Thursday, December 08, 2011

சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !] (நான்காம் பாகம்)

"சிவன், சக்தியுடன் சேர்ந்திருக்கும் பொழுது தான், படைத்தல் தொழிலை செய்யும் வல்லமையை பெறுகிறான்." - சௌந்தர்ய லாஹிரி

பாடசாலை மாணவர்களுக்கான, சைவ சமயப் பாடத்தில், அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சிவனும், சக்தியும் சரி பாதியாக காட்டும், "அர்த்த நாரீஸ்வரர்" உருவமானது, சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப் படுகின்றது. பாடசாலையை விட்டு வெளியில் வரும் மாணாக்கர்களுக்கு, "பெண்ணைத் தெய்வமாக மதித்த சமூகம், எதற்காக இன்று அடிமைப்படுத்துகின்றது?" என்ற நிதர்சனம் முகத்தில் அறையும்.

சைவ மதத்தின் பெயரால், "ஒரு சதிப்புரட்சியை நடத்தி", அதிகாரத்தை கைப்பற்றிய, "சைவ சித்தாந்தவாதிகள்" பற்றி எமது பாடநூல்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வரலாற்று இருட்டடிப்பால் தான், சமூகத்தில் இத்தனை குழப்பம். சிவனை (சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் இன்று இல்லை. சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டம் மாறி விட்டது. இன்றுள்ள சைவர்கள் சிவனை ஆகம விதிப்படி வழிபடுகின்றனர். அதனால் தான், பிற தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாது, இந்து மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்.

சிவனை அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் எத்தகைய மக்கள்? நிச்சயமாக அவர்கள் நம்மைப் போல இருக்கவில்லை. ஆதிச் சைவர்கள் போல வாழ்வதற்கு இன்று யாரும் துணிய மாட்டார்கள். இங்கே அவர்களின் வாழ்க்கை நெறிகளை விளங்கப் படுத்தினால், "காட்டுமிராண்டி சமுதாயம்" என்று வெறுத்து ஒதுக்குவார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்தில் நிலவும் பாலியல் சுதந்திரத்தை, "கலாச்சார சீரழிவாக" கருதும் தமிழர்கள் நம்மில் எத்தனை பேர்? சைவ சமயத்தை பின்பற்றிய, இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அது சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை விட அதிக சுதந்திரத்தை கொண்டிருந்தது. அன்றைய சைவர்கள், அதனை காமமாக கருதவில்லை. கடவுளை அடைய, முக்தி பெற சிறந்த வழியாக நம்பினார்கள்.

அதனை எடுத்துக் காட்டுவது தான், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் சிவலிங்கம். ஆணும், பெண்ணும் இணைந்து உயிரை உற்பத்தியாக்கி, இனப்பெருக்கம் செய்வதை இயற்கையின் இரகசியமாக கருதினார்கள். அதனை எடுத்துக் காட்டவே, ஆண்குறியும், பெண்குறியும் இணைந்த சிவலிங்கத்தை வழிபட்டார்கள். இயற்கை போதிக்கும் தெய்வத் தன்மையை மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆரியர்களின் பிராமண மதமும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட சைவ சித்தாந்த பிரிவும், இந்த தத்துவங்களை மூடி மறைத்தன. பிற்காலத்தில், இந்திய உபகண்டத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவ மதமும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருந்தன. அவர்கள் புகட்டிய கலாச்சாரத்தை, நாம் இன்றைக்கும் "தமிழர் கலாச்சாரம்" என்று பெருமையாகப் பேசித் திரிகிறோம்.

பண்டைய சைவ மதத்தை, தாந்திரிய மதம் என்றும் அழைப்பார்கள். ஆணையும், பெண்ணையும் குறிக்கும், சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் கடவுளராக வழிபடப் பட்டனர். "சிவனின்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை." என்ற தத்துவமும் அப்போது தோன்றியது. உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த, பண்டைய சமூக மக்கள், ஆண்குறியை மட்டும் தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர். கிரேக்கத்திலும், தென் இத்தாலியிலும் வாழ்ந்த மக்கள், மீனை அதன் குறியீடாக பயன்படுத்தினார்கள். ஆதி கிறிஸ்தவர்களும் அதனை பின்பற்றினார்கள்.

பண்டைய இந்தியர்கள், ஆணின் பிறப்புறுப்பையும், பெண்ணின் பிறப்புறுப்பையும் சிவலிங்க வடிவில் வணங்கியது முற்போக்கான விடயமாக கருதப் பட வேண்டும். ஆதிச் சைவர்கள், அந்தளவுக்கு நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தனர். மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த ஐரோப்பியர்கள், "ஆணும், பெண்ணும் சமம்" என்று, எமக்குப் போதிக்கும் அளவுக்கு, நாம் எமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். பெண் விடுதலையை, பாலியல் சுதந்திரத்தை, ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியர்கள் அதனை கடைப்பிடித்து ஒழுகி வந்தனர். உண்மையில், நாம் இன்று எதனை தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாக புரிந்து கொள்கிறோமோ, அது தான் ஐரோப்பியரின் கலாச்சாரம் என்பது எமக்குத் தெரியாது.

திபெத்தில், கி.பி. 7 ம் நூற்றாண்டில் தான் பௌத்த மத அரசு உருவானது. அதற்குப் பிறகு தான், திபெத் என்ற தேசம் உலக வரைபடத்தில் தோன்றியது. அநேகமாக, இந்திய உப கண்டத்தில் பௌத்த மதம் மடிந்து கொண்டிருந்த காலத்தில் தான், திபெத்திலும், இலங்கையிலும், பேணிப் பாதுகாக்கப் பட்டது. இந்திய உப கண்டத்தில் பரவிய பிராமண மதம் (அல்லது இந்து மதம்) பௌத்தம், சமணம் போன்ற மதங்களை கூடிய மட்டிலும் அழித்து விடுவதில் முனைப்புக் காட்டியது.

பௌத்த, சமண மதங்களை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுடன் ஒப்பிடலாம். அதாவது, மதத்தை தோற்றுவித்தவர்கள், நிறுவன மயப் படுத்தியவர்கள், புனித நூல்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்தன. அதே நேரம், இந்த மதங்களில் ஆர்வமுள்ள அனைவரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பிராமண மதம் (இந்து மதம்) அவ்வாறானது அல்ல. அந்த மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் பிறக்கும் ஒருவர் மட்டுமே பிராமணர் (அல்லது இந்துவாக) இருக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், யூதர்கள் போன்று, பிராமண மதத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். அவர்களால், நிறுவன மயப் படுத்தப் பட்ட, பௌத்த, சமண மதங்களை எதிர்த்துப் போராடி இருக்கவே முடியாது. அது எவ்வாறு சாத்தியமானது?

அன்று, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், தாந்திரிய மதங்களை பின்பற்றினார்கள். இந்து மதத்திற்கு முந்திய பழமையான மதமான, தாந்திரிய மதத்தில், சிவனை வழிபடுவோர், சக்தியை அல்லது காளியை வழிபடுவோர், என்று சில பிரிவுகள் இருந்துள்ளன. இந்திய பழங்குடியின மக்களின் கடவுளரை, நமது கால இந்துக்கள் "சிறு தெய்வங்கள்" என்று அழைப்பார்கள். அன்றைய பிராமணர்கள், சிவ பெருமான் போன்ற "சிறு தெய்வங்களை", பெருந் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். அவற்றை பிராமண மதத்தில் இணைத்துக் கொண்டார்கள். தமிழகத்திலும் இதே காலகட்டத்தில் தான், பக்தி இயக்கம் என்ற பெயரில் சைவ சித்தாந்த மதம் தோன்றியது. திருஞான சம்பந்தர் போன்ற சமய குரவர்களும், புதிதாக முளைத்த பல்லவ ஆட்சியாளர்களும் பக்தி இயக்கத்தை நெறிப் படுத்தினார்கள். அவர்களது ஒரே குறிக்கோள், பெரும்பான்மை இந்தியர்கள் பின்பற்றிய பௌத்த, சமண மதங்களை அழித்து, அந்த இடத்தில் பிராமண மதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.

இந்தியாவில் ஆரிய-பிராமண மேலாதிக்கத்தை சாத்தியமாக்கிய இரண்டு முக்கிய அம்சங்களாவன:
1 . பெரும்பான்மை இந்தியர்கள் வழிபட்ட தாந்திரியக் கடவுளரை ஏற்றுக் கொண்டமை.
2 . உள்ளூர் மக்களின் மொழிகளிலேயே சமயப் பிரச்சாரம் செய்தமை.
இவ்வாறு இடத்திற்கேற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் பிராமணர்கள். பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் பரவிய பொழுது, பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் பிராமண இனத் தூய்மை வேறு பெயர்களில் (சாதி) பேணப் படுகின்றது. பிராமணர்களைப் பொறுத்த வரையில், இன மேலாதிக்கமே முக்கியமானது. மதம், கொள்கை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்த வகையில், சூத்திரர்களின் கடவுள்களை இணைத்துக் கொண்டு, இந்து மதம் என்றொரு புதிய மதத்தை உருவாக்குவது கடினமாக இருந்திராது.

நவீன கால ஐரோப்பாவில், "இனவாதம்" அரசியல் கோட்பாடாக உருவானது. ஆனால், இனவாத சிந்தனையின் வேர்கள், இந்திய பார்ப்பனீய மரபிற்குள் காணப்படுகின்றன. இல்லாவிட்டால், திபெத் சென்று, தூய ஆரிய இனம் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கு ஹிட்லர் பேரவாக் கொண்டிருப்பானா? அந்தக் காலத்தில், இந்தியா பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால் தான் ஹிட்லரின் ஆராய்ச்சியாளர்களால் இந்தியா வர முடியவில்லை. நவீன கால இனவாதிகள் எதிர்பார்த்த அளவிற்கு, திபெத் இனத் தூய்மை பேணும் நாடாக இருந்ததில்லை.

திபெத் தோன்றிய காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், மதம் சார்ந்த அரசியலே கோலோச்சியது. கி.பி. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் இந்து மத மேலாண்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. மத்திய கால ஸ்பெயினில் நடந்த Inquisition போன்று, இந்தியாவிலும் பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. அவ்வாறான சூழலில், திபெத்தியர்கள் "உலகின் ஒரேயொரு பௌத்த தேசத்தை" ஸ்தாபித்தனர். (சில நூற்றாண்டுகளுக்கு பின்னர், கௌதம புத்தர் பிறந்த மண்ணில், நேபாளம் என்ற "உலகின் ஒரேயொரு இந்து தேசம்" பிரகடனம் செய்யப் பட்டது.) இந்து மதம் போன்றே, திபெத்திய பௌத்த மதத்திற்கும் "ஆன்மீக நெருக்கடி" தோன்றியது. பௌத்த மத ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, உள்ளூர் மக்கள் வழிபட்ட தெய்வங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தான், திபெத்தில் இன்றைக்கும், சிவனின் அர்த்த நாரீஸ்வரர் உருவம் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

திபெத்திய பௌத்த மதமும், இந்து மதமும், "மத நீக்கம் செய்யப்பட்ட சிவனை" தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றன. அதாவது, ஆதிச் சைவ சமயமான தாந்திரிய மதத்தில் இருந்து, சிவன் தனியே பிரித்தெடுக்கப் பட்டுள்ளார். காந்தியை தேசபிதாவாக்கி விட்டு, காந்தீயத்தை புறக்கணிக்கும் அயோக்கிய அரசியல் இது. ஆதிச் சைவர்களுக்கும், நவீன சைவர்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டு பிரிவினரும் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அது மட்டுமே ஒரேயொரு ஒற்றுமை.

பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட, சிவனை ஆகம விதிப்படி வணங்கும் நவீன சைவர்கள், தாந்திரிய மதம் பற்றி கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். இந்து மதம், அது குறித்த தகவல்களை இருட்டில் வைத்திருந்தது. தாந்திரிய மதம் என்றால், பில்லி சூனியம், பித்தலாட்டம் செய்யும், காட்டுமிராண்டிகளின் மதம் என்று பரப்புரை செய்தது. "தந்திரம்" என்ற சொல் கூட அதிலிருந்து வந்திருக்கலாம். சமீப காலத்தில், ஐரோப்பியர்கள் தாந்திரிய மதம் மீது அளவு கடந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குலகில், "தாந்திரா" என்பது பாலியல் சமாச்சாரங்களுக்கு சூட்டப்படும் பெயராகி விட்டது. பாலியல் இச்சை காரணமாகவே, பல ஐரோப்பியர்கள் இந்திய தாந்திரீக மதத்தை ஓரளவு பின்பற்றும் போக்குக் காணப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட இரண்டு தரப்பட்ட பார்வைகளும் தவறானவை. பண்டைய காலத்தில் இடம்பெற்ற சில வழிபாட்டு முறைகள், நமது காலத்தில் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால், தாந்திரிய மதத்தை அழிக்கும் நோக்குடன், அந்த மதத்தை பின்பற்றுவோரை சூனியக் காரர்கள் என்று இழிவு படுத்தினார்கள். இதே போன்ற நிலைமை, ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவிய காலத்திலும் காணப்பட்டது. கிறஸ்தவ மதம் வருவதற்கு முன்னர், இயற்கை வழிபாடு ஒரு மதமாக இருந்தது. அந்த மதத்தின் புரோகிதர்களும், நம்பிக்கையாளர்களும், சூனியக்காரர்கள் என்று தூற்றப் பட்டனர். இயற்கை வழிபாடு செய்வது கண்டுபிடிக்கப் பட்டால், உயிருடன் கொளுத்தப் பட்டனர். இந்தியாவிலும், ஏறக்குறைய இதே மாதிரியான அடக்குமுறை காரணமாக, தாந்திரியம் எனப்படும் ஆதிச் சைவ சமயம் மக்கள் மனதில் இருந்து அகற்றப் பட்டு விட்டது.

தாந்திரிய மதம், "ஆண்,பெண் புணர்ச்சியில் இறைவனைக் காணலாம்" என போதித்தது. (மேற்குலகில் ரஜ்னீஷ் சாமியார் இதைத் தான் திரிபு படுத்தி போதித்துக் கொண்டிருந்தார்.) ஆயிரம் வருட காலமாக, பாலியல் உணர்வு அடக்கப்பட்ட சமுதாயத்தில் மட்டுமே, இதெல்லாம் தவறாகத் தெரிகின்றது. ஆண், பெண் உறவுகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத, பண்டைய இந்திய சமுதாயத்தில், அது ஒரு சாதாரணமான நிகழ்வு. அதே நேரம், கலவி இன்பத்திற்கு கூறப்பட்ட தத்துவார்த்த விளக்கங்கள், ஐரோப்பிய தாந்திரீய பக்தர்களால் புறக்கணிக்கப் படுகின்றன. தாந்திரிய மதம் விளக்கிய, உடலுறவு எனப்படும் இயற்கையின் இரகசியம், இன்றைக்கும் கோயில் கோபுரங்களில் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அவற்றை எல்லாம் "அசிங்கமானது" என்று சொல்லி ஒதுக்கினார்கள். நாமும் அவர்களைப் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். பிராமண இந்துக்கள், தமது இன மேலாதிக்க அரசியலுக்காக, எமது பண்பாட்டுப் பெருமைகளை மறைத்தார்கள். ஆங்கிலேயர்கள், அதனுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கருத்துகளையும் எம் மீது திணித்து, "தமிழர் கலாச்சாரம் என்றால் இது தான்" என்று மூளைச் சலவை செய்தார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!

Wednesday, December 07, 2011

இனம் மாறும் தமிழர்கள் !

[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 2)

கொழும்பு நகரின் மத்தியை அண்மித்துள்ளது கொட்டாஞ்சேனை. சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கொட்டஹென என்று அழைக்கப் படுகின்றது. இன்று கொழும்பில் வாழும் தமிழர்கள் பலர், அந்தப் பெயரை அதிகமாக பாவித்து வருகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாழ்ந்த காலத்தில், "கொட்டாஞ்சேனை" என்ற தமிழ்ப் பெயர் எமது நாவில் அடிக்கடி தவழும். கொழும்பு நகரில், தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் கொட்டாஞ்சேனையும் அடங்கும். தென் கொழும்பில் மத்தியதர வர்க்க குடியிருப்புகளை அதிகமாக கொண்ட வெள்ளவத்தையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. வெள்ளவத்தையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதற்கு மாறாக, கொட்டாஞ்சேனையில் இந்திய வம்சாவழித் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

அவர்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்திய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், நகைக்கடை முதலாளிகள், போன்ற பணக்கார இந்தியத் தமிழர்களும் அங்கே தான் வசிக்கின்றனர். அதே நேரம், அந்தப் பிரதேசத்தை அண்மித்துள்ள கொழும்புத் துறைமுகத்தில் கூலித் தொழில் செய்ய வந்த, வறிய இந்தியத் தமிழர்களும் பெருமளவில் வாழ்கின்றனர். கொட்டாஞ்சேனையில் எந்த தெருவில் நுழைந்து, எதிரில் வரும் எவருடனும் தமிழில் பேசலாம். தமிழ் கடைகள், உணவு விடுதிகள் மட்டுமல்ல, தினசரி தமிழ்த் திரைப்படம் மட்டுமே காண்பிக்கும் மூன்று திரையரங்குகள் உள்ளன. இந்துக் கோயில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, "அற்புதம் நிகழ்ந்த இடமாக" கருதப்படும் அந்தோனியார் தேவாலயத்திலும் தமிழ்க் குரல்கள் ஒலிக்கும்.

கொட்டாஞ்சேனையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழி பேசும் மக்கள் என்பதால், அங்கிருக்கும் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டதில் வியப்பில்லை. வசதியானவர்கள் தமது பிள்ளைகளை கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் கான்வென்ட் பாடசாலைகளுக்கு அனுப்புவார்கள். கீழ் மத்தியதர, உழைக்கும் வர்க்க மக்கள் தமது பிள்ளைகளை, அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். நானும் "கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயத்தில்" தான் ஆரம்பக் கல்வி கற்றேன். பொதுவாக மிஷனரி, அரசுப் பாடசாலைகள் இரண்டிலும், தமிழ் மொழி மூலம் கல்வி அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சில மிஷனரி பாடசாலைகள் அப்போதே சிங்கள மொழி வாரிக் கல்வியை புகுத்தத் தொடங்கி விட்டன.

பல வருடங்களுக்கு பிறகு, கொட்டாஞ்சேனை மிஷனரிப் பாடசாலைகளில் படித்த நடுத்தர வர்க்க தமிழர்கள் பலரை, இங்கிலாந்தில் நான் சந்தித்தேன். அவர்களில் பலர் பாடசாலைக் கல்வி முழுவதும் சிங்கள மொழி மூலம் படித்திருந்தனர். அவர்களின் பெற்றோர் முதலாளிகளாகவும், வியாபாரிகளாகவும் இருந்ததனர். தமது பிள்ளைகள் "அந்தஸ்தில் உயர்ந்த" மிஷனரிப் பாடசாலையில், சிங்கள மொழியில் கல்வி புகட்டுவதை விரும்பினார்கள். தாம் தமிழில் படிக்க முடியவில்லையே என்ற கவலை, பிள்ளைகளுக்கும் இல்லை. அதற்கு மாறாக, அரசு பள்ளிக்கூடமான மகா வித்தியாலயத்தில் தமிழில் படித்த என்னைப் போன்றவர்களை தரக்குறைவாக கருதுவதை உணர முடிந்தது.

இலங்கையில் இனப்பிரச்சினையின் (மொழிப் பிரச்சினையின்?) நதிமூலம் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கொழும்பில் தொழில் புரிந்த நடுத்தர வர்க்க தமிழர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்க மறுத்து போராடினார்கள். அதே நேரம், அவர்களில் ஒரு பிரிவினரும், இந்திய வம்சாவழி நடுத்தர வர்க்கமும், சிங்கள மொழி மூல கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டது. அதற்குக் காரணம் அவர்களது வர்த்தக அபிலாஷைகள். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியில், தமது பிள்ளைகள் பாண்டித்தியம் பெறுவது, எதிர்கால வர்த்தக நோக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினார்கள். (மதத்தால் கத்தோலிக்கர்கள் என்றால் "தமிழ் இனவுணர்வு" அவர்களுக்கு அறவே கிடையாது.) இருந்த போதிலும், இனக்கலவரங்களின் போது, அவர்களது வீடுகள், வர்த்தக ஸ்தாபனங்கள், சிங்களக் காடையரால் தாக்கப்பட்டன.

இந்தியாவில், குஜராத்தில் முஸ்லிம் விரோத கலவரம் நடந்த அதே பாணியில் தான், கொழும்பில் தமிழர் விரோத கலவரங்கள் இடம்பெற்றன. தமிழர்களைக் கொல்வதற்கு, சொத்துக்களை நாசமாக்குவதற்கு சிங்கள உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப் பட்டனர். சிங்கள அரசியல்வாதிகளும், முதலாளிகளும் பின்னுக்கு நின்று அவர்களை ஏவி விட்டனர். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, தமிழர்கள் மீதான இனத்துவேஷத்தின் வெளிப்பாடாகத் தெரியும். உண்மையில் தமிழ் மேட்டுக்குடியினரின், வசதியான மத்தியதர வர்க்கத்தின் செல்வத்தை கொள்ளையடிப்பது உள்நோக்கமாக இருந்தது. அவர்களின் வர்த்தகத்தை சிங்கள முதலாளிகள் அபகரித்துக் கொண்டனர். அவர்களின் பதவிகள், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரிடம் போய்ச் சேர்ந்தது. இலங்கையில் இவ்வாறு தான் சிங்கள மேலாண்மை நிலை நிறுத்தப் பட்டது. வெளிப்பார்வைக்கு அது இனப்பிரச்சினை. ஆழமாக ஆராய்ந்தால், பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்படுத்தல்.

மேற்குறிப்பிட்ட விபரங்களை தந்தவர்கள் எனது கொட்டாஞ்சேனை நண்பர்கள். அவர்களுக்கு தமக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு, அரசியலை பகுத்துணரும் தன்மை இருக்கவில்லை. சராசரி தமிழ்த் தேசியவாதிகளைப் போன்று, சிங்கள அரசின் கொடுங்கோன்மை பற்றி எல்லாம் திட்டித் தீர்த்தாலும், தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. வர்த்தகத்தை மட்டுமே மையப் படுத்திய வாதப் பிரகாரம், தமிழீழம் கிடைத்தால் அவர்கள் இழக்கப் போவது அதிகமாகவிருந்தது. மேற்கத்திய சார்பு, முதலாளித்துவ நலன் பேணும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள்.

கொழும்பு வாழ் தமிழ் சமூகம், இன்றைக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவுத் தளமாகவே உள்ளது. ஐ.தே.க. ஆதரவு அரசியல், வட கொழும்பில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களையும், தென் கொழும்பு யாழ்ப்பாணத் தமிழர்களையும் ஒன்று சேர்க்கின்றது. தமிழ் தேசியம், இன்று கொழும்பு வாழ் தமிழர்களையும் வசீகரித்துள்ளது. அதற்குப் பின்னால், ஐ.தே.க. வின் நுண்ணரசியல் இழையோடியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இது குறித்து பின்னர் விரிவாக ஆராயலாம். அதற்கு முன்னர், இனக்கலவரத்தின் பின்னர் கொழும்பு தமிழரை பாதித்த இனப்பிரச்சினைகளின் கூறுகளை சிறிது பார்க்கலாம்.

இனப்பிரச்சினை எங்கே இருக்கின்றது என்பதை, நான் படித்த பாடசாலைக்கு பழைய மாணவனாக சென்ற பொழுது உணர முடிந்தது. கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலை, வீதியின் இரு மருங்கிலும் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. பாடசாலையின் பெரும் பகுதி, சிங்களப் பாடசாலையாக மாறி விட்டிருந்தது. நாங்கள் விளையாடிக் களித்த மைதானத்தின் ஒரு பகுதியில் புத்த விகாரை எழுப்பப் பட்டிருந்தது. நான் படித்த காலத்தில் அப்படி எதுவும் இருக்கவில்லை. ஒரு கணம், சரியான இடத்திற்கு வந்திருக்கிறேனா? என்ற சந்தேகம் எழுந்தது. பாடசாலையின் உள்ளே சென்ற போது, எங்களை வரவேற்ற அதிபர் ஒரு சிங்களவர். நாம் கொண்டு சென்ற கமெராவினால் படம் எடுக்க விரும்பிய போது தடுத்தாட்கொண்டார். " தமிழர்கள் என்றாலே கெட்டவர்களாக இருப்பார்கள்," என்ற நினைப்பு அவர் மனதில் வந்திருக்கலாம்.

வெளியே வந்து, சுற்று முற்றும் தலையைத் திருப்பிப் பார்த்தேன். வலது பக்க கட்டிடங்களின் முன்னால் இருந்த அறிவுப்புப் பலகையில் "இந்து பாடசாலை" என்று எழுதப் பட்டிருந்தது. அருகிலேயே புதிதாக ஒரு கோயில். குழப்பம் மேலும் அதிகரித்தது. முன்பு கொட்டாஞ்சேனையில் சிங்களவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நான் படித்த காலத்தில், அந்தப் பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர்: "கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை". அன்று அது ஒரு மதச்சார்பற்ற பாடசாலை. இன்று அது, "பௌத்த பாடசாலை", "இந்துப் பாடசாலை" என்று இரண்டாக பிளவுபட்டு விட்டது. இனப்பிரச்சினை மொழி சார்ந்தது மட்டுமல்ல, மதம் சார்ந்ததும் தான். "இந்துப் பாடசாலை" என்று மத அடையாளத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு, "பௌத்த பாடசாலையை" எதிர்க்கும் யோக்கியதை கிடையாது. சிறுபான்மை மதங்களுக்கு சலுகைகள் கொடுத்து வாயை மூட வைத்திருப்பதால் தான், பௌத்த-சிங்கள மேலாதிக்கம் ஆட்சி செய்கின்றது.

கொட்டாஞ்சேனையில் புதிதாக முளைத்த கிறிஸ்தவ சபைகளின் சுவரொட்டிகள் பரவலாக காணப்பட்டன. இதுவும் இருபது ஆண்டுகளுக்குள் நான் கண்ட மாற்றம். முன்பெல்லாம் "மரபுவழி மதங்களை" சேர்ந்தோரே அதிகமாக இருந்தனர். தற்போது வெளிநாட்டு நிதியில் இயங்கும் கிறிஸ்தவ சபைகள் பெருகி வருகின்றன. பௌத்தம், இந்து போன்ற பெரும்பான்மை மதங்களை சேர்ந்தோரே, "புதிதாகப் பிறந்த கிறிஸ்தவர்களாக" ஞானஸ்நானம் பெற்று வருகின்றனர். இவர்களில் 99 % ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க மனப்பான்மை கொண்ட தமிழர்கள், "மதம் மாறிகளை" பரிகசிப்பது வழக்கம். "சாப்பாட்டுக்கு வழியற்றவர்கள்... பணம் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மதம் மாறுகிறார்கள்..." இவ்வாறெல்லாம் இளக்காரமாக பேசி வந்தனர். இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், தனியொருவனுக்கு உணவளிக்க வக்கற்ற மதத்தால் என்ன பிரயோசனம்? மேலும், இந்து மதத்தில் நிலவும் சாதிய கட்டுப்பாடுகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. காலங்காலமாக, உயர்சாதியினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செல்வம்,வசதி,வாய்ப்பு கிடைப்பது எப்படி? ஒரு சாதிய சமூகத்தில் முன்னுக்கு வர வாய்ப்பற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறினால் வாழ்வு வளமாகும் என்பது நப்பாசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவுக்கெட்டிய வரையில் தெரிந்த வழி அது தான். அவ்வாறு மதம் மாறியிருந்த, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிழைக்கச் சென்றவர்களை சந்தித்திருக்கிறேன்.

(தொடரும் )


தொடரின் முதலாவது பகுதி:
1.
இலங்கை என்ற இழந்த சொர்க்கம்

Sunday, December 04, 2011

உங்களது ஒவ்வொரு அசைவையும் அரசு கண்காணிக்கின்றது

சில தசாப்தங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜோர்ஜ் ஒர்வேல் எழுதிய 1984 எனும் நூல் வெளியானது. பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், கம்யூனிச அரசாங்கங்களை பற்றிய எதிர்மறையான கருத்துகளை பரப்புவதற்காக அந்த நூல் எழுதப் பட்டது. "பெரியண்ணன் உங்களை கண்காணிக்கிறான்" என்ற பெயரில், தனது நாட்டு பிரஜைகளின் நடமாட்டங்களை, அரசு கண்காணிப்பது கதைக்கரு.

1984 நாவல் ஒரு கற்பனைக் கதை. இருப்பினும், அன்றைய ரொமானியாவில் அவ்வாறான அரசாங்கம் இயங்கியதாக, மேற்குலக மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். இன்றைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பல வருடங்கள் பின்தங்கியுள்ள, வறிய நாடான ரொமானியாவில் அதெல்லாம் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், "தனி நபர் சுதந்திரத்தை, மனித உரிமையை மதிப்பதாக கருதப்படும்," மேற்குலக நாடுகளில், பிரஜைகளை உளவறியும் கண்காணிப்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அது குறித்து விக்கிலீக்ஸ் இணையத் தளம் பல தகவல்களை பகிரங்கப் படுத்தியுள்ளது. குறிப்பாக, அரபுலகின் மக்கள் எழுச்சியின் பின்னர், மேற்குலகில் பிரஜைகளின் நடமாட்டங்களை அவதானிப்பது அதிகரித்து வருகினது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ளமை புதிய விடயமல்ல.

பாதுகாப்பு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும், அமெரிக்காவின் SS8, பிரான்சின் Vupen, என்பன வைரஸ் மென்பொருள்களை(Trojan) தயாரித்து அனுப்பி வருகின்றன. இவை உங்களது கணணிகளை, கைத் தொலைபேசிகளை ஊடுருவி, உங்களது செயற்பாடுகளை பதிவு செய்கின்றன. கணனியில் நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள், எதை தேடுகின்றீர்கள், தொலைபேசியில் யாருடன் உரையாடுகின்றீர்கள், எல்லாமே பதிவு செய்யப் பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. கமெரா உள்ள கைத் தொலைபேசி உங்கள் அயலில் உள்ளவற்றை படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.

செக் நாட்டை சேர்ந்த கம்பனியான Phoenexia, குரலை கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்றை தயாரித்து வருகின்றது. அந்த voiceprint மென்பொருளானது, ஒருவரது குரலை வைத்தே, ஒரு நபரது பால், வயது, போன்ற விபரங்களை கொடுக்கிறது. அமெரிக்காவின் Blue Coat, ஜெர்மனியின் Ipoque, போன்ற நிறுவனங்கள், அரச எதிர்ப்பாளர்களின் இணையப் பாவனையை கட்டுப்படுத்துகின்றன. துனிசியாவில், எகிப்தில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டம் எல்லாம், மேற்குலகில் சாத்தியமேயில்லை. மேற்குலக நாடுகளுடன் நல்லுறவை பேணும் நாடுகளிலும், இந்த கண்காணிப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றது. இலங்கையில் நடந்த இறுதிப்போரின் பொழுது, புலிகளின் நடமாட்டங்களை, பிரபாகரனின் மறைவிடத்தை, அமெரிக்க செய்மதி நிறுவனங்கள் கண்காணித்து, இலங்கை அரசுக்கு அறிவித்து வந்துள்ளன. இந்த தகவலையும், ஒரு முறை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

பெரும்பாலான மேற்குலக "பாதுகாப்பு நிறுவனங்கள்", தமது தயாரிப்புகளை ஆர்வமுள்ள அரசுகளுக்கு விற்பனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதாவது, மனித உரிமைகளை மீறும் அரசுக்கு கூட அவை தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை இல்லை. பல்வேறு நாடுகளின் காவல்துறை, இராணுவம், அரசு என்பன இந்த மென்பொருள்களை வாங்கிப் பாவிக்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அனுமதி இன்றியே, அரசுகள் நம்மை கண்காணிக்க முடியும். எங்களது கணணிகளை அவர்களால் இயக்க முடியும். எமது கைத்தொலைபேசி பாவனையை வைத்தே, நாம் யார், தற்போது எந்த இடத்தில் நிற்கிறோம், என்பதை அறிந்து கொள்ள முடியும். எமது தொலைபேசி சாதனம் பாவனையில் இல்லாத நேரத்திலும், அந்த விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேற்குலக நாடுகளில், இவ்வாறு பதிவு செய்வது, அன்றாட நடவடிக்கையாக மாறி விட்டது, என விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது. VAStech போன்ற நிறுவனங்கள், நாடு முழுவதும் நடக்கும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அரசுக்கு விற்று வருகின்றன.

வருகிற வாரங்களில், விக்கிலீக்ஸ் இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. L'Espresso , Privacy International of The Bureau of Investigative Journalism போன்ற பல ஊடக நிறுவனங்கள் விக்கிலீக்சுடன் ஒத்துழைக்கின்றன. இதற்கென தனியாக ஒரு இணையத் தளத்தை (The Spy files) ஆரம்பித்துள்ளது.

Saturday, December 03, 2011

மக்கள் தலைவன் கிஷன்ஜி

கிஷன்ஜியின் குடும்பம்

கிஷன்ஜி என்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் மல்லோஜூல கோடீஸ்வர ராவ், 1954 ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் பெத்தபள்ளி என்ற ஊரில் பிறந்தவர். புரட்சிகர இயக்கமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இயக்கத்தில் தம்மைப் பல காலமாக இணைத்துக் கொண்டு செயல் பட்டவர். அவரது குடும்பம் சாதியில் உயர் சாதியினரான பிராமணராக இருந்தபொழுதும் மிகவும் முற்போக்கான குடும்பம். அவருடைய தாயும் தந்தையும் அரசியல்உணர்வும் நற்சிந்தனையும் உடையவர்கள். அவருடைய தந்தையார் வெங்கையா வெள்ளையரை எதிர்த்து நடந்த சுதந்திர இயக்கத்தில் நாட்டுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவர் அன்றையக் காங்கிரெஸ் கட்சியின் ஆந்திர மாநிலத் துணைத் தலைவராக பணி செய்தவர்.தாயார் மதுரம்மாள் தமது பெயருக்கு ஏற்ப இனிமையான வழியில் தம் மக்கள் மூவரையும் நாட்டுப் பற்றுடனும் ஏழைகள் மீது அன்பு காட்டும் வழியிலும் வளர்த்தவர். கிஷன்ஜியின் இளைய சகோதரர் ஒருவரும் மாவோயியப் புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுபவர் என்று சொல்லப் படுகிறது.

கிஷன்ஜியின் இளமைக் காலம்

கிஷன்ஜி தமது பதினைந்தாம் வயதிலேயே புரட்சிகர இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். தன் இளமைக் காலத்தில் அவர் அநீதியையும் ஏற்றத்தாழ்வையும் கண்டு கொதிப்படைவது வழக்கம். நீதியும் நேர்மையும் தமது இரண்டுகண்களாகக் கொண்டு எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அது கண்டு கொதித்து எழுந்தவர். பள்ளிமாணவனாக இருந்த காலத்திலேயே வகுப்பில் ரவுடித்தனம் செய்யும் மாணவர்களையும், மாணவிகளைக் கேலி செய்யும் சில்லறைப் பொறுக்கிகளையும் தட்டிக் கேட்பதில் முன் நின்றவர். தமது இளமைக் காலத்தில் காந்தியின் நூல்களையும், தாகூரின் கவிதைகளையும் தெளிவாகக் கற்றவர். இன்சொல் பேசும் இனியவர்.

1969 ம்ஆண்டு தாம் ஒரு பள்ளி மாணவனாக இருந்த போது நடைபெற்ற தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடந்த போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமது இடைவிடாத அரசியல் கல்வியின் பலனாக மர்க்சியமே உலகைக்காக்கும் ஆயுதம் என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர். ஏன் இப்படி வயதான தாயை தனியேவிட்டு விட்டுப் பிறருக்காகப் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கேட்டால் கிஷன்ஜி சொல்லும் பதில்: "என் தாய்க்கு மூன்று பிள்ளைகள், அதில் ஒருவர்வீட்டுக்கு, இருவர் நாட்டுக்கு." எதிலும் நியாயமாக நடக்கும் கிஷன்ஜி குடும்ப பாரத்தைச் சுமப்பதற்கும் நியாயமான வழியைச் சொன்னவர். கொண்ட கொள்கைக்காக தமது வீடு,நண்பர்கள், சொத்துகள், உற்றார் உறவினரைத் துறந்து மக்கள் பணி செய்யச் சென்றவர். வீட்டைவிட்டுச் சென்ற கிஷன்ஜியை அவரது தாயாரும் உறவினர்களும் முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் உயிரற்ற உடலாகப் பார்க்க முடிந்தது.

அரசியல் பணி

பள்ளிக் கல்விக்குப் பின்னர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பு படிக்கத்தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பெரும் வீச்சில் நடந்து வந்த நக்சல்பாரி,ஸ்ரீகாகுளம் விவசாயிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு முழு நேரப் புரட்சிப்பணிக்காக தமது பல்கலைக் கழகக் கல்வியையும் துறந்தார். 1974 ம் ஆண்டு புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்தார். சர்வாதிகாரி இந்திராவின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில் சில மாதம் சிறையில் இருந்தார். சிறை விட்டுத் திரும்பிய பின் இயக்கத்தின் அறை கூவலை ஏற்று கிராமப் பணி செய்யக் கிளம்பினார். அந்தக் கால கட்டத்தில் புரட்சிகர இயக்கத்தினர்மக்கள் பணி செய்ய கிராமங்களை நோக்கிச் செல்லுமாறு கேட்கப் பட்டனர். கிராம மக்களுடன் வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் ஜக்தியால் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் நிலப் பிரபுக்களிடம் இருந்து நிலங்களை மீட்டுக் குத்தகை விவசாயிகளுக்கு வழங்கியது. இளைஞர்கள் கிராம மக்களை அணி திரட்டி அவர்களுடைய உரிமைகளை உணர்த்தி நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்டனர். அவரதுபணியின் தீவிரம் கண்டு 1979 ம் ஆண்டு இயக்க ஊழியர்கள் அவரை கரீம் நகரமாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்தனர். பின்னர் கட்சியின் ஆந்திர மாநிலக்கமிட்டியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டார். 1986 ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

வங்காளத்தில் கிஷன்ஜியின் பணி

மேற்கு வங்க மாநிலத்தில், நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னர் அந்த இயக்கத்தை ஒடுக்கியும், போலிக் கம்யுனிசம் பேசியும்,மக்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் வைத்திருந்த அவரைப் பணியாற்றும் படி அவரது கட்சி அவரைப் பணித்திருந்தது. 1986 ம் ஆண்டு தொடங்கி அவர் படுகொலைசெய்யப்பட்டது வரை கிஷன்ஜி வடக்கு, கிழக்கு இந்தியாவிலும், தண்டகாரண்யத்திலும் பணியாற்றி வந்தார். தண்டகாரண்யம் என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் திராவிட இனங்களின் மூத்த இனங்களான கோண்டுகள் உள்ளிட்ட இதர பழங்குடிகள் வாழும் இன்றைய சத்திஸ்கார் மாநிலமாகும். போலிக் கம்யுனிஸ்டுகளின் தலைவர் ஜோதிபாசுவும் அதன்பின்வந்த புத்ததேவ் பட்டச்சாரியாவும் புரட்சிக்கு சாவு மணி அடித்து விட்ட பெருமிதத்தில் இருந்த போது, இங்கே கிஷன்ஜி தமது அரசியல் பணியைத் தொடங்கினார். இனி நாடாளுமன்றத்தில் தான் தமது அரசியல் நடக்கும் என்று ஜோதிபாசு தீர்மானமாக இருந்தபோது வழி தெரியாது தளர்ந்து கிடந்த பழங்குடிகளை கிஷன்ஜியின் இயக்கம் அணித திரட்டி ஒருஇயக்கமாக்கி வந்தது. கிஷன்ஜி செய்த அரசியல் பணிகளில் மகத்தானது மார்க்சியத்தை வங்காள மண்ணில் உயிர்ப்பித்தது.இது தவிர, வங்காளத்திலும், பீகாரிலும் சிதறுண்டு கிடந்த இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியின் பல புரட்சிகரப் பிரிவுகளுடன் தொடர்ந்து அரசியல் விவாதம் நடத்தி மாவோயிஸ்டுக் கட்சி என ஓரணியில் திரட்டியதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியிருந்தார்.

லால்கார் போராட்டம்

சுரங்கம் தோண்டுவதற்காக பசங்குடி விவசாயிகளின் நிலங்களை இந்திய இரும்புக் கம்பெனிகளான ஜிண்டால், டாட்டா போன்றவை பறித்துக் கொண்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தெற்கு வங்காளத்தின் புருலியா, ஜார்கிராம்,மிட்னாபூர் போன்ற மாவட்டங்களில் வாழும் வீரம் மிக்க சந்தால் இன மக்களையும் இதர பழங்குடிகளையும்ஒற்றுமைப் படுத்தி ஒரு ஆயுதம் தாங்கிய கொரில்லாப்படையினையும், பல ஆயிரம் தொண்டர்களைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கத்தையும் வளர்த்தெடுத்தார். லட்சக் கணக்கான மக்கள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கு கொண்டு வீரத்துடன் போராடியலால்கார், நந்திகிராமம், சிங்கூர் நில மீட்பு இயக்கங்களுக்கு அவர் அரசியல்தலைமையேற்று வழி நடத்தினார். கடந்த முப்பது ஆண்டு காலத்தில் இந்திய முழுமையும் நடைபெற்றஎந்த ஒரு போராட்டத்தையும் விட இது அளவிலும் குணத்திலும் மாறுபட்டது. இந்தப் பேரியக்கம் இந்திய அரசியலில், ஏன் தெற்காசிய அரசியலில் ஒரு மிகப் பெரும் வீச்சைஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. உலக முதலாளிகள், அவர்களின் ஏவல் படைகள் அனைவரும் உற்று நோக்கிய இந்தப் போராட்டம்போலிக் கம்யுனிஸ்டுகளின் மாயையில் இருந்து மக்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

யாரும் புக முடியாத காடுகளுக்குள் இருந்து கொண்டு மாவோயிஸ்டுகள்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அட்டுழியம் செய்கிறார்கள் என்ற பொய்யுரையை கிஷன்ஜிதலைமையில் நடந்த லால்கார் போராட்டம் புரட்டிப் போட்டது. அவர் தலைமையில் நடந்தபோராட்டம் பெரும் நகரங்களுக்கு அருகில் திரளான மக்கள் பங்கேற்புடன் மிகவும்ஒழுக்கமான முறையில் நடந்தது. புரட்சியின் அலைகள் கல்கத்தா போன்ற தொழில் நகரங்களைநெருங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை கிஷன்ஜி வழி நடத்திய இந்தப் போராட்டங்கள் வழங்கின.

வங்காள இளைஞர்களிடம் எழுச்சி

வடக்கு, கிழக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக வங்காளத்தில் தொய்வுற்றுக் கிடந்த இளைஞர் கூட்டம் பெரும் திரளாக அணி திரண்டுபுரட்சி இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்ள முன்வந்தது கிஷன்ஜி செய்த பெரும்பணிக்கு கிடைத்த பலனாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அவரைப் பற்றிதினமும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அவரைப் பற்றிப் பேசாத பத்திரிகைகளே இல்லை, செய்தி வெளியிடாத தொலைக் காட்சிகளே இல்லை என்னும் அளவுக்கு அவருடைய பணி பிரபலம் அடைந்து இருந்தது. தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கிஷன்ஜியைக் கண்டு பேட்டி எடுக்க விரும்பாத பத்திரிகையளரே இல்லை என்ற சூழல் நிலவியது. போலிசும் அரசும் மீண்டும் மீண்டும் கிஷன்ஜியை கொன்று விட்டதாகச் சொல்லி வந்த போதும் அவர் மக்கள் என்னும் கடலில் ஒரு மீனைப் போல நீந்தி வந்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி மக்களைக் குழப்பும் போலியான அறிவுஜீவிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிஷன்ஜி தெளிவான வகையில் அவரவர்விரும்பும் மொழியில் பதில் கொடுத்து வந்தார்.

புரட்சிகர அரசியலுக்கும் தத்துவத்திற்கும் உரியமுக்கியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் எளிமையாகவும் நேரடியாகவும் வார்த்தை ஜாலங்கள் இன்றி, ஒளிவு மறைவின்றி, கேட்பவர்,படிப்பவர் நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சமீப கால வங்காள அரசியலில் படித்தோர் பாமரர் அனைவரும் விரும்பும் தலைவராக கிஷன்ஜி இருந்தார்.

பன்மொழிப் புலவர் கிஷன்ஜி

பல மொழிகளில் வல்லுனரான கிஷன்ஜி தெலுங்கு, இந்தி,வங்காளி, ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் புலமை பெற்று இருந்தார். கோண்டி உட்படபல வழக்கு மொழிகளிலும் அவர் பேசும் புலமை பெற்று அந்த மக்களின் இதயத்தில் இடம்பெற்று இருந்தார். கவிதையிலும் இசையிலும் பாடல்களிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த கிஷன்ஜி தாம் கொல்லப்படும் வரை ஒரு மென்மையான இலக்கிய ஆர்வலராகவாழ்ந்து மறைந்தார். பொருளாதாரம் தொடங்கி வரலாறு வரை அனைத்துத் துறைகளிலும்மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிஷன்ஜி. தமது 57 வயதிலும் ஒரு போராளியாக வாழ்ந்த அவர் ஒரு நாளின்ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்கியவர் அல்லர். அவர் கால் படாத கிராமங்களேவங்காளத்தின் தெற்குப்பகுதியிலும், மத்திய இந்தியாவிலும், தண்டகாரண்ரயத்திலும்இல்லை எனலாம். கற்பதிலும் கேட்பதிலும் மிகச் சிறந்த இந்த மனிதர் தாம் சாகும்வரைஒரு படிப்பாளியாகவே வாழ்ந்தவர்.

தேசிய இனங்களின் விடுதலை

தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு மிகுந்த முக்கியம்கொடுத்தவர் கிஷன்ஜி. இந்தியாவின் போராடும் தேசிய இனங்கள் மாவோயிசப் புரட்சிகரஇயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அறுபது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு போராடும் அஸ்ஸாமியர்கள், நாகர்கள், மணிப்புரிகள்,திரிபுரிகள் என அனைத்துப் பிரிவினருடனும் ஒளிவு மறைவற்ற நேர்மையான அரசியல்விவாதங்களை அவர் தலைமையிலான இயக்கம் நடத்தி வந்தது. வடக்கு மற்றும் கிழக்குஇந்தியாவின் தேசிய இனங்கள் இந்தியப் போலிக் கம்யுனிச இயக்கங்களால் தொடர்ந்துதுரோகம் செய்யப்பட்டவர்கள். வெறுப்புற்று இருந்த இந்த தேச விடுதலை இயக்கங்கள் இந்தியாவில்புரட்சி பேசும் இயக்கங்களை ஒருபோதும் நம்பியதே இல்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் கிஷன்ஜிஅவர்களுடன் நடத்திய அரசியல் விவாதங்கள் இந்த இயக்கங்கள் புரட்சியாளர்களுடன் இணைந்துசெயல்படும் அளவுக்கு முன்னேறியிருந்தது. இது இந்திய அரசியல் வானில் ஒரு புதுவிதமானஅரசியல் கூட்டணி அமைவதை நோக்கியதான பாதை சென்றுசொல்லலாம்.

படுகொலை

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் தேடிவந்த போதும் சிறிதும் அஞ்சாத கிஷன்ஜி, நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல பகுதிகளுக்கும் பயணம் செய்து வந்தவர். தமது வாழ்வு முழுவதையும் இந்தியாவின் ஏழை விவசாயிகள், பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்த இந்த மாவீரன், பலர் அறிய உயிருடன் பிடித்துச் செல்லப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட 2011 நவம்பர் 27 ம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒருதுயரம் மிக்க நாளாகும். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற போர்வையில் சமாதானம் பேச வரவழைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பெருந்தலைவர் கிஷன்ஜி. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் மரணம் மிகவும் துயரமானது, இமய மலையினும் கனமானது.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்,களவாணிகள், தரகர்கள் நிறைந்த காங்கிரசுக் கட்சியும் அவர்களின் ஏவலர்களான சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மந்திரி செட்டிநாட்டுச் சிதம்பரமும்,வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும் நேரடியாக இந்தப் படுகொலையை நடத்தியவர்கள் என்று புரட்சிகர இயக்கங்கள் அறிவித்துள்ளன.

கிஷன்ஜியின் இழப்பு இந்தியா மட்டும் இல்லாமல், உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்கள், தேசிய இனங்கள் அனைத்திற்குமான ஒரு பேரிழப்பாகும்.

தியாக சீலர்களின் மகனாகப் பிறந்து, பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் புகழ் வான் உள்ளவரை நிலைத்து நிற்கும்.



ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்ப தொன்றில் (குறள்: 233)



ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்தஉலகத்தில் நிலைத்திருப்பது புகழைத்தவிர வேறு எதுவும் இல்லை.



ஓங்குக கிஷன்ஜியின் புகழ் !!


-ராமசாமி-

Thursday, December 01, 2011

சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - மூன்றாம் பாகம்)

நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை சைவ சமயத்தை பற்றியது. 12 வயதில் எழுதிய அந்தக் கட்டுரை, கொழும்பு இந்து-தமிழ் சங்கத்தினர் வெளியிட்ட சிறப்பு மலரில் பிரசுரமானது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவ சமய பாடத்திற்கு தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அதே நேரம், யாழ் சைவ சித்தாந்தக் கழகம் நடத்தும் பரீட்சைகளின் சான்றிதல்கள் கூட கிடைத்துள்ளன. எதற்காக "சைவ சித்தாந்தம்" என்று அழைக்கிறார்கள் என்று, அந்த வயதில் எழுப்பிய கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. பாடசாலையில் இந்து நாகரீகம் போதிக்கும் நூலிலும், சைவ சமயம் தென்னிந்தியருக்கே பிரத்தியேகமான மதம் என்று தான் எழுதப் பட்டிருந்தது.

அதே நூலின் இன்னொரு இடத்தில், சிந்து வெளி மக்களால் வழிபடப் பட்ட பசுபதி தெய்வ இலச்சினை, சிவனாக இருக்கலாம் என்ற குறிப்பும் காணப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் விளைவாக, அத்தகைய கண்டுபிடிப்புகள் வரலாற்றை திரிக்கவும் பயன்பட்டுள்ளன. திராவிடர்கள் சிந்து வெளியிலும் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரமாக சிவ வழிபாடு எடுத்துக் காட்டப் படுகின்றது. இவை போன்ற கருத்துக்கள், ஆங்கிலேயரின் இனவாத தத்துவத்தை வலுப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வட இந்தியாவில் வாழ்ந்த காஷ்மீர் இன மக்களும், திபெத்திய இன மக்களும் நீண்ட காலமாகவே சிவனை வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில், காஷ்மீரிகள் முஸ்லிம்களாகவும், திபெத்திய இனங்கள் பௌத்தர்களாகவும் மாறி விட்டனர். ஆங்கிலேயர்களும், தென்னிந்திய சைவர்களும், வட இந்தியாவில் பரவியிருந்த சைவ சமயத்தை மறைத்த காரணம் என்ன?

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த சிவனை வழிபடும் மதம், ஆரியரின் வருகையினால் இரண்டாகப் பிளவு பட்டது. வரலாற்றில் எப்போதும், எதிரிகளுடன் ஒத்துழைக்கும் மக்களே தப்பிப் பிழைத்து வாழ்வதை அவதானிக்கலாம். ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மன், திப்புசுல்தான்களின் சந்ததிகள் அழிக்கப் பட்டு விட்டன. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்த தொண்டைமான், நிசாம்களின் சந்ததிகள் இன்றைக்கும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றன. அது போன்றே, அன்றைக்கு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களான ஆரியருக்கு காட்டிக் கொடுத்து, ஒத்துழைத்த பிரிவினரே சைவ சித்தாந்தவாதிகள். அதனால் தான், சைவ சமயம், இந்து மதத்தின் பிரிவாக கருதப் படுகின்றது. சைவக் கோயில்களில் பிராமண புரோகிதர்கள் பூசை செய்கின்றனர்.

ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் கூறுவது போன்ற "ஆரியப் படையெடுப்பு" நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், ஆரியரின் புலம்பெயர்வு நடந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களின் முக்கிய நோக்கம், நிலங்களை அபகரிப்பதும், செல்வத்தை சூறையாடுவதுமாக இருந்திருக்கலாம். வரலாறு நெடுகிலும் இது போன்ற உதாரணங்கள் பல காணக் கிடைக்கின்றன. ஸ்கண்டிநேவிய வைகிங் குழுக்கள், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு கொள்ளையடிக்க சென்ற பொழுது தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். கிறிஸ்தவ மதத்தையும் தழுவினார்கள். துருக்கிய இனக் குழுக்கள் பாக்தாத்தை அழித்த பின்னர் தான், இஸ்லாமிய நாகரீகம் பற்றி அறிந்து கொண்டனர். அதே போன்று, ஆரியர்கள் வட இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்த பிறகு தான், "இந்து மதம்" உருவெடுத்தது. இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற ஆறு பிரிவுகள் இருப்பதாக, நமது காலத்து பாடநூல்களில் எழுதப் பட்டுள்ளது. உண்மையில், ஒன்றுகொன்று தொடர்பற்ற, தனித் தனியாக வழிபடப் பட்ட மதங்களே இவை. இந்து மதம் பற்றிய வரைவிலக்கணம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் வல்லரசுகள், அவற்றை தமது மாநிலங்களாக அறிவிப்பது போன்ற அரசியல் செயற்பாடு இது.

இன்றைக்கும் பல ஆப்பிரிக்க இனங்கள், தமக்கென தனியான கடவுள்களும், மத வழிபாடுகளையும் கொண்டிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள், எளிமையான மூத்தோர் வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர். பண்டைய இந்தியாவிலும் அது போன்ற நிலைமை இருந்திருக்கும். சிவன், கணபதி, காலபைரவர், காளி, முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட மக்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். உதாரணத்திற்கு, சிவனை வழிபடுவோர் காஷ்மீர் போன்ற மேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அதே போன்று, காளியை வழிபடுவோர் கிழக்கு இந்தியாவில் அதிகமாக வாழ்ந்துள்ளனர். இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன. உண்மையில், இவை எல்லாம் கரு நிற மேனிகளை கொண்ட தெய்வங்கள். அதாவது, கறுப்பர்களின் கடவுள் கறுப்பாகத் தானே இருப்பார்?

ஆரியரின் வருகைக்கு முன்னர், இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் கருப்பர்களாகவிருந்தனர். பிந்திய சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் அவர்களுக்கு திராவிடர்கள் என்று நாமம் சூட்டினார்கள். வட கிழக்கு இந்தியப் பகுதிகளில், சீனர்கள் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். நவீன கால சமூக விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடைப்பட்ட இனம் என்று அர்த்தம் தொனிக்கும் "தீபெத்தோ-இந்தியர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதம் பேசிய ஆரியர்கள், அவர்களை நாகர்கள் என்று அழைத்தனர். நாகர்கள் ஒரு காலத்தில், இலங்கைத் தீவு வரையில் பரவியிருந்தனர். இன்றைக்கும் "நாகர்" என்ற பெயர் கொண்ட ஊர்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன. ஆயிரம் வருடங்களாக, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த, ஆரிய, திராவிட, நாகா இனங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றமும், இனக்கலப்பும் நடைபெற்றிருக்கும். இனவாத சிந்தனை கொண்ட ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தான், இவ்வாறு இன அடிப்படையில் பாகுபடுத்தி பார்த்தனர். இன்றைக்கு யாருமே தூய்மையான இனம் என்று உரிமை கோர முடியாது. தென் சீனப் பகுதி மக்களின் மரபணுக்கள், தென்னிந்திய தமிழர் உடலிலும் கலந்திருக்கலாம்.

இந்திய உப கண்டத்தில், ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தான் உயர்ந்த நாகரீகம் காணப்பட்டது. பிற இந்தியப் பகுதிகளில், பல்வேறு இனக்குழுக்கள், தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வகித்து வந்தனர். ஹரப்பா நாகரீகம் ஆரியர் வருகைக்கு முன்னரே அழிந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் வட இந்தியாவில் தோன்றிய ஆரியர்கள், தூய்மையான வெள்ளை இனத்தவர்கள் என்று கருத முடியாது. உள்ளூர் இனங்களுடன் கலந்து, ஆரியர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்திருப்பார்கள். ஆரியர் என்றால் மேன் மக்கள் என்றும் அர்த்தப் படும். ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாடு, ஐரோப்பிய இனவாத சமூக-விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று குற்றம் சாட்டப் படுகின்றது. அதாவது, ஒரு காலத்தில் வெள்ளை இனத்தவர்கள் உலகம் முழுவதும் பிடித்து ஆண்டனர் என்று நிரூபிப்பதே அவர்களது நோக்கம்.

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் போதித்த "ஆரியர் படையெடுப்பு" கோட்பாட்டை, சில இந்திய ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். ஆனால், அதற்காக வெள்ளையின ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையவேயில்லை, என்று வாதிட முடியாது. சமஸ்கிருதத்திலும், ஐரோப்பிய மொழிகளிலும் நிறைய சொற்கள் ஒரே மாதிரியாக வருகின்றன. அதே போன்று, ஜெர்மனியக் கடவுளரும், கிரேக்க கடவுளரும், இந்திய-ஆரியரின் கடவுளரும் ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு, இயற்கையில் தோன்றும் இடி மின்னல், சக்தி வாய்ந்த கடவுளாக வணங்கப் பட்டது. இந்திய-ஆரியர்கள் இடியின் கடவுளை "இந்திரன்" என அழைத்தனர். கிரேக்கர்கள் "செயுஸ்"(Zeus) என்று வணங்கினார்கள். ஜெர்மனியர்கள் "தொர்"(Thor) என்று பெயரிட்டு அழைத்தனர். இதே போன்று, சமுத்திரம், மழை, காற்று, இவையெல்லாம் கடவுள்களாக இருந்துள்ளன. இருப்பினும், "இந்து நாகரீகம்" இந்திய ஆரியர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதற்கு காரணம், இந்திய இனக்குழுக்களால் வழிபடப் பட்ட தெய்வங்களை ஆரியர்களும் ஏற்றுக் கொண்டமை தான்.

"போதிதர்மன் காஞ்சியில் பிறந்ததால் பெருமைப்படும் தமிழர்களும், புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் பெருமையுறும் இந்தியர்களும், சீன தேசத்தில் வசிக்கும் சிவபெருமானுக்காகவும் பெருமை கொள்வார்களா?" இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினால், குருட்டுத் தனமான தேசியவாதமும் அபத்தமானது என்றே பொருள் படும். காஷ்மீரிலும், திபெத்திலும், வட-மேற்கு இந்திய மாநிலங்களிலும் சிவனை வழிபடும் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஒரு யோகியான சிவபெருமான் கைலாய மலையில் வாழ்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கைலாய மலையானது, சீனாவின் மாநிலமான திபெத்தில் உள்ளது. அந்தப் பகுதி, என்றைக்குமே இந்தியாவுடன் இணைந்திருக்கவில்லை.

கைலாய மலையானது, வரலாறு தெரிந்த நாளில் இருந்து, ஒன்றில் சீனாவுக்கு, அல்லது திபெத்திற்கு சொந்தமாக இருந்துள்ளது. "சிவபெருமான் வசிக்கும் மலை என்பதால், இந்திய சைவர்களுக்கு கைலாய மலை புனிதமானது. அதே நேரம், சமண மதத்தவர்களுக்கும், திபெத்திய பௌத்தர்களுக்கும், திபெத்திய பொன் மதத்தவர்களுக்கும் கைலாய மலை புனிதமானது. இவ்வாறு சீன, இந்திய மதங்கள் எல்லாம் கைலாய மலைக்கு உரிமை கோருவதற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். வேத காலத்திற்கு முந்திய, உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான "தாந்திரிய மதம்", அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் முக்கியமான கடவுளர்கள். வேத மதமான "இந்து" மதத்தின் ஆதிக்கத்தால், இந்தியாவில் தாந்திரீய மதம் ஏறக்குறைய அழிந்து விட்டது. ஆனால், திபெத்தில் "வஜ்ராயனம்" என்ற பெயரில், திபெத்திய பௌத்த சமயத்தினால் உள்வாங்கப் பட்டது.


(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்