Showing posts with label பிரான்ஸ். Show all posts
Showing posts with label பிரான்ஸ். Show all posts

Wednesday, April 29, 2020

பெல்ஜியம், பிரான்ஸில் நடந்த Lockdown கலவரங்கள்

பெல்ஜியத்தில் நடந்த லோக்டவுன் கலவரம் 

11 ஏப்ரல் 2020
பெல்ஜியத் தலைநகர் புருசல்சில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் Anderlecht பகுதியில் கலவரம் வெடித்தது. இளைஞர்கள் ஒன்று திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசியதும் நிலைமை மோசமடைந்தது. பொலிஸ் கார்கள் கற்களால் தாக்கி சேதமாக்கப் பட்டன. சில இடங்களில் தீவைக்கப் பட்டது.

அங்கு நடந்த கலவரத்திற்கு காரணம், முதல்நாள் நடந்த கொலை. பொலிஸ்காரர்கள் ஒரு 19 வயது இளைஞனை கைது செய்வதற்காக விரட்டி உள்ளனர். வெருண்டு ஓடிக்கொண்டிருந்த இளைஞனை எதிரில் வந்த பொலிஸ் கார் மோதியதால் அந்த ஸ்தலத்திலேயே மரணம் சம்பவித்துள்ளது. அந்த மரணத்திற்கு பழிவாங்கக் கிளம்பிய இளைஞர்கள் கும்பல் தான் பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

பொதுவாகவே புருசெல்ஸ் நகரில் Anderlecht பகுதி எப்போதும் பதற்றமாக இருக்கும். அங்கு பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையின மக்கள் பெல்ஜிய பேரினவாத அரசு தம்மீது ஒடுக்குமுறை பிரயோகிப்பதாக குறைப்படுவதுண்டு. அந்த உணர்வுகள் ஒரு கட்டத்தில் கொதிநிலைக்கு வந்ததும் வன்முறைகள் வெடிப்பதுண்டு.

******

பிரான்சில் lockdown கலவரம்

20 April 2020
பாரிஸ் புறநகர்ப் பகுதியான Villeneuve-la-Garenne எனும் இடத்தில் இன்று அதிகாலை வரை கலவரம் நடந்துள்ளது. நேற்றிரவு அங்கு வாழும் அரபு சிறுபான்மையின இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கப் பார்த்தது. அங்கு சில வாகனங்களும் எரிக்கப் பட்டுள்ளன. பிரான்சின் பல பகுதிகளிலும் lockdown காலத்தில் பல இனவாத அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விளைவாகவே நேற்று இந்தக் கலவரம் நடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நேற்றிவு நடந்த கலவரத்திற்கு காரணம் ஒரு விபத்து. அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸ் கார் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளான். அவனது நண்பர்கள் இதனை காவல்துறையின் இனவெறித் தாக்குதல் எனக் கண்டித்துள்ளனர். Villeneuve-la-Garenne பிரதேச மேயர், முன்பு National Front என அழைக்கப்பட்ட இனவாதக் கட்சியின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தப் பகுதியில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

*****


26 April 2020
பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிமொஜ் (Limoges) நகருக்கு அருகில் உள்ள போபிறேய் (Beaubreuil) எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் நடக்கிறது. போலிஸை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. கண்காணிப்பு கமெராக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. நகர சபை கட்டிடமும் எரிக்கப் பட்டது.

புதன்கிழமை லொக்டவுன் நேரத்தில் விபத்து ஒன்று தான் கலவரத்திற்கு காரணம் என தெரிய வருகின்றது. ஆப்பிரிக்க அல்லது அரேபிய சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கூட்டரில் சென்ற நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பொலிஸ் விரட்டியதால் விபத்து நடந்துள்ளது.

******

"உலகம் எரிகிறது. வங்கிகள் எப்போது எரியப் போகின்றன?" - சுவிட்சர்லாந்தில் ஒரு ரயிலில் வரையப்பட்ட வாசகம்.

***** 

Saturday, April 18, 2020

மக்டொனால்ட்ஸ் உடைத்து ஏழைகளுக்கு உணவளித்த தொழிலாளர்கள்


பிரான்ஸில் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்!

- கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் பல வாரங்கள் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையை நிர்வாகம் எதிர்த்த போதிலும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரெட்ரான்ட் திறந்துள்ளனர்.

- கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுன் காரணமாக ஏழைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். மார்செய் நகரிலும் அது தான் நிலைமை. மார்செய் வடக்கில் உள்ள Saint-Barthélemy வட்டாரத்தில் ஒரு மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையில் அவர்களும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் தானே? தமது உற்றார் உறவினர்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

- மார்செய் நகரில் பெரும்பாலும் வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதிகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிரான்ஸ் முழுவதும் வேலையற்றவர் எண்ணிக்கை 8.5%. ஆனால் இந்தப் பகுதிகளில் 25 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்ல மார்செய் நகரில் 39 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- கடந்த காலத்தில் நடந்த வேலையிழப்புகள், சம்பளக் குறைப்புகள் இத்துடன் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட ஊரடங்கு தனிமைப்படுத்தலும் சேர்ந்து கொள்ளவே நிலைமை இன்னும் மோசமடைந்தது. அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் நலன் பேணும் Maison Blanche அமைப்பின் சார்பில் பேசிய போது, தம்மிடம் சாப்பிட எதுவுமில்லை என்று பல குடும்பங்கள் தம்மிடம் முறையிடுவதாக தெரிவித்தார். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்களுக்கு வெங்காய சூப் மட்டும் கொடுத்ததாக கூறினார்.

- அங்கு "கலக்டிவ்" என பொதுவுடைமை கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய அமைப்புகளில் நிர்வாகி என்று யாரும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் கூட அவர்களிடம் உதவி கேட்குமாறு சொல்லும் அளவிற்கு இந்த கலக்டிவ் சிறப்பாக செயற்படுகின்றது.

- இருப்பினும் உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால் Syndicat des quartiers populaires de Marseille (மார்செய் பொதுச் சங்கம்) போன்ற கலக்டிவ் அமைப்புகள் மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட்டை உடைத்து திறப்பது என்று முடிவெடுத்தன. Forc e Ouvrière (தொழிலாளர் சக்தி) அமைப்பின் பிரதிநிதி Kamel Guémari இவ்வாறு கூறினார்: "அவசர காலத்தில் எமது பிரதேசத்தில் வாழும் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள்?"

- மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கையகப் படுத்திய தொழிலாளர்கள் அங்கு ஏற்கனவே வைத்திருந்த உணவுப் பொருட்களுடன், கடைகள், தனிநபர்கள் தானமாகக் கொடுத்த உணவு பொருட்களையும் சேர்த்து உணவு தயாரித்து பெட்டிகளில் அடைத்து தயாராக வைத்திருந்தார்கள். அவற்றை தொண்டர்கள் எடுத்துச் சென்று வீடு வீடாக விநியோகித்தனர். இந்த செயற்பாடுகள் யாவும் சுகாதார முறைகளுக்கு அமையவே நடந்துள்ளன. எல்லோரும் கிளவுஸ், முகக்கவசம் அணிந்தே வேலை செய்தார்கள்.

- இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் மக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகம் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது குறித்து La Marseillaise பத்திரிகையுடனான பேட்டியில் விளக்கம் கொடுத்தார்: "ஏற்கனவே நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை." அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்குமா?

- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு உழைக்கும் வர்க்கமான வெளிநாட்டு குடியேறிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க காலனிகளை சேர்ந்தவர்கள் மார்செய் நகர சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர். "இஸ்லாமியர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதில்லை" என்ற பலரது தப்பெண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் சுக்குநூறாகி விட்டது. பிரான்சில், ஐரோப்பாவில் இதுவரை காலமும் இருந்து வந்த "இஸ்லாமியர் பிரச்சினை" உண்மையில் இனப்பிரச்சினையாகவும், அதன் அடிப்படையாக வர்க்கப் பிரச்சினையாகவும் உள்ளது. பல்லின உழைக்கும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். அதைத் தான் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கைப்பற்றிய தோழர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு எமது தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். 


Monday, December 24, 2018

மஞ்சள் சீருடை - புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி


17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப் படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் "குட்டி முதலாளித்துவ வர்க்கம்" என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றனர். 

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான் போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும் மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப் பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப் பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப் பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப் பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப் பட்டு, ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக, பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது. 

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர். "நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்..." என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது..

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப் படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள இனப் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப் பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் "புரட்சிக்கு முந்திய காலகட்டம்" என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் "நலன்புரி அரசுகள்" இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுக்களாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள் மெல்ல மெல்ல அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அறவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


- கலையரசன் -

Wednesday, May 03, 2017

பாரிஸ் 93 ம் வட்டாரம் : ஏழைகளின் தெரிவு கம்யூனிச வேட்பாளர் மட்டுமே


சான் டேனி (Saint-Denis) பாரிஸ் நகரில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கட்தொகை கொண்ட வட்டாரம். பாரிஸ் நகர நிர்வாகத்தில் 93 வது வட்டாரமாக பிரிக்கப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்க, அரேபிய குடியேறிகளை பெருமளவில் கொண்ட பகுதி. ஒருவர் அந்த இடத்தில் முகவரியை கொண்டிருந்தால், பாரிசின் பிற பகுதிகளில் வேலை எடுப்பது மிகவும் கடினம். CV இல் 93 இலக்கத்தை கண்டவுடனே நிராகரித்து விடுவார்கள்.

சான் டேனி பகுதியில் தான், பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களின் சமாதிகள் உள்ளன. ஆனால், உல்லாசப் பிரயாணிகள் யாரும் அங்கே செல்வதில்லை. அதற்குக் காரணம் அந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றது என்ற அச்சம். அங்கே யாரும் வீடு வாடகைக்கு எடுக்கவும் விரும்புவதில்லை. உண்மையிலேயே குற்றச் செயல்கள் பெருகிய பிரதேசம் தான். அதே நேரம், வேலையில்லாப் பிரச்சினை, வறுமையும் அதிகளவில் கொண்ட பிரதேசம்.

எண்பதுகள் வரையில், அதாவது பிரான்ஸ் பொருளாதார நிலைமை நன்றாக இருந்த காலம் வரையில், சான் டேனி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி வெளியுலகில் பலர் அறிந்திருக்கவில்லை. அப்போது எல்லோருடைய கவனமும் "கம்யூனிச நாடுகள் எப்போது கவிழும்" என்பதில் தான் குறியாக இருந்தது. ஒருவேளை சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் நல்ல மாதிரி தொடர்ந்தும் இருந்திருந்தால், மேற்கு ஐரோப்பாவில் அப்போதே மிகப் பெரிய குழப்பங்கள் உண்டாகி இருக்கலாம். அது வேறு கதை.

எண்பதுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவில் பாதிக்கப் பட்ட பிரெஞ்சுப் பகுதிகளில் சான் டேனியும் ஒன்று. அதுவரை காலமும் அங்கு இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் மூடப் பட்டன. அதில் ஒரு பகுதி உற்பத்தி, மீண்டும் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. சான் டேனி பகுதியில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. கூடவே வறுமையும் அதிகரித்தது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. அந்தப் பகுதி முழுவதும் சட்டவிரோத குடியேறிகளின் புகலிடமாகியது. அன்று அதைப் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப் படவில்லை.

காலங்கள் உருண்டோடின. விளிம்பு நிலையில் வாழ்ந்த அரபு - முஸ்லிம் சமூகத்தினுள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் ஊடுருவின. வறுமை, வேலையில்லாப் பிரச்சினைக்கு வடிகாலாக, இளம் சமுதாயம் மதத்திற்குள் மூழ்கியது. 2015 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் ஒரு தீவிரவாத சந்தேகநபரைத் தேடி சான் டேனி வந்தனர். இரண்டு மணிநேர துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் சந்தேகநபரை சுட்டுக் கொன்றனர். இப்போதும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப் பட்ட ஓட்டைகளை காணலாம்.

தற்போது, பாரிஸ் சான் டேனி பிரதேசத்தில் வாழும் வெளிநாட்டவர் சமூகத்தில் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதவாத அரசியல் ஆபத்தானது மட்டுமல்ல, அரசும் அதையே எதிர்பார்க்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ்த் தேசியம் பேசுவதும், பிரான்ஸில் இஸ்லாமிய மதவாதம் பேசுவதும் ஒன்று தான். மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கே நன்மையாக முடியும். அரசின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்ட சான் டேனி பிரதேச மக்கள் தீவிர இடதுசாரி அரசியலை கையில் எடுத்துள்ளனர். ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போடுவோம், இல்லாவிட்டால் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்கின்றனர்.

23 April 2017 நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மெலேன்ஷோன் அதிகப் படியான வாக்குகள் பெற்ற இடம் சான் டேனி மட்டுமே! அன்று நடந்த தேர்தலில்,சான் டேனி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் பின்வருமாறு: 
Jean-Luc Mélenchon : 43,39 
Emmanuel Macron : 23,02 
Marine Le Pen : 10,07 
மெலென்ஷோன் முன்ன‌ர் ஆளும் சோஷ‌லிஸ்ட் க‌ட்சிக்குள் தீவிர‌ இட‌துசாரிய‌ம் பேசிக் கொண்டிருந்த‌வ‌ர். பின்ன‌ர் அதிலிருந்து பிரிந்து "இட‌து க‌ட்சி" என்ற‌ த‌னிக்க‌ட்சி அமைத்து அத‌ன் சார்பாக‌ ஜனாதிப‌தி வேட்பாள‌ராக‌ போட்டியிட்டார்.

வெற்றி பெற்ற முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு, மே 7 அன்று நடைபெறவுள்ளது. யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை பலர் இன்னும் தீர்மானிக்கவில்லை. இரண்டு வேட்பாளர்களும் தமது நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால், பெருமளவு மக்கள் பகிஷ்கரிக்கவுள்ளனர். இனவாதக் கட்சியான FN சார்பில் போட்டியிடும் மாரின் லெபென் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓர் இனவாதியிடம் இருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், இரண்டாவது வேட்பாளர் எமானுவேல் மக்ரோன் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்பது வெளிப்படையானது. அரசின் அதிகாரங்களை குறைத்து, முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கும் திட்டம் ஆபத்தானது. ஏற்கனவே அரசு என்ற ஒன்று பெயருக்காவது இயங்குவதால் தான் ஏழை மக்கள் உயிர்பிழைத்து வாழ முடிகின்றது. அதுவும் இல்லையென்றால் சென் டேனி ஒரு பாலைவனமாகி விடும் என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாட்டில் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம். ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கலாம். ஆனால், காலங்காலமாக சான் டேனி பிரதேசவாசிகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிரான்ஸில் நூறாயிரம் சனத்தொகை கொண்ட மூன்று நகரங்களில் கம்யூனிஸ்ட் மேயர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அதில் ஒன்று சான் டேனி. கம்யூனிஸ்ட் மேயர் லோரன்ட் ருசியே (Laurent Russier) ஐந்தாவது தடவையாக மேயராகப் பதவியேற்றுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு : 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, August 27, 2016

பிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவாத முதலாளித்துவம்




பிரான்சில் முஸ்லிம் பெண்களை துப்பாக்கி முனையில் "விடுதலை" செய்யும் பொலிஸ். கடற்கரையில் படுத்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடைகளை கழற்றுமாறு பொலிஸ் துப்பாக்கி முனையில் பயமுறுத்தியது.

பிரான்ஸ் நாட்டில் கான் (Cannes) ந‌க‌ர‌த்தில், முஸ்லிம் பெண்க‌ள் முழு உட‌லையும் ம‌றைக்கும் நீச்ச‌ல் உடையுட‌ன் க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌த‌ற்கு விதித்திருந்தது. பூர்கினி என்று அழைக்கப் ப‌டும் உடலை மூடும் ஆடை அணிந்து நீச்ச‌ல் குள‌ங்க‌ள், க‌டற்க‌ரைக்கு செல்ல‌க் கூடாது என்று கான் ந‌க‌ர‌ மேய‌ர் ச‌ட்ட‌ம் போட்டிருந்தார். இந்த‌ த‌டையுத்த‌ர‌வுக்கு ஐரோப்பிய‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்து வ‌ர‌வேற்றிருந்தனர்.

பூர்கினி எனும் இஸ்லாமிய‌ நீச்ச‌ல் உடைக்கு எதிரான‌ த‌டையுத்த‌ர‌வு, அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்திற்கு முர‌ணான‌து என்று பிரான்ஸ் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ள‌து. ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ள் போட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம், இந்த‌ த‌டையுத்த‌ர‌வு இன‌வாத‌ உள்நோக்க‌ம் கொண்ட‌து என்றும், ம‌த‌ச்சுத‌ந்திர‌த்தை மீறுகிற‌து என்றும் தீர்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து. அந்த‌ தீர்ப்பை அடுத்து பூர்கினி த‌டை போட்ட‌ ந‌க‌ர‌சபைக‌ள் உடனடியாக த‌டையை வில‌க்கிக் கொள்ள‌ வேண்டும்.

ஐரோப்பிய‌ க‌லாச்சார மேலாதிக்க‌த்தை திணிக்கும் இன‌வாதிக‌ளின் பூர்கினி த‌டையுத்த‌ர‌வுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ த‌மிழ‌ர்க‌ளும் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ந‌கைப்புக்குரிய‌து. யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ள், குள‌ங்க‌ள், கேணிக‌ள், குள‌ங்க‌ளில் குளிக்க‌ வ‌ரும் (இந்து) த‌மிழ்ப் பெண்க‌ள் யாரும் பிகினி அணிந்திருந்த‌தை நான் காண‌வில்லை. ப‌ல‌ர் உடுத்த‌ உடையோடு குளித்து விட்டு செல்கிறார்க‌ள். சில‌ர் குறுக்குக் க‌ட்டி இருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஒரு நிலைமையை க‌ற்ப‌னை செய்து பார்ப்போம். இனிமேல் பொது இட‌ங்க‌ளில் குளிக்கும் பெண்க‌ள் பிகினி அணிந்திருக்க‌ வேண்டும் என்று சிறில‌ங்கா அர‌சு ச‌ட்ட‌ம் போடுகின்ற‌து. (ஏற்க‌ன‌வே பிரான்ஸ் நாட்டில் போட்ட‌ அதே ச‌ட்ட‌ம் தான்.)

த‌ற்போது சிறில‌ங்கா அர‌சு கொண்டு வ‌ந்த‌ பிகினி ச‌ட்ட‌ம், த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ஒடுக்குமுறை என்று த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் போர்க்கொடி உய‌ர்த்தி இருப்பார்க‌ள். த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் "த‌மிழ‌ரின் பூர்கினி உரிமைக்காக"‌, ஐ.நா. வ‌ரை நீதி கோரி ந‌டைப் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்தி இருக்கும். இத்த‌னைக்கும் இந்த‌ "பூர்கினி ஆத‌ர‌வாளர்க‌ள்" யாரும் முஸ்லிம்க‌ள் அல்ல‌. மாறாக‌ த‌மிழ்க் க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை என்ப‌து பொது இட‌ம். அங்கு என்ன‌ உடை அணிய‌ வேண்டும் என்று யாரும் யாருக்கும் உத்த‌ர‌வு போட‌ முடியாது. சில‌ர் பிகினி அணிந்து அரை நிர்வாண‌மாக‌ இருப்பார்க‌ள். சில‌ர் உட‌லை மூடிய‌ ஆடையுட‌ன் வ‌ந்திருப்பார்க‌ள்.

அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். ஆனால் எல்லோரும் க‌ட‌ற்க‌ரையில் குளிப்ப‌த‌ற்கு அல்ல‌து ஓய்வெடுக்கும் நோக்கில் வ‌ந்திருப்பார்க‌ள். ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பெண்க‌ள் பிகினி அணிய‌ல‌மா? என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள்? லெப‌னான், எகிப்து, துனீசியா, மொரோக்கோ போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ளில், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உள்நாட்டு முஸ்லிம் பெண்க‌ளும் பிகினி அணிந்து வ‌ருவ‌தைக் காண‌லாம்.

அங்கெல்லாம் க‌ட‌ற்க‌ரையில் இந்த‌ உடுப்பு தான் அணிய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுப்பாடு எதுவும் கிடையாது. யூத‌ இஸ்ரேலிலும் அப்ப‌டி ஒரு நிலைமை இல்லை. சில‌ க‌டும்போக்கு யூத‌ ம‌த‌ப் பிரிவுக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ளும், உட‌லை மூடும் உடை அணிந்து தான் குளிப்பார்க‌ள். இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் கூட‌ ஐரோப்பிய‌ப் பெண்க‌ள், உட‌லை மூடும் உடை அணிந்து க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌து வ‌ழ‌மையாக‌ இருந்த‌து.

பூர்கினி என்றால் என்ன? பலர் தவறாக நினைப்பது மாதிரி, அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நீச்சல்குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். "அங்கெல்லாம் எல்லோரும் நிர்வாணமாக இருப்பார்கள்..." என்று அருவருப்பாக கருதுவார்கள். அவர்கள் பூர்கினி அணிந்தும் குளிக்கப் போக மாட்டார்கள்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் தொலதிபர் Aheda Zanetti என்பவர் தான் பூர்கினி என்ற உடையை வடிவமைத்தார். அது பேஷன் சம்பந்தப் பட்ட விடயம். பேஷன் என்றால் அது ஐரோப்பியர்கள் மட்டும் தான் வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா? எங்களில் பெரும்பான்மையானோர் மேற்கத்திய பாணியில் உடுத்துவதை மட்டுமே பேஷன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அஹேடா ஜானெத்தி லெபனானை பூர்வீகமாக கொண்டவர். கடந்த நாற்பது வருட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப் பெண்கள் கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுது போக்குவதற்கு வசதியாக பூர்கினி என்ற உடையை வடிவமைத்ததாக அவர் கூறுகின்றார். "இது பெண்களை விடுதலை செய்கின்றது" என்கிறார். அவர் இதற்கு முன்னர் இஸ்லாமிய மரபு சார்ந்த விளையாட்டு உடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சந்தைப் படுத்தப் பட்ட பூர்கினி என்ற நீச்சல் உடை, பின்னர் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், உலகம் முழுவதும் 700.000 உடைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு உடையின் விலை $80 அல்லது $200 டாலர்கள்.

இந்த பூர்கினி உடை வாங்கி அணிபவர்கள் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் அல்ல. இந்து, யூத மதங்களை பின்பற்றும் பெண்களும் வாங்கி அணிகின்றனர். அவர்களும் கலாச்சார நோக்கில் தான் பூர்கினி அணிகிறார்கள். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு குணமான ஐரோப்பிய இனப் பெண்களும் பூர்கினி வாங்குகின்றனர். இந்த விபரங்களை தெரிவித்த Aheda Zanetti, அதனது வாடிக்கையாளர்களில் நாற்பது சதவீதம் இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என்று சொல்கிறார்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பூர்கினி உடை குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, முதலாளித்துவ மேலாதிக்க நலன்களுக்கான போட்டி காரணமாக  இருக்கலாமா? இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா? இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா? இது தான் இங்கேயுள்ள பிரச்சினை.

அதாவது, உலக கலாச்சார தளத்திலும், மேற்கத்திய முதலாளித்துவம் மட்டும் தான் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு போட்டியாக வரும் ஹலால் முதலாளித்துவம், பூர்கினி முதலாளித்துவம், சேலை முதலாளித்துவம், எதுவாக இருந்தாலும் அடக்கி ஒடுக்கவே நினைக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். "இஸ்லாமிய மதப் பிரச்சினை...பாதுகாப்பு பிரச்சினை..." இப்படிப் பல.

எல்லாப் பிரச்சினைகளும் வந்து ஓர் இடத்தில் குவிகின்றன. உலக சந்தையை கைப்பற்றல், நுகர்வோர்களை கட்டுப்படுத்தல்...சுருக்கமாக மூலதன திரட்சி மேற்குலகை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களை ஏமாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறது..."இஸ்லாமிய தீவிரவாதப் பூதம்"!

Saturday, November 14, 2015

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

Sunday, February 08, 2015

சார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்!


பிரான்சின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திர வார இதழான சார்லி எப்டோ (Charlie Hebdo) முன்னர் ஒரு காலத்தில் இடதுசாரிப் பத்திரிகையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டளவில், முதலாளித்துவத்திற்கும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் எதிராக வெளிவந்த L'assiette au beurre பத்திரிகையின் தொடர்ச்சியாக தன்னைக் கூறிக் கொண்டது.

ஆனால், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அதன் போக்கு மாறியது. அது ஒரு வலதுசாரிப் பத்திரிகையாக, பிரெஞ்சு இடதுசாரிகளால் எதிர்க்கப் பட்ட பிரெஞ்சு அரசின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. இன்னும் அதிகமாக, சிலநேரம் தீவிர வலதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இனவாதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், பத்திரிகையின் விற்பனை அதிகரிக்கும் என்று நிர்வாகம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அதன் விற்பனை சரிந்து கொண்டே சென்றது.

ரோத்ஷீல்ட்ஸ் பற்றி தெரியாதவர் உலகில் யாரும் இருக்க முடியாது. வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜேர்மனிய யூதக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

பிரான்சின் கேலிச்சித்திர வார இதழான Charlie Hebdo, அண்மைக் காலமாக நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதன் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அதனால், ஏற்கனவே பிரான்ஸின் பிரபல தினசரியான, Libération பத்திரிகை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்ப உறுப்பினரான Édouard baron de Rothschild, தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் Charlie Hebdo பத்திரிகையை வாங்கி இருந்தார். ஏற்கனவே, Libération அவர் கைகளில் இருந்த படியால், சார்லி எப்டோ வாங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்குள் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அரசியலில் நேரடியாக தலையிட வேண்டி வரும் என்ற அச்சம். இரண்டு, ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையை வாங்குவதை யாரும் விரும்பவில்லை.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி எப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக எடுவார்ட் பாரோன் அதை வாங்கி விட்டிருந்தார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகம் மீதான பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அந்தப் பத்திரிகை மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப் பட்டமை யாவரும் அறிந்ததே. இதனால், அன்று அதனை குறைந்த விலை கொடுத்து வாங்கிய கோடீஸ்வரர், மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதித்திருப்பார்.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு இது: 
DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN' 

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், மொசாட் அல்லது மேற்கத்திய உளவு நிறுவனம் ஒன்றினால் நடத்தப் பட்டது என்று அப்போதே சிலர் சொல்லத் தொடங்கி இருந்தனர். தமது சந்தேகங்களுக்கு சில ஆதாரங்களையும் காட்டினார்கள். இராணுவ கமாண்டோக்கள் போன்று ஆயுதமேந்தி, தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற காரில் ஓர் அடையாள அட்டை கண்டெடுக்கப் பட்டது. இந்தளவு தூரம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியவர்கள், அடையாள அட்டையை மறந்து போய் விட்டுச் செல்லுமளவிற்கு முட்டாள்களாக இருந்திருப்பார்கள் என்று கூற முடியாது. மேலும் சார்லி எப்டோ தாக்குதல் பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதிலேயும் பல மர்மங்கள் மறைந்துள்ளன. 
French police chief committed suicide after Charlie Hebdo attack;


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Sunday, February 01, 2015

அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்


பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள். பாரிஸ் நகரை சுற்றிலும், ஏராளமான தமிழர்கள், குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வாழ்வதால், அது ஒரு மூடுண்ட சமுதாயமாக இருக்கிறது.

Gare du Nord ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள லா சாப்பல் (La Chapelle), பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாக கூடும் பகுதி ஆகும். அங்கே வரிசைக்கு தமிழ்க் கடைகள் தான் இருக்கும். பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள், உணவகங்கள், முடி திருத்தும் சலூன், புத்தகக் கடை போன்ற எல்லாம் அங்கே உண்டு. போதாக்குறைக்கு வார இறுதியில் திரையரங்கில் புதிதாக வந்த தமிழ் சினிமாப்படம் போடுவார்கள்.

உண்மையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கூட, அந்தப் பகுதியில் அல்ஜீரியர்கள், ஆப்பிரிக்கர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் தான் பெருமளவில் இருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் சில தெருக்களை தமக்கென "ஆக்கிரமித்து" விட்டார்கள்.

பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரும்பான்மையானோர், தமிழரைத் தவிர மற்ற இனத்தவருடனும் பழகுவதில்லை. (தமக்கு அப்படி எந்த தேவையும் இல்லையென்று சிலர் நேரடியாகவே சொல்வதுண்டு.) இது ஒரு வகையில் "கெட்டோ" (Ghetto) மனப்பான்மையை உண்டாக்குகின்றது. 

பெரும்பாலான பாரிஸ் தமிழர்களுக்குகும், அல்ஜீரிய சமூகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் மிகவும் குறைவு.  அல்ஜீரியர்களை "அடையார்" என்று பட்டப் பெயர் சூட்டி அழைப்பார்கள். நேரடிப் பழக்கம் இல்லா விட்டாலும், ஆதாரம் இல்லாவிட்டாலும், எப்போதும் அல்ஜீரியர்களைப் பற்றிப் பல எதிர்மறையான கதைகளை மட்டுமே பேசுவார்கள்.

ஏனென்று கேட்டால், அவர்கள் "திருடர்கள், கிரிமினல்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்," என்று பல காரணங்களை அடுக்குவார்கள். போதாக்குறைக்கு, "சமீப காலமாக பிரான்ஸின் அமைதியைக் குலைக்கும், ஷரியா சட்டம் கோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்கள் தான்..." என்று சொல்வார்கள்.

இன்றைக்கு, பிரான்சில் வாழும் அல்ஜீரியர்களை, "இஸ்லாமிய பயங்கரவாதிகளாக" அல்லது "திருடர்களாக" மட்டுமே கருதி மிரண்டு கொண்டிருக்கும், அரைவேக்காடுகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. பிரான்சில் வாழும் அல்ஜீரிய குடியேறிகளில் பலர், அந்த நாட்டிற்கு சர்வதேச புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல துறைகளிலும் பிரகாசித்து வந்திருக்கின்றனர். பலரது புகழ் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றது. பிரபல பெண் ஆவணப் பட இயக்குனர் யாமினா (Yamina Benguigui), இன்றுள்ள பிரான்சுவா ஹோலந்த் அரசினால் கடல் கடந்த பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரெஞ்சு தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடிய சிடான் (Zinedine Yazid Zidan) பற்றி கேள்விப் படாத விளையாட்டு இரசிகர்களே இருக்க முடியாது. இப்படிப் பலரது பெயர்களைக் குறிப்பிடலாம்.

அப்படியான, பிரான்சில் குடியேறிய அல்ஜீரிய பிரபலங்களில் ஒருவர் காலித் (Khaled Hadj Ibrahim). உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர். அமெரிக்காவில் சிறந்த பாடகருக்கான கிராமி விருதை (Grammy Awards) பெற்றவர். அல்ஜீரியாவில், காலித் பிறந்த ஊரில், அடித்தட்டு சமூக மக்களால் இசைக்கப்படும், நாட்டார் பாடல்கள் வகையை சேர்ந்த ராய் (Raï) இசை மூலம் உலகப் புகழ் பெற்றார். தமிழக சினிமா மூலம் பிரபலமான "கானா பாடல்கள்" வகையுடன் இதை ஒப்பிடலாம்.

1996 ம் ஆண்டு, ராய் இசையில், காலித் பாடிய "ஆயிஷா... ஆயிஷா..." எனும் பிரெஞ்சு மொழிப் பாடல், பல ஐரோப்பிய நாடுகளில் வருடக் கணக்காக பிரபலமாக இருந்தது. அன்று அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத ஐரோப்பிய இளைஞர்களின் வாய்கள் இல்லை. MTV போன்ற இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில், வாரக் கணக்காக முதல் பத்து பாடல் தெரிவுகளில் ஒன்றாக இருந்தது.

அந்தக் காலங்களில், காலித்தின் ஆயிஷா ஆயிஷா பாடலின் இசையை நகலெடுத்து, நமது தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்தனர். இன்றைக்கும் அந்தப் பாடல்களை இரசிக்கும் தமிழர்கள் பலருக்கு, தாங்கள் ஒரு அரபி இசையை கேட்கிறோம் என்ற உண்மை தெரியாமல் இருக்கலாம்.

இசைக்கு மொழி கிடையாது. ஓரளவு பிரெஞ்சு மொழி தெரிந்தவர்கள், அந்தப் பாடலை இரசித்துக் கேட்க விரும்புவார்கள் என்பதால், பாடல் வரிகளை கீழே தந்திருக்கிறேன்.

Cheb Khaled - Aicha

Cheb Khaled - Aicha [Official Video] Original https://www.youtube.com/watch?v=8be8zBJWDJw


Comme si je n'existais pas,
elle est passée à côté de moi
Sans un regard, reine de Saba,
j'ai dit, Aïcha, prends, tout est pour toi

Voici, les perles, les bijoux,
 aussi l'or autour de ton cou
Les fruits, biens mûrs au goût de miel,
ma vie, Aicha si tu m'aimes!

J'irai où ton souffle nous mène,
dans les pays d'ivoire et débène
J'effacerais tes larmes, tes peines,
rien n'est trop beau pour une si belle

Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas,
Aïcha, Aïcha regarde moi,
Aïcha, Aïcha reponds-moi

Je dirais le mots des poèmes,
je jouerais les musiques du ciel,
je prendrais les rayons du soleil,
pour élairer tes yeux de reine

Oooh! Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas

Elle a dit: "Garde tes trésors, moi,
je vaux mieux que tout ça.
Des barreaux sont des barreaux même en or
Je veux les mêmes droits que toi
Et du respect pour chaque jour,
moi je ne veux que l'amour"

Monday, January 26, 2015

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்


பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல.   தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு. 

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. 

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி: 
//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

Sunday, January 18, 2015

"கருத்துச் சுதந்திரவாதிகள்" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்


இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன?

பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.

சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.
French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy jibe 

தற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ?

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.

Charlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், "அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்..." என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.

இதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, "கலாச்சாரங்களின் மோதல்" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், "கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.

தமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)

நைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)

கருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், "முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html?ncid=fcbklnkfrhpmg00000001

மேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

அநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)

இந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங்கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

மத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்