Tuesday, January 31, 2017

முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்


"நலன்புரி முதலாளித்துவம்"! - முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யோதிலிங்கம் எழுதிய அரசறிவியல் பாடநூலில் இருந்து:

//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// (அரசறிவியல், பக்கம் 87)

சிறிலங்கா அரச பாடத் திட்டத்திற்கு அமைய, யோதிலிங்கம் எழுதிய இந்த நூலானது, அந்நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற "தாராண்மை வாத (லிபரல்) அரசு" கட்டமைப்பு உலகில் சிறந்தது என்று கூறுகின்றது. அதற்காக முதலாளித்துவம் பற்றி இல்லாத கற்பனைகளை புனைகின்றது. அதில் ஒன்று தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்ற கட்டுக்கதை.

நலன்புரி அரசு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன, "நலன்புரி முதலாளித்துவம்"? முதலாளித்துவம் எப்போதும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே நலன்புரிவதாக இருக்கும். அது இயற்கை. அனைத்து மக்களுக்கும் நலன்புரியும் முதலாளித்துவம் உலகில் இருக்க முடியாது. அப்படியானால் அதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல, சோஷலிசம்.

யோதிலிங்கம் வாழும் இலங்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகளை போன்றவற்றை அரசு பொறுப்பேற்று செய்கின்றது. ஆனால், அதைச் செய்வது முதலாளித்துவம் அல்ல. இது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.

உதாரணத்திற்கு, இலவச சேவை வழங்கும் அரச மருத்துவமனைகளுக்கு போட்டியாக, தனியார் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துள்ளன. அங்கு நின்றால் காசு, நடந்தால் காசு, லிப்டில் ஏறினால் காசு என்று, நோயாளிகளிடம் பணத்தைக் கறந்து, அவர்களை மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன. இதுவா "நலன்புரி முதலாளித்துவம்"?

ஓய்வூதியம் பெற்ற பின்னர், பிரான்ஸில் இருந்து சென்று இலங்கையில் சிலகாலம் இருந்து விட்டு வந்த நண்பர் சொன்னார். "இலங்கையில் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவிடும் தொகை, பிரான்ஸ் மருத்துவ செலவுகளை விட அதிகம்!" அந்த நண்பர் முன்பு மருத்துவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குப் பேர் நலன்புரி முதலாளித்துவம் அல்ல, கொள்ளைக்கார முதலாளித்துவம்!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் "நலன்புரி முதலாளித்துவம்" இருக்கிறது தானே என்று கேட்கலாம். ஐயா, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் முதலாளிகளின் குணம் மாறுவதில்லை. நியூ யோர்க்கில் இருக்கும் நாயும் "வவ்....வவ்..." என்று தான் குரைக்கும்! எல்லா முதலாளிகளும் தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, சுரண்டித் இலாபத்தை கூட்டிக் கொள்வது வழமை.

"நலன்புரி முதலாளித்துவம்" நிலவும் நாடுகளில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு இடையிலேயே ஏற்றத்தாழ்வான ஊதியம் வழங்கப் படுகின்றது. அது சிலநேரம் பத்துப், பன்னிரண்டு மடங்கு அதிகம்! உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியரின் சம்பளம் ஆயிரம் டொலர் என்றால், அதே நிறுவனத்தில் நிர்வாகியின் சம்பளம் பன்னிரண்டாயிரம் டொலர்!

நான் நெதர்லாந்திற்கு வந்து இருபது வருடங்களாகின்றன. இத்தனை வருட கால அனுபவத்தில், ஒரு தடவையாவது "நலன்புரி முதலாளித்துவத்தை" காணவில்லை. மாறாக கொள்ளைக்கார முதலாளித்துவம் மட்டுமே கண்டிருக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து உழைப்பாளிகளும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

வழமையாக எல்லா நிறுவனங்களிலும் மூன்று பேர் செய்யும் வேலையை, ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் தொழிலாளியாக இருந்தாலும், வங்கியில் கணக்குப் பார்க்கும் ஊழியராக இருந்தாலும், Burn out என சொல்லப் படும் மித மிஞ்சிய வேலைப் பளுவால் பாதிக்கப் படுகின்றனர்.

ஐரோப்பிய தொழிலகங்களில் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்போர் அதிகம். தாங்கு சக்தியை விட அதிகமாக வேலை செய்வதால், பலருக்கு மன உளைச்சல் வந்து நோயாளிகளாக மாறி விட்டனர். ஐரோப்பாவில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் பலர், நாற்பது வயது தாண்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். காரணம், சக்திக்கு மீறிய வேலைப்பளு.

எமது கண் முன்னாலேயே எமது உழைப்பு சுரண்டப் படுகின்றது. இலவசமாக உறிஞ்சப் படும் எமது உழைப்பு, முதலாளிகளின் இலாபமாக மாறுகின்றது. நிர்வாகிகளின் போனசாக மாறுகின்றது. இவர் என்னவென்றால் அது தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பது நலன்புரி அரசு, அது முதலாளித்துவம் அல்ல. அரசு வேறு, முதலாளித்துவம் வேறு. இந்த வித்தியாசம் அரசறிவியல் எழுதிய யோதிலிங்ககத்திற்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. இங்குள்ள முதலாளிகள் மக்களின் நலனுக்காக ஒரு சதம் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சுயநலவாதிகள்.

இந்த முதலாளிகள் மக்களின் நலனுக்காக தானம் தர்மம் எதுவும் செய்யத் தேவையில்லை. குறைந்த பட்சம் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதிப் படுத்தினாலே போதும். அந்த விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கடந்த தசாப்த காலத்தில் மட்டும் இலட்சக் கணக்கானோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல வறுமையில் வாடுகின்றன. அதற்குக் காரணம், கணணி மயமாக்கல், ரோபோ மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. நூறு தொழிலாளர்கள் செய்த வேலையை ஒரு ரோபோ செய்யும் காலம் வந்து விட்டது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, பெருந்தொகை பணத்தை மிச்சம் பிடிக்கின்றன. அதனால் தான் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கின்றது.

அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் இலட்சக் கணக்கான போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கிடைக்கும் இலாபம் போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. வேலையிழந்த தொழிலாளர்கள் தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளட்டும். அதனால், முதலாளிகளுக்கு என்ன கவலை?

இது தான் "நலன்புரி முதலாளித்துவத்தின்" மகத்துவம்! யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது? கொள்ளைக்கார முதலாளித்திற்கு "நலன்புரி" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா? முதலாளிகளின் கொள்ளையை மறைப்பதற்காக "நலன்புரி முதலாளித்துவம்" என்று வெள்ளை அடிப்பது ஒரு பிழைப்பா?

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்
ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

Monday, January 30, 2017

இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்


சி.அ.யோதிலிங்கம் எழுதிய "அரசறிவியல் - ஓர் அறிமுகம்" நூல், இலங்கையில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக எழுதப் பட்டுள்ளது. "வினாத்தாளை மையமாக வைத்து" எழுதப் பட்டிருப்பதாக அந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாட நூலில் சோஷலிச  நாடுகள் பற்றிய உண்மைக்கு புறம்பான, பிழையான கருத்துக்கள் எழுதப் பட்டுள்ளன. வழக்கமாக இதைப் படிக்கும் மாணவர்கள், பரீட்சையிலும் அதைத் தான் ஒப்புவிக்கப் போகிறார்கள். அதற்கு மாறாக சரியான தகவல்களை எழுதினால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்காது. தமிழ் மாணவர்களை கம்யூனிச எதிர்ப்புவாதிகளாக மூளைச் சலைவை செய்யவும் இது போன்ற பாட நூல்கள் உதவுகின்றன. இப்படியான பாடநூல்கள் சிறிலங்கா அரசின் முதலாளித்துவ சார்புக் கொள்கைக்கு ஏற்றவாறு எழுதப் படுகின்றன.

அரசறிவியல் நூலில், அரசு பற்றிய சோசலிசக் கொள்கையின் குறைபாடுகள் என்ற உபதலைப்பின் கீழ் எழுதப் பட்டுள்ள அபத்தமான கட்டுக்கதைகளையும், அதற்கான எனது விளக்கங்களையும் கீழே தருகின்றேன். 



1.//காலச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ல் மார்க்ஸ் இக்கொள்கையை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்துகின்ற கொள்கை எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என கூற முடியாது.// - யோதிலிங்கம்

அது என்ன "காலச் சூழ்நிலை"? கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாளித்துவம் அதன் உயர்ந்த வளர்ச்சிக் கட்டத்தை கண்டிருந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் மீதான விமர்சனமாக மூலதனம் என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் எவ்வாறு உழைப்பாளிகளின் உழைப்பை உபரி மதிப்பாக சுரண்டுகின்றது? அதை எவ்வாறு மூலதனமாக மாற்றிக் கொள்கிறது? செல்வம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டும் குவிகின்றது? இதை விளக்குவது தான் "கார்ல் மார்க்ஸின் கொள்கை". இன்று உலகில் எங்குமே முதலாளித்துவம் இல்லையா? உழைப்பாளிகள் சுரண்டப் படுவதில்லையா? உபரிமதிப்பு மூலதனமாக மாறுவதில்லையா?

அது எப்படி இன்றைய உலகில் ஏழைகள் மென் மேலும் ஏழைகளாகவும்,பணக்காரர்கள் மென் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்? உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரிடம் உள்ள செல்வம் அளவிற்கு, எட்டுப் பணக்கார்களிடம் செல்வம் குவிந்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், உழைப்பாளிகளுக்கு சொற்பத் தொகையை கொடுத்து சுரண்டும் பணம் (மூலதனம்) மேலை நாடுகளுக்கு கடத்தப் படுகின்றது. அந்த இலாபப் பணத்திற்கு எந்த நாட்டிலும் வரி கட்டுவதில்லை. அது வரியில்லா சொர்க்கத் தீவுகளில் இரகசிய வங்கிக் கணக்கில் குவிக்கப் படுகின்றது. இதெல்லாம் கார்ல் மார்க்ஸின் கொள்கை இந்தக் காலத்திலும் சரியாகப் பொருந்துகின்றது என்பதை தானே நிரூபிக்கின்றது?

2.//இக் கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.// - யோதிலிங்கம்

ஒன்றைப் பற்றி எழுதுவதற்கு முன்னர் அதைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும். மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் நுனிப்புல் மேயக் கூடாது. கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் பொருளாதாரத்தை அலசுகின்றது. ஆனால், அவர் அதை மட்டும் எழுதவில்லையே? வேறு நூல்களும் இருக்கின்றன தானே? மார்க்ஸின் நண்பர் எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" நூலில் மனித இனத்தின் வரலாறு, மானிடவியல், சமூகவியல் என்பன ஆராயப் படுகின்றன. பிரிட்டனில் உழைக்கும் வர்க்க மக்களின் அவலங்கள் பற்றிய நூல், அன்றைய காலத்து சமூகப் பிரச்சனைகளை விரிவாக விளக்குகின்றது. வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் பாத்திரம் பற்றி மார்க்ஸ் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள்// வரலாறுகள் யாவும் மன்னர்களை புகழ்ந்து எழுதி இருப்பதாகவும், மக்களின் வரலாறு எழுதப் படுவதில்லை என்பதையும் மார்க்சியம் தான் எடுத்துக் காட்டியது.

3.//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// - யோதிலிங்கம்

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழும் ஒருவர் இப்படி எழுதி இருந்தால், அவரது குறுகிய சிந்தனைக்கு ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், இன்றைக்கும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் இதை எழுதியிருப்பதை நம்ப முடியவில்லை. இலங்கையிலும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால் அங்குள்ள "நலன்புரி முதலாளித்துவம்" சிறப்பாக செயற்படுமானால், யாரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓட மாட்டார்கள். யாரும் வறுமையில் வாட மாட்டார்கள். வேலையில்லா விட்டால் ஒரு குடும்பமே பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை.

அது வந்து... மேற்கத்திய "நலன்புரி முதலாளித்துவம்" பற்றி சொன்னேன் என்று சப்பைக் கட்டு கட்டலாம். நீண்ட நெடுங்காலமாக நடந்த தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் காரணமாகத் தான், மேற்கு ஐரோப்பாவில் நலன்புரி அரசுகள் உருவாகின. அதுவும் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் தான். கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச நாடுகள் உருவான பின்னர் தான். அதாவது, தாங்களும் அதே சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதை சொல்லிக் கொள்ளாமல், நலன்புரி அரசு என்றார்கள். இல்லாவிட்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிகள் நடந்திருக்கும் என்று அஞ்சினார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற மூலதன குவிப்புகளால் நன்மை அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தான், நலன்புரி அரசு இருக்கின்றது. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் இன்றைக்கும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால், அது எதுவுமே "நலன்புரி முதலாளித்துவம்" அல்ல. இன்றைக்கும் மார்க்ஸ் வாழ்ந்த காலத்து ஐரோப்பா மாதிரி, கஞ்சிக்கும் வழியில்லாத ஏழைகளும், மாட மாளிகைகளில் வாழும் பணக்காரர்களும் என சமூகம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அந்த நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதால், அவை இன்றைக்கும் வறிய நாடுகள் என்றே அழைக்கப் படுகின்றன.

4.// மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்கான பொதுத் தேவைகளும் இருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிச சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.// - யோதிலிங்கம்

ஸ்பெயின் நாட்டில் மரினலேடா (Marinaleda)என்ற கிராமம் இருக்கிறது. அங்கே பல வருட காலமாக கம்யூனிச சமூகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அரசு கட்டமைப்பின் எந்த அம்சமும் அங்கே இல்லை. அதாவது, நீதிமன்றம், பொலிஸ், சிறைச்சாலை எதுவும் இல்லை! அந்தளவுக்கு அங்கே எந்தக் குற்றச் செயலும் நடப்பதில்லை! வேலை செய்யும் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் படுகின்றது. 

அருகில் உள்ள ஸ்பானிஷ் கிராமங்களை விட அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்! அதனால், அயல் கிராம கூலியாட்கள் அங்கு சென்று வேலை செய்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வுநேர பொழுதுபோக்குகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும். அத்தோடு சொந்தமாக வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைக்கும். இப்படியான கம்யூனிச சமூகங்கள், இன்றைக்கும் ரஷ்யாவிலும், சீனாவிலும் சில இடங்களில் இருக்கின்றன. ஏன் அமெரிக்காவில் கூட இருக்கிறது!

அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களைக் கேட்டால் அரச அடக்குமுறைகள் பற்றிக் கதை கதையாக சொல்வார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் அரசு இருந்தால் அங்கு அடக்குமுறையும் இருக்கும். ஒரு நாட்டில் அதிகமாகவும், இன்னொரு நாட்டில் குறைவாகவும் இருக்கலாம். 

அரசு எப்போதும் மனிதர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாது. அதாவது தேசம் என்ற சிறைச்சாலைக்குள் நாங்கள் எல்லோரும் கைதிகள் தான். இது உங்களுக்கு நகைப்புக்குரியதாக இருக்குமானால், நீங்கள் அரச அடக்குமுறைகளை ஒரு சாதாரணமான விடயமாக ஏற்றுக் கொள்ள பழகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

5.//மார்க்ஸ் வர்க்கங்களை கவனத்தில் எடுத்தாரே தவிர அண்மைக்காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ள தேசியவாதம் பற்றி கவனத்தில் எடுக்கவில்லை.// -யோதிலிங்கம்

இது சுத்த அபத்தமான கூற்று. உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை. மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் தேசியவாத கொள்கைகள் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. மிகச் சரியாக சொல்வதென்றால், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்கள் நடந்தன. முதலாளித்துவம், தாராண்மைவாதம் போன்ற கொள்கைகள் அப்போது தான் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டன. நெப்போலியன் போரில் தோற்கடிக்கப் பட்ட பின்னர், அநேகமான ஐரோப்பிய நாடுகள் குடியரசுகளாக மாறின. அப்படித் தான் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகி பல தசாப்தங்களுக்குப் பின்னர் தான், கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வுநூல்களை எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் ஐரிஷ் தேசியவாதத்தை ஆதரித்தார். அதற்குக் காரணம், பிரிட்டனின் காலனிகளில் ஒன்று விடுதலை அடைவது ஒரு சாதகமான விடயம் என்பது தான். அதே மாதிரி, ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், உலகின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதாக லெனின் அறிவித்தார். அப்போது பிரித்தானியா அதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. அதற்குக் காரணம், தேசிய விடுதலைக்காக போராடும் காலனிய நாடுகள் விடுதலை அடைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கி விடும். கடைசியில் அது நடந்து விட்டது. 

பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலைக்காக போராடியவர்கள் மார்க்சிஸ்டுகளாக இருந்தனர். இது தற்செயல் அல்ல. சில நாடுகள் சுதந்திரம் பெற்றதும் அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்தனர். உதாரணம்: வியட்நாம். வேறு சில நாடுகளில் தேசிய விடுதலைக்கான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் காலனியாதிக்கவாதிகளால் நசுக்கப் பட்டன. உதாரணம்: மலேசியா.

6.//உடைமையாளன் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்பனவற்றிற்கு புறம்பாக மத்தியதர வர்க்கம் எனும் ஒரு வர்க்கம் இன்று எழுச்சியடைந்துள்ளது. மார்க்ஸ் இது பற்றி எதுவும் கூறவில்லை.// - யோதிலிங்கம்

இது முழுக்க முழுக்க கற்பனையான வாதம். இவருக்கு மார்க்சியத்தில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு இந்த கூற்று ஒன்றே போதும். முதலாளிய வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் தனது உடைமையாக வைத்திருக்கின்றது. ஏனையோர் முதலாளிகளுக்கு உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் என்பது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடு. 

இந்த நூலை எழுதிய யோதிலிங்கம் ஒரு முதலாளி அல்ல. அவர் ஓர் ஆசிரியராக வேலை செய்வதன் மூலம், தனது உழைப்பை தொழிற்சந்தையில் விற்று, அதற்கு ஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார். ஆகவே அவரும் உழைக்கும் வர்க்கத்தில் ஒருவர் தான். ஆனால், அவரது பல்கலைக்கழக பட்டங்கள் தந்த தகைமை காரணமாக, சமூகத்தில் அந்தஸ்து கூடிய உத்தியோகம் ஒன்றை செய்கிறார்.

இப்படியானவர்களை திருப்திப் படுத்துவதற்காக, முதலாளிய வர்க்கம் அதிக சம்பளம் கொடுக்கிறது. காரணம், இவர்கள் "அறிவுஜீவிகள்" அல்லவா? இந்தப் பொருளாதார கட்டமைப்பு எப்படி இயங்குகின்றது என்ற இரகசியங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அந்த அறிவு காரணமாக, முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்க வந்து விடுவார்கள். அதை தடுப்பது எப்படி? சம்பளத்தை கூட்டிக் கொடுத்து வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இந்தப் பிரிவினர் தான் மத்தியதர வர்க்கம். மார்க்ஸ் அவர்களை "குட்டி முதலாளிய வர்க்கம்" என்றார். அதாவது அவர்களது உயர்ந்த சமூக அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள் காரணமாக, முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு இடையில் ஊசலாடும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரை (மத்திய தர வர்க்கம்) உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும். இதைத் தான் மார்க்ஸ் கூறினார்.

7.//நடைமுறையில் காணப்பட்ட சோஷலிச அரசுக்களிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பல மறுக்கப் பட்டிருந்தன.// - யோதிலிங்கம்

இது மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளால் செய்யப்படும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம். "மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள்" என்று இவர் எதைக் கருதுகிறார்? மிகவும் வறுமையான ஆப்பிரிக்க நாடொன்றில், பட்டினி கிடக்கும் ஒருவனிடம் சென்று, "உனக்கு அடிப்படை ஜனநாயக உரிமை இருப்பதற்காக சந்தோஷப் படு" என்று சொன்னால், அவன் கொலைவெறியுடன் அடிக்க வருவான். ஒரு மனிதனுக்கு முதலில் உயிர் வாழ்வதற்கான உரிமை அல்லவா முக்கியம்? அதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிரந்தரமான வருமானம் வேண்டும். உணவு, உடை, உறையுள் மிக அவசியம். கல்வி, மருத்துவம், அத்தியாவசியம். இவை எல்லாம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லையா?

பொதுவாக ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளும் சோஷலிச நாடுகளிலும் இருந்தன. ஆனால், இவர்கள் பல கட்சி அரசியல் உரிமையை பற்றி மட்டுமே, அதை மட்டுமே பேசுகின்றனர். உலகில் பொதுவான ஜனநாயக அமைப்பு எதுவும் இல்லை. பலகட்சி ஜனநாயகம் பற்றிப் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட, 19 ம் நூற்றாண்டு வரையில் அதற்கான சுதந்திரம் மறுக்கப் பட்டு வந்தது. அப்போது எந்த நாட்டிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. பொதுத் தேர்தல்கள் நடக்கவில்லை. சர்வசன வாக்குரிமை இருக்கவில்லை. இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளில் உருவான கம்யூனிச, சோஷலிச கட்சிகளால், தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்து போராடிப் பெற்ற சலுகைகள் ஆகும்.

8.//சோஷலிச அரசில் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.// - யோதிலிங்கம்

இதுவும் முதலாளித்துவவாதிகளால் முன்னெடுக்கப் படும் எதிர்ப்புப் பிரச்சாரம் தான். "அனைத்து அதிகாரமும் மக்களுக்கே" என்பது கம்யூனிஸ்டுகளின் பிரதானமான கோஷம். ரஷ்ய மொழியில் "சோவியத்" என்றால், தொழிலாளர் மன்றம் என்று அர்த்தம். உண்மையில், தற்போது பல நாடுகளில் நடைமுறையில் பாராளுமன்ற அமைப்பில் தான் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப் படுகின்றது. அதற்குப் பதிலாக சோஷலிச நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப் படுகின்றது.

கிராமம், நகரம் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தொழிலாளர் மன்றங்கள் அமைக்கப் படும். அங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப் பட்டு, பெரும்பான்மை முடிவு ஏற்றுக் கொள்ள படும். இதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். அதாவது மக்கள் நேரடியாகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக அமைப்பு. தொழிற்சாலைகள், கல்லூரிகள், பாடசாலைகளிலும் இந்த ஜனநாயக அமைப்பு இயங்கும். ஒரு தொழிலகத்தின் நிர்வாகி நினைத்த நேரத்தில் ஒரு தொழிலாளியை வேலையை விட்டு தூக்க முடியாது. அதற்கு பிற தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

9.//அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.// - யோதிலிங்கம்

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்து விட்டால், ஒரே இரவுக்குள் எல்லாம் மாறி விடுவதில்லை. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த மாதிரியே அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது, சிறிது காலத்திற்கு பெரும்பாலான நிறுவனங்களை ஒரே மாதிரித் தான் நிர்வகிக்க வேண்டி இருக்கும். அது தவிர்க்க முடியாதது. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த அதே அதிகாரிகள், நிர்வாகிகள் தமது கடமையை செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல், சோஷலிச ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புண்டு. இதைத் தடுப்பதற்கு ஒரு வர்க்கப் போராட்டம் அவசியம்.

ஸ்டாலின் காலத்தில் "கொடூரமான சர்வாதிகார ஆட்சி" நடந்ததாக இன்றைக்கும் பரப்புரை செய்யப் படுகின்றது. மாவோ காலத்து கலாச்சாரப் புரட்சி பற்றியும் எதிர்மறையான கதைகள் பரப்பப் படுகின்றன. உண்மையில் அப்போது நடந்தது வர்க்கப் போராட்டம். அந்தக் காலகட்டத்தில் ஊழல் முற்றாக ஒழிக்கப் பட்டிருந்தது! 

ஸ்டாலின் காலத்தில், ஒரு அதிகாரி ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால், மக்கள் விழிப்புடன் இருந்து இரகசியப் பொலிசிற்கு அறிவித்தார்கள். அதற்குப் பிறகு அவர் சிறையில் தான் காலம் கழிக்க வேண்டியிருக்கும். சிலநேரம் மரணதண்டனையும் விதித்தார்கள். அதனால், ஊழல் செய்வதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள். அவர்களை காட்டிக் கொடுப்பது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட வேலை செய்யும் பணியாளாக இருக்கலாம் அல்லது குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம்.

சீனாவில், கலாச்சாரப் புரட்சி வித்தியாசமாக நடந்தது. அங்கு மக்கள் ஒன்றுசேர்ந்து, ஊழல் செய்த அதிகாரியை பிடித்து, சந்தியில் கட்டி வைத்து அவமானப் படுத்தினார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். சிறை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். அதனால், கலாச்சாரப் புரட்சி நடந்த பத்து வருட காலத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகார கட்டமைப்பில் மேல் தட்டில் இருந்தவர்களும் ஊழல் செய்து பிடிபட்டால் மக்களினால் அவமானப் படுத்தப் பட்டனர். 

பிற்குறிப்பு: படித்த மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக அல்லது வலதுசாரிகளாக இருப்பது தற்செயல் அல்ல. பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் அவர்கள் படிக்கும் காலத்திலேயே,  முதலாளித்துவவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். அதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Sunday, January 29, 2017

ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

ஈழத்தமிழ் சூழலில் வலதுசாரிகள் தம்மை தமிழ்த் தேசிய போர்வையால் மறைத்துக் கொண்டு, காழ்ப்புணர்வுடன் இடதுசாரிகள் மீது அவதூறு பரப்பும் வேலையை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களில் ஒருவர்.

 அவர் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி உறுப்பினராகவோ, ஆதரவாகவோ இருப்பது அவரது அரசியல் தெரிவு. ஆனால், இடதுசாரிகள் மீதான வன்மம் காரணமாக உண்மைக்குப் புறம்பான கதைகளை கூறுவதன் மூலம் தமிழ் மக்கள் சுரண்டப் படும் கொடுமையை மறைக்கப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஆசிரியர் போன்ற அறிவுஜீவிகளின் தவறான கருத்துக்கள், சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//ஈழ‌த்து சூழ‌லில் வ‌ல‌துசாரிக‌ள் அயோக்கியர்களாக, பொய்ய‌ர்க‌ளாக‌, புளுக‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். தேர்த‌லில் ம‌க்க‌ளை ஏமாற்றி பாரளும‌ன்ற‌ ப‌த‌விக‌ள் எடுப்ப‌தில் குறியாக‌ இருந்த‌ன‌ர். ஆயுத‌ப் போராட்ட‌ம் தொட‌ங்கிய‌தும் புலிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை விதித்த‌ன‌ர். பலரை துரோகி என்று போட்டுத் தள்ளினார்கள். அதனால், வ‌ல‌துசாரித் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் அனைவ‌ரும் கொழும்புக்கு சென்று அர‌சுட‌ன் ஒட்டிக் கொண்டார்க‌ள். அவ்வாறு தான் ஒட்டுக் குழு உருவானது. 

ஈழத்து சூழலில் வலதுசாரிகள் சாதிவெறியர்களாக இருந்தனர். அத்துடன் இனவாதிகளாக, மதவாதிகளாக, ஆணாதிக்கவாதிகளாகவும் இருந்தனர். 1940களுக்கு பின்னரான காலத்திலும் அவர்கள் மாறவில்லை. தமிழ்த் தேசிய போராட்டத்தில், தமிழ் மக்கள் இவர்களை மதிப்பிடுவதில் பெரும் தவறுகளை இழைத்தனர்.
 
வ‌ர‌லாறு முக்கிய‌ம் ஆசிரிய‌ரே! // 
இவ்வாறு பேஸ்புக்கில் நான் போட்ட பதிவொன்றுக்கு அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. அது சரியென்றோ, தவறென்றோ கூறவில்லை. அவரது பதிலில், வலதுசாரிகள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

அதற்கு மாறாக, பதில் கூற முடியாமல் வேறு இடத்திற்கு தாவுகிறார். வழமை போல, இடதுசாரிகள் மீது அவதூறு செய்யும் பிரச்சார வேலையை தொடங்கி விடுகிறார்: //இரண்டு வகையான இடதுசாரிகள் இருந்தனர்,பாரம்பரிய இடதுசாரிகள்,விடுதலைஇயக்க இடதுசாரிகள், முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர். இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின,இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர். புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழ்த் தேசியத்திற்கே எதிரிகளாக மாறினர். தேசியசக்திகளிடமிருந்த போராட்ட நேர்மை இவர்களிடம் இருக்கவில்லை.//


இவரது பதில் முழுவதும் வார்த்தை ஜாலங்களால் படிப்பவரின் மனதை மயக்கி தவறான கருத்தை திணிப்பதாக உள்ளது. அதனால், அரிசியில் கல் பொறுக்குவது மாதிரி, ஒவ்வொரு வார்த்தையாக கவனமாக எடுத்து ஆராய வேண்டியுள்ளது.

முதலில் இடதுசாரி என்றால் யார்? ஆசிரியர் யோதிலிங்கம் உண்மையிலேயே தமிழ் மக்களின் (கவனிக்கவும்: மக்களின்) நலன் குறித்து சிந்திப்பவராக இருந்தால், அவரும் ஓர் இடதுசாரியே. அதற்கு மாறாக அவர் முதலாளிகளின் நலன் குறித்து சிந்திப்பவர் என்றால் ஒரு வலதுசாரி. இதில் அவர் எந்தப் பக்கத்தில் நிற்கிறார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

(தமிழ்த்) தேசியவாதிகள் என்றால், அவர்கள் வலதுசாரிகளோ, இடதுசாரிகளோ அல்ல என்பது மாதிரி வாதிடுவது பாமரத்தனமானது. (தமிழ்த்) தேசியவாதிகள் என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும், நிச்சயமாக அதற்குள் வலது - இடது பிரிவுகள் இருக்கும். ஓர் அறிவுஜீவி, அதிலும் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் பாமரத்தனமாக பேசுவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.

நீங்கள் என்னதான் புலிகளை ஒரு வலதுசாரி இயக்கமாக காட்ட நினைத்தாலும், அதற்குள்ளும் ஆரம்பம் முதல் இறுதி வரை இடது - வலது வேற்றுமைகள் இருந்தன. அப்படி இல்லாமல் அது பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை இயக்கமாக இருக்க முடியாது. வலதுசாரிப் புலிகளும், இடதுசாரிப் புலிகளும் முரண்பட்ட இடங்கள் பலவுண்டு. அவர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. புலிகள் அமைப்பில் இருந்த பல போராளிகள் இந்த உண்மையை உறுதிப் படுத்தி உள்ளனர்.

"பாரம்பரிய இடதுசாரிகள்" - மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவற்றை இவர் அப்படிக் குறிப்பிடுகின்றார். இலங்கையில் சிறிதும் பெரிதுமாக குறைந்தது பத்து இடதுசாரிக் கட்சிகளாவது இருந்தன, தற்போதும் உள்ளன. அவை எல்லாம் சிறிலங்கா அரசை ஆதரித்தன என்று காட்ட முனைவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது.

மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசை ஆதரித்த போதிலும், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றது. அதன் வரலாற்றில் ஒரு தடவையாவது அரசை ஆதரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மேலும் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட புதுவை இரத்தினதுரை, தமிழ்ச்செல்வன் போன்றோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பால் அரசியல்மயப் பட்டவர்கள். இவர்களை விட வேறு சிலரும் புலிகள் அமைப்பில் இருந்தனர்.

அன்டன் பாலசிங்கம் யார் தெரியுமா? நவ சம சமாஜக் கட்சி உறுப்பினராக இருந்தவர். அவர்களது தொழிலாளர் பாதை பத்திரிகையில் எழுதி வந்தவர். அவர் தான் பிற்காலத்தில் புலிகளின் தத்துவ ஆசிரியர் என்றும் தேசப் பிதா என்றும் புகழப் பட்டார். அது சரி, அன்டன் பாலசிங்கத்தின் சமசமாஜக் கட்சி என்ன செய்தது? ஆசிரியர் யோதிலிங்கம் சொல்வது போல "இனவாதிகளுடன் (அரசுடன்) சேர்ந்து கொண்டது."

இலங்கையில் அன்றும் இன்றும் பல சிறிய இடதுசாரிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருந்தன. சில இப்போதும் உள்ளன. அவை எல்லாம் அரசை அல்லது இனவாதிகளை ஆதரிக்கின்றன என்பது, குறுகிய மனப்பான்மை கொண்ட சிறுபிள்ளைத்தனமான வாதம். அவற்றில் சில தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றன. விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற சில சிங்கள இடதுசாரிகள் வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்தனர். இந்த உண்மைகளை மறைப்பதும், திரிபு படுத்தி அவதூறு செய்வதும் ஓர் ஆசிரியருக்கு அழகல்ல.

//முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்.// இது ஒரு பக்கச் சார்பான திரிபுபடுத்தப் பட்ட கருத்து.

அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். அதை அலசி ஆராய வேண்டும். சாதாரணமான மூன்றந்தர அரசியல்வாதி மாதிரி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தெற்கில் சிங்களத் தேசியவாதம் பலமான சக்தியாக உருவானது. அது இடதுசாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து தனக்குள் உள்வாங்க முயற்சித்தது. இதே நிலைமை தான் வடக்கிலும் நிலவியது. அங்கு பலமான சக்தியாக இருந்த தமிழ்த் தேசியவாதம், இடதுசாரிகளை மிரட்டி தனக்கு கீழே அடிபணிய வைத்தது.

இந்த நிலைப்பாடு சரியென்று, ஆசிரியர் யோதிலிங்கம் வழிமொழிகிறார். அதாவது, தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே "நல்ல இடதுசாரிகள்" என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். இதையே தான் தெற்கில் சிங்களத் தேசியவாதிகளும் செய்தார்கள்! எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இனவாதம் என்ற கருத்தியலும், தேசியவாதம் என்ற கருத்தியலும் பல இடங்களில் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் எதிரி இனத்தவரான சிங்களவர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் தான். அதே மாதிரித் தான் சிங்களத் தேசியவாதிகளும் சிந்திக்கிறார்கள். தமிழர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் என்கிறார்கள்.

முன்பு யாராவது ஒரு தமிழர், புலிகளுக்கு ஆதரவான நியாயத்தை பேசினாலே இனவாதி என்று முத்திரை குத்தினார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளும் இனவாதம் என்று ஒதுக்கப் படுவதுண்டு.

இன முரண்பாடுகளால் பிளவுபட்ட ஒரு நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். அவர்களுக்கு இவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இவர்களுக்கு அவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இதற்குப் பின்னால், இனங்களை பிரித்தாளும் அரசின் சூழ்ச்சி இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஆசிரியர் யோதிலிங்கத்திடம் ஒரு கேள்வி. "பாரம்பரிய இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்." என்று சொல்கிறீர்களே. யார் அந்த இனவாதிகள்? அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? நான் அவர்கள் தான் வலதுசாரிகள் என்கிறேன். உங்களால் மறுக்க முடியுமா?

சந்தேகம் இருந்தால், நீங்கள் எழுதிய அரசறிவியல் ஓர் அறிமுகம் நூலை வாசித்துப் பாருங்கள். அதிலே தீவிர வலதுசாரிகளான பாசிஸ்டுகள் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள்? //இவர்கள் தீவிர தேசியவாதிகளாகவும், இனவாதிகளாகவும், சோஷலிசத்தை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.// இது நீங்கள் எழுதியது தான்!

இனவாதிகளான வலதுசாரிகளுக்குள், இடதுசாரிகள் மூழ்கினார்கள் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அவர்கள் வலதுசாரிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தம்! அதாவது அவர்களை இப்போதும் நீங்கள் இடதுசாரிகள் என்று அழைப்பது அரசியல் அறிவியல் படி தவறாகும். ஏன் அந்தத் தவறை தெரிந்து கொண்டே செய்கிறீர்கள்?

//இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின//

இது ஒரு அப்பட்டமான வரலாற்றுத் திரிபுபடுத்தல் மட்டுமல்ல, அடுத்த அவதூறுக்கான தயார்படுத்தல். ஆசிரியரே, நீங்கள் எண்பதுகள், தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையை சேர்ந்தவர் அல்ல. ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைமைகளை தாங்கள் நேரில் கண்டிருப்பீர்கள். எதற்காக இல்லாததை எல்லாம் திரிக்கிறீர்கள்?

1986 ம் ஆண்டிலிருந்து, புலிகள் தம்மைத் தவிர வேறு அமைப்புகள் இயங்குவதை தடை செய்தனர். டெலோவை அழித்தொழித்த நடவடிக்கையின் பின்னர், மற்றைய இயக்கங்களை பகிரங்க அறிவித்தல் மூலம் தடை செய்தனர். போராளிகளிடம் இருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த உண்மை தெரிந்தும் "தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின" என்று திரிப்பது எதற்காக?

தனிநபர் பிரச்சினை எல்லா இயக்கங்களிலும் இருந்தன. அவற்றிற்குள் பிளவுகள் ஏற்பட்டன. புலிகளில் இருந்து புளொட் பிரிந்தது. பின்னர் அதிலிருந்து தீப்பொறி பிரிந்தது. ஈரோசில் இருந்து ஈபிஆர்எல்ப் பிரிந்தது. NLFT யில் இருந்து PLFT பிரிந்தது. இந்த உண்மைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், புலிகள் தடை செய்யும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்தன.

//இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.// இதைக் கேட்கும் பொழுது, கிராமங்களில் பாமர மக்களின் திண்ணைப் பேச்சு போலுள்ளது. எண்பதுகளில் அனேகமாக எல்லா இயக்கங்களும், சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. ஈழப்போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக ஈரோஸ் தான் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்திருந்தது. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. தெரிந்து கொண்டும் மறைக்கிறீர்கள்.

//சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர்.// ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்ததும், அவர்களில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். பலர் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் இருந்தனர். அவர்களில் மீண்டும் ஒன்று சேர்த்த இந்திய அரசு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஈழத்தில் கொண்டு சென்று இறக்கியது.

அவர்கள் அப்போது இந்திய இராணுவத்தின் துணைப்படையாக அல்லது ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்தக் காலத்தில் தான் புலிகளை வேட்டையாடினார்கள். அப்போது புலிகள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று, சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கள இராணுவம் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தது. புலிப் போராளிகளை தனது முகாம்களில் மறைத்து வைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களே! இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, "இனவாதத்திற்குள் மூழ்கியவர்கள், அல்லது ஒட்டுக்குழுக்கள்" என்று ஒட்டுமொத்த இடதுசாரிகளையும் அவதூறு செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியவாதிகள் பற்றியும் இதே மாதிரி சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில், அதன் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். உண்மையில், பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகள் பெரும்பாலும், புலிகளால் தான் அழித்தொழிக்கப் பட்டனர்.

கூட்டணி மட்டுமல்ல, டெலோ, ஈபிஆர்எல்ப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், தசாப்தகாலம் அரச ஒட்டுக்குழுக்களாக இருந்து விட்டு, புலிகளிடம் ஞானஸ்நானம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்கள். அதே நேரம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இப்போதும் அரச ஒட்டுக்குழுவாக இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியவாதிகள் என்றால், அதற்குள் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? ஏற்கனவே இந்தக் கேள்வியை பல தடவைகள் கேட்டு விட்டேன். ஆனால், இன்று வரையில், உங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. என்ன காரணமோ? தாங்களும் வலதுசாரி என்பதாலா? அது சரி, "நான் ஒரு வலதுசாரி தான்" என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு என்ன தயக்கம்? வலதுசாரி என்பது ஒரு கெட்ட வார்த்தை இல்லைத் தானே?

Thursday, January 26, 2017

#தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை


#தோழர் என்ற வார்த்தையை பிரபலமாக்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் சைலேந்திரபாபுவுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

 "முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது." சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. அதன் பின்னணி என்ன? 'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!

#தோழர் என்று அழைப்பது தமிழர் பாரம்பரியம். சங்க காலம் தொட்டு தமிழ் மக்களிடையே வழங்கி வரும் அருமையான சொல். தமிழர் மரபை ஒட்டி தோழமை, தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார்.

#தோழ‌ர் என்று சொன்னால் அர‌ச‌ ஒத்தோடிக‌ளுக்கு கோப‌ம் வ‌ருகின்ற‌து. அதிகார‌ வ‌ர்க்க‌த்திற்கு சேவை செய்யும் த‌ம‌து அடிவ‌ருடித் த‌ன‌த்தை ம‌றைப்ப‌த‌ற்கு த‌மிழ‌ர்க‌ளை போர்வையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிறார்க‌ள்.

#தோழர் என்ற சொல் யார் யாருக்குப் பிடிக்காது?

1. பழமைவாதிகள் அல்லது சாதியவாதிகள்.
2. மத அடிப்படைவாதிகள் (இந்து/முஸ்லிம்/கிறிஸ்தவம்)
3. அரச அதிகார வர்க்கம், அதன் அடிவருடிகள்.
4. முதலாளிகள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர்.

சில கயவர்கள் தோழர் என்ற சொல்லை, ஒரு வசைச் சொல்லாக, கீழ்த்தரமான மனப்பான்மையுடன் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக சாதிவெறியர்கள், தமது ஆணவத்தை மறைப்பதற்காக தோழர் என்று சொல்லி கிண்டல் அடிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அது புரிந்து கொள்ளப் படுகின்றது.

ஐ.எஸ்., அல்கைதா போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு தோழர் என்று சொன்னால் பிடிக்காது. அதே மாதிரி, தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிவெறியர்கள், பழமைவாதிகளும் தோழர் ஒரு தீண்டத்தகாத சொல் என்று கருதுகிறார்கள். தமிழ்மக்கள் இப்படியான கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.

ப‌ழ‌மைவாதிக‌ள், சாதிய‌வாதிக‌ளை அச்சுறுத்தும் #தோழ‌ர் என்ற‌ வார்த்தை.

#தோழ‌ர் என்ப‌த‌ற்குப் ப‌திலாக‌ அண்ணா, த‌ம்பி, அக்கா, த‌ங்கை என்று உற‌வுமுறைச் சொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துமாறு சில‌ர் எதிர்ப் பிர‌ச்சார‌ம் செய்கிறார்க‌ள்.

த‌மிழ‌ர்க‌ளே! ப‌ழ‌மைவாதிக‌ளின் பொறிக்குள் அக‌ப்ப‌ட்டுக் கொள்ளாதீர்க‌ள்.

நில‌ப்பிர‌புத்துவ‌ கால‌த்தை சேர்ந்த‌, அந்த‌ உற‌வு முறைச் சொற்க‌ள் ஏற்ற‌த்தாழ்வை வ‌லியுறுத்துகின்ற‌ன‌. ச‌ம‌த்துவ‌த்தை ம‌றுக்கின்ற‌ன‌. இது உண்மையில் ம‌ன்ன‌ராட்சி கால‌ பார‌ம்ப‌ரிய‌ம்.

அதாவ‌து, க‌ட‌வுளின் பூலோக‌ பிர‌திநிதியான‌ ம‌ன்ன‌ரையும், அத‌ற்க‌டுத்த‌ ப‌டி நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளையும் ப‌ல‌வித‌ ம‌ரியாதைச் சொற்க‌ளால் அழைக்க‌ வேண்டும். சாதார‌ண‌ குடி ம‌க்க‌ள் த‌ம‌க்குள் உற‌வு முறைச் சொற்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் ச‌மூக‌ப் ப‌டி நிலையை காப்பாற்றி வ‌ந்த‌ன‌ர்.

மேலை நாடுக‌ளில் அந்த‌ப் ப‌ழ‌க்க‌ம் இல்லை. பொதுவாக‌ எல்லோரையும் பெய‌ர் சொல்லி அழைக்கிறார்க‌ள். அத‌ன் மூல‌ம் நட்பு நெருக்க‌மாவ‌தாக‌ உண‌ர்கிறார்க‌ள்.

ஆனால், ச‌வூதி அரேபியா போன்ற‌ க‌டும்போக்கு இஸ்லாமிய‌ நாடுக‌ளில் நிலைமை வேறு. முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும் தோழ‌ர் என்று சொன்னால் பிடிக்காது. அத‌ற்குப் ப‌திலாக‌ ச‌கோத‌ர‌ன், ச‌கோத‌ரி என்று சொல்ல‌ வேண்டும்.

ஆகவே, 21ம் நூற்றாண்டில் வாழும், நாக‌ரிக‌ம‌டைந்த‌ த‌மிழ‌ர்க‌ளான‌ நாங்க‌ள், #தோழ‌ர் என்று அழைத்துக் கொள்வ‌த‌ன் மூல‌ம், ந‌ம‌க்குள் ச‌ம‌த்துவ‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

"புலிகள் #தோழர் என்று சொல்லாத படியால், நாங்களும் சொல்ல மாட்டோம்" என்று ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் விதண்டாவாதம் செய்கின்றனர். அது ஓர் அர்த்தமற்ற, நகைப்புக்குரிய வாதம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னை ஓர் அரசியல் இயக்கமாக அல்லாமல், இராணுவமாக கருதி வந்தது. இறுதிக் காலங்களில் தம்மை ஒரு மரபு வழி இராணுவமாக காட்டுவதில் பெருமைப் பட்டனர். அவர்களது போராளிகளும், ஆதரவாளர்களும் இராணுவ தாக்குதல்கள் பற்றிய தகவல்களை நாள் கணக்காக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசியல் பற்றிப் பேசியவர்கள் மிகச் சொற்பம். விரல் விட்டு எண்ணி விடலாம்.

பிரிட்டிஷ் காலனிய இராணுவம் தான் பிற்காலத்தில் சிறிலங்கா இராணுவமானது. அந்த மரபை புலிகளும் பின்பற்றினார்கள். கமாண்டர், ஜெனரல், லெப்டினன்ட் கேர்னல், மேஜர் போன்ற இராணுவ அடுக்கு நிலையை கறாராக பேணி வந்தனர். அதன் அர்த்தம், மேலிருந்து வரும் உத்தரவுகளுக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் கட்டுப்பட வேண்டும். கேள்வி கேட்க முடியாது.

தோழர் என்ற சொற்பிரயோகம், சிலநேரம் இராணுவக் கட்டமைப்பை குலைத்து விடும். அதாவது, எல்லோரும் சமம் என்ற எண்ணம் உருவாகி விடும். கீழ்நிலைப் போராளிகள், மேல்நிலை தளபதிகளை தோழர் என்று அழைப்பார்கள். அது சமத்துவ உணர்வை உண்டாக்கி விடும். அது விரும்பத் தக்கதல்ல என்பதால் தான், புலிகள் தோழர் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஆனால், இன்றைய ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் ஓர் இராணுவ கட்டமைப்புக்குள் வாழவில்லை. அவர்கள் புலிகளை ஆதரிப்பது அரசியல் கொள்கை சம்பந்தமான விடயம். புலிகள் செய்தது மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. புலிகளின் முகாம்களுக்குள் இயக்கப் பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

விடுதலைப் புலி உறுப்பினர்கள், தமிழக திரையிசைப் பாடல்கள் கேட்பதும், தமிழக சினிமாப் படம் பார்ப்பதும் தடை செய்யப் பட்டிருந்தன. இன்றைக்கு புலிகளை ஆதரிப்பவர்களும் அப்படியா நடந்து கொள்கிறார்கள்? புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, முன்னாள் போராளிகள் கூட சினிமாப்படம் பார்க்கிறார்கள், சினிமாப் பாடல்கள் கேட்கிறார்கள். இதெல்லாம் புலிகளின் கொள்கைக்கு முரணான விடயம் இல்லையா?

#தோழர் என்ற அரசியல் கலைச் சொல் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்:

- பிரெஞ்சுப் புரட்சி கொண்டு வந்த சமுதாய மாற்றங்களில் ஒன்று. புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் தோழர் என்று அழைத்துக் கொண்டனர். "ஐயா", "அம்மா" என்றழைக்கும் நிலப்பிரபுத்துவ கால சொற்களுக்கு மாற்றீடாக பயன்பட்டது.

- மூலச் சொல் லத்தீனாக இருக்கலாம். "ஒரே அறையில் தங்கியிருப்பவர்" எனும் பொருள் கொண்ட அடிப்படை சொல்லில் இருந்து வந்திருக்கலாம்.

- காமராட் (camarade) என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் காம்ரேட் (comrade) வந்தது. (அதாவது, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்.)

- ஜெர்மன் மொழி பேசும் மக்கள் மத்தியில் "காமராட்"(Kamerad) என்று அழைத்துக் கொள்ளும் கலாச்சாரம் இருந்து வந்தது. பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஒருவரையொருவர் காமராட் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம், இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களைக் கேட்டால் தெரியும்.

- துருக்கிய மொழிகளில் "யொல்டாஷ்" என்பார்கள். சேர்ந்து பயணிப்பவர் என்று அர்த்தம்.

- ரஷ்ய மொழியில் "தவாரிஷி". அதன் மூலச் சொல் ஏதாவதொரு துருக்கி மொழியாக இருக்கலாம். அதாவது, "சேர்ந்து பயணிப்பவர்" என்ற அர்த்தம் கொண்டது.

- தமிழில் "தோழர்", அரபியில் "ராபீக்". இது போன்று பல உலக மொழிகளில், நண்பர், தோழர் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்களாக பாவனையில் உள்ளன.

பிற்குறிப்பு: உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், பழமைவாதிகள், மத அடிப்படைவாதிகள் போன்ற பிற்போக்குவாதிகள், தோழர் என்று அழைப்பதை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக சகோதரர்/சகோதரி என்று சொல்லிக் கொள்வார்கள்.

Tuesday, January 24, 2017

தோழர் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!


//"உங்கள் பிள்ளைகளின் செல்போனை ஆய்வுசெய்து புதுநபர்களின் எண்கள் இருந்தால் டெலிட் செய்யுங்கள் யாராவது தோழர் என அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்”// - சைலேந்திரபாபு IPS, TN.

//மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.// - கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ('மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்)

தமிழ்நாட்டில், "அரபு வசந்தம்" பாணியில் நடந்த "ஜல்லிக்கட்டு போராட்டம்" அதன் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உண்டாக்கி இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான போராட்டமாகவும், தமிழர் பாரம்பரிய மீட்புப் போராட்டமாகவும் தான் கருதப் பட்டது. பெரும்பாலான போராட்டக் காரர்கள், குறிப்பாக மாணவர்கள், "தமிழின உணர்வு" காரணமாகத் தான் போராட்டத்திற்கு வந்திருந்தனர். ஊடகங்களில் அதற்கு கிடைத்த முக்கியத்துவமும் பலரை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளாக வந்ததும் குறிப்பிடத் தக்கது.

போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்கு அரசியல் பேசப்படவில்லை. அது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு பிரிவினர் அரசியல் கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அப்போதே அது ஒரு ஜனநாயக போராட்டமாக மாறி விட்டது. வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயங்களுடன் அது நின்று விடவில்லை. அதனால், பல்வேறு கம்யூனிச, இடதுசாரி அமைப்புகள் அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களும் போராட்டக் களத்தை பயன்படுத்திக் கொண்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாடினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இடதுசாரிகள் போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. அதுவரையும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 180 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலதுசாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே "ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அது அரசுக்கு சாதகமான விடயம்.

வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசி வந்தன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டன என்ற உண்மையை வேண்டுமென்றே மறைத்தன.

அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம். குறிப்பாக இடதுசாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்டன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நின்றதன் விளைவு அது. அவர்கள் அங்கு வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.

உண்மையில், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எழுச்சிப் போராட்ட‌ம் ஜனவரி 23 திங்கட்கிழமை தான் ஆர‌ம்பித்துள்ள‌து. சென்னை, மெரீனாவில் ஐயாயிர‌ம் போராட்ட‌க்கார‌ர்க‌ள் காவ‌ல்துறையின‌ரால் சுற்றி வ‌ளைக்க‌ப் பட்டனர். அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், த‌ண்ணீரும் எடுத்துச் செல்வ‌த‌ற்கு த‌டைவிதிக்க‌ப் பட்டது. மெரீனா அருகில் வாழ்ந்த மீனவர்கள் கடல் பக்கமாக படகுகளில் சென்று உதவினார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான தற்காலிக சட்டத்தை ஏற்றுக் கொண்டு, பெருமளவிலான போராட்டக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்று விட்டனர். எஞ்சியிருந்த கடும்போக்காளர்கள் மீது பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியது. பெண்கள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் குண்டாந் தடியால் அடித்தது. 

"பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி" என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.

த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே "த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை" தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?

அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.

இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. "அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!" என்று அரச கைக்கூலிகள் அறிவித்த பின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள் மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். "மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது." அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.

இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும். அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டி புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களை சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், "தேசியக் கொடி பிடித்தால், தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது" என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். "ஜனகண மண" பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவை சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும் பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகின்றது. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.

ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில், பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.

போராட்டக் களத்திற்குள் இடதுசாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசை பீதியுற வைத்துள்ளது. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.

இனிவரும் காலங்களில் இடதுசாரி அமைப்புகள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம். "தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்" என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடதுசாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். (நாம் தமிழர் என்ற வலதுசாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)

மேலும், "பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், "தோழர்" என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்" சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன் அர்த்தம் என்ன? இடதுசாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?

"பெற்றோரே பிள்ளைகளை காட்டுக் கொடுக்க வேண்டும்" என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
#தோழ‌ர் - அதிகார‌ வ‌ர்க்க‌த்தை அஞ்சி ந‌டுங்க‌ வைத்த‌‌ ஒரே சொல். த‌மிழ் நாட்டில் அது தான் எதிர்ப்பின் அடையாள‌ம். இனிமேல் தோழ‌ர் என்று சொல்ல‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டுவ‌ர். அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் எம‌க்கு தோழ‌ர்க‌ளே!

Saturday, January 21, 2017

தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டான்டா!!



த‌மிழ‌ன்டா! 
ஏறுத‌ழுவ‌ எதிரியும் வ‌ருவான்டா!! 
ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ம், 
இந்திய‌ அர‌சுக்கு கொண்டாட்ட‌ம். 
த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ம் பாதுகாப்போம், 
த‌மிழ் விவ‌சாயிகளை புற‌க்க‌ணிப்போம். 
பீட்சா, பேர்க‌ர் உண்போம், 
பீட்டா எம‌து எதிரி என்போம். 
த‌மிழ‌ன் என்று சொல்ல‌டா, 
த‌ன் ந‌ல‌ம் ம‌ட்டுமே நினைய‌டா!





அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! 

த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து.

த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)

பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மார‌டைப்பு க‌ண்டு, அல்ல‌து நோய் வாய்ப்ப‌ட்டு இற‌ந்துள்ள‌ன‌ர். குறைந்த‌து 50 பேராவது த‌ற்கொலை செய்து கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ர‌ட்சி, நில‌த்த‌டி ம‌ற்றும் ந‌தி நீர் குறைந்த‌மை போன்ற‌ இயற்கை பேரிட‌ர் இன்றும் தொட‌ர்கின்ற‌து. அதே நேர‌ம், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ இறுதியில், த‌மிழ் நாட்டில் இடம்பெற்ற இர‌ண்டு பெரிய அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ளும் விவசாயிகளின்  த‌ற்கொலை சாவுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்துள்ள‌ன‌.

முதலாவதாக, மோடி கொண்டு வந்த க‌றுப்புப் ப‌ண‌ ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவ‌சாயிக‌ளை பெரும‌ள‌வு பாதித்துள்ள‌து. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவ‌சாயிக‌ள் க‌ந்துவ‌ட்டிக்கார‌ரிட‌ம் க‌ட‌ன் வாங்கினார்க‌ள். இறுதியில், அதையும் க‌ட்ட‌ முடியாம‌ல் உயிரை மாய்த்துக் கொண்ட‌ன‌ர்.

இரண்டாவதாக, முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாத‌க் க‌ண‌க்கில் ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌ந்த‌தால், அர‌ச‌ நிதி ஒதுக்கீடுக‌ளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை. அந்த வருட ப‌ட்ஜெட் கூட‌ இய‌ந்திர‌த் த‌ன‌மாக‌ நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அதிகார‌ ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ள் இழைத்த‌ த‌வ‌றுக‌ளுட‌ன், இய‌ற்கையும் ஏமாற்றிய‌தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் தான்.

ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ போராடும் த‌மிழ‌ர்க‌ளே! இந்த‌ உண்மைக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் ம‌றைப்ப‌த‌ற்குத் தான், அர‌சே திட்டமிட்டு உங்க‌ளுக்கு த‌மிழ் இன‌ உண‌ர்வை ஊட்டி வ‌ருகின்ற‌து. "த‌மிழ‌ன்டா" என்று நீங்க‌ள் பொங்கியெழும் ஒவ்வொரு த‌ட‌வையும் அர‌சு வெற்றிப் பெருமித‌த்தால் பூரித்துப் போகின்ற‌து.

இத‌ற்குப் பிற‌கும், இத்த‌னை இல‌ட்ச‌ம் ச‌ன‌ம் எப்ப‌டி சேர்ந்தார்க‌ள் என்று கேட்கிறீர்க‌ள். இப்போது இது மாதிரி வேறு க‌தை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று த‌டுக்கிறீர்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வை திசை திருப்புவ‌தாக‌ கொதிக்கிறீர்க‌ள். உங்களை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் நக்க‌ல், நையாண்டி செய்வ‌தாக‌ குமுறுகிறீர்க‌ள்.இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் உங்க‌ளுக்கு பொருந்தாதா? 

அர‌சின் த‌வ‌றுக‌ளால் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்த‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியே வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து, ம‌றைமுக‌மாக‌ அர‌சுக்கு உத‌வுகிறீர்க‌ள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?

த‌மிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையும் வரலாறு காணாத வ‌ற‌ட்சியால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)

ஜ‌ல்லிக்க‌ட்டு என்ற‌ ப‌ழ‌ந்த‌மிழ் பார‌ம்ப‌ரிய‌த்தையும், மாடுக‌ளையும் பாதுகாப்ப‌து ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளின் க‌ட‌மையா? உங்க‌ளைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவ‌சாயிக‌ளை ம‌ர‌ண‌த்தின் பிடியில் இருந்து பாதுகாப்ப‌து த‌மிழ‌ரின் க‌ட‌மை இல்லையா?

த‌மிழ் ம‌ர‌பை இழ‌ந்தால் த‌மிழ் இன‌மே அழிந்து விடும் என்று க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள். த‌மிழ் விவ‌சாயிக‌ளை இழ‌ந்தால் ஒரு நேர‌ உண‌வு கூட‌க் கிடைக்காது என்று நீங்க‌ள் க‌வ‌லைப் பட்டதுண்டா? இப்போது உண‌வு வாங்க‌ எம்மிட‌ம் ப‌ண‌ம் இருக்கிற‌து தானே என்று மேட்டுக்குடித் திமிருட‌ன் பேச‌லாம்.  நாளைக்கு உண‌வுப் பொருட்க‌ளின் விலை உய‌ர்ந்தால், அது உங்க‌ள் மாத வ‌ருமான‌த்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்க‌வில்லையா?

பாலைவன‌மாகிப் போன‌ த‌ஞ்சாவூர் ம‌ண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ள் உங்க‌ளுக்கு உற‌வுக் கார‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவர்கள் த‌மிழ‌ர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்ப‌லாக‌ ப‌டுகின்ற‌தா? அப்ப‌டியானால், உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் "யார் த‌மிழ‌ன்?" ஆங்கில‌ வ‌ழிக் க‌ல்வி க‌ற்று, அந்நிய‌ நாட்டு நிறுவ‌ன‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளா?

உங்க‌ள் த‌மிழ் தேச‌ ம‌ண்ணில், உங்க‌ள் க‌ண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனும‌தி கேட்டு போராடுவ‌து எத்த‌னை பெரிய‌ மோச‌டி? இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் ம‌னித‌நேய‌த்தை நையாண்டி செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வில்லையா?

இப்போதும் இந்த‌ உண்மைக‌ள் ம‌ண்டையில் ஏற‌வில்லை என்றால் எதிர்கால‌ம் சூனிய‌மாகும். ப‌ட்டினிச் சாவுக‌ள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவ‌ல‌ம் அல்ல‌. அது நாளை த‌மிழ் நாட்டிலும், இல‌ங்கையிலும் ந‌ட‌க்க‌லாம். அப்போது இந்த‌ தமிழ் இன‌ உண‌ர்வுவாத‌ம் எத‌ற்குமே உத‌வ‌ப் போவ‌தில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில் மட்டும் தடை ஏன்?


"த‌மிழ் நாட்டின் அர‌பு வ‌ச‌ந்த‌ம்" "TAMILS vs PETA" என்றெல்லாம் வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ங்க‌ளை சித்த‌ரிக்கின்ற‌ன‌.

ச‌ந்தேக‌த்திற்கிட‌மின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முத‌லாளிக‌ளுக்கு த‌லையிடியாக‌ இருந்த‌ என்.ஜி.ஓ. மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் அத‌ன் ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் ப‌ல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

உதார‌ண‌த்திற்கு, முய‌ல், மான் போன்ற‌ வ‌ளர்ப்பு மிருக‌ங்க‌ளின் தோல்க‌ளில் இருந்து த‌யாரிக்க‌ப் ப‌டும் உடைக‌ளுக்கு எதிராக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து. அத‌னால், ப‌ண‌க்கார‌ வீட்டுப் பெண்க‌ள் அணியும் விலை உய‌ர்ந்த‌ உடைக‌ளின் விற்ப‌னை வீழ்ச்சி க‌ண்ட‌து.

இத‌ற்கு முன்ன‌ர் ஸ்பெயின் நாட்டில் ந‌ட‌க்கும் மாடு பிடிக்கும் விளையாட்டை த‌டை செய்ய‌ வேண்டுமென‌ பீட்டா போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விர‌ட்டி ஈட்டி எறிந்து கொல்வார்க‌ள். அத‌னோடு ஒப்பிடும் பொழுது த‌மிழ‌க‌ ஜ‌ல்லிக்க‌ட்டு குரூர‌மான‌து அல்ல‌.

இந்திய‌ பீட்டா அமைப்பில் இந்துத்துவா - பிராம‌ண‌ர்க‌ள் இருப்ப‌து ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம். அதாவது, பிராம‌ண‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌மான‌ மாமிச‌ உண‌வின் மீதான‌ வெறுப்புண‌ர்வு, கோமாதா வ‌ழிபாடு போன்ற‌ன‌ பீட்டாவின் கொள்கையுட‌ன் ஒத்துப் போகின்ற‌ன‌. ஆனால், ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் பீட்டாவின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளுட‌னும் ஒத்துப் போவார்க‌ள் என்று சொல்ல‌ முடியாது.

யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தில், "பீட்டாவின் பெய‌ரில் ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌மிழின‌ ம‌ர‌புரிமையை அழிப்ப‌தாக‌" அறிக்கை வாசித்தார்க‌ள்.

ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில், பீட்டா ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெறுப்புக்கு ஆளாகி உள்ள‌து. இங்கே என்ன‌வென்றால் அதையே ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மாக‌ காட்டும் அப‌த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.

இது அறியாமையில் நேர்ந்த‌ த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை. இந்துத்துவா பிராம‌ண‌ர்க‌ள் பீட்டாவுக்குள் ம‌றைந்து நிற்ப‌து அவ‌ர்க‌ள‌து சுய‌நல‌ம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் பின்னால் ம‌றைந்து கொள்ள‌லாம்.

IT ஊழிய‌ர்க‌ள் போன்ற‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரும் தெருவுக்கு வ‌ந்து போராடுகிறார்க‌ள் என்றால், அங்கே அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளும் பாதுகாக்க‌ப் ப‌டுகின்ற‌து என்று அர்த்த‌ம். அவ‌ர்க‌ள‌து வேலைக்கு உத்த‌ர‌வாத‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை மர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ மான்சாண்டோ போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை எதிர்த்து இவ‌ர்க‌ள் போராட‌வில்லை. இனிமேலும் போராட‌ப் போவ‌தில்லை. "த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ மான்சாண்டோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தை எதிர்ப்போம்" என்று வழ‌மையான‌ த‌மிழ்த் தேசிய‌ கோஷ‌த்தின் கீழ் போராட‌லாம். அதெல்லாம் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

இப்போதும் த‌மிழ் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை ப‌ற்றி எதுவும் அறிய‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் தான், ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ "த‌ன்னெழுச்சியாக‌" வ‌ந்து போராடினார்க‌ள். பீட்டாவை த‌மிழின‌ எதிரியாக‌ சித்த‌ரிப்ப‌து, உண்மையான‌ எதிரியின் திசைதிருப்பும் உத்தி. ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

பீட்டா த‌மிழின‌ எதிரி என்றால், மான்சாண்டோ த‌மிழின‌ ந‌ண்ப‌னாக இருக்க‌ முடியாது. முள்ளிவாய்க்கால் த‌மிழ் இனப்‌ப‌டுகொலையை ஆத‌ரித்த‌ IMF த‌மிழரின் ந‌ண்ப‌னாக‌ இருக்க‌ முடியாது. ‌ த‌ன‌து எதிரியை ச‌ரியாக‌ இன‌ம் காண‌ முடியாத‌ கும்ப‌லுக்குள், எதிரி இல‌குவாக‌ ஒளிந்து கொள்ள‌ முடியும். அது தான் ந‌ட‌க்கிற‌து.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் வழமை போல இந்த வருடமும் ஜல்லிகட்டு நடத்தப் பட்டுள்ளது. (Jallikattu organised in Andhra Pradesh CM Chandrababu Naidu's home district Chittoor; Two bulls die in AP jallikattu)

ஆகவே, நீதிமன்றத் தடை தமிழ்நாட்டில் மட்டுமே, ஆந்திராவில் அல்ல!

தமிழ்த் தேசிய கருத்தியலை நம்புவோருக்கு இந்தத் தகவல் உவப்பானதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள் "இது தமிழருக்கு மட்டுமே உரிய வீர விளையாட்டு" என்று நம்புவதுடன், அதையே பரப்புரை செய்து வருகின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த தமிழர்கள் ஜல்லிகட்டு விளையாடியதாக, இன வரலாறு பேசும் "மொழி ஆய்வாளர்கள்", வழமை போல இனத்தையும், மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

முதலில் ஜல்லிக்கட்டு என்ற பெயர்ச் சொல் எப்படி வந்தது என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. சல்லிக்கட்டு, அல்லது ஏறு தழுவுதல் என்று, தமிழினத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று காட்ட முனைகிறார்கள். தமிழரும், தெலுங்கரும் இனத்தால் ஒன்று தான். ஆனால், மொழியால் வேறு பட்டவர்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் விளையாடும் அதே ஜல்லிக்கட்டு, ஆந்திராவிலும் விளையாடப் படுகின்றது. 

ஜல்லிக்கட்டு என்ற சொல் கூட தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு எனும் மாட்டை துன்புறுத்தாத விளையாட்டு மட்டுமே இருந்திருக்கிறது. 500 வருடங்களுக்கு முன்னர், தெலுங்கு நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் தான், ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில், ஈழத்தமிழரின் பூர்வீகமான வடக்கு கிழக்கில், எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டு விளையாடப் பட்டிருக்கவில்லை.

தமிழருக்கும், தெலுங்கர்களுக்கும், பிற திராவிட மொழிப் பிரிவினருக்கும் இடையில், இது போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன. அப்படித் தான் சிந்துவெளி ஆதாரத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால், நமது தமிழ்த் தேசியவாதிகள் அல்லது மொழி அடிப்படைவாதிகள் அவற்றை கண்டுகொள்ளப் போவதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடிக் கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் விளையாடப் படுவதில்லை. மதுரை போன்ற தென் பகுதி மாவட்டங்களில் மட்டுமே உள்ள பாரம்பரிய விளையாட்டு. சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களின் ஆணவத்தை காட்டவும் விளையாடப் பட்டது. 2006 ம் ஆண்டு வரையில், ஜல்லிக்கட்டு காரணமாக சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், அதற்காக அந்த விளையாட்டு தடைசெய்யப் படவில்லை.

மிருகவதைக்கு எதிராக போராடும் பீட்டா போட்ட வழக்கின் காரணமாக வந்த தடை என்றால், அது ஆந்திராவிலும் வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தடை போடக் காரணம் என்ன? இதற்குப் பின்னால் சில அரசியல் காய்நகர்த்தல்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் நோக்கம் இருக்கலாம்.

இந்திய பீட்டா அமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் பிராமணர்கள். பீட்டா ஒரு NGO எனப்படும் அரசு சாரா நிறுவனம். அதே நேரம், பீட்டாவை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடும் BiCCI கூட ஒரு NGO தான். தமிழக வணிக ஊடகங்கள் மட்டுமல்ல, சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.

நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா என்றால், இளம் தலைமுறையினர் ஓடி வருவார்கள். இளங்கன்று பயமறியாது என்பது போல போராட்டத்திற்கு இளைஞர்கள் சேர்வது அதிசயமல்ல. ஆனால், அவர்களை வழிநடத்தும் அரசியல் சக்தி எதுவென்பது தான் பிரச்சினை.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் இந்து பாசிச சக்திகள், "ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள்" என்று பிரச்சாரம் செய்து தம் பக்கம் வென்றெடுக்க பார்க்கின்றன. அதற்கெதிராக இடதுசாரி சக்திகளும் களத்தில் நின்று போராடுகின்றன.

இந்து பாசிஸ்டுகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடும் மதக் கலவரங்களால் பாதிக்கப்படும். இடதுசாரிகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடு ஜனநாயக மயப் படும். தமிழ்நாட்டு மக்கள் இந்துமதவெறியர்களின் சூழ்ச்சிக்கு பலியாகினால், ஜனநாயகத்தை மீட்பதற்கு தசாப்த காலம் எடுக்கும்.

Sunday, January 15, 2017

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்! தைப் பொங்கலே அதற்கு ஆதாரம்!!


தமிழரின் இனம் எது? ஆப்பிரிக்க இனம்!

வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

அது மட்டுமல்ல, தமிழர்கள் தமது கலாச்சார பாரம்பரியம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு கூட ஆப்பிரிக்க தொடர்பை நிரூபிக்கின்றது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, சில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு விளையாடப் படுகின்றது. (பார்க்க: ஆப்ரிக்காவில் எருது தழுவுதல்)

ஜல்லிக்கட்டு எனும் மாடு பிடிக்கும் விளையாட்டு, ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வடக்கே உள்ள மத்தியதரைக் கடல் நாடுகளில் பரவி இருந்தது. இன்று கிரேக்க நாட்டிற்கு சொந்தமான கிரேட்டா தீவில் அது சம்பந்தமான பண்டைய ஓவியங்கள் கண்டெடுக்கப் பட்டன.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டில் விளையாடப் படும் மாடு அடக்கும் விளையாட்டு, அனேகமாக பினீசிய குடியேறிகளால் அங்கு பரவி இருக்கலாம். இன்றைய லெபனான் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பினீசியர்கள், ஒருகாலத்தில் ஸ்பெயின் உட்பட பல மத்திய தரைக் கடல் நாடுகளில் பரவி வாழ்ந்தனர்.

விவிலிய நூலில், பழைய ஏற்பாட்டில், யூதப் பழங்குடிகள் மாட்டை தெய்வமாக வழிபட்டதாக கூறுகின்றது. ஆண்டவரின் தூதுவர் மோசேஸ், எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மோசேஸ் தலைமையில், யூதர்கள் தமக்கு வாக்களிக்கப் பட்ட பூமிக்கு செல்லும் வழியில், ஒரு சிலர் ஓரிறைக் கொள்கையை மறுதலித்து, தங்கத்தால் செய்த காளை மாட்டுக் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஆத்திரமுற்ற மோசேஸ் அந்த தெய்வச் சிலையை அடித்துடைத்து விட்டு அதை வணங்கியவர்களுக்கு சாபமிட்டார். 

அது விவிலிய நூல் கூறும் புராண கால "மாட்டுக் கதை". உண்மையிலேயே மாட்டை வழிபடும் மதம் பண்டைய எகிப்தில் இருந்தது. அதற்கான வரலாற்றுத் தகவல்கள், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ளன.

இன்றைய வடக்கு சூடான், தென் எகிப்துப் பகுதி ஒரு காலத்தில் நுபியா என்று அழைக்கப் பட்டது. அது எகிப்திய நாகரிகத்திற்கு முந்திய நாகரிகத்தைக் கொண்டிருந்தது. தற்போதும் அங்கு வாழும் மக்கள் தனித்துவமான நுபிய மொழி பேசுகின்றனர்.

பண்டைய ஆப்பிரிக்க நாகரிக காலகட்டத்தில் வாழ்ந்த நுபியர்கள், எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு நடுவில் சூரிய வட்டத் தகடு பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய மியூசியத்தில் இன்றைக்கும் அந்தச் சிற்பங்களை நீங்கள் பார்வையிடலாம்.

தைப்பொங்கல் ஏன் கொண்டாடப் படுகின்றது என்பதற்கு, ஒவ்வொரு தமிழனும் பின்வரும் விளக்கத்தை சொல்லத் தெரிந்து வைத்திருப்பான். முதலாவதாக, முற்றத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பார்கள். அதாவது பண்டைய கால சூரிய வழிபாட்டின் தொடர்ச்சியாக பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இரண்டாவதாக, மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுக்கு படைப்பார்கள். அதாவது, பண்டைய தமிழர் மரபில், அவர்களது மத நம்பிக்கைகளில் சூரியனும், மாடும் முக்கிய பங்காற்றி உள்ளது.

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் "அவ்வல்" ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும்.

நந்தி வழிபாடு பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரியமயமாக்கப் பட்ட இந்து மதம் தான், நந்தியை சிவபெருமானின் வாகனம் ஆக்கியது. இந்து மதம் வருவதற்கு முன்னர், இந்தியாவில் நந்தி தனியான கடவுளாக வழிபடப் பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் நந்திக் கடவுளின் மகிமைகளை கூறும் தனியான புராணக் கதைகள் உள்ளன. மேலும், நந்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் ஆகும். அதன் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது.

"தைப்பொங்கல் தமிழர் திருநாள்" என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும், எமது இனம் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் மொழியை பேசுவதால் தமிழர்கள் தனியான இனம் என்ற கருதுகோள், பிற்காலத்தில், இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசியவாதக் கருத்தியல் ஆகும். ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுகிறவர்கள், தனியான இனம் என்ற கற்பிதம், ஆங்கிலேய காலகட்டத்தில் எம் மீது திணிக்கப் பட்டது. இன்றைக்கும் சிலர் அதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Saturday, January 14, 2017

"நாஸிகளும் தேசியவாதிகளே!" வலதுசாரி பயங்கரவாதிகள் பற்றிய ஆவணப்படம்



ஐரோப்பாவை பொருத்த‌வ‌ரையில் தேசிய‌வாத‌ம், இன‌வாத‌ம், நிற‌வாத‌ம் மூன்றுக்கும் இடையில் பெரிய‌ வித்தியாச‌ம் இல்லை. நாங்க‌ள் யாரை எல்லாம் இன‌வாதிக‌ள் என்று அடையாள‌ம் காண்கிறோமோ, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை தேசிய‌வாதிக‌ள் என்று அழைத்துக் கொள்கிறார்க‌ள். இது தான் உல‌க‌ ய‌தார்த்த‌ம்.

ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ "National Socialist Underground" (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. (NSU-Complex: Nazi German Underground)

அதிலிருந்து சில‌ முக்கிய குறிப்புக‌ள்: 

-  நாஸிக‌ளும் தங்க‌ளை "தேசிய‌வாதிக‌ள்" என்று தான் சொல்லிக் கொண்ட‌ன‌ர்.  ஜேர்ம‌னியில் ந‌ட‌ந்த‌ ந‌வ‌ - நாஸிக‌ளின் ஊர்வ‌ல‌த்தில் எடுத்த‌ வீடியோக் காட்சியில், ஒரு ப‌தாகையில் "தேசிய‌வாத‌த்திற்கு ஆர்வ‌ல‌ர்கள் தேவைப் ப‌டுகின்ற‌ன‌ர்" என‌ எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. 

- முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில் நடந்த "கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி" பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பிரச்சாரம் செய்யப் பட்டது. "அது மக்கள் எழுச்சி அல்ல... நாஸி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்." என்று கிழக்கு ஜெர்மன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அன்று யாரும் அதை நம்பவில்லை.

- உண்மையில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே, அன்று கிழக்கு ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. அந்தத் தகவலை, ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்கும் முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.

- முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் தம் மீது மிகக் கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதாக, நவ நாஸி தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகின்றான். இர‌க‌சிய‌ப் பொலிஸ்அடிக்கடி தமது வீடுகளை சோதனையிட்டு கைது செய்து சிறையில் அடித்ததாக தெரிவித்தான். ஆனால், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான்.

- ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேர்பவர்கள், பெரும்பாலும் இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள்.  தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளுக்கு அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி.பல தடவைகள் கைகலப்புகள் நடந்துள்ளன.

- ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். இங்கிலாந்தின் Blood and Honour என்ற நவ நாஸி இயக்கத்தின் ஜெர்மன் கிளை, வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் தடை செய்யப் பட்டது.

- ந‌வ‌ நாஸிக‌ள் மிகவும் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். கிழக்கு ஜெர்மனியில் கைவிடப் பட்ட முன்னாள் சோவியத் படை முகாம்களில் பயிற்சி எடுப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டது. அவர்கள் இராணுவப் பயிற்சியுடன் நின்று விடாது, ஆயுத‌ங்க‌ளையும் சேக‌ரிக்கிறார்க‌ள்.

- எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று நவ நாஸிகள் ந‌ம்புகிறார்க‌ள்.அதாவது, அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையில் போர் நடக்கும். அதே மாதிரி,ஜெர்மனியில் துருக்கியர்களுடன் போர் நடக்கும்.இது அவர்களது எதிர்பார்ப்பு.

- இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து. நவ நாஸிகளை அரசுக்கு வேலை செய்ய வைப்பது மிகவும் இலகுவானது என்று ஓர் அரச அதிகாரி ஒத்துக் கொள்கிறார். பல அரச உளவாளிகள், பிரதானமான நவ நாஸி செயற்பாட்டாளர்களாக உள்ளனர். அரசுக்கும் அது தெரியும். ஆனால், இயக்கத்தின் தலைவர்களை கைது செய்யும் வரையில் பொறுமையாக இருப்பதாக கூறுகின்றது.

- த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?)

- NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. குறைந்தது பத்து வருடங்கள் கொள்ளைப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தனர். கண்காணிப்புக் கமெராக்கள் இருந்தும், கொள்ளையர்களை பிடிப்பதற்கு பொலிசிற்கு துப்புக் கிடைக்கவில்லையாம். 

-  இரண்டு ஆண் உறுப்பினர்கள், பட்டப் பகலில் நடந்த வ‌ங்கிக் கொள்ளை ஒன்றில் பொலிஸ் கண்காணிப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் ஒரு    பொலிஸ் ஹெலிகாப்டரால் விரட்டப் பட்டனர். பொலிஸ் தம்மை பின்தொடர்கிறது என்பது கொள்ளையர்களுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் தப்பிச் சென்ற வாகனத்தினுள்  ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். 

- சம்பவ இடத்தில் இருந்திராத,  மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ ஒரு பெண் உறுப்பின‌ர், மறைவிடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டிற்க்கு நெருப்பு வைத்து விட்டு போலீஸில் ச‌ர‌ண‌டைந்தார்.(அதாவது ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டு விட்டன.)

- அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது. அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌. விசாரணையாளர்கள் சுதந்திரமாக இயங்க முடியாதவாறு மேலிடத்து உத்தரவுகள் வருகின்றன.

-  NSU பயங்கரவாதிகள், நாடு முழுவ‌தும் குறைந்தது பத்து அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்துள்ள‌னர். கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். பெரும்பாலும் துருக்கிய‌ர்க‌ள், மற்றும் ஒரு கிரேக்க‌ர். 

- கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ், "கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்" என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து. அதாவது, ஜெர்மனியில் வலதுசாரி பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை பொலிஸ் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. 

- ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், அரச உளவாளி ஒருவரும்  "த‌ற்செய‌லாக‌" இருந்திருக்கிறார். கொலையை நேரில் கண்ட அந்த அர‌ச‌ உள‌வாளியிடம் பொலிஸ் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை. விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து. இருப்பினும், அப்போதும்  அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்: