Monday, June 30, 2014

இணக்க அரசியலின் தோல்வியும் தலித்திய அரசியலின் ஏழ்மையும்

  • இலங்கையில் இணக்க அரசியல் 


இலங்கையில் அண்மையில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களுக்குப் பின்னர், "முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி" குறித்து பல தமிழர்கள் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, "இதற்குத் தான் தமிழன் ஆயுதம் ஏந்தினான் தெரியுமா?" என்று கேட்கிறார்கள்.

இணக்க அரசியல் நடத்துவது, முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையாக கருத முடியாது. ஐம்பதுகளில் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இணக்க அரசியல் செய்தவர்கள் தான். மலையகத் தமிழர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸ், அன்று முதல் இன்று வரை, அரசுடன் சேர்ந்து இணக்க அரசியல் செய்து வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர், ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதே நல்லது என்று நம்புகின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார், கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போன்ற சில பிரபலங்கள் கூட, ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதற்கு தயங்காதவர்கள்.

இன்றைய இலங்கை அரசியலில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமை, உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மை இனங்களுக்கும் பொதுவானது. இணக்க அரசியல் செய்வதும், எதிர்ப்பு அரசியல் செய்வதும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியின் தீவிரத்தைப் பொறுத்தது.

"நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்." என்று மாவோ சொன்னார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட, மாவோவின் மேற்கோளை சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தமிழர்கள் பல தசாப்த காலமாக அஹிம்சா வழியில் போராடிக் களைத்த பின்னர் தான் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." என்று இன்றைக்கும் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் பலர், அதன் படிப்பினைகள் என்னவென்று நினைவுபடுத்திப் பார்ப்பதில்லை. முஸ்லிம்களும் ஆயுதப்போராட்டம் நடத்தினால், அவர்களுக்கும் ஒரு முள்ளிவாய்க்கால் காத்திருக்கிறது என்பதை, சிங்களப் பேரினவாத அரசு 2009 ஆண்டு நிரூபித்துக் காட்டி இருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் விடுக்கப் பட்ட எச்சரிக்கை. அது மட்டுமல்ல, தெற்காசியாவில் தமது இன விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் அனைத்து மக்களுக்குமான எச்சரிக்கை. இதனை, பாகிஸ்தான், இந்திய அரசுகள் வெளிப்படையாகவே தெரிவித்து வந்துள்ளன. பல்வேறுபட்ட அரசாங்கங்கள் தமக்குள் ஒன்று சேர்வதை, ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இடையிலான ஒன்று பட்ட போராட்டம் மட்டுமே, அவர்களின் விடுதலையை பெற்றுத் தரும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

******
ஐம்பதுகளில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம், பிற்காலத்தில் ஈழப் போருக்கு வழிவகுத்தது. தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், சிங்களம் படிக்க மாட்டோம் என்று அடம்பிடித்து ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, அவர்களது முதலாளிய பாசம் காரணமாக, இலங்கையின் பொருளாதரத்தில் பெருமளவு தனியார் தொழிற்துறை வர வேண்டுமென்று விரும்பினார்கள். (அந்தக் காலங்களில் அரசு நிறுவனங்களே அதிகமாக இருந்தன.)

முப்பதாண்டு ஈழப் போர் முடிந்த பின்னர், இலங்கை முழுவதும் எங்கு பார்த்தாலும் தனியார் நிறுவனங்கள் பல்கிப் பெருகிக் காணப் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பொழுது, கல்வித் தகைமையாக ஆங்கிலத்துடன், சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் நிர்வகிக்கப் படும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், "சிங்களம் கட்டாயம்" என்ற கோரிக்கை வைக்கப் படுகின்றது. அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்களாக இருப்பதால், எமது பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு சிங்கள மொழி அறிவு அவசியம்..." என்று வணிக மொழியில் பேசுகின்றார்கள்.

தனியார் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக, இன்று இளந்தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் தாமாகவே சிங்களம் படிக்கிறார்கள். அன்று, அரசு கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக போராடிய தமிழ் தேசியவாதிகள், இன்று மௌனமாக இருக்கிறார்கள். இன்று சிங்கள மொழி மேலாதிக்கத்தை எதிர்த்தால், ஏகாதிபத்தியத்தை பகைத்துக் கொள்ள வேண்டி இருக்கும், என்று தெரிந்து வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அந்தப் பத்தில் தேசியவாதமும் அடங்குகின்றது.


  • இலங்கையில் தலித்திய அரசியல்


மார்க்சிய புரிதலற்ற தமிழ் தேசியம் மட்டுமல்ல, தலித்தியமும் இறுதியில் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கவே உதவும். அவர்களது அரசியல் வறுமை எந்தளவு பாரதூரமான தவறுகளை இழைத்துள்ளது என்பதை, அண்மைக் கால இலங்கை அரசியல் நிலவரம் நிரூபித்து வருகின்றது.

வட இலங்கையில், தலித்திய அரசியல் செய்யக் கிளம்பிய, தலித்திய முன்னணியினரிடம் வர்க்கப் பார்வை கிடையாது. அது மட்டுமல்லாது, சிங்கள தலித் மக்களுடனான தோழமை உணர்வும் கிடையாது. சிங்களவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சினை இருப்பதைக் கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. இதுவும் ஒரு வகை தமிழ்க் குறுந் தேசியம் தான்.

ஒரு பக்கம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியினர் இந்துத்துவாவாதிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியின் மேலாண்மையை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் தலித்தியவாதிகள், சிங்கள வெள்ளாள தலைமையை நட்பு சக்தியாக கருதுவது ஒரு முரண்நகை. அது அவர்களது கொள்கைக்கே முரணானது. அதனால் தான், பொது பல சேனா போன்ற பாசிச சக்திகளினால், தமிழ் ஆதிக்க சாதியவாதிகளையும், தமிழ் தலித்தியவாதிகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்க்க முடிந்தது.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால், வர்க்க முரண்பாடு ஒளிந்திருக்கும். அதை ஆராய மறுப்பவன், ஆளும் வர்க்கத்திற்கே சேவகம் செய்கிறான்.

******

யாழ்ப்பாணத்தில் இன்றைக்கும் சில கிராமங்கள், தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் "தலித் கிராமங்களாக" அடையாளம் காணப் படுகின்றன. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எல்லோருடைய கவனமும் வன்னிப் பிரதேசத்தின் மேல் குவிந்திருந்தது. யாழ் குடாநாட்டில் நடந்த பல சம்பவங்கள் வெளியுலகை அடையவில்லை.

இறுதிப்போர் முடியும் வரையிலும், சிங்கள இராணுவமும், அதன் சட்டத்திற்குப் புறம்பான கொலைப் படைகளும், தினந்தோறும் தலித் கிராமங்களை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தின. சந்தேகத்திற்கு இடமான இளைஞர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றன. இதனால் என்றோ ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.

சிறிலங்கா அரச படைகள் எதற்காக தலித் கிராமங்களை குறி வைத்துத் தாக்க வேண்டும்? மரபு ரீதியாக போர்க்குணாம்சம் மிக்க தலித் இளைஞர்கள் தான், புலிகளின் போராளிகளாக அதிகளவில் உள்வாங்கப் பட்டிருந்தனர். பொதுவாக அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி யாழ்ப்பாணத்தில் ஏற்படுமானால், அது தலித் கிராமங்களில் இருந்தே உருவாகும் என்று அரசு சரியாகவே கணித்து வைத்திருந்தது.

யாழ் குடாநாட்டில், ஆதிக்க சாதியினரை பெரும்பான்மையாகக் கொண்ட கிராமங்களும் ஏராளமாக இருந்தன. அந்தக் கிராமங்களில், அரச படைகளின் அடக்குமுறை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. ஏனெனில், ஓரளவு வசதி படைத்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கூட, போராடப் போவதை விட, வெளிநாடுகளுக்கு செல்வதிலேயே அதிக நாட்டம் கொண்டவர்கள் என்பது அரசுக்கும் நன்கு தெரியும்.

Thursday, June 26, 2014

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்

லாசிஸ்தான் தேசியக் கொடி 
உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர். 


துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர். 

அண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர். 

துருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.

துருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

துருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் "ரூம்" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)

துருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர்.  இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். 

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது. 

நவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும்பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.

துருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள். 

லாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது. 

லாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும். 

லாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை "கொள்கிஸ்" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார். 

பொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.

பொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.

லாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.


கம்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi  (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.

தற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது. 


மேலதிக தகவல்களுக்கு:
அல்ஜசீரா ஆவணப் படம் 

Friday, June 20, 2014

அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே!


உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, "விடுதலைப் போராளிகள்" என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல் பாக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் "அல் பாக்தாதி" என்றே அழைக்கப் படுகிறார்.

அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.

2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யோர்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி இயக்கம் கட்டியுள்ளார்.

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் சன்மானம் வைக்கப் பட்டது.  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல் பாக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, "ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு" (ISIS) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கமும் ஒரு சகோதர யுத்தத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள். அது வேறு விடயம். 

அல் நுஸ்ரா, சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தது. ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது.

அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். அந்தப் பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தினார்கள். முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடத்தியது போன்றதொரு ஆட்சியை அமைத்தார்கள். 

இசிஸ் அமைப்பின் செயற்பாடுகள், ஒரு வணிக நிறுவனம் போன்று அமைந்திருந்தன. சிரிய அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆவணப் படுத்தினார்கள். மாவீரர்களான போராளிகளின் பெயர்களை பதிவு செய்து வைத்தனர். வெளிநாடுகளில் பரப்புரை செய்வதற்கு உதவியாக, ஊடக தொடர்புகளை விரிபு படுத்தினார்கள். இசிஸ் போராளிகள் சிலர், வீடியோ படப் பிடிப்பாளர்களாக களப் பயிற்சி பெற்றனர். அவர்கள் இணையத்தில், சமூக வலைத் தளங்களிலும் இயங்கினார்கள்.

யுத்த களங்களில், சிரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் காட்சிகளை வீடியோ படமாக்கி, இணையத் தளங்களில் பரப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்கள் அவற்றை எடுத்து ஒளிபரப்பின. வீடியோ போராளிகள் போர்க்கள காட்சிகளை மட்டும் படம் பிடிக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் படும் துன்பங்களை, வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள், வெளிநாடுகளில் "விடுதலைப் போராட்டத்திற்கு" ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு பெரிதும் உதவின. அந்தக் காலங்களில், மேற்குலகில் இசிஸ் ஒரு "விடுதலை இயக்கமாக" கருதப் பட்டது.

இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது" என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, "இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.

ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் "நிரூபிப்பதன்" மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.


மேலதிக தகவல்களுக்கு:
Americans are training Syria rebels in Jordan
The fierce ambition of ISIL's Baghdadi
ISIS Leader: ‘See You in New York’
How al-Qaeda Changed the Syrian War


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்
2. ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா? 

Monday, June 16, 2014

அளுத்கம இனக் கலவரம் : பாசிஸ அரசு இயந்திரம் ஓய்வதில்லை


இலங்கையில், அளுத்கம எனும் இடத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனக் கலவரம் நடந்துள்ளது.  முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், பொதுபலசேனா குண்டர்களினால் எரிக்கப் பட்டுள்ளன. 1983 க்கு பிறகு நடந்த முதலாவது இனக் கலவரம் இதுவாகும்.

அளுத்கமவில் இன்று நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிய பொதுபல சேனா தலைவர் கலகொட ஞானசேகர தேரோ, "ஒரு சிங்களவன் மேல் கை வைத்தால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவோம்." என்று இனவெறி கக்கும் உரையாற்றி உள்ளார். (https://www.colombotelegraph.com/index.php/video-this-will-be-the-end-of-all-muslims-gnanasara-says-prior-to-riots/ ) அதற்குப் பிறகே, மாலையில் கலவரம் நடந்துள்ளது. 1977, 1983 ளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு முன்னரும், பலர் இதே மாதிரியான இனவெறியை கக்கினார்கள். (https://www.youtube.com/watch?v=qipU2Qf746c&list=UUJt2pSAQ9hF3cvq6slyLo5g )

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே அளுத்கம நகரில், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக ஸ்தாபனம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. வர்த்தகப் போட்டி, பொறாமை காரணமாக, அந்த நகரில் உள்ள சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக, எரிக்கப் பட்ட வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் தெரிவித்தார். (

1983 ம் ஆண்டு கலவரத்தின் போதும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது. இனக் கலவரங்களின் போது தான், முதலாளித்துவ பொருளாதாரமும், இனவாத பாசிசமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொள்கின்றன.

இதே நேரம், "83 இனக் கலவரத்திற்குப் பின்னர், அரசாங்கம் இன்னும் பாடம் படிக்கவில்லையா?" என்று சில அறிவுஜீவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும், இன்றும் அரசாங்கம் தான் படித்த பாடத்தை சரியாகத் தான் நடைமுறைப் படுத்தி வந்துள்ளது. மக்கள் தான் அரசின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல், இனவாத, மதவாத சக்திகள் சொல்வதை நம்பி ஏமாந்து போகிறார்கள். 

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி விட்ட நரேந்திர மோடி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமராகலாம் என்றால், உண்மையில் பாடம் படிக்க வேண்டியவர்கள் யார்?

//தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.// - இவ்வாறு இணையத் தளமொன்றில், ஒரு நண்பர் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். 

எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சுமேந்திரனும், கலவரத்தை கண்டித்துள்ளமை வரவேற்கத் தக்கது. பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த தகவல் ஆங்கிலத்தில், டிவிட்டர் செய்தியாக இருந்தது. தமிழிலும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

மேலும் இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் "தமிழ் தேசியவாதிகள்" அல்லர். இருந்திருந்தால், அளுத்கம கலவரத்தை, அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான கலவரமாக கருதி இருப்பார்கள். சர்வதேச மட்டத்தில் கலவரத்தை தூண்டி விட்ட சிறிலங்கா அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

உதட்டளவில் தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் பலர், மனதளவில் இந்துத்துவா வாதிகள் என்பது இரகசியமல்ல. அவர்களது உண்மையான அரசியல் நிலைப்பாடு, இப்படியான தருணங்களில் வெளிப்படுகின்றது. 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து உள்ளூர மகிழ்ச்சி அடைவதும், பழிவாங்கும் உணர்வை வெளிப் படுத்துவதுமாக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அரசின் வன்முறைகளை நியாயப் படுத்துகின்றனர். சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மிக இலகுவாக பலியாகின்றனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள- பௌத்த பேரினவாதிகளின் வெறியாட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நவநீதம் பிள்ளை, பிரான்சிஸ் ஹாரிசன், எரிக் சொல்ஹைம் ஆகியோர், அளுத்கம கலவரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதுடன், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அரசியல் சக்திகள் யாவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் இருந்து, பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த சர்வதேச ஆதரவு சக்திகள். குறிப்பாக வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் பெரிதும் மதிக்கப் பட்டவர்கள். அவர்களது நாயகர்களாக போற்றப் பட்டவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்த போதெல்லாம், அதனை நன்றியோடு பகிர்ந்து கொண்டவர்கள், இன்று தடம் மாறி, பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத கலவரத்தை மௌனமாக அங்கீகரிப்பது ஏனோ? ஈழத் தமிழ் சமூகத்தில் இருந்து எழும் ஒரு சில கண்டனக் குரல்களையும் அடக்க முனைவது ஏனோ? முரண்பாடுகளின் மொத்த உருவமே குறுந் தேசியவாதம் தானோ?

Sunday, June 15, 2014

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்


சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி என்பதும், ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மைகள். அமெரிக்கர்கள், ஆரம்ப காலங்களில் ISIS இயக்கத்தினை AQI (ஈராக்கிய அல்கைதா) என்று குறிப்பிட்டு வந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு நடந்த சில மாதங்களின் பின்னர், பதவியிறக்கப் பட்ட சதாம் விசுவாசிகளும், பாத் தேசியவாதிகளும் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்காக, AQI களத்தில் இறக்கி விடப் பட்டது. 

கடும்போக்கு சுன்னி இஸ்லாமிய மதவாதிகளாக காட்டிக் கொண்ட ISIS, ஷியா இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை கொன்று குவித்தது. சமாரா நகரில் ஷியா நம்பிக்கையாளர்களின் புனிதஸ்தலமான தங்க மசூதியை குண்டு வைத்து தகர்த்தது. இதன் மூலம், ஈராக்கில் சுன்னி- ஷியா மதக் கலவரங்களை தூண்டி விட்டது. இவை எல்லாம் சிஐஏ யின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஒத்துப் போகின்றது.

ஈராக்கிய அல்கைதாவில் இருந்து பிரிந்ததாக கூறிக் கொள்ளும் ISIS, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததும், சிரியாவுக்கு நகர்ந்து சென்றது. ஈராக் எல்லையோரம் இருக்கும், எண்ணைக் வளம் உள்ள ஒரேயொரு சிரியப் பகுதியை கைப்பற்றிக் கொண்டது. "ISIS அங்கிருந்து கிடைக்கும் எண்ணையை கடத்திச் சென்று விற்று இயக்கத்திற்கு நிதி சேகரித்ததாக," சிஐஏ அறிக்கை கூறுகின்றது.

உண்மையில், சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன், பணத்தை தாராளமாக வாரியிறைத்த சவூதி அரேபியா, கட்டார் மற்றும் மேற்குலக நாடுகளின் நிதியில் பெருமளவு பங்கு, ISIS வசம் சென்றுள்ளது. அவர்கள் அந்தப் பணத்தை மிகத் திறமையாக ஊடக பிரச்சாரங்களில் செலவிட்டு, உலகம் முழுவதும் இருந்து இளம் ஜிகாதியர்களை கவர்ந்திழுத்தனர்.

இன்று, ISIS அமைப்பின் முக்கால்வாசி உறுப்பினர்கள் வெளிநாட்டு தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த அதே வரலாறு, இன்று மீண்டும் சிரியா/ஈராக்கில் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, மேற்கத்திய ஊடகங்கள் செய்யும் பரப்புரைகளை நம்பும் மக்கள் இருக்கும் வரையில், ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கொண்டே இருக்கும்.

தற்போது விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் ISIS படையினர், பாக்தாத் நகரை அண்மித்து விட்டார்கள். ஈராக்கின் மொத்த சனத்தொகையில் பாதியைக் கொண்டிருக்கும் பாக்தாத் நகரம் வீழ்ச்சி அடைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால், ஈராக் அரசு அமெரிக்க இராணுவ உதவி கேட்டிருந்தும், ஒபாமா நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த மௌனம் ஒரு தந்திரோபாயாமாக இருக்கலாம். ஏனெனில் அமெரிக்க இராணுவ உதவியின்றி, மாலிக்கின் ஈராக் அரசு நின்று பிடிக்க முடியாது. அந்த தருணத்தில், ஈரான் இராணுவ உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இன்றைய ஈராக்கிய பிரச்சினை, மீண்டும் சுன்னி - ஷியா பிரச்சினையாக மாறி விட்டது. ISIL இயக்கம் முழுக்க முழுக்க சுன்னி முஸ்லிம்களை மட்டும் கொண்ட மதவாத இயக்கம். அது வெளிப்படையாகவே ஷியாக்களுக்கு எதிரான துவேஷத்தை காட்டி வருகின்றது. 

இன்று வரையில் ISIL கைப்பற்றிய ஈராக்கிய பிரதேசங்களில் சுன்னி முஸ்லிம் பிரிவினர் மட்டுமே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அந்த மக்கள், ISIS இயக்கத்தினரை, விடுதலை வீரர்களாக வரவேற்றுள்ளனர். உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, ISIS அந்தளவு விரைவாக முன்னேறி இருக்க முடியாது. ISIS கைப்பற்றியுள்ள பகுதிகளில், தாலிபான் பாணி ஆட்சி நடப்பது வேறு விடயம்.

ISIS கைப்பற்றிய மொசுல் போன்ற நகரங்களில் இருந்த ஈராக்கிய படையினர், பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அதனால், ஏற்கனவே ஈராக்கிய படையினர், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டிருந்தனர். ISIS முன்னேறிக் கொண்டிருந்த நேரம், ஈராக்கிய அரச படையினர் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தனர். பொது மக்களின் இலக்குகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், பெரும்பான்மையான பொது மக்கள் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

அண்மைக் காலத்தில் விரைவாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் ஈராக் மூன்று துண்டுகளாக பிரிக்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத் தலைமை மட்டத்தில் அத்தகைய திட்டம் ஒன்று ஆராயப் பட்டது. வடக்கு ஈராக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் தனி நாடாகி விடும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்றைய குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் நகரத்தை, குர்து பிராந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள ஈராக்கின் மாலிக் அரசுக்கு, ஈரானிய இராணுவ உதவி கிடைக்குமாக இருந்தால், ஷியா அரேபியர் வாழும் தெற்குப் பகுதி தனியாக பிரிந்து விடும். ஆகவே, ISIS கட்டுப்பாட்டில் உள்ள சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஈராக், சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடாக மாறி விடும். தற்போதைய நிலைமையும், ஏறக்குறைய அப்படித் தான் உள்ளது. இன்னும் யாரும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தனி நாடாக பிரகடனப் படுத்தவில்லை என்பது மட்டும் தான் வித்தியாசம்.

தற்போது ஈராக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இதனால்,அமெரிக்கா, சவூதி அரேபியா, கட்டார் ஆகிய வளைகுடா நாடுகளின் காட்டில் நல்ல மழை பெய்கிறது. பெற்றோலின் விலை அதிகரிப்பினால் கிடைக்கும் இலாபம், அவர்களது கஜானாவை நிரப்பும் என்பதால், அந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 

ஈராக்கில் ISIS இயக்கத்தின் முன்னேற்றம், எதிர்பாராத விதமாக திடீரென நடந்தது போன்று, அமெரிக்கா பாசாங்கு செய்கின்றது. சிரியாவில் போரிட்டுக் கொண்டிருந்த பெரும்பாலான ISIS போராளிகள், ஈராக் எல்லையோரம் நகர்த்தப் பட்டு வருவதாக, லெபனான் பத்திரிகைகளில் தகவல் வந்திருந்தது. ஒரு ஊடகத்தில் வெளிப்படையாக வந்த தகவலை, சிஐஏ கவனிக்காமல் விட்டது என்று சொல்ல முடியாது. அமெரிக்கர்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள்.

அது சரி, யார் அந்த அல்கைதா? சிரியா, ஈராக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேறி, உலகில் யாராலும் வெல்ல முடியாத இயக்கம் என்று மார் தட்டிக் கொள்கிறது. மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடிய பின்னர், உலகிலேயே பணக்கார இயக்கமாகி உள்ளது. அங்கிருந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களை அபகரித்த பின்னர், உலகிலேயே மிகவும் பலமான இராணுவக் கட்டமைப்பு கொண்ட இயக்கம். இன்றைய உலகில் மிகவும் பலமான இயக்கமான அல்கைதா, இன்று வரையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத காரணம் என்ன? யாருக்காவது விடை தெரியுமா?


Saturday, June 14, 2014

தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிகளின் பிரச்சாரங்கள்




"எங்கெல்லாம் அநியாயம் நடக்கிற போது, உன் ரத்தம் கொதித்தால், நீயும் நானும் நண்பனே." - சேகுவேரா

ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்து கொண்டே, முதலாளித்துவத்திற்கு எதிராக பேசலாமா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஒரு சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வாழும் மக்கள், சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக பேசக் கூடாதா?

தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரான, மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் பரப்புரைகளில் ஒன்று. (எனது நண்பர் ஒருவர் என் மேல் தொடுத்த விமர்சனம்.)

//நான் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. அப்படியே எதிர்ப்பது என்றாலும், அதனை ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் ஒரு மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிசம் சம்பந்தமான தகவல்களை வழங்க முடிகின்றது!!!//

ஒரு தவறான அனுமானம். தவறான புரிதல். 
"ஒரு கம்யூனிச நாடு" என்பதற்கு எதிர்ச் சொல்லாக, "ஒரு மேற்கத்திய நாடு" என்று எழுதுவது, அறியாமல் நேர்ந்த தவறாக தெரியவில்லை. முதலில், கம்யூனிஸ்ட் நாடு என்ற ஒன்று உலகில் எங்கேயும் இருக்கவில்லை. மனித வரலாற்றில் கம்யூனிஸ்ட் சமுதாயங்கள் இருந்தன. ஆனால் ஒரு தேசக் கட்டமைப்பு இருக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் இருந்தவை எல்லாம் "சோஷலிச நாடுகள்". சோஷலிசம் என்பது ஒரு அரசியல்- பொருளாதாரக் கொள்கை. அதற்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. மார்க்சியம் கூறுவதன் படி, உலகில் முதலாளித்துவ நாடுகள் இல்லாமல் அழிந்து போன பின்னர், சோஷலிச நாடுகள் உருவாகும். அது ஒரு சமூக விஞ்ஞான நியதி. ஆகவே, இதற்கு முன்னர் இருந்த சோஷலிச நாடுகள் பரிசோதனை முயற்சியாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிசம் பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்கிறார்களே என்று நீங்கள் ஆதங்கப் படுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உழைத்து வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்க மக்கள் தமது சித்தாந்தம் கம்யூனிசம் என்று சொன்னால், அதை தடை செய்யும் நிலையில் முதலாளித்துவ நாடுகள் இல்லை. ஏனென்றால் அது முடியாத காரியம். உலக நாடுகள் எல்லாவற்றிலும், உழைக்கும் வர்க்க மக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.

ஒரு சோஷலிச நாட்டில், முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது உங்களது மனக்குறையாக உள்ளது. அதை நீங்கள் கம்யூனிச எதிர்ப்பு வாதம் என்று குறிப்பிடலாம். ஆனால், உங்களது கூற்றிலேயே முரண்பாடு உள்ளது. முதலாளித்துவ நாட்டில் வாழும் ஒருவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்றால், சோஷலிச நாட்டில் வாழும் ஒருவர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்று எழுதி இருக்க வேண்டும்.

சோஷலிச நாடு என்பது, இதற்கு முன்பிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் உருவானது. ஆகவே, புரட்சிக்குப் பின்னர் முந்திய அரசு ஆதரவாளர்களுக்கு தடை விதிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. உலக வரலாற்றில் நடந்துள்ள எல்லாப் புரட்சிகளிலும் அது தான் நடக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், தாராளவாதமும், குடியரசுவாதமும் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆகின. புரட்சிக்கு முன்பிருந்த மன்னராட்சியை ஆதரித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நாங்கள் உலக வரலாற்றை, சமூக விஞ்ஞானத்தை படித்து அறிந்து, அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது தான் முறை.

//கம்யூனிசம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது//

"ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லை" என்று ஒரு சிங்களவர் சொல்வது போன்றுள்ளது உங்களது கூற்று. கம்யூனிசம் ஒரு Utopia என்று நீங்கள் கருதலாம். அதாவது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற ஒரு கற்பனை சமுதாயம். வசதி இல்லாதவர்கள், அத்தகைய சமுதாயத்திற்காக கனவு காண்பது மட்டுமல்ல, அதற்காக போராடவும் செய்யலாம். அது அந்த மக்களின் உரிமை. அந்த உரிமையை மறுப்பதற்கு நாங்கள் யார்?

உங்களைப் பொறுத்த வரையில், தமிழீழம் கூட ஒரு Utopia தான். //பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது// ஆனால், ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர், தமிழீழம் அமைப்பதற்காக போராட விரும்பினால், அதைத் தடுப்பதற்கு நாங்கள் யார்?

******

"நான் தமிழருக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் பேசும், சில சிங்கள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அதே மாதிரி, "நான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள்.

முகநூலில் ஒரு அறிவுஜீவி பகிர்ந்து கொண்ட கம்யூனிச எதிர்ப்பு நிலைத் தகவல்:

//அப்பா, கொம்யூனிஸ்ட் என்றால் யார்? மகனே, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துக் கிழித்தவர்கள். அப்ப, anti-கொம்யூனிஸ்ட் என்றால் யார்? கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துச் சரியாகப் புரிந்தவர்கள்.//

"கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதியதை படித்தவர்கள் மட்டும் தான் கம்யூனிஸ்டுகள்" என்று இவர்கள் எங்கே கற்றார்கள்? புத்தகங்களை மட்டுமே படிப்பது அறிவுஜீவித் தனம். அதைத் தான் நமது சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பரீட்சையில் சித்தி பெற வேண்டும், உத்தியோகம் பார்க்க வேண்டும், என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் புத்தகங்களை விழுந்து விழுந்து படிப்பார்கள்.

அவர்களது நோக்கம் நிறைவேறியதும், குறைந்த பட்ச அறிவுத் தேடலுக்காக கூட நூல்களை படிக்க மாட்டார்கள். அத்தகைய மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளினால் சமூகத்திற்கு என்ன பிரயோசனம்? அதனால், தங்களது அறிவுஜீவி மனோபாவத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளாதார உற்பத்தி முறையான கம்யூனிசத்தையும் வெறும் நூல்களாக மட்டுமே பார்ப்பதில் வியப்பில்லை.

ஆதி கால தமிழர்கள் மத்தியில் இருந்த கம்யூனிச பொருளாதார அமைப்பு பற்றி, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்கள். ஆதி கால கிறிஸ்தவர்களும், கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயமாக இயங்கினார்கள். நமது கால அரசியலில், அவர்களையும் கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கலாம். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யாரும், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய நூல்களை படித்திருக்க வாய்ப்பில்லை.

******

முன்னாள் தமிழ் தேசியவாதிகளான DMK, EPDP, TMVP ஆகிய குழுக்களின் அடாவடித்தனங்கள், "தமிழ்தேசியவாதிகளின் செயல்கள்" ஆகாது. அந்தக் கட்சிகளின் பெயரிலும் ஈழம், தமிழ் என்றெல்லாம் இருக்கின்றன. அதை சுட்டிக்காட்டி, அவை எல்லாம் தமிழ் தேசியவாத கட்சிகள் என்று யாரும் சொல்வதில்லை. பாராளுமன்ற அரசியலில் பங்கெடுக்கும் தமிழ் தேசியவாத கட்சிகளை, எவனும் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் தேசியவாதிகளான புலிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டான்.

ஆனால், கம்யூனிச எதிர்ப்பாளர்களிடம் மட்டும் அப்படிப் பிரித்து அறியும் தன்மை இல்லாமல் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் திரிபுவாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரிகின்றன. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு, சிவப்பாக தெரிவதெல்லாம் கம்யூனிசம் தான். அது அவர்களது அறியாமையா அல்லது மக்களை முட்டாள்களாக வைத்திருக்கும் நோக்கில் செய்யப்படும் அரசியல் பிரச்சாரமா?

******

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமின்னும் ஒரு காலத்தில் தேசியவாதிகளாகத் தான் இருந்தார்கள். ஆயுதமேந்திய கெரில்லாப் போராட்டத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியதும், தங்களது விடுதலை இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆக்கினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்தார்கள். சோஷலிச பொருளாதார திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.

ஒரு பேச்சுக்கு, கியூபா, வியட்நாம் மாதிரி, ஈழத் தேசியவாதி பிரபாகரனின் கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்று, தமிழீழமும் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். புலிகள் தங்களது இயக்ககத்திற்கு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்கின்றனர். தமிழீழத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்து விட்டு, சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

அப்படியான தருணத்தில், இன்று புலிகளை தீவிரமாக ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும், வசதியான நடுத்தர வர்க்க தமிழர்களில் எத்தனை பேர், அப்போதும் புலிகளை ஆதரிப்பார்கள்? அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கேள்வி இது. 

தமது வர்க்க நலன்களுக்கு விரோதமாக நடந்தால், இன்று புலிகளை ஆதரிக்கும் தமிழ் மேட்டுக் குடியினர், நாளைக்கு அதே புலிகளை எதிர்ப்பார்கள். ஏனென்றால், அவர்களது "புலி ஆதரவு அரசியல்" பூர்ஷுவா வர்க்க அடிப்படை கொண்டது. என்றைக்கோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும்.

*******


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Friday, June 13, 2014

பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப் பட்ட சோஷலிசத்திற்கான வர்க்கப் போராட்டம்


பாகிஸ்தான் என்றதும், இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், தாலிபானும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு, சராசரி பொது மக்களின் மனங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் இன்றைக்கும் நிலவும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகள், அதற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. மிதவாத சமூக ஜனநாயகவாதிகள் முதல் தீவிர மாவோயிஸ்ட்கள் வரையில், இன்றைக்கும் பல இடதுசாரி கட்சிகள் அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எழுபதுகளில், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆப்கான் முஜாகிதீன் குழுக்களுக்கு உதவிய வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், பலருக்குத் தெரியாத ஓர் உண்மை உண்டு. பாகிஸ்தானில் இயங்கும் கம்யூனிஸ்ட் அமைப்புகள், சோவியத் இராணுவ உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் நிலவுவதாக அப்போது வதந்தி கிளப்பி விடப் பட்டது. அந்தக் காரணத்தைக் கூறித் தான், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது.

பாகிஸ்தானில், அஷ்டநகர் மக்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக தமது சமூக பண்பாட்டு விடுதலையை பெற்றுக் கொண்டனர். மார்க்சிய லெனினிச சித்தாந்தம், அந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அஷ்ட நகர் என்பது, சமஸ்கிருதத்தில் எட்டு கிராமங்களை குறிக்கும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த சோஷலிசப் புரட்சியை பற்றிய முழுமையான ஆவணப் படம் இது. வரலாற்றில் மறைக்கப் பட்ட பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் போராட்டம் பற்றிய ஆவணப் படுத்தல்.

 

Hashtnagar - a song of another world door ammaraziz1


மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்: 
 Pakistan: Hashtnagar, a land forgotten

Thursday, June 12, 2014

ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


வரலாறு திரும்புகிறது? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய கடும்போக்காளர்களான தாலிபான்களின் ஆட்சி உருவானது போன்று, ஈராக்கிலும் நடந்துள்ளது. மேற்கு ஈராக்கிய பகுதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கமான ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. கடந்த ஆறு மாத காலமாக, அந்தப் பகுதிகளில் ஒரு "தாலிபான் ஆட்சி" நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரமாடி, பலூஜா போன்ற பல நகரங்கள், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கின்றன. சிரியா எல்லையோரம் உள்ள அன்பர் மாகாணம் முழுமையாக அவர்களது ஆட்சியில் கீழ் உள்ளது. இன்று வடக்கே உள்ள மொசுல் நகரத்தை கைப்பற்றி விட்டனர்.

Islamitische Staat in Irak and Shām, (ஷாம் என்பது சிரியா, லெபனானை குறிக்கும் அரபு பெயர்) என்ற ஜிகாதி இயக்கம், அமெரிக்கப் படைகள் ஈராக்கை "விடுதலை செய்து ஜனநாயகத்தை கொண்டு வந்த பின்னர்" உருவானது. இரண்டு, மூன்று நாடுகளை சேர்த்து தாயகமாக உரிமை கூறுவதால், வெளிநாட்டு ஜிகாதியர்களும் நிறையப் பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

ISIS உருவான ஆரம்ப காலத்தில் ஈராக்கில் போரிட்டு வந்தாலும், சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிய பின்னர் தான் வெளியுலகில் பிரபலமானது. (சவூதி, கட்டார், மேற்கத்திய நாடுகளின் உதவியை சாதுரியமாக பயன்படுத்தி வளர்ந்து வந்தது.) தற்போதும் சிரியாவில் ராக்கா பகுதி, ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு தாலிபான் ஆட்சி போன்று, கடுமையான இஸ்லாமிய மத சட்டங்கள் பின்பற்றப் படுகின்றன.

சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுதலை செய்து, ஈராக்கில் ஜனநாயகத்தை மலரச் செய்யவே படையெடுத்ததாக அமெரிக்கா அறிவித்தது. இப்போது அந்த நாட்டில் மெல்ல மெல்ல "ஒரு தாலிபான் ஆட்சி" ஏற்பட்டு வருகின்றது. அமெரிக்கா கொண்டு வர விரும்பிய ஜனநாயகம் இது தான் போலிருக்கிறது.

ஈராக்கில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஜிகாதி இயக்கமான ISIS, வட ஈராக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசுல் நகரை கைப்பற்றிய பின்னர், அது உலகிலேயே பணக்கார இயக்கமாக மாறி விட்டது. ISIS போராளிகள், மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடி, 429 மில்லியன் டாலர் பெறுமதியான ஈராக்கிய டினார்களை அபகரித்துள்ளனர். அதை விட, ஈராக்கிய இராணுவம் விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்கள், கவச வாகனங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியுள்ளன. உலகில் எந்தவொரு ஆயுதபாணி இயக்கமும், இந்தளவு பண பலம், ஆயுத பலம் கொண்டதாக இருக்கவில்லை.

மொசுல் நகரமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் எண்ணை வளம் நிறைந்தது. அதனால், ஈராக்கை எண்ணைக்காக ஆக்கிரமித்த அமெரிக்கர்கள், பல கோடி டாலர் செலவில், ஈராக்கிய இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, தம்மிடம் இருந்த சிறந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களையும் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். ஆனால், அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அமெரிக்கர்கள் ஈராக் மீள் கட்டுமானத்திற்காக செலவிட்ட மில்லியன் கணக்கான டாலர்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. ISIS போராளிகள் மொசுல் நகரை கைப்பற்றியதும், அமெரிக்கப் பயிற்சி பெற்ற ஈராக்கிய படையினர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சுன்னி முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும், ஷியா முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம் செலுத்திய புதிய ஈராக் அரசையும் எதிர்த்து போராடினார்கள். அமெரிக்கப் படையினர், அன்றைய விடுதலை இயக்கங்களை ஒழித்துக் கட்டி விட்ட மகிழ்ச்சியில் ஈராக்கை விட்டு வெளியேறி இருந்தனர்.

ஈராக்கில் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டாலும், சுன்னி முஸ்லிம் மக்கள் புதிய ஈராக் அரசுக்கு விசுவாசமாக மாறவில்லை. தற்போது கடும்போக்கு இஸ்லாமியவாத ISIS இந்தளவு விரைவாக முன்னேறியதற்கு, அந்தப் பகுதி மக்களின் ஆதரவு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், கடந்த சில மாதங்களாக, ஈராக்கிய இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்கி இருக்கும் அளவிற்கு, ஈராக் அரசுக்கு எதிரான மக்களின் வெறுப்பு அதிகரித்து காணப் பட்டது. விடுதலை இயக்கங்களை அழிக்க முடிந்தது. ஆனால், மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியவில்லை. அண்மைக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய அடி இதுவாகும்.

இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


ஈராக் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, June 11, 2014

உக்ரைனில் நடப்பது என்ன?


(உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, ஒரு அரசியல் கலந்துரையாடல். தோழர் சிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்.   "மாற்று" இணையத் தளத்தில் வெளியானது. http://maattru.com/ukrain-situation-kalaiyaran-sanswers/) 

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக“த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவர். சர்வதேச ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் திணிக்கப்பட்ட பார்வையின் முகத்திரையினை கிழித்துக்காட்டி, அதன் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பன்மொழிப்புலமையும் கொண்டவராகையால், அந்தந்த பிரதேச நிலவரங்களை அவர்களின் மொழிகளினூடாகவே அறிந்துகொண்டு தமிழில் எழுதிவருகிறார்.
“ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா“, “அகதி வாழ்க்கை“, “ஈராக்: வரலாறும் அரசியலும்“, “ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?“, “காசு ஒரு பிசாசு” ஆகிய அவரது நூல்கள் உலக அரசியல் குறித்த ஆர்வமுடையோர் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியவை. உக்ரைனில் கலகம் உருவாகத் துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தமிழில் கட்டுரைகளாக நமக்குத் தந்துகொண்டிருக்கிறார். உக்ரைன் குறித்து நமக்குப் பொதுவாக எழும் கேள்விகளைத் தொகுத்து, அதற்கான அவரது பதில்களை “மாற்று” வாசகர்களுக்காகத் தருகிறோம்.

  • ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர வேண்டும் என்பதாக துவக்கத்தில் வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்ட இப் பிரச்சனை, அதன்பின்னர் பல கோணங்களில் செல்லத் துவங்கிவிட்டதே. உண்மையிலேயே அதுமட்டும் தான் காரணமா? அல்லது வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டா? விரிவாகச் சொல்லமுடியுமா?


உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முன்னர், சில வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி, ரஷ்யா ஆதரவு யனுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்ட பிறகே, நெருக்கடி ஆரம்பமாகியது. உக்ரைனில் மேற்குலக ஆதரவு “புரட்சி” நடப்பது இதுவே முதல் தடவை அல்ல. 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க கோடீஸ்வரர் சோரோஸ் நிதியுதவியுடன் “ஒரேஞ்ச் புரட்சி” நடந்தது. அப்போதும், மேற்குலக நாடுகள் ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியானார். அப்போதெல்லாம், ரஷ்யா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேற்குலக ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஒற்றுமையின்மை காரணமாக, பெரும்பான்மையான உக்ரைனிய வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ரஷ்ய ஆதரவு யனுகோவிச்சிற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றை வைத்து ஆராய்ந்தால், இன்றைய உக்ரைனிய நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வேண்டும். “சர்வதேச சமூகத்தின்” எதிர்ப்பை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சம்பாதிக்கும் அளவிற்கு, ரஷ்யா விட்டுக் கொடாத நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? சில நேரம், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவது கூட ரஷ்யாவுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வது அச்சத்தை உண்டாக்கி இருக்கலாம்.

கிழக்கு ஐரோப்பாவில், சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், “கம்யூனிச அபாயத்தை” காரணமாகக் காட்டி, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இன்று, உலகில் எங்கேயும் “கம்யூனிச அபாயம்” இல்லை. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள், முதலாளித்துவ நாடாகி விட்டன. ஆனாலும், நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது. முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த பால்டிக் கடலோர நாடுகள், ஜோர்ஜியா போன்ற நாடுகள் கூட நேட்டோவில் சேர்ந்து விட்டன. அப்படியானால், ரஷ்யா எதற்காக இப்போது மட்டும், நேட்டோ விஸ்தரிப்பை கண்டு அஞ்ச வேண்டும்?

பத்து வருடங்களுக்கு முன்னர், தலைநகர் கீவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பணம் கொடுப்பவர் பக்கம் சாயும் கொள்கையற்ற கும்பலாக இருந்தது. ஆனால், இந்த தடவை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாசிஸ சக்திகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் ஒரு கட்சியின் தலைவர், பல வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்தவர். உக்ரைனிய பாசிஸ்டுகள், ஐரோப்பிய ஒன்றியம் (ஜெர்மனி), அமெரிக்கா ஆகிய சக்திகள் ஒன்று சேர்வது, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக தென்பட்டது. ஏதாவதொரு இரகசியத் திட்டம் இருக்கலாம்.

இந்த தடவை, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சதிப்புரட்சி நடத்தி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், கிரீமியாவை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க இருந்தனர். கிரீமியா தொடர்பாக, இதற்கு முத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு, அங்கிருக்கும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென கோர இருந்தனர். ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னர், அங்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கி தளம் அமைத்திருக்கும். இந்த இரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்தறிந்த ரஷ்யா, கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

கிரீமியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. அங்கிருந்து இலகுவாக கருங்கடலை கண்காணிக்க முடியும். கருங்கடலை சுற்றி, உக்ரைன், ரஷ்யா தவிர, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா போன்ற பல நாடுகள் உள்ளன. மேலும், மத்தியதரைக் கடல் நாடுகளுடன் தொடர்புபடுத்தும் பொஸ்போருஸ் (துருக்கி) நீரிணை ஊடாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் கிரீமியா முக்கியமானது.

19 ம் நூற்றாண்டில், கிரீமியாவை கைப்பற்றுவதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவுடன் போரிட்டன. கிரீமியா போரில் பல இலட்சம் பேர் மடிந்தனர். ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே, அந்தப் போர் நடந்தது. கிரீமிய யுத்தம் தான், உலக வரலாற்றில் நடந்த முதலாவது நவீன காலப் போர் ஆகும்.

உக்ரைன் நெருக்கடிக்கு, கிரீமியா தவிர, வேறு காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பியக் கண்டத்திற்கு செல்லும் பெட்ரோலிய, எரிவாயுக் குழாய்கள் உக்ரைன் ஊடாகச் செல்கின்றன. அவற்றை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது. உண்மையில், ஆப்கான் போரும் இது போன்ற காரணத்திற்காகவே நடந்தது. துருக்மேனிஸ்தானில் இருந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் அமைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்து இருந்தன.

உக்ரைனின் கிழக்கு மாநிலமான டானியேட்ஸ்க் பகுதியில், இன்னமும் நிலத்துக்கு கீழே தோண்டப்படாத எரிவாயுப் படிமங்கள் இருக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அவற்றை ரஷ்யா எடுப்பதற்கு முன்னர், மேற்குலக நாடுகள் முந்தி விட நினைத்தன. இறுதியில், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்த உக்ரைன் அரசைக் கவிழ்த்த சதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது?


கீவ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கோஷம் எழுப்பியதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட, “உக்ரைனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” என்று தான் கூறி வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்றால், நாங்கள் ஜெர்மனியை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஜெர்மனி, இன்று தனக்கு வேண்டியதை, இலகுவாக பணம் கொடுத்து சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்கா கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. இராணுவத் தலையீடு நடத்தப் பட வேண்டுமானால், அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையில், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பலப்பரீட்சை நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ பலம் பெறுவதை தடுப்பதும், அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

ஆகவே, முன்பு யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்ததைப் போல, உக்ரைன் விடயத்திலும், சில சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிரிமியா, டொனியேட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நடத்தப்பட்ட தேர்தல்களில், தனியாகப் பிரிந்துசெல்லும் முடிவெடுக்கப்பட்டன. இத்தேர்தல்களை யார் முன்னின்று நடத்தினார்கள்? சாதாரண மக்களின் பங்களிப்பு என்ன?

கிரீமியாவில், கணிசமான அளவு ரஷ்ய அழுத்தம் இருந்தது உண்மை. டொனியேட்ஸ்க்கில் நிலைமை வேறாக இருந்தது. அங்கு பல அரசியல் சக்திகள் ஒன்று சேர்ந்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்திருந்தன. ரஷ்யாவுடன் சேர விரும்பும் ரஷ்ய தேசியவாதிகள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் போரிட்டு திரும்பிய முன்னாள் சோவியத் படையினர், மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென விரும்புவோர், உக்ரைனிய கம்யூனிஸ்டுகள் என்று பல வேறுபட்ட அரசியல் சக்திகள், கிளர்ச்சியில் பங்குபற்றின.

ரஷ்யாவில் இருந்து ஊடுருவியவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ரஷ்யாவுடன் சேருவதை விரும்பவில்லை. அவர்களும் ஒரு காலத்தில் உக்ரைனிய தேசியவாதிகளாக இருந்தவர்கள். சோவியத் யூனியனில் இருந்து சுதந்திர நாடான காலத்தில், டொனியேட்ஸ்க் பகுதி மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்திருந்தனர்.

ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில், ஆரம்பத்தில் இருந்தே பெரும்பான்மையான மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க காரணம் இருந்தது. தீவிர உக்ரைனிய தேசியவாதிகளின் அரசு, ரஷ்ய மொழி உட்பட சிறுபான்மை மொழிகள் அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றியது. (ரஷ்யர்கள் தவிர, ஹங்கேரி, ரோமானியா, போலிஷ், இட்டிஷ், கிரேக்க மொழிகளை பேசும் மக்களும் உக்ரைனில் சிறுபான்மையினராக உள்ளனர்.) எல்லா நாடுகளிலும், மொழிப் பிரச்சினை, மக்களை கிளர்ந்தெழ வைக்கக் கூடியது.

  • சுதந்திர கிரிமியா என்பது வரலாற்று ரீதியான கோரிக்கையா? கிரிமியாவின் தற்போதைய நிலையென்ன?


