Monday, July 29, 2013

மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!


"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!"

இரண்டு வருடங்களுக்கு முன்னர், சூடானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான தெற்கு சூடான், நம்மூர் தமிழ் தேசியவாதிகள் மனதிலும் பெருமளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. தெற்கு சூடானை விட, சூடான் நாட்டின் டாபூர் பிராந்தியம் அளவிட முடியாத மனிதப் பேரழிவை சந்தித்திருந்தது. அங்கு இனப்படுகொலை நடந்ததை, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தது. ஆயினும், சர்வதேச சமூகம் டாபூரை கைவிட்டு விட்டு, தெற்கு சூடானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காரணம் என்ன? எல்லாமே எண்ணைக்காக தான். தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தை, "இஸ்லாமிய-அரபு மேலாதிக்கத்திற்கு எதிரான கிறிஸ்தவ பழங்குடியின மக்களின் போராட்டம்..." என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எண்ணை வளத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமான சர்ச்சை தான் போருக்கு காரணம் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு.

முப்பதாண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி, தனியரசு அமைத்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமை என்ன? அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா? இதற்கான பதில் அதிர்ச்சியை உண்டாக்கும். தெற்கு சூடான், பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. விடுதலைக்காக உயிரைக் கொடுத்து போராடிய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வழிநடத்திய தலைவர்கள், சொகுசு வாழ்வில் மெய்மறந்து போயுள்ளனர். 

அன்று தெற்கு சூடான் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்கள், இன்று அந்நாட்டு மக்களின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் பாராமுகமாக இருப்பது ஏன்? உண்மையில், தமிழீழ உழைக்கும் மக்கள் தான், தெற்கு சூடான் உழைக்கும் மக்களின் நிலைமை குறித்து அக்கறை கொள்வார்கள். எமக்குத் தெரிந்த "தீவிரமான தமிழீழ போராளிகளுக்கு," அந்த அக்கறை துளியும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமது வர்க்க நலன்கள் மட்டுமே முக்கியமானவை. அதனைப் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் தெற்கு சூடானில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியம்.

முதலில், தெற்கு சூடான் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய சிறிய குறிப்பு. அந்நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கின்றது. சூடானில் இருந்து பிரிவதற்காக, "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" (SPLM) ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதன் இராணுவப் பிரிவின் பெயர் : "மக்கள் விடுதலைப் படை" (PLA). தெற்கு சூடான் சுதந்திரமடைவதற்கு முன்னரே, அதன் தலைவர் ஜோன் காரெங் ஒரு விபத்தில் கொல்லப் பட்டார். அதன் பிறகு, தலைவரான சல்வா கீர், சுதந்திர தெற்கு சூடானின் முதலாவது ஜனாதிபதியாகி உள்ளார். ரீக் மாஷார் உப ஜனாதிபதியாகினார்.

தெற்கு சூடானில் பல கட்சி ஜனநாயகம் கிடையாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. ஆளும் SPLM கட்சிக்குள் மட்டுமே தேர்தல் சாத்தியமானது. அதனால், அந்தக் கட்சிக்குள் தான் அதிகாரத்திற்கான பதவிப் போட்டியும் நடக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி சல்வா கீர், மந்திரி சபையை கலைத்து, மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அங்கே பெரும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.

ரீக் மாஷார், தானே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டுமென விரும்புவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், இங்கே குறிப்பிடத் தக்க விடயம், கீர், மாஷார் ஆகிய தலைவர்களுக்கு இடையிலான பதவிப் போட்டி, இரண்டு இனங்களுக்கு இடையிலான போட்டியை எதிரொலிக்கின்றது. கீர் டிங்கா இனத்தை சேர்ந்தவர். (அகால மரணமுற்ற முன்னாள் தலைவர் ஜோன் காரெங் கூட ஒரு டிங்கா தான்.) ஆனால், மாஷார் நூவர் (அல்லது நூர்) இனத்தை சேர்ந்தவர். தெற்கு சூடானில் பல இன மக்கள் வாழ்ந்த போதிலும், டிங்கா, நூவர் இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

தலைநகர் ஜூபாவில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையோ, அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் வசதியோ கிடையாது. ஜூபாவில், நகரமயமாக்கலுக்கு அவசியமான நவீன கட்டுமானப் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசு, வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ரமிசெல் என்ற புதிய தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்புகின்றது. பெட்ரோல் விற்றுக் கிடைத்த வருமானத்தில் தான் புதிய தலைநகரம் கட்டப் படப் போகின்றது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெற்றோலிய தொழிற்துறை, தெற்கு சூடானின் முக்கால்வாசி தேசிய வருமானத்தை ஈட்டித் தருகின்றது. சூடான் எல்லையோரம் உள்ள வட மாகாணங்களில் மட்டுமே எண்ணை வளம் உள்ளது. இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே எண்ணை கிடைக்கும். எண்ணைக் கிணறுகள் வற்றிய பிறகு என்ன நடக்கும்? அதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் கிடையாது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், தற்போது கிடைக்கும் எண்ணைக்காக மட்டுமே வருகின்றனர். தெற்கு சூடானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்றால், எண்ணை உற்பத்தி மட்டுமே மூல காரணம்.

சுதந்திரத் தனியரசான தெற்கு சூடானில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம், எந்த நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? "சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர்! முன்பு சூடான் என்ற ஒரே நாடாக இருந்த காலத்திலும், சீனர்கள் தான் எண்ணை தொழிற்துறையில் முதலிட்டிருந்தார்கள். ஆமாம், அதே எண்ணைக் கிணறுகள், அதே நிறுவனம், அதே சீனர்கள். ஆனால், கமிஷன் வாங்கும் உள்நாட்டுப் பிரதிநிதி மட்டுமே மாறி இருக்கிறார்.

ஒரு காலத்தில், "சூடானிய அரபு பேரினவாதிகளை ஆதரிக்கும் சீன முதலீட்டாளர்கள்" பற்றி, அமெரிக்கர்களிடம் முறையிட்டவர்கள், இன்று சீனர்களை வரவேற்று, தெற்கு சூடானில் முதலிடச் சொல்லி இருக்கிறார்கள். சீனர்கள் கொடுக்கும் கமிஷனை வேண்டாம் என்று மறுப்பதற்கு, தெற்கு சூடானின் ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்களா?   நாளை தமிழீழ தனியரசு உருவானாலும், அது தான் நடக்கப் போகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி, சீனர்கள் தான் தமிழீழத்திலும் முதலிடப் போகிறார்கள். இன்று ராஜபக்சவுக்கு கமிஷன் கொடுக்கும் சீனர்கள், நாளை தமிழீழ ஜனாதிபதிக்கு கொடுப்பார்கள்.

தெற்கு சூடான் நாட்டு எண்ணை வள தொழிற்துறையில், ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் முதலிடவில்லை? எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல! ஏன்? பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும், ஆரம்பக் கட்ட கோளாறுகளை கொண்ட புதிய தேசத்தில் முதலிடுவதற்கு, அவர்களுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதா? அந்த வேலையை மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்கிறார்கள். நிலைமை சீரான பின்னர், அமெரிக்கர்கள் களத்தில் இறங்குவார்கள். மேலும், சீனர்கள் எண்ணை எடுத்தாலும், உலகச் சந்தையில் தானே விற்க வேண்டும்?

தெற்கு சூடானின் எல்லைகள் இன்றைக்கும் சரியாக வரையறுக்கப் படவில்லை. "அபெய்" என்ற பகுதியை சூடானும் உரிமை கூறுவதால், அதற்காக ஒரு எல்லைப் போர் நடை பெற்றது. தெற்கு சூடான் அரச செலவினத்தில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப் படுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாகும். எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதற்கு, இராணுவத்திற்கு அதிக சலுகைகள் கொடுத்து பராமரிப்பது அவசியம் என்று கருதப் படுகின்றது. முன்பு, வட சூடானிய படைகள் ஆக்கிரமித்திருந்த காலத்திலும், அதுவே காரணமாக இருந்தது.

தெற்கு சூடானில், எண்ணை வளம் நிறைந்த மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா? முன்பெல்லாம், அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படும் எண்ணெயினால் கிடைக்கும் வருமானம், நேரடியாக கார்ட்டூமுக்கு (வட சூடான்) செல்கிறது என்ற முறைப்பாட்டின் பேரில் தான், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு சூடான் சுதந்திர தனியரசானால், எண்ணை வருமானத்தில் 5% தினை, அது உற்பத்தியாகும் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு தருவதாக, SPLM வாக்குறுதி அளித்தது.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் SPLM அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதா? இல்லை, முன்பு எண்ணை வருமானம் நேரடியாக கார்ட்டூமுக்கு சென்றது. தற்போது அது ஜூபாவுக்கு (தெற்கு சூடான் தலைநகரம்) செல்கின்றது. முன்பு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது, கார்ட்டூம் படைகளை அனுப்பி எதிர்ப்பை அடக்கியது. இன்று ஜூபாவும் அதையே செய்கின்றது. அரபு-இஸ்லாமிய பேரினவாதப் படைகள் வெறியாட்டம் நடத்திய அதே இடத்தில், தெற்கு சூடான்-கிறிஸ்தவ குறுந்தேசியப் படைகள் அட்டூழியம் புரிகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களின் இனமும், மொழியும் தான் மாறியிருக்கிறது. அதிகார வர்க்கம் ஒன்று தான். அடக்குமுறை ஒன்று தான். பாதிக்கப்படும் மக்களும் ஒன்று தான்.

தெற்கு சூடான் அரசு, எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை, நேர்மையான வழியில் பங்கிட்டுள்ளதா? மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா? அதுவும் இல்லை. இன்று அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள, SPLM இயக்கத் தலைவர்கள் மட்டுமே, அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டு, வசதியாக வாழ்கிறார்கள். குளிரூட்டப் பட்ட ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள். 

பெரு நகரங்களில், தலைவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, ஆங்கில மொழி வழி பாடத்திட்டத்தை கற்பிக்கும், உயர்தரமான சர்வதேச பாடசாலைகள் கட்டப் படுகின்றன. மேலும், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக காடுகளுக்குள் மறைந்திருந்து போராடியவர்கள், இப்போது கிடைத்துள்ள வசதிகளை அனுபவிக்கக் கூடாதா என்று அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற விடுதலை இராணுவத்தில் போராடிய முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கின்றது? குறிப்பிட்ட அளவு முன்னாள் போராளிகள், புதிய தெற்கு சூடான் இராணுவத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான முன்னாள் போராளிகள், எந்த வேலை வாய்ப்புமின்றி, அவர்களது பாரம்பரிய தொழிலான, மாடு மேய்க்கும் வேலை செய்கின்றனர்.

"மாடு மேய்ப்பது எமது கலாச்சார பாரம்பரியம்" என்று SPLM தலைவர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஏனெனில், போரிடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வேறு வேலை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தொழில் தகைமை எதுவும் கிடையாது. அதனால், உணவு விடுதி பணியாளர் வேலை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு, அவர்களிடம் பணமும் கிடையாது.

சுதந்திர தெற்கு சூடானில் முதலிட்டு வர்த்தகம் செய்பவர்களில், தொண்ணூறு சதவீதமானோர் வெளிநாட்டவர்கள்! சீனர்கள், ஐரோப்பியர்கள், லெபனானியர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, பிற ஆப்பிரிக்க முதலாளிகளும் அங்கே முதலிட்டுள்ளனர். பிரபல பியர் தொழிற்சாலை உரிமையாளர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டவர். பிரபல வானொலி உரிமையாளர் கென்யா நாட்டவர். செல்பேசி சேவை வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒரு லெபனான் நாட்டவர். இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அயல்நாடான எத்தியோப்பியாவில் இருந்து வருபவர்கள் கூட, தெருக்களில் தின்பண்டம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு சிறிய வணிக நிறுவனம் முதல், பெரிய முதலீட்டு வங்கி வரையில், அனைத்தும் வெளிநாட்டவர் வசம் உள்ளன. இவர்கள் யாரும், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்தவர்கள், அதன் பலன்களை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த எந்த முதலாளியும் கிடையாதா? இருக்கிறார்களே! அவர்கள் ஒன்றில், SPLM அரசினால் பலனடைந்த பெரும் புள்ளிகளாக இருப்பார்கள், அல்லது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். போர் நடந்த காலங்களில், ஓரளவு வசதி படைத்தவர்கள், மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றனர். பணக்கார நாடுகளில் வேலை செய்து சேமித்த பணத்தை முதலிட, தாயகத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கொடூரமான போரில் இருந்து தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கொண்டு SPLM இயக்கம் ஆயுதம் வாங்க பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, தீவிரமாக தெற்கு சூடான் தேசியவாதம் பேசியவர்கள், இன்று சிறு முதலாளிகளாக திரும்பி வருகிறார்கள்.

முப்பதாண்டு கால போரில், அயல் நாட்டுக்கு கூட தப்பிச் செல்ல வழியற்ற ஏழைகள் தான், தமது பிள்ளைகளை போராளிகளாக அர்ப்பணித்திருந்தனர். தெற்கு சூடான் சுதந்திர நாடானால், தமது வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்தோ பரிதாபம்! அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. விடுதலையடைந்த தெற்கு சூடானில்,பெரும் மூலதனத்தை கொண்டு வந்து கொட்டும் முதலாளித்துவத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போகின்றனர். சாதாரண ஏழை மக்களுக்கு, சிறிய பெட்டிக் கடை திறப்பது கூட ஒரு கனவாகத் தான் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய உறுதிமொழியை எதிர்பார்க்கின்றன.

முப்பதாண்டு காலமாக நடந்த போரில் உடமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்களால், வங்கிகள் கேட்கும் அடமானப் பத்திரங்களை கொடுக்க முடியுமா? SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். "அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது?" என்று கேள்வி கேட்கின்றனர். சுருக்கமாக சொன்னால், "முதலாளித்துவ போட்டியை சமாளிக்க முடியாத சோம்பேறிகள்" என்று, SPLM தலைவர்கள் தமது சொந்தப் பிரஜைகள் மேல் பழி போடுகின்றனர்.

உண்மை தான். தெற்கு சூடான் விடுதலை அடைந்தால், அது காட்டு முதலாளித்துவத்தை வரித்துக் கொள்ளும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால், அரபு - சூடான் பேரினவாத அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடி இருப்பார்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை. தெற்கு சூடான் உழைக்கும் மக்கள், அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள். ஆங்காங்கே நடக்கும், வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதற்கான அறிகுறிகள். அதனால் தான், "அபாயகரமான சூழ்நிலை" கருதி, அமெரிக்கர்கள் தள்ளி நிற்கின்றனர்.

**********************

தெற்கு சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, July 25, 2013

வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை


1983 ஜூலை மாதம் நடந்த, தமிழருக்கு எதிரான இனக் கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழிவும் 83 கலவரத்தின் போது ஏற்பட்டன. தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒன்று கூட தப்பவில்லை. சிறிய பெட்டிக் கடை முதல், பெரும் வணிக வளாகம் வரையில், தமிழ் உரிமையாளர்களை கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக எரிக்கப் பட்டன.

தமிழ் பணக்காரர்கள் வீட்டில் வேலை செய்த, சிங்கள பணியாளர்கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள். தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிங்கள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளை எரிக்க துணை போனார்கள். இதனால் பல தமிழ் முதலாளிகள் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டனர். தலைநகர வர்த்தகத்தில் தமிழர்கள் கொண்டிருந்த நூறாண்டு கால பங்களிப்பு, ஒரு சில நாட்களில் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையின், மேற்கத்திய பாணி தேர்தல் ஜனநாயகம், தமிழின அழிப்புக்கு உறுதுணையாக அமைந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் கைகளில், தொகுதியை சேர்ந்தவர்களின், வாக்காளர் பட்டியல் காணப்பட்டது. அந்தப் பட்டியலின் படி, தமிழர்களின் வீடுகளை கண்டுபிடிப்பதும், அங்கு வாழ்ந்தவர்களை கொலை செய்வதும் இலகுவாக அமைந்திருந்தது. 

தொழில் வாய்ப்பற்ற, சிங்கள இனவெறியூட்டப் பட்ட, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த காடையர்களே தமிழர்களை தாக்கினார்கள். ஆளும்கட்சியை சேர்ந்த தொகுதி உறுப்பினர்கள், அவர்களை பின் நின்று இயக்கிக் கொண்டிருந்தனர். சிங்கள மத்திய தர வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் தமது வீடுகளில் அடைக்கலம் கோரி வந்த, நீண்ட கால தமிழ் நண்பர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். "படித்தவன் இனவாதியாக இருக்க மாட்டான்" என்ற நம்பிக்கை, அன்று பல தமிழர் மனங்களில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், 13 சிங்களப் படையினர் புலிகளின் திடீர்த் தாக்குதலில் கொல்லப் பட்ட சம்பவம், கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்திருந்தது. உண்மையில், ஆளும் ஐதேக தலைவர்கள், ஏற்கனவே தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டி இருந்தனர். அவர்களுக்கு தேவைப் பட்டது ஒரு தீப்பொறி மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்..." என்று ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அன்றைய தாக்குதலில் சுட்டவர்கள் புலிகள், பலியானவர்கள் அரச படையினர். ஆனால், தென்னிலங்கையில் அது "சிங்களவர்கள் மீதான தமிழர்களின் தாக்குதலாக" பிரச்சாரம் செய்யப் பட்டது. எல்லாவற்றையும் சிங்கள-தமிழ் இனவாத கண்ணாடி ஊடாக பார்க்கும் அரசியல், அடுத்து வந்த முப்பதாண்டு கால ஈழப்போர் கால கட்டத்திலும் தொடர்ந்திருந்தது. கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிக் கிரியைகள் நடந்த, பொரளை கனத்த மயானத்தில், நூற்றுக் கணக்கான சிங்கள இனவாதிகள் ஒன்று திரண்டிருந்தனர். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற வெறி எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தது. 

கனத்த மயானத்திற்கு அருகில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்த, நாரஹென்பிட்டிய தொடர்மாடி குடியிருப்புகளே முதலில் தாக்கப் பட்டன. அங்கு பெரும்பாலான குடியிருப்புகள், அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப் பட்டிருந்தன. முப்படைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அங்கே குடியிருந்தனர். அதனால், "பாதுகாப்பான பிரதேசமாக" கருதப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் தாக்கப் பட்டமை பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால், நாங்களும் அங்கிருந்த வீடொன்றில் தான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக, கலவரம் தொடங்குவதற்கு முன்னர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்று விட்டதால், ஒரு பேரழிவில் இருந்து மயிரிழையில் தப்பினோம். 

இதற்கு முந்திய தமிழ் ஆயுதபாணி இயக்கங்களில் தாக்குதல்களில், பொதுவாக ஒன்றிரண்டு பொலிஸ்காரர்கள் தான் கொல்லப் படுவது வழக்கம். பெருமளவு எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டமை அதுவே முதல் தடவை. தாக்குதல் நடந்த திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு போட்ட படையினர், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் காரணம் தெரியாமலே இறந்து போனார்.

யாழ் குடாநாட்டில், ஒரு சில நாட்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாக கருதப் பட்ட பொலிஸ் நிலையங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெறுமையாக இருப்பதை அறிந்த, அயலில் வாழ்ந்த தமிழர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்தனர். திடீரென, நேரக் கணிப்பு வெடிகுண்டு வெடித்ததால் சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். யாழ் குடாநாட்டில் இருந்த சிறிய பொலிஸ் நிலையங்களே விலக்கிக் கொள்ளப் பட்டன. பெரிய பொலிஸ் நிலையங்கள் பலப் படுத்தப் பட்டன. வேட்டைத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ்காரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப் பட்டன. பொலிஸ், இராணுவ வாகனங்கள் முக்கியமான தெருக்களில் மட்டுமே ரோந்து சுற்றின. 

இதனால், கிராமங்களில் படையினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு தமிழ்ப் போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். ஆர்வமுள்ளவர்களுடன் பேசி, பொதுக் கூட்டங்கள் நடத்தி, இளைஞர்களை சேர்த்தார்கள். ஈழப் போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களை சேர்த்து, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். 

83 கலவரத்திற்குப் பிறகு, இலங்கை அரச வானொலியை கேட்பதை, யாழ்ப்பாண தமிழர்கள் ஏறக்குறைய நிறுத்தி விட்டார்கள். பொய், புரட்டு, இருட்டடிப்பு காரணமாக அதன் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போனது. அதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தகவலுக்காக வெளிநாட்டு வானொலிகளை நம்பி இருந்தார்கள். இந்திய தூரதர்ஷன், பிரிட்டனின் பிபிசி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் வெரித்தாஸ் போன்ற வானொலிகளின் தமிழ்ப் பிரிவினர், மறைக்கப் பட்ட செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் அவை கேட்கப் பட்டன. அன்றாட அரசியல் உரையாடல்களும், அந்த வானொலிகள் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். 

83 ஜூலைக் கலவர சம்பவங்களை ஜூனியர் விகடன் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தது. அந்த இதழ் இலங்கைக்குள் வருவது தடை செய்யப் பட்டிருந்தது. போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதி எடுத்து விநியோகித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசியல் சஞ்சிகைகளையும், படகு மூலம் கடத்திக் கொண்டு வந்து விநியோகித்தார்கள். நிறையப் பேர் அவற்றை விரும்பி வாங்கி வாசித்தார்கள். 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 கலவரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ்ப்பாணம் சென்று வந்தார். அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் கிளைகள் இருந்தன. தமிழ் அமைப்பாளர்கள் அவற்றை நிர்வகித்து வந்தனர். 83 கலவரத்திற்கு பின்னர், யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்டது. ஈழ போராளிக் குழுக்கள் அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம் காரணமாக பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மெல்ல மெல்ல பிற அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பழம்பெரும் தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பகிரங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தேர்தல் அரசியல் மிதவாதமாகவும், ஆயுதபாணி அரசியல் தீவிரவாதமாகவும் மாறியது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திய குழுக்களை, அரச ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, அன்றைய காலத்தில் சிங்கள மக்கள் கூட, தமது அன்றாட அரசியல் உரையாடல்களில் "பயங்கரவாதிகள்" என்ற சொல்லை பாவிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர, TELO, PLOTE, EPRLF, EROS, TELA என்று ஒரு டசின் விடுதலை இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிங்கள மக்கள் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் "கொட்டியா" (புலிகள்) என்று அழைத்தனர். எந்த இயக்கம் தாக்குதல் நடத்தினாலும், அதனை புலிகளே செய்ததாக நினைத்துக் கொண்டனர். 

இதே மாதிரியான நிலைமை, தமிழ் நாட்டிலும் இருந்தது. அவர்களும் எல்லா இயக்கங்களையும் "விடுதலைப் புலிகள்" என்ற பொதுப் பெயர் கொண்டு அழைத்தனர். திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புலிகள் அமைப்பினால் நடத்தப் பட்டது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட ஜூலைக் கலவரம், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வலைகள் காரணமாக, விடுதலை இயக்கங்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்தது. இதன் விளைவாக, எல்லா இயக்கங்களும் பல்லாயிரம் போராளிகளையும், ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார்கள். 

தேசத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 ஜூலைக் கலவரத்திற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழினப் படுகொலையில் இருந்து தனது அரசையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான எதிரிகளாக இருந்த, தமிழ் ஆயுதபாணி இயக்கங்களை அடக்குவதற்காக, பெருந்தொகையான சிங்களப் படையினரை அனுப்பி வைத்தார். அந்த மாகாணங்களில், படையினரின் கண்மூடித்தனமான கொலைகள், வரைமுறையற்ற கைதுகள் தொடர்ந்தன. அதே நேரம், தென்னிலங்கையிலும் சில எதிரிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. 

ஜூலைக் கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று சில பெயர்கள் அரச ஊடகங்களில் அறிவிக்கப் பட்டன. அதனை பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழினப் படுகொலையுடன் எந்த வித சம்பந்தமுமற்ற சில கட்சிகளின் பெயர்கள் வாசிக்கப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தடை செய்யப் பட்டன. அந்தக் கட்சிகளே கலவரத்தை நடத்தியதாக, ஜே.ஆர். அறிவித்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தினார். 

ஒரு பக்கம், சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது மிலேச்சத் தனமான போர் முடுக்கி விடப் பட்டது. மறு பக்கம், அரச எதிரிகளான இடதுசாரிகள் அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். இதன் மூலம், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு கையால் ஈழப்போரை நடத்திக் கொண்டே, மறு கையால் தாராளவாத பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. தமிழ் தேசியவாதிகள், சிங்கள இடதுசாரிகள் மீது ஜே.ஆர். தொடங்கிய போரின் விளைவை, முப்பது வருடங்களுக்குப் பின்னர், தமிழ் - சிங்கள மக்கள் அறுவடை செய்கின்றனர். 

எந்த வித எதிர்ப்புமின்றி, இலங்கை மறு காலனியாதிக்கத்தை நோக்கி தள்ளப் பட்டது. தனியார்மயம் தாராளமாக நுழைவதற்கு தடையேதும் இருக்கவில்லை. ஈழப் போரானது, அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஒடுக்கி, அதி தீவிர போராட்ட சக்தியான புலிகளையும் அழித்து விட்டு ஓய்ந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த தமிழ் சமூகம், இன்றைக்கும் ஒரு பெரும் இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்கள் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜே.ஆரின். சூழ்ச்சிக்கு பலியானதை அறியாத தமிழ் வலதுசாரி தேசியவாதிகள், மேற்குலகில் இருந்து வரவிருக்கும் மீட்பருக்காக காத்திருக்கிறார்கள்.

Tuesday, July 23, 2013

தமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட்டம்

இலங்கையில், வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில், 13 ம் திருத்தச் சட்டம் பற்றிய சர்ச்சையும் சூடு பிடித்துள்ளது. 2009, ஈழப்போர் முடிவுக்கு முன்னர், 13 ம் திருத்தத்திற்கு அதிகமாகவே உரிமைகளை தருவதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது அவரே, ஏற்கனவே உள்ள 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், பொதுநல அமைப்பு நாடுகளின் உச்சி மகாநாடு நடக்க இருப்பதாலும், இந்திய அழுத்தம் காரணமாகவும் அந்த எண்ணம் கைவிடப் பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 13ம் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" முழுமையாக நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று அது விரும்புகின்றது.

இதற்கிடையில், தென்னிலங்கையில் 13 ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் நடக்கின்றது. சட்டத்தில் மிக முக்கியமான அம்சங்களான, காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க முடியாது என்று அரசு பிடிவாதமாக மறுத்து வருகின்றது. "இந்த நாட்டில் இரண்டு இராணுவங்கள் இருக்க முடியாது" என்று கோத்தபாய ராஜபக்ச கூறி வருகின்றார். ஏற்கனவே, புலிகளின் இராணுவம் இருந்த காலங்களை, சிங்கள மக்கள் நினைவுகூர வேண்டுமென்பதாக அந்தப் பேச்சுகள் அமைந்துள்ளன.

உண்மையில், பொலிஸ், காணி அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவான சட்டமாக இருந்த போதிலும், வடக்கு, கிழக்கை தவிர்ந்த பிற மாகாண அரசுகள் அவற்றில் அக்கறை கொள்வதில்லை. குறிப்பாக, வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அவை முக்கியமான பிரச்சினைகள். அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ சமுதாயத்தை கொண்ட இலங்கையில், நில உரிமை மக்களின் வாழ்வாதாரமாக கருதப் பட வேண்டியது. இன்று நடைபெறும் இராணுவத்தினரின் நில அபகரிப்புகள், உயர் பாதுகாப்பு வலையம், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் என்பன, காணி அதிகாரம் கொண்ட மாகாண சபையின் தேவையை தமிழ் மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. மேலும் பொலிஸ் அதிகாரமானது சிவில் சமூகத்தை நடைமுறைப் படுத்துவதுடன், இராணுவத்தையும் முகாம்களுக்குள் முடங்க வைக்கும்.

இது போன்ற பல காரணங்களால், மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வாங்கிக் கொள்வதில், தமிழ் மக்கள் உறுதியாக நிற்கின்றனர். மத்திய அரசும், அதே காரணங்களுக்காக அதிகாரப் பரவலாக்கலுக்கு மறுத்து வருகின்றது. மத்திய அரசு, மறுப்பதற்கு சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இனவாதம், அதிலிருந்து எழும் ஐயப்பாடுகள் மட்டுமே மூல காரணமாக இருப்பதாக தெரிகின்றது. அது எவ்வாறு அமைப்பு வடிவமாகின்றது என்பதை, இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். தமிழ் தேசியக் கூட்டணி, மகிந்த அரசுக்கு "செக்" வைப்பதாக நினைத்துக் கொண்டு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை, வட மாகாண சபையின் முதல்வராக்க விரும்பியிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன:

1. 2009 க்கு முன்பிருந்த தமிழ் தேசியக் கூட்டணி, புலிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இராஜதந்திர மொழியில் கூறுவதற்கு பழக்கி இருந்தனர். புலிகளின் அழிவுடன், சம்பந்தர் 180 பாகையில் திரும்பி, அதிகாரத்தை தனது கையில் எடுத்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு அவர்களை இன்றைக்கும் "புலிகளின் கைக்கூலிகள்" என்று கூறி வருகின்றது. உள்நாட்டில் புலிகள் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆட்டுவிக்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றது. இதனால், த.தே.கூ. விக்னேஸ்வரனை தெரிவு செய்ததன் மூலம், புலி முத்திரை குத்தப் படுவதில் இருந்து தப்பிக்க நினைக்கிறது. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பில் முக்கிய பதவி வகித்தவர் என்பதால், புலிகளின் அரசியலை ஏற்றுக் கொள்ளாத ஒருவராக இருந்தார்.

2. ஈழப்போரின் முடிவில், புலிகள் அழிந்த பின்னர், அவர்களின் ஜென்மப் பகைவர்களான PLOTE தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. ஈழ அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதினமல்ல. புலிகள் காலத்தில் உருவாக்கப் பட்ட த.தே.கூட்டமைப்பில் முக்கிய தலைவராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்பு இந்திய இராணுவ ஆட்சிக் காலத்தில் புலி வேட்டையாடிக் கொண்டிருந்தார். சம்பந்தர் கூட்டணியில் இருந்த காலத்தில், புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர். அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. அந்த அடிப்படையில், இன்னொரு தமிழ் தேசிய இயக்கமான PLOTE, த.தே. கூட்டமைப்பில் இணைந்ததில் வியப்பில்லை. விக்னேஸ்வரனின் தெரிவானது, முன்பு த.தே. கூட்டமைப்பில் இருந்திராத PLOTE, மற்றும் சில உதிரிகளுக்கும் உவப்பான விடயம் தான்.

3. புலிகள் மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்கள் தமிழ் தேசிய அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்னர், மேட்டுக்குடி அரசியல் கோலோச்சியது. "மெத்தப் படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால், நேர்மையாக நடந்து கொள்வார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள்..." என்ற மாயை, பாமர மக்கள் மத்தியில் பரவியிருந்தது. புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலத்தில், அதிகம் படித்திராத, தமிழ்ச்செல்வன் போன்ற சாதாரண பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் முன்னுக்கு வரக் கூடிய வாய்ப்பிருந்தது. அவர்கள் சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றினார்கள். வெளிப் பார்வைக்கு புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டாலும், ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரால் இதனை ஜீரணிக்க முடியாதிருந்தது. தற்போது, சம்பந்தரின் காலத்தில், மேட்டுக்குடி அரசியல் மெல்ல மெல்ல தலையெடுகின்றது. கட்சிக்கு சம்பந்தமில்லாத அறிவுஜீவிகள் வளைத்துப் போடப் படுகின்றனர். முன்பொரு தடவை சுமேந்திரன் எம்.பி. ஆனதைப் போல, தற்போது விக்னேஸ்வரன் முதல்வராக்கப் படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது. கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அவர்கள் தமக்குப் பிடித்த பிரதிநிதியை ஒரு ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்ய முடியாது. எல்லாவற்றையும் தலைமையில் உள்ளவர்களே முடிவு செய்கின்றனர். இன்றைக்கு இருக்கும் தமிழ் தேசிய தலைமை என்ற அடிப்படையில், த.தே.கூட்டமைப்பிற்கு தமது தார்மீக ஆதரவை வழங்கும் வலதுசாரித் தமிழர்கள் கூட அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை. (அதே நபர்கள், ஸ்டாலின், மாவோவின் "சர்வாதிகாரம்" பற்றி எமக்குப் பாடம் எடுப்பார்கள். அறிவுஜீவிகள் அல்லவா? நாங்களும் கேட்டுக் கொள்ள வேண்டும்.) உட்கட்சி ஜனநாயகமற்ற த.தே.கூ., விக்னேஸ்வரனை நியமிப்பதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. சம்பந்தர், சுரேஷ், மாவை போன்ற கட்சித் தலைவர்கள் வீட்டுக்கு வந்து கேட்டதால், தாம் தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டதாக, விக்னேஸ்வரனே தெரிவித்திருக்கிறார். (பார்க்க: "வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது: விக்னேஸ்வரன்", http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/75405-2013-07-17-12-18-02.html)

 "ஒரு முன்னாள் நீதியரசர், மாகாண சபைக்கு வழங்கப் படாத அதிகாரங்கள் பற்றியும், 13ம் சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்தும், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் பொழுது, அவர்கள் கேட்பார்கள்," என்று த.தே.கூ. தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றது. சர்வதேசம் எப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதி யார், அவர் என்ன சொல்கிறார் என்று தான் பார்க்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல்கலைக்கழகத்தை எட்டியும் பார்த்திராத பிரபாகரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும், சர்வதேசம் மதிப்புக் கொடுத்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வதற்கு அன்டன் பாலசிங்கம் இருந்த போதிலும், பிரபாகரன் தமிழில் சொன்னவற்றை எல்லாம், சர்வதேச சமூகம் தானாகவே மொழிபெயர்த்து அறிந்து கொண்டது. புலிகள் இயக்கத்தின் ஆயுத பலம் மட்டுமே அதற்கு காரணம் என்று கூற முடியாது. தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்த பிரக்ஞை எழுந்த காலத்தில், அந்த மக்களின் பிரதிநிதி ஒரு சிறு கிராமத்தில் நிகழ்த்திய உரை கூட சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனை நம்ப முடியாதவர்கள், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதர கேபிள் ஆவணங்களை வாசித்துப் பார்க்கவும்.

ஆகவே, அறிவுஜீவிகளின் அரசியல் பிரவேசம், சமூகத்தில் அது குறித்த பிரமையில் உள்ள பிரிவினரை மட்டுமே கவரப் போகின்றது. ஏற்கனவே, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் விக்னேஸ்வரனின் நியமனத்தை வரவேற்க ஆரம்பித்துள்ளனர். சிங்கள மத்தியதர வர்க்கமும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த சமூகத்தினர் மத்தியில் தான் அது பெரும் தாக்கத்தை உண்டாக்கப் போகின்றது. ஸ்ரீலங்காவில் உள்ளது, "பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஜனநாயகம்" என்பதைத் தான் மேற்படி சம்பவங்கள் கோடி காட்டுகின்றன. விக்னேஸ்வரனின் நியமனத்தின் மூலம், சம்பந்தர் மகிந்த ராஜபக்சவை மேற்கொண்டு நகர முடியாத அளவுக்கு செய்து விட்டதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், ராஜபக்ச அரசுக்கு, சிங்கள இனவாதம் என்றைக்கும் கைகொடுக்கும் சர்வரோக நிவாரணி ஆகும். அதனை மகிந்த செய்யத் தேவையில்லை. மகிந்த காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிப்பதற்கு, அவரது எடுபிடிகள் காத்திருக்கிறார்கள்.

வட மாகாண சபைத் தேர்தலில், த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றால், அதையே காட்டி இனவாத பிரச்சாரம் செய்வதற்கு அரசு தயாராகி வருகின்றது. த.தே.கூ. வின் வெற்றியை பிரிவினைவாதமாகவும், இன்னும் சொல்லப் போனால், இந்திய விஸ்தரிப்புவாதமாகவும் திரித்துக் கூறும். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளன. அரச நாளேடான டெயிலி நியூஸ் பின்வருமாறு எழுதுகின்றது: "13 ம் திருத்தச் சட்டம், அகண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முதல் படி!" அதற்கு சொல்லப்படும் காரணங்கள் முக்கியமானவை:
1. தமிழ்நாட்டில் உள்ளவர்கள்,(ஈழத்)தமிழர்களை இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தமிழர்கள் என்ற இன அடையாளத்தை வலியுறுத்துகிறார்கள்.
2. அவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகளுக்கு நிதியும், பயிற்சியும் கொடுத்தார்கள்.
3. (ஈழத்) தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் தலையீடு செய்யுமாறு, இந்திய மத்திய அரசை வற்புறுத்துகிறார்கள்.
4. அவர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, த.தே.கூ. இனை பயன்படுத்துகின்றனர்.
5. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கொண்டு, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய பிரச்சாரம் செய்கின்றார்கள்.
(3 A WAS A MARKER FOR A LARGER TAMIL NADU, http://www.dailynews.lk/?q=features/13-was-marker-larger-tamil-nadu)
இந்தக் காரணங்கள் எல்லாம், எமக்கு வேடிக்கையாக தோன்றலாம். தமிழ் தேசிய அரசியலில் அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சர்வ சாதாரணமான விடயங்கள். ஆனால், சிங்கள இனவாத சக்திகள் அவற்றை தமது அரசியலுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும், சாதாரண சிங்கள மக்கள் மனதில் அச்சவுணர்வை உண்டாக்கும் வகையில் திரிபு படுத்தப் படலாம்.

மேலேயுள்ள குறிப்புகளில் இருந்து ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள தமிழ் தேசியவாத சக்திகள், ஈழத் தமிழர் நலன் சார்ந்து எடுக்கும் அரசியல் நகர்வுகள் யாவும், இலங்கையில் சிங்கள இனவாத தீயை மூட்டுவதற்கான விறகாக பயன்படுத்தப் படுகின்றன. அது ஒரு ஆங்கிலப் பத்திரிகை என்பதால், அந்தளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிங்களப் பத்திரிகைகளில் இன்னும் சத்தமாகக் குலைப்பார்கள். சிங்கள இராணுவ வீரர்கள், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள் போன்று எழுதுவார்கள். இராணுவத்தினர் புரிந்த படுகொலைகள் குறித்து, ஒரு சிங்களவர் மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் விமர்சித்தாலும், அவரை தேசத் துரோகி அல்லது இனத் துரோகி என்று முத்திரை குத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கூட அவரைத் தீண்ட மாட்டார்கள்.

சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் இனவாதத்தை வளர்ப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. அது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கவே பயன்படும். நாம் ஏன் வேறொரு பாதையை கண்டுபிடிக்கக் கூடாது? சர்வதேசத்திலோ, இந்தியாவிலோ, அல்லது தமிழ்நாட்டிலோ தங்கியிராத ஈழத் தமிழ் தேசியத்தை உருவாக்குவது அவசியம். சில நேரம், பெயர்கள் பிரச்சினையை கொடுக்கலாம். நாங்கள் தமிழீழம் என்று சொல்லாமல் விட்டால் கூட, தமிழ் தேசியம், சமஷ்டி, சுய நிர்ணய உரிமை போன்ற சொற்கள், சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட போதுமானதாக இருக்கின்றன. அதனால் தான், எந்த பெரும்பான்மையின (சிங்கள) கட்சியும் அந்தச் சொற்களை உச்சரிக்கவே அஞ்சுகின்றன. சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக, இடதுசாரிக் கட்சிகளையும் இனவாதிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை.

இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே போன்று, முஸ்லிம் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய அரசை ஆதரிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும் 13 ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒவ்வொரு அதிருப்தியாளரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தமிழர் தரப்பின் கடமை. மகிந்த அரசை கவிழ்ப்பதற்காக, தமிழர்களை கொன்ற சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதில் குற்றமில்லை என்றால், 13 ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதிலும் தவறில்லை. இன்றுள்ள நிலையில், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர வேறு தெரிவும், தமிழ் மக்கள் முன்னால் இல்லை. அவற்றை தமிழரின் விருப்பு வாக்குகள் என்று அழைப்பதை விட, வெறுப்பு வாக்குகள் என்று சொல்வதே பொருத்தமானது. தேர்தல்களை பகிஷ்கரித்தால், தங்கள் பெயரில் கள்ள ஓட்டுக்கள் போடப்படும் என்ற பயத்திலேயே பலர் வாக்குச் சாவடிகளுக்கு செல்கின்றனர்.


இத்துடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Monday, July 15, 2013

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

இலங்கையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தல், பல விடயங்களில் முக்கியமானது. வட மாகாணத்தில் தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். அதனால், தவிர்க்கவியலாது வட மாகாண அரசியல் மாற்றங்கள், இலங்கைத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியது.

25 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக நடத்தப் பட்ட, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில், வட மாகாணத்தில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, யாரும் வேட்பு மனு போடவில்லை. அன்று, இந்திய இராணுவத்துடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. அதனால், ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன், வட-கிழக்கு மாகாண சபை கலைக்கப் பட்டது. அதற்குப் பிறகு, இலங்கையில் பிற மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப் பட்டாலும், வட-கிழக்கு மாகாண சபை கவனிப்பாரன்று இருந்தது. தற்போது, கிழக்கில் இருந்து பிரிக்கப் பட்ட, வட மாகாணத்தில் நடக்கும் தேர்தலில், முன்னாள் புலிப் பிரமுகர்கள், சுதந்திரக் கட்சி வேட்பாளர்களாக களமிறக்கி விடப் பட்டுள்ளனர். கேபி, தயா மாஸ்டர், தமிழினி, ராம், நகுலன் என்று ஒரு பெரிய பட்டாளமே, புலிகளை அழித்த மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர். இவர்கள், முன்னொரு காலத்தில், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த படியால் தான், செய்திகளில் அடிபடுகின்றனர். ஏற்கனவே, நூற்றுக் கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் வகையில், அடி மட்டத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால், நேர்மையான தேர்தல் நடப்பதும் சந்தேகமே.

வட மாகாண சபைத் தேர்தலில், இலகுவாகவே பெருமளவு வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக, அரசு கடுமையாக முயற்சிக்கின்றது. அதற்காக பல தகிடுதத்த வேலைகளில் இறங்கியது. தனக்கேற்ற சந்தர்ப்பம் கனியும் வரையில், தேர்தலை பல வருடங்கள் தள்ளிப் போட்டது. இதிலிருந்து, சில உண்மைகள் புலனாகின்றன. புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்கள், இலங்கை அரசிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்று வரையில், இலங்கை அரசானது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கே பெரிதும் அஞ்சுகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காக போராடும், ஆயுதபாணி அமைப்பை பயங்கரவாத இயக்கமாக காட்டுவதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஒதுக்குவதும் அரசுக்கு இலகுவான விடயமாக இருந்தது. ஆனால், ஒரு ஜனநாயக தேர்தல் கட்சியை அவ்வாறு செய்ய முடியாது. இந்த உண்மை, ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையில் நிதர்சனமாகியது.

நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக வருவார் என இப்போதே கருதப்படும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சிப் பிரவாகம் கரை புரண்டு ஓடுகின்றது. சிங்கள பேரினவாத அரசில், நீதியரசர் பதவி வகித்த ஒருவர், அந்த அதிகாரக் கட்டமைப்பின் மீதான தனது விமர்சனங்களை எங்காவது பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. 

மேற்கத்திய முதலாளித்துவ நலன்களுக்கு சார்பான இலங்கை அரச கட்டமைப்பில், பாராளுமன்ற அமைச்சர்கள் மட்டுமல்லாது, நீதித் துறையினரும் கூட அரசின் அங்கமாக இருப்பார்கள். நாங்கள் "சிங்களப் பேரினவாதம்" என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் குற்றஞ் சாட்டுகின்றோம் என்பதை பலர் உணர்வதில்லை. அதனால் தான், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் நீதிமன்றங்கள் எரிக்கப் பட்டன. நீதிபதிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன. ஆகவே, அத்தகைய பின்னணியை கொண்ட ஒருவர், எந்தளவுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வார் என்பது கேள்விக்குறியே. மேலும், விக்னேஸ்வரன் தெரிவு தொடர்பாக, சம்பந்தரும், மகிந்த ராஜபக்சவும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. 

மகிந்தவின் சுதந்திரக் கட்சி, முன்னாள் புலித் தலைவர்களை சேர்த்துக் கொண்டு, ஈபிடிபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதிலும், பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் நம்புகின்றனர். முன்பு, 13 ம் திருத்தச் சட்டத்தின் படி வாக்குறுதி அளிக்கப்பட்ட காணி, பொலிஸ் உரிமைகள் பற்றி, சிறு முணுமுணுப்பு கூட தற்போது கிடையாது. தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளான அந்த உரிமைகளையும் விட்டுக் கொடுத்தால், வடக்கு மாகாண சபை எந்த அதிகாரங்களை நடைமுறைப் படுத்தப் போகின்றது?

முன்பிருந்த வட- கிழக்கு மாகாண சபை கொண்டிருந்த குறைந்த பட்ச அதிகாரங்களை கூட இல்லாதொழித்து விட்டு நடைபெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களுக்கு பெரிய நம்பிக்கைகளை வழங்கப் போவதில்லை. ஆனால், மேற்பார்வைக்கு தெரியக் கூடிய மாகாண சபை கட்டமைப்பு இருப்பதை இந்தியாவும் விரும்புகின்றது. அண்மையில், த.தே.கூ., இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவும், விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கும் முடிவு அமைந்துள்ளது.

Friday, July 12, 2013

கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது

இளவரசனின் மரணத்தின் பின்னர், அந்தக் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக, பலரும் அருமையான யோசனைகளை முன்வைக்கின்றனர். "கலப்புத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால், பிரச்சினையை இலகுவாக தீர்த்து விடலாம்," என்பது அவற்றில் ஒன்று. கலப்புத் திருமணம் இல்லையென்றால், கலவரத்தை தூண்டி விடுவதற்கு சாதி வெறியர்களுக்கு வேறு காரணம் கிடைக்காதா? மரக்காணம் கலவரம் நடப்பதற்கு காரணம் கலப்புத் திருமணமா? தருமபுரியில் தலித் மக்களின் குடியிருப்புகளை கொளுத்திய அதே பாட்டாளி மக்கள் கட்சி தான், மரக்காணத்தில் "கோடி வன்னியர்கள் கூடும் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா" வில், கலவரத்தை நடத்தியது.

பா.ம.க. ஒரு வன்னிய சாதிவெறி கட்சி என்பதற்கான சான்றுகள் அளவுக்கதிகமாகவே உள்ளன. "பா.ம.க. வை தடை செய்ய வேண்டும், சாதிவெறிக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்பன போன்ற கோரிக்கைகளை எழுப்பாததை கூட மன்னித்து விடலாம். ஆனால், பா.ம.க. வின் சாதிவெறியை முழுமையாக புறக்கணித்து விட்டு, "கலப்புத் திருமண ஜோடிகளுக்கு பாதுகாப்பு கோருவது", குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தந்திரமாகும். "சிங்கள அரச போர்க்குற்றவாளிகளை புறக்கணித்து விட்டு, முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டுமென பேசுவதும்" இதுவும் ஒன்று தான். பக்கத்தில் இருக்கும் வன்னிய சாதிவெறியர்களை எதிர்க்கத் தைரியமற்றவர்கள், எட்டத்தில் இருக்கும் சிங்கள இனவெறியர்களை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள். நாங்களும் நம்பித் தொலைக்கிறோம்.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில், நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. வெவ்வேறு சாதிய பின்னணிகளை கொண்டோர், வேற்றுமைகளை மறந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதனை ஒரு சமத்துவ சமுதாயத்தின் உருவாக்கமாக கருத முடியாது. கலப்புத் திருமணம் செய்து கொண்டோரில் 90% மானோர் முன்னாள் புலி உறுப்பினர்கள். ஐந்து வருட இராணுவ சேவையின் பின்னர், போராளிகளாக இருந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். அப்போது பலர் சாதி பார்க்காமல், சக இயக்க உறுப்பினர்களை திருமணம் செய்திருந்தனர்.

போராளிகளாக முகாம்களில் இருந்த காலத்தில், பலர் தமது முந்திய சாதிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது குடும்பங்கள், உறவினர்களிடம் இருந்து விலகி இருந்ததும் ஒரு முக்கிய காரணம். புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட குடும்பங்கள், பொருளாதாரத் தேவைகளுக்காக புலிகள் அமைப்பில் தங்கி இருந்தன. புலிகளே வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தனர். தேவைப் பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்தனர்.

மாவீரர் குடும்பங்களும், போராளிக் குடும்பகளும் முன்னுரிமை பெற்றிருந்த சமுதாயத்தில், சாதியம் பின்னுக்குத் தள்ளப் பட்டதில் அதிசயமில்லை. அது ஒரு குறிப்பிடத் தக்க மாற்றம் தான். ஆனால், அந்த மாற்றம் புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது. அதனால் தான், புலிகள் அழிந்த பின்னர் அந்த கலப்புத் திருமணங்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னாள் போராளிகள் பெற்றோருடன் தொடர்புகளை புதுப்பித்துக் கொண்ட பின்னர் பிரச்சினைகள் ஆரம்பமாகின. 

குறிப்பாக ஆதிக்க சாதியை சேர்ந்த மணமக்கள், பெற்றோரின் தூண்டுதலினால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த துணைகளை விவாகரத்து செய்தனர். பின்னர், பெற்றோரின் ஆலோசனைப் படி, ஒரே சாதியை சேர்ந்தவர்களை மறுமணம் செய்து கொண்டனர். புலிகளின் நிர்வாகத்தின் கீழ் பதியப் பட்ட திருமண எழுத்துக்கள், இலங்கை அரசினால் ஏற்றுக் கொள்ளப் படாத காரணத்தை காட்டியும், ஆதிக்க சாதியினர் கலப்பு மணத் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.

உலகமயமாக்கலின் காரணமாக, யாழ்ப்பாணத்திலும் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. ஒரே சாதியில் திருமணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்துள்ளனர். ஆனால், அது குறித்து நாங்கள் இங்கே பேசவில்லை. வன்னியில் ,  சாதிக் கலப்பு திருமணம் செய்து கொண்ட, எத்தனை பேர் விவாகரத்து செய்தனர் என்பது தான் கேள்வி. எனக்குத் தெரிந்த, கலப்புத் திருமணம் செய்த பலர் இன்றைக்கும் வன்னியில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களது வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. பெற்றோர், உறவினர்களால் ஒதுக்கப் பட்ட நிலையில் வாழ்கின்றனர். அவர்களது தொழில் வாய்ப்புகள், அல்லது பொருளாதார நிலைமை நல்ல நிலையில்  இருப்பதால், அதைப் பற்றி கவலைப் படாமல் வாழ முடிகின்றது. 

ஆனால்,  முன்னாள் போராளிகளான, வயது முதிர்ச்சி அடையாத இளைஞர்கள், போருக்குப் பின்னர் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. பெற்றோரில், அல்லது நெருங்கிய உறவினர்களிடம்  தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அவர்களின்  சொற் கேட்டு விவாகரத்து செய்கின்றனர். ஆதிக்க சாதியினரின் பொருளாதார அடிப்படைக் கட்டுமானம் பலமானதாக இருக்கும் வரையில், இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. புலிகளின் தோற்றத்திற்கு முன்னரும், அழிவுக்கு பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆழமாகப் பார்த்தால், இது அதிகார மையத்துடனான சமூக உறவுகளில் நேர்ந்த மாற்றம். ஆங்கிலேய காலனிய காலத்தில், ஈழத்து சாதிய கட்டமைப்பு பெருமளவு மாற்றத்திற்குள்ளானது. புலிகளின் ஆட்சி நூறாண்டுகள் தொடர்ந்திருந்தால், சாதிய, வர்க்க கட்டமைப்பில் குறிப்பிட்டளவு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அது சமத்துவமில்லாது, ஏற்றத் தாழ்வுகளை கொண்ட சமுதாயமாக இருக்கும். பொருளாதார உற்பத்தியுடன், உழைக்கும் வர்க்கத்தின் உறவு மாறாத வரைக்கும் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:
காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!