Friday, May 19, 2017

இடதுசாரி வெறுப்பு அரசியலின் எதிர்காலம்

தமிழீழத்திற்கு ஆதரவான ஐரிஷ் இடதுசாரிகளின் சுவரோவியம்.
படத்திற்கு நன்றி: Sinthujan Varatharajah

"வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ எந்த‌ தேசிய‌ இன‌ விடுத‌லைப் போராட்ட‌மும் முழுமைய‌டைய‌ சாத்திய‌மில்லை."
- புற‌ம்போக்கு ப‌ட‌ வ‌ச‌ன‌ம்

தொண்ணூறுகளுக்குப் பின்னரான காலத்தில், மார்க்சியத்தை கைகழுவி விட்டு, புதிய சித்தாந்தங்களை தேடி ஓடியோர் பலருண்டு. சிலர் பின்நவீனத்துவத்தை தூக்கிப் பிடித்தனர். வேறு சிலர் தேசியவாத அரசியலே சமூக விடுதலைக்கான வழியெனக் கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன். தேசியவாதக் கருத்தியலை நியாயப் படுத்துவதற்காக இடதுசாரிகள் மீது சேறடிக்க தயங்காதவர். 

அண்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதி வெளியான "ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்" என்ற நூலிலும், இடதுசாரிகள் மீதான வெறுப்பை காட்டியுள்ளார். 

போலி இடதுசாரி யமுனா ராஜேந்திரனின் திரிபுவாதங்களுக்கு எதிரான எதிர்வினைகள்:

//மார்க்சியரான அப்துல்லா ஒச்சலான் தமது மக்களின் இனவிடுதலைக்காக அமெரிக்க ‘ஏகாதிபத்தியத்தின்’ தலையீட்டைக் கோரும் காலமும், மார்க்சியரான கிழக்குதிமோரின் சனான குசாமா மேற்கத்திய அமெரிக்கத் தலையீடுகளின் பின் கிழக்கு திமோர் எனத் தனிநாடு பெற்றதுமான வரலாறு கொண்ட காலமும் இதுதான்.// 
- (யமுனா ராஜேந்திரன் - மரணத்தின் நிழல்: போராளிகளும் வெகுமக்களும்)

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், மேற்குலக ஆதரவைக் கோருவது தவறல்ல என்பது தான் இவரது வாதம். இவரது உதாரணத்திலேயே முரண்பாடு துலக்கமாக தெரிகின்றது. கிழக்கு தீமோர் விடுதலை அடைய உதவிய அதே மேற்கத்திய நாடுகள், குர்திஸ்தான் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏனோ?

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்று காரணம் சொன்னாலும், ஈராக்கில் சுதந்திர குர்திஸ்தான் உருவாவதை அமெரிக்கா இன்று வரையில் விரும்பவில்லை. இத்தனைக்கும் அங்கு ஒச்சலான் மாதிரி மார்க்சியத் தலைவர் எவரும் இருக்கவில்லை. ஈராக் போரில், குர்திஷ் படையினர் அமெரிக்கப் இராணுவத்துடன் ஒத்துழைத்த படியால் தான், சதாம் ஹுசைனை அகற்ற முடிந்தது. அந்த நன்றிக் கடனுக்காக ஆவது, அமெரிக்கா குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரித்திருக்கலாம் அல்லவா?

//"ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன்"// 
- ('ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' நூலில் யமுனா ராஜேந்திரன்.)

ஸ்டாலின், மாவோ என்று யாருமே விமர்சனம் இன்றிக் கொண்டாடப் படவில்லை. ஸ்டாலின் மீது மாவோ விமர்சனம் வைத்தார். மாவோவும், குருஷேவும் பகைமை வருமளவிற்கு விமர்சனங்களால் முரண்பட்டனர். அந்த விவாதங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் நடந்து வந்தன. அபிமால் குஸ்மான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டிருந்தார்.

அப்துல்லா ஒச்சலான் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்சியம் பேசினாலும், அவரது தீவிர தேசியவாத நடைமுறைகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டார். அதே மாதிரி, யாசிர் அரபாத்தும் வலதுசாரி தேசியவாதம், மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்காக எப்போதும் விமர்சிக்கப் பட்டார். மேற்படி உதாரணங்களில் கடுமையாக விமர்சிக்கப் படாதவர் யாரும் இல்லை.

அப்துல்லா ஒச்சலான், யாசிர் அரபாத் மாதிரி, பிரபாகரனை 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் வேண்டுகோள் விடுக்கிறார். இனத்தின் பேரில், மொழியின் பேரில், பெருமளவு மக்களை அணிதிரட்டும் சக்தி தேசியவாதத்திற்கு உண்டு.

அதுவே தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம். அதாவது, ஏகாதிபத்தியத்தால் முண்டுகொடுக்கப் படும் நவ காலனிய அரசுக்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சமூக மக்களை அணிதிரட்டி போராட வைக்க முடிகின்றது. மார்க்சிய பகுப்பாய்வின் படி, தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு வளர்ச்சிக் கட்டம். அதை யாரும் மறுக்கவில்லை.

தேசிய இன விடுதலைப் போராட்டத் தலைவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், ஏகாதிபத்திய அழுத்தம் காரணமாக மிதவாத நிலை எடுக்கிறார்கள். கிழக்குதிமோரின் சனான குசாமா, பாலஸ்தீனத்தின் யாசிர் அரபாத் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணியாத தலிவர்கள், தனிநாடு சாத்தியமில்லை என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் அப்துல்லா ஒச்சலான், குர்திஸ்தான் தனிநாடாவது சாத்தியமில்லை என்றும், துருக்கியை ஜனநாயக மயப் படுத்தும் குறிக்கோளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். பிரபாகரனும் ஏறத்தாள அதே நிலைமையில் தானிருந்தார். இறுதிப்போரில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, இறுதி மூச்சுள்ள வரை போராடிச் சாவது என்ற முடிவெடுத்திருந்தார்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி புகழ்ந்து பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்பது போல யமுனா ராஜேந்திரன் எழுதி இருப்பது, எந்த வகையான மார்க்சிய பகுப்பாய்வு என்று தெரியவில்லை. புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி வந்தனர். மன்னர்கள் அல்ல, மக்களின் வரலாறே எமக்கு முக்கியம் என்றது மார்க்சியம்.

அந்த வகையில் எந்தத் தலைவரும் முக்கியமல்ல. அவர்களைப் பின்பற்றிய மக்கள் தான் முக்கியம். அந்தத் தலைவர்கள் தம் மக்களுக்கு என்ன செய்தார்கள்? அது தான் முக்கியம். தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதல்ல, புலி இயக்க போராளிகளையும், தமிழ் மக்களையும் புரிந்து கொள்வது தான் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகும்.

கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிடம் இருந்து அயர்லாந்து விடுதலை அடைவதை ஆதரித்திருந்தார். மார்க்சின் "அயர்லாந்து கொள்கையை" அப்படியே ஈழத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமா? 

கார்ல் மார்க்ஸ் காலத்தில், அயர்லாந்து விவசாயப் பொருளாதாரத்தை கொண்டிருந்தது. அங்கிருந்த நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர்கள் அயர்லாந்தில் உற்பத்தியான விளைபொருட்களை, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். இதனால், ஒரு தடவை அயர்லாந்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இலட்சக் கணக்கான ஐரிஷ் மக்கள் பட்டினியால் இறந்தனர். 

மேலும் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில், சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய இடதுசாரி சக்திகளும் பங்கெடுத்திருந்தன. அயர்லாந்து சுதந்திரமடைந்த காலத்திலும், ஐரிஷ் சோஷலிஸ்டுகளின் கை மேலோங்கி இருந்தது. 

தமிழீழ போராட்டத்தை புலிகள் தலைமை தாங்குவதற்கு முன்னர், ஈழத்தில் ஏறக்குறைய அப்படியான சூழ்நிலை இருந்தது. ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் பல சோஷலிச ஈழம் அமைக்க விரும்பின. 

ஆயினும், அயர்லாந்தையும், ஈழத்தையும் எல்லா விஷயத்திலும் ஒப்பிட முடியாது. உதாரணத்திற்கு, ஈழத்தின் விவசாயப் பொருளாதாரத்தை சிங்கள நிலப்பிரபுக்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. அது தமிழ் நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. 

அயர்லாந்து, ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகளும் இருக்கின்றன.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: