Showing posts with label ஈழப் போர். Show all posts
Showing posts with label ஈழப் போர். Show all posts

Monday, March 01, 2021

ஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்

த‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு.

 "சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா?" என்றெல்லாம் புத்திசாலித்த‌ன‌மாக‌ கேள்வி கேட்க‌லாம். ஆனால், ந‌டைமுறை வாழ்வில், எத்த‌னை பேர‌ழிவுக‌ள் வ‌ந்தாலும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் சாதிவாரியாக‌த் தான் பிரிந்திருப்பார்க‌ள்.

கொழும்பில், இன‌க்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில், அக‌திக‌ளான‌ கொழும்புத் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌ முகாம்க‌ளில் சாதி வாரியாக‌ பிரிந்திருந்த‌னர். (1983 கலவரத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமில் சாதி பார்த்த சம்பவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.) ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், யாழ் குடாநாட்டில் உள்ள‌ வ‌லிகாம‌ம் பிர‌தேச‌த்தில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து தென்ம‌ராட்சி சென்ற‌ அக‌திக‌ள் அங்கும் சாதிவாரியாக‌ பிரிந்து தான் த‌ங்கி இருந்த‌ன‌ர். இன்று போர் முடிந்த‌ பின்ன‌ரும் யாழ் குடாநாட்டில் மூட‌ப் ப‌டாத‌ முகாம் ஒன்றில் கணிச‌மான‌ அள‌வு அக‌திக‌ள் வாழ்வ‌த‌ற்கும் சாதி தான் கார‌ண‌ம்.

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன். தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366) 


இதைக் கண்டதும் சிலர் இப்படி ஒரு சாட்டுச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்: //கமால் குணரட்ன ஒரு சிங்கள ராணுவத்தினை சேர்ந்த ஒரு சிங்களன் , ஆகவே இது தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்...// 

யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் நிலவும் மோசமான சாதிப் பாகுபாடு உலகறிந்த விடயம். அதை கமால் குணரட்ன சொல்லித்தான் எமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாண சமூகம் இப்படித்தான் இருந்து வருகின்றது. சாதிவெறியன் ஆறுமுகநாவலருக்கு யாழ் நகரில் சிலை வைத்திருப்பதே ஒரு சிறந்த ஆதாரம்.

மேலும், இந்த நூல் வெளிவந்த காலத்தில்(2016), "புலிகளின் தலைவர் பிரபாகரனை மெச்சும் தகவல்கள்" இருந்ததாக சொல்லி, தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் நந்திக்கடல் பாதை நூலுக்கு புகழாரம் சூட்டின. அன்று அவை பரப்பிய தகவல் இது:
//விடுதலைப் புலிகள் இயக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் எதிர்பார்க்கப்படாத அதிகபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது....இராணுவத்தினருக்கு மூன்று தசாப்தங்களாக சவால் மிக்க எதிரியாக விளங்கியிருந்த போதிலும் பிரபாகரனின் பண்புகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நேர்மையாகவே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.// (பார்க்க: எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்

அ.யேசுராசா போன்ற‌ மெத்த‌ப் ப‌டித்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் கூட‌ இவ்வாறு அப‌த்த‌மாக‌ப் பேசுகின்ற‌ன‌ர்: //ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்குள் சாதிப் பிரிவினை, வ‌ர்க்க‌ப் பிரிவினை உண்டாக்குவ‌து சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி!//

மூளை இருந்தால் யோசித்துப் பார்க்க‌ வேண்டும். எவ‌னாவ‌து க‌ண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு க‌ல்லெறிவானா?

சிங்க‌ள‌ ச‌மூக‌த்திற்குள் சாதிய‌/வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் இல்லையா? அந்த‌ விட‌ய‌ம் இன்னும் தெரியாது என்றால், உங்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லை என்று அர்த்த‌ம்.

ஒரு பேச்சுக்கு, இது சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி என்றே வைத்துக் கொள்வோம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் செவ்வாய்க் கிர‌க‌த்தில் வாழ‌வில்லை. அவ‌ர்க‌ளும் இல‌ங்கை என்ற‌ சிறிய‌ தீவுக்குள் வாழ்கிறார்க‌ள்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் சாதிக‌ளாக‌, வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ பிரிந்து அடிப‌ட்டால், அது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் எதிரொலிக்காதா? அங்கேயும் சாதிய‌, வ‌ர்க்க‌ பிரிவினைக‌ள் உண்டாகாதா?

சாதிய‌, வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் தீவிர‌ம‌டைந்தால், இல‌ங்கை முழுவ‌தும் க‌ல‌க‌ங்க‌ள் வெடித்து அர‌சு க‌விழும் நிலைக்கு செல்லாதா? சிறில‌ங்கா அர‌சைக் க‌விழ்ப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா?

"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் த‌ம‌க்குள் முர‌ண்பாடுக‌ளை கொண்டிராத‌ இன‌ங்கள்" என்று நினைத்துக் கொள்வ‌த‌ற்குப் பெய‌ர் இன‌வாத‌ம். அது எந்த‌க் கால‌த்திலும் அர‌சுக்கு எதிரான‌து அல்ல‌. மாறாக‌, அர‌சைப் பாதுகாக்கிற‌து.

Thursday, May 21, 2020

முள்ளிவாய்க்காலில் மறைந்த தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்!


தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்! 
பதினோராவது ஆண்டு நினைவஞ்சலி!

2009, மே 17 முள்ளிவாய்க்கால் அருகில் சரணடைந்த ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமார் இராணுவத்தால் கொல்லப் பட்டாரா? அல்லது இன்னமும் உயிரோடு இருக்கிறாரா? எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் நேரம், ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமாருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது.

பல்வேறு பட்ட இடங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், போரின் முடிவில் பாலகுமார் தனது மகன் சூரியதீபனுடன் இராணுவத்திடம் சரணடைந்த சில நாட்களில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு ஒரு காரணம், போரின் கடைசி நாளான மே 17 அன்று சரணடைந்த அத்தனை பேரும் புலிகள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்றே இலங்கை இராணுவம் கருதியது. துரதிர்ஷ்டவசமாக தோழர் பாலகுமாரும் அந்தப் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டமை ஒரு வருத்தத்திற்குரிய விடயம்.

1987 ம் ஆண்டு, நான் தோழர் பாலகுமாரை கடைசித் தடவையாக சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்த சந்திப்பு முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான முல்லைத்தீவில் நடந்தது என்பது மனத்தைக் கனமாக்கும் நினைவு. அப்போது இந்திய - இலங்கை ஒப்பந்தம் முடிந்து வடக்கில் இந்திய இராணும் நிலைகொண்டிருந்தது. ஒப்பந்த நிபந்தனைகளின் படி, முதலாவதாக ஈரோஸ் தான் தன்னிடம் இருந்த ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது. (அந்தக் காலகட்டத்தில் புலிகள், ஈரோஸ் மட்டும் தான் களத்தில் ஆயுதங்களோடு இருந்த இயக்கங்கள்.) அப்போது, "இந்தியா கொடுத்த ஆயுதங்களை இந்தியாவிடமே திருப்பிக் கொடுக்கிறோம்" என்று நகைச்சுவையாக குறிப்பிடுவதுண்டு.

ஈரோஸ் இயக்கம் இராணுவ பிரிவை விட அரசியல் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படியால், அதன் பல்வேறு வெகுஜன அமைப்புகள் வடக்கில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. "ஈரோஸ் இராணுவம்" என்றழைக்கப் பட்ட இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் மட்டுமே இரகசியமாக இயங்கி வந்தனர். அவர்களும் ஆயுத ஒப்படைப்புக்குப் பின்னர் தத்தமது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். அவ்வாறு முல்லைத்தீவில் பெற்றோரின் வீடுகளில் தங்கியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர்.

சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் முன்னாள் போராளிகளை கைது செய்ய வேண்டிய காரணம் என்னவென்று இந்திய இராணுவ தரப்பால் தெரிவிக்கப் படவில்லை. அந்த நேரம் சமாதானம் நிலவினாலும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் சில உரசல்கள் இருந்தன. அநேகமாக புலிகளை எச்சரிக்கும் வகையில் தான் அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்கப் பட்டது.

