Showing posts with label இஸ்லாமியவாதம். Show all posts
Showing posts with label இஸ்லாமியவாதம். Show all posts

Monday, July 13, 2020

முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்

அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் முதலாளித்துவம் என்பது பல தடவை நிரூபிக்கப் பட்ட விடயம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சொந்த வீடு, கார் என்று வசதிகளை ஏற்படுத்தி தந்த சீரழிந்த முதலாளித்துவத்தின் நன்மைகளை அனுபவித்த படியே, அப்பாவி உழைக்கும் வர்க்க முஸ்லிம்களுக்கு மேற்குலக கலாச்சார சீரழிவு பற்றி வகுப்பு எடுப்பார்கள்.

ஒரு முகநூல் நண்பர், தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர், (அல்லது தன்னைத்தானே அப்படி கருதிக் கொள்பவர்), நேற்று முதலாளித்துவத்தை புகழ்ந்து மூன்று நான்கு தரம் பதிவுகள் இட்டுள்ளார். "பங்குச் சந்தை வர்த்தகம் பற்றித் தெரியுமா...ஹா...ஹா...?" என்று தானே கேள்வி கேட்டு தானே சிரிக்கிறார். (அவரது நிலைத்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.)

இன்று பலருக்குத் தெரியாத தகவல், வரலாற்றில் இஸ்லாம் தான் முதலாளித்துவத்தை வளர்த்தது. உண்மையில் மத்திய கிழக்கில் இருந்து தான் ஐரோப்பியர்கள் முதலாளித்துவம் பற்றி அறிந்து கொண்டார்கள். உதாரணத்திற்கு, 'ஷெக்' (cheque) என்பது ஒரு அரபிச் சொல்.

இருப்பினும், இஸ்லாம் எனும் மதம் தோன்றிய காலத்தில் பங்குச் சந்தை வணிகம் இருக்கவில்லை. அது ஐரோப்பாவில் தோன்றிய பிற்கால முதலாளித்துவத்திற்கு உரியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கிய கிழக்கிந்திய கம்பனி தான் முதலாவது பங்குப் பரிமாற்ற வணிகத்தை தொடக்கி வைத்தது. எதற்காக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் பங்குச் சந்தை வணிகத்தை யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை? காரணம் மிக எளிது. இஸ்லாம் சூதாடுவது பாவம் என்று தடை செய்துள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் என்பது அடிப்படையில் ஒரு சூதாட்டம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. The Big Short திரைப்படத்தில் இந்த உண்மையை அப்படியே தோலுரித்துக் காட்டுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றுக்கும் உதவாத பங்குகளை ஊதிப் பெருக்கி கோடி கோடியாக பணம் சம்பாதித்த "டொட் கொம் மோசடி" காரணமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பாலும் தூர கிழக்காசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப் பட்டன. தென் கொரியாவில் நூற்றுக் கணக்கானவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்கள்.

இப்படியான பாவ காரியங்களில் முதலீடு செய்வதை பெருமையாகக் கருதும் ஒருவர், இஸ்லாமிய போர்வைக்குள் மறைந்து கொள்வது அந்த மதத்திற்கே இழுக்கானது. முஸ்லிம் நண்பர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். லண்டனில் வசிக்கும் இவர், "டெஸ்கோ பங்கு விலை அதிகரித்துள்ளது... புரிகிறதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கிறார். இப்படியான மாயைக்குள் வாழும் ஒருவருடன் உரையாடிப் பயனில்லை என்பதால், கனவு காணுங்கள் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இந்த இடத்திலும் தான் நம்பும் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் கற்பிக்கும் அவரது செயற்பாடுகளை விமர்சிக்க வேண்டி உள்ளது.

இஸ்லாம் வட்டி வாங்குவது ஹராம்(பாவம்) என்று கூறி தடை செய்துள்ளது. அதனால் இஸ்லாமிய வங்கிகள் என சொல்லிக் கொள்ளும் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. ஆனால் அதே வங்கிகள் பங்கு மார்க்கெட்டில் முதலிடுகின்றன. அதனால் கிடைக்கும் இலாபத்தை அனுபவிக்கின்றன. இதற்கு காரணம் கேட்டால் இஸ்லாத்தில் பங்குச் சந்தை பற்றி எதுவும் சொல்லப் படவில்லை என்று "புத்திசாலித்தானமாக" பதில் கூறுவார்கள்.

வட்டி வாங்குவது பாவம் என்று இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. யூத, கிறிஸ்தவ மதங்களும் அதையே கூறுகின்றன. அதற்குக் காரணம் வட்டி என்பது ஒருவனின் திருடப்பட்ட உழைப்பு. கடன் கொடுத்தவர் அதற்கு உரித்துடையவர் அல்ல. ஆகவே இது ஒரு பகற்கொள்ளை. ஆனால், இந்த மூன்று மதங்களும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது கட்டியெழுப்ப பட்டன. அதனால் புனித நூல்கள் பாவம் என்று சொன்னதை, நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதில்லை.

ஐரோப்பாவில் பல யூதர்கள் வட்டிக் கடைக்காரர்களாக தொழில் செய்துள்ளனர். புனித நூலின் மதக் கட்டளைகளை மீறுகிறோமே என்று அவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் மன்னர்களே யூதர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஆட்சி நடத்தி உள்ளனர். பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் வட்டிக்கு கடன் கொடுத்த பாவிகளை தண்டிப்பதாகக் கூறி யூத இனப்படுகொலை புரிந்தனர். இந்தக் கொடுமை இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. வேடிக்கை என்னவென்றால், கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பிய கிறிஸ்தவ முதலாளிகள் தான் வட்டித் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர். IMF, உலகவங்கி பெயரில் எல்லா உலக நாடுகளுக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள்.

பங்குச்சந்தையில் எல்லோரும் முதலிடலாம் என்று முதலாளித்துவம் சொன்னாலும், பெருமளவு பங்குகளை வைத்திருப்பவர்கள் கைகளில் தான் அதிகாரம் இருக்கும். அவர்கள் தான் "சிங்கத்தின் பங்கு" என்று சொல்லத்தக்க பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கிறார்கள். பங்குகளில் கிடைக்கும் இலாபத்தை டிவிடன்ட் என்று வேறொரு பெயரால் அழைக்கிறார்கள். ஆனால் அதுவும் வட்டி தான்.

ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பகுதி பங்குதாரர்கள் முதலிட்ட பணத் தொகைக்கு ஏற்றவாறு வட்டியாக பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து திருடப்பட்ட உழைப்பு ஒரு புறம். சந்தையில் பொருளை அதிக விலைக்கு விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் திருடப்படும் உழைப்பு மறுபுறம். இவ்வாறு கிடைத்த திருட்டுப் பணத்தை, முதலீட்டாளர்கள் எனப்படும் பெரிய கொள்ளையர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தயவுசெய்து, பகற்கொள்ளை, திருட்டுக்கு துணை போகிறவர்களும், அதை ஆதரிக்கிறவர்களும் மதத்தை போர்வையாக போர்த்திக் கொள்ளாதீர்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படியான பேர்வழிகள் தான் மதப்பாற்றாளர் வேஷம் போடுகிறார்கள். "இஸ்லாம் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். பங்குச்சந்தையில் சூதாடி உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்து பாவத்தை தேடுவதை விட, எந்த மதத்தையும் பற்றி தெரியாமல் இருப்பது பெரிய குற்றம் அல்ல.

குர்ஆனில் இருந்து சில வசனங்கள்:

  • 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். 
  • 2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்;  அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். 
  • 2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”.

Saturday, August 27, 2016

பிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவாத முதலாளித்துவம்




பிரான்சில் முஸ்லிம் பெண்களை துப்பாக்கி முனையில் "விடுதலை" செய்யும் பொலிஸ். கடற்கரையில் படுத்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடைகளை கழற்றுமாறு பொலிஸ் துப்பாக்கி முனையில் பயமுறுத்தியது.

பிரான்ஸ் நாட்டில் கான் (Cannes) ந‌க‌ர‌த்தில், முஸ்லிம் பெண்க‌ள் முழு உட‌லையும் ம‌றைக்கும் நீச்ச‌ல் உடையுட‌ன் க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌த‌ற்கு விதித்திருந்தது. பூர்கினி என்று அழைக்கப் ப‌டும் உடலை மூடும் ஆடை அணிந்து நீச்ச‌ல் குள‌ங்க‌ள், க‌டற்க‌ரைக்கு செல்ல‌க் கூடாது என்று கான் ந‌க‌ர‌ மேய‌ர் ச‌ட்ட‌ம் போட்டிருந்தார். இந்த‌ த‌டையுத்த‌ர‌வுக்கு ஐரோப்பிய‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்து வ‌ர‌வேற்றிருந்தனர்.

பூர்கினி எனும் இஸ்லாமிய‌ நீச்ச‌ல் உடைக்கு எதிரான‌ த‌டையுத்த‌ர‌வு, அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்திற்கு முர‌ணான‌து என்று பிரான்ஸ் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ள‌து. ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ள் போட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம், இந்த‌ த‌டையுத்த‌ர‌வு இன‌வாத‌ உள்நோக்க‌ம் கொண்ட‌து என்றும், ம‌த‌ச்சுத‌ந்திர‌த்தை மீறுகிற‌து என்றும் தீர்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து. அந்த‌ தீர்ப்பை அடுத்து பூர்கினி த‌டை போட்ட‌ ந‌க‌ர‌சபைக‌ள் உடனடியாக த‌டையை வில‌க்கிக் கொள்ள‌ வேண்டும்.

ஐரோப்பிய‌ க‌லாச்சார மேலாதிக்க‌த்தை திணிக்கும் இன‌வாதிக‌ளின் பூர்கினி த‌டையுத்த‌ர‌வுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ த‌மிழ‌ர்க‌ளும் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ந‌கைப்புக்குரிய‌து. யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ள், குள‌ங்க‌ள், கேணிக‌ள், குள‌ங்க‌ளில் குளிக்க‌ வ‌ரும் (இந்து) த‌மிழ்ப் பெண்க‌ள் யாரும் பிகினி அணிந்திருந்த‌தை நான் காண‌வில்லை. ப‌ல‌ர் உடுத்த‌ உடையோடு குளித்து விட்டு செல்கிறார்க‌ள். சில‌ர் குறுக்குக் க‌ட்டி இருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஒரு நிலைமையை க‌ற்ப‌னை செய்து பார்ப்போம். இனிமேல் பொது இட‌ங்க‌ளில் குளிக்கும் பெண்க‌ள் பிகினி அணிந்திருக்க‌ வேண்டும் என்று சிறில‌ங்கா அர‌சு ச‌ட்ட‌ம் போடுகின்ற‌து. (ஏற்க‌ன‌வே பிரான்ஸ் நாட்டில் போட்ட‌ அதே ச‌ட்ட‌ம் தான்.)

த‌ற்போது சிறில‌ங்கா அர‌சு கொண்டு வ‌ந்த‌ பிகினி ச‌ட்ட‌ம், த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ஒடுக்குமுறை என்று த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் போர்க்கொடி உய‌ர்த்தி இருப்பார்க‌ள். த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் "த‌மிழ‌ரின் பூர்கினி உரிமைக்காக"‌, ஐ.நா. வ‌ரை நீதி கோரி ந‌டைப் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்தி இருக்கும். இத்த‌னைக்கும் இந்த‌ "பூர்கினி ஆத‌ர‌வாளர்க‌ள்" யாரும் முஸ்லிம்க‌ள் அல்ல‌. மாறாக‌ த‌மிழ்க் க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை என்ப‌து பொது இட‌ம். அங்கு என்ன‌ உடை அணிய‌ வேண்டும் என்று யாரும் யாருக்கும் உத்த‌ர‌வு போட‌ முடியாது. சில‌ர் பிகினி அணிந்து அரை நிர்வாண‌மாக‌ இருப்பார்க‌ள். சில‌ர் உட‌லை மூடிய‌ ஆடையுட‌ன் வ‌ந்திருப்பார்க‌ள்.

அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். ஆனால் எல்லோரும் க‌ட‌ற்க‌ரையில் குளிப்ப‌த‌ற்கு அல்ல‌து ஓய்வெடுக்கும் நோக்கில் வ‌ந்திருப்பார்க‌ள். ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பெண்க‌ள் பிகினி அணிய‌ல‌மா? என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள்? லெப‌னான், எகிப்து, துனீசியா, மொரோக்கோ போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ளில், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உள்நாட்டு முஸ்லிம் பெண்க‌ளும் பிகினி அணிந்து வ‌ருவ‌தைக் காண‌லாம்.

அங்கெல்லாம் க‌ட‌ற்க‌ரையில் இந்த‌ உடுப்பு தான் அணிய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுப்பாடு எதுவும் கிடையாது. யூத‌ இஸ்ரேலிலும் அப்ப‌டி ஒரு நிலைமை இல்லை. சில‌ க‌டும்போக்கு யூத‌ ம‌த‌ப் பிரிவுக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ளும், உட‌லை மூடும் உடை அணிந்து தான் குளிப்பார்க‌ள். இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் கூட‌ ஐரோப்பிய‌ப் பெண்க‌ள், உட‌லை மூடும் உடை அணிந்து க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌து வ‌ழ‌மையாக‌ இருந்த‌து.

பூர்கினி என்றால் என்ன? பலர் தவறாக நினைப்பது மாதிரி, அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நீச்சல்குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். "அங்கெல்லாம் எல்லோரும் நிர்வாணமாக இருப்பார்கள்..." என்று அருவருப்பாக கருதுவார்கள். அவர்கள் பூர்கினி அணிந்தும் குளிக்கப் போக மாட்டார்கள்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் தொலதிபர் Aheda Zanetti என்பவர் தான் பூர்கினி என்ற உடையை வடிவமைத்தார். அது பேஷன் சம்பந்தப் பட்ட விடயம். பேஷன் என்றால் அது ஐரோப்பியர்கள் மட்டும் தான் வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா? எங்களில் பெரும்பான்மையானோர் மேற்கத்திய பாணியில் உடுத்துவதை மட்டுமே பேஷன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அஹேடா ஜானெத்தி லெபனானை பூர்வீகமாக கொண்டவர். கடந்த நாற்பது வருட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப் பெண்கள் கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுது போக்குவதற்கு வசதியாக பூர்கினி என்ற உடையை வடிவமைத்ததாக அவர் கூறுகின்றார். "இது பெண்களை விடுதலை செய்கின்றது" என்கிறார். அவர் இதற்கு முன்னர் இஸ்லாமிய மரபு சார்ந்த விளையாட்டு உடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சந்தைப் படுத்தப் பட்ட பூர்கினி என்ற நீச்சல் உடை, பின்னர் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், உலகம் முழுவதும் 700.000 உடைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு உடையின் விலை $80 அல்லது $200 டாலர்கள்.

இந்த பூர்கினி உடை வாங்கி அணிபவர்கள் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் அல்ல. இந்து, யூத மதங்களை பின்பற்றும் பெண்களும் வாங்கி அணிகின்றனர். அவர்களும் கலாச்சார நோக்கில் தான் பூர்கினி அணிகிறார்கள். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு குணமான ஐரோப்பிய இனப் பெண்களும் பூர்கினி வாங்குகின்றனர். இந்த விபரங்களை தெரிவித்த Aheda Zanetti, அதனது வாடிக்கையாளர்களில் நாற்பது சதவீதம் இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என்று சொல்கிறார்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பூர்கினி உடை குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, முதலாளித்துவ மேலாதிக்க நலன்களுக்கான போட்டி காரணமாக  இருக்கலாமா? இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா? இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா? இது தான் இங்கேயுள்ள பிரச்சினை.

அதாவது, உலக கலாச்சார தளத்திலும், மேற்கத்திய முதலாளித்துவம் மட்டும் தான் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு போட்டியாக வரும் ஹலால் முதலாளித்துவம், பூர்கினி முதலாளித்துவம், சேலை முதலாளித்துவம், எதுவாக இருந்தாலும் அடக்கி ஒடுக்கவே நினைக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். "இஸ்லாமிய மதப் பிரச்சினை...பாதுகாப்பு பிரச்சினை..." இப்படிப் பல.

எல்லாப் பிரச்சினைகளும் வந்து ஓர் இடத்தில் குவிகின்றன. உலக சந்தையை கைப்பற்றல், நுகர்வோர்களை கட்டுப்படுத்தல்...சுருக்கமாக மூலதன திரட்சி மேற்குலகை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களை ஏமாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறது..."இஸ்லாமிய தீவிரவாதப் பூதம்"!

Sunday, October 12, 2014

போலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே!

போலித் தமிழ்தேசியவாதிகள், போலி சிங்களதேசியவாதிகள், போலி இஸ்லாமியவாதிகள்... இவர்கள் தமக்குள் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், முதலாளிகளின் கைக்கூலிகள் தான் என்பதை, கடைசியில் எப்படியோ நிரூபித்து விடுவார்கள்.



தமிழினவாதிகள் போன்று, இஸ்லாமிய மதவாதிகளும், கம்யூனிஸ்டுகள் எனப் படுவோர் "செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்து குதித்த வேற்றுக் கிரக வாசிகள்" என்பது போல நினைத்துக் கொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், ஆப்கானியர்கள் தான் கம்யூனிஸ்டுகளாக இருந்தார். ஆப்கான் கம்யூனிஸ்டுகளின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகத் தான், சோவியத் யூனியன் படைகளை அனுப்பியது.

"ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்திருந்தது" என்பது ஒரு அமெரிக்காவின் பிரச்சாரம். சோவியத் இராணுவம் வருவதற்கு முன்னரே, மத அடிப்படைவாத முஜாகிதீன் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. அந்த இயக்கங்களுக்கு சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் கிடைத்து வந்தன.

அரபு நாடுகளிலும், அரபு கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர். சிரியா, தென் யேமன், எகிப்து போன்ற சில நாடுகளைக் குறிப்பிடலாம். அவ்வாறு தான், சோவியத் யூனியனுக்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளுடன் நட்புறவு ஏற்பட்டது. இன்றைக்கும், ஈராக் முதல் மொரோக்கோ வரையில், அரபு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இங்கே சில போலி இஸ்லாமியவாதிகள் கேட்டுள்ள அபத்தமான கேள்விகளும், அவற்றிற்கான எனது பதில்களும்.

  • கேள்வி: முஸ்லிம் நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயற்பட முடியாமைக்கான காரணங்களாக நீங்கள் எவற்றைக் காண்கிறீர்கள்?

பதில்: இணைந்து செயற்படவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? சில பொதுவான பிரச்சினைகள், கோரிக்கைகளின் கீழ் ஐக்கிய முன்னணி அமைத்த உதாரணங்கள் பல உண்டு. ஆயினும், கொள்கை வேறுபாடுகளும் இருப்பதை மறுக்க முடியாது. அரபு முஸ்லிம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், தங்களை மாதிரியே சிந்திக்க வேண்டும் என்று இஸ்லாமியவாதிகள் எதிர்பார்ப்பது ஒரு பாசிஸ மனப்பான்மை. தமிழினவாதிகளிடமும் இதே மாதிரியான போக்கு காணப் படுகின்றது. அவர்களும், எல்லாத் தமிழர்களும் தங்களை மாதிரி பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலில் சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

  • கேள்வி: அரபு முஸ்லிம் நாடுகளிலுள்ள இஸ்லாமியவாதிகள் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர்) அமெரிக்க - மேற்கு நலன் பேணுபவர்களல்லர். கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள். எனவே, இந்தப் புள்ளியில் இணையும் இந்த இரு குழுவினரும் முரண்படும் புள்ளிகள் எவை?


பதில்: இப்படி கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை உருவாக்கியதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது. பாகிஸ்தானிலும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் பின்னால் பிரிட்டன் இருந்தது. அண்மையில் சிரியாவில் நடக்கும் போரில், இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், மேற்குலகின் உதவி பெற்றுப் போராடுவதற்கான ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உள்ளன. காயப் பட்ட போராளிகளுக்கு இஸ்ரேல் மருத்துவ உதவி செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், ஆரம்பத்தில் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் உதவியைப் பெற்று இயங்கி வந்தன. இஸ்லாமிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்ட் இயக்கங்களை அழிப்பதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவாத இயக்கங்களை வளர்த்து விட்டன. அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

  • கேள்வி: கம்யூனிஸ்ட்களின் ஆக்கிரமிப்புகளை விடுதலைக்காக எனவும், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பை எண்ணெய்க்கெனவும் கூறுவது நகைமுரண் இல்லையா, கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் இதை பயன்படுத்தி இதன் எதிர் வினையாக கடும் போக்கு கொண்ட மிதவாதிகள் மக்கள் ஆதரவை பெருகிறார்கள் அவர்களுக்கு உதவுவதுபோல் கம்யூனிச எதிர்ப்பால் மேற்குலகம் அவர்களை வளர்த்துவிடுகிறது, இவர்களது பனிப்போர்க்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தேவைப்படுகிறது?


பதில்: கம்யூனிஸ்டுகள் தங்களைத் தாங்களே ஆக்கிரமித்தார்களா? என்னய்யா அபத்தம் இது? முதலில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் பொழுது சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உங்களது சகோதரர்கள், சமூகத்தினர் கூட கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம். 

விளக்கமாக கூறிய பிறகும்.... "விடிய விடிய இராமர் கதை, விடிந்த பிறகு இராமனுக்கு சீதை என்ன முறை" என்று கேட்டது மாதிரி இருக்கிறது உங்களது கேள்வி! "கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு" என்பதற்கு எதிர்ப் பதமாக,  "முதலாளிகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறாமல், அதை "மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறுவதன் காரணம் என்னவோ? உங்கள் மனதில் உள்ள முதலாளித்துவ சார்புத் தன்மை இப்படியான தருணங்களில் தான் அம்பலமாகின்றது.

"முஸ்லிம் நாடுகளில்" உள்ள கம்யூனிஸ்டுகளும், மதத்தால் இஸ்லாமியர்கள் தான். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த நாடுகளில், "இஸ்லாமியர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக" நீங்கள் கூறுவது ஓர் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். பிற்போக்காளர்களான மதவெறியர்கள் மட்டும் தான் அடக்கப் பட்டனர். சாதாரண இஸ்லாமிய மக்கள் அல்ல. 

அது வரை காலமும் அதிகாரத்தில் இருந்த பழமைவாதிகள், நிலப்பிரபுக்கள், "இஸ்லாமியர்" என்ற பெயரைச் சொல்லித் தான், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அனைத்து அட்டூழியங்களையும் செய்து வந்தனர். அவர்களை இஸ்லாமிய மக்கள் தான் அடித்து விரட்டினார்கள். கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதனை "அடக்குமுறை" என்று சொல்வதில் இருந்தே, நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்து விடுகின்றது. நீங்கள் உண்மையில், இஸ்லாமிய மக்களை சார்ந்து சிந்திப்பவர் என்றால், இப்படியான அபத்தமான கருத்துக்களை கூற மாட்டீர்கள்.

  • கேள்வி: சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி தான் நடக்கிறது. அங்கே ஏன் ஜின்ஜியாங் மாநிலத்திலே இஸ்லாமியர்கள் மேல் கொடூரமான தாக்குதல் நடக்கிறது? நோன்பு இருந்தால் பொலிஸ் வலுக் கட்டாயமாக பிடித்து குடிக்க வைப்பார்கள். ஹஜ்ஜுக்கு போனால் வேலை போய் விடும். இதெல்லாம் பார்த்தால் கம்யூனிஸ்டுகள் மேல் வெறுப்பு தான் வருகிறது. காட்டுமிராண்டிகள் அவர்கள்...


பதில்: சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் மட்டுமே உள்ளது. அது ஒரு முதலாளித்துவ கட்சியாக மாறி இருபாதாண்டுகள் கடந்து விட்டன. சீனா இன்று முழுக்க முழுக்க ஒரு முதலாளித்துவ நாடு. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும், மனதில் உள்ள கம்யூனிச வெறுப்பின் காரணமாக, அதை உதாரணமாகக் காட்டுகின்றீர்கள். மாவோ காலத்தில், சீனா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், உய்குர் முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு வார்த்தை பேசாததில் இருந்தே, உங்களது போலி இஸ்லாமிய சகோதரத்துவம் அம்பலமாகின்றது.

மேலும், சீனாவில் உய்குர் மாநிலத்தில் மட்டும் இஸ்லாமியர்கள் வாழவில்லை. பிற மாநிலங்களிலும் பெருமளவு இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். சீன மொழி பேசும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களும் மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை சந்தித்து உள்ளனரா? இல்லையே. எங்காவது அப்படி நடந்ததாக, நீங்கள் கூட சொல்லவில்லை. அண்மைக் காலமாக, உய்குர் மாநிலத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரை மறந்து விட்டுப் பேசுவது அழகல்ல. 

தீவிரவாத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளில், சீனப் பொலிஸ் செய்த மனித உரிமை மீறல்களை தான் நீங்கள் பட்டியலிட்டு உள்ளீர்கள். இது போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் நாட்டில் நடக்க மாட்டாதா? சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமியவாதிகள் பள்ளிவாசல்களை குண்டு வைத்து உடைத்த நேரம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். சன்னி, ஷியா என்று பிழையான மதப்பிரிவில் பிறந்த காரணத்திற்காக, இஸ்லாமியவாதிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதை எல்லாம் பார்த்தால், உங்களுக்கு இஸ்லாமியர் மேல் வெறுப்பு உண்டாகியிருக்க வேண்டுமே?

  • கேள்வி: இஸ்லாமிய நாடுகளில் சென்று பாருங்கள். அங்கே யாரும் மற்ற மதத்துக் காரர்களை துன்புறுத்துவது இல்லை.


பதில்: இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்காதீர்கள். பாகிஸ்தான், ஈராக்கில் நடக்கும் சன்னி - ஷியா கலவரங்கள், அதனால் பலியான ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பற்றி எதுவும் கூறாத காரணம் என்ன?

எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப் பட்ட கதைகளை நீங்கள் கேள்விப் படவில்லையா? எத்தனை கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்கள் உடைக்கப் பட்டன என்று தெரியுமா? எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டனர் என்று தெரியுமா? இஸ்லாமியவாதிகளின் ஆட்சி நடக்கும் லிபியாவில், கருப்பின மக்கள் மேல் நிறவெறித் தாக்குதல்கள் நடக்கும் காரணம் என்ன? அந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?

நீங்கள் உண்மைகளை மறைத்து, ஒரு பக்கச் சார்பாக பேசுகின்றீர்கள். இஸ்லாமிய நாடுகளில் எந்த அடக்குமுறையும் கிடையாது என்று நினைப்பது அறியாமை. துருக்கி, ஈராக், ஈரானில் வாழும் குர்து மக்களும் இஸ்லாமியர்கள் தான். அங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும் இஸ்லாமியர்கள். குர்து இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமிய அரசுகள் புரிந்த கொடுமைகள் எத்தனை? அந்தக் கொடூரங்களுடன் ஒப்பிட்டால், சீனாவில் நடந்தவை சிறு பிள்ளை விளையாட்டுப் போல தோன்றும். இஸ்லாமியருக்கு எதிரான இஸ்லாமிய அரசுக்களின் காட்டுமிராண்டித்தனத்தை மறந்து விட்டுப் பேசும் காரணம் என்ன? அவற்றை மறைப்பதன் நோக்கம் என்ன? ஏனென்றால் நீங்கள் ஒரு போலி இஸ்லாமியவாதி.



Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Friday, June 07, 2013

இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி





துருக்கியில் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது. ஆயிரமாயிரம் மக்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் புரட்சி நடக்காமலே போகலாம். இன்னும் சில நாட்களில், இந்தப் போராட்டம் தனது இலக்கை அடையாமலே ஓய்ந்து விடலாம். ஆனால், தமது வாழ்நாளில் ஒரு வரலாற்றுக் கடமை ஆற்றிய உணர்வு அவர்களின் முகங்களில் பளிச்சிடுகின்றது.

இதனை ஒரு வகையில், "தமிழீழத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டு மாணவர்களின்" போராட்டத்துடன் ஒப்பிடலாம். இரண்டுமே தன்னெழுச்சியாக நடைபெற்றன. எந்தவொரு அரசியல் கட்சியும் தலைமை தாங்கி வழிநடத்தவில்லை. ஆனால், துருக்கி மக்களின் போராட்டம் அதிலிருந்து மாறுபட்டு தெரிகின்றது. நேரடியாக அந்த நாட்டு அரசாங்கத்துடன் மோதுகின்றது. மாணவர்கள் மட்டுமல்லாது, வைத்தியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இஸ்தான்புல், துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நகரம். இஸ்தான்புல் நகரப் பூங்காவான Gezi யில், நூறுக்கும் குறைவான சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, கூடாரமடித்து தங்கினார்கள். நகர மத்தியில் உள்ள பூங்காவில், நிழல்தரு மரங்களை தறித்து வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் நவீன கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்றை உருவாக்க இருந்த முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி அது. உண்மையில் அது பிரதமர் எர்டோகன் முன்மொழிந்த "இஸ்லாமிய - முதலாளியத்தின்" ஒரு திட்டம் ஆகும். அது என்ன இஸ்லாமிய முதலாளியம்?

கடந்த பத்தாண்டுகளாக பதவியில் உள்ள, துருக்கியின் ஆளும் கட்சியான AKP, ஒரு இஸ்லாமிய மதவாதக் கட்சி. ஒரு பூரணமான ஜனநாயக தேர்தலில், பெரும்பான்மை வாக்காளர்களால் தெரிவு செய்யப் பட்டது. குறிப்பாக, "அனத்தோலியா" என்று அழைக்கப்படும், துருக்கி நாட்டுப்புற ஏழை மக்கள், ஆழமான இஸ்லாமிய மத நம்பிக்கை காரணமாக அந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். அந்த நாட்டுப்புற ஏழைகள், முக்காடு போட்ட மத நம்பிக்கை கொண்ட முஸ்லிம் பெண்கள், அரசாங்கத்திற்கு எதிராக இன்னும் கிளர்ந்தெழவில்லை. அப்படி நடந்தால், துருக்கி மக்கள் புரட்சி வெற்றிப் பாதையில் பயணிக்கும். அல்லாவிட்டால், AKP அரசு தனது ஆதரவு தளத்தை, புரட்சிக்கு எதிராக திசை திருப்பி விடும்.

AKP ஆட்சியை கைப்பற்றிய ஆரம்ப நாட்களில், தேசியவாத - பாசிச இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே பெரும்பாடாக இருந்தது. பல தசாப்த காலமாக, "துருக்கி தேசப் பிதா" அட்டா துர்க் கொள்கையில் இருந்து வழுவாமல், துருக்கியை ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று தோன்றுமளவிற்கு ஆட்சி செய்ததில், இராணுவத்தின் பங்களிப்பு பெரிதும் குறிப்பிடத் தக்கது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய மாபியா குழுக்கள், நேட்டோ அங்கத்துவ நாடுகளின் நட்புறவு தனியாக ஆராயப் பட வேண்டியது.

இஸ்லாமியவாத AKP யும், அதன் பிரதமர் எர்டோகனும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால், அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதும், மெல்ல மெல்ல தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தனர். அவர்களும் தமக்கென சில மாபியா குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள். முந்திய பாசிச ஆட்சியாளர்களைப் போல, மாற்றுக் கருத்தாளர்களை சிறையில் அடைத்தார்கள். குறிப்பாக ஆர்மேனிய இனப்படுகொலையை ஆராய்ந்த எழுத்தாளர், அரசை விமர்சித்த ஊடகவியலாளர்கள், இடதுசாரி ஆர்வலர்கள் போன்றோர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப் பட்டனர்.

தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த, துருக்கி ஊடகவியலாளர் ஒருவரும், பல வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவர் நெதர்லாந்து குடியுரிமை வைத்திருந்த போதிலும் விடுதலையாகவில்லை. அவர் செய்த ஒரே குற்றம், இஸ்தான்புல் நகரில் ஒரு புரட்சிகர வானொலி நிலையத்தை நடத்தி வந்தது தான். 2006 ம் ஆண்டு, நான் துருக்கி சென்றிருந்த சமயம், அந்த வானொலிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். அவ்வாறு தான், துருக்கி ஊடகவியலாளர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

எர்டோகன் இஸ்லாமியவாதம் பேசினாலும், நேட்டோ, மேற்குலக நாடுகளுடனான நட்புறவை துண்டிக்கவில்லை. குறிப்பாக, சிரியா உள்நாட்டு யுத்தத்தில், மேற்குலக நலன்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். சிரியா கிளர்ச்சிக் குழுக்கள், துருக்கியில் தளம் அமைக்க இடம் கொடுத்தார். அரசாங்கத்தின் அபிலாஷைகள், பெரும்பான்மை துருக்கி மக்களின் விருப்பத்துடன் ஒன்று சேரவில்லை. தேசியவாதிகள், இடதுசாரிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு சாமானியர்களும் துருக்கி சிரியா உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை. எர்டோகன் இன்னொரு ஓட்டோமான் சக்கரவர்த்தியாக வருவதற்கு ஆசைப் படுவதாக விமர்சகர்கள் குறை கூறினார்கள். (நூறு வருடங்களுக்கு முன்னர்,  ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், சிரியா துருக்கியுடன் இணைந்திருந்தது.)

ஆளும் கட்சியான AKP யின் அரசாங்கம், காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. கடந்த பத்து வருட ஆட்சியில், AKP கட்சி ஆதரவாளர்கள், காவல்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பட்டனர். அதுவே இன்றைய மக்கள் எழுச்சிக்கும் வழிவகுத்தது எனலாம். இந்த வருடம், துருக்கி இடதுசாரி தொழிற்சங்கங்கள், கட்சிகள், மே தின ஆர்ப்பாட்டங்களை, இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் நடத்த விரும்பினார்கள். கடந்த கால இராணுவ அடக்குமுறை காரணமாக, பல தசாப்தங்களாக அந்த இடத்தில் மே தின ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. இந்த வருடம், மே தின ஊரவலத்தில் புகுந்த பொலிஸ் படைகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். வரலாறு காணாத அளவு அபரிதமான கண்ணீர்ப் புகைக் குண்டுவெடிப்பு காரணமாக, அந்த இடம் ரணகளமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் காரணமாக, இடதுசாரி கட்சிகளுக்கும், எர்டோகன் அரசுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது.

இந்த வருடம் மே மாதம், இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தது. Reyhanli என்ற நகரத்தில், இரண்டு கார்க் குண்டுகள் வெடித்தன. 54 பேர் பலியானதாக அறிவிக்கப் பட்டது. Reyhanli நகரம், சிரியா எல்லையோரம் அமைந்துள்ளது. அண்மைய சிரியா யுத்தம் காரணமாக, ஆயிரக் கணக்கான சிரிய அகதிகளின் வரவால், நகர சனத்தொகை இரட்டிப்பாகியது. FSA போன்ற சிரியா அரசுக்கு எதிரான ஆயுதக் குழுக்கள் அங்கே முகாமிட்டு உள்ளன. சிரியர்களுக்காக சிரியர்கள் நடத்தும் வணிக ஸ்தாபனங்களும் உருவாகி விட்டிருந்தன. சிரியர்கள் மட்டுமல்ல, சிஐஏ, மொசாட் போன்ற வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்களும் அந்த நகரத்தில் அலுவலகங்களை திறந்திருந்தன. இதெல்லாம், அங்கு வாழும் துருக்கி மக்களின் விருப்பத்தோடு நடக்கவில்லை.

குண்டு வெடிப்பு நடந்து ஒரு மணி நேரத்திற்குள், அது "சிரியா அரசின் சதி வேலை" என்று துருக்கி அரசு குற்றஞ் சாட்டியது. சிரியா மீது படையெடுக்கப் போவதாக பயமுறுத்தியது. சிரியாவின் ஆசாத் அரசு மீதான குற்றச்சாட்டை உறுதிப் படுத்துவதற்காக, உள்ளூரில் இயங்கிய மார்க்சிய கட்சி ஒன்றின் ஒன்பது உறுப்பினர்களை கைது செய்தது. அந்த மார்க்சிய கட்சி, ஆசாத் அரசிடம் நிதி பெறுவதாக குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் கதைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஈடுபட்டது. துருக்கி மக்கள் இதெல்லாம் கட்டுக்கதைகள் என்றனர். "அந்தக் குண்டுவெடிப்பில் 54 பேர் மட்டும் சாகவில்லை, குறைந்தது நூறு பேர் மாண்டிருப்பார்கள், அரசு உண்மையை மறைக்கிறது..." என்றார்கள்.

துருக்கி அரசு, சிரியாவின் ஆசாத் அரசின் மீது பழி போட்ட அதே நேரத்தில், Reyhanli நகர மக்களின் கோபம்,  சிரியா அகதிகளுக்கு எதிராக திரும்பியிருந்தது. அவர்கள் மத்தியில் இயங்கும் FSA அந்தக் குண்டுகளை வெடிக்க வைத்தது என்று நம்பினார்கள். சிரியர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன.  துருக்கி ஊடகங்கள் மட்டுமல்ல, மேற்கத்திய ஊடகங்களும் அந்த செய்திகளை அறிவிக்கவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த நகர மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், துருக்கி அரசின் சிரியா கொள்கை கடுமையாக விமர்சிக்கப் பட்டது. துருக்கி அரசு, சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. மேற்கத்திய ஊடகங்கள், அதனை "சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிரான பேரணியாக" திரித்துக் கூறியன.

சில நாட்களில் உண்மை வெளியானது. துருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்ஸ் (Hackers), இணையத்தை ஊடறுத்து, துருக்கி அரசின் இரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதிலே Reyhanli குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவல் முக்கியமானது. அதாவது, Reyhanli நகரத்தில் குண்டுவெடிப்பு நடக்கவிருக்கிறது என்ற விபரம், துருக்கி அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இந்த தகவல், துருக்கி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், ரெய்ஹன்லி குண்டுவெடிப்புக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு, ஹேக்கர்ஸ் வெளியிட்ட தகவலுக்கு கவனம் செலுத்தவில்லை. மேற்கத்திய ஊடகங்கள் அந்த செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தன. 

(தொடரும்)


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி