Showing posts with label பிடல் காஸ்ட்ரோ. Show all posts
Showing posts with label பிடல் காஸ்ட்ரோ. Show all posts

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, November 28, 2016

பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் பிரபாகரனின் ஈழமும் பிரியாத உறவுகள்


தனது 90வது வயதில், 25 நவம்பர் 2016 அன்று காலமான முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிற்கு செவ்வணக்கம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் எண்ணிக்கை சமூகவலைத்தளங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கலக்கமடைந்த மக்கள் விரோத சக்திகள், மீண்டும் தமது அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ஒன்றில் அடிப்படை கல்வியறிவு இருக்க வேண்டும் அல்லது அனுபவ அறிவாவது வேண்டும். இரண்டும் இல்லாத தற்குறிகள் தான், பிடல் காஸ்ட்ரோ பற்றி அவதூறு பரப்பித் திரிகின்றன. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஒரு தலைவர் எல்லோராலும் விரும்பப் பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பிரபாகரனை வெறுக்கும் தமிழர்களும், பிடல்காஸ்ட்ரோவை வெறுக்கும் கியூபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஈழத்தில் புலிகளின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அவர்களால் தடைசெய்யப் பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு தப்பியோடி அங்கு ஒன்று சேர்ந்தவர். 

அதே மாதிரியான சம்பவங்கள் கியூபாவிலும் நடந்துள்ளன. அங்கும் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், பிற கட்சிகள், இயக்கங்களை தடை செய்திருந்தது. ஈழத்தில் முன்பிருந்த மிதவாத தமிழ்த் தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் புலி ஆதரவாளர்களாக மாறினார்கள். அதே நிலைமை கியூபாவிலும் இருந்தது. மிதவாத கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் ஜூலை 26 இயக்க ஆதரவாளர்களாக மாறினார்கள்.

கியூபப் புரட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள், அருகில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் பலர் புரட்சிக்கு முந்திய அரசின் ஆதரவாளர்கள். அதே நேரம், மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சாரத் தரகர்கள் போன்றோரும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்குள் அடங்குவார்கள். புரட்சிக்குப் பிந்திய கியூபாவில் ஒரு அதிசயம் நடந்தது. விபச்சாரத் தரகர்கள், மற்றும் பல்வேறு கிரிமினல்களை கைது செய்து, ஒரு வழிப்பாதை பயணச் சீட்டு வாங்கி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்றி நாடுகடத்தினார்கள்!

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்து, நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்த கியூபர் ஒருவர் எனது நண்பராக இருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி அப்போது அவரும் ஒரு காஸ்ட்ரோ எதிர்ப்பாளராகத் தானிருந்தார். (அப்படியானவர்களுக்குத் தான் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கொடுப்பார்கள் என்பது வேறு விடயம்.) இருப்பினும், ஒரு காலத்தில் தீவிரமாக காஸ்ட்ரோவை எதிர்த்து வந்த  அவர், பிற்காலத்தில்  தனது முடிவை மாற்றிக் கொண்டார். ஒரு மேற்குலக நாட்டில் வாழும் பொழுது தான், பிடல் காஸ்ட்ரோ சொன்னவை யாவும் உண்மைகள் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக கூறினார். 

அவர் முதலில் ஸ்பெயின் வந்து சில காலம் தங்கியிருந்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் தான் காண்போர் எல்லாம் காஸ்ட்ரோ ஆதரவாளராக இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். தான் ஏதாவது குறை சொல்லி விட்டால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் நிலவும் பிரபாகரன் ஆதரவு அலையை இதனோடு ஒப்பிடலாம். அங்கும் யாரும் பிரபாகரன் பற்றி குறை சொல்ல முடியாது. உடனே சண்டைக்கு வருவார்கள்.



பிடல்காஸ்ட்ரோவை எதிர்க்கும் தமிழ் வலதுசாரிகள், ஜே.ஆர். ஜெயவர்த்தனேயும், காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்ட ஒரு புகைப் படத்தை, ஏதோ புதையலை கண்டுபிடித்த மாதிரி சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கி இருப்பார்களா என்பது சந்தேகமே.

பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, அல்லது சோவியத் யூனியனில் தங்கியிருக்க விரும்பாத அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது. பெரும்பாலும் மூன்றமுலக நாடுகளின் கூட்டமைப்பான அது, குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அங்கத்துவ நாடுகளில் உச்சிமகாநாடு நடத்துவது வழக்கம்.

இலங்கையில், கொழும்பு நகரில், 16–19 ஆகஸ்ட் 1976 ல் உச்சி மகாநாடு நடைபெற்றது. அணிசேரா நாடுகளின் விதிகளின் படி, மகாநாட்டை ஒழுங்கு படுத்தும் நாட்டின் அதிபர், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார். அவ்வாறு தான் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

3–9 செப்டம்பர் 1979 ம் ஆண்டு, கியூபாவில், ஹவானா நகரில் மீண்டும் மகாநாடு கூடியது. அப்போது அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை, ஜே.ஆர்.ஜெயவர்த்தனே பிடல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அப்போது எடுத்த படம் தான் அது.

1976 ம் ஆண்டு இலங்கையில் நடந்த அணிசேரா நாடுகளின் நாடுகளின் உச்சி மகாநாடு மூலம் தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ அறிமுகமானார். அன்று இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் அது தான் அறிமுகமாக இருந்திருக்கும். அன்று உச்சி மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் காஸ்ட்ரோவும், கடாபியும் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தனர். பொது மக்களும் அவர்களைப் பற்றிக் கதை கதையாக பேசிக் கொண்டனர்.

வட மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் பிடல் காஸ்ட்ரோ பிரமிப்புக்கு உரியவராக பார்க்கப் பட்டார். காஸ்ட்ரோ பற்றியும், கியூபப் புரட்சி பற்றியும் மனோரம்மியமான கதைகளும் உலாவின. சில தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பிடல்காஸ்ட்ரோ என்று பெயரிட்டிருந்தனர். இந்த விடயம் எண்பதுகள், தொண்ணூறுகளுக்கு பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

அது மட்டுமல்ல, ஈழ விடுதலைக்கு ஆயுதமேந்திய போராளிகளும் காஸ்ட்ரோ என்ற பெயரை விரும்பிச் சூட்டிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருக்கும் காஸ்ட்ரோ என்ற புனைபெயர் இருந்தது. 2009 இறுதிப்போரரில் மரணிக்கும் வரையில் அவர் அந்தப் பெயரில் தானிருந்தார். அவரைத் தவிர பல பிடல்கள், காஸ்ட்ரோக்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் போராட்டமும் "கியூபாப் பாணியில்" இருந்ததை மறுக்க முடியாது. பல கெரில்லாத் தாக்குதல்கள், மினி முகாம் தாக்குதல்கள், கியூபப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளுக்கு அமைய அமைந்திருந்தன. அப்போது போராளிகள் விரும்பி வாசிக்கும் புத்தகமாக கியூப விடுதலைப் போராட்டம் இருந்தது.

1984 ம் ஆண்டு, "விடுதலைப் புலிகள்" என்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை வெளியானது. அதன் முதலாவது இதழில் பிடல்காஸ்ட்ரோவின் பேட்டி பிரசுரமானது. அப்போதே புலிகள் சோஷலிச கருத்துக்களை புறக்கணித்து, தீவிர தேசியவாதம் பேசி வந்தனர். 

இருப்பினும் அவர்களுக்கும் காஸ்ட்ரோ ஒரு ஆதர்ச நாயகனாக இருந்தார். அதற்கு வலுவான காரணம் இருந்தது. புலிகளை மாதிரி ஆயுதமேந்திய தலைமறைவு இயக்கம் கெரில்லா யுத்தம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதை, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ நிரூபித்துக் காட்டி இருந்தார். அது விடுதலைப் புலிகளை வெகுவாக கவர்ந்து இருந்ததில் வியப்பில்லை.

தொண்ணூறுகளுக்கு பிறகு ஏற்பட்ட உலக மாற்றங்கள் ஈழத்திலும் எதிரொலிக்காமல் இல்லை. சோவியத் யூனியனின் மறைவுடன் கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்று நம்பும் புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. உயர்கல்வி கற்று உத்தியோகம் பார்த்த காரணத்தால், அல்லது பொருளாதார வசதிகள் காரணமாக, முதலாளித்துவ விசுவாசிகளாகவும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் இருந்தனர். 

மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட அந்தத் தமிழ்  இளைஞர்கள், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்பு சக்திகளாக பார்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் எதிரிகளாக இருந்த நாடுகளை எல்லாம், அவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் கியூபாவையும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் கற்றுக் கொண்டார்கள். அடிமைகள் வேறெப்படி தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவார்கள்?

இந்த மாற்றம், 2009 க்குப் பின்னர் (ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையால்) ஏற்பட்டது என்பது ஒரு பொய் பித்தலாட்டம். அப்படியானால், அவர்கள் அமெரிக்காவை தான் முதலில் எதிர்த்திருக்க வேண்டும். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, "புலிகள் பேச்ச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எச்சரித்திருந்தார். முள்ளிவாய்க்கால் சென்றால் அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று ஏமாற்றியதால், சிறு துண்டு நிலத்திற்குள் அகப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்கள் கனரக ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டனர். 

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத மாதிரி, அமெரிக்க அடிவருடிகள் தமிழினப் படுகொலையை சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களது எஜமானான அமெரிக்க அரசும், சிறிலங்கா அரசும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்தின என்பதை மூடி மறைப்பார்கள். அப்படியான பாசாங்குக் காரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஸ்ட்ரோவின் மரணத்தில் தமது அரசியலை திணிக்கிறார்கள்.

த‌மிழ் ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் பிட‌ல் காஸ்ட்ரோவின் ம‌றைவுக்கு அஞ்ச‌லி செலுத்துவ‌து, ஏகாதிப‌த்திய‌ அடிவ‌ருடிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்துகின்ற‌து. அத‌னால், "த‌மிழ‌ர் ந‌ல‌ன்" என்ற‌ போர்வையில் காஸ்ட்ரோ எதிர்ப்பு பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர். டால‌ர்க‌ள் பேசுகின்ற‌ன‌.

ப‌ழைய‌ குருடி க‌த‌வைத் திற‌டி க‌தையாக‌, திரும்ப‌வும் அதே ஐ.நா. தீர்மான‌ நாட‌க‌த்தை அர‌ங்கேற்றுகிறார்க‌ள். வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ அமெரிக்காவை க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ளாம். ஆனால் இன‌ப்ப‌டுகொலையாளி கொண்டு வ‌ந்த‌ ஐ.நா. தீர்மான‌த்தை எதிர்த்த‌து கியூபாவின் மாபெரும் "த‌மிழின‌த் துரோக‌ம்" என்கிறார்க‌ள். இர‌ட்டைவேட‌ம் போடுகிறார்கள்.

இதே போலித் தமிழ்த் தேசிய‌வாதிக‌ள், மாக்கிர‌ட் தாட்ச‌ர் கால‌மான‌ போது க‌ண்ணீர் வ‌டித்தார்க‌ள். யார் இந்த‌ மார்க்கிர‌ட் தாட்ச‌ர்? ஜே.ஆர். ஆட்சிக் கால‌த்தில் புலிக‌ளை அழிப்ப‌த‌ற்கு பிரிட்டிஷ் SAS கூலிப்ப‌டையை அனுப்பிய‌வ‌ர்! அவ‌ர் த‌மிழ் ம‌க்க‌ளின் ந‌ண்ப‌ராம். ஆனால் ஒரு தோட்டா கூட‌ அனுப்பாத‌ பிட‌ல் காஸ்ட்ரோ த‌மிழ‌ரின் எதிரியாம்.

அமெரிக்காவினால் விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் கைக்கூலிகளின், பிடல் காஸ்ட்ரோ பற்றிய பிதற்றல் இது: //பிடல் காஸ்ட்ரோ ஈழத்தில் தமிழினத்தை அழித்து முடித்த சிங்களத்தைப் பாராட்ட வேண்டும் என்றார்!//

தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு, எவனும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வர மாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்லப் படும் பொய் அது.

இலங்கைப் பிரச்சினை பற்றி பிடல்காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் ஏதாவது கருத்து தெரிவித்து இருக்கிறாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? 15 வருடங்களுக்கு முன்னரே, கடும் சுகயீனம் காரணமாக காஸ்ட்ரோ அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். அமெரிக்க கைக்கூலிகள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் கடந்த ஏழு வருடங்களுக்குள் நடந்தவை. கியூப அரசுப் பிரதிநிதிகளின் கூற்றுக்களை காஸ்ட்ரோவின் கூற்றாக திரிப்பதில் இருந்தே பொய் அம்பலமாகத் தொடங்கி விடுகிறது.

முதலில் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கு பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் தோற்றம் பெற்றதும், அதற்கு கியூபா அடிபணிந்து சென்றதும் வரலாறு. தனது தேசத்தின் ஒரு பகுதியில் இருக்கும் குவாந்தனமோ தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு தைரியமில்லாத கியூபாவிடம், ஏன் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்று கேட்பது மடத்தனமானது.

2001 ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்திருந்தது. அதற்குப் பிறகு உலகில் எல்லா நாடுகளும் தமக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிக் கொண்டன. இல்லாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கும் அச்சம் இருந்தது. (உண்மையிலேயே சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.)

சூடான் போன்ற பல நாடுகள் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கின. அவ்வாறான சூழ்நிலையில் "ஏன் கியூபா புலிகளை ஆதரிக்கவில்லை?" என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமானது. கியூபா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. ஏனென்று கேட்டால், அது தான் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் இல்லை. தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.

அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தன. தாம் வெளியிட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை உலகில் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தின. ஆகையினால், கியூபாவும் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்டது. அதற்கான காரணம் மிகவும் தெளிவானது.

அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றை அறிவித்திருந்தது. அப்படியான சூழ்நிலையில் தானும் அதற்கு ஆதரவளிப்பதாக சொல்வது ஒரு இராஜதந்திர நடவடிக்கை. ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளே அதற்கு ஆதரவளித்தன. ஐ.நா. மன்றத்தில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

ஒரு பேச்சுக்கு, கியூபா புலிகளை (அல்லது அது போன்ற ஆயுதபாணி இயக்கத்தை) மறைமுகமாகவேனும் ஆதரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? கியூபா பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று அமெரிக்கா அதை ஆதாரமாகக் காட்டும். கியூபா மீது படையெடுப்பதற்கு நாள் குறிக்கப் படும். இவ்வாறு தான் அமெரிக்கா பல நாடுகளை அடிபணிய வைத்திருந்தது. அதனால், பனிப்போருக்கு பின்னரான உலகில் எந்த நாடும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் கீழ் புலிகளை அழிப்பதற்கு கியூபா மட்டும் ஆதரிக்கவில்லை, அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளும் அதே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. எதற்காக கியூபாவை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டும்? தமிழினத்தை அழித்ததற்கு பிடல்காஸ்ட்ரோ நன்றி தெரிவித்தாராம்! எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது? ஆதாரம் எங்கே?

இவர்களது லாஜிக் என்னவென்றால்: "புலிகளை அழிப்பது தமிழ் மக்களுக்கு அழிப்பதற்கு சமமானது. ஆகவே கியூபா தமிழர்களுக்கு எதிரானது." அதாவது, "காகம் கருப்பு நிறம், கந்தசாமி கருப்பு நிறம், ஆகவே கந்தசாமி ஒரு காகம்!" இது தான் இவர்களது முட்டாள்தனமான லாஜிக். இப்படி திரித்து விட்டு, "கியூபா தமிழர்களை அழிக்க நினைத்தது" என்று சுற்றும் ரீல்கள் இருக்கிறதே! அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு எல்லாவற்றையும் மிஞ்சி விட்டது.

இன்று சிரியாவில், ஐ.எஸ். (ISIS) இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று கியூபா உட்பட எல்லா உலக நாடுகளும் ஒத்து நிற்கின்றன. அதை "முஸ்லிம்களை அழிக்க துணை நின்றதாக" சொல்வீர்களா? ISIS எதிர்ப்பு நடவடிக்கை, உங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மத அழிப்பு ஆகாதா? உண்மையிலேயே, அது தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் லாஜிக். 

இந்த இடத்தில் ஓர் உண்மையை கூற வேண்டும். அமெரிக்காவில், தொண்ணூறுகளின் இறுதியில், விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அந்தத் தடையானது புலிகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்தது. அதனால், புலிகள் இயக்கம் பெருமளவு பணம் செலவளித்து தடையை நீக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

அதற்காக, அமெரிக்காவில் உள்ள பிரபல சட்டத்தரணியான ராம்சி கிளார்க் என்பவரை நியமித்திருந்தனர். புலிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு அவர் தலைமை தாங்கினார். (LTTE takes battle to the US courts) யார் இந்த ராம்சி கிளார்க்? ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அது மட்டுமல்ல, ஒரு தீவிரமான காஸ்ட்ரோ ஆதரவாளர்! அவர் இன்றைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசில் (TGTE) அங்கம் வகிக்கிறார்!! (Former US Attorney General Joins LTTE Senate)

ஏன் அன்று புலிகள் இன்னொரு வழக்கறிஞரை, குறிப்பாக ஒரு "காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை" நியமித்திருக்கலாமே? அது முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்காவில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு வழக்கறிஞர்கள் அனைவரும், புலிகள் மீதான அரசின் தடையை ஆதரித்தவர்கள் தான். அதனால், புலிகள் ஒரு இடதுசாரி வழக்கறிஞரை தேடிப் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.



அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ராம்சி கிளார்க் International Action Center (http://iacenter.org/) என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். அவரது அமைப்பு, நீண்ட காலமாக கியூபா மீதான பொருளாதார தடையை எடுக்குமாறு போராடிக் கொண்டிருந்தது. கியூபாவுக்கு ஆதரவான பல வழக்குகளில் ராம்சி கிளார்க் வாதாடியிருந்தார். அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான ஐந்து கியூபர்கள் தொடர்பான வழக்கை குறிப்பிடலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு தான், புலிகள் தமக்காக வாதாடுமாறு அவரை நியமித்திருந்தனர்.

இன்று சிலர் "புலி ஆதரவாளர்" என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, "கியூபாவும் காஸ்ட்ரோவும் தமிழினத்திற்கு எதிரானவர்கள்" என்ற விஷமத் தனமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், சில வலதுசாரி ஊடகவியலாளர்களும் இந்த எதிர்ப்பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் அமெரிக்காவால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஏ. மட்டுமல்ல, சோரோஸ் பவுண்டேஷன், யு.எஸ். எயிட் போன்ற பல நிறுவனங்கள் இதற்காகவே இலங்கையில் இயங்கி வருகின்றன. ஏகாதிபத்திய அடிவருடிகளை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன.   ஈழப்போர் முடிந்து விட்ட பின்னர் பிணங்களை கொத்துவதற்கு அமெரிக்க கழுகுகள் பறந்து வருகின்றன.

Monday, December 09, 2013

காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்


ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்த கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் கை விடப் பட்டு, தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுக்கும், தரகு முதலாளியக் கொள்கை மட்டுமே கோலோச்சுகின்றது. ஒரு சிலர் இதற்கு "தலைமுறை இடைவெளி காரணம்"  என்று சாட்டுப் போக்குச் சொல்லலாம். உண்மையில், பனிப்போர் முடிந்த பின்னர், உலகம் தலைகீழாக மாறி விட்டது. அதற்கு முன்னர், போலி சோஷலிச அரசு நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சமூக - ஜனநாயக கட்சிகளாக மாறி விட்டன. உலகளவில் ஏற்பட்ட இயங்கியல் மாற்றம் ஈழப் போராட்டத்தையும் பாதிக்காமல் விட்டிருக்காது.

இன்றைக்கும் சோவியத் யூனியன் இருந்திருந்தால், மண்டேலா தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழித்திருப்பார். தனது 95 வது வயதில், ரொபின் தீவில் ஒரு கைதியாக இறந்திருப்பார். மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும், மண்டேலாவின் மரணத்தை "ஒரு பயங்கரவாதியின் மறைவாக" கொண்டாடி இருப்பார்கள்.

பனிப் போர் முடிந்த பின்னர் தான், மண்டேலா சிறையில் இருந்து விடுதலையானார். அதற்குப் பின், அவர் தன்னை ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று ஒதுக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் கை கோர்த்தார்.  மண்டேலா கைகோர்த்த மேலைத்தேய நாடுகள், தென்னாபிரிக்காவிலும், நமீபியாவிலும், அங்கோலாவிலும் கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்த நிறவெறி அரசை ஆதரித்து வந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

நெல்சன் மண்டேலா  மகிந்த ராஜபக்சவுடனும் கை கோர்த்திருப்பார். ஆனால், தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மண்டேலா ஆட்சி நடத்திய காலத்தில், மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கவில்லை. அந்தக் காலங்களில், சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் ஜனாதிபதியாக இருந்தார். சந்திரிகாவும் ஈழப் போரில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றவர் தான். மண்டேலா அவருடன் கை கோர்ப்பதற்கு தயங்கவில்லை. "மண்டேலா தன்னை மகளாக கருதுவதாக..." சந்திரிக்கா சொல்லிப் பெருமைப் பட்டார்.

இவ்விடத்தில் எழும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை ஒன்று தான். அமெரிக்க ஏகாதிபத்திய தந்தையின் அரவணைப்பில், அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் பிள்ளைகள் தான். நவ காலனிய அமைப்பை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள் கை கோர்த்துக் கொள்கிறார்கள். மக்களாகிய நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நவ காலனிய தரகு முதலாளிகளை எதிர்க்க வேண்டும்.

இறுதியில் மண்டேலாவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசப் போக்கை பின்பற்றி வந்தார். (இல்லாவிட்டால், அவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.) ஆயினும், அவர் தனது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற கியூபா, பிற கம்யூனிச நாடுகளின் உதவிகளை புகழ்ந்து பாராட்டினார். மண்டேலாவை விடுதலை செய்து, ஜனாதிபதியாக்கிய "நன்றிக் கடனுக்காக", கியூபாவுடனான உறவை துண்டிக்க வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்தியது. மண்டேலா அந்த பயமுறுத்தல்களுக்கு அடி பணிய மறுத்தார். இன்னும் இன்னும் பிடல் காஸ்ட்ரோவையும், கியூபாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மண்டேலா, தென்னாபிரிக்க அரசியலில் பல தவறுகளை விட்டிருக்கலாம். (அவரது மாஜி மனைவி வின்னி கூட கடுமையான விமர்சனங்களை வைத்தார்.) இருந்த போதிலும், சர்வதேச மட்டத்தில் மண்டேலா நேர்மையான அரசியல் தலைவராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, லிபரல் ஜனநாயகவாதி. ஆனால், கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை, சமநீதிக்கான போராட்டத்தை ஆதரித்து பேசினார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் உலக கம்யூனிச நாடுகளின் ஆதரவு மட்டும் இருந்திரா விட்டால், "ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ்" (ANC) என்றைக்கோ அழித்தொழிக்கப் பட்டிருக்கும். 

மண்டேலா அதனை பல தடவைகள் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். "கொடுங்கோல் நிறவெறி அரசினால் நாங்கள் ஒடுக்கப் பட்ட நேரம், கம்யூனிச நாடுகள் தான் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டின. மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள், அடக்குமுறையாளர்களுடன் கூடிக் குலாவின. இன்று அவர்கள் எமது கம்யூனிச நண்பர்களுடனான தொடர்பை முறிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் அந்தளவு நன்றி மறந்தவர்கள் அல்ல." என்று மண்டேலா விளக்கம் அளித்தார். (பார்க்க:தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்) அப்படிப் பட்ட நேர்மையான மனிதரான மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மீண்டும் கம்யூனிச வெறுப்பை மக்கள் மனதில் விதைக்க எண்ணுகின்றனர். அதைக் காணும் பொழுது, ஆயாசமே எஞ்சுகின்றது. தமிழர்கள் அந்த அளவுக்கு நன்றி மறந்த இனமாக இருப்பது கவலைக்குரியது.

மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தெரியாத, புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகள் இப்படியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: 
//மண்டேலா, மற்றும் பிற போராளிகளுடன், பிடல் காஸ்ரோவை ஒப்பிடமுடியாது. பிடல் அமெரிக்காவின் எதிரியாக மட்டுமே இருக்கிறார். இன விடுதலைக்காக போராடும் மக்களை விட ராஜபக்சேக்களுடனேயே கை கோர்த்துக் கொள்கிறார்...// ஓ ... அப்படியா?

மண்டேலா தன்னை சிறையில் போடுவதற்கு காரணமாக இருந்த, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசின் ஜனாதிபதி கிளார்க்குடன் கை குலுக்கி, நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர். 2008 வரையில் அமெரிக்கா மண்டேலாவின் பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. மண்டேலா, தன்னை  பயங்கரவாதி என்று இழிவு படுத்திய,  மேற்கத்திய நாட்டுத்  தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர். ஆனாலும், அவர் ஒரு காலத்தில் கியூபா செய்த உதவிகளை மறக்கவில்லை. நமது தமிழ் தேசியவாதிகள் மறந்து விட்டார்கள்.

மேற்கத்திய நாடுகள் எல்லாம், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு கொடுத்து உதவிக் கொண்டிருந்த காலத்தில், பிடல் காஸ்ட்ரோ மண்டேலாவின் ANC க்கு உதவினார். தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட நமீபியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவினார். கியூபப் படைகள், அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தை எதிர்த்து போரிட்டன. ஆயிரக் கணக்கான கியூப வீரர்கள், நிறவெறிக்கு எதிரான போரில் வீரச் சாவடைந்தனர். சிறையில் இருந்து விடுதலையடைந்த மண்டேலா, கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவியை பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.

இது ஒரு பொது அறிவு. 1983 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், இந்தியாவிடம் இருந்து பயிற்சியும், நிதியும் கிடைத்தன. 83 ஜூலைக் கலவரத்திற்கு பிறகு தான், மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 1987 ல், அதாவது இந்திய இராணுவத்துடன் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் தான், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதியும், ஆயுதங்களும் வரத் தொடங்கின. 1983 க்கு முன்னர் யார் ஆயுதங்களும், பயிற்சியும் வழங்க முன்வந்திருப்பார்கள்? 

அந்தக் காலத்தில் தான், புலிகள் இயக்கம் சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடனும், கம்யூனிச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 1978 ம் ஆண்டு, ஹவானாவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டில் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். அதில் இரண்டு பேர் சோவியத் யூனியனில் கல்வி கற்றவர்கள். அப்போது லண்டனில் இருந்த LTTE அமைப்பாளர் கிருஷ்ணர், கம்யூனிச நாடுகளிடம் உதவி கோரும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, கியூபாவிற்கு அனுப்பி வைத்தார். ஹவானா மகாநாட்டில் அவை விநியோகிக்கப் பட்டன.

கியூபா சென்ற புலிகள் பிடல் காஸ்ட்ரோவுடன் கூட பேசி இருக்க முடியும். எழுபதுகளில் சில நேரம், புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் தருவதற்கு கியூபா முன்வந்திருக்கலாம். (ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை பின்னால் பார்ப்போம்.) அருளரின் லங்கா இராணி நாவலில் இது மறைமுகமாக குறிப்பிடப் பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் அகதிகள், லங்கா ராணி கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். லங்கா ராணி கப்பலில் சென்று கொண்டிருந்த தமிழ் அகதிகள், ஆயுதப் போராட்டத்தின் அவசியம் பற்றி விவாதிக்கின்றனர். அதில் ஒருவர் கியூபாவிடம் இருந்து உதவி பெற முடியும் என்று கூறுகின்றார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி, அந்த நாவல் விபரிக்கவில்லை.

லங்கா ராணி நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிஜமான மனிதர்கள். அவர்களின் உரையாடல்களும் உண்மையில் நடந்தவை. கியூபாவிடம் உதவி பெற்று ஆயுதப் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்தவர்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இன்றைக்கு அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம், அல்லது போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.

அன்று கியூபாவோ, பிடல் காஸ்ட்ரோவோ, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பை வழங்கியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம், "சிங்கள அரசுடனான நட்புறவல்ல". கியூபா மட்டுமல்ல, லிபியா, சிரியா, தெற்கு யேமன் போன்ற நாடுகள் கூட, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கி வந்தன. அதே நேரம்,இலங்கை அரசுடனும் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தன. ஏனென்றால், அந்தக் காலத்தில் வளர்ந்து வந்த "அணிசேரா நாடுகள்" என்ற சர்வதேச அமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை.

கியூபா ஈழப் போராட்டத்திற்கு நேரடியாக உதவாததற்கு, இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. பனிப் போர் காலகட்டத்தில், கியூபா லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மட்டுமே தனது செயற்பாடுகளை கொண்டிருந்தது. சோவியத் யூனியனும் அதையே விரும்பியது. (கேஜிபி யின் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட "The Mitrokhin Archive" நூலில் இது விரிவாக எழுதப் பட்டுள்ளது.) அதற்குப் பதிலாக, தெற்காசிய நாட்டு விடுதலை இயக்கங்களுடனான தொடர்பை, பாலஸ்தீன இயக்கங்கள் பேணி வந்தன.

அதாவது, உலகம் அன்றிருந்த நிலையில், ஒரு ஈழ விடுதலை இயக்கம், கியூபாவிடமோ, அல்லது சோவியத் யூனியனிடமோ உதவி கோரி இருந்தாலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) தான் அதற்கு பொறுப்பேற்று இருக்கும். இறுதியில் அதுவே நடந்தது. அன்று லண்டனில் இயங்கிய மார்க்சிய-லெனினிச ஈரோஸ் இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. ஈரோஸும், PLO வும், இலங்கையில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு, லெபனானில் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தன.

லெபனானில் PLO விடம் இராணுவப் பயிற்சிக்கு சென்ற முதல் பிரிவு புலி உறுப்பினர்களில், அதன் தலைவர் உமா மகேஸ்வரனும் ஒருவர். பின்னாளில் உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டதும், அதனால் இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டதும் தனிக் கதை. புலிகளிலும், அதிலிருந்து பிரிந்த புளொட்டிலும், ஆரம்பத்தில் லெபனான் பயிற்சி எடுத்தவர்களே பிற உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்பு தான், இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தது.

அந்தக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்றது. புலிகளின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தவர்களும் மார்க்சிஸ்டுகள் தான். சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் (உதாரணத்திற்கு: கவிஞர் புதுவை இரத்தினதுரை), ட்ராஸ்கிச கட்சிகளில் இருந்தும் (உதாரணத்திற்கு: அன்டன் பாலசிங்கம்), பல மார்க்சிஸ்டுகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். இந்திய பத்திரிகை ஒன்று, அன்றைய யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை பேட்டி எடுத்தது. அப்போது, "தமிழீழம் கிடைத்தால் எப்படியான அரசியல் - பொருளாதார கொள்கை நடைமுறைப் படுத்தப் படும்?" என்று கேட்ட கேள்விக்கு, கிட்டு கூறிய பதில் "புரட்சிகர கம்யூனிசம்"! (ஆதாரம்: விக்கிலீக்ஸ்)

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், "கம்யூனிசப் புலிகளை" கண்டு அஞ்சியதில் வியப்பில்லை. ஜேவிபி யும், புலிகளும் சேர்ந்து, இலங்கையை கம்யூனிச நாடாக்கி விடுவார்கள் என்று பயந்தார். அவ்வாறே மேலைத்தேய நாடுகளில் பிரச்சாரம் செய்தார். "மார்க்சியப் புலிகளை" அழிப்பதற்கு பிரிட்டனிடம் உதவி கோரினார். கம்யூனிச புலிகளை வளர விடக் கூடாது என்று சூளுரைத்துக் கொண்டு களமிறங்கிய பிரிட்டனின் SAS கூலிப்படையினர், இலங்கையில் விசேட அதிரடிப் படை (STF)என்ற புதிய இராணுவத்தை உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த பல தமிழினப் படுகொலைகளுக்கு STF அத்துமீறல்களே காரணமாக இருந்தன.

அநேகமாக, பனிப்போரின் இறுதிக் காலத்தில், புலிகளின் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இயக்கத்தினுள் இருந்த இடதுசாரிகள் ஓரங் கட்டப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. வலதுசாரிகள் புலிகளை அமெரிக்க சார்பு இயக்கமாக வழிநடத்திக் கொண்டு சென்றார்கள். மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு நிறுவனங்கள், போராட்டத்திற்கு நிதியும், ஆயுதங்களும் அனுப்பும் அளவிற்கு பலம் பெற்று விளங்கின. அவை நேரடியாகவே மேற்கத்திய அரசாங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. 

புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் நிதி, சர்வதேச மூலதனத்தின் ஓரங்கமாக ஐக்கியமாகியது. முரண்நகையாக அதுவே, புலிகளின் அழிவுக்கும் உதவியது. இறுதிப் போர் நடந்த காலத்தில், மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், தமது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தினார்கள். அமெரிக்காவில் "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" என்ற Lobby group உருவானது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் டாலர் நிதி வழங்கினார்கள். இன்றைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு, சிஐஏ  யின் கண்காணிப்பின் கீழ், அமெரிக்காவில் தான் இயங்குகின்றது. 

இதிலே ஒரு வேடிக்கையான முரண்பாட்டை கவனிக்க வேண்டும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், ஒரு பக்கத்தில் தங்களை புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டனர். மறு பக்கத்தில், புலிகளை அழிக்கத் துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவளித்தனர். அது எவ்வாறு சாத்தியம் என்பது, அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்கா புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது என்ற விடயம், இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே வெளிப்படையாக தெரிந்தது. 

அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்கு முயன்ற சில தமிழர்களை, FBI மடக்கிப் பிடித்தது. இன்று வரையில், அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தில், சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அவற்றை ஸ்ரீலங்கா கடற்படை தேடி அழிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. இது எல்லாவற்றையும் விட, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிளேக், புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்:"புலிகள் மீண்டும் போருக்கு செல்லத் துணிந்தால், இலங்கை அரசின் பக்கம் நின்று, புலிகளை அழிப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குப்போம்..." என்று கூறினார்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம், கியூபா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சுட்டிக் காட்டி இருந்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மேற்படி உண்மையை மறைத்துக் கொண்டே,"பிடல் காஸ்ட்ரோ ராஜபக்சேக்களுடன் கை கோர்த்துக் கொண்டதாக" திரிபு படுத்தி பிரச்சாரம் செய்தனர். இன்றைக்கும் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படியான பிரச்சாரத்தை முன்னெடுக்கா விட்டால், தமிழ் மக்கள் மத்தியில் தங்களது இரட்டை வேஷம் கலைந்து விடும் என்று அஞ்சுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்த விடயம் அமபலப் பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர்.

ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கம் எதிர் நிலை வல்லரசுகளையும் சமமாக கருதி இருக்க வேண்டும். முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான இராஜதந்திர அணுகுமுறை இல்லாமல் போனது ஒரு பெரிய குறைபாடு. புலிகளின் அல்லது தமிழர்களின் பலவீனத்தை, ராஜபக்சேக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தமில்லை.

*****************

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்
2.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு
3."மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!

Tuesday, October 14, 2008

காஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி

சமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் பலமானதிற்கும், பலவீனமானதிற்குமிடையில் போட்டி நிலவுகின்றது. தேவையான அளவு உணவு உள்ள, பாடசாலை செல்லக்கூடிய, எழுத வாசிக்க தெரிந்த, அனுபவங்களை சேகரித்துக் கொண்ட, அதிக வளங்களைக் கொண்ட வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இந்த வசதி எல்லாம் கிடைக்காத மக்கள் மறு புறம். ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையேயான வித்தியாசமும் இது போன்றதே.


ஐரோப்பிய வெள்ளையர்கள் தமது கனவுகளுடனும், பேரவா கொண்டும் ஸ்தாபித்த அதி உயர் முதலாளித்துவ தேசம்(அமெரிக்கா) இன்று நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சாதாரண நெருக்கடியல்ல. உலகம் முழுவதும் (அமெரிக்க) மாதிரி வளர்ச்சியை வரித்துக் கொண்ட காலத்தில் இருந்து எழுந்த மிக மோசமான நெருக்கடியாகும். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவத்தின் தற்கால நெருக்கடி, ஒரு சில நாட்களில் ஏகாதிபத்தியம் அதன் தலைமையை மாற்றிக்கொள்ள போகும் காலகட்டத்தில் வந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் நிறவாதம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு கறுப்பன் தனது மனைவி பிள்ளைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறப்போவதை லட்சக்கணக்கான வெள்ளையின மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "வெள்ளை" மாளிகை என்று மிகச் சரியாகத் தான் பெயரிட்டுள்ளனர். மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்று நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு கிட்டியது போல, ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்த விதிக்குள் மாட்டாதது ஒரு அற்புதம் தான்.


பதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3 டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.
தற்போது புஷ் நிர்வாகம் சோஷலிசத்திற்கு வழங்கும் பங்களிப்பு பற்றி நாம் அதிசயப்படலாம். ஆனால் நாம் அது போன்ற எந்த மாயைக்குள்ளும் சிக்கக்கூடாது. வங்கி நடைமுறைகள் யாவும் வழமைக்கு திரும்பிய பின்னர், ஏகாதிபத்தியவாதிகள் வங்கிகளை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள்.


எந்தவொரு சமூக கட்டமைப்பிலும் முதலாளித்துவம் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ளும், ஏனெனில் அது மனித அகத்தூண்டுதலிலும், தன்முனைப்பிலுமே கட்டப்பட்டுள்ளது. மனித சமூகம் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதைத் தவிர, தப்புவதற்கு வேறு வழி இல்லை. கியூபாவில் பங்குச் சந்தை இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் பகுத்தாய்ந்து, சோஷலிச வழியில் எமது அபிவிருத்திக்கான நிதியை செலவிடுவோம்.


தற்போதைய நெருக்கடியும், அமெரிக்க நிர்வாகம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கொண்டுவரும் இரக்கமற்ற அளவீடுகளும் ஏற்படுத்தப்போவது; பணவீக்கத்தையும், தேசிய நாணய மதிப்புக் குறைவையும், இன்னும் அதிக வருந்த வைக்கும் சந்தை இழப்புகளையும், ஏற்றுமதிக்கான குறைந்த விலையையும், சமமற்ற பரிமாற்றத்தையும் ஆகும். அதே நேரம், அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வைப்பதுடன், மக்களிடையே அதிக விழிப்புணர்வையும், இன்னும் கிளர்ச்சியையும், புரட்சியையும் கூட உருவாக்குவார்கள்.
இந்த நெருக்கடி எவ்வாறு விருத்தியடையப் போகின்றது என்பதையும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய அமெரிக்காவில் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-Fidel Castro Ruz, October 11, 2008

(நன்றி, "கிரான்மா" வார இதழ், கியூபா )
THE LAW OF THE JUNGLE
(சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

Sunday, April 13, 2008

தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்

"ஒரு முக்கியமான தகவலை நான் சொல்ல விரும்புகின்றேன். கியூபா துருப்புகள் அங்கோலாவில் இருந்த போது, அந்த நாடு (அன்றைய நிறவெறி) தென் ஆப்பிரிக்க இராணுவ படையெடுப்பிற்கு உட்பட்டிருந்தது. அதே நேரம் அமெரிக்கா சில அணு குண்டுகளை, ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்ட அதே குண்டுகளை, பாசிச நிறவெறி தென் ஆப்பிரிக்கவிற்கு அனுப்பி வைத்தது. பலர் இன்றைக்கு மறந்து விட்டாலும், அங்கோலா போர், எட்டு அணு குண்டுகளை வைத்திருந்த, அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட நிற வெறி தென் ஆபிரிக்கவிற்கு எதிராக, கியூபா-அங்கோலா வீரர்கள் போராடினார்கள். இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. உலகம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை."

 - பிடல் காஸ்ட்ரோ (எனது வாழ்க்கை, என்ற சுயசரிதை நூலில் இருந்து)

1970 க்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட காலங்களில், கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றவென்று, 350000 இராணுவ வீரர்களையும், வைத்தியர்களையும், பிற தொண்டர்களையும்; அங்கோலா, நமீபியா, மொசாம்பிக், கினி பிசாவு, கேப் வெர்டே, சாவோ தோமே ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த சண்டைகளில் இதுவரை 2077 கியூபா படையினர் மாண்டுள்ளனர்.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன், என்ற பழமொழிக்கேற்ப, அந்த நாடுகளின் விடுதலைக்கு தனது இன்னுயிரை கொடுக்க தயாராக இருந்த, ஆப்பிரிக்க கண்டதினை சேராத ஒரேயொரு நாடு, கியூபா மட்டுமே. இத்தனை தென் ஆப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பல தடவை நன்றியுடன் கூறியுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பல தடவை மேற்கத்திய நாடுகள், கியூபா உடனான உறவுகளை முறிக்க சொல்லி அழுத்தம் கொடுத்த போதும், அதை மறுத்து, பிடல் காஸ்ட்ரோ தனது ஆருயிர் நண்பன் என்று பகிரங்கமாக அறிவித்தார். தனது நாடு கியூபாவிற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்கட்டுவார்.

"வெள்ளை நிறவெறி தென் ஆப்பிரிக்காவில் நாம் உரிமைகளற்று அடக்கப் பட்ட நேரம், நீங்கள் அவ்வரசிற்கு ஆதரவு வழங்கினீர்கள். கியூபா எமது பக்கம் நின்றது. எமக்கு உதவி செய்ய கியூபா போராளிகளை, வைத்தியர்களை, ஆசிரியர்களை அனுப்பி வைத்தது. ஒரு நாளும் அவர்கள் காலனியவாதிகளாக வரவில்லை. எமக்காக இரத்தம் சிந்தியதற்காக ஆப்பிரிக்கர்களான நாங்கள், கியூபாவிற்கு தலை வணங்குகிறோம். இந்த சுயநலமற்ற சர்வதேசியத்தை நாம் ஒரு போதும் மறவோம். " 
- இதை நெல்சன் மண்டேலா மேற்கத்தைய தலைவர்களின் முகத்திற்கு நேராகவே கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் கியூபா பல மனம் நெகிழ வைக்கும் உதவிகளை செய்துள்ளது. கியூபா சுதந்திரமடைந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்தது. அறுபதுகளில் பிரெஞ்சு காலனிய ஆட்சியை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த அல்ஜீரிய போராளிகளுக்கு, கியூபா ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்தது. திரும்பி வந்த கப்பலில், போரால் பாதிக்கப்பட்டு பெற்றாரை இழந்து அனாதைகளான அல்ஜீரிய பிள்ளைகள் இருந்தனர். அந்தப்பிள்ளைகள் கியூபா பிரசாவுரிமை பெற்று, கல்வி கற்று, இன்றைக்கும் கியூபாவில் வாழ்கின்றனர். 

அதே போல 1978 ல் அங்கோலாவில் இருந்த நமீபியா அகதி முகாம் ஒன்று, தென் ஆப்பிரிக்க படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, மக்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது, கியூபா படைகள் போய் சண்டையிட்டு, அந்த அகதிகளை காப்பாற்றி கியூபா அனுப்பி வைத்தனர். அப்படி காப்பாற்றப் பட்டவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளுமடங்குவர். அந்த அகதிக் குழந்தைகளில் ஒன்று, இன்று நமீபியாவின் தூதுவர். இந்த சம்பவங்களெல்லாம் காஸ்ட்ரோ வினால், அவரது சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ("My Life, Fidel Castro", published by Allen Lane, an imprint of Penguin books)


ஆப்பிரிக்க விடுதலைபோராட்ட வரலாற்றில், அங்கோலா, நமீபியா, கினி ஆகிய நாட்டு விடுதலைப் போராட்டங்கள் மட்டுமே கியூபா விற்கு பெருமை சேர்த்த போர்கள். சோமாலியாவின் படையெடுப்பினை எதிர்த்து போரிட, எத்தியோப்பிய சென்ற போது, ஒரு பிழையான நண்பனை தெரிவு செய்ததாக பட்டது. அன்றைய எத்தியோப்பிய அதிபர் மெங்கிஸ்டுவின் கொடுங்கோலாட்சியும், எரித்திரிய சுதந்திர போராளிகளை அடக்கியதிலும், கியூபா உடன்படவில்லை. 

இதனால், அந்தப் போர் பற்றிய விபரங்களை Castro தனது நூலில் குறைத்துக் கொண்டுள்ளார். அதை போலவே, காங்கோவில் சே குவேரா ஒரு சிறு படையுடன் போய், கபிலாவின் இயக்கத்துடன் சேர்ந்த போதும் நடந்தது. முதலாவதாக கபிலா ஒரு முற்போக்குவாதியாக சேவுக்கு படவில்லை. இரண்டாவதாக கபிலாவின் படையினர், போராட தயங்கும் சுகபோகிகளாக இருந்தனர். இதனால் வெறுத்து போன சே தனது ஆப்பிரிக்க சாகசங்களை அத்தோடு முடித்து கொண்டு கியூபா திரும்பினார்.

ஆபிரிக்காவில் அப்போது போராடிய விடுதலை இயக்கங்கள், மார்க்சிய- லெனினிய சித்தந்ததை வரித்துக்கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் எ.என்.சி. கூட ஆரம்பத்தில் மார்க்சிய அடிப்படை கொண்டிருந்தது. சோவியத் யூனியன் அப்போது, காலனிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைய விரும்பிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தாராளமாக உதவி வந்தது. ஆப்பிரிக்காவில் சோவியத் நிதியுதவி வழங்கி வந்ததுடன் , கியூபா இராணுவ உதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டது. கியூபாவில் கறுப்பினத்தவர் மொத்த சனத்தொகையில் அரைவாசி என்பதால், ஆப்பிரிக்க சென்ற படையினரில் கணிசமான கறுப்பின வீரர்கள் இருந்தனர். 

ஆரம்பத்தில், உதாரணத்திற்கு அங்கோலா போன்ற நாடுகளில், உள்ளூர் போராளிகள் தாமே முன்னணியில் நின்று சண்டை பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், சில தோல்விகளை சந்தித்த பின்பு, கியூபா படைபிரிவை சுதந்திரமாக போரிட விட்டனர். கியூபா வீரர்கள் சண்டையில் காட்டிய துணிச்சல், போரில் பல வெற்றிகளை கொண்டு வந்து சேர்த்தது. Castro அந்த நூலில் சொல்வது போல, கியூபா படையினர் பல வருடங்களாக போரிட்டதின் விளைவு , நமீபியா சுதந்திரம், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியின் முடிவு என்பன சாத்தியமாகின.

இன்று மேற்கத்திய நாடுகள் (முன்னாள் காலனிய ஆட்சியாளர்கள்), ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றதற்கு பல காரணங்கள் கூறலாம். ஆனால் சுதந்திரத்திற்காக போராடிய இயக்கங்கள் பலவற்றின் அரசியல் சித்தாந்தம் "மார்க்சிச-லெனினிசமாக" இருந்த உண்மையையும், இப்படியே விட்டால் தம்மால் "தீய சித்தாந்தம்" என்று அறிவிக்கப்பட்ட ஒன்று, நாளை அந்த கண்டம் முழுவதும் பரவிடும் என்ற அச்சம், பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க முக்கிய காரணம். மேலும், சோவியத் யூனியனின் நிதியுதவியும், கியூபா வின் இராணுவ உதவியும் விடுதலைப் போராளிகளுக்கு தொடர்ந்து கிடைக்கலாம் என்பதாலேயே பல போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த வரலாற்றை இப்போது நினைவு படுத்துவதன் காரணம் என்ன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றை திரிபுபடுத்த நினைக்கின்றது. ஒரு காலத்தில் கம்யூனிச நாடக இருந்த அங்கோலா இன்று அமெரிக்காவிற்கு பெற்றோலிய எண்ணை ஏற்றுமதி செய்யும், பொருளாதார முக்கியத்துவம் உள்ள நண்பன். பல ஆப்பிரிக்க நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு அடி பணிந்து வருகின்றன. இந்த நிலைமையை பயன்படுத்தி, கடந்த கால உண்மைகளை இன்றைய இளம் சந்ததிக்கு மறைத்து, சரித்திரத்தை மாற்றி எழுதும் முயற்சி நடக்கிறது. நூலில் இத்தனை சுட்டிக்காட்டும் Castro, மறைந்த ஆப்பிரிக்க காலனியாதிக்க- எதிர்ப்பு தலைவர் அமிகால் காப்றேல் சொன்னதை நினைவு கூறுகிறார். "கியூபா போராளிகள் எமது தேசத்தின் விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் அதற்கு கைமாறாக அவர்கள் தமது போரில் மடிந்த சக போராளிகளின் உடல்களை மட்டுமே எடுத்துச் செல்கின்றனர்."
இப்போது அந்த அணு குண்டுகள் எங்கே?

"Orange Free State" என்பது ஒரு தென் ஆப்பிரிக்காவில், வெள்ளை இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம். apartheid என்ற இனங்களை பிரித்து வைக்கும் நிர்வாக முறையை அறிமுகப்படுத்திய, அன்றைய டச்சு காலனியாதிக்கவாதிகளின் பிள்ளைகள், ஒல்லாந்து அரசபரம்பரையின் ஒரேஞ் என்ற பெயரையே தமது குடியேற்றங்களுக்கு இட்ட தீவிர வலதுசாரிகள். கருப்பர்களுடன் கலந்து வாழ்ந்தால் , தமது இனத்தூய்மை கெட்டுவிடும் என்று ஒதுங்கி வாழ்கின்றனர். தாம் வாழும் மாகாணத்தையே ஒரு தனி தேசம் போல பாதுகாப்பவர்கள், அதற்கென சட்டவிரோதமாக தனியார் இராணுவமே வைத்திருக்கின்றனர். இன்றைய தென் ஆப்பிரிக்க அரச படையினர், அங்கே நுழைய அஞ்சுகின்றனர். அரசாங்கமோ, ஏன் வீண் பிரச்சினை என்று, அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டது. 

அன்றைய நிறவெறி அரசாங்கத்திற்கு, அமெரிக்க வழங்கிய எட்டு அணு குண்டுகளும், இது போன்ற பாதுகாக்கப்பட்ட வெள்ளையர் காலனிகளிலேயே இருக்கும் என்று நம்பப்படுகின்றது. அதை பற்றி யாரும் கதைப்பதில்லை. இன்றுவரை கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் அது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பினத்தவர் ஆட்சியில் இருக்கலாம், ஆனால் அது அரசியல் அதிகாரம் மட்டுமே. தொழில்துறை நிறுவங்கள், பெருந்தோட்டங்கள், போன்ற கணிசமான அளவு பொருளாதார பலம் மட்டுமல்ல, இராணுவ பலமும் இன்னமும் வெள்ளையர் கைகளில் உள்ளன. அந்த அதிகார மையத்தை தகர்க்காமல், அணு குண்டுகளை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அது நடக்கக்கூடிய காரியமல்ல. அதை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும், மேற்குலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படும்.

**********

கியூபா பற்றிய மேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்:
  • கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்