கிரீமியாவில் வாழும் பெரும்பான்மையான ரஷ்யர்கள், நீண்ட காலமாகவே உக்ரைனின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பி இருக்கவில்லை. முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்திலும் அப்படித்தான். ஆனால், சோவியத் யூனியன் ஒரே நாடாக, எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்த படியால், அன்று யாரும் அந்த உணர்வை பெரிதாக மதிக்கவில்லை. உக்ரைன் தனியான சுதந்திர நாடான பின்னர், ரஷ்யா தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தற்போதைய நெருக்கடி ஒரு வரப்பிரசாதம் ஆகும். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்போது, கிரீமியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் சிறிய நிலப்பகுதி, நிலக் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது. உக்ரைனில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து, உக்ரைன் மற்றும் ரஷிய இடதுசாரி/முற்போக்கு இயக்கங்களின் நிலைப்பாடும்/பங்களிப்பும் என்னவாக இருக்கிறது?

உக்ரைன், ரஷ்ய முற்போக்கு/இடதுசாரி இயக்கங்கள், கிரீமியா பிரிவினையையும், டொனியேட்ஸ்க் கிளர்ச்சியையும் ஆதரித்தார்கள். அவர்கள் யாரும், புட்டினை அல்லது ரஷ்ய பெருந் தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும், முன்னரைப் போல சோவியத் யூனியன் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்கள். (இன்று சோவியத் யூனியனை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பது ஒரு பலமான வல்லரசு. இன்றுள்ள சீனா போன்றது.)

புட்டின் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, அவரும் ஒரு முதலாளித்துவவாதி தான். ஆயினும், முதலாளிய வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டி, இறுதியில் போருக்கு இட்டுச் செல்லும். முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஐரோப்பா போன்று தான், இன்றுள்ள நிலைமை உள்ளது. அதனால், இடதுசாரிகள்/முற்போக்காளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், வரலாற்றுப் போக்கை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்கின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பகுதிகள் தனிநாடாக மாற விரும்புவதை, தனிநாடு கோரும் இன்னபிற சர்வதேச இயக்கங்கள் எப்படிப் பார்க்கின்றன?

அந்த இயக்கங்கள் எல்லாம் அடிப்படையில் தேசியவாதம் பேசினாலும், அவை ஒன்றில் அமெரிக்காவை ஆதரித்து, அல்லது எதிர்த்துக் கொண்டு தமது தனி நாட்டுக்காக போராடுகின்றன. பொதுவாக, பிற நாட்டு விவகாரங்களை அலட்சியப் படுத்துவதற்கு, தேசியவாதிகளுக்கே உரிய குறுகிய மனப்பான்மையும் ஒரு காரணம். ஆகவே, அந்த இயக்கங்களின் நிலைப்பாடு, பெருமளவு மாறுவதற்கு இடமில்லை.


  • உக்ரைன் குறித்துப் பேசாத தமிழ் தேசியவாதிகளின் மவுனத்திற்கு காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? 


மேற்குறிப்பிட்ட விளக்கம் அவர்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாத இயக்கத்தினை வழிநடத்துவோர், மேற்குலகை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அல்லது அந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆவர். அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்து, அமெரிக்கா சொல்வதை எல்லாம் சரியென்று நம்புவார்கள். உலகில் பல விடயங்களுக்கு பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. பொதுவான தேசியவாதம் எதுவும் உலகில் இல்லை.

  • மூன்றாம் உலகப்போர்? மீண்டும் ஒரு சோவியத் யூனியன்?


இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லை. பனிப்போர் காலத்தில் இருந்த நிலைமைக்கு உலகம் திரும்பிச் செல்லும். ஆனால், இந்தப் பனிப்போர் சித்தாந்த முரண்பாடு காரணமாக நடக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், கிரீமியா போருக்கு முன்பிருந்த நிலைமையும் இப்படித் தான் இருந்தது. அன்று, ஒரு பக்கத்தில், ரஷ்யா தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மறு பக்கத்தில், பிரிட்டன் தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. இரண்டுமே நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. ஆனால், பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டன. பனிப்போர் என்றால், அதன் அர்த்தம், வல்லரசுகள் நேரடியாக மோதிக் கொள்ள மாட்டா. அவற்றின் பாதுகாப்பில் தங்கி இருக்கும், வேறு ஒரு சிறிய நாட்டில், பதிலிப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும். அது தான் தற்போது உக்ரைனில் நடக்கிறது.

ஒரு பக்கம் உக்ரைனிய மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள். மறு பக்கம், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா பொருளாதாரப் போரை நடத்திக் கொண்டிருக்கும். முந்திய யூகோஸ்லேவிய போர்கள் மாதிரி, உக்ரைன் போர் நீண்ட காலம் இழுக்குமானால், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் பொருளாதார நலன்கள் கிடைக்கும். முன்பு போல ஆயுத உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். எண்ணை, எரிவாயுவின் விலை அதிகரிக்கும். ரஷ்யாவுக்கு வரும், அந்நிய செலாவணியில் அரைவாசிப் பகுதி எரிபொருள் விற்பனையால் கிடைக்கிறது. சர்வதேச சந்தையை கட்டுப்படுத்தும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்புகின்றன. அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • உக்ரைனிலிருந்து நம்முடைய தமிழ் மக்களும் இயக்கங்களும் என்ன பாடம் கற்றுக்கொள்ளமுடியும்?


இந்தியாவிலும், இலங்கையிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு இருக்கவே செய்யும். அவர்கள் ஒரு பக்கம் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள், மறு பக்கம் தமிழ் இயக்கங்களையும் ஆதரிப்பது போல நடிப்பார்கள். அவ்வாறு, இரண்டு தரப்பினரின் விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதனை உணர்ந்து கொள்ளாமல், மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆகவே, தமிழ் இயக்கங்கள் ஒரு தலைகீழான கொள்கை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொண்டால், அது தேசிய விடுதலைக்கான கதவுகளை திறந்து விடும். அதனால் தான், 2 ம் உலகப் போருக்கு பிந்திய உலகில், காலனியாதிக்கதில் இருந்து விடுதலையடைய போராடிய இயக்கங்களை, அன்றிருந்த சோவியத் யூனியன் நிபந்தனை இன்றி ஆதரித்தது.




உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, June 09, 2014

ஏகாதிபத்திய நலன்களுக்கான ஜனநாயகம், மனித உரிமைகள்


இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலகை மாற்றிய சோவியத் யூனியனின் உடைவு, பெர்லின் மதில் வீழ்ச்சி, தியனன் மென் படுகொலை போன்ற நிகழ்வுகள் குறித்து, பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியான தொழிற் கட்சிக்குள் (PTB) மாபெரும் விவாதம் ஒன்று நடந்தது. அந்த விவாதத்தில் பேசப் பட்ட விடயங்களை தொகுத்து, மத்திய குழு உறுப்பினர் லூடோ மார்த்தென்ஸ் ஒரு நூலாக (Van Tien An Men tot Timisoara) வெளியிட்டார். அந்த நூலில் இருந்து சில பகுதிகள், இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதால், அவற்றை இங்கே மொழிபெயர்த்து தந்துள்ளேன்.
*******

ஏகாதிபத்திய ஜனநாயகமும், மக்கள் ஜனநாயகமும் இரண்டு பகை முரண்பாடு கொண்ட ஜனநாயக அமைப்புகள் ஆகும். இவ்விரண்டு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாத வர்க்கங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. ஏகாதிபத்திய ஜனநாயகத்தின் மையக்கருவாக தன்முனைப்பு காணப் படுகின்றது. மனிதர்களை ஓநாய்கள் போன்று, ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகின்றது. அதற்கு மாறாக, மக்கள் ஜனநாயகம் கூட்டுத்துவ வேலைத் திட்ட முறையை கொண்டது. சகோதரத்துவ மனப்பான்மை, உழைப்பாளர்கள் மத்தியில் பரஸ்பர உதவி ஆகியவற்றை முதன்மையான நோக்கமாக கொண்டது.

சோஷலிச நாடுகளிலும் மேலைத்தேய பாணி அரசியல் ஜனநாயகத்தை நடைமுறைப் படுத்த முடியாதா, என்று ஒரு தோழர் கேட்கிறார். இந்த நிலைப்பாட்டில் ஒரு அடிப்படைத் தவறு உள்ளது. ஜனநாயகத்தில் உள்ள வர்க்க குணாம்சத்தை தோழர் மறந்து விட்டார். அவர், வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு "தூய்மையான ஜனநாயகம்" பற்றி பேசுகின்றார். அதே நேரம், ஏகாதிபத்தியத்திற்கும், சோஷலிசத்திற்கும், மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் இடையிலான மோதல்களை மறைக்கிறார்.

புஷ், தாட்சர், மித்தரான் ஆகியோர் முன்மொழிந்த அர்த்தம் குறித்து அந்த தோழர் நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் கூறிய "சுதந்திரமும், ஜனநாயகமும்; பொருளாதார சுதந்திரம், முதலாளிகளின் ஜனநாயகம்" ஆகியவற்றை உள்ளடக்கியது. அதாவது, ஒரு மார்க்சிஸ்டின் பார்வையில் "முதலாளிய பொருளாதாரமும், முதலாளிய ஜனநாயகமும்." இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாதது. இதே விடயம் குறித்து நவ நாஸிகள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் பற்றி பிளாம்ஸ் ப்ளாக் கட்சி உறுப்பினர் அன்னேமான்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். "அதிக பயன் தரத்தக்க பொருளாதாரம் சுதந்திரமான பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது ஒரு முதலாளிய பொருளாதாரம் தான். ஆனால், பொருளாதார சுதந்திரம் உடனடியாக பன்மைத்துவ சமூகத்திற்கு இட்டுச் செல்லும். அத்தகைய சுதந்திரம் அரசியல் மட்டத்திலும் சுதந்திரத்தை கோரும். ஜனநாயகம், பன்மைத்துவம் இன்றி முதலாளித்துவத்தை கொண்டு வர முடியாது." என்பது அவர் வாதம்.

எல்லா பிற்போக்கு சக்திகளும் சோஷலிசத்தை உள்ளிருந்து அழிப்பதில் ஒன்று சேர்கின்றன. ஹிட்லர் அல்லது பினோச்சே போன்றவர்களின் தலைமையில் அரசமைக்கப் போகும் பாசிஸ்டுகள் பின்னொரு காலத்தில் நினைத்துப் பார்ப்பார்கள்: "முதலாளித்துவ பொருளாதாரம் எந்தளவு பிரயோசனமானது." என்று சொல்லிக் கொள்வார்கள்.

அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில், "புலம்பெயர்தல்" ஓர் அடிப்படை மனித உரிமை. ஏகாதிபத்திய சர்வாதிகாரம் நிலைநாட்டப் பட்டுள்ள மூன்றாமுலக நாடுகளில், கோடிக் கணக்கான மக்கள் புலம்பெயர விரும்புகிறார்கள். பசியால் வாடும், கஷ்டப் படும் மக்கள், மேற்குலகிற்கு வேலை தேடிச் செல்வதை ஏகாதிபத்தியம் தடுக்கின்றது. நம்பமுடியாத அளவிற்கு முயற்சி எடுத்து, பல தியாகங்களை செய்து, மேற்குலகை வந்து சேர்ந்தால், அவர்கள் அங்கே நாயிலும் கேவலமாக நடத்தப் படுகின்றனர். அத்தோடு வெளியேற்றப் படுகின்றார்கள்.

(தொண்ணூறுகளுக்கு முன்னர்) ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்த, ஸ்திரமான கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் இருந்து மக்கள் புலம்பெயர்வதை ஏகாதிபத்தியம் ஆதரித்தது. அதன் நோக்கம்: "மூளைகளின் வெளியேற்றம்" (Brain - drain). சோஷலிச நாடுகளில் இலவசக் கல்வி மூலம் பயனடைந்த அறிவுஜீவிகள் மேல் ஆதிக்கம் செலுத்துவது. அவர்களைக் கொண்டே சோஷலிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது. அவர்களது தாயகத்தில் "சுதந்திரம் பற்றாக்குறையாக" இருப்பதாக காட்டுவது. ஒரு காலனியாதிக்க நாடான இஸ்ரேல் அவர்களை முன்னரங்க படையணிகளில் நிறுத்தி பீரங்கிக்கு தீனியாக்கியது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், முதலாளித்துவ பொருளாதாரம் நிலை நாட்டப் பட்டதும், அங்கிருந்து புலம்பெயரும் இலட்சக் கணக்கான ஏழை மக்கள், மேற்குலகிற்கு வேலை தேடிச் செல்ல விடாமல் தடுக்கப் படுவார்கள். அந்த நேரம், மூன்றாமுலக பொருளாதார அகதிகள் போன்று மோசமாக நடத்தப் படுவார்கள். அந்தக் காலம் வரும் பொழுது, ரீகனும் புஷ்ஷும் முன்மொழிந்த "மனித உரிமை", "புலம்பெயரும் உரிமை" என்பன திடீரென காணாமல்போகும்.

கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையான அகதிகள், ஹங்கேரி ஊடாக மேற்கு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த கதை நமக்கெல்லாம் தெரியும். அவர்களது தாயகத்தில் "சுதந்திரம், ஜனநாயகம் பற்றாக்குறையாக இருந்த காரணத்தினால்" அந்த எளிய மக்கள் வெளியேறியதாக சொல்லப் பட்டது. ஹங்கேரி திரிபுவாதிகள், மேற்கு ஜெர்மன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்கள் கொடுத்த பணத்திற்காக திட்டமிட்டு நடத்திய நாடகம் இது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

"கம்யூனிச பயங்கரவாதத்திற்கு" பயந்து தப்பியோடியவர்கள், நாயகர்கள் போன்று வரவேற்கப் பட்டனர். குட்டி பூர்ஷுவா வர்க்கமும் அந்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டது. மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்த சோஷலிச நாடொன்றை நிலைகுலைய வைப்பதற்கும், எதிர்ப்புரட்சியாளர்களை ஊக்குவிப்பதற்குமான திட்டம் அது. இன்று அது எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ள உண்மை.

அப்போது, திடீரென பத்தாயிரம் அல்பேனியர்கள் படகுகளில் இத்தாலிக்கு சென்றார்கள். அவர்களுக்கும் "ஜனநாயகம்,சுதந்திரத்தை" ருசி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கலாம். அந்தக் காலகட்டத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேலான பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம் வென்றெடுக்கப் பட்டு விட்டது. 

அதனால், "துணிச்சலான அல்பேனிய சுதந்திரப் போராளிகளை" வரவேற்பதற்கு, இத்தாலியில் யாரும் காத்திருக்கவில்லை. அந்த வறிய அல்பேனிய உழைப்பாளிகளை வரவேற்பதற்கு இராணுவத்தினரும், வேட்டை நாய்களும் காத்திருந்தனர். அவர்களை கால்பந்து மைதானங்களில், கொளுத்தும் வெயிலில் தண்ணீரும் கொடுக்காமல் தடுத்து வைத்தார்கள். அத்தனை பேரையும் பலவந்தமாக பிடித்து அல்பேனியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

- Ludo Martens 
  4 June 1989
(Van Tien An Men tot Timisoara)

Saturday, June 07, 2014

ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?


இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், "வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்," என்று சிறிலங்கா அரசு கூறி வருகின்றது. 12 ஏப்ரல் 1971 அன்று, கொழும்பு நகரில் இருந்த வட கொரிய தூதரகம் இழுத்து மூடப் பட்டது. வட கொரிய தூதுவர் Hwang Yung Wu, மற்றும் 17 பணியாட்களும் உடனடியாக நாடுகடத்தப் பட்டனர். தூதரகத்தில் வேலை செய்த இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப் பட்டு, சில நாட்கள் தடுத்து வைக்கப் பட்டனர். 1970 ம் ஆண்டு தான், அன்று சிறிமாவோ ஆட்சியின் கீழிருந்த இலங்கை அரசு, வட கொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குள் அந்த உறவை முறிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யை உருவாக்கிய ரோகன விஜேவீரவின் கொள்கை, பெருமளவு (சிங்கள) தேசியவாதக் கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது. வட கொரியாவின் அன்றைய ஆட்சியாளர் கிம் இல் சுங் கூட, ஒரு மிகத் தீவிரமான (கொரிய) தேசியவாதி. அந்த வகையில், வட கொரிய அரசுக்கும், ஜேவிபி க்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்தன. கிளர்ச்சியின் முடிவில், அரச படைகளினால் கைப்பற்றப் பட்ட ஜேவிபி முகாம்களில், வட கொரிய கொள்கைப் பரப்பு நூல்கள் கண்டெடுக்கப் பட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அந்தக் காலத்தில், ஒரு கிளர்ச்சியை அடக்கும் அளவிற்கு, இலங்கை அரசிடம் ஆட்பலம், ஆயுத பலம் கிடையாது. இலங்கையில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி நடக்கிறது என்று கேள்விப் பட்டதும், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள், இலங்கைக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தன. எதிரெதிர் அணியில் இருந்த, அன்று பங்களாதேஷ் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இலங்கைக்கு உதவின. மீண்டும் ஒரு தடவை, 2009 ம் ஆண்டு, புலிகள் அழிக்கப் பட்ட ஈழப்போரின் இறுதி யுத்தத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து, இலங்கை அரசுக்கு உதவின. யாருமே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை என்பது, இதிலிருந்து தெரிய வருகின்றது.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருந்தது. இலங்கையை சுற்றிய கடற் பகுதியில், இந்திய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றின. அப்போது, ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த வட கொரிய ட்ரோலர் படகுகள், இந்திய கடற்படையினரிடம் அகப்பட்டன. இதனால், ஜேவிபிக்கு வட கொரியா அனுப்பிய  ஆயுத விநியோகம் வந்து சேரவில்லை. பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றிய, ஆயுதங்களை வைத்துக் கொண்டு மட்டுமே, ஜேவிபி அரச படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது.

ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழிப்பதற்கு, இந்தியப் படைகளும் களத்தில் நின்று உதவி செய்தன. அந்த அழித்தொழிப்பில், குறைந்தது பத்தாயிரம் இளைஞர்கள் கொல்லப் பட்டனர். (25000 என்று ஜேவிபி கூறுகின்றது.) சுமார் இருபதாயிரம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். உண்மையில், அன்றிருந்த ஆயுதமேந்திய ஜேவிபி உறுப்பினர்கள், மொத்தம் இரண்டாயிரம் தான் இருக்கும்.

71 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு, போதியளவு மக்கள் ஆதரவு இல்லாதிருந்தமை காரணம் என்று நம்பப் படுகின்றது. இலங்கையின் இரண்டு பெரிய ஆளும் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தமக்குத் தெரிந்த ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை காட்டிக் கொடுத்தனர். தேர்தல் காலத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மிகத் தீவிரமாக ஒன்றையொன்று எதிர்த்து தாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இலங்கையில் ஒரு இடதுசாரி கிளர்ச்சி நடக்கிறது என்றதும், இரண்டு எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிகளின் வர்க்க அபிமானம்.

அன்று, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய, தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரித்தன. "அன்றைய சிறிமாவோ அரசில் அமைச்சராக இருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற இடதுசாரி அமைச்சர்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதாக" இன்றைக்கும் பல தமிழ்த் தேசியவாதிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், 71 ம் ஆண்டு, ஒரு டிராஸ்கிஸ்ட் கட்சி உறுப்பினரான, இதே கொல்வின் ஆர்.டி. சில்வா, அரச படைகள் ஜேவிபி கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்கியதை ஆதரித்து பேசினார். 

அப்போது, தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகளுடன் கூட்டிச் சேர்ந்து கொண்டு, அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த சிங்கள மக்களின் முதுகில் குத்தினார்கள். இலங்கை வரலாறு முழுவதும், இப்படித் தான், எல்லா அரசியல் சக்திகளும், ஒருவர் முதுகில் மற்றவர், மாறி மாறி குத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், முதலாளிய வர்க்க நலன்களை பேணும் சிறிலங்கா அரசு இயந்திரம், தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. 

