின் வயதையொத்த தமிழ் இளைஞர்களின் வெளியேற்றம், புலிகளின் போராட்டத்தை பாதிக்கும் என்று உணரப் பட்டது. அதனால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டோர் யாரும் வெளியேறக் கூடாது என்று, புலிகள் சட்டம் போட்டார்கள். விசா போன்று, பாஸ் நடைமுறை கொண்டு வந்தார்கள். ஏதாவது அலுவலாக கொழும்புக்கு செல்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். ஆயினும், வசதி படைத்தவர்கள் பெருமளவு பணம் கொடுத்து, பாஸ் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு வெளியேறிய பெரும் பகுதியினர், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், "அன்று ஈழத்தில் வாழ்ந்த காலங்களில், போராளியாக மாறக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளி விட்டு"  வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டவுடன், "புலி ஆதரவாளர்" வேஷம் போடத் தொடங்கினார்கள். வெளிநாடு செல்லும் வரையில், அவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. தமிழீழப் போராட்டம் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை. 

புலிகளின் செயல்களை எல்லாம் நியாயப் படுத்தி வாதாடிக் கொண்டிருக்கும் பலர், தமது வர்க்க நலன் சார்ந்தே அதைப் பார்க்கின்றனர்.  குழந்தைப் போராளிகள் பிரச்சினை, அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காத காரணமும் அது தான். ஏனென்றால்... இங்கே தான் அவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் தலை காட்டுகின்றது. 

இறுதி யுத்தம் வரையில், புலிகளின் படையணிகளில் இருந்த பெரும்பான்மையான போராளிகள், குழந்தைப் போராளிகள் உட்பட, வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகளை" பின்பற்றி, வெளிநாடு செல்வதற்கு பண வசதி இல்லாதவர்கள். வர்க்க முரண்பாடுகள், வர்க்க ஒற்றுமைகள், எந்த நாட்டு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

மேற்கத்திய நாடுகளில், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திடீரென தமிழ் தேசிய ஞானம் கைவரப் பெற்றவர்கள், விடுதலை உணர்வு பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் வாழும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, விடுதலை உணர்வு, இன மான உணர்வு எல்லாம் தாராளமாகவே இருக்கின்றன. 

மார்க்சிய தத்துவம் காலங் காலமாக கூறி வருவதைப் போன்று, "இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராட முன்வருவார்கள்." தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது தான் உண்மை.  இழப்பதற்கு நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மற்றவர்களுக்கு தமிழ் தேசியப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை.

ஈழத்தில், புலிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் கலை அலாதியானது. அதற்கென்றே பிரச்சாரப் பிரிவு சில ஆட்களை வைத்திருக்கும். குறிப்பாக பாடசாலைகளில் சென்று மாணவர்களுடன் பேச்சுக் கொடுப்பார்கள். "படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? சிங்களவன் வேலை கொடுப்பானா? சிங்களவன் குண்டு போட்டு கொன்று கொண்டிருக்கும் நேரத்தில் படித்து என்ன பிரயோசனம்? எப்படியும் சாகத் தானே போகிறோம்? போராடிச் சாகலாம் அல்லவா?" இப்படிப் பல கேள்விகள்.

ஆண் மாணவர்களுடன் உரையாடுவது பெண் போராளிகளாகவும், பெண் மாணவர்களுடன் உரையாடுவது ஆண் போராளிகளாகவும் இருக்கும். போராளி வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், சாதாரண வாழ்க்கையின் இழி நிலை பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆயுதமேந்திப் போராடாமல், வாழ்க்கையை வீணாக்குவதாக அவர்கள் எண்ணி வெட்கப் படும் அளவிற்கு அந்த உரையாடல் அமைந்திருக்கும்.

பொதுவாக புலிகளின் எந்தப் பிரச்சாரமும், தற்போது வெளிநாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்க மாணவர்கள் மனதில் எந்த சலனத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், படித்தால் தமக்கு எதிர்காலம் உண்டென்று. குறைந்த பட்சம், தமது பெற்றோர் தம்மை வெளிநாட்டுக்காவது அனுப்பி வைப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். 

மத்திய தர வர்க்கத்திலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். தாமாகவே விரும்பி போராளியாக சேர்ந்து கொள்வார்கள். அப்படியான சிலரை, பெற்றோர் தமது செல்வாக்கை பயன்படுத்தி, முகாமில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் தமது பிள்ளை ஊரில் இருந்தால் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என்று நினைத்து, வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஏழை மக்களின் நிலைமை வேறு. அவர்களிடம் வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஏழை மாணவர்கள் மனதில், புலிகளின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்தும் பலர் போராளியாக சேர்ந்து கொள்ள முன்வருவதுண்டு. அப்படியாவது, தாம் பெற்றோருக்கு பாரமாக இருக்க மாட்டோம் என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் நினைத்துக் கொண்டன.

வெளிநாடுகளுக்கு செல்லும் மத்தியதர வர்க்கத்தினரை குறி வைத்தும், அவர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும் புலிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். "வெளிநாடு சென்று வெள்ளையனுக்கு அடிமை வேலை செய்யப் போகிறீர்களா? அதை விட எமது தாயகத்தில் சுதந்திரமாக போராடிச் சாகலாமே?" என்று நேரடியாகவும், தமது ஊடகங்கள் மூலமும் சொல்லி வந்தனர். புலிகளின் பிரச்சாரத்திற்கு மயங்கும் நிலையிலா, எமது நடுத்தர வர்க்கம் இருக்கிறது?

மத்தியதர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகள்", சக மாணவர்கள் அரசியலில் நாட்டம் கொள்வதையே கண்டிப்பார்கள். "நமக்கு முக்கியம் படிப்பு, பல்கலைக்கழக அனுமதி, அதற்குப் பிறகு உத்தியோகம், கடைசியாக ஒரு மேற்கத்திய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விடுதல்..." என்று அறிவுரை கூறுவார்கள். ஊரில் ஒரு பாடசாலை மாணவனாக வாழ்ந்த காலங்களில் அரசியலை நினைத்துப் பார்க்க மறுத்தவர்கள், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டு வாழ்க்கை கைவரப் பெற்ற பின்னர் தான், "நமக்கு தமிழீழம் வேண்டும்" என்று உணர்ந்து கொண்டார்கள்! அவர்கள் தான் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் குழந்தைப் போராளிகள் இன உணர்வு பெற்று போராடச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவர்களுக்கு வர்க்க உணர்வு என்ற ஒன்று இருந்துள்ளது. இழப்பதற்கு எதுவுமற்ற மக்களுக்கு, போராட்டத்தை தவிர வேறு வாழ்க்கை இல்லை. போராளியாக ஆயுதமேந்திய சிறுவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. போராளியான பின்னர் கிடைத்த சமத்துவ உணர்வு, சிறார் போராளிகளுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது.

மறு பக்கத்தில், பண வசதி படைத்தவர்களுக்கு போராடமாலே ஒரு நல்வாழ்வு அமைந்து விடுகின்றது. அவர்கள் சமத்துவத்தை, சமூக அங்கீகாரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதை நாம் கேள்வி கேட்டால், "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆன்மீக சொற்பொழிவாற்றத் தொடங்கி விடுவார்கள். 

அண்மையில் தமிழகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட, புலிப் பார்வை திரைப்படத்தின் இயக்குனர், பாலச்சந்திரன் என்ற சிறுவனுக்கு புலிச் சீருடை அணிவித்திருப்பது பற்றி எழுந்த சர்ச்சை தொடர்பாக கூறிய விளக்கம் இது: "அந்தப் பாலகனுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்திருக்கிறோம்."  அதே போன்று, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அழகு பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஈழத்தில், போர்க் களத்தில் சீருடை அணிந்திருந்த சிறுவர்களுக்கு அது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. போராளி ஆகி விட்டதால், சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டதாக பெருமிதம் கொள்ளும் கனவு. அந்தக் கனவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மண்ணோடு மண்ணாக மறைந்து போனது.

Friday, January 24, 2014

“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஆறாம் பாகம்)


“சோவியத் யூனியனில், ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில்,  உண்மையான கம்யூனிஸ்டுகள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். தனக்கு போட்டியாக இருந்தவர்களை கொன்று குவித்து விட்டு, ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றினார். அதனால் தான் ஸ்டாலினை ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி என்று அழைக்கிறோம்.” இவ்வாறு பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேற்கத்திய நாடுகள், முதலாளியத்தை ஆதரிப்போர் மட்டுமல்ல, ட்ராஸ்கியவாதிகள், ஜனநாயகவாதிகள் கூட, ஸ்டாலின் மேல் மேற்படி விமர்சனத்தை வைக்கின்றனர்.

 “ஸ்டாலினின் பயங்கரவாத ஆட்சி" என்று வர்ணிக்கப் படும், 1937 - 1938 காலப் பகுதியில் நடந்த களையெடுப்புகளின் போது, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில், அரைவாசிக்கும் அதிகமானோர் காணாமல்போனார்கள். செம்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த, நூற்றுக் கணக்கான இராணுவ ஜெனரல்கள் சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டனர். இவ்வாறு, ஸ்டாலின் தனது  அரசாங்கம், கட்சி, மற்றும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களை அழிக்கும் அளவிற்கு, அங்கே அப்படி என்ன நடந்தது?

அன்று நடந்த களையெடுப்புகள், கொலைகள் எல்லாவற்றுக்கும், "ஸ்டாலினின் அதிகார வெறி" மட்டும் தான் காரணம் என்று, ஒரே பதிலை எப்போதும் சொல்லித் தப்பி விட முடியாது. சில சரித்திர ஆசிரியர்கள் இன்னொரு காரணத்தை கூறுகின்றனர். 1934 ம் ஆண்டு, லெனின்கிராட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான கிரோவ், இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அரசியல் படுகொலையின் விளைவாக, "இன்னமும் எதிரிகள், சதிகாரர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்" என்ற காரணத்தை காட்டி, நாடு முழுவதும் பலர் கைது செய்யப் பட்டனர் என்று கூறுகின்றனர்.

 "கிரோவ் மிகப் பிரபலமான தலைவராக இருந்த படியால், ஸ்டாலினே ஆள் வைத்து கொலை செய்து விட்டு, அந்தப் பழியை மக்கள் விரோதிகள் தலையில் போட்டு விட்டு, தனது சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக, பல இலட்சம் பேரை கைது செய்து, கொலை செய்ததாக," மேலைத்தேய சரித்திர ஆசிரியர்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

அந்த சரித்திர ஆசிரியர்களின் ஊகம், இன்று பல மேற்கத்திய பாடநூல்களிலும் எழுதப் பட்டுள்ளன. கிரோவ், ஸ்டாலின் அனுப்பிய கொலைகாரர்களால் கொல்லப் பட்டதாக , கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் நம்பினார்கள்.   அது வெறும் வதந்தி மட்டுமே. அதை நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.  மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

கிரோவ் கொலை செய்யப் பட்டது, 1934 ம் ஆண்டு. மாபெரும் களையெடுப்புகள் நடந்த காலம், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்கள். இடையிலே இரண்டு வருடங்கள் உள்ளனவே? அந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்காத காரணம் என்ன? மேலும், கிரோவ் கொலையை தொடர்ந்து, லெனின்கிராட் பகுதியில், சந்தேகத்தின் பேரில் பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். நாட்டின் பிற பாகங்களில், எந்தக் கைதும் இடம்பெறவில்லை.

முதலாவதாக, இடையில் இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த மர்மம் என்ன? இரண்டாவதாக, எதற்காக சர்வதேச COMINTERN அமைப்பை சேர்ந்த, ஆயிரக் கணக்கான வெளிநாட்டுக் கம்யூனிஸ்டுகள் கொல்லப் பட்டனர்? அவர்கள் எக் காலத்திலும், உள்நாட்டில் ஸ்டாலினின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக வரும் வாய்ப்பில்லை.

மூன்றாவதாக, எதற்காக அரசு நிறுவனங்களில் பெரிய பதவி வகித்தவர்கள், நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் மட்டும், கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்? பொதுவாகவே அரசியலில் நாட்டமில்லாத சாதாரண உழைக்கும் மக்கள் யாரும் "ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு" பலியாகவில்லை. (அடித்தட்டு மக்களிலும் சிலர் கைது செய்யப் பட்டனர். ஒன்றில் அவர்கள் ஓரளவு அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசை விமர்சித்து இருப்பார்கள்.)

அன்றைய சோவியத் நாட்டில், ஒரு நகைச்சுவை துணுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. 
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நடுநிசியில் ஒரு வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
- “யார் அது?” வீட்டுக் காரர் கதவைத் திறக்காமலே வந்தவர்களை வினவுகின்றார். 
- “கதவைத் திற, நாங்கள் NKVD” பதில் வருகின்றது. 
- “மன்னிக்கவும், நீங்கள் தவறான முகவரிக்கு வந்து விட்டீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மேல் மாடியில் குடியிருக்கிறார்!” என்று வீட்டுக்காரர் பதிலளிக்கிறார்

அதாவது, அன்று நடந்த கைதுகளும், கொலைகளும், மேல் மட்டத்தில், ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட தகராறுகள், முரண்பாடுகளின் விளைவு, என்று தான் பெரும்பான்மையான சோவியத் மக்கள் நம்பினார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியானவர்களின் சமூகப் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அது தெரிய வரும். பெரும்பான்மையான கைதிகள், நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர், வசதியாக வாழும் வாய்ப்புக் கிடைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள்.

ஒரு சோஷலிச நாட்டில், "மேட்டுக்குடி வர்க்கம் இருப்பது எப்படி சாத்தியமாகிற்று?" என்று கேட்கலாம். உலகில் எந்த நாட்டில், ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தாலும், அது ஒரே நாளில் சோஷலிச நாடாக மாறி விடாது. படிப் படியாக தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு, பெரிய முதலாளிகளை விரட்டி விட்டு, அவர்களது நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கலாம். ஆனால், நிறுவனங்களை நடத்துவதற்கு முகாமையாளர்கள் தேவை. ஒரு அரச நிறுவனமாக இருந்தாலும், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்பு தேவை. சிலநேரம், வெளிநாட்டு நிபுணர்களின் சேவையையும், பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும்.  அமெரிக்காவில் இருந்து கூட,  சில தொழில்துறை வல்லுனர்கள்,  அதிக சம்பளத்திற்கு அமர்த்தப் பட்டிருந்தனர். 

அதே போன்று தான், ஒரு அரசாங்கம் நடத்துவதற்கும் அரச அறிவியல், அமைப்பியல் தெரிந்த அறிவுஜீவிகள் தேவை. அப்படியானவர்கள் எல்லோரும், மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை நாங்கள் தவிர்க்க முடியாது. ஏனென்றால், காலங்காலமாக மேட்டுக்குடி, அல்லது நடுத்தர வர்க்க மக்கள் தான், உயர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தனர். ஒரு சிறிய தொழிலகத்தை நிர்வகிப்பது முதல், அரசாங்கத்தை நடத்துவது வரையில், தேவையான அறிவு அவர்களிடம் தான் உள்ளது. முரண்நகையாக, “பாட்டாளிவர்க்க கட்சியான” கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், அவர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும். 

1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சி வென்றிருந்தாலும், ஒரு கம்யூனிச மாமேதையான லெனின் ஆட்சி நடத்தி இருந்தாலும், ஒரு தசாப்த காலமாக முதலாளித்துவத்திற்கு சுதந்திரம் கொடுக்கும், புதிய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருந்தது. கிராமப் புறங்களில் பணக்கார விவசாயிகளும், நகர்ப்புறங்களில் பணக்கார முதலாளிகளும், லெனினின் ஆட்சிக் காலத்தில் புதிதாக உருவாகி இருந்தனர். அதை விட, நிர்வாகத் திறமை வாய்ந்த அறிவுஜீவிகள் சமுதாயமும் புதிதாக உருவாகி இருந்தது. அந்த நிலைமை ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்திருந்தது. 

கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், அல்லது சோவியத் அரசில் பதவி வகித்தவர்கள், புதிய மேட்டுக்குடியாக மாறி இருந்தனர். அவர்களது கல்வித் தகுதிகேற்றவாறு கிடைத்த வருமானம், வசதியான வாழ்க்கைத் தரத்திற்கேற்ப உயர்வாக இருந்தது. அவர்களின் குடும்பங்கள், பல அரசு சலுகைகளை அனுபவித்து வந்தன. அவர்களது நுகர்வுக்கேன்றே உருவான  விசேட ஆடம்பரக் கடைகள், ஒவ்வொரு நகரத்திலும் தோன்றின. சாதாரண மக்களுக்கான கடைகளில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மேல்தட்டு மக்கள் பிரிவுக்கான ஆடம்பர கடைகளில் அனைத்தும் கிடைத்தன. இந்த நிலைமை, ஸ்டாலின் ஆரம்ப கால ஆட்சிக் காலத்திலும், அதாவது 1937 வரையில் தொடர்ந்தது.

1937 க்குப் பின்னர் என்ன நடந்தது? அது வரை காலமும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் குடும்பங்கள் சிதைக்கப் பட்டன. அரசாங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில், அல்லது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்த குடும்பத் தலைவன், NKVD யினால் கைது செய்யப் பட்டிருப்பார். அதற்கு முன்னர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர், அன்று முதல் “மக்களின் விரோதி” என்று குற்றஞ் சாட்டப் படுவார். அதன் விளைவு என்ன?

ஒரு மக்கள் விரோதியின் மனைவியின் வேலை பறிக்கப் படும். சில நேரம், கணவனுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மனைவியையும் கைது செய்வார்கள். அந்த நேரத்தில், பிள்ளைகள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்படும். மத்தியதர வர்க்க குடும்பம் என்பதால், வசதியான வீட்டில் வாழ்ந்திருப்பார்கள். தற்போது நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும். அந்தக் குடும்பம் சேர்ந்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள், தளபாடங்கள் எல்லாவற்றையும் அரசு பறிமுதல் செய்யும். இல்லாவிட்டால், அயலவர்கள் திருடிக் கொண்டு செல்லப் பார்ப்பார்கள். பெரும்பாலான தருணங்களில், நடுத்தெருவில் விடப்பட்ட பிள்ளைகள், குடும்பத்தின் உடைமைகளை விற்று சாப்பிட வேண்டி இருக்கும்.

திருமணமான தம்பதிகளில், கணவனோ அல்லது மனைவியோ தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டால், விவாகரத்து செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டார்கள். அது சிலநேரம் அவர்கள் மீதான சந்தேகத்தை வர விடாமல் தடுக்கும். கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள் வழமை போல பாடசாலைக்கு சென்று வர முடிந்தது. ஆனால், பாடசாலையில் சில ஆசிரியர்களும், சில மாணவர்களும், “மக்கள் விரோதிகளின் பிள்ளைகள்” என்று, அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். எல்லா ஆசிரியர்களும், எல்லா மாணவர்களும் அப்படி அல்ல.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்யப் பட்டவர்களின் பிள்ளைகள், தமது பெற்றோருடனான தொடர்பை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.  பாடசாலைகளில் அதைப் பற்றி எதுவும் கதைக்காமல், பாடங்களில் கவனத்தை செலுத்தினார்கள். சில பிள்ளைகள், தாமாகவே முன் வந்து,  தமது பெற்றோரை மக்கள் விரோதி என்று பிரகடனம் செய்தனர். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக, பிள்ளைகள் தாமாகவே பெற்றோரின் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். ("மக்கள் விரோதியின் பிள்ளை" என்ற பட்டம், அன்றைய சமூகத்தில் ஒரு பெரிய அவமானச் சின்னமாக கருதப் பட்டது.)  பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறிய பிள்ளைகள் என்றால், அவர்களது இரு பெற்றோரும் கைது செய்யப் பட்டிருந்தால், அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப் பட்டனர்.

நமது நாடுகளில், நமது சமுதாயத்தில், "வசதியான வாழ்க்கை வாழும் குடும்பங்கள், ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து பிச்சையெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதை," ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வருவோம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால், அதற்காகவே அவர்கள் ஸ்டாலினை கடுமையாக வெறுப்பார்கள். இல்லாத அவதூறுகளை எல்லாம் கண்டுபிடித்துக்  கூறுவார்கள்.  

நமது சமூகத்தில், ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை கூறும் பலர், வசதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ரஷ்யாவில், பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. தமது சொந்த எதிர்காலத்தை எண்ணி கலவரம் அடைகிறார்கள்.  தங்கள் நாட்டிலும், “ஸ்டாலினிச ஆட்சி” ஏற்பட்டால், தாங்கள் அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வர வேண்டி இருக்கும் என்பதை, தெரிந்து கொண்டு பதறுகிறார்கள்.

மக்கள் விரோதிகள் என்று குற்றம் சுமத்தப் பட்ட அனைவரும், ஸ்டாலினால், அல்லது NKVD யினால் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, மனம் போன போக்கில் கைது செய்யப் பட்டனரா? அப்படி நினைப்பது சிறுபிள்ளைத் தனம். அன்று நடந்த ஒவ்வொரு கைது நடவடிக்கையையும், சோவியத் மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். “நெருப்பில்லாமல் புகையாது” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். “சும்மா காரணம் இல்லாமல் கைது செய்வார்களா? அவர்கள் ஏதாவது சதியில் ஈடுபட்டிருப்பார்கள், அந்நிய கைக்கூலியாக இருப்பார்கள், அந்நிய நாட்டிற்காக உளவு பார்த்திருப்பார்கள்….” என்று பொது மக்கள் பல காரணங்களை தாமே கண்டுபிடித்து கூறிக் கொண்டனர். பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து, தமக்குள்ளே விவாதித்தார்கள். 

சுருக்கமாக, அன்றிருந்த சோவியத் பொது மக்களில் யாருமே, "ஸ்டாலினால் கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள்" என்று நினைக்கவில்லை. ஈழப் போராட்டம் நடந்த காலத்திலும் அது போன்ற சூழ்நிலை காணப் பட்டது. புலிகள் யாரையாவது பிடித்துச் சென்றால், அல்லது பகிரங்க மரண தண்டனை வழங்கினால், தமிழ்ப் பொது மக்கள் அதனை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கும், ஈழத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசிய ஊடகங்கள் கூறும் எல்லா தகவல்களையும், அப்படியே நம்புகிறார்கள். அவர்களைப் போன்று தான், ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த சோவியத் மக்களும், ஊடகங்கள் சொல்பவற்றை உண்மை என்று நம்பினார்கள். 

“புலிகள் யாரையாவது சும்மா பிடித்து சுடுவார்களா? ஏதாவது காரணம் இருக்கும். அவன் ஏதாவது  பிழை விட்டிருப்பான். இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்திருப்பான் அல்லது அரச ஒட்டுக் குழுவை சேர்ந்தவனாக இருப்பான்,” என்று ஈழத் தமிழ் மக்கள் தமக்குள்ளே பேசிக் கொள்வார்கள். விடுதலைப் புலிகளோ, ஸ்டாலினோ, தமது அதிகாரத்தை இழக்காமல், தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டமைக்கு காரணம், பெரும்பான்மை மக்களின் ஆதரவு தான். மக்களின் ஆதரவை எப்படிப் பெறுவது என்பது ஒரு தனியான அரசியல் கலை. அரசியல் தத்துவ அறிஞர்கள் அது பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.

ஸ்டாலின் காலத்தில், அரச புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் இலட்சக் கணக்கில் இருந்தார்கள். கொள்கைப் பிடிப்பு காரணமாக, மேலதிக வருமானத்திற்காக, பதவி உயர்வுக்காக, அல்லது வேறு ஏதாவது சலுகைக்காக, அயலவர்களை  வேவு  பார்த்தார்கள். பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள், தமது ஆசிரியர்களின், சக மாணவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை  கண்காணித்தார்கள். 

தொழிலகங்களில், அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், தமது முகாமையாளர்களை, சக தொழிலாளர்களை கண்காணித்தார்கள். அவர்களது அரசியல் கருத்துக்கள், நடத்தைகள் தவறாக இருந்தால், NKVD க்கு தகவல் கொடுத்தார்கள். அவ்வாறு தான், பலர் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடக்கும் பொழுதும், உளவு பார்த்தவர்கள் சமூகமளித்து, தாம் கண்டதை, கேட்டதை, குற்றம் சாட்டப் பட்டவரின் முகத்திற்கு நேரே சொன்னார்கள்.


வெளியுலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள், மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அன்றைய சோவியத் யூனியனில் “ஸ்டாலினிச கொடுங்கோன்மை மக்களை வருத்தியதாக” தெரியும். ஆனால், உண்மை நிலவரம் வேறு. பெரும்பான்மையான சோவியத் பொது மக்கள், அதனை “ஸ்டாலினிச பொற்காலம்” என்று அழைப்பார்கள். ஏனென்றால், அந்தக் காலங்களில் நாடு முழுவதும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 

நிறுவனங்களுக்கு, தொழிலகங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகள், முகாமையாளர்கள், தங்களின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பயந்து நடுங்கினார்கள்.  அரசு அதிகாரிகள், தமக்கு கீழ்ப்படிவான சாதாரண ஊழியர்களுக்கு பயந்தார்கள். பணக்கார எஜமானர்கள், தம் வீட்டுப் பணிப்பெண்களுக்கு பயந்து நடந்தார்கள். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.வீடுகளில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நண்பர்களாக நடந்த வேண்டியிருந்தது. 

மேல் தட்டில் இருந்தவர்கள், கீழ்த் தட்டில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டால் கூட, அடுத்த நாள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும். இன்று, "சுதந்திரமான", மேற்கத்திய நாடொன்றில் வாழும் மக்கள் கூட, அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் காலத்தில், அதிகார வர்க்கம் தான் மக்களுக்கு அடிபணிந்து நடந்தது. இன்று, அனைத்து வகை அதிகாரத்தையும் எதிர்த்துப் போரிட விரும்புபவர்கள், ஸ்டாலினிச பொற்காலத்தை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம். 

தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், தங்களது நிர்வாகிகளை பிடித்துக் கொடுத்தார்கள். அலுவலக ஊழியர்கள், தங்களது முகாமையாளர்களை பற்றி தகவல் கொடுத்தார்கள். பாடசாலை மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள், அதிபர்களை காட்டிக் கொடுத்தார்கள். சோவியத் யூனியன் முழுவதும், ஏராளமான அரசு அதிகாரிகள், நிர்வாகிகள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டு, சிறையில் போட்டு வருத்தப் பட்டார்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டார்கள். அவர்களை பற்றிய தகவல்களை NKVD புலனாய்வுத் துறைக்கு கொடுத்தது யார்? அவர்களுக்கு கீழே வேலை செய்த சாதாரண தொழிலாளர்கள். அன்றைய ஸ்டாலின் அரசு, மக்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாட்டை ஊக்குவித்தது.

சோவியத் யூனியனில் அன்று நடந்தது, “இரண்டாவது புரட்சி” என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பாட்டாளி வர்க்க மக்கள், அரசியல்-இராணுவ-பொருளாதார அதிகாரத்தை, மேட்டுக்குடியினரிடம் இருந்து பறித்தெடுத்தனர். ஸ்டாலின் அதற்காக தெரிந்தெடுத்த நடைமுறை தான், இன்றைக்கும் மேட்டுக்குடியினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக, லெனின் காலத்தில் உருவான, “சேக்கா” என்ற புலனாய்வுப் பிரிவு கலைக்கப் பட்டது. NKVD என்ற புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது.

NKVD தலைமை அதிகாரியாக, ஸ்டாலினால் நியமிக்கப் பட்ட ஏசுவா, ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர். ஒரு பாட்டாளி வர்க்க பின்னணியை கொண்ட அதிகாரி தான், மேட்டுக்குடியினரை ஈவிரக்கமின்றி கைது செய்து, மரண தண்டனையை நிறைவேற்றுவான் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டிருக்கலாம். சோவியத் அதிபராக இருந்த ஸ்டாலின் கூட, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

Monday, January 06, 2014

மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?

(ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (மூன்றாம் பாகம்)

உலகில் முதலாளித்துவ உற்பத்தி தோன்றிய காலம் முதல், இரண்டு எதிர்நிலை வர்க்கங்கள் இருந்து வந்துள்ளன. வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும், ஆண்டு அனுபவித்து வாழும், மேட்டுக்குடி வர்க்கம் ஒரு புறம். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், பாட்டாளி வர்க்கம் மறுபுறம். பல நாடுகளில், கல்வி, உத்தியோகம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற உரிமைகள், மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவிக்கும் ஆடம்பரங்களாக உள்ளன. 

பணம் இல்லாத காரணத்தால், கல்வி மறுக்கப் பட்டவர்கள், கல்வியறிவு இல்லாததால், கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் பார்க்க முடியாதவர்கள் ஏராளம். பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு சுதந்திரம் மறுக்கப் படும் பொழுது, பணத்தின் அடிப்படையில் நியாயம் கற்பிக்கப் படுகின்றது. நமது நாடுகளில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் போனதேன்? வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத காரணம் என்ன? “அவர்களிடம் பண வசதி இல்லை” என்று பதில் கூறலாம். ஆனால், அது ஒரு தேசத்தின் பிரஜைக்கு மறுக்கப் படும் சுதந்திரம் ஆகாதா?

இன்றைக்கும் பலர் ஸ்டாலினை வெறுக்கிறார்கள். "சர்வாதிகாரி, கொடுங்கோலன், பல இட்சம் பேரை படுகொலை செய்தவன்," என்று தமது வெறுப்புக்கு காரணம் கூறுகின்றனர். அப்படிக் கூறுபவர்களின் வர்க்கப் பின்னணி என்ன? அவர்கள் ஒன்றில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள், அல்லது வசதியான உயர் மத்தியதர வர்க்கத்தினராக இருப்பார்கள். அது ஒன்றும் தற்செயல் அல்ல. அவர்களது வர்க்கக் குணம், அவர்களை அப்படித் தான் பேச வைக்கும். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பது, அவர்களுக்குத் தான் தெரியும். (அறிவுஜீவிகள் ஆச்சே, தெரியாமல் இருக்குமா?) ஆனால், எப்போதும் ஒரு பாதி உண்மையை மட்டுமே பேசுவார்கள். மறுபாதி உண்மை எது?

ஒரு நாட்டில் சோஷலிசத்தை கட்ட வேண்டுமென்றால், அங்கே முதலில் வர்க்கப் போராட்டம் நடக்க வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டு வரப் பட வேண்டும். அதன் அர்த்தம், இதுவரை காலமும் உலகத்து இன்பங்களை எல்லாம் அனுபவித்து வந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் விசேட சலுகைகள் யாவும் பறிக்கப் படும். அவர்கள் பிற வர்க்கங்களிடமிருந்து எந்த வகையிலும் மேலானவர்கள் அல்ல.

பாட்டாளி வர்க்க தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், சுதந்திரம் பறிக்கப் பட்டு, தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப் பட்டனர். முந்திய சார் மன்னனின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, முதலாளிகள், பணக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் போன்று, மக்களை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அத்தனை பேரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.

“கொஞ்சம் பொறுங்கள்… தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட எல்லோரும் முதலாளிகளோ, அல்லது நிலப்பிரபுக்களோ அல்ல. ஏராளமான அரசியல் கைதிகளும் இருந்தனர்.” என்று யாராவது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கலாம். 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின்னர், வலதுசாரிக் கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப் பட்டன. அவர்கள் முதலாளித்துவ அமைப்பை நியாயப் படுத்துவதை தவிர, வேறெந்த அரசியலும் தெரியாதவர்கள். அதே போன்று, குறுந் தேசியவாதிகள், இஸ்லாமிய ஜிகாத்தியர்கள் போன்ற அரசியல் சக்திகள் இயங்குவதும் தடுக்கப் பட்டது.

அக்டோபர் புரட்சி நடந்த காலத்தில் சில இடதுசாரி கட்சிகளும் இயங்கின. அவர்களில் ஒரு பகுதியினர், விரும்பியோ, அல்லது கட்டாயத்தின் பேரில், போல்ஷெவிக் கட்சியில் இணைந்து கொண்டார்கள். இன்னொரு பிரிவினர் சுயாதீனமாக இயங்கினார்கள். ஆகையினால், ஆயுத பலம் கொண்டு அடக்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் லெனின் பதவியில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்தில், அரசியல் எதிர்ப்பியக்கம் எதுவும் இயங்கவில்லை.

மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், சமூகத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யப் பட்டு, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் படவில்லை. நிறையப் பேர், காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்களிடம் இருந்த செல்வங்களை துறந்து விட்டு, சாமானியர்களின் வாழ்க்கையை பின்பற்றினார்கள். அதே போன்று, மேட்டுக்குடியில் பிறந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லவும், ஏதாவது ஒரு வேலை தேடி வாழவும் முடிந்தது. ஆனால், அப்படியானவர்கள் சமூகத்தில் தங்களது மேல்தட்டு குடும்பப் பின்னணியை மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அதைச் சொல்ல வெட்கப் பட்டார்கள். தங்களது உயர்குடிப் பிறப்பு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தினந்தோறும் செத்துப் பிழைத்தார்கள்.

நமது சமுதாயத்தில், பணச் செருக்கு, பகட்டு, உயர்குடிப் பெருமை, அந்தஸ்து பற்றி சிலாகித்து பேசுவோர் எத்தனை? ஒரு உயர்சாதியில் பிறந்தவர், அதற்காக வெட்கப் படுவதில்லை. மாறாக, அதனை ஒரு பெருமைக்குரிய விடயமாக அறிவித்துக் கொள்கிறார். ஆண்ட பரம்பரை கதை பேசி அகம் மகிழ்வோர் எத்தனை பேர்? சிலர் தமது பரம்பரைப் பெருமை பேசி,  உயர்குடியில் பிறந்ததை நிரூபிக்கின்றனர். 

பணம் படைத்தவர்கள், தங்களது ஆடம்பரத்தை விளம்பரம் செய்வதற்காக விழாக்களை கொண்டாடுகிறார்கள். அவர்கள் எல்லோரும், சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் வாழ வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? தங்களது "உயர்ந்த சமூக அந்தஸ்தை", பகிரங்கமாக வெளியே காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். கனவில் கூட பரம்பரைப் பெருமை பேச மாட்டார்கள். உயர்சாதியில் பிறந்ததற்காக வெட்கப் பட்டு, தங்களது சாதியை மறைத்துக் கொள்வார்கள். 

நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர், ஒருவர் தனது சொந்த ஊரை விட்டு, தொலை தூர கிராமம் ஒன்றில் குடியேறி விட்டால், தனது பூர்வீகத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒருவர், உயர் சாதியில் பிறந்ததாக பொய் கூறி, தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. ஸ்டாலின் காலத்தில், அது தலைகீழாக நடந்தது. அதாவது, சொந்த ஊரை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற உயர்குடிப் பிறப்பாளர்கள், தங்களது பூர்வீகத்தை மறைத்தனர். தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்ததாக பொய் சொன்னார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது தான் பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்ட காலம் அது.

1930 க்கு முன்னர், சோவியத் நாடு முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. அரசாங்கம், குடிமக்களின் விபரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்திலும், இலஞ்சம், ஊழல் மலிந்திருந்தது. அதனால், ஒரு கற்பனையான பெயரை சூட்டிக் கொண்டு, அல்லது பிறந்த ஊரை மாற்றி, போலி ஆவணங்கள் வாங்க முடிந்தது. போலி பிறப்புச் சான்றிதழில், அல்லது விண்ணப்பப் படிவங்களில், தந்தையின் தொழில் எது என்று கேட்கப் பட்ட இடத்தில், “கூலி விவசாயி” அல்லது “கூலித் தொழிலாளி” என்று போட்டு நிரப்பினார்கள். ஏனென்றால், சமூகத்தில் அதற்குத் தான் மதிப்பு அதிகம்!

ஸ்டாலின் காலத்தில்,  "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டது. அதாவது, சமூகத்தில் உயர்த்தப் பட்டவர்கள், தாழ்த்தப் பட்டார்கள். ஆண்டாண்டு காலமாக  தாழ்த்தப் பட்டவர்கள், உயர்த்தப் பட்டார்கள். "பணம் என்பது அந்தஸ்தின் குறியீடு அல்ல, அது அவமானத்தின் சின்னம்! அது தான் ஸ்டாலினிசம்!!" 

பணக்கார குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள், "எனது அப்பா ஊரறிந்த பணக்காரன்" என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட்டார்கள். வெட்கம் மட்டுமல்ல, மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், பாடசாலைகளில் அவர்களது (பணக்கார) குடும்பப் பின்னணி தெரிய வந்தால், மற்றைய பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப் பட்டனர்.வேலை செய்யுமிடத்தில் தெரிய வந்தால், பிற தொழிலாளிகளால் அரசியல் பொலிசிடம் பிடித்துக் கொடுக்கப் பட்டார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்தவர்களுக்கு, பல சலுகைகள் மறுக்கப் பட்டன. பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு மட்டுமே, எல்லா விதமான சிறப்புரிமையும் கிடைத்தது. பாடசாலைகளில் இருந்த சாரணர் இயக்கமான “முன்னோடிகள்” (Pioneer) அமைப்பில் சேருவதற்கான உரிமை, மேட்டுக்குடி பிள்ளைகளுக்கு மறுக்கப் பட்டது. ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் காலத்தில், அதில் சேர்ந்திருந்தால் தான், பருவ வயதில் “கொம்சொமோல்” (Komsomol) எனும் மாணவர் அமைப்பில் சேரும் தகுதி வாய்த்தது. அவர்களுக்குத் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சந்தர்ப்பம்  கிடைத்தது. (ஏழைக் குடும்பத்தில், பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகள், இயற்கையாகவே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டனர்.)

படிப்பில் சிறந்த மாணவர்கள், பிற்காலத்தில், உயர்கல்வியை முடித்து உத்தியோகம் தேடும் காலத்திலும், கொம்சொமோல் தகைமை தேவைப் பட்டது. அதனால் தான், பல உயர் குடிப் பிறப்பாளர்கள், தங்கள் குடும்பப் பின்னணியை மறைத்து பொய் சொன்னார்கள். அது மட்டுமல்ல, அப்படியானவர்கள் மார்க்சியத்தை ஐயந் திரிபற கற்று, சிறந்த  கம்யூனிஸ்டாக நடந்து காட்டினார்கள். தமது வேலைத் தலங்களில் இருந்த “வர்க்க எதிரிகளை”, அவர்களே முன் நின்று காட்டிக் கொடுத்தார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்த பெண்களாக இருந்தால், அவர்களுக்கு இன்னொரு தெரிவு இருந்தது. என்ன பாடுபட்டாவது, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஆண் ஒருவரை, தேடிப் பிடித்து திருமணம் செய்து கொண்டதன் மூலம், தங்களது வர்க்க அடையாளத்தை தூய்மைப் படுத்திக் கொண்டார்கள்.  சிலர் காதலித்து மணம் முடித்தாலும், நிறையப் பேர் பத்திரத்திற்காக மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். பாட்டாளி வர்க்க அடையாளம், அவர்கள் விரும்பிய கல்வி கற்கவும், தொழில் புரியவும் தேவையான அடிப்படைத் தகுதியாக இருந்தது. புரட்சிக்கு முன்னர், ஒரு கோடீஸ்வரனின் செல்ல மகளாக இருந்திருந்தாலும், தற்போது ஒரு கூலித் தொழிலாளியின் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டாள். என்ன செய்வது? காலம் மாறி விட்டது.

நமது நாட்டில் யாராவது ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, “நான் பணக்கார குடும்பத்தில் பிறந்ததே பாவம்…” என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சோவியத் யூனியனில் அந்த அதிசயம் நடந்தது. நமது சமுதாயத்தில், வறுமைப் பட்ட குடும்பப் பின்னணி கொண்ட பிள்ளைகள், மிகவும் கஷ்டப் பட்டு போராடி முன்னுக்கு வர வேண்டியிருக்கும். சோவியத் சமுதாயத்தில், மேட்டுக்குடியினருக்குத் தான் வாழ்க்கை ஒரு சுமையாக, ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. கல்வி, உத்தியோகம் போன்ற சலுகைகள் மறுக்கப் பட்டதால், மேட்டுக்குடியினரின் செருக்கு பெருமளவு அடங்கி விட்டது. உயர் வர்க்க மனோபாவம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தால், அவர்களுக்கு கிடைத்த வீட்டு வசதி, அதையும் இல்லாமல் செய்து விட்டது.

சோவியத் நகரங்களில், மக்களின் வீட்டு வசதியை, “(2 ம்) உலகப் போருக்கு முன், போருக்குப் பின்” என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1917 புரட்சியில் இருந்து, 2 ம் உலகப்போர் வரையில், நகரங்களில் இருந்த எல்லா வீடுகளிலும், கூட்டுக் குடும்பங்கள் குடியிருந்தன. 2 ம் உலகப் போருக்குப் பின்னர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் என தனித் தனியாக வீடுகள் கிடைத்தன. புரட்சிக்கு பிந்திய வீட்டு வசதி, கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அனைத்து பிரஜைகளும் ஏற்றத் தாழ்வின்றி, சமத்துவமாக, சகோதரத்துவத்துடன் வாழ நிர்ப்பந்தித்தது.

நமது நாட்டில், கூட்டுக் குடும்ப முறையை பற்றி பெருமையாகப் பேசும், பழமைவாதிகளில் பெரும்பான்மையானோர், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்களது கூட்டுக் குடும்பம், நிலப் பிரபுத்துவ அடிப்படை கொண்டது. இரத்த உறவு கொண்ட உறவினர்கள், தனித் தனி குடும்பங்களாக, ஆனால் ஒரே வீட்டில் கூடி வாழ்ந்தார்கள். சோவியத் யூனியனிலும், கிட்டத்தட்ட அதே மாதிரியான கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவியது.

ஒரு உண்மையான கூட்டுக் குடும்ப சமூகம், அன்றைய சோவியத் நாட்டில் இருந்தது.ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத, வெவ்வேறு வர்க்கப் பின்னணியை கொண்டவர்கள், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது தான் விசேஷமானது. பல்வேறு மொழிகளைப் பேசும், இன, மத வேறுபாடு கொண்ட மக்களும், ஒரே வீட்டில் ஒன்றாக கூடி வாழ்ந்தார்கள். அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து புதிதாக குடியேறி இருந்தாலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதைக் கேள்விப் படும் சிலர், "என்ன கொடுமை இது, சரவணா!" என்று புலம்பலாம். 

எங்கள் ஊரில், மிகவும் வசதியான உத்தியோகஸ்தரின் குடும்பமும், வறுமையான கூலித் தொழிலாளியின் குடும்பமும், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே வீட்டில் வாழ்ந்ததை கண்டிருப்போமா? அப்படி ஒரு காட்சியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? “இன்னும் ஆயிரம் வருடம் போனாலும் அது நடக்காது” என்று சிலர், இறுமாப்புடன் கேலியாக சிரித்துக் கொண்டே பதில் சொல்வார்கள்.

நாளைக்கு அப்படி ஒரு நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இன்றைக்கு பலர் ஸ்டாலினையும், கம்யூனிசத்தையும் வெறுக்கிறார்கள். கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்னென்ன காரணங்களை அடுக்கினாலும், அவர்களது ஆழ்மனதில் இருப்பதெல்லாம், அடித்தட்டு மக்கள் மேலான அச்சம் தான். இன்று சேரியில் வாழும் ஏழை, நாளை பணக்காரனுடன் ஒரே பங்களாவில், ஒரே குடும்பமாக வாழ்வது என்பது, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவாக இருக்கும்.

1917 புரட்சிக்குப் பின்னர், வேலை தேடி நகரங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உயர்கல்வி கற்க விரும்பிய மாணவர்களும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களில் வந்து குவிந்தார்கள். நகரங்களில் தங்குவதற்கு வீடு கிடைப்பது தட்டுப்பாடாக இருந்தது. ஒரு வசதியான குடும்பம், நான்கைந்து படுக்கையறைகள் கொண்ட பெரிய வீட்டில் வாழ்ந்தால், அது அவர்களது தேவைக்கு அதிகமானதாக கருதப் பட்டது. அந்தக் குடும்பம் ஒரு படுக்கையறையை பாவித்துக் கொண்டு, மற்ற அறைகளை பிற குடும்பங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும். அந்த வீட்டில் உள்ள சமையலறை, குளியலறை போன்றன எல்லா குடும்பங்களுக்கும் பொதுவாகும். இதனால் சிலர், முன்கூட்டியே தமது உறவினர்கள், நண்பர்களை கொண்டு வந்து குடியமர்த்தினார்கள்.

மொஸ்கோ, லெனின் கிராட் (சென் பீட்டர்ஸ்பேர்க்) போன்ற பெரிய நகரங்களில், ஏற்கனவே இருந்த பெரிய மாடிக் கட்டிடங்களை அரசு பொறுப்பேற்றது. வீடு தேடுவோரை அவற்றில் குடியமர்த்தியது. புதிதாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டாலும், அதில் தனித் தனி வீடுகள் இருக்கவில்லை. ஒவ்வொரு மாடியிலும், பெரிய மண்டபங்களைக் கொண்டிருந்தன. அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப் பட்டு, படுக்கையறைகளாக்கப் பட்டன. ஒவ்வொரு படுக்கையறையும் தனித் தனி குடும்பங்களுக்கு ஒதுக்கப் பட்டன. எல்லாக் குடும்பங்களும், பொதுவான சமையலறை ஒன்றை பயன்படுத்த வேண்டும். குளியலறைகள், மல சல கூடங்களும் அனைவருக்கும் பொதுவாக இருந்தன.

சோவியத் நாட்டு உழைக்கும் வர்க்க மக்களுக்கான குடியிருப்புகள்.
சோஷலிச கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
இது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை, எல்லோருக்கும் சரிப் பட்டு வராது. அங்கு வாழ்ந்தவர்கள், இட வசதி குறித்து பிரச்சினைப் பட்டார்கள். வேறு வசதியான இடத்திற்கு மாறலாம் என்ற நப்பாசையில், பக்கத்து வீட்டு குடும்பத்துடன் சண்டை பிடித்தார்கள். சமையலறையில் சமைப்பது முதல், துணி துவைப்பது வரையில் போட்டி இருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் திருட்டு போயின. குடியிருப்பாளர்கள் ஒருவரை ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். எல்லோரும் சமமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தாலும், தமக்கென தனித்துவம் பேண விரும்பினார்கள். அது இயற்கையானது. 

அந்தக் கால சோவியத் வாழ்க்கையை நினைத்து பரிதாபப் படுபவர்கள், இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களை சென்று பார்வையிட வேண்டும். இரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சோவியத் அரசு, வேண்டுமென்றே மக்களை கூட்டுக் குடும்பமாக வாழ நிர்ப்பந்தித்தது. அதன் மூலம், மக்கள் கூடி வாழும் கம்யூனிச வாழ்க்கை முறைக்கு பழக்கப் படுவார்கள் என்று நம்பியது. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற தத்துவம் வலியுறுத்தப் பட்டது. ஒவ்வொருவரும் “நான்” என்ற அகந்தையை துறந்து, “நாங்கள்” என்ற உணர்வைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.

சோவியத் அரசு எதிர்பார்த்தது போன்று, மக்களிடையே சமத்துவமும், சகோதரத்துவமும் உருவானது. பலரிடம் இயற்கையாக குடிகொண்டிருந்த, சுயநலம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட குணங்கள் படிப்படியாக மறைந்தன. மெத்தப் படித்து மருத்துவராக, பொறியியலாளராக அல்லது கணக்காளராக தொழில் செய்பவரின் குடும்பமும், எழுத்தறிவற்ற கூலி உழைப்பாளியின் குடும்பமும், அருகருகே வாழும் நிலைக்கு தள்ளப் பட்டன. இதனால், வர்க்கங்களுக்கு இடையிலான கசப்புணர்வு மறைந்து, மனித நேயம் வளர்ந்தது. சோவியத் சமுதாயத்தில், யாருமே கூட்டுக் குடும்ப வாழ்வை தவிர்க்க முடியவில்லை. ஸ்டாலினின் மனைவியின் சகோதரனது குடும்பமும், முகாம் போன்ற வீடொன்றில் வாழ்ந்து வந்தது.

2ம் உலகப் போருக்குப் பின்னர், தனித் தனி வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டன. அளவில் சிறியதாக இருந்தாலும், மேற்கு ஐரோப்பாவில் உள்ளதைப் போன்று, அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தன. காலப்போக்கில் எல்லாக் குடும்பங்களுக்கும் தனித் தனி வீடு கிடைத்தாலும், கூட்டுக் குடும்பமாக வாழும் போது இருந்த சந்தோஷம் இருக்கவில்லை. வேலை விட்டு வந்தால், பொழுது போவதே தெரியாது. கார்ட்ஸ், டொமினோ, செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு எந்த நேரமும் யாராவது ஒருவர் இருப்பார். பண்டிகைகள், கொண்டாட்டம் என்றால், வீடு முழுக்க கலகலப்பாக இருக்கும்.

குறிப்பாக, சிறுவர்களுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி கும்மாளம் அடிக்க முடிந்தது. எல்லா வீடுகளும் திறந்து இருந்ததால், ஓடிப் பிடித்து, ஒளித்துப் பிடித்து விளையாட தாராளமான இடம் இருந்தது. பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகள் மேல் பாசமாக இருந்தார்கள். அதனால் குழந்தைகளை பராமரிப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது.

ஸ்டாலின் காலத்தில், சோவியத் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி மேலும் பல தகவல்கள், "The Whisperers, Private Life in Stalin's Russia" என்ற நூலில் விபரமாக எழுதப் பட்டுள்ளன. 

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1. ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 
____________________________________________________________________________________________

 ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

Friday, October 11, 2013

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். 

விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: 
"இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள்.  சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு கண்டு பொறாமை கொண்ட சிங்களவர்கள், தரப்படுத்தல் (விக்னேஸ்வரன் "சமப்படுத்தல்" என்ற சொல்லைப் பாவிக்கின்றார்.) மூலம் தமிழர்களின் கல்வி உரிமையை பறித்தார்கள். 

தற்போது போதைவஸ்து, மதுப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி யாழ் மாணவர்களை பாழாக்குகிறார்கள். அரச ஆதரவு கட்சிகளே இந்தக் கலாச்சார சீரழிவுக்கு காரணமாகும். மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் மூலம், யாழ்ப்பாண தமிழரின் கல்விச் சீரழிவை தடுத்து நிறுத்த முடியும்." 

 "ஈழத் தமிழ் தேசிய அரசியலில், வர்க்கம் எங்கே வந்தது? வர்க்கம், முதலாளியம் போன்ற மார்க்சிய சொல்லாடல்கள், அந்த இடத்திற்கு எப்படிப் பொருத்தமாகும்?" என்று சிலர் கேட்கின்றனர். 

இலங்கையில் வாழாத, தமிழரல்லாத ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை கேட்க நேர்ந்தால், அவர்  "யாழ்ப்பாணத் தமிழர்கள் எல்லோரும் (அல்லது பெரும்பான்மை) உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள்." என்றே நினைத்துக் கொள்வார். உலகில் வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டு மொத்த யாழ் மக்கட் தொகையில், உயர்கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இருக்க முடியாது. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த காலமும் முதல், சிங்களவனுக்கு அடிமையான காலம் வரையில் அந்த நிலைமை மாறவில்லை. 

ஆகவே,  "அந்த ஐந்து சதவீத சிறுபான்மைத் தமிழர்களைப்" பற்றித் தான், விக்னேஸ்வரன் கவலைப் படுகின்றார். மிகுதி  உழைக்கும் வர்க்கத் தமிழர்களைப் பற்றி, அவர்களது பிரச்சினைகள் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம் வேறு.  உயர்கல்வி கற்ற சிறுபான்மை சமூகத்தை, சமூக விஞ்ஞானம் "மத்திய தர வர்க்கம்" என்று பெயரிட்டு அழைக்கிறது. மார்க்சியம் அந்தப் பிரிவுக்கு "குட்டி முதலாளிய அல்லது குட்டி பூர்ஷுவா வர்க்கம்" என்று பெயரிட்டது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையங்களை கட்டினார்கள் என்று விக்னேஸ்வரனே கூறுகின்றார். "வெள்ளையர்கள்" வந்து பத்து, பதினைந்து வருடங்களில் கல்லூரிகளை கட்டியதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.ஆங்கிலேயர்கள் மட்டுமே வெள்ளையர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னர் இலங்கையை காலனிப் படுத்திய டச்சுக் காரர்கள், போர்த்துக்கேயர்களும் வெள்ளையர்கள் தான்.

கல்வி கற்பது அனைத்துப் பிரஜைகளின் பிறப்புரிமை என்பதால், ஆங்கிலேயர்கள் இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் கல்வி நிலையங்களை கட்டி இருந்திருந்தால், போற்றுதலுக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் கற்றவர்களை உருவாக்க நினைத்த செயலானது, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்படும். அதுவே பிற்காலத்தில், இன முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கும் என்பதை விக்னேஸ்வரன் இங்கே குறிப்பிட மறந்து விட்டார். 

மேலும், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகள், கல்வி நிலையங்களை கட்டியதன் நோக்கம், தமிழரை முன்னேற்றுவதற்காக அல்ல. அன்று, காலனிய நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தேர்ச்சி பெற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று தேவைப் பட்டது. அதிலும், உயர்சாதியினரில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐம்பதுகளில் கூட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழர்களுக்கு, கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது.

விக்னேஸ்வரன், தரப்படுத்தலுக்கு, சமப்படுத்தல் என்ற சொல்லை பிரயோகிக்கக் காரணம் என்ன? கல்வியில் சிறந்த தமிழர்களுக்கு சமமாக, சிங்களவர்களை முன்னேற்றுவதா? தரப்படுத்தல் மாவட்ட வாரியாக கொண்டு வரப் பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள் என்ற ரீதியில், மறைமுகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. ஆனால், (ஆங்கிலேயர் காலத்தில்) கல்வி நிலையங்கள் கட்டப்படாத தமிழ்ப் பிரதேசங்களும் இருந்தன. வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருந்தன. 

யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது. விக்னேஸ்வரன் இந்த உரையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தி" ஒன்று இயங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால், முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய பூதமே அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி என்பதை, மக்களுக்கு கூறாமல் மறைக்கிறார். மேலைத்தேய ஏகாதிபத்தியம் என்ற "கண்ணுக்குத் தெரியாத சக்தி" தான் ஸ்ரீலங்கா அரசின் எஜமான் என்பது, விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் இருக்காது.

கட்டற்ற முதலாளித்துவம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களும், மாணவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் அந்தப் பிரச்சினை உள்ளது. முதலாளித்துவம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமே அதனை தடுத்து நிறுத்தும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அந்தச் சொற்களையே உச்சரிப்பதில்லை. எந்த ஒரு கட்டத்திலும், தங்களது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் முன் வைக்கவில்லை. ஆகவே, விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும், யாழ் மாணவர்களின் கல்வி சீரழிவதை தடுத்து நிறுத்த முடியாது. 

விக்னேஸ்வரனின் முழுமையான உரை:


வட மாகாண சபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
2. தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு