Showing posts with label கேரளா. Show all posts
Showing posts with label கேரளா. Show all posts

Sunday, November 24, 2019

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.

 இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.

ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.

வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.

மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.

நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.

உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.

நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.

நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.

Friday, July 04, 2014

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு


யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். 

யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக்கவில்லை. அதே நேரம், அவர்களுடன் கொள்கை உடன்பாடு கண்ட தமிழகத்து தமிழ் இன உணர்வாளர்கள், மலையாளிகளை பகைவர்களாக கருதுகிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது என்ற பிரச்சினையை, நாங்கள் தமிழ் தேசியவாதிகளிடமே விட்டு விடுவோம்.

யாழ்ப்பாணத் தமிழரின் கேரளா உரிமை கோரல், முழுக்க முழுக்க கற்பனையானது என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும், தங்களை மலையாள வம்சாவளியினர் என்று அடையாள படுத்திக் கொள்ளும் குடும்பங்கள் இன்றைக்கும் வாழ்கின்றன. கொழும்பு, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மலையாள வம்சாவளியினர் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

காலனிய காலத்தில், மலையாளிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையில், அரசு ஆவணங்களில் மலையாளிகள் என்று ஒரு இனம் தனியாக குறிப்பிடப் பட்டு வந்தது. பிற்காலத்தில் பல மலையாளிகள் தங்களை, சிங்களவர் என்றோ அல்லது, தமிழர் என்றோ, வாழும் இடத்தைப் பொறுத்து அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமது "தாய் மொழியையும்" பேச மறந்து விட்டார்கள்.

யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மலையாளிகள், டச்சு காலனிய காலத்தில் குடியேறியதாக சில வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். யாழ்ப்பாண, கேரளாவுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரமாக புகையிலை விவசாயம் உள்ளது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி வலிகாமம் என்று அழைக்கப் படுகின்றது. இருபாலை, கோப்பாய், அச்சுவேலி, மானிப்பாய், போன்ற வலிகாமப் பகுதி கிராமங்களில், இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புகையிலைத் தோட்டங்கள் தான் காணப்படும்.

வலிகாமம், யாழ் குடாநாடு முழுவதிலும் மக்கட்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். புகையிலை விவசாயம் காரணமாக பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சமூகங்களில், செல்வந்தர்களின் விகிதாசாரம் வலிகாமம் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலும் புகையிலைச் செய்கையினால் கிடைத்த வருமானம் தான், பலரின் செல்வச் செழிப்புக்கு காரணம்.

ஐம்பதுகளில், இலங்கை முழுவதும் கூட்டுறவு உற்பத்தி முறை ஊக்குவிக்கப் பட்டது. அப்போது, யாழ் புகையிலை செய்கையாளர்கள் தமக்குள் கூடி சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். அதன் பெயர் "யாழ்ப்பாணம் - மலையாள புகையிலை விற்பனைச் சங்கம்" (ஆதாரம்: கூட்டுறவு இயக்கத்தின் 1959 ம் ஆண்டு நிர்வாக அறிக்கை. P. E. வீரமன்) அந்த சங்கத்தினர் பல தசாப்தங்களாக, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

அனேகமாக, அறுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசு, ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் தான், யாழ்ப்பாண - கேரளா தொடர்பு அறுந்து விட்டிருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தடைகள் புகையிலை விவசாய உற்பத்தியை பாதிக்கவில்லை. யாழ் விவசாயிகள், தென்னிலங்கைக்கு புகையிலை ஏற்றுமதி செய்து பெருமளவு இலாபம் சம்பாதித்தார்கள்.

1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த தாராளவாத பொருளாதாரம், யாழ் குடாநாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளான புகையிலையின் உற்பத்தி வீழ்ச்சி அடைய வழிவகுத்தது. அதே காலகட்டத்தில் ஈழப்போரும் ஆரம்பித்ததால், தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. புகையிலை விவசாயிகளின் பிள்ளைகள், பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும், அந்த அரசியல் - பொருளாதார மாற்றங்கள் வழிவகுத்தன.

புகையிலை இலங்கை மண்ணுக்கு உரிய பயிர் அல்ல. அது ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. தேயிலை, கோப்பி, ரப்பர் போன்று ஐரோப்பியரால் கொண்டு வரப் பட்ட பிற பயிர்கள், பெருந்தோட்டங்களாக செய்யப் பட்ட அளவிற்கு புகையிலைச் செய்கை இருக்கவில்லை. இருப்பினும், யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில், ஏற்றுமதியை கருத்தில் கொண்டே புகையிலை பெருமளவில் பயிரிடப் பட்டு வந்தது. 

டச்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்திய வெள்ளாள சாதியை சேர்ந்த பெருமளவு விவசாயிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவான ஆய்வு அவசியம். இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய காலத்தில், வரலாற்று ஆய்வுகள் திரிக்கப் படுவதற்கும், மறைக்கப் படுவதற்கும் இடமுண்டு. 

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: