Tuesday, May 09, 2017

சுயநிர்ணயம் என்பதன் அர்த்தம் அமெரிக்காவின் அடிமை நாடாவதல்ல!


சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌து பிரிந்து த‌னி நாடாகி, பின்ன‌ர் அமெரிக்காவுக்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக் கொடுப்ப‌த‌ல்ல‌. லெனின் கூறிய‌ பிரிந்து செல்வ‌த‌ற்கான‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை என்ப‌தன் அர்த்த‌ம், புதிய‌ முத‌லாளித்துவ‌ குடிய‌ர‌சுக‌ளை உருவாக்குவ‌த‌ல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில் ப‌ல‌ர், தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்லாது, சில தமிழ் இடதுசாரிகளும் த‌வ‌றாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

சார் மன்னன் காலத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டது. ஆரம்பத்தில் தலைநகரும் அதை அண்டிய பகுதிகளும் தான் போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள் ரஷ்யாவின் பிறபகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.

அந்த நிலையில், முதலாம் உலகப்போரை முடித்து வைக்கும் வகையில், 1918 ம் ஆண்டு, ஜெர்மனியுடன் Brest - Litovsk எனும் இடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப் படி, ரஷ்யாவின் மேற்கே இருந்த நாடுகள் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் விடப் பட்டன. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜெர்மனியுடன் பொருளாதாரத் தொடர்புகளை கொண்டிருந்தன. அதனால், ஜெர்மனி அவற்றை தனது செல்வாக்கு மண்டலமாக கருதியது.

1919 ம் ஆண்டு, ஜெர்மனி முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னரும், அவை தனி நாடுகளாக தொடர்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரில் தான், அந்த நாடுகள் மீண்டும் சோவியத் யூனியனின் பகுதிகளாக ஒன்று சேர்க்கப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனி நாடுகளான பின்லாந்து, போலந்து ஆகிய இரண்டும் தொடர்ந்து சுதந்திரத்தை பேணுவதற்கு அனுமதிக்கப் பட்டன.

அதே நேரம், ஆர்மேனியா, ஜோர்ஜியா, அஸ‌ர்பைஜான் ஆகிய‌ நாடுக‌ள் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்துட‌ன் உட‌ன்ப‌டிக்கை செய்து கொண்டு த‌னி நாடுக‌ளாக‌ மாறின. அந்த‌க் கால‌த்திலும் "ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம்" என்ப‌த‌ன் அர்த்த‌ம் முத‌லாளித்துவ‌- ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் தான்.

ஜோர்ஜியாவில், தேசியவாதிகள் தலைமையில் ஒரு   மேற்கத்திய பாணி பாராளுமன்றம் உருவானது. அந்த அரசில் ஜோர்ஜிய சமூக ஜனநாயகக் கட்சி பங்குபற்றியது. அதே நேரம், ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷெவிக் புரட்சியாளர்களை ஆதரித்தது.

மேற்படி தனி நாடுகள், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக இருந்துள்ளன.  மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகள், அவற்றின் சுதந்திரத்தை பாதுகாத்தன. ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் உருவான கம்யூனிஸ்ட் அரசை ஒடுக்குவதற்கு, அந்த நாடுகளின் பூகோள அமைவிடம் பெரிதும் உதவியது.

அதாவது, அன்று ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரில், கம்யூனிசப் புரட்சிகர அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள், சார் மன்னனுக்கு விசுவாசமான படையினர் மட்டுமல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா என்று பன்னாட்டுப் படைகள் களமிறங்கி இருந்தன. ஒவ்வொருவரும் தமக்கென சில பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். அத்தகைய குழப்பமான நிலையில் தான், மேற்படி நாடுகள் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அது மட்டுமல்ல, செச்னியா போன்ற ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் தனிநாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன.

லெனின் த‌லைமையிலான‌ போல்ஷேவிக்- கம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர், அந்த‌ நாடுக‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த உள்நாட்டு க‌ம்யூனிஸ்டுக‌ளுட‌ன் தொட‌ர்புக‌ளை எற்ப‌டுத்திக் கொண்ட‌ன‌ர். துருக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய மத்திய ஆசிய பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் யாரும் இருக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் பழமைவாத மதவாதிகளுக்கு எதிரான, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இனங்கண்டு ஊக்குவிக்கப் பட்டன. தமக்கு ஆதரவளித்தால், அவர்களை பதவியில் அமர்த்துவதாக கம்யூனிஸ்ட் செம்படை உறுதியளித்தது.

ரஷ்யாவில் நூற்றுக் கணக்கான வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தன. மன்னராட்சிக் காலத்தில் அவை யாவும் ரஷ்யக் காலனிய நாடுகளாக இருந்தன. ஆர்மேனியா, ஜோர்ஜியா போன்ற வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களை கொண்ட நாடுகள் தாமாகவே தேசிய அரசுக்களை அறிவித்துக் கொண்டன. அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், சுல்த்தான் அரசாட்சியை கொண்டு வர முயன்றனர்.

அந்த நாடுகளில் எல்லாம், போல்ஷெவிக் கட்சிக்கு ஆதரவான அரசியல் சக்திகள் ஊக்குவிக்கப் பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற தேசியவாதிகள், மற்றும் மதவாதிகளுக்கு எதிராக அவர்களை கிள‌ர்ச்சி செய்ய‌ ஊக்குவித்தனர். ச‌ரியான த‌ருண‌த்தில் செம்படையை அனுப்பி ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள். பின்ன‌ர் அவை ஒவ்வொன்றாக இணைக்க‌ப் ப‌ட்டு, 1922 ம் ஆண்டு, தனித்தனி சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

செம்படையின் இராணுவ வெற்றி மட்டும் அதற்குக் காரணம் அல்ல. போரில் வென்ற பின்னர், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப் படும் என்று லெனின் வாக்குறுதி அளித்தமையும் ஒரு முக்கிய காரணம். சுயநிர்ணய உரிமை தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவவில்லை. அது அளவு கடந்தால் மார்க்சிய சர்வதேசியத்தை பாதிக்கும் என்று பலர் வாதாடினார்கள். 

சுயநிர்ணய உரிமையானது பல்லின மக்களுக்கானது மட்டுமே. அதன் அர்த்தம், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட தேசியவாத இயக்கங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்பதல்ல. மக்கள் விரோதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டவர்களில் பல்வேறுபட்ட  தேசியவாதிகளும் அடங்கி இருந்தனர். ரஷ்ய பேரினவாதியாக இருந்தாலும், ஏதாவதொரு சிறுபான்மையினத்தை சேர்ந்த குறுந் தேசியவாதியாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.

சோவியத் யூனியனை கட்டியெழுப்பும் பணியில், Narkomnats என்ற சுருக்கப் பெயரிலான தேசிய விவகாரங்களுக்கான மக்கள் அதிகார சபை குறிப்பிடத் தக்க பங்காற்றியது. முன்பு சார் மன்னனின் கீழ் பணியாற்றிய மானிடவியல் அறிஞர்கள், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை ஏற்று வேலை செய்தனர். ரஷ்யாவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவர்களது உதவி தேவைப் பட்டது.

துறை சார்ந்த அறிஞர்கள், சோவியத் யூனியன் முழுவதும் பயணம் செய்து, பல்லின மக்களிடம் கேள்விக் கொத்துக்களை கொடுத்து நிரப்பிக் கொண்டனர். இனத்தின் பெயர், மொழியின் பெயர், நிரந்தரமான வாழிடம், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப் பட்டன.

தேசிய‌ங்க‌ளை பிரித்து, தேசிய‌ எல்லைக‌ளை தீர்மானித்து, சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ழ‌ங்கி விட்டால், அத‌ற்குப் பிற‌கு அந்த‌ நாடுக‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்து கொள்ள‌லாம் என்று அர்த்த‌ம் அல்ல‌. Gosplan என்ற‌ அர‌ச‌ திட்டமிடல் அதிகார சபை, சோவியத் நாடு முழுவதற்குமான பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை வ‌குத்த‌து. அது சந்தேகத்திற்கிடமின்றி சோஷ‌லிச பொருள் உற்ப‌த்தி முறையை கொண்டிருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ங்க‌ளின் தாயகங்களில் இருந்த சிறு கிராம‌ங்க‌ள் கூட‌, பொதுவுடைமைக் கூட்டுற‌வுப் ப‌ண்ணைத் திட்ட‌த்திற்கு த‌ப்ப‌வில்லை. ஏனெனில், சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்திற்குள், இன்னொரு சிறுபான்மை தேசிய இன‌ம் இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட‌க் கூடாது. எந்த‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்தாலும், ச‌ம‌ உரிமை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

குறிப்பிட்ட‌ ஒரு தேச‌ம் விரும்பிய‌வாறு பொருளாதார‌ முடிவெடுக்க‌ விட்டிருந்தால், அது முத‌லாளித்துவ‌த்தை நாடிச் சென்றிருக்கும். அத‌ற்குப் பின்ன‌ர் அந்த‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்தில், இன்னொரு இன‌ம் ஒடுக்க‌ப் ப‌டும். இப்ப‌டியான‌ விரும்ப‌த் த‌காத‌ விளைவுக‌ள் த‌டுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பாட்டாளிவ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு த‌ரும்.

//அக்டோப‌ர் புர‌ட்சியான‌து முத‌லாளிகளையும், நில‌வுட‌மையாள‌ர்க‌ளையும் வீழ்த்திய‌தால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ ம‌க்க‌ளின் தேசிய‌, கால‌னிய‌ அடிமைச் ச‌ங்கிலி உடைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னால், அனைத்து ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் ஒருவ‌ர் த‌வ‌றாது விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை விடுத‌லை செய்யாம‌ல் பாட்டாளிவ‌ர்க்க‌ம் த‌னது விடுத‌லையை பெற்றுக் கொள்ள‌ முடியாது. அக்டோப‌ர் புர‌ட்சியின் குண‌விய‌ல்பு பின்வ‌ருமாறு அமைந்திருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லையான‌து, தேசிய‌ங்க‌ளுக்கு இடையிலான‌ வெறுப்புண‌ர்வு, இன‌ மோத‌ல்க‌ளை கொண்டிருக்க‌வில்லை. அத‌ற்கு மாறாக, ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌ தொழிலாள‌ர்க‌ள், விவ‌சாயிக‌ளின்‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை, ப‌ர‌ஸ்ப‌ர‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம் மூல‌ம் விடுத‌லை பெற்றுக்கொள்ள‌ப் ப‌ட்ட‌து.

தேசிய‌வாத‌த்தின் பெய‌ரால் அல்ல‌, ச‌ர்வ‌தேசிய‌த்தின் பெய‌ரால் தான் ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லை சாத்தியமாகிய‌து.//

- ஸ்டாலின் (அக்டோப‌ர் புர‌ட்சி நூலில் இருந்து.)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: