Showing posts with label ஈழத் தமிழர். Show all posts
Showing posts with label ஈழத் தமிழர். Show all posts

Friday, July 10, 2020

ஈழத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? - ஒரு விவாதம்


ஈழத் தமிழ் அரசியலை ஆழமாக ஆராயும் இணையக் கலந்துரையாடல் (5 July 2020) பேஸ்புக்கில் பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/tamildebaterscouncil/videos/574320763283712) இதுபோன்ற விவாதத்தை இதுவரையில் இலங்கையில் எந்த ஊடகமும் செய்யவில்லை. ஒரு மகத்தான பணியை இணையத்தில் நிறைவேற்றிய இலங்கை வாழ் தமிழ் விவாதிகள் கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் முதலில் உரையாடிய அஷோக்பரன், குருபரன் இருவரும் சட்ட வல்லுனர்கள். ஆகவே ஆரம்பத்தில் தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பாக சட்டரீதியான நிலைப்பாடுகளை ஆராய்ந்து விட்டு, இறுதியில் அரசியல் தீர்வு முக்கியம் என்று ஒருமித்த கருத்து நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் குருபரன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும் தமிழர் தாயகத்தில் வாழ விட வேண்டும் என்ற யதார்த்த நோக்கில் பேசினார். அத்துடன் சாதி ஒழிப்பு, பெண் உரிமை தொடர்பாக பெரியாரின் திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஈழத்தமிழரின் தொன்மையான வரலாறு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்றும், சமீபத்திய அரசியல் வரலாற்று விளைவுகளின் ஊடாக சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதாகவும் சொன்னார்.

குருபரன் இந்தளவு தூரம் முற்போக்காக பேசினாலும், இது குறித்து எத்தனை தமிழ்த்தேசியவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. குருபரன் தான் ஒரு உறுப்பினர் அல்ல என்று அடிக்கடி மறுத்து வந்தாலும், அவர் எப்போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாகவே பேசி வந்துள்ளார். அந்தக் கட்சியில் தான் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவாதிகளும், மதவாதிகளும், சாதியவாதிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே மேற்படி முற்போக்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு, குருபரன் தவிர வேறெந்த தமிழ்த்தேசியவாதியாவது முன்வருவாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இலங்கை என்ற ஒற்றையாட்சியை மையப் படுத்திய சட்டத்தில், குருபரன் எதிர்பார்க்கும் "தமிழர் தாயகம்" என்பதை குறிக்கோளாக கொண்ட "புறவய" அல்லது "அகவய" சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை என்பது உண்மை தான். அஷோக்பரன் சுட்டிக் காட்டியது போன்று இதனை மேலிருந்து திணிக்க முடியாது. அடிமட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஊடாக எட்டப் பட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ளது போன்று ஒற்றையாட்சி அலகின் கீழான சமஷ்டி அமைப்பு குறித்து அஷோக்பரனும், குருபரனும் நீண்ட நேரமாக உரையாடினார்கள். அவ்வாறான ஒரு தீர்வு இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அஷோக்பரனின் எதிர்பார்ப்பு. ஆனால், அது இலங்கையில் சாத்தியமல்ல என்று கூறிய குருபரன், அதற்குக் காரணம் சிங்கள- பௌத்த பேரினவாத கருத்தியல் என்றும் பதிலளித்தார்.

நான் இந்த இடத்தில் ஸ்கொட்லாந்து சுயநிர்ணயம் தொடர்பாக குருபரனுக்கு விளக்கம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிரித்தானியா என்ற பொதுப் பெயரின் கீழ், இங்கிலாந்து மன்னராட்சியானது ஸ்கொட்லாந்து மன்னராட்சியை பெயரளவில் தனக்கு சமமான அரசாக இணைத்துக் கொண்டது. இருப்பினும் ஸ்கொட்லாந்தில் கடந்த முன்னூறு வருட காலமாக இங்கிலாந்தின் மேலாதிக்கம் இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆங்கிலேய- புரட்டஸ்தாந்து பேரினவாதம், ஸ்கொட்டிஷ் கத்தோலிக்க மக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. இன்றைக்கும் ஸ்கொட்லாந்தில் மட்டுமல்லாது வேல்சிலும் ஆங்கிலம் தான் பிரதானமான மொழியாக பேசப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஸ்கொட்டிஷ் தேசியவாத இயக்கம் அடக்கப் பட்டு வந்தது. தன்னாட்சி, தனியான பாராளுமன்றம் இருந்தாலும் பிரித்தானியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகம். அதைவிட ஸ்கொட்லாந்தில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ஆங்கிலேய இனத்தவரையும் கணக்கில் எடுக்க வேண்டும். வெளிவிவகாரம் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துக்கு கீழே கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் உலகை காலனிப் படுத்திய காலத்தில் ஸ்கொட்டிஷ்காரர்களின் பங்களிப்பு காரணமாக தமக்கென தன்னாட்சிப் பிரதேசத்தை பெற்றுக் கொண்டனர். ஆகவே ஒரு காலனியாதிக்க நாட்டில் இருந்த நிலைமையை, முன்பு காலனியாக இருந்த இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

விவாதத்தில் கலந்து கொண்ட இன்னொரு சட்ட வல்லுனரான அம்பாறையை சேர்ந்த சிவகுமார் நவரத்தினம், ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் புறக்கணிக்கப் பட்டு வந்த ஒரு விடயத்தை தொட்டுக் காட்டினார். அம்பாறை என்பது கிழக்கு மாகாணதின் தென் கோடியில் தமிழர் வாழுமிடம் என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். மட்டக்களப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அம்பாறைக்கு கொடுக்கப் படுவதில்லை. மேலும் அவர் மலையகத் தமிழரின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இந்த இடத்தில் அஷோக்பரன் கூறிய சில கருத்துக்களை விமர்சிக்க வேண்டி உள்ளது. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வைக் காண விரும்பும் தாராளவாதி. முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமக்கென தனியான தேசியத்தை கட்டமைத்துக் கொண்டது அவர்களது தெரிவு என்றும், வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவர்களை ஒதுக்கவில்லை என்றும் வாதாடினார். இதில் பாதியளவு மட்டுமே உண்மை உள்ளது.

ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தொண்டமானின் இந்திய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்தன. இருப்பினும் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் தொண்டமான் தன்வழி தனிவழி என்று சென்று விட்டார். அதனை வடக்குத் தமிழ்த்தேசியவாதிகள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. "தொண்டமான் ஒரு துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் சரி, பிழை என்று நான் சொல்ல வரவில்லை. மலையக அரசியல் தனியாக பிரிந்தமைக்கு, வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களின் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவே முஸ்லிம்கள் குறித்த நிலைப்பாடாகவும் இருந்தது. கூட்டணி முதல் புலிகள் வரை முஸ்லிம் காங்கிரசின் இருப்பை ஜீரணிக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

கடைசியாக பேச வந்த விரிவுரையாளர் மீநிலங்கோ அன்றும் இன்றும் பேசப்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியலானது மேட்டுக்குடி (பூர்ஷுவா) தன்மை கொண்டது என்பதையும், அது அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் வாதாடினார். அதற்கு உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுருட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற தகவல்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. அது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் முற்போக்கான அரசியல் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.

மீநிலங்கோ தனது உரையில் சுயநிர்ணய உரிமை குறித்து சரியான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்றும், "ஆகவயம்", "புறவயம்" என்று, நாமாகவே உலகில் இல்லாத ஒரு விடயத்தை உருவாக்கி விட்டு வாதிடக் கூடாது என்றார். இது தொடர்பாக லெனின் கூறிய வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டி விளங்கப் படுத்தினார். ஒவ்வொருவருக்கும் விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக மணம் முடிக்கும் பொழுதே அதைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த உரிமையை வைத்துக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கு சேர்ந்து வாழ்வது எப்படி என்பது தான் முக்கியமே தவிர பிரிந்து செல்வதல்ல. மேலும் இதற்கு முன்னர் அஷோக்பரனும், குருபரனும் நடத்திய வாதாட்டத்தில் சிலாகித்துப் பேசப் பட்ட பிரான்ஸ் நாட்டின் மறுபக்கம் பற்றி எடுத்துக் கூறினார். பிரான்சில் பேசப்பட்டு வந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி ஒடுக்கி பிரெஞ்சு மொழி திணிக்கப் பட்டது வரலாறு. அத்தகைய பேரினவாத பிரான்ஸ் நாட்டை ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு உதாரணம் கற்பிப்பது ஒரு நகைப்புக்குரிய விடயம்.

Sunday, April 12, 2020

கொரோனாவுக்கு பலியாகும் புலம்பெயர்ந்த உழைக்கும் வர்க்க தமிழர்கள்


இன்று நமக்குத் தேவை பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம், குறுந் தமிழ்த்தேசிய இனவாதம் அல்ல!

லண்டன், பாரிஸ் நகரங்களில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் பலர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். அன்றாடம் வரும் மரண அறிவித்தல்களை பார்த்தாலே தெரியும். பலர் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நகரங்களில் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத் தமிழர்கள், இன்றைய நெருக்கடி காலத்தில் அத்தியாவசிய சேவைகள் எனக் கருதப் படும் வேலைகளை செய்வதால் அவர்களால் வீட்டில் நிற்க முடியாது. கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலைமை. அந்த வேலைகளை வீட்டில் இருந்து கொண்டு செய்ய முடியாது. உதாரணத்திற்கு மருத்துவமனை சுத்திகரிப்பு வேலையை கம்பியூட்டரில் On line மூலம் செய்ய முடியாது.

பெரும்பாலான தமிழ் உழைக்கும் வர்க்கத்தினர் இலகுவில் கொரோனா தொற்றக் கூடிய மருத்துவ மனைகள், வயோதிபர் மடங்கள், (தமிழ்க்)கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், வெதுப்பகங்கள், உணவு பதனிடும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழிலாளர்களாக (பாட்டாளி வர்க்கமாக) வேலை செய்கின்றனர். இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தான் அத்தியாவசிய மக்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவர்கள் யாரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அது இங்கே பெரும்பாலும் வெள்ளையின ஐரோப்பியருக்கென ஒதுக்கப் பட்டுள்ள மத்தியதர வர்க்க தொழில்களில் தான் சாத்தியம். அப்படியான தொழில்களை செய்வோர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்க முடிகிறது.

இந்த வர்க்க முரண்பாடு சமூக வலைத்தலங்களில் பேசப் படுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றை பயன்படுத்துவோர் பெரும்பாலும் மத்தியதர வர்க்க தொழில் செய்வோர் என்பதால் தான். அவர்களுக்கு எங்களது உழைக்கும் வர்க்கத்தின் நெருக்கடி நிலைமை புரியாது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசதியான நடுத்தர வர்க்கத்தினர் தான் பிரதானமான சமூக வலைத்தள பயனாளிகள். அவர்கள் தமது வீடுகளில் படுத்துக் கிடந்து சோம்பல் முறித்த படியே அர்த்தமில்லாத கதைகளை பேசி அரட்டை அடிக்கின்றனர். இந்த நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்ப்பது மட்டுமல்லாது, மக்களுக்கான அரசியல் பேசுவோரைக் கண்டால் ஏளனம் செய்கின்றனர். கேலி, கிண்டல் செய்து திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக இந்த பெருக்கடியை பயன்படுத்தி இராணுவ ஆட்சி கொண்டு வர விரும்பும் பாசிச அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

இதற்கு முன்னர் தீவிரமாக தமிழ்த் தேசிய அரசியல் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த (அ)யோக்கிய சிகாமணிகள் இப்போது புற்றுக்குள் சுருண்டு படுத்து விட்டனர். அவர்களுக்கு இனவாதத்தை விட்டால் உலகில் வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதால் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காலம் மலையேறி விட்டது. அது மீண்டும் திரும்பி வராது.

தமிழ் உழைக்கும் வர்க்க மக்களே! குறுகிய தமிழ் இன நலன் பேணும் இனவாத அரசியல் ஒரு போதும் உங்களுக்கான விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. அதற்கு பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அவசியம். இன்று உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு உழைக்கும் வர்க்க மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு, நீங்களும் முன்னரங்க போர்க்களத்தில் நிற்கிறீர்கள். இன்று உலகம் உங்களை தான் நாயகர்கள் என்று போற்றுகிறது. அந்த அந்தஸ்தை இழந்து விடாதீர்கள்.

நாளைக்கு நிலமை சீரானதும் "தமிழின ஒற்றுமை... இனமானம்... இன நலன்...." என்றெல்லாம் பேசிக் கொண்டு சிலர் வருவார்கள். அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். ஏனென்றால் நாளை வரப் போகும் பொருளாதார நெருக்கடியில் உங்கள் வேலை பறிபோகலாம். அதற்கு காரணமான முதலாளிகள் மீது உங்களுக்கு தார்மீகக் கோபம் எழலாம். அதை மடைமாற்றுவதற்கு இனத்தின் பெயரால் ஒன்று சேர சொல்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

கொரோனா வைரஸ் சில மாதங்களில் ஒழிக்கப் படலாம். ஆனால் முதலாளித்துவ வைரஸ் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்திருக்கும். தமிழ் உழைக்கும் மக்களும் பங்கெடுக்கும் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மூலமே முதலாளித்துவ வைரசை ஒழித்துக் கட்ட முடியும்.


Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Saturday, February 02, 2019

ஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை


ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தமிழரின் மானம் சந்தி சிரித்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காட்டுப் பகுதியில், பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் ஒன்று, அரைவாசி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையின நாஜி தீவிரவாதிகளே அந்தக் கொலையை செய்ததாக, எல்லோராலும் நம்பப் பட்டது. மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் அவ்வாறே வாக்குமூலம் கொடுத்தனர்.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தேகத்தில் துப்புத் துலக்கிய ஜெர்மன் பொலிஸ், உண்மையான கொலையாளி அந்தப் பெண்ணின் தகப்பன் என்பதை கண்டுபிடித்தது. கொலைக்கான காரணம் என்னவென்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பருவ மங்கை, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலித்து வந்தார். அந்தக் காதலை பொறுக்க முடியாத தந்தையே, தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார். உடலை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று போட்டு விட்டு, அவசர அவசரமாக தகனம் செய்து விட்டு வந்திருக்கிறார். நவ-நாசிகளை கை காட்டி விட்டால், குடும்பத்திற்குள் நடந்த கௌரவக் கொலையை மறைக்கலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

துருக்கிய சமூகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது, ஏற்கனவே ஜெர்மானியர்களுக்கு தெரிந்த விடயம். கௌரவக் கொலைகளை செய்வதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தமிழர்களும் நிரூபித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கதைத்த பொழுது, அவர்கள் சம்பந்தப்பட்ட தந்தையை குற்றவாளியாக கருதவில்லை என்பது தெரிந்தது. "மகளை கண்டித்து அடிக்கும் பொழுது, தற்செயலாக படாத இடத்தில் பட்டு இறந்து விட்டதாக..." வக்காலத்து வாங்கினார்கள்.

ஜெர்மனியில், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது கூட குற்றம் என்பதையும் மறந்து, காதலித்த பிள்ளையிடம் தவறு காணும் அளவுக்கு தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம்.

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.

Friday, February 17, 2017

கேப்பாபுலவு, ஜல்லிக்கட்டு : இரண்டு போராட்டங்களின் கதை

ஈழத்தில் ஒரே காலகட்டத்தில் நடந்த இரண்டு போராட்டங்களின் கதை:
1. ஜல்லிக்கட்டு - ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின்  போராட்டம் 
2. கேப்பாபுலவு - ஈழத் தமிழ் மக்களின்  போராட்டம் 

இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யாழ் நகரிலும், பின்னர் கொழும்பு நகரிலும் ஆதரவுப் போராட்டம் நடந்தது. சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுக்கப் பட்ட தன்னெழுச்சியான போராட்டம் என்று அறிவிக்கப் பட்டது. போருக்கு பின்னரான காலத்தில், முன்னர் எப்போதும் இல்லாதவாறு, பெருமளவு எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில், ஐநூறு, ஆயிரம், அல்லது ஐயாயிரம் பேர் வந்திருந்ததாக எடுத்துக் கொள்வோம். அதிலே பங்குபற்றியவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்க இளைஞர்களாக இருந்தனர். யாழ்நகரில் நடந்த போராட்டத்தில், "ஏன் சாதாரண மக்களை காணவில்லை?" என்று பிபிசி தமிழோசை நிருபர் கேட்ட பொழுது, "இனிமேல் தான் மக்கள் வருவார்கள்..." என்று பதிலளித்தனர். ஆனால், அந்த போராட்டம் தொடரவுமில்லை, தமிழ் மக்கள் வரவுமில்லை.

தமிழ்த் தேசியவாத, தமிழ் இன உணர்வு அரசியல், எப்போதுமே தமிழ் மத்தியதர வர்க்க அரசியலாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது தான் உண்மை. "தமிழன்டா!", "தமிழன் என்று சொல்லடா!" போன்ற இனப்பெருமை பேசும் ஆணாதிக்க கோஷம் எதுவும் பெரும்பான்மை தமிழ் மக்களை கவரவில்லை. இது தமிழ்த் தேசியவாதிகள் எந்தளவுக்கு மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கின்றனர் எனக் காட்டுகின்றது.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம், மற்றும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மக்கள் தானே என்று வாதாடலாம். உண்மையில் அதற்குக் காரணம் "தமிழ் இன உணர்வு" என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமமாகும். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தமக்குத் தெரிந்த வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதும் அதனால் தான். அவ்வாறு தான் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் வந்ததற்கு வலுவான காரணம், அது எந்த வகையிலும் அரசுக்கு எதிரான போராட்டம் இல்லையென்பது தான். பலர் இதை நம்ப மறுப்பார்கள். "தமிழன்டா, தமிழன் என்று சொல்லடா" என்று ஒற்றுமையாக கோஷம் போடுவதால், சிறிலங்கா அரசு தமிழரின் சக்தி கண்டு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியம் பேசுவதும், தமிழ் உணர்வு கொள்வதும் அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இன முரண்பாட்டு அரசியல் என்பதை பலர் அறிவதில்லை.

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் தான் போராடுவார்கள். இழப்பதற்கு எல்லாம் இருப்பவர்கள் போராட வர மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்றவர்கள் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கும் வசதியான இளைஞர்கள், அல்லது உயர்கல்வி கற்கும் மாணவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதால், தமது கல்விக்கோ, வேலைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். 

மேலும், அன்றாட வாழ்வில் வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு "தமிழ் உணர்வு இல்லாமை" மட்டுமே ஒரு குறைபாடாக தெரிவதில் வியப்பில்லை. அதற்காக போராடுவதன் மூலம் தாம் சமூகத்திற்கு தொண்டாற்றி விட்டதாக திருப்திப் படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் கூடி, தமிழ் உணர்வுக் கோஷங்கள் போட்டு விட்டு தமது வேலையைப் பார்க்க சென்று விட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட வந்தவர்கள், மக்களின் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரம், "இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்றும், "இனிவருங்காலத்தில் இவ்வளவு பேரும் எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்" என்றும் பதில் சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழியை யாரும் காப்பாற்றவில்லை. இப்போதும் தமிழ் மக்களின் பிற போராட்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இது நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடங்கியது. இறுதிப் போரில், விமானப் படையினரால் அபகரிக்கப் பட்ட காணிகளை மீட்பதற்காக, பெண்களும், பிள்ளைகளும் போராடினார்கள். அது அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள். அதனால் எதற்கும் அஞ்சாமல் படையினரின் முகாமுக்கு முன்னால் அமர்ந்திருந்து போராடினார்கள்.

என்ன அதிசயம், ஜல்லிக்கட்டு போராளிகள் எவரையும் அங்கே காணவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பொங்கிய தமிழ் இன உணர்வு, கேப்பாபுலவு ஏழைகளுக்காக பொங்கவில்லை. ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை சேர்ந்தோரும் சென்றிருந்தனர். 

சில நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழுக்கு சேர்ந்த கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட கேப்பாபிலவுக்கு வரவில்லை. அந்தளவுக்கு தமிழ் இன உணர்வாளர் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. "கேப்பாபிலவு கிராமம் எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கான போக்குவரத்து கஷ்டம் எனவும்", ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் காரணம் கண்டுபிடித்தார்.

இருப்பினும் சாதாரண இளைஞர்கள் சிலர் கேப்பாபுலவுக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களே அவர்கள். சாதாரண பொது மக்களின் நலன் சார்ந்து அவர்கள் பக்கம் நிற்பதே இடதுசாரியம் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அதனால், அது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டமாக இருக்கவில்லை.

11.02.2017 அன்று யாழ்நகரில், மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தமிழ், சிங்கள இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு எழுப்பப் பட்ட கோஷங்களில் தமிழர் என்பதை தவிர்த்து, மக்கள் என்று சொல்லப் பட்டது ஒரு முக்கியமான விடயம். "மக்களின் காணிகளை மக்களுக்கே திருப்பிக் கொடு" என்று தான் கோஷம் எழுப்பப் பட்டது.

இதே நேரத்தில், கேப்பாபிலவு கிராமம் மக்கள் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருந்தது. பாடசாலை செல்ல வேண்டிய சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களது கல்வி பாதிக்கப் படுகின்றது. அதனால் சமூக ஆர்வலர்கள் திறந்தவெளியில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள். கட்டாந்தரையில் அமர்ந்திருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

அங்கே ஒரு மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கேப்பாபிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தை பற்றிக் கேள்விப் பட்டு, தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரிகளும் வந்தனர். ஒரே உணர்வோடு மக்களோடு சேர்ந்து போராடினார்கள். அதன் மூலம், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்தது. தமிழருக்காக தமிழர் மட்டுமே போராடுவார்கள் என்று நினைத்திருந்த அரசு இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடந்த கேப்பாபிலவு மக்களின் போராட்டம், மெல்ல மெல்ல அரசு அதிகாரத்தை அசைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த படைத் தலைமை, பின்னர் இறங்கி வந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் மக்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர் தான் எதுவும் நிச்சயமாகும். எது எப்படி இருப்பினும், கேப்பாபுலவு மக்களின் வெற்றி பெற்றால், அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப் படும். மக்கள் போராட்டம் மூலம் அரசை பணிய வைப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

வரட்டுத் தமிழ்த் தேசியம் பேசும் வசதிபடைத்த தமிழ் மத்தியதர வர்க்க  இளைஞர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற கேப்பாபுலவு ஏழைத் தமிழ் மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவுடைமைத் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னர் சொன்ன மாதிரி, இழப்பதற்கு எதுவுமற்ற மக்களே போராடத் தயாராக இருப்பார்கள்.  இங்கிலாந்து முதல் ஈழம் வரை அது உண்மையென நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வு பொங்குவது இறுதியில் பேரினவாத அரசுக்கே சாதகமானது. இனப்பெருமை பேசும் "தமிழன்டா" கோஷம், வேற்றின மக்கள் எம்மை நெருங்க விடாமல் விரட்டுகிறது. அதனால் தமிழர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நாம் தமிழர் என்று சொல்லாமல், மக்கள் என்று அரசியல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

கேப்பாபிலவு போராட்டம் ஒரு மக்கள் புரட்சியின் ஆரம்பம். 

மேலதிக தகவல்களுக்கு: 

Wednesday, November 23, 2016

சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ஈழத் தமிழரின் வர்க்க முரண்பாடுகள்

"ஈழத் தமிழர் மத்தியில் வர்க்க முரண்பாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தினராக இருப்பது அதிசயமல்ல. நிரந்தரமான வருமானம், வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தமக்கு கீழே உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். 

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத" சதிகாரர்களின் முகத்திரை கிழியும் போதெல்லாம் இனவாத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள். "ஐயோ! தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்களே...." என்று ஊளையிடுவார்கள். இவர்களது "இனப் பற்று" பணக்காரர்களை பாதுகாக்கும் கவசம் என்பதை மக்கள் உணர விடாது ஒப்பாரி வைப்பார்கள். 

சமூக கட்டமைப்பில் மேலே உள்ள முதலாளிய வர்க்கத்தையும், கீழே உள்ள உழைக்கும் வர்க்கத்தையும் சமரசப் படுத்தி வைத்து ஆதாயம் அடைந்தவர்கள். போலியான வர்க்க சமரசத்தை உடைய விடாமல் பாதுகாக்கும் நோக்கில் "இன ஒற்றுமை", "மத உணர்வு", "கலாச்சார பாரம்பரியம்" போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வார்கள்.

(ஈழத்) தமிழர்கள் தமக்கிடையிலான வர்க்க முரண்பாடுகளை மறைத்து வந்தாலும், சில நேரங்களில் அவர்களை அறியாமலே வெளிக் கிளம்பி வருகின்றன. புலம்பெயர் நாடொன்றில் வாழும் புதுப் பணக்காரர், தமது மகளின் சாமத்திய (மஞ்சள் நீராட்டு) சடங்கை ஆடம்பரமாக நடத்திய விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சாமத்திய சடங்கு சரியா, பிழையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது போன்ற பணக்காரர்கள் பகட்டுக் காட்டும் ஆடம்பரமான விழாக்கள் பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்துவதை மறுக்க முடியாது.

ஆடம்பரத்தை எதிர்ப்பவர்கள், "எம்மக்கள் வறுமையில் வாழ்கையில் இத்தகைய ஆடம்பரம் தேவையா? அந்தப் பணத்தை கஷ்டப் படுவோருக்கு கொடுக்கலாமே?" என்று நியாயம் கூறுகின்றனர்.

அதே நேரம், ஆடம்பரத்தை ஆதரிப்பவர்களும் தமக்கென நியாயம் வைத்திருக்கிறார்கள். "அவனுடைய பணம்... அவன் காசு வைத்திருக்கிறான் அதனால் செலவு செய்கிறான்... நீங்க ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது!" என்று பணக்காரத் திமிருடன் நியாயம் பேசுகின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா இனங்களைப் போன்றும், (ஈழத்) தமிழர்களும் இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயம் தான். நீண்ட காலமாகவே பரம்பரைப் பணக்காரர்கள் தமது ஆடம்பர விழாக்களை மற்றவர்கள் கண்களுக்கு தெரியா வண்ணம் மூடி மறைத்து வந்தனர். அதனால், எஞ்சிய உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்தியில் இருந்து புதிய பணக்கார வர்க்கம் ஒன்று தோன்றியது. அவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும், "அற்பனுக்கு பவுசு வந்த மாதிரி" புதிய பணக்காரர்கள் தமது செல்வத்தை விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொண்டனர். அதில் ஒரு வகை தான் மகளின் சாமத்திய சடங்கை ஆடம்பரமாக நடத்துவது.

பரம்பரைப் பணக்காரர்கள் ஒரு மூடுண்ட சமூகமாக தமது வர்க்கத்தை சேர்ந்தவர்களுடன் மட்டும் பழகுவார்கள். ஈழத்தில் பரம்பரைப் பணக்காரர்களாக இருந்த சமூகம் புலம்பெயர்ந்து, பல தசாப்த காலமாகவே இங்கிலாந்தில் வாழ்கின்றது. அவர்களது வீடுகளில் நடக்கும் ஆடம்பர விழாக்களின் படங்கள், வீடியோக்கள் வெளியே கசிவதில்லை. அந்தளவுக்கு இரகசியம் பேணப் படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களது வர்க்கத்தினரை தவிர, வெளியில் யாருடனும் பழகுவதில்லை.

ஆனால், புதுப் பணக்காரர்களால் அப்படி நடக்க முடிவதில்லை. பத்து, அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் அவர்களும் சாதாரண உழைக்கும் வர்க்கமாக இருந்திருப்பார்கள். அவரது சமூகத்தில் அவர் மட்டும் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தவராக இருப்பார். முன்பொரு தடவை தனது மகளை சாமத்திய சடங்கிற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றவர், புலிகளுக்காக சேர்த்த பணத்தை சுருட்டியவர் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் புதுப் பணக்காரர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு பழைய பணக்காரர்கள் செல்வதில்லை. அதனால் இன்னமும் தொடர்பில் உள்ள உழைக்கும் வர்க்க உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அப்படி அழைக்கப் படுபவர்கள் தமது உறவினர்/நண்பரின் ஆடம்பர களியாட்டத்தை அம்பலப் படுத்தும் வீடியோ, படங்களை வெளியே கசிய விடுகின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதை பொறாமை என்று சொன்னாலும் அதுவும் வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எழுகின்றது. இதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகளால் ஏற்படும் இது போன்ற சச்சரவுகள் ஏனைய இனங்களிலும் நடக்கிறது. ஐரோப்பிய மொழிகளைப் பேசும் சமூகங்களில் கூட இந்தப் பிரச்சினை உள்ளது. டச்சு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Doe maar normaal, dan doe je al gek genoeg!" அதன் மொழிபெயர்ப்பு: "நீ சாதாரணமாக நடந்து கொள், அதுவே மற்றவர்களை கிறங்க வைக்கப் போதுமானது!"

பந்தா காட்டுவது, பகட்டுக் காட்டுவது, இதுவே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் நம்மிடையே உண்டு? "அந்தஸ்து", "கெளரவம்" முக்கியம் என்பதற்காக பலர் தம்மையறியாமலே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இப்படியான அந்தஸ்து பார்க்கும் செயல்கள் வர்க்க முரண்பாடுகளை அதிகரிக்கும். அதன் விளைவை தான் மேலே பார்த்தோம்.

இந்த வர்க்க முரண்பாடு புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். கீழே உள்ளது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவு. புட்சிட்டி எனப்படும் நவீன சூப்பர் மார்க்கெட்டில் மரக்கறி வாங்கச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமாரை ஒருவர் படம் பிடித்து போட்டிருந்தார்.
 

//ஏன்டா டேய் நீ எங்களை மாதிரி சந்தையிலை மரக்கறி வாங்க மாட்டிய டா பூட்சிற்றில வாங்கினாத்தான் சாப்பிடுவியா?//

இது யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவரது முகநூல் பதிவு. இதைக் கண்டித்த எல்லோரும் "பிரபலங்களை பின்தொடர்ந்து படம் பிடிக்கும் தவறை" மட்டுமே சுட்டிக் காட்டினார்கள். இந்தப் பதிவை இட்டவர் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளராக இருக்கலாம். கஜேந்திரகுமார் கட்சியுடன் நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அதையும் மீறி அவர் சொல்ல வரும் வர்க்க வேறுபாட்டை யாரும் கணக்கெடுக்கவில்லை. இதில் த.தே.கூ. ஆதரவாளர்களும் அடக்கம்.

ஈழப்போருக்கு பின்னரான உலகமயமாக்கல் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்திலும் Food City என்ற நவீன பல்பொருள் அங்காடிகள் வந்து விட்டன. முன்னொரு காலத்தில், யாழ்ப்பாணத்தவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு, மேற்குலகிற்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது மேற்குலகு அங்கே செல்கின்றது. அது தான் உலகமயமாக்கல்.

இலங்கையில் இன்று இரண்டு முரண்பாடு கொண்ட வர்க்கங்கள் இருப்பது முன்னரை விட துலக்கமாகத் தெரிகின்றது. நகரங்களில் முளைக்கும் நவீன அங்காடிகளில் ஐரோப்பாவில் உள்ள அத்தனை பாவனைப் பொருட்களும் கிடைக்கும். விலையும் ஐரோப்பிய மட்டத்திற்கு உள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

ஏழைகள், வசதி குறைந்தவர்கள் இன்றைக்கும் வழமையான மரக்கறி சந்தைகளை நம்பி வாழ்கின்றனர். சிலபேர் சாதாரண மரக்கறி சந்தையை விட, புட்சிட்டியில் விலை மலிவு என்று வாதாடலாம். சிலநேரம் இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையில் வர்க்கம் சார்ந்த இரண்டு வகையான பொருளாதாரங்கள் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. அது தான் இங்கே முக்கியம். பணக்காரர்கள் செல்லும் கடைகள், ஏழைகள் செல்லும் கடைகள் என்று வித்தியாசம் வந்துவிட்டது. அதற்கு இந்தப் பதிவே சாட்சியம்.

கஜேந்திரகுமார் கட்சியுடன் முரண்படும் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இந்தப் பதிவை கண்டித்த காரணமும் அது தான். அவர்களும் பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் தான். என்ன தான் எதிர்ப்பு அரசியல் பேசினாலும், கடைசியில் எல்லோரும் சங்கமிக்கும் இடமும் இது தான்.

சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய நகரங்களுக்கும் வந்து விட்டன. அவற்றில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் ஐரோப்பிய தரம் அளவிற்கு அதிகமாக உள்ளன. "ஐரோப்பிய தரத்திற்கு விலை இருந்தாலும் அது ஒரு பிரச்சினை இல்லை" என்று அங்கு வாழும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஏழைகளும் அங்கு பொருட்களை வாங்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாம்.

அடடே... இலங்கையும் ஒரு பணக்கார நாடாகி விட்டது என்பதை அறியும் பொழுது மெய்சிலிர்க்கிறது. பிறகெதற்கு அங்கிருப்பவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்? ஒரு பணக்கார நாடான இலங்கை, எதற்காக IMF, உலகவங்கியிடம் கடன் வாங்குகிறது?

இலங்கையில் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் ஐரோப்பிய விலைகளை ஒத்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு தரமான சட்டையின் விலை 1600 ரூபாய்கள். அதாவது சரியாகப் பத்து யூரோ! அண்மைக் கால விலையேற்றத்தின் பின்னர், மதுபானங்களின் விலை ஐரோப்பாவை விட அதிகம் என்பது வேடிக்கையானது.

பணக்காரர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால், வருமானம் குறைந்த ஏழைகளின் நிலைமை? பெரும்பாலான உழைக்கும் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் கூட விலைவாசி உயர்வு குறித்து முறையிடுகிறார்கள். பொருட்களின் விலைகள் ஏறி விட்டதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் முன்னரை விடக் குறைந்த அளவில் விற்பனையாகின்றது. அதை விட தமக்குக் கொடுக்கும் கமிஷனின் அளவையும் குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலை ஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்திருந்தால், அங்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் ஐரோப்பிய தரத்திற்கு சமமாக இருப்பது தானே நியாயம்? விலைவாசியை உயர்த்தியது மாதிரி சம்பளத்தையும் உயர்த்துவது தானே முறை?

இந்தக் கேள்வியை கேட்டால் இனப் பற்றாளர்கள், கருத்துக் கந்தசாமிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.


Monday, April 13, 2015

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்


தமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.

புலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.

ஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே?

"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: "ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா?


பதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம்? ராஜபக்ச ஒரு "சிங்களப் பிரபாகரனாக" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.

பல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. 

தமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

துரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்?

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ? நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?குறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா? அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா?

வெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா? புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா?

"தமிழ் தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான "கம்யூனிச" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்?

Friday, July 04, 2014

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு


யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். 

யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக்கவில்லை. அதே நேரம், அவர்களுடன் கொள்கை உடன்பாடு கண்ட தமிழகத்து தமிழ் இன உணர்வாளர்கள், மலையாளிகளை பகைவர்களாக கருதுகிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது என்ற பிரச்சினையை, நாங்கள் தமிழ் தேசியவாதிகளிடமே விட்டு விடுவோம்.

யாழ்ப்பாணத் தமிழரின் கேரளா உரிமை கோரல், முழுக்க முழுக்க கற்பனையானது என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும், தங்களை மலையாள வம்சாவளியினர் என்று அடையாள படுத்திக் கொள்ளும் குடும்பங்கள் இன்றைக்கும் வாழ்கின்றன. கொழும்பு, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மலையாள வம்சாவளியினர் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

காலனிய காலத்தில், மலையாளிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையில், அரசு ஆவணங்களில் மலையாளிகள் என்று ஒரு இனம் தனியாக குறிப்பிடப் பட்டு வந்தது. பிற்காலத்தில் பல மலையாளிகள் தங்களை, சிங்களவர் என்றோ அல்லது, தமிழர் என்றோ, வாழும் இடத்தைப் பொறுத்து அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமது "தாய் மொழியையும்" பேச மறந்து விட்டார்கள்.

யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மலையாளிகள், டச்சு காலனிய காலத்தில் குடியேறியதாக சில வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். யாழ்ப்பாண, கேரளாவுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரமாக புகையிலை விவசாயம் உள்ளது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி வலிகாமம் என்று அழைக்கப் படுகின்றது. இருபாலை, கோப்பாய், அச்சுவேலி, மானிப்பாய், போன்ற வலிகாமப் பகுதி கிராமங்களில், இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புகையிலைத் தோட்டங்கள் தான் காணப்படும்.

வலிகாமம், யாழ் குடாநாடு முழுவதிலும் மக்கட்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். புகையிலை விவசாயம் காரணமாக பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சமூகங்களில், செல்வந்தர்களின் விகிதாசாரம் வலிகாமம் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலும் புகையிலைச் செய்கையினால் கிடைத்த வருமானம் தான், பலரின் செல்வச் செழிப்புக்கு காரணம்.

ஐம்பதுகளில், இலங்கை முழுவதும் கூட்டுறவு உற்பத்தி முறை ஊக்குவிக்கப் பட்டது. அப்போது, யாழ் புகையிலை செய்கையாளர்கள் தமக்குள் கூடி சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். அதன் பெயர் "யாழ்ப்பாணம் - மலையாள புகையிலை விற்பனைச் சங்கம்" (ஆதாரம்: கூட்டுறவு இயக்கத்தின் 1959 ம் ஆண்டு நிர்வாக அறிக்கை. P. E. வீரமன்) அந்த சங்கத்தினர் பல தசாப்தங்களாக, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

அனேகமாக, அறுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசு, ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் தான், யாழ்ப்பாண - கேரளா தொடர்பு அறுந்து விட்டிருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தடைகள் புகையிலை விவசாய உற்பத்தியை பாதிக்கவில்லை. யாழ் விவசாயிகள், தென்னிலங்கைக்கு புகையிலை ஏற்றுமதி செய்து பெருமளவு இலாபம் சம்பாதித்தார்கள்.

1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த தாராளவாத பொருளாதாரம், யாழ் குடாநாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளான புகையிலையின் உற்பத்தி வீழ்ச்சி அடைய வழிவகுத்தது. அதே காலகட்டத்தில் ஈழப்போரும் ஆரம்பித்ததால், தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. புகையிலை விவசாயிகளின் பிள்ளைகள், பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும், அந்த அரசியல் - பொருளாதார மாற்றங்கள் வழிவகுத்தன.

புகையிலை இலங்கை மண்ணுக்கு உரிய பயிர் அல்ல. அது ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. தேயிலை, கோப்பி, ரப்பர் போன்று ஐரோப்பியரால் கொண்டு வரப் பட்ட பிற பயிர்கள், பெருந்தோட்டங்களாக செய்யப் பட்ட அளவிற்கு புகையிலைச் செய்கை இருக்கவில்லை. இருப்பினும், யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில், ஏற்றுமதியை கருத்தில் கொண்டே புகையிலை பெருமளவில் பயிரிடப் பட்டு வந்தது. 

டச்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்திய வெள்ளாள சாதியை சேர்ந்த பெருமளவு விவசாயிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவான ஆய்வு அவசியம். இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய காலத்தில், வரலாற்று ஆய்வுகள் திரிக்கப் படுவதற்கும், மறைக்கப் படுவதற்கும் இடமுண்டு. 

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, February 21, 2014

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்


ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட,  "  கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"   என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்களின் வீடுகளில் நடக்கும், கடவுள் கொள்கை பற்றிய விவாதங்களை, நானே சிறுவனாக இருந்த காலங்களில் நேரடியாக கண்டிருக்கிறேன். 

 "வறுமையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மார்க்சியம் தெரியாது. எந்தவொரு இடதுசாரிக் கருத்தும் அவர்களைக் கவரவில்லை...." என்று பொய்யுரைக்கும் பலரை, அன்றாடம் சமூக வலைத் தளங்களில் சந்திக்கிறேன். அது அவர்களது மத்தியதர வர்க்க மனோபாவமே அன்றி, யதார்த்தத்தை உரைக்கும் கருத்து அல்ல. வசதி படைத்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மட்டும் தான் உலக ஞானம் இருப்பதாக நினைப்பது தவறு. எங்களது நெருங்கிய உறவினர்களுக்கு இடையே, ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இருந்தது. அதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே, மக்களின் வர்க்க வேறுபாடுகள் குறித்தும், அந்த வர்க்கங்களின் அரசியல் சமூகப் பார்வை குறித்தும் அறியும் வாய்ப்புக் கிட்டியது. 

என்னுடன் நன்கு பழகிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, சோஷலிசம் பற்றிய அறிவிருந்தது. சோவியத் யூனியன், கியூபா போன்ற நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களை பற்றிக் கேள்விப் பட்டிருந்தார்கள். அதே போன்று, கடவுள் மறுப்புக் கொள்கையான நாஸ்திகக் கருத்துக்களும் அவர்களை சென்றடைந்தன. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 

1. திராவிடக் கட்சிகள் செல்வாக்கு  செலுத்திய தமிழ் சினிமா. (பராசக்தி  போன்ற படங்களில் வந்த வசனங்களும், பல தத்துவப் பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.)
2. அன்று உலகில் பெருமளவு சோஷலிச நாடுகள் இருந்தன. அந்த நாடுகளில் அரச மதத்திற்கு பதிலாக நாஸ்திகம் கோலோச்சியது என்ற தகவல்.
3. தமிழர்கள் மத்தியில் களப் பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு. ஏழை உழைப்பாளிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் அவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.
4. அறுபதுகள், எழுபதுகளில் கூட, தாழ்த்தப் பட்ட சாதியினர் சைவக் கோயில்களுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர். சாதி ஒழிப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, " உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் இந்த அக்கிரமங்களை ஏன்  பொறுத்துக் கொண்டிருக்கிறார்?"  என்று, ஏழைத் தலித் மக்களை கேள்வி கேட்க  வைத்தது.
5. டாக்டர் கோவூர் நடத்திய நாஸ்திக பிரச்சாரம். குறிப்பாக, உழைக்கும் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்ட, ஜனரஞ்சகப் பத்திரிகையான "மித்திரன்", அது பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. 

இவை யாவும், நான் வாழ்ந்த சூழலில், எனது கண்ணுக்கு தென்பட்ட காரணிகள். அன்று நடந்த நாட்டு நடப்புகளால், சுயமாகத் சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் உருவாகி இருந்தனர். மேற்குறிப்பிட்ட தகவல்களில் ஏதாவதொன்று விவாதப் பொருளாகும் நேரம், நாஸ்திகக் கருத்துக்களும் முன் வைக்கப் படும். அந்த  நிலைமை, ஈழப் போராட்டம் தொடங்கிய எண்பதுகளிலும் காணப் பட்டது. 

கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் நடந்த, தமிழர் விரோதக் கலவரங்கள், இன்னொரு பரிமாணத்தில் இருந்தும் பார்க்கப் பட்டது. கலவரங்களின் போது, சிங்களக் காடையரினால் பல சைவக் கோயில்கள் எரிக்கப் பட்டன. அவற்றைக் கேள்விப் பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், தமக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி இது: " சிங்களக் காடையர்கள் கோயில்களை எரித்த நேரம், அங்கிருந்த சாமிகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஏன் அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை? தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்ற சாமிகள், தமிழ் மக்களை காப்பாற்றுமா?"

சிங்கள ஊடகங்கள் வெளிப்படையாகவே தமிழர்களின் சைவ மத நம்பிக்கைகளை கேலி செய்து வந்தன. அதே போன்று, தமிழ் தேசியத்தை முன்னெடுத்த தமிழ் ஊடகங்களும், சிங்களப் பௌத்தர்கள் வழிபடும் புத்தனை கேலி செய்யும் கேலிச் சித்திரங்களை  பிரசுரித்தன. ஊடக முதலாளிகள், மதவாதம் அல்லது இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவற்றை பிரசுரித்து வந்தனர். ஆனால், "  மதம், கடவுள் என்பன, ஒருநாளும் எதிர்க்கவே முடியாத புனிதமான கோட்பாடுகள் அல்ல."   என்ற உண்மையை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும், அவர்களின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. அன்று, சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் சிலர் நேரடியாகவே கேட்டனர்: " அவர்கள் (சிங்களவர்கள்) எங்களது கடவுளரை கேலி செய்கிறார்கள். நாங்கள் அவர்களது கடவுளை கேலி செய்கிறோம். இதிலிருந்து ஒரு உண்மை தெரிய வருகின்றது. கடவுள் என்ற ஒன்று இல்லை..."

ஒரு தடவை, எங்கள் ஊரில் ஒரு விடுதலை இயக்கம் கூட்டம் நடத்தியது. அதில் பேசிய பேச்சாளர் பின்வருமாறு கூறினார்: " சிங்கள- பௌத்தர்களின் மதம் அஹிம்சையை போதிக்கிறது. அவர்களின் கடவுளின் கையில் ஆயுதம் கிடையாது. ஆனால், சிங்கள பௌத்தர்கள் எம் மீது வன்முறை பிரயோகிக்கிறார்கள். எங்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நாங்கள் அஹிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்..."  அன்று அது, கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைப்பதற்காக செய்யப் பட்ட பிரச்சாரம் தான். அதே நேரத்தில், " கடவுள், மதம் என்பன புனிதமானவை... கேள்விக்குட்படுத்த முடியாதவை..." என்று மக்கள் நம்பிய மாயையையும் கட்டுடைத்தது. 

1984 ம் ஆண்டு, ஒரு போர் நிறுத்தத்தை தொடர்ந்து, யாழ் குடா நாடு முழுவதும் போராளி இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் முகாமுக்குள் முடங்கிக் கிடந்தது. அதனால் பல தடவைகள் விமானங்களில் வந்து குண்டு போட்டார்கள். முகாம்களில் இருந்து ஷெல் அடித்தார்கள். என்றாவது ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப் படுமானால், மக்களை கோயில்களில் (அல்லது தேவாலயங்களில்) சென்று தங்குமாறு, அரச வானொலி அடிக்கடி அறிவித்தது. 

பெரும்பான்மை தமிழ் மக்களும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்பதால், கோயிலுக்குள் தமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், விமானக் குண்டுவீச்சுக்கு கோயில்களும், தேவாலயங்களும் தப்பவில்லை. யாழ் நகரில் பிரபலமான பெருமாள் கோயிலின் கோபுரம் குண்டு வீச்சால் சேதமடைந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஷெல் வீச்சால் சேதமடைந்தது. இப்படி நிறைய வழிபாட்டு ஸ்தலங்கள், ஒன்றில் விமானக் குண்டுவீச்சினால், அல்லது ஷெல் தாக்குதலில் சேதமுற்றன. அந்த சேதங்கள் எல்லாம் ஒரு பெரிய பட்டியலில் தொகுக்கப் பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா படையினர், வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியதால், பொது மக்களும் பலியானார்கள். நவாலி தேவாலயம் விமானக் குண்டு வீச்சினால் தாக்கப் பட்டு, அங்கு தஞ்சம் புகுந்திருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள், உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப் பட்டன. அதன் விளைவாக ஏற்பட்ட, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் காரணமாக, பெருமளவு மக்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும் உண்மை தான். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்னொரு எதிர்பாராத விளைவையும் உண்டாக்கியது. நாஸ்திகக் கருத்துக்களின் உண்மைத் தன்மையை, ஈழத் தமிழ் மக்கள் போர் அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர். 

"  சிங்களப் படையினர் இதுவரையில் எத்தனை சைவக் கோயில்களை  உடைத்து விட்டார்கள்? எத்தனை தடவைகள், கோயில்கள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் கொன்றிருக்கிறார்கள்? அப்போது இந்த சாமிகள் எல்லாம் எங்கே போயின? அதுகளும் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனவா? கடவுள் இருப்பது உண்மை என்றால், எதற்காக குண்டு போட்ட சிங்களவனை தண்டிக்கவில்லை?"   இப்படிப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன. இது போன்ற நாஸ்திகக் கேள்விகளை கேட்டவர்கள் எல்லோரும் படித்தவர்களும் அல்ல. சாதாரண பாமர மக்கள் மனதில் எழுந்த கேள்விகள் அவை. 

ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், கடவுள் நம்பிக்கை மிக்க ஆஸ்திகர்களுக்கு கஷ்டமான காலங்கள். அவர்களால் அந்த "நாஸ்திக கேள்விகளை" எதிர்கொள்ள முடியவில்லை. "  கடவுள் போராளிகள் மூலம் தண்டனை கொடுக்கிறார்."   "  சிங்களப் படையினருக்கு பலத்த இழப்புகள் உண்டாகின்றன..."    "  சிங்கள அரசை வெளிநாடுகள் தட்டிக் கேட்கின்றன..." என்று பதில் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அந்தப் பதில்கள் எல்லா தருணத்திற்கும் பொருந்தாது என்பதை, விரைவில் புரிந்து கொண்டனர். ஏனென்றால், போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும், கடவுளையும், மதத்தையும் மதித்து நடக்கவில்லை. மனித உரிமை நிறுவனங்களைப் பொறுத்த வரையில், அவை எல்லாம் மனித உரிமை மீறல்களுக்குள் அடங்கும். ஆனால், சாதாரண கடவுள் நம்பிக்கையாளர்களை பொறுத்த வரையில், அது அவர்களது நம்பிக்கையை தளர வைத்தது. 

சைவ மத வழிபாட்டு ஸ்தலங்கள் தமிழர்களுக்கு உரியவை என்பதால், சிங்களப் படையினருக்கு அவற்றை அழிப்பதில் மனச் சஞ்சலம் எதுவும் உண்டாகவில்லை.  பெரும்பாலும் பௌத்தர்களான சிங்களப் படையினர், சைவக் கோயில்களில் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. தங்களது கொடுஞ்செயலால் கோபமுறும் கடவுள் தங்களை தண்டித்து விடும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. மறு பக்கத்திலும், தமிழர் தரப்பிலும் அதே நிலைமை தான் காணப்பட்டது. பௌத்தர்கள் நம்பிய புத்தனுக்கோ, அல்லது இஸ்லாமியர் நம்பிய அல்லாவுக்கோ, புலிகள் அஞ்சியதாகத் தெரியவில்லை.   

ஈழப்போர் தொடங்கிய, 1984 ம் ஆண்டு, யாழ் நகரில் இருந்த ஒரேயொரு புத்த கோயிலை, புலிகள் கிரனேட் வீசி உடைத்தார்கள். கண்டியில் பௌத்தர்களின் மிகப் புனிதமான கோயிலான தலதா மாளிகைக்கு குண்டு வைத்தார்கள். காத்தான்குடியில் இஸ்லாமியர் தொழுத பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட்டார்கள். அறந்தலாவையில் புத்த பிக்குகளை கொலை செய்தார்கள். அதனால், புலிகளை எந்தக் கடவுளும் தண்டிக்கவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தார்கள். ஈழத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புலிகளுக்கான ஆதரவு குறையவில்லை.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அறந்தலாவை புத்த பிக்குகளின் கொலைச் சம்பவத்திற்கு காரணமான கருணா அம்மான், இன்று ஸ்ரீலங்கா அரசினால் அமைச்சர் பதவி கொடுத்து கௌரவிக்கப் பட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசு, ஒரு சிங்கள- பௌத்த பேரினவாத அரசாக இருந்த போதிலும், எல்லாக் காலங்களிலும் பௌத்த மதத்தை மதித்து நடக்கவில்லை. ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலங்களில், அரச படையினர், நூற்றுக் கணக்கான புத்த பிக்குகளை சுட்டுக் கொன்றார்கள். அரச படையினர் கைது செய்த மக்களை சித்திரவதை செய்யவும், கொன்று புதைக்கவும், புத்த கோயில்களை பயன்படுத்தினார்கள். 

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், கடவுள் இல்லையெனும் நாஸ்திகவாதம், ஏராளமான தமிழ் மக்கள் மனதில் தானாகவே தோன்றியது. ஆனால், புலிகள் உட்பட, எந்தவொரு ஈழ விடுதலை இயக்கமும், ஈழத் தமிழர்கள் மத்தியில் நாஸ்திகவாதக் கருத்துக்களை வளர்த்தெடுக்கவில்லை. அதற்குக் காரணம் கடவுளோ, மதமோ அல்லது ஆன்மீகமோ அல்ல. இன்றைக்கும் மத நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அரசியல் ஆதிக்கம் காரணம். அந்தப் பிரிவினர், சமூகத்தில் கடவுள், மதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வந்தாலும், பொருளாதார பலம் மிக்கவர்களாக உள்ளனர். புலிகள் எந்தக் காலத்திலும், அந்த அரசியல்- பொருளாதார சக்தியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, February 05, 2014

ஈழப் போராட்டமும், ஸ்டாலின் ஆட்சியும் - சில ஒற்றுமைகள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஏழாம்  பாகம்)


ஸ்டாலின் பற்றிய மீள்பார்வை என்பதன் அர்த்தம், ஸ்டாலின் செய்த தவறுகளை நியாயப் படுத்துவதல்ல. ஒரு வரலாற்று நாயகனை, அன்றைய வரலாற்று காலகட்டத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். உதாரணத்திற்கு, “முஸ்லிம்களின் இறைதூதர் ஒரு முகமது ஒரு பயங்கரவாதி, பல இலட்சம் பேரைக் கொன்ற கொலைகாரன்…” என்று, ஐரோப்பாவில் சில தீவிர வலதுசாரி கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்குவதற்கான போரில், முகமது நேரடியாகவே நிறையக் கொலைகளை செய்திருக்கலாம். ஆனால், அவற்றை 1500 வருடங்களுக்கு முன்பிருந்த அரேபியாவின் சமூக - அரசியல் நிலைமையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று அதியுயர்ந்த நாகரீகம் அடைந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் மேலைத்தேய நாடுகளிலும் அது தான் நிலைமை. இன்றைக்கு நாம் மதிக்கும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு, 19 ம் நூற்றாண்டில், அல்லது 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தோற்றப்பாடு தான். அப்போது கூட, பெண்களுக்கும், வருமானம் குறைந்த ஏழைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. அது வரையும், ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கொடூரமான சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தனர். பல ஐரோப்பிய நாடுகளில், மன்னராட்சி, அல்லது நிலப்பிரபுத்துவ ஆட்சி நிலவியது.

பிரிட்டனில், குரொம்வெல் மன்னராட்சியை தூக்கி எறிந்து விட்டு, பாராளுமன்ற ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால், அதற்காக பிரிட்டிஷ் மக்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சுருக்கமாக, "குரொம்வெல் இன்னொரு ஸ்டாலின் மாதிரி… அல்லது ஸ்டாலின் இன்னொரு குரொம்வெல் மாதிரி" என்று கூறலாம். பிரிட்டனில் பாராளுமன்றம் தோன்றிய புரட்சி நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் பல இலட்சம் மக்கள் பலியானார்கள். குரொம்வெல்லுடன் சேர்ந்து போராடிய தோழர்களும், பிற்காலத்தில் கொல்லப் பட்டனர். ஆனால், நாம் ஏன் அதைப் பற்றிப் பேசுவதில்லை? ஏனென்றால், இன்று நாங்கள் அனுபவிக்கும் பாராளுமன்ற முறையின் தோற்றுவாய் அது தான். பிரிட்டனில் ஒரு குரொம்வெல் தோன்றியிரா விட்டால், இன்றைக்கு எந்த நாட்டிலும் பாராளுமன்ற ஜனநாயகம் இருந்திராது.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி பெருமையாகப் பேசும் பலர், அந்தக் காலத்தில் நடந்த படுகொலைகளை அறிந்து வைத்திருப்பதில்லை, அல்லது அறிந்து கொள்ள விரும்புவதில்லை. எனது நண்பர் ஒருவர், முன்பு ட்ராஸ்கியவாதியாக இருந்து, தற்போது தமிழ் தேசியவாதியாக மாறி இருக்கிறார். அவர் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தோன்றிய சர்வாதிகாரி ரொபெஸ்பியர் பற்றி, உயர்வாகப் பேசிக் கொள்வார். பிரபாகரனுடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறுவார். ஆனால், அவருக்கு இன்றைக்கும் ஸ்டாலினைப் பிடிக்காது. கொடுங்கோலன், கொலைகாரன் என்று ஸ்டாலினை வெறுப்பதற்கான காரணங்களை அடுக்குவார். இப்படித் தான் பலர், தமக்குள்ளே முரண்பட்டுக் கொள்கின்றனர்.

ரொபெஸ்பியர் பிரான்சில் என்ன செய்தாரோ, அதையே தான் ஸ்டாலின் ரஷ்யாவில் செய்தார். இருவரும் பல்லாயிரம் பேர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர். ரொபெஸ்பியர், பிரெஞ்சுப் புரட்சியில் முன்னுக்கு நின்று போராடிய தோழர்களையும் விட்டு வைக்கவில்லை. கருத்து முரண்பாடு கொண்ட அத்தனை பேரையும் கழுத்து வெட்டிக் கொன்றான். ரொபெஸ்பியரின் ஆட்சியை, ஒரு பயங்கரவாத ஆட்சி என்று தான் இன்றைக்கும் பல சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், தாம் விடுதலை பெற்று விட்டதாக நம்பிய பிரெஞ்சு மக்கள், ரொபெஸ்பியரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ், எந்த நேரம் கழுத்துக்கு கத்தி வருமோ என்று பயந்து கொண்டு வாழ்ந்தனர். இருந்தாலும், ரொபெஸ்பியர் ஆட்சியினால் ஒரு நன்மை விளைந்தது. ஆட்சியை விட்டு அகற்றப்பட்ட மன்னர்களும், நிலப்பிரபுக்களும் மீண்டும் தலை காட்டவில்லை. இன்று, எந்தவொரு உலக நாட்டிலும், முன்பிருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ- மன்னராட்சி இல்லையென்றால், அதற்கு ரொபெஸ்பியரின் கொடுங்கோன்மை ஒரு முக்கிய காரணம்.

ஸ்டாலினை விமர்சிக்கும் பலர், மேற்குறிப்பிட்ட வரலாற்றுக் காரணிகளை கவனத்தில் எடுப்பதில்லை. ஸ்டாலின் ஆட்சியில், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், இலட்சக் கணக்கானோருக்கு பேர் மரண தண்டனை விதிக்கப் பட்டது. “மக்கள் விரோதி” என்ற குற்றச்சாட்டில் தான், அநேகமான கைதுகள் இடம்பெற்றன. சார் மன்னராட்சி ஆதரவாளர்கள், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், எதிர்க் கட்சியினர், ஆகிய “வழமையான” சோவியத் அரச எதிர்ப்பாளர்கள், எப்போதும் போல கைது செய்யப் பட்டனர்.

ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் கூறுவது போன்று, மேற்குறிப்பிட்ட அரச எதிர்ப்பாளர்கள் மட்டும் கைது செய்து, கொலை செய்யப் படவில்லை என்பது உண்மை தான். ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் கூட கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர். சில நேரம், அவர்களது மனைவிமாரும் கைது செய்யப் பட்டனர். அவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். தந்தையும், தாயும் கைதானதால், திடீரென அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்ட அவர்களது பிள்ளைகள், அநாதை இல்லங்களில் சேர்க்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப் பட்ட சந்தர்ப்பங்களில், அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு கீழ் வேலை செய்தவர்கள், என்று ஒரு பெரும் பட்டாளமே ஒட்டுமொத்தமாக கைது செய்யப் பட்டது. மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், அது அவரது மனைவி, பிள்ளைகளாக இருந்தால் கூட, குற்றம் சாட்டப் பட்டவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில், அவர் மீதான குற்றச் சாட்டுகளை சுமத்தி, கண்டிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருந்தது. 

இரண்டாம் உலகப்போர் வெடித்தவுடன், முன்னரங்க நிலைகளில், நாஜி படைகளை எதிர்த்து போரிட்ட சோவியத் செம்படை வீரர்களுக்கு, இன்னொரு நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. அவர்கள் யாரும் எதிரியிடம் சரணடையவோ, அல்லது உயிருடன் பிடிபடவோ கூடாது என்று, ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு போட்டார். எதிரியிடம் சரணடைந்த அல்லது பிடிபட்ட படையினரின் மனைவிமார் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். பல வருடங்கள், கடூழிய தடுப்பு முகாம்களில் போட்டு தண்டிக்கப் பட்டனர். (எதிரிப் படையினரிடம் சரணடையுமாறு, மனைவிமாரே தூண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. சில குடும்பங்களில் அப்படியும் நடந்துள்ளது.) 

ஜேர்மனிய நாஜி படையினரிடம் பிடிபட்ட (அல்லது சரணடைந்த) ஸ்டாலினின் மகன் லெப்டினன்ட் யாகோப்பிற்கும், அவனது மனைவிக்கும் அதே அவல நிலைமை ஏற்பட்டது. தனது மகன் என்பதற்காக, ஸ்டாலின் கருணை காட்டவில்லை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்று கண்டிப்பாக கூறி விட்டார்.

ஜெர்மனி, தன்னிடம் பிடிபட்ட ஸ்டாலினின் மகனை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த விரும்பியது. சோவியத் செம்படையினரிடம் பிடிபட்ட, ஜெர்மன் பீல்ட் மார்ஷல் (அல்லது ஹிட்லரின் மைத்துனர்) ஒருவருக்கு பதிலாக, ஸ்டாலினின் மகனை கைதிப் பரிமாற்றம் செய்ய விரும்புவதாக, ஜெர்மனி தகவல் அனுப்பியது. அதற்கு ஸ்டாலின் அனுப்பிய பதில்: “ஒரு லெப்டினன்ட்டுக்கு பதிலாக மார்ஷலை பரிமாற்றம் செய்ய முடியாது. எனக்கு யாகோப் என்ற பெயரில் ஒரு மகன் கிடையாது. எதிரியிடம் சரணடைந்த அத்தனை பேரும் துரோகிகள்.”

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற குற்றச்சாட்டிற்கு வலுச் சேர்பதற்காக, சிலர் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஸ்டாலின் ஒரு பாசிஸ்ட்"  என்று அவதூறு செய்கின்றனர். ஏற்கனவே, மேற்கத்திய நாடுகளில், ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசும் போக்கு பரவலாக இருந்து வருகின்றது. சில தமிழர்களும் அதனை அப்படியே உள்வாங்கி, நம்மிடையே வாந்தி எடுத்து வருவது தெரிந்த விடயம்.

ஆப்பிளையும், தக்காளியையும் ஒப்பிட முடியாது. எதை எதனுடன் ஒப்பிடுவது என்றில்லாமல், பலர் குதர்க்க வாதம் செய்கின்றனர். உதாரணத்திற்கு, பிரபாகரனையும், மகிந்த ராஜபக்சவையும் ஒப்பிட்டுப் பேசும் சிலர் இருக்கின்றனர். ஆனால், அந்த ஒப்பீடு, புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகளின் காதுகளுக்கு எட்டினால், திட்டோ திட்டென்று திட்டி, சொன்னவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். ஆனால், அவர்கள் கூட, சில நேரம், ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒப்பிடும் தவறைச் செய்கின்றனர். (அது அவர்களது வலதுசாரி முதலாளிய நம்பிக்கையின் வெளிப்பாடு.)

“தமிழின அழிப்புப் போரை நடத்திய, சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்சவுடன், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரனை ஒப்பிட முடியாது.” உண்மை தான். அதே நியாயம், அன்று ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த, பாசிச இனவெறிப் பூதத்தை எதிர்த்துப் போரிட்ட, ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்பதை பலர் உணர்வதில்லை.

முதலில், பாசிஸ்ட் என்ற சொல்லையே, பலர் அதன் அர்த்தம் தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தாலியில் தோன்றிய முசோலினியின் பாசிஸ்ட் கட்சி, பாசிசம் என்ற சொல்லை நவீன உலகிற்கு அறிமுகப் படுத்தியது. “தீவிர தேசியவாதம், தனது இனம் அல்லது மொழி உலகிற் சிறந்தது என்ற எண்ணம், தாம் ஆளப் பிறந்த இனம் என்ற கோட்பாடு, தன்னைச் சுற்றிய பிற இனங்களை தாழ்வாக கருதுவது…” இது போன்ற பல கொள்கைகளை கொண்டது தான் பாசிசம்.

ஹிட்லரின் நாஜிசம், இன்னும் ஒரு படி மேலே சென்று, இனவெறிக் கொள்கையை புகுத்தியது. ஐரோப்பிய வெள்ளை இனத்தை, (ஹிட்லரின் மொழியில்: தூய ஆரிய இனம்) மனித நாகரீக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள இனமாக கருதியது. யூதர்கள், ஜிப்சிகள், ஸ்லாவியர்கள், கருப்பர்கள் போன்ற பிற இனங்களை மனிதர்களாக கருதவில்லை.

ஹிட்லரும், நாஜிகளும், பிழையான இனத்தில் பிறந்த காரணத்திற்காக பலரைக் கொன்று குவித்தார்கள்.  இனவெறி, அந்தக் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. ஹிட்லரின் தடுப்பு முகாம்கள், யூதர்கள், ஜிப்சிகள் போன்ற “தாழ்ந்த” இனங்களை சேர்ந்த மக்களை, ஒரே இடத்தில் வைத்திருந்து, அழித்தொழிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டன. ஆனால், சோவியத் யூனியனில் இருந்த குலாக் சிறை முகாம்களின் நோக்கம் வேறு. அங்கு சிறை வைக்கப் பட்டிருந்த கைதிகள் மரணத்தை எதிர்நோக்கி இருக்கவில்லை. சில இடங்களில், குலாக் கைதிகளுக்கு பதவியும், கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப் பட்டது. தண்டனைக் காலம் முடிந்து, விடுதலையாகும் நேரம், கைநிறையப் பணத்துடன் வீடு திரும்பியவர்கள் ஏராளம். 

ஸ்டாலின் காலத்தில், வர்க்க எதிரிகள் என்று அடையாளம் காணப் பட்டவர்கள் மட்டுமே சிறைப் பிடிக்கப் பட்டனர். எந்தவொரு கைதுக்கும், கொலைக்கும் பின்னால் இனவெறி காரணமாக இருக்கவில்லை. (இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியனின் ஐரோப்பிய கண்டப் பகுதியில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனங்கள், பலவந்தமான இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், அன்று அவர்களுக்கு ஏற்பட்ட அத்தனை கொடுமைகளையும், ரஷ்யர்களும் அனுபவித்தனர் என்பதை மறந்து விடுகின்றனர். )

“போரில் யாரும் உயிருடன் பிடிபடவோ, சரணடையவோ கூடாது” என்று ஸ்டாலின் போட்ட உத்தரவு, பலருக்கு மனிதநேயமற்றதாக தோன்றும். சரணடைந்த அல்லது பிடிபட்ட இராணுவவீரர்களின் மனைவிமாரையும், ஸ்டாலின் சிறையில் போட்டு வருத்தினான். அதனால், அவன் ஒரு மனிதநேயமற்ற கொடுங்கோலன் என்பதற்கு அதைக் காரணமாக காட்டலாம். ஸ்டாலின் மீதான் அவர்களது குற்றச்சாட்டுக்கு பக்க பலமாக இன்னொரு தகவலையும் நானே சொல்லி விடுகிறேன். 

ஜெர்மனியுடன் போர் தொடங்கிய காலத்தில், போர்க் களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடும் இராணுவ வீரர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லவும் என, NKVD யின் விசேட பிரிவொன்று இயங்கியது. போர்க் களத்தில் இருந்து தப்பியோடும் வீரர்களை தண்டிக்கும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. போரில் பின்வாங்கும் போராளிகளை சுட்டுக் கொல்லும் வழக்கம், புலிகள் அமைப்பினுள்ளும் இருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்றைய நாகரிக சமுதாயத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம். போர் நடக்கும் காலங்களில், அறம் காணாமல் போய் விடுகின்றது. போரில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல கடுமையான விதிகள் பின்பற்றப் படுவதுண்டு. நாங்கள் எப்போதும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் சிந்திக்கப் பழகி விட்டதால், எமக்கு அவை அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், கீழைத்தேய கலாச்சாரத்தில் அவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

ஒரே கொள்கை கொண்ட எல்லோரும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். உதாரணத்திற்கு, ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவனும், இந்தியக் கிறிஸ்தவனும், ஒரே மதத்தை, ஒரே கடவுளை நம்பும் காரணத்தால், ஒரே மாதிரி செயற்படுவார்களா? அதே மாதிரி, ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் தான். ஆனால், அவரது செயற்பாடுகள் பல, மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு கூட விசித்திரமாகத் தோன்றும். ஏனென்றால், அவர்கள் பிறந்து வளர்ந்த கலாச்சாரம் வேறு வேறு. 

தயவுசெய்து, யாரும் இதனை ஒரு "நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறு" என்று குதர்க்கமாக விவாதிக்க வேண்டாம். அது ஒரு மேலைத்தேய கண்ணோட்டம். அப்படியானால், நாங்கள் எமது தமிழ்க் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோமா? ஒரு தமிழன் முஸ்லிமாக, கிறிஸ்தவனாக, லிபரலாக, கம்யூனிஸ்டாக அல்லது வேறெதுவாக இருந்தாலும், அவனது பண்பாட்டுக் குணாம்சம் மாறுபடாது.

சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள், அன்று நடந்த கொடுமைகளுக்கு காரணமாக, கலாச்சாரப் பின்னணியை ஆராய விரும்புகினர். ஸ்டாலின் ஜோர்ஜிய இனத்தை சேர்ந்தவர். ஜோர்ஜியாவில் பிறந்து, வளர்ந்தவர். ஸ்டாலினின் பல செயல்களில், ஜோர்ஜிய கலாச்சாரத்தின் தாக்கம் இருந்திருக்கக் கூடும். ஜோர்ஜியர்கள், தோற்றத்தில் பிற ஐரோப்பியர்கள் மாதிரி இருப்பார்கள். ஆனால், அவர்களது கலாச்சாரம் கீழைத்தேய மரபு சார்ந்தது. சுருக்கமாக சொன்னால், ஒரு ஆங்கிலேயனை விட, ஒரு இந்தியன் ஜோர்ஜிய கலாச்சாரத்திற்கு நெருக்கமாக உணர்வான்.

ஜோர்ஜியா பல நூறாண்டுகளாக, துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அதனால் துருக்கிய கலாச்சாரத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதே நேரம், ரஷ்யாவும், அதனோடு அண்டிய சிறிய நாடுகளும், பல நூறாண்டுகள் மொங்கோலியர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. மொங்கோலியர்கள் ஒரு துருக்கி இனத்தை சேர்ந்தவர்கள். மொங்கோலிய துருக்கியரின் அரசியல், இராணுவ, கலாச்சார தாக்கத்தின் விளைவாக, மொஸ்கோவை மையமாகக் கொண்ட ரஷ்ய ராஜ்ஜியம் தோன்றியது. இன்றைக்கும் அதற்கு சாட்சியமாக, கிரெம்ளின் கட்டிடம் உள்ளது. 

மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி இனத்தவர்களின் பண்பாடுகளும், போர்க் கால நெறிகளும் விசித்திரமானவை. (நாங்கள் “தமிழ்க் கலாச்சாரம்” என்று நம்பும் பல விடயங்களின் மூலம் துருக்கி கலாச்சார மரபு ஆகும்.) கீழைத்தேய மரபில், சமூகம் ஒருவரை குற்றவாளியாக கருதினால், அவரது குடும்பத்தினரும் ஒதுக்கப் படுவார்கள். எவ்வாறு பழிவாங்கும் படலத்தில், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு, தமிழ் சினிமாவை பார்த்தாலே போதும். ஒருவன் கொலை செய்யப் பட்டால், அவனுக்காக பழிவாங்க மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்பது, அதற்கு கூறப் படும் காரணம்.

ஸ்டாலின் காலத்தில், ஒருவர் மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டு விட்டால், அவரோடு சேர்ந்த உறவினர்கள், நண்பர்களும் கைது செய்யப் பட்டதன் காரணம் அது தான். சில நேரம் அவர்கள் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கலாம், அல்லது யாருக்கும் தீங்கு விளைவிக்காத அப்பாவியாகவும் இருக்கலாம். ஆனால், “ஒரு ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளும்” நடவடிக்கை காரணமாக, அப்பாவிகள் பலரும் பாதிக்கப் பட்டனர்.

தமிழர்களுக்கு, அவர்களுக்கு நன்கு தெரிந்த சில உதாரணங்கள் மூலம் அதனை புரிய வைக்கலாம். ஈழப் போராட்டத்தில், புலிகள் பிற இயக்கங்களை “சமூக விரோதிகள்” அல்லது “இந்திய, இலங்கை அரசுகளின் கைக்கூலிகள்” போன்ற காரணங்களை கூறி, அவற்றை தடை செய்திருந்தனர். அப்போது, தடைசெய்யப் பட்ட உறுப்பினர்கள் மட்டும் கைது செய்யப் பட்டு சுட்டுக் கொல்லப் படவில்லை. சில நேரம், நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப் பட்டனர்.

புலிகள் அமைப்பினுள்ளே பிளவுகள் தோன்றிய காலங்களிலும், பழிவாங்கும் படலம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒட்டு மொத்தமாக, பிரிந்து சென்ற எல்லோரையும் தண்டிப்பதன் மூலம் தான், அந்தக் கலகங்கள் ஒடுக்கப் பட்டன. மாத்தையா குழு, கருணா குழு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்ட காலத்தில், ஒரு குற்றமும் செய்திராத அப்பாவி உறுப்பினர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். புலிகளால் சமூக விரோதி, அல்லது ஒட்டுக் குழு உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் சந்தேகத்திற்குள்ளானார்கள்.

ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஸ்ரீலங்கா அரச படையினரும், ஜேவிபி யினரும், ஆயுதமேந்திய நபர்களை மட்டும் குறி வைக்கவில்லை. அவர்களோடு தொடர்பான, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் பாதிக்கப் பட்டனர். அவ்வாறு தான் போரில் பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர்.

மேலே குறிப்பிட்டது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எதற்காக அப்படி மனிதநேயமற்று நடந்து கொண்டார்கள்? அதைத் தான் இங்கே "கீழைத்தேய கலாச்சார மரபு" என்று குறிப்பிடுகின்றேன். இப்போதும் சில புலி ஆதரவாளர்கள் மத்தியில், அத்தகைய மனப் போக்கு காணப் படுகின்றது. அவர்கள் எந்த அளவுகோலை வைத்து மற்றவர்களுக்கு துரோகி முத்திரை குத்துகின்றார்கள் என்பதை சற்று ஆராய்ந்தால் போதும். ஸ்டாலின் காலத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.

இங்கே ஒரு வித்தியாசம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் என்ற தனி மனிதனே காரணம், என்று ஒட்டு மொத்த பழியையும் அவரின் தலை மேல் போட்டு விடுகின்றனர். பிரபாகரன் என்ற தனி மனிதன் மேல் எல்லாப் பழியையும் போட்டு விட்டு, புலிகளை ஆதரித்த மக்களில் ஒரு பிரிவினர், தமது பொறுப்புகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வது போன்றது தான் இதுவும். அன்று ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கலாம். ஆனால், ஸ்டாலினை ஆதரித்த பெரும்பான்மை சோவியத் மக்களும் அன்று நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

புலிகள் இயக்கம் விட்ட பல தவறுகள், தமிழ் மக்களை பகைத்துக் கொண்ட நடவடிக்கைகள், "தலைவர் பிரபாகரனுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம்" என்று, இன்றைக்கும் பலர் நம்புகின்றனர். ஸ்டாலின் கால சோவியத் யூனியனிலும், அத்தகைய நிலைமை இருந்தது. எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் கைது செய்யப் பட்டதற்கு, சில NKVD அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அதிகார துஷ்பிரயோகம் காரணம் என்று மக்கள் நம்பினார்கள். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது என்று தான் நம்பினார்கள். சில இடங்களில் அது துலக்கமாகத் தெரிந்தது. 

ஒருவரது வசதியான வீட்டை அபகரிக்க நினைத்தவர்கள், ஒருவரது அழகான மனைவி மீது ஆசைப் பட்டவர்கள், ஒருவரது திறமை மீது பொறாமை கொண்டவர்கள், இப்படிப் பல தனிப்பட்ட காரணங்களுக்காக, தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த NKVD அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றனர்.

இறுதியில், NKVD உளவு நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஏசுவா மீது மக்களின் சந்தேகம் திரும்பியது. ஏசுவா பற்றி பல வதந்திகள் உலாவின. உண்மையிலேயே, ஏசுவா தனது இறுதிக் காலத்தில், ஆடம்பர வாழ்க்கையிலும், சிற்றின்பக் களியாட்டங்களிலும் பொழுதைக் கழித்து வந்தார். இந்தத் தகவல் எல்லாம் ஸ்டாலினின் காதுகளை எட்டியது. ஏசுவாவும் மக்கள் விரோதி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டார்.

2 பெப்ரவரி 1940 அன்று, NKVD தலைமையகத்தில், ஏசுவா பல அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்ற அதே இடத்தில் வைத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஜெர்மன், போலிஷ் அரசுகளுக்கு உளவு பார்த்ததாக, மிகக் கடுமையான தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஏசுவா மீது சுமத்தப் பட்டது. ஏசுவா சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர், “ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று அழைக்கப்படும் காலம் முடிவுக்கு வந்தது. 

உண்மையில், அன்று சோவியத் யூனியனில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலகட்டத்தை “ஏசுவா பயங்கரவாதம்” என்று தான் கூறி வந்தனர். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள், அதனை “ஸ்டாலினிச  பயங்கரவாதம்” என்று திரித்தார்கள். NKVD யின் புதிய தலைமை அதிகாரியாக, பெரியா பதவியேற்ற பின்னர், அனைத்து அரசியல் கைதிகளின் கோப்புகளும் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. 

கவனிக்கவும்: "ஸ்டாலின் எத்தனை இலட்சம் பேரை கொன்றான்" என்று, புள்ளி விபரக் கணக்கு காட்ட நிறையப் பேர் உள்ளனர். ஆனால், ஸ்டாலினது காலத்திலேயே, இலட்சக் கணக்கான கைதிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டார்கள் என்ற உண்மையை சொல்ல மாட்டார்கள். 

1940 ம் ஆண்டு வரையில், ஒன்றரை மில்லியன் கைதிகளின் வழக்குகள் திரும்பவும் விசாரிக்கப் பட்டன. இன்னமும் தீர்ப்பு சொல்லப் படாமல், நிலுவையில் இருந்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோரின் வழக்குகள் இரத்து செய்யப் பட்டன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டனர். சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த முப்பதாயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப் பட்டனர். அத்துடன், குலாக் தடுப்பு முகாம்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் விடுதலை செய்யப் பட்டனர்.

இந்த நடவடிக்கை காரணமாக, சோவியத் மக்களுக்கு, சோவியத் நீதித் துறை மீது நம்பிக்கை வந்தது. உண்மையில், ஸ்டாலின் அன்று சோவியத் நாட்டில் நடந்த எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்ததால் தான், பெருந்தொகையான நிரபராதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எந்தக் காரணமும் இன்றி, ஒட்டு மொத்தமாக பலரை கைது செய்வதால், எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பதை ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆதாரம், சாட்சியம் எதுவுமற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப் பட வேண்டும் என்று கருதினார்.

மேலும், எழுந்தமானமாக பலரைக் கைது செய்வதன் மூலம், தேசத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்டதாக, தற்பெருமை அடித்துக் கொண்ட அதிகாரிகளும் இருந்தனர். போலி என்கவுண்டர் செய்து விட்டு, பதவி உயர்வை எதிர்பார்க்கும், நம்மூர் பொலிஸ் அதிகாரிகள் போன்று தான் அவர்களும் நடந்து கொண்டனர். அப்படியான, பதவிப் பித்தர்கள் ஸ்டாலினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர்.

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்பதை நிரூபிக்க, ஸ்டாலினால் கொல்லப்பட்ட, கொடுமைப் படுத்தப் பட்ட மக்களின் எண்ணிக்கையை, புள்ளி விபரமாக எடுத்துப் போட்டு, நம்மை எல்லாம் அசர வைக்கும் அறிவுஜீவிகளுக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரியாதா? அவர்கள் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதால், ஸ்டாலினின் மறுபக்கமும் தெரிந்திருக்கும். ஆனால், அதை எல்லாம் மறைக்க வேண்டிய தேவை ஒன்று, அவர்களது மனதைப் பிடித்தாட்டுகின்றது. அது என்ன?

அன்றைய சோவியத் வரலாற்றை, நாங்கள் இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். சரி, நமது அறிவுஜீவிகள் சொல்வது மாதிரியே, அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க, ஸ்டாலின் நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும்? இன்றைய உலக அரசியல் நிலவரம்,  முற்றிலும் வேறு விதமாக காட்சியளித்திருக்கும்.

(தொடரும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!
6.“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்