அன்று அந்த முன்னாள் ஈரோஸ் போராளிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தோழர் பாலகுமார் முல்லைத்தீவுக்கு வந்திருந்தார். தற்செயலாக அன்றைய தினம் நானும் தனிப்பட்ட காரணங்களுக்காக வன்னியில் இருந்த படியால், பேச்சுவார்த்தைக் குழுவில் என்னையும் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு தான் தோழர் பாலகுமாருடன் முல்லைத்தீவில் ஒரு நாள் முழுவதும் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் என்னை ஒரு நிகழ்வில் சந்தித்த தோழர் பாலகுமார், அப்போதும் நினைவில் வைத்திருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையிலேயே அது எனக்கு ஆச்சரியம் தான். தோழரின் நினைவாற்றல் பற்றிப் பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். என்னுடன் கதைத்த சந்தர்ப்பம் பற்றி மட்டுமல்லாது, ஒரு காலத்தில் அவரது செயலாளராக இருந்த எனது மைத்துனர் பற்றிய நினைவுகளையும் இரை மீட்டார்.

தோழர் பாலகுமார், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற எந்த தலைக்கனமும் இல்லாத, சக தோழராக நட்புடன் பழகக் கூடிய எளிமையான மனிதர். எல்லா பிரச்சினைக்கும், பொதுவுடமைக் கண்ணோட்டத்தில் தர்க்க ரீதியாக பதிலளிப்பார். நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டு, அவரையும் விமர்சிப்போம். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைக் கூறுவார். அது எமக்கு நியாயமாகத் தோன்றும். சில நேரம் இன்று நான் எழுதும் கட்டுரைகளிலும் தோழர் பாலகுமாரின் தர்க்கவாதம் பிரதிபலிக்கலாம். எனது சிந்தனையை மாற்றிய மிகப்பெரிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

அன்று முல்லைத்தீவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தோழரின் வீட்டில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அரசியல், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பல கதைகள் பேசிய நினைவுகள் இன்னமும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அப்படியான ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த துயர் தரத் தக்கது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் கொழும்புக்கு சென்று தங்கி விட்டேன். சில வருடங்களில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து விட்டேன். இருபதாண்டு காலப் போர் எங்களை பிரித்து வைத்தது. திரும்பவும் அவரை ஒரு போர்க்கால நிழற் படத்தில் மட்டுமே பார்ப்பேன் என நினைத்திருக்கவில்லை.

போரின் இறுதிக் காலத்தில் தோழர் பாலகுமார் மனமுடைந்து போயிருந்ததாக அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது எப்படி முடியப் போகிறது என்பதை அனுமானித்திருந்தார். எழுபதுகளில் அவர் நம்பிக்கையோடு தொடங்கிய ஈழப் புரட்சி இன்னும் வரவில்லை என்பது ஒரு சிலருக்கு ஏளனமாக இருக்கலாம். இது வரலாற்று இயங்கியலை மறுக்கும் பார்வை. ஈழப்புரட்சியின் வரலாற்றில் தோழர் பாலகுமாரின் பங்களிப்பு குறுகிய காலம் தான். ஆனால் அவர் விதைத்த கருத்துக்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றன. அவரால் வளர்க்கப் பட்ட தோழர்கள் இன்று பல்வேறு அரசியல் பாதைகளில் திசை மாறி சென்று விட்டார்கள். இருப்பினும் பாலகுமார் இப்போதும் எல்லோராலும் மதிக்கப்படும் மாமனிதர் தான்.

ஈழவர் தேசிய இனத்தின் ஈழப்புரட்சிக்கான பாதை அமைத்து வழிகாட்டிய தோழர் பாலகுமாருக்கு எனது செவ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலையரசன்
21-05-2020

Thursday, May 14, 2020

புலிப் போராளிகள் ஏழ்மையில் வாழ்ந்த ஓலைக் கொட்டில் வீடுகள்

(படத்திற்கு நன்றி: யோ. புரட்சி)
ஈழப்போர் முடிந்த பின்னர் கவனிக்காமல் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் அவல நிலை குறித்து பலரும் பலரும் கவலை தெரிவித்து விட்டனர். இது குறித்து வட இலங்கையில் வாழும் சமூக சேவை ஆர்வலரான யோ.புரட்சி தனது பேஸ்புக் சுவரில் பகிர்ந்த தகவல்:
//ஒரு பிள்ளை பெண் மாவீரர், ஆண்பிள்ளை கரும்புலி மாவீரர். தனித்து வாழும் விதவைத் தாயார். நீர் வார்த்த குடும்பம் கிணறுமின்றிய நிலை.//

(இது தொடர்பாக அவர் சில படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறி அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

 ******

உங்களில் பலர் அறிந்திராத புலிப் போராளிகள் பிறந்து வளர்ந்த வீடுகள் இப்படித் தான் இருக்கும். எந்த வசதியுமற்ற ஓலைக் குடிசைகள். அதாவது, தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் இன்னொரு இனமான ஏழைகள் வாழும் வீடுகள். அவர்களது அவலம் எப்போதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ் இன உணர்வு அரசியல் பேசும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

இவர்களது தியாகத்தை காட்டி வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள், தாம் "உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டதாக" பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். "உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்..." என்று அடித்த கொள்ளையை நியாயப் படுத்தும் குட்டி பூர்ஷுவா கும்பல் ஒன்று இப்போதும் உண்டு. முதலாளித்துவத்தை ஆராதிக்கும் அந்த வெட்கங் கெட்ட பிழைப்புவாத கும்பல் இலங்கையிலும் உண்டு. தமது பூர்ஷுவா வர்க்க நலனை தமிழ்த் தேசியம் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

"உழைத்து முன்னேறலாம் என்றால் எதற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு உழைக்கும் ஏழைகள் இன்னமும் இது போன்ற குடிசைகளில் வாழ்கிறார்கள்?" என்று கேட்டால் பதில் வராது. அது "கர்ம வினைப் பயன்... கடவுள் அப்படி சிலரை படைத்து விட்டார்..." என்று மதத்தை இழுத்து போதனை செய்வார்கள்.

முதலாளித்துவ சுரண்டல் பற்றிய பேச்செடுத்தால், "கம்யூனிசம் பேசாதே!" என்று வாயடைக்க வைப்பார்கள். இவர்கள் பிரச்சாரம் செய்வது மாதிரி கம்யூனிசம் இன்னும் காலாவதியாகவில்லை. அது இன்னமும் ஈழத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது. உழைத்து உருக்குலைந்த ஏழைத் தமிழ் மக்கள் மனத்தில் இருக்கிறது. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்.

இந்த ஏழைகள் ஈழப் போருக்கு முன்னர் எப்படி வாழ்ந்தனரோ இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். அவர்கள் உழைத்தும் முன்னேற முடியாத காரணத்தால் தான் புலிப் போராளிகளாக மாறி மாவீரர்கள் ஆனார்கள். தமிழீழம் என்ற சமநீதி கொண்ட இன்னொரு உலகம் சாத்தியமே என்று கனவு கண்டார்கள்.

அவர்கள் கண்ட தமிழீழக் கனவு இன்னொரு தேசியம் அல்ல, சோஷலிசம். பாவம், தமிழ் தேசிய அடையாளத்தின் பின்னால் தம்மை மறைத்துக் கொள்ளும் தமிழ் பூர்ஷுவாக்கள் எப்போதும் போன்று முதலாளிகளுக்கே அடிவருடப் போகிறார்கள் என்ற உண்மை அந்த அப்பாவிப் போராளிகளுக்கு தெரியாது. "சுதந்திரத்" தமிழீழத்திலும் மீண்டும் தாம் ஏழைகளாக ஒடுக்கப் படுவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம், புலித் தேசியம் பேசும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, ஏழைகள் எனும் இன்னோர் இனம் தமக்குள் ஒடுக்கப் படுவது தெரியாது. தெரிந்தாலும் எந்த உணர்வும் இன்றி உதாசீனப் படுத்துவார்கள். "தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் பாட்டாளி வர்க்கமா? அப்படி எதுவும் கிடையவே கிடையாது..." என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.

"இந்த ஏழைகள் தான் எமக்காக போராடினார்கள்." என்றால், "ஓ அவர்கள் தமிழர்கள்." என்று இன முத்திரை குத்தி மறைக்கப் பார்ப்பார்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற 99% போராளிகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராட சென்றதற்கு காரணம் வர்க்க உணர்வு என்ற உண்மையை மறைப்பார்கள். அதற்கு இன உணர்வு என்ற சாயம் பூசி மகிழ்வார்கள். இன முரண்பாடுகள் அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் என்பதை புரியும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் அறிவும் போதாது.

"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். 

மடிப்பு குலையாத சட்டையுடன் உத்தியோகம் பார்க்கும் குட்டி பூர்ஷுவா தமிழ்த் தேசியர்கள், தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டு, மீண்டும் இன விடுதலையின் பெயரால் அப்பாவி ஏழைகளை பலி கொடுக்கலாமா என்று பார்க்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்பினால் கோமாளித்தனமாக இருக்கும்.

"குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன். குனியக் குனியக் குட்டுகிறவனும் மடையன்." என்றொரு பழமொழி உள்ளது. இந்த ஏழைத் தமிழர்கள் எப்போதுமே பூர்ஷுவா வர்க்க நலன் காக்கும் வேள்விக்கு பலி கொடுப்பதற்காக வளர்க்கப் படும் ஆடுகளாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் ஆறறிவுள்ள உழைக்கும் வர்க்க மனிதர்கள். அடுத்த கட்ட ஆயுதப் போராட்டம் இன விடுதலைக்கானது அல்ல. அது வர்க்க விடுதலைக்கானது.


- கலையரசன்
 14.05.2020

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Monday, November 14, 2016

ஈழத்தில் தமிழரை பேரழிவுக்குள் சுரண்டிக் கொழுத்த தமிழ் முதலாளிகள்


ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌ம், யாழ்ப்பாணத் த‌மிழ் முத‌லாளிக‌ளின் பொற்கால‌ம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேர‌ழிவுக‌ளுக்கு ம‌த்தியிலும் கோடி கோடியாக‌ பணம் ச‌ம்பாதித்தார்க‌ள். ஒரு ப‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ள் செத்து ம‌டிந்து கொண்டிருக்கையில், ம‌றுப‌க்க‌ம் முத‌லாளிக‌ளின் க‌ஜானாவில் ப‌ண‌ம் குவிந்து கொண்டிருந்த‌து. அதற்காக அவர்கள் ஒரு நிமிடம் கூட வருத்தப் படவில்லை.

பெரும்பாலானோருக்கு ந‌ன்கு தெரிந்த‌ வ‌ர்த்த‌க‌ப் பிர‌ப‌ல‌ம், காலஞ்சென்ற ம‌கேஸ்வ‌ர‌னை உதார‌ண‌மாக‌ எடுக்க‌லாம். இவ‌ர் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாக‌ தனது வ‌ர்த்த‌க‌ வாழ்வை ஆர‌ம்பித்த‌வ‌ர். போர்க் காலத்தில் ம‌ண்ணெண்ணை (கெரசின் ஆயில்) க‌ட‌த்த‌ல் மூல‌ம் கோடீஸ்வ‌ர‌னாக‌ மாறினார். சட்டவிரோதமான கடத்தல் வேலை செய்து முதலாளி ஆகலாம் என்று நிரூபித்தார்.

அந்த‌க் கால‌த்தில் பொருளாதாரத் தடை இருந்தது. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு கொண்டு செல்ல‌க் கூடாது என்று, அர‌சு ப‌ல‌ பொருட்க‌ளை த‌டை செய்திருந்த‌து. அத‌னால், ம‌ண்ணெண்ணை போன்ற‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கும் த‌ட்டுப்பாடு ஏற்ப‌ட்ட‌து. வீடுகளில் சமைப்பதற்கும், வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் தேவைப் பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ஓடாமல் நின்ற வாகனங்களையும் மண்ணெண்ணெய்யில் ஓட வைத்தார்கள்.

கடத்தல் பேர்வழி ம‌கேஸ்வ‌ர‌ன் அர‌ச‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் ம‌ண்ணெண்ணை வாங்கி, புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு க‌ட‌த்திச் சென்றார். அத‌ற்காக‌ காவ‌லர‌ணில் இருந்த‌ இராணுவ‌த்தின‌ருக்கும் இல‌ஞ்ச‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

அன்று ஒரு லீட்ட‌ர் ம‌ண்ணெண்ணையின் விலை 13 ரூபாய்க‌ள் ம‌ட்டுமே. ஆனால், புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் 300 ரூபாய்க்கு விற்க‌ப் ப‌ட்ட‌து! அதாவது முப்பது மடங்கு இலாபம் வைத்து விற்றார். இந்த‌ப் ப‌க‌ல் கொள்ளை கார‌ண‌மாக‌, அவர் தமிழ் மக்களால் "ம‌ண்ணெண்ணை ம‌கேஸ்வ‌ர‌ன்" என்ற பட்டப் பெயரால் அழைக்கப் ப‌ட்டார். மகேஸ்வரனின் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்தது.

யாழ் குடாநாட்டு பத்திரிகையான உதயன், "மண்ணெண்ணெய் விலை குறைத்த வள்ளல்" என்று அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. அதாவது, சிறு வியாபாரிகள் மண்ணெண்ணெய்யை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், மகேஸ்வரன் ஒரு மொத்த வியாபாரியாக கப்பல் மூலம் "இறக்குமதி" செய்தாராம். அதனால் மண்ணெண்ணெய் விலை குறைந்ததாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

மகேஸ்வரனின் த‌ம்பி துவார‌கேஸ்வ‌ர‌னும் ம‌ண்ணெண்ணை க‌ட‌த்தி விற்று கோடீஸ்வ‌ர‌ன் ஆன‌வ‌ர் தான். இன்று யாழ் ந‌கரில் ஒரு பெரிய‌ ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதிக்கு சொந்த‌க்கார‌ன். புலிக‌ளின் கால‌த்தில் உத‌ய‌ன் ப‌த்திரிகை யாழ் குடாநாட்டில் ஏக‌ போக‌ உரிமை கொண்டிருந்த‌து. இன்றைக்கும் அது தான் அதிக‌ள‌வில் விற்ப‌னையாகின்றது. உத‌ய‌ன் நிறுவ‌ன‌ முத‌லாளி ச‌ர‌வ‌ண‌ப‌வ‌னும், யாழ் ந‌க‌ரில் ஒரு ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதி வைத்திருக்கிறார்.

அர‌சிய‌லில் விடுத‌லைப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளின் ஏக‌ பிர‌திநிதித்துவ‌ம் கோரிய‌ மாதிரித் தான், த‌மிழ் முத‌லாளிக‌ளும் ந‌ட‌ந்து கொண்டார்க‌ள். போர் ந‌ட‌ந்த‌ கால‌ம் முழுவ‌தும், அவ‌ர்க‌ள் சொன்ன‌ விலைக்கு ம‌க்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இருந்த‌து.

"ஐயோ பாவ‌ம், ந‌ம‌து சொந்த‌ இன‌ ம‌க்க‌ள் தானே," என்று ஒரு முத‌லாளி கூட‌ ப‌ரிதாப‌ப் ப‌ட‌வில்லை. உட‌மைக‌ளை இழ‌ந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த‌ ம‌க்க‌ளிட‌ம் இர‌க்க‌மின்றி சுர‌ண்டிக் கொழுத்த‌ன‌ர். ம‌னித‌னின் இர‌த்த‌த்தை உறிஞ்சி வாழும் அட்டைக்கும், இந்தத் "த‌மிழ்"(?) முத‌லாளிக‌ளுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

முத‌லாளித்துவ‌த்தில் போட்டி இருக்க‌ வேண்டும் என்று பொருளிய‌ல் அறிஞ‌ர்க‌ள் சொல்வார்க‌ள். யாழ்ப்பாண‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ள், எந்த‌ப் போட்டியாள‌ரும் இல்லாம‌ல் த‌னிக்காட்டு ராஜாவாக‌ வ‌ர்த்த‌க‌ம் செய்த‌ன‌ர்.

