Monday, April 26, 2010

தற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்?

லையகம் வாசகர்களின் கேள்விக்கு எனது பதில்கள் கீழே. இந்தப் பகுதி வழக்கமான கேள்வி - பதில் போலன்றி விவாத மேடையாக மாறியுள்ளதை அவதானிக்கலாம். வாசகர்கள் தொடர்ந்து கேள்விகளை அனுப்பி வைக்கலாம். மீண்டும் வானத்தின் கீழே உள்ள அனைத்தையும் பற்றி விவாதிப்போம். நன்றி. - கலையரசன்
************************************************************

கேள்வி : வணக்கம் கலைஅரசன்!
உணமையில் தற்கொலை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில அறிமுகப்படுத்தியவர்கள் யார்?. இஸ்புல்லா தேசம் கட்டுரையை படித்தவுடன் சிறு சந்தேகம். தெளிவுபடுத்தவும். (பிரகாஷ்)

பதில்: தற்கொலைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "இஸ்மாயில்" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொலைக் கொலையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொலைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொலைப் படையே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து புலிகளும் நவீன தற்கொலைத் தாக்குதல் உத்திகளை கற்றுக் கொண்டார்கள்.

கேள்வி: நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும் ஜிடிவியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் இலங்கை தமிழர்கள் பால் உள்ள கரிசனத்தை பற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. கேட்கும் போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவின் கொடூர அணுகுமுறை பற்றி யுடியூப் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். (பிரகாஷ்)

பதில்: நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை அறிந்திருக்கவில்லை. நேபாளம் முதல் ஈழத்தமிழர் வரை இந்தியாவின் கரிசனமும், அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. தமிழ் தேசியத்தின் அபிலாஷைகள் இந்திய சாம்ராஜ்யத்தின் வழியை தடை செய்கின்றன. இந்தியா எழுபதுகளில் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவியதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா?
மேலாதிக்க எண்ணம் கொண்ட பிராந்திய வல்லரசின் சுயரூபம் தமிழருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்ததா? இந்தியா தாய்நாடு என்று நம்பியிருந்த தமிழர் சிலருக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது.

கேள்வி:
கடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வுகள் பற்றி அறியும் பொழுது இயல்பாகவே சில சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. அந்த வகையில் இலங்கையில் இந்திய தலையீடுகள் பற்றி அறிந்துகொண்டிருந்த பொழுதுகளில்! பொதுவாகவே இந்தியாவின் இலங்கை தலையீடு என்பது அதன் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருந்துள்ளது. தமிழர் பிரச்சினை அதற்கு ஓர் துருப்புச்சீட்டு என்பது தெளிவான உண்மை. அப்படி இருக்கையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் தான் இந்திய புலிகள் முரண்பாடு தோன்றியதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கமுடியும். ராஜீவை படுகொலை செய்திருக்காவிட்டலுமே ஏதேனும் ஒரு வழியில் இந்திய புலிகள் முரண்பாடு தொடரத்தான் செய்திருக்குமே என நான் சந்தேகப்படுகின்றேன். உங்களுடைய விளக்கமும் வேண்டுகின்றேன். ஒரு பக்கம் போராளி குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கிக்கொண்டே மறுபக்கம தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழர் பிரதேசங்களில் இந்திய படை கஞ்சா பயிரிட்ட கதையொன்றை அறிந்திருந்தேன். (பிரகாஷ்)

பதில்: எல்லோரும் தனது நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர். அதிலே இந்திய மத்திய அரசு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கொலையை இந்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னர், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அரசியல் அடக்குமுறையாக மாற்றியது. இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது, தனது நன்மை கருதியே. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே அதன் நோக்கம். இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அந்த தேவை இருக்கவில்லை. இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. பங்களாதேஷை சேர்ந்த முக்திவாகினி, திபெத்தை சேர்ந்த தலாய்லாமா கோஷ்டி, பாகிஸ்தானை சேர்ந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை, இவை எல்லாவற்றுக்கும் இந்தியா ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது. கிழக்கு மாகான காட்டுப்பகுதிகளில் கஞ்சா பயிர்செய்கை இருந்தது மட்டும் உண்மை. இதற்கும் இந்தியப் படைக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை.

கேள்வி :இலங்கை அரசியலில் ஆரம்பமாகியுள்ள புதிய நாடகத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான சரத்தை மகிந்த உள்ளே தள்ளியிருக்கிறார். பதிலுக்கு உலகத்தமிழர் பேரவையினரை பிரித்தானிய அமைச்சரும் பிரதமரும் சந்திக்கின்றார்கள். இந்த நாடகங்களின் முடிவுகள் எப்படி முடியும்? இதன் அலைகள் இந்திய சீன உபகண்டத்தில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா? (பிரகாஷ்)

பதில்: சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது என நம்பினார். ஆனால் மகிந்தா வென்ற உடனேயே அமெரிக்கா கட்சி மாறி விட்டது. மேற்குலகம் விதிக்கும் நிபந்தனைகளை மகிந்தா ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா என்பதை மட்டுமே அவதானிக்கிறார்கள். (தற்போது மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரம் உதட்டளவில் மட்டுமே உள்ளது.) அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது வழக்கம். கடந்த காலங்களில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர்களை செல்லப் பிள்ளைகளாக வைத்திருந்து விட்டு பின்னர் தேவை முடிந்தவுடன் கைகழுவி விட்டிருக்கிறது. உலகத் தமிழ்ப் பேரவையுடனான சந்திப்பும் பிரிட்டனின் சொந்த அரசியல் நலன் சார்ந்தது தான். அனைத்து வல்லரசுகளும் இலங்கையில் தமது செல்வாக்கை தக்க வைக்க பார்க்கின்றன. இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பது ஒரு காரணம். அதற்கப்பால், எரிபொருள் இல்லாத படியால் மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நடுவில் பொருளாதார போட்டி நிலவுகின்றது. ஆனால் அது இன்னும் பகை முரணாக மாறவில்லை.

கேள்வி : plz list out most dominate ten companys in this world & what about their future activity to sustained their positioned.how its going to affect upcoming countries?(like india,brazil,africa ...)
(Ganesh muthuerullapan.)

பதில் : பல தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது உலகை ஆளுகின்றன. ஷெல், யூனிலேவர், கொக்கோ கோலா, மக்டொனால்ட்ஸ், பிலிப்ஸ், நோக்கியா, சீமன்ஸ், சோனி, மைக்ரோசொப்ட், மான்சாண்டோ போன்றன சில உதாரணங்கள். இவை எமது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் சிக்னல் கொண்டு பல் துலக்குகிறோம். நெஸ்கபே குடிக்கிறோம். இவ்வாறு ஆரம்பிக்கும் நமது வாழ்வு பன்னாட்டு கம்பனிகள் விற்கும் பொருட்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எந்தவொரு வளர்ந்து வரும் நாடும் அவை தொடுக்கும் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஆண்டு வருமானம், இந்தியாவின் பட்ஜெட்டை விட அதிகம். இதிலிருந்தே அவற்றின் பலத்தை தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி :அன்பு நண்பர் கலையரசன் அவர்களே! நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா? (செங்கதிரோன்)

பதில் : ஸ்பெயின் ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பின் தங்கிய நாடாக இருந்தது. மாட்ரிட் நகருக்கு மேலே வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்டிருந்த அதே சமயம், தென் பகுதி புறக்கணிக்கப்பட்டது. ஸ்பெயினின் தென்னக மாகாணங்களை சேர்ந்த மக்கள் வேலை தேடி புலம்பெயர்ந்தார்கள். தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வட பகுதியிலேயே காணப்பட்டன. ஐரோப்பிய யூனியனில் இணைந்த பின்னர் தென் பகுதிக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. குளிர் வலைய வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை சுற்றுலாப் பயணிகளாக செல்ல ஊக்குவிக்கப்பட்டது. இதன் பிறகு தான் அங்கே செல்வச் செழிப்பு ஏற்பட்டது. ஸ்பெயின் மக்களின் கலாச்சாரத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு அதிகம். (இது அண்மையில் தான் மாற்றமடைந்தது.) மத்தியதரைக் கடல் பகுதி மக்களுக்கே உரிய பொதுவான கலாச்சாரமும் காணப்படுகிறது. குறிப்பாக உறவினர், நண்பர்களுடன் நெருக்கம் அதிகம். பண்டிகைக் காலங்களில் தாராளமாக பணம் செலவழிப்பார்கள். இது வட ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

கேள்வி :மூன்றுலக் கோட்பாடு குறித்த தங்கள் கருத்துக்கள் என்ன? மாவோ முன்வைத்தாரா, இல்லையா எனும் சர்ச்சை, அதன் இன்றையப் பொருத்தப்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். (போராட்டம்)

பதில் : பனிப்போர் காலத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டமைப்பு இருந்தது. மறு பக்கம் ரஷ்யா தலைமையிலான ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பு இருந்தது. இவற்றிற்கு மாற்றீடாக மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பு பற்றி வலியுறுத்தப் பட்டது. இதற்கு மாவோ சித்தாந்த விளக்கங்கள் கொடுத்திருந்தார். அவை பின்னர் காலாவதியாகி விட்டன. நேரு, டிட்டோ போன்றவர்களும் அணிசேராக் கொள்கையை வலியுறுத்தினார்கள். அந்தக் கூட்டமைப்பில் இருந்த நாடுகளும் மறைமுகமாக ஏதோ ஒரு அணியில் இருந்தன. மூன்றாம் உலக நாடுகளின் ஐக்கியம் பற்றி சேகுவேரா கூட பல மேடைகளில் பேசியுள்ளார். இன்று வெனிசுவேலா, ஈரான் ஆகிய நாடுகளும் கிட்டத்தட்ட அது போன்ற தெரிவைக் கொண்டுள்ளன. வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடுவது அவர்களின் முதன்மையான நோக்கம். இன்று அமெரிக்காவின் பிடி தளர்ந்து வரும் நிலையில் அவர்களது கனவு பலிக்கலாம். என்றைக்கு டாலர் இல்லாமற் போகின்றதோ, அன்றைக்கு மூன்றல்ல, நான்கைந்து உலகங்கள் தோன்றலாம்.

கேள்வி : தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் அமர்க்களப்படுகின்றதே தாய்லாந்து? அங்கு என்ன தான் நடக்கின்றது ? (பிரகாஷ்)

பதில் : தாய்லாந்தில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முன்னெப்போதையும் விட சமூகம் பிளவு பட்டுக் கிடக்கிறது. வசதி படைத்த நடுத்தர வர்க்க மக்கள் ஆளும் (ஆளுவதற்கு நியமிக்கப்பட்ட) கட்சியையும், வசதியற்ற ஏழைகள் முன்னாள் பிரதமரின் கட்சியையும் ஆதரிக்கின்றனர். நாட்டை விட்டு விரட்டப்பட்ட முன்னால் பிரதமர் ஒரு சோஷலிஸ்ட் அல்ல. ஆனால் அவர் கொண்டு வர விரும்பிய மிதமான பொருளாதார சீர்திருத்தங்களே அவர் பதவி இழக்க காரணங்கள். பொதுவாக நாட்டுப்புற ஏழை மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கிறது. தாய்லாந்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருவதன் அடையாளம்.

11 comments:

யாசவி said...

Informative
:)

Anonymous said...

இந்தியாவில் முத‌ல் த‌ற்கொலை தாக்குத‌லை ந‌ட‌த்திய‌து, தியாகி வ‌டிவு ஆக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன். இவ‌ர் க‌ட்ட‌பொம்மானிட‌ம் ப‌ணியில் இருந்த‌ பொழுது, வெள்ளைய‌ர்க‌ளின் ஆயுத‌ கிட‌ங்கில் தீ ப‌ந்த‌த்துட‌ன் குதித்து அதை வெடிக்க‌ச் செய்தார்.

-கிருஷ்ண‌மூர்த்தி

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி அனானி நண்பரே.
யாசவிக்கும் எனது நன்றிகள்.

manjoorraja said...

பயனுள்ள தகவல்கள்.
நன்றி.

Unknown said...

Hi, Anna...

I regularly read your blog, it's very informative. Thanks a lot for sharing your valuable knowledge with us...

Unknown said...

Hi Anna....,

I regularly read your blog. It's very informative. Thanks a lot sharing your valuable knowledge with us....

ஜோதிஜி said...

உங்கள் எழுத்துக்களின் தாக்கம் வலிமை அத்தனையும் உங்கள் சுயம் பற்றிய புரிந்துணர்வுக்கு பிறகு தான் ஆச்சரியம் இன்று வியப்பாக மாறி உள்ளது.

எத்தனை பேர்கள் சர்வதேச அரசியல் குறித்து யோசிப்பார்கள் என்பதை விட ஒவ்வொரு இடுகைக்கும், உங்களுடைய ஆழ்ந்த புரிந்துணர்வு காலம் கடந்தும் நிற்கும்.

தமிழ்மணம் பார்வையில் சற்று தாமதமான நட்சத்திரம் நீங்கள்.

Kalaiyarasan said...

மன்சூர் ராசா, மாறன், ஜோதிஜி நன்றிகள். ஆமாம், எனது எழுத்துகள் யாவும் அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட பாடங்கள் தான்.

விவாதகன் said...

மூன்றுலகக் கோட்பாடு மாவோவால் எப்போது முன்மொழியப்பட்டது. மூலத்தின் அந்தப் பகுதியை எனக்கு கோடிட்டு கொடுக்கமுடியுமா. அது குறித்து பதிலில் நீங்கள் தெரிவிக்கவில்லை.

கதிரவன் said...

கதிரவன்,
மூன்றுலகக் கோட்பாடு மாவோவால் எப்போது முன்மொழியப்பட்டது. மூலத்தின் அந்தப் பகுதியை எனக்கு கோடிட்டு கொடுக்கமுடியுமா. அது குறித்து பதிலில் நீங்கள் தெரிவிக்கவில்லை.

Unknown said...

மிகவும் தீர்க்கமான பதில்கள்; வாழ்த்துக்களுடன் நன்றி