Showing posts with label ஜேவிபி. Show all posts
Showing posts with label ஜேவிபி. Show all posts

Thursday, December 22, 2016

ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (ஐந்தாம் பாகம்)

மேட்டுக்குடி சிந்தனை கொண்ட மத்திய தர வர்க்கத்தினர், வலதுசாரி அரசியல் கொள்கையை ஆதரிப்பது அதிசயமல்ல. இடதுசாரிகளை தமது எதிராளிகளாக கருதி வெறுப்பதும் அவர்களது அடிப்படை வர்க்கக் குணாம்சம். அதற்காக, "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அளவுக்கதிகமானது. வலதுசாரிகளுக்குப் பிடிக்காதது எல்லாம், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பிடிக்கக் கூடாது என நினைப்பது அபத்தமானது.

அந்தக் காலகட்டத்தில் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக இருந்தார். விடுதலைப் புலிகள், மற்றும் புளொட் ஆகியவற்றின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எயர் லங்காவுக்கு சொந்தமான அவ்ரோ விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், பத்திரிகைகளில் செய்திகளை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்,அதிலிருந்து விலகி ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தார். மாணவர்கள் அவரை "துரோகி" என்று சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று எமது அரசியல் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே தீர்மானித்தது. அவர்கள் யாரையெல்லாம் துரோகி என்றார்களோ, நாங்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகினோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அஹிம்சா வழியில் போராடும் மிதவாதக் கட்சியாகக் காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல. வலதுசாரி கூட்டணித் தலைவர்கள் இனவாதமும் பேசினார்கள், தீவிரவாதத்தையும் ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி இயங்கிய காலம் ஒன்றிருந்தது. இரண்டு தரப்பிலும் அது தொடர்பான புரிந்துணர்வு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டது. புலிகள் தனியாக இயங்கினாலும், அரசியல் கொள்கைகள் யாவும் கூட்டணியிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டவையாக இருந்தன.

ஆயுதப் போராட்ட அரசியல் தனது கையை விட்டுப் போவதை கூட்டணி விரும்பவில்லை. தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலிகள் பிரிந்து சென்று விட்ட படியால், கூட்டணியினர் இன்னொரு ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர். இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, சில இளைஞர்களை திரட்டி தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது சம்பந்தமான திட்டங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து வள்ளுவன் என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். எதிர்பாராத விதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வள்ளுவன் கைது செய்யப் பட்டார். அதனால், கூட்டணி ஆயுதக் குழு அமைக்கும் யோசனையும் கைவிடப் பட்டது.

வள்ளுவன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற படியால், எனக்கு இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அந்தளவுக்கு ஈழப் போராட்டத்திற்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது ஒரே வகுப்பில் கூடப் படித்த மாணவன் ஒருவனின் அண்ணா தான் ஒபரோய் தேவன். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவனான ஒபரோய் தேவன், தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற சிறிய இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1982 ம் ஆண்டளவில் புலிகளால் காரணமின்றி சுட்டுக் கொல்லப் பட்டார். புலிகள் அதனை தவறுதலாக நடந்த விபத்து என்றார்கள்.

யாழ் இந்து விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவன், எனக்கு சீனியரான திலீபன். (உண்ணாவிரதமிருந்த திலீபன் அல்ல.) வன்னியில் கண்டாவளையை சேர்ந்தவர். அந்தக் காலத்தில், ஓரளவு வசதியான, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ் இந்துக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.

திலீபன் படிக்கும் காலத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்தவர். எங்களை மாதிரி சாதாரண பத்திரிகைச் செய்திகளை வாசித்து விட்டு கூட விவாதிப்பதில்லை. அந்தளவுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவர். அவர் பின்னர் கேடில்ஸ் என்ற பெயரில் புலிகளின் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக வந்திருந்தார்.

சாவகச்சேரி பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் கட்டுமானத்தில் கேடில்சின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அரசியல் ஆர்வமற்ற அப்பாவியான திலீபன், மிகக் குறுகிய காலத்திற்குள் எவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட கேடில்ஸ் ஆக மாறினான் என்பது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இவரும் வேறு சில மூத்த புலி உறுப்பினர்களும், கைதடியில் தவறுதலாக நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப் பட்டனர்.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொதுக் கூட்டங்கள் நடத்தின. அதற்கென பயிற்றுவிக்கப் பட்டவர்கள், கிராமம் கிராமமாக சென்று வந்தனர். பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து சமாளிப்பதற்கு அசாத்தியமான திறமை வேண்டும். சாதாரணமான பாமர மக்களிடம் இருந்தும் பலதரப் பட்ட கேள்விகள் எழும்.

ஒரு தடவை, சரசாலை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஈரோஸ் இயக்கத்திற்காக சின்ன பாலா கூட்டம் நடத்த வந்திருந்தார். அங்கு இருந்தவர்களும் சாதாரணமான ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் தான். அப்போது யாழ்நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான். அனுபவம் மிக்க போராளியான சினபாலாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமிருந்த காலத்தில் இயங்காமல் நின்று விட்ட, தமிழ் இளைஞர் பேரவை பற்றிய பல தகவல்களையும் அப்போது தான் அறிந்து கொண்டேன்.

ஈரோஸ், ஈபிஆர்எல்ப், புளொட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள், தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. (அப்போது புலிகளும் மார்க்சிச-லெனினிசம் பேசினார்கள்.) அவை எல்லாம் வழமையான தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தான். 

எது எப்படி இருப்பினும், இடதுசாரி- தேசியவாத இயக்கங்கள் நடத்தும் பொதுக்   கூட்டங்களில் தான் அதிகமான அரசியல் விவாதங்கள் நடக்கும். அன்றைய காலங்களில் தமிழ் உழைக்கும் வர்க்த்தினர் எழுப்பிய அரசியல் கேள்விகள் சில: 
- இந்தியா படை அனுப்பி தமிழீழம் வாங்கித் தருமா?
- சிறிலங்கா அரசு அமெரிக்க சார்புடையது என்பதால் சோவியத் யூனியன் தமிழருக்கு உதவுமா? 
- இலங்கையில் ஏற்கனவே இருக்கும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்? 
- ஜேவிபி உடன் தந்திரோபாய கூட்டு வைக்க முடியுமா?
- எங்களது போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பார்களா? 

மேற்படி கேள்விகளுக்கு ஒவ்வொரு இயக்கமும் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தன. சாதாரண பாமர மக்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்புணர்வு எந்தளவு முற்போக்காக இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இங்கே அவற்றைக் குறிப்பிட்டேன். பிற்காலத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை பரப்பி வந்தன. அந்தக் கருத்தியல் ஆக்கிரமிப்பின் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது.

எந்த இனமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தெரிந்தால், அந்த உயிர் இழப்புகளுக்காக பரிதாபப் பட்ட சிங்களவர்களை கண்டிருக்கிறேன். அரசும், ஊடகங்களும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால் தான் இந்த உணர்வு வெளித் தெரிவதில்லை. அதே மாதிரி, சிங்களக் கிராமங்களிலும் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களுக்காக இரக்கப் பட்ட தமிழர்களையும் கண்டிருக்கிறேன். "அவர்களும் எம்மைப் போன்ற மக்கள் தானே?" என்பது சாதாரணமான தமிழ் உழைக்கும் மக்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம்: "என்னது? ஜேவிபியுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து போராடுவதா? ஐயையோ! அது ஹராம் ஆச்சே? அபச்சாரம்! அபச்சாரம்!!" என்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளலாம். அது தமிழ் மேட்டுக்குடியினரின், வலதுசாரி  அரசியல் கண்ணோட்டம். அதற்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. 

பிற்காலத்தில் ஜேவிபி ஒரு வலதுசாரிக் கட்சியாகி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் இனவாதம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. அது பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கிகள், "ஜேவிபி ஒரு இனவாதக் கட்சி" என்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரிந்த விடயம். 

ஆனால், ஜேவிபி யும் அதே பாணியிலான அரசியலை முன்னெடுத்தது என்பது பலருக்குத் தெரியாத விடயம். அதாவது, "புலிகள் ஒரு இனவாத இயக்கம்" என்று தென்னிலங்கையில் ஜேவிபி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இது போன்ற வழமையான தேர்தல் அரசியலுக்கும், அதற்குமப்பால் உள்ள மக்கள் அரசியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு. வட, கிழக்கு மாகாணங்களில் புலிகள் உட்பட பல ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால், அரச படைகள் நிலைகுலைந்து போயிருந்தன. அதே காலட்டத்தில், தென்னிலங்கையில் ஜேவிபி யும் ஆயுதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதனால், நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படையினர் எல்லோரும் துப்பாக்கிகள் வைத்திருக்குமளவிக்கு பலமாக இருக்கவில்லை. அரசு வடக்கில் தோன்றிய கிளர்ச்சியை நசுக்குவதற்காக படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை புதிதாக படையில் சேர்த்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெருமளவு ஜேவிபி உறுப்பினர்களும் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவு ஜேவிபி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை, அன்று பல ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இருந்தன. இது தொடர்பாக ஏதோ ஒரு இயக்கம், புளொட் என்று நினைக்கிறேன், பகிரங்கமாக துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது. அன்று தமிழ் மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதற்காக அவர்கள் கூறிய காரணம் யதார்த்தமானது.

பெரும்பான்மை சிங்கள இனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசை எதிர்த்துப் போரிட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் தமிழீழம் காணலாம் என்பது ஒரு கடினமான விடயம். அதை சாத்தியமாக்குவதற்கு சிறந்த தந்திரோபாயம் அவசியம். வடக்கில் ஈழ விடுதலை இயக்கங்களும், தெற்கில் ஜேவிபியும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்தால், சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது.

அன்றிருந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இது தான். புலிகளுக்கும், ஜேவிபிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், தமிழீழம் வேண்டுமென்றால் இது போன்ற தந்திரோபாய கூட்டு அவசியமல்லவா? தென்னிலங்கையில் ஜேவிபியின் போராட்டம் வெற்றி பெற்று அரசு கவிழுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் தமிழீழம் பிரகடனம் செய்வது சாத்தியமாகும் அல்லவா? 

இந்த நட்புறவை பேணுவதற்காக, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. சாதாரண தமிழ் மக்கள் ஜேவிபியையும், புலிகளையும் அரச இயந்திரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரே மாதிரியான கெரில்லா இயக்கங்களாகவே கருதினார்கள். அரச ஒத்தோடிகளான தமிழ் வலதுசாரிகள், ஜேவிபி வெறுப்புப் பிரச்சாரம் மூலம் ஈழக் கோரிக்கையை தோற்கடித்தனர் என்பதே உண்மை! எந்த சந்தர்ப்பத்திலும், தமிழ் வலதுசாரிகள் சிறிலங்கா  அரசைக் கவிழ்க்க நினைக்கவில்லை. அதுவும் மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஈழப் போர் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக காய் நகரத்தி விடுதலைப் புலிகளை தனது வலைக்குள் விழ வைத்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுடன் மோத வைத்தது. இதன் மூலம், "இந்தியா வந்து ஈழம் பெற்றுத் தரும்" என்று காத்திருந்த தமிழ் வலதுசாரிகள் தலையில் மண்ணள்ளிப் போட்டது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4.  ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?

Wednesday, June 15, 2016

சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ : வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலின் மறைவு

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌, தனது 74 வ‌து வ‌ய‌தில் கால‌மானார். முதற்கண் அன்னாருக்கு எனது அஞ்சலியையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோமவன்ச, "ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்" என்று சொல்ல‌க் கூடிய‌, 1989 - 1991 ப‌டுகொலைக‌ளில் இருந்து உயிர் த‌ப்பிய சில தலைவர்களில் ஒருவராவார். அந்தக் காலத்தில் தலைவர் ரோகன விஜேவீர உட்பட, தலைமையில் இருந்த அத்தனை பேரும் சிறிலங்கா இராணுவத்தால் அழித்தொழிக்கப் பட்டனர்.

சோமவன்ச சில தமிழ் நண்பர்களின் உதவியால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். பின்ன‌ர் அங்கிருந்து பிரிட்ட‌ன் சென்று அக‌தித் த‌ஞ்ச‌ம் கோரி பல வருட காலம் அந்நாட்டில் ஒரு அகதியாக வாழ்ந்து வந்தார். சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப் பட்ட பின்னர் தாயகம் திரும்பி இருந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்த போதிலும், சோமவன்ச லண்டனில் இருந்து கொண்டே இலங்கையில் இருந்த கட்சி உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். பழைய ஜேவிபியின் அழிவில் இருந்து தப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற காரணத்தினால் தான், சோமவன்சவுக்கு கட்சியின் தலைமைப் பதவி கிட்டியது.

தொண்ணூறுக‌ளின் பிற்ப‌குதியில், ஜே.வி.பி. முற்றாக‌ அழித்தொழிக்க‌ப் ப‌ட்ட‌ நிலையில், முற்றிலும் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாக்கப் பட்டது. அரசியலை விட்டொதுங்கி உதிரிக‌ளாக‌ இருந்த‌ க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளையும், ஆத‌ர‌வாள‌ர்க‌ளையும் ஒன்றிணைத்து மீண்டும் கட்சி கட்டியெழுப்பப் பட்டிருந்தது.

இருப்பினும், புதிய ஜேவிபி பாராளும‌ன்ற‌ சாக்கடை அர‌சிய‌லுக்குள் அமிழ்ந்து போன‌து. க‌ட்சியை வ‌ல‌துசாரிப் பாதையில் வ‌ழி ந‌ட‌த்திய‌தில் சோம‌வ‌ன்ச‌ அமர‌சிங்க‌வின் த‌லைமைப் பாத்திர‌ம் கணிசமான அளவில் இருந்தது. தேர்த‌ல் கால‌ங்க‌ளில் பிற‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ள் போன்று, ஜே.வி.பி.யும் இன‌வாத‌ம் பேசி வாக்கு வேட்டையாடிய‌தை ம‌றைக்க‌ முடியாது. சோமவன்ச அமெரிக்கத் தூதுவராலயத்துடன் இரகசியத் தொடர்பில் இருந்ததை, விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தி இருந்தது.

முன்பு பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிறிலங்கா அரசு ஜேவிபியையும், புலிகளையும் பிரித்து வைப்பதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. சில கசப்பான அனுபவங்கள் காரணமாக புலிகள் மேல் ஏற்பட்ட வன்மம், பிற்காலத்தில் ஜேவிபியை போர் ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தூண்டியது.

ஏற்கனவே ஒரு அழித்தொழிப்பு போரில் தப்பிய இயக்கம், இன்னொரு அழித்தொழிப்பு போரை ஆதரித்த முரண்நகை அரங்கேறியது. "போரில் வெல்வது எப்படி?" என்று ஜேவிபி நடத்திய பாடத்தை, மகிந்த ராஜபக்ச சுவீகரித்துக் கொண்டார். போர் முடியும் வரையில் ஜேவிபியை பயன்படுத்தி விட்டு, தேவை முடிந்தவுடன் தூக்கி வீசி விட்டார். ஜேவிபி இன் வீழ்ச்சிக்கு காரணமான அந்தத் தவறான அரசியல் அணுகுமுறைக்கு, கடைசி வரையில் சோமவன்ச பொறுப்பேற்கவில்லை.

சோம‌வ‌ன்ச‌ அம‌ர‌சிங்க‌ த‌லைமையிலிருந்த‌ கால‌த்தில், ஜேவிபி ராஜ‌ப‌க்ச‌ அர‌சாங்க‌த்திற்கு முண்டு கொடுத்தது. இத‌னால் ஆதாய‌மடைந்த‌ ம‌கிந்த‌ ராஜபக்ச, அத‌ற்கு "ந‌ன்றிக் க‌ட‌னாக‌" ஜேவிபி யில் இருந்த‌ விம‌ல் வீர‌வ‌ன்ச‌ த‌லைமையிலான‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளை பிரித்தெடுத்து த‌ன்னுட‌ன் சேர்த்துக் கொண்டார். (இறுதிக் காலத்தில், கட்சியை விட்டு வெளியேற்றப் பட்ட பின்னர், சோமவன்ச வெளிப்படையாகவே ராஜபக்சவை ஆதரித்தார்.)

சோம‌வ‌ன்ச‌ அம‌ர‌சிங்க‌வின் வ‌ல‌துசாரி ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ அர‌சிய‌ல், கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் அவ‌ருக்கும் ந‌ன்மையையும் உண்டாக்க‌வில்லை. கட்சியின் தலைமையில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக, கட்சி இர‌ண்டாகப் பிள‌வுவுற்றது. 

தீவிர‌ இட‌துசாரிக‌ள் குமார் குண‌ர‌ட்ன‌ம் த‌லைமையில் பிரிந்து சென்ற‌னர். குமார் குணரட்ணம் ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்து தலைமறைவான தலைவராக இயங்கியவர். அதனால், "கடும்போக்காளர்கள்" என்று அழைக்கப் படும், "பழைய" இடதுசாரிகள், குமார் குணரட்னத்தை ஆதரித்ததில் வியப்பில்லை.  

பிளவின் பின்னர் எஞ்சிய ஜேவிபி இலும், சோமவன்சவின் தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்தன. சோமவன்சவின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல், கட்சியை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றதை பலர் அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர். 

இறுதியில், சோம‌வ‌ன்ச‌வின் த‌லைமையில் அதிருப்தியுற்ற‌ ஜேவிபி ம‌த்திய‌ குழு உறுப்பின‌ர்க‌ள் அவரை ப‌த‌வியிற‌க்கினார்க‌ள். ஜேவிபி இன் மறுமலர்ச்சியில் பெரும் பங்கெடுத்த ஒருவர், இறுதியில் அந்தக் கட்சியினாலேயே ஓரங் கட்டப் பட்டார். சோமவன்ச பதவி அகற்றப் பட்ட பின்னர், கட்சிக்குள் இடதுசாரி குழுவினரின் செல்வாக்கு அதிகரித்தது.

கட்சிக்குள் தோன்றிய புதிய தலைமையுடனும் சோமவன்ச முரண்பட்டார். ஒரு கட்டத்தில், அவராகவே கட்சியை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டது. அத‌ற்குப் பிற‌கு, சோம‌வ‌ன்ச‌ அமர‌சிங்க த‌னியாக‌ ஒரு "பௌத்த‌ - தேசிய‌வாத‌" க‌ட்சியை உருவாக்க முனைந்து தோல்வியுற்றார்.‌ இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜபக்சவை ஆதரித்து அரசியல் செய்யப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

சோமவன்ச தனது இறுதிக் காலத்தில், பகிரங்கமாகவே வலதுசாரி அரசியல் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். முந்திய காலங்களில், அவை அவரது தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும், ஜேவிபியையும் பாதித்திருந்தது. சோமவன்ச அமரசிங்கவின் மறைவு, ஜேவிபியின் பின்னடைவுக்கு காரணமான, வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலின் மறைவாக, இனிவரும் வரலாற்றில் எழுதப் படலாம்.

Friday, May 06, 2016

புலிகளால் வன்னியில் "புனிதர்கள்" ஆக்கப் பட்ட "இனவாத" ஜேவிபி கட்சிமாறிகள்


தென் இலங்கையில் ஜேவிபி இன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (1989) நடந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு, வட இலங்கையில் புலிகளின் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் (2009) நடந்துள்ளன. சிறிலங்கா அரசு, ஜேவிபியையும், புலிகளையும், ஒரே மாதிரியான எதிரிகளாக கருதி அழித்தொழித்தது. ஒன்று வர்க்க எதிரிகள், மற்றது இன எதிரிகள். அது மட்டுமே வித்தியாசம்.

"அடக்குபவனையும்,அடக்கப்படுபவனையும் ஒரே தட்டில் போட முடியுமா?" என்று புலிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், அடக்கப்பட்ட ஜேவிபி யை ஒரே தட்டில் போடும் முரண்நகையை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. (பார்க்க: சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்) அது மட்டுமல்லாது, ஜேவிபி தலைமையை விமர்சித்து அதிருப்தியுற்று வெளியேறிய பிரிவினரை பற்றியும், "இனவாதம் பேசியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று விஷமத்தனமாக விதண்டாவாதம் செய்கின்றனர்.

இன்றைய ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) ஆனது, 1989 தென்னிலங்கையில் நடந்த "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப்" பின்னர், முற்றிலும் புதிதாக மறுசீரமைக்கப் பட்ட புதிய கட்சி ஆகும். அதனை புலிகளில் இருந்து பிரிந்து சென்று இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கும் TMVP (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) உடன் ஒப்பிடலாம், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடலாம்.

பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் விழுந்து வலதுசாரிப் பாதையில் சென்ற புதிய ஜேவிபி, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பேசியதும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முண்டு கொடுத்ததும் தெரிந்ததே. வலதுசாரிப் பாதையில் சீரழிந்த கட்சி வேறெதைச் செய்யும்?

வலதுசாரி பாராளுமன்ற கட்சியான ஜேவிபி, புலிகளுக்கு இனவாத முத்திரை குத்தி புலிகளை அழிக்கும் மகிந்தவின் போருக்கு ஆதரவு தெரிவித்து வந்தமை உண்மை தான். தேர்தல் காலத்தில் சில தலைவர்களின் இனவாத மேடைப் பேச்சுகளுக்கு அப்பால், ஜேவிபி ஒரு தமிழருக்கும் தீங்கு இழைக்கவில்லை. அன்றும், இன்றும் ஜேவிபியில் நிறைய தமிழர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 

தனிப்பட்ட வாழ்க்கையில் இனவாதிகளாக இருப்பவர்கள், ஒரு இடதுசாரி கட்சியில் உறுப்பினராவது நடக்க முடியாத நிகழ்வல்ல. ஜெர்மனியில் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெளிநாட்டு குடியேறிகளுக்கு ஆதரவானதாக கருதப் பட்டது. ஆனால், அந்தக் கட்சியில் கூட இனவாதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதனை ஜெர்மனியில் எடுத்த ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

ஜேவிபி யை இயங்கியல் ரீதியாக பார்க்காமல், அல்லது பகுப்பாய்வு செய்யாமல், சில தமிழ் இன அரசியல் ஆர்வலர்கள் அதற்கு ஒரேயடியாக இனவாத முத்திரை குத்தும் வேலையை செய்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்டது. 

சிறிலங்கா அரசிடம் இருக்கும் அதே வர்க்க வெறுப்புணர்வு தான், ஜேவிபியை எதிர்க்கும் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மனதிலும் உள்ளது. புதிய ஜேவிபி கட்சியை வலதுசாரிப் பாதையில் செல்ல வைத்து இனவாதம் பேச வைத்தது சிறிலங்கா அரசுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி. 

மக்களை இன அடிப்படையில் பிரித்தாள்வது தான் ஒரு பேரினவாத அரசின் நோக்கமாக உள்ளது. சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அதனால் தான், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சியையும் இனவாதிகளாக காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள். சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் தான் அந்தப் பிரச்சாரமும் நடக்கிறது.


//இனவாதம் பேசிய ஜேவிபி, கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?// என்று சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான தமிழர் ஒருவர் கேட்கிறார்.

இலங்கையில் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் ஆயுதப் போராட்டங்கள் நடந்த காலத்தில் ஜேவிபிக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்று அரசு அஞ்சியிருந்தது. அதனால் இரண்டு இயக்கங்களையும் முடிந்த அளவிற்கு பிரித்து வைப்பதற்கு முயற்சித்தது.

இந்திய இராணுவம் இருந்த காலத்தில், எந்தக் காரணமும் இல்லாமல், பிரேமதாச புலிகளுக்கு உதவவில்லை! சோழியன் குடுமி சும்மா ஆடாது. சந்தர்ப்பம் பார்த்து புலிகளை நண்பர்களாக்கிக் கொண்டதால், ஜேவிபியை இலகுவாக அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அரசால் இரண்டு பகைவர்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடிந்திருக்காது.

இறுதிக் காலங்களில் புலிகள் தமது தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார்கள். ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இளைஞர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு, வன்னியில் ஆயுதப்பயிற்சி கொடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

ஆனால் அது மிகவும் காலதமாதமாக வந்த பட்டறிவாக இருந்தது. அப்போது காலம் மாறிவிட்டிருந்தது. தென்னிலங்கையில் புலிகளுக்கு ஆதரவாக பேசினாலே தேசத்துரோகி முத்திரை குத்தப் பட்ட காலத்தில், அந்த சிறிய குழுவால் எதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அதற்குள் அரசு விழித்துக் கொண்டு, அவர்களை இனங்கண்டு அடக்கி விட்டது. "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தி, அவர்களது உறவினர்கள், நண்பர்களைக் கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது. இந்தத் தகவல்கள் எல்லாம் அந்தக் காலங்களில் தென்னிலங்கை ஊடகங்களில் வந்திருந்தன.

புலிகளால் "புனிதர்கள் ஆக்கப் பட்ட, இனவாதம் பேசிய ஜேவிபி காரர்கள்" பலர், யுத்தம் முடிந்த பின்னரும் சிறையில் வாடினார்கள். ஊர் மக்களால் ஒதுக்கப் பட்ட அவர்களது உறவினர்கள் வறுமையில் வாடினார்கள். முக்கியமான ஒரு சிலரை, புலிகளே தமது செலவில் வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். போர்க்குற்றங்களை ஆவணப் படுத்தியதில், அவர்களது பங்களிப்பும் கணிசமான அளவு இருந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த "இலங்கையின் கொலைக் களங்கள்" ஆவணப் படத்திலும் அவர்கள் வழங்கிய போர்க்குற்ற ஆவணங்கள் காட்டப் பட்டன. அந்த ஆவணப் படத்தில் பேட்டி வழங்கும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், சிங்களப் புலியாக குற்றம் சாட்டப் பட்டதால் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றி அகதியாக வாழ்ந்து வருகிறார்.

நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்தில் அந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2007 -2008 காலப் பகுதியில் தென்னிலங்கை முழுவதும் 25 சிங்கள அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். மூன்று பத்திரிகையாளர்கள் புலனாய்வுத் துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர். அவர்கள் தம்மால் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை பின்னர் அறிவித்திருந்தது.

கைது செய்து தடுத்து வைக்கப் பட்டவர்கள், "சிங்களப் புலிகள்" என்று முத்திரை குத்தப் பட்டனர். அவர்கள் "புரட்சிகர விடுதலை முன்னணி" என்ற இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், கிளிநொச்சி, முல்லைத்தீவில், புலிகளால் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கபில் அம்மான் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தென்னிலங்கையில் நடந்த தாக்குதலில் அவர்களது பங்கிருந்ததாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கொல தெரிவித்திருந்தார்.

ஜேவிபி யில் இருந்து முன்னிலை சோஷலிசக் கட்சியினர் பிரிந்தது மட்டுமே பலருக்குத் தெரிந்த விடயம். ஆனால், அவ்வப்போது சிறிய குழுக்களும் பிரிந்து சென்றுள்ளன. ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழு, "ஹிரு" என்ற பெயரில் சஞ்சிகை வெளியிட்டு வந்தது. அது புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது. புலனாய்வுத் துறையால் கடத்தப் பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் ஹிரு குழுவை சேர்ந்தவர்கள்.

ஜேவிபி இல் இருந்து பிரிந்த இன்னொரு குழுவினர் தான் "புரட்சிகர விடுதலை முன்னணி" (மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி இன் பெயரை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) என்ற பெயரில் இயங்கி உள்ளனர். அவர்கள் தென்னிலங்கையில் ஒரு ஆயுதப் புரட்சிக்கு தயார் படுத்தி வந்ததாகவும், அதற்கு புலிகள் உதவியதாகவும் அரசு குற்றஞ் சாட்டுகின்றது.

"புரட்சிகர விடுதலை முன்னணி" உறுப்பினர்கள் எல்லோரும் ஆயுதமேந்திய போராளிகள் என்று அரசு குற்றஞ் சாட்டுவதில் உண்மையில்லை. ஏனெனில், தொழிற்சங்க ஆர்வலர்களும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். குறிப்பாக ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். தொழிற்சங்க பத்திரிகையான அக்குன ஆசிரியரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் "சிங்களப் புலிகள்" முத்திரை குத்தல், வழமையான பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உட்பட்டது. சிறுபான்மை இனமான தமிழர்களையும், சிங்கள அடித்தட்டு மக்களையும் ஒன்று சேர விடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டது. அப்போது கைது செய்யப் பட்டவர்கள், பெரும்பாலும் ஊடகவியலாளர்கள் அல்லது தொழிற்சங்கவாதிகள். 

ஜேவிபி இல் இருந்து பிரிந்து சென்ற, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர்களும், இடதுசாரி தொழிற்சங்கவாதிகளும், புலிகளுடன் ஒன்று சேர்ந்து இயங்குவது, அரசின் கெட்ட கனவாக இருக்கும். தமிழ் இன உணர்வாளர்கள் என்று காட்டிக் கொள்ளும் சிலர், "ஜேவிபி மட்டுமல்லாது, அதிலிருந்து பிரிந்த சிங்களவர்கள் கூட இனவாதிகள்" என்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்வதும், சிறிலங்கா பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, November 15, 2014

ரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பாடம்


இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், 1989 நவம்பர் 13, ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, அரச படையினரால் கொல்லப் பட்டார். சிறிலங்கா அரசு, தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத அரசு என்பது மட்டுமே, உலகம் முழுவதும் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அது ஒடுக்கப்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிரான தரகு முதலாளிய அரசு என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

சிறிலங்கா அரசுக்கு சவாலாக விளங்கிய, ஜேவிபி கிளர்ச்சியை அடக்கிய விதமும், அதன் தலைவர் ரோகன விஜேவீரவின் படுகொலையும், இனவாதத்தால் நடக்கவில்லை. அதற்கு, வர்க்க வெறுப்பு காரணமாக இருந்தது.

சிங்கள உயர் சாதி - மேட்டுக்குடி வர்க்கத்தினர், சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கத் துவேஷத்தை வெளிப்படுத்திய காலங்கள் அவை. அந்தக் காலங்கள் மீண்டும் வராது என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை.

UNP, SLFP ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள், இலங்கை வரலாறு முழுவதும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. அதன் தலைமை எப்போதும், கொவிகம உயர்சாதி மேட்டுக்குடியினர் கைகளில் தான் இருந்து வந்தது.

ரோகன விஜேவீர, தென்னிலங்கையில் பிற்படுத்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அன்று முதல் இன்று வரை, சிங்கள பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினரே ஜேவிபி உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

1982 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில், ரோகன விஜேவீரவும் போட்டியிட்டார். வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனால் கணிசமான அளவு தமிழ் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். அனேகமாக, அது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தை தொடர்ந்து ஈழப் போர் வெடித்தது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜேவிபி யை தடை செய்தார். அதனால் தலைமறைவாக இயங்கிய ஜேவிபி, ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

"தமிழர்கள் போரை விரும்பினால், நான் போருக்கு தயாராக இருக்கிறேன்." என்று ஜே.ஆர். பகிரங்கமாக சவால் விட்டார். ஆனால், அதனை சிங்கள மக்களுக்கு எதிராகக் கூறவில்லை. "வடக்கில் புலிகளும், தெற்கில் ஜேவிபியும் ஒன்று சேர்ந்து மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக..." பிரிட்டிஷ் ஊடகமொன்றுக்கு ஜே.ஆர். பேட்டி கொடுத்திருந்தார்.

அதாவது, தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், சிங்களவர்களின் வர்க்கப் போராட்டமும் ஒரே அளவுகோலின் கீழ் ஒடுக்கப் பட வேண்டியவை என்பதை அன்று குறிப்பால் உணர்த்தி இருந்தார். 2009 ஆம் ஆண்டு, புலிகளும், அவர்களுக்கு ஆதரவான தமிழர்களும் எவ்வாறு அழிக்கப் பட்டனர் என்பதை இங்கே விளக்கிக் கூறத் தேவையில்லை. ஆனால், அதற்கு முன்னோடியான சம்பவங்கள், எண்பதுகளின் இறுதிப் பகுதியிலேயே நடந்திருந்தன.

இலங்கையின் வரலாற்றில், ஜேவிபியின் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளது என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. (ஒரு சிலர் தமது வர்க்க வெறுப்புணர்வு காரணமாக மூடி மறைப்பதுண்டு.) ஆயினும், 1971 ம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி ஆயுதப் போராட்டம், சில வருடங்களுக்கு பின்னர் வட பகுதியில் இயங்கிய ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. 

அன்று, ஜேவிபி இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கிய, குமார் குணரட்ணத்தின் ஒன்று விட்ட சகோதரர், PLOTE இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும் சில ஜேவிபி உறுப்பினர்கள், புளொட் இயக்கத்தில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். அவர்களின் உதவியால் தான், நிக்கவரட்டியா என்ற சிங்களப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் வெற்றிகரமாக தாக்கப் பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. 83 கலவரத்திற்கு முன்னர், ஈழ விடுதலைப் போராளிகள் சிங்களப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  

ஆரம்ப காலகட்ட புலிகள் இயக்கத்திலும் ஜேவிபி தொடர்பிருந்ததை மறுக்க முடியாது. புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த ராஜினியின் கணவர் திராணகம ஒரு முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஆவார். ஜேவிபி ஆதரவு சிங்களப் புத்திஜீவிகள் சிலரும் புலிகளை ஆதரித்தார்கள். ஆனால், அந்தக் காலகட்டம் வேறு. அப்போது புலிகளும் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொண்டது. 

ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப் பொது மக்கள், ஜேவிபியை வெறுக்கவில்லை. "எதற்காக ஈழ விடுதலை இயக்கங்கள், ஜேவிபியுடன் சேர்ந்து போராடவில்லை?" என்று பிரச்சாரக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். தமிழீழம் அடைவதற்கு அது சிறந்த தந்திரோபாயமாக இருக்கும் என்று நம்பினார்கள். பிற்காலத்தில் புலிகள் இயக்கத் தலைமைக்குள் வலதுசாரிகளின் கை ஓங்கியதும், ஜேவிபி உடனான கூட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் ஜனாதிபதியான பிரேமதாச, இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார்.  "ஒரு தலித் ஜனாதிபதியான" பிரேமதாசாவை கொண்டு, சிங்கள தலித் மக்களை அழிப்பதற்கு, சிங்கள ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம். பதவிக்கு வந்த பிரேமதாச, புலிகள் அமைப்பில் இருந்த வலதுசாரி சக்திகளுடன் தந்திரோபாய கூட்டணி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், இலகுவாக ஜேவிபி இனை அழிக்க முடிந்தது. ஜேவிபி அழிக்கப் பட்டு, இந்தியப் படைகளும் வெளியேற்றப் பட்ட பின்னர், பிரேமதாச அரசும், புலிகளும் மோதிக் கொண்டனர். 

எண்பதுகளின் இறுதியில், தென்னிலங்கையில் ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப் பட்டனர். இறுதியில் பிடிபட்ட ரோகன விஜெவீரவையும் விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்றனர். 2009 ஆம் ஆண்டு, அதே வரலாறு முள்ளிவாய்க்காலில் திரும்பி வந்தது. நாங்கள், வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று இன்னமும் பிடிவாதமாக இருக்கிறோம்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Saturday, June 07, 2014

ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?


இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், "வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்," என்று சிறிலங்கா அரசு கூறி வருகின்றது. 12 ஏப்ரல் 1971 அன்று, கொழும்பு நகரில் இருந்த வட கொரிய தூதரகம் இழுத்து மூடப் பட்டது. வட கொரிய தூதுவர் Hwang Yung Wu, மற்றும் 17 பணியாட்களும் உடனடியாக நாடுகடத்தப் பட்டனர். தூதரகத்தில் வேலை செய்த இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப் பட்டு, சில நாட்கள் தடுத்து வைக்கப் பட்டனர். 1970 ம் ஆண்டு தான், அன்று சிறிமாவோ ஆட்சியின் கீழிருந்த இலங்கை அரசு, வட கொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குள் அந்த உறவை முறிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யை உருவாக்கிய ரோகன விஜேவீரவின் கொள்கை, பெருமளவு (சிங்கள) தேசியவாதக் கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது. வட கொரியாவின் அன்றைய ஆட்சியாளர் கிம் இல் சுங் கூட, ஒரு மிகத் தீவிரமான (கொரிய) தேசியவாதி. அந்த வகையில், வட கொரிய அரசுக்கும், ஜேவிபி க்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்தன. கிளர்ச்சியின் முடிவில், அரச படைகளினால் கைப்பற்றப் பட்ட ஜேவிபி முகாம்களில், வட கொரிய கொள்கைப் பரப்பு நூல்கள் கண்டெடுக்கப் பட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அந்தக் காலத்தில், ஒரு கிளர்ச்சியை அடக்கும் அளவிற்கு, இலங்கை அரசிடம் ஆட்பலம், ஆயுத பலம் கிடையாது. இலங்கையில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி நடக்கிறது என்று கேள்விப் பட்டதும், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள், இலங்கைக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தன. எதிரெதிர் அணியில் இருந்த, அன்று பங்களாதேஷ் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இலங்கைக்கு உதவின. மீண்டும் ஒரு தடவை, 2009 ம் ஆண்டு, புலிகள் அழிக்கப் பட்ட ஈழப்போரின் இறுதி யுத்தத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து, இலங்கை அரசுக்கு உதவின. யாருமே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை என்பது, இதிலிருந்து தெரிய வருகின்றது.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருந்தது. இலங்கையை சுற்றிய கடற் பகுதியில், இந்திய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றின. அப்போது, ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த வட கொரிய ட்ரோலர் படகுகள், இந்திய கடற்படையினரிடம் அகப்பட்டன. இதனால், ஜேவிபிக்கு வட கொரியா அனுப்பிய  ஆயுத விநியோகம் வந்து சேரவில்லை. பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றிய, ஆயுதங்களை வைத்துக் கொண்டு மட்டுமே, ஜேவிபி அரச படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது.

ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழிப்பதற்கு, இந்தியப் படைகளும் களத்தில் நின்று உதவி செய்தன. அந்த அழித்தொழிப்பில், குறைந்தது பத்தாயிரம் இளைஞர்கள் கொல்லப் பட்டனர். (25000 என்று ஜேவிபி கூறுகின்றது.) சுமார் இருபதாயிரம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். உண்மையில், அன்றிருந்த ஆயுதமேந்திய ஜேவிபி உறுப்பினர்கள், மொத்தம் இரண்டாயிரம் தான் இருக்கும்.

71 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு, போதியளவு மக்கள் ஆதரவு இல்லாதிருந்தமை காரணம் என்று நம்பப் படுகின்றது. இலங்கையின் இரண்டு பெரிய ஆளும் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தமக்குத் தெரிந்த ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை காட்டிக் கொடுத்தனர். தேர்தல் காலத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மிகத் தீவிரமாக ஒன்றையொன்று எதிர்த்து தாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இலங்கையில் ஒரு இடதுசாரி கிளர்ச்சி நடக்கிறது என்றதும், இரண்டு எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிகளின் வர்க்க அபிமானம்.

அன்று, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய, தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரித்தன. "அன்றைய சிறிமாவோ அரசில் அமைச்சராக இருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற இடதுசாரி அமைச்சர்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதாக" இன்றைக்கும் பல தமிழ்த் தேசியவாதிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், 71 ம் ஆண்டு, ஒரு டிராஸ்கிஸ்ட் கட்சி உறுப்பினரான, இதே கொல்வின் ஆர்.டி. சில்வா, அரச படைகள் ஜேவிபி கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்கியதை ஆதரித்து பேசினார். 

அப்போது, தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகளுடன் கூட்டிச் சேர்ந்து கொண்டு, அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த சிங்கள மக்களின் முதுகில் குத்தினார்கள். இலங்கை வரலாறு முழுவதும், இப்படித் தான், எல்லா அரசியல் சக்திகளும், ஒருவர் முதுகில் மற்றவர், மாறி மாறி குத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், முதலாளிய வர்க்க நலன்களை பேணும் சிறிலங்கா அரசு இயந்திரம், தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. 

இலங்கையில் ஒரு சோஷலிசத்திற்கான வர்க்கப் புரட்சி நடக்குமானால், இன்று எதிரிகளாக காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பொதுவான வர்க்க குணாம்சம், அவர்களை ஓரணியில் சேர்த்து விடும். முதலில் இரண்டு சிங்கள பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தை ஆதரிக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து இராணுவ உதவி வழங்கும். இது கற்பனை அல்ல. ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட வரலாறு.

மேலதிக தகவல்களுக்கு: 

Saturday, April 16, 2011

சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 15)

இன்றைக்கும், ஒரு தலித் இந்தியாவின் பிரதமராக வருவதை நினைத்துப் பார்க்க முடியாது. இந்தியா மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் ஆளும் வர்க்கம் எப்போதும் உயர்சாதியினராகவே இருந்து வந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிக்க சாதியினருக்கு சலவைத் தொழில் செய்து வந்த சாதியை சேர்ந்த பிரேமதாச, ஆளும் கட்சியான யு.என்.பி.யில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். மேட்டுக்குடியை சேர்ந்த வெள்ளாள உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த கட்சிக்குள், பிரேமதாசவின் தெரிவு பலரை ஆச்சரியப்பட வைத்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கொழும்பு மாநகரின் சேரிகளில் வாழ்ந்த,உதிரிப் பாட்டாளி வர்க்க, தலித் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு. கொழும்பு நகரை கலக்கிக் மொண்டிருந்த தாதாக்கள், ரவுடிகள், பொறுக்கிகள் எல்லோரும் பிரேமதாசவின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். யுஎன்பி கட்சியினுள்ளேயே பிற அரசியல் பிரமுகர்கள் கூட, ரவுடிகளின் பின்புலத்தைக் கண்டு அஞ்சியிருந்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர், பிரேமதாசவின் தமிழர் விரோத இனவெறிப் பேச்சுகள் பெருமளவு சிங்கள மக்களை கவர்ந்துள்ளன. (ஜனாதிபதியான பிறகு முந்திய உரைகளுக்கு சம்பந்தமற்ற மனிதராக காட்டிக் கொண்டார்.)

இவற்றை விட, திரை மறைவில் செயற்பட்ட அதிகார வர்க்கம், பிரேமதாச என்ற இரும்பு மனிதர் ஆட்சிக்கு வருவதை விரும்பியிருக்கலாம். முன்னைய ஜனாதிபதி ஜெயவர்த்தனேயின் இறுதி முடிவு, பிரேமதாசவுக்கு முடி சூட்டுவதாக அமைந்திருந்தது. அவருக்கு அடுத்ததாக செல்வாக்குப் பெற்றிருந்த, ஒக்ஸ்போர்ட் பட்டதாரி லலித் அத்துலத்முதலி போன்றோர் ஓரம் கட்டப்பட்டனர். இதற்குள் பல இராஜதந்திர நகர்வுகள், காய் நகர்த்தல்கள், சூழ்ச்சிகள் எல்லாம் அடங்கியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த நேரம் இந்திய மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது. தீவிர இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாச தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுக்கும் அன்றே, இந்திய படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தார். இந்தியா ஜேவிபி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பிரேமதாசவின் தெரிவை கண்டு அஞ்சியது. ஏனெனில் இலங்கை ஜனாதிபதி விரும்பாவிட்டால், இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜேவிபி உண்மையிலேயே இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பியதா? என்பது கேள்விக்குறி தான். ஜேவிபி இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததே தவிர, நடைமுறையில் அவர்களின் இலக்கு இலங்கை அரசாகவே இருந்தது. வடக்கு-கிழக்கில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதை, ஜேவிபி தனக்கு சாதகமான நிலவரமாக கருதியிருக்கலாம். ஜேவிபியின் தோற்றமான, 1971 கிளர்ச்சிக் காலகட்டத்தில் "இலங்கையை விழுங்கத் துடிக்கும் இந்திய ஏகாதிபத்தியம்" குறித்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களது தீர்க்கதரிசனத்தை மெய்ப்பித்திருந்தது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபிக்கு ஆதரவு அதிகரித்தது. அந்த ஆதரவுத் தளத்தை தக்க வைப்பது முக்கியம் என்று ஜேவிபி கருதியிருக்கலாம். மேலும் இந்திய தூதுவராலயம் மீது குண்டு வீசியதாகவோ, ஒரு இந்திய படைவீரனை கொன்றதாகவோ, எந்தத் தகவலும் இல்லை. இந்திய பொருட்கள் மீதான பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கூட, இலங்கை வியாபாரிகள் தான் பாதிக்கப்பட்டனர். "பம்பாய் வெங்காயம்" இறக்குமதி செய்த காரணத்திற்காக எல்லாம் இலங்கை வியாபாரிகளே கொலை செய்யப்பட்டனர்.

இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பொருட்டு, ஜேவிபிக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்ற யோசனையை, ரவி ஜெயவர்த்தனே முன்வைத்திருந்தார். சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியவரும், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருமான ரவி ஜெயவர்த்தனே, அரசில் செல்வாக்கு மிக்க நபர். இருப்பினும் அந்த யோசனை கைவிடப் பட்டதற்கு, பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில் ஜேவிபி இலங்கை அரசு அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறது, என்று அரசாங்கத்தில் பலர் சரியாகவே கணித்திருந்தனர். ஜேவிபி அழித்தொழிக்கப் பட வேண்டிய சக்தி என்று அப்போதே தீர்மானித்திருக்கலாம். பிற்காலத்தில், இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பணியை புலிகளும், பிரேமதாசவும் சேர்ந்து செய்தனர். பிரேமதாச அரசு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய விபரங்களை, பின்னர் நடந்த விசாரணை ஒன்றில், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தெரிவித்திருந்தார். இராணுவ நீதிமன்ற விசாரணை நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுப் பகுதியொன்றில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேகடுவ கொல்லப்பட்டார்.

1988 ம் ஆண்டு, பிரேமதாச ஜனாதிபதியான போதிலும், வாக்களித்த படி இந்திய இராணுவத்தை வெளியேறச் சொல்லவில்லை. அதற்கு முன்னர், உள்நாட்டில் கணக்குத் தீர்க்க வேண்டிய விஷயங்கள் இருந்தன. வடக்கு-கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வாபஸ் வாங்கப்பட்டதால், தென்னிலங்கை முழுவதும் இராணுவமயப் படுத்தப் பட்டது. அந்தக் காலத்தில், கொழும்பு நகரில் நடமாடும் ஒருவர், இராணுவ ஆட்சி நடப்பதாக உணர்ந்திருப்பார். எங்கு திரும்பினும், சீருடை அணிந்து துப்பாக்கி தரித்த இராணுவ வீரர்கள் காணப்பட்டனர். அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப் பட்டனர்.

பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று, ஜேவிபி அறிவித்தது. அதனால் அரச பேரூந்து வண்டிகள் எதுவும் ஓடவில்லை. மக்கள் தனியார் "மினிபஸ்"களில் கால்நடைகள் போல அடைபட்டுச் சென்றனர். சாரதிகள் யாரும் வேலைக்கு வராததால், இராணுவ வீரர்களே பேரூந்து வண்டிகளை ஓட்டிச் சென்றனர். அவற்றில் ஏறுபவர்கள் டிக்கட் எடுக்காமல், இலவச பயணம் செய்யலாம். அரச பேரூந்து வண்டிகளில் இலவச சவாரி செய்ய பொது மக்கள் முன்வரவில்லை! அன்றைய நாட்களில், வண்டியில் அதிக பட்சம் இருபது பயணிகள் இருப்பதே அபூர்வம். இராணுவத்தினர் இயக்கும் பேரூந்து வண்டிகளில், குண்டு வைத்து விடுவார்கள் என்று எல்லோரும் பயந்தார்கள்.

சிவில் சமூகத்தில் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்ததால், ஜனாதிபதியை விமர்சிக்க எல்லோரும் அஞ்சினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று, ஜேவிபி ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அலையை தோற்றுவிக்க முனைந்தது. வதந்திகளைப் பரப்பும் உளவியல் யுத்தம் முன்னெடுக்கப் பட்டது. (சிறிலங்கா அரசு உளவியல் யுத்தத்தின் துணையுடன் ஜேவிபியை அடக்கியது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) ஜேவிபி பரப்பிய வதந்திகளில் சில இரசிக்கத் தக்கன. ஜனாதிபதியையே ஆட்டிப் படைக்கும், பிரேமதாசவின் மனைவி ஹேமா பற்றி "அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்" பல உலாவின. பிரேமதாசவின் புதல்வன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார். அவரை தற்போதைக்கு இலங்கை வர வேண்டாம் என்று பிரேமதாச கூறினாராம். அதற்கான காரணம்: "நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் எய்ட்ஸ் நோயை காவிக் கொண்டு வந்து விடுவாய். அது பின்னர் வேலைக்காரிக்கு தொற்றி, எனக்கு தொற்றி, என்னிடமிருந்து அம்மாவுக்கு தொற்றி விடும். அப்புறம், நாடு முழுவதும் எய்ட்ஸ் பரவி விடும்."

ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான எம்ஜிஆரின் பாசிச-வெகுஜன அரசியல், இலங்கையில் பிரேமதாச காலத்தில் தான் அரங்கேறியது. அடித்தட்டு மக்களின் பிரதிநிதியான பிரேமதாச தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்ள விரும்பினார். ஒரு பக்கம், பெரிய முதலாளிகளை நண்பர்களாக கொண்டிருந்தாலும்; மறுபக்கம், வணிகத் துறையின் இலாபத்தில் ஒரு பகுதி ஏழை மக்களையும் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதற்காக "ஜனசவிய திட்டம்" மூலம், பின்தங்கிய பிரதேசங்களில் ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி திட்டங்களும் வந்தன. அரசின் மீது அதிருப்தியுற்ற, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை இளைஞர்களே ஜேவிபியில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். உலகவங்கி போன்ற கடன் வழங்கும் நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில், "இளைஞர்களின் விரக்தியைத் தணிக்கும்" திட்டங்களை அரசு செயற்படுத்தி வந்தது.

பிரேமதாசா தற்பெருமை அடித்துக் கொள்ளவும், பாசிசத்தை நிறுவனமயப் படுத்தவும் இந்த திட்டங்கள் பயன்பட்டன. அவரது மனைவியின் பிறந்தநாளுக்கும், தனது பிறந்தநாளுக்கும் இடையிலான ஒரு வார காலத்தை இதற்காக தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வருடமும், எங்காவது ஒரு மாவட்டத்தில் "ஏழைகளுக்கு வீடு வழங்கும் விழா" விமரிசையாக நடத்தப்படும். ஜேவிபியின் ஆதரவுத் தளமான வறிய மக்களின் மனங்களை வெல்வதும் அந்தத் திட்டங்களின் நோக்கம். 1990 ல், நான் வேலை செய்த நிறுவனம் மாத்தறையில் நடந்த ஜனசவிய கண்காட்சியில் பங்குபற்றியிருந்தது. கொழும்பை மையப்படுத்திய தனியார் நிறுவனங்களை, பின்தங்கிய பிரதேசங்களில் முதலீடு செய்யத் தூண்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. ஜேவிபியின் கோட்டையாக கருதப்பட்ட மாத்தறையில், அப்போது தான் போர் ஓய்ந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னர், இது போன்ற நிகழ்வுகள், அங்கே நினைத்துப் பார்க்க முடியாதவை.

ஜெயவர்த்தன காலத்தில் நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பிரேமதாச காலத்தில் தான் அவை பெரும் முனைப்புடன் நடைமுறைப் படுத்தப் பட்டன. பல பெரிய முதலாளிகள், பிரேமதாச காலத்தில் கோடீஸ்வரர்களானார்கள். அவர்களில் சில தமிழ் முதலாளிகளும், நிபுணர்களும் அடங்குவர். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஊடகமான "சக்தி TV", இன்றைக்கும் யுஎன்பி ஆதரவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி உரிமையாளரான மஹாராஜா நிறுவனத்தை ஸ்தாபித்த தமிழரான ராஜேந்திரம், பிரேமதாசாவுக்கு மிக நெருக்கமானவர். அன்று நவ-தாராளவாத திட்டங்களை அமுல் படுத்திய பொருளாதார நிபுணர் பாஸ்கரலிங்கம், பிரேமதாசவின் அந்தரங்க ஆலோசகர். பிரேமதாச ஒரு பக்கம் ஜேவிபியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்தார். மறு பக்கம் மக்கள் மீது முதலாளித்துவ வன்முறையை ஏவி விட்டுக் கொண்டிருந்தார். ஆயினும், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை, இலங்கையின் ஆட்சியாளர்கள் வைத்திருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். இந்த நிலைப்பாடு பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முரண்பாட்டை தோற்றுவித்திருக்கலாம் என கருதப் படுகின்றது.

எனக்குத் தெரிந்த வரையில், கொழும்பில் வாழ்ந்த ஏராளமான தமிழர்கள் பிரேமதாச காலத்தில் ஆதாயம் அடைந்தனர். கொழும்பு வாழ் தமிழர்கள் இன்றைக்கும் அந்த "பொற்காலத்தை" நினைவுகூருகின்றனர். எந்தத் தேர்தல் வந்தாலும், பெரும்பான்மை கொழும்புத் தமிழர்கள், கண்ணை மூடிக் கொண்டு யுஎன்பிக்கு வாக்களிப்பார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளையும் பிரேமதாச அரவணைத்துச் சென்றார். அன்று தென்னிலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரேமதாச அதிக நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், ஜேவிபி பகைவர்களை கூட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள மக்களுக்கு யுஎன்பி யை, கொடூரமான எதிரியாக காட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் அர்த்தம், மற்றைய எதிர்க்கட்சிகள் ஜேவிபியின் நட்பு சக்திகள் என்பதல்ல. வலதுசாரி யுஎன்பிக்கு மாற்றாக அமையக் கூடிய கட்சிகளை இல்லாதொழிப்பதே ஜேவிபியின் நோக்கமாக இருந்தது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆளும் யுஎன்பி யும், அதனை எதிர்க்கும் ஜேவிபியும் மட்டுமே அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். சிறிலங்கா அரசுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தில், ஜேவிபி மட்டுமே ஏக பிரதிநிதிகளாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Thursday, April 14, 2011

இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 14)

"1971 கிளர்ச்சியை நடத்தியவர்கள் ஒரு பெரு முதலாளியைக் கூட கொல்லவில்லை..." - மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகதாசன். 1987 ல் தொடங்கிய இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது, பல பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் கொல்லப் பட்டனர். (ஜேவிபியின் மொழியில், வர்க்க எதிரியை ஒழித்துக் கட்டுதல்.) அன்று வந்த தினசரிகளில் முதல் பக்கத்தில் எப்போதும் ஏதாவது அரசியல் படுகொலை பற்றிய செய்தி வந்து கொண்டேயிருக்கும். பெரு முதலாளிகளின் கொலைகள் நிச்சயமாக முழு இலங்கையையும் உலுக்கியது. "சிறிலங்காவின் பெரிய வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகள் யாரும் நாட்டில் இல்லை. எல்லோரும் வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டார்கள் போலும்..." என்று நாங்கள் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசிக் கொள்வோம். உண்மையிலேயே எமக்குத் தெரிந்த "லலிதா ஜுவலறி" போன்ற பெரிய நகைக் கடைகளின் முதலாளிகள் இந்தியா சென்று தங்கி விட்டனர். அங்கிருந்த படியே வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது கிளர்ச்சிக்கு, ஜேவிபி இயக்கம், தன்னை முழுமையாக தயார் படுத்தி இருந்தது. ஆயுதங்கள் சேகரிப்பது தொடக்கம், இலக்குகளை தீர்மானிப்பது வரை ஏற்கனவே ஒழுங்கு படுத்தியிருந்தனர். 1971 கிளர்ச்சி சிறுபிள்ளைத் தனமானது என்று எழுந்தமானமாக முடிவு செய்து விட முடியாது. அன்றைய நிலையில், அரசுடன் மோதுவதற்கு போதுமான தயாரிப்பு வேலைகள் முடிய முன்னரே போர் தொடங்கி விட்டது. முன்னாள் ஜேவிபி மத்திய குழு உறுப்பினரும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான லயனல் போபகே கூறுகிறார்: "இலங்கை அரசு, பிரேதப் பரிசோதனை இன்றி உடல்களை தகனம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது. எம்மை அழித்தொழிப்பதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப் பட்டது. கிராமங்களில் ஜேவிபி உறுப்பினர்களை போலிஸ் வேட்டையாடியது. எதிரி எம்மைத் தாக்குவதற்கு முன்னர், நாம் எதிரியைத் தாக்க வேண்டும், என்ற சேகுவேராவின் கொள்கையின் படி விரைந்து செயற்பட வேண்டியிருந்தது." அன்று கியூபா புரட்சியின் புகழ் இலங்கையிலும் பரவியிருந்தது. ஜேவிபி இயக்கமானது சேகுவேராவின் ஆயுதப்புரட்சிக் கோட்பாடுகளை பின்பற்றி வந்தது. அன்று மக்கள் அவர்களை "சேகுவேராக் காரர்கள்" என்று அழைத்ததும் காரணத்தோடு தான். ஜேவிபி கிளர்ச்சியினால் சேகுவேராவின் பெயர் கிராமங்களிலும் பரவியிருந்தது. ரோகன விஜேவீர தான் சேகுவேரா என்று பாமர மக்கள் நம்பிய காலம் ஒன்று இருந்தது.

ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, (சீன சார்பு) கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர். இரகசிய வேலைத்திட்டங்கள் காரணமாக, சதியில் ஈடுபட்ட சந்தேகத்தில் வெளியேற்றப் பட்டார். கட்சித் தலைவர் சண்முகதாசன் ஒரு தமிழர் என்பதால், ஆழ்மனதில் குடிகொண்டிருந்த இனவாதம் காரணமாக ரோகன தானே வெளியேறியதாகவும் இன்னொரு காரணம் கூறப் படுகின்றது. ரோகன ஒரு கேஜிபி ஏஜென்ட் என்ற சந்தேகமும் கட்சிக்குள் நிலவியது. மொஸ்கோ லுமும்பா பலகலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற ரோகன, படிப்பை விட அரசியலில் அதிக ஈடுபாடு காட்டினார். லுமும்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் பலரை, கேஜிபி பயன்படுத்தி வந்தமை இரகசியமல்ல. ஆயினும், ரோகன பற்றிய குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை. ரோகனவும், ஜேவிபியும் மாவோயிஸ்ட்கள் என்று சோவியத் யூனியன் குற்றம் சாட்டி வந்தது. அதே நேரம், வட கொரியாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது. எது எப்படி இருந்த போதிலும், சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய வல்லரசுகள், 1971கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவி செய்துள்ளன.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாவோவின் வழியை ஏற்றுக் கொண்டவர்கள் பிரிந்து சென்றனர். இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக, ஒரு தமிழரான சண்முகதாசன் தலைமையில் ஒரு அகில இலங்கைக் கட்சி உருவானது.
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், யாழ் குடாநாட்டில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அடுத்ததாக வடக்கில் ஒரு வர்க்கப் புரட்சிக்கு அடித்தளமிட்ட தருணத்தில் விழித்துக் கொண்ட ஆதிக்க சாதியினர், தமிழ்த் தேசியம் பேசத் தொடங்கினார்கள்.
ஜேவிபி யின் தோற்றுப் போன
ஆயுதப்புரட்சி, பிற இடதுசாரி கட்சிகளையும் கடுமையாக பாதித்தது. ஜேவிபி சந்தேகத்தின் பேரில், கம்யூனிஸ்ட்டாக அடையாளம் காணப்பட்ட அனைவரையும் அரசு கைது செய்து துன்புறுத்தியது. சிங்கள பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த யாழ் தமிழ் முதலாளிகள், தமக்கு எதிரான தொழிற்சங்கவாதிகளை காட்டிக் கொடுத்தனர். இதனால், யாழ்ப்பாணத்தில் பல தமிழ் கம்யூனிஸ்ட்கள், ஜேவிபி என்று குற்றம் சாட்டப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இன்றைக்கும் தமிழ் முதலாளித்துவ சக்திகள், தமிழ் மக்களுக்கு ஜேவிபி எனும் இனவாதப் பூதத்தைக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதை கண்கூடாக காணலாம். தமிழகத்தை சேர்ந்த இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரும், ஈழத் தமிழர்களின் வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் முதலாளித்துவ சதிக்கு துணை போகின்றனர்.

சண்முகதாசன் 1971 கிளர்ச்சி பற்றிய குறிப்புகளில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பிரிட்டிஷ்காரர்கள் கற்பித்த பாராளுமன்ற ஜனநாயகத்துடன் மக்கள் பிணைக்கப் பட்டுள்ளனர். கொந்தளிப்பான உலகில், இலங்கை வன்முறையற்ற அமைதிப் பூங்கா என்ற மாயையை உருவாக்கியுள்ளனர். அந்த நம்பிக்கைகள் தற்போது நொறுங்கிப் போயுள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு பிற்போக்குவாத தலைமையின் தவறான வழிநடத்தலின் கீழ் தமது உயிரைத் துச்சமாக மதித்து போராடினார்கள். எமது மக்கள் புரட்சிக்கு தயாரானவர்கள் அல்ல என்ற கருத்து தவறென நிரூபிக்கப் பட்டுள்ளது...." (Chapter 6: An Analysis of the April 1971 Events in Ceylon [pp.82-96])
பிற்காலத்தில் வெகுஜன அரசியலில் ஈடுபட்டு இனவாதம் பேசும் இன்றைய ஜேவிபி தலைவர்கள், வர்க்கப் போராட்டத்தின் எதிரிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வலதுசாரி தமிழ் ஊடகங்கள், ஜேவிபியின் இனவாதப் பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. 71 கிளர்ச்சியை "சிங்கள பேரினவாதிகளின் வன்முறைப் போராட்டம்" என்று, தமிழ் இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில் இலங்கையின் சிங்கள, தமிழ் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேருவதைத் தடுப்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது. ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சி, மக்களை புரட்சிக்கு வழிநடாத்திச் செல்லத் தவறியதன் விளைவை இலங்கை இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தெற்கில் ஜேவிபியும், வடக்கில் ஈழ தேசிய இயக்கங்களும் வர்க்கப் புரட்சிக்கு எதிர்த் திசையில் மக்களை வழிநடாத்திச் சென்றனர்.

1971 ல், முதலாவது கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட ஜேவிபி தலைவர்கள், யாழ் கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டனர். அப்போது அவர்கள் சார்பில் பல மனித உரிமை மீறல் வழக்குகள் போடப்பட்டன. பிரபல தமிழ் வழக்கறிஞர் குமார் பொன்னம்பலம் கூட ஜேவிபி தலைவர்களை விடுவிக்க வழக்காடினார். அப்போது ரோகன, "வக்கீல் பீஸ் எவ்வளவு?" என்று வினவிய பொழுது, "நான் கேட்கும் தொகையை உங்களால் கட்ட முடியாது," என்று குமார் பதிலளித்தார். அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கென்பதால், அதை சவாலாக எடுத்து இலவசமாக வாதாட முன் வந்தார். (குமாருடன் கூடச் சென்ற நண்பர் ஒருவர் வழங்கிய தகவல்.) இதே நேரம், தென்னிலங்கையில் இருந்து ஜேவிபி தாக்குதல் குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றது. யாழ் கோட்டை சிறையுடைத்து தலைவர்களை மீட்பது அவர்கள் திட்டம். தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே, திட்டம் அம்பலமாகி, பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். சிங்கள தெற்கிற்கும், தமிழ் வடக்கிற்கும் இடையிலான மொழி என்ற தடைச் சுவரை, சிறிலங்கா அரசு சாதுர்யாமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை, வடக்கே தமிழர்கள் வாழும்
யாழ்ப்பாணத்தில் சிறை வைத்தது. அதே போன்று, வடக்கே ஈழ விடுதலை போராட்டத்தில் கைது செய்த தமிழ் இளைஞர்களை, தெற்கே சிங்களவர்கள் வாழும் காலியில் சிறை வைத்தது.

ஜேவிபிக்கு வடக்கில் உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ இருக்கவில்லை. தாக்குதல் அணியில் வந்த சிங்கள இளைஞர்களுக்கு, தமிழ் பேசத் தெரிந்திருக்கவில்லை. இது போன்ற குறைகளே தாக்குதல் திட்டம் தோல்வியுற்றதற்கு காரணம், என்று கூறப் படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்று ஜேவிபி உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பில் வசித்தவர்கள், இவர்கள் மத்தியில் ஆதரவு இருந்துள்ளது. சுன்னாகம் ஜேவிபி கோட்டையாக திகழ்ந்ததாக அந்தப் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். அன்று சுன்னாகத்தில் கணிசமான உழைக்கும் வர்க்க சிங்களவர்கள் வாழ்ந்ததும், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சுன்னாகத்தின் இடதுசாரிப் பாரம்பரியம் காரணமாக, பலர் பிற்காலத்தில் தோன்றிய மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பில்" சேர்ந்திருந்தனர். 71 கிளர்ச்சியின் போது, சுன்னாகம் அனல் மின் நிலையத்தை தாக்குவதற்கு ஒரு ஜேவிபி அணி வந்து மறைந்திருந்தது. அந்தத் திட்டமும் தோல்வியுற்றதால், தப்பியோடிய ஜேவிபி உறுப்பினர்கள் ஆனையிறவு தடைமுகாமில் பிடிபட்டனர். அன்று பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் நாதன், பிடிபட்ட இளைஞர்களை விசாரணை இன்றி கொலை செய்தமைக்காக, அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

தெற்கில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப் படுவதற்கு சாதி வேற்றுமை காரணமாக இருந்தது. வடக்கிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. வட இலங்கையில், ஜேவிபியின் கொள்கைகளால் கவரப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகன விஜேவீர, யாழ் குடாநாட்டில் பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். முன்னர் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களில், ரோகன விஜேவீரவுக்கு வரவேற்பிருந்தது. அன்று நடந்த தேர்தலில் யாழ் குடாநாட்டில் ரோகனவிற்கு சில ஆயிரம் ஓட்டுகள் விழுந்தன. கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் ஜேவிபியில் இணைந்திருந்தனர். மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையாக உள்ள தோட்டத் தொழிலாளர்கள், தலித் மக்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள், ஆதிக்க சாதிகளை சேர்ந்த பிற்போக்காளர்கள். பிற்போக்குத் தலைமையால் விரக்தியுற்ற மலையக இளைஞர்கள், ஜேவிபியை புரட்சிகர சக்தியாக பார்த்ததில் வியப்பில்லை. அதே நேரம், யாழ் மையவாத சிந்தனை கொண்ட தமிழ் தேசியவாதிகளும், அவர்களை தமிழீழப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (சில இடதுசாரி இயக்கங்கள் விதிவிலக்கு)

ஜேவிபி மலையகத் தமிழர்களை "இந்தியர்களாக" கருதியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. முன்னாள் மத்திய குழு உறுப்பினரான லயனல் போபகே, கட்சி சார்பாக தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்திருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பல முற்போக்கான அம்சங்கள் காணப்பட்டன. இருப்பினும், ரோகன விஜேவீர அந்த அறிக்கையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகின்றது. மத்திய குழுவில், ரோகனவுடன் நடந்த விவாதத்தின் பொழுது, மற்ற உறுப்பினர்கள் தலையாட்டிப் பொம்மைகளாக இருந்ததாக போபகே நினைவு கூறுகிறார். அதாவது ரோகன விஜேவீர தனக்கு விசுவாசமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை நிர்வகித்து வந்தார். மேலும் இந்திய விஸ்தரிப்புவாதம், இந்திய வம்சாவளித் தமிழர்கள், இவை தொடர்பான தவறான கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு. தாம் சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த சமயம், சீன-இந்திய யுத்தம் நடந்து கொண்டிருந்ததாகவும், அதிலிருந்தே "இந்திய விஸ்தரிப்புவாதக் கொள்கை" எழுந்ததாக முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஈழ விடுதலை இயக்கங்களின் உள்ளே நடந்ததைப் போன்று, ஜேவிபி அமைப்பினுள்ளும், தலைமையுடன் முரண்படுவது துரோகமாகக் கருதப்பட்டது. தனிநபர்கள் கருத்து முரண்பாடு கொண்டு அமைப்பை விட்டு வெளியேறினால், இலகுவாக "மரண தண்டனை" நிறைவேற்றினார்கள். ஒரு குழுவாக பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாமல் இருந்தது. ஜேவிபி இரண்டாவது கிளர்ச்சியை தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னதாக, பாரிய பிளவு ஏற்பட்டது. முக்கிய மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர், ஜேவிபியை விட்டு பிரிந்து சென்றார்கள். என்பதுகளின் தொடக்கத்திலும், ஜேவிபி தலைமறைவாக இயங்கி வந்தது. அதனால் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள், ஒரு புறம் அரச படைகளுக்கு அஞ்ச வேண்டியிருந்தது. மறு புறம், தம்மைத் தேடி கொலைவெறியுடன் அலையும் முன்னாள் தோழர்களிடம் இருந்தும் பாதுகாப்பு தேட வேண்டியிருந்தது.

முன்னாள், இந்நாள் ஜேவிபி உறுப்பினர்கள் பல தடவைகள் மோதிக் கொண்டனர். சகோதர சண்டையில் இரண்டு பக்கமும் பலர் மரணமுற்றனர். அன்று ஜேவிபியை விட்டு வெளியேறியவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டார்கள். ஆனால், தென்னிலங்கையில் யுத்தம் நடந்த 1987 -1989 காலப் பகுதியில், இன்னும் சில குழுக்கள் ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்றன. அவர்கள், அரசுடன் சேர்ந்து துணைப்படையாக இயங்கினார்கள். இதனால், அரச படைகள், ஜேவிபி தவிர்த்து, வேறு பல ஆயுதக் குழுக்களும் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தினார்கள். முப்பதாண்டு கால ஈழப்போரில் தமிழ் மக்கள் எந்தெந்த கொடுமைகளை அனுபவித்தார்களோ, அவற்றை சிங்கள மக்கள் அந்த இரண்டாண்டுகளில் அனுபவித்தார்கள். கொலை செய்வது தேசிய விளையாட்டாகியது. கொலை செய்வதற்கென்றே, அரசினால் ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. நாடு முழுவதும் கொலையுதிர்காலம் ஆரம்பமாகியது.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Monday, March 28, 2011

இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 6)

ஈழத் தமிழ் தேசியம், அண்ணாதுரையின் திராவிட இயக்கத்தில் இருந்து சித்தாந்தத்தை கடன் வாங்கியது. மிதவாதத் தலைவர்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கையின் நீட்சியாகவே, தமிழீழத்தை கருதினார்கள். இருப்பினும் கட்சியின் இளைஞர் அணி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அவர்களைப் பொறுத்த வரையில், திராவிட இயக்கத்தினர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடாததை; ஒரு வரலாற்றுத் தவறாக கருதினார்கள்.

அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்று அவர்கள் நம்புவதற்கு, கண் முன்னே கண்ட நிகழ்வுகள் இருந்தன. 1971 ம் ஆண்டு, ஜேவிபி அறிவித்த சோஷலிச இலங்கையை நோக்கிய கிளர்ச்சி, இலங்கைத் தீவின் முதலாவது ஆயுதப் போராட்டமாகும். 1977 ல் இருந்து, ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் போலிசை இலக்கு வைக்கத் தொடங்கினர். ஜேவிபி கிளர்ச்சி நடந்து, ஐந்து வருடங்கள் கழித்து வடக்கில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத் தக்கது. ஆகவே ஆரம்ப கால தமிழ் தேசியப் போராளிகளின் தலைமுறை, சம காலத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகும். ஜேவிபி கிளர்ச்சி மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

ஜேவிபியில் சில யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும், தொழில் நிமித்தம் கொழும்பு நகரில் வாழ்ந்தவர்கள். ஜேவிபியில் இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். 1990௦, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி வரையில் அதன் உறுப்பினர்களாக இருந்த மலையகத் தமிழர் சிலரை கொழும்பில் சந்தித்திருக்கிறேன். அப்போது ஜேவிபியில் இருந்து விலகி, தேநீர்க்கடை பணியாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தகவலின் படி, ஜேவிபியில் இருந்த தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், சில நூறு பேராவது தேறும்.

ஜேவிபியில் இருந்து விலத்திய சிங்கள இளைஞர்கள் சிலர், தமிழீழ தேசிய இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். இடதுசாரித் தன்மை கொண்ட இயக்கங்களில் சேர்ந்திருந்த இவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சிங்கள மொழியிலான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தவும் உதவியுள்ளனர். பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த வலதுசாரித் தமிழ்த்தேசியம் அவற்றை எல்லாம் மறந்து விட்டது.

ஜேவிபியினர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, "இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை, இந்திய மேலாண்மை வல்லரசின் ஐந்தாவது தூணாக கருதியமை." எதிர்காலத்தில் அவர்களைச் சாட்டியே இந்தியத் தலையீடு இடம்பெறும் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்தக் கருத்தியல் தவறு என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜேவிபி சோஷலிசம் பேசினாலும், அதில் பெருமளவு தூய தேசியவாதக் கூறுகள் காணப்பட்டன.

அவர்களது இந்தியா மேலான வெறுப்பின் மூலவேர், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். இலங்கையில் அரசுரிமைப் போட்டிகளும், கிளர்ச்சிகளும் தோன்றிய காலத்தில் எல்லாம் இந்தியத் தலையீடு இடம்பெற்றுள்ளது. நவீன காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்றது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க இந்தியப் படைகள் உதவின. 1987 ல் இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கியமை, அதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இரண்டு தடவைகள், இலங்கையில் எழுந்த அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ஒடுக்க, இந்தியப் படைகள் தருவிக்கப் பட்டன.

கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், மன்னனைப் பிடிக்க உதவிய பிரபுக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஒப்பந்தப் படி நடக்காததைக் கண்டு வெகுண்டெழுந்த கெப்பிட்டிப்பொல என்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பிரபு ஒருவர் கலகம் செய்தார். விரைவிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் பிற பகுதிகளுக்கும் பரவியது. கண்டி இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகி விடும் என்ற சூழ்நிலை தோன்றியது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படைகள் கலகத்தை அடக்க முடியாமல் தடுமாறின. இதனால் ஆங்கிலேயர் காலனியான சென்னையில் இருந்து, இந்தியப் படைகளை தருவிக்க வேண்டியதாயிற்று.

இந்தியப்படைகள் கண்ணில் பட்ட பொது மக்களை கொன்று, அவர்களின் சொத்துகளை நாசம் செய்து தான் கலகத்தை அடக்கினார்கள். இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் எண்ணம், அன்றே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மனதில் எழுந்திருக்கும். நிகழ்கால பூகோள அரசியலையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வரலாறு திரும்புகின்றது என்று கூறுவார்கள். நமது கால இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் ஆங்கிலேயத் தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகவே நடந்து கொள்கின்றனர்.

பனிப்போர் காலத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சோவியத் சார்பு முகாமுடன் நெருக்கமாகவிருந்தன. எழுபதுகளில் சோவியத் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இடது கொள்கை கொண்ட சுதந்திரக் கட்சி அரசுடன் ஒத்துழைத்தது. ஸ்டாலினசம் குறித்த முரண்பாடுகளால் பிரிந்து சென்ற சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற பாதையை நாடியது. இதனால் அதிலிருந்து பிரிந்த, ரோகன விஜேவீர தலைமையிலான இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை ஸ்தாபித்து ஆயுதமேந்திய புரட்சியை நடத்த விரும்பினர்.

இது ஒரு வகையில் இந்தியாவில் நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய) இயக்கங்களின் தோற்றத்தை ஒத்த வரலாறாக இருந்த போதிலும், ஜேவிபி அதிலிருந்து வேறுபட்டது. ஒரு காலத்தில் ஜேவிபி இலக்கியங்களில் பொல்பொட் புரட்சியாளராக புகழப்பட்டார். பொல்பொட்டின் க்மெர் ரூஜ் அமைப்பும், ஜேவிபியும் ஒரே தலைவிதியை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ, இரண்டுமே கடும்போக்கு தேசியவாதத்தை கடைப்பிடித்தன. 1971 ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதற்கு, சோவியத் யூனியனும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிய போதிலும், இந்தியப் படைகள் களத்தில் நின்று போரிட்டன. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலாவது மனிதப் படுகொலை நடந்த வருடம் அது. பதினையாயிரத்திற்கும் குறையாதோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த வலதுசாரி யு.என்.பி. அரசு, சிறையில் இருந்த ஜெவிபியினருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர், அதே அரசு மீண்டும் ஜேவிபியை தடை செய்தது. அன்று ஜேவிபி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இனக்கலவரத்திற்கு காரணம் என்று தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு பேரினவாத அரசு கொடுத்த விளக்கத்தை சிங்கள மக்களோ, அல்லது தமிழ் மக்களோ நம்பவில்லை. இருப்பினும் சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கும் எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டதால் தலைமறைவான ஜேவிபி உறுப்பினர்கள், நீண்ட கால கெரில்லா யுத்தத்திற்கு தயார் படுத்தினார்கள். அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம், எதிர்பார்த்திருந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது. சிங்கள மக்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பாததால், ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் ஈடுபட்டது. யுஎன்பி அரசாங்கத்தின் உள்ளேயும் அதிருப்தி நிலவியது. வருங்கால ஜனாதிபதியாகப் போகும் பிரேமதாச தலைமையில் ஒரு குழு கட்சிக்குள் கிளர்ச்சி செய்தது. முரண்நகையாக, இந்திய எதிர்ப்பாளர்களான ஜேவிபியும், பிரேமதாச அரசும் பிற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் இரத்தக் களரியை உருவாக்கின.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களில், கொழும்பில் மந்திரி சபை கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை இரண்டு கிரனேட் குண்டுகள் வீசப்பட்டன. பாதுகாப்பு கடமையில் இருந்த ஜேவிபியைச் சேர்ந்த காவலர்களே, அந்த குண்டுவீச்சுக்கு காரணகர்த்தாக்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.யும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்யும் நோக்குடன் குண்டு வீசப்பட்டாலும், பலர் காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. யாழ் குடாநாட்டில் சாதாரண மக்கள், சிறிலங்கா அரசின் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததால், மந்திரிசபை குண்டுவெடிப்பை வரவேற்கவே செய்தனர்.

ஜேவிபியின் கிளர்ச்சியில் நேரடியாக பங்களிக்கா விட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்க தயங்கவில்லை. ஆயினும் இந்தியப் படைகளின் பிரசன்னம் குறித்து தான், ஜேவிபியின் நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்து முரண்பட்டது. தமிழ் மக்கள், இந்தியப் படைகளை பாதுகாப்பு அரணாகக் கருதினார்கள். பிரச்சினை சுமுகமாக தீர்ந்த பின்னர், படைகள் இந்தியாவுக்கு திரும்பும் என்று நம்பினார்கள். ஜேவிபியும், சிங்கள மக்களில் ஒரு பிரிவினரும், இந்தியப் படைகளை அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக பார்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில், புலிகளும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவிருந்தனர்.

இனப்பிரப்பிரச்சினை தீர வேண்டும், யுத்தம் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்த சிங்களப் பொது மக்கள், இந்தியப் படைகளின் வருகையை தவறாக கருதவில்லை. ஆளும்கட்சியான வலதுசாரி யுஎன்பி ஆதரவாளர்கள், இடதுசாரி ஜேவிபியுடன் கணக்குத் தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதினார்கள். தமது கழுத்துக்கு கிட்டே கத்தி வந்து விட்டதை, ஜேவிபியினரும் உணர்ந்திருந்தனர். அதனால் உடனடியாக இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். மக்கள் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். பகிஷ்கரிப்பினால் தென்னிலங்கையில் இந்திய உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விற்பனையாளர்கள் இந்தியப் பொருட்களை பதுக்கி வைத்தனர், அல்லது வேறு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகிஷ்கரிப்பை மீறி விற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், சில நேரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறிலங்கா அரசு நீண்டகாலமாகவே இந்திய மருந்துகளையும், பேரூந்து வண்டிகளையும் இறக்குமதி செய்து வந்தது. அந்த வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புடவை வகைகள், இரும்பு, போன்றவற்றை இறக்குமதி செய்யும் நடுத்தர இந்தியத் தமிழ் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதே வேளை, இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தன. மக்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பொருட்கள் எல்லாம் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமல்ல, இந்தியப் படையினரையும் வாடிக்கையாளர்களாக பெற்று விட்ட மகிழ்ச்சியில், அவற்றை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்தனர்.

"இந்தியப் படையினர், இந்தியாவில் இருந்து நேராக பலாலி விமானநிலையத்தில் வந்திறங்குவது போல, இந்தியப் பொருட்கள் கொழும்பைத் தவிர்த்து இறக்குமதியாகின்றதோ," என்று மக்கள் பேசிக் கொண்டனர். வட-கிழக்கு மாகாணங்களில் கடமையில் இருந்த இந்தியப் படையினருக்கு, இந்திய ரூபாயிலேயே ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்திய ரூபாய்களை புழக்கத்தில் விட்டனர். இந்திய ரூபாய் எந்தக் கடையிலும், இலகுவாக மாற்றக் கூடியதாக இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அன்று நடந்த மாற்றங்களை இப்படியும் கூறலாம்.

"ஈழம் ஒரு இந்தியக் காலனியாக மாறிக் கொண்டிருந்தது."


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க: