Showing posts with label மக்டொனால்ட்ஸ். Show all posts
Showing posts with label மக்டொனால்ட்ஸ். Show all posts

Saturday, April 18, 2020

மக்டொனால்ட்ஸ் உடைத்து ஏழைகளுக்கு உணவளித்த தொழிலாளர்கள்


பிரான்ஸில் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்!

- கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் பல வாரங்கள் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையை நிர்வாகம் எதிர்த்த போதிலும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரெட்ரான்ட் திறந்துள்ளனர்.

- கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுன் காரணமாக ஏழைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். மார்செய் நகரிலும் அது தான் நிலைமை. மார்செய் வடக்கில் உள்ள Saint-Barthélemy வட்டாரத்தில் ஒரு மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையில் அவர்களும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் தானே? தமது உற்றார் உறவினர்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

- மார்செய் நகரில் பெரும்பாலும் வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதிகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிரான்ஸ் முழுவதும் வேலையற்றவர் எண்ணிக்கை 8.5%. ஆனால் இந்தப் பகுதிகளில் 25 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்ல மார்செய் நகரில் 39 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- கடந்த காலத்தில் நடந்த வேலையிழப்புகள், சம்பளக் குறைப்புகள் இத்துடன் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட ஊரடங்கு தனிமைப்படுத்தலும் சேர்ந்து கொள்ளவே நிலைமை இன்னும் மோசமடைந்தது. அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் நலன் பேணும் Maison Blanche அமைப்பின் சார்பில் பேசிய போது, தம்மிடம் சாப்பிட எதுவுமில்லை என்று பல குடும்பங்கள் தம்மிடம் முறையிடுவதாக தெரிவித்தார். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்களுக்கு வெங்காய சூப் மட்டும் கொடுத்ததாக கூறினார்.

- அங்கு "கலக்டிவ்" என பொதுவுடைமை கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய அமைப்புகளில் நிர்வாகி என்று யாரும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் கூட அவர்களிடம் உதவி கேட்குமாறு சொல்லும் அளவிற்கு இந்த கலக்டிவ் சிறப்பாக செயற்படுகின்றது.

- இருப்பினும் உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால் Syndicat des quartiers populaires de Marseille (மார்செய் பொதுச் சங்கம்) போன்ற கலக்டிவ் அமைப்புகள் மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட்டை உடைத்து திறப்பது என்று முடிவெடுத்தன. Forc e Ouvrière (தொழிலாளர் சக்தி) அமைப்பின் பிரதிநிதி Kamel Guémari இவ்வாறு கூறினார்: "அவசர காலத்தில் எமது பிரதேசத்தில் வாழும் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள்?"

- மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கையகப் படுத்திய தொழிலாளர்கள் அங்கு ஏற்கனவே வைத்திருந்த உணவுப் பொருட்களுடன், கடைகள், தனிநபர்கள் தானமாகக் கொடுத்த உணவு பொருட்களையும் சேர்த்து உணவு தயாரித்து பெட்டிகளில் அடைத்து தயாராக வைத்திருந்தார்கள். அவற்றை தொண்டர்கள் எடுத்துச் சென்று வீடு வீடாக விநியோகித்தனர். இந்த செயற்பாடுகள் யாவும் சுகாதார முறைகளுக்கு அமையவே நடந்துள்ளன. எல்லோரும் கிளவுஸ், முகக்கவசம் அணிந்தே வேலை செய்தார்கள்.

- இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் மக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகம் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது குறித்து La Marseillaise பத்திரிகையுடனான பேட்டியில் விளக்கம் கொடுத்தார்: "ஏற்கனவே நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை." அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்குமா?

- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு உழைக்கும் வர்க்கமான வெளிநாட்டு குடியேறிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க காலனிகளை சேர்ந்தவர்கள் மார்செய் நகர சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர். "இஸ்லாமியர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதில்லை" என்ற பலரது தப்பெண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் சுக்குநூறாகி விட்டது. பிரான்சில், ஐரோப்பாவில் இதுவரை காலமும் இருந்து வந்த "இஸ்லாமியர் பிரச்சினை" உண்மையில் இனப்பிரச்சினையாகவும், அதன் அடிப்படையாக வர்க்கப் பிரச்சினையாகவும் உள்ளது. பல்லின உழைக்கும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். அதைத் தான் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கைப்பற்றிய தோழர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு எமது தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். 


Friday, June 25, 2010

McDonald's: பிள்ளை பிடிகாரர்களின் உணவகம்!


எங்காவது ஒரு மேற்குலக நகரத்தில் பொருளாதார உச்சி மகாநாடு நடைபெற்றால், அங்கே முதலில் தாக்கப் படுவது மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கும். மகாநாட்டை எதிர்த்து தெருவில் ஊர்வலம் போகும் எதிர்ப்பாளர்கள் வழியில் மக்டோனால்ட்சை பார்த்தால் கல் எடுத்து வீசாமல் போக மாட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த உலகமயமாக்கலின் சின்னமான மக்டோனால்ட்சை அடித்து நொறுக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு குஷி. இதனால் மகாநாடு நடக்கும் சமயம், முதல் நாளே உணவு விடுதியை பூட்டி விட்டு, கண்ணாடிகளுக்கு மேலே பலகை அடித்து விட்டு போவார்கள்.

மக்டொனால்ட்ஸ் எந்த சத்துமற்ற சக்கையை விற்று காசாக்குகின்றது, என்ற விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது. அதனால் மக்டொனால்ட்ஸ் நிர்வாகம், "உள்நாட்டில் வாங்கிய தரமான உணவுப் பொருட்களை கொண்டு தயாரிப்பதாக" அடிக்கடி காதில் பூச் சுற்றும். மக்டொனால்ட்ஸ் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் பல்வேறு வியாதிகளை உருவாக்குகின்றன. மக்டோனால்ட்சின் தாயகமான அமெரிக்காவில், "ஹம்பெர்கர்" தின்று கொழுத்த சிறுவர்கள் ராட்சதர்கள் போல காட்சி தருவார்கள். (உலகிலேயே பெரிய்ய்ய்ய நாடல்லவா. அங்கே எல்லாம் பெரிசு பெரிசாக தான் இருக்கும்.)

மக்டொனால்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பிய பொது மக்கள், அங்கே சாப்பிடுவதை தரக் குறைவாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழ். வசதியான நடுத்தர வர்க்க இளைஞர்கள் மக்டோனால்ட்சை மொய்க்கிறார்கள். அங்கே சாப்பிடுவதில் ஒரு பெருமிதம். அமெரிக்காவில் இருந்து எந்த குப்பையை இறக்குமதி செய்தாலும் அவர்களுக்கு இனிக்கும். மேற்குலகில் தோன்றியுள்ள மக்டொனால்ட்ஸ் எதிர்ப்பு அலை பற்றி, இந்திய மேன் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். (நீங்க எல்லாவற்றிலும் too late)

கடந்த பத்தாண்டுகளில் வணிகவியல் படித்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது மார்க்கெட்டிங் வகுப்பில் மக்டோனால்ட்சின் "வெற்றியின் இரகசியம்" பற்றி கற்பித்திருப்பார்கள். அது என்ன பெரிய "மார்கெட்டிங் புரட்சி"? குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அன்பளிப்புகளை, (மக்டொனால்ட்ஸ் சின்னம் பொறித்த) விளையாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளே பெரியவர்களை ரெஸ்டாரன்ட் பக்கம் இழுத்து வருகின்றன.

வழியில் மக்டோனால்ட்சை கண்டால் அங்கே போக வேண்டுமென்று அடம் பிடிக்கும் குழந்தைகள் எத்தனை? குழந்தைகள் வந்தால் கூடவே பணத்துடன் பெற்றோரும் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். இது ஒன்றும் மகத்தான மார்க்கெட்டிங் கிடையாது. "பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து கடத்தும் பிள்ளை பிடிகாரர்களின் கயமைத்தனம்." இப்படிக் கூறுகிறது அமெரிக்காவில் ஆய்வு செய்த Centre for Science in the Public Interest (CSPI).

உணவு உற்பத்தி தொழிற்துறையை ஆய்வு செய்யும் அந்த வெகுஜன நிறுவனம், மக்டொனால்ட்ஸ் நீதியற்ற, ஏமாற்றும் மார்க்கெட்டிங் மூலம் பிள்ளைகளை கவருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளம்பரம் செய்வதானது, நுகர்வோர் பாதுகாப்பை மீறும் செயல் என்று எச்சரித்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சத்தான உணவை சாப்பிட பழக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தடையாக இருப்பதாக அது மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் மக்டொனால்ட்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எண்ணி முப்பது நாட்களுக்குள் மக்டொனால்ட்ஸ் தனது "பிள்ளை பிடி மார்க்கெட்டிங்கை" நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும். நிச்சயமாக மக்டொனால்ட்ஸ் நிர்வாகம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருக்காது. அவர்களைப் பொறுத்த வரையில் நமது குழந்தைகளின் நலன் முக்கியமல்ல, நமது பாக்கெட்டில் உள்ள பணம் தான் முக்கியம்.


References:
McDonald's Lawsuit: Using Toys to Sell Happy Meals
Centre for Science in the Public Interest
Jose Bove - the Man Who Dismantled a McDonalds
Super Size Me - anti McDonald's documentary