Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

Saturday, September 24, 2016

ஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்


ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான். 

ஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.

அப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.

அந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

புளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான "வங்கம் தந்த பாடம்" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

புளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

மார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.

அது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

இந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று "தீப்பொறி அமைப்பு" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.

அப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.

புளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.

மேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.

அந்தக் காலத்தில், "மாத்தையா குறூப்" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.

இருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். "வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.

முள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.

ஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.

ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், "Lebensraum" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.

மகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.

Saturday, October 18, 2014

புதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை

தமிழினப் படுகொலை நடந்த புதுக்குடியிருப்பில், ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் சுரண்டல் ஆரம்பம். தமிழ்ப் பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அமெரிக்கர்களின் பாவனைக்கான மலிவு விலை ஆடைகளை தயாரிப்பதற்கு, வன்னியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உதவி வருகின்றது.

தமிழர்களுக்கு எதிரான, சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கும், தரகு முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? "இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டுமே.... முதலாளித்துவ/ஏகாதிபத்திய பிரச்சினை அல்ல..." என்று பல படித்த மேதாவிகள் கூட நம்புகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்ற வரட்டு சூத்திரத்தை நம்பி, தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஹிர்டாரமணி குரூப் (The Hirdaramani Group), இலங்கையின் மூன்றாவது பெரிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனம். கடந்த பல தசாப்தங்களாக, மலிவு விலை ஆடைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இது வரை காலமும் தென்னிலங்கை தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்த தரகு முதலாளிய நிறுவனம், ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் வட இலங்கைத் தொழிலாளர்களையும் சுரண்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் போட்டுள்ள தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது புதுக்குடியிருப்பில் புதிதாக இன்னொரு தொழிற்சாலையை கட்டவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்மையான ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகளே, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை, அடுத்த வருடம் அளவில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது. முதற் கட்டமாக, 450 தமிழ்ப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அடுத்த சில வருடங்களில், ஆயிரக் கணக்கான தமிழ் யுவதிகள் அங்கே வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஹிர்டாரமணி குரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் டோனி நடராஜா என்ற ஒரு தமிழர் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

முல்லைத்தீவில், சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ், புதிய தொழிலாளர்களுக்கான தொழிற்பயிற்சி இப்போதே ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில், ஈழத் தமிழ்ப் பெண்களிடம் சுரண்டப் பட்ட உழைப்பு, அமெரிக்கக் கடைகளில் மலிவுவிலை ஆடைகளாக விற்பனை செய்யப் படும்.

ஈழப் போர் - சிங்கள பேரினவாதம் - அமெரிக்க ஏகாதிபத்தியம், இவற்றுக்கு இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், கண்களை மூடிக் கொண்டிருக்கலாம். "ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டும் தான்..." என்று ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கலாம்.

எதற்காக மூலதனமும், தரகு முதலாளிய நிறுவனங்களும் வன்னியை தேர்ந்தெடுத்தன? சீனாவில் உள்ள ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, வட இலங்கைக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. தென்னிலங்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக, சிங்களத் தொழிலாளர்கள் தமது உரிமைகளை கேட்டுப் போராடி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமைகளை அரசே மறுத்து வந்த போதிலும், தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக உத்தியோகபூர்வமற்ற தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.

வட இலங்கையில் இடதுசாரிகளின் தொல்லை கிடையாது. தமிழ்த் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு, இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். மேலும், முதலாளியத்திற்கு ஆதரவான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்கள் தேசியவாத மாயைக்குள் கட்டுண்டு கிடக்க உதவுகின்றனர். இது போன்ற அரசியல் நிலைமை, ஏகாதிபத்தியத்திற்கும், சிங்கள தரகு முதலாளித்துவத்திற்கும் மிகவும் உகந்தது. 

தமிழினப் படுகொலை நடந்த வன்னிப் பிரதேசம், வருங்காலத்தில்  தரகு முதலாளிகளின் சொர்க்கபுரியாக மாறப் போகின்றது. அன்று நடந்தது தமிழினப் படுகொலை, இனிமேல் நடக்கப் போவது தமிழின சுரண்டல். புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் உருவாகி வருகின்றன. அதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டன. 

வன்னியில் தரகு முதலாளிகளின் ஊடுருவல் காரணமாக தொழிற்துறை வளர்ச்சி அடையும் பொழுது, அங்கே தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கமும் பெருகும். காலப்போக்கில், தமிழ்த் தொழிலாளர்களும் தமது உரிமைகளை கேட்டுப் போராடுவார்கள். அப்போது அந்த உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தயாராக, அருகிலேயே இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஈழப் போரின் முடிவில், வட இலங்கையை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் வெளியேற்றப் பட வேண்டும் என்று, ஏகாதிபத்தியம் பாசாங்குக்கு கூட முணுமுணுக்காத காரணமும் அது தான்.

மேலதிக தகவல்களுக்கு: 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Thursday, November 12, 2009

புதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் காட்சிகள்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங்கள், மேற்படி நவீன ஆயுதங்களை கடத்தி வந்து உதவியிருக்கலாம்." இவ்வாறு கூறுகின்றது இலங்கை அரசு. எது எப்படியிருப்பினும், இறுதிப்போரில் புலிகள் அந்த ஆயுதங்களைப் பாவிக்காததேன்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரும் இல்லை. மே மாதம் போர் ஓய்ந்த பின்னர், அனுமதிக்கப்பட்ட "News X" என்ற இந்திய ஊடக நிறுவனம் இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. News X தொலைக்காட்சி கமெரா, இலங்கை அரச படைகளின் அகோரமான ஷெல் வீச்சுக்கு இலக்காகி சேதமுற்ற புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையையும் பதிவு செய்ய தவறவில்லை.


Part 1

Part 2

Part 3