Sunday, September 30, 2018

மசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது?

மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முடிவுக்கு வருகிறது. பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆம் என்று வாக்களிப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. 

இவ்வளவு காலமும் "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான மசிடோனியா" (FYROM) என்ற பெயர் நீக்கப் பட்டு, "வடக்கு மசிடோனியா" என்ற புதிய பெயர் சூட்டப் படும். இது தொடர்பாக மசிடோனியா, கிரேக்க வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில், கடந்த 27 வருடங்களாக, தேசியவாதிகளால் (அல்லது பேரினவாதிகளால்) தீர்க்க முடியாத இனப்பிரச்சினையை இடதுசாரிகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த மசிடோனியா (அல்லது மக்கெதோனியா) என்ற புதிய நாட்டிற்கு பெயரிடுவது பற்றிய பிரச்சினை தற்போது தான் (பெருமளவு) ஓய்ந்துள்ளது.

உலகப் பேரரரசை கட்டி ஆண்ட மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் மசிடோனியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பதிலும், அலெக்சாண்டர் காலத்தில் என்ன மொழி பேசினார்கள் என்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இது குறித்து, ஒரு பக்கம் கிரேக்க தேசியவாதிகளும், மறு பக்கம் மசிடோனியா தேசியவாதிகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் மயிர்பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழரும், சிங்களவரும் (குறிப்பாக தேசியவாதிகள்) இராவணன் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருவார்கள். அதே மாதிரித் தான், கிரேக்கர்களும், மசிடோனியர்களும் (குறிப்பாக தேசியவாதிகள்) அலெக்சாண்டர் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருகிறார்கள். பழம் பெருமை பேசி மகிழ்வதும் ஒரு தேசியவாத கருத்தியல் தான்.

பண்டைய காலத்து மசிடோனியர்கள் கிரேக்க மொழி பேசியதாக கிரேக்க தேசியவாதிகள் நம்புகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தனியான மசிடோனிய மொழி பேசியதாக மசிடோனியா தேசியவாதிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றைய மசிடோனிய மொழி கிரேக்க மொழியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது அலெக்சாண்டர் காலத்திற்கு பின்னர் தான், தென் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லாவிய மொழி பேசும் மக்களின் இனப் பரம்பலும், ராஜ்ஜியங்களும் தோன்றின. பல நாடுகளில் மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மசிடோனியாவில் வாழ்ந்த பண்டைய இன மக்களில் ஒரு பகுதியினர் கிரேக்கர்களாகவும், இன்னொரு பகுதியினர் ஸ்லாவியர்களாகவும் மாறி இருக்கலாம்.

இன்றைய மசிடோனியா மொழியும், பல்கேரிய மொழியும் ஒன்று தான். வித்தியாசம் மிகக் குறைவு. தமிழ்நாட்டுத் தமிழும், ஈழத் தமிழும் போன்றது. இருப்பினும் மசிடோனியர்கள் தாம் தனித்துவமான மொழி பேசுவதாக உரிமை கோருகிறார்கள். பல்கேரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், வல்லரசுகளின் தலையீடு காரணமாக, மசிடோனியாவின் அரைவாசிப் பகுதி கிரேக்க நாட்டிற்கு சொந்தமானது. மிகுதிப் பகுதி யூகோஸ்லாவியாவுடன் இணைக்கப் பட்டது. இன்று கிரேக்க மாகாணமாக உள்ள மசிடோனிய பகுதிகளில் வாழ்ந்த, மசிடோனிய மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் யூகோஸ்லேவிய மாசிடோனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.

1991 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் இருந்து மசிடோனியா தனியாக பிரிந்து சென்றது. ஆனால் அது ஐ.நா. சபையில் சேர்வதற்கு கிரீஸ் தடைபோட்டது. பின்னர், "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு" என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கொள்ள சம்மதித்தது. இருப்பினும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளில் சேர விடாமல், கிரீஸ் தொடர்ந்தும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

மசிடோனியாவுக்கு உரிமை கோரும் கிரேக்க தேசிய (பேரின)வாதிகளின் சுவரொட்டி 

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மசிடோனியா தேசியவாதிகளும், கிரேக்க தேசியவாதிகளும் விட்டுக்கொடாமல் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். அதனால் பெயர் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. அண்மையில், கிரேக்க நாட்டில் ஆட்சி பீடம் ஏறிய பிரதமர் சிப்ராசின் இடதுசாரி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், பொதுவாக இடதுசாரிகள்  கடும்போக்கு தேசியவாதிகளின்  விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

கிரீசில் ஆளும் சீரிஸா இடதுசாரி அரசு, "வடக்கு மசிடோனியா" என்ற பெயரை ஏற்றுக் கொள்வதாகவும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு சம்மதிப்பதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக மசிடோனியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் விளைவாகத் தான் பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இருப்பினும் தேசியவாதிகள் இன்று வரைக்கும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதனால், தேசியவாதிகளை புறக்கணித்து ஒதுக்கி விட்டுத் தான் தீர்வு ஒன்றைக் காண முடியும். மசிடோனியா பிரச்சினையும் அதைத் தான் நிரூபிக்கின்றது.

No comments: