Wednesday, November 29, 2017

பணம் தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறுபடுத்துகிறது


(சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் ) 
(பகுதி - 4)

கம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப் பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் "புத்திசாலி" பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. "இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை" என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது "வேண்டப்படாதவர்கள்" என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். "வேண்டப்படாதவர்கள்" வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: "பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்." என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மொடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள். 

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளபாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

"இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?" 
மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார்: 
"தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது."

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் "எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கைரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்" என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கைரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கைரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். 


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: 

Tuesday, November 28, 2017

தேர்தலில் கம்யூனிச விரோதிகளை அடித்து விரட்டிய பல்கேரிய விவசாயிகள்


(சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்  )
(பகுதி  - 3)

"கருத்துச் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று எப்போதாவது கவலைப் பட்டதுண்டா?" என்று கேட்டான் பிராங்.

 உண்மையில் இல்லை. சுருக்கமாக சொன்னால், அதைப் பற்றி எதுவும் தெரியாது. அங்கு சில விடயங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும், ஒடுக்கப் படுகிறோம் என்று யாரும் கருதிக் கொள்ளவில்லை. மேற்குலகில் பல தசாப்தகாலமாக கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறுகளுக்கும் குறைவில்லை.

எதையுமே மாற்ற முடியாத கருத்துச் சுதந்திரம் எதற்கு? அது இருந்து என்ன பிரயோசனம்? கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது. ஆனால், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் எந்த நன்மையையும் உண்டாகவில்லை. நிலைமை முன்னரை விட மோசமடைந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அவர்களது வீடு, சேமிப்புப் பணம், இலட்சியங்கள். அதிக பணம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் நீதிமன்ற தீர்ப்பை கூட விலைக்கு வாங்க முடிந்தது.

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். ஏனென்றால் அது ஊடக சுதந்திரத்திற்கு நல்லது என்றார்கள். ஒவ்வொரு இறந்த உடலையும், வன்முறைச் சம்பவத்தையும் பார்க்கும் பொழுது, எமது அழகான நாட்டில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.

கம்யூனிசக் காலத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், கிரிமினல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல, உணவை வாங்குவதற்கு கையில் போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலை கூட இருக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தம் மக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கும். இந்த மக்கள் எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக? கடைசியில், மக்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல முடிந்தது. அப்போதும் அவர்களுக்கு திருப்தி வரவில்லை.

"அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், குரலை உயர்த்தி சொல்ல வேண்டியது தானே?" என்றான் பிராங்.

அதைத் தானே நாமும் செய்தோம்? அரசாங்கம் மாறியது. ஆனால், எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் வெறும் வயிற்றை நிரப்பவில்லை. இடது, வலது வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளதும் பிரதானமான நோக்கம், தமது பணப் பைகளை நிரப்புவது மட்டுமே.

"எது முக்கியம்? கருத்துச் சுதந்திரமா, பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? என்று தெரிவு செய்ய வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாய்?" நாங்கள் எதையும் விருப்பத்துடன் தெரிவு செய்யவில்லை. அதை வரலாறு எமக்காக செய்தது. ஒரு நாள் வயிறு நிறைய உணவு கிடைத்தது. ஆனால், முழுச் சுதந்திரம் இருக்கவில்லை. அடுத்த நாள் முழுச் சுதந்திரம் இருந்தது, கையில் காசு இருக்கவில்லை.

நிச்சயமாக, இது எல்லோருக்கும் பொருந்தாது. வழமையாக முதலாளித்துவத்தில் இருப்பது போன்று, புதிய சமுதாயத்தில் எல்லாம் நேர்மையற்ற வகையில் பங்கிடப் பட்டது. வலிமை மிக்க பணக்காரர்கள் சரியான தருணத்தில் ஒரு மூழ்கும் கப்பலை விட்டு வெளியேற முடிந்தது. பலவீனமான ஏழைகள் அதற்குள் கிடந்தது அமிழ்ந்து போனார்கள். யாருமே அவர்களை காப்பாற்ற வரவில்லை.

ஏழு பேரில் ஒருவர் தனது உணவுக்காக கஞ்சித் தொட்டியை நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட அமெரிக்காவை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றினோம். ஆனால் ஒரு வித்தியாசம். எமது நாட்டில் ஏழைகளுக்கான கஞ்சித் தொட்டிகள் இருக்கவில்லை, எந்தவொரு செல்வந்தரும் தான தர்மம் செய்யவில்லை. எத்தனையோ பேர் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு ஏழைகளுடன் பணத்தைப் பங்கிடும் மனம் இருக்கவில்லை.

சோவியத் யூனியனில் கொர்பெசெவ் அதிபர் பதவிக்கு வந்தார். பெறேஸ்ட்ரோய்கா கொண்டு வந்தார். பெர்லின் மதில் வீழ்ந்தது. ஆரம்பத்தில், பல்கேரியாவில் கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய பத்திரிகைகள், சஞ்சிகைகள் தடை செய்யப் பட்டன. "சோஷலிசத்தை காப்பாற்றுவதற்காக, பல்கேரியா சோவியத் யூனியன் மீது படையெடுக்குமா?" என்று நாங்கள் எமக்குள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம்.

ஒரு நாள் பல்கேரியாவிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. எந்நேரமும் சிரித்துக் கொண்டிருந்த எமது "மகிழ்ச்சியான சர்வாதிகாரி" பதவி விலக நிர்ப்பந்திக்கப் பட்டதை தொலைக்காட்சியில் காண முடிந்தது. திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட மாதிரி எல்லாம் நடந்தேறின. ஏனென்றால், எமது நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சித் தலைவரை அகற்றலாம் என்றால், எதுவும் சாத்தியமே. திடீரென பலர் தெருவுக்கு வந்து கம்யூனிசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். நாற்பது வருட கால பரிசோதனை போதும். கம்யூனிசத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். எல்லோரும் இறக்கை முளைத்ததை போன்று நடந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடக்க முடியாதவை என்று நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நடந்தன. இந்த ஆட்சி மாற்றம் மூலம், கம்யூனிஸ்டுகள் தமது அதிகாரத்தை பலப் படுத்தி விட்டதாக நினைத்தார்கள். ஆனால், திடீரென சிறிய சிறிய எதிர்க்கட்சிகள் முளைத்தன. கடைசியில் சுதந்திரம் பெற்றோம். அதாவது, பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தலை சொல்கிறேன். கம்யூனிச எதிர்ப்புப் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீல வர்ணத்தில் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக்கும், நீலத்திற்கும் இடையில் தேர்தல் போட்டி ஆரம்பமானது.

அப்போது எனக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தேர்தலில் வோட்டுப் போடும் உரிமை கிடைத்தது. எனது தெரிவு நீலக் கட்சிக்குத் தான் என்பது எப்போதோ தீர்மானிக்கப் பட்டு விட்டது. குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த இளைஞர்களின் தெரிவும் அதுவாக இருந்தது. எனது நாய்க்குட்டியின் கழுத்துப் பட்டியில், எதிர்க்கட்சியின் நீல நிற பலூன் கட்டி விட்டேன். அதையும் இழுத்துக் கொண்டு எனது தாத்தா, பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன்.

தாத்தா, பாட்டிக்கு அது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதுமே கம்யூனிச ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி நிறையப் பேர் இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு பல குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கியது. இரவும், பகலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் இடையறாத வாக்குவாதங்கள் நடந்தன.

நான் தாத்தா, பாட்டியின் வீட்டிற்கு சென்று அவர்களது அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்து வந்து, எனது நாயின் கழுத்துப் பட்டியில் இருந்த நீல பலூனை கண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், இது சகிக்க முடியாத, கம்யூனிச விரோத சீண்டுதல். அதனால், கோபத்துடன் கதைவை அடித்து சாத்தி விட்டார்கள்.

அப்போது தான் எனது முட்டாள்தனம் உறைத்தது. தாத்தாவும், பாட்டியும், இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர்களாக இருந்தனர். சிறு வயது முதல் கொஞ்சி மகிழ்ந்து, இனிப்புப் பண்டங்களை கொடுப்பதை தவிர வேறெதையும் செய்திராதவர்கள். பாட்டி பல்கனியில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணீர் விடுவதைக் கண்டேன்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களில் மும்முரமாக இருந்த எனக்கு, தாத்தா, பாட்டியின் பிரிவின் துயரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எல்லோரும் புன்முறுவலுடன் வீடுகளுக்கு திரும்பினோம். வழியில் எதிர்ப்பட்ட கம்யூனிச ஆதரவாளர்கள் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் பேசவில்லை. (எதிர்க்கட்சி ஆதரவாளரின்) மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு சில நாட்கள் நீடித்தது.

கம்யூனிச எதிர்ப்பு எதிர்க்கட்சிக்கு நகரங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால், கிராமப் புறங்கள் அப்போதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன. கிராமங்களில் நீலக்கொடி காட்டிய சிலருக்கு விவசாயிகள் அடி போட்டு அனுப்பினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கடந்த கால சாதனைகளை சொல்லிக் காட்டி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்க்கட்சி அரசாங்கம் பற்றிய அச்சவுணர்வை தோற்றுவித்து இருந்தனர். எதிர்க்கட்சி அவர்களது நிலங்கள் பறித்து, முந்திய நிலவுடைமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதனால் வேலையிழப்புகள் ஏற்படும். அத்துடன், மருத்துவத்திற்கு காசு கொடுக்க வேண்டி இருக்கும். சந்தைப் பொருளாதாரம் வந்தால், அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் பெறுமதி இருக்காது.

ஆரம்பத்தில், நான் இந்த அச்சுறுத்தல்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரம் என்று நினைத்தேன். இருப்பினும் கிராமப் புற விவசாயிகள் அதை நம்பினார்கள். மேற்கத்திய அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த நகர்ப்புற அறிவுஜீவிகளை விட, கிராமப்புற விவசாயிகள் உண்மைக்கு அண்மையில் நின்றுள்ளனர் என்பது கடைசியில் தெரிய வந்தது. எதிர்க்கட்சி அவமானப் பட்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த நேரம், மிக மோசமான நிலைமை நிதர்சனமானது. ஆனால், அந்த நேரம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மனதில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இருக்கவில்லை.

ஒரு தலைமுறை கடந்ததும் வந்த பிள்ளைகள் எவருக்கும் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் படிக்கும் சரித்திரப் பாடநூலில் ஒரு சுருக்கமான குறிப்பு இருக்கும். அந்தளவு தான் அறிவு. நாங்கள் மார்க்ஸ், லெனின் சிலைகளுடன் வளர்ந்தோம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. லெனினை பார்த்து "யார் இவர்? மொஸ்கோ நகர மெட்ரோ ரயில் கட்டியவரா?" என்று கேட்கிறார்கள்.

லெனின் ஒரு இலட்சியவாதியாக இருந்தார். அவரது பிரதானமான சாதனையாக, சோவியத் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலவியதைக் குறிப்பிடலாம். அதாவது, இனவாதத்திற்கு இடமிருக்கவில்லை. சோவியத் அமைப்பு விழுந்த பின்னர், எண்ணில் அடங்காத தேசியவாதக் கட்சிகள் தோன்றின. அவை மக்களின் அடிமனது உணர்வுகளைப் பிரதிபலித்தன. "மோசமான பொருளாதார நிலைமைக்கு காரணம் சிறுபான்மை இனத்தவர் தான்." - எப்போதும் பழி போடுவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவர்கள், மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்.

ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது. அதை ஊடுருவுவதும் கடினமானது. பனிப்போர் முடியவில்லை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்கிறது. நீண்ட நெடுங்கால ஜனநாயக மரபைக் கொண்ட நாடுகளில் கூட, நாகரிகம், சகிப்புத்தன்மை என்பன இலகுவில் உடையும் அளவிற்கு மெல்லிய தடுப்புச் சுவர்களாக உள்ளன.


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

Saturday, November 18, 2017

போதுமென்ற மனமே கம்யூனிசம் சொல்லும் மருந்து


[சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்] 
(பாகம் - 2)

கம்யூனிச சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனை இல்லாமல் இல்லை. சோஷலிச நாட்டில் சந்தைப் பொருளாதாரம் இருக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? புதிய கார் வாங்க வேண்டுமென்றால், பதிவு செய்து விட்டு வருடக் கணக்கில் (5-10 வருடங்கள்) காத்திருக்க வேண்டி இருந்தது. 

உங்களால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கிறது பழைய கார். யாராவது பாவித்த ஒரு கார் வாங்கி ஓடலாம். சிலநேரம் பழைய காரின் விலை, புதிய காரை விட அதிகமாக இருக்கும். அதாவது "கேள்வி - வழங்கல்" முறையில் இயங்கும் சந்தைப் பொருளாதாரம். 

சோவியத் யூனியனில் சந்தை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் சந்தை பெருந்தெருக்களின் ஓரத்திலேயே இருந்தது. கோர்பசேவ் பதவிக்கு வர முன்னரே அங்கு தனியார் துறை இருந்தது. கம்யூனிச சமூகத்தில் அந்தளவு நெளிவு சுளிவுகள் இருந்தன.

பொருட்கள் விரைவில் பழுதடைவதா அல்லது தட்டுப்பாடு நிலவுவதா? பொருளாதாரத்தில் எது மிக மோசமானது என்பது எமக்குத் தெரியாது. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அடிக்கடி பொருட்களுக்கு தட்டுப்பாடு வருவதை தவிர்க்க முடியாது. நுகர்வோரின் தேவையை முன்கூட்டியே அறிந்து செயற்படுவதற்கு பொருளியல் அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அது எப்போதும் இலகுவானதல்ல. 

கம்யூனிச காலத்தில் அது ஒரு தவறாக இருந்தது. எல்லா இடங்களிலும் தையல் மெஷின் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், பிறகு ஊசி வாங்கக் கிடைக்காது என்பது மாதிரி. திருத்த வேலை செய்வதற்கு சில பகுதிகளை வாங்கிப் பொருத்த வேண்டி இருக்கும். ஆனால், அது கடையில் இருக்காது. நெதர்லாந்து வந்த பின்னர், "நீங்களே செய்து பாருங்கள்" (Do it yourself) கடைக்கு சென்று பார்த்தேன். அங்கே எல்லாம் தயார் நிலையில் பொருத்தக் கூடிய உபகரணங்களாக இருந்தன. அதெப்படி, நாங்களாகவே செய்து கொள்வதாகும்?

முதலாளித்துவமா, அல்லது கம்யூனிசமா, மனிதர்களின் படைப்புத் திறனை வளர்க்கிறது என்ற பட்டிமன்ற விவாதத்தில், ஏற்கனவே கம்யூனிசமே வென்று விட்டது. பற்றாக்குறை நிலவும் பொழுது, மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தடவை எமக்கு புல்வெட்டும் கருவி தேவைப் பட்டது. 

நிச்சயமாக அதற்கும் தட்டுப்பாடு தான். எனது அப்பா ஒரு வேலை செய்தார். நான் குழந்தையாக இருந்த நேரம் பாவித்த தள்ளுவண்டியின் அடிப்பாகத்தையும், பழைய சலவை இயந்திரத்தின் மோட்டாரையும் இணைத்து ஒன்றை உருவாக்கி விட்டார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் நன்றாக வேலை செய்கிறது.

சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாது. இரட்டைத் தொலைபேசி இணைப்பு (Duplex line) அதில் ஒன்று. (ஒரே இணைப்பு இரண்டு வீடுகளுக்கு செல்லும்) நாங்கள் தொலைபேசினால் பக்கத்து வீட்டுக்காரர் பேச முடியாது. எனது சகோதரி மணித்தியாலக் கணக்கில் தனது காதலனுடன் வம்பளந்து கொண்டிருப்பாள். எரிச்சலில் மேல் வீட்டுக்காரி தொம் தொம் என்று நிலத்தில் குத்துவாள். மணித்தியாலக் கணக்காக வம்பளந்து கொண்டிருக்க அவளுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கலாம். 

பக்கத்து வீட்டுக்காரர் அறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எமக்கு தொலைபேசி பாவிக்க வேண்டி இருந்தால் ஒரு வேலை செய்வோம். இரகசியமாக சென்று Duplex பெட்டியில் குத்தி விட்டால் இணைப்பு துண்டிக்கப் பட்டு விடும். நிச்சயமாக, அன்று நாடு முழுவதும் இணைப்பு திடீரென துண்டிக்கப் படுவது அடிக்கடி நடக்கும்.

கம்யூனிச காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா தலைமுறைகளிலும், நாங்கள் வாழ்ந்த காலம் தான் சிறப்பானது. பொது இடத்தில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொன்னால், அதிக பட்சம் அவரது உத்தியோகத்திற்கு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆனால், ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டி வராது. அரசியல் கைதிகளுக்கான மீள் படிப்பு முகாம்கள் எல்லாம் கடந்த காலம். அதெல்லாம் முந்தி இருந்தன. சிலநேரம், ஒருவர் அமெரிக்க டாலர் சின்னம் வரைந்திருந்தால் கூட சந்தேகிக்கப் பட்ட காலம் ஒன்று இருந்தது.

கம்யூனிசத்தின் ஆரம்ப காலங்களில் சில அற்பமான விடயங்களையும் அவதானித்தார்கள். எனது அம்மா குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியே போனால், முழங்காலில் கரும் புள்ளி குத்தி விடுவார்கள். அதே மாதிரி,அப்பா இறுக்கமான காற்சட்டை அணிந்து சென்றால் இடுப்புக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டி விடுவார்கள். 

அனேகமாக இப்படியான வேலைகளை செய்வது பொலிஸ்காரர்கள் அல்ல. சாதாரண பொது மக்கள். அதற்கென கையில் சிவப்புப் பட்டி அணிந்த தொண்டர்கள் இருந்தனர். இறுக்கமாக காற்சட்டை அணிவது முதலாளித்துவ நாகரிகம். ஆகையினால் அதைக் கண்டால் வெட்டி விட்டார்கள்.

ஒரு தலைமுறைக்கு பிறகு சமுதாயம் மாறி விட்டது. அப்போதும், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசலாம், செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. இருப்பினும், நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தோம். எல்லோருக்கும் வேலை இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி என்பன இலவசமாக கிடைத்தன. 

பெரும்பாலான மக்கள் போதுமான அளவு சம்பாதித்தார்கள். அத்துடன் விடுமுறைக்காக கொஞ்சப் பணம் சேமித்து வந்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், இரண்டாம் வருடம் சம்பளம் இல்லாத விடுப்பும் கிடைத்தது. 

பெரிய நகரங்களில் உள்ள தெருக்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கழுவித் துப்பரவாக்கப் பட்டன. பூங்காக்கள் அழகாகவும், பசுமையாகவும் இருந்தன. எங்கேயும் நாசவேலைகள் நடக்கவில்லை. போதைவஸ்து பாவனை இருக்கவில்லை. அத்துடன் சமூகத்தில் பதற்றமும் நிலவவில்லை.

பள்ளிக்கூடங்களில் மனித இன வரலாற்றின் வித்தியாசமான காலகட்டங்கள் பற்றி சொல்லித் தந்தார்கள். அந்த அடிப்படையில், இப்போது நாங்கள் "அபிவிருத்தி அடைந்த சோஷலிச சமுதாயத்தில்" வாழ்வதாக சொன்னார்கள். இப்போதுள்ள குறைபாடுகள் எல்லாம், கம்யூனிச காலகட்டத்தை அடையும் பொழுது தான் பூர்த்தியாக்கப் படும் என்றார்கள். அப்போது மனிதர்களின் தேவைக்கு ஏற்றவாறு எல்லாம் கிடைப்பதுடன், கடைகளில் பணம் இல்லாமல் எதுவும் வாங்கலாம் என்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் சொல்வதைப் போன்று நடக்குமாக இருந்தால் அழகாகத் தானிருக்கும்.

நேர்மையாகத் தான் சொல்கிறேன். அமெரிக்காவில் நூறில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்த நேரம், எங்கள் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடந்தன. அதற்குக் காரணம், சர்வாதிகாரமானது அயோக்கியர்களையும் அடிபணிய வைத்திருக்கலாம். சிலநேரம், யாருமே பணக்காரர் இல்லாத ஒரு தேசத்தில் திருடுவதற்கு எதுவும் இல்லை என்று திருடர்கள் நினைத்திருக்கலாம்.

விடுமுறையை கழிப்பதற்கு கருங்கடல் ஓரம் நிறைய கம்யூனிச இளைஞர் விடுதிகள் இருந்தன. அங்கு தங்குவது மிகவும் மலிவானது. ஒரேயொரு குறை என்னவெனில், விடியற் காலையில் எழுந்து நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாட வேண்டும். அணிவகுக்க வேண்டும். சில பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். 

ஆனால், மாலை நேரம் நெருப்புத் தணலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நேரம், எவராலும் காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான், எனது பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் அவர்களது கடும் கண்காணிப்பில் இருந்து தப்புவதுடன் கர்ப்பமாக வீடு வந்து சேருவேன் என்று அஞ்சினார்கள்.

ஆகையினால், நான் "பிரிகேட்" பணி செய்ய செல்லும் காலங்களில் அரும்பும்   காதல்களுடன் திருப்திப் பட வேண்டும். பிரிகேட் பணிக் காலத்தில் நாங்கள் வயல்களில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நிச்சயமாக, அது விடுமுறை அல்ல. ஆனால், எனக்கு அப்படித் தெரிந்தது. ஆளரவம் இல்லாத மூலையில் ஒரு இளைஞனும், யுவதியும் செய்யும் குறும்புகளை மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இளம் வயதினர் தானே.

அப்படியான பிரிகேட் போவதற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரும். அதற்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று, மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதப் பட்டிருக்கும். என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தொண்டர் படையணிக்கு ஒருவர் தவறாமல் எல்லோரும் நேரத்திற்கு வந்து விடுவார்கள்.

எல்லா கம்யூனிச நாடுகளிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது வழக்கம். போலந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த படியால், அங்கே ஒவ்வொரு வருடமும் உருளைக்கிழங்கு தோண்டுவது தான் வேலை. பல்கேரியாவில் வித்தியாசம். திராட்சைப் பழம், செரி பழம், அல்லது ஆப்பிள் பிடுங்க வேண்டி இருக்கும். கடலை பறிப்பது  என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு. நிலத்தை தோண்டி விரல்கள் கறுத்து விடும். முதுகு வலி வரும். அத்துடன் மழை பெய்தால் அந்த மண் சேறாகி விடும். 

அதை விட மோசமான விடயம், குறிப்பிட்ட அளவு செய்து முடிக்கவில்லை என்றால், மேற்பார்வையாளர் எல்லோருக்கும் முன்னால் திட்டுவார். அதற்காக நான் ஒரு வேலை செய்வேன். வாளியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போட்டு வைத்திருப்பேன். நிறுக்கும் பொழுது கடலையை விட மண்ணின் நிறை அதிகமாக இருக்கும்.

நமது காவியத்திற்குள் யாராவது வந்து குழப்பி விடுவார்களா? ஆம், சில நேரம் கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் செய்வார்கள். அந்த நேரம் பாதையை கூட்டி, அருகில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்ட வேண்டும். ஊத்தையான குப்பை வாளியை அகற்ற சொன்னார்கள். எங்கே கொண்டு போய் வைப்பது என்று மேற்பார்வையாளருக்கு தெரியவில்லை. அந்த இடம் கூடாது, இங்கே வேண்டாம் என்று சொல்லி சொல்லி ஆறு தடவைகளுக்கு மேல் அலைக்கழிக்கப் பட்டோம். கடைசியில் அது முதலில் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அப்படியான தருணத்தில் அங்கு வருகை தரும் அரசியல்வாதி பற்றி நமக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், பொதுவாக சொன்னால், நாங்கள் ஒரு நாளும் அரசியல் பற்றிப் பேசுவதில்லை. இந்த கம்யூனிச தலைவர்கள் ஐந்தாண்டு திட்டத்தில் என்னவெல்லாம் புனைந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை.

எங்களுடைய ஆர்வம், கவலை எல்லாம் எதிர்ப் பாலினத்தவர் பற்றியதாகவே இருந்தது. அவர்களது நடையுடை, தோற்றம் பற்றியதாகவே இருந்தது. ஆண், பெண் இனக்கவர்ச்சி பற்றியே அதிக அக்கறை கொண்டோம்.

யாரையாவது கவரும் வகையில் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டி இருந்தது. பிரபல அமெரிக்க பாடகி Tina Turner மாதிரி முடி அலங்காரம் அந்தக் காலத்து நாகரிகம். இதெல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியில் யாரும் என்னைக் கேட்க முடியாது.

அந்தக் முடி அலங்காரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, அப்பாவின் ஷேவிங் கிறீம் எடுத்து பூசிக் கொள்வேன். ஏன் தனது ஷேவிங் கிறீம் அடிக்கடி முடிகிறது என்று அப்பாவுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலங்களில் தலைக்கு வைக்கும் ஜெல் கடைகளில் விற்பதில்லை. ஆகவே, எனக்கும் வேறு வழியில்லை. ஒரேயொரு குறை. மழை பெய்தால் எல்லாம் கரைந்து வழிந்து விடும்.

"உங்கள் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது?" எனது துணைவர் பிராங் இடையிடையே இப்படி விசித்திரமான கேள்விகள் கேட்பார்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நிறையப் பேரை பிடித்து அர்த்தமில்லாத வேலைகளையும் செய்ய வைத்தால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்து விடும். கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து சாதனை படைக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதுகின்றன.

நிறையப் பேர் தாம் வேலை செய்யும் தொழிலகங்களில் உள்ள பொருட்களை கொண்டு சென்று அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்வார்கள். அதனால் சிலநேரம் உற்பத்தி தடைப் படும். அதற்காக யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது. செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென்றாலும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இது தான் கம்யூனிசத்தின் பொருளாதார சுழற்சி.

மேற்குலக பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது : 
  • உற்பத்தி குறைவு: தொலைந்து போ! 
  • கேள்வி அதிகரிக்கிறது : உற்பத்தி முழுவதையும் சீனாவுக்கு கொண்டு போ! 
  • சீனாவில் செலவு அதிகம்: உற்பத்தியை மலேசியாவுக்கு இடம் மாற்று! 
  • எதிர்ப்புப் போராட்டம் : இன்னமும் உயிரோடு இருக்கிறாயா? 
  • உச்ச கட்ட சம்பளம் : வங்கியில் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்லு!
  • பொருளாதார நெருக்கடி : நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கு ஆதரவளி. செலவை மக்கள் தலையில் கட்டி விடு!

உண்மையை சொன்னால், எந்த பொருளாதார சுழற்சி நல்லது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கம்யூனிசத்தில் மக்களுக்கு பெருமளவு திருப்தி கிடைத்தது. மேற்குலகில் மரணப் போட்டி நிலவுகிறது. இரும்புத் திரைக்குப் பின்னால் போட்டி என்ற சொல்லை யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒரு அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம். அது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து மேலதிக பணத்தை எடுக்கிறது. எங்கள் நாட்டில் விளம்பரங்களால் மூழ்கடிக்கப் படாத படியால் தொடர்ந்து புதிய பொருட்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் பல விடயங்கள் இலகுவாக நடந்தன.

உன்னுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லையா? நல்லது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். ஒரு கார் வாங்குவதற்காக பதிவு செய்து விட்டு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? அது பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையில் நல்ல பக்கத்தை பாருங்கள். "வாகன வரி கட்டத் தேவையில்லை. காற்றுப் போன டயர் மாற்றத் தேவையில்லை. சேர்விஸ் செலவு இல்லை..."

மொத்தத்தில் நிறைய நேரம் மிச்சம் பிடிக்கலாம். கம்யூனிச காலகட்டத்தில் "மாற்றி யோசிக்க" கற்றுக் கொண்டோம். மேற்குலக பொருளாசை தரும் போதைக்குள் மூழ்குவதற்கு முன்னர் இது ஒரு நல்ல பயிற்சி.

Thursday, November 16, 2017

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்


ப‌ல்கேரியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் த‌ன‌து இள‌ம் பிராய‌த்தை க‌ழித்த‌ ம‌ரியா ஜெனோவா, த‌ற்போது நெத‌ர்லாந்தில் வாழ்கிறார். அவ‌ர் சோஷ‌லிச‌ ப‌ல்கேரியாவையும், முத‌லாளித்துவ‌ நெத‌ர்லாந்தையும் ஒப்பிட்டு, இர‌ண்டிலும் உள்ள‌ குறை நிறைக‌ள் ப‌ற்றி ஒரு நூல் (Dansen op de Muur) எழுதி இருக்கிறார்.

"உண்மையைச் சொல்வ‌தென்றால் நான் ஒரு க‌ம்யூனிச‌ ச‌முதாய‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு ம‌கிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறுகின்றார். அந்த‌க் கால‌த்தில் த‌ன‌க்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அர‌சிய‌ல் ஆர்வ‌ம் இருக்கவில்லை என்கிறார். த‌ன‌து அனுப‌வ‌ங்க‌ளை ந‌கைச்சுவையாக‌ எழுதி இருக்கிறார். அவரது நூலின் சில பகுதிகளை கீழே மொழிபெயர்த்து எழுதி இருக்கிறேன்.
நூலில் இருந்து....

அப்போதும் அர‌சிய‌ல்வாதிக‌ள் நிறைய‌ வாக்குறுதிக‌ள் அளிப்பார்க‌ள். யார் அதைப் ப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட்டார்க‌ள்? அவ‌ற்றில் ஒன்று: "உண்மையான‌ க‌ம்யூனிச‌ ச‌முதாய‌ம் உருவான‌ பின்ன‌ர், க‌டைக‌ளில் ப‌ண‌ம் கொடுக்காம‌லே பொருட்க‌ளை வாங்க‌லாம்."

அத‌ன் அர்த்த‌ம், த‌ற்போது வ‌ங்கி அட்டையில் ப‌ண‌ம் செலுத்துவ‌து மாதிரியான‌ அமைப்பு. பிற்கால‌த்தில் முத‌லாளித்துவ‌ம் வ‌ந்த‌ பின்ன‌ர் அந்த‌ வ‌ச‌தியும் வ‌ந்த‌து. ஆனால், சில‌ர் "காசு கொடுக்காம‌ல் வாங்கும் முறையை" த‌வ‌றாக‌ப் புரிந்து கொண்ட‌ன‌ர் போலிருக்கிற‌து.

கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் பல்கிப் பெருகின‌. நாடு முழுவ‌தும் குழ‌ப்ப‌க‌ர‌மான‌ சூழ்நிலை நில‌விய‌ நேர‌ம், மாபியாக்க‌ள் ம‌ட்டும் ஒழுங்காக‌ இய‌ங்கினார்க‌ள். இது தானா நாங்க‌ள் க‌ன‌வு க‌ண்ட‌ முத‌லாளித்துவ‌ம்?

நான் சிறுமியாக இருந்த நேரம், ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கூப்பிட்டுக் கேட்டார்: "என்ன மரியா இது? தலைமுடி காடு மாதிரி வளர்ந்திருக்கு? கவனிக்க மாட்டாயா?" என்று கேட்டு கத்தரிக்கோலால் வெட்டி விட்டார். அதைக் கண்டு வகுப்பில் பிற மாணவர்கள் சிரிக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இடைவேளை நேரத்தில் நக்கல் குரூப்பில் ஒன்று வந்து கேட்டது: "அடியே, உனது தலை கார்ச் சக்கரத்தில் அகப்பட்ட பூசணிக்காய் மாதிரி இருக்குடி!"

வீட்டுக்கு சென்ற பின்னர் அம்மாவுக்கு மாரடைப்பே வந்து விட்டது. 
"என்னடி இது? என்ன நடந்தது?" 
"தோழர் டிமித்ரோவா (ஆசிரியை) எனது தலை முடி நீளம் என்று சொல்லி வெட்டி விட்டார்." 
"தோள்பட்டை அளவு கூட வளரவில்லை... அது நீளமாமா?"

எனது அம்மா கடுங் கோபத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கவில்லை. காரணம், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்களை எதிர்த்துப் பேச முடியாது. அவர்கள் எப்போதும் ஏதாவது எழுதப் படாத சட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். கட்சித் தலைவர்கள் அதை விட மோசம். அந்த விதிகள் எங்காவது எழுதி இருந்தால், நாமும் தயார் படுத்துக் கொள்ளுவோமே?

அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய (சோஷலிச) நாடுகள், ஒவ்வொன்றுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அதே நேரம் ஒற்றுமைகளும் இருந்தன. எல்லாம் வல்ல கட்சி, அணிவகுப்புகள், அரைகுறையாக நிரப்பப் பட்ட கடைகள், வரிசைகள், தகவல் கொடுப்பவர்களைப் பற்றிய அச்சம்... இவையெல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

அது மட்டுமல்ல, செக்கோஸ்லோவாகியாவின் அதே மின் விளக்குகள், போலந்து அலுமாரிகள், கிழக்கு ஜெர்மன் தொலைபேசிகள் தான் பல்கேரியாவிலும் இருந்தன. திருத்தப் படாத பெருந்தெருக்கள் குண்டும் குழியுமாக இருந்தன. வாகனம் ஓட்டுவோர் பள்ளத்திற்குள் இறங்கக் கூடாது என்று எச்சரிக்கையாக தெருவோரமாக திருப்பினால், அந்தப் பக்கம் சிலநேரம் எதிர்த் திசையில் இருந்து வாகனம் வரலாம். வந்தால் அதோ கதி தான். எனது மாமா ஒரு தடவை பள்ளத்திற்குள் வண்டியை விட்டு ஸ்டேயரிங் வீலை கையில் கழற்றி வைத்திருந்தார்.

மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரங்களும் ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன. மேற்கத்திய நாடுகளில் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்கள் தறிகெட்டு செல்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தனர். எங்களது நாட்டில் போதைவஸ்து எங்கேயும் கிடைக்காது, அதனால் அந்தப் பிரச்சினையும் இல்லை. மேற்கத்திய இளைஞர்களுடன் ஒப்பிடும் பொழுது, நாம் பொருளாசை குறைந்தவர்களாக இருந்தோம். சிலநேரம், "கிட்டாதாயின் வெட்டென மற" என்று மனதை தேற்றிக் கொண்டிருப்போம்.

அதற்காக எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. அருகில் இருக்கும் கம்யூனிச யூகோஸ்லேவியா நாட்டவர் மீது எங்களுக்கு பொறாமை இருந்தது. காரணம், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும், டெனிம் ஜீன்ஸ் வாங்கவும் அனுமதித்திருந்தது. யூகோஸ்லேவியா காரர்கள், மூன்று மடங்கு விலை வைத்து எங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் விற்று வந்தனர்.

பள்ளிக்கூடங்களில் நாம் எல்லோரும் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டோம். சல்யூட் அடிக்கவும், போராட்டக் கோஷம் எழுப்பவும் பழகி இருந்தோம். அதை யாரும் அதிசயமாக பார்ப்பதில்லை. "Budete gotovi! Vinagi gotov!" என்ற பல்கேரிய கோஷத்தை மொழிபெயர்த்தால் "நாங்கள் தயாராக இருக்கிறோம்!" என்று அர்த்தம் வரும். எதற்குத் தயாராக இருக்க வேண்டும்? அதைப் பற்றி யார் கவலைப் பட்டார்கள்?

பாடசாலை மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து வர வேண்டும். முதலில் நீலம் பின்னர் சிவப்பு கழுத்துப் படி அணிந்திருந்தோம். நாம் விரும்பிய படி சீருடையில் சிறிது மாற்றம் செய்யவும் தடை இருந்தது. சக மனிதனை விட நான் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது தவறானது. எங்களுடைய இலட்சியமான, ஏழை பணக்காரர் இல்லாத நீதியான வருங்காலத்தை எண்ணிக் கொண்டோம்.

இருப்பினும், வர்க்கமில்லாத சமுதாயம் என்பது சிலநேரம் எழுத்தில் மட்டும் இருந்தது. நான் ஒரு தொழிலாளியை அல்லது விவசாயியை திருமணம் செய்வதற்கு எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். அதற்கான காரணம், அவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. வழமையாகவே, ஒரு பட்டதாரி மணமகனை தான் அவர்கள் தேடி இருப்பார்கள்.

பல்கேரியாவில் ஏற்கனவே பொருளாதார ரீதியான சமத்துவம் எட்டப் பட்டு விட்டது.ஏறக்குறைய எல்லோரும் சமமாக சம்பாதித்தனர். ஒரு கட்டிடத் தொழிலாளிக்கும், ஒரு பேராசிரியருக்கும் கிடைக்கும் சம்பளத்தில் வேறுபாடு இருக்காது. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த வித்தியாசம் ஒன்றிருந்தது. கட்சி முக்கியஸ்தர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டனர். புது வீட்டுக்கு காத்திருக்கும் பட்டியலில் அவர்களது பெயர் வராது. மருத்துவ சிகிச்சைகளும் விசேடமாக கிடைக்கும். ரஷ்யாவில் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்குவதற்கு தனியான விற்பனை அங்காடிகள் இருந்தன.

கட்சி முக்கியஸ்தர்கள் விசேட சலுகைகள் பெறுவது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எங்களுக்கு எல்லாம் கிடைத்து வந்த படியால், சாதாரண மனிதர்களான நாமும் திருப்திப் பட்டோம். விளையாட்டுக் கழகங்கள், விடுமுறை விடுதிகள் என்று, சிறுவர்கள், இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.

அநேகமான நிறுவனங்கள், மலையடிவாரங்கள், கடற்கரைகளில், தமக்கென சொந்தமாக சுற்றுலா விடுதிகள் வைத்திருந்தன. அந்த நிறுவனங்களில் வேலை செய்வோர், மிகக் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, வேலை நேரங்களில் கூட களைத்துப் போனால் சிறிது ஓய்வெடுக்கலாம். யாரும் அவர்களை தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கவில்லை.

"சுத‌ந்திர‌ம் இன்மை, வ‌றுமை, எந் நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்கும் புல‌னாய்வுத்துறை... அப்ப‌டியான‌ ஒரு நாட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு வேத‌னைப் ப‌டுகிறேன்." இப்ப‌டிக் கூறினான் என‌து ட‌ச்சு காத‌ல‌ன் ஃப்ராங்.

"நிறுத்து!" நான் எரிச்ச‌லுட‌ன் க‌த்தினேன். இத்த‌கைய‌‌ க‌றுப்பு - வெள்ளைப் ப‌ட‌ங்க‌ளை போதுமான‌ அள‌வு பார்த்து விட்டேன். என‌து இள‌மைக் கால‌ம் இனிதாக‌ அமைந்திருந்த‌து. நான் ஒரு நாள் கூட‌ வ‌றுமையில் வாழ்வ‌தாக‌ உண‌ர‌வில்லை. அத்துட‌ன் எந்த‌வொரு பாதுகாப்பு அதிகாரியும் எங்க‌ளை எந்த‌ நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்க‌வில்லை.

ஏதோ நீங்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறீர்க‌ள் போலும். எத்த‌னை ஆயிர‌ம் க‌மெராக்க‌ள் உள‌வு பார்க்கின்ற‌ன‌? NSA உங்க‌ள் மின்ன‌ஞ்ச‌ல், குறுஞ்செய்திக‌ளை வாசிக்கின்ற‌ன‌. உன்னை மாதிரி ந‌ல்லொழுக்க‌ம் மிக்க‌‌ குடிம‌க்க‌ளை உள‌வு பார்க்கும் புல‌னாய்வுத்துறை செய்வ‌தில் நூற்றில் ஒரு ப‌ங்கு கூட‌ எங்க‌ள் நாட்டில் ந‌ட‌க்க‌வில்லை."

மேற்கத்திய நாட்டவர்கள் சர்வாதிகாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது. எனது கம்யூனிச இளம்பருவக் காலங்கள் இனிமையானவை. இன்னும் சொன்னால், "எனது இளம்பருவத்தை சுதந்திர மேற்குலகில் கழிக்கவில்லையே" என்று நான் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை.

தங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்தலையும் நெதர்லாந்து இளைஞர்களை பார்த்தாலே போதும். அளவு கடந்த தெரிவுச் சுதந்திரம் அவர்களை எந்த முடிவுக்கும் வர விடாமல் தடுக்கிறது. அத்துடன் மன உளைச்சலும் உண்டாகிறது.

இலட்சக் கணக்கான டச்சுக் காரர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப் பட்டு அதற்காக மருந்து (Antidepressants) குடிக்கிறார்கள் என்பதை முதல் தடவையாக கேள்விப் பட்ட நேரம், முதலில் அது ஒரு ஜோக் என்று நினைத்தேன். ஒரு மில்லியன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மன உளைச்சல் தடுப்பு மருந்துக் குளிசையை உபயோகிக்கிறார்கள்!

மேற்குலக மன உளைச்சல் தடுப்புக் குளிசை விழுங்கிகள் எல்லாம், "நாங்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் வாழ்ந்த படியால் மகிழ்ச்சியை காணாதவர்கள்" என்று நினைத்துக் கொள்கிறார்கள்! நல்லது, நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களைப் போல மகிழ்ச்சியை மருந்துக் குளிசையாக வாங்கிக் குடிக்கவில்லை.

நாங்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அதைவிட அதிகமாக மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்பது புரிகின்றது. முதலாளித்துவம் சிறந்தது என்றும், எங்களது நாட்டில் எல்லாமே நாசமாகப் போனவை என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.

"முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த மிகப் பெரிய வறுமையை பார்த்தால் என்ன என்ன சொல்லத் தோன்றும்." என்று சொன்னான் பிராங்.

ஒரு நாட்டில் எல்லோரும் வறுமையில் வாழ்ந்தால் யார் அதை உணரப் போகிறார்கள்? நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள். எல்லோரும் கருங்கடல் பகுதி கடற்கரைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.

எந்தவொரு தருணத்திலும் எங்கள் நாட்டில் காசில்லாதவர்களுக்கு உணவளிக்க கஞ்சித் தொட்டி இருக்கவில்லை. வேலையிழந்தாலும் அரசு அவர்களுக்கு இன்னொரு இடத்தில் வேலை எடுத்துக் கொடுத்தது.

"இது தான் பிரச்சினையே," என்றான் பிராங். "அரசு மக்களை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருக்காது தானே?"

எங்கள் நாட்டில் இருந்தது. இது பற்றி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கு உலாவியது: "ஒவ்வொரு தொழிலகத்திலும் மூன்று பேரை வேலைக்கு போட வேண்டும். வேலை செய்ய ஒருவர். அதை மேற்பார்வை பார்க்க மற்றவர். மூன்றாவது நபர் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கி விடுவார்."

பிராங் புருவத்தை உயர்த்திக் கேட்டான்: "அப்படி எல்லாம் செயல்பட வைக்க முடியுமா?"

"நிச்சயமாக செயற்படுத்த முடிந்தது. பெரும்பாலானவர்கள் தமது வேலையில் திருப்தி கண்டனர். அத்துடன் வேலை நேரத்தில் வெளியே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் நேரம் ஒதுக்கினார்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் எந்த நேரத்திலும் விற்று முடிந்து விடலாம். நேரத்திற்கு சென்று வாங்கி வைத்து விட வேண்டும்."

"அப்படிப் பார்த்தாலும் அது நல்லதில்லை தானே? நீ ஏதாவது வாங்கப் போனால், அது அங்கே இருக்காது?" - பிராங்

நிச்சயமாக, அது நல்லதில்லை தான். ஒரு பொருளை திரும்பவும் எப்போது விற்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும். பண்டமாற்று பொருளாதாரம் சிறப்பாக இயங்கியதால், யாரும் பற்றாக்குறையுடன் வாழவில்லை.

எனது வாழ்க்கையில் முதல் தடவையாக நெதர்லாந்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைக் கண்டவுடன் வாயடைத்துப் போனேன். பத்து வகையான அரிசி, ஏழு வகையான சீனி, எட்டு வகையான கழிவறைக் கடதாசிகள். எந்த நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை கண்டவுடன் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி உண்டானது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாளர்கள் சிரிக்க மாட்டார்கள். எந்த நேரமும் முறைத்துப் பார்ப்பார்கள். நாங்கள் வாங்கத் தானே வந்திருக்கிறோம்? களவெடுக்கப் போகிறோமா? கொஞ்சம் சிரிக்கலாம் தானே? அதற்கு மாறாக மேற்கத்திய நாடுகளில் செயற்கையாக சிரிக்கிறார்கள்.

ஒரு தடவை அமெரிக்கா சென்ற நேரம் வாடிக்கையாளர்களை "How are you today?" என்று நலம் விசாரிப்பதை பார்த்தேன். என்னவோ எங்கள் சுகநலம் குறித்து அவர்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் நடிப்பு தானே?

நெதர்லாந்து வந்த பின்னர் தான், நாம் ஒருவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசவும் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் குறித்து வைக்கும் வழக்கத்தை கண்டேன். இதை எனது அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

"அப்படியா? டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் எழுதி வைப்பார்களா?"

"ஆமாம் அம்மா, சந்திப்பதற்கு முன்னர் அதை ஒரு டயரியில் குறித்துக் கொள்வார்கள். நினைத்த நேரத்தில் யார் வீட்டுக்கும் போக முடியாது. அவர்கள் ரோபோ மாதிரி இயங்குகிறார்கள். எல்லாற்றையும் முன்கூட்டியே திட்டமிடுவார்கள். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்று மருந்து வாங்கிக் குடிப்பார்கள். இயற்கையை காசு கொடுத்து அனுபவிப்பார்கள்."

இந்தக் கதை எல்லாம் கேட்டால் அம்மாவின் மண்டை விறைத்து விடும் என்பது தெரியும். வேறு வழியில்லை. நானும் சொல்லியே ஆக வேண்டும். முதல் தடவையாக எனது துணைவர் பிராங் மணல் திட்டுக்கு போவதற்கு டிக்கட் வாங்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன்.

"நாங்கள் இயற்கையை தேடித் தானே போகிறோம்?" 
"ஆம்" 
"அதற்கு ஏன் காசு?" 
"மணல் திட்டில் நடப்பதற்கு காசு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் கட்ட வேண்டும்."

ம்ஹ்ம்... இயற்கையை அனுபவிக்க காசு கொடுக்காமல் சென்றால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாம். எனது பல்கேரிய மண்டைக்கு இது புரியவே இல்லை.

எமக்கு இடையில் பெருமளவு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், எமது இல் வாழ்வில் எந்த இடையூறும் இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. என்னால் முடிந்தளவு விளக்க முயற்சித்தேன்.நாங்கள் ஒரு நாளும் சர்வாதிகாரத்தின் கீழ் அல்லல் படவில்லை என்ற உண்மையை அவனுக்கு உணர வைக்க வேண்டி இருந்தது.

முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் கம்யூனிசத்தின் வெற்றியை கொண்டாடும் அணிவகுப்புகளில் கலந்து கொண்டு கையசைத்து வந்தோம். நிச்சயமாக, நாங்கள் இன்னும் வெல்லவில்லை. பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், என்றோ ஒரு நாள் நாங்கள் வெல்வோம் என்று நம்பினோம்.

பாடசாலைகளில் எமக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு கற்றுக் கொடுத்தார்கள். அணுகுண்டு வெடித்தால் பதுங்குகுழிக்கு செல்வது எப்படி என்று பழக்கினார்கள். ஏனென்றால், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. அமெரிக்கர்களை நம்ப முடியாது.

எதிரிகள் எங்களது கம்யூனிச சொர்க்கத்தை அழிக்கும் நோக்கில் எந்நேரமும் படையெடுக்கலாம். தாய்நாட்டை பாதுகாப்பதற்காக போரிட வேண்டி இருக்கும். எதிரிகள் எமது பொன்னான கம்யூனிச இலட்சியங்களை அழிக்க விரும்பினார்கள். அவர்கள் சமத்துவத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.

எமது சமுதாயம் பூரணத்துவம் அடைந்தது என்று சொல்லவில்லை. ஆனால், பூர்த்தி செய்ய முயற்சித்தார்கள். எப்போதாவது ஒரு தடவை விவசாய விளைச்சல் குறைவடைந்தால், பத்திரிகையில் அமோக விளைச்சல் என்று மிகைப் படுத்தி எழுதினார்கள். (இது ஒரு உளவியல் ஊக்குவிப்பு. பரீட்சையில் தோற்ற மாணவர்களின் மனம் தளர விடாமல் பாராட்டி படிக்க வைப்பது போன்றது.)

நாம் கையில் கிடைக்கும் குறைந்தளவு உபகரணங்களை கொண்டு திருத்தவும், உருவாக்கவும் கற்றுக் கொண்டோம். மேற்குலகை விட, கிழக்கு ஐரோப்பாவில் தான் அதிகளவு கண்டுபிடிப்பாளர்கள் இருந்தார்கள். இதற்காக நான் பந்தயம் கட்டுவேன். உதாரணத்திற்கு, மேற்கத்திய சமையலறையில் ஏதாவதொன்று குறைந்தாலும் சமைக்கத் தெரியாமல் தவிப்பார்கள். நாங்களோ இருப்பதை பாவித்து புதியதொரு உணவு வகையை உருவாக்கி இருப்போம்.

(தொடரும்)


Wednesday, November 15, 2017

சிம்பாப்வே இராணுவ சதிப்புரட்சி - பின்னணித் தகவல்கள்


சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் "அது சதிப்புரட்சி இல்லையாம்!" என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

சமீப காலங்களில் முகாபே சுகயீனமுற்று இருந்த படியால், தேசத்தின் உண்மையான நிர்வாகத்தை அவரது 52 வயதான மனைவி கிரேஸ் தான் கவனித்து வந்தார். முகாபே குடும்பத்தினர் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு ஆளும் ZANU-PF கட்சிக்குள் அதிருப்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

கடந்த சில வாரங்களாக, சிம்பாப்வே ஆளும் கட்சிக்குள் களையெடுப்புகள் நடந்து வந்தன. "களையெடுப்பு தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி நடக்கும்" என்று ஒரு இராணுவ ஜெனரல் நேற்றுத் தான் எச்சரித்து இருந்தார். இன்று நடந்துள்ள சதிப்புரட்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை ஊகித்தறிவது கடினமான விடயம் அல்ல.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை தான், துணை அதிபர் எமர்சன் (Emmerson Mnangagwa) பதவி விலக்கப் பட்டார். "அதிபர் பதவியை கைப்பற்ற சூனியம் செய்ததாக" முகாபே அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். (ஆப்பிரிக்காவில் இன்றும் பல மக்கள் சூனியம் செய்வதை உண்மை என்று நம்புகிறார்கள்.) ஆகவே, துணை அதிபர் எமர்சன் "தனக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறி, அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சதிப்புரட்சி நடந்த தினமான இன்று, பதவியிறக்கப் பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அவரே சிம்பாப்வே ஆட்சியை பொறுப்பேற்று நடத்துவார் என ஊகிக்கப் படுகின்றது. "முகாபேயின் சர்வாதிகாரம் ஒழிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவிப்போர் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதே எமர்சன் தான் முகாபேயின் இரும்புக் கரமாக செயற்பட்டவர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தின் போது, எமர்சன் முகாபேயின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்தவர். சுதந்திர சிம்பாப்வே அரசில் எமர்சன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான், 1983 ம் ஆண்டு, நிதேபெலே(Ndebele) இனப்படுகொலை நடந்தது.

சிம்பாப்வே தெற்கில் வாழும் நிதேபெலே மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை மொழியான ஷோனா பேசும் முகாபே அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இது இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையாகவும் இருந்த படியால், அரச பயங்கரவாத நடவடிக்கை மூலமே அந்த மக்களை பணிய வைக்க முடிந்தது. 

அன்று குறைந்தது இருபதாயிரம் நிதேபெலே மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். இராணுவத்தின் ஐந்தாவது படைப்பிரிவான, குகுரஹண்டி (Gukurahundi) என்ற பெயர் தாங்கிய சிறப்புப் படையணியினரே படுகொலைகளில் ஈடுபட்டனர். ஷோனா மொழியில் குகுரஹன்டி என்றால் "குப்பைகளை ஒதுக்கும் மழை" என்று அர்த்தம். இதுவே அன்றைய இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிய வைக்கப் போதுமானது.

சிம்பாப்வேயில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை, மேற்கத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளும் ஆதரிப்பதாகத் தெரிகின்றது. பதவியிறக்கப் பட்ட ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அங்கு நடந்த பொதுத் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர். ஆனால், மேற்குலகம் முகாபேயை ஒரு "சர்வாதிகாரி" என்று சொல்கிறது! அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, மேற்குலகம் தாராளமாக உதவிய போதிலும் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

மேற்குலகின் பார்வையில் "சிம்பாப்வே மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை அகற்றி விட்டு, சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இனப்படுகொலையாளி" சிறந்த நண்பராக தெரிகிறார். ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரி, இனப்படுகொலையாளி யாராக இருந்தாலும், மேற்குலக பொருளாதார  நலன்கள் பாதுகாக்கப் பட்டால் சரி தானே?

சிம்பாப்வே நாட்டில் ஆயிரக் கணக்கான ஆங்கிலேய, டச்சு "விவசாயிகள்" வாழ்கிறார்கள். காலனிய காலத்தில் குடியேறிய அவர்களை விவசாய- தொழில் அதிபர்கள் என்று அழைப்பது தான் முறையானது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சொந்தமாக வைத்திருந்து, அவற்றில் புகையிலை பயிர் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பதினேழு வருடங்களுக்கு முன்னர், "முன்னாள் விடுதலைப் போராளிகள்" வெள்ளையரின் நிலங்களை வன்முறை மூலம் பறித்து வந்தனர்.

தற்போது பதவியிறக்கப் பட்டுள்ள ரொபேர்ட் முகாபேயும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கையை ஆதரித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேற்குலக நாடுகள் சிம்பாப்வேக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான புகையிலையை வாங்க மறுத்து வந்தன. அதனால், சிம்பாப்வே பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றது. அதன் பணம் மதிப்பிறங்கி செல்லாக் காசாகியது. இதனால் அந்நிய நாணயங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது.

அட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முகாபேயின் மனைவியும் அரசியல் வாரிசுமான கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் வேட்டையாடப் படுகின்றனர். அதைத் தவிர நிலைமை சுமுகமாக உள்ளது. பொது மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், அங்கு நடந்த சதிப்புரட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் மக்கள் உணர்த்தி உள்ளனர். 


சிம்பாப்வே தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
எனது முன்னைய பதிவுகளையும் வாசிக்கவும் :