Showing posts with label போலந்து. Show all posts
Showing posts with label போலந்து. Show all posts

Saturday, May 25, 2019

"ஸ்டாலின் விழுங்கிய போலந்து" - நடந்தது என்ன?

இன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் "போலந்து படுகொலைகள்" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட "கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான "இரகசிய ஒப்பந்தம்" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.

ஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம்? அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.

1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.

இப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.

அந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.

1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.

சோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.

முன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை. 

ஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

மேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர். 

அது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இராணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர். 

எஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.

22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் "ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)

ரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. "பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது..." என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.

இன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 

அத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, "ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.

Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

Tuesday, July 22, 2014

சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு காரணமான முதலாளித்துவ சீர்திருத்தங்கள்


கிழக்கு ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன்முதலாக போலந்து தான் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறியது. அப்போது பெர்லின் மதிலும், சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி அடையவில்லை. 

2 ம் உலகப் போரின் முடிவில், போலந்து சோஷலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டாலும், சோஷலிச பொருளாதாரம் முழுமையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. தேவாலயங்கள் மூடப் படவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

போலந்தில், எழுபதுகளிலேயே மேற்கத்திய மூலதனம் நுளைவதற்கு அனுமதிக்கப் பட்டது. உலகவங்கி, IMF கடனுதவியை பெற்றுக் கொண்டது. மேற்கத்திய முதலாளிகளின் ஆலோசனைப் படி பொருளாதார சீர்திருத்தங்களை புகுத்தியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்தது. இறுதியில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, போலி சோஷலிச அரசாங்கம் கவிழ்ந்தது. 

முன்னாள் "சோஷலிச" நாடான போலந்திற்குள் நடந்த முதலாளித்துவ மீட்சி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள், அதனை "கம்யூனிசத்தின் தோல்வியாக" நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போலந்து வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

முதலாம் உலகப் போருக்கு முன்னர், சுமார் நூறாண்டுகள் போலந்து இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் பிரிக்கப் பட்டிருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போலந்து ஒரு மேற்கத்திய சார்பு நாடாகத் தெரியும். இன்று எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் போலந்து மக்கள் தான் அதிகளவு அமெரிக்கா சார்பானவர்களாக இருக்கின்றனர். 

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் மேற்கு நோக்கிய புலம்பெயர்வு ஒரு முக்கிய காரணம். எமது நாடுகளிலும், மேலைத்தேய பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற எண்ணம், பலரை மேற்குலக ஆதரவளர்களாக மாற்றி வைத்திருக்கிறது. போலந்திலும் அது தான் நிலைமை.

19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பிய கண்டத்தில் தேசிய அரசுகள் தோன்றின. நெப்போலியனின் போருக்கு பின்னர், பல தடவைகள் பலமான ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய எல்லைகளை வகுத்துள்ளன. அப்படியான தருணங்களில், போலந்து தனி நாடாகும் வாய்ப்புக் கிட்டும் என்று போலிஷ் தேசியவாதிகள் எதிர்பார்த்தார்கள். இறுதியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியது. 

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போலந்து பகுதி தான் முதலில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வென்றதும், லெனின் போலந்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்கினார். ஆயினும், போல்ஷெவிக் புரட்சியாளர்கள், வெள்ளை ரஷ்யர்கள், உக்ரைனியர்கள் வாழ்ந்த பகுதிகளை சோவியத் ஒன்றியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள்.

போலந்துக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த முதல் நாளில் இருந்து, அங்கே இராணுவ சர்வாதிகாரிகள் தான் ஆட்சி செய்தனர். இன்று மூன்றமுலக நாடுகளில் நடப்பதைப் போல, சதிப்புரட்சிகள் நடப்பதும், புதிய இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதுமாக சில வருடங்கள் உருண்டோடின. முதலாம் உலகப் பொறுக்கும், இரண்டாம் உலகப் பொறுக்கும் இடைப்பட்ட இருபது வருட காலம் மட்டுமே, பல கட்சி ஜனநாயகம் நிலவியது. 

அப்போது ஒரு போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியும் இயங்கியது. ஆனால், நாஸி ஆக்கிரமிப்புடன் அது காணாமல் போய் விட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், செம்படைகள் விடுதலை செய்த போலந்தில் உருவான சோஷலிச அரசின் அடித்தளம் மொஸ்கோவில் இடப் பட்டது. அதாவது, மொஸ்கோவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த போலிஷ் கம்யூனிஸ்ட் அகதிகள் மத்தியில் இருந்து புதிதாக உருவாக்கப் பட்டிருந்தது.

ஆரம்பத்தில், கொமுல்கா தலைமையிலான பிரிவினர், “தேசிய கம்யூனிசம்” என்ற புதிய கொள்கையின் கீழ் ஆண்டனர். அதாவது, சோவியத் ஒன்றியம் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டாமல், சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை கொண்டிருந்தது. அப்போதும் சோவியத் படைகள் போலந்தில் இருந்தன. வார்சோ ஒப்பந்த கூட்டமைப்பு உருவாகி இருந்தது. ஆயினும், சோவியத் ஒன்றியம் போலந்தின் உள் விவகாரங்களில் பெரிதாக தலையிடவில்லை. இருப்பினும், ஸ்டாலினின் கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு பிரிவினர், கொமுல்காவை வீட்டுக் காவலில் வைத்து விட்டு சில வருட காலம் ஆண்டனர்.

போலந்து, வெளியில் இருப்பவர்கள் நினைத்தது மாதிரி, ஒரு முழுமையான சோஷலிச நாடாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்தது மாதிரி, கூட்டுத்துவ பண்ணை முறை (Collectivization) எங்கேயும் நடைமுறைப் படுத்தப் படவில்லை. விவசாயம் முழுக்க முழுக்க தனியாரின் கைகளில் இருந்தது. அதாவது, விவசாய நிலங்கள், பண்ணைகள் யாவும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த சிறு விவசாயிகளின் சொந்த சொத்துக்களாக தொடர்ந்தும் இருந்து வந்தன.

சோஷலிச போலந்தில், பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மட்டுமே தேசிய மயப் படுத்தப் பட்டன. ஆரம்பத்தில் அது ஜெர்மனியருக்கு எதிரான நடவடிக்கை என்று நியாயப் படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துக்கு தாரை வார்க்கப் பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே. அங்கு வாழ்ந்த ஜெர்மனியர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் யாவும் ஜெர்மன் முதலாளிகள் வசம் இருந்த படியால், அவை அனைத்தையும் போலந்து அரசு எடுத்துக் கொண்டது. இருப்பினும், பிற்காலத்தில் படிப் படியாக, போலந்து முழுவதும் இருந்த தொழில் நிறுவனங்கள் அத்தனையும் அரசுடமை ஆக்கப் பட்டன.

கத்தோலிக்க மத நிறுவனம், எப்போதும் அரசுக்குப் போட்டியாகவே இருந்து வந்தது. இயல்பாகவே வலதுசாரி அரசியல் சார்பான கத்தோலிக்க குருமாரை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. போலந்து சோஷலிச நாடாக இருந்த நாற்பது வருட காலங்களில் ஒரு தடவையாவது ஒரு தேவாலயம் கூட மூடப் படவில்லை. ஆயினும், அரசு இடைக்கிடையே நாஸ்திக பிரச்சாரம் செய்பவர்களை தூண்டி விட்டது. “முற்போக்கு கத்தோலிக்கர்கள்” என்றொரு சமூகப் பிரிவை உருவாக்கி விட்டது. அந்த முற்போக்காளர்கள் நவ நாகரிகத்தை பின்பற்றிய இளைஞர் கூட்டம் தான். (இன்று சர்வ சாதாரணமாக கருதப் படும் ஐரோப்பிய நாகரிகம், அன்றைக்கு பெரும் எதிர்ப்பின் மத்தியில் திணிக்கப் பட்டது.)

அறுபதுகளில், எழுபதுகளில் ஏற்பட்ட வசதி வாய்ப்புகள் காரணமாக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதன் பலனாகத் தான் மக்களையும், தேவாலயங்களையும் பிரிக்க முடிந்தது. அரசின் கொள்கைகளில் பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தமது மதகுருக்கள் சொல்வதைக் கேட்டார்கள். இன்று, சில முஸ்லிம் நாடுகளில், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களைக் கவரும் வகையில் பேசி வருவதைப் போன்று, அன்றைய கத்தோலிக்க மதத் தலைவர்கள் பேசி வந்தனர். உண்மையில், அன்றைய போலந்தில் இருந்த தேவாலயங்கள் எதிர்க் கருத்தாளர்களின் கூடாரங்களாக இருந்தன.

கத்தோலிக்க பாதிரிமார், மதப் பிரசங்கங்களை விட, அரசியல் பிரச்சாரம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். போலந்தின் தலைமை பிஷப், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போன்று நடந்து கொண்டார். அரசால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. போதாததற்கு, வத்திக்கானில் ஒரு போலந்துக்காரர் புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். ஜான் பால் என்ற அந்த போலிஷ் போப்பாண்டவர், இரண்டு தடவைகள் போலந்துக்கு விஜயம் செய்தார். இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில், இரட்டை அர்த்தம் வரும் வசனங்களை பேசி, சாடைமாடையாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அரசியல் பேசினார்.

கத்தோலிக்க திருச் சபையின் செல்வாக்கு, சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் மட்டுமே. குறிப்பாக அறிவுஜீவிகள் தேவாலயங்களை புகலிடமாகப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், இன்னொரு சக்தியும், அரசுக்கு எதிராக செயற்பட்டு வந்தது. துறைமுக நகரமான கிடான்ஸ்கில் தோன்றிய “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தான் அது. தொழிலாளர்களின் சொர்க்கமாக கருதப் படும் ஒரு சோஷலிச நாட்டில், தொழிற்சங்கம் அரசைக் கவிழ்த்தது என்பது முரண்நகையாக தெரியலாம். ஆனால், அப்படி ஒரு கிளர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் நினைவு படுத்துவதில்லை.

குறிப்பாக ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், பல முன்னாள் சோஷலிச நாடுகளில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. போலந்தில் அறுபதுகள், எழுபதுகளிலேயே முதலாளித்துவம் அனுமதிக்கப் பட்டிருந்தது! ஆமாம், முதலாளிகளின் அதிகாரம் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச அரசு, போலந்தில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சுதந்திரம் வழங்கியது. அதற்கு முதல், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிறைய கடன் பெற்றுக் கொண்டது. 

அவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்று, மேலைத்தேய முதலாளிகள் போலந்தில் முதலிட அனுமதி வழங்கியது. அது மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வழங்கிய மானியங்களை இரத்து செய்தது. அதனால், உணவுப் பொருட்களின் விலைகள் திடீரென நான்கு மடங்காக உயர்ந்தன. விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை. அதன் விளைவு? தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவ்வாறு தான் “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தோன்றியது.

போலந்து அரசால் “சொலிடாரிநொஸ்க்” கின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனெனில், முதலாளித்துவ சீர்திருத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் எதிர் விளைவு தான் தொழிற்சங்கப் போராட்டம். முன்னாள் இராணுவ ஜெனரலான ஜெருசெல்ஸ்கி திடீரென ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்.நகரத் தெருக்களில் இராணுவ கவச வாகனங்கள் ஓடின. எங்கு பார்த்தாலும் இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. அரச எதிர்ப்பாளர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

பிற்காலத்தில், அந்த சதிப்புரட்சியை ஜெருசெல்ஸ்கி பின்வருமாறு நியாயப் படுத்தினார். “அன்று ஒரு சதிப்புரட்சி நடந்திரா விட்டால், சோவியத் ஒன்றியம் படையெடுத்து வந்திருக்கும். அப்போது அதன் எதிர்விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும்….” ஆனால், சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் கிடைத்த அறிக்கைகளின் படி, அப்படி ஒரு “சோவியத் படையெடுப்பு” நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. அன்றைய போலிஷ் ஆளும் வர்க்கம், தனது அதிகாரத்தை தக்க வைக்க செய்த திட்டமாகவே அந்த சதிப்புரட்சி கருதப் படுகின்றது.

ஏனெனில், போலிஷ் அரசுக்கு எதிர்ப்பு பல இடங்களிலும் உருவாகி இருந்தது. கத்தோலிக்க சபை, அறிவுஜீவிகள், தொழிற்சங்கம் போன்ற வலதுசாரி சக்திகள் மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவு எதிர் அரசியல் செய்து கொண்டிருந்தது. அவர்கள் “நவ - ஸ்டாலினிஸ்டுகள்” என்று அழைக்கப் பட்டனர். அதாவது, முன்பிருந்த ஸ்டாலினின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான சோஷலிசம் என்று நம்பியவர்கள். அவர்களை ஓரம் கட்ட வேண்டிய தேவையும், ஜெருசெல்ஸ்கி போன்ற சதிப்புரட்சியாளர்களுக்கு இருந்தது.

இறுதியில், சோவியத் ஒன்றியத்தில் கோர்பசேவ் அதிகாரத்தை கைப்பற்றியதும், போலந்து திரிபுவாதிகள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேல் போலந்து வெளிப்படையாகவே முதலாளித்துவ - ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். முன்னாள் சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், போலந்தில் தான் முதன் முதலாக பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 

1989 ம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னராகவே, போலந்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. முன்பு சோஷலிச அரசாங்கத்தை நடத்திய திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுத் தேர்தலில் சமூக - ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் போட்டியிட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியான, இந்நாள் சமூக - ஜனநாயகக் கட்சி, இன்றைக்கும் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சில தடவைகள் தேர்தலில் வென்று ஆட்சியையும் பிடித்துள்ளது. ஆனால், உண்மையில் அதனை மேற்கு ஐரோப்பிய கட்சிகளுடன் தான் ஒப்பிட முடியும். உதாரணத்திற்கு, பிரிட்டனின் லேபர் கட்சி போன்றது.

இருப்பினும், முன்னாள் “கம்யூனிச ஆட்சியாளர்களுக்கும்”, முன்னாள் “எதிர்ப் புரட்சியாளர்களுக்கும்” இடையிலான பிளவு, அடுத்து வந்த இருபது வருடங்களுக்கும் தொடர்ந்து இருந்தது. அது இரண்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மை போலிஷ் மக்கள், தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவலைப் படுகிறார்கள்.

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, July 18, 2014

போலந்து சுய நிர்ணய உரிமையும், சோஷலிசப் புரட்சியும்


போலந்தின் வரலாறு, கி.பி. 10 நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்ட மன்னர்களுடன் தொடங்குகின்றது. அதற்கு முன்னர், ஆதி கால போலிஷ் நாகரிகம் தோன்றிய விட்சுலா நதிக் கரையில் ஸ்லாவிய இன மக்கள் வாழ்ந்தனர். ஸ்லாவியர்கள் ஓரிடத்தில் இருந்து பல்வேறு கிளைகளாக பிரிந்திருக்க வாய்ப்புண்டு. தெற்கு ஸ்லாவிய மொழிகளை பேசும் மக்கள் பிற்காலத்தில் யூகோஸ்லாவியர்கள் என்று அழைக்கப் பட்டனர். அதே மாதிரி கிழக்கே சென்றவர்கள் உக்ரைனியர்களாக அல்லது ரஷ்யர்களாக மாறியிருக்கலாம்.

ரோமர்களினால் ருதேனியர்கள் என்று அழைக்கப் பட்ட மக்கள், கீவ் ரஷ்யர்கள் என்று தெரிய வருகின்றது. இருப்பினும் போலந்து ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ருதேனியர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் தான், உக்ரைனியர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக இருந்த மக்கள், இன்று வெவ்வேறு மொழிக் குழுக்களாக பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பகைவர்களாக கருதுவதை கண் முன்னால் பார்க்கிறோம்.

பல நூறு வருடங்களாக, போலந்தும், லிதுவேனியாவும் இணைந்த ராஜ்ஜியம், வடக்கே பால்ட்டிக் கடலில் இருந்து, தெற்கே கருங்கடல் வரையிலான ஒரு பெரிய நிலப் பரப்பை ஆண்டு வந்தது. அந்த ராஜ்ஜியத்தில் பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்தனர். போலிஷ் அரச வம்சமும், லிதுவேனியா அரச வம்சமும் ஒன்றுகொன்று திருமண உறவுகளை வைத்துக் கொண்டு, உறவினர்களாக இருந்தார்கள். ஆயினும், இரண்டு அரச வம்சங்களும், தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை தனித் தனியாக நிர்வகித்து வந்தன.

ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் தாக்கங்கள் இன்று வரை உணரப் படுகின்றன. நீண்ட காலமாக, வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கவில்லை. அவர்கள் தமது புராதன மத நம்பிக்கைகளை பின்பற்றி வந்தனர். வத்திக்கானில் போப்பாண்டவரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப் பட்ட "தெய்த்தானிய படை" (Teutonic Order) ஜெர்மன் மொழி பேசும் வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறப்புப் படையணி ஆகும். 

தெய்த்தானிய படை, வட ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக ஒரு சிலுவைப் போரை நடத்தியது. போலந்து அரச வம்சத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், தமது ராஜ்ஜியத்தை பாதுகாத்துக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் லித்துவேனிய அரச வம்சத்தினரும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டனர்.

தற்போது எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்ட போதிலும், அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்தன. தெய்த்தானிய படையினர், இன்றைய போலந்தின் வட பகுதியையும், இன்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியிலும் தமது ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். அந்தப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த, பிற்காலத்தில் அழிந்து போன பிரோய்ஷிய இனத்தின் பெயரை, தெய்த்தானிய படையினர் தமது புதிய தேசத்திற்கு சூட்டினார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஜெர்மன் மொழி பேசினார்கள். ஆனால், அன்று அவர்களது பெயர் பிரோய்ஷியர்கள்.

பிற்காலத்தில் பிரோய்ஷிய (Prussia) சாம்ராஜ்யம், இன்று ஜெர்மனி இருக்கும் இடம் வரை விஸ்தரித்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், போலந்தின் வட பகுதியும், மேற்குப் பகுதியும் ஜெர்மனியின் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களாக இருந்து வந்தன. வடக்கே உள்ள துறைமுகப் பட்டினமான கிடான்ஸ்க், மேற்கே உள்ள தொழிற்துறை நகரமான பொஸ்னான் ஆகியன ஜெர்மனியர்களால் உருவாக்கப் பட்டவை. அங்கெல்லாம் பெருமளவு ஜெர்மானியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, போலந்திற்கு தெற்கே ஆஸ்திரியாவில் இன்னொரு பலமான சாம்ராஜ்யம் தோன்றியது. போலந்தின் தெற்குப் புற நகரமான கிராகோவ், இன்று உக்ரைனின் பகுதியாக உள்ள லிவிவ் ஆகியன ஆஸ்திரிய ராஜ்ஜியத்திற்குள் அடங்கின. அந்தப் பிரதேசம் கலிசியா என்று அழைக்கப் பட்டது. அங்கேயும் ஜெர்மன் தான் நிர்வாக மொழியாக இருந்தது. ஆஸ்திரியர்களும் ஜெர்மன் மொழி பேசுவோர் தான். ஆனால், அந்தக் காலத்தில் மொழி ஒரு முக்கியமான விடயமாக யாராலும் கருதப் படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 30% என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கில் இருந்து இன்னொரு ஆபத்து வந்தது. மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கியினப் படைகள், இன்றைய ரஷ்யா முழுவதையும் தமது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தன. அதில் ஒரு சிற்றரசாக இருந்த மொஸ்கோ, பிற்காலத்தில் பலமான ராஜ்ஜியம் ஆகியது. மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை பயன்படுத்தி நாலாபுறமும் விஸ்தரித்தது. மேற்கே இருந்த பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய சாம்ராஜ்யம், போலந்தையும் சேர்த்துக் கொண்டது. இறுதியில், ஐரோப்பிய வரைபடத்தில் போலந்து என்ற நாடு காணாமல்போனது.

போலந்து, 19 ம் நூற்றாண்டு முழுவதும், மேற்கே ஜெர்மனியாலும், கிழக்கே ரஷ்யாவாலும், தெற்கே ஆஸ்திரியாவாலும் மூன்று துண்டுகளாக உடைக்கப் பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள், 21 ம் நூற்றாண்டு அரசியல் வரை எதிரொலிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் தோன்றிய தேசியவாதக் கருத்தியல், போலிஷ் அறிவுஜீவிகளை சென்றடைந்தது. கடந்த காலத்தில், போலந்து ஒரு மிகப் பெரிய ஐரோப்பிய சாம்ராஜ்யமாக இருந்த வரலாறு, போலிஷ் தேசியவாதமாக பரிணமித்தது. அப்போது பிரான்ஸ் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான போலிஷ் தேசிய இராணுவம், ஆரம்பத்தில் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுடன் சேர்ந்து போரிட்டு வந்தது.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பா முழுவதும் சோஷலிசக் கருத்துகளும் பரவின. அப்போது கம்யூனிஸ்டுகள் என்றொரு பிரிவு ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னோடிகள், அனார்க்கிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் எல்லோரும் சோஷலிஸ்டுகள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டார்கள். அன்று ரஷ்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வாழ்ந்த போலிஷ் காரர்கள் தான், முதன் முதலாக சோஷலிச கருத்துக்களை போலந்திற்கு கொண்டு வந்தார்கள்.

1881 ம் ஆண்டு, அன்றைய ரஷ்ய சார் மன்னன் அலெக்ஸ்சாண்டரை கொலை செய்வதற்காக குண்டு வீசப் பட்டது. அந்தக் குண்டை வீசியவர், Ignacy Hryniewcki என்ற ஒரு போலிஷ் சோஷலிஸ்ட். நரோட்னையா வோல்யா (Narodnaja Volja) என்ற தலைமறைவு இயக்கத்தின் உறுப்பினர். நரோட்னையா வோல்யா உறுப்பினர்கள் சிலர் வார்சொவிற்கு வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வாரின்ஸ்கி (Ludwik Warýnski). 

வார்சொவில் ரஷ்ய இரகசியப் பொலிசாரின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், வாரின்ஸ்கி ஜெனீவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு Równosc (சமத்துவம்) என்ற சோஷலிச சஞ்சிகையை நடத்தி வந்த லிமனொவ்ஸ்கியுடன் கூட்டுச் சேர்ந்து முதலாவது போலிஷ் சோஷலிச இயக்கத்தை கட்டினார். போலந்தின் முதலாவது சோஷலிச இயக்கம், ரஷ்ய, ஜெர்மன் அரசியல் பின்னணியை கொண்டிருந்தது. போலந்து மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்து வந்தது. ஆயினும் அது ஒரு சிறிய குழுவாகவே இயங்கி வந்தது.

ஆரம்ப கால போலிஷ் புரட்சியாளர்கள், ஒன்றில் ரஷ்யாவில், அல்லது ஜெர்மனியில் உள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தனர். அவர்கள் யாருக்கும் போலந்து சுதந்திரம் பற்றிய அக்கறை இருக்கவில்லை. போலந்து தனி நாடாவது அவர்களது அரசியல் அறிக்கைகளில் இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை தேசியவாதிகளின் அரசியலாக கருதி ஒதுக்கி வந்தனர். 

போலிஷ் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து, லிமனோவ்ஸ்கி தனியாகப் பிரிந்து சென்றார். அன்றிலிருந்து போலிஷ் இடதுசாரி இயக்கத்திற்குள் இரண்டு பிரிவுகள் தோன்றின. ஒரு பிரிவினர், முதலில் போலந்து தனிநாடாவது முக்கியம் என்றும், சோஷலிச புரட்சி அதற்கு அடுத்த படியானது என்றும் வாதிட்டனர். இன்னொரு பிரிவினர், முதலில் ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டும் என்றும், போலந்து தனி நாடாவது அதன் பக்க விளைவாக இருக்கலாம் என்றும் வாதிட்டனர். இவ்விரு கொள்கை முரண்பாடுகளும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

1883 ம் ஆண்டளவில், வாரின்ஸ்கி குழுவினர் முழுமையாக ஒடுக்கப் பட்டு விட்டனர். உறுப்பினர்கள் பலர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இருப்பினும் அவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கைகள், புத்திஜீவிகள் மட்டத்தில் கவனமாகப் படிக்கப் பட்டன. வார்சோ, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களில் கல்வி பயின்ற மாணவர்களைக் கவர்ந்தது. இரண்டாம் அகிலத்தின் ஆலோசனையின் பேரில், 1890 ம் ஆண்டு, வார்சோவிழும், கலீசிய பகுதிகளிலும் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்தன. மே தின ஊர்வலங்களில் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதன் எதிரொலியாக, லொட்ஸ் (Łódź) எனும் தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நகரத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. அரசு அதிகாரிகளினால் அந்தப் போராட்டம் கொடூரமாக அடக்கப் பட்டது.

இதற்கிடையில், புலம்பெயர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இடதுசாரி போலிஷ் ஆர்வலர்கள், பாரிஸ் நகரில் ஒன்று கூடினார்கள். போலந்துக்கென ஒரு சோஷலிசக் கட்சி உருவாக்க வேண்டுமென பாரிஸ் மகாநாட்டில் முடிவெடுக்கப் பட்டது. அதிலிருந்து PPS எனும் போலந்து சோஷலிசக் கட்சி தோன்றியது. ஆயினும் சில மாதங்களில் கட்சிக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. SDKP எனும் போலந்து ராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகக் கட்சி, போலந்து விடுதலையை தள்ளிப் போட வேண்டும் என வாதிட்டது. 

போலந்து தனி நாடானால், அது தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கும் என்றும், அதற்குப் பின்னர் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்றும் வாதிட்டனர். அது மட்டுமல்ல, அயலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டால், தேச எல்லைகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கூறி வந்தனர். அந்தக் கட்சியின் தத்துவ ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற ரோசா லக்சம்பேர்க் ஆவார். ஒரு போலிஷ் யூத வணிகர் குடும்பத்தில் பிறந்த ரோசா லக்சம்பேர்க், தனது கடைசிக் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து ஒரு சில மாதங்களில் வலதுசாரி இராணுவ வீரர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

போலந்தில் SDKP இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்தக் கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதனால், SDKP ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்னர் அழிந்து போனது. 1900 ம் ஆண்டு, எஞ்சிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, SDKPiL எனும் புதிய கட்சியை ஸ்தாபித்தனர். போலந்து, லித்துவேனியாவுக்கான சமூக ஜனநாயகக் கட்சி என்பது அதன் பெயர். அதன் உறுப்பினராக இருந்த லித்துவேனிய சோஷலிஸ்ட் Feliks Dzierżyński பிற்காலத்தில் சோவியத் யூனியனில் உருவான Tsjeka எனும் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

SDKPiL லெனின் அங்கம் வகித்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் கூட்டங்களிலும் பங்குபற்றியது. போல்ஷெவிக்,மென்செவிக் பிரிவினையின் போது கூட இருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியின் பின்னர், போலந்தில் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, SDKPiL போலந்தில் மட்டும் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது. அதற்கு முன்னரே, ஆஸ்திரியாவின் ஒரு பகுதியாக இருந்த தெற்குப் போலந்தினை சோஷலிஸ்டுகள் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு ஏற்கனவே ஓரளவு அரசியல் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது.

குறிப்பிடத் தக்க சிறுபான்மை இனமான யூதர்கள், போலந்து வரலாற்றின் தவிர்க்கவியலாத ஓர் அங்கமாக இருந்தனர். ரஷ்யாவில் சார் மன்னராட்சிக் காலத்தில் நடந்த யூத எதிர்ப்புக் கலவரங்கள் காரணமாக, ஏராளமான ரஷ்ய யூதர்கள் போலந்தில் குடியேறி இருந்தனர். ஒரு காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஐரோப்பிய நாடாக போலந்து இருந்தது.

போலந்தில் யூதர்கள் பெருந்தொகையில் வாழ்ந்தாலும், சியோனிசம் எனும் தேசியவாதம் அவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குப் பதிலாக "Bund" எனும் யூத சோஷலிசக் கட்சி உருவாகி இருந்தது. இஸ்ரேலில் (பலஸ்தீனத்தில்) குடியேறுவதை விட, ரஷ்ய-போலிஷ் யூதர்களை ஒரு சோஷலிச புரட்சிக்கு தயார் படுத்துவதே அதன் கொள்கையாக இருந்தது.

(போலந்து சோஷலிச இயக்கத்தின் தோற்றமும் மறைவும் பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதி.)

Monday, August 16, 2010

வார்சோ ஒப்பந்த அகதிகள்


போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை
Part 2
போலந்து நாட்டினருக்கு அகதித் தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஹிட்லர் போலந்தை ஜெர்மனியுடன் இணைத்த பொழுது, போலிஷ் அரசு பிரிட்டனில் அகதியாக தஞ்சம் கோரியது. கம்யூனிஸ்ட்கள் மொஸ்கோவில் தஞ்சம் கோரினார்கள். நாஸிகளின் இன அழிப்புக்கு தப்பிய யூதர்கள் அகதியாக அமெரிக்கா வரை சென்றார்கள். நாஸிப் படைகளை தோற்கடித்த சோவியத் செம்படையுடன் கம்யூனிஸ்ட்கள் திரும்பி வந்து சோஷலிச ஆட்சி அமைத்தார்கள். சோஷலிச போலந்தில் அதிருப்தியடைந்த ஒரு கூட்டம் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக ஓடினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள், தொழிற்சங்கங்களின் இடையறாத போராட்டம் காரணமாக, கம்யூனிஸ்ட்கள் விட்டுக் கொடுத்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன் முதலாக போலந்தில் தான் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. மேற்குலகில் அடைக்கலம் கோரிய போலிஷ் புத்திஜீவிகள் நாடு திரும்பினார்கள். சுபம்.
கதை அத்துடன் முடியவில்லை. அதுவரை அகதிகளை அனுப்பிக் கொண்டிருந்த போலந்து, 20 ம் நூற்றாண்டின் இறுதியில், அகதிகளை பொறுப்பேற்க வேண்டிய கடமைக்குள்ளானது. சோஷலிசத்தின் வீழ்ச்சியில் இரும்புத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கிழிந்த திரையூடாக வேற்றின அகதிகள் வருகை தந்தார்கள். ரஷ்யர்கள், தெற்காசிய, ஆப்பிரிக்க அகதிகளின் புகலிடமாக போலந்து மாறியது.

போருக்குப் பின்னர், கம்யூனிஸ்ட்கள் எழுத்தறிவற்ற மக்களின் தேசத்தை பொறுப்பேற்றார்கள். அனைத்து பிரஜைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அளித்தார்கள். இதனால் புதிதாக தோன்றிய நடுத்தர வர்க்கம் ஒன்று, மேலதிக உரிமைகளைக் கோரியது. தொன்னூறுகளில் நான் சந்திந்த போலந்து மாணவி ஒருவர் பின்வருமாறு கூறினார். "கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஜனாதிபதியை ...... மகன் என்றெல்லாம் திட்ட முடியாது. பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். இப்போது தாராளமாக திட்டலாம். யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்." நடுத்தர வர்க்கம் போராடிப் பெற்ற பேச்சு சுதந்திரம் அது. இன்று அதே போலந்தில் பாதுகாப்புப் படையினர் அகதிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பவர்களை விரட்டுகிறார்கள். பொதுவாகவே அகதிகள் எதிர்ப்புப் குரல் கொடுக்க தைரியமற்றவர்கள். அவர்கள் சார்பாக சிறிய இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த போலிஷ்காரரே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் இங்கே எழுதப் போகும் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. அதிலிருந்து யாருக்கான கருத்துச் சுதந்திரம் குறித்து உலகம் அக்கறை கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப காலங்களில், அதாவது போலந்து முதலாளித்துவ - ஜனநாயக நாடாக மாறிய தொன்னூறுகளில், ஆட்கடத்தல்காரர்களே அகதிகளை போலந்து கூட்டி வந்தார்கள். ஏற்கனவே விசா வழங்கும் நடைமுறையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கியிருந்தன. போலந்துக்கு வருவது அவ்வளவு கஷ்டமல்ல. போலந்து விசா கிடைக்காவிட்டாலும், அருகில் இருக்கும் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு விசா எடுத்து விட்டு, பின்னர் எல்லை கடக்கலாம். போலந்தின் மேற்கு புற எல்லையில் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கடந்து விட்டால் மேற்கைரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரலாம். மெல்ல மெல்ல போலந்திற்குள் வரும் அகதிகளின் நடமாட்டம் குறித்து எல்லைக்காவல் படை விழிப்புற்றது. இதனால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல அகதிகள் எல்லை கடக்கும் பொழுது சிக்கிக் கொண்டார்கள். ஐ.நா.அகதிகள் உயர் ஸ்தானிகராலய நெறிப்படுத்தலின் கீழ், போலந்து அரசு அகதிகளைப் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்படி இருந்தும் பலர் அங்கே தங்கவில்லை. சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் எல்லை கடந்து ஓடினார்கள்.

போலந்தில் பதிந்த அகதிகள் சரிவர பராமரிக்கப்படாதது, அவர்கள் ஓடுவதற்கு ஒரு காரணம். ஒரு ஐரோப்பிய நாட்டில் நுழைந்தால், அங்கே தான் முதலில் அகதித் தஞ்சம் கோர வேண்டும் என்ற சட்டம் அப்போதே வந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரியவர்களிடம், போலந்தில் தஞ்சம் கோராதமைக்கு, அல்லது அங்கே நிரந்தரமாக தங்காமைக்கு காரணம் கேட்கப்பட்டது. அபோதெல்லாம் போலந்து அரசின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷயம் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய தலையிடியாக இருந்தது. ஏனெனில் போலந்து ஊடாக வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜெர்மனி ஒரு வழி கண்டுபிடித்தது.

போலந்தில் அகதிகளைப் பராமரிக்கும் அரச திணைக்களம் ஒன்றை உருவாக்க ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது. போலந்திற்கு வரும் அகதிகளைப் பதிவது மட்டுமல்ல, உணவு, உறைவிடம் வழங்குவதும் அந்தத் திணைக்களத்தின் பொறுப்பு. விசாரணை நடத்தி தகுதியான அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வதிவிட அனுமதி வழங்க வேண்டும். இதிலே குறிப்பிட வேண்டியது என்னவெனில், எத்தனையோ வருடங்களாக UNHCR எடுத்துக் கூறியும் கேட்காத போலந்து அரசு, ஜெர்மனி சொன்னதும் கேட்டது. அதற்குக் காரணம் அகதிகளை போலந்தில் வைத்து பராமரிக்கும் செலவை ஜெர்மனி பொறுபேற்றுக் கொண்டது. உண்மையில் அதற்காக நிதி ஒதுக்குவதன் மூலம், பல மில்லியன் யூரோக்களை ஜெர்மனி மிச்சம் பிடிக்கின்றது. போலந்தில் இருக்கும் அத்தனை அகதிகளும் ஜெர்மனி வந்தால்? இதைவிட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

போலந்தில் பதியப்பட்ட அகதிகளில் பெரும்பான்மையோனோர் செச்னியர்கள் (ரஷ்யா). அதை விட அல்ஜீரியா, பங்களாதேஷ், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், தஞ்சம் கோருகின்றனர். வருடந்தோறும் சில நூறு இலங்கை (தமிழ்) அகதிகள் தஞ்சம் கோரியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் போலந்து முழுவதும் நூறு தமிழ் அகதிகள் இருந்தாலே அதிகம். வார்சோ நகரில் எப்படியும் நாற்பது, ஐம்பது பேர் ஆவது வசிக்கலாம். வார்சோ நகரில் வசிக்கும் தமிழர்களில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்து தங்கி விட்டவர்களும் உண்டு. சிலர் ஆட்கடத்தல் வேளைகளில் ஈடுபட்டவர்கள். சிலர் உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு போலந்துவாசியானவர்கள்.

போலந்தில் அகதியாக பதிவதற்கென்று ஒரேயொரு நிலையம் மட்டுமே உள்ளது. உக்ரைன் நாட்டு எல்லைக்கருகில், Debak எனுமிடத்தில் மட்டுமே புதிய அகதிகளை பதிவார்கள். போலந்தில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அனேகமாக எங்கோ தொலைதூர நாட்டுப்புறத்தில், காட்டுக்கு மத்தியில் அந்த முகாம் இருக்கும். சுற்றிவர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளியார் யாரும் செல்ல முடியாது. மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, சிறிதளவு பணம் செலவுக்கு கொடுப்பார்கள். போக்குவரத்துக்கு, தொலைபேசுவதற்கு அதெல்லாம் போதாது. முகாமில் வசதிக் குறைபாடுகள் இருப்பதால், பலர் வெளியே வாழ்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நகரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வீடுகளில் வசிக்க முடியும். அப்படி வசிப்பவர்களுக்கு 750 ஸ்லொட்டி (200 யூரோ) வழங்கப்படும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் அதற்குள் தான் சமாளிக்க வேண்டும். அவர்கள் மாதமொரு தடவை உதவிப்பணம் எடுப்பதற்காக ஒரு காரியாலயம் செல்ல வேண்டும்.

வார்சோ புறநகர்ப் பகுதி ஒன்றில் (விமான நிலையம் அருகில்) அகதிகள் உதவிப்பணம் பெரும் காரியாலயம் அமைந்துள்ளது. விசா காட் புதிப்பிக்க வேண்டுமானாலும் அங்கே செல்ல வேண்டும். வார்சோ மத்தியில் இருந்து மெட்ரோ எடுத்து சென்று, அதன் பிறகு 45 நிமிடம் பஸ்ஸில் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்படியும் சுமார் ஒரு கி.மி. பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அகதிகளுக்கான அரசுக் காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி மரங்கள் மறைத்திருக்கின்றன. உள்ளே நுழைய முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஸ்கேன் மெஷின் ஊடாக செல்ல வேண்டும். அதே அலுவலகத்திற்கு மேலே ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. அனேகமாக நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளை அங்கே அடைத்து வைத்திருக்கலாம். தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட சிலரை, அங்கே விசா புதுக்க வரும் போதே தடுத்து வைத்து விடுவதாக அறிந்தேன். அலுவலகப் பணியாளர்கள், ஆங்கில, ரஷ்ய மொழிகளை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். சுவரில் அகதிகளை திருப்பியனுப்புவதை பொறுபேற்கும் IOM, மற்றும் UNHCR பிரசுரங்கள் சில காணப்பட்டன. அகதிகள் என்றால் நோய்க்காவிகள் என்று கருதினார்களோ என்னவோ, UNHCR பிரசுரம் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது.

போலந்தில் அகதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், விதிவிட அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப் படுகின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக தஞ்ச வழக்கு நடந்து கொண்டிருந்தால், "Okrana " என்ற வதிவிட அனுமதி வழங்குகிறார்கள். அதன் கால எல்லை ஒரு வருடம், சில நேரம் இரண்டு வருடங்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதனை நிரந்தர வதிவிட அனுமதியாக வழங்குவது குறைவாகவே உள்ளது. Okrana அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யலாம். வார்சோ நகரில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் பலதரப் பட்ட வேலைகளை செய்கிறார்கள். உதவிப்பணம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படுவதால், வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம். பல வருடங்களாக போலந்தில் வாழும் தமிழர்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றில் ரெஸ்டாரன்ட், அல்லது கடை வைத்துள்ளனர். இவர்ளை விட பலர் தற்போது கல்லூரிகளில் படிப்பதற்கென்று வருகிறார்கள். அவர்களில் சிலர், போலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர்.

முதலாவது பகுதியை வாசிக்க:
போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

Sunday, August 15, 2010

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவிற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது. பாடசாலை பாடங்களில் ஓரிரு தடவைகள் போலந்து பற்றிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்றுப் பாடத்தில் வரும் வார்சோ ஒப்பந்த நாடுகள், விஞ்ஞானப் பாடத்தில் வரும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த மேரி கியூரி, இதற்கப்பால் போலந்து பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது. எண்பதுகளில் தெரிவான பாப்பரசர் ஜான் பால் கத்தோலிக்கர்கள் மத்தியில் போலந்து குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை. அதற்கு காரணம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல, போலந்து பற்றிய செய்திகளும் மேற்குலகில் பட்டு எதிரொலித்தே எமக்கு கிடைக்கின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புபவர்களும் போலந்தை தவிர்த்தார்கள். அதற்குக் காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை என்பது தான். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கூற்றில் நியாயம் இருந்தது. வேலையில்லாப் பிரச்சினையால் போலந்து உழைப்பாளிகள் மேற்குலகிற்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பியக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள பெரிய நாடுகளில் போலந்தும் ஒன்று. அதன் இன்றைய எல்லைகள் இரண்டாம் உலகப்போரின் பின்னர் நிர்ணயிக்கப்பட்டன. போலந்தின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டு அன்றைய சோவியத் யூனியன் வசமாகியது. இன்று அது பெலாரஸ் குடியரசின் பகுதி. அந்த நாட்டில் பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) என்ற மக்கள் பேசும் மொழி, போலிஷ் மொழி போன்றிருக்கும். போலந்தில் பேசப்படும் போல்ஸ்கி மொழி, ரஷ்ய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. போலந்துக் காரருக்கு ரஷ்யருடன் உள்ள ஜென்மப் பகை காரணமாக இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழி கற்பதை வெறுக்கிறார்கள். போலந்து சோஷலிச முகாமில் இருந்த காலங்களிலும் பெரும்பான்மை மக்கள் ரஷ்ய மொழி கற்கவில்லை. சரித்திர ரீதியாக போலந்து கத்தோலிக்க நாடு என்பதால், நீண்ட காலமாக மேற்கைரோப்பாவுடன் தொடர்புளை பேணி வந்தனர். சோஷலிச ஆட்சியிலும் கத்தோலிக்க தேவாலயத்தின் அதிகாரங்கள் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டாலும், செல்வாக்கு குறையாமல் இருந்தது.

சோஷலிச போலந்தை வீழ்த்துவதற்கு பாப்பரசர் ஜோன் போலும், கத்தோலிக்க மத நிறுவனமும் உதவினார்கள். "கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்த" போலந்து மீண்டும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று கணக்குப் போட்டார்கள். அது தப்புக்கணக்கு என்று பின்னர் தெளிவானது. முதலாளித்துவம் நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதிய மதத்திற்குள் மக்களை தள்ளி விட்டது. எங்கெங்கு காணிலும் பாரிய விளம்பரத் தட்டிகளின் ஆதிக்கம். வார்சோ நகரின் மத்திய பகுதியில் உயரமான கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. ஜன்னல்களை திறக்கத் தடையாக இருக்குமென்பதால் மேற்கைரோப்பிய நகரங்களில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வங்கிகள், சூப்பர் மார்க்கட்கள் என்று பெரிய வணிகக் கழகங்கள் யாவும் மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுடையவை. எங்காவது ஒன்றிரண்டு போலந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் சோஷலிச முகாம் நாடாக இருந்த போலந்து ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்று விட்டது. கம்யூனிச காலகட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் யாவரும் அதனை நோக்கமாக கொண்டே செயற்பட்டனர். மேற்குலக சார்பு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, போலந்தின் பொருளாதாரம் வளர்முக நிலையடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததன் பலன்களை அறுவடை செய்வதாகவே தெரிந்தது. நடுத்தர வர்க்க படித்த இளைஞர்கள் மேற்கு-ஐரோப்பிய தரத்திற்கு நிகராக சம்பளம் பெறுகின்றனர். கோடை காலத்தில் தென் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்றனர். வசதிபடைத்த குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு என்று சகல வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கென பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

வார்சோ நகரம் விரைவாக மாறி வருகின்றது. அது சராசரி ஐரோப்பிய நகரம் போல தோற்றமளிக்கின்றது. புதிதாக எழும்பும் கட்டிடங்கள், செப்பனிடப்படும் வீதிகள், இவற்றில் கட்டுமானப் பணிகள் செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். போலந்து தொழிலாளர்கள், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதால், உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனால் வெளிநாட்டுத் தொழிலாளரை தருவிக்க வேண்டிய நிலை. போலந்தில் ஒரு தகமையற்ற தொழிலாளியின் சராசரி சம்பளம் 300 - 500 யூரோக்கள். வார்சோ நகரில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுப்பதென்றாலும் அவ்வளவு பணம் தேவை! இதனால் இரண்டுக்கு மேற்பட்டோர் வாடகைப் பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். போலந்து நாட்டினரைப் பொறுத்த வரை பலர் சொந்த வீடுகளில் வாழ்வதால், அவர்களுக்கு அந்த செலவில்லை.

போலந்து மக்கள் சொந்த வீட்டில் வாழ்வது, கம்யூனிச அரசு கொடுத்த சீதனம். கம்யூனிஸ்ட்கள் அனைத்து பிரஜைகளுக்கும் கட்டிக் கொடுத்த (பரம்பரையாக கிடைத்த வீடுகள் வேறு) வீடுகளை இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். போலிஷ் மக்கள் சொந்த வீடிருப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடிகின்றது. போலந்தில் வாழ்க்கைச் செலவு ஐரோப்பியத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கட்களில் பிராண்ட் பொருட்கள் யாவும் மேற்கில் விற்கும் அதே விலைக்கு விற்கப்படுகின்றன. ஆங்காங்கே உள்ளூர் தயாரிப்புகள் சீண்டுவாரின்றி கிடக்கின்றன. குறைவாக சம்பாதிக்கும் அடித்தட்டு மக்களுக்கென்றே சில சூப்பர் மார்கட்கள் இருக்கின்றன. போலந்து முதலாளிகளால் நிறுவப்பட்ட சூப்பர் மார்க்கட்களில், முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

வார்சோ நகரில் பிரமாண்டமான ஸ்டேடியம் ஒன்று கட்டப்படுகின்றது. அடுத்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்காக அதனைத் தயார் செய்கின்றனர். இதற்கென சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. ஸ்டேடியம் கட்டப்படும் இடத்திற்கருகில் ஒரு சந்தை இயங்கி வந்தது. அங்கே கடை விரித்தவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு குடியேறிகள். ஒரு சில போலிஷ்காரரை தவிர, வியட்நாமிய, நைஜீரிய, இலங்கைத்தமிழ் சிறு வியாபாரிகள் தமது சிறு தொகை வருமானத்தை அங்கே தான் தேடிக் கொள்கின்றனர். பல வியாபாரிகள் நியாயமாக வாங்கிய சரக்குகளை விற்றாலும், போலிப் பாவனைப் பொருட்களை விற்பவர்களுக்கும் அது தான் புகலிடம்.

குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்போர் போலியான பிராண்ட் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வார்சோ காவல்துறைக்கு இந்த விடயம் தெரியும் என்ற போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் நிலைமையை தலைகீழாக மாற்றியது. போலிகளை சோதனையிட போலிஸ் வருவதும், பொருட்களைத் தூக்கிக் கொண்டு வியாபாரிகள் ஓடுவதும் அவ்வப்போது நடந்து வந்தது. ஒரு நாள் அப்படியான நடவடிக்கையின் போது, நைஜீரிய வியாபாரி போலிசை எதிர்த்து நின்று வாதாடியுள்ளார். திடீரென ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கி முழங்கியதில், ஸ்தலத்திலேயே பலியானார். வார்சோவில் ஒரு இனக்கலவரம் உருவாக சிறு பொறி போதுமானதாக இருந்தது. ஆத்திரமடைந்த நைஜீரிய வியாபாரிகள் போலிஸ் வாகனங்களைத் தாக்கி தீயிட்டனர். கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போலிஸ் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களால் அனுப்பபட்ட விசாரணைக்குழு வந்து பார்த்து விட்டு போலிஸ் மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும் போலந்து போலிசின் நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சந்தை கலைக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு விமான நிலையம் செல்லும் வழியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டது. "அமைதியான" போலந்தில் இடம்பெற்ற கலவரம் குறித்து எந்தவொரு சர்வதேச ஊடகமும் அக்கறை கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிக்காட்டிய தமிழ் நண்பர், செய்தியை வெளியிடாத ஊடக மௌனம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினார். தமிழ் ஊடகங்களில் கலையகம் மட்டுமே இணையத்தில் அந்த செய்தியை (பார்க்க :போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை) வெளியிட்டதை சுட்டிக் காட்டினேன். வியப்புடன் என்னை நோக்கினார். கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன, போலந்தில் அகதிகளின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

(போலந்தில் ஒரு அகதி அனுபவிக்கும் இன்னல்களும், சலுகைகளும். அடுத்த பதிவில் தொடரும்)

Saturday, June 19, 2010

போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை

(23 May 2010) போலந்து தலைநகர் வார்சொவில் நைஜீரிய நடைபாதை வியாபாரி ஒருவரை போலிஸ் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து அங்கே கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறிந்த மேலதிக தகவல்கள். வார்சா நகரின் பிராஹா வட்டாரத்தை சேர்ந்த ஸ்டேடியம் அருகில் நடைபாதையில் நைஜீரிய வியாபாரிகள் காலணிகள் விற்றுக் கொண்டிருந்தனர். மே 23 அன்று, அதிரடியாக பாய்ந்த போலிஸ் அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது. ஒரு நைஜீரிய வியாபாரியை கைது செய்து நிலத்தில் போட்டு அமுக்கினார்கள். அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அதே நாட்டவரான மாக்ஸ், தனது தோழனை காப்பாற்ற ஓடி வந்தார். திடீரென ஒரு போலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சீறியதில், வயிற்றில் சன்னம் பாய்ந்து மாக்ஸ் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். பட்டப் பகலில் நடந்த படுகொலை அங்கிருந்த பிற நைஜீரிய வியாபாரிகளை எழுச்சி கொள்ள வைத்தது. போலீசார் மீது கல்வீச்சு நடத்தினார்கள். நான்கு போலிஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டதற்காக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

"தம்மை சுற்றி வளைத்து தாக்கிய ஆப்பிரிக்கர்களை தடுப்பதற்காக தற்பாதுகாப்புக்காக சுட்டதில் மாக்ஸ் கொல்லப்பட்டதாக...." ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது. இருப்பினும் தொலைக்காட்சி ஒன்று மாற்றுக் கருத்தை அறியும் பொருட்டு, மாக்ஸின் மனைவியை பேட்டி கண்டது. அப்போது தான் முன்னர் குறிப்பிட்ட உண்மைகள் வெளிவந்தன. ஒரு போலந்து பெண்மணியை திருமணம் செய்து சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த மக்ஸ், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். குடும்பக் கஷ்டம் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காகவே நடைபாதை வியாபாரம் செய்து வந்தார். மக்சின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பம் தற்போது நடுக்கடலில் தத்தளிக்கின்றது.

படுகொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தன் எழுச்சியான ஊர்வலம் ஒன்று போலிஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில் ஆப்பிரிக்க குடிவரவாளர்களுடன், போலந்து குடிமக்களும் கலந்து கொண்டனர்.

படுகொலை குறித்து போலந்து ஊடகங்களில் வந்த செய்தி:
தொலைக்காட்சி வீடியோ (போலிஷ் மொழியில்)
பத்திரிகை செய்தி (போலிஷ் மொழியில்)

Saturday, November 28, 2009

போலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா

போலந்தில் இன்று அமோகமாக விற்பனையாவது, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எழுதிய உடலுறவு செயல்முறை விளக்க கைநூல். கத்தோலிக்க கிறிஸ்தவம் நீண்ட காலமாக பாலியலை விலக்கப்பட்ட பேசுபொருளாக வைத்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது "கத்தோலிக்க காமசூத்ரா" என அழைக்கப்படும் இந்த நூல். "இந்த நூலை எழுதுவதற்கு உதவிய தரவுகள் ஏற்கனவே பைபிளில் இருந்துள்ளன." இவ்வாறு பாதிரியார் Ksawery Knotz தெரிவித்தார்.