இலங்கையில் ஒரு சோஷலிசத்திற்கான வர்க்கப் புரட்சி நடக்குமானால், இன்று எதிரிகளாக காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பொதுவான வர்க்க குணாம்சம், அவர்களை ஓரணியில் சேர்த்து விடும். முதலில் இரண்டு சிங்கள பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தை ஆதரிக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து இராணுவ உதவி வழங்கும். இது கற்பனை அல்ல. ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட வரலாறு.

மேலதிக தகவல்களுக்கு: 

Friday, June 06, 2014

தனியுடைமையை முதலாளித்துவமே ஒழித்து விடும்


கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஓரிடத்தில் இவ்வாறு எழுதி இருந்தார். "கம்யூனிஸ்டுகளான நாங்கள் தனியுடைமையை ஒழிக்கப் போவதாக, எம் மீது குற்றஞ் சாட்டுகின்றீர்கள். அதை நாங்கள் செய்யத் தேவையில்லை. தனி உடமையை முதலாளித்துவமே ஒழித்துக் கட்டி விடும்." இன்றைய நெதர்லாந்து தினசரிப் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.

உலகம் முழுவதும் நடப்பதைப் போல, நெதர்லாந்திலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. சமூகத்தில் சமத்துவமின்மையை அளவிடும் புள்ளிவிபரம் வெளியிடப் பட்டுள்ளது. அது இன்று முக்கியமான விவாதப் பொருளாகி உள்ளது.

சமத்துவமின்மை பற்றிய புள்ளிவிபரத்தில் இருந்து தெரிய வருவதாவது, "சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள செல்வந்தர்களான 10%, சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள், நாட்டில் உள்ள மொத்த தனியார் சொத்தில் 60% ஆகும்! அதி உச்சத்தில் உள்ள 2% பணக்காரர்கள் மட்டும், மூன்றில் ஒரு பங்கு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர்." 
சமூகத்தில் அடி மட்டத்தில் உள்ள 10% மக்களிடம் சொத்து எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் கடன் மட்டும் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும், தமிழர்களில் பலர், அடித்தட்டில் உள்ள 10% ற்குள் அடங்குகின்றனர். "சொந்தமாக" வீடு வாங்கி வைத்திருப்பதாக, "சொந்தமாக" கார் வாங்கி வைத்திருப்பதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவை அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல. மாறாக, வங்கிகளுக்கு சொந்தமான கடன்கள்.

அரச கொள்கை வகுப்பதற்கான ஆலோசனை சபை (Wetenschappelijke Raad voor het Regeringsbeleid சுருக்கமாக: WRR)அந்த அறிக்கையை தயாரித்து இருந்தது. ஆமாம், அது ஒரு நெதர்லாந்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம் தான். அதனால் கூட இந்த கசப்பான உண்மைகளை மறைக்க முடியவில்லை: "பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள்  மென்மேலும் ஏழைகள் ஆகிறார்கள்."

நெதர்லாந்தில் எந்தளவுக்கு சமத்துவமின்மை நிலவுகின்றது என்பதை கண்டறிந்த ஆய்வின் முடிவுகளை இங்கே சுருக்கமாகத் தருகிறேன். சமூகத்தின் மேல் தட்டில் உள்ள பணக்கார 10% கும், கீழ்த்தட்டில் உள்ள வறுமையான 10% இடையிலான வேறுபாடு விரிவடைந்து கொண்டு செல்கின்றது. உதாரணத்திற்கு, சில புள்ளிவிபரங்கள்:
  • 1977 ம் ஆண்டு, அடித்தட்டில் வாழும் பத்து சதவீதத்தின் சராசரி வருடாந்த வருமானம் 10700 யூரோக்கள். 2011 ம் ஆண்டு, அந்தப் பிரிவினரின் வருமானம் 10300 யூரோக்கள். அதாவது 4% இழப்பு.
  • அதே வருட காலத்தில், மேல்தட்டு பணக்கார பத்து சதவீதத்தின் வருமானம் 112000 யூரோக்களில் இருந்து, 144000 யூரோக்களாக அதிகரித்துள்ளது. அதாவது 28% வருமான அதிகரிப்பு.


இந்த இடைவெளி எவ்வாறு அதிகரித்தது? ஆய்வாளர்களின் கருத்துப் படி, அண்மைக் கால தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். உயர்ந்த கல்வித் தகைமை கொண்டவர்கள், கணனிக்கு முன்னால் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அதே நேரம், அதே கணனிகள் தான் குறைந்தளவு கல்வித் தகைமை கொண்ட தொழிலாளர்களுக்கு பதிலாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அடித்தட்டு மக்களிடம் இருந்து வேலைகள் பறிக்கப் பட்டதால், அவர்கள் ஏழைகள் ஆகின்றனர். பறிமுதலான வேலைகள் காரணமாக மிச்சம் பிடிக்கப் படும் செலவுகள், இலாபமாக மாறி மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் பைகளை நிரப்புகின்றது. 

அதற்கு அடுத்த படியாக உலகமயமாக்கல். தொலைபேசி, இணையம் ஆகியவை தற்போது இலகுவாகவும், மலிவாகவும் கிடைப்பதால், பணக்காரர்களுக்கு தான் அதிக இலாபம். ஊதியம் குறைந்த நாடொன்றில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு, வருமான வரி குறைவாக உள்ள நாட்டில் அலுவலகம் அமைத்துக் கொண்டு, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடிகின்றது. குறைக்கப்படும் உற்பத்திச் செலவுகளில் இருந்து கிடைக்கும் நிகர இலாபம், பணக்காரர்களின் கஜானாவை நிரப்புகின்றது. இது போன்ற நடவடிக்கைகளால், நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளுக்கு நேரடியான பலன்களும், பங்குச் சந்தையில் முதலிடும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மறைமுகமான நன்மைகளும் கிடைக்கின்றன. 

மேல்தட்டு வர்க்கப் பெண்களும் நிர்வாகத் துறைகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அந்த வர்க்கத்தில் வருமானமீட்டுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும், குறைந்த வருமானம் ஈட்டும் ஏழைப் பெண் தொழிலாளியை விட, உத்தியோகம் பார்க்கும் பெண்கள் அதிகமாக சம்பாதிக்கின்றனர். பெண்களை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பிரிவினராக, சில பெண்ணியவாதிகளும் கருதுகின்றனர். இறுதியில், வர்க்கமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது என்பதை, இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றது.

நடுத்தர வர்க்கத்தில் ஒரு கணிசமான தொகையினர், எந்த சொத்தையும் சேர்த்து வைப்பதில்லை. அதுவும், சமத்துவமின்மை அதிகரிக்க காரணமாக உள்ளது. ஏனென்றால், நெதர்லாந்தில் பல தசாப்தங்களாக நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. (சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்ற, மக்கள் நலன்களுக்கான முற்போக்கு பொருளாதார திட்டங்கள்.) அதனால், பலருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் இருக்கவில்லை. குறிப்பாக, கீழ் நடுத்தர வர்க்கம் சொத்து எதையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கவில்லை. (மறுபக்கத்தில், அவர்களும் அதிக கடன்களை வாங்கி வைத்துள்ளனர்.)

நலன்புரி அரசு சிறப்பாக இயங்கிய காரணத்தினால், நெதர்லாந்தில் சமத்துவமின்மை இடைவெளி குறைவு என்று பலர் நினைத்தார்கள். வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களும் அப்படி நினைத்துக் கொண்டார்கள். ஒரு கம்பனி நிர்வாகி எவ்வளவு அதிகமான சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? என்று பலரிடம் கேள்வி கேட்கப் பட்டது.

அதாவது, ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளி, மாதம் ஒன்றுக்கு 1000 யூரோ சம்பளம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நிறுவனத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் நிர்வாகியின் சம்பளம் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்?

ஒரு நிர்வாகி, சாதாரண தொழிலாளியை விட பதினோரு மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில், ஐந்து மடங்கு அதிக சம்பளம் வாங்குவது நியாயமானது. ஆனால், உண்மை நிலவரம் என்ன தெரியுமா? ஒரு தேர்ச்சி பெற்ற தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட, நிர்வாகியின் சம்பளம் பதினேழு மடங்கு அதிகமாக உள்ளது!

இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

WRR  சில ஆலோசனைகளை முன்வைக்கின்றது.
  • சொத்துக்களுக்கான வரி அதிகரிக்கப் பட வேண்டும். அதே நேரம், குறைந்தளவு ஊதியம் வாங்கும் வேலை செய்து சம்பாதிப்பவரின் வருமான வரி குறைக்கப் பட வேண்டும்.
  • அடி மட்டத்தில் வேலை செய்வோரின், அதி குறைந்த அடிப்படை சம்பளத்தின் அளவு கூட்டப் பட வேண்டும். தொழிலாளர்களும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும் திட்டம் வரவேற்கப் பட வேண்டியது.
  • சந்தையில் விற்கும் பொருட்களில் ஒரு தர நிர்ணய லேபிள் ஒட்டி விடலாம். உதாரணத்திற்கு, கனடாவில் சந்தையில் விற்கப்படும் சில பொருட்களின் மேல் ஒரு லேபிள் ஓட்டப் பட்டிருக்கும். அந்தப் பொருள் உற்பத்தி செய்யப் பட்ட நிறுவனத்தில், குறைந்த பட்ச, அதிக பட்ச சம்பள வேறுபாடு 1:8 என்ற விகிதத்தில் இருக்கிறது என்று, அந்த லேபிள் குறிப்பிடுகின்றது. ஆகவே, பாவனையாளர்களும் அத்தகைய நிறுவனங்களை ஊக்கவிக்க முன்வருவார்கள்.