Sunday, February 08, 2015

சார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்!


பிரான்சின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திர வார இதழான சார்லி எப்டோ (Charlie Hebdo) முன்னர் ஒரு காலத்தில் இடதுசாரிப் பத்திரிகையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டளவில், முதலாளித்துவத்திற்கும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் எதிராக வெளிவந்த L'assiette au beurre பத்திரிகையின் தொடர்ச்சியாக தன்னைக் கூறிக் கொண்டது.

ஆனால், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அதன் போக்கு மாறியது. அது ஒரு வலதுசாரிப் பத்திரிகையாக, பிரெஞ்சு இடதுசாரிகளால் எதிர்க்கப் பட்ட பிரெஞ்சு அரசின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. இன்னும் அதிகமாக, சிலநேரம் தீவிர வலதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இனவாதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், பத்திரிகையின் விற்பனை அதிகரிக்கும் என்று நிர்வாகம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அதன் விற்பனை சரிந்து கொண்டே சென்றது.

ரோத்ஷீல்ட்ஸ் பற்றி தெரியாதவர் உலகில் யாரும் இருக்க முடியாது. வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜேர்மனிய யூதக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

பிரான்சின் கேலிச்சித்திர வார இதழான Charlie Hebdo, அண்மைக் காலமாக நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதன் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அதனால், ஏற்கனவே பிரான்ஸின் பிரபல தினசரியான, Libération பத்திரிகை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்ப உறுப்பினரான Édouard baron de Rothschild, தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் Charlie Hebdo பத்திரிகையை வாங்கி இருந்தார். ஏற்கனவே, Libération அவர் கைகளில் இருந்த படியால், சார்லி எப்டோ வாங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்குள் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அரசியலில் நேரடியாக தலையிட வேண்டி வரும் என்ற அச்சம். இரண்டு, ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையை வாங்குவதை யாரும் விரும்பவில்லை.

ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி எப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக எடுவார்ட் பாரோன் அதை வாங்கி விட்டிருந்தார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகம் மீதான பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அந்தப் பத்திரிகை மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப் பட்டமை யாவரும் அறிந்ததே. இதனால், அன்று அதனை குறைந்த விலை கொடுத்து வாங்கிய கோடீஸ்வரர், மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதித்திருப்பார்.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு இது: 
DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN' 

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், மொசாட் அல்லது மேற்கத்திய உளவு நிறுவனம் ஒன்றினால் நடத்தப் பட்டது என்று அப்போதே சிலர் சொல்லத் தொடங்கி இருந்தனர். தமது சந்தேகங்களுக்கு சில ஆதாரங்களையும் காட்டினார்கள். இராணுவ கமாண்டோக்கள் போன்று ஆயுதமேந்தி, தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற காரில் ஓர் அடையாள அட்டை கண்டெடுக்கப் பட்டது. இந்தளவு தூரம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியவர்கள், அடையாள அட்டையை மறந்து போய் விட்டுச் செல்லுமளவிற்கு முட்டாள்களாக இருந்திருப்பார்கள் என்று கூற முடியாது. மேலும் சார்லி எப்டோ தாக்குதல் பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதிலேயும் பல மர்மங்கள் மறைந்துள்ளன. 
French police chief committed suicide after Charlie Hebdo attack;


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

No comments: