Showing posts with label கியூபா. Show all posts
Showing posts with label கியூபா. Show all posts

Tuesday, July 13, 2021

கியூபாவில் என்ன நடக்கிறது?

 


கியூபாவில் நடக்கும் குழப்பம் தொடர்பாக சில குறிப்புகள்: 
- 10-11 ஜூலை, வார இறுதி நாட்களில் கியூபாவின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அங்கு நிலவும் உணவு, எரிபொருள், மருத்துவ வசதிப் பற்றாக்குறைக்கு அரசை குற்றம் சாட்டினார்கள்.

- அதே நேரம் கியூப புரட்சிக்கு அல்லது அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. அவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்து கண்டனம் தெரிவித்தார்கள்.

- கியூபாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே இருந்த பொருளாதாரத் தடை கடுமையாக்கப் பட்டது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்திலும் அதுவே தொடர்கிறது.

- கடந்த 29 வருடங்களாக கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. "ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக" பொருளாதாரத் தடை விதித்ததாக அமெரிக்கா நியாயப்படுத்தி வந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடையை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப் பட்டது. அதற்கு ஆதரவாக 184 உலக நாடுகள் வாக்களித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை.

- இதே நேரம் ஹைத்தியின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான மொய்ஸ் ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இந்த அரசியல் படுகொலையை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்க இராணுவம் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.

- கியூபாவுக்கும் ஹைத்திக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். கியூபாவுக்கு மிக அருகில் உள்ள கரீபியன் தீவான ஹைத்தியில் அமெரிக்க படைகள் வந்திறங்கினால், அது எதிர்காலத்தில் கியூபா மீது படையெடுப்பதற்கான தயார்படுத்தலாக இருக்கலாம்.

Wednesday, April 15, 2020

கியூப மருத்துவர்கள்- மனித நேயமே எமது தாயகம்


- கியூபாவில் ஒவ்வோர் ஆண்டும் வ‌ர‌வுசெல‌வு திட்ட‌த்தில் 27 வீத‌ம் மருத்துவ‌த்திற்கு அல்ல‌து ச‌மூக‌ உத‌விக்கு ஒதுக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கு பிர‌ஜைக‌ளுக்கான‌ ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌ச‌ம்.


- மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் கூட‌ புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு குடும்ப‌ம் அதிக‌ செல‌வு செய்ய‌ வேண்டி உள்ள‌து. கியூபாவில் ம‌ருத்துவ‌ம் முற்றிலும் இல‌வ‌ச‌ம்.

- பொருளாதார‌ ரீதியாக‌ ஏழை நாடாக‌ வ‌கைப் ப‌டுத்த‌ ப‌டும் கியூபாவின் ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ள் ஐரோப்பிய‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்கு த‌ர‌மான‌ சேவையை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.

- வ‌ருமுன் காப்ப‌து கியூபாவின் ம‌ருத்துவ‌ திட்ட‌மாக‌ உள்ள‌து. ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளும், வ‌ட்டார‌ க‌மிட்டிக‌ளும் நோய் தொற்றுத‌ல் தொட‌ர்பான‌ கார‌ணிக‌ள், த‌டுப்ப‌த‌ற்கான‌ வ‌ழிக‌ள் குறித்து தொட‌ர்ச்சியாக‌ அறிவுரைக‌ள் வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கும்.

- ஒவ்வொரு வ‌ட்டார‌த்திலும் Medico de la familia என்ற‌ அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவ‌து ஒவ்வொரு ஊரிலும் குறைந்த‌து ஒரு ம‌ருத்துவ‌ர், ஒரு தாதிய‌ர் இருப்பார்கள்.

- வ‌ட்டார‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ம‌‌து கிளினிக்கிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வைத்திய‌ம் பார்ப்ப‌துட‌ன் ம‌ட்டும் நின்று விடுவ‌தில்லை. வ‌ருட‌த்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வீடு வீடாக‌ சென்று ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை செய்வார்க‌ள். ஒரு வீட்டில் 65 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இருந்தால் வ‌ருட‌த்திற்கு 2 த‌ட‌வைக‌ள் வ‌ருவார்க‌ள்.

- மேற்கொண்டு சிகிச்சை தேவைப்ப‌டுவோர் ம‌ட்டும் கிளினிக் அல்ல‌து வைத்திய‌சால‌க்கு அனுப்ப‌ப் ப‌டுவ‌ர். இந்த‌ ந‌டைமுறை கார‌ண‌மாக‌ ப‌ல‌ நோய்க‌ள் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌த்தில் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டு குண‌ப் ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌து. இத‌னால் அர‌சுக்கு செல‌வும் மிச்ச‌ம்.

- கியூபாவில் ம‌ருத்துவ‌க்க‌ல்வி உட்ப‌ட‌ க‌ல்வி முற்றிலும் இல‌வ‌ச‌ம். அத‌னால் ம‌ருத்துவ‌க் க‌ல்லூரிக‌ளில் சேரும் மாண‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் அதிக‌ம். ம‌ருத்துவ‌ராக‌ வேலை செய்யும் அனைவ‌ருக்கும் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும். ஆனால் மேல‌திக‌ போன‌ஸ் எதுவும் கொடுக்க‌ப் ப‌ட‌ மாட்டாது.

- ஏற்க‌ன‌வே கியூப‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ப‌ணி புரிந்து வ‌ந்தாலும், கொரோனா தொற்று ப‌ர‌வ‌லின் பின்ன‌ர் முத‌ல் த‌ட‌வையாக‌ ஒரு ஐரோப்பிய‌ நாடான‌ இத்தாலிக்கு அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

- உல‌க‌ம் முழுவ‌தும் 60 நாடுக‌ளில் 60.000 கியூப‌ ம‌ருத்துவ ப‌ணியாள‌ர்க‌ள் வேலை செய்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் அங்கு வேலை செய்வ‌து ம‌ட்டும‌ல்லாது, ஆலோச‌னை வ‌ழ‌ங்குத‌ல், க‌ற்பித்த‌ல் போன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளிலும் ஈடுப‌டுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து ச‌ம்ப‌ள‌ங்க‌ள் அந்த‌ந்த‌ நாடுக‌ளின் அர‌சுக்க‌ளால் வ‌ழ‌ங்க‌ப் ப‌டும்.

- நில‌ ந‌டுக்க‌ம், வெள்ள‌ம் போன்ற‌ இய‌ற்கை அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இட‌ங்க‌ளுக்கு கியூப‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் உட‌னேயே அனுப்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். அத‌ற்கான‌ செல‌வுக‌ளை கியூப‌ அர‌சே பொறுப்பு எடுக்கிற‌து. கியூப‌ர்க‌ளின் விரைவான‌ உத‌வி குறித்து புக‌ழார‌ம் சூட்டும் ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் செல‌வு ப‌ற்றிக் குறிப்பிட‌ ம‌ற‌ந்து விடுகின்ற‌ன‌. அதாவ‌து வேண்டுமென்றே ம‌றைக்கிறார்க‌ள்.

- கியூபாவில் வெளிநாட்டு மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌ருத்துவ‌க் க‌ல்வி அளிப்ப‌த‌ற்கு ELAM (ல‌த்தீன் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌க் க‌ல்லூரி) செய‌ற்ப‌டுகின்ற‌து. க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ம‌ட்டும் 84 நாடுக‌ளை சேர்ந்த‌ 500 மாண‌வர்க‌ள் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ட்ட‌ம் பெற்று வெளியேறினார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌டிப்புச் செல‌வு முழுவ‌தையும் கியூப அர‌சு பொறுப்பு எடுத்த‌து.

- 1999 ம் ஆண்டு இந்த‌க் க‌ல்லூரி தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து 115 நாடுக‌ளை சேர்ந்த‌ 30000 ம‌ருத்துவ‌ர்க‌ள் அங்கே ப‌டித்துள்ள‌ன‌ர். அவ‌ர்க‌ளில் 170 பேர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ள். அமெரிக்காவில் ம‌ருத்துவ‌க் க‌ல்விக்கு பெருந்தொகைப் ப‌ண‌ம் செல‌விட‌ வேண்டும் என்ப‌தை நான் இங்கே சொல்ல‌த் தேவையில்லை. அந்நாட்டில் க‌ல்விக் க‌ட‌ன் வாங்கி க‌ட‌னாளி ஆன‌வ‌ர்க‌ள் ப‌ல‌ருண்டு. அத‌னால் வ‌ச‌திய‌ற்ற‌ அமெரிக்க‌ மாண‌வ‌ர்க‌ள் அருகில் உள்ள‌ கியூபாவுக்கு சென்று ப‌டிக்க‌ விரும்புவ‌தில் என்ன‌ ஆச்ச‌ரியம் இருக்கிற‌து?


Sunday, March 29, 2020

இத்தாலியை கைவிட்ட ஐரோப்பா; சீனா, கியூபா,ரஷ்யா மட்டுமே உதவுகின்றன!


இதோ இத்தாலி அரசின் வாக்குமூலம்: "கியூபா, சீனா, ரஷ்யாவில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு எதுவுமே செய்யவில்லை!"


எற்கனவே நான் இது பற்றி குறிப்பிட்ட நேரம், "சித்தாந்த அரசியல் பிரச்சாரம் செய்வதாக" உதாசீனப் படுத்தினார்கள். ஐரோப்பாவில் வாழும் சிலர் "இதோ பாருங்கள். ஜெர்மனி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறது." என்று காட்டினார்கள். அது ஒரு கண்துடைப்பு நாடகம். கொரோனா தொற்றுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் பலியான நாட்டில் இருந்து, வெறும் பத்துப் பதினைந்து பேரை அழைத்து சிகிச்சை அளிப்பது என்ன வகையான உதவி? ஜெர்மனி மட்டுமல்ல ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனைகளிலும் இத்தாலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைந்த அளவினர் தான் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் நிறைய பேசப் படுகின்றது. அவர்கள் சீன, கியூபா, ரஷ்ய நாடுகளில் இருந்து என்னென்ன உதவிகள் கிடைத்துள்ளன என்பதை விபரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் உதவி பற்றி சொல்லிக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது? ஆபத்துக் காலத்தில் தான் உண்மையான நண்பர்களை அறியலாம் என்று இத்தாலியர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு, டச்சு பத்திரிகையில் வந்த முழுமையான கட்டுரை: Italië: wel steun van Russen, China en Cuba, nauwelijks van Europa

*****


உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! 
மருத்துவத்தில் தனியார்மயத்தை ஆதரிக்காதீர்கள்!!

ஓர் ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான போதிலும், எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில் கியூப மருத்துவர்கள் வந்ததை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது மேற்குலக- முதலாளித்துவ விசுவாசிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அவர்கள் தமது எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக கியூப எதிர்ப்புப் பதிவுகளை வெளியிட்டு தம்மைப் போன்ற பிற விசுவாசிகளின் மனங்களை குளிர வைக்கின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனியில் வாழும் Raj Siva என்ற எழுத்தாளர் (https://www.facebook.com/rajsivalingam) பேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு பல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

அவரது பதிவில் இருந்து: 
//உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! கியூபா, சீனா போன்ற நாடுகள் இத்தாலிக்கும் ஏன் ஏனைய நாடுகளுக்கும் கூட முடிந்தளவுக்கு உதவுகின்றனதான். மனிதாபிமானம் என்பது உலகப் பொது மறை. அதை யாரும் இன்னும் மறக்கவில்லை.//

ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் முதலில் காணாமல்போனது மனிதாபிமானம் தான். இத்தாலி, கியூபா போன்றதொரு மூன்றாமுலக ஏழை நாடு அல்ல. பணக்கார முதலாமுலகத்தை சேர்ந்த, அதிகளவு தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடு. அத்தகைய நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைய வேண்டிய காரணம் என்ன?

முதலில் இந்நாடுகளில் மருத்துவ வசதி தனியார்துறையிடம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அதன் அர்த்தம் காசு கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் கிடந்தது சாக வேண்டியது தான். ஏராளமான கொரொனோ நோயாளிகள் அம்புலன்ஸ் வராமலே வீடுகளில் கிடந்து வருந்தி இறந்திருக்கிறார்கள். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தேசத்தின் மருத்துவக் கட்டுமானம் முழுவதும் வீழ்ச்சி அடைந்தது. அத்தகைய நிலைமையில் தான் கியூப மருத்துவர் குழு வருகை தந்தது.

இந்த நேரத்தில் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் நினைவுகூர வேண்டும். முன்பு அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடைகளை இத்தாலியும் ஆதரித்தது. இன்று வரையில் அந்தத் தடைகள் நீக்கப்படவில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது திருக்குறள். ஓர் ஏழை நாடான கியூபா பணக்கார நாடான இத்தாலி தனக்கு செய்த துரோகத்தை மன்னித்து ஆபத்துக் காலத்தில் உதவ வந்தது மெச்சத் தக்கது. அதுவும் வேறெந்த ஐரோப்பிய நாடும் உதவாத நிலையில் தான் வந்துள்ளது.

முகநூலில் இந்தப் பதிவை இட்டவரிடம் ஐரோப்பிய நாடுகள் ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுப்பியதும், ஜெர்மனி சில நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக ஓர் ஆதாரத்தை காட்டினார். இத்தாலி சென்று கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதும், ஒரு சில நோயாளிகளை அழைத்து சிகிச்சை அளிப்பதும் ஒரே விடயம் அல்ல. இத்தாலியிலும் முன்னர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் (வடக்கு இத்தாலி) தான் தொற்று காணப்பட்டது. அங்குள்ள மருத்துவ மனைகளின் வேலைப்பளு அதிகரித்ததும், நோயாளிகள் இத்தாலியின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். அதே மாதிரி தான் ஜெர்மனிக்கும் அனுப்பப் பட்டனர்.

இதை சுட்டிக் காட்டியதும், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், "அவர்களது அவஸ்தையை புரிந்து கொள்ளுமாறும்" கெஞ்சினார். சரி, அப்படிப் பார்த்தால் கியூபாவில் யாருக்கும் இந்த நோய் தொற்றவிலையா? (தகவலுக்காக: கியூபாவில் இதுவரை எண்பது பேருக்கு நோய் தொற்றி உள்ளது. அதில் இரண்டு பேர் மரணம்.)

இது ஒரு உலகளாவிய தொற்று நோய் என்று WHO கூட அறிவித்திருந்ததே? மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகள் தம்மிடம் நிறையப் பணம் இருந்தும் உதவ முன்வரவில்லை. அதே நேரம் ஓர் ஏழை நாடான கியூபா உதவ முன்வந்தது. எது ஞாலத்தில் பெரிது? பொதுவாக பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஏழைகள் தம்மிடம் இருப்பதை பங்கிட்டு வாழ்வார்கள்.

//ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து, தங்கள் ஒனறியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒன்றிய உள் கட்டமைப்பின் மூலம் உதவிகளைச் செய்ய ஆயத்தமாகிறார்கள். சில உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ட்ரில்லியன் யூரோக்களில் பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன.//

இது முற்றிலும் தவறான தகவல். பெருமளவில் கொரோனா தொற்றுதலால் பாதிக்கப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த மார்ஷல் உதவி போன்றதொரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு கோரின. அதற்காக அவசரகால நிதியத்தில் உள்ள பணத்தை செலவிடுமாறு கோரின. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அதற்கு மறுத்து விட்டன. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.

மேலும் "ட்ரில்லியன் யூரோக்கள் தொகை"(?) ஒதுக்குவது கூட கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான உதவி அல்ல. அது இந்த நெருக்கடியால் வருமானம் இழந்த வணிக நிறுவனங்களுக்கான மீட்பு நிதி. இதை ஏற்கனவே ஒவ்வொரு நாடும் அறிவித்து விட்டன. ஆனால் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றி இன்னமும் எந்தக் கதையும் இல்லை. ஆகவே "பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன" என்பது இதைப் பதிவிட்டவரின் எதிர்பார்ப்பு மட்டுமே. உண்மை அல்ல.

//அது தவிர்ந்து, G20 நாடுகள் ஒன்றிணைந்து 5 பில்லியன் டாலர்களை உடனடிக் கொரோணா உதவிக்கும், இனி வரப்போகும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகளை மீட்பதற்கு, 5 முதல் 8 ட்ரில்லியன் டாலர் வரை ஒதுக்குவதெனவும் தீர்மானித்துள்ளன.//

உண்மையில் இது பற்றி G20 நாடுகள் எதையும் அறிவிக்கவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். G20 நாடுகளில் இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா தனது நாட்டையே மீட்க முடியாத ஏழை நாடு. இதற்குள் ஐரோப்பாவுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்ப்பது மடமைத்தனம். இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டாலே இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் துள்ளிக் குதிக்கும். முதலில் பணக்கார நாடுகள் உதவட்டும், அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள்.

//சீனாவில் மட்டும் கொரோணா இருந்தபோது, எத்தனையோ நாடுகள் அவர்களுக்கு மருத்துவ சாதனங்களை அனுப்பியுள்ளனர். கிருமி நீக்கிப் பொருட்களில் கொடுத்து உதவினர். இதுவெல்லாம் நாடுகளுக்கிடையில் நடக்கும் சாதாரண செயல்கள்தான்.//

உண்மையில் சீனாவில் மட்டும் கொரோனா இருந்த நேரம் பிற நாடுகள் அது தமது பிரச்சினை அல்ல என்று ஒதுங்கி இருந்தன. அமெரிக்கா ஒரு சில மருத்துவ சாதனங்களை அனுப்பியது உண்மை தான். ஆனால் அந்த உதவி மிக மிக சொற்பமானது. மேலும் எந்தவொரு நாடும் மருத்துவர் குழுவை அனுப்பவில்லை.

கியூப விஞ்ஞானிகள் சீனாவுக்கு சென்று கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பங்குபற்றினார்கள். அந்த ஆய்வின் விளைவாக கியூபாவில் தயாரிக்கப் பட்ட தடுப்பு மருந்தினை கியூப மருத்துவர்கள் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. பணக்கார நாடுகள் உதவ முன்வராமல் பின்னடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, அவர்களிடம் தடுப்பு மருந்து இருந்தாலும் சந்தைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கப் பார்ப்பார்களே தவிர, ஒரு நாளும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள்.

//இது இப்படியிருக்க, “கியூபா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் மட்டும்தான் கடவுளாக உதவிக்கு வந்தன. முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாமல் தங்கள் புத்தியைக் காட்டிவிட்டன. ஜனநாயக நாடுகளுக்கு மனிதாபிமானமே செத்துப் போய்விட்டது. கியூபாதான் அனைவரையும் காப்பாற்றுகிறது” என்று சிலர் கிளப்பியிருக்கிறார்கள்.//

இது ஒன்றும் இப்போது தான் "கிளம்பிய" கதை அல்ல. கடந்த நூறு வருடங்களாக உலகில் அனைவருக்கும் தெரிந்த விடயம். கியூப மருத்துவர் குழு வேறொரு நாட்டுக்கு செல்வது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே பல்வேறு ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணி புரிகிறார்கள். எதற்காக அந்த நாடுகளில் கியூப மருத்துவர்களின் உதவி தேவைப் படுகிறது என்ற கேள்வி இங்கே கேட்கப் பட வேண்டும்.

இன்று எல்லா நாடுகளிலும் மருத்துவம் தனியார் துறையிடம் உள்ளது. அதன் அர்த்தம் பண வசதி உள்ளவர்கள் மாத்திரம் மருத்துவம் பார்க்கலாம். அதனால் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்குவதற்கு தான் கியூப மருத்துவர்களை தருவிக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, பிரேசில், கயானா போன்ற பல நாடுகளில் கியூப மருத்துவர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

முதலாளித்துவ நாடுகள் இலாபம் கருதாமல் எதையும் செய்வதில்லை. இலங்கை, இந்தியாவுக்கு அபிவிருத்திக்கான கடன் கொடுப்பது கூட அதனால் கிடைக்கும் வட்டித் தொகை காரணமாகத் தான். இந்த இடத்தில் சீனா கூட ஒரு முதலாளித்துவ நாடு, கம்யூனிச நாடு அல்ல என்பது இந்த பதிவருக்கு தெரியாதது வருத்தத்திற்கு உரியது.

இருப்பினும் சீன அரசியல் அமைப்பு வித்தியாசமானது. கிட்டத்தட்ட ஸ்கண்டிநேவிய நாடுகளைப் போன்று மக்கள் நலன் காக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. மிக அத்தியாவசியமான மருத்துவத் துறையை அரசே கட்டுப்படுத்துகிறது.

அதனால் தான் வூஹானில் கொரோனா தொற்று ஏற்பட்ட நேரம் பதினைந்து நாட்களில் ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப் பட்டது. மேலும் இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் கூட சீனாவின் தடுப்பு முறையை தான் பின்பற்றுகின்றன. அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

//இது பிரிவினையை இப்போது விளைவிக்கும் ஒன்று. இந்தச் செயல் மனவருத்தத்தைத் தருகிறது. ஏதோ இன்று உலகத்தையே இரட்சிக்க வந்திருக்கும் தேவதைகள் சீனாவும், கியூபாவும்தான் என்னும் போக்கில் புளகாங்கிதம் அடைகிறார்கள்.//

இதிலே என்ன "பிரிவினை" வந்து விட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இவரது பிரச்சினை முழுக்க முழுக்க மருத்துவம் தனியார்துறையின் கைகளை விட்டுப் போய்விடும் என்பது தான். ஏற்கனவே ஸ்பெயின் அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கி விட்டது. அது பிற நாடுகளிலும் நடந்து விடுமோ என்பது தான் இவரது அச்சம்.

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அப்படி நடந்தால் மருத்துவமனைகளை நடத்தும் மாபியாக்களின் வருமானம் நின்று விடுமே என்பது தான் இவரது கவலை போலிருக்கிறது. அதைத் தான் "பிரிவினை" என்கிறார். அதாவது முதலாளிகள் நலன் சார்ந்த அரசியலுக்கும், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை பற்றிப் பேசுகிறார்.

//இங்கே நான் சீனாவையும், கியூபாவையும் குறைத்துக் கூறவேயில்லை. அவர்களே நினைக்காததை நாம் பிரிவினையாக உருவாக்குகிறோம்.//

அது தானே? அவர் எப்படிக் குறைத்துக் கூறுவார்? சீனாவிலும், கியூபாவிலும் மருத்துவம் தனியார் துறைக்கு திறந்து விடப் பட வேண்டும் என்பது தானே இவர் போன்றவர்களின் பேரவா? உலக நாடுகள் முழுவதும் மருத்துவத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? மருத்துவம் மக்களுக்கானதா? அல்லது முதலாளிகளின் இலாப நோக்கிற்கானதா? அது தான் நாம் உருவாக்கும் "பிரிவினை".

இவர் மாதிரி பணக் கொழுப்பெடுத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச மருத்துவம் தேவையற்ற ஆணி தான். ஆனால் வசதியற்ற ஏழை மக்களுக்கு அது அத்தியாவசியம். நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், உங்களால் வெறுக்கப்படும் வர்க்கப் பிரிவினையை பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

//இப்போது உலகின் அனைத்து நாடுகளும், தங்கள் எல்லைகளைப் பூட்டியபடி, ஏனைய நாடுகளிலிருந்து தனியாகப் பிரிந்திருந்தாலும், தமக்குள்ளே ஒற்றுமையாக இந்தப் பொது எதிரியை விரட்டிதடிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.//

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நடக்கும் சர்ச்சை குறித்தும், அவர்களுக்குள்ளே நிலவும் ஒற்றுமையின்மை குறித்தும் நான் கேள்வி எழுப்பியவுடன் "அவர்கள் படும் அவஸ்தையை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கெஞ்சினார். இதே பணக்கார நாடுகள் தானே தானே Red Cross, Medicin Sans Frontier போன்ற மருத்துவ தொண்டு நிறுவனங்களை வைத்திருக்கின்றன? அவற்றிற்கு பெருமளவு நிதி கொடுத்து ஆதரித்தன? இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் நடந்த நேரம் கேட்காமலே வந்து உதவிய தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டன?

//இதற்குள், அரசியல் இலாபம் கருதி இப்படிப் பேசுவது கடைந்தெடுத்த சுயநலமே!//

சுயநலம் என்பது முதலாளித்துவத்துடன் கூடிப் பிறந்த குணம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவசர கால நிதியம் குறித்து சர்ச்சை எழுந்த நேரம் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் சம்மதிக்க மறுத்தது ஏனோ? அவை தமது நலன் மட்டுமே பெரிதென நினைத்தன. நெதர்லாந்து தனது நாட்டை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டது. இது சுயநலம் இல்லையா? பிற நாடுகள் அதை இரட்டை வேடம் என்று குற்றம் சாட்டின.

அது போகட்டும். இந்தப் பதிவை எழுதியவருக்கு எந்த அரசியல் இலாபமும், சுயநலமும் இல்லையா? அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதை விட, மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மாபியாக்களின் இலாபம் முக்கியம் என்று கருதினால் அது தான் கடைந்தெடுத்த சுயநலம்.

Tuesday, July 30, 2019

புலம்பெயர்ந்த கியூப நாட்டவருடன் ஒரு கருத்தாடல்

நெதர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் கியூப நாட்டவர் ஒருவர், ஒரே தொழிலகத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில்,  தனது நாட்டு நிலைமைகள் பற்றி நிறைய சுவையான கதைகளை கூறினார். எந்த வித அரசியல் சார்புமற்ற உள்நாட்டவரின் வாயால் கேள்விப்படும் தகவல்கள் உண்மைத்தன்மை வாய்ந்தவை. அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கருத்தாடலில், கியூபாவில் வாழும் சாதாரண மக்களின் பிரச்சினைகளான, தனி நபர் வருமானம், பொருளாதார பிரச்சினைகள், சுயதொழில் செய்வது, வீடு வாங்குவது, வெளிநாட்டுக்கு குடிபெயர்வது, போன்ற விடயங்களே அதிகம் அலசப் பட்டுள்ளன.

எனது நண்பர் பற்றி சுருக்கமாக: அவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் ஆங்கில ஆசிரியராக பட்டம் பெற்றிருந்தார். ஒரு மத்தியதர வர்க்க தொழிலான ஆசிரியர் வேலை செய்தாலும் சம்பளம் குறைவு என்பதால், பிற்காலத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி உள்ளார். அந்த நேரம் கியூபாவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒரு பிரித்தானிய பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் மனைவியின் பணியிட மாற்றம் காரணமாக நெதர்லாந்தில் குடியேறி வசிக்கின்றார். அவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 


கியூபாவில் சராசரி தனி நபர் வருமானம் பற்றி...

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவு தான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம் தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப் படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல், போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாக கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதலிடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிக பட்சம்சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்கு சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிக பட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவளித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபப் பொருளாதாரம் பற்றி...

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம், அரச கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிக பட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப் பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப் பட்டது தான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்து விட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப் படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப் பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

அண்மைக் காலத்தில் ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்து விட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டை திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில் தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப் பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவளிக்கிறார்கள்.

கியூபாவில் தற்போது இணையப் பாவனை உள்ளது. அங்கேயும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், அரசுக்கு எதிராக பேசுவோருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எல்லை மீறிப் போக விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

சில நேரம், பொலிஸ் அப்படியான நபர்களை ஏதாவதொரு குற்றச்சாட்டில் பிடித்துச் சென்று ஒரு சில மணி நேரங்கள் தடுத்து வைக்கிறார்கள். பின்னர் எந்தக் குற்றமும் பதியாமல் விட்டு விடுகிறார்கள். பொலிஸ் பதிவு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். முக்கியமாக அரசுக்கு எதிரான கருத்துக்களை வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கப் படுகின்றனர். ஆனால் உள்நாட்டில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

கியூபாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதை "வெள்ளை அட்டை" என்று அழைக்கிறார்கள். அதில் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை என்றும், அரசுக்கு எதிரான பிரச்சாரமும் செய்திருக்கவில்லை என்றும் உறுதிப் படுத்திருக்க வேண்டும்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தாமாக கியூபாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறச் செல்வோர் திரும்பி வர அனுமதிப்பதில்லை. "எங்காவது போய்த் தொலையுங்கள்...." என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். தற்போது நிலைமை மாறி விட்டது. விடுமுறைக்கு தாயகம் சென்று வர அனுமதிக்கிறார்கள். அதுவும் அதிக பட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே தங்கி இருக்கலாம்.



கியூபாவில் மதச் சுதந்திரம் எப்படி உள்ளது?

கியூபாவில் பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். அதைவிட கணிசமான அளவினர் ஆப்பிரிக்க "வூடு" மதத்தை பின்பற்றுகின்றனர். ஆப்பிரிக்க மதத்திற்கென ஆலயம் எதுவுமில்லை. அம்மதப் பூசாரிகள் கோழி வெட்டிப் பலியிடுவது, குறி சொல்வது, சாமியாடுவது, சூனியம் வைப்பது என்பன போன்ற சிறுதெய்வ வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர்.

பெரிய நகரங்களில் குறிப்பிட்ட அளவு யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென சினகொக் (யூத ஆலயம்) உண்டு. மிகக் குறைந்தளவு மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம்களும் உள்ளனர். புத்த மதத்தை பின்பற்றும் சீனக் குடியேறிகளும் அங்கே உண்டு. இவர்கள் பெரும்பாலும் நூறு வருடங்களுக்கு முன்பே, கியூபா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில் வந்து குடியேறியவர்கள். இன்று முழுமையான கியூபப் பிரஜைகள்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர் எந்தவொரு வழிபாட்டு ஸ்தலமும் மூடப் படவில்லை. தினசரி மதகுருக்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கவில்லை. அதை விட கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற விசேடமான மதப் பண்டிகைகளும் வழமை போலவே பொது இடங்களில் கொண்டாடப் பட்டு வந்தன. ஒரு தடவை கரும்புச் செய்கையில் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கான அரச செலவினம் நிறுத்தப் பட்டது. அது தற்காலிகமானது என்று சொன்னாலும், அதற்குப் பிறகு அப்படியே கைவிட்டு விட்டார்கள்.

தொண்ணூறுகளுக்கு பிறகு, குறிப்பாக போப்பாண்டவர் ஜோன் போலின் விஜயத்திற்குப் பிறகு, பொது இடங்களில் மதப் பண்டிகை கொண்டாடுவதற்கு அனுமதிக்கப் பட்டது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் மக்கள் தமது வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அது அவர்களது தனிப்பட்ட விடயம் என்பதால் அரசு தலையிடுவதில்லை.

ஒவ்வொரு கியூப பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது மாதிரி, எந்த மதத்தையும் சேராமல் நாத்திகனாக இருக்கவும் உரிமை உள்ளது. அதாவது, ஒரு மதத்தை நம்புவோருக்கு உள்ள சுதந்திரம், அதை நம்பாதவர்களுக்கும் உள்ளது. அந்த வகையில் அரசு நாத்திக இயக்கத்தை பின்னால் நின்று ஊக்குவித்தது. அவர்கள் மத நம்பிக்கையாளர்கள் தேவாலயம் செல்லும் வழியில் மறித்து நாத்திகப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது நடத்தைக்கு வெட்கப்பட வேண்டும் என்று பரிகசித்தனர்.

கியூபாவில் மத நம்பிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசு பிரயோகித்த மறைமுகமான அழுத்தம் முக்கிய காரணம். ஒருவர் உயர் கல்வி கற்பதற்கு, உயர் பதவி வகிப்பதற்கு, சுருக்கமாக அவரது சுயமுன்னேற்றத்திற்கு தடையாக மதம் இருந்தது. தீவிர மத நம்பிக்கை கொண்ட ஒருவர் பல்கலைக்கழகம் செல்ல முடியாது, ஒரு நல்ல வேலை செய்ய முடியாது. சாதாரண அடிமட்ட தொழில்களை மட்டும் செய்யலாம்.

கியூபாவில் பொதுவாக "கத்தோலிக்கர்" என்று சொன்னால், அது தீவிர மதப்பற்று கொண்டவரை மட்டுமே குறிக்கும். மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெயரளவில் மட்டுமே கத்தோலிக்கராக இருப்பவர்கள் ஏராளம். அவர்களை யாரும் கத்தோலிக்கர் என்று சொல்வதில்லை. அவர்களும் தம்மை அப்படி அழைத்துக் கொள்வதில்லை.

அரசின் மறைமுக அழுத்தம் காரணமாக, தீவிர மதப்பற்றாளர் ஒருவருக்கு எங்கேயும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் சேர்ந்து அங்குள்ள வேலைகளை செய்யலாம். அவருக்கான செலவுகள் அனைத்தையும் தேவாலயம் பொறுப்பெடுக்கும். கியூபாவில் புரட்சிக்குப் பின்னரும் கத்தோலிக்க தேவாலயங்கள் இயங்குவதற்கும், குறிப்பிட்டளவு சொத்துக்கள் வைத்திருப்பதற்கும் அனுமதிக்கப் பட்டது. அந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தேவாலயமே வைத்துக் கொள்ளலாம். தம்மிடம் வேலை செய்வோருக்கு சம்பளம் கொடுப்பதும் தேவாலய குருமாரின் பொறுப்பு தான். அரசு எந்த உதவியும் செய்யாது.

தற்போது மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. கடந்த இருபது வருடங்களில் தேவாலயம் செல்வோரின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. நாத்திகர்களின் தொந்தரவு இல்லாமல் போனதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் தீவிர மதப் பற்றாளர்களை தற்போதும் உயர் பதவிகளுக்கு வர அனுமதிப்பதில்லை. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரணமான உறுப்பினராக சேர்வதற்கே ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டியது கட்டாயம்.


கியூபாவில் வீடு வாங்குவது, விற்பது பற்றி...

- கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட, பெரும்பாலான மக்கள் தமது பெற்றோரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைத்த வீடுகளில் இப்போதும் வசிக்கிறார்கள். அவை அவர்களது சொந்த வீடுகள். சில வருடங்களுக்கு முன்பு வரை அதை விற்பதற்கு தடை இருந்தது.

- சனத்தொகை வளர்ச்சிக்கேற்ற புதிதாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை பெருகுவதில்லை என்றொரு குறை இருக்கிறது தான். குறிப்பாக வேறொரு நகரத்திற்கு இடம்பெயர்வோர் பெரிதாகப் பாதிக்கப் படுகின்றனர். இதனால் வீடு மாற்றிக் கொள்ளும் முறையை பலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கான ஒப்பந்தங்கள் சட்டப்படி செய்து கொள்வதற்கு அரசு அனுமதிக்கிறது.

- வீடுகளை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை சிலர் இலாப நோக்கோடு பயன்படுத்தி வந்தனர். உதாரணத்திற்கு கிராமத்தில் வசிக்கும் ஒருவரும், நகரத்தில் வசிக்கும் இன்னொருவரும் வீடு மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நிச்சயமாக, நகரத்தில் இருக்கும் வீட்டின் பெறுமதி பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆகவே, நகரத்து வீட்டிற்கான மேலதிக பெறுமதியை, கிராமத்து வீட்டுக்காரர் பணமாக கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் இதிலொரு சிக்கல் உள்ளது. அரசு சட்டப் படி, ஒரு வீட்டுக்கு பதிலாக இன்னொரு வீடு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கக் கூடாது. அதனால் மேலதிக பெறுமதிக்கான பணத்தை ஆவணத்தில் எழுதாமல் இரகசியமாக கையில் கொடுப்பார்கள்.

- இந்த பண்டமாற்று முறையை பயன்படுத்தி, நகரத்தில் உள்ள வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டு வெளிநாட்டில் குடியேறியவர்களும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் பின்னர், தற்போது வீடு வாங்கவோ, விற்கவோ எந்தத் தடையும் இல்லை. 


கியூபாவின் சர்வதேச தொடர்புகள் பற்றி...

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அங்கிருந்து பெருமளவு உதவி கிடைத்துக் கொண்டிருந்தது. அப்போதிருந்த நிலைமை சிறப்பாக இருந்தபடியால் அது ஒரு பொற்காலம் எனலாம். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைத்தன. பிற்காலத்தில் வெனிசுவேலாவுடன் நெருங்கிய உறவு ஏற்பட்டவுடன் அங்கிருந்து மலிவு விலையில் எண்ணை பெற்றுக் கொண்டனர். "கியூபர்கள் ஒட்டுண்ணிகள் மாதிரி முன்பு ரஷ்யாவை சுரண்டினார்கள் இப்போது வெனிசுவேலாவை சுரண்டுகிறார்கள்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார் எனது நண்பர்.

கியூபாவின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான சுருட்டு, ரம் மதுபானம் என்பன உலகப் புகழ் பெற்றவை. இவற்றால் வருடந்தோறும் பில்லியன் டாலர் கணக்கான அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் அரச கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இதை விட மருத்துவர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் போன்ற பல் துறை சார்ந்த நிபுணர்களும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனர். வெனிசுவேலா, பிரேசில், கயானா, என்று பல உலக நாடுகளில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு கியூபாவில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமான சம்பளம் கிடைத்தாலும், அதில் பெரும்பகுதி அரசாங்கத்திற்கு செல்கிறது. இந்த நிபந்தனை வேலைக்கு செல்ல முன்னரே ஒப்பந்தத்தில் எழுதப் படுகின்றது. சிலர் அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். வேறு சிலர் அதை அநியாயம் என்று எதிர்க்கின்றனர். அதிகம் சம்பாதிக்க விரும்புவோர் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் தாயகம் திரும்பாமல் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சென்று குடியேறி விடுகின்றனர். ஆனால், அப்படிச் சென்றவர்கள் வாழ்நாளில் கியூபாவுக்கு திரும்பிச் செல்ல முடியாது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கியூபாவிலேயே தங்கி விடுவதால், அவர்களை மறுபடி பார்க்கவும் முடியாது. 


பொதுவாக அரசு தொடர்பாக சராசரி மக்களின் கருத்து என்ன?

மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள் எல்லாம் அரச ஊடகங்களாகவே உள்ளன. தினசரி தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் செய்தி அறிக்கைகளை பார்த்தால், யுத்தங்கள், கலவரங்கள், பேரழிவுகளால் கியூபாவைத் தவிர ஏனைய உலக நாடுகள் எல்லாம் அழிவை நோக்கி செல்வதாக எண்ணத் தோன்றும். உலகில் கியூபா மட்டுமே அமைதியான, பாதுகாப்பான நாடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். கியூப அரசு தனது குடி மக்களை பிள்ளைகள் போன்று கவனித்துக் கொள்வதாகவும், அதற்காக மக்கள் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் உணரத் தோன்றும்.

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, November 28, 2016

பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் பிரபாகரனின் ஈழமும் பிரியாத உறவுகள்


தனது 90வது வயதில், 25 நவம்பர் 2016 அன்று காலமான முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிற்கு செவ்வணக்கம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் எண்ணிக்கை சமூகவலைத்தளங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கலக்கமடைந்த மக்கள் விரோத சக்திகள், மீண்டும் தமது அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ஒன்றில் அடிப்படை கல்வியறிவு இருக்க வேண்டும் அல்லது அனுபவ அறிவாவது வேண்டும். இரண்டும் இல்லாத தற்குறிகள் தான், பிடல் காஸ்ட்ரோ பற்றி அவதூறு பரப்பித் திரிகின்றன. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஒரு தலைவர் எல்லோராலும் விரும்பப் பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பிரபாகரனை வெறுக்கும் தமிழர்களும், பிடல்காஸ்ட்ரோவை வெறுக்கும் கியூபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஈழத்தில் புலிகளின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அவர்களால் தடைசெய்யப் பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு தப்பியோடி அங்கு ஒன்று சேர்ந்தவர். 

அதே மாதிரியான சம்பவங்கள் கியூபாவிலும் நடந்துள்ளன. அங்கும் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், பிற கட்சிகள், இயக்கங்களை தடை செய்திருந்தது. ஈழத்தில் முன்பிருந்த மிதவாத தமிழ்த் தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் புலி ஆதரவாளர்களாக மாறினார்கள். அதே நிலைமை கியூபாவிலும் இருந்தது. மிதவாத கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் ஜூலை 26 இயக்க ஆதரவாளர்களாக மாறினார்கள்.

கியூபப் புரட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள், அருகில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் பலர் புரட்சிக்கு முந்திய அரசின் ஆதரவாளர்கள். அதே நேரம், மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சாரத் தரகர்கள் போன்றோரும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்குள் அடங்குவார்கள். புரட்சிக்குப் பிந்திய கியூபாவில் ஒரு அதிசயம் நடந்தது. விபச்சாரத் தரகர்கள், மற்றும் பல்வேறு கிரிமினல்களை கைது செய்து, ஒரு வழிப்பாதை பயணச் சீட்டு வாங்கி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்றி நாடுகடத்தினார்கள்!

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்து, நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்த கியூபர் ஒருவர் எனது நண்பராக இருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி அப்போது அவரும் ஒரு காஸ்ட்ரோ எதிர்ப்பாளராகத் தானிருந்தார். (அப்படியானவர்களுக்குத் தான் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கொடுப்பார்கள் என்பது வேறு விடயம்.) இருப்பினும், ஒரு காலத்தில் தீவிரமாக காஸ்ட்ரோவை எதிர்த்து வந்த  அவர், பிற்காலத்தில்  தனது முடிவை மாற்றிக் கொண்டார். ஒரு மேற்குலக நாட்டில் வாழும் பொழுது தான், பிடல் காஸ்ட்ரோ சொன்னவை யாவும் உண்மைகள் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக கூறினார். 

அவர் முதலில் ஸ்பெயின் வந்து சில காலம் தங்கியிருந்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் தான் காண்போர் எல்லாம் காஸ்ட்ரோ ஆதரவாளராக இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். தான் ஏதாவது குறை சொல்லி விட்டால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் நிலவும் பிரபாகரன் ஆதரவு அலையை இதனோடு ஒப்பிடலாம். அங்கும் யாரும் பிரபாகரன் பற்றி குறை சொல்ல முடியாது. உடனே சண்டைக்கு வருவார்கள்.



பிடல்காஸ்ட்ரோவை எதிர்க்கும் தமிழ் வலதுசாரிகள், ஜே.ஆர். ஜெயவர்த்தனேயும், காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்ட ஒரு புகைப் படத்தை, ஏதோ புதையலை கண்டுபிடித்த மாதிரி சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கி இருப்பார்களா என்பது சந்தேகமே.

பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, அல்லது சோவியத் யூனியனில் தங்கியிருக்க விரும்பாத அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது. பெரும்பாலும் மூன்றமுலக நாடுகளின் கூட்டமைப்பான அது, குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அங்கத்துவ நாடுகளில் உச்சிமகாநாடு நடத்துவது வழக்கம்.

இலங்கையில், கொழும்பு நகரில், 16–19 ஆகஸ்ட் 1976 ல் உச்சி மகாநாடு நடைபெற்றது. அணிசேரா நாடுகளின் விதிகளின் படி, மகாநாட்டை ஒழுங்கு படுத்தும் நாட்டின் அதிபர், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார். அவ்வாறு தான் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

3–9 செப்டம்பர் 1979 ம் ஆண்டு, கியூபாவில், ஹவானா நகரில் மீண்டும் மகாநாடு கூடியது. அப்போது அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை, ஜே.ஆர்.ஜெயவர்த்தனே பிடல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அப்போது எடுத்த படம் தான் அது.

1976 ம் ஆண்டு இலங்கையில் நடந்த அணிசேரா நாடுகளின் நாடுகளின் உச்சி மகாநாடு மூலம் தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ அறிமுகமானார். அன்று இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் அது தான் அறிமுகமாக இருந்திருக்கும். அன்று உச்சி மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் காஸ்ட்ரோவும், கடாபியும் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தனர். பொது மக்களும் அவர்களைப் பற்றிக் கதை கதையாக பேசிக் கொண்டனர்.

வட மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் பிடல் காஸ்ட்ரோ பிரமிப்புக்கு உரியவராக பார்க்கப் பட்டார். காஸ்ட்ரோ பற்றியும், கியூபப் புரட்சி பற்றியும் மனோரம்மியமான கதைகளும் உலாவின. சில தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பிடல்காஸ்ட்ரோ என்று பெயரிட்டிருந்தனர். இந்த விடயம் எண்பதுகள், தொண்ணூறுகளுக்கு பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

அது மட்டுமல்ல, ஈழ விடுதலைக்கு ஆயுதமேந்திய போராளிகளும் காஸ்ட்ரோ என்ற பெயரை விரும்பிச் சூட்டிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருக்கும் காஸ்ட்ரோ என்ற புனைபெயர் இருந்தது. 2009 இறுதிப்போரரில் மரணிக்கும் வரையில் அவர் அந்தப் பெயரில் தானிருந்தார். அவரைத் தவிர பல பிடல்கள், காஸ்ட்ரோக்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் போராட்டமும் "கியூபாப் பாணியில்" இருந்ததை மறுக்க முடியாது. பல கெரில்லாத் தாக்குதல்கள், மினி முகாம் தாக்குதல்கள், கியூபப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளுக்கு அமைய அமைந்திருந்தன. அப்போது போராளிகள் விரும்பி வாசிக்கும் புத்தகமாக கியூப விடுதலைப் போராட்டம் இருந்தது.

1984 ம் ஆண்டு, "விடுதலைப் புலிகள்" என்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை வெளியானது. அதன் முதலாவது இதழில் பிடல்காஸ்ட்ரோவின் பேட்டி பிரசுரமானது. அப்போதே புலிகள் சோஷலிச கருத்துக்களை புறக்கணித்து, தீவிர தேசியவாதம் பேசி வந்தனர். 

இருப்பினும் அவர்களுக்கும் காஸ்ட்ரோ ஒரு ஆதர்ச நாயகனாக இருந்தார். அதற்கு வலுவான காரணம் இருந்தது. புலிகளை மாதிரி ஆயுதமேந்திய தலைமறைவு இயக்கம் கெரில்லா யுத்தம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதை, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ நிரூபித்துக் காட்டி இருந்தார். அது விடுதலைப் புலிகளை வெகுவாக கவர்ந்து இருந்ததில் வியப்பில்லை.

தொண்ணூறுகளுக்கு பிறகு ஏற்பட்ட உலக மாற்றங்கள் ஈழத்திலும் எதிரொலிக்காமல் இல்லை. சோவியத் யூனியனின் மறைவுடன் கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்று நம்பும் புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. உயர்கல்வி கற்று உத்தியோகம் பார்த்த காரணத்தால், அல்லது பொருளாதார வசதிகள் காரணமாக, முதலாளித்துவ விசுவாசிகளாகவும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் இருந்தனர். 

மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட அந்தத் தமிழ்  இளைஞர்கள், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்பு சக்திகளாக பார்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் எதிரிகளாக இருந்த நாடுகளை எல்லாம், அவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் கியூபாவையும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் கற்றுக் கொண்டார்கள். அடிமைகள் வேறெப்படி தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவார்கள்?

இந்த மாற்றம், 2009 க்குப் பின்னர் (ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையால்) ஏற்பட்டது என்பது ஒரு பொய் பித்தலாட்டம். அப்படியானால், அவர்கள் அமெரிக்காவை தான் முதலில் எதிர்த்திருக்க வேண்டும். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, "புலிகள் பேச்ச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எச்சரித்திருந்தார். முள்ளிவாய்க்கால் சென்றால் அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று ஏமாற்றியதால், சிறு துண்டு நிலத்திற்குள் அகப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்கள் கனரக ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டனர். 

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத மாதிரி, அமெரிக்க அடிவருடிகள் தமிழினப் படுகொலையை சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களது எஜமானான அமெரிக்க அரசும், சிறிலங்கா அரசும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்தின என்பதை மூடி மறைப்பார்கள். அப்படியான பாசாங்குக் காரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஸ்ட்ரோவின் மரணத்தில் தமது அரசியலை திணிக்கிறார்கள்.

த‌மிழ் ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் பிட‌ல் காஸ்ட்ரோவின் ம‌றைவுக்கு அஞ்ச‌லி செலுத்துவ‌து, ஏகாதிப‌த்திய‌ அடிவ‌ருடிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்துகின்ற‌து. அத‌னால், "த‌மிழ‌ர் ந‌ல‌ன்" என்ற‌ போர்வையில் காஸ்ட்ரோ எதிர்ப்பு பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர். டால‌ர்க‌ள் பேசுகின்ற‌ன‌.

ப‌ழைய‌ குருடி க‌த‌வைத் திற‌டி க‌தையாக‌, திரும்ப‌வும் அதே ஐ.நா. தீர்மான‌ நாட‌க‌த்தை அர‌ங்கேற்றுகிறார்க‌ள். வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ அமெரிக்காவை க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ளாம். ஆனால் இன‌ப்ப‌டுகொலையாளி கொண்டு வ‌ந்த‌ ஐ.நா. தீர்மான‌த்தை எதிர்த்த‌து கியூபாவின் மாபெரும் "த‌மிழின‌த் துரோக‌ம்" என்கிறார்க‌ள். இர‌ட்டைவேட‌ம் போடுகிறார்கள்.

இதே போலித் தமிழ்த் தேசிய‌வாதிக‌ள், மாக்கிர‌ட் தாட்ச‌ர் கால‌மான‌ போது க‌ண்ணீர் வ‌டித்தார்க‌ள். யார் இந்த‌ மார்க்கிர‌ட் தாட்ச‌ர்? ஜே.ஆர். ஆட்சிக் கால‌த்தில் புலிக‌ளை அழிப்ப‌த‌ற்கு பிரிட்டிஷ் SAS கூலிப்ப‌டையை அனுப்பிய‌வ‌ர்! அவ‌ர் த‌மிழ் ம‌க்க‌ளின் ந‌ண்ப‌ராம். ஆனால் ஒரு தோட்டா கூட‌ அனுப்பாத‌ பிட‌ல் காஸ்ட்ரோ த‌மிழ‌ரின் எதிரியாம்.

அமெரிக்காவினால் விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் கைக்கூலிகளின், பிடல் காஸ்ட்ரோ பற்றிய பிதற்றல் இது: //பிடல் காஸ்ட்ரோ ஈழத்தில் தமிழினத்தை அழித்து முடித்த சிங்களத்தைப் பாராட்ட வேண்டும் என்றார்!//

தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு, எவனும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வர மாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்லப் படும் பொய் அது.

இலங்கைப் பிரச்சினை பற்றி பிடல்காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் ஏதாவது கருத்து தெரிவித்து இருக்கிறாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? 15 வருடங்களுக்கு முன்னரே, கடும் சுகயீனம் காரணமாக காஸ்ட்ரோ அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். அமெரிக்க கைக்கூலிகள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் கடந்த ஏழு வருடங்களுக்குள் நடந்தவை. கியூப அரசுப் பிரதிநிதிகளின் கூற்றுக்களை காஸ்ட்ரோவின் கூற்றாக திரிப்பதில் இருந்தே பொய் அம்பலமாகத் தொடங்கி விடுகிறது.

முதலில் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கு பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் தோற்றம் பெற்றதும், அதற்கு கியூபா அடிபணிந்து சென்றதும் வரலாறு. தனது தேசத்தின் ஒரு பகுதியில் இருக்கும் குவாந்தனமோ தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு தைரியமில்லாத கியூபாவிடம், ஏன் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்று கேட்பது மடத்தனமானது.

2001 ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்திருந்தது. அதற்குப் பிறகு உலகில் எல்லா நாடுகளும் தமக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிக் கொண்டன. இல்லாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கும் அச்சம் இருந்தது. (உண்மையிலேயே சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.)

சூடான் போன்ற பல நாடுகள் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கின. அவ்வாறான சூழ்நிலையில் "ஏன் கியூபா புலிகளை ஆதரிக்கவில்லை?" என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமானது. கியூபா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. ஏனென்று கேட்டால், அது தான் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் இல்லை. தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.

அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தன. தாம் வெளியிட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை உலகில் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தின. ஆகையினால், கியூபாவும் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்டது. அதற்கான காரணம் மிகவும் தெளிவானது.

அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றை அறிவித்திருந்தது. அப்படியான சூழ்நிலையில் தானும் அதற்கு ஆதரவளிப்பதாக சொல்வது ஒரு இராஜதந்திர நடவடிக்கை. ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளே அதற்கு ஆதரவளித்தன. ஐ.நா. மன்றத்தில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

ஒரு பேச்சுக்கு, கியூபா புலிகளை (அல்லது அது போன்ற ஆயுதபாணி இயக்கத்தை) மறைமுகமாகவேனும் ஆதரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? கியூபா பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று அமெரிக்கா அதை ஆதாரமாகக் காட்டும். கியூபா மீது படையெடுப்பதற்கு நாள் குறிக்கப் படும். இவ்வாறு தான் அமெரிக்கா பல நாடுகளை அடிபணிய வைத்திருந்தது. அதனால், பனிப்போருக்கு பின்னரான உலகில் எந்த நாடும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் கீழ் புலிகளை அழிப்பதற்கு கியூபா மட்டும் ஆதரிக்கவில்லை, அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளும் அதே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. எதற்காக கியூபாவை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டும்? தமிழினத்தை அழித்ததற்கு பிடல்காஸ்ட்ரோ நன்றி தெரிவித்தாராம்! எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது? ஆதாரம் எங்கே?

இவர்களது லாஜிக் என்னவென்றால்: "புலிகளை அழிப்பது தமிழ் மக்களுக்கு அழிப்பதற்கு சமமானது. ஆகவே கியூபா தமிழர்களுக்கு எதிரானது." அதாவது, "காகம் கருப்பு நிறம், கந்தசாமி கருப்பு நிறம், ஆகவே கந்தசாமி ஒரு காகம்!" இது தான் இவர்களது முட்டாள்தனமான லாஜிக். இப்படி திரித்து விட்டு, "கியூபா தமிழர்களை அழிக்க நினைத்தது" என்று சுற்றும் ரீல்கள் இருக்கிறதே! அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு எல்லாவற்றையும் மிஞ்சி விட்டது.

இன்று சிரியாவில், ஐ.எஸ். (ISIS) இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று கியூபா உட்பட எல்லா உலக நாடுகளும் ஒத்து நிற்கின்றன. அதை "முஸ்லிம்களை அழிக்க துணை நின்றதாக" சொல்வீர்களா? ISIS எதிர்ப்பு நடவடிக்கை, உங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மத அழிப்பு ஆகாதா? உண்மையிலேயே, அது தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் லாஜிக். 

இந்த இடத்தில் ஓர் உண்மையை கூற வேண்டும். அமெரிக்காவில், தொண்ணூறுகளின் இறுதியில், விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அந்தத் தடையானது புலிகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்தது. அதனால், புலிகள் இயக்கம் பெருமளவு பணம் செலவளித்து தடையை நீக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

அதற்காக, அமெரிக்காவில் உள்ள பிரபல சட்டத்தரணியான ராம்சி கிளார்க் என்பவரை நியமித்திருந்தனர். புலிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு அவர் தலைமை தாங்கினார். (LTTE takes battle to the US courts) யார் இந்த ராம்சி கிளார்க்? ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அது மட்டுமல்ல, ஒரு தீவிரமான காஸ்ட்ரோ ஆதரவாளர்! அவர் இன்றைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசில் (TGTE) அங்கம் வகிக்கிறார்!! (Former US Attorney General Joins LTTE Senate)

ஏன் அன்று புலிகள் இன்னொரு வழக்கறிஞரை, குறிப்பாக ஒரு "காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை" நியமித்திருக்கலாமே? அது முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்காவில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு வழக்கறிஞர்கள் அனைவரும், புலிகள் மீதான அரசின் தடையை ஆதரித்தவர்கள் தான். அதனால், புலிகள் ஒரு இடதுசாரி வழக்கறிஞரை தேடிப் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.



அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ராம்சி கிளார்க் International Action Center (http://iacenter.org/) என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். அவரது அமைப்பு, நீண்ட காலமாக கியூபா மீதான பொருளாதார தடையை எடுக்குமாறு போராடிக் கொண்டிருந்தது. கியூபாவுக்கு ஆதரவான பல வழக்குகளில் ராம்சி கிளார்க் வாதாடியிருந்தார். அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான ஐந்து கியூபர்கள் தொடர்பான வழக்கை குறிப்பிடலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு தான், புலிகள் தமக்காக வாதாடுமாறு அவரை நியமித்திருந்தனர்.

இன்று சிலர் "புலி ஆதரவாளர்" என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, "கியூபாவும் காஸ்ட்ரோவும் தமிழினத்திற்கு எதிரானவர்கள்" என்ற விஷமத் தனமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், சில வலதுசாரி ஊடகவியலாளர்களும் இந்த எதிர்ப்பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் அமெரிக்காவால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஏ. மட்டுமல்ல, சோரோஸ் பவுண்டேஷன், யு.எஸ். எயிட் போன்ற பல நிறுவனங்கள் இதற்காகவே இலங்கையில் இயங்கி வருகின்றன. ஏகாதிபத்திய அடிவருடிகளை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன.   ஈழப்போர் முடிந்து விட்ட பின்னர் பிணங்களை கொத்துவதற்கு அமெரிக்க கழுகுகள் பறந்து வருகின்றன.

Tuesday, April 28, 2015

சோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் தம்பி!




கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. 
தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.


"உன்னால் முடியும் தம்பி!"

 ஒரு நாட்டில், சோஷலிசத்தால் மட்டுமே, எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் என்பது, மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வரும் ஏவோ மொராலேஸ்சின் பொலிவியாவில் எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டு விட்டதாக UNESCO அறிவித்துள்ளது. UNESCO அளவுகோலின் படி, ஒரு நாட்டில் எழுத்தறிவற்றவர்கள் விகிதாசாரம் 4% க்கும் கீழே இருக்க வேண்டும்.

எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக கியூபா தயாரித்த விசேட கல்வித் திட்டமான "Yo, sí puedo" (என்னால் முடியும்) இதற்கு பெரிதும் உதவியுள்ளதாக UNESCO புகழாரம் சூட்டியுள்ளது. கியூபா ஒவ்வொரு வருடமும் கல்விக்க்காக பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதியை ஒதுக்கி வருவது தெரிந்ததே.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோஷலிச கொள்கையை பின்பற்றும், கியூபா, வெனிசுவேலாவை, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சோஷலிசத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களைக் கொண்ட எக்குவடோர், உருகுவே, ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளிலும் கியூபாவின் "Yo, sí puedo" கல்வித்திட்டம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. வெகுவிரைவில் அந்த நாடுகளும் UNESCO பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Tuesday, April 21, 2015

சுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி


கியூபாவில் பொதுத் தேர்தல்கள் நடப்பதே வெளியில் பலருக்குத் தெரியாது. அது சரி, கியூபா ஒரு "சர்வாதிகார நாடு" என்றல்லவா,  மேற்குலக எஜமானர்கள் எமக்குப் போதித்தார்கள்? இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும்? அதிலும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் போட்டியிடுவதாவது. காதிலே பூச் சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 

நம்பினால் நம்புங்கள், 19 ஏப்ரல் 2015 நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பொதுத் தேர்தலில், இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள், அமெரிக்காவிலும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள்.

இடது: சாவியானோ, வலது: லோபெஸ் 
ஹில்டபிராண்டோ சாவியானோ (Hildebrando Chaviano, வயது 65), யூனியல் லோபெஸ் (Yuniel Lopez, வயது 26) ஆகியோரே அந்த இரு எதிக்கட்சி வேட்பாளர்கள் ஆவர். சாவியானோ ஹவானா நகரில் உள்ள Plaza de la Revolución தொகுதியில் போட்டியிட்டார். லோபெஸ் Arroyo Naranjo தொகுதியில் போட்டியிட்டார். கியூபாவில் 168 உள்ளூராட்சி சபைகள் (Asambleas Municipales del Poder Popular) உள்ளன. அவற்றிற்கு மொத்தம் 27.300 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் செயற்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி சார்பற்ற தனி நபர்களும் போட்டியிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பார்கள்.

வேட்பாளர்கள் யாரும் கூட்டம் கூட்டி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அதைத் தவிர வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தனக்கு ஓட்டுப் போடுமாறு கேட்க முடியும். வாக்குரிமை பெற்றுள்ள எட்டு மில்லியன் வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் தவறாமல் தேர்தல் அன்று தமது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவார்கள்.

சாவியானோ முன்னொரு காலத்தில், உள்துறை அமைச்சில் வேலை செய்து வந்தார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்த படியால் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அவர் இன்று வரையில், பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளை குறை கூறியும் பேசி வருகிறார். இதனால், அவரைப் பற்றிய துண்டுப் பிரசுரத்தில், "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க தூதரகத்தில் நடந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தன.

சாவியானோ அதனை சாதகமாக எடுத்துக் கொண்டார். அதாவது, காஸ்ட்ரோ அரசின் மேல் வெறுப்புற்று இருக்கும் மக்கள், தனது அமெரிக்க தொடர்பை நன்மையாகக் கருதி ஓட்டுப் போடுவார்கள் என்று நம்பினார்.  லோபெஸ் பற்றிய பிரசுரத்திலும் அதே மாதிரியான வசனங்கள் இருந்துள்ளன. "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க நிதி பெற்றுக் கொள்பவர்" என்றெழுதி இருந்தன.

லோபெஸ், தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை (குழந்தைகள் பராமரிப்பு நிலையம்) நடத்தி வருகிறார். அதே நேரம், அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன் அங்கத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் கியூபாவும் கையெழுத்து இட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தனது கட்சியின் இருப்பை நியாயப் படுத்தி வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ள படியால், பல வெளிநாட்டு ஊடகங்களும் தேர்தலை கண்காணிக்க வந்திருந்தன. இரண்டு காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், அந்த தகவல் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து தெரிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், மேற்கத்திய கண்காணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

சாவியானோ போட்டியிட்ட தொகுதியில், நான்கு வேட்பாளர்களில் கடைசியாக வந்தார். (138 votos para Chaviano; http://www.14ymedio.com/nacional/votos-Chaviano_0_1764423541.html) லோபெஸ் கொஞ்சம் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஆயினும், அரசு ஆதரவு வேட்பாளருக்கு அடுத்ததாக இரண்டாம் இடமே கிடைத்தது. தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக யாரும் குற்றஞ் சாட்டவில்லை. ஏனெனில், தேர்தல் நடந்த இடத்தில் மட்டுமல்ல, வாக்குகள் எண்ணும் இடத்திலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர். "வாக்கெடுப்பில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நேர்மையான வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சாவியானோ தெரிவித்தார்.

லோபெஸ் போட்டியிட்ட Arroyo Naranjo தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் "புரட்சி வாழ்க!", "பிடல் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு அருகிலேயே, லோபெஸ் ஆதரவாளர்களும் "லோபெஸ் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி குழுவாக சென்றுள்ளனர். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 

"எதற்காக நீங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை?" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் "அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்!" என்று கூறினார்கள்.  

மேலதிக தகவல்களுக்கு:
 14ymedio; 
http://www.14ymedio.com/
Two Cuban Opposition Candidates Lose Election Bids;
http://www.voanews.com/content/two-cuban-opposition-candidates-lose-election-bids/2726321.html


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை
கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

Sunday, April 12, 2015

எச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது "கம்யூனிச மூளைச்சலவை" ஆகலாம்!


"சோவியத் யூனியனில், முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள், மாணவர்கள் மீதும் கம்யூனிச போதனைகளை திணிப்பார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில், "தீமையின் வடிவமான" சோவியத் யூனியனில், "கொடுங்கோல் சர்வாதிகாரிகளினால்" சிறுவர்கள் "மூளைச்சலவை செய்யப் பட்டதை" காட்டும் சுவரொட்டிகள் இவை. "மூத்தோருக்கு உதவி செய்! வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்! பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!" என்றெல்லாம் சிறுவர் நன்னடத்தை போதிப்பது கம்யூனிச கொள்கைகள் ஆகலாம்! 
எச்சரிக்கை: உங்களது பிள்ளைகளை நல்வழிப் படுத்துவது கூட "கம்யூனிச சர்வாதிகாரம்" ஆகலாம்!

வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்!
பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!
வயதில் மூத்தோருக்கு உதவி செய்!


*******

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஐந்து மில்லியன் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவு குறைபாடு காரணமாக எடை குறைவான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 146 மில்லியன் உள்ளன. ஆனால், "கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடப்பதாக" மேட்டுக்குடி அறிவுஜீவிகளால் வெறுக்கப்படும் கியூபாவில் மாத்திரம், சத்துணவு குறைபாடு கொண்ட குழந்தைகள் எதுவும் இல்லை. ஒரு சோஷலிச நாட்டில் எந்தக் குழந்தையும் பசியால் இறப்பதில்லை. சமீபத்திய UNICEF அறிக்கையில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஐ.நா. வெளியிட்ட Progress for Children, A Report Card on Nutrition என்ற UNICEF அறிக்கையை வாசிப்பதற்கு:
http://www.unicef.org/publications/files/Progress_for_Children_-_No._4.pdf

********

ருமேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அதன் தலைநகர் புகாரஸ்ட் பற்றிய ஆவணப்படக் காட்சிகள். மேற்குலகில் பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக, சந்தையில் உணவுப்பொருட்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். உள்ளூர் மக்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப் போல, சோஷலிச ருமேனிய மக்களும் தமது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக களிப்பதைக் காணலாம். 

இது ருமேனிய கம்யூனிச அரசின் பிரச்சார வீடியோ அல்ல. மேற்கத்திய படப்பிடிப்பாளர்களினால் எடுக்கப்பட்டது.
மன்னிக்கவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஏமாற்றமடைய வைத்தமைக்காக வருந்துகிறேன்.

 

Saturday, March 07, 2015

உலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்


வெனிசுவேலாவில், உழைக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட "சோஷலிச நகரம்". இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கக் கூடியதாக, திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றது. இப்படியான நகரம், தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரியது.

2.600 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 3456 மாடிக் கட்டிடங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இன்னும் 40 000 மாடிக் கட்டிடங்கள் கட்டப் படவுள்ளன. ஒவ்வொரு தொகுதியும், நான்கு சிறுவர் பாடசாலைகள், நான்கு இடைத்தர பாடசாலைகள், ஒரு நூலகம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு விளையாட்டு மைதானம் என்பனவற்றை கொண்டதாக இருக்கும்.

இந்த மிகப்பெரிய வீட்டுத் திட்டம், Valencia நகரில், US $ 590.000.000 செலவில் ஈரானின் உதவியுடன் கட்டப் படுகின்றது. வெனிசுவேலாவில் இதுவே முதலாவது சோஷலிச வீட்டுத் திட்டம் அல்ல. 2006 ம் ஆண்டு, தலைநகர் கராகசில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இது போன்ற நவீன குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

 *******

 உலகவங்கியின் அறிக்கையில் இருந்து: "லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும், மிகவும் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக கியூபா உள்ளது. கியூப மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்கும் வசதி கிடைக்கிறது."



உலகிலேயே அதிகளவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் பத்து நாடுகளில் கியூபாவும் அடங்குகின்றது. அமெரிக்கக் கண்டத்தில் இரண்டாம் இடம், உலகளவில் நான்காம் இடத்தில் கியூபா உள்ளது. Inter-Parliamentary Union (IPU) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


இவை கியூபாவில் தேசியப் பேரவை எனும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுவரொட்டிகள்.

கியூபாவில், 612 பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் மேலதிக மாகாண அதிகார சபைகளுக்கான 15 பிரதிநிதிகளையும், 8.6 மில்லியன் வாக்காளர்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்வார்கள்.

தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை. ஆனால், வேட்பாளர்கள் தனித் தனியாக போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், பெருமளவு கட்சி சார்பற்ற சுயேச்சை உறுப்பினர்களும், மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுகின்றனர்.

ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், பொது இடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அந்த சுவரொட்டிகளில், வேட்பாளர்கள் தமது வழமையான உறுதிமொழிகளையும், திட்டங்களையும் குறிப்பிட்டு எழுதலாம். அவற்றை பார்வையிடும் வாக்காளர்கள், தேர்தலில் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகளை போட்டு தெரிவு செய்வார்கள்.

*******

சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசம் எட்டிய சாதனைகள். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.