1983 ம் ஆண்டு போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து சிங்க‌ள‌ வ‌ணிக‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ப் ப‌க்க‌ம் த‌லை வைத்தும் ப‌டுக்க‌வில்லை. 1991 ம் ஆண்டு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். யாழ் குடாநாட்டு வ‌ர்த்த‌க‌த்தில் முஸ்லிம்க‌ளின் ஆதிக்க‌ம் ச‌ற்று அதிக‌மாக‌ இருந்த‌து. அந்த‌த் த‌டை அக‌ற்ற‌ப் ப‌ட்ட‌தும் த‌மிழ் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் காட்டில் ஒரே ம‌ழை தான்.

அப்பாவித் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இந்த‌ உண்மையெல்லாம் எப்ப‌டித் தெரியும்? "சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எங்க‌ளை அழிக்க‌த் துடிக்கும் எதிரிக‌ள்." "முஸ்லிம்க‌ள் எங்க‌ளை காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள்." இப்ப‌டி சொல்லிக் கொடுத்தால் போதும். உட‌னே ந‌ம்பி விடுவார்க‌ள். அத‌ற்குப் பிற‌கு த‌மிழ‌ர்க‌ளை வேண்டிய‌ ம‌ட்டும் சுரண்டி, கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். எதிர்த்துப் பேசினால் அவ‌னுக்கும் துரோகிப் ப‌ட்ட‌ம் சூட்டி விட‌லாம்.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்ன‌ரும் பேச‌ப் ப‌டும் தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் அல்ல‌து த‌மிழ் இன‌வாத‌த்தின் பின்ன‌ணியில் த‌மிழ் முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ளும் அட‌ங்கியுள்ள‌ன‌. த‌மிழ்த்தேசிய‌ அர‌சிய‌லும் முத‌லாளித்துவ‌மும் ஒன்றில் இருந்து ம‌ற்ற‌து பிரிக்க‌ முடியாம‌ல் உள்ள‌ன‌.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ பொற்கால‌த்தில் கோடி கோடியாக‌ ச‌ம்பாதித்துக் கொண்டிருந்த‌ த‌மிழ் முத‌லாளிக‌ள், சில‌நேர‌ம் புலிக‌ளையும் திட்டித் தீர்த்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம் புலிக‌ள் 5% வ‌ரி அற‌விட்ட‌து தான்.

உண்மையில் 5% வ‌ரி, முத‌லாளிக‌ளின் கோடிக் க‌ண‌க்கான‌ நிக‌ர‌ இலாப‌த்துட‌ன் ஒப்பிட்டால், இந்த‌த் தொகை மிக‌ மிக‌க் குறைவு. மேற்கு ஐரோப்பாவில் 20% அல்ல‌து 30% வ‌ரியாக‌ க‌ட்ட‌ வேண்டும். போர் முடிந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ ஆத‌ர‌வு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளால் எழுப்ப‌ப் ப‌ட்ட‌ கோஷ‌ங்க‌ளுக்கான‌ விள‌க்க‌ம்:

- "எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் வேண்டும்!" (விள‌க்க‌ம்: த‌மிழ் ம‌க்க‌ளை சுர‌ண்டுவ‌தற்கு த‌மிழ் முத‌லாளிக‌ளுக்கே ஏக‌போக‌ உரிமை வேண்டும்.)

- "இருப்ப‌வ‌ர்க‌ள் இருந்திருந்தால் இப்போது இப்ப‌டி ந‌ட‌ந்திருக்குமா?" (விள‌க்க‌ம்: சிங்க‌ள‌, முஸ்லிம் முத‌லாளிக‌ள், த‌மிழ் முத‌லாளிக‌ளுட‌ன் போட்டிக்கு வ‌ந்திருப்பார்க‌ளா?)

தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது வியப்புக்குரியதல்ல. பலர் பரம்பரை பரம்பரையாக நிலவுடைமையாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அந்த சொத்துக்களை இன்றளவும் ஆண்டு அனுபவிப்பவர்கள். 

இன்று தீவிர புலி ஆதரவு, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ஒரு பெருந்தோட்ட முதலாளி தான். அவரது பெயரில் மலையகத் தேயிலைத் தோட்டம் மட்டுமல்லாது, மலேசியாவிலும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

1947 இல், அன்றைய‌ இல‌ங்கை பிர‌த‌ம‌ர் டி.எஸ். சேன‌நாய‌க்க‌ த‌லைமையிலான‌ குழுவின‌ர் பெருந்தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் பிர‌ஜாவுரிமையை ப‌றித்த‌ன‌ர். பெருந்தோட்ட‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரும் அர‌சிய‌ல் ச‌க்தியாகி, க‌ண்டிச் சிங்க‌ளவ‌ரின் பிர‌திநிதித்துவ‌த்தில் பிர‌ச்சினை கொடுப்பார்க‌ள் என்ப‌து ஒரு கார‌ண‌ம். அதேவேளை, சோஷ‌லிச‌ சித்தாந்த‌ங்கள், ம‌லைய‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆழ‌மாக‌ நிலைகொண்டு விடும் என‌ப் ப‌ய‌ந்த‌மை இன்னொரு கார‌ண‌ம்.

ம‌லைய‌க‌த் த‌மிழ‌ரின் பிர‌ஜாவுரிமை ப‌றிக்கும் ச‌ட்ட‌த்திற்கு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரான‌ ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌ம் (கஜேந்திரகுமாரின் தாத்தா) ஆத‌ர‌வாக‌ இருந்தார். அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ரும் ஒரு பெருந்தோட்ட‌ முத‌லாளியாக‌ இருந்தார்.

அண்மையில் தேயிலைத் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வுக் கோரிக்கையை ஆத‌ரித்து, யாழ் ந‌க‌ரிலும் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அப்போது ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌த்தின் பேர‌ன் க‌ஜேந்திர‌குமாரும் ப‌ங்குப‌ற்றி இருந்தார்.

பெருந்தோட்ட‌ உரிமையாள‌ர் பொன்ன‌ம்ப‌ல‌த்தின் வாரிசான‌ க‌ஜேந்திர‌குமார், த‌ன‌க்கு சொந்த‌மான‌ தேயிலைத் தோட்ட‌த்தில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கூட்டிக் கொடுத்து முன்னுதார‌ண‌மாக‌ திக‌ழ்ந்திருக்க‌லாம்.

இப்ப‌டியான த‌க‌வ‌ல்க‌ளை இருட்ட‌டிப்பு செய்யும் த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள், முத‌லாளி க‌ஜேந்திர‌குமாரை தொழிலாள‌ரின் ந‌ண்ப‌னாக காட்டும் பித்த‌லாட்ட‌மும் ந‌ட‌க்கிற‌து. க‌ஜேந்திர‌குமாருக்கு (யாழ் குடாநாட்டில்) ப‌ளைப் பிர‌தேச‌த்திலும் ப‌ல‌ ஏக்க‌ர் காணி சொந்த‌மாக‌ இருக்கிற‌தாம். ஒரு த‌ட‌வை வைத்திய‌சாலை விஸ்த‌ரிப்புக்காக‌ இர‌ண்டு ப‌ர‌ப்பு காணி கேட்ட‌ நேர‌ம் கொடுக்க ம‌றுத்து விட்டாராம். இவ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ்த் தேசிய‌ம்!


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal

Saturday, September 03, 2016

ஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் தான்



மன்னிக்கவும், இதைச் சொன்னவர் "சர்வதேச சமூகத்தை சண்டைக்கு இழுக்கும் இடதுசாரி ஈழப் புரட்சியாளர்" அல்ல. இறுதிப் போரில் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தைரியமற்ற தமிழ்த் தேசியவாதி:

 //தமிழினம் அழிக்கப்பட்டபோது தடுக்க
 திராணியற்றிருந்த பான் கீ மூன் - இன்று தன்னிலை மறந்து வந்து கைகூப்புகின்றார்... 
நாங்கள் கடவுள்கள் அல்லவே 
 உங்களை மன்னிக்க...//

பிற்குறிப்பு: இப்படிச் சொன்னதற்காக தமிழர்கள் எல்லோரும் "இடதுசாரி புரட்சியாளர்கள்" என்று தவறாக நினைத்து விடாதீர்கள், பான் கீ மூன் அவர்களே! மீண்டும் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. விடம், அதாவது உங்கள் காலில் வந்து விழுவோம். மீண்டும் ஜெனீவாவை நோக்கி ஊர்வலம் நடத்துவோம்.

ஏகாதிப‌த்திய‌த்தின் சுய‌ரூப‌ம் இப்போது தானா தெரிந்த‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளே? ஈழப் போர் கூட ப‌ரிசோத‌னைக் க‌ள‌மாக‌, ஆயுத நிறுவனங்களின் இலாபத்திற்காக நடந்தது. க‌ட‌ன் கொடுக்கும் உல‌க‌ வங்கிகளுக்கும் சம்பந்தம் உண்டு. இது தெரியாம‌ல் இன்றைக்கும் "ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டு த‌மிழீழ‌ம் வாங்கித் த‌ரும்" என்று காத்திருக்கும் முட்டாள்க‌ளைப் ப‌ற்றி, என்ன‌த்த‌ சொல்ல‌? ஈழப்போர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் மட்டுமல்ல, அது ஒரு வர்க்கப் போராட்டமும் தான்.

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் காணாமல் போனோரின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. எதிர்க் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது அரசியல் ஆதாயங்களுக்காக சம்பந்தர், சுமந்திரனை திட்டுவதுண்டு. ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு (இந்த இடத்தில் பான் கீ மூன்) எதிராக முணுமுணுக்கவும் மாட்டார்கள்.

அது ஒரு புறமிருக்கட்டும். அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, காணாமல் போனவரின் தாய் ஒருவர் அங்கு நின்ற சிங்களப் பொலிசாருடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. (பார்க்க: https://www.youtube.com/watch?v=kJeblNa2Pz4) அவர் அந்தப் போலிஸ்காரரிடம் கூறுகின்றார்:"காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!"

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் "இடதுசாரி" என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

ஈழப் போர் நடந்த காலம் முழுவதும், ஏழைகளே அதிகளவில் பாதிக்கப் பட்டனர். வசதிபடைத்தோரும், பணக்காரர்களும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.  காணி, பூமி வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அல்லது அடகு வைத்து விட்டு சென்றார்கள். வெளிநாடு செல்ல முடியாதவர்கள், கொழும்பு நகரில்  அல்லது தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள்.

ஈழத்தில் எஞ்சியிருந்த, நிலமற்ற, சொத்துக்கள் ஏதுமற்ற ஏழைகள் தான் போராடச் சென்றனர். ஏனென்றால், ஏழைகள் தான் போரினால் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் இழந்து நின்றனர். "இதற்கு மேல் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர்  தான் போராட முன்வருவார்கள்." என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன பொன்மொழி ஈழப்போரிலும் நிரூபிக்கப் பட்டது. 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்! சிங்கள அரசும், சிங்கள இராணுவமும், எந்தளவு கொடூரமான இனவெறியர்களாக இருந்தாலும், காசைக் காட்டி மயக்க முடிந்தது. அதனால் பல பணக்காரத் தமிழர்கள், பண பலத்தால் தப்பியிருக்கிறார்கள். இறுதிப் போரில் தப்பிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கூட, காசு வாங்கிக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளே, விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டாலும், சில நாட்களில் பெருந்தொகைப் பணம் கொடுத்து வெளியே வந்தார்கள். சிறிலங்கா இராணுவம், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க வசதியில்லாத ஏழைகளின் பிள்ளைகள், இன்று வரைக்கும் சிறை வைக்கப் பட்டுள்ளனர். கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்போராக உள்ளனர். பலர் கொல்லப் பட்டு விட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப் பட்டுள்ளனர்.

"அப்படி அல்ல, ஈழத் தமிழ் சமூகத்தில் அனைத்து வர்க்கத்தினரும் வெளிநாடுகளுக்கு போனார்கள். பணமில்லாதவர்கள் கடன் வாங்கிச் சென்றனர்." என்று சிலர் வாதாடலாம். அது விதண்டாவாதம். ஏனெனில், கடன் வாங்க முடியாத தமிழர்களும் ஈழத்தில் வாழ்கின்றனர். பெருந்தொகைப் பணம் கடனாக எடுப்பதென்றால் நகைகள் அல்லது காணி அடகு வைக்க வேண்டும். அது கூட இல்லாத ஏழைகள் ஏராளம்.

மேலும், ஈழப் பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் இருந்து சம அளவில் புலம்பெயரவில்லை. பணக்காரர்கள், வசதிபடைத்தோர் பெருமளவில் வாழும் யாழ் மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். அதிலும் குறிப்பாக யாழ் நகரத்தை அண்டிய பிரதேசம், வலிகாமம் போன்ற இடங்களில் தான் செல்வந்தர்கள் செறிவாக வாழ்ந்து வந்தனர். மேலும் தீவுப் பிரதேசங்களை சேர்ந்தோர், போர் தொடங்குவதற்கு முன்னர் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து வந்தனர். இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் ஈழத் தமிழரில் கணிசமான அளவினர், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து சென்றவர்களே.

இந்தியா மாதிரி ஈழத்திலும் வர்க்கமும், சாதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளன. சரியான புள்ளிவிபரம் எடுக்கப் படுமாக இருந்தால், மேட்டுக்குடி அல்லது உயர் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை உயர்த்தப் பட்ட சாதிகளில் இருந்து வந்திருப்பார்கள். அதற்கு மாறாக, ஏழைகளும், வசதியற்றவர்களும் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பார்கள். இது குறித்து ஆய்வு செய்த பரம்சோதி தங்கேஸ், மல்லாகம் கிராமத்தில் இருந்த இடம்பெயர்ந்தோர் அகதிமுகாம்களை உதாரணமாகக் காட்டுகின்றார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை, பலாலி முகாம்களை விஸ்தரிக்கும் நோக்கில், சிறிலங்கா இராணுவம் சுற்றியிருந்த கிராமங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தது. வசாவிளான், மயிலிட்டி போன்ற பல ஆக்கிரமிக்கப் பட்ட கிராமங்கள், போர் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் தான் விடுவிக்கப் பட்டன. அந்தப் பிரதேச மக்கள் தொண்ணூறுகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்து சென்ற உயர்த்தப் பட்ட சாதியினர் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர். அவர்களிடம் அந்தளவு வசதி இருந்திருக்கிறது. ஆனால், தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தினர் தசாப்த காலமாக அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களிடம் எந்த வசதியும் இல்லாத படியால், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் உயிர்பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இந்தத் தகவல் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

*****


வீடியோ: "காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!" 
UN Secretary General, Ban Ki-Moon Visit to Jaffna

Thursday, August 11, 2016

கொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள்


அறியாமையும் ஒரு ஒடுக்குமுறை ஆயுதம் தான். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளும், அதன் விளைவான முஸ்லிம் மக்களுக்கெதிரான அரச அடக்குமுறையும் அனைவரும் அறிந்ததே. 

ஐரோப்பிய வெள்ளையின இனவெறியர்கள், ஐரோப்பிய முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலங்கையில் அதே மாதிரியான இனவெறியர்களினால் ஒடுக்குமுறைக்குள்ளான ஈழத் தமிழர்களில் சிலரும், அதே கருத்துக்களை எதிரொலிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இதை அறியாமை என்பதா? முட்டாள்தனம் என்பதா?

பிரான்ஸில் நடந்த தாக்குதல் ஒன்றின் பின்னர், ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு எழுதினார்: "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முஸ்லிகள் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." அதே மாதிரி, அவுஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலின் பின்னர், இன்னொருவர் எழுதினார்: "நிலைமை இப்படியே தொடர்ந்தால், உலகம் முழுவதும் இஸ்லாம் என்ற மதத்தையே தடைசெய்து விடுவார்கள்." இப்படி எழுதும் பலர் "தீவிர தமிழ் தேசியவாதிகள்"(?), அல்லது "தீவிர புலி ஆதரவாளர்கள்"(?)

இப்படியானவர்கள் கொழும்பு நகரில் தாக்குதல்கள் நடந்த நேரம் என்ன சொல்லி இருப்பார்கள்? "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், இலங்கையில் தமிழ் மொழியை தடை செய்து, அங்கு வாழும் தமிழர் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." என்று சொல்வார்களா? இன்றைக்கு ஐரோப்பாவில் நடக்கும் தாக்குதல்களை சாட்டாக வைத்து அங்கு வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் மட்டும் "நடுநிலைமை" வகிக்கப் போகிறார்களா?

1998 ம் ஆண்டு, இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருந்த டச்சுப் பெண்மணி ஒருவர், நெதர்லாந்தில் வெளியான Sri lanka veslaggever என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். Cornelie Quist எனும் அந்தப் பெண்மணி, தான் நேரில் கண்ட உண்மைகளை கட்டுரையில் எழுதி இருக்கிறார். அந்தத் தகவல்கள், ஏற்கனவே அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் பலருக்கு பரிச்சயமான விடயங்கள்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற அவர், நகரில் செல்வந்தர்கள் வாழும் பகுதி ஒன்றில் வாழ்ந்து வந்த தமிழ் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கொழும்பில் தமிழர்கள் வீடு வாடகைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமானது என்பதை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுக்காரரின் பெயர் ராஜசிங்கம். அவர்கள் வீடு தேடிய பொழுது, சிங்கள வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு சொல்லி மறுப்பார்கள்: "உங்கள் பெயர் ராஜசிங்கவா, ராஜசிங்கமா?" "மன்னிக்கவும், நாங்கள் சிங்களவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுப்போம்."

வாடகைக்கு வீடு எடுப்பது தொடர்பாக, தற்போது ஐரோப்பிய நகரங்களில் உள்ள நிலைமையும் அது தான். ஐரோப்பிய வீட்டு உரிமையாளர்கள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். வீடு தேடும் முஸ்லிம் நபர், அந்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, உத்தியோகம் பார்த்தாலும், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

கொழும்பில் வாழும் படித்த, மத்தியதர வர்க்க நண்பர்கள் கூட, தற்போது தமிழர், சிங்களவர் என்று முரண்பாடுகளுடன் பிரிந்து வாழ்வதை காணலாம். இந்தக் கட்டுரையை எழுதிய டச்சுப் பெண்மணி, இருபது வருடங்களுக்கு முன்னர் (எழுபதுகளில்) இலங்கையில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். அதனால் நிறைய சிங்கள, தமிழ் நண்பர்கள் இருந்தனர். இந்த தடவை கொழும்பில் தமிழர் வீட்டில் தங்கியிருந்து, சிங்கள நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களது உரையாடல்களில் தவிர்க்கவியலாது இன முரண்பாடு அரசியலும் இடம்பெற்றுள்ளது. இவரது சிங்கள, தமிழ் நண்பர்கள் கடந்த பல வருடங்களாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தளவுக்கு இன முரண்பாடு அவர்களது நட்பில் விரிசலை உண்டாக்கி இருந்தது. அந்தளவுக்கு இருதரப்பு பதற்றம், நம்பிக்கையின்மை, முரண்பட்ட கருத்து மோதல்கள். இது தொடர்பாக, தங்களது சிங்கள நண்பர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இவருடன் பேசிய தமிழ் நண்பர்கள் விளங்கப் படுத்தினார்கள்.

பெரும்பாலான சிங்கள நண்பர்களின் எதிர்வினைகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு சிலர் கடுமையாக நடந்து கொள்வார்கள்: "நீங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், ஏன் அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை?" என்று கேட்பார்கள். அது குறித்து பதிலளித்த தமிழ் நண்பர்கள் சொன்னார்கள்: "பாருங்கள்! இது தான் பிரச்சினை. தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு நிபந்தனையாக, தமிழர்களான நாங்கள் எல்லோரும் புலிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது எல்லாத் தமிழர்களும் புலிகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்."

எந்த வித்தியாசமும் இல்லாமல், அதே கதை தான் ஐரோப்பாவிலும் நடக்கிறது. கொழும்பில் நடந்த ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும், அங்கு வாழும் தமிழர்கள் புலிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று சிங்களத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப் படுகின்றது. அதே மாதிரியான அழுத்தம் தான் ஐரோப்பிய முஸ்லிம்கள் மீதும் பிரயோகிக்கப் படுகின்றது. 

ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னரும், அனைத்து முஸ்லிம்களும் ஐ.எஸ். (அல்லது அல்கைதா) தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான் முஸ்லிம்கள் தாமும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஐரோப்பிய முஸ்லிம்கள் எல்லோரும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதில்லை. ஐரோப்பியர்களுக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை.

கட்டுரையாசிரியர் கொழும்பு நகரில் தங்கியிருந்த நேரம், மருதானையில் புலிகள் வைத்த குண்டு வெடித்து நிறையப் பேர் பலியானார்கள். அப்போது அந்தத் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளையும், வேறு சில குழுக்கள் சிங்கள முற்போக்குவாதிகளையும் கொண்டிருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் முழுவதும் புலிகளுக்கு எதிராக இருந்தன. ஒரு சில தமிழர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். இவ்வாறு அன்று கொழும்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 

அதே நிலைமை தான் ஐரோப்பாவிலும். ஐரோப்பிய நகரம் ஒன்றில் குண்டு வெடித்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். ஒரு சில முஸ்லிம்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். ஒடுக்குமுறையின் வீரியம், ஐரோப்பாவை விட இலங்கையில் அதிகமாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை.

இலங்கையில் நடந்தது மாதிரி, ஐரோப்பாவிலும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் சிலநேரம் அப்பாவிகளும் கைது செய்யப் படுவதுண்டு. ஆனால், இலங்கையில் நடந்தது போன்ற சித்திரவதைகள், சட்டத்திற்கு முரணான படுகொலைகள், காணாமல்போதல்கள், ஐரோப்பாவில் நடப்பதில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, ஐரோப்பாவில் உள்ள பேரினவாதிகளை குறைவாக எடைபோட முடியாது. ஏற்கனவே நாஸிகளின் காலத்தில், ஐரோப்பா பெருமளவு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் கண்டிருந்தது. அப்படியான நிலைமை இனிமேலும் வராது என்று யாரும் உறுதியிட்டுக் கூற முடியாது.


Thursday, March 31, 2016

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்


முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இவர்கள் எல்லோருக்கும் எஜமான் பிரிட்டன். எஜமான விசுவாசம் கொண்ட அடிமைகளிடம் இருந்து தமிழ் மக்கள் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது.

ஈழப்போரை தொடக்கி வைத்ததில் மட்டுமல்ல, முடித்து வைத்ததிலும் பிரிட்டனின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 1977 ம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று சொல்லி தமிழர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்த நாளில் இருந்தே, பிரிட்டனின் ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. அன்று ஜே.ஆரின் அறிவுறுத்தலுக்கு அமைய, "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்கு, அன்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் அரசு உதவியது. கிழக்கிலங்கையில் அமைக்கப் பட்ட விசேட அதிரடிப் படைக்கு, பிரிட்டிஷ் கூலிப் படையான SAS பயிற்சி வழங்கியது. (பார்க்க: "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!)

இறுதிப் போரிலும், பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் நேரடியாக களத்தில் நின்றனர். வன்னியில் புலிகளையும், அவர்களோடு சேர்த்து ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இது பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரையும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. VICE எனும் ஆவணப் படங்களை தயாரிக்கும் நிறுவனம் எடுத்த பெரு முயற்சியின் பயனாக அது வெளிவந்துள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை பார்வையிட்டுள்ளது. (Exclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lankahttp://www.vice.com/en_uk/read/sri-lanka-british-police-training-phil-miller)

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில், பிரிட்டிஷ் அரசு நேரடியாகவே பங்கெடுத்திருந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இன்னமும் எல்லா இரகசிய ஆவணங்களும் வெளிவரவில்லை. இதுவரை பார்வைக்கு வந்த ஆவணங்களில் இருந்தே பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அழித்தொழிப்பு போரை நடத்துவது எப்படி என்பது குறித்து, பிரிட்டிஷ் ஆலோசகர்கள் சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். வட அயர்லாந்தில், IRA இயக்கத்தை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகள், தமது அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதிப் போர் நடந்த காலங்களில், பொலிஸ், இராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் கோத்தபாயவுடன் கலந்தாலோசிக்காமல் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கி இருக்க முடியுமா? பிரிட்டன் ஒரு பக்கம் போர்க்குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டே, ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டது. அப்பாவித் தமிழர்களும் பிரிட்டனின் மாய்மாலங்களை நம்பி ஏமாந்தார்கள்.

இறுதிப் போரில் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியது? அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப் பட்டன? யாழ் குடாநாட்டில் நடந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் இயங்கிய புலி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் விடாது தீர்த்துக் கட்டப் பட்டனர். புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்களும் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு ஊரில் ஒருவர் புலிகளை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வந்தால் போதும். அரச புலனாய்வுத்துறையினர், தக்க தருணம் பார்த்திருந்து சுட்டுக் கொன்றனர். அவர் புலிகளுக்கு பெருமளவு உதவி செய்தாரா,  கொஞ்சமாக உதவினாரா என்ற கணக்கே இல்லை. சிலநேரம் நண்பன் என்பதற்காக ஒரு தடவை சந்தித்து பேசி இருக்கலாம். இதனால், ஒரு கட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் உயிர் தப்புவதற்காக புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.

அது எப்படி சாத்தியமாகிற்று? யாழ்ப்பாண மக்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். சந்திக்கு சந்தி இருக்கும் சோதனைச் சாவடிகளில், சோதனை என்ற பெயரில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப் படுவார்கள். அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் என்பது படையினருக்கு நன்றாகத் தெரியும். தடுத்து வைக்கும் நபரை கொஞ்ச நேரம் வைத்து அடித்து உதைத்து விட்டு விட்டு விடுவார்கள். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடக்கும்.

சிறிது காலத்தின் பின்னர், குறிப்பிட்ட இளைஞருடன் படையினர் நட்புடன் பழகுவார்கள். அவரை நண்பனாக்கிக் கொள்வார்கள். புலனாய்வுத்துறை தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். இப்படித் தான் ஒற்றர்கள் உருவாக்கப் பட்டனர். படையினரால் ஒற்றர்களாக மாற்றப் பட்ட தமிழ் இளைஞர்கள், ஊருக்குள் நடமாடும் புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வந்தனர். இது ஒவ்வொரு ஊரிலும் நடந்தது. அப்போது இந்த ஆலோசனைகளை வழங்கியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிய வருவதாவது: "புலிகளை அழிக்க வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களின் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்." ஆமாம், பிரிட்டிஷ் ஆலோசனை மிகச் சரியாக நிறைவேற்றப் பட்டது. வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் ஒரு புலி இல்லாமல் ஒழித்துக் கட்டப் பட்டனர். கிழக்கு மாகாணத்தில், TMVP என்ற பெயரில் இயங்கிய முன்னாள் புலிப் போராளிகள் அரச படைகளுக்கு உதவினார்கள். பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்ட TMVP உறுப்பினர்கள், புலிகளையும், ஆதரவாளர்களையும் இனங் கண்டு அழிப்பதற்கு உதவினார்கள். அதுவும் பிரிட்டனின் ஆலோசனை தான்.

இதே நேரம், கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், புலிகளுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரி இயக்கம் ஒன்று இரகசியமாக இயங்கி வந்தது. அரசினாலும், ஊடகங்களினாலும் "சிங்களப் புலிகள்" என்று நாமகரணம் சூட்டப் பட்ட அவர்கள், கொழும்பில் சில குண்டுவெடிப்புகளை நடத்தி உள்ளனர். அரசு அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை உருவாக்கியது. இந்த விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்தார்கள். பொது மக்களின் விழிப்புக் குழுக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமான விடயம் என்னவெனில், சிங்கள மக்களின் விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை பிடிப்பதற்கு மட்டும் உதவவில்லை. அரசை விமர்சித்து வந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளையும் கண்காணித்து வந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், தென்னிலங்கையில் எத்தனை சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டனர், பயமுறுத்தப் பட்டனர் என்பதை நான் இங்கே விபரிக்கத் தேவையில்லை.

அன்று நடந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டிஷ் அரசும் பொறுப்பு என்பது ஆச்சரியத்திற்குரியது. சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறியது யார்? வேறு யார், பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் தான்.

எதற்காக பிரிட்டன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்? இந்து சமுத்திரத்தின் மத்தியில், இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து நடக்கும் இடத்தில் உள்ளது. ஆகவே, அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இலங்கையில் எழுந்த தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது, ஏகாதிபத்திய நலன் சார்ந்த விடயம்.

நாங்கள் ஈழப்போரை புலிகளின் நீதியான அறப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியத்தின் கண்களுக்கு அது பயங்கரவாதமாகத் தெரியும். நாங்கள் அதனை ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியம் அதனை தனக்கு எதிரான புரட்சி என்று கணித்து வைத்திருக்கும். 

நடந்து முடிந்த இனப்படுகொலையில் இருந்து, தமிழர்கள் இன்னுமா பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதில் இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? தமிழ் மக்களின் எதிரி சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல. அதனை பின்னால் நின்று இயக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் தமிழர்களின் எதிரி தான்.

மேலதிக தகவல்களுக்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்

Wednesday, March 30, 2016

சர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்


சோவியத் யூனியனுக்கும் புலிகளின் தமிழீழத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியன் உருவான நேரம், இருபது உலக நாடுகள் சேர்ந்து அதனை அழிக்கப் பார்த்தன. ஆனால், அந்த அழித்தொழிப்பு போரில் தப்பிப் பிழைத்த சோவியத் யூனியன் எழுபதாண்டுகள் நிலைத்து நின்றது. முப்பதாண்டுகளாக இருந்த புலிகளின் de facto தமிழீழத்தை, இறுதிப் போரில் இருபது உலக நாடுகள் சேர்ந்து அழித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிசத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசம் தோற்று விட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழர்கள், புலிகளின் தமிழீழத்தின் வீழ்ச்சியின் பின்னர் தமிழ் தேசியவாதம் தோற்று விட்டதாக இன்னமும் பேசத் துணியவில்லை.

சோவியத் யூனியன், தமிழீழம் இரண்டினதும் அழிவுக்கு காரணமாக இருந்த சர்வதேச சக்தியின் பெயர் என்ன? 
ஏகாதிபத்தியம்

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி. 9/11 என்று அழைக்கப் பட்ட நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான், அல்கைதா இயக்கங்களை அழிப்பதற்கான போர் என்று அறிவிக்கப் பட்டது. உலகில் எல்லோரும் அப்படித் தான் நம்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அதே நேரம், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்றொரு பட்டியலை தயாரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரும் அதில் இருந்தது.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமது பெயரை எடுப்பதற்கு, புலிகள் இயக்கம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தது. கோடிக்கணக்கான டாலர் பணம் செலவிடப் பட்டது. அமெரிக்காவின் பிரபலமான வழக்கறிஞர்கள் அமர்த்தப் பட்டு வழக்காடினார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கினார்கள். ஆனால், அமெரிக்க அரசு பட்டியலில் இருந்து பெயரை எடுக்க மறுத்து விட்டது. 

உலகில் வேறெந்த இயக்கமாவது இந்தளவு பணத்தை தண்ணீராக செலவழித்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் தெரியாவிட்டால், அதன் கடந்த கால வரலாற்றில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து படிப்பினை பெற விரும்பாத, அமெரிக்கா சார்பான தமிழ் வலதுசாரிகள், புலிகளையும், ஈழத் தமிழரையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றார்கள். இருந்த போதிலும், தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பது போல, தமக்கு "எதுவும் தெரியாது" என்று எங்களை நம்பச் சொல்கிறார்கள்.

புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் "புலி அழிப்பாளர்கள்" என்றதொரு அணியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணியில் ராஜபக்சே சகோதரர்கள் முதல் நாடு கடந்த தமிழீழக்காரர்கள் வரை ஒன்று சேர்ந்திருந்தார்கள். "சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளை ஒப்பிடலாமா?" என்று கேட்கும் அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவே அதைப் பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதே இந்தக் கூட்டமைப்பின் ஒரேயொரு இலட்சியமாக இருந்தது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் பதுக்கப் பட்ட பில்லியன் டாலர்களை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் நெற்றிகளில் நாமம் போட்டார்கள். போர் முடிவதற்கும், அமெரிக்காவில் புலிகளின் பிரதானமான நிதி வழங்குனர் கைது செய்யப் படவும் நேரம் சரியாகவிருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வணிகர் ராஜா ராஜட்னம், அவரது நிறுவனமான Galleon Group hedge fund பெயரில் நடந்த முறைகேடுகளுக்காக கைது செய்யப் பட்டு, பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜா ராஜரட்ணம் கொழும்பில் பிறந்தவர். யாழ்ப்பாண மேட்டுக்குடியை சேர்ந்தவர். ஹெட்ஜ் பண்ட்ஸ் முதலீட்டு நிறுவனங்கள், 2007 ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்துள்ளன. அதன் விளைவாக, ஹெட்ஜ் பண்ட்ஸ் முகாமையாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

ராஜா ராஜரட்னமும் பங்குச்சந்தை சூதாட்டம் காரணமாக FBI புலனாய்வின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான். பிற்காலத்தில், அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெரிய வந்தததால் தண்டனைக்காலம் நீடிக்கப் பட்டது. அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO வுக்கு, மில்லியன் டாலர் நிதி வழங்கியதும் நிரூபிக்கப் பட்டிருந்தது. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே CIA க்கு வேலை செய்த கேபி, ராஜா ராஜரட்ணம் தொடர்பான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப் படுகின்றது. (Convicted Galleon Group Trader Raj Rajaratnam Now Faces Tamil Terror Finance Lawsuithttp://www.ibtimes.com/convicted-galleon-group-trader-raj-rajaratnam-now-faces-tamil-terror-finance-lawsuit-1698732

மேற்குறிப்பிட்ட தகவலை, பல தமிழர்கள் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுவார்கள். அதற்குக் காரணம், இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் வெளியான போதிலும், தமிழ் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதை மட்டுமா மறைத்தார்கள்? 

2006 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கச் சென்ற சிலரை, ஆயுதத் தரகர்கள் போன்று நடித்த FBI அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கனடாவிலும், அமெரிக்காவிலும், இருநாட்டு புலனாய்வுத் துறைகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக பன்னிரண்டு புலி ஆதரவு தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய கிபீர் விமானங்களை தாக்குவதற்கு வேண்டிய ஏவுகணை வாங்க முயன்றதாக FBI அறிவித்தது. ஈழப் போர் நடந்த காலத்தில், இஸ்ரேலிய கிபீர் விமானங்கள் புலிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தன.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்தோனேசியாவில் ஹாஜி சுபாண்டி (Hadji Subandi) என்ற இந்தோனேசிய - முஸ்லிம் வணிகர் கைது செய்யப் பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு FBI இனால் விசாரிக்கப் பட்டார். சிங்கப்பூரில் பால்ராஜ் நாயுடு (Balraj Naidu) சிங்கப்பூர் - தெலுங்கு வணிகர் கைது செய்யப் பட்டு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

இந்தோனேசியா முதல் அமெரிக்கா வரையில் நடந்த, ஆயுதத் தரகர்கள் கைது சம்பவங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன? அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் போட்ட இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப் பட்டனர். உதாரணத்திற்கு, FBI வெளியிட்ட இந்தத் தகவல் அறிக்கையை பாருங்கள்: Singapore Man Sentenced to More Than Four Years in Prison for Conspiracy to Provide Material Support to a Foreign Terrorist Organization; https://www.fbi.gov/baltimore/press-releases/2010/ba121610.htm 

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மேற்குறிப்பிட்ட தகவல் எதுவும், புலிகளின் வெளிநாட்டு முகவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு தெரியாதா? தெரியும்!

"இருபது உலக நாடுகள் சேர்ந்து நடத்திய அழித்தொழிப்பு போர்", உலக வரலாற்றில் இது தானா முதல் தடவையாக ஈழத்தில் மட்டும் நடந்துள்ளது? 
இல்லவே இல்லை! 
  • 1917 - 1922 : சோவியத் யூனியன் என்ற உழைக்கும் மக்களுக்கான சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட இருபது உலக நாடுகள் பங்குபற்றின. மேற்கத்திய ஆக்கிரமிப்புப் படைகளினால் இலட்சக் கணக்கான ரஷ்ய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

  • 1950 – 1953 : கொரிய மக்களின் சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், அமெரிக்கா தலைமையின் கீழ் இருபது உலக நாடுகள் பங்குபற்றின. ஐ.நா. கொடியின் கீழ் இந்தியாவும் தனது படைகளை அனுப்பி இருந்தது. அந்தப் போரிலும், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படைகளினால், இலட்சக் கணக்கான கொரிய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.


நம்பினால் நம்புங்கள். பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று, உலகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை" பெருமளவு குறைந்தது. பனிப்போர் காலத்தில் நடந்த எந்தப் போரிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலைமை எப்போது மாறியது? மிகச் சரியாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதாவது "கம்யூனிசத்தின் தோல்விக்குப்" பிறகு உருவான மாற்றங்கள் இவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தான், உலகில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் உருவானது. 
மறுக்க முடியுமா?

பனிப்போரின் முடிவில் தோன்றிய அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்குப் பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" மீண்டும் உலகை பயமுறுத்தத் தொடங்கின. 
  • 1990 – 1991: குவைத் பிரச்சினையில் நடந்த வளைகுடா யுத்தம். ஈராக்கிற்கு எதிராக இருபதுக்கும் பேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து போர் தொடுத்தன. ரஷ்யாவும், சீனாவும் கூட அந்தப் போரை ஆதரித்தன.
  • 1999 : யூகோஸ்லேவியா நாட்டை துண்டாடி, காலனிய அடிமைப் படுத்துவதற்காக நடந்த, நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவ நடவடிக்கை. ரஷ்யா, சீனா, கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன. 
  • 2001 - 2014 : அமெரிக்கா தலைமையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்தப் போர் இன்னும் முடியவில்லை. பத்து வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான ஆப்கானிய மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். 
  • 2003 : ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவில் நடந்தது. ஒரு சில வருடங்களுக்குள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் இலட்சக் கணக்கான ஈராக் மக்களை இனப்படுகொலை செய்தனர்.


இந்த உதாரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

புலிகளை ஆதரிப்பதாக நடித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளே! ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரியா விட்டால், அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசலாம். தமிழீழம் கேட்கலாம். ஆனால், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், "இருபது நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்" என்று சொல்வதால் யாருக்கு இலாபம்? அது மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை ஏகாதிபத்திய நுகத் தடியின் கீழ் இன்னலுற வைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

புலிகளின் அழிவுக்கு நீங்கள் அடிக்கடி காரணம் காட்டும் "இருபது உலக நாடுகளின் கூட்டணிக்கு" ஒரு பொதுவான பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தான் மூலதன ஏகாதிபத்தியம்! அமெரிக்கா உலகம் முழுவதையும் தனது அதிகாரத்தின் கீழ் ஆள நினைக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் கூட முதலாளித்துவ நாடுகள் என்பதால் மூலதன ஏகாதிபத்தியத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

இந்த உண்மையை மட்டும் மறந்து விடாதீர்கள். இன்றைக்கும் உலகில் சோவியத் யூனியனும், கம்யூனிசமும் நிலைத்து நின்றிருந்தால், இருபது உலக நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்திருக்கவே முடியாது! பனிப்போர் கால இரு துருவ அரசியல் சதுரங்கத்தை பயன்படுத்தி, புலிகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். பாமர மக்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட, மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு தெரியவில்லை.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: