Saturday, April 16, 2011

சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 15)

இன்றைக்கும், ஒரு தலித் இந்தியாவின் பிரதமராக வருவதை நினைத்துப் பார்க்க முடியாது. இந்தியா மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் ஆளும் வர்க்கம் எப்போதும் உயர்சாதியினராகவே இருந்து வந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிக்க சாதியினருக்கு சலவைத் தொழில் செய்து வந்த சாதியை சேர்ந்த பிரேமதாச, ஆளும் கட்சியான யு.என்.பி.யில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். மேட்டுக்குடியை சேர்ந்த வெள்ளாள உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த கட்சிக்குள், பிரேமதாசவின் தெரிவு பலரை ஆச்சரியப்பட வைத்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கொழும்பு மாநகரின் சேரிகளில் வாழ்ந்த,உதிரிப் பாட்டாளி வர்க்க, தலித் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு. கொழும்பு நகரை கலக்கிக் மொண்டிருந்த தாதாக்கள், ரவுடிகள், பொறுக்கிகள் எல்லோரும் பிரேமதாசவின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். யுஎன்பி கட்சியினுள்ளேயே பிற அரசியல் பிரமுகர்கள் கூட, ரவுடிகளின் பின்புலத்தைக் கண்டு அஞ்சியிருந்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர், பிரேமதாசவின் தமிழர் விரோத இனவெறிப் பேச்சுகள் பெருமளவு சிங்கள மக்களை கவர்ந்துள்ளன. (ஜனாதிபதியான பிறகு முந்திய உரைகளுக்கு சம்பந்தமற்ற மனிதராக காட்டிக் கொண்டார்.)

இவற்றை விட, திரை மறைவில் செயற்பட்ட அதிகார வர்க்கம், பிரேமதாச என்ற இரும்பு மனிதர் ஆட்சிக்கு வருவதை விரும்பியிருக்கலாம். முன்னைய ஜனாதிபதி ஜெயவர்த்தனேயின் இறுதி முடிவு, பிரேமதாசவுக்கு முடி சூட்டுவதாக அமைந்திருந்தது. அவருக்கு அடுத்ததாக செல்வாக்குப் பெற்றிருந்த, ஒக்ஸ்போர்ட் பட்டதாரி லலித் அத்துலத்முதலி போன்றோர் ஓரம் கட்டப்பட்டனர். இதற்குள் பல இராஜதந்திர நகர்வுகள், காய் நகர்த்தல்கள், சூழ்ச்சிகள் எல்லாம் அடங்கியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த நேரம் இந்திய மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது. தீவிர இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாச தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுக்கும் அன்றே, இந்திய படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தார். இந்தியா ஜேவிபி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பிரேமதாசவின் தெரிவை கண்டு அஞ்சியது. ஏனெனில் இலங்கை ஜனாதிபதி விரும்பாவிட்டால், இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜேவிபி உண்மையிலேயே இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பியதா? என்பது கேள்விக்குறி தான். ஜேவிபி இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததே தவிர, நடைமுறையில் அவர்களின் இலக்கு இலங்கை அரசாகவே இருந்தது. வடக்கு-கிழக்கில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதை, ஜேவிபி தனக்கு சாதகமான நிலவரமாக கருதியிருக்கலாம். ஜேவிபியின் தோற்றமான, 1971 கிளர்ச்சிக் காலகட்டத்தில் "இலங்கையை விழுங்கத் துடிக்கும் இந்திய ஏகாதிபத்தியம்" குறித்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களது தீர்க்கதரிசனத்தை மெய்ப்பித்திருந்தது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபிக்கு ஆதரவு அதிகரித்தது. அந்த ஆதரவுத் தளத்தை தக்க வைப்பது முக்கியம் என்று ஜேவிபி கருதியிருக்கலாம். மேலும் இந்திய தூதுவராலயம் மீது குண்டு வீசியதாகவோ, ஒரு இந்திய படைவீரனை கொன்றதாகவோ, எந்தத் தகவலும் இல்லை. இந்திய பொருட்கள் மீதான பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கூட, இலங்கை வியாபாரிகள் தான் பாதிக்கப்பட்டனர். "பம்பாய் வெங்காயம்" இறக்குமதி செய்த காரணத்திற்காக எல்லாம் இலங்கை வியாபாரிகளே கொலை செய்யப்பட்டனர்.

இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பொருட்டு, ஜேவிபிக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்ற யோசனையை, ரவி ஜெயவர்த்தனே முன்வைத்திருந்தார். சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியவரும், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருமான ரவி ஜெயவர்த்தனே, அரசில் செல்வாக்கு மிக்க நபர். இருப்பினும் அந்த யோசனை கைவிடப் பட்டதற்கு, பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில் ஜேவிபி இலங்கை அரசு அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறது, என்று அரசாங்கத்தில் பலர் சரியாகவே கணித்திருந்தனர். ஜேவிபி அழித்தொழிக்கப் பட வேண்டிய சக்தி என்று அப்போதே தீர்மானித்திருக்கலாம். பிற்காலத்தில், இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பணியை புலிகளும், பிரேமதாசவும் சேர்ந்து செய்தனர். பிரேமதாச அரசு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய விபரங்களை, பின்னர் நடந்த விசாரணை ஒன்றில், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தெரிவித்திருந்தார். இராணுவ நீதிமன்ற விசாரணை நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுப் பகுதியொன்றில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேகடுவ கொல்லப்பட்டார்.

1988 ம் ஆண்டு, பிரேமதாச ஜனாதிபதியான போதிலும், வாக்களித்த படி இந்திய இராணுவத்தை வெளியேறச் சொல்லவில்லை. அதற்கு முன்னர், உள்நாட்டில் கணக்குத் தீர்க்க வேண்டிய விஷயங்கள் இருந்தன. வடக்கு-கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வாபஸ் வாங்கப்பட்டதால், தென்னிலங்கை முழுவதும் இராணுவமயப் படுத்தப் பட்டது. அந்தக் காலத்தில், கொழும்பு நகரில் நடமாடும் ஒருவர், இராணுவ ஆட்சி நடப்பதாக உணர்ந்திருப்பார். எங்கு திரும்பினும், சீருடை அணிந்து துப்பாக்கி தரித்த இராணுவ வீரர்கள் காணப்பட்டனர். அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப் பட்டனர்.

பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று, ஜேவிபி அறிவித்தது. அதனால் அரச பேரூந்து வண்டிகள் எதுவும் ஓடவில்லை. மக்கள் தனியார் "மினிபஸ்"களில் கால்நடைகள் போல அடைபட்டுச் சென்றனர். சாரதிகள் யாரும் வேலைக்கு வராததால், இராணுவ வீரர்களே பேரூந்து வண்டிகளை ஓட்டிச் சென்றனர். அவற்றில் ஏறுபவர்கள் டிக்கட் எடுக்காமல், இலவச பயணம் செய்யலாம். அரச பேரூந்து வண்டிகளில் இலவச சவாரி செய்ய பொது மக்கள் முன்வரவில்லை! அன்றைய நாட்களில், வண்டியில் அதிக பட்சம் இருபது பயணிகள் இருப்பதே அபூர்வம். இராணுவத்தினர் இயக்கும் பேரூந்து வண்டிகளில், குண்டு வைத்து விடுவார்கள் என்று எல்லோரும் பயந்தார்கள்.

சிவில் சமூகத்தில் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்ததால், ஜனாதிபதியை விமர்சிக்க எல்லோரும் அஞ்சினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று, ஜேவிபி ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அலையை தோற்றுவிக்க முனைந்தது. வதந்திகளைப் பரப்பும் உளவியல் யுத்தம் முன்னெடுக்கப் பட்டது. (சிறிலங்கா அரசு உளவியல் யுத்தத்தின் துணையுடன் ஜேவிபியை அடக்கியது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) ஜேவிபி பரப்பிய வதந்திகளில் சில இரசிக்கத் தக்கன. ஜனாதிபதியையே ஆட்டிப் படைக்கும், பிரேமதாசவின் மனைவி ஹேமா பற்றி "அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்" பல உலாவின. பிரேமதாசவின் புதல்வன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார். அவரை தற்போதைக்கு இலங்கை வர வேண்டாம் என்று பிரேமதாச கூறினாராம். அதற்கான காரணம்: "நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் எய்ட்ஸ் நோயை காவிக் கொண்டு வந்து விடுவாய். அது பின்னர் வேலைக்காரிக்கு தொற்றி, எனக்கு தொற்றி, என்னிடமிருந்து அம்மாவுக்கு தொற்றி விடும். அப்புறம், நாடு முழுவதும் எய்ட்ஸ் பரவி விடும்."

ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான எம்ஜிஆரின் பாசிச-வெகுஜன அரசியல், இலங்கையில் பிரேமதாச காலத்தில் தான் அரங்கேறியது. அடித்தட்டு மக்களின் பிரதிநிதியான பிரேமதாச தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்ள விரும்பினார். ஒரு பக்கம், பெரிய முதலாளிகளை நண்பர்களாக கொண்டிருந்தாலும்; மறுபக்கம், வணிகத் துறையின் இலாபத்தில் ஒரு பகுதி ஏழை மக்களையும் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதற்காக "ஜனசவிய திட்டம்" மூலம், பின்தங்கிய பிரதேசங்களில் ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி திட்டங்களும் வந்தன. அரசின் மீது அதிருப்தியுற்ற, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை இளைஞர்களே ஜேவிபியில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். உலகவங்கி போன்ற கடன் வழங்கும் நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில், "இளைஞர்களின் விரக்தியைத் தணிக்கும்" திட்டங்களை அரசு செயற்படுத்தி வந்தது.

பிரேமதாசா தற்பெருமை அடித்துக் கொள்ளவும், பாசிசத்தை நிறுவனமயப் படுத்தவும் இந்த திட்டங்கள் பயன்பட்டன. அவரது மனைவியின் பிறந்தநாளுக்கும், தனது பிறந்தநாளுக்கும் இடையிலான ஒரு வார காலத்தை இதற்காக தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வருடமும், எங்காவது ஒரு மாவட்டத்தில் "ஏழைகளுக்கு வீடு வழங்கும் விழா" விமரிசையாக நடத்தப்படும். ஜேவிபியின் ஆதரவுத் தளமான வறிய மக்களின் மனங்களை வெல்வதும் அந்தத் திட்டங்களின் நோக்கம். 1990 ல், நான் வேலை செய்த நிறுவனம் மாத்தறையில் நடந்த ஜனசவிய கண்காட்சியில் பங்குபற்றியிருந்தது. கொழும்பை மையப்படுத்திய தனியார் நிறுவனங்களை, பின்தங்கிய பிரதேசங்களில் முதலீடு செய்யத் தூண்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. ஜேவிபியின் கோட்டையாக கருதப்பட்ட மாத்தறையில், அப்போது தான் போர் ஓய்ந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னர், இது போன்ற நிகழ்வுகள், அங்கே நினைத்துப் பார்க்க முடியாதவை.

ஜெயவர்த்தன காலத்தில் நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பிரேமதாச காலத்தில் தான் அவை பெரும் முனைப்புடன் நடைமுறைப் படுத்தப் பட்டன. பல பெரிய முதலாளிகள், பிரேமதாச காலத்தில் கோடீஸ்வரர்களானார்கள். அவர்களில் சில தமிழ் முதலாளிகளும், நிபுணர்களும் அடங்குவர். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஊடகமான "சக்தி TV", இன்றைக்கும் யுஎன்பி ஆதரவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி உரிமையாளரான மஹாராஜா நிறுவனத்தை ஸ்தாபித்த தமிழரான ராஜேந்திரம், பிரேமதாசாவுக்கு மிக நெருக்கமானவர். அன்று நவ-தாராளவாத திட்டங்களை அமுல் படுத்திய பொருளாதார நிபுணர் பாஸ்கரலிங்கம், பிரேமதாசவின் அந்தரங்க ஆலோசகர். பிரேமதாச ஒரு பக்கம் ஜேவிபியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்தார். மறு பக்கம் மக்கள் மீது முதலாளித்துவ வன்முறையை ஏவி விட்டுக் கொண்டிருந்தார். ஆயினும், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை, இலங்கையின் ஆட்சியாளர்கள் வைத்திருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். இந்த நிலைப்பாடு பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முரண்பாட்டை தோற்றுவித்திருக்கலாம் என கருதப் படுகின்றது.

எனக்குத் தெரிந்த வரையில், கொழும்பில் வாழ்ந்த ஏராளமான தமிழர்கள் பிரேமதாச காலத்தில் ஆதாயம் அடைந்தனர். கொழும்பு வாழ் தமிழர்கள் இன்றைக்கும் அந்த "பொற்காலத்தை" நினைவுகூருகின்றனர். எந்தத் தேர்தல் வந்தாலும், பெரும்பான்மை கொழும்புத் தமிழர்கள், கண்ணை மூடிக் கொண்டு யுஎன்பிக்கு வாக்களிப்பார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளையும் பிரேமதாச அரவணைத்துச் சென்றார். அன்று தென்னிலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரேமதாச அதிக நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், ஜேவிபி பகைவர்களை கூட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள மக்களுக்கு யுஎன்பி யை, கொடூரமான எதிரியாக காட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் அர்த்தம், மற்றைய எதிர்க்கட்சிகள் ஜேவிபியின் நட்பு சக்திகள் என்பதல்ல. வலதுசாரி யுஎன்பிக்கு மாற்றாக அமையக் கூடிய கட்சிகளை இல்லாதொழிப்பதே ஜேவிபியின் நோக்கமாக இருந்தது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆளும் யுஎன்பி யும், அதனை எதிர்க்கும் ஜேவிபியும் மட்டுமே அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். சிறிலங்கா அரசுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தில், ஜேவிபி மட்டுமே ஏக பிரதிநிதிகளாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

2 comments:

எஸ் சக்திவேல் said...

அந்தப் :பொற்காலத்தில், நானும் கொழும்பில் பயமில்லாமல் சுற்றித் திருந்திருக்கிறேன். தமிழர் பிரேமதாசாவைப் பெருமளவில் விரும்பியதாகத் தெரியவில்லை. அத்தோடு எல்லோருக்கும் (குறைத்து என் "மட்டங்களுக்கு " ), நாங்கள் இப்படிச் "சுதந்திரமாகத்" திரிவதற்கு ஜேவிபி தான் மறைமுகக் காரணம் என்று புரிந்திருந்தது. அதாவது பிரேமதாசா அவர்களைப் (ஜேவிபி) போட்டுத் தள்ளுவதில் மும்முரமாக இருந்ததால், தமிழர்களைத் தற்காலிகமாக விட்டு வைத்த்ருந்ததாக கருத்து வைத்திருந்தோம். (அது சரியா ??)

Kalaiyarasan said...

அது சரி தான். அது பாதி உண்மை மட்டுமே. முன்பு சிறிலங்கா இராணுவம் யுத்தம் செய்து கொண்டிருந்த புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது, மீதி உண்மை. தமிழர்கள் மீதான இராணுவ அடக்குமுறைக்கான தேவை அப்போது இருக்கவில்லை.