Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, May 03, 2017

பாரிஸ் 93 ம் வட்டாரம் : ஏழைகளின் தெரிவு கம்யூனிச வேட்பாளர் மட்டுமே


சான் டேனி (Saint-Denis) பாரிஸ் நகரில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கட்தொகை கொண்ட வட்டாரம். பாரிஸ் நகர நிர்வாகத்தில் 93 வது வட்டாரமாக பிரிக்கப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்க, அரேபிய குடியேறிகளை பெருமளவில் கொண்ட பகுதி. ஒருவர் அந்த இடத்தில் முகவரியை கொண்டிருந்தால், பாரிசின் பிற பகுதிகளில் வேலை எடுப்பது மிகவும் கடினம். CV இல் 93 இலக்கத்தை கண்டவுடனே நிராகரித்து விடுவார்கள்.

சான் டேனி பகுதியில் தான், பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களின் சமாதிகள் உள்ளன. ஆனால், உல்லாசப் பிரயாணிகள் யாரும் அங்கே செல்வதில்லை. அதற்குக் காரணம் அந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றது என்ற அச்சம். அங்கே யாரும் வீடு வாடகைக்கு எடுக்கவும் விரும்புவதில்லை. உண்மையிலேயே குற்றச் செயல்கள் பெருகிய பிரதேசம் தான். அதே நேரம், வேலையில்லாப் பிரச்சினை, வறுமையும் அதிகளவில் கொண்ட பிரதேசம்.

எண்பதுகள் வரையில், அதாவது பிரான்ஸ் பொருளாதார நிலைமை நன்றாக இருந்த காலம் வரையில், சான் டேனி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி வெளியுலகில் பலர் அறிந்திருக்கவில்லை. அப்போது எல்லோருடைய கவனமும் "கம்யூனிச நாடுகள் எப்போது கவிழும்" என்பதில் தான் குறியாக இருந்தது. ஒருவேளை சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் நல்ல மாதிரி தொடர்ந்தும் இருந்திருந்தால், மேற்கு ஐரோப்பாவில் அப்போதே மிகப் பெரிய குழப்பங்கள் உண்டாகி இருக்கலாம். அது வேறு கதை.

எண்பதுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவில் பாதிக்கப் பட்ட பிரெஞ்சுப் பகுதிகளில் சான் டேனியும் ஒன்று. அதுவரை காலமும் அங்கு இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் மூடப் பட்டன. அதில் ஒரு பகுதி உற்பத்தி, மீண்டும் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. சான் டேனி பகுதியில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. கூடவே வறுமையும் அதிகரித்தது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. அந்தப் பகுதி முழுவதும் சட்டவிரோத குடியேறிகளின் புகலிடமாகியது. அன்று அதைப் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப் படவில்லை.

காலங்கள் உருண்டோடின. விளிம்பு நிலையில் வாழ்ந்த அரபு - முஸ்லிம் சமூகத்தினுள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் ஊடுருவின. வறுமை, வேலையில்லாப் பிரச்சினைக்கு வடிகாலாக, இளம் சமுதாயம் மதத்திற்குள் மூழ்கியது. 2015 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் ஒரு தீவிரவாத சந்தேகநபரைத் தேடி சான் டேனி வந்தனர். இரண்டு மணிநேர துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் சந்தேகநபரை சுட்டுக் கொன்றனர். இப்போதும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப் பட்ட ஓட்டைகளை காணலாம்.

தற்போது, பாரிஸ் சான் டேனி பிரதேசத்தில் வாழும் வெளிநாட்டவர் சமூகத்தில் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதவாத அரசியல் ஆபத்தானது மட்டுமல்ல, அரசும் அதையே எதிர்பார்க்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ்த் தேசியம் பேசுவதும், பிரான்ஸில் இஸ்லாமிய மதவாதம் பேசுவதும் ஒன்று தான். மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கே நன்மையாக முடியும். அரசின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்ட சான் டேனி பிரதேச மக்கள் தீவிர இடதுசாரி அரசியலை கையில் எடுத்துள்ளனர். ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போடுவோம், இல்லாவிட்டால் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்கின்றனர்.

23 April 2017 நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மெலேன்ஷோன் அதிகப் படியான வாக்குகள் பெற்ற இடம் சான் டேனி மட்டுமே! அன்று நடந்த தேர்தலில்,சான் டேனி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் பின்வருமாறு: 
Jean-Luc Mélenchon : 43,39 
Emmanuel Macron : 23,02 
Marine Le Pen : 10,07 
மெலென்ஷோன் முன்ன‌ர் ஆளும் சோஷ‌லிஸ்ட் க‌ட்சிக்குள் தீவிர‌ இட‌துசாரிய‌ம் பேசிக் கொண்டிருந்த‌வ‌ர். பின்ன‌ர் அதிலிருந்து பிரிந்து "இட‌து க‌ட்சி" என்ற‌ த‌னிக்க‌ட்சி அமைத்து அத‌ன் சார்பாக‌ ஜனாதிப‌தி வேட்பாள‌ராக‌ போட்டியிட்டார்.

வெற்றி பெற்ற முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு, மே 7 அன்று நடைபெறவுள்ளது. யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை பலர் இன்னும் தீர்மானிக்கவில்லை. இரண்டு வேட்பாளர்களும் தமது நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால், பெருமளவு மக்கள் பகிஷ்கரிக்கவுள்ளனர். இனவாதக் கட்சியான FN சார்பில் போட்டியிடும் மாரின் லெபென் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓர் இனவாதியிடம் இருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், இரண்டாவது வேட்பாளர் எமானுவேல் மக்ரோன் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்பது வெளிப்படையானது. அரசின் அதிகாரங்களை குறைத்து, முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கும் திட்டம் ஆபத்தானது. ஏற்கனவே அரசு என்ற ஒன்று பெயருக்காவது இயங்குவதால் தான் ஏழை மக்கள் உயிர்பிழைத்து வாழ முடிகின்றது. அதுவும் இல்லையென்றால் சென் டேனி ஒரு பாலைவனமாகி விடும் என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாட்டில் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம். ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கலாம். ஆனால், காலங்காலமாக சான் டேனி பிரதேசவாசிகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிரான்ஸில் நூறாயிரம் சனத்தொகை கொண்ட மூன்று நகரங்களில் கம்யூனிஸ்ட் மேயர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அதில் ஒன்று சான் டேனி. கம்யூனிஸ்ட் மேயர் லோரன்ட் ருசியே (Laurent Russier) ஐந்தாவது தடவையாக மேயராகப் பதவியேற்றுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு : 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, March 16, 2017

நெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் "தேசிய வீழ்ச்சி"! இடதுசாரிகளின் எழுச்சி!!

நெதர்லாந்து பொதுத் தேர்தல்: இனவாதம் தோற்கடிக்கப் பட்டது!
15-3-2017 ல் நடந்த நெதர்லாந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உலகளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், பிரித்தானியாவின் Brexit வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டிரம்பின் தெரிவுக்குப் பிறகு நடந்த பிரதானமான தேர்தல் இது. அந்த நிகழ்வுகள் நெதர்லாந்தின் இனவாத அரசியல்வாதி வில்டர்சின் வெற்றி வாய்ப்புக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப் பட்டது.

ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்ட இனவாத அரசியல் எழுச்சி இறுதியில் நடக்கவேயில்லை. வில்டர்சின் சுதந்திரக் கட்சி (PVV) 20 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட ஐந்து ஆசனங்கள் அதிகமாக எடுத்துள்ளது. இருப்பினும் அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. உண்மையில் வில்டர்சின் இனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வியே அது.

உண்மையில் சுதந்திரக் கட்சி முழுக்க முழுக்க தனிமனித வழிபாட்டைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் வில்டர்ஸ் மட்டும் தான் எல்லாமே. அவரது வாயில் இருந்து வருவது தான் அரசியல். தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டிருந்தார். மசூதிகளை மூட வேண்டும், குரானை தடை செய்ய வேண்டும் என்று தீவிர அரசியல் பேசினார். அதே நேரம், அகதிகள், குடியேறிகள் வருவதை தடை செய்யவேண்டும் என்றும் பேசி வருபவர்.

வழமையாக இப்படியானவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஊடகங்கள், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் நெதர்லாந்தில் வில்டர்ஸ் வெற்றி பெறலாம் என்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தன. கடந்த வருடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்புகளில் கூட வில்டர்சின் சுதந்திரக் கட்சி குறைந்தது முப்பது ஆசனங்களை பெற்று முதலிடத்திற்கு வரும் என்று எதிர்வு கூறப் பட்டது. ஆனால் அந்த கணிப்புகள் இறுதியில் பொய்த்து விட்டன. அதற்கு என்ன காரணம்?

உண்மையில் வில்டர்ஸ் ஊடகங்களை நம்பி அரசியல் செய்து வந்தார். "பாதுகாப்பு குறைபாடு காரணமாக" வாக்காளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே "மொரோக்கோ குடியேறிகளை குறைப்போம்" என்ற இனவாதப் பேச்சு காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருந்தார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

வில்டர்ஸ் தனது எதிராளிகளுடன் விவாதிப்பதை தவிர்த்து வந்தார். ரொட்டர்டாம் மசூதியில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டும் செல்லவில்லை. அது மட்டுமல்ல, ஊடகங்கள் ஒழுங்கு படுத்திய விவாத அரங்குகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். அதே நேரம், பிரதமர் மார்க் ருத்தே ஒரு முக்கியமான அறிவிப்பை விடுத்தார். PVV பெரிய கட்சிகளில் ஒன்றாக வந்தாலும், அதனோடு கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

மார்க் ருத்தேயின் அறிவிப்பு வில்டர்சின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், நெதர்லாந்தில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கூட்டு அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கின்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையில் கூட்டணியை விட மாற்று வழி இல்லை. 

அடிப்படையில், மார்க் ருத்தேயின் லிபரல் கட்சியும், வில்டர்சின் சுதந்திரக் கட்சியும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் தான். ஆனால், வில்டர்ஸ் பகிரங்கமாக இனவாதம் பேசுவதால், அவரது கட்சியோடு கூட்டு அரசாங்கம் அமைப்பது சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பது மார்க் ருத்தேவுக்கு தெரியும்.

தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிரதமர் மார்க் ருத்தவும், வில்டர்சும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக் கொண்டனர். டச்சு மக்களின் மருத்துவ வசதிகளுக்கான செலவினத்தை குறைத்துள்ள அரசாங்கம், அகதிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகின்றது என்று வில்டர்ஸ் குற்றம் சாட்டினார். அகதிகளை வர விடாமல் தடுப்பதற்கு எல்லையில் மதில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வில்டர்ஸ் அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை வலிந்து புகுத்தினார். அகதிகளை வெளியேற்றினால், குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தால் உள்நாட்டு டச்சு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னார். பிரித்தானியா மாதிரி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றார்.

இவை எல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறமிருக்க, ஆளும் லிபரல் கட்சி ஏற்கனவே குடியேறிகள் விடயத்தில் கடுமையாகத் தான் நடந்து கொள்கின்றது. வில்டர்ஸ் நேரடியாக சொல்வதை, லிபரல் கட்சி சுற்றிவளைத்து சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். அகதிகள் வருகையை தடுப்பதற்காக துருக்கியுடன் ஒப்பந்தம் செய்ததை அந்த விவாதத்தில் மார்க் ருத்தே சுட்டிக் காட்டினார். அதாவது, "நாங்களும் அகதிகளுக்கு எதிரானவர்கள் தான்" என்பதை சொல்லாமல் சொன்னார்.

வீட்டுக்கு வீடு குரான் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வில்டர்ஸ் சொன்னதை நினைவுபடுத்திய மார்க் ருத்தே, "அந்த குரான் பொலிஸ் எப்படி இயங்கும்?" என்று கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் வில்டர்ஸ் தடுமாறினார். "ஓ! போலி வாக்குறுதி கொடுத்தீர்களா?" என்று மார்க் ருத்தே கிண்டலடித்தார்.

உண்மையில், வில்டர்ஸ் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. அகதிகள், முஸ்லிம்கள், குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இந்த நாட்டில் துப்பரவுப் பணி போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வோர் அந்தப் பிரிவினர் தான்.

அகதிகள், முஸ்லிம்களை வெளியேற்றுவதால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. முதலாவதாக, பெரும்பாலான டச்சுக் காரர்கள் அடித்தட்டு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. இரண்டாவதாக, மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வர மாட்டார்கள். மூன்றாவதாக, இன்றைய நிலையில் எந்த முதலாளியும் சம்பளம் கூட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

மேலும், வில்டர்ஸ் போன்ற இனவாத சக்திகளின் எழுச்சிக்கு "உலகமயமாக்கல்" காரணம் என்றும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அப்படிச் சொல்வதும் அதே இனவாத சக்திகள் தான். "தேசிய எழுச்சி" என்ற பெயரில் உலகமயமாக்கலை தடுப்பது நடைமுறைச் சாத்தியமன்று.

நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஒருவேளை, பிரித்தானியா மாதிரி பிரிந்தாலும் உலகமயமாக்கலில் இருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து பொருளாதாரமும் உலகமயமாக்கலால் நன்மை அடைகின்றது. பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய ஏற்றுமதி நிறுவனங்களும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்கின்றன.

ஆகவே, வில்டர்ஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை பகைக்க முடியாது. அதனால், அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும், வில்டர்சின் "தேசிய எழுச்சி" எந்தளவு தூய்மையானது? இன்னொரு விதமாகக் கேட்டால், வில்டர்ஸ் உண்மையிலேயே ஒரு "தேசியவாதி" தானா? அவரது கட்சிக்கு இஸ்ரேல், அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. கடந்த வருடம், வில்டர்ஸ் இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுத்துறையால் (AIVD) விசாரணை செய்யப் பட்டார்.

எதற்காக வில்டர்ஸ் போன்ற இனவாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது? உண்மையில் ஊடகங்கள் இப்படியானவர்களை வளர்த்து விடுகின்றன. பல வருடங்களாக பொருளாதாரப் பிரச்சினை நிலவியது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அரசாங்கம் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், மக்கள் அனுபவித்த சலுகைகளை வெட்டியது.

காலங்காலமாக ஆண்டு வரும் பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால், மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மக்களின் ஏமாற்றத்திற்கு வடிகாலாக, வில்டர்ஸ் போன்ற இனவாதக் கோமாளிகளை மாற்று அரசியல் சக்தியாக காட்டுகிறார்கள். இந்த நாடகம் இன்னும் சில வருடங்கள் அரங்கேறும்.

நெதர்லாந்து தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்த தகவல் ஒன்றுள்ளது. 21 ம் நூற்றாண்டின் முற்போக்கு இடதுசாரிகள் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர். குறிப்பாக, இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி (Groen Links) மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. இன்னொரு இடதுசாரிக் கட்சியான சோஷலிசக் கட்சியும் 15 ஆசனங்களுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேர‌ம், பாரம்பரிய சமூக ஜனநாயக அரசியல் வழிவந்த, வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) அவமானகரமான ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் அது பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. இந்தத் தேர்தலில் வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும்.

புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), 1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். தொண்ணூறுகளில் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நெருக்கடிக்கு உள்ளான நெதர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN) கலைக்கப் பட்டு, இன்னும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, Groen Links என்ற புதிய கட்சி உருவாக்கப் பட்டது.

தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த சுற்றுச் சூழலியல் அரசியலுடன், செல்வத்தை பங்கிட்டு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடதுசாரி அரசியலையும் சேர்த்துக் கொண்டது. அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் இளைய தலைமுறையை சேர்ந்த இடதுசாரி என்பதால், பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

Friday, March 10, 2017

சர்வசன வாக்குரிமை : முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல!


ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை, எம‌க்கு முத‌லாளிக‌ள் போட்ட‌ பிச்சை அல்ல‌. அத‌ற்காக‌ ஐரோப்பாவில் சோஷ‌லிச‌க் க‌ட்சிக‌ள் நீண்ட‌ கால‌ போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருந்த‌து. இந்த‌ உண்மை இன்றைய‌ இளைய‌ த‌லைமுறைக்கு தெரியாது.

 அந்த‌க் கால‌த்தில், ஐரோப்பாவில் இருந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் யாவும் முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்த‌ன‌. அத‌னால் அவை வெளிப்ப‌டையாக‌வே முத‌லாளித்துவ‌ க‌ட்சிக‌ள் என‌ அழைக்க‌ப் ப‌ட்ட‌ன‌. அத‌ற்கு மாறாக‌, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சிக‌ள் ம‌ட்டுமே பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ளை பிர‌திநிதித்துவப் ப‌டுத்தின‌. பிற்கால‌த்தில் அதில் இருந்து பிரிந்த‌து தான் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ள்.

மேற்க‌த்திய‌ நாடுக‌ளில், 20 ம் நூற்றாண்டின் தொட‌க்க‌ம் வ‌ரையில், ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பேச்சுக்கே இட‌மிருக்க‌வில்லை. செல்வ‌ந்த‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே தேர்த‌லில் ஓட்டுப் போடும் உரிமை இருந்த‌து. இட‌துசாரிக் க‌ட்சிக‌ளின் நீண்ட‌ கால‌ போராட்ட‌த்திற்குப் பிற‌கு தான் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை ந‌டைமுறைக்கு வ‌ந்த‌து.

இங்கேயுள்ள‌ ப‌ட‌ம், 1907 ம் ஆண்டு ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் எடுக்க‌ப் ப‌ட்ட‌து. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமைக்காக‌ ந‌ட‌ந்த‌ மாபெரும் ஆர்ப்பாட்ட‌ ஊர்வ‌ல‌ம். SDAP (ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌ தொழிலாள‌ர் க‌ட்சி) க‌ட்சியால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

ப‌தாகைக‌ளில் காணப்ப‌டும் வாச‌க‌ங்க‌ள்: "நாங்க‌ள் ஆண்க‌ளுக்கும், பெண்க‌ளுக்குமான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ பொது வாக்குரிமை கோருகின்றோம்." "வ‌ர்க்க‌ வாக்குரிமை ஒழிக‌"

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)



உருளைக்கிழ‌ங்கு க‌ல‌வ‌ர‌ம்

இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் ஐரோப்பா முழுவ‌தும் உழைக்கும் ம‌க்க‌ளின் எழுச்சி ந‌ட‌ப்ப‌து ஒரு ச‌ர்வ‌ சாதார‌ண‌மான‌ விட‌ய‌ம். ப‌ல‌ இட‌ங்க‌ளில் உண‌வுப் பொருள் விலையேற்ற‌ம் க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

பிற‌ ஐரோப்பிய‌ர்க‌ளைப் போன்று, ட‌ச்சுக் கார‌ருக்கும் உருளைக்கிழ‌ங்கு பிர‌தான‌மான‌ உண‌வு. 1917 ம் ஆண்டு, ஜூலை மாத‌ம‌ளவில், நெத‌ர்லாந்தில் உருளைக்கிழ‌ங்கிற்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. அத‌ன் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்த‌து. அதே நேர‌ம் வெளிநாடுக‌ளுக்கான‌ உருளைக் கிழ‌ங்கு ஏற்றும‌தியும் குறைந்த‌ பாடில்லை. இத‌னால் வ‌றிய‌ உழைக்கும் ம‌க்க‌ள் க‌டுமையாக‌ப் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் ஏழை ம‌க்க‌ள் கிள‌ர்ந்தெழுந்து அர‌சுக்கு எதிராக‌ க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். த‌ன்னெழுச்சியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌ன‌. ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. இட‌துசாரிக் க‌ட்சிக‌ள் கால‌வ‌ரைய‌ற்ற‌ பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌ன‌. ஆயிர‌க் க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ம் செய்த‌ன‌ர்.

அர‌சாங்க‌ம் க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்குவ‌த‌ற்காக‌ இராணுவ‌த்தை அனுப்பிய‌து. 3500 ப‌டையின‌ர் ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ர‌ ம‌த்தியில் கூடார‌ங்க‌ளை அடித்து த‌ங்கினார்க‌ள். (ப‌ட‌த்தில் பார்க்க‌வும்) க‌ல‌வ‌ர‌ம் அட‌க்க‌ப் ப‌ட்டு, ஜூலை 6 நிலைமை வ‌ழ‌மைக்கு திரும்பிய‌து. 10 பேர் ப‌லியானார்க‌ள். 113 பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர்.

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)


பெப்ரவரி வேலைநிறுத்தம்


1941 ம் ஆண்டு, நெத‌ர்லாந்தை ஆக்கிர‌மித்த‌ ஜேர்மன் நாஸிப் ப‌டையினர், யூத‌ர்க‌ளை வெளியேற்றும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஆர‌ம்பித்த‌ன‌ர். அத‌ற்கு எதிர்ப்பு தெரிவிப்ப‌த‌ற்காக‌, நெத‌ர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி பெப்ரவரி 25 அன்று பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌து. 

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரிலும் அதை அண்டிய‌ ப‌குதிக‌ளிலும், அன்று யாரும் வேலைக்கு போக‌வில்லை. க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு அந்த‌ளவு செல்வாக்கு இருந்த‌து. மூன்று நாட்க‌ளாக‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து. 2ம் உலகப் போர் காலத்தில், அன்று நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ ஐரோப்பிய நாடுக‌ளில் ந‌ட‌ந்த‌ முத‌லாவ‌து ம‌க்க‌ள் போராட்ட‌ம் அது தான். 

த‌ற்கால‌த்தில், ஒவ்வொரு வ‌ருட‌மும், அர‌சு அனுச‌ர‌ணையில் பெப்ர‌வ‌ரி வேலைநிறுத்த‌ம் நினைவுகூர‌ப் ப‌டுகின்ற‌து. இருப்பினும், ஊட‌க‌ங்க‌ள் வேண்டுமென்றே க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ப‌ற்றி எதுவும் குறிப்பிடாம‌ல் இருட்ட‌டிப்பு செய்து வ‌ருகின்ற‌ன‌.

Tuesday, April 21, 2015

சுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி


கியூபாவில் பொதுத் தேர்தல்கள் நடப்பதே வெளியில் பலருக்குத் தெரியாது. அது சரி, கியூபா ஒரு "சர்வாதிகார நாடு" என்றல்லவா,  மேற்குலக எஜமானர்கள் எமக்குப் போதித்தார்கள்? இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும்? அதிலும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் போட்டியிடுவதாவது. காதிலே பூச் சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 

நம்பினால் நம்புங்கள், 19 ஏப்ரல் 2015 நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பொதுத் தேர்தலில், இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள், அமெரிக்காவிலும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள்.

இடது: சாவியானோ, வலது: லோபெஸ் 
ஹில்டபிராண்டோ சாவியானோ (Hildebrando Chaviano, வயது 65), யூனியல் லோபெஸ் (Yuniel Lopez, வயது 26) ஆகியோரே அந்த இரு எதிக்கட்சி வேட்பாளர்கள் ஆவர். சாவியானோ ஹவானா நகரில் உள்ள Plaza de la Revolución தொகுதியில் போட்டியிட்டார். லோபெஸ் Arroyo Naranjo தொகுதியில் போட்டியிட்டார். கியூபாவில் 168 உள்ளூராட்சி சபைகள் (Asambleas Municipales del Poder Popular) உள்ளன. அவற்றிற்கு மொத்தம் 27.300 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் செயற்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி சார்பற்ற தனி நபர்களும் போட்டியிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பார்கள்.

வேட்பாளர்கள் யாரும் கூட்டம் கூட்டி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அதைத் தவிர வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தனக்கு ஓட்டுப் போடுமாறு கேட்க முடியும். வாக்குரிமை பெற்றுள்ள எட்டு மில்லியன் வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் தவறாமல் தேர்தல் அன்று தமது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவார்கள்.

சாவியானோ முன்னொரு காலத்தில், உள்துறை அமைச்சில் வேலை செய்து வந்தார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்த படியால் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அவர் இன்று வரையில், பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளை குறை கூறியும் பேசி வருகிறார். இதனால், அவரைப் பற்றிய துண்டுப் பிரசுரத்தில், "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க தூதரகத்தில் நடந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தன.

சாவியானோ அதனை சாதகமாக எடுத்துக் கொண்டார். அதாவது, காஸ்ட்ரோ அரசின் மேல் வெறுப்புற்று இருக்கும் மக்கள், தனது அமெரிக்க தொடர்பை நன்மையாகக் கருதி ஓட்டுப் போடுவார்கள் என்று நம்பினார்.  லோபெஸ் பற்றிய பிரசுரத்திலும் அதே மாதிரியான வசனங்கள் இருந்துள்ளன. "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க நிதி பெற்றுக் கொள்பவர்" என்றெழுதி இருந்தன.

லோபெஸ், தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை (குழந்தைகள் பராமரிப்பு நிலையம்) நடத்தி வருகிறார். அதே நேரம், அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன் அங்கத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் கியூபாவும் கையெழுத்து இட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தனது கட்சியின் இருப்பை நியாயப் படுத்தி வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ள படியால், பல வெளிநாட்டு ஊடகங்களும் தேர்தலை கண்காணிக்க வந்திருந்தன. இரண்டு காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், அந்த தகவல் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து தெரிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், மேற்கத்திய கண்காணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

சாவியானோ போட்டியிட்ட தொகுதியில், நான்கு வேட்பாளர்களில் கடைசியாக வந்தார். (138 votos para Chaviano; http://www.14ymedio.com/nacional/votos-Chaviano_0_1764423541.html) லோபெஸ் கொஞ்சம் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஆயினும், அரசு ஆதரவு வேட்பாளருக்கு அடுத்ததாக இரண்டாம் இடமே கிடைத்தது. தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக யாரும் குற்றஞ் சாட்டவில்லை. ஏனெனில், தேர்தல் நடந்த இடத்தில் மட்டுமல்ல, வாக்குகள் எண்ணும் இடத்திலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர். "வாக்கெடுப்பில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நேர்மையான வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சாவியானோ தெரிவித்தார்.

லோபெஸ் போட்டியிட்ட Arroyo Naranjo தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் "புரட்சி வாழ்க!", "பிடல் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு அருகிலேயே, லோபெஸ் ஆதரவாளர்களும் "லோபெஸ் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி குழுவாக சென்றுள்ளனர். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 

"எதற்காக நீங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை?" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் "அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்!" என்று கூறினார்கள்.  

மேலதிக தகவல்களுக்கு:
 14ymedio; 
http://www.14ymedio.com/
Two Cuban Opposition Candidates Lose Election Bids;
http://www.voanews.com/content/two-cuban-opposition-candidates-lose-election-bids/2726321.html


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை
கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

Tuesday, October 08, 2013

விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி


வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
"இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்."
வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை ஒன்றாகத் தான் இருக்கின்றது.

இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு சிங்கள தேசியமும், தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தேசியமும் பயன்படும்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது. இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இறுதியில் அதனால் இலாபமடையும் முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உண்மையில் தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.

விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது "வர்க்கப் புத்தியை" காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர். கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, "அவரை நோவானேன், கவலைப் படுவானேன்?" இனம் இனத்தோடு தானே சேரும்?

கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு. அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும், "சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான" வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.

இதெல்லாம் சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு. "சிங்களவர்களோடு சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. சந்திரிகா குமாரதுங்கவின் மகளும் ஒரு தமிழரை மணந்து கொண்டார். பண்டாரநாயக்க குடும்பத்தில் பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது. அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை. "எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது" என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.

கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள். உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.

(தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டமைப்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்.  தென்மராட்சிப் பகுதியில் இதனை விநியோகித்துக் கொண்டிருந்த நான்கு கட்சித் தொண்டர்களை இராணுவம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.)
"பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக வெளியிட்ட உதயன் பத்திரிகை நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.

விக்னேஸ்வரனின் "புலி ஆதரவு உரை", அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.

தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, "தீவிரவாதிகளை" ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.

__________________________

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முன்னைய பதிவுகள்:

3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Monday, July 15, 2013

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

இலங்கையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தல், பல விடயங்களில் முக்கியமானது. வட மாகாணத்தில் தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். அதனால், தவிர்க்கவியலாது வட மாகாண அரசியல் மாற்றங்கள், இலங்கைத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியது.

25 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக நடத்தப் பட்ட, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில், வட மாகாணத்தில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, யாரும் வேட்பு மனு போடவில்லை. அன்று, இந்திய இராணுவத்துடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. அதனால், ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன், வட-கிழக்கு மாகாண சபை கலைக்கப் பட்டது. அதற்குப் பிறகு, இலங்கையில் பிற மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப் பட்டாலும், வட-கிழக்கு மாகாண சபை கவனிப்பாரன்று இருந்தது. தற்போது, கிழக்கில் இருந்து பிரிக்கப் பட்ட, வட மாகாணத்தில் நடக்கும் தேர்தலில், முன்னாள் புலிப் பிரமுகர்கள், சுதந்திரக் கட்சி வேட்பாளர்களாக களமிறக்கி விடப் பட்டுள்ளனர். கேபி, தயா மாஸ்டர், தமிழினி, ராம், நகுலன் என்று ஒரு பெரிய பட்டாளமே, புலிகளை அழித்த மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர். இவர்கள், முன்னொரு காலத்தில், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த படியால் தான், செய்திகளில் அடிபடுகின்றனர். ஏற்கனவே, நூற்றுக் கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் வகையில், அடி மட்டத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால், நேர்மையான தேர்தல் நடப்பதும் சந்தேகமே.

வட மாகாண சபைத் தேர்தலில், இலகுவாகவே பெருமளவு வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக, அரசு கடுமையாக முயற்சிக்கின்றது. அதற்காக பல தகிடுதத்த வேலைகளில் இறங்கியது. தனக்கேற்ற சந்தர்ப்பம் கனியும் வரையில், தேர்தலை பல வருடங்கள் தள்ளிப் போட்டது. இதிலிருந்து, சில உண்மைகள் புலனாகின்றன. புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்கள், இலங்கை அரசிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்று வரையில், இலங்கை அரசானது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கே பெரிதும் அஞ்சுகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காக போராடும், ஆயுதபாணி அமைப்பை பயங்கரவாத இயக்கமாக காட்டுவதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஒதுக்குவதும் அரசுக்கு இலகுவான விடயமாக இருந்தது. ஆனால், ஒரு ஜனநாயக தேர்தல் கட்சியை அவ்வாறு செய்ய முடியாது. இந்த உண்மை, ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையில் நிதர்சனமாகியது.

நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக வருவார் என இப்போதே கருதப்படும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சிப் பிரவாகம் கரை புரண்டு ஓடுகின்றது. சிங்கள பேரினவாத அரசில், நீதியரசர் பதவி வகித்த ஒருவர், அந்த அதிகாரக் கட்டமைப்பின் மீதான தனது விமர்சனங்களை எங்காவது பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. 

மேற்கத்திய முதலாளித்துவ நலன்களுக்கு சார்பான இலங்கை அரச கட்டமைப்பில், பாராளுமன்ற அமைச்சர்கள் மட்டுமல்லாது, நீதித் துறையினரும் கூட அரசின் அங்கமாக இருப்பார்கள். நாங்கள் "சிங்களப் பேரினவாதம்" என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் குற்றஞ் சாட்டுகின்றோம் என்பதை பலர் உணர்வதில்லை. அதனால் தான், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் நீதிமன்றங்கள் எரிக்கப் பட்டன. நீதிபதிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன. ஆகவே, அத்தகைய பின்னணியை கொண்ட ஒருவர், எந்தளவுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வார் என்பது கேள்விக்குறியே. மேலும், விக்னேஸ்வரன் தெரிவு தொடர்பாக, சம்பந்தரும், மகிந்த ராஜபக்சவும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. 

மகிந்தவின் சுதந்திரக் கட்சி, முன்னாள் புலித் தலைவர்களை சேர்த்துக் கொண்டு, ஈபிடிபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதிலும், பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் நம்புகின்றனர். முன்பு, 13 ம் திருத்தச் சட்டத்தின் படி வாக்குறுதி அளிக்கப்பட்ட காணி, பொலிஸ் உரிமைகள் பற்றி, சிறு முணுமுணுப்பு கூட தற்போது கிடையாது. தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளான அந்த உரிமைகளையும் விட்டுக் கொடுத்தால், வடக்கு மாகாண சபை எந்த அதிகாரங்களை நடைமுறைப் படுத்தப் போகின்றது?

முன்பிருந்த வட- கிழக்கு மாகாண சபை கொண்டிருந்த குறைந்த பட்ச அதிகாரங்களை கூட இல்லாதொழித்து விட்டு நடைபெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களுக்கு பெரிய நம்பிக்கைகளை வழங்கப் போவதில்லை. ஆனால், மேற்பார்வைக்கு தெரியக் கூடிய மாகாண சபை கட்டமைப்பு இருப்பதை இந்தியாவும் விரும்புகின்றது. அண்மையில், த.தே.கூ., இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவும், விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கும் முடிவு அமைந்துள்ளது.

Thursday, September 06, 2012

கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை


  • கியூபாவில் தேர்தல்கள் நடக்கின்றனவா? 
  • அதுவும் ஜனநாயக தேர்தல்? 

கியூபா, "கடுமையான அடக்குமுறை கொண்ட சர்வாதிகார ஆட்சி" நடக்கும் நாடு. அங்கே  சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?  

எங்களது சிந்தனை மேற்கத்திய போதனைகள் ஆக்கிரமித்துள்ளதால், இது போன்ற கேள்விகள் எழுவது சகஜம்.  ஜனநாயகம் என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? இந்த வார்த்தைகளை கேட்டவுடன், எல்லோருக்கும் "பல கட்சிகள் கலந்து கொள்ளும் தேர்தல்கள்" தான் நினைவுக்கு வரும்.

நாங்கள் ஜனநாயக நாடுகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் நாடுகளில், புராதன காலத்தில் இருந்தே பல கட்சி தேர்தல்கள் நடத்தப் படுகின்றனவா? இல்லை. 20 ம் நூற்றாண்டிலிருந்து தான் இந்த முறை நடைமுறைக்கு வந்தது. 19 ம் நூற்றாண்டு வரையில், அநேகமாக எல்லா "ஜனநாயக" நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சி நிலவியது.

சில சமயம், இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. உதாரணத்திற்கு, அமெரிக்கா, பிரிட்டன். ஆனால், அந்த இரு கட்சிகளும் மேல்தட்டு வர்க்க பிரதிகளுக்கான கட்சிகளாக, அதாவது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரிவுகளாக இருந்துள்ளன.  மேலும், தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், ஒரு நாட்டில் சிறுபான்மையாக உள்ள, மேட்டுக்குடியும், மத்தியதர வர்க்கமும் மட்டுமே அந்த தேர்தல்களில் பங்குபற்றினார்கள். பெரும்பான்மை மக்களுக்கு வாக்குரிமையே கிடையாது. 20 ம் நூற்றாண்டிலும், நிலைமை பெரிதாக மாறி விடவில்லை. அனைத்து பிரஜைகளுக்கும் வாக்குரிமை கிடைத்தது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு கை நிறையப் பணம் தேவை. ஒரு வேட்பாளர் எந்தளவு பணத்தை வீசுகிறாரோ, அந்தளவு வெற்றி வாய்ப்பு அதிகம். 

கியூபாவில் தேர்தல்கள் நடத்தப்படும் முறையை பார்ப்பதற்கு முன்னர், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி ( comités de defensa de la revolución ) பற்றி அறிந்து கொள்வது அவசியம். 28 .09 .1960 , இந்தக் கமிட்டி உருவாக்கப் பட்டது. அப்போது தான் நடந்து முடிந்திருந்த, "பன்றி வளைகுடா" படையெடுப்புக்குப் பின்னர், மக்கள் படை ஒன்றை அமைக்க வேண்டிய தேவையை அரசு உணர்ந்தது. இனிமேலும், அமெரிக்காவில் இருந்து படையெடுப்பு நடந்தால், அதனை முறியடிப்பதற்காக அந்தப் படை அமைக்கப் பட்டது. 

இந்த மக்கள் படையை சாதாரண துணைப்படையாக கருத முடியாது. ஏற்கனவே, கியூப இராணுவம், அதற்கான துணைப்படைகள் எல்லாம் இருக்கின்றன. ஆகவே, புரட்சியை பாதுகாக்கும் கமிட்டியின் நோக்கம், யுத்தம் செய்வது மட்டுமல்ல. அது பல அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக் கமிட்டியில் அங்கம் வகிக்கும் எல்லோரும் சாதாரண உழைக்கும் மக்கள். சமூகத்தில் பலதரப் பட்ட தொழில்களை செய்பவர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று பலதரப் பட்ட மக்கள். கமிட்டியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகளாவன: குறைந்தது 14 வயது, சுய விருப்புடன் சேர வேண்டும், புரட்சியை பாதுகாக்க வேண்டும்.

இன்று கியூபாவில், குறைந்தது 8.000.000  பேராவது இந்த கமிட்டி உறுப்பினராக உள்ளனர். கியூபாவின் மொத்த சனத்தொகை 11 மில்லியன். 14 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 93 % மானோர் கமிட்டியில் பங்குபற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியான வளர்ச்சி காரணமாக ஏற்பட்டது.  கடந்த பல தசாப்தங்களாக உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டு வருகின்றனர். யாருமே கட்டாயப் படுத்தப் படுவதில்லை. 

இன்றைக்கும் அரசியலில் எந்த வித ஆர்வமும் இல்லாத ஆயிரக் கணக்கான கியூபர்கள், கமிட்டிப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு, மாதமொரு தடவை, ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று, இராணுவ பயிற்சி வழங்கப் படும்.  இராணுவ பயிற்சியை பூர்த்தி செய்த கமிட்டி உறுப்புனர் ஒவ்வொருவருக்கும் ஒரு ரைபிள் துப்பாக்கி வழங்கப் படும். அவர்கள் அந்த ஆயுதங்களை தமது வீடுகளில் வைத்திருக்கலாம். கியூபாவில் இலட்சக் கணக்கான சிறு ஆயுதங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. 

ஆயுதங்கள் வைத்திருப்பதால், கமிட்டி உறுப்பினர்கள் அதிகாரன தோரணையுடன் நடந்து கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். ஏனெனில், இராணுவப் பயிற்சியானது, பாதுகாப்பு கமிட்டியின் பல கடமைகளில் ஒன்றாகும். வேறு சில பணிகளைப் பற்றிக் கேள்விப் பட்டால், நமது மத்தியதர வர்க்க நண்பர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். 

சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது, அவர்களின் கடமைகளில் ஒன்று. கிராமங்கள், நகரங்கள் தோறும் வீசப்படும் வெறுமையான போத்தல்கள், டின்கள், மற்றும் குப்பையில் போடப்பட்ட காகிதம், அலுமினியம், இரும்பு போன்றனவற்றை சேகரித்துக் கொடுக்க வேண்டும்.  தெருக்களை, பொது இடங்களை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

பத்து வருடங்ககளுக்கு முன்னர், டெங்குக் காய்ச்சல் பரவியதால், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து துப்பரவாக்கினார்கள். விரைவிலேயே டெங்கு காய்ச்சலுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப் பட்டு விட்டதால், அந்த நோய் கியூபாவை விட்டே விரட்டப் பட்டது. 

ஒரு ஏழை நாடாக இருந்தாலும், மிகவும் சுத்தமாக காணப்படுவதாக, கியூபா செல்லும் உல்லாசப்பயணிகள்  பாராட்டுகின்றனர்.  சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மரம் நடுகைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும். ஒவ்வொரு கமிட்டியும், தாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் கிராமம், நகரத்தில் குறிப்பிட்டளவு மரக் கன்றுகளை நட வேண்டும். மேலும், கமிட்டி உறுப்பினர்கள், தேவைப்படும் பொழுது இரத்த தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ மனைகளுக்கு இரத்தம் தேவைப் படும் பொழுதெல்லாம், கமிட்டியை தொடர்பு கொள்ளும்.

கியூபாவில் அதிகளவு மக்கள் இரத்த தானம் செய்வதாக, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இரத்த தானம் செய்பவர் சுயவிருப்புடன் முன்வர வேண்டும் என்பது மட்டுமல்ல, அதற்காக காசு கிடைக்காது. ஏனெனில், ஒரு சக மனிதனுக்கு ஆபத்துக் காலத்தில் உதவும் மனிதநேயமாக கருதப்படுகின்றது. மனிதநேயத்தை பணத்தால் விலை பேச முடியாது. 

கியூபாவில் நடக்கும் தேர்தல்களில், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டியின் பங்களிப்பு இன்றியமையாதது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயிப்பதில்லை! அது சட்டத்தால் தடுக்கப் பட்டுள்ளது. இதன் அர்த்தம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்பதல்ல. தேர்தலில் பங்குபற்றும் அனைவரும் கட்சி உறுப்பினரல்ல. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், கட்சியை சேராத சுயேச்சை வேட்பாளரும் தேர்தலில் பங்குபற்றலாம். எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப் படும்.  உள்ளூராட்சி மட்டத்தில் மட்டுமல்ல, பாராளுமன்ற தேர்தல்களிலும் அது தான் நிலைமை. 

எது எப்படி இருப்பினும், பெரும்பாலான வேட்பாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்கின்றனர். (இவர்கள் ஏற்கனவே கட்சிக்குள் நடந்த உட்கட்சித் தேர்தலில் தெரிவானவர்கள். கட்சித் தேர்தலும், பொதுத் தேர்தலும் வேறு வேறு) கம்யூனிஸ்ட் கட்சி தவிர, வேறு கட்சிகள் எதுவும் அந்த நாட்டில் இல்லை என்பதும் உண்மை தான். ஆனால், குறிப்பிட்டளவு சுயேச்சை வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர். 

ஒரு வேட்பாளர் கட்சி சார்ந்தவரா, இல்லையா என்பது வாக்காளர்களுக்கு முக்கியமில்லை. அனைத்து வேட்பாளர்களையும் பாதுகாப்புக் கமிட்டி தெரிவு செய்கின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுக் கட்டாக பணம் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பாதுகாப்புக் கமிட்டி, வேட்பாளர்களின் பட்டியலை தொகுப்பது மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தேதியையும் தீர்மானிக்கும். 

தேர்தல் நடப்பதற்கு முன்னர், ஒவ்வொரு வேட்பாளரும் பிரச்சாரம் செய்வதற்கு சம அளவிலான நேரம் ஒதுக்கப் படும். ஒவ்வொரு வேட்பாளரின் புகைப்படம், அவரைப் பற்றிய சுயசரிதை, மற்றும் அவரது கொள்கை விளக்கமும் கொண்ட சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப்படும். தேர்தலில் பங்குபற்றுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்துவதும் பாதுகாப்புக் கமிட்டியின் கடமை ஆகும். தேர்தல் எதற்கு நடக்கிறது? ஏன் ஓட்டுப் போட வேண்டும்? அதனால் வாக்காளருக்கு கிடைக்கும் பயன் என்ன? போன்ற தகவல்களை வழங்கி, வாக்காளர்களை ஊக்குவிக்கின்றது.

தேர்தலுக்கு முன்னர், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் ஒழுங்கு படுத்தப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தனது தனித்துவமான கொள்கையை நியாயப் படுத்தி வாதாடலாம். ஆனால், வாக்காளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளூராட்சி அல்லது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் நபர்கள், அதற்குப் பிறகும் நிம்மதியாக ஆசனத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு எதிர்பார்க்கப் படுவார். தனது வாக்குறுதியில் தவறும் உறுப்பினர், மக்களினால் நிராகரிக்கப் படலாம்.

ஒவ்வொரு உள்ளூராட்சி/நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கடமையை சரிவர செய்கிறாரா என்று பார்ப்பதற்காக, மக்களை சந்திக்க வேண்டும். நாடாளுமன்ற அல்லது மாகாண சபை உறுப்பினர்கள், வருடத்திற்கு இரண்டு தடவைகள் மக்களை சந்திக்க வேண்டும். கிராம அல்லது நகர சபை உறுப்பினர்கள், ஒவ்வொரு வாரமும் மக்களுடன் கலந்துரையாட வேண்டும். புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி, சந்திப்புக்கு வேண்டிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும். அந்த சந்திப்பில் ஒவ்வொருவரும் தனது குறைகளை தெரிவிக்கலாம். 

கியூபாவில் ஜனநாயக நாடாக வேண்டும் என்று, மேற்கத்திய நாடுகள் ஒவ்வொரு வருடமும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அப்போதெல்லாம் பிடல் காஸ்ட்ரோ பின்வருமாறு கூறுவார்: "நாம் உலகிலேயே சிறந்த ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கிறோம். கியூபாவில் ஜனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அறிய விரும்புவோர், இங்கே நேரடியாக வந்து பார்க்கலாம்." ஜனநாயகம் பற்றி, காஸ்ட்ரோவின் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள, இந்த இணைய இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்:     

Fidel Castro :: What is a Real Democracy,  http://radicaljournal.com/essays/what_is_a_real_democracy.html


கியூபா பயணக் கட்டுரை கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

Sunday, June 14, 2009

ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"


"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன."

மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராக போட்டியிட்ட முசாவி ஒரு சீர்திருத்தவாதியாக (அதாவது லிபரல் போக்கு) ஊடகங்களால் காண்பிக்கப்பட்டார். முசாவிக்கு பின்னால் திரண்டிருந்த இளைஞர் பட்டாளத்தை படம் பிடித்துக் காட்டி, முசாவிக்கு நாடு முழுவதும் ஆதரவு இருப்பதாக கூறிக்கொண்டன. பொதுவாக தமது அரசியல் கொள்கை சார்ந்த ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அபிலாஷை காரணமாக இந்த முறையும் சற்று அதிகமாகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பொதுவாகவே மத்திய கிழக்கு நாடுகளைக் குறித்த புரிந்துணர்வு, மேற்குலகில் குறைவு. அதிலும் ஈரானின் உள்நாட்டு விவகாரம் பற்றி எப்போதும் தவறாகவே கற்றுக் கொள்கின்றனர். ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பின்வருமாறு தெரிவித்தார். ஈரானில் பெண்கள் பல்கலைக்கழக கல்வி கற்றிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அப்போது தான் சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டார்களாம். ஈரான் இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடு என்பதால், அங்கே பெண் கல்விக்கு தடை உள்ளதாக "அனைத்தையும் அறிந்த" அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஈரான் அரசியல் பற்றிய புரிதலும் அவ்வாறே பத்தாம்பசலித்தனமாக உள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சர்வாதிகாரம் நிலவுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. அப்படியானால் எதற்காக தேர்தல் முடிவுகளை ஆர்வமாக அவதானிக்கிறார்கள்? இதில் இருக்கும் முரண்பாட்டை பலர் உணர்வதில்லை. சாதாரண மக்களுக்கு அரசியல் தெளிவின்மை இருக்கலாம். மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கும், ஊடகவியலாளருக்கும் அரசியல் விஞ்ஞானம் தெரியாது என்று சொல்ல முடியாது. அவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு உண்மையை மக்களுக்கு மறைக்கிறார்கள். அந்த உண்மை "அரசியல் நிர்ணயச் சட்டம்". ஆம், ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் இருக்கின்றது. சர்வாதிகாரம் இருக்கின்றது. ஆனால்... அவையெல்லாம் மிக நுட்பமாக கையாளப்படுகின்றது. இதை பொது இடங்களில் வெளிப்படும் சில அசம்பாவிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு எடை போட முடியாது.

இன்றைய ஈரானின் அரசியல் கட்டமைப்பு 1979 ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியுடன் ஆரம்பமாகியது. புரட்சியை பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல்படை தேசத்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்து. ஆயத்துல்லா என அழைக்கப்படும் மதத்தலைவரான கொமெய்னி தேசத்தின் தலைவரானார். அமைச்சர்களும் அரசாங்கத்தை நடத்தியவர்களும் மதத் தலைவர்கள் தாம். இதை வைத்துக் கொண்டு, ஈரானில் மதம் அரியணை ஏறியிருந்தது என்று சொல்லப்படுவது உண்மை தான். ஆனால் குறிப்பிட்ட காலம் மட்டுமே மதத் தலைவர்கள் நேரடி நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த சில வருடங்களுக்குள், "புரட்சியை காக்கும் படை" எதிர்ப்பாளர்களை அழித்தொழித்து விட்டது. புதியதோர் அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதப்பட்டு விட்டது. கடைசியாக சொன்ன வரிகளை தொடர்ந்து நினைவில் வைத்திருங்கள்.

ஆகவே, இப்போது அரசியல் களத்தில் குதிக்கும், தேர்தலில் எதிரும் புதிருமாக நிற்கும் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் புரட்சிக்குப் பின்னர் புதிதாக தோன்றியவர்கள். அதற்கான வழிகளை மதத் தலைவர்களே ஏற்படுத்திக் கொடுத்தனர். அதாவது தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அதற்கென திறமையுள்ள மத்தியதர வர்க்கம் ஒன்றிடம் கையளித்து விட்டு, மதத்தலைவர்கள் ஒதுங்கி விட்டனர். ஈரானின் அரசியல், பொருளாதார தலைநகரம் எப்போதும் போல தெஹ்ரான் தான். இருப்பினும் தெற்கில் அமைந்திருக்கும் "கோம்" என்ற நகரம் மதத்தலைவர்களின் நிர்வாகத் தலைமையகமாக செயற்படுகின்றது. மதத்தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடவில்லை.மாறாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் மதத் தலைவர்களின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது.

ஜனநாயகத் தேர்தல் கூட, மதத் தலைவர்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதி வைத்தவை தாம். மேற்குலக நாடுகள், தமது அழுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பது போல பெருமை பேசுகின்றன. உண்மை அதுவல்ல. இஸ்லாமியப் புரட்சியின் பரணாம வளர்ச்சி இந்த ஜனாயகத் தேர்தல். ஒன்றுமே புரியவில்லையே, தலையைச் சொரிபவர்களுக்காக ஒரு ஒப்பீடு. இங்கிலாந்து நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவ மத அடிப்படைவாத புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பின்னர் பாராளுமன்றமும், முடியாட்சியும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அரசியல் நிர்ணயச் சட்டம் தோன்றியது. இன்று பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நோர்வே போன்ற நாடுகளில் அது போன்ற அரசியல் அலகு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் சோஷலிசக் கட்சி போன்ற "சீர்திருத்தவாதக் கட்சிகள்" தேர்தலில் போட்டியிடவும் ஆட்சியமைக்கவும் முடியும். எந்தவொரு கட்சியும் அரசியல் சட்டத்தை மாற்ற, மன்னர் குடும்பத்தின் அதிகாரத்தை நீக்குவதற்கு விரும்பினால், அது பெரும் வில்லங்கத்தில் போய் முடியும்.

முடிக்குரிய ஜனநாயகம் போலத்தான், ஈரானின் மதவாத ஜனநாயகமும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அஹ்மதின்ஜாத்தின் கட்சியினர், மேற்கத்திய நாடுகளில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடத் தக்கது. சீர்திருத்தவாதியான முசாவி (முன்பு கத்தாமி) ஆகியோரின் கட்சியினர், லிபரல்கள் (அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி) அல்லது சமூக ஜனநாயகவாதிகள் (ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோருடன் ஒப்பிடத் தக்கவர்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் "கோம்"மில் உள்ள மதத்தலைவர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாது. வேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாம். அஹ்மதின்ஜாத் பகுதி, மதத் தலைவர்களுக்கு "பிரியமான பிள்ளைகளாகவும்", சீர்திருத்தவாதிகள் "தறுதலைப் பிள்ளைகள்" போலவும் நோக்கப்படுகின்றனர். அது மட்டும் தான் வித்தியாசம்.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல ஈரானில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தேசத்தை தலைகீழாக புரட்டிப் போடும் வல்லமை கிடையாது. அஹமதிநஜாத் மதத்தலைவர்களுக்கு நெருக்கமானவராக காட்டப்பட்டாலும், இராணுவத்தை போருக்கு தயார் படுத்தும் அதிகாரம் கூட அவருக்கு இல்லை. ஈரானில் சர்வ வல்லமை பொருந்திய சிறப்புப் படையணியான "புரட்சிக் காவல்படை" கூட அஹமதிநஜாத் சொல் கேட்டு நடப்பதில்லை. ஈரானில் அனைத்துப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக, உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா கொமெய்னி அதிகாரம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்தலில் அஹமதிநஜாத் குழுவிற்கும், முசாவி குழுவிற்கும் இடையில் நிலவும் போட்டியும், முரண்பாடுகளும் ஈரானில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப் போவதில்லை. இதனை தமிழ் நாடு மாநிலத்தில், இரு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நடக்கும் பூசல்களுடன் ஒப்பிடலாம். நிச்சயமாக, ஈரானிலும் இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிப்பதுடன் நில்லாது, அவதூறுகளையும் அள்ளி வீசுகின்றன. தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க பாணியில் இரு வேட்பாளருக்கும் இடையில் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் இடம்பெற்றது. இதில் எதிர்த் தரப்பு வேட்பாளர் மீது தனிநபர் தாக்குதல் நடந்ததையும் காண முடிந்தது. முசாவியின் ஆதரவாளர்கள் நாசிச பாணியில் பச்சை வர்ண(கட்சியின் நிறம்) அணிவகுப்புகளை நடத்துவதாக அஹமதிநஜாத் பிரச்சாரம் செய்தார். அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு எல்லாம் அஹமதிந்ஜாத் நிர்வாகம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று முசாவி குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக குறை சொல்லுமளவிற்கு அங்கே ஜனநாயகம் நிலவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ஈரானில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முசாவியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் மாநகரங்களில் வாழும் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள். அதற்கு மாறாக அஹமதிநஜாத் ஆதரவாளர்கள் நாட்டுப்புறங்களில் வாழும் வசதியற்ற ஏழை மக்கள். இந்தத் தேர்தலில் 85 வீதமனோர் வாக்களித்துள்ளனர். (ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட 43வீதமானோர் மட்டுமே வாக்களித்தனர்.) மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஏழை வாக்களார்கள் அஹமதினஜாத்திற்கு வாக்களித்திருப்பார்கள், என்பதைப் புரிந்து கொள்ள ராக்கெட் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்தவாதி முசாவி வெற்றி பெற வேண்டுமாயின் முழு நடுத்தர வர்க்கமும், ஒரு பகுதி உழைப்பாளர் வர்க்கமும் வாக்குப் போட்டிருக்க வேண்டும். ஆனால் முசாவியின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க நலன்களை குறிவைத்தே செய்யப்பட்டன. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்கள், நாளாந்தம் உயரும் விலைவாசியால் வாழ்வதற்கு அல்லல் பட வேண்டியுள்ளது. அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும் என்பது அவர்களது பிரச்சினை. அதற்கு மாறாக தின்று கொழுத்து, ஆடம்பரக் கார்களும், அமெரிக்க கலாச்சாரமாக வாழ்க்கையை அனுபவிக்கும் நடுத்தர வர்க்க ஈரானியர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அஹமதிநஜாத் பதவியில் இருக்கும் காலத்தில் நடந்த உலக காற்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் அணி வெற்றிக் கிண்ணத்தை பெறவில்லையாம். அதற்கு முன்னர் இருந்த சீர்திருத்தவாதி கத்தாமியின் ஆட்சிக்காலத்தில் ஈரான் உதைபந்தாட்ட அணி பல போட்டிகளில் ஜெயித்ததாம். (தி கார்டியன் வீக்லி 12-6-09) நடுத்தர வரக்கத்திற்கு இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைகள். உதைபந்தாட்ட விளையாட்டு வெறி பொதுத் தேர்தலில் எதிரொலிக்கின்றது.

1979 ம் ஆண்டு, ஷா மன்னருக்கு எதிரான இஸ்லாமியப் புரட்சி உழைக்கும் மக்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது. நாட்டுப்புற உழைக்கும் மக்கள் ஒன்றில் கொமெய்னி தலைமையிலான இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள், அல்லது "துடே கட்சி" என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். இவ்விரண்டு சக்திகளும் ஒன்று சேர்ந்து, கொடுங்கோல் ஷா மன்னர் ஆட்சியை கவிழ்த்த புரட்சியை தலைமை தாங்கி நடத்தின. புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தை கையில் எடுத்த மதவாதிகள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி அழித்தார்கள். தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு, மதத் தலைவர்கள் ஒரு நாளும் குறுக்கே நிற்கவில்லை. ஈரானில் பொருளாதாரம் முழுவதும் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய தேசிய முதலாளிகளின் கைகளில் உள்ளது. கூடவே முதலாளித்துவத்திற்கு சேவை செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மத்திய தர வர்க்கம் ஒன்றும் உருவானது. மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர மோகத்தையும், கலாச்சார சீரழிவையும் ஆட்சியிலிருந்த மதத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. பங்களாவில் நான்கு சுவர்களுக்குள் இளவயதினரின் நடன விருந்துகள் நடக்கின்றன. சுற்றுலா மையங்களில் 'பிக்னிக்' போகும் இளஞ்ஜோடிகள் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத ஈரானில் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று சொன்னால் வெளியுலகில் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதையெல்லாம் அனுபவிப்பது, மொத்த சனத்தொகையில் 20 % மும் இல்லாத பணக்கார நடுத்தர வர்க்கம்.

நடுத்தர வர்க்கத்தில் இயல்பாகவே காணப்படும் மேலைத்தேய மோகம், அமெரிக்க அரசியல் சார்ந்ததாக இருப்பதில் வியப்பில்லை. மேற்குலக ஊடகங்கள் அதை அடிப்படையாக வைத்து பிரமைகளை தோற்றுவிக்கின்றன. ஈரானிய மக்கள் முழுவதும் அமெரிக்கா தங்களை வந்து விடுதலை செய்ய வேண்டும் என்று காத்திருப்பதைப் போல கதைகளை கட்டி விடுகின்றன. இந்தப் பின்னணியிலேயே ஈரான் தேர்தல் குறித்த மேற்கத்திய பரப்புரைகளையும் எடை போட வேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் வந்த செய்தித் தலைப்புக்கள் இவை: "... தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்தேகம்" (டைம்ஸ்) "வாக்குகள் களவாடப்பட்டு விட்டன என எதிர்க்கட்சி வேட்பாளர் முசாவி தெரிவிக்கிறார்."(நியூ யார்க் டைம்ஸ்) "அமெரிக்க அரசியல் அவதானிகள் நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்." (பாக்ஸ் நியூஸ்)

ம்ம்ம்... பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.