Thursday, April 29, 2010

கிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை!

20 ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான புதிய சுதந்திர நாடு கிழக்குத் திமோர். முன்னாள் போரத்துக்கீச காலனியான இந்தத் தீவு 1975 ல் இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுஹார்த்தோவின் பதவி விலகலுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்குப் பின்னாலிருந்த அந்நிய நாடுகளின் தலையீடு மே 2002 ல் கிழக்குத் திமோரக்கான சுதந்திரத்தில் போய் முடிவடைந்தது. சுதந்திர விழாக் கொண்டாடி ஆறு மாதங்களான நிலையில் டிசம்பர் மாதம் தலைநகர் டிலியில் ஏற்பட்ட கலவரம் அந்த தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டிலி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சகமாணவனை சுதந்திரத் திமோர் போலிஸ் கைது செய்ததையெதிர்த்து நடந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமுற்ற மாணவர்கள் நகரின் வியாபார ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள், ஆகியவற்றைத் தாக்கிக் தீயிட்டனர். சுதந்தித்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்தக் கலவரத்திற்கு நாட்டின் வறுமை நிலையும் , வேலையில்லாப் பிரச்சினையும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இக்கலவரத்தில் சில முக்கிய இடங்கள் தேர்ந்தெடுத்துத் தாக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவிற்குச் சொந்தமான சுப்பர் மாக்கட், கிழக்குத் திமோர் பிரதமரின் இல்லம் என்பன கலவரத்தில் பாதிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கிழக்குத் திமோர் ஆசியாவின் மிகவறுமையான நாடாகத் திகழ்கிறது. 40 வீதத்திறகுமதிகமான சனத்தொகை வேலையற்றிருக்கின்றனர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வேலைதேடும், வறுமைநிலையைப் போக்கும் ஏக்கம் தெரிகிறது. மதப்பிரச்சாரம் செய்யப்போகும் கிறிஸ்தவப் பிரச்சார அமைப்புகள் எதிர் கொள்ளும் முதற் கேள்வி உணவைப் பற்றியதாகவே இருக்கின்றது.

கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்வகிக்கப்பட்ட காலத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன. அப்போது ஒரு நாள் நம்பிக்கையிழந்த வேலையற்ற மக்கள் ஐ.நா உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஐ.நா சபையில் தொழில் புரிந்த உத்தியோகத்தர்கள் வேறு உள்ளூர் மக்கள் மத்தியில் பொறாமையை கிளப்பியிருந்தனர். சராசரித் திமோர் தொழிலாளியின் மாத வருமானம் சில பத்து டொலர்களாக இருக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐ.நா உத்தியோகத்தர்கள் ஆடம்பரம் காட்டி எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தனர். இதற்கிடையே அந்நிய நாட்டு அவுஸ்ரேலிய இராணுவம் நாட்டாண்மை காட்டிக்கொண்டிருந்தது.

தற்போது பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டு திமோரியர்கள் கையில் ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலையியக்க வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மந்திரிகளாகப் பவனிவருகின்றனர். நாட்டில் நிலவும் குழப்ப நிலைக்கு ஜனநாயகத்தில் அனுபவமற்ற அரசியல்வாதிகள், கஜானாவிலான நிதிப்பற்றாக்குறை கொண்ட அரசாங்கம் என்பன காரணமாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் வர்த்தகத்திற்கு எதிர்காலம் இல்லையென்று அவுஸ்திரேலிய சூப்பர் மாக்கட் முதலாளியொருவர் அவநம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

திமோர் தீவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியினர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமக்குரிய ஊர்களில், பண்டைய சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து வந்தவர்கள். காலனியக் காலகட்டத்தில் அந்த நிலை மாறியது. மேற்குத் திமோரை ஒல்லாந்து கைப்பற்ற கிழக்குத் திமோரைப் போர்த்துக்கல் கைப்பற்றி தமது காலனி ஆட்சியை நிறுவினர். அதனால், போர்த்துக்கேயர் விடடுச்சென்ற பின்பு, போரத்துக்கீச மொழி பேசிய கிழக்குத் திமோரிப் படித்த வர்க்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்போது புதிய அரசாங்கத்தில் இருப்பவர்களும் இதே பிரிவினர்தான். ஆயினும் இந்தோனிஷிய ஆட்சியின் கீழ் இருந்த இடைப்பட்ட காலத்தில் பாடசாலைகளில் இந்தோனிசிய மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இதனால், இந்தோனிஷிய மொழிபேசும் இளஞ் சமூகம் போர்துக்கீச மொழி பேசும் ஆளும் வர்க்கத்துடன் பல விடயங்களில் முரண்படுகின்றது. போர்த்துக்கீச மொழி பேசுபவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் , இதனால் பின்தங்கி நிற்கும் இளைஞர்களும் இதற்கு ஒரு எடுத்தக்காட்டு.

பெரும்பான்மைத் திமோரிய மக்கள் தெட்டுன் என்ற மொழி பேசுபவர்கள். போர்த்துக்கிச மொழிக்குப் பதிலாக, உள்ளூர் மக்களின் தெட்டுன் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கினால், பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு மாறாக போர்த்துக்கீச மொழியைத் தமது தொண்டைக்குள் திணிப்பதாக பலர் வெறுப்புற்றுள்ளனர். அதிகமானோர் வேலையற்றிருப்பதற்கு மொழிப்பிரச்சினையும் ஒரு காரணமாகும். உலகின் மிகவறிய நாடுகளில் ஒன்றாக கிழக்குத் திமோர் கணிக்கப்பட்டாலும் அந்நாட்டில் இயற்கை வளத்திற்குக் குறைவில்லை. மிக முக்கியமாக அபரிதமான எண்ணைவளம் திமோரைச் சுற்றியுள்ள கடலில் இருப்பதால் தான், திமோரின் சுதந்திரத்தை அந்நிய நாடுகள் தலையிட்டுப் பெற்றுக் கொடுத்தனர்.

ஐ.நா சபையின் பெயரில் வந்திறங்கிய "பன்னாட்டுப்" படைகளுக்கு அவுஸ்ரேலியா காரணமில்லாமல் தலைதாங்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கும், திமோரிற்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் இருக்கும் எண்ணையை அன்றுமுதல் இன்றுவரை அவுஸ்திரேலியப் பெற்றோலிய நிறுவனங்கள்தான் அகழ்ந்தெடுத்து வருகின்றன. ஏற்கெனவே முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரி சுகார்த்தோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியா இந்த உரிமையைப் பெற்றது. சர்வதேசச் சட்டத்தின் படி இரு நாடுகளுக்குமிடையிலான கடலெல்லை சம தூரத்தில் பிரிக்கப்படவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அவுஸ்திரேலியா தனது பக்க எல்லையை விரிவாக்கி 85 வீதக் கடற்பரப்பை பெற்றுக்கொண்டது.

தற்போது சுதந்திரத் திமோர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் 80 கோடி டொலர்கள் உரிமைத் தொகையாகவும், எண்ணை உற்பத்தியில் 90 வீத பங்கையும் கொடுக்க அவுஸ்திரேலியா சம்மதித்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான எண்ணை வயல்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்காத கடற்பரப்பில் இருக்கின்றன, என்பது பலரறியாத விடயம். சில இடங்களில் அவுஸ்ரேலியா நூறுவீத உரிமையைக் கொண்டுள்ளது. ஆகவே சுதந்திரம் கிடைத்த பின்பும் அவுஸ்திரேலியாவின் எண்ணைக் களவு தொடர் கதை தான். எல்லையைச் சரியாக வரையறுக்குமாறு திமோர் அரசு கேட்டபோதும் அவுஸ்திரேலியா ஏதாவது சாட்டுச்சொல்லி 30 வருடங்களுக்கு அதைப்பின்போடும் உள்நோக்கோடு செயற்பட்டுவருகிறது. அதற்குள் இருக்கும் எண்ணை முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும் திட்டமிருக்கலாம். கிழக்குத் திமோர் ஒரு வறியநாடு. அந்நிய நாடுகள் தமது பொருளாதார நலன்களைக் கருதாமல், வறிய மக்களின் வாழ்க்கைத்தரமுயற்றும் முயற்சிகளை முன்னெடுக்காவிடில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

3 comments:

தருமி said...

எங்கும் வல்லவன் சொல்லே அரங்கேறுகிறது ... :(

amalorpavanathan said...

Serious effort to bring international developments in Tamil Blog. Very welcome. I read each one of your writings. Keep up the good effort.

Kalaiyarasan said...

தருமி, amalorpavanathan, நன்றி. நிச்சயமாக தமிழில் இது புது முயற்சி தான். வணிக நோக்கமற்று, எனது சக்திக்குட்பட்ட அளவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.