Monday, March 01, 2021

ஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்

த‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு.

 "சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா?" என்றெல்லாம் புத்திசாலித்த‌ன‌மாக‌ கேள்வி கேட்க‌லாம். ஆனால், ந‌டைமுறை வாழ்வில், எத்த‌னை பேர‌ழிவுக‌ள் வ‌ந்தாலும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் சாதிவாரியாக‌த் தான் பிரிந்திருப்பார்க‌ள்.

கொழும்பில், இன‌க்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில், அக‌திக‌ளான‌ கொழும்புத் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌ முகாம்க‌ளில் சாதி வாரியாக‌ பிரிந்திருந்த‌னர். (1983 கலவரத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமில் சாதி பார்த்த சம்பவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.) ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், யாழ் குடாநாட்டில் உள்ள‌ வ‌லிகாம‌ம் பிர‌தேச‌த்தில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து தென்ம‌ராட்சி சென்ற‌ அக‌திக‌ள் அங்கும் சாதிவாரியாக‌ பிரிந்து தான் த‌ங்கி இருந்த‌ன‌ர். இன்று போர் முடிந்த‌ பின்ன‌ரும் யாழ் குடாநாட்டில் மூட‌ப் ப‌டாத‌ முகாம் ஒன்றில் கணிச‌மான‌ அள‌வு அக‌திக‌ள் வாழ்வ‌த‌ற்கும் சாதி தான் கார‌ண‌ம்.

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன். தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366) 


இதைக் கண்டதும் சிலர் இப்படி ஒரு சாட்டுச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்: //கமால் குணரட்ன ஒரு சிங்கள ராணுவத்தினை சேர்ந்த ஒரு சிங்களன் , ஆகவே இது தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்...// 

யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் நிலவும் மோசமான சாதிப் பாகுபாடு உலகறிந்த விடயம். அதை கமால் குணரட்ன சொல்லித்தான் எமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாண சமூகம் இப்படித்தான் இருந்து வருகின்றது. சாதிவெறியன் ஆறுமுகநாவலருக்கு யாழ் நகரில் சிலை வைத்திருப்பதே ஒரு சிறந்த ஆதாரம்.

மேலும், இந்த நூல் வெளிவந்த காலத்தில்(2016), "புலிகளின் தலைவர் பிரபாகரனை மெச்சும் தகவல்கள்" இருந்ததாக சொல்லி, தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் நந்திக்கடல் பாதை நூலுக்கு புகழாரம் சூட்டின. அன்று அவை பரப்பிய தகவல் இது:
//விடுதலைப் புலிகள் இயக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் எதிர்பார்க்கப்படாத அதிகபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது....இராணுவத்தினருக்கு மூன்று தசாப்தங்களாக சவால் மிக்க எதிரியாக விளங்கியிருந்த போதிலும் பிரபாகரனின் பண்புகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நேர்மையாகவே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.// (பார்க்க: எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்

அ.யேசுராசா போன்ற‌ மெத்த‌ப் ப‌டித்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் கூட‌ இவ்வாறு அப‌த்த‌மாக‌ப் பேசுகின்ற‌ன‌ர்: //ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்குள் சாதிப் பிரிவினை, வ‌ர்க்க‌ப் பிரிவினை உண்டாக்குவ‌து சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி!//

மூளை இருந்தால் யோசித்துப் பார்க்க‌ வேண்டும். எவ‌னாவ‌து க‌ண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு க‌ல்லெறிவானா?

சிங்க‌ள‌ ச‌மூக‌த்திற்குள் சாதிய‌/வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் இல்லையா? அந்த‌ விட‌ய‌ம் இன்னும் தெரியாது என்றால், உங்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லை என்று அர்த்த‌ம்.

ஒரு பேச்சுக்கு, இது சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி என்றே வைத்துக் கொள்வோம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் செவ்வாய்க் கிர‌க‌த்தில் வாழ‌வில்லை. அவ‌ர்க‌ளும் இல‌ங்கை என்ற‌ சிறிய‌ தீவுக்குள் வாழ்கிறார்க‌ள்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் சாதிக‌ளாக‌, வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ பிரிந்து அடிப‌ட்டால், அது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் எதிரொலிக்காதா? அங்கேயும் சாதிய‌, வ‌ர்க்க‌ பிரிவினைக‌ள் உண்டாகாதா?

சாதிய‌, வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் தீவிர‌ம‌டைந்தால், இல‌ங்கை முழுவ‌தும் க‌ல‌க‌ங்க‌ள் வெடித்து அர‌சு க‌விழும் நிலைக்கு செல்லாதா? சிறில‌ங்கா அர‌சைக் க‌விழ்ப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா?

"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் த‌ம‌க்குள் முர‌ண்பாடுக‌ளை கொண்டிராத‌ இன‌ங்கள்" என்று நினைத்துக் கொள்வ‌த‌ற்குப் பெய‌ர் இன‌வாத‌ம். அது எந்த‌க் கால‌த்திலும் அர‌சுக்கு எதிரான‌து அல்ல‌. மாறாக‌, அர‌சைப் பாதுகாக்கிற‌து.

No comments: