Thursday, April 22, 2010

புரட்சியாளர் கட்டுப்பாட்டில் கிரேக்க தொலைக்காட்சி நிலையம்

(April 14, 2010) கிரீஸ், கிரேட்டா (ஆங்கிலத்தில்: Crete) தீவின் தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றிய இடதுசாரி புரட்சியாளர்கள், சில மணிநேரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். "Creta TV " கலையகத்தில் மாலைச் செய்தி வாசித்துக் கொண்டிருந்த அறிவிப்பாளர், அழையா விருந்தாளிகளின் வரவால் திகைப்புற்றார். திடுதிப்பென உள்ளே நுழைந்த சுமார் 70 "அனார்கிஸ்ட்கள்" (இடதுசாரிப் பிரிவொன்றை சேர்ந்தவர்கள்) தொலைக்காட்சி நிலையத்தை சில மணி நேரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை அறிவிப்பாளர் வாசிக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல்லாயிரம் மக்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரடி ஒளிபரப்பில், முதலாளித்துவ அரசை கண்டிக்கும் புரட்சியாளர்களின் அறிக்கை வானலைகளில் தவழ்ந்து சென்றது. இங்குள்ள வீடியோவில் அந்த புரட்சிகர செய்தியறிக்கையை பார்வையிடலாம். கிரேக்க மொழியில் அமைந்திருந்தாலும், ஆங்கில உப தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


அதே தினம், கிரேக்க நாட்டின் பல பாகங்களிலும் ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்ந்தது. பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிரேட்டா தீவின் தலைநகரமான ஹெராக்ளியோனில், ஆளும் கட்சி (PASOK ) அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்டது. அலுவலக மதில் சுவரில் தொங்க விடப்பட்ட ஆளுயர பதாகையில்: "அரசு, மூலதனம், ஊடகம் ஆகியனவையே பயங்கரவாதிகள். புரட்சியாளர்கள் அல்ல." என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருந்தது. மத்திய கிரீசின் பிராந்திய பத்திரிக்கை அலுவலகம் ஒன்று புரட்சியாளர்களினால் கைப்பற்றப் பட்டது. வெளியே தொங்க விடப்பட்ட பதாகையில்: "ஊடகங்களின் ஊடாக போலிஸ் உங்களுடன் பேசுகின்றது." என்று எழுதப் பட்டிருந்தது.

1 comment:

Anonymous said...

please explain IPL matters in a post.

thanks