Showing posts with label சைவ சமயம். Show all posts
Showing posts with label சைவ சமயம். Show all posts

Tuesday, February 04, 2020

ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி? - ஆறுமுகநாவலரின் சைவமத ஷரியா சட்டம்!

ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி?
ஆறுமுக‌நாவ‌லர், யாழ் சைவ‌ வெள்ளாள‌ருக்காக‌ எழுதிய‌‌ "சைவ மத ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! சைவ‌ ச‌ம‌யிக‌ள் அனைவ‌ரும் ப‌டித்துப் ப‌ய‌ன் பெறுக‌.




ஆறுமுகநாவலர் எழுதிய சைவ வினாவிடை நூலில் இருந்து ஒரு பகுதி:

6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?

பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.

7. எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்?

தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.

சௌசம்

8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.

(ஆதார‌ம்: சைவ‌ வினா விடை)

Tuesday, April 29, 2014

சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்



யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலை கட்டுவதற்கு ஆளுநர் சம்மதித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை புலிகள் ஆண்ட காலத்தில் கட்டிய சிலைகளை எல்லாம் உடைத்து நொறுக்கிய, மாவீரர் துயிலும் இல்லங்களை கூட தரைமட்டமாக்கிய, சிங்கள இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ஆறுமுக நாவலருக்கு சிலை வைக்க முன் வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தென்னிலங்கையில் சிங்கள-பௌத்த அடிப்படைவாத சக்திகளை தூண்டி விடுவது போன்று, வட இலங்கையில் சைவ-வேளாள மேலாதிக்க சக்திகளை வளர்த்து விடும் நோக்கம், இதில் அடங்கி இருக்கலாம். சிங்கள-தமிழ் வெள்ளாள சாதி ஒற்றுமை நீண்ட கால நோக்கில், பேரினவாத அரசுக்கு நன்மை பயக்கும்.

ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க அரசியலை தோற்றுவித்த பிதாமகன் ஆக, சாதியவாதிகளால் போற்றப் படுகின்றார். சைவத்தையும், தமிழையும் வளர்த்ததோடு நில்லாது, சாதியத்தையும் உயர்த்திப் பிடித்த ஆறுமுக நாவலர்; சைவத் தமிழர்களின் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக, கடுமையாக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது காலத்தில் வாழ்ந்த சிங்கள- பௌத்த அடிப்படைவாதியான அநகாரிக தர்மபால, இன்றைய பொதுபல சேனா வகையறாக்களும், இந்தப் புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்.

யாழ் நகரில், அரசு நிதியில் நாவலருக்கு சிலை அமைப்பதற்கு, "தமிழ் இன உணர்வாளர்", "தமிழ் தேசியவாதி" என்று அழைத்துக் கொள்ளும் யாரும், இன்று வரையில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில், தமிழ் தேசிய ஆர்வலர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே, வலதுசாரி தமிழ்க் குறுந் தேசியவாதிகளின், உயர் சாதிப் பற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

******


"சைவமும், தமிழும் வளர்த்தார்" என்று போற்றப்படும் ஆறுமுக நாவலர், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டவரா? அல்லது சைவ சமயத்தை பின்பற்றும் எல்லோரையும் சைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தாரா? ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரையில், அவர் சைவத்தையும், தமிழையும், உயர் சாதியினரின் மேட்டுக்குடி கலாச்சாரமாக மட்டுமே கருதினார்.

நான் அப்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ் சைவ சித்தாந்தக் கழகம், அரச பாடத் திட்டத்திற்குள் அடங்காமல், தனியாக ஒரு சைவ சமய பொதுப் பரீட்சை நடத்தி வந்தது. அந்தப் பரீட்சையில் போட்டியிட்டு தேறி, சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக, ஆறுமுக நாவலர் எழுதிய "சைவ சமயம் வினா- விடை" படிக்கத் தந்தார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் இருந்த நாவலரின் பதில் எனது கண்களுக்கு சாதிவெறி கொண்டதாக தென்பட்டது. அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

"திருநீறு பூசும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்" பற்றி நாவலர் எழுதி இருந்தார். அதில் ஒன்று, "திருநீறு பூசும் நேரம், எளிய சாதிகள் குறுக்கே வரக் கூடாது." என்றிருந்தது. தமிழ் தேசியமும், தமிழீழப் போராட்டமும் வீறு கொண்டெழுந்த காலகட்டம் அது. "நாம் தமிழர்கள்" என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது, ஆறுமுக நாவலர் எனது கண்களுக்கு சாதிமானாக தென்பட்டார். அவரைப் பொறுத்தவரையில், "எளிய சாதிகள்" என்ற தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தமிழர்களாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், அவர்களை சைவர்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட, ஆறுமுக நாவலரிடம் இருக்கவில்லை. ஆனால், அவர் தான் "சைவத்தையும், தமிழையும் வளர்த்தார்" என்பது ஒரு வரலாற்று முரண் நகை.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன். நாவலர் ஒரு தமிழ் தேசியவாதியா அல்லது சாதியவாதியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:

//சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

//தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.// 
(ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2)

Monday, February 03, 2014

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி?


திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான "ஒரு பாசிச இனப் படுகொலையாளி" என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான்.

அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், "அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம்.

ஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர்.

//அக்காலத்தில் மதுரையை சுற்றிலும் 8000 சமணக் குருமார் இருந்ததை அறிகிறோம். இக் கருத்தை சம்பந்தர் பெருமானே "ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்" என்று கூறி இருக்கிறார்...."எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்" என்று சேக்கிழார் கூறுகின்றார். //
(ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

சேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் "சாமநத்தம்" என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சம்பந்த நாயனார் பற்றிய கதையில், அன்று நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சம்பந்தர் சமணத் துறவிகளை, "அனல் வாதம், புனல் வாதம்" இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும், அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. ஆன்மீகம் தொடர்பாக , இரு மதப் பிரிவினராலும் அன்று விவாதிக்கப் பட்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை. சமபந்தர் ஆற்று நீரில் விட்ட சைவ மத ஓலைச் சுவடிகள் மிதந்து வந்து கரையொதுங்கின. அது தான் "புனல் வாதம்".  சம்பந்தர் நெருப்பில் போட்ட ஓலைச் சுவடிகள் எரியவில்லை. அது தான் "அனல் வாதம்".

மதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்தனர். அதாவது, "சமணப் பயங்கரவாதிகள்" நடத்திய "பயங்கரவாத தாக்குதலில்" இருந்து, சம்பந்தர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாராம். அதன் பிறகு தான், சம்பந்தர் தன் மீதான கொலை முயற்சிக்கு பழிவாங்குவதற்காக, அல்லது  "சமணப் பயங்கரவாதிகளின்" கொட்டத்தை அடக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.

திருஞான சம்பந்தர், ஏழாம்  நூற்றாண்டுத் தமிழகத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை நடத்தி இருக்கிறார். போரின் இறுதியில், ஒட்டுமொத்த சமணர்களும் இனவழிப்புச் செய்யப் பட்டனர். பாண்டியன்-சம்பந்தனின் சைவ பேரினவாத அரசு, "எண்ணாயிரம் சமணப் பயங்கரவாதிகளுக்கு கழுவேற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாக" பரப்புரை செய்து வந்துள்ளது. 

//‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் 
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக் 
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே 
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’ 
என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.// 
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

//திருஞான சம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் மதுரைப் பொற்தாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றும் காட்சியை சித்திரம் தீட்டிவைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில், ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்றுவருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.// (சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

//திருவோத்தூர் சிவன் கோயிலில் சமரைக் கழுவேற்றுதல் போன்ற சிறப்பு உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்வித கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமல் இருந்திருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்கு சென்று அங்கு சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தது. இது போன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டில் பழையாறை எனுமிடத்தில் அப்பர் சுவாமிகள் சென்ற பொழுது நடைபெற்றதாக திருத்தொண்டர் புராணத்திலே சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலை கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தை கண்டு வணங்காமல் உணவு கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.//
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

இதனை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி காலத்தில் தான், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தவரின்  ஆதிக்கம் அதிகரித்தது. சக்கரவர்த்தியின் மனைவியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தாள்.

கிறிஸ்தவர்களின் செல்வாக்கு, அரச குடும்பம் வரையில் வந்து விட்ட பின்னர், சக்கரவர்த்தியை பணிய வைப்பது இலகுவாகி விட்டது. கொன்ஸ்டாண்டின், அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களை கொன்றவன் தான். ஆனால், கிறிஸ்தவனாக மதம் மாறிய பின்னர், பூர்வீக மதத்தை பின்பற்றியவர்களை கொன்றான். வரலாறு நெடுகிலும், அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.

சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியனும், ஐரோப்பாவில் கொன்ஸ்டாண்டின் கொண்டு வந்த அரசியல் மதப் புரட்சியை, தமிழகத்தில் கொண்டு வர விரும்பியிருக்கிறான்.  ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டாண்டினின் அரசியல் சாணக்கியம், தமிழக மன்னனான  கூன் பாண்டியனிடமும் இருந்துள்ளது.

கொன்ஸ்டாண்டின், கூன் பாண்டியன் இருவரது வரலாற்றுக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்திற்குரியது. தமிழகத்திலும், பாண்டியனின் மனைவி தான் முதலில் சைவ மதத்திற்கு மாறியிருந்தாள். சம்பந்தர் அரச குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதாவது கூன் பாண்டியனின் தீரா நோய் ஒன்றை குணப் படுத்திய காரணத்தால், அவனை சைவ மதத்திற்கு மாற்ற முடிந்தது.

ஒரு நாட்டினுள், ஒரு குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் பெற வேண்டுமானால், அந்த நாட்டை ஆளும் மன்னனை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும். அதன் பிறகு, எல்லாம் இலகுவாக முடிந்து விடும். தமது நாட்டினுள் எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மன்னர்களும் மாறி விடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் இலகுவாக ஆட்சி செய்யலாம். அது எங்கேயும் பொருந்தும் அரசியல் பால பாடம்.

கழுவேற்றப் பட்ட எண்ணாயிரம் பேரும் சமண மதக் குருக்கள் அல்லது தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த எண்ணாயிரம் பேர் மட்டுமே சமணர்களாக இருந்திருக்க முடியாது. மதகுருக்கள், தலைவர்கள் கொல்லப் பட்டதும், சாதாரண சமண மக்கள், சைவ சமயத்திற்கு மதம் மாறி இருப்பார்கள்.

தமிழகத்தில் இன்றைக்கும் வாழும் சமணர்கள் வீட்டில் கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் சமண இனவழிப்பு நடந்தாலும், கர்நாடகா மாநிலத்தோடு அண்டிய கொங்கு நாட்டில், சில சமணத் துறவிகள், மலைக் குகைகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சில சமணக் கோயில்களில், இந்துக் கோயில்கள் போன்று பூசைகள் நடைபெறுகின்றன. அங்கு பூசை செய்வோர், பிராமணர் போன்று பூணூல் அணிந்திருப்பதால், உள்ளூர் மக்களால் ஐயர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் வெளியில் தமிழும், வீட்டில் கன்னடமும் பேசுகின்றனர். இன்றைக்கும் சமணர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகாவுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர். (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

மேலும், பண்டைய காலத்தில் கழுவேற்றும் தண்டனை இருந்ததற்கான பல சரித்திர சான்றுகள் உள்ளன. சம்பந்தர் போன்ற பாசிச சைவ மத அடிப்படையாளர்கள்  மட்டுமல்ல, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் கூட தம்மை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை கழுவேற்றிக் கொன்றதாக, இலங்கை வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது.

வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு "நியாயத்தை" கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், "தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது," ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான்.

நாஜிகளும் யூதர்களை அடைத்து வைத்து விஷவாயு கொடுத்து தான் கொன்றார்கள். 7 ம் நூற்றாண்டில் நடந்த படுகொலைக்குப் பின்னர், இன்று வரையில் ஒரு சமணர் கூட தமிழ் நாட்டில் தப்பிப் பிழைக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், திருஞான சமபந்தர் ஒரு பாசிச இனப்படுகொலையாளி தான்.
____________________________________________________________________________________________

சமண மதம் பற்றிய சில குறிப்புகள்: 

உலகில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட பலரால் தவறாக அல்லது குறைவாகப் புரிந்து கொள்ளப் படும் மதமாக ஜைன மதம் உள்ளது. அண்மைக் காலமாக, நான் ஜைன மதம் தொடர்பான நூல்களை படித்து வருவதால், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையில், ஜைன மதம் இந்து மதத்தை விடப் பழமையானது. இந்தியாவின் பூர்வீக மதம் என்றும் சொல்லலாம்.

ஜைன மதத்தின் 24 ஆன்மீகக் குருக்களாக தீர்த்தங்காரர்கள் இருந்துள்ளனர். பத்தாவது தீர்த்தங்காரரின் காலத்தில் தான், ஆரியர்களின் மதமான "இந்து" மதம், இந்தியாவிற்கு வந்தது. சமணம், பிராமணர்களின் மேலாதிக்கத்தையும், சாதி அமைப்பு பிறப்பால் வருவது என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கொல்லாமை, புலால் உண்ணாமை, சந்நியாசம் போன்றவற்றை, ஜைன மதத்திடம் இருந்து இந்து மதம் சுவீகரித்துக் கொண்டது.

காந்திக்கு தென்னாபிரிக்காவில் ஞானம் பிறக்க முன்னரே, பண்டைய இந்தியாவில் ஜைன மதம் அஹிம்சையை போதித்து வந்துள்ளது. தனது தாயகத்தில், அஹிம்சையை அடிநாதமாக கொண்ட மதம் ஒன்று இருப்பது, காந்திக்கு தெரியாமல் போனது அதிசயம் தான். (மகாத்மா காந்தியின் பிறந்த இடமான குஜராத்தில், இன்றைக்கும் நிறைய ஜைன மதத்தவர்கள் வாழ்கின்றனர். காந்தியின் சிறு வயதில், அவரது தாயார், ஜைன மதக் கருத்துக்களை புகுத்தி இருக்கலாம். ஆனால், இந்து தேசியவாதக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காந்தியார், அதைக் குறிப்பிட மறந்ததில் ஆச்சரியம் இல்லை.

ஜைன மத நம்பிக்கையாளர், தீய எண்ணங்களை எதிர்த்து தனக்குள்ளே போராடி, தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மதத்தில், அந்த மதக் கடமையை "ஜிஹாத்" என்று அழைக்கின்றனர். (இஸ்லாத்தில் ஜிஹாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.)

கர்மா என்ற தத்துவத்தை, ஜைன மதத்திடம் இருந்து கற்றுக் கொண்டாலும், இந்துக்கள் அதனை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றனர். "நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவே எம்மை உருவாக்குகின்றது. நல்லது நினைத்தால்/செய்தால், எமக்கு நல்லது நடக்கும்." அது கர்மா பற்றிய ஜைன மத தத்துவம். ஜைன மதம், பொதுவான கடவுட் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. (கடவுள் உண்டு என்றோ, அல்லது இல்லை என்றோ கூறவில்லை.) ஒவ்வொருவரின் ஆன்மாவுக்குள்ளும் கடவுள் இருப்பதாக கூறுகின்றது.

சமண மதம் என்ற பெயர், ஜைன மதத்தை மட்டும் குறிக்கவில்லை. பௌத்த மதத்திற்கும் அது பொருந்தும். பிராமண (இந்து) மதம், வேத கால கட்ட வேள்விகளை வழிபாடாக கொண்ட தத்துவவியல். அதற்கு மாறாக, ஜைனமும், பௌத்தமும் துறவறம் மூலம் இறைவனைக் காண்பதை அடிப்படையாக கொண்டது. சமணம் என்பது பாளி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அதனை சிரமணம் என்பார்கள். தமிழில் அதன் அர்த்தம் உழைப்பு. அதிலிருந்து தான் சிரமதானம் சென்ற சொல் வந்திருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், பிராமண மத மேலாதிக்கம் காரணமாக சமண மதங்கள் அழிக்கப் பட்டன. சமண மதத் துறவிகள், இரகசியமாக மலைக் குகைகளில் பதுங்கி இருந்து மத வழிபாடுகளை பின்பற்றி வந்தார்கள். இன்றைக்கும், தமிழகத்தில் பல இடங்களில், சமண மத அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள, இந்து மத மேலாண்மைவாதிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.

________________________________________

உசாத்துணை :

1.சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி 
2.கொங்குநாடும் சமணமும், கோவை கிழார் 
3.Jainisme een introductie, Rudi Jansma

Web Sites: 
Madurai massacre
8000 Samanar's were massacred in seventh century by Thiru Ghana Sampanthar

Thursday, December 08, 2011

சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !] (நான்காம் பாகம்)

"சிவன், சக்தியுடன் சேர்ந்திருக்கும் பொழுது தான், படைத்தல் தொழிலை செய்யும் வல்லமையை பெறுகிறான்." - சௌந்தர்ய லாஹிரி

பாடசாலை மாணவர்களுக்கான, சைவ சமயப் பாடத்தில், அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சிவனும், சக்தியும் சரி பாதியாக காட்டும், "அர்த்த நாரீஸ்வரர்" உருவமானது, சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப் படுகின்றது. பாடசாலையை விட்டு வெளியில் வரும் மாணாக்கர்களுக்கு, "பெண்ணைத் தெய்வமாக மதித்த சமூகம், எதற்காக இன்று அடிமைப்படுத்துகின்றது?" என்ற நிதர்சனம் முகத்தில் அறையும்.

சைவ மதத்தின் பெயரால், "ஒரு சதிப்புரட்சியை நடத்தி", அதிகாரத்தை கைப்பற்றிய, "சைவ சித்தாந்தவாதிகள்" பற்றி எமது பாடநூல்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வரலாற்று இருட்டடிப்பால் தான், சமூகத்தில் இத்தனை குழப்பம். சிவனை (சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் இன்று இல்லை. சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டம் மாறி விட்டது. இன்றுள்ள சைவர்கள் சிவனை ஆகம விதிப்படி வழிபடுகின்றனர். அதனால் தான், பிற தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாது, இந்து மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்.

சிவனை அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் எத்தகைய மக்கள்? நிச்சயமாக அவர்கள் நம்மைப் போல இருக்கவில்லை. ஆதிச் சைவர்கள் போல வாழ்வதற்கு இன்று யாரும் துணிய மாட்டார்கள். இங்கே அவர்களின் வாழ்க்கை நெறிகளை விளங்கப் படுத்தினால், "காட்டுமிராண்டி சமுதாயம்" என்று வெறுத்து ஒதுக்குவார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்தில் நிலவும் பாலியல் சுதந்திரத்தை, "கலாச்சார சீரழிவாக" கருதும் தமிழர்கள் நம்மில் எத்தனை பேர்? சைவ சமயத்தை பின்பற்றிய, இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அது சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை விட அதிக சுதந்திரத்தை கொண்டிருந்தது. அன்றைய சைவர்கள், அதனை காமமாக கருதவில்லை. கடவுளை அடைய, முக்தி பெற சிறந்த வழியாக நம்பினார்கள்.

அதனை எடுத்துக் காட்டுவது தான், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் சிவலிங்கம். ஆணும், பெண்ணும் இணைந்து உயிரை உற்பத்தியாக்கி, இனப்பெருக்கம் செய்வதை இயற்கையின் இரகசியமாக கருதினார்கள். அதனை எடுத்துக் காட்டவே, ஆண்குறியும், பெண்குறியும் இணைந்த சிவலிங்கத்தை வழிபட்டார்கள். இயற்கை போதிக்கும் தெய்வத் தன்மையை மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆரியர்களின் பிராமண மதமும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட சைவ சித்தாந்த பிரிவும், இந்த தத்துவங்களை மூடி மறைத்தன. பிற்காலத்தில், இந்திய உபகண்டத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவ மதமும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருந்தன. அவர்கள் புகட்டிய கலாச்சாரத்தை, நாம் இன்றைக்கும் "தமிழர் கலாச்சாரம்" என்று பெருமையாகப் பேசித் திரிகிறோம்.

பண்டைய சைவ மதத்தை, தாந்திரிய மதம் என்றும் அழைப்பார்கள். ஆணையும், பெண்ணையும் குறிக்கும், சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் கடவுளராக வழிபடப் பட்டனர். "சிவனின்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை." என்ற தத்துவமும் அப்போது தோன்றியது. உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த, பண்டைய சமூக மக்கள், ஆண்குறியை மட்டும் தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர். கிரேக்கத்திலும், தென் இத்தாலியிலும் வாழ்ந்த மக்கள், மீனை அதன் குறியீடாக பயன்படுத்தினார்கள். ஆதி கிறிஸ்தவர்களும் அதனை பின்பற்றினார்கள்.

பண்டைய இந்தியர்கள், ஆணின் பிறப்புறுப்பையும், பெண்ணின் பிறப்புறுப்பையும் சிவலிங்க வடிவில் வணங்கியது முற்போக்கான விடயமாக கருதப் பட வேண்டும். ஆதிச் சைவர்கள், அந்தளவுக்கு நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தனர். மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த ஐரோப்பியர்கள், "ஆணும், பெண்ணும் சமம்" என்று, எமக்குப் போதிக்கும் அளவுக்கு, நாம் எமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். பெண் விடுதலையை, பாலியல் சுதந்திரத்தை, ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியர்கள் அதனை கடைப்பிடித்து ஒழுகி வந்தனர். உண்மையில், நாம் இன்று எதனை தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாக புரிந்து கொள்கிறோமோ, அது தான் ஐரோப்பியரின் கலாச்சாரம் என்பது எமக்குத் தெரியாது.

திபெத்தில், கி.பி. 7 ம் நூற்றாண்டில் தான் பௌத்த மத அரசு உருவானது. அதற்குப் பிறகு தான், திபெத் என்ற தேசம் உலக வரைபடத்தில் தோன்றியது. அநேகமாக, இந்திய உப கண்டத்தில் பௌத்த மதம் மடிந்து கொண்டிருந்த காலத்தில் தான், திபெத்திலும், இலங்கையிலும், பேணிப் பாதுகாக்கப் பட்டது. இந்திய உப கண்டத்தில் பரவிய பிராமண மதம் (அல்லது இந்து மதம்) பௌத்தம், சமணம் போன்ற மதங்களை கூடிய மட்டிலும் அழித்து விடுவதில் முனைப்புக் காட்டியது.

பௌத்த, சமண மதங்களை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுடன் ஒப்பிடலாம். அதாவது, மதத்தை தோற்றுவித்தவர்கள், நிறுவன மயப் படுத்தியவர்கள், புனித நூல்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்தன. அதே நேரம், இந்த மதங்களில் ஆர்வமுள்ள அனைவரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பிராமண மதம் (இந்து மதம்) அவ்வாறானது அல்ல. அந்த மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் பிறக்கும் ஒருவர் மட்டுமே பிராமணர் (அல்லது இந்துவாக) இருக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், யூதர்கள் போன்று, பிராமண மதத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். அவர்களால், நிறுவன மயப் படுத்தப் பட்ட, பௌத்த, சமண மதங்களை எதிர்த்துப் போராடி இருக்கவே முடியாது. அது எவ்வாறு சாத்தியமானது?

அன்று, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், தாந்திரிய மதங்களை பின்பற்றினார்கள். இந்து மதத்திற்கு முந்திய பழமையான மதமான, தாந்திரிய மதத்தில், சிவனை வழிபடுவோர், சக்தியை அல்லது காளியை வழிபடுவோர், என்று சில பிரிவுகள் இருந்துள்ளன. இந்திய பழங்குடியின மக்களின் கடவுளரை, நமது கால இந்துக்கள் "சிறு தெய்வங்கள்" என்று அழைப்பார்கள். அன்றைய பிராமணர்கள், சிவ பெருமான் போன்ற "சிறு தெய்வங்களை", பெருந் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். அவற்றை பிராமண மதத்தில் இணைத்துக் கொண்டார்கள். தமிழகத்திலும் இதே காலகட்டத்தில் தான், பக்தி இயக்கம் என்ற பெயரில் சைவ சித்தாந்த மதம் தோன்றியது. திருஞான சம்பந்தர் போன்ற சமய குரவர்களும், புதிதாக முளைத்த பல்லவ ஆட்சியாளர்களும் பக்தி இயக்கத்தை நெறிப் படுத்தினார்கள். அவர்களது ஒரே குறிக்கோள், பெரும்பான்மை இந்தியர்கள் பின்பற்றிய பௌத்த, சமண மதங்களை அழித்து, அந்த இடத்தில் பிராமண மதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.

இந்தியாவில் ஆரிய-பிராமண மேலாதிக்கத்தை சாத்தியமாக்கிய இரண்டு முக்கிய அம்சங்களாவன:
1 . பெரும்பான்மை இந்தியர்கள் வழிபட்ட தாந்திரியக் கடவுளரை ஏற்றுக் கொண்டமை.
2 . உள்ளூர் மக்களின் மொழிகளிலேயே சமயப் பிரச்சாரம் செய்தமை.
இவ்வாறு இடத்திற்கேற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் பிராமணர்கள். பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் பரவிய பொழுது, பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் பிராமண இனத் தூய்மை வேறு பெயர்களில் (சாதி) பேணப் படுகின்றது. பிராமணர்களைப் பொறுத்த வரையில், இன மேலாதிக்கமே முக்கியமானது. மதம், கொள்கை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்த வகையில், சூத்திரர்களின் கடவுள்களை இணைத்துக் கொண்டு, இந்து மதம் என்றொரு புதிய மதத்தை உருவாக்குவது கடினமாக இருந்திராது.

நவீன கால ஐரோப்பாவில், "இனவாதம்" அரசியல் கோட்பாடாக உருவானது. ஆனால், இனவாத சிந்தனையின் வேர்கள், இந்திய பார்ப்பனீய மரபிற்குள் காணப்படுகின்றன. இல்லாவிட்டால், திபெத் சென்று, தூய ஆரிய இனம் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கு ஹிட்லர் பேரவாக் கொண்டிருப்பானா? அந்தக் காலத்தில், இந்தியா பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால் தான் ஹிட்லரின் ஆராய்ச்சியாளர்களால் இந்தியா வர முடியவில்லை. நவீன கால இனவாதிகள் எதிர்பார்த்த அளவிற்கு, திபெத் இனத் தூய்மை பேணும் நாடாக இருந்ததில்லை.

திபெத் தோன்றிய காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், மதம் சார்ந்த அரசியலே கோலோச்சியது. கி.பி. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் இந்து மத மேலாண்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. மத்திய கால ஸ்பெயினில் நடந்த Inquisition போன்று, இந்தியாவிலும் பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. அவ்வாறான சூழலில், திபெத்தியர்கள் "உலகின் ஒரேயொரு பௌத்த தேசத்தை" ஸ்தாபித்தனர். (சில நூற்றாண்டுகளுக்கு பின்னர், கௌதம புத்தர் பிறந்த மண்ணில், நேபாளம் என்ற "உலகின் ஒரேயொரு இந்து தேசம்" பிரகடனம் செய்யப் பட்டது.) இந்து மதம் போன்றே, திபெத்திய பௌத்த மதத்திற்கும் "ஆன்மீக நெருக்கடி" தோன்றியது. பௌத்த மத ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, உள்ளூர் மக்கள் வழிபட்ட தெய்வங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தான், திபெத்தில் இன்றைக்கும், சிவனின் அர்த்த நாரீஸ்வரர் உருவம் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

திபெத்திய பௌத்த மதமும், இந்து மதமும், "மத நீக்கம் செய்யப்பட்ட சிவனை" தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றன. அதாவது, ஆதிச் சைவ சமயமான தாந்திரிய மதத்தில் இருந்து, சிவன் தனியே பிரித்தெடுக்கப் பட்டுள்ளார். காந்தியை தேசபிதாவாக்கி விட்டு, காந்தீயத்தை புறக்கணிக்கும் அயோக்கிய அரசியல் இது. ஆதிச் சைவர்களுக்கும், நவீன சைவர்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டு பிரிவினரும் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அது மட்டுமே ஒரேயொரு ஒற்றுமை.

பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட, சிவனை ஆகம விதிப்படி வணங்கும் நவீன சைவர்கள், தாந்திரிய மதம் பற்றி கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். இந்து மதம், அது குறித்த தகவல்களை இருட்டில் வைத்திருந்தது. தாந்திரிய மதம் என்றால், பில்லி சூனியம், பித்தலாட்டம் செய்யும், காட்டுமிராண்டிகளின் மதம் என்று பரப்புரை செய்தது. "தந்திரம்" என்ற சொல் கூட அதிலிருந்து வந்திருக்கலாம். சமீப காலத்தில், ஐரோப்பியர்கள் தாந்திரிய மதம் மீது அளவு கடந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குலகில், "தாந்திரா" என்பது பாலியல் சமாச்சாரங்களுக்கு சூட்டப்படும் பெயராகி விட்டது. பாலியல் இச்சை காரணமாகவே, பல ஐரோப்பியர்கள் இந்திய தாந்திரீக மதத்தை ஓரளவு பின்பற்றும் போக்குக் காணப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட இரண்டு தரப்பட்ட பார்வைகளும் தவறானவை. பண்டைய காலத்தில் இடம்பெற்ற சில வழிபாட்டு முறைகள், நமது காலத்தில் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால், தாந்திரிய மதத்தை அழிக்கும் நோக்குடன், அந்த மதத்தை பின்பற்றுவோரை சூனியக் காரர்கள் என்று இழிவு படுத்தினார்கள். இதே போன்ற நிலைமை, ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவிய காலத்திலும் காணப்பட்டது. கிறஸ்தவ மதம் வருவதற்கு முன்னர், இயற்கை வழிபாடு ஒரு மதமாக இருந்தது. அந்த மதத்தின் புரோகிதர்களும், நம்பிக்கையாளர்களும், சூனியக்காரர்கள் என்று தூற்றப் பட்டனர். இயற்கை வழிபாடு செய்வது கண்டுபிடிக்கப் பட்டால், உயிருடன் கொளுத்தப் பட்டனர். இந்தியாவிலும், ஏறக்குறைய இதே மாதிரியான அடக்குமுறை காரணமாக, தாந்திரியம் எனப்படும் ஆதிச் சைவ சமயம் மக்கள் மனதில் இருந்து அகற்றப் பட்டு விட்டது.

தாந்திரிய மதம், "ஆண்,பெண் புணர்ச்சியில் இறைவனைக் காணலாம்" என போதித்தது. (மேற்குலகில் ரஜ்னீஷ் சாமியார் இதைத் தான் திரிபு படுத்தி போதித்துக் கொண்டிருந்தார்.) ஆயிரம் வருட காலமாக, பாலியல் உணர்வு அடக்கப்பட்ட சமுதாயத்தில் மட்டுமே, இதெல்லாம் தவறாகத் தெரிகின்றது. ஆண், பெண் உறவுகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத, பண்டைய இந்திய சமுதாயத்தில், அது ஒரு சாதாரணமான நிகழ்வு. அதே நேரம், கலவி இன்பத்திற்கு கூறப்பட்ட தத்துவார்த்த விளக்கங்கள், ஐரோப்பிய தாந்திரீய பக்தர்களால் புறக்கணிக்கப் படுகின்றன. தாந்திரிய மதம் விளக்கிய, உடலுறவு எனப்படும் இயற்கையின் இரகசியம், இன்றைக்கும் கோயில் கோபுரங்களில் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அவற்றை எல்லாம் "அசிங்கமானது" என்று சொல்லி ஒதுக்கினார்கள். நாமும் அவர்களைப் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். பிராமண இந்துக்கள், தமது இன மேலாதிக்க அரசியலுக்காக, எமது பண்பாட்டுப் பெருமைகளை மறைத்தார்கள். ஆங்கிலேயர்கள், அதனுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கருத்துகளையும் எம் மீது திணித்து, "தமிழர் கலாச்சாரம் என்றால் இது தான்" என்று மூளைச் சலவை செய்தார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!

Thursday, December 01, 2011

சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - மூன்றாம் பாகம்)

நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை சைவ சமயத்தை பற்றியது. 12 வயதில் எழுதிய அந்தக் கட்டுரை, கொழும்பு இந்து-தமிழ் சங்கத்தினர் வெளியிட்ட சிறப்பு மலரில் பிரசுரமானது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவ சமய பாடத்திற்கு தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அதே நேரம், யாழ் சைவ சித்தாந்தக் கழகம் நடத்தும் பரீட்சைகளின் சான்றிதல்கள் கூட கிடைத்துள்ளன. எதற்காக "சைவ சித்தாந்தம்" என்று அழைக்கிறார்கள் என்று, அந்த வயதில் எழுப்பிய கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. பாடசாலையில் இந்து நாகரீகம் போதிக்கும் நூலிலும், சைவ சமயம் தென்னிந்தியருக்கே பிரத்தியேகமான மதம் என்று தான் எழுதப் பட்டிருந்தது.

அதே நூலின் இன்னொரு இடத்தில், சிந்து வெளி மக்களால் வழிபடப் பட்ட பசுபதி தெய்வ இலச்சினை, சிவனாக இருக்கலாம் என்ற குறிப்பும் காணப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் விளைவாக, அத்தகைய கண்டுபிடிப்புகள் வரலாற்றை திரிக்கவும் பயன்பட்டுள்ளன. திராவிடர்கள் சிந்து வெளியிலும் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரமாக சிவ வழிபாடு எடுத்துக் காட்டப் படுகின்றது. இவை போன்ற கருத்துக்கள், ஆங்கிலேயரின் இனவாத தத்துவத்தை வலுப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வட இந்தியாவில் வாழ்ந்த காஷ்மீர் இன மக்களும், திபெத்திய இன மக்களும் நீண்ட காலமாகவே சிவனை வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில், காஷ்மீரிகள் முஸ்லிம்களாகவும், திபெத்திய இனங்கள் பௌத்தர்களாகவும் மாறி விட்டனர். ஆங்கிலேயர்களும், தென்னிந்திய சைவர்களும், வட இந்தியாவில் பரவியிருந்த சைவ சமயத்தை மறைத்த காரணம் என்ன?

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த சிவனை வழிபடும் மதம், ஆரியரின் வருகையினால் இரண்டாகப் பிளவு பட்டது. வரலாற்றில் எப்போதும், எதிரிகளுடன் ஒத்துழைக்கும் மக்களே தப்பிப் பிழைத்து வாழ்வதை அவதானிக்கலாம். ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மன், திப்புசுல்தான்களின் சந்ததிகள் அழிக்கப் பட்டு விட்டன. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்த தொண்டைமான், நிசாம்களின் சந்ததிகள் இன்றைக்கும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றன. அது போன்றே, அன்றைக்கு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களான ஆரியருக்கு காட்டிக் கொடுத்து, ஒத்துழைத்த பிரிவினரே சைவ சித்தாந்தவாதிகள். அதனால் தான், சைவ சமயம், இந்து மதத்தின் பிரிவாக கருதப் படுகின்றது. சைவக் கோயில்களில் பிராமண புரோகிதர்கள் பூசை செய்கின்றனர்.

ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் கூறுவது போன்ற "ஆரியப் படையெடுப்பு" நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், ஆரியரின் புலம்பெயர்வு நடந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களின் முக்கிய நோக்கம், நிலங்களை அபகரிப்பதும், செல்வத்தை சூறையாடுவதுமாக இருந்திருக்கலாம். வரலாறு நெடுகிலும் இது போன்ற உதாரணங்கள் பல காணக் கிடைக்கின்றன. ஸ்கண்டிநேவிய வைகிங் குழுக்கள், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு கொள்ளையடிக்க சென்ற பொழுது தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். கிறிஸ்தவ மதத்தையும் தழுவினார்கள். துருக்கிய இனக் குழுக்கள் பாக்தாத்தை அழித்த பின்னர் தான், இஸ்லாமிய நாகரீகம் பற்றி அறிந்து கொண்டனர். அதே போன்று, ஆரியர்கள் வட இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்த பிறகு தான், "இந்து மதம்" உருவெடுத்தது. இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற ஆறு பிரிவுகள் இருப்பதாக, நமது காலத்து பாடநூல்களில் எழுதப் பட்டுள்ளது. உண்மையில், ஒன்றுகொன்று தொடர்பற்ற, தனித் தனியாக வழிபடப் பட்ட மதங்களே இவை. இந்து மதம் பற்றிய வரைவிலக்கணம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் வல்லரசுகள், அவற்றை தமது மாநிலங்களாக அறிவிப்பது போன்ற அரசியல் செயற்பாடு இது.

இன்றைக்கும் பல ஆப்பிரிக்க இனங்கள், தமக்கென தனியான கடவுள்களும், மத வழிபாடுகளையும் கொண்டிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள், எளிமையான மூத்தோர் வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர். பண்டைய இந்தியாவிலும் அது போன்ற நிலைமை இருந்திருக்கும். சிவன், கணபதி, காலபைரவர், காளி, முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட மக்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். உதாரணத்திற்கு, சிவனை வழிபடுவோர் காஷ்மீர் போன்ற மேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அதே போன்று, காளியை வழிபடுவோர் கிழக்கு இந்தியாவில் அதிகமாக வாழ்ந்துள்ளனர். இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன. உண்மையில், இவை எல்லாம் கரு நிற மேனிகளை கொண்ட தெய்வங்கள். அதாவது, கறுப்பர்களின் கடவுள் கறுப்பாகத் தானே இருப்பார்?

ஆரியரின் வருகைக்கு முன்னர், இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் கருப்பர்களாகவிருந்தனர். பிந்திய சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் அவர்களுக்கு திராவிடர்கள் என்று நாமம் சூட்டினார்கள். வட கிழக்கு இந்தியப் பகுதிகளில், சீனர்கள் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். நவீன கால சமூக விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடைப்பட்ட இனம் என்று அர்த்தம் தொனிக்கும் "தீபெத்தோ-இந்தியர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதம் பேசிய ஆரியர்கள், அவர்களை நாகர்கள் என்று அழைத்தனர். நாகர்கள் ஒரு காலத்தில், இலங்கைத் தீவு வரையில் பரவியிருந்தனர். இன்றைக்கும் "நாகர்" என்ற பெயர் கொண்ட ஊர்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன. ஆயிரம் வருடங்களாக, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த, ஆரிய, திராவிட, நாகா இனங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றமும், இனக்கலப்பும் நடைபெற்றிருக்கும். இனவாத சிந்தனை கொண்ட ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தான், இவ்வாறு இன அடிப்படையில் பாகுபடுத்தி பார்த்தனர். இன்றைக்கு யாருமே தூய்மையான இனம் என்று உரிமை கோர முடியாது. தென் சீனப் பகுதி மக்களின் மரபணுக்கள், தென்னிந்திய தமிழர் உடலிலும் கலந்திருக்கலாம்.

இந்திய உப கண்டத்தில், ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தான் உயர்ந்த நாகரீகம் காணப்பட்டது. பிற இந்தியப் பகுதிகளில், பல்வேறு இனக்குழுக்கள், தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வகித்து வந்தனர். ஹரப்பா நாகரீகம் ஆரியர் வருகைக்கு முன்னரே அழிந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் வட இந்தியாவில் தோன்றிய ஆரியர்கள், தூய்மையான வெள்ளை இனத்தவர்கள் என்று கருத முடியாது. உள்ளூர் இனங்களுடன் கலந்து, ஆரியர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்திருப்பார்கள். ஆரியர் என்றால் மேன் மக்கள் என்றும் அர்த்தப் படும். ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாடு, ஐரோப்பிய இனவாத சமூக-விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று குற்றம் சாட்டப் படுகின்றது. அதாவது, ஒரு காலத்தில் வெள்ளை இனத்தவர்கள் உலகம் முழுவதும் பிடித்து ஆண்டனர் என்று நிரூபிப்பதே அவர்களது நோக்கம்.

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் போதித்த "ஆரியர் படையெடுப்பு" கோட்பாட்டை, சில இந்திய ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். ஆனால், அதற்காக வெள்ளையின ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையவேயில்லை, என்று வாதிட முடியாது. சமஸ்கிருதத்திலும், ஐரோப்பிய மொழிகளிலும் நிறைய சொற்கள் ஒரே மாதிரியாக வருகின்றன. அதே போன்று, ஜெர்மனியக் கடவுளரும், கிரேக்க கடவுளரும், இந்திய-ஆரியரின் கடவுளரும் ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு, இயற்கையில் தோன்றும் இடி மின்னல், சக்தி வாய்ந்த கடவுளாக வணங்கப் பட்டது. இந்திய-ஆரியர்கள் இடியின் கடவுளை "இந்திரன்" என அழைத்தனர். கிரேக்கர்கள் "செயுஸ்"(Zeus) என்று வணங்கினார்கள். ஜெர்மனியர்கள் "தொர்"(Thor) என்று பெயரிட்டு அழைத்தனர். இதே போன்று, சமுத்திரம், மழை, காற்று, இவையெல்லாம் கடவுள்களாக இருந்துள்ளன. இருப்பினும், "இந்து நாகரீகம்" இந்திய ஆரியர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதற்கு காரணம், இந்திய இனக்குழுக்களால் வழிபடப் பட்ட தெய்வங்களை ஆரியர்களும் ஏற்றுக் கொண்டமை தான்.

"போதிதர்மன் காஞ்சியில் பிறந்ததால் பெருமைப்படும் தமிழர்களும், புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் பெருமையுறும் இந்தியர்களும், சீன தேசத்தில் வசிக்கும் சிவபெருமானுக்காகவும் பெருமை கொள்வார்களா?" இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினால், குருட்டுத் தனமான தேசியவாதமும் அபத்தமானது என்றே பொருள் படும். காஷ்மீரிலும், திபெத்திலும், வட-மேற்கு இந்திய மாநிலங்களிலும் சிவனை வழிபடும் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஒரு யோகியான சிவபெருமான் கைலாய மலையில் வாழ்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கைலாய மலையானது, சீனாவின் மாநிலமான திபெத்தில் உள்ளது. அந்தப் பகுதி, என்றைக்குமே இந்தியாவுடன் இணைந்திருக்கவில்லை.

கைலாய மலையானது, வரலாறு தெரிந்த நாளில் இருந்து, ஒன்றில் சீனாவுக்கு, அல்லது திபெத்திற்கு சொந்தமாக இருந்துள்ளது. "சிவபெருமான் வசிக்கும் மலை என்பதால், இந்திய சைவர்களுக்கு கைலாய மலை புனிதமானது. அதே நேரம், சமண மதத்தவர்களுக்கும், திபெத்திய பௌத்தர்களுக்கும், திபெத்திய பொன் மதத்தவர்களுக்கும் கைலாய மலை புனிதமானது. இவ்வாறு சீன, இந்திய மதங்கள் எல்லாம் கைலாய மலைக்கு உரிமை கோருவதற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். வேத காலத்திற்கு முந்திய, உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான "தாந்திரிய மதம்", அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் முக்கியமான கடவுளர்கள். வேத மதமான "இந்து" மதத்தின் ஆதிக்கத்தால், இந்தியாவில் தாந்திரீய மதம் ஏறக்குறைய அழிந்து விட்டது. ஆனால், திபெத்தில் "வஜ்ராயனம்" என்ற பெயரில், திபெத்திய பௌத்த சமயத்தினால் உள்வாங்கப் பட்டது.